Tuesday, January 7, 2020

ஒரு எழுத்தாளனின் வருகை

புத்தக கண்காட்சி வர இருக்கிறது. எங்கும் கலவர பரபரப்பு. இப்போது எதை எழுதினாலும், சொன்னாலும் சந்தை இரைச்சலில் கேட்குமா என தெரியவில்லை. எனினும் சொல்லத்தான் வேண்டும். 

இந்த ஆண்டு வரைவு பிரதியாக நண்பர்களின் நூல்களை வாசிக்க நேர்ந்தது. நான்கு நாவல்களை வாசித்தேன், அவற்றுள் நவீனின் 'பேய்ச்சி' முக்கியமான ஆக்கம் என தயங்காமல் சொல்வேன்.சிறுகதை தொகுப்புகளும் நான்கைந்து வாசித்திருப்பேன். 2010 க்கு பின்னர் சிறுகதை ஆசிரியர்களாக நிலைபெற்றவர்கள் சார்ந்து எனக்குள் ஒரு வரிசை உள்ளது. குணா கந்தசாமிதான் எனக்கு முதன்மை எழுத்தாளர், அவரை தொடர்ந்து பாலசுப்பிரமணியன் பொன்ராஜ், கே.என். செந்தில், போகன், கா.பா, மற்றும் சாம்ராஜ் என்பதே எனது வரிசை. சித்திரன், ரமேஷ் ரச்க்ஷன், அனோஜன், சுரேஷ் பிரதீப்,  விஷால் ராஜா, கார்த்திக் பாலசுப்பிரமணியம் மற்றும் தூயன் போன்ற நண்பர்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இவர்களை நான் என் சமகாலத்தவர்கள் என்றே நம்புகிறேன். (இந்த வரிசையில் முக்கியமான விடுபடல் நான்தான்:)). இது ஒரு நிலையான வரிசை அல்ல. மாறியபடியே இருக்கும். துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை வாசித்தபோது பாலா  இந்த வரிசையில் நேரே சென்று அமர்ந்தார். பின்னர் குணாவை வாசித்தபோது அவர் பாலாவை விடவும் நெருக்கமான இடத்தை எடுத்துகொண்டார். இந்த புத்தக கண்காட்சியில் ரா.கிரிதரனின் 'காலத்தின் முடிவுக்காக ஒலிக்கும் இசை' தொகுப்பு தமிழினி வெளியீடாக வெளிவர உள்ளது. ஐயமின்றி சொல்வேன் கடந்த சில ஆண்டுகளில் நான் வாசித்த மிகச் சிறந்த சிறுகதை தொகுப்பு இதுவே. பன்னிரண்டு கதைகளில் ஒன்பது கதைகள் அபாரமானவை. மேற்கத்திய இசை,மலையேறும் பின்புலம், அறிவியல் புனைவு, காந்தி, காலனிய வரலாறு என வெவ்வேறு அசலான பின்புலங்களில் இருந்து கதைகளை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக 'இருள் முனகும் பாதை' 'பல்கலனும் யாம் அணிவோம்' 'மரணத்தை கடத்தலும் ஆமோ' 'நீர்பிம்பத்துடன் உரையாடல்' ஆகியவை வாசிக்கும்போதே பெரும் உவகையை அளித்தன. எப்போதும் சொல்லிவருவது தான். ஒரு நல்ல கதையை வாசிக்கும்போது வாசகனாக எனக்கு பொறாமை எழுவதில்லை, அது என் கதை, நான் எழுதிய கதை எனும் பெருமிதமே ஏற்படும். கிரியின் தொகுப்பு இப்போது நேராக குணாவின் இடத்தை பின் தள்ளி அமர்கிறது. 

பணிச்சுமை காரணமாக குறைவாக எழுதாமல் இருக்க வேண்டும் மட்டும் என்பதே எனது பிரார்த்தனை. அவருடைய நாவலின் வரைவு வடிவத்தையும் வாசித்தவன் என்ற வகையில் இந்த ஆண்டின் மிக முக்கியமான வருகை என அவரை சொல்வேன். என்னை விடவும் நான்கைந்து வயது மூத்தவர், குணா - பாலா தலைமுறையை சேர்ந்தவர். நியாயப்படி முன்னரே அறிமுகம் ஆகியிருக்க வேண்டியவர். எனினும் இப்போது வலுவான சிறுகதை தொகுப்போடு வெளியே வருகிறார். எனது முதன்மை அளவுகோலில் ஒன்று, ஒரு படைப்பு எழுத்தாளனாக எனது படைப்பூக்கத்தை தூண்டுகிறதா என்பதே. பாலா, குணா வரிசையில் கிரியும் பல கதைகளில் எனக்கு அதை அளித்தார். இந்த கட்டுரையை இப்போது எழுதுவதற்கு காரணம், இந்த புத்தக கண்காட்சி அலையில் எல்லாமும் அடித்துக்கொண்டு போய்விடும் என்பதால் ஒரு சிறு கவனத்தை அளிக்க வேண்டி இருக்கிறது. 

கிரிதரனுக்கு வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment