Sunday, April 30, 2017

தாத்தா - சில நினைவுகள்

(எனது தாத்தா அரிமளம் ராமகிருஷ்ண வைத்தியரின் நூற்றாண்டை முன்னிட்டு தொகுக்கப்படும் நூலுக்காக எழுதிய நினைவஞ்சலி கட்டுரை)

இப்போது கண்ணை மூடிக்கொண்டு தாத்தாவை நினைத்தால் என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறது?

 சற்றே கூனிய மேல் முதுகும், சிவப்பு தோலில் படிந்த தேன் புள்ளிகளும், பளிங்கு நீல விழிகளும் தான் மனதை நிறைக்கின்றன. பின்னங்கழுத்துக்கு கீழே தோல் தடித்த அரக்கு நிற அடையை அவ்வப்போது சொறிந்துகொள்வார். கை எட்டாத போது சீப்பால் நாங்கள் யாராவது சொறிந்து விட்டதும் கூட உண்டு. சட்டையணியாத வெற்றுடலுடன் திண்ணையில் அமர்ந்து வைத்தியம் பார்ப்பார். நாங்கள் யாராவது ஊரிலிருந்து வந்தால் தெலுங்கில் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு அவர் பாட்டுக்கும் வைத்தியத்தை தொடர்வார். அவரிடம் இரண்டே இரண்டு சட்டைகள் தான் இருந்ததாக நினைவு. வான் நீல நிற ஜிப்பா போன்ற அரைக்கை சட்டை ஒன்று, சந்தன நிறத்தில் மற்றொன்று. மூன்றோ, நான்கோ தங்க நிற பித்தான்கள் இருக்கும். வெளியூர்களுக்கு பேருந்தில் செல்வதாக இருந்தால் மட்டுமே அதை அணிவார். சிறிய எவர்சில்வர் செவ்வக பெட்டி ஒன்று அவரிடம் இருக்கும். அதில் மூக்குபொடியை போட்டு வைத்திருப்பார். அதன் துளைக்கும் நெடியை நாசி நுனி நன்றாக நினைவில் வைத்திருக்கிறது, பொடி உறிஞ்சிய பிறகு வீடதிற எழும் தொடர் தும்மல் ஒலிகளையும் கேட்க முடியும். முற்றத்தின் அலுமினிய கம்பிகளில் தொங்கும் பொடி கறை படிந்த வெள்ளை கைக்குட்டைகளையும், கெளபீனங்களையும், அழுக்கேறிய குத்தால சிவப்பு துண்டையும் நினைவில் கொள்கிறேன். ஒரு பெரிய அலுமினிய பெட்டி ஒன்றிருக்கும். அந்த காலத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வார்களே அந்த மாதிரி. வெளியே வைத்தியத்துக்கு செல்லும்போது அந்த பெட்டியை தூக்கிக்கொண்டு தான் போவார். மனமார சிரிக்கும் ஒலி, கீழே அமர்ந்து கல்வத்தில் அரைக்கும் போது எழும்’ டணங்’. கூடத்தில் சாய்வு நாற்காலியில் வாய் பிளந்து உறங்கும் போது அடித்தொண்டையிலிருந்து எழும் குறட்டை என அவருக்கே உரித்த ஒலிகளை செவி மீட்டு எடுக்கின்றன.

Friday, April 14, 2017

வெள்ளிகிழமை ராமசாமி வாராண்டி

திருவாளர் வெள்ளிக்கிழமை ராமசாமி திங்கள்கிழமையே வந்துவிட்டார்.
இப்பொழுது தான், இதோ இரண்டொரு நாட்களுக்கு முன் வந்திருந்தார். 
சனிக்கிழமை சந்திரசேகரன் வரும்வரை இரவெல்லாம் தங்கியிருந்தார். 
காலையிலேயே வந்திருந்தாலும் கூட அவர் பாட்டுக்கும் ஏதுமறியா சினைபூனை போல மூலையில் சுருண்டு படுத்திருப்பார். 
வியாழக்கிழமை வெங்கடாசலம் செல்வதற்கு முன்பா பின்பா? எப்போது வந்தார் என்று கூட தெரியாது. 
அரிதினும் அரிதாக சனிக்கிழமையும் தங்கி சந்திரசேகருடன் சண்டைபிடிப்பதும் கூட உண்டு. 
ஆனால் ஒருபோதும் ஞாயிற்றுக்கிழமை ஞானபிரகாசத்தை கண்டதே இல்லை.
கொஞ்சம் பொறுங்கள், நீங்கள் வர இன்னும் நாளிருக்கிறது
சொன்னாலும் கேட்காமல் நாற்காலியை இழுத்துபோட்டு 
நடுக்கூடத்தில் அமர்ந்திருக்கிறார்.
'வெள்ளிகிழம வர்ற வர இங்கயே இருக்குறேன்.'
என்றார் வெற்றிலை குதப்பியபடி
அப்போதாவது ஒருபோதும் இங்கிருந்து செல்லும் உத்தேசமில்லை
 என்பதை சொல்லி தொலைந்திருக்கலாம்.  



வாசுதேவன் - சிறுகதை குறித்து

அண்மையில் நான் எழுதிய சிறுகதை ஜெயமோகன் தளத்தில் வெளியாகி உள்ளது. வாசுதேவன் நான்கைந்து ஆண்டுகளுக்கு மேலாக மனதின் மூலையில் உறங்கிக்கொண்டிருப்பவன். அவன் விழித்தெழும் போதெல்லாம் அவன் மவுனத்தின் வழியாக எனக்குள் கேள்விகளை எழுப்பியபடியே இருப்பான். யுகம் யுகமாக மனிதர்கள் விடை காண முயன்று அலுத்து சோர்ந்து விழும் கேள்விகள். எனக்கு மட்டும் அத்தனை எளிதில் விடைக் கிடைத்து விடுமா என்ன? 

எழுத தொடங்கிய காலகட்டத்தில், நான் வாசுதேவனை பற்றி எழுதி இருக்கிறேன். பின்னர் மீண்டும் கொஞ்ச காலத்திற்கு முன்னர் காப்காவின் உருமாற்றம் பற்றி ஆம்னியில் எழுதும் போது மீண்டும் வந்து சென்றான். ஆனால் முழுவதுமாக அவனை என் அகத்திலிருந்து இறக்கி வைக்க முடியவில்லை. இப்போது வாசுதேவனாக அவன் என்னைவிட்டு இறங்கி சென்றுவிட்டான். ஏதோ ஒருவகையில் அவனுடைய நினைவுகளுக்கு நான் நியாயம் செய்துவிட்டதாக ஒரு நிறைவு. அவனுக்கு நீதி கிடைத்துவிட்டதாக எனக்கொரு நிம்மதி. இனி அடுத்த வேலையை பார்க்க செல்லலாம். மீண்டும் அவன் என் அகத்தில் துயில் எழ மாட்டான் என்பது எனக்கு உறுதியாக தெரிகிறது. 

இது ஒரு அனுபவப் பகிர்வாக நின்றுவிடுகிறது, தரிசனம் என ஏதுமில்லை என பல நுண்மையான வாசகர்கள் சொன்னார்கள். வேறு பலர் தாங்கள் இக்கதையின் வழியாக உணர்ந்து கொண்டதையும் சொன்னார்கள். பல விஷயங்கள் தொக்கி நிற்பதாகவும், வலிய திணிக்கபட்டதாகவும், நெகிழ்வான தருணங்கள் இன்னும் இறுக்கமானதாகவும் இருக்க வேண்டும் என்று சில வாசக விமர்சகர்கள் சொன்னார்கள். இன்னும் கொஞ்சம் பூடகமாக சொல்லவேண்டும் என்றார்கள். இறுதி வரிகள் தெலுங்கில் இருப்பது வாசிப்பிற்கு தடையாக இருப்பதாக சொன்னார்கள். தெலுங்கில் அவ்வரிகள் வரவேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து இடையில் உள்ள உரையாடல்கள் தெலுங்கில் அமைத்ததாக சொன்னார்கள்.ஜெ மொழி நடையை பின்பற்றுவதாக சொன்னார்கள். ஒவ்வொரு விமர்சினத்தையும் கவனித்து வருகிறேன். சரியாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எனக்கும் இவைகளுக்கு விடையளிக்க இப்போது இயலவில்லை. ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். நடையைப் பொருத்தவரை மீண்டும் மீண்டும் எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் என்னை எச்சரித்த வண்ணமிருக்கிறார்கள்.முழுமையாக புரிந்துகொள்கிறேன். ஒவ்வொரு ஆரம்ப எழுத்தாளருமே அவருடைய ஆதர்ச எழுத்தாளர் நடையில் தான் எழுத துவங்குவார்கள். ஜெ மாதிரி எழுத வேண்டும் என வலிந்து இப்படி எழுதுவதில்லை எனும் நம்பிக்கையை மட்டுமாவது நான் கோருகிறேன். அதுவே என் அகமொழியாக இருக்கும் போது வேறு என்ன செய்ய இயலும்? காலபோக்கில் இது மாறிவிடும என நம்புவோமாக என்பதைத்தவிர வேறெதுவும் சொல்லுவதற்கில்லை.  

இது வடிவ போதத்துடன், சிறுகதை பிரக்ஞையுடன் எழுதப்பட்ட கதையா எனும் கேள்வி எனக்கும் உண்டு. ஏனெனில் சேலம் வானவன் மாதேவி - வல்லபி சகோதரிகளையும் அங்கு வேறு பல தசை சிதைவு அன்பர்களையும் சந்தித்துவிட்டு வந்த பின்னர் ஒரே மூச்சில், மிக குறுகிய காலத்தில் ஒருவித உணர்வெழுச்சியில் எழுதப்பட்ட கதை.  ஆனால் இது அனுபவ பகிர்வாக நின்றுவிடுகிறதா? தரிசனம் என ஏதுமில்லையா? என்னளவில் இக்கதையில் தரிசனம் இருக்கிறது. ஒரு  கண்டடைதல் இருக்கிறது. வாழ்வைப் பற்றிய மிக முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அதற்கானவிடை காணும் திசையில் பயணிக்கிறது. ஒருகால் சரிவர உணர்த்தப்படாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் இருக்கிறது. அதுவே இந்த அனுபவத்தை புனைவாக்கியது. ஏனெனில் இது எங்கோ நடந்ததை அப்படியே மீள் பதிவு செய்யவில்லை. வேறுவகையில் நிகழ்வுகளையும் நினைவுகளையும் மாற்றி களைத்து அடுக்கியிருக்கிறது. இம்முறை வாசுதேவன் அவனுடைய முழு உருவத்துடன் தன்னை வெளிக்காட்டி இருக்கிறான் என்றே எண்ணுகிறேன். ஒன்றிரண்டு கதைகளை எழுதிவிட்டு அவை சரியாக வாசிக்க படவில்லை என  எண்ணுவது முட்டாள் தனம் தான். அதுவும் ஆரம்ப நிலையில்.



-சுகி