Thursday, April 14, 2022

இருளெழுத்து எனும் கலை- ம. நவீனின் சிகண்டியை முன்வைத்து

நன்றி புரவி ஏப்ரல் 2022

2020 ஆம் ஆண்டு ம. நவீன் தனது முதல் நாவலான 'பேய்ச்சியை' வெளியிட்டார். மலேசியாவின் லூனாஸ் பகுதியில் நிகழ்ந்த சாராய சாவு எனும் வரலாற்று நிகழ்வை பின்புலமாக கொண்டு முதல் தலைமுறை புலம்பெயர் வாழ்வு தொடங்கி தோட்ட வாழ்வு வரை முன்னும் பின்னுமாக ஊடாடும் கதை. பேய்ச்சியின் மையம் என்பது தாய்மைதான். ஜெயமோகனின் வெண்கடல் சிறுகதையில் வரும் பகவதி  மூத்தம்மை இளையம்மை என இரண்டு வடிவில் இருப்பாள். பிள்ளையை இடுப்பில் சுமந்தவளாகவும் வாயில் கவ்வி கடித்து உண்பவளாகவும். பேய்ச்சி நாவலும் இதையொட்டி தாய்மையின் இரு வடிவங்களையம் காட்டுகிறது. ஒரே அன்னையே கௌரியாகவும் காளியாகவும் ஆகிறாள். நவீனின் இரண்டாவது நாவலான சிகண்டியின் மைய பேசுபொருளும் தாய்மை தான். தாய்மையை பால் அடையாளத்திலிருந்து துண்டிக்கிறது. தாய்மையையும் பெண்மையையும் எய்தத்தக்க  ஒரு நிலையாக முன்வைக்கிறது. இந்த தரிசனம் தமிழுக்கு புதிதல்ல. சு. வேணுகோபாலின் 'பால்கனிகள்' சட்டென நினைவுக்கு வருகிறது. நாஞ்சில் நாடனின் 'எட்டுத்திக்கும் மதயானை' சிகண்டியின் முன்னோடி என சொல்லலாம். பூலிங்கம் வீட்டை விட்டு வெளியேறி மும்பையின் நிழலுலகத்தை அடையும் கதை அது.


நாவல் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களை சித்தரிக்கின்றது. இரண்டாயிரங்களின் தொடக்கம் மற்றும் அறுபதுகளின் காலகட்டம். கோலாலம்பூர் எனும் நகரம் தோட்டமாக இருந்த காலகட்டம் தொடங்கி பெரு நகரமாக உருமாறும் சித்திரத்தை காட்டுகிறது. பேய்ச்சியிலும் நிலம் மற்றும் வாழும் உரிமை சார்ந்து முக்கியமான கேள்விகளை எழுப்பினார் என்றால் இந்நாவலிலும் அதே அரசியல் கோடிட்டு காட்டப்படுகிறது. தமிழக நிலத்திற்கு வெளியே கதை நிகழும்போது அந்நிய பண்பாட்டை, அதன் பாத்திரங்களுடனான ஊடாட்டத்தை சித்தரிப்பது சவாலான விஷயம். மலேசியா போன்ற பல்லின தேசத்தில் தமிழ் பண்பாட்டிற்கு வெளியே உள்ளவர்களை மிகையின்றி, வியப்பின்றி இயல்பாக சித்தரிப்பது இந்நாவலின் தனித்தன்மை மற்றும் பலம் என்றே சொல்லலாம். மதுரை வீரனை மேட்டில் வணங்கும் தோட்ட சனங்களின் வாழ்க்கை சித்தரிப்பு ஒரு பகுதி என்றால் பெரும் பகுதி கோலாலம்பூரின் இருண்ட நகர்ப்புறத்தையே சித்தரிக்கிறது. மலேசிய தமிழ்நாவல்களின் மீது பொதுவாக உள்ள விமர்சனம் என்பது மீண்டும் மீண்டும் தனது படைப்புகளுக்கான களமாக மலேசிய தோட்டப்புறத்தையே தேர்வது என்பதுதான். அத்தகைய கதை களத்திற்குரிய நியாயமும் தேவையும் உள்ளது என்றே நான் நம்புகிறேன். எனினும் பிற களங்கள் போதிய அளவு எழுதப்படவில்லை எனும் விமர்சனம் சரியானதே. சிகண்டி அதை கணிசமாக சமன் செய்கிறது. தோட்டத்தை எழுதும்போது இயல்பாக பண்பாட்டு கூறுகளை இணைத்து எழுதிவிட முடியும். அதன் வழி மலேசிய வாழ்வின் தனித்தன்மைகளை எளிதில் காட்டிவிட முடியும். ஆனால் உலகெங்கும் பெரு நகரங்கள் ஒரே தன்மையை கொண்டிருக்கின்றன. அவற்றின் வரலாறு ஒன்று போலவே உள்ளன. கோலாலம்பூரின் வரலாறு மும்பையிலிருந்தும் சென்னையிலிருந்தும் பெரிதாக வேறுபட்டதில்லை. பண்பாட்டு தனித்தன்மை என ஒன்றுள்ளதா என்றே நம்மால் தெளிவாக வரையறை செய்ய முடியாது. நகரங்களை எழுதுவதில் உள்ள வசதியும் சவாலும் இதுவே. சிகண்டியின் சௌவாட் பகுதி நாமறிந்த நகரத்தின் பார்க்கப்படாத மறுபகுதி. ஒரு சுவருக்கு அப்பால், ஒரு சாலை அல்லது பாலத்துக்கு அப்பால் நகரம் முற்றிலும் வேறொரு வண்ணம் கொள்வதை நாம் எப்போதும் கண்டுவருகிறோம். 


நாவலின் தலைப்புக்குரிய 'சிகண்டி' ஒரு மகாபாரத பாத்திரம். சுருக்கமாக சொல்வதானால் அம்பை எனும் பெண்ணுக்கு வாழ்க்கையும் அன்பும் மறுக்கப்பட்டபோது அதற்கு காரணமானவர்களை பழிவாங்க சிகண்டியாக மறுபிறப்பு எடுக்கிறார். புறக்கணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் உதித்தவர் சிகண்டி. நாவலின் மைய பாத்திரமான ஈபுவிற்கும் இரு வடிவங்கள். ஈபு  எனும் சொல்லிற்கு மலாய் மொழியில் அன்னை என பொருள். ஒரு  தளத்தில் தனக்கு மறுக்கப்பட்டதை ஈட்டுவதற்காக போராடும் சிகண்டியாக திகழ்பவரே  இன்னொரு தளத்தில் அனைத்து திருநங்கையர்களையும் அரவணைக்கும் அன்னையாக ஆகிறாள். அவர்களின் பாதுகாப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்பவராக உள்ளார். பேய்ச்சியின் தரிசனத்தின் நீட்சி என்றும் கூட சொல்லலாம். நிலம் என்பதும் எப்போதும் அன்னைக்கு ஈடாக வைக்கப்படுபகிறது. சிகண்டியாக வைட் கோப்ராவிற்கு எதிராக நில உரிமைக்காக போராடுகிறார். எனக்கு  வைட் கோப்ராவை எளிதில் முழு எதிர்மறை பாத்திரமாக வார்ப்பதற்கான வாய்ப்பிருந்தும் அதை நவீன் தவிர்த்துள்ளார். அவர் தன் சீன இனத்தவரின் பொது வளர்ச்சியை நோக்காக கொண்டவராகவே காட்டப்படுகிறார்.  சிகண்டியின் வெற்றி என்பது  தற்கால அரசியலையும் காலாதீத மானுட கேள்வியையும் ஒரே நாவலில் எவ்வித துருத்தலும் இன்றி ஒருங்கிணைத்து அளித்ததில் உள்ளது. வழமையாக மரபில் தெய்வ வடிவங்கள் ஒரு கையில் அருளல் முத்திரையையும் மறுகையில் ஆயுதத்தையும் கொண்டகாகவே சித்தரிக்கப்படுகின்றன. கொடுஞ்செயல் புரிந்தோரை அழிப்பதும், அடைக்கலம் வேண்டுவோரை பேணுவதும் கடவுளர்களின் கடமையாக சொல்லப்படுகிறது. இதன் ஆதிவடிவம் என்பது இயற்கை வழிபாட்டிலிருந்து தொடங்குவது. இயற்கை பேராற்றல் கொண்ட சக்தி வடிவமாக ஒரே நேரத்தில் அருளவும் அழிக்கவும் செய்கிறது. இந்த இருமையை சரா- ஈபு ஆகிய இருவரின் சித்தரிப்பிலும் காணலாம். தீபனின் நோக்கிலிருந்து ஈபு அச்சுறுத்துபவர், தண்டிப்பவர் சரா அரவணைத்து அருள்பவர். 


நாவலின் முக்கிய கதைமாந்தர்களென தீபன், ஈபு மற்றும் சராவைச் சொல்லலாம். அவர்களின் ஆளுமை பரிணாமங்களை நாவல் சித்தரிக்கிறது. அவர்களைத் தவிர நிஷாம்மா,  ஷாவ், காசி, வீரன், மாரிமுத்து, தீபனின் மாமா, கண்ணன் என பல அபாரமான கதை மாந்தர்கள் உருவாகி வருகிறார்கள். மலேசிய தமிழ் நாவலில்  மதுரை வீரன் வருவது விஷயமல்ல. ஆனால் பகுச்சாரா‌ போன்ற வட இந்திய தெய்வமும், குவாங் யின் போன்ற சீன பவுத்த தெய்வமும் வெறும் பெயராகவோ தகவலாகவோ இல்லாமல் நாவலின் ஆழத்தை கூட்டி அர்த்த மடிப்புகளை செறிவாக்கும் படிமங்களாக துலங்கி வருகிறார்கள். 

 

 நாவலின் கதையை விரிவாக சொல்வது இக்கட்டுரையின் நோக்கமில்லை. 'சிகண்டி' என்னுள் ஒரு மிக முக்கியமான கேள்வியை எழுப்பியது. இருளை நாம் ஏன்  எழுத வேண்டும்? இருளை எழுதும்போது எழுத்தாளராக நாம் சற்று கூடுதல் தளுக்குடன், கிளர்ச்சியுடன் எழுதுகிறோமா? வாசகராக இருளை கூடுதல் ஈடுபாடுடன், ஈர்ப்புடன் வாசிக்கிறோமா? அக இருளை மையாக வடித்து எழுதும்போது நாம் அதில் வற்றாத மையூற்றை கண்டுகொள்கிறோமா? பேய்ச்சியைவிட நவீன் சிகண்டியில் இன்னும் தீவிரமாகவும் நம்பகமாகவும் வெளிப்பட்டார் என எனக்கு தோன்றியது. அவரளிக்கும் இருட்சித்திரங்கள் அதற்கு காரணம். ஒரு கூடுதல் கிளர்ச்சியையும் திளைப்பையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. நம் கவனத்தை இருத்திவைக்க இருளை எழுதுவது எளிய உத்தியும்  கூட. 


 ஆனால் ஒரு உத்தி என்பதற்கு அப்பால் இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என எண்ணுகிறேன். இரண்டுமே முக்கியமானவையும் கூட. பார்வை கோணத்தில் பதிவாகும் சமூக யதார்த்தமாக இருள் இலக்கியத்தில் கையாளப்படலாம். இருள் ஒளி எனும்  இருமையற்று உள்ளதை உள்ளபடி பதிவாக்குகிறது. ஒரு எலியின், சர்ப்பத்தின் பார்வையிலிருந்து உலகத்தை காண முடியும்போது அதன் பார்வையில் தென்படுவதை இருளென்றும் ஒளியென்றும் நம்மால் வகுக்க முடியாது. அவ்வுலகில் குற்ற உணர்வுக்கு வேலையில்லை. வாழ்க்கையை அசலாக அதன் போராட்டங்களோடு சொல்லிவிட்டு விலகிக்கொள்ளும். இருளென்றும் ஒளியென்றும்  மதிப்பிடுவது வாசகர்களாகிய நாம் நம் வாழ்வுடன் ஒப்பிடுவதால் வருவலு. இக்கதைகள் நமக்கு ஏன்  தொந்திரவு அளிக்கின்றன? நாம் பார்க்காத வேறொரு வாழ்வை, நாமறியாத வேறொரு மதிப்பீடுகளை கொண்ட உலகம் நம் புலனுக்கு வசப்பாடாமல் இயங்கி கொண்டிருக்கிறது எனும் அறிதலே  முக்கிய காரணம். இவ்வகையான நாவலுக்கு சிறந்த உதாரணம் என ரொபர்டோ போலன்யோவின் நாவல்களை சொல்லலாம். லட்சுமி சரவணகுமாரின் உப்பு நாய்கள்,  ஜி நாகராஜனின் 'நாளை மற்றொரு நாளே' கூட இவ்வகையை சேர்ந்தது என்றே சொல்லலாம். 


இரண்டாவது காரணமென்பது தன்னை அறிதலின் பகுதியாக தனக்குள் இருக்கும் இருளை அறிவது. கார்ல் யுங்கின்  புகழ்பெற்ற நிழல் கோட்பாடு நினைவுக்கு வரலாம். நாம் எத்தனைக்கு எத்தனை ஒளி பொருந்தியவர்களாக சுடர் விடுகிறோமோ அத்தனைக்கு அத்தனை கருமையான நிழலையும் கொண்டிருக்கிறோம். அரவிந்தரைப் பற்றி சத்ப்ரேம் எழுதிய நூலில், மனித பிரக்ஞை மேல் நோக்கி ஒவ்வொரு படியாக செல்லும் தோறும் கீழ்நோக்கி ஒவ்வொரு படியாக இழியவும் செய்யும் என்கிறார்.  இருளும் ஒளியும் ஒன்றின் மாறாத இரு தோற்றங்கள். இந்த இருள் நமக்கு ஏன்  அதிர்ச்சியளிக்கிறது? வாசகராக நாம் நமக்குள்ளிருக்கும் இருளை பொருத்தி பார்க்கிறோம், அடையாளம் காண்கிறோம், நம் இருளை நாம் அறிகிறோம், அதை சுவைக்கிறோம். அதில் திளைக்கிறோம். திளைக்கிறோம் என்பதை கண்டுகொள்வதால் திகைக்கிறோம். சிகண்டியில் தீபனுக்கு நிகழ்வது அதுதான். தாஸ்தாவெஸ்கியின் நாவல்களில் நாம் காணும் இருள் இதுதான். ஜெயமோகனின் 'ஏழாம் உலகத்தையும்' இவ்வகையான நாவலாக சொல்வேன். ஒளி எது இருள் எது எனும் உணர்வு உண்டு, இருளில் இழியும் குற்ற உணர்வும் தன்னுணர்வும் உண்டு, மீட்புக்கான ஏக்கமும் உண்டு. மீட்பென்பது எப்போதும் களங்கமின்மை எனும் நிலையை அடைவதையே இலக்காக கொண்டது. இரத்த உறவுகளின் மாரிமுத்துவின் குழந்தை பருவத்து கனவுகள், விஷ்ணுபுரத்து சோலை பைத்தியம், தாஸ்தாயேவ்ஸ்கியின் மிஷ்கின், நீலகண்டத்தின் வரு என இவர்கள் அனைவருமே அறிதலின் கசப்பிலிருந்து புனிதமான களங்கமின்மைக்கு, இரண்டின்மைக்கு செல்லவே விழைகிறார்கள். அதாவது ஏவாள் தடுக்கப்பட்ட பழத்தை உண்ட ஆதி பாவத்துக்கு முன்பான நிலை. அரவணைப்பிற்குள் புதைந்துகொள்ள விழைகிறார்கள்.‌


போதை, இருட்டு சந்தை, சூதாட்டம், ரேஸ், உடல் சந்தை, உயிர் சந்தை என சாத்தியப்படும் அத்தனை இருள் உலகங்களையம் அடுக்கடுக்காக நாவலிற்குள் நவீன் சித்தரிக்கிறார். தீபன் அம்மாவை  விட்டு விலகிவந்து வேறொரு அன்னையை, விரிந்த ஆயிரம் கரமுடைய வேறொரு அன்னையை கண்டடைவதே கதை என சொல்ல முடியும். அந்த அன்னையிடம் அடைக்கலமடையும் முன் அவன் அறியும் இருளே நாவல். க்காவா என மட்டும் பிதற்றும் தனபாலனின் தங்கை தொடங்கி படிப்படியாக அவன் இருளை அறிகிறான், இருளை சுவைக்கிறான், இருளில் திளைக்கிறான், திளைப்பதை குற்ற உணர்வுடன் வேடிக்கை பார்க்கிறான். நாவலின் பல இடங்கள் ஆழ்ந்த மன தொந்தரவை அளிப்பவை. சராவை அவமதிக்கும் பகுதி, பூஸ் எனும் பூனையின்  மரணம், காசியுடன் அவன் உண்ணும் கடைசி விருந்தில் கருங்குரங்கின் மூளையில் மதுவை ஊற்றி குடிக்கும் சித்தரிப்பு, உச்சமாக இறுதி அத்தியாயங்களில் அவனுக்கு நிகழும்  நெருக்கடிகளும் தீபனின் பரிணாமத்தை காட்டுபவை. மாமா மகன் ஏழு வயது சிறுவன் கண்ணனின் தொடுகை அவனுக்கு காமத்தை கிளர்த்துகிறது. காமம் கிளரும் தோறும் உக்கிரமான மலவீச்சத்தை உணர்கிறான். வயிற்றுப்போக்கில் பாதிக்கப்பட்ட பிலிப்பினோ பெண்னுடனான உறவின் விளைவென எண்ணுகிறான். ஆனால் அதற்கு அடியில் வேறொரு ஆழமான காரணம் உள்ளது. பிறரை‌‌ வதைக்கும்போதே தன்னை ஆணாக உணர்கிறான் என்பது இறுதியில் கண்டுகொள்கிறான். வன்முறைக்கும் பாலியல் இச்சைக்கும் உள்ள உறவு ஒரு ஃபூக்கோவிய கருத்தாக்கமும் கூட. 


 தீபன் தன்னை வளர்ந்த ஆண் மகனாக நிரூபித்துக்கொள்ள முயன்றபடி இருக்கிறான். அதற்கு அவனது குழந்தைமையை கைவிட கடுமையாக முயல்கிறான். சரா அவனை எப்படி பார்த்தாள் என்பதை அறிந்ததும் அவன் இறுதியில் தன்னை குழந்தைமைக்கு ஒப்பு கொடுக்கிறான். எந்த இருளும் தீண்டாத சரா தீபனுக்கு மீட்பளிக்கும் தேவதையாக, அப்சராவாக  ஆகிறாள். மியா ஷான் நாடகமும், குவாங் யின் கதையும் சொல்லப்படும் இடம் சராவின் வாழ்வோடு இயைந்து வருவது நாவலின் அபாரமான பகுதிகளில் ஒன்று, நாவலின் அத்தனை இருட் சித்தரிப்புகளுக்கும் நியாயம் செய்யும் பகுதி சராவின் பாத்திரமும் இந்த பகுதியும்தான். 


இந்நாவலில் நவீன் எழுதும் இருண்ட பகுதிகளில் திளைப்பும் கிளர்ச்சியும் உள்ளதை வாசகராக என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் கதைசொல்லி பதின்ம வயதினன், சாகசத்தை விரும்புபவன், வெளியிலிருந்து வருபவன் எனும்போது அவன் கிளர்ச்சியடைவதை புரிந்துகொள்ள முடிகிறது. பேய்ச்சியும் சரி சிகண்டியும் சரி அடிப்படையில் நீதிக்கதை தன்மையை கொண்டவை என எனக்கு தோன்றுகிறது. காரண- காரிய தொடன்ச்சி வெளிப்படும் நிகழ்வுகளின் பின்னல் சரடின் வழியாக கணக்குகள் நேர்செய்யப்படும் சித்திரத்தை அளிப்பவையாக அவை உள்ளன. அறிந்தும் அறியாத புரிந்தும் புரியாத வயதில் தீபன் நண்பனின் தங்கைக்கு செய்தது வரை கணக்கின் ஆழம் நீள்கிறது. இன்னும் ஆழமாக முற்பிறப்பு அல்லது குருதி தொடர்ச்சிவரை கூட செல்கிறது. இது ஒரு வகையில் மரபார்ந்த வெளிப்பாடு. அந்த வாழ்க்கை பார்வையுடன் முரண்படும் இன்னோரு சரடும் நாவலில் வெளிப்பட்டிருந்தால் மெய்யியல் தளத்தில் இன்னும் ஆழமடைந்திருக்கும் என தோன்றியது. உதாரணமாக தாய்மையின் புனிதத்தை அங்கீகரித்தே அதன் இரு நிலைகளை நாவல் விவாதிக்கிறது. தாய்மை புனிதம்தானா என்றொரு கேள்வியும் இதில் இணைந்திருந்தால் புதிய தளங்களில் பயணித்திருக்கும். தீவிர நிகழ்வுகள் யாவும் தீபனின் கனவு காட்சிகளாக வருவது தர்க்கத்திற்கு வெளியே நாவலுக்கு ஒரு மாந்த்ரீக தன்மையை அளிப்பதாக உள்ளது. பேய்ச்சியில் போமோக்கள் பற்றிய சித்திரம் வரும். இந்நாவலில் தாய்லாந்து பவுத்த மரபில் உள்ள பச்சைக்குத்தும் மரபு அமானுடத்தன்மையை அளிக்கிறது. ராஜ பல்லியும் அதன்‌ வாலும் நாவலில் மிக முக்கியமான உருவகமாக ஆகிறது. நாவலின் மையப்படிமமாக என் மனதில் எழுந்து நிற்பது சிகண்டி என்பதைவிட குவாங் யின் எனும் போதி சத்வரின் வடிவம்தான். 


களம், பேசுபொருள், கூறுமுறை சார்ந்து சிகண்டி சமீப காலங்களில் வெளிவந்துள்ள மிக முக்கியமான நாவல்களில் ஒன்றென சொல்வேன்.  மேலும் ஐநூறு பக்கங்களுக்கு மேலான இந்நாவல் தொய்வற்ற வாசிப்பின்பத்தை அளித்ததையும் சொல்ல வேண்டும். இருளை கலையாக ஆக்கியதில் சிகண்டி வெற்றி பெற்றுள்ளது. எழுத்தாளர் நவீனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 



பேரின்ப ஊஞ்சல்- அக்கம்மாதேவி கவிதைகள்

காலச்சுவடில் வெளிவந்த கட்டுரை. 

பெருந்தேவி மொழியாக்கம் செய்த 'மூச்சே நறுமணமானால்' எனும் அக்கம்மாதேவியின் வசன கவிதை தொகுப்பு,  அக்கம்மாதேவி வீர சைவ மரபின் வழி வந்த முக்கியமான கன்னடப்பெண் கவி. பசவரின் காலத்தில் வாழ்ந்தவர். அவரது வாழ்வு குறித்த சித்திரத்தை பெருந்தேவி இத்தொகை நூலில் அளிக்கிறார். அக்கம்மா வீட்டை விட்டு வெளியேறி ஸ்ரீசைலம் சென்றடைந்த காலகட்டத்தில் எழுதிய வசனங்கள் என நானூறுக்கும் மேற்பட்டவை 'சென்ன மல்லிக்கார்ச்சுன'  எனும் அவரது கவி முத்திரையுடன் காணப்படுகிறது. அவற்றிலிருந்து 120 வசனங்களை வினைய சைதன்யா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அத்தொகுதியின் தமிழ் மொழியாக்கமே இந்நூல். வினயா அக்கம்மாதேவியின் கவிதைகளைப்பற்றி குறிப்பிடும்போது 'எப்போதுமே மென்மையானது என்று சொல்ல இயலாத அவனது பேரன்பு அவளை உடைந்த கத்தியின் தகடெனக் குத்தித் தாக்க, கையறு நிலையில் தனது களிப்பையும் வலியையும் இவ்வசனங்களில் பாடுகிறாள்.' என கூறுகிறார். 



 சரணர்கள் என்றழைக்கப்படும் வீரசைவ துறவிகளுடன் இணைகிறார். பசவர், அல்லாம பிரபு போன்றவர்களை சந்திக்கிறார். பின்னர் தனியே ஸ்ரீசைலம் நோக்கி செல்கிறார். ஆடை களைந்து திசையாடை உடுத்தியவராக துறவுக்குள் அமைகிறார். ஸ்ரீசைலத்தை சென்றடைந்தவர் திரும்பவில்லை. இது ஒரு சுருக்கமான வாழ்க்கைச் சித்திரம். அவரை உள்ளூர் அரசன் மணந்துகொள்ள முயன்றார் என்றும் மணந்துகொண்டார் என்றும் பல கதைகள் உள்ளன. சிவனுக்காக வாழ்வை விட்டு வெளியேறியவர் என்பது மட்டும் தெளிவு. 


பக்தி காலத்து கவிகள் பெரும் பயணிகளும் கூட. இயல்பாகவே அவர்களிடள் ஒருவித நாடோடித்தன்மை உண்டு. வீர சைவத்தைச்சேர்ந்த சரணர்களும் அப்படிதான். ஆயிரமாண்டுகளுக்கு முன் திசையாடை உடுத்திய நாடோடி பெண் கவி எனும் ஆளுமையே அக்கம்மாதேவியின் மீது பெரும் வசீகரத்தை ஏற்படுத்துகிறது. அந்த வசீகரமே அவருக்கு பல இன்னல்களையும் அளிக்கிறது.  


அக்கம்மாதேவியின் வசனங்களிலேயே கூட பலவற்றில் ஒருவித மன்றாடல், எச்சரிக்கை போன்றவை மாறி மாறி ஒலிக்கின்றன. 'அடியார் உடலைக் கொண்டவன்/  தேவனென்று மறை பகர்வதால்/ அடியாரின் சிறு நோவும் சிவனைத் தொடும்' (12) என எச்சரிக்கிறார்.  அண்ணன்களே தந்தைகளே தொல்லை செய்யாதீர் (41) என மன்றாடுகிறார். 'வட்ட முலைகளையும் நிறையிளமையின் அழகையும்/ கண்டு என்னிடம் வந்தாயா அண்ணா?/ அண்ணா நான் பெண்ணல்ல/ அண்ணா நான் வேசியல்ல/ அண்ணா பின்பு என்னைக் கண்டு கண்டு/ யாரென்று வந்தாய் அண்ணா?' (44) என கேட்கிறார்.   சிவனுக்கென்று உள்ளவரை துன்புறுத்தாதே அண்ணா (46) என்கிறார். இக்கவிதைகள் வழியாகவே அவர் சமூகத்துடன் உரையாடி, தனக்கான இடத்தை படிப்படியாக உருவாக்கிக்கொள்கிறார். 




பொதுவாக பக்தி கவிதைகள் வெவ்வேறு உணர்வு நிலைகளில் எழுதப்படுபவை. மாத்ரு பாவம் என்றால் இறைவனை அன்னையாக கருதுவது. வாத்ஸல்ய பாவம் என்றால் இறைவனை குழந்தையாக பாவிப்பது.  சதி- பதி அல்லது பர்த்ரு பாவம் என்று வழங்கப்படும் நாயக நாயகி பாவமே பரவலாக காணப்படுவது. இறைவனை கணவராக, காதலராக கொள்வது. இதன் ஒரு பரிணாமமாக தாஸ்ய பாவம் எனும் இறையடியார் பாவமும் உண்டு. இறைவனை மட்டுமே ஆணாகவும் பிற அனைவரையும் பெண்ணாகவும் காணும் வழக்கம் மறைஞான மரபில் எப்போதும் உள்ளதுதான். 'கபீர் சொல்கிறேன்/ ராமனின் கண்களில்/ நாம் அனைவரும் பெண்களே'  என்கிறார் கபீர். அக்கம்மா 'ஆண்கள் அனைவரையும் பெண்களாக்கி

ஆளும் கொரவனைக் கண்டேன்' என அவர் பங்கிற்கு எழுதுகிறார்.‌  


நாயக நாயகி பாவத்தில் உள்ள ஐக்கிய வேட்கை கவிதைகள் பொதுவாக மூன்று நிலைகளுடையவை. 


நாயகனுக்காக காத்திருத்தல்

நாயகனை அடைந்து ஐக்கியமாதல்

ஐக்கிய அனுபவம் கிட்டிய பிறகு நாயகன் நீங்கிச்செல்வதால் ஏற்படும் பிறிவாற்றாமை.


ஆண்டாள் தொடங்கி மீரா, கபீர் என அத்தனை கவிகளும் இம்மூன்று நிலைகளிலும் கவிதைகள் எழுதியுள்ளார்கள். அக்கம்மாவும் விதிவிலக்கல்ல.


 'பீடத்தையும் பந்தலையும் போட்டு/  

உன் திருவடிகளுக்கு/  இடத்தை 

நிர்மாணித்திருக்கிறேன் ஐயனே/ 

சென்னமல்லிகார்ச்சுனனே எப்போது வருவாயென' (81) என சென்னமல்லிகார்ச்சுனனின் வருகைக்காக காத்திருக்கிறார். காத்திருத்தலின் மற்றொரு பரிணாமம் என்பது காக்க வேண்டும், மீட்க வேண்டும், அருள வேண்டும் என மன்றாடுதல். 'நானற்று நீயாகும் வழியை காட்டு.' (29) என மன்றாடுகிறார். சென்ற பிறவிகள் போகட்டும் இப்போது வழிகாட்டு என்கிறார் (27). பள்ளமும் நதியும் ஏரியும் வலையும் சூழ எங்கும் செல்ல முடியாமல் கொல்ல நினைக்கும் மாயையிடமிருந்து காக்க வேண்டும் என சென்னமல்லிகார்ச்சுனனிடம் வேண்டுகிறார். ஒருவகையில் இவை யாவும் இருத்தலியல் படிமங்கள்தான். ஆன்மீக கவிதைகளும் நவீன கவிதைகளும் இருத்தலியல் படிமங்களை ஒன்றுபோலவே பயன்படுத்துகின்றன. அங்கிருந்து அவை அடையும் அடுத்தக்கட்ட பரிணாமங்களே அவற்றின் தனித்தன்மையை தீர்மானிக்கின்றன என சொல்ல முடியும். ஆகவேதான் நவீன கவிதைகளின் வாசகனுக்கு ஆண்டாளோ அக்கம்மாவோ அந்நியமாக தெரியவில்லை‌. 


காமத்தின் கற்பனையில் கருகி அமர்ந்திருந்தேன் அம்மா

மோகித்து முத்தமிட்டு மடைச்சியானேன் அம்மா

வெளியிடாது விடாது களித்து நம்பினேன்

என் தேவன் சென்னமல்லிகார்ச்சுனன்

என்னை விரும்பாவிட்டால்

என்ன செய்வேன் அம்மா (99). 


வெந்தீயென பற்றி எரியும் காமத்தின் புழுக்கத்தை சொல்கிறது இவ்வசனம். 

 

'தேடிக் காணாத உடலையும்

முயங்கிப் பெறாத சுகத்தையும்

எனக்கருள்க சென்னமல்லிகார்ச்சுனனே. புழுவை போல் வளைந்து நெளிந்தேன்

மணலைப் போல் காற்றில் பரந்தேன்

கனவுகளிலும் வேதனைமில் மிரண்டேன்

ஆவிச்சூட்டைப்போல் சுருள் சுருளாகக வெந்தேன். (100)






'பால் நீர் போல நீயிருப்பதால்

முன்னால் என்ன பின்னால் என்ன என்றறியேன்

யார் செய்வோன் யார் சேவகன் என்றறியேன்

எது கனத்தது எது சிறியது என்றறியேன்

சென்னமல்லிகார்ச்சுனனே

உன்னை விரும்பிக் கொண்டாடினால்

எறும்பும் ருத்ரன் ஆகாதோ

சொல் ஐயனே.(79)


மேலே உள்ள வசனம் ஐக்கிய நிலையின் அனுபவத்தை சொல்கிறது. இரண்டற்ற நிலையில் லயித்திருக்கிறார். 'சென்ன மல்லிகார்ச்சுனனுக்குள் இருப்பவளை என்னவென்று அழைப்பாய் அம்மா?' (78) என கேட்கிறார். 

'சுகமே படுக்கை 

பார்வையே அணிகலன்

ஆலிங்கனமே ஆடை 

முத்தமே ஊட்டம்

காதல் பேச்சு தாம்பூலம்

உணர்ச்சி மோகனம் நறுமணத் தைலம்

சென்னமல்லிகார்ச்சுனனோடு கலத்தல் 

பரம சுகம் அம்மா!' (70) என்பதில் அவரது பரவசம் வெளிப்படுகிறது. இது இரண்டாவது கட்டம். 


'கூட்டத்தில் பிரிந்து அகப்பட்ட யானை

தன் விந்தியாவனத்தை நினைவுகூர்வதைப் போல்

நினைவுகூர்கிறேன் ஐயனே

சிறைப்பட்ட கிளி தன் உறவை நினைவுகூர்வதைப் 

போல் நினைவுகூர்கிறேன் ஐயனே (90)' என பிரிவை எண்ணி வருந்துகிறார். இது மூன்றாம் நிலை. பெரும்பாலான வசனங்களை இம்மூன்று பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். 


'ஐம்பொறிகளால்தொல்லையுற்று

இறுமாந்த இளம் உடல் வீணாய்ப் போனதே!

நறுமணத்தை உண்கையில் 

படபடப்பதை நிறுத்தும் தும்பியாக

இனி என்று என்னை உட்கொள்ளப் போகிறாய்

சென்னமல்லிகார்ச்சுனனே?' (91) 


தும்பிக்கு தேன் குடிக்கும் போது பதட்டமில்லாத நிதானம் கைகூடுகிறது. தேன் ததும்பி காத்திருக்கும் மலரை தும்பி கண்டுகொண்டு அருந்துகிறது. நம் முயற்சிகள் இருந்தாலும் முக்தி என்பது இறையால் அருளப்படுவதென்பது விசிஷ்டாத்வைதத்தின் பார்வை. பக்தி இயக்கம் அத்வைத வேதாந்தத்தின் இறுகிய மெய்யியல் சட்டகத்தை நெகிழ்த்திய மெய்யியல் மரபென விஷிஷ்டாத்வைதத்தை குறிக்க முடியும். 'சிவன் நேசித்தாலன்றி கைகூடாது' (77) என நேரடியாகவே சொல்கிறார். இந்த வசனம் நம்மாழ்வார் பாசுரத்தை எனக்கு நினைவுபடுத்தியது. 


வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று


ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்


பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்


கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே


உன்னை எப்போது காண்பேனோ அப்போது வாரி விழுங்கிவிட வேண்டும் என்றிருந்தேன் ஆனால் நீயோ என்னை முந்திக்கொண்டு என்னை முழுதாக விழுங்கிவிட்டாய் என்கிறார் நம்மாழ்வார். 




அக்கம்மாதேவி கவிதைகளின் ஊடாக சில உரையாடல்களை நிகழ்த்துகிறார். அவ்வுரையாடலின் வெவ்வேறு தரப்புகளுடன் முட்டி மோதுவதும், முரண்படுவதுமே அவரை ஞானியாக அல்லாமல் எரியும் தீவிரம் கொண்ட கவியாக நமக்கு காட்டுகிறது. ஞானியரின் சொற்கள் தெள்ளிய நீரோடை என்றால் கவியின் சொற்கள் ஆர்ப்பரிக்கும் அருவி. அவரே ஒரு வசனத்தில் குறிப்பிடுவது போல் 'அஞ்ஞானியுடன் பழகுவது கல் உரசி நெருப்பு உருவாவது போல். ஞானிகளுடனான பழக்கமென்பது தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பது போல். ஆனால் அக்கம்மா இவையிரண்டையும் தேர்வு செய்யாமல் 

சரணர்களுடனான உறவை தேர்ந்தெடுக்கிறார் அது 'கற்பூர மலை தீப்பிழம்பாவது போல்.' (23) இந்த உருவகம் அபாரமானது. கல்லிலிருந்து நெருப்பை உண்டாக்க பெரும் முயற்சி வேண்டும். வெண்ணெய் எடுக்கவும் பொறுமை வேண்டும். ஆனால் கற்பூர மலை நெருப்பை தொட்ட உடனேயே தீப்பிழம்பாகி விடும். முயற்சி, பொறுமை என எதுவும் தேவையில்லை அண்மை மட்டுமே போதும். கவியின் பாதை இதுவாகவே இருக்க முடியும். 



குன்றின் மீது வீடு கட்டி விலங்குகளுக்கு அஞ்சுவது, சமுத்திரக்கரையில் வீடு கட்டிவிட்டு நுரைதிரைகளுக்கு அஞ்சுவது, சந்தை மத்தியில் வீடு கட்டிவிட்டு கூச்சலுக்கு நாணுவது அபத்தம் என்கிறார் (7).  இது  உலகவாழ்கையை அச்சமின்றி, ஓடி ஒளியாமல் எதிர்கொள்ள வேண்டும் என சொல்கிறது. அதற்கடுத்த வசனத்திலேயே உலகத்துடன் எப்படி வாழ்வது எனும் கேள்விக்கு விடையும் அளிக்கிறார். பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல உடல்பந்தம் விடுபட்ட உடலுடன் பிரபஞ்சத்திலிருந்து மாயையை நீக்கி வாழ முடியும் என்கிறார். இதற்கு மாறான எண்ணமும் கவிதையில் வெளிப்படுகிறது. வெளியேறியவர்கள் நியதிகளற்றவர்கள். அவர்களால் மீண்டும் நியதிகளுக்குள் பொருத்திக்கொள்ள முடியாது. 'துன்ப வினைகளில் உழலும் மனிதர்கள் காணாமல் ஒன்றைப்பேசினால் நிட்டையுள்ள சரணர்கள் நிலையற்ற உலகத்துக்கு திரும்புவார்களா?' (13)  என கேட்கிறார். இந்த வசனத்தில் அவர் பயன்படுத்தும் உருவகங்கள் மரபானவை. வெட்டப்பட்ட மூங்கில் மீண்டும் துளிர்காது  ஏனெனில் அது வேரை இழந்து விடுகிறது. சுட்ட மண் சட்டி மண்ணுடன் கலக்குமா? தவம் எனும் நெருப்பால் பக்குவப்பட்டது மீண்டும் எப்படி தன்னியல்பை இழக்கும்? பழுத்த கனி காம்போடு ஒட்டுமா? காம்பு என்பதே உலகியல். கனி பழுக்கும் வரை அதை தாங்கி பிடிப்பதோடு அதன் கடமை நிறைவடைகிறது. 


'மலைக்குச் சாரமில்லை என்கிறார்கள்

பிறகெப்படி மரங்கள் பிறக்கின்றன?

கரிக்குச் சாரமில்லை என்கிறார்கள்

பிறகெப்படி இரும்பு அதில் உருகுகிறது?

தனக்கு உடலில்லை என்கிறார்கள்

பிறகெப்படி சென்னமல்லிகார்ச்சுனன்

காதலித்துக் கூடுவான்? (100)' என கேட்கிறார். அத்வைத வேதாந்தத்தின் உடல் மறுப்பின் மீதான விமர்சனமாக இதை காண முடியும். 

கணவன் கூட இகத்தின் குறியீடாகவே கவிதையில் உருகொள்கிறார். 'இகத்துக்கு ஒரு கணவன்/ பரத்துக்கு ஒரு கணவனா?/ உலகியலுக்கு ஒரு கணவன்/ பரம்பொருளென ஒரு கணவனா?' (64) என கேட்டு சென்னமல்லிகார்ச்சுனேன கணவன் பிற ஆண்கள் எல்லாம் முகில் மறைக்கும் வண்ண பொம்மைகள் போல்வர் என்கிறார்.  மற்றொரு வசனத்தில் 'இந்தச் சாவுற்ற கேடுற்ற கணவர்களை

அடுப்பில் வை தாயே.' (116) என மனமுருக வேண்டிக்கொள்கிறார். தற்காலிகமானதை அல்ல நிரந்தரமானதையே தேர்வு செய்கிறார். ஆனால் அதை தற்காலத்துக்கு கொணர்கிறார். இவ்வகை வசனங்களில் எனக்கு அபாரமானதாக தோன்றியது இவ்வசனம் தான்.


'உள்ளே கணவன் வெளியே காதலன் 

இரண்டையும் நடத்த முடியவில்லை அம்மா

சென்னமல்லிகார்ச்சுனனே

வில்லையும் விளாம்பழத்தையும்

ஒன்றாய்ப் பிடிக்க முடியவில்லை ஐயா.' (33) 


பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள் கொண்ட வசனம் இது. கணவர் - வில்

விளாம்பழம்- காதலர். வில்லின் நாண் நேரானது, அம்பு இலக்கை சென்று நேராக தாக்குவது, கவனத்துடன் கையாளப்பட வேண்டியது. நியதிகள் உடையது. விளாம்பழம் கடின ஓட்டுக்குள் இருக்கும் இனிமை.  பொதுவாக உள்ளே காதலன் வெளியே கணவன் என்பதை நம்மால் எளிதில் வகுத்துக்கொள்ள முடியும். ஆனால் இங்கே அது தலைகீழாகிறது. உள்ளே, தனித்திருக்கும் போது அதிகாரம் செலுத்தும் கணவனாக உள்ள அவனே வெளியே தொலைவுக்கு செல்லும்தோறும் ஏக்கமளிக்கும் காதலனாகவும் இருக்கிறான் என வாசிக்க முடியும். விளாம்பழம் கொழகொழ என ஒட்டிக்கொள்வது. அதை தொட்ட கையால் வில்லை பற்ற முடியாது. வழுக்கும். எப்போது அவன் காதலன் எப்போது அவன் கணவன் என சட்டென அறியமுடியாது. 






'மூச்சே நறுமணமானால் யாருக்குப் பூ வேண்டும்?

பொறுதியும் கருணையும்

சாந்தமும் சகிப்பும் இருந்தால் 

சமாதிக்குத் தேவையென்ன? 

உலகமே தானான பின் 

ஏகாந்தத்துக்கு அவசியமென்ன

சென்னமல்லிகார்ச்சுனனே?'


ஆன்மீகம் என்பது எங்கோ உள்ளதல்ல. அதை அன்றாடத்தளத்திற்கு, பயன்பாட்டிற்கு கொணரும் மெய்யியலை அக்கம்மா முன் வைக்கிறார். 'காயகமே கைலாசா' என்பது பசவரின் வாக்கு. பரத்துக்காக இகத்தை கைவிடும் போக்கை சரணர்கள் ஏற்கவில்லை. 'சென்னமல்லிகார்ச்சுன தேவனின் சரணருக்கோ/ 

இகபரம் இரண்டும் உண்டு' (76) என்கிறார். 


அக்கம்மா முறையாக மெய்யியல்  பயின்றவர் என்றறிகிறோம். பஞ்ச பூதங்கள், சக்கரங்கள், மாயை போன்ற சொற்களை பயன்படுத்துகிறார். ஒருவகையில் பிற பக்தி கால கவிகளிடமிருந்து இது அவரை தனித்து காட்டுகிறது.  'சூரியனைப் போன்றது ஞானம்

சூரியக் கதிர்கள் போன்றது பக்தி

சூரியனின்றி கதிர்களில்லை

கதிர்களின்றி சூரியனில்லை.' (85) என ஞானத்துக்கும் பக்திக்குமான உறவை சொல்கிறார். ஞானம் தொலைவில் உள்ளது. ஆனால் நாம் உணர்வது  அதன் வெம்மையையும் ஒளியையும் கொண்டுவரும் கதிர்களை. ஞானத்தின் இருப்பை நமக்கு உணர்த்துவது பக்தி என்பதாக புரிந்நுகொள்ளலாம்.



  அக்கம்மாவின் வசனங்களில் தென்படும் சில கற்பனைகளும் உருவகங்களும் அவரை நவீன கவிமனதிற்கு நெருக்கமாக்குகிறது. 'நீருக்குள் இறங்கியிருந்தும் வண்ணான் 

தாகித்துச் செத்ததைப் போல' (17) 'உதயம் அஸ்தமனம் எனும் படிகளால்

ஆயுட்குவியல் அளந்து தீர்வதற்கு முன்.'(5) என்பது செறிவான கற்பனை. 'பட்டுப் புழு தன் சிநேகத்தால் கூடுகட்டி

தன் நூல்களாலே தன்னைச் சுற்றி சுற்றி 

மடிவதைப் போல.' (20) இது நவீன கவிதைகளில் பயன்படுத்தப்படும் படிமம். 'பாம்பின் வாயிலிருக்கும் தவளை

ஈயைக் கவ்வக் குதிப்பதைப் போல

ஊட்டத்துக்கான தேடல் விடுவதில்லை.'(30) இதுவும் அபாரமான இருத்தலியல் படிமம். 


'யானை எரிந்து மலை எரிந்து

பொன்னரளி மரம் மிஞ்சும்போது

கீர்த்திமிகு சென்னமல்லிகார்ச்சுனனைக் கலப்பேன்' (51) பொன்னரளி மரம் மட்டும் எஞ்சுவது என்பதொரு அற்புதமான காட்சி. 


நவீன தமிழ் கவியுலகின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான பெருந்தேவியால் கவிதை பிரக்ஞையுடன் இவ்வசனங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதே இத்தொகுதியை பிறவற்றிலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. 















 

இன்மையின் இருப்பு - அபியின் கவிதைகள்

நன்றி தமிழினி. அபி 80 க்காக எழுதிய கட்டுரை.  



அந்தி விளையாட்டு

முடிகிறது

வாசற்படிகளில் பிள்ளைகள்

வந்து தளைப்படுகின்றனர்

பேச்சும் சிறு சிரிப்புகளும்

விசிறி மஞ்சளாய்க் கனல்கிறது மாலை

கதை மனிதர்கள் 

ஆழங்களிலிருந்து மின்னிக்கொண்டு 

வருவதும் போவதுமாயிருப்பர்

ஏதேதோ அடுக்குகளிலிருந்து 

ஏதேதோ அரூபங்கள் 

பறந்து படிந்து மறையும்

காலத்துள் நிகழ்ந்திராத 

காலம் தகதகத்து

பிள்ளைகளின் கண்களில் இறங்கும் 

கதைகள் சற்றே வண்ணம் கலங்கி, எனினும் உள்வெளிச் சஞ்சரிப்பில் 

உயிர் சேகரித்துக்கொண்டு

பழைய இருப்பிலேயே 

புதிது புதிதாகும்

எல்லாவற்றுடனும் இழைந்து

இருத்தலே 

காத்திருத்தலாக

நான்

மாலை- கதை, அபி


கவிதையைப் பற்றி  எழுதுவதென்பது பிடித்த கவிதைகளை இதை வாசித்துப்பாருங்கள் என பரிந்துரைப்பதற்காகவும், நமக்கு பூடகமாக விளங்கிய ஏதோ ஒன்றை சக வாசகர்களுக்கு கடத்த முயல்வதற்காகவும், அம்முயற்சியில் கவிதையை நாம் மேலும் நெருங்குவதற்காகவும்தான். எனக்கு பிடித்த அபியின் கவிதையோடே இக்கட்டுரையை தொடங்கியுள்ளேன். 'கவிதைகளில் சூசக இடைவெளிகளைக் காண்பதோடு நிறுத்திக் கொள்வதே நல்லது; அவற்றுக்கு அர்த்தம் தேடும் முயற்சி இடைவெளிகளை பழுதாக்கிவிடும்.' என கவிதையை அர்த்தப்படுத்திக்கொள்வதற்கான நம் அதீத மெனக்கெடல் குறித்த அவரது எச்சரிக்கையை நினைவில் கொள்ள வேண்டும்.



அபியின் கவிதைகளை உள்வாங்கிக்கொள்ள  கவிதைப் பற்றிய அவரது பார்வை பெரும் உதவியாக இருக்கக்கூடும்.  'கவிதை நம் அனுபவங்களைத் தூண்டும் ஒரு தூண்டல் மட்டுமே. அனுபவம் அவரவரிடம் இருப்பது. ஒருவருடையது இன்னொருவருக்கு போகாது.' என எழுதுகிறார. மற்றொரு தருணத்தில் கவிதை, கவிஞன், வாசகன், அனுபவம் இலற்றுக்கு இடையேயான உறவை பேசும்போது கவிதை உருவாவது மற்றும் பொருள்கொள்ளப்படுவது சார்ந்த புரிதலை அளிக்கிறார். 'அழுத்தமான சுய பிரக்ஞை கொண்ட கலைஞனுடைய அனுபவம் ஒரு பொது ஊடகத்தின் வழியாக வாசகனிடம் சேர்ந்து அவனுக்கென்று தனித்த தொனியுடைய சுயப் பிரக்ஞை உருவாகத் தூண்டுகிறது. தனி அனுபவம் > பொது அனுபவம் > மீண்டும் வேறொரு தனி அனுபவம்.' அபியின் அத்தனை கவிதைகளும் என்னால் உள்வாங்க முடிந்தது என நிச்சயம் கூற முடியாது. ஆனால் மேற்சொன்ன வகையில் வாசகனாக எனது தனி அனுபவத்துடன் தொடர்பு கொண்ட கவிதைகளின் மீதான அகவயமான வாசிப்பையே இக்கட்டுரையில் எழுத முயல்கிறேன். 

 


அபியின் கவிதைகளை முதன்முறையாக இரண்டாண்டுகளுக்கு முன்னர் வாசிக்கத் தொடங்கியபோது சற்று திணறித்தான் போனேன். மொழியின் காரணமாகவோ பேசு பொருளின் காரணமாகவோ கவிதை வசப்படாதது ஒரு சிக்கல் என்றால் வசப்பட்ட ஒன்றிரண்டு கவிதைகளும் கடும் அமைதியின்மையை ஏற்படுத்தியது. அமைதியின்மைக்கான‌ காரணத்தை என்னால் அப்போது விளக்கிக்கொள்ள முடியவில்லை. தீய நிகழ்வை முன் உணரும்போது ஏற்படும் மனத்தொந்தரவை ஒத்திருந்தது. 

என்ற ஒன்று 


சூன்யம் இருந்தவரை 

எல்லாம் சரியாயிருந்தது 


இதன் இல்லாமையையும் 

சூன்யத்தில் அடக்கிச் 

சமாதானப்பட முடிந்தது 


ஏழுகடல் எழுதீவு எழுவானம் கதைக்கேட்கும் 

குழந்தைகளுக்கு 

இறுதியில் கிடைத்தேவிடும் சூன்யம் 

என்ற 

குறுகுறுப்பு இருந்தது 


நாமும் 

நீ நான் என்ற 

அடையாளச் சிக்களைப் 

புறமொதுக்கிவிட்டு 

நிம்மதியாயிருக்க முடிந்தது 


கேள்விகள் வந்து 

கொத்தித்த தின்ன நின்றால் 

நம்மைக் கொடுத்துவிட முடிந்தது 

இல்லாமலாவது இருப்போமல்லவா 

என்று 


எதிர்மறைகளின் 

இரைச்சலை 

அமைதியாய் 

ரசிக்க முடிந்தது 


பூமியைத் தொடும் அடிவானத்திடம் 

அலட்சியம் காட்ட முடிந்தது 


தைரியமாக 

விஷயங்களைப் 

பகைத்துக் கொள்ள முடிந்தது 

எப்படி இருப்பினும் 

இவை போகமுடியாத இடம் 

நாம் போக இருக்கிறது என்ற 

நம்பிக்கையில் 


சூன்யம் என்ற ஒன்று 

இருந்தவரை

எல்லாம் சரியாயிருந்தது

சாரத்திற்கும் சூன்யத்திற்குமான முரண்கள் நூற்றாண்டுகளாக இருந்துவரும் விவாதம். சூன்யவாதிகள் இன்மையை அஞ்சியே சாரத்தை கற்பிதமாக உருவகிக்கிறோம் என குற்றம் சாட்டுகிறார்கள். அறிவியலும் பகுத்தறிவும் சாரவாதத்திலிருந்து நம்மை படிப்படியாக சூன்யவாதத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. தாஸ்தாவெஸ்கி சாரமிழப்பின் அச்சுறுத்தலையே அதிகமும் பேசினார். வாழ்வின் பொருளையும் அறவுணர்வையும் சூன்யவாதம் எப்படி பதிலீடு செய்யும் என்ற கேள்வி அவரை ஆட்கொண்டது. ஆனால் இந்த நூற்றாண்டில் நாம் சூன்யத்திற்கு மெல்ல பழகியுள்ளோம். அதுவே நமக்கு ஆசுவாசம் அளிப்பதாகவும் உள்ளது. பொறுப்பிலிருந்து நமக்கு பெரும் விடுதலையை அளிக்கிறது. அபியின் மேற்சொன்ன கவிதை சூன்யத்தை மறுதலிக்கிறது. அப்படியானால் சாரமுள்ளது என சொல்கிறதா என்றால் அதுவும் இல்லை. சூன்யமே நம் வாழ்க்கைக்கு ஆதாரமாகிப்போன தலைகீழ் நிலையில் அதையும் துணிக்கிறார். அவரே சொல்வது போல் 'வாழ்க்கையின் இருண்மை கவிதையை எளிதில் தொற்றிக் கொள்கிறது.' இருமைகளை கட்டமைக்காத இருண்மை தான் அபியின் கவிதையில் உணரும் அமைதியின்மைக்கான காரணம். ஏனெனில் நமக்கு இது பழக்கமில்லை. இன்மையின் இன்மை இருப்பல்ல என உணரும்போது ஏற்படும் திடுக்கிடல். 

'படிமங்கள் அரூப நிலைகளை நோக்கியாவை. மௌனத்தைத் தொட முயல்பவை.' என படிமங்கள் குறித்து அபி குறிப்பிடுகிறார். மிகத்தீவிரமான படிமங்கள் கவிதையில் எழுந்து வரும்போதும் மனம் படபடப்பை உணர்கிறது. 

எலும்புகளின் நூலகம்


பாழடைந்த சிற்றூர் அது விளையாட்டாய் 

ஒரு கல்லைப் பெயர்க்க 

அடியில் ஊர்ந்தன 

நூறு வயது

விஷப்பூச்சிகள்

வெறும்

முள்செடி விரிப்பின் மீது 

வெயில் கிழிந்து கொண்டிருந்தது

எரிந்த குழந்தைகளின் 

உடல் விறைப்பைப் 

பார்த்துக் கொண்டிருந்தன 

கரிந்த சுவர்கள்

மொழிகளை மறந்துவிட்ட மனசுக்குள் 

தூரதூர தேசங்களின் 

ரத்தம் வந்து 

பாய்ந்து கொண்டிருந்தது

விளையாட்டாய்

வீதிகளைப் புரட்டியபோது

அடியில்

நரபலி தேவதைகளின்

நடன மண்டபம்

நீச்சல் குளம்

ஆமைமுதுகுபோல் சாலை

எலும்புகளின்

மிகப்பெரிய நூலகம்...

'எலும்புகளின் நூலகம்' 'நரபலி தேவதைகளின் நடன மண்டபம்' போன்ற இரண்மை நிறைந்த படிமங்கள் அடர்த்தியை கூட்டுகிறது. 


அபியின் சில கவிதைகளில் தலைகீழாக்கம் நிகழ்கிறது. இரவின் இருளை போக்க கதிரொளி பாய்ச்சும் ஆதவன் என்பது ஒரு பொது உருவகம். இங்கே அது தலைகீழாகிறது. 

காலம்- கறுப்புச் சூரியன் 

இந்த 

ஒளியின் பயங்கரத்தில் 

வழிகண்டு போக 

கண் மறைத்துப் போக 

ஒரு கறுப்புச் சூரியன் 

உண்டு 

ஒவ்வொருவரிடமும் 


தெளிவு எனும் கவிதையில் இப்படியான ஓரு தலைகீழாக்கம் நிகழ்கிறது. சிந்தையிலும் செயலிலும் தெளிவென்பது நாம் விரும்பத்தக்க, வளர்த்தெடுக்க வேண்டிய நல்லியல்பாக காண்கிறோம். அதற்காக அயராது முயல்கிறோம். 'தெளிவு என்பது பொய்/ என அறியாது/  தெளிவைத் தேடிப்  பிடிவாதம் ஏறிப்/  பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த/  பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன்'. தெளிவு பொய்யாகிறது, அதற்கான விழைவு பாமரத்தனமான அறியாமையின் வெளிப்பாடாகிறது.  


கால்பந்து இருத்தலியல் சிக்கலை சார்ந்து மிக முக்கியமான படிமமாக பயன்படுத்தப்படுகிறது. விதி மற்றும் தன்னை மீறிய ஆற்றல்கள், நியதிகளுக்கும் சுயேச்சைத்தன்மைக்கும் இடையேயான முரணை சித்தரிக்க கால்பந்து எனும் படிமம் பயன்படுத்தப்படுவது வழக்கம். அபியின் கால்பந்தும் இதே உரையாடலை கவிதையில் நிகழ்த்துகிறார். 

கால்பந்து


வெற்றியும் தோல்வியும் 

எல்லாம் விளையாட்டு 

அடிபடும் பத்துக்கோ 

அத்தனையும் வினை


குதிக்கட்டும். 

காற்றிருக்கும் வரை; 

குதித்துக் குதித்து 

வானை உரசத் தாவி மண்ணிலேயே விழுந்து 

குரலிட்டுக் 

குதிக்கட்டும்


வெளிக்காற்றினலைகள் 

எதிலும் அடைபடாத ஜீவன்கள் இன்னும் பிறக்காதவை. 

இதை அலைத்து இழுத்து உயர்த்திச் சரிக்கையில்


உள்ளிருப்பது.

அடைபட்டதற்கு ஏங்கித் 

தன் தோல்சிறையை 

உருட்டி உருட்டிப் பார்க்கும்...


ஏதேதோ புழுதிக் கால்கள் அத்தனையும்

ஒருகாலின் 

இடம் வேறுபடும் சாயைகள்

எட்டி எட்டி உதைக்க

இது

தப்பி ஓடும்; இன்றேல்

எதிர்த்துப் பாயும்.


முடிவில்

கால் கொடுத்த

கண்ணைக் கொண்டு

கால் காட்டிய திசைநோக்கி

அழுதழுது ஓடும்


காலன்றி வேறறியாமல்

காலின் கடும்உதைகொண்டோ 

காலின் மெல்லணைப்புக் கொண்டோ

காலுக்குரிய முகத்தைக் 

கற்பனை செய்து கொள்ளும் நிமிஷத்துக்கு நிமிஷம்


அதுவே ஜெயிக்க

அதுவே தோற்க, 

பந்துக்கு என்ன கிடைக்கிறது?


பந்தும் ஆடும்

காலும் ஆடும்

யாரை யார் ஆட்டுவிப்பது?

இக்கவிதையின் இறுதி வரிகளில் அபி எழுப்பும் கேள்வியின் வழியாக கவிதை மற்றொரு பரிமாணத்தை அடைகிறது. தலைகீழாக்கம் என்பது நேர்மறையில் தொடங்கி எதிர்மறையில் முடிவது மட்டுமல்ல, எதிர்மறை நேர்மறையாக உருமாறுவதும் தான். அபியின் 'தோல்வி' அத்தகைய ஒரு முயற்சி. 

தோல்வி


தோல்விக்குப்பின் வந்த நாட்கள் கலவரப்படாமல் கடக்கின்றன


அலையடங்கிய நீர்ப்பெருக்கின்

மேலாக

மெல்ல நடந்து செல்வதில் சுகம்


பழக்கமில்லாத தாவரங்களுடன்

ஜீவராசிகளுடன் 

வழக்கில் இல்லாத வார்த்தைகளுடன் 

தனியே விடப்பட்டிருப்பதில் ஆறுதல்


வாசனை எதுவும் இல்லை

சுவாசம் சிணுங்காமல் போய்வருகிறது 


சாம்பல் நிறம் மட்டும்

மெருகேறியிருக்கிறது

வேறு நிறங்கள் இல்லை 


பார்ப்பவைகளுடன்

பார்க்க முடியாதவைகள் பிரித்துணர முடியாதவை ஆகிவிட்டன

மனசின் மேய்ச்சல் நின்றுவிட்டது

இந்தத் தருணங்களின் விளிம்பிலிருந்து 

எட்டிப் பார்க்கையில் 

செய்தி ஒன்றும் தெரிவிக்காத அமைதிப் பள்ளத்தாக்கு

அபி இக்கவிதைகளில் நவீனத்துவ, இருத்தலியல் போக்குகளை வெளிப்படுத்துகிறார். சித்திரக் கூடம் கவிதையில் வரும் இவ்வரிகள் நவீனத்துவத்தின் சிறந்த உருவகம் 'பூரணத்துவத்தைத்/ தோண்டியெடுக்க/ வெட்டிய பள்ளங்கள்/  எங்கும்.'  செயலில் இருக்கும்போது ஓய்விற்கு செயலின்மைக்கும், ஓய்விலிருக்கும்போது இயக்கத்திற்குமான ஏக்கம் மாறி மாறி அலைக்கழிக்கிறது ஒய்வு எனும் கவிதையில்.  'சாயைகளைத் தின்கிறாய்'  நிழலை நோக்கி பேசும் கவிதை. நவீனத்துவத்தில் நிழல் மிக முக்கியமான பேசு பொருளாக தொடர்ந்து பயன்படுத்தப்படுகிறது. 'எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?' எனும் மௌனியின் கேள்வி நினைவுக்கு வருகிறது. 





இருண்மை இல்லாத சில அபாரமான கவிதைகளும் அபி எழுதியுள்ளார். 

இவ்வளவு மின்னல்களும் 

மேய்ந்துதானோ

என் வானம்

இவ்வளவு சுத்தமாயிருக்கிறது? 

எனும் வரிகளில் நிறைந்துள்ள கற்பனை அபார மன எழுச்சியை அளித்தது. 'இடைவெளிகள்' பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் தன் கற்பனையின் ஆற்றலுடன் சித்தரிக்கிறது. 


இடைவெளிகள் 

யாரும் கவனியாதிருந்தபோது 

இடைவெளிகள் 

விழித்துக்கொண்டு 

விரிவடைந்தது 

நட்சத்திரத்திற்கும் நட்சத்திரத்திற்கும் 

அர்த்தத்திற்கும் அர்த்தத்திற்கும் 

உனக்கும் உனக்கும் 

வினாடிக்கு வினாடிக்கு 

இடைவெளிக்கு இடைவெளிக்கு 

என்று 

இடைவெளிகள் விரிவடைந்தது 

வெறியூறி வியாபித்தன 

வியாபகத்தின் உச்சத்தில் 

மற்றெல்லாம் சுருங்கிப்போயின 

ஆங்காங்கிருந்து 

இடைவெளிகள் ஒருங்கு திரண்டு 

அண்டவட்டமாயின 

வட்டத்தின் விளிம்பைச் சுற்றிலும் 

சிற்றெறும்புகளாய் 

வாழ்க்கைத் துகள் 

வட்டத்தின் சுழற்சியில் 

நடுவே தோன்றி வளர்ந்தது 

பேரொளி 

அதற்குப் பேச்சு வரவில்லை

சைகைகளும் இல்லை 

எனினும் அதனிடம் 

அடக்கமாய் வீற்றிருந்தது 

நோக்கமற்ற ஒரு 

மகத்துவம் 

பேரொளியாக அமர்ந்திருக்கும் ஒரு 'நோக்கமற்ற மகத்துவம்' எனும் சொல் பயன்பாடு மனதை சிறகடிக்கவைத்த சொற்றொடர். 

மாலை -- காலியிடம்

உண்மை

தன் பழைய இடத்துக்குத்

திரும்பி வந்து விட்டது

எப்போதும் காலியாயிருக்கும் இடம்


அது இல்லாத இடம் எது

என்பது பெரியோர் வாதம்.

வாதம் தெரியாமல்

எவர் பேச்சையும் கவனிக்காமல்

இதையே கவனித்திருக்க நேர்கிறது,

திரும்புவதை, திரும்புவதை மட்டும்.


புழுதிப் படலத்தோடு மிதந்துபோகும்

இடைச்சிறுவர்கள்

பசியின் பார்வையில் எரியும் விறகு

கடைசி மஞ்சள் கிரணத்தின்

தயங்கிய மூச்சு

--எதுவாயினும்

என்மீது பட்டவுடன்

விலகிப் போகின்றன, கவனம் கவராமல்.


இடம் இல்லாதிருந்ததில்

இடம் பரவிக்கொண்டது,

காலியிடம்


வாசலில் தொடங்கி

வானம் அடங்கி

தான் இன்றி இருண்டு கிடக்கும்

மனசின் வெளிவரை

எங்கும்

காலியிடம் காலியிடம்

அன்றாடங்களில் இருந்து சத்தியத்தை அறிவதையும் அதை கவிதைகளில் வெளிப்படுத்துவதைப்பற்றியும் அபி இப்படிச்சொல்கிறார். 'அவனைச் சுற்றி இருக்கும் எந்த பொருளிலும் அவனுக்கு தரிசனம் கிட்டலாம். எந்தச்  சாதாரணச் சிறு பொருளையும் பற்றித் தொற்றிக்கொண்டு சத்தியம் பளீரெனத் தோன்றிவிடலாம்.' காலியிடம் காலியிடம் என ஒரு உச்சாடனம் போல் முடியும் இக்கவிதை இன்னதென்று விளக்க முடியாத மன எழுச்சியை அளித்தது. விரி மணல் பொட்டல் வெளியை வான் கூரைக்கு அடியில் நின்று நோக்கும் போது ஏற்படும் நிச்சலனம்.  



இருப்பும் இன்மையும் அபியின் கவிதைகளில் தொடர்ந்து பேசப்படுகிறது. 

அதுதான் சரி 


எல்லாம் தெரிவதும் 

ஏதும் அறியாததும் 

ஒன்றேதானென்று 

தெருவிலொரு பேச்சு 

காதில் விழுந்தது 


ஏதும் அறியாமல் 

இருப்பதுவே சரி 

என்று தோன்றிற்று 


இருந்தால் 

இருப்பதை அறியாமல் 

இருப்பது 

எப்படி 


அதனால் இல்லாதிருப்பதே 

சரியென்று பட்டது 


இல்லாதிருந்தல் 

ஒருவசதி 

தெருப்பக்கம் 

போகவேண்டியதில்லை 

இல்லாதிருப்பதும் 

இருப்பதும் ஒன்றே 

என்றொரு பேச்சைக் 

கேட்டு குழம்பும் 

குழப்பம் இல்லை


இருப்பு- இன்மை சார்ந்த கவிதைகளில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் தாக்கம் தென்படுவதாக தோன்றியது. இருத்தல் எனும் கவிதையில் 'பின் இருத்தல் என்னதான்?/ இல்லாதிருத்தலே/ இருத்தல்' என கேள்வியை எழுப்பி பதிலையும் சொல்கிறது. நெருங்குவது என்றொரு கவிதையில் இருப்பை கைவிடாமல் நெருங்க முடியாது, இருப்பை விட்டுவிட்டால் நெருக்கத்திற்கும் விலக்கத்திற்கும் பொருளேது எனும் கேள்வியை எழுப்புகிறது. 

நெருங்காதிருப்பதன் விளைவு 

நெருங்கியிருக்கிறோம் என்று 

நினைப்பது 


ஓரொரு சமயம் 

பின்வாசல் வழி 

கற்பனை வந்து 

உண்மையைச் சொல்லிப் போகும் 


நாம் நெருங்கியதில்லை 


அவரவர் இருப்பில் 

அவரவர் இருக்க 

நெருங்குவதெப்படி 


இருப்பை நீத்து நெருங்குவதென்றால் 

அவரவர் என்பதில்லாமல் 

யார் யார் நெருங்கியது 

நெருங்கியவர் இல்லாது 

நெருக்கம் என்ன 


நாம் நெருங்கியதில்லை

மனிதனின் தனியிருப்பை அபி கவிதைகளின் ஊடாக கேள்விக்குள்ளாக்குகிறார். 'ஏற்பாடு' கவிதையில் 'பாவனைகளில் மிக மூத்த நான் என்ற பாவனை' என சொல்கிறார்.  மாற்றல் எனும் கவிதையில், பின்னணிகளை, இடைப் பொழுதுகளை, பின்னணித் தளங்களை, அதன் நடமாட்டங்களை, சூழலை, சாயைகளை என ஒவ்வொன்றையும் மாற்றிக்கொள்வதன் உச்சமாக 'மாற்றல் நிரந்தரப்  படுகிறதா/ உடனே/ மாற்றிக்கொள்வோம்/ மாற்றல்களை' என எழுதுகிறார். பவுத்தத்தின் மகாதர்மம் போல தனியடையாளம் அற்ற பேரியக்கத்தை சொல்கிறது அவரது கவிதைகள். 'பொதுமை' எனும் கவிதையில் 'நான் சொல்ல துடிப்பது/  ஏன் அலைக்கழிகிறாய்/  உனது இருப்பின்/  அசைவற்ற பொதுமையை/  ஏன் கலைக்கப் பார்க்கிறாய்?' தனித்துவத்தின் மீதான விழைவு அலைகழிப்பாகிறது. தனித்தன்மைகளை இழந்து ஒற்றையாக ஆகும் கணங்களை கவிதைகளில் தொடர்ந்து காண முடிகிறது. 'உருவினுள் மறைந்து உருவிழந்த மாலையை' 'ஊர் மேடிட்டுக் கொள்கிறது/  யாதும் ஊர் ஆகிறது.' ஒரு பறவை பார்த்திருக்க இன்னொரு பறவை உண்கிறது எனும் உபநிட வரியை நினைவுறுத்துகிறது 'இதயத்தில் நித்திய கருவாக வளரும் இன்னொரு நான்' எனும் வரி.  ‘புகைமூட்டத்தை புணர்ந்து கருத்தரிக்கத் தைரியம் கொள்கிறான் கவிஞன்.’  கவிதையும் கூட உருவற்று திகழ்கிறது.  




இந்திய தத்துவ மரபுகளில் ஆறு தரிசனங்கள் முதன்மையானவையாக குறிக்கப்படுகின்றன. ''வைசேடிகம்' அவற்றுள் ஒன்று. வைசேடிகம் ஒருவிதமான அணு கொள்கையை முன்வைக்கிறது. அபியின் கவிதைகள் வைசேடிக தரிசனத்துடன் சேர்த்து காணத்தக்கவை எனும் எண்ணம் எனக்கு ஏற்பட்டது. வைசேடிகம் 'அபாவம்' எனும் இன்மையையும் ஒரு இருப்பாக கணக்கில் கொள்கிறது. மேலும் உருவும் அரூவமும் அணுக்களால் ஆனவை என கருதுகிறது. இவ்விரு கூறுகளையும் அபியின் கவிதைகளில் காண முடிகிறது. இன்மையையே ஒரு இருப்பாக அவரது கவிதைகள் மீள மீள காட்டுகின்றன. அந்தர நடை கவிதையில் 'உன் சூழல் அணுக்களோ/ உருக்காட்டுமுன்/  உருமாறும்/ ஓயாமாறிகள்' என எழுதுகிறார். ஓயாமறியாக உருமாறிக்கொண்டே உள்ளன சூழல் அணுக்கள். புள்ளியைப்பற்றி எழுதும்போது அதில் அனந்தகோடி அணுக்கள் என எழுதுகிறார். அபியின் தனித்தன்மை என்பது அரூபத்தின் இருப்பை ரூபத்தின் இருப்பை போல் உணர்த்துவது என சொல்லலாம். இவ்வகை கவிதைகளில் எனக்கு மிகப்பிடித்த கவிதை என்பது 'விடைகள்' எனும் கவிதை‌. விடைகளின் முக்கியத்துவம் தலைகீழாக்கப்படுகிறது.

விடைகள் 

விடைகள் 

மிகவும் மெலிந்தவை 

ஏதோ சுமந்து வருவன போல 

முக்கி முனகி வியர்வை துளித்து 

நம் முகத்தில் 

திருப்தி தேடுபவை 


தரையில் கால்பாவாது 

நடக்கவும் 

நீரில் நனையாமல் 

நீந்தவும் 

அறிந்தவை 


முந்தாநாள் 

ஒரு விடையை 

எதிர்ப்பட்டேன் 


என்னைப்  பார்த்தவுடன் 

அது 

உடையணிந்து 

உருவுகொண்டது 


தன்னை ஒருமுறை 

சரிபார்த்துக் கொண்டதும் 

எங்களை சுற்றி 

ஒரு அசட்டுமணம்  பரப்பிவிட்டு 

என்னை நேர்கொண்டது

நான் 

ஒன்றும் சொல்லவில்லை 

நெளிந்தது 

கலைந்து மங்கும்தன்   

உருவை 

ஒருமித்துக் கொள்ளக் 

கவலையோடு முயன்றது 

சுற்றிலும் பார்த்துவிட்டு 

ஒருமுறை 

என்னைத் தொட முயன்றது 

நான் 

எதுவுமறியாத 

பாவனை காட்டியதில் 

ஆறுதலுற்றுக் 

கொஞ்சம் நிமிர்ந்தது 

எதிர்பாராது வீசிய காற்றில் 

இருவரும் 

வேறுவேறு திசைகளில் 

வீசப்பட்டோம் 

திரும்பப்போய்த் 

தேடிப்பார்த்த போது 

சாமந்திப்பூ இதழ்கள் போல் 

பிய்ந்து கிடந்தன 

சில 

சாகசங்கள் மட்டும் 

 உளவாளிகள் எனும் கவிதையில் 'இயக்கங்கள் விலகி நிமிஷங்கள் மட்டும் மொய்த்துக் கிடக்கும் என் உருவங்களை' என்றொரு வரி வருகிறது. 'வயது' எனும் கவிதையில் 'நீ நீத்துவந்த வயதுகள்/  வினாடிகள் மொய்த்து/  விட்ட இடத்தில்தான் மிதக்கும்/  போய்க் கூடிக்கொள்.'  நிமிடங்கள், விநாடிகள் போன்றவை ஈக்களை போல கொசுக்களை மொய்க்கின்றன.  வியர்த்தம் கவிதையில் 'நம் முயற்சிகளின்/  உள்  ஆவி/  கெஞ்சிக் கூடவே வந்து/  வியர்த்து விளிம்புவரை/  புலம்பிப் பார்த்து/ முணுமுணுத்துப்/  பின்தங்கிப்/  புள்ளியாய் மறையும்' முயற்சி எனும் வினைக்கு உள் ஆவி உள்ளது, வியர்க்கிறது, முணுமுணுக்கிறது. 

வினை 

விதைத்த வினை 

விளைந்தது 


விளைத்தவை உதிர்ந்து 

மீண்டும் பெருகின 

மீண்டும் பெருகின 

மீண்டும்...


வினை அறுப்போர் 

எவருமில்லை 

எங்கும் எங்கும் வினைமயம் 


உலகெங்கும் நிறைந்தன 

யுகங்களில் நிரம்பி வழிந்தன 

அண்டம் தன்  

தையல் பிரித்து 

அவதியுற்றது 


இந்தப் பிரளயத்தில் 

மிதந்தவர்களைப் பற்றி ஒரு 

நிச்சயம் பிறந்தது 


மூழ்கிக் 

காணாமல் போனவர்கள் 

கண்டுபிடிப்பார்கள் 

என்றும் 

வதந்தி பிறந்தது

இங்கே 'வினை' என்பது ஒரு பொருளாகி உலகை நிறைக்கிறது. 'அசதி'க்கும் மனித வடிவம் அளிக்கப்படுகிறது இவ்வரிகளில். 'காலையில்/ இவ்வழியே போனவர்கள்/  திரும்பி வருகிறார்கள்/  தோற்றமின்றி/ வெறும் அசதியாக.' 'எஞ்சிய பகுதி' எனும் கவிதையில் துர்கனவுக்கு உரு துலங்குகிறது. 

எஞ்சிய பகுதி

அந்தக் கொடூரக் கனவின் 

ஒரு பகுதியின் மிச்சம்

இன்று பகல் சுண்ணயர்வில் தலையாட்டிப் போனது

இருள் கவ்வியிருந்த 

அதன் ஓரங்கள் பற்றிய நினைவுகூட்டல் 

தோல்வியில் முடிந்து 

அசதி தந்தது

அதன் கூரிய துகள்கள் சில 

மாலை உலாவின் போது செருப்பினுள் நுழைந்திருந்தன

அதன் கொலைநிழல் 

மங்கி மயங்கி 

என்னைச் சூழ்ந்து வந்துகொண்டேயிருந்தது

போக்குவரத்து அடர்த்தியின் நடுவே 

கூடிநின்ற கூட்டத்திற்குள்

எட்டிப் பார்த்தபோது 

கனவின் 

விலாப்பகுதி நைந்து 

ரத்த வெள்ளத்தில் குடல்சரிந்து கிடந்தது

கனவில் வந்தறியாத அதன்

எஞ்சிய பகுதி

இப்படிச் சுற்றித் திரிந்துகொண்டிருந்தது

 

அபி தனது கவிதையின் மொழியைப்பற்றி குறிப்பிடும்போது 'ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியின் சர்வாதிகாரத்தை ஏற்கனவே உதறியிருந்தன என் கவிதைகள்.' என எழுதுகிறார். அவரைப் பொருத்தவரை கவிதை என்பது மொழியல்ல. 'மனிதனால் படைக்கப்பட்டது மொழி: ஆனால் மனிதனிலிருந்து கவிஞனைப்  படைப்பது கவிதை. மொழி, கருவி, கவிதையே படைப்பாளி.' கவிதை எனும் அரூபம் கவிஞன் எனும் உருவை பிரசவிக்கிறது. படைத்தலுக்கும், படைப்பாளிக்கும், படைப்புக்கும் இடையேயான உறவை பற்றி எழுதும்போது 'பாவனையில் ஆழ்த்திப் படைப்பாளிகளைப்  படைக்கிறது படைத்தல். படைப்பாளி படைக்கப்படுவதில் இருக்குமளவு பூரணமும் எழிலும் அவனுடைய படைப்பு படைக்கப் படுவதில் இல்லை.' என குறிப்பிடுகிறார்.‌ 


நானும் இந்தக் கவிதையும்


நானும் இந்தக் கவிதையும் நண்பர்களே அல்ல 

அப்படித் தோன்றக் கூடும்.


சேர்ந்திருப்பதும் 

ஒரே மூச்சைப் 

பகிர்ந்து சுவாசிப்பதும் விஷயங்களிலிருந்து 

வெளியேறி வெளியேறிக் கலைவதும் காரணமாக 

அப்படித் தோன்றலாம்


இந்தக் கவிதை

ரொம்பவும் எளிமையானது ஒன்றும் சொல்லாதிருக்கிற ஒன்றும் இல்லாதிருக்கிற

 எளிமை


எனது எளிமையோ

இல்லாமையின் இருப்பை, சொல்லாமையின் சொல்லைச்

சுமந்து திரிவது


எனக்கு

நுழையவும் வெளியேறவும் வாசல்கள் இருக்கின்றன


இந்தக் கவிதைக்கு மட்டும் 

எல்லாச் சுவர்களும்

திறந்து மூடித் தருவன


எனது தோழர்கள்

என் சூழலின் விளம்புகளைத்

தொற்றி ஏறி

விரைகிறார்கள் 

எனது பிரதேசப் பகல் நிலங்களின் ஊடாக


இதன் தோழர்கள் 

பிரயாணமற்ற இதனை 

விட்டுப் போனவர்களுமில்லை சுற்றிக் கிடப்பவர்களுமில்லை


நானும் இந்தக் கவிதையும் நண்பர்களே அல்ல 

அப்படித் தோன்றக் கூடும்


பொதுவாக கவிதைகள் குறித்தும், குறிப்பாக தனது கவிதைகள் குறித்தும் அவருக்கு மிகத்தெளிவான புரிதலிருந்தது. "ஓவியமும் இசையும் மௌனத்தில் வேர்பாய்ச்சி நிற்பவை. சொல்லையும் பொருளையும் விட்டு வெளியேறியவை. கவிதையையும் இந்த மௌன நிலைக்கு கொண்டுவர கவிஞன் தீவிர படுகிறான்." என கவிதையின் இலக்கை குறித்து எழுதுகிறார். மேலும் "ஓசை, எழுத்து, சொல், வாக்கியம் என்ற மொழியின் அடையாளங்களில் நின்று கொண்டே மொழியை எதிர்க்கும் கலகமாக அமைவது கவிதை. மொழியின் சொல்லைக்கொண்டே மொழியின் அர்த்தத்தை மீறுகிறது கவிதை" என கவிதையின் இயல்பு குறித்து எழுதுகிறார். கவிதையின் இலக்கு சொல்லின்மை என்பது புதிய பார்வை அல்ல. ந. பிச்சமூர்த்தி அவரது நேர்காணலிலும் இதைக் குறிப்பிடுகிறார். 'என் வார்த்தைகள்' என்றொரு கவிதையில் மொழிக்கும் கவிஞனுக்கும், கவிதைக்குமான உறவு பேசப்படுகிறது.  'என் வார்த்தைகளை நான்/ இழந்து விட்டதாகச்/  சொன்னார் அவர்/  என் ஆசை அது ஆனால்/  உண்மையில்லை ...அர்த்த மாயையில்/ சிக்கிக் கொண்ட என் வார்த்தைகளைத்/  தப்பிப்போக முயன்ற முயற்சிகள்/  வீணாகின/  மனசின் சங்கீதம் புரிந்து/  தவிதவித்துத் தொடர்கின்றன/  வார்த்தைகள்'


‘பிரபஞ்சத்தை அளாவிச் செல்லுகிற பேராறு கவிதை, அதன் கரையில் ஏதோ ஒரு புள்ளியிலியிலிருந்து குதித்து சில அலைகளை எழுப்புகிறேன்.’ என்கிறார் அபி. அபியின் கவிதைகள் சொற்களிலிருந்து பொருளை வளைத்து, சொல்லின்மைக்கு பயணிக்க முயல்கிறது, அவ்வகையில் இயற்கையின் மொழியுடன், பிரபஞ்சத்தின் மொழியுடன் இயைய முயல்கிறது. 

சுனில் கிருஷ்ணன்  

 










எதுவும் கடந்து போகும் - கவனம் சிதறும் தலைமுறை- விகடன் கட்டுரை

நன்றி விகடன். விகடனில் தொடராக வரும் பகுதியில் இடம்பெற்ற எனது கட்டுரை. 


 "மாப்ள காலேஜ் ரோட்ல புதுசா ஒரு கடை தொறந்திருக்காய்ங்க, ஏசியெல்லாம் உண்டாம். மொத மூனு நாளைக்கு வாரவிங்களுக்கு எல்லாம் பவண்டோ வேற தாராய்ங்க.. போவோமா" என்றான் வீரப்பன் சைக்கிளை விட்டு இறங்காமலேயே.  வேகு வேகென சைக்கிளை மிதித்து வந்ததில் அவனது சட்டையில் வியர்வை ஊறியிருந்தது.  நாங்கள் சுப்பிரமணியபுரம் நான்காவது வீதி திடலில் அடுத்த ஆட்டத்திற்காக அணி பிரித்துக்கொண்டிருந்தோம். சித்திரை உச்சி வெயில் உறைக்காத தடித்த தோல் வாய்த்த பருவம் அது. எங்கெல்லாம் காலி மனை உண்டோ அங்கெல்லாம் கிடைக்கின்ற மூன்று குச்சிகளை ஊன்றி எவராவது விளையாடிக்கொண்டிருப்பார்கள். 

பால்கார ஆச்சி வருவதற்கு முன்னமே காலை கருக்கிருட்டில் வாசலில் வந்து கோவிந்தராஜன் சைக்கிளில் மணியடிப்பான்.  "வந்துட்டான் உன் தோஸ்து. ஸ்கூல் நாள்ல என்னிக்காவது சூரியனை பாத்துருக்கிங்களாடா" வாசல் தெளிக்க வந்த பாட்டி பல்லை கடித்துக்கொண்டு கேட்பாள். "சரியா பாக்கலைன்னு கோச்சுக்குவாருல அவ்வா. அதான் இப்ப நாளெல்லாம் அவரு முன்ன நின்னு எங்கள நல்லா பாத்துக்கன்னு வேண்டிக்கிறோம் " என்பான் கோவிந்து. ஆறு மணிக்கு தொடங்கும் விளையாட்டு ஓன்பது மணி வரை போகும். திரும்ப பதினோரு மணிக்கு தொடங்கும். அந்நாளைய முக்கிய போட்டி என்பது அதுதான். பெரும்பாலும் 'பெட்' மேட்சுகள் நடக்கும். 'பெட்டு' என்பது பெரும்பாலும் ஆளுக்கு ஒரு ரூபாய் போட்டுபத்துரூபாய்க்கு வாங்கிய, பயன்படுத்தாத புத்தம் புதிய பெப்சி ரப்பர் பந்துதான். இரண்டு மணிக்கு வீட்டுக்கு சென்றால் மாலை நான்கு மணி தொடங்கி 'நல்ல கண்ணு' நாகேஷ்வரன் கேட்சை கப்பைவிடும் அளவிற்கு இருட்டும் வரை நீடிக்கும். 

"எப்படியாவது இருவந்தஞ்சு ரூவா தேத்திடு மாப்ள..எங்கிட்ட இருவத்தஞ்சு இருக்கு" என்றான் வீரப்பன். அவன் கடை என சொன்னது 'பிரவுசிங் செண்டரை'.  அன்று நாங்கள் வேறொரு யுகத்தில் காலடி வைக்கவிருக்கிறோம் எனும் பிரக்ஞை ஏதும் எங்களுக்கில்லை. கணினி என்பது அதற்கு முன்பு வரை மெட்றாசுக்கும், போக்கற்ற பணக்காரர்களின் வீட்டிற்கும், பள்ளியில் பாதுகாப்பாக பூட்டியே கிடக்கும் கணினி ஆய்வு கூடத்திற்கும் உரியதாகவே இருந்தது. தந்த நிற கொண்டையும், சாம்பல் நிற திரையும் உள்ள ஓரு தொலைகாட்சி என்பதாகவே மனப்பதிவு.‌ காரைக்குடியின் வரலாற்றில் அந்த சனிக்கிழமைக்கு ஒரு இடமுண்டு. அன்று தொடங்கி, பிறகு படிப்படியாக விளையாட மதியம் ஆட்கள் வருவது குறைந்து, அடுத்த கோடை விடுமுறைக்கு மாலைக்கு மட்டுமாக  விளையாட்டு சுருங்கியது.‌ 

எந்த தொழில்நுட்பமும் புதிதாக அறிமுகமானதும் அதன் ஆக 'அவசியமற்ற' தேவை என்னவோ அதைத்தான் முதலில் நிறைவேற்றும் போல. இணையத்தை எப்படி 'நல்ல விதமாக' கூட பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்வதற்குள் ஆயிரம் ஆயிரத்தைநூறு ரூபாய் பிரவுசிங் செண்டருக்கு அழுதாகிகிவிட்டது. 'மொகரைய பாத்தாலே தெரியுது' என இளவட்டங்கள் மையத்திற்குள் நுழைந்துவிட்டால் பரீட்சைக்கு ரோந்து வரும் ஆய்வாளர் போல இருண்ட செவ்வக கட்டங்களுக்குள் அறிவிப்பின்றி திடுமென்று வந்து நிற்பார்கள் பிரவுசிங் செண்டர் அண்ணன்மார்கள். எப்போதும் ஒரு செவி வெளியே கவனித்தபடியே இருக்கும். ஒருமுறை உணர்ச்சிவசப்பட்ட  நண்பன்  ஒருவன் கணினித் திரைக்கு முத்தம் கொடுக்க முயன்ற போது கையும்களவுமாக மாட்டிய சம்பவம் இன்று வரை எங்கள் நட்பு வட்டத்தில் அடிக்கடி நினைவுகூரப்படும் நிகழ்வு. எங்கள் ஊரின் முதல் பிரவுசிங் செண்டரின் வருகை பல புதிய கதவுகளை திறந்துவிட்டது. அதி வேக இணையத் தொடர்பு என்பது அன்று வெறும் முப்பது எம்.பி.பி.எஸ்! கோடை விடுமுறைகளில் கணினி வகுப்புக்கு செல்வது ஒரு சாங்கியமாகிப்போனது. உருப்படியாக எதையும் கற்று கொண்டதை விட அங்கே சென்று டேவும், பிரின்ஸ் ஆஃப் பெர்ஸியாவும் விளையாடியதுதான் அதிகம். 

என் பள்ளிகாலம் என்பது இந்தியா தன்னை திறந்துவைத்துக்கொண்ட காலத்திற்கு பின்பானது. எல்லாவற்றையும் தொட்டு ருசியறிய முயன்ற தலைமுறையின் காலம். சன் டிவியின் தமிழ் மாலையும், கார்டூன் நெட்வொர்க்கின் டெக்ஸ்டரும், ஸ்வாட் கேட்ஸும் மெல்ல எங்களை ஆக்கிரமிக்கத்தொடங்கிய நாட்கள் அவை. பகல் நேர வெளி விளையாட்டுக்கள் அருகி அதற்கு மாற்றாக  வெளிநாட்டிலிருந்து வந்திறங்கிய தொலைக்காட்சியில் இணைக்கத்தக்க வீடியோ கேம்களும் அதற்கேயுரிய கேசட்டுகளும் புகழடையத் தொடங்கின.  மேரியோவும் காண்ட்ராவும்  எங்கள் விளையாட்டு தோழர்களானார்கள். 

பிலாக்கனமாகவோ, பீடத்தில் அமர்ந்து அறிவுரை வழங்குவதோ என் நோக்கமல்ல. எழுத்தாளர் பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் 'ஜங்க்' என்ற கதை 'ஒவ்வொரு தலைமுறையும் அதற்கு முன்பு கடந்து போன தலைமுறையை விட தான் புத்திசாலித்தனமானதாகவும் அடுத்து வரும் தலைமுறையை விடவும் அறிவானதாகவும் கற்பனை செய்து கொள்கிறது' எனும் ஜார்ஜ் ஆர்வெலின் மேற்கோளோடு தொடங்கும். ஒவ்வொரு தலைமுறைக்கும் அதற்கே உரிய கட்டுக்கதைகளும், நாயகர்களும், வெகுளித்தனங்களும் இருக்கும். சுடலை மாடனை நம்பாத தலைமுறைதான் அண்டர்டேக்கருக்கு பதினோரு உயிர் என்றபோது நம்பியது. முந்தைய தலைமுறைக்கு சக்திமான் நாயகன் எனில் இப்போது பப்ஜி மதன் சிலருக்கு நாயகன். கட்டுக்கதைகளே அற்ற முற்றிலும் அறிவார்ந்த தலைமுறை என ஓன்று உருவாக சாத்தியமில்லை. கட்டுக்கதைகளில் மேலானவை கீழானவை என எவையும் இல்லை என்பதை நினைவில் கொள்ளும் அதே நேரத்தில் அவற்றில் ஆபத்தானவை ஆபத்தற்றவை எனும் பகுப்பு நிச்சயம் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நம் இளமைகால நினைவுகளுக்கு அளிக்கும் புனிதத்தை இப்போதைய தலைமுறையினரும் நாளை அளிப்பார்கள் என்பதை நாம் உணர்வதில்லை. 'நாங்கல்லாம் சின்ன வயசுல' என தொடங்கினாலே எதிரே இருப்பவர் 'அய்ய பூமர் கேசு' என முடிவுக்கு வந்துவிடுவார்கள். நமது உன்னதங்கள் அவர்களுக்கு அற்பத்தனமாகவும் அவர்களின் உன்னதங்கள் நமக்கு உள்ளீடற்றதாகவும் தோன்றுவதும் இயல்பே. இத்தகைய முன்தீர்மானங்களுடன் அவசர அவசரமாக தீர்ப்பெழுத தேவையில்லை. மாற்றத்தை வெளியிலிருந்து அல்ல, அதன் தொடக்க நுனியை அறிந்தவன் எனும் முறையில், அதன் ஒரு பகுதியாக உள்ளிருந்து நோக்கும் தலைமுறையின் பிரதிநிதியாக என்னை நிறுத்திக்கொண்டே பேச முயற்சிக்கிறேன்.

எத்தனையெத்தனை தொழில்கள் இந்த இருபதாண்டுகளில் காணாமல் போயிருக்கின்றன! கல்லூரியில் எங்கள் சீனியர் அண்ணன் ஒருவர் ஆயிரம் சிடிக்கள் சேர்த்த அபூர்வ சிகாமணியாக வலம் வந்தார். ஒவ்வொரு வாரமும் பர்மா பஜாருக்கு சென்று சிடிக்களை வாங்கி வருவார். இன்று அந்த தொழில்நுட்பமே காலாவதியாகிவிட்டது. காதல் வளர்த்த எஸ்.டி.டி பூத்துகள் காணாமல் போயின. தெருவுக்கு தெரு இருந்த இண்டர்நெட் கஃபேக்கள் இருந்த சுவடு தெரியவில்லை‌. முளைத்த வேகத்தில் பல பொறியியல் கல்லூரிகள்  கருகிவிட்டன. எப்படியோ எதையோ பற்றிக்கொண்டு நாம் வாழ்ந்தபடிதான் இருக்கிறோம். 

அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஒருபோதும் பழிக்க கூடாது. அவற்றை பழிப்பவர்கள் காலத்தை பின்னுக்கு இழுப்பவர்கள். அதன் வழி அவர்களுக்கு வாகாக இருந்த அதிகாரவட்டத்திற்குள் மட்டும் உலகை முடக்க கனா காண்பவர்கள். ஆனால் அதேநேரம் கண்மூடித்தனமாக வழிபடுவது நாம் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்களை அடையாளம் காணவும், தீர்வை நோக்கி பயணிக்கவும் தடையாய் இருக்கும். புத்தாயிரமாண்டில் ஒரு சமூகமாக நாம் அடைய வேண்டிய முதன்மை லட்சிய விழுமியமாக சாமர்த்தியத்தைதான் முன்வைக்கிறோம். அறிவாளியாக அல்ல, கொடையாளியாக அல்ல, உழைப்பாளியாக அல்ல சாமார்த்தியசாலியாக நம் பிள்ளைகளை வளர்க்க விரும்புகிறோம்.  நம்முள் உள்ள மனிதத் தன்மையை, சக உயிர்களின் மீதான கரிசனத்தை பலியளித்துதான் இதை அடைய வேண்டியிருக்கிறது. இந்த இருபது வருடங்களில்  நாம் முன்னெப்போதையும் விட பன்மடங்கு விரைவாக ஓடியிருக்கிறோம். எல்லா காலத்திலும் மாற்றங்கள் நிகழும்தான். ஈடுகொடுக்க முடியாதவர்கள் மையத்திலிருந்து சுழற்றி வெளியே வீசப்படுவார்கள்தான். ஆனால் மீண்டு எழுவதற்கும் நிலைப்பதற்கும் போதிய கால அவகாசம் கிடைக்கும். இப்போது நமக்கு அது இல்லை என்பதே சிக்கல். ஆகவே சாமார்த்தியத்திற்கு இத்தனை அழுத்தம் கொடுப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் சிக்கல் யாதெனில், சாமார்த்தியம் கருணையின் இடத்தை அல்லவா பெயர்த்துவிட்டு அமர்ந்திருக்கிறது.   

நமது பண்பாடும், ரசனையும் பல தளங்களில் உருமாறியுள்ளது. இருபது வருடங்களுக்கு முன் சாத்தியமே அற்ற பல வாய்ப்புகள் இப்போது திறந்திருக்கின்றன. ஆக்க ஆற்றல்களுக்கு நிகராக, அல்லது சற்று கூடுதலாக மனிதர்களுக்கு தங்களை அழித்து கொள்ளும் விழைவும் உட்பொதிந்திருப்பதாக எனக்கு ஒரு ஐயமுண்டு.‌ நம் முன் இத்தனை சாத்தியங்களும் தம்மை திறந்து வைத்துக்கொண்ட பிறகு நாம் எதை தேர்வு செய்கிறோம் என்பதில் உள்ளது வேடிக்கை. இந்த முடிவெடுக்க முடியாமையின் அடிப்படை காரணம் நம் தலைமுறையில் பெரும் வலுவோடு புழங்கும் கவனமின்மைதான். ஆறு நிமிடங்களுக்கு மேல் நம்மால் ஒன்றில் ஆழ்ந்திருக்க முடிகிறதா? நம்மால் கேளிக்கையில் கூட முழுதாக கவனத்தை குவிக்க முடியவில்லை என்பதே இன்றைய நிதர்சனம். நம்முன் இத்தனை அறிதலின் வாயில்கள் திறந்திருப்பதாலேயே எதைத் தேர்வதென்பதில் நமக்கு குழப்பம். எந்த ஒன்றும் அரிதாக இருக்கும் போது நாம் அதற்கு ஏங்கினோம். இன்னும் இன்னும் என வேண்டினோம். இப்போது மடை திறந்து வெள்ளம் பாய்கிறது. அப்போது அரியவையாக இருந்தவை இப்போது நம் கைக்கெட்டும் தொலைவில், பார்வைபடும் தூரத்தில் மலிந்து கிடப்பதாலேயே மேலும் மேலுமென அரிதாக மாறிவருவதை வியப்போடு காண்கிறேன். ஆக நமக்கு இப்போது வேண்டியது கிடைப்பதல்ல சிக்கல். உண்மையில் அது நமக்கு வேண்டியதுதானா என்பதுதான். 'ஜங்க்' கதை இந்த வரியுடன் முடிகிறது. 'எனக்கு என்ன தேவையில்லை என்பதை பிரபஞ்சத்தில் யாரோ அறிந்திருக்கிறார்கள்.' ஆம் அதுவும் நாம் அறிவதற்கு முன்னரே. 

 யோசித்து பார்த்தால் நமது தனியடையாளங்களும், தனித்துவங்களும், தனித் திறன்களும் மறைந்து இன்று நம் அனைவருக்கும் நுகர்வோர் எனும் ஒரு பொது அடையாளம் மட்டுமே எஞ்சி உள்ளதாக அல்லது அத்திசை நோக்கி அழுத்தப்படுவதாகவே தோன்றுகிறது.  நமக்கு இந்த தொழில்நுட்ப வெடிப்பை கையாளத்தெரியவில்லை என்பதுதான் இதன் அடிப்படை காரணம். ஒரு தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக முழுமையாக பயன்படுத்த நாம் பழகிக்கொள்வதற்குள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடுகிறது.‌  

நண்பரும் எழுத்தாளருமான விஷால் ராஜா ஒரு உரையாடலின் போது நம் வாழ்க்கை இப்போது முழுக்க நிகழ்த்துக்கலையாக ( perfomance) மாறிவிட்டது என்றார். எதிர்பார்ப்புகள் பொய்த்து துரோகங்களும் நம்பிக்கையின்மையும் மலிந்த முந்தைய தலைமுறையினரால் வளர்க்கப்பட்டவர்கள் நாம். நமக்காக வாழ வேண்டும், வேறெதற்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை என சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்டோம். விளையாட்டு மைதானங்களாக இருந்த காலி மனைகள் இப்போது எவர் வீட்டு குப்பைகளையோ சுமக்கும் பிளாஸ்டிக் வயல் வெளிகளாக மாறிவிட்டதென்பது இந்த அக மாற்றத்தை நமக்கு துலக்கமாக்கும் கண்ணாடி. நமக்காக வாழ்வது இன்று போதாது, அதை பொதுவெளியில் நிகழ்த்தி, நிறுவி காட்ட வேண்டிய நிர்பந்தம் நம்மை இயக்குகிறது. முன்னரும் வாழ்க்கையை நிகழ்த்துவது நமக்கு வழக்கம்தான். 'நாலு பேரு என்ன நினைப்பாங்களோ?' என ஒரு குறுகிய எல்லையில், வாழ்வை நேரடியாக பாதிக்கக்கூடிய ஓரு வட்டத்திற்காக நிகழ்த்திக்கொண்டிருந்தோம் எனில் இப்போது நாலாயிரம் பேருக்கு முன்னும் கண்ணுக்கு தெரியாத பல்லாயிரம் பேருக்கு முன்னும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம். நம் ஆற்றல் முழுவதையும் செலுத்தி நமக்கான கட் அவுட்டுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். நமது அசல் சுயம் அதன் பின் எங்கோ மூலையில் ஒடுங்கிக்கொள்கிறது. அல்லது அசல் சுயம் என ஒன்று உண்டா எனும் கேள்வியின் நெருக்கடியையும் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் கேலிப்பொருளாகி விடக்கூடாது எனும் அதீத கவனத்தில் பொதுபோக்குக்கு வெளியே உள்ள எதன்மீதும் நம்பிக்கையையோ பற்றையோ வெளிப்படுத்த தயங்குகிறோம். ஆகவே நாம் கேலிக்குள்ளாகுவதற்கு முன்னரே பிறவற்றை கேலிக்குள்ளாக்குகிறோம். நம் நகைச்சுவை உணர்வையல்ல, நம் பாதுகாப்பின்மையைதான் இது காட்டுகிறது என ஐயப்படுகிறேன். நாம் உணர்ச்சிகரமானவர்கள் என்பதை பெருமையாகவும் அடையாளமாகவும் கருதிய காலகட்டம் அல்ல இது. உணர்ச்சிகரத்தை நாம் கைவிடவில்லை ஆனால் அப்படி அடையாளப்படுத்துவதை உள்ளுர ஏற்காத தலைமுறையினர் நாம்.     

காலம் அவசியமானதை சாரம்சப்படுத்தி தக்கவைத்துக்கொண்டு அடுத்தடுத்து கடத்தும் எனும் நம்பிக்கை இங்கு பரவலாக உண்டு. ஆனால் அப்படியொரு கட்டாயமும் அதற்கு இல்லை. நம் முன் உள்ள முதன்மை கேள்வி நவீன வாழ்க்கையின் அத்தனை தொழில்நுட்ப சாத்தியங்களையும் உள்ளடக்கியபடி வாழ்க்கையை பொருள் பொதிந்ததாக ஆக்குவதெப்படி என்பதுதான். பொருள் பொதிந்ததாக ஆக்கிக்கொள்வதெப்படி என்பதை நமக்கு சொல்வதற்கு முந்தைய தலைமுறையினரிடம் சில யோசனைகள் இருக்கக்கூடும். பின்பற்ற வேண்டும் என்பது கூட இல்லை. குறைந்தபட்சம் செவிமடுக்காவது செய்யலாம். தலைமுறைகள் இடைவெளிகளால் உருவாவதில்லை தொடர்ச்சிகளால் உருவாவதென்பதை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.