Wednesday, July 4, 2018

சைக்கிள் எனும் கால யந்திரம்- வு மிங் யி எழுதிய தி ஸ்டோலன் பைசைக்கிள்

(ஜூலை மாத கணையாழியில் வெளிவந்த கட்டுரை)

“கொள்ளை நோய்கள் கொன்றதற்கு குறைவில்லாமல் காய்ச்சல் கொண்ட மனித மனங்களும் கொன்று குவித்திருக்கிறது”- வு மிங் யி, ஸ்டோலன் பைசைக்கிள்  
Image result for the stolen bicycle wu ming yi
இவ்வாண்டு மேன் புக்கர் பரிசுக்குரிய நீள் பட்டியலில் உள்ள நாவல்களை ஆளுக்கொன்றாக படித்து பார்க்கலாம் என்று பதாகை நண்பர்கள் முடிவு செய்துகொண்டோம். கிடைத்த பிரதிகளில் பிறர் எடுத்துக்கொண்டது போக எஞ்சியிருந்தது வு மிங் யி (Wu Ming Yi) எழுதிய the stolen bicycle நாவல். சரி எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படித்து தான் பார்ப்போமே என்று வாசிக்கத் துவங்கினேன். 

Tuesday, July 3, 2018

யுவ புரஸ்கார் பாராட்டு விழா

இப்படியான விழா ஏற்பாடு செய்யலாம் என்று நண்பர் ஜீவ கரிகாலன் கூறியபோது அதை வேண்டாம் என்று மறுத்தேன். அவசியமற்ற கவனச்சிதைவு என்றே எண்ணினேன். பிறகு 'அம்புப் படுக்கை' மீதான விமர்சன கூட்டமாக இதை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் ஜீவ கரிகாலன், குடும்பத்தினர் மற்றும் எஸ்.ராவின் வலியுறுத்தல் இதை பாராட்டு விழாவாக ஆக்கியது. தமிழிலக்கிய பரப்பில் பறக்கும் பறவைகள் எந்த மரத்திலிருந்து வருபவை என்பது முக்கியமல்ல என எஸ்.ரா பேசியது மிக நல்ல உரை. அவரே ஆர்வமுடன் கேள்வி பதில் அமர்வை ஒருங்கிணைத்தார். மண்குதிரை ஜெயகுமார் உரையை முதன்முறையாக இப்போதுதான் கேட்கிறேன். அவருடைய கட்டுரைகளை வாசித்ததுண்டு. செறிவாக பேசினார். பாராட்டு விழா என்பதால் எதிர்மறை விமர்சனங்களை வைக்கவில்லை. அதை கெட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அகரமுதல்வன் பேச்சின் மொழியும் வீச்சும் கேட்க நன்றாக இருந்தது. கார்த்திக் புகழேந்தி பேசியதை அரங்கில் உள்ளோர் அனைவரும் ரசித்து கேட்டனர். எல்லோரையும் ஈர்க்கும் விதமாக இருந்தது. நண்பர் சிறில் விரிவாக பல்வேறு விஷயங்களை தொட்டுக் காட்டி உரையாற்றினார். என்னை நீண்ட காலமாக அறிந்த நண்பர் அவர். கணையாழி ஆசிரியர் ம.ரா ஆச்சரியமான தொடர்ச்சி. பேசும் பூனை பரிசு மேடை, புத்தக வெளியீட்டு மேடை பிறகு இப்போது யுவ புரஸ்கார் மேடை என அவருடைய இருப்பும் வாழ்த்தும் தொடர்கிறது. 

ஏற்புரையில் சிலவற்றை சொல்லவேண்டும் என்றிருந்தேன். ஆனால் காலதாமதம் ஆகிவிட்டதால் அதிகம் பேசவில்லை. ஜீவ கரிகாலன், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், நட்பாஸ் என யாருக்கும் நன்றிகள் சொல்லவில்லை. ஸ்ருதி டிவிக்கு ஒரு நன்றி சொல்ல எண்ணியிருந்தேன் ஆனால் அதுவும் சொல்லவில்லை. சிறப்பாக ஒருங்கிணைத்த ஜீவ கரிகாலன் மற்றும் யாவரும் நண்பர்களுக்கும், தொகுத்த பிகு, வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

எஸ்.ரா உரை 

https://www.youtube.com/watch?v=BkPCznjGtBA&t=10s

கார்த்திக் புகழேந்தி உரை 

https://www.youtube.com/watch?v=kBK-T17OZLw&t=4s

சிறில் அலெக்ஸ் உரை 


https://www.youtube.com/watch?v=FsjR5qN1xv4&t=4s

அகரமுதல்வன் உரை 

https://www.youtube.com/watch?v=82wn5Z8ZbjU&t=4s

மண்குதிரை உரை 

https://www.youtube.com/watch?v=LXJsWCM51ps&t=8s

ம.ராஜேந்திரன் உரை 

https://www.youtube.com/watch?v=g7lXSB5DugE

கலந்துரையாடல் 

https://www.youtube.com/watch?v=qELZ9jIPrJs&t=1446s

நேர்காணல்கள்

யுவ புரஸ்கார் விருதையொட்டி தொலை பேசி வழியாகவும் நேரிலும் சில நேர்காணல்கள் நிகழ்ந்தன. 

டி.டி பொதிகை தொலைகாட்சியில் பணிபுரியும் நண்பர் விஜயன் காந்தி- இன்று தளத்தின் தொடர் வாசகர். ஜெயமோகன் தலம் வழியாக காந்தி இன்று தளத்தை கண்டுகொண்டவர். அவருடைய அழைப்பின் பேரில் சனிக்கிழமை காலைத்தென்றல் நம் விருந்தினர் பகுதியில் ஒரு நேர்காணல் அளித்தேன். விஜயன் தற்காலிகமாக இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று இருந்தார். ஆகவே வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். அவரே ஜெயமோகன் தளங்களில் இருந்தும், வெளியே இருந்தும் ஒன்றரை நிமிடம் ஓடக்கூடிய குறும்படத்தை தொகுத்திருந்தார். நேரலை நேர்காணல் என்பது புதிய அனுபவமாக இருந்தது. விஜயன் மற்றும் பூர்ணிமா ஆகியோருக்கு நன்றி. 

https://www.youtube.com/watch?v=AEY6b8QezeE&t=26s

விகடன் சார்பாக அழகு சுப்பையா தொலைபேசி நேர்காணல் ஒன்று செய்தார். ஏறத்தாழ எல்லா கேள்விகளும் யாக்கர் பந்துகள். ஒருமாதிரி சமாளித்து பதில் அளித்தேன். 

https://www.vikatan.com/news/india/129152-interview-with-yuvapuraskar-winner-sunil-krishnan.html\

நண்பர் கவிமணி தொலைபேசி வழி எடுத்த நேர்காணல். அவரோடு கொஞ்ச நேரம் அரட்டை அடித்து கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். விடியோ பதிவு ஒன்றும் செய்ய வேண்டும் என்றார். ஆனால் நேரமின்மை காரணமாக அதை செய்யவில்லை. நன்றி நூல்வெளி மற்றும் கவிமணி. 

http://www.noolveli.com/detail.php?id=788

நட்பாஸ் வாழ்த்து

'அம்புப் படுக்கை' தொகுப்பை நான் இருவருக்கு சமர்ப்பணம் செய்திருப்பேன். ஒருவர் தந்தைக்கு நிகரான ஜெயமோகன். மற்றொருவர் ஆசிரியருக்கு நிகரான நட்பாஸ் என்றே குறிப்பிட்டு இருப்பேன். இன்றுவரை நான் எழுதும் எதையும் எழுதி முடித்தவுடன், (சில நேரங்களில் எழுதிக் கொண்டிருக்கும்போதேகூட) அவருக்கு அனுப்புவதே என் வழக்கம். மொழியை சிந்தனையை செம்மையாக்குவதில் பங்களிப்பு ஆற்றியவர். காந்தி- இன்று, ஆம்னிபஸ், பதாகை, சொல்வனம் என அவருடன் இணைந்து பயணித்திருக்கிறேன். சில நேரங்களில் கடுமையாக அவருடன் முரண்படவும் கோபித்துகொள்ளவும் நேர்ந்திருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் நியாயம் அவர் பக்கம் இருக்கும். ஆனால் ஒருமாதிரி சமாதானம் அடைந்து எங்கள் பயணம் தொடர்கிறது. தமிழ் இணைய உலகை மேம்படுத்தியதில் பாஸ்கரின் பங்களிப்பு முக்கியமானது. என்னைப்போன்ற பல எழுத்தாளர்கள் தங்கள் முதல் டிராப்டை அனுப்பி கருத்து கேட்கும் நபராக இன்றளவும் பாஸ்கரே உள்ளார். தனிப்பட்ட நம்பிக்களுக்கு அப்பால் சென்று படைப்பை மதிப்பிடும் பண்பு அவரிடம் உள்ளது. தன்னை ஒருபோதும் அவர் முன்னிறுத்திக் கொண்டதில்லை. என்றாவது ஒருநாள் பாஸ்கரைப் பற்றி விரிவாக எழுத வேண்டும். இந்த வாழ்த்துக்கு நன்றி. 
--
ஒரு சிறு வாழ்த்துரை 
நன்றி - https://livelyplanet.wordpress.com/2018/06/22/yuva-puraskar/

நண்பர் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு ‘யுவ புரஸ்கார் விருது’ கொடுக்கப் போகிறார்கள் என்ற செய்தி படித்தேன். மிக மகிழ்ச்சியான விஷயம்.

சுனில் கிருஷ்ணன் பொது புள்ளியைக் கண்டடைந்து உரையாடுபவர், பொறுமை மிக்கவர். இதைச் சொல்ல வேண்டுமா என்றால், ஆமாம். ஒன்றுமில்லாத விஷயத்துக்கு எல்லாம் சிலிர்த்துக் கொண்டு அதற்கு தார்மீக நியாயம், அறச் சீற்றம் என்றெல்லாம் முத்திரை குத்தி நட்பை முறித்துக் கொள்ளும் சூழலில் இந்த இரு குணங்களும் மிக முக்கியமாக இருக்கின்றன, அதுவும் இளைஞர்களுக்கு. அவ்வகையில் அவர் ஒரு முன்மாதிரி.

இரண்டாவதாக, சுனில் கிருஷ்ணன் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். பதாகை இதழில் வந்த ‘புதிய குரல்கள்‘ தொடரின் நேர்முகங்கள் மற்றும் நூல் வாசிப்பு அத்தனையும் அவரது பங்களிப்பு மட்டுமே. எந்த ஒரு ஊக்குவிப்பும் இல்லாமல் தன்னார்வம் கொண்டு மட்டுமே அதைத் தொடர்ந்து செய்து வந்தார். “உங்களிடம் ஒரு நேர்முகம் வேண்டும்,” என்று கேட்கும் ஒவ்வொரு சமயமும் “இப்போது வேண்டாம்,” என்று மறுத்தே வந்திருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவருக்கு யுவ புரஸ்கார் அளிக்கும் அடையாளம் இன்னும் பல இளம் எழுத்தாளர்கள் வெளிச்சத்துக்கு வரவும் அங்கீகாரம் பெறவும்  சிறிதளவேனும் உதவும் என்று நம்புகிறேன். இதுவும் சாதாரண விஷயமில்லை. காந்தியானாலும் சரி, தன் கதையானாலும் சரி, அதில் எல்லாம் எவ்வளவு முனைப்பு காட்டினாரோ அதே முனைப்பை பிறர் எழுத்தை முன்னிலைப்படுத்துவதிலும் காட்டி வந்திருக்கிறார். அந்த வகையில், இவ்வாண்டு, யுவ புரஸ்கார், சரியான நபரிடமே சென்று சேர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

நண்பர் சுனில் கிருஷ்ணன் நீண்ட பயணத்தின் துவக்கத்தில் இருக்கிறார். அவருக்கு இந்த விருது இப்போதே கிடைத்திருப்பது பெரும்பேறு. இதற்கு மட்டுமல்ல, இன்னும் பல உயர்ந்த விருதுகளுக்கும் தகுதி கொண்டவர்தான் என்று தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய அர்ப்பணிப்பும் உழைப்பும் அவரிடம் உண்டு. அவை தொய்வின்றி தொடர என் பிரார்த்தனைகள்.

oOo

23.6.2018 8:20 AM:

கண்ணன் தண்டபாணி - யுவ புரஸ்கார் வாழ்த்து

நண்பர் கண்ணன் தண்டபாணி நான் பெருமதிப்பு கொண்டிருக்கும் காந்திய நண்பர். தீவிர வாசிப்பு வழக்கம் உள்ளவர். காந்தியை வெறுமே வாசிப்பதோடு நிற்காமல் காந்திய வாழ்க்கை வாழ்பவர். 'அம்புப் படுக்கை' தொகுப்பிற்கு என்பதைவிட ஒட்டுமொத்த பங்களிப்பிற்கு அளித்த விருது என மதிப்பிட முடியும் என சொல்கிறார். என்னளவில் சிறுகதை தொகுப்பிற்காக என்றே மதிப்பிடுவேன். புனைவின் பங்களிப்பை பின்னுக்கு தள்ளுவதாக ஆகிவிடக் கூடும்.  எனது வலைப்பூவில் மிக துவக்க காலத்தில் எழுதிய கதைகளை கூட தோண்டி எடுத்து வாசித்து மதிப்பிட்டுள்ளார். அவருடன் இணைந்து சில பணிகளை செய்து கொண்டிருக்கிறேன். எங்கள் நட்பு வருங்காலங்களிலும் தொடரும். நன்றி கண்ணன். 

--
நன்றி- https://urakkacholven.wordpress.com/2018/07/01/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/
சுனில் கிருஷ்ணன்[சுனில் கிருஷ்ணன் ‘காந்தி இன்று’ தளத்தைப் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அதில் காந்தியுடைய ஆக்கங்கள், காந்தி காந்தியம் பற்றிய படைப்புகள் பலவும் மொழிபெயர்க்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. காந்தி குறித்த பல புதிய கட்டுரைகளும் உள்ளன. படைப்பிலக்கியத்திலும் தொடர்ந்து செயல்பட்டுவரும் சுனில் கிருஷ்ணனின் ‘அம்புப் படுக்கை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. சுனில் கிருஷ்ணன் காரைக்குடியில் ஆயுர்வேத மருத்துவராக உள்ளார்.]நண்பர் சுனில் கிருஷ்ணனுக்கு விருது என்று சென்ற வாரம் அறிந்த போது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தது. மறுபுறம், விருதுவாங்குபவர்களுக்கென்றே உள்ள பிரத்யேகமான சிகிச்சையும் அவருக்குக் கிடைக்குமே என்ற ஒரு அச்சமும் இருந்தது.சுனிலின் ஒருசில கதைகளைத்தான் நான் முன்பு படித்திருக்கிறேன். நம்ம சுனில் தானே என்கிற உரிமையிலோ என்னவோ, முழுமையாகப் படிக்காமல் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன். இவ்விருது தந்த புது உற்சாகத்தில் இணையத்தில் உள்ள அவரது கதைகளில் பெரும்பாலானவற்றைப் படித்துவிட்டேன்.பேசும் பூனை, அம்புப் படுக்கை ஆகிய இரண்டு கதைகளும் குறிப்பிடத்தக்கவை என்று பட்டது.காந்தியவாதிகள் நல்ல இலக்கியம் படைக்கமாட்டார்கள் என்கிற ஒரு முன்முடிவோடு நாம் சுனிலை அணுகவேண்டியதில்லை. (சாரு நிவேதிதா மிகவும் விதந்தோதிய ‘மண்ணில் தெரியுது வானம்’ என்கிற காந்திய நாவலே சற்று தட்டையாகத்தான் எனக்குத் தெரிந்தது. சுனிலின் பாராட்டுவிழாவில் எஸ்.ரா. காந்திக்கு புனைவிலக்கியங்கள் மீதும், இயற்கையின் மீதும்கூட அதிக ஆர்வமில்லை என்று பேசியுள்ளார். அதில் ஓரளவு உண்மையும் (சில தகவல் பிழைகளும்) இருந்தாலும், காந்தி ஹோமர் முதல் கதே வரை படித்திருக்கிறார். எட்வின் ஆர்னால்டின் கவித்துவமான மொழியின் மூலமாகத்தான் அவர் கீதைக்குள் நுழைந்தார். காந்தியின் எழுத்தின் கூர்மையும் தெளிவும் எந்த எழுத்தாளருக்கும் குறைவானதல்ல. ஆனால் அவரது முதன்மையான அக்கறை வேறாக இருந்தது). சுனில் காந்திய ஆர்வலராக இருந்தாலும் தன்னை காந்தியவாதி என்பதையே ஏற்றுக்கொள்வதில்லை என்று நினைக்கிறேன். உண்மையில் ‘காந்தியும் நானும்’, ‘ஆரோகணம்’ என்ற அவரது இரண்டு காந்தி கதைகளுமே முன்வைக்கும் காந்தி பற்றிய சில சித்திரங்களும் கேள்விகளும் விவாதத்திற்குரியவை. காந்தியின் கண்முன் ஐந்து வயதுப் பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டிருந்தால் அவர் காந்தியவாதியாக இருந்திருப்பாரா என்பது காந்தியை அறிய முனையும் நம் எல்லோரின் ஆரம்பகட்ட கேள்வி. இக்கதை எழுதி 8 வருடங்களுக்கு மேல் இருக்கவேண்டும். சுனில் இப்போது இக்கேள்வியை வேறு விதமாக அணுகக்கூடும். ஆரோகணம் கதையில் காந்தி ஹரிலால் பற்றி ‘தனது அன்பும் கருணையும் அவனை ரணப்படுத்தியது’ என்று எண்ணுவதாக வருவதற்கு நேர்மாறாகத்தான் எண்ணியிருப்பார் என்பது என் கணிப்பு. ஹரிலாலுக்கு குழந்தைப்பருவம் முதலே தனது அன்பும் கருணையும் கண்காணிப்பும் போதிய அளவு கிடைக்கவில்லை, அதனாலேயே ஹரிலால் பாதை தவறிவிட்டார் என்கிற எண்ணம் காந்திக்கு உண்டு. ஆனால், ஆரோகணம் கதையின் முடிவில், காந்தி மகிழ்ச்சி நிறைந்த சொர்க்கத்தை மறுத்து இன்னல் நிறைந்த நரகத்தைத் தேர்ந்தெடுப்பதாக வரும் சித்திரம் முதலில் சில ஐயங்களை எழுப்பினாலும், அதிலுள்ள உண்மை மறுக்கமுடியாமல் மேலெழுகிறது. சுதந்திரம் பெறும் தறுவாயிலும், சுதந்திரம் பெற்ற பின்னரும் வெற்றிக்களிப்புக்கு ஒரு கணநேரமும் இடங்கொடாது நவகாளி, கல்கத்தா, பிகார், டில்லி (பின்னர் மேற்கு பாக்கிஸ்தான் செல்லும் திட்டம்) என்று கலவரப் பகுதிகளாகத் தேடிச் சென்று பணியாற்றிய காந்தி நினைவுக்கு வருகிறார்.காந்தியப் பணியையும் படைப்பிலக்கியச் செயல்பாட்டினையும் சுனில் தனித்தனியாகப் பார்க்க விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால் அவரது படைப்புகளில் காந்தியக் கரிசனம் தலைதூக்காமல் இல்லை. அதில் தவறொன்றும் இல்லை, சுனில். பேசும் பூனை கதையை நவீன அறிவியல் பொருளாதார மாற்றங்கள் நம் வாழ்க்கைமீது செலுத்துகிற ஆதிக்கம் குறித்த கதையாக நான் பார்க்கிறேன். நம்மை அறியாமல் நுகர்வு கலாச்சாரமும், அரசாங்க தனியார் கண்காணிப்பும் நம் வாழ்க்கையில் எப்படி ஊடுறுவுகின்றன என்பதை மாய யதார்த்த முறையில் பேசுகிற கதையாகவும் பார்க்கலாம். காந்தியின் வழியே பயணித்துவந்த கரிசனங்கள் தாமே இவை.அம்புப் படுக்கை கதையும் இம்மண்ணின் அறிவியல் மரபுக்கும் நவீன அறிவியல் போக்குகளுக்கும் உள்ள உரசலை மையமாகக் கொண்டுள்ளது. மரபைப் பின்பற்றுகிறவர்கள் மீது சமூகம் முன்வைக்கிற விமர்சனங்களைத் தாண்டி, அவர்களுக்கே தம்மீதும் தமது மரபின் மீது தோன்றுகிற ஐயமும், தெளிவும், தெளிவின்மையும் நன்றாக வெளிப்பட்டுள்ளன. தன் மருத்துவ அறிவை நிலைநாட்டுவதைவிடவும் நாயகனிடம் மானுட நேயம் மேலோங்கி வருவதையும் காணலாம். அதே போல், நக்ர ரேதஸ் கதையில் மருத்துவ நெறிகளுக்கும் தனிப்பட்ட விழுமியங்களுக்கும் ஏற்படுகிற மோதல் கதைப்பொருளாகிறது.வேறு சில கதைகள் எனக்குப் பெரிய திருப்தி தரவில்லை. இணையத்தில் கிடைக்காத ஒரு சில கதைகளை இன்னும் படிக்கவில்லை. குருதிச் சோறு தன்னளவில் நன்றாக இருந்தாலும், தொன்மங்கள் உருவாவது பற்றி நிறைய எழுதியிருக்கும் ஜெயமோகனின் நேரடி பாதிப்பு மேலோங்கியிருக்கிறது. ஜெயமோகனின் பாதிப்பு குறித்து சுனிலுக்கு வருத்தம் எதுவுமில்லை. அவரது வளர்ச்சியில் ஜெயமோகனுக்குப் பெரும் பங்கு இருந்திருக்கிறது. தனிப்பேச்சின்போதும் எழுத்திலும், அசோகமித்திரனும், யுவனும் தன் எழுத்தின்மீது சமமான தாக்கம் செலுத்தியுள்ளார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் பேசும் பூனை போன்ற கதையில் ஜெயமோகனின் தாக்கத்தைத் தாண்டிவந்து அக்கதைக்கென ஒரு மொழியை அடைந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.இலக்கியம் ஒருபோதும் ஒரு சுழியத்தொகை விளையாட்டு (zero-sum game) அல்ல. ஆனால் விருதுகள் நம்மை அக்குறுகிய வீதிக்குள் தள்ளுகின்றன. சுனிலுக்கு இணையான, சுனிலை விட மேலான இளம் படைப்பாளிகள் இருக்கலாம் – சமகாலப் புனைவுகளை நான் அதிகமாக உடனுக்குடன் படித்துவிடுகிறவன் இல்லை என்பதால் அது குறித்துக்கூற எனக்கு அதிகமில்லை. ஆனால் சுனிலின் பங்களிப்பு, இக்கதைகளையும் தாண்டி இன்னும் பெரிய பரப்பில் உள்ளது. எவராலும் தவிர்க்கமுடியாதது. (இதைச் சொல்வது அவரது இலக்கிய மனதுக்கு அவ்வளவு உவப்பாக இல்லாமற்போகலாம். உண்மையில் விருது அவரது சிறுகதைத் தொகுப்புக்காக மட்டுமே கொடுக்கவும்பட்டிருக்கலாம்.) பொதுவாக சாகித்ய அகாதெமி விருது தமிழில் ஒரு தனிப்பட்ட படைப்புக்குக் கொடுக்கப்பட்டாலும், ஒற்றைப் படைப்பு என்பது ஒரு proxyதான். பெரும்பாலும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கே அளிக்கப்பட்டுவருகிறது. யுவ பரஸ்கார் விருதும் அவ்வாறு தரப்பட்டால் அதில் தவறெதுவும் இல்லை. எழுத்துலகில் வாழ்நாள் சாதனை செய்தவர்கள் என்று சொல்லக்கூடிய இளைஞர்கள் அதிகம் இருக்கமுடியாது. சுனில் அத்தகைய ஓர் அரிய இளைஞர். காந்தி குறித்தும், காந்தியம் குறித்தும், மாற்று அரசியல் பொருளாதாரம் கல்வி குறித்தும் ஒரு மறுவாசிப்பையும், புது ஆர்வத்தையும் பல தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவாக்கியதில் சுனில் கிரூஷ்ணன், ராட்டை ரகு போன்றவர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இவர்கள் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஓரிடத்தில் தொகுத்திருக்கிறார்கள். தீவிர புனைவிலக்கியம் என்கிற சிறிய வட்டத்தைத் தாண்டி, தமிழ் எழுத்துலகுக்கும், தமிழ் அறிவுலகுக்கும் இது ஒரு மாபெரும் பங்களிப்பு. மாற்று குறித்துப் பேசுகிறவர்கள் மத்தியிலும் சுனில் அதை ஒரு மூர்க்கமான கொள்கையாக முன்வைக்காமல், அமைதியாக தர்க்கப்பூர்வமாக அணுகுகிறார். எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்தே சொன்னால், சுனில் மூலமாகத்தான் நாராயண் தேசாய், க.மு.நடராஜன், சங்கீதா ஸ்ரீராம் போன்றவர்களுடனான தொடர்பினை என்னால் ஏற்படுத்திக்கொள்ள முடிந்தது. சுனில் தந்த அழுத்தத்தால் தான் நாராயண் தேசாயுடனான நேர்காணலை நான் எழுதியும் பதிப்பிக்கவும் முடிந்தது. இவை மேலும் பல புதிய பயணங்களுக்கு இட்டுச்சென்றன. (எக்குத்தப்பான ஒரு நிகழ்ச்சியில் மாட்டியும் விட்டிருக்கிறார்.) இதுபோல் பலருக்கும் பல திறப்புகள் நிகழக் காரணமாக இருந்திருக்கிறார், இருப்பார்.ஆயுர்வேதம் குறித்த அவரது கட்டுரைகளும் ஆழ்ந்த வாசிப்பைக் கோருபவை. பதாகை இதழில் பாஸ்கரோடு சேர்ந்து அவரது பங்களிப்பு கணிசமானது என்பதை நாஞ்சில் நாடன், சு.வேணுகோபால் ஆகியோருடன் கோவையில் நண்பர்களோடு நடத்திய நீண்ட நேர்காணல்களின் போது உணர்ந்தேன். சுனில் பற்றிய பாஸ்கரின் குறிப்பிலும் அதைக் காணலாம்.இதற்கு முந்தைய பல ஆண்டுகளில் யுவ புரஸ்கார் (அல்லது சாகித்ய அகாதெமி) விருது பெற்ற பலரும் தொடர்ந்து தீவிரமாக எழுதாமற் போயிருக்கலாம். ஆனால் இன்னும் பல ஆண்டுகளுக்கு தமிழ் எழுத்துலகுக்குப் பங்களிக்கக்கூடிய ஆற்றலும் ஆர்வமும் சுனிலுக்கு இருப்பதாய் நினைக்கிறேன். இப்போது அவர் தொகுத்துவரும் தமிழ் இலக்கியத்தில் காந்தி குறித்த பதிவுகள் முக்கியமான ஒரு முயற்சி. (நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிறேன் என்பதால் மட்டும் சொல்லவில்லை.)அவரது இலக்கிய, காந்தியப் பணிகள் மென்மேலும் கவனம் பெற இந்த விருது உதவும் என்பதால் இது மிகவும் முக்கியமானதே. சுனில் கிருஷ்ணனுக்கு ஒரு வாசகனாகவும், மூத்த நண்பனாகவும், சக பயணியாகவும் எனது வாழ்த்துகள்.

அம்புப் படுக்கை விமர்சனம் - ரா. கிரிதரன்

நண்பர் கிரி இணைய உலகின் நெடுநாள் நண்பர். இந்தியாவிற்கு வரும்போது நிச்சயம் சந்தித்துகொள்வோம். காலம் இதழுக்காக அவர் எழுதிய அம்புப் படுக்கை விமர்சனம் மற்றும் வாழ்த்துரையை இணைத்திருக்கிறேன். பதாகை, ஆம்னிபஸ், சொல்புதிது குழுமங்களில் தொடர்ந்து கிரியுடன் விவாதித்து வந்திருக்கிறேன். ஸ்ரீதர், அஜய், நம்பி, எஸ். சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து பாஸ்கரும் கிரியும் எனக்கு அனேக எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். தொடர்ந்து பயணிப்போம். கிரி இதுவரை தனது சிறுகதைகளை தொகுப்பாக்கவில்லை. நானறிந்த வரை கிரி, சிவா கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீதர் மற்றும் அஜய் ஆகியோர் சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள் ஆனால் இவை தொகுப்பாகவில்லை. தொகுப்பாக வரும்போது அவை கவனிக்கப்படும். 

---
நன்றி - http://asaichol.blogspot.com/2018/07/blog-post.html

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் இலக்கிய உலகில் எனக்கிருக்கும் மிகச் சில நண்பர்களில் ஒருவர். நண்பர் நட்பாஸ் கூறியது போல, சுனில் பிறருடனான பொதுவான அடையாளங்களைக் கண்டடைந்து உரையாடுபவர். இலக்கிய செயல்பாடுகளில் தணியாத ஆர்வமும் தீவிரமும் கொண்டவர். அவருக்கு இந்த வருடத்தின் சாஹித்திய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது கிடைத்திருப்பது எனக்கே கிடைத்தது போல மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.



சுனில் எழுதத் தொடங்கிய காலம் முதல் தொடர்ந்து நாங்கள் உரையாடியபடி இருக்கிறோம். ஆம்னிபஸ் தளத்தில் இணைந்து பணியாற்றினோம். சொல்புதிது, பதாகை என பல குழுக்களில் தொடர்ந்து ஒன்றாய் பயணம் செய்திருக்கிறோம். ஆம்னிபஸ் செயல்பட்ட ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட தினமும் நாங்கள் மடலில் உரையாடியிருக்கிறோம், விவாதம் செய்திருக்கிறோம். நான் எழுதும் ஒவ்வொன்றையும் நண்பர் நட்பாஸும், சுனிலும் உடனடியாகப் படித்துக் கருத்து சொல்வார்கள். இன்று வாட்ஸப்பிலும் அது தொடர்கிறது. இத்தனை வருடத்தில் சுனிலின்  செயல் வேகம் குறையவில்லை; அதிகமாகியபடி இருந்திருக்கிறது. இன்று குறிப்பிடத்தக்க எழுத்தாளராக, விமர்சகராக அவர் மாறியிருப்பதைப் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். இந்த விருது அவரை மேலும் சிறப்பானதொரு பயணத்துக்குத் தயார் செய்திருக்கிறது என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதற்கான சான்றுகளை சமீபத்தில் அவர் தந்த தொலைக்காட்சி பேட்டியிலும், விருது பாராட்டு விழாவின் காணொளிகளிலும் பார்க்க முடிகிறது.

சுனில் கிருஷ்ணனுக்கு என் மனம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

காலம் இதழில் வெளியான அம்புப் படுக்கை சிறுகதைத் தொகுப்பின் விமர்சனக்கட்டுரையைக் கீழே படிக்கலாம்.

**




சுனில் கிருஷ்ணனின் - “அம்புப்படுக்கை” - சிறுகதைத் தொகுப்பு
யாவரும் பதிப்பகம் வெளியீடு

மானிடப்பூச்சிகளின் வாழ்க்கை ஒரு கனவினும் கனவாம்

பத்து கதைகள் கொண்ட சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை சிறுகதைத் தொகுப்பு “வாசுதேவன்” எனும் கதையில் தொடங்குகிறது. காலவரிசைப்படி இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளில் முதலில் எழுதப்பட்டது. ஒரு தொகுப்பில் சேர்க்கப்படும் முதல் கதைக்கு என ஒரு தனி உயிர் உண்டு என எனக்குத் தோன்றும். பள்ளிக்கூடத்தில் எல்லா கேள்விகளுக்கும் விடைதெரிந்தும்  முன்னால் வரத்துடிக்காத மாணவனும் இருப்பான். ஆனால் சிறந்தவன் என நினைப்பவன் முன்னே நிற்பான். எல்லா தொகுப்புகளிலும் இப்படி முந்தி நிற்கும் கதைகளிலும் கவிதைகளிலும் நான் ஆசிரியரைப் பார்ப்பேன். அதுவும் முதல் தொகுப்பின் முதல் கதை என்பது ஒரு பிரகடனம். ஏனோ எழுதப்பட்ட முதல் கதை எனும் நிலையைத் தாண்டி என் படைப்பின் முதல் வாசற்படி இதோ இங்கே இருக்கு. இதுதான் நான் எனும் பிரகடனம் அதில் தெரியும். எழுத்தாளன் முன்னெடுக்கப்போகும் தேடலின் முதல் அடி. வணிக நோக்கின்படி முதல் சில கதைகளின் வாசிப்புத்தன்மையைப் பொறுத்துதான் புத்தகத்தின் விற்பனை இருக்கும் எனும் விதிகளுக்குள் நான் போகவில்லை. தமிழ் இலக்கியத்தில் அப்படிப்பட்ட வணிக யுத்திகள் எடுபடாது என்றே நினைக்கிறேன்.

“வாசுதேவன்” எல்லாவிதத்திலும் சுனில் கிருஷ்ணனின் முத்திரைக் கதை. மரணம் என்பதை ஒரு ஊசலாட்டமாகவும், உயிர் இச்சையை நிரந்த்ரமாகவும் நினைக்கக்கூடிய மனப்பான்மை பற்றிய கதை. உலகத்திலேயே சிரிப்புக்கு உரியது என்ன தெரியுமா, மரணம் நிச்சயம் எனத் தெரிந்தும் மனிதன் தான் மரணமில்லாதவன் என்பதுபோலொரு பாவனையில் வாழ்வது எனும் தருமனின் சிந்தனையை ஒட்டிய கதை. வாசுதேவன், அண்டத்தில் உயிர்களை ரட்சிப்பவன். வாசுதேவன் எனும் இளைஞன் உயிர் மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும் உடலோடு நாட்களைக் கடத்துபவன். அவனது அப்பாவின் வேண்டுகோளுக்கு இணங்க சிகிச்சை கொடுக்க வரும் கதைசொல்லியும் அவனது இணங்கநண்பன் இளங்கோவும் முதலில் வேண்டாவெறுப்பாக ஆயுர்வேத உடல்பிழிசல் செய்கிறார்கள். அவர்கள் தொழில் தர்மத்துக்கு எதிரான மனோபாவம் கொண்டவனாகக் காட்டப்படும் இவர்கள் கடமையென சிகிச்சையைச் செய்கிறார்கள். உடல் சிகிச்சை மீறி மருத்துவரின் நம்பிக்கையும் நோயாளியின் மனத்திடமுமே வியாதிலிருந்து நம்மை குணப்படுத்துகின்றன. எந்தவிதமான சுரணையுமில்லாது கிடக்கும் வாசுதேவனுக்குள் கங்குபோல உயிர் இச்சை துடிக்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்களது சிகிச்சையின்மூலம் சிறு மாற்றங்களை அடைகிறான். அதே சமயம் இதற்கு நிரந்தரமான விடுதலை அல்ல என்பதும் எல்லாரும் அறிந்ததே. பிரக்ஞை ஒவ்வொரு கணத்திலும் உடல் உறைந்துபோன கணத்திலும் கிடக்கின்றது. 

ஒருவிதத்தில் மரபும் நவீனமும் இணைந்த சுனில் கிருஷ்ணனின் நடையில் நாம் எதிர்பாராத இடங்களை அடைய முடியாததும் இயல்பானதே. நவீனத்தின் எதிர்மறைப்பண்பான மரபு மீதான உதாசீனத்தை அவர் நாட்டார் கதைகளின் மூலம் கடக்கிறார். அதே சமயத்தில் மரபு மீதான எதிர்மறை நிலைப்பாடுகளைக் கவனமாகக் களைய முற்படுகிறார். அதில் அவர் முழுமையாக வெற்றியடைகிறார் எனச் சொல்ல முடியாது. உதாரணமாக காளிங்க நர்த்தனம் கதையில் வரும் யோகக்குறியீடுகள் காளிங்க நடனமாக இருப்பதும் அதுவே தலைமுறைகளை விழுங்க வரும் சாபமாக அமைவதையும் சொல்லலாம். யுகம் யுகமாகத் தொடரும் ஒரு சுழற்சியை நம்முன் காட்டும் கதை விடுதலையற்ற நிலையாக ஆகிவிடுவதும் ஒரு எதிர்மறை அம்சமே.

“பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்” மற்றும் “பேசும் பூனை” கதைகள் நவீன வாழ்வின் சிக்கல்களைப் பற்றி இரக்கமற்ற முறையில் குறிப்பிடும் கதைகள். நவீன வாழ்வு தரும் செளகரியங்கள் நமக்கு அதிக நேரத்தை அளித்திருக்கின்றது. உபரியாகக் கிடைக்கும் நேரம் நம் எண்ணங்களில் எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றது. மனித வாழ்வில் எப்போதுமில்லா உளவியல் நெருக்கடியை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். கால் இன்சு அன்பு கூட இல்லாத உலகத்தை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். இயற்கை வளங்கள் மீது அலட்சியம்,  சக மனிதனின் மீது கரிசனமற்றத்தன்மை, நாடுகளுக்கிடையே பலநிலைகளில் நெருக்கடி நிலைமைகள் என சகலமும் விரியும் அண்டத்தத்துவம் போல ஒன்றை ஒன்று விலகிச்சென்றபடி உள்ளது. இதில் கணவன் மனைவி உறவோ, மகன் தந்தை உறவோ விலக்கல்ல. “பொன் முகத்தை” கதை நம் உறவுக்குள்ளே இயங்கும் ஊசலாட்டத்தைப் பற்றியது. நடைமுறையில்  உறவுகளுக்குள் இருக்கும் நெகிழ்வுத்தன்மை நம் மன இயல்புகளோடு நெருக்கமான தொடர்புகொள்ளும் ஒன்று. கீழே பிளந்து செல்லும் வேர் மண்ணின் நெகிழ்வுத்தன்மையைப் பொருத்து தனது இயல்பை வெளிப்படுத்துவதுபோல நம் மன அமைப்பு சூழ்நிலைக்குத்தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் இயல்புடையது. தொழில்நுட்ப வளர்ச்சியினால் உறவுகளுக்குள் உருவாகும் நெருக்கங்களும் தூரங்களும் நம் காலத்தின் புதிய விதி. 

வாசுதேவன் கதையில் அவனது அக்காள் குழந்தையுடன் திரும்ப வீட்டுக்கு வந்துவிடுவது ஒரு திருப்பம் தரும் தருணம். ஒன்று - கையிலிருக்கும் உயிரை பாதுகாப்பதில் வரும் சுணக்கம் என்பதைவிட நம் கண் முன் ஒரு உயிரின் வதையைப் பார்க்கத் திராணியற்ற உள்ளத்தின் குமுறலாக அவனது அப்பா அம்மாவின் குரல் கேட்கிறது. மற்றொன்று - புதிதாக வந்திருக்கும் குழந்தைக்கு நாம் காட்டக்கூடிய வாழ்க்கை எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் எனும் சிறு மனோகிலேசம். இது ஒரு கையாலாகத்தனம் என்றாலும் நம் மதிப்பீடுகளை அவர்கள் மேல் போட்டுப்பார்க்க முடியாது என்பதே உண்மை. சதுப்பு நிலப்பகுதிகளிலும், பசுமைக்காடுகளிலும் காயல்களில் காணப்படும் பூச்சி உயிர் போராட்டங்களில் கருவறையும் பிணவறையும் ஒரே குழியாக அமைவதுதான் இயற்கை. பூச்சிகளின் வாழ்வில் இருக்கும் இந்த உண்மை ஒரு இயற்கையின் ஒரு பகுதியே.

அம்புப்படுக்கையில் ஆனாரூனா செட்டியாரின் மீதிருக்கும் மக்களின் எதிர்பார்ப்பும் அத்தகையதே. உயிர் பிழைத்திருப்பது ஒரு வரமென்றாலும் அது சில சந்தர்பங்களில் அதீத இம்சையும் கூட.  பொதுவாக மருத்துவர்கள் மரணத்துக்கும் சீக்குக்கும் பெரியளவு அசைந்துகொடுக்க மாட்டார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவற்றின் மீது ஒரு மெல்லிய தருக்கப்போர்வையைக்கொண்டு மூடியிருப்பார்கள். அந்த தருக்கம் அவர்களுக்கு அறிவியல் தந்ததாக இருக்கலாம், அல்லது பொதுவாழ்வில் அவர்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு காட்சியினால் இருக்கலாம். மருத்துவரான எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் மரணத்தைப் பற்றி எழுதும்போது அதீதமான சமநிலை கைகூடிவிடுகிறது. அதில் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை அதிகம் கலக்காமல் ஒரு இயற்கை நிகழ்வுக்கு சாட்சிமுகமாக நிற்பவனின் முகபாவனையை அவர் மேற்கொண்டுவிடுகிறார். முன்னரே சொன்னது போல, இது அவரே திட்டமிடப்பட்டு அமைத்த பாதையில் முதலிலிருந்து நடக்கப்பழகுவது போன்ற உணர்வினைத் தந்துவிடுகிறது. எங்கே குண்டுங்குழியுமாக இருக்கும் எனத் தெரிந்து அதற்கு ஏற்றார்போல வண்டியை ஓட்டுகிறார். சகஜமான மொழியாக இவை அமைய உதவினாலும், புனைவு எனும் மாயப்புதிரை சிக்கல்படுத்துவதும் அவிழ்ப்பதும் கெட்டித்த பாதையில் பயணிக்கிறது.

குருதிச்சோறு - இத்தொகுப்பின் முக்கியமான கதையாக இதை ஆக்குவது பாலாயி எனும் கதாபாத்திரத்தின் உருவாக்கத்தில். தெய்வங்கள் உருவாகும் கதையே குருதிச்சோறு. குல தெய்வம், சிறு கூட்டத்தினருக்கான தெய்வம் என்றும் அடிப்படையான உணர்வுகளின் உருவகமாகவோ, குலத் தொடர்ச்சிக்குத் தேவையானவற்றை வழங்கும் சாமியாகவோ அமையும். இங்கு குருதிச்சோறு எனும் குல தெய்வ சடங்கு ஒன்று அரங்கேறுகிறது. குருதியில் வடித்த சோற்றை காற்றில் ஏறி நிற்கும் மூதன்னை ஒருத்தி கபளீகரம் செய்யும் காட்சியுடன் கதை தொடங்குகிறது. அவளது பசி அடங்குவதில்லை. பாலாயி என்பவள் அன்னத்தை வழங்கும் அன்னையாக மாறி நின்று அழியச்செல்லும் கூட்டத்தைக் காத்து நிற்பவளாததால் மூதன்னையாக மாறும் சித்திரத்தைக் காட்டும் கதை. குல தெய்வ வழிபாட்டில் தொன்மங்களின் உருவாக்கம் ஒரு புது உலகை சிருஷ்டித்துக் காட்டத் துடிக்கும் கலைஞனின் வழி. இன்றைய பின் தொன்ம காலத்தில் குருதிச்சோறு போன்ற மறு உருவாக்கங்கள் நமது மூதாதையரின் அடிப்படை கேள்விகளை நோக்கி நம் சிந்தனையைத் திருப்பும் முயற்சி. ஒருவிதத்தில் நமக்கும் அவர்களுக்குமான இடைவெளி தொட்டுவிடும் தூரத்தில் உள்ளதைக் காட்டுகிறது.

திமிங்கலம் கதை ஒரு அறிவியல் புனைவுச்சித்திரத்தைக் காட்டும் முயற்சி. apocalypse சித்திரம் இல்லாத சமூகங்களே கிடையாது. மனிதனின் நனவிலிகளில் உயிர் நீட்டிப்பைத் தடுக்கும் சகலவிதமான சித்திரங்களும் சுவரோவியம் போலத் தீட்டப்பட்டிருக்கின்றன. அனுபவமில்லாத அனுபவத்தில் அவை ஒளித்துவைக்கப்பட்டிருக்கின்றன. இக்கதை உலகை அழிக்க வந்திருக்கும் இரு பெரு நிகழ்வுகளின் பின்னணியில் சமூக மாற்றத்தினை காட்டுகிறது. மனித அழிவை நிறுத்தும் பல முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபடும் சமயம். அப்படி மனிதனை அழிவிலிருந்து முழுமையாகக் காக்க முடியுமா எனும் கேள்வி நோக்கிச் செல்லும் பயணம் இக்கதை.

ஆரோகணம் ஒரு சிறு மனிதனின் மகத்தானப் பயணம் பற்றியது. திட்டமிட்ட இலக்குகளை அடைவதில் வெற்றியைப் பெறுவதில் இருக்கும் களிப்பு பற்றியதல்ல. மனித உருவெடுத்த யாருமே இதுவரை செல்லாத பாதையில் செல்லத் துணியும் ஒரு மனிதனின் கதை. மாமனிதன் என வரலாற்றால் பொறிக்கப்பட்டு மனித மனதின சாத்தியங்களை சோதனை செய்துபார்த்தவர். வாழ்வில் எதிர்படும் சங்கடங்களையும், தடைகளையும் எதிர்த்து ஒரு பாதை உருவாக்கக் கைகொள்ளும் விளக்கை வழிநடத்துவது எது? தனக்கு உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் எனும் எளிய சூத்திரத்தை சோதித்துப்பார்த்து அது அத்தனை சுலபமல்ல என புரியவைத்தவர். ஆனால் ஒவ்வொரு அடியும் பின்னால் சுழித்து சென்ற பதையின் மீது பாவிக்கப்பட்ட திடமான கற்பாதைகள் அல்ல. தேவைக்கேற்ப முந்தியும் பிந்தியும் மாற்றங்களை ஏற்றுக்கொண்டு மனதின் வழிநடத்தலுக்கு ஏற்ப முன் செல்ல்லும் பயணம். காந்தியுனுடனே வந்த நாய் அவரது மனசாட்சி மட்டுமே. கடைசிவரை சற்றே பின்னே இரைக்க ஓடிவந்த மனசாட்சி. காந்தியும் காந்தியமும் முன் சென்றபடியே உள்ளனர்.

சுனில் கிருஷ்ணன் எழுத்தில் மேம்படுத்தக்கூடிய அம்சங்கள் சில உள்ளன. 

எழுதப்பட்ட கதைகளில் இருக்கும் அதீத ஒழுங்கு. மொழியின் ஒழுங்கு என்பதைக் குறையாகச் சொல்லவில்லை. மாறாக சிறுகதை சுட்டி நிற்கும் படிமங்களும், கனவுகளாக வரும் மன ஓட்டங்களும் திட்டவட்டமான நோக்கத்தோடு அமைந்துவிட்டதை அதீத ஒழுங்கு என இங்கு குறிப்பிடுகிறேன். உதாரணத்துக்கு, காளிங்க நடனம் பகுதியின் முடிவில் வரும் விவரணைகளைக் குறிப்பிடலாம். புனைவின் மர்மத்தன்மையைக் கூட்டும் விதமான எழுதப்பட்ட இந்தப் பகுதி, ஆசிரியர் செல்ல வேண்டி உத்தேசித்த திசையில் ஒழுங்கு மீறாமல் செல்கிறது. முன்னேற்பாடுகளின்றி புனைவு எழுதக்கூடாதா எனும் கேள்விக்கு இங்கு இடமில்லை. கனவுகளும், படிமங்களும் புனைவின் நிழலாக அமைந்திருப்பது அவற்றின் மாயத்தன்மைக்கு மெருகேற்றும் சாத்தியத்தைத் தொட்டுப்பார்ப்பதற்காகத்தான். அவை புனைவு செல்லும் திசைக்கு எதிர்திசையில் கூட இருக்கலாம் என்பதே அவற்றின் விசேஷம். கச்சிதமான அமைப்பில் சிறு விலகலுக்கான வெளி. வாசுதேவன் கதையில் இது அமைந்துவிடுகிறது. வாசுதேவன் அழிவற்ற பரம்பொருள் எனும் வரும் இடத்தில் இப்புனைவின் சாத்தியத்தை நாம் மறு பார்வை பார்க்கிறோம்.

ஒவ்வொரு கதையிலும் ஒரு மொழி நடை நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கிறது. பொதுவான நடையில் வரும் கதைகளில் இருக்கும் நிதானம் நாட்டாரியல் கதைகளைப் பேசும் காளிங்க நர்த்தனம் கதையில் இல்லை. இதையே வேறு விதங்களில் சொல்லப்போனால், யதார்த்தக் கதையின் மொழியிலிருந்து முற்றிலும் விலகிய ஒரு நடையைக் கொண்டு மாயக்கதைகளை எழுதும்போது படிமங்கள் மேலும் கூர்மையான அர்த்தங்களை அடைகின்றன. அதை அடையும் முயற்சியை அவர் அடுத்தடுத்த கதைகளில் அடைவார் என நம்புகிறேன்.

நிகழ்வுகளை படிமங்களாக மாற்றி குறிப்பிட்ட சூழலிலிருந்து பிரித்தெடுத்து அடிப்படை உணர்வுகள் நோக்கி நகரும் தன்மை. ஆரோகணம் கதையில் இந்த நோக்கு இல்லாததன் குறையை உணர முடியும். வாழ்க்கையின் அடிப்படை விழுமியமான மெய்ம்மையை தேடிச்சென்ற இருவேறு காலகட்டத்தில் வாழ்ந்த நாயகர்களை இணைக்கும் கதை. தருமரின் வேதாந்தக் கதையில் காந்தியைப் பொருந்திப்பார்க்கும் கணம். தர்மரின் குழப்பங்களை காந்தியின் கேள்விகள் சென்று தொடாமல் நின்றுவிட்டது. நிகழ்வுகளாக மட்டுமே நின்றுவிட்டதில் மெய்ம்மையைத் தேடும் பயணம் ஒரு படிமமாக மாறவில்லை.

முதல் தொகுதியாக அம்புப்படுக்கையைப் பார்க்கும்போது இளம் எழுத்தாளரின் ஒரு தனித்துவமானத் தொடக்கத்தைப் பார்க்கிறேன். பின்நவீனத்துவ முயற்சிகளும், ஓயாத காம நிழல் போராட்டங்களாகவும், நலிந்தவர்களை முன்னிறுத்துவதான போலியான பாவனைகளும் மலிந்து போன இன்றைய புது எழுத்துகளிடையே மனித வாழ்வைச் சூழ்ந்திருக்கும் அடிப்படை உணர்வுகளை மையமாகக் கொண்டு எழுத வந்திருக்கிறார். சோதனை முயற்சிகளாலும் மேல்பூச்சு தளும்பல்களாலும் எழுத்தின் திசையை மாற்றாதிருக்கவும், புது திசைகளில் தனது ஆழமான பார்வையை கொண்டு நித்தியத் தேடல்களில் திளைத்திருக்கவும் இளம் எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனை வாழ்த்துகிறேன்."