Thursday, June 29, 2017

தண்டி யாத்திரை- ஏ.கோபண்ணா

(ஆம்னிபஸ் பதிவு)

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவருடைய ‘இந்திய சுதந்திர போர்’ எனும் நூலில்  காந்தியின் தண்டி யாத்திரை குறித்து இவ்வாறு எழுதுகிறார்

“நெப்போலியன் எல்பாவிலிருந்து திரும்பியவுடன், பாரிஸ் நகர் நோக்கி நடந்து சென்ற காட்சியுடனோ , அல்லது முசோலினி இத்தாலியில் அரசியல் ஆதிக்கத்தை கைப்பற்றுவதற்காக ரோம் நோக்கிச் சென்ற காட்சியுடனோதான் மகாத்மாவின் தண்டி யாத்திரையை ஒப்பிட வேண்டும்”.

 ஏப்ரல் 6 , 1930. தொடுவானம் வரை பரந்து விரியும் ஆழ்கடல் முகட்டில்  காந்தி, அங்கு குழுமியிருக்கும் பெரும் மக்கள் திரளை நோக்கி நிற்கிறார். அவரது உள்ளத்தில் ஆழ்கடலின் அமைதி,  குழுமியிருக்கும் மக்களின் அலையோசையை ஒத்த ஆர்ப்பரிப்புகளுக்கு இடையே  மூடிய தன் கைவிரல்களைத் திறந்து அந்த வெள்ளை நிற உப்பை உயர்த்திக் காட்டுகிறார். இந்திய சுதந்திர போராட்டத்தின் மகத்தான மற்றுமொரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது.



1930 ஆம் ஆண்டு காந்தியின் தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்ரகத்தின் பவள விழாவை (75 ஆண்டுகள் நிறைவடைவதை) முன்னிட்டு  நவ இந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நூல், "தண்டி யாத்திரை". ஏ.கோபண்ணா அவர்களால் எழுதப்பட்ட 61 பக்கங்கள் கொண்ட இந்த சிறிய நூல் தண்டியாத்திரையை பற்றிய முக்கியமான தகவல்களையும் அந்த போராட்டத்தின் பின்புலத்தையும் எளிமையாக நமக்கு அறிமுகம் செய்கிறது. தண்டி யாத்திரை மட்டுமின்றி, வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் மற்றும் சென்னை உப்பு சத்தியாகிரகம் பற்றிய பல புதிய தகவல்களையும் நமக்கு எளிமையாக தொகுத்து அளிக்கிறது இந்த நூல்.

இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் உப்பு. அதே சமயம் சாதாரண மக்கள்கூட இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க முடியும் எனும் அளவிற்கு இதன் போராட்ட வடிவம் எளிமையானது. யங் இந்தியாவில் தொடர்ந்து உப்பு வரியை பற்றியும் அதை மீறுவதை பற்றியும் எழுதுகிறார். இந்த அடாவடியான வரி திரும்பப் பெறப்படவில்லை என்றால் இன்னும் ஒன்பது நாட்களில் மெய்யான சத்தியாகிரக போராட்டம் தொடங்கும் என்று அன்றைய வைஸ்ராயை  பகிரங்கமாக எச்சரிக்கிறார்.

ஆங்கிலேய அரசாங்கம் இந்தப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தது. இவரை கைது செய்தாலும் பிரச்சனை, கைது செய்யவில்லை என்றாலும் பிரச்சனை எனும் சூழலில். நடப்பதை உன்னிப்பாக கவனித்து வந்தது. மார்ச் 11 ல் அகமதாபாதில்  தொடங்கி ஏப்ரல் 6 ல் தண்டியில் முடிவடைந்த இந்த 24 நாட்கள் நீண்ட யாத்திரையில் மொத்தம் 241 கிலோமீட்டர்களை காந்தியும் அவரது எண்பது தொண்டர்களும் நடந்தே கடந்தார்கள். காந்தி நினைத்திருந்தால் ரயிலிலோ மோட்டாரிலோ பயணித்து, ஏதோ ஒரு கடற்கரையை அடைந்து இந்தச் சட்டத்தை மீறியிருக்கலாம் ஆனால் அதை ஒரு நெடிய பயணமாக, ஒரு விரதமாக மாற்றி தேசத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார். மிகப்பெரிய மக்கள் எழுச்சியை உருவாக்கினார். இந்த பயணத்தின்போது காந்தியின் அறைகூவலுக்கு செவி மடுத்து ஆங்கிலேய அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் பணிகளைத் துறந்து போராட்டக் களத்தில் ஐக்கியமாகினர் என்பதைக் கோடிட்டு காட்டுகிறார் கோபண்ணா.

 கோபண்ணா அவருடைய இந்த நூலில் பல புதிய தகவல்களை அளிக்கிறார். காந்தியுடன் சத்தியாகிரகத்தில் பங்குகொண்டவர்களில் இரண்டு இஸ்லாமியர்களும் ஒரு கிறித்தவரும் அடங்குவர். நேபாளத்தில் இருந்து வந்த கரக் பகதூர் சிங் கொலை குற்றத்திற்காக சிறை சென்றவர். அவரும் இந்த குழுவில் இணைந்து நடந்தார். அதற்கு எதிராக விமரிசனங்கள் எழுந்தபோது ‘ எந்த மன்னிப்பை பகதூர் சிங் சமூகத்திடம் எதிர்பார்க்கிராரோ அதை சமூகம் அவருக்கு அளிக்க வேண்டும்’ என்றார் காந்தி, அவரது மகன் மனி லால், பேரன் காந்தி லால் உட்பட   காந்தியின் குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் பங்கு பெரும் சத்தியாகிரகிகள் கடுமையான உணவு கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார். ஆனால் சென்ற இடங்களில் எல்லாம் உணவும் உபசாரமும் பலமாகவே இருந்தன. புரோச் எனும் இடத்தை வந்தடைந்தபோது மஜூம்தாரும் டாக்டர்.சந்துலால் தேசாயும் சத்தியாகிரகிகளுக்கு ஐஸ் க்ரீம் வழங்கிய விஷயத்தை அறிந்த காந்தி அவர்களைக் கடித்து கொண்டார். அதற்கு பிராயச்சித்தமாக யாத்திரை முடியும்வரை எலுமிச்சம் சாரும் பேரீச்சம் பழங்களும், ஆட்டுப்பாலும்யும் மட்டுமே உணவாக உட்கொள்வது என்று காந்தி முடிவெடுத்தார் எனும் செய்தியைப் பதிவு செய்கிறார் கோபண்ணா.

 61 வயதான காந்தியின் மூட்டுக்கள் கடுமையாக வலித்த காரணத்தால் பயணத்தைத் தொடர முடியாமல் போனால் என்னாவது என்பதற்காக, எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு குதிரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் யாத்திரை தொடங்கிய இரண்டாவது நாளிலேயே திருப்பி அனுப்பிவிட்டார் காந்தி.. இரவு கடைசியாக உறங்கி விடியலில் முதல் ஆளாகத் தயாராகி நின்றார் அவர். மூட்டு வலியின் காரணமாக காலை யாத்திரை தொடங்கியவுடன் சிறிது தூரம் இரு சத்தியாகிரகிகளின் தோள்களில் சாய்ந்தபடியே கடந்து வருவார். அதன் பின்னர் தன் தடியைத் துணையாக கொண்டு மீதி தூரத்தை நடந்தே  கடப்பார்.   

இப்படியே 241 கிலோமீட்டர்கள் நடைப்பயணம் செய்து தண்டியை வந்தடைந்த காந்தி “ நாளை உப்புடன் திரும்பி வருவேன், அல்லது என்னுடல் கடலில் பிணமாக மிதக்கும்” என உணர்ச்சி பொங்க உரையாற்றினார். தண்டியில் காந்தி பற்ற வைத்த அந்த உணர்வு அனலாக இந்தியா முழுவதும் கனன்று எரிந்தது.

 தமிழகத்தில் வேதாரண்யத்திலும் சென்னையிலும் நடந்த உப்பு சத்தியாகிரகம் பற்றிய குறிப்புகளையும் அளிக்கிறார் கோபண்ணா.  76 வயதான நாவிதர் வயிரப்பன் தியாகிகளுக்கும் தேசியவாதிகளுக்கு மட்டுமே சவரம் செய்வது என்றும்  ஆங்கிலேயர்களுக்கும், போலீசாருக்கும் அவர்களுக்கு துணை நிற்கும் இந்தியர்களுக்கும் சவரம் செய்வதில்லை எனும் கொள்கையை உறுதியாக கடைபிடித்தார். ஒருமுறை வரிசையில் வந்தமர்ந்த காவலருக்கு சவரம் செய்யத் தொடங்கிய பின்னர் அவர் ஒரு போலீஸ்காரர் எனும் தகவல் வயிரப்பனுக்குத் தெரியவருகிறது. போலீசாரின் மிரட்டலுக்கு அடிபணியாமல் தன் சவரக் கத்தியை அப்படியே போட்டுவிட்டு சவரத்தைப் பாதியில் விட்டுச் செல்கிறார். போலீசார் அவரை அழைத்து விசாரிக்கும்போது. ‘என் கையை வெட்டினாலும் போலீசாருக்கு வேலை செய்யமாட்டேன்’ என வயிரப்பன் உறுதியுடன் தன் எதிர்ப்பை வெளிபடுத்தியதன் விளைவாக,  ராஜாஜி, வேதரத்தினம் பிள்ளைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உப்புசத்தியாகிரக போராட்ட காலத்தில் ஆறு மாத கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கும் பேறு வயிரப்பனுக்கும் வாய்க்கிறது.

காவலர் வரும் வரை காத்திருந்து கைதான ராஜாஜி, தன் சுமையைப் பிறர் சுமந்து வந்ததைக் கடித்து கொண்ட காந்தி, என பல புதிய தகவல்களை தன் போக்கில் சொல்லி செல்கிறது இந்தப் புத்தகம். அளவில் சிறியது என்றாலும் இந்நூல் இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கியமான சகாப்தத்தின் வரலாற்றை எளிமையாக நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. இந்த நூலை வாசிக்கும் போது லூயி பிஷர் அவருடைய நூலில் காந்தியின் இந்த தண்டி உப்பு சத்தியாகிரகத்தை பற்றி இவ்வாறு குறிப்பிடுவது நினைவுக்கு வருகிறது:

“ஒரு பிடி உப்பைக் கொண்டு வல்லமை மிக்க  ஒரு அரசாங்கத்தை எதிர்க்க  ஒரு கலைஞனுடைய திறமையும் கண்ணியமும் கற்பனைத் திறமும் காந்திக்கு இருந்திருக்க வேண்டும்”\

ஆம் அப்படியின்றி வேறெப்படி இருக்க முடியும்?


தண்டி யாத்திரை 
ஏ.கோபண்ணா
உள்ளடக்கம்- வரலாறு, அபுனைவு 

நவ இந்தியா பதிப்பகம் 
9, 2 வது பிரதான சாலை,
வெங்கீஸ்வரர்  நகர் 
வட பழனி 
சென்னை- 26

Wednesday, June 28, 2017

மகாத்மா காந்தி : ஒரு உன்னத வாழ்க்கையின் சிறு வரலாறு வின்சென்ட் ஷீன்

(ஆம்னிபஸ் பதிவு)

அண்மையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் உள்ள பிரபல கல்லூரியில் சிறப்புரை ஆற்ற ஒரு சிறப்பு பேச்சாளர் அழைக்கப்பட்டிருந்தார். நவீன காலகட்டத்தில் காந்திய சிந்தனையை தமிழக சூழலில் பல தளங்களில் கொண்டு செல்லும் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் அவர். நானும் சென்றிருந்தேன். சிறப்பான அந்த உரை முடிந்த பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. ஒரு கல்லூரி மாணவன் எழுந்து அந்த சிறப்பு பேச்சாளரிடம், “ காந்தி, தன்னுடைய பனியா இனம் வளம் பெற வேண்டும் என்பதற்காக குறுகிய நோக்கில் அனைவரையும் நூல் நூற்கச் சொன்னார் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது, அப்படிச் சொல்லும் ஒரு புத்தகத்தை நான் வாசித்திருக்கிறேன் , இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். இந்த கேள்வி என்னை திடுக்கிட செய்தது.  நம் வரலாற்று உணர்வையும் புரிதலையும் எண்ணி நம்மை நாமே மெச்சிகொள்ளத்தான் வேண்டும். அந்த மாணவனை நான் குற்றம் சொல்ல மாட்டேன், எதிர்மறையாகவேணும் காந்தி குறித்து ஏதேனும் ஒன்றை வாசித்திருக்கிறான், அதைப் பற்றிய ஐயத்தை அவனால் எழுப்ப முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை என்னுடைய நிலைமை அதைவிட மோசம் என்றுதான் நினைத்துக் கொள்கிறேன்.




காந்தியின் வாழ்க்கை பதிவு செய்யப்பட்ட அளவிற்கு இருபதாம் நூற்றாண்டின் வேறெந்த மனிதரின் வாழ்வும் பதிவு செய்யப்பட்டதில்லை என்று எனக்கு தோன்றுவதுண்டு. இதற்கு மிக முக்கியமான காரணம், தன்னுடைய வாழ்வை முழுமையாக அதன் அத்தனை கீழ்மைகளுடனும் நம்முன் பரப்பிக் காட்டும் துணிவு காந்திக்கு இருந்ததுதான்.

காந்தியின் வாழ்க்கை பற்றிய பதிவுகள் சிதறிக்கிடக்கும் உலோக உதிரி பாகங்களைப் போல், அதை வைத்து ஒரு இயந்திர துப்பாக்கியையும் நாம் உருவாக்கலாம், அல்லது நமது இலக்கை நோக்கி பயணிக்க ஏதுவான வாகனத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம். நமக்குத் தேவையான துண்டு நிகழ்வுகளைக் கட்டமைத்து, அவரை கையை பிசைந்துக்கொண்டு மிரட்டலாக சிரிக்கும் வில்லனாக சித்தரிக்கலாம், அல்லது அத்தனை வில்லன்களையும் ஒரேயடியில் துவம்சம் செய்யும் புரட்சி நாயகனாகவும் சித்தரிக்கலாம். இத்தனை வாழ்க்கை வரலாறுகள் அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ளன, ஆனால் ஒரு எளிய மனப்பதிவு மூலமே பெரும்பாலான இந்தியர்கள் அவைகளை பொருட்படுத்தாமல் தாண்டிச் சென்றுவிடுகிறார்கள். 

காந்தியின் சரிதைகள் எனக்கு அலுப்பு தட்டுவதே இல்லை  ஒவ்வொரு சரிதையும் ஏதோ ஒருவகையில் காந்தியைப் புதிய கோணத்தில் காட்டுவதாகவே இருக்கிறது. அவ்வகையில் அமெரிக்க பத்திரிக்கையாளர் வின்சென்ட் ஷீன் எழுதி, சிவசாமியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வ.வு.சி நூலக வெளியீடான மகாத்மா காந்தியின் சரிதை மிக முக்கியமான நூலாகும். ஷீன் , ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளர், பலருடைய வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர். காந்தியின் இறுதி காலத்தில் அவருடன் காலம் கழித்தவர். காந்தியின் மரண தருணத்தின் நேரடி சாட்சியாக இருந்தவர்.

இன்றைய நூல் அறிமுகம், ஒட்டுமொத்தமாக காந்தியின் வாழ்க்கையை பற்றிய பதிவாக இல்லாமல், என்னுடைய பார்வையில் ஷீன் முன்வைக்கும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பார்வைகளைக்கொண்டு காந்தியின் ஆளுமையை புரிந்துகொள்ள முயல்வதே இந்த கட்டுரையின் நோக்கம். ஷீனுக்கு உணர்ச்சிகரமான நடை எளிதில் கைகூடியிருக்கிறது என்பதை நிச்சயம் சொல்ல வேண்டும். மொழிபெயர்ப்பாளர் சிவசாமியும் அதே நடையை தன்னுடைய எழுத்தில் ஓரளவிற்கு வெற்றிகரமாக கொணர்ந்திருக்கிறார் என்றே எண்ணுகிறேன். 


வின்சென்ட் ஷீன் 


முதல் அத்தியாயத்தில் , ‘இந்த இருபதாம் நூற்றாண்டில் பொதுமக்களின் மகானாக ஆகும் அந்த இணையற்ற துர்பாக்கியம் அவருக்குக் கிட்டியது’ என்றே தொடங்குகிறார் ஷீன். காந்தி வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவர் மீது கட்டி எழுப்பப்பட்ட தொன்மக்கதைகளை பற்றி சுவாரசியமாக குறிப்பிடுகிறார் ஷீன். காந்தியின் புகைப்படம் பொருந்திய டாலர் ஒன்றை அணிந்திருந்த வங்காளி ஒருவர் காந்தியை சந்திக்க வருகிறார், தனக்கு சில வருடங்களாக பார்ஸ்வ வாய்வு இருந்து அவதியுற்றதாகவும், அந்த டாலரை அணிந்து தினமும் காந்தியின் நாமத்தை செபித்துக் கொண்டிருந்ததால் அந்த நோயிலிருந்து மீண்டு எழுந்ததாகவும் காந்தியிடமே கூறுகிறார் அவர். உங்களை குணமாக்கியது கடவுளே அன்றி காந்தி அல்ல என்று மறுக்கிறார் காந்தி. காந்தி பயணித்துக் கொண்டிருந்த ரயில் பெட்டியில் இருந்து தலைக்குப்புற கீழே விழுகிறார் ஒருவர். அவர் இறந்திருப்பார் என்று அனவைரும் அஞ்சுகிறார்கள், ஆனால்  சிரித்துக்கொண்டே சிறு காயம் கூட இன்றி எழுந்து நடந்து வருகிறார் அவர். இதற்குக் காரணம் காந்தியின் அருகாமை என்று நம்பப்பட்டது. இறந்த குழந்தைக்கு காந்தி உயிர் கொடுத்தார் என்றார்கள் காந்தி கொடுத்தது என்னவோ எனிமா தான்.  ஆம் காந்தி சொல்வதுப்போல் “மகாத்மாக்களின் மனத்துயரின் ஆழம் மகாத்மாக்களுக்கு மட்டுமே தெரியும்.”

இந்த மகாத்மா எனும் சட்டகம் அவருக்கு நன்மை செய்ததா இல்லையா என்பது மிக சிக்கலான கேள்வி. அவரை அப்படி அழைப்பதில் அவருக்கு விருப்பமில்லைதான் எனினும். மக்கள் சக்தி ஒன்று திரள நிச்சயம் அந்த சட்டகம் அன்றைய சூழலில் உதவியது என்பதையும் மறுக்க முடியாது.  காந்தி தோட்டி வேலை உட்பட அனேக வேலைகளைத் தானே செய்தாலும், அவை எவர் கண்களையும் உறுத்தியதில்லை, ஏனெனில் அவர் மகான், மகான்கள் காலகாலமாக அப்படித்தான் இருந்திருக்கிறார்கள், மகான்கள் வணங்கப்பட வேண்டுமே அன்றி பின்பற்றப்பட வேண்டியதில்லை என்பதே மக்களின் மனோபாவமாக இருந்திருக்கிறது. 

மகாத்மாவாகவே இருந்தாலும், அவருடைய அத்தனை செயல்பாடுகளும் மக்கள் ஆதரவை பெறவில்லை. சாதியை பற்றியும் தீண்டாமை பற்றியும் சமஸ்தான ராஜாக்கள் தொடங்கி காங்கிரஸ் தொண்டர்கள் வரை முழங்கிக்கொண்டே தானிருந்தனர், ஆனால் யாரும் ஒரு தீண்டத்தகாதவருடன் சமமாக அமர்ந்து உணவை பகிர்ந்துண்ண தயாராக இல்லை. காந்தி சபர்மதி ஆசிரமத்தில் அதைச் செய்தார். அவர் ஆசிரமத்திற்கு நிதியுதவி அளித்துக்கொண்டிருந்த ஜாதி இந்துக்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேரிட்டது. நிதியுதவி நிறுத்தப்பட்டது. காந்தி இந்த சூழலில் ஆற்றிய எதிர்வினை அபாரமானது, அந்த ஒரு எண்ணமே சராசரியிலிருந்து அவர் மாறுபட்டவர் என்பதைப் பறைசாற்றுவதாக இருந்தது எனலாம், தனது ஆசிரமத்தையே தீண்டத்தகாதவர்கள் வாழ்ந்த சேரிக்கு மாற்ற யத்தனித்தார் காந்தி. யாரோ முகமறியாத முகமதியர் ஆசிரமத்திற்கு நிதியளிக்க முன்வந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஷீன் காந்தியின் மிக முக்கியமான அணுகுமுறையை பற்றி பேசுகிறார், காந்தி அடிப்படையில் தன்னுடைய உள்ளுணர்வின் தடத்தைப் பின்பற்றி நடப்பவர். அவர் ஆதர்சமாக கொண்ட கீதை, தால்ஸ்தாய், ரஸ்கின் என ஒவ்வொன்றுமே ஏற்கனவே அவர் கொண்டிருந்த நம்பிக்கைகளை ஆழமாக்குவதாகவே இருந்தன. அவரது நம்பிக்கைக்கான ஆதாரங்களை தேடி சேகரித்து வலுபடுத்திக்கொண்டார் என்று.

வேறு பல நிலைப்பாடுகள் காலப்போக்கில் மாறியதுப் போல், ராணுவம் மற்றும் காவல் துறை பற்றிய பார்வையும் காந்திக்கு மாறியதாக சொல்கிறார் ஷீன். காந்தியின் மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் காந்தி தன்னிடம் ‘பலமான ராணுவமும் போலீசும் இல்லாமல் அரசாங்கம் நீடிக்க முடியாது’ என்று தெரிவித்ததாக சொல்கிறார். அன்றைய மதக் கலவரங்கள், உயிர் சேதங்கள் அவரை வெகுவாக பாதித்தது. ராணுவம் மற்றும் காவல்துறை போன்ற  கண்காணிப்பு அமைப்புகளின் முக்கியத்துவத்தை பற்றி அவரை சிந்திக்க செய்திருக்கக்கூடும்.  

காந்தியின் மிக முக்கியமான தவறு என ஷீன் கூறுவது விவாதத்திற்கு உரியது, தன்னைப் போன்ற சாதாரண பிறவியால் பல ஒழுக்கங்களைக் கடைபிடித்து சாதிக்க முடியும் எனும் போது பிற அனைவராலும் தன்னைக் காட்டிலும் சிறப்பாகவோ அல்லது குறைந்தது தன்னளவிலோ சாதிக்க முடியும் என்று மண்ணில் வாழ்ந்த அனேக மகான்களைப் போல் அவரும் தவறாக கணித்தார் என்கிறார் ஷீன். டால்ஸ்டாய் ஒரு இலக்கியவாதியாக பல விஷயங்களை எழுதினாரே ஒழிய அவைகளை தன்னுடைய தனிவாழ்வில் அவர் கடைபிடித்ததில்லை என்பது அவருக்கு உறைக்கவே இல்லை என்கிறார். காந்தி அவருடைய நெருங்கிய சீடர்களை வேண்டுமானால் இப்படி அணுகியிருக்கக் கூடும், ஆனால் மக்கள் திரளை பற்றியும், பெருந்திரள் மக்களின் மனோபாவம் பற்றியும் உலகின் பிற தலைவர்களைக் காட்டிலும் அதிகமான புரிதல் காந்திக்கு இருந்தது என்றே நம்புகிறேன். 

ஷீன் காந்தியிடம் இருந்த அபாரமான நோயெதிர்ப்பு சக்தியைப் பற்றியும் குறிப்பிடுகிறார். தென்னாப்ரிக்காவில் கடுமையான கருப்பு  பிளேக் பரவிய காலத்தில் சுரங்கத் தொழிலாளர்களை கவனித்துக் கொண்டார் அவர். அவர்களை கவனிக்க நியமிக்கப்பட்ட பெண் நர்சுக்கு நோய் தொற்று பரவி விடுமோ என்று அஞ்சி ஓரிரு நாட்களில் திரும்ப அனுப்பினார், ஆனால் அவரும் நோய் பீடித்து ஓரிரு நாட்களில் மரணித்தார். சுகாதாரம் குன்றிய, அசுத்தமான இடங்களிலும், நோயாளிகளுக்கும் இடையே காந்தி தன் வாழ்வின் பெரும் பகுதியை கழித்தாலும் அவரை பெரும் நோய் தொற்றுகள் ஏதும் பாதித்ததில்லை என்பது ஆச்சரியமானது. ஒருமுறை நுரையீரல் பாதிக்கப்படுகிறது, குடல்வால் அழற்சி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆகாகான் சிறைசாலையில் மலேரியாவால் பீடிக்கப்பட்டார். அவருடைய நீண்ட வாழ்வையும், வாழ்ந்த சூழலையும் கணக்கில் கொண்டால் இது ஒன்றுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சிறைசாலையில் குடல்வால் அழற்சி ஏற்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அறுவை சிகிச்சையில் மரணம் நேரிட்டால் அதை பொருட்டு கிளர்ச்சியில் ஈடுபடக்கூடாது என்று ஆங்கிலேய அதிகாரிகள் பதறி சென்று காந்தியிடம் எழுதிவாங்கிக்கொண்டார்கள் என்கிறார் ஷீன்.

அடிப்படையில் காந்தி உள்முக ஆளுமை கொண்டவர் (introvert) இங்கிலாந்திலும் , பின்னர் இந்தியா வந்த புதிதிலும் அவர் பிறர் முன் பேசவே கூச்ச்சப்படுபவர்தான், தென்னாப்ரிக்காவில் அவரடைந்த மாற்றங்கள் நிச்சயம் அபாரமானவை. காந்தி வாதாடிய எழுபது வழக்குகளில், ஒன்றில் மட்டும்தான் தோற்றார் என்கிறார் ஷீன். காந்தி போராட்ட களத்திற்கு தயார்படுத்தும் முன்பு, அந்த போராட்டத்தில் பங்குபெறுவதால் நேரும் அதிகபட்ச இழப்புக்கான சாத்தியக்கூறுகளை விளக்கி புரியவைத்து அவர்களின் பூரண சம்மதத்துடன்தான் போராட்டத்தில் அவர்களை இணைத்துக் கொண்டார் என்பதையும் ஷீன் சுட்டிக்காட்டுகிறார்.    

காந்தி தொடர்ந்து எதிர் தரப்பின் மனசாட்சியுடன் உரையாடிக்கொண்டே இருந்தார். கொஞ்சம் குறும்பு நிறைந்த கோட்டி கிழவர்தான் இந்த காந்தி, தன்னை உளவு பார்க்க வந்த உளவு துறை போலீசாரை உபசரித்து நட்பாக்கிக்கொண்டது, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, தான் செய்தது உங்கள் சட்டப்படி மாபெரும் குற்றம்தான் என ஒப்புக்கொண்டு அதற்கு அதிகபட்ச தண்டனையை வழங்குமாறு கேட்டு நீதிபதியையே குழப்புவது, இந்தியாவில் வைஸ்ராயாக இருந்த லார்ட் ரீடிங், வேலிங்டன், இர்வின், மவுண்ட்பேட்டன் என அனேக ஆங்கிலேய அதிகாரிகளின் நன்மதிப்பையும் நட்பையும் சம்பாதித்தது என எதிர்த்தரப்பை தொடர்ந்து மரியாதையுடனே நடத்தி வந்திருக்கிறார் காந்தி.  அதேபோல் ரூஸ்வெல்ட், இந்தியா மீது எடுத்துக்கொண்ட அக்கறை பற்றியும், தொடர்ந்து இந்திய விடுதலை குறித்து சர்ச்சிலுக்கு ஏற்படுத்திய நிர்பந்தம் பற்றியும் ஷீன் பதிவு செய்துள்ளார், இந்த செய்தி எனக்கு புதிதாக இருந்தது. ஷீன், பகத் சிங் பிரச்சனை பற்றியோ அல்லது காந்தியின் பாலியல் சோதனைகள் பற்றியோ ஒருவரிக்கூட குறிப்பிடவில்லை என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.

பொதுவாக காந்திக்கு கலை இலக்கிய ஆர்வம் குறைவு என்று சொல்லப்படுவதுண்டு. வட்டமேசை மாநாடு முடித்து ஊர் திரும்பும் பொழுது ரோமைன் ரோலாந்தை முதன்முதலாக சந்திக்கிறார் காந்தி, ரோலாந்தை தனக்காக பியானோ வாசிக்கச் சொல்லி கேட்கிறார், அவரும் மகிழ்ந்து பீத்தோவனின் அந்தாந்தே எனும் பிரபலமான இசைக் கோர்ப்பை வாசித்து காட்டுகிறார். பின்னர் ரோம் நகரில், பெனிட்டோ முசோலினியை சந்தித்து இருபது நிமிடம் பயனற்ற பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார் காந்தி. என்ன பேசியிருப்பார்?

உண்ணாவிரதத்தை அனைவரையும் மிரட்டிப் பணிய வைக்கும் ஆயுதமாக காந்தி பயன்படுத்தினார் என்பது அவர் மீது பரவலாக வைக்கப்படும் குற்றசாட்டுகளில் ஒன்று. காந்தி உண்மையில் அதை ஒரு பிரார்த்தனையாக, ஆன்மவலுவை அதிகப்படுத்தும் யுத்தியாக மட்டுமே பார்த்தார் என்கிறார் ஷீன். அதேபோல் அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பேசியதைக் காட்டிலும், தம்மக்களின் துன்பங்களை பற்றியே சிந்தித்தார், பேசினார் என்பதையும் குறிப்பிடுகிறார். இந்தியா தன்னை ஆங்கிலேயர்களுக்கு சமானமான தளத்தில் உயர்த்திக்கொள்ள வேண்டும், அதற்காக மக்களை தயார்படுத்த வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. ஷீனின் இந்த சரிதையைக்கொண்டே அட்டன்பரோ தன்னுடைய திரைப்படத்தை உருவாக்கி இருப்பார் என்று தோன்றுகிறது. ஷீனின் சரிதையின் பாதிப்பை கணிசமாக திரைப்படத்தில் காண முடியும்.

காந்தியின் மரணத்திற்கு பின்னர், முழுவதும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளால் ஆன சிறப்பு ரயில் ஒன்றில் அவருடைய சாம்பலைக் கொண்டு சென்று கரைத்தனர் என்று ஷீன் முன்வைக்கும் சித்திரம் மனதை பிசைகிறது. வாழ்க்கை முழுவதும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் காலம் கழித்த அந்த கிழவர், அந்த மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்த தம்மக்களையும் அவர்களுடைய வாழ்க்கையை உயர்த்துவதற்கும் சிந்தித்து செயல்பட்ட ஒரு மாமனிதனின் உடல் பிடி சாம்பலாக ஜல பிரவாகத்தில் சங்கமித்துவிட்டது. காந்தி, நெருப்பனைந்து நீர்த்த அந்த பிடி சாம்பல் அல்ல, தனது கீழ்மைகளை பொசுக்க முயன்று மேல்நோக்கி எழும் தழல். நேர்மையும், வாய்மையும் கொண்ட ஒவ்வொரு மனிதனின் ஆழத்திலும் அந்த தழல் சுடர்விட்டு எரிந்துக்கொண்டிருக்கும் வரை காந்திக்கு அழிவில்லை.


மகாத்மா காந்தி
வின்சென்ட் ஷீன்
சரிதை, ஆங்கிலம், தமிழ், மொழிபெயர்ப்பு,

Tuesday, June 27, 2017

உணவே மருந்து - டாக்டர்.எல்.மகாதேவன்

(ஆம்னிபஸ் பதிவு)

ஆயுர்வேத மாணவனாக அன்றுதான் நான் என் முதல் கருத்தரங்கில் அமர்கிறேன், ஆக்ஸிஜென், கார்பன் ஹைட்ரஜன் என்று அதுவரை அறிந்தவர்கள் வெளியேறி வாயு, அக்னி, கபம்  என  புதிய குணச்சித்திரங்கள் அறிமுகமான தருணம். குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்த வேறோர் உலகத்தில் திசை தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். பொறியியல் படித்திருக்க வேண்டும் , நாம் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்று குழம்பித் திரிந்த நாட்கள் அதைத் தொடர்ந்தன (இன்றும் அவ்வப்போது அந்த எண்ணம் குறுக்கிடுகின்றது என்பது வேறு விஷயம்). மீண்டும் மீண்டும், அடுத்தடுத்து, மேடையேறி புத்தகங்களில் உள்ளதை ஆசைதீர வாந்தியெடுத்த பேச்சாளர்களை பார்த்தபோது கிட்டத்தட்ட என் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது, இது நம் வாழ்விற்கு பயனளிக்கப் போவதில்லை, ஆயுர்வேத கல்லூரி செத்த கல்லூரிதான், நான் வாசிப்பது அறிவியல் பாடம் அல்ல இன்றைக்குப் பயன்படாத வரலாறுதான் என்று நினைத்துக் கொண்டேன். 




அந்த நேரத்தில் அரங்கத்தில் ஒரே பரபரப்பு, முழுக்கை சட்டைபோட்ட சிவந்த  மனிதர் ஒருவர் மேடைக்கு வந்தார். மற்றொரு அறுவை என்று எண்ணியிருந்த தருணத்தில், "ஆயுர்வேத சூத்திரங்களை மனனம் செய்து என்னுடைய நினைவுத்திறனை காண்பிக்க நான் வரவில்லை, ஆயுர்வேத சூத்திரங்கள் மருத்துவனுக்கு எங்கெங்கு உதவுகின்றன என்று என் அனுபவத்தில் கண்டுகொண்டதை உங்களுடன் பகிரவே நான் வந்திருக்கேன்," என்றார் அவர். சோம்பிக் கூனிய அரங்கமே நிமிர்ந்து அமர்ந்தது, அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்கள் அவராற்றிய உரை என் வாழ்வையே மாற்றியது என கூறலாம். ஆயுர்வேதத்தின் மீது நம்பிக்கை பிறந்தது, 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீண்டுக்கொண்டிருக்கும் மனிதகுலத்தின் நோய்களுக்கு எதிரான யுத்தத்தில் நானும் ஒரு கண்ணி என உணர்ந்தேன், இனி இதை ஒருபடி முன் கொண்டுசெல்ல வேண்டும், அதுவே என் கடமை. ஆயுர்வேதத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளைச் செய்து அதற்காக நோபல் பரிசு பெறும் போது என்ன உரையாற்ற வேண்டும்  என்றெல்லாம்  கனவு காணத் தொடங்கினேன்.  கனவுகளுக்கு ஒன்றும் குறைவில்லை. அன்று உரையாற்றியவர்தான் தெரிசனம்கோப்பு டாக்டர்.எல்.மகாதேவன். இன்றளவும் ஆயுர்வேதத்தைப் பொருத்தவரை அவரே என்னுடைய மானசீக குருவாக இருக்கிறார். அவர் எழுதிய நூல் தான் உணவே மருந்து.

“எனது பேற்றை வியக்காமல் என் செய? பேறு மாத்திரமன்றி நன்றிக் கடனும் ஆகும், அவரது நூலுக்கு இன்று நான் முன்னுரை எழுதுவது. யோசித்துப் பார்க்கையில், சமூகத்தின் சொறி சிரங்குக்கு அல்லது இளைப்புக்கு நானும் இன்று இலக்கியம் என்றொரு எண்ணெய் தயாரித்துக்கொண்டிருக்கிறேன் போலும். ஆனால் நோய் குணமாகியதா, குணமாகுமா என்பது வேறு கேள்வி!” என்று இந்த நூலிற்கான முன்னுரையில் குறிப்பிடுகிறார் நாஞ்சில் நாடன்.

பஞ்சமகாபூதங்களின் சேர்க்கையில் உருவானதால்தான் பிரபஞ்சம் என அழைக்கிறோம். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அம்சமும் பஞ்ச மகாபூதங்களின் வேறுபட்ட விகிதாசாரக் கூட்டினால் உருவானது என்று நம்புகிறது ஆயுர்வேதம். உட்கொள்ளும் உணவும் ஐம்பெரும் பூதங்களே, அதை உட்கொள்ளும் மனிதனும் ஐம்பெரும் பூதங்களால் ஆனவன்தான். மனிதனை இயக்கும் முக்குற்றங்கள் என அழைக்கப்படும் வாத, பித்த, கபமும் ஐம்பெரும் பூதங்களால் ஆனதே. உட்கொள்ளும் உணவு அக்னியால் செரிக்கப்பட்டு உடலில் அந்தந்த பரமாணுக்கள் அந்தந்த பூதங்களை போஷிக்கின்றன. உடலின் முக்குற்றங்களாகிய வாத பித்த கபமும், மனதின் முக்குற்றங்களாகிய சத்வ ரஜோ தமசும் வெகு நுட்பமான உறவுகளைக் கொண்டிருப்பதால், உண்ணும் உணவு மன செயல்பாடுகளையும் கணிசமாக பாதிக்கும் என்று சொல்கிறது ஆயுர்வேதம். ஆயுர்வேதத்தில் விவரிக்கப்படும் மன நோய்களுக்கும்கூட உணவு காரணிகளை பட்டியலிடுகின்றன மூல நூல்கள்.

டாக்டர்.எல்.மகாதேவன் 

இந்த நூலின் முதல் அறுபது பக்கங்கள் தேர்ந்த ஆய்வுக்கட்டுரையின் நேர்த்தியுடன் தொகுக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேத நூல்களிலும், தொன்மையான இந்திய நூல்களிலும் உள்ள பல குறிப்புகளைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர். இரண்டாம் பகுதி முழுவதும் கஞ்சி, பொடி வகைகள், சூப் வகைகள், சாத வகைகள், களி வகைகள், ரசம், கூட்டு, குழம்பு, பச்சடி என பதினேழு வகை உணவுகளில்  பல ஆரோக்கியமான உணவுக் குறிப்புகளையும், செய்முறைகளையும்  தொகுத்துள்ளார். ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுக் குறிப்புகள்  மட்டுமின்றி, மரபாக தமிழகத்திலும் கேரளத்திலும் புழக்கத்தில் உள்ள  மருத்துவ குணம் நிறைந்த தாவர வகைகளைக்கொண்டு புதிதுபுதிதாக பல குறிப்புகளையும் அளிக்கிறார் மகாதேவன் (இவை எதையும் இதுவரை நான் முயன்றதில்லை ). 

உதாரணமாக, வழமையான ரசப்பொடியுடன் சிறிது நெய்யும் கடுகு தாளித்த வாதநாராயண இலைகளையும் சேர்த்து ரசம் வைத்தால் கைகால் வலி, இடுப்பு-முதுகு வலி, வாதக் கோளாறுகள் மட்டுப்படும் என்கிறார். எள்ளுப் புண்ணாக்கு நீரிழவு நோய்க்கு பயன்படும் என்கிறார். நிலக்கடலையை 'ஏழைகளின் பாதாம்' (poorman's almond) என்று அழைக்கிறார்கள் நவீன ஊட்டசத்து நிபுணர்கள், வெல்லத்துடன் சேர்த்து கடலையை உண்ணும போது புரதம், இரும்புசத்து, என அனேக சத்துக்கள் கிடைக்கும் என்கிறார்கள். எள்ளு உருண்டையும், கடலை உருண்டையும்  நம் கைக்கெட்டும் தொலைவில் உள்ள ஆரோக்கியமான அதேவேளை ருசியான பண்டங்கள். இந்த நூலின் மிக முக்கியமான அம்சம் என நான் கருதுவது, பெரும்பாலும், இந்த நூலில்  குறிப்பிடப்படும்   உணவுப் பண்டங்கள் அனைத்துமே நம் அருகாமையில், எளிதில் கிடைக்கக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த தாவரங்களைக் கொண்டு செய்யப்படுவதுதான். ஆகவே செலவும் குறைவு , ஆரோக்கியமும் உறுதி.

உடலுள் இருக்கும் இறைவனின் வடிவான அக்னிக்கு ஆஹுதியாகக் கொடுக்கப்படுவதே உணவு. இந்த உடல் அன்னத்தினாலானது. ஆயுர்வேதத்தில் உணவு உட்கொள்ளும் விதிமுறைகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. முன்னர் உண்ட உணவு செரித்த பின்னர்தான் அடுத்து உண்ண வேண்டும், பசியில்லாமல் உண்ணக்கூடாது, இரைப்பையை நான்கு பாகங்களாக பிரித்தால், அதில் இரண்டு பாகத்திற்கு திட உணவுகளையும், ஒரு பங்கிற்கு திரவ உணவுகளையும் உட்கொண்டு மற்றொரு பங்கை காலியாக விடவேண்டும். அதிவேகமாகவோ, அதிமந்தமாகவோ உட்கொள்ளக்கூடாது. முதலில் இனிப்பு பண்டங்களும், பின்னர் மற்ற சுவை உணவுகளையும் உண்ண வேண்டும், இறுதியாகவே கசப்பான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். நம் பாரம்பரிய உணவு முறையில் உண்ணும்போது, தொடக்கத்தில் இனிப்பான உணவுகளை உண்பதால் வாத தோஷம் சமனடைகிறது, அடுத்ததாக புளிப்பு சுவையை அடிநாதமாக கொண்ட சாம்பார் ரசம் போன்ற உணவுவகைகள் அக்னியை தூண்டி பித்தத்தை முறைபடுத்துகின்றன, இறுதியாக கபத்தை சமன் செய்ய மோர் உதவும். 

மருதம், நெய்தல், பாலை, குறிஞ்சி, முல்லை என ஐவகை நிலங்களில் புழங்கிய உணவுமுறை பற்றிய குறிப்புகளும் உண்டு. ஆயுர்வேதம் உணவின் குணாம்சங்களை ஆறு சுவைகளைக் கொண்டே வரையறுக்கிறது, ஒவ்வொரு சுவையின் தன்மையும் அதை உட்கொள்வதால் ஏற்படும் மாற்றமும் விரிவாக அலசப்பட்டுள்ளன. வெவ்வேறு காய்கனிகள், தானியங்கள், மற்றும் உணவு வகைகளின் இயல்புகளையும் அது உடலில் ஏற்படுத்தும் விளைவுகளையும் ஆயுர்வேத மூல நூல்கள் விளக்குகின்றன, அவையும் இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக பண்டையகாலத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் உபகரணங்களின் படமும் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

கிருஷ்ண தேவ ராயர் காலத்து கல்வெட்டுகளில் அதிரசம் (அதீத இனிப்பு சுவை உடையது என்று பொருள்) பற்றிய குறிப்புகள் உள்ளன. வடமொழியில் இறைவனுக்கு பண்டைய  படைக்கப் படும் உத்காரிகை எனும் பண்டத்தை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன அதுவே இன்று தோசை என அழைக்கப்படுகிறது. இட்டு அவி எனும் சொல் மருவி இட்லி வந்தது என ஆங்காங்கு சில சுவாரசியமான வரலாற்று தகவல்களையும் நமக்கு சொல்லிச் செல்கிறது இந்நூல்.

இன்று உலகெங்கும் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைகளில் ஒன்று ஆரோக்கிய பராமரிப்பு துறை (wellness industry), சந்தையில் அநியாய விலையில் குவியும் விதவிதமான விளைவுகளைக் கோரும் பன்னாட்டு ஊட்டசத்து மாத்திரைகளும் பானங்களும் விற்றுத் தீர்வதைப் பார்க்கும்போது சற்று பயமாகத்தான் இருக்கிறது. அடிப்படையில் நம் ஒழுங்கீனமான உணவு வழக்கங்களை முறைப்படுத்தாமல் மருந்துகளாக வாங்கி அடுக்குவதில் என்ன பயன்?

முன்னுரையில் நாஞ்சில்நாடன் எழுதுகிறார், “உணவைக் கலோரியாக மட்டும் கருதாமல், வயிற்றுப் பையைக் குலுக்கி நிறைப்பதாக மட்டும் கருதாமல், தீட்டி வைத்திருக்கும் நாவுக்குத் தீனியாக மட்டும் நினைக்காமல் அதையோர் மருந்தாகக் கொண்டால் நோயற்ற வாழ்வை நாம் வாழலாம்.” இந்த செய்தியை இந்த நூல் நமக்கு கச்சிதமாக உணர்த்துகிறது.


உணவே மருந்து
டாக்டர்.எல்.மகாதேவன்
காலச்சுவடு வெளியீடு

Monday, June 26, 2017

உருமாற்றம்

(ஆம்னிபஸ் பதிவு)

சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில் வாசுதேவனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்தேன். நானும் என் நண்பனும், எங்கள் ஆசிரியர் ஒருவருடன் சென்னை புறநகரில் உள்ள அந்தத் துயரரின் வீட்டுக்குச் சென்றோம். அந்த மத்திய வர்க்க வாடகை வீட்டில்,  ஒய்வு பெற்ற  அவனது தந்தையும், தாயும், பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்த ஒரு  தம்பியும் வசித்து வந்தனர். வாசுதேவன் பொறியியல் படித்து நல்ல பணியில் இருந்த பொறுப்பான இளைஞர். எந்த தீய சகவாசங்களும், கெட்ட பழக்கங்களும் அவருக்குக் கிடையாது. 

அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  பணி முடித்து வீடு திரும்பிய ஓரிரவில் கொடுமையான விபத்தில் தலையில் பலத்த காயம்பட்டு, சுய நினைவை இழந்திருந்தார். மண்டையோட்டின் ஒரு பகுதியைப் பெயர்த்து எடுத்து அறுவை சிகிச்சை செய்திருந்தனர். கண்கள் அவ்வப்போது தன்னிச்சையாக திறந்து மூடும், கைகால்களும் அவ்வப்போது தன்னிச்சையாக அசையும். சளியடைத்த மாரை ஒரு சக்ஷன் இயந்திரம் சுத்திகரித்துக் கொண்டிருந்தது.  உணவு நேராகக் குடலுக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. வெளிறிய , அந்த ஈர்குச்சி தேகத்தின் குத்திட்ட கண்களும், தலையில் ஓடில்லாத இடத்தில் குழிந்த பள்ளமும் பல இரவுகளின் கனவுகளைக் கலைத்திருக்கின்றன. 

அவன் இன்னும் மரணிக்கவில்லை. என்றேனும் பழையபடி கண்விழிக்கக்கூடும் என்று அந்த குடும்பம் நம்பிக்கொண்டிருந்தது. அத்தனை வைத்தியமும் பொய்த்த நிலையில் ஆயுர்வேதம் நோக்கி வந்திருந்தார்கள். தினமும் காலை நானும் என் நண்பனும் அங்கு செல்வோம். அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே எங்களால் கொடுக்க முடிந்தது. பதினைந்து நாள் சிகிச்சை கழிந்த பின்னர்,  போதுமென்று நிறுத்திக்கொண்டார்கள். அதற்கு பின் பதினைந்து நாட்களில், வாசுதேவன் மரணமடைந்துவிட்டார் எனும் செய்தி கிடைத்தது.  உணர்வற்ற வெறும் ஓலம் மட்டுமே அவ்வப்போது வெளிவரும் வாசுதேவன் மெல்ல மானுட அடையாளங்களை இழந்திருந்தான்.  அவன்தான் நான் கண்ட கிரேகர் சம்சா.





அன்று விழித்தெழும்வரை கிரேகர் சம்சா தன் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தப் போராடும் ஒரு சாமானிய விற்பனை பிரதிநிதி, விசுவாசமான  ஊழியன், கடமை தவறாத மகன், நேசமுள்ள அண்ணன் என தான் பொறுப்பேற்ற பாத்திரங்களைக் கச்சிதமாக நிர்வகித்து வந்தவன். 

கனவுகள் குறுக்கிட்ட தூக்கமற்ற முந்தைய இரவிலிருந்து விழித்தெழுகிறான் சம்சா. தாழிட்ட தன்னறைக்குள் தான் பல குச்சிக் கால்கள் கொண்ட ஒரு பிரம்மாண்டமான புழுவாக மாறியிருப்பதை உணர்கிறான். நேற்றிரவு கண்ட கொடுங்கனவுகளின் நீட்சி என்று நம்புகிறான், மீண்டும் சற்று கண்ணயர்ந்து விழித்தெழுந்தால் எல்லாம் இயல்பாகிவிடும் என எண்ணுகிறான். தாயும், தங்கையும், தந்தையும் நிறுவன மேலாளரும் கதவருகே இவனைக் காணக் காத்திருக்கிறார்கள். 

பிரம்மாண்டமான புழுவாக  இவன் உருமாற்றம் அடைந்ததைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள், அருவெறுப்புடன் அங்கிருந்து நகர்கிறார்கள். தங்கை கிரீட் மட்டுமே அவனிடம் பரிவு கொள்கிறாள், உணவு பரிமாருகிறாள், அது அவளுடைய தனிப்பட்ட உரிமை என நிலைநாட்டிக் கொள்கிறாள். 

சம்சாவின் துணையின்றி வாழ வேண்டிய நிலை, குடும்பத்தினர் அனைவரும் கடுமையாக உழைக்கத் தொடங்குகிரார்கள். மெல்ல சம்சா தேவையற்ற ஒரு சுமையாகிறான், பரிவு கொண்ட தங்கையும் அவனை வெறுக்கத் தொடங்குகிறாள். தந்தை அவனைத் தொடக்கம் முதலே ஒரு விசித்திர உயிரினமாக மட்டுமே பார்த்தவர். தாய் நீண்ட தயக்கத்திற்குப் பின்னர்தான் அவன் அறைக்கே வந்தாள். வேலைக்காரி மட்டுமே அவனை  கொஞ்சமேனும் பொருட்படுத்துகிறாள். அசைவின்றி சிக்குண்ட அவன் மெல்ல உணவைத் தவிர்க்கத் துவங்குகிறான், நோய்வாய்ப்பட்டு, அமைதியாகிக் கிடக்கிறான். அப்படியொருவன் தங்கள் குடும்பத்தில் இருந்தான் எனும் நினைவையே நீக்கி நிம்மதி பெருமூச்சுடன் வெளிக்கிளம்புகிறார்கள் குடும்பத்தினர். காலம் மறக்கப்பட்ட நினைவுகளைத் திருடித் தின்னும் பசிகொண்ட பூனை.   

இந்த சிறிய கதை எழுதப்பட்ட இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒரு செவ்வியல் படைப்பு எனக் கொண்டாடப் படுகிறது. இந்தக்கதையில் உள்ள படிமத்தை நாம் நம் மன விரிவுக்கு ஏற்ப விரித்தெடுத்துக் கொள்ள முடியும். மனிதன் தன்னையே அருவெறுக்கதத்தக்க புழுவாக உணர முடியும், செயலின்மையில் சிக்கி, பயனற்ற வீண் சுமை என வெறுக்கப்படும் அற்பப் புழு. நோய்மையுடன் இந்தக்கதையை தொடர்புபடுத்தி வாசித்தால் வேறொரு தளம் திறந்துகொள்ள கூடும். அர்த்தமற்ற அன்றாட லௌகிக சுழலிலிருந்து மேலான ஆன்மீக தளத்தை நோக்கிய பயணம் என்றும் இதை வாசிக்க முடியும்.  

மனிதன் தனக்குக் கற்பிதமான இலக்குகளை நோக்கி வியர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டே இருக்கிறான். அலுப்புடன் சலித்துத் திரும்பினால், அத்தனையும் வியர்த்தம். சம்சா தவிக்கிறான், தன் குடும்பக் கடமைகளை தான் ஈடேற்ற போட்ட திட்டங்களை எண்ணி பதறுகிறான். வயோதிக தந்தையின் கடன்களை தீர்த்து, பதின்ம வயது தங்கையின் வயலின் கனவுகளை நிறைவேற்றிய பின்னர் தன் வாழ்வைப் பற்றிய கனவுகளை நோக்கிப் பயணப்பட வேண்டும் என எண்ணியிருந்தான் சம்சா. அக்குடும்பத்தின் வாழ்வில் அவனுடைய இன்றியமையாத, மிக முக்கியமான இடத்தைப் பற்றிய பதைபதைப்பு அவனுக்கு இருக்கிறது. தன் பங்களிப்பின்றி அந்த குடும்பம் தத்தளிக்கும் என்பதை உணர்ந்திருந்தான். 

பாலைவன மணலின் கால்சுவடுகள் மெல்லக் காற்றில் கரைவதுபோல் எப்பேர்பட்ட வெற்றிடத்தையும் காலம் நிரப்பி சமன்படுத்திவிடுகிறது. சம்சா உயிருடன் இருக்கும்போதே அவனில்லாமல் வாழப் பழகுகிறார்கள்.  மகன், அண்ணன் போன்ற பந்தங்கள் மறைந்து அவன் உயிருடன் இருக்கும்போதே,  பிறர் கண்ணில் படாமல் பாதுகாக்கப்பட வேண்டிய  பொதியாகிறான். மரணத்தைக் காட்டிலும் வலிமிகுந்தது புறக்கணிப்பு. அவர்களின் அன்பிற்காகவும், புரிதலுக்காகவும் ஏங்கும் அவன் மானுட அடையாளங்கள் இழந்த வெறும் புழுவென வெறுக்கப்படுகிறான்.   

ஆரம்பத்தில் கட்டிலில்  உருண்டு புரளவே சிரமப்படுகிறான் சம்சா. அவனது கால்களை எப்படி பயன்படுத்துவது என்பதுகூட அவனுக்குத் தெரிவதில்லை. யாரையும் அவன் அச்சுறுத்த விரும்பவில்லை, உணவு கொண்டு வரும் தன் தங்கை மற்றும் அறைக்குள் எப்போதாவது வரும் தாய் என எவர் கண்ணிலும் படாமல் வாழப் பழகுகிறான் சம்சா. மெல்ல ஊர்ந்து நடக்கிறான், அறையின் சுவர்களில் ஊர்கிறான், சாளர விளிம்பின் வழியாக வெளியுலகத்தை வேடிக்கை பார்க்கிறான். அறையின் மேற்கூரைக்கு  ஊர்கிறான் , அங்கிருந்து பொத்தென்று விழும் புதிய விளையாட்டைக் கண்டுகொள்கிறான், தன் இருண்ட அறையின் கதவிடுக்கின் வழியாக உணவரையில் தன் குடும்பம் பேசிக்கொள்வதை கவனிக்கிறான். இப்படி புதிதாய் பழகிய நேர்கோட்டு வாழ்க்கையில் அவன் தன் மானுட நினைவுகளை இழக்கத் தொடங்குகிறான்.  அவனறையில் உள்ள மேசைகளும், நாற்காலிகளும், சுவற்றில் உள்ள படமும் மட்டுமே அவனது முற்கால நினைவுகளின் சாட்சிகளாக நிற்கின்றன. அவன் நடமாட ஏதுவாக அவனறையில் இருந்து பொருட்கள் வெளியேற்றப்பட்ட காலம் சென்று, ஓட்டை உடைசல்கள் நிரம்பி வழியும் அறையானது.

ஒரு நாள், உள்வாடகைக்கு இருக்கும் மூவரை மகிழ்விக்க தங்கை கிரீட் நீண்டநாட்களுக்குப் பிறகு வயலின் வாசிக்கிறாள். அதைக் கேட்க பேரார்வத்துடன் வெளியே வரும் சம்சாவினால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ‘உண்மையில் அது என் அண்ணனில்லை, அது ஒரு ஜந்து, என் அண்ணனாக இருந்தால் நமக்கு இத்தனை துன்பங்களைக் கொடுத்துக்கொண்டு இங்கு இருக்க மாட்டான், இதை அழித்தாக வேண்டும்’ என்று அழுது அரற்றுகிறாள் கிரீட்.  சம்சா உயிர்வாழ எஞ்சியிருந்த இறுதி காரணமும் போயிற்று. அதுவே அவனது இறுதி இரவாகிறது.     

இந்த கதையை கிரேகரின் விழிவழியாக காண்பதற்கு பதிலாக, கிரீட்டின் வழியாக கண்டால் நாவல் மேலும் பிரம்மாண்டமாக உருகொள்கிறது. அண்ணன் மீதான பரிவு எப்படி இறுதியில் வெறுப்பாக மாறுகிறது எனும் கேள்வி முக்கியமானதாக படுகிறது. அந்த உள மாற்றம் நாவலில் மெலிதாக கோடிட்டுக் காட்டப்படுகிறது. இந்த கதையை மையமாகக் கொண்டு மேடை நாடகங்கள் உருவாகியுள்ளன, திரைப்படங்கள் வெளிவந்துள்ளன, ஒபேரா நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன, இதன் தொடர்ச்சியாகவும், இதற்கு முந்தைய பகுதியாகவும் நாவல்களும் கதைகளும் எழுதப்பட்டுள்ளன. விமர்சனங்களும், ஆய்வுகளும், மொழிபெயர்ப்புகளும் இன்றுவரை தொடர்ந்து வருகின்றன. இந்த கதையின் பூடகத் தன்மையின் காரணமாக பல தளத்தில் விவாதங்களை கோரும் செவ்வியல் படைப்பாக இது கருதப்படுகிறது. கிரேகர் சம்சா என்னவாக மாற்றமடைந்தான், அது எப்படிப்பட்ட உயிரினம் என்பதில் இன்றுவரை விவாதம் நீடிக்கிறது.   

இது கனவுதான் எனும் பிரக்ஞையுடன் நாம் காணும் கனவுகள் சில உண்டு. கனவினுள் நுட்பமாக மனம் கனவின் நெடியை முகர்ந்தப்படி கவனத்துடன் அதன் தடத்தில் பின்தொடரும். இந்தக் கனவிலிருந்து எப்போது வேண்டுமானாலும் விழித்தெழ முடியும் என்று அது நம்பும். ஒருவேளை அப்படி இல்லாமலானால்? நாம் வாழும் இந்த வாழ்க்கை உண்மையில் ஒரு மீட்பற்ற பெருங்கனவாகிப் போனால்? வாசல்களற்ற ஓர் குழிந்த அறைக்குள் மனம் கற்பனைப் பித்தேறித் தன்  சுவற்றில் தீட்டிக் கொள்ளும் மாய ஓவியமாக நம் வாழ்க்கையும் இருந்தால்? காப்ஃகாவின் உருமாற்றம் (the metamorphosis) நெடுங்கனவாக, தொடர்காட்சிகளாக மனத்திரையில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

ஆனால், ஒருவேளை நான் காஃப்காவை சந்திக்க நேரிட்டால் அவரிடம் கேட்க எனக்கொரு கேள்வியுண்டு, அது அபத்தமாகவும், கிறுக்குத்தனமாகவும் தென்படலாம்- இந்தக் கேள்வி என்னைக் குடைந்துக் கொண்டே இருக்கிறது- ஏன் சம்சாவிற்கு சிறகு முளைத்து பட்டாம்பூச்சியாக அவன் புதிய வானங்களை நோக்கிப் பறந்து செல்லவில்லை? ஏன் அவன் புழுவாகவே இருந்து மறைந்தான்?


The Metamorphosis
Franz kafka
ஆங்கிலம், நாவல்,

Sunday, June 25, 2017

கலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

“பாராளுமன்றம் என்பது ஒரு தேசம் விளையாடும் விலை உயர்ந்த விளையாட்டு பொம்மை”. இங்கிலாந்தின் பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கடுமையாக விமர்சித்து காந்தி 'இந்து ஸ்வராஜ்', நூலில் எழுதிய வாசகம்தான் இது. அரசு இதயமற்ற ஒரு யந்திரம், அதன் வன்முறை பன்மடங்கு வீரியமுள்ளதாக, கட்டுப்படுத்தப்பட முடியாததாக  இருக்கும் என்றார் காந்தி. பி.ஏ.கிருஷ்ணனின் 'கலங்கிய நதி' வாசித்து முடிக்கையில் காந்தியின் தீர்க்கதரிசனமே நினைவுக்கு வந்தது.  விரக்தியில் பெருமூச்சுத் விடுவதை  தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை.

 



பி.ஏ.கிருஷ்ணனின் இந்த நாவல் நதிக்கரையோரம் சஞ்சலத்தோடு காத்துக் கொண்டிருப்பவனின் கதை.  நதியின் ஆழமும் வேகமும் குளிரும் கலக்கமும் அவனை பயமுறுத்துகின்றன. பயமும் நிச்சயமின்மையும் மேலிட உரிய தருணத்திற்காகக் கரையில் அலுப்புடன் காத்துக்கொண்டே இருக்கிறான். மாற்றத்திற்காக ஏங்கி, செயல்படத் துடிக்கும் மனதிற்கும் அலுப்பூட்டும் அன்றாட நிதரிசன வாழ்விற்கும் இடையில் நடக்கும் போராட்டமே கலங்கிய நதி.


காந்தி கலங்கிய நதி நாவல் முழுவதும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வருகிறார். நாவல் தொடங்குவதும் முடிவதும் காந்தியில்தான்.  கருவேலம் முட்களில் சிக்கிய நூலாடையை கவனமாக எடுப்பதுபோல்,  சந்தேக முட்களில் சிக்கித் தனக்குள் தவித்து கொண்டிருக்கும் காந்தியை மீட்கும் முயற்சியே இந்த நாவல் என்று தோன்றுகிறது. 

டெல்லியில் உயர்பதவியில் உள்ள நேர்மையான மத்திய அரசு ஊழியன் ரமேஷ் சந்திரன், மகள் ப்ரியாவின் மறைவிற்குப் பின்னர், அஸ்ஸாமுக்கு மாற்றலாகிப் போகிறான். அவனுடைய நிறுவனத்தில் முதுநிலை பொறியாளராக பணிபுரியும் கோஷ் அஸ்ஸாம் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு அவர்களின் பிணைக் கைதியாகிறான். அவனை மீட்க தனியொருவனாக போராடுகிறான் ரமேஷ் சந்திரன். இதற்கிடையில் அங்கு நடந்த ஊழல் ஒன்றையும் அவன் தோண்டியெடுக்கிறான். விபத்தில் சிக்கிச் செயலிழந்து மீள்கிறான். தன் வாழ்க்கையைப் புனைவாக வடிக்கிறான். நாவலுக்குள் நாவல் என கதை சிலந்தி வலையாக விரிகிறது. 

மாறும் சூழல்களுக்கேற்ப ஒவ்வொரு மனிதனும் கற்பனையில் தன் ‘லட்சிய நானை’ உருவாக்கிக் கொண்டேயிருக்கிறான். அவனது ‘யதார்த்த நான்’ எப்போதும் எட்டமுடியாத உயரத்தில் உள்ள தன்னுடைய ‘லட்சிய நானை’ நோக்கிய தொடரும் பயணத்தில்தான் இருக்கிறது. ரமேஷ் சந்திரன் தன் நாவலின் வழியாக அந்தத் தனது லட்சிய நானை அடைய முயல்கிறான். தான் எழுதும் நாவலில் தனக்குத் தானே ஒரு காவிய முடிவையும் எழுதிக் கொள்கிறான். சுவாரசியமற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் கற்பனை நிரப்பி அவற்றைப் புனைவாக்கி, தானறிந்த உண்மையைத் தனது அந்தப் படைப்பைக் கொண்டு உணர்த்துவதில் ஒரு எழுத்தாளன் வெற்றி பெறும் இத்தகைய தருணங்கள் அற்புதமானவை. 

அமைப்புக்கு உள்ளிருந்தெழும் கலகக் குரலாகவே நாவலில் பி.ஏ.கிருஷ்ணனின் குரல் ஒலிக்கிறது. நாவலின் முன்னுரையில் அவர் இவ்வாறு எழுதுகிறார்: “உலகத்தின் மிக மோசமான முட்டாள்களின் வரிசையில் நான் நிறுத்தப்படலாம். ஆனால் நான் சொல்ல விரும்புவதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.” உயர்மட்ட அரசு அலுவலகங்களின் செயல்பாட்டில் உள்ள அபத்தங்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டிய வண்ணமிருக்கிறார். இந்திய அதிகார வர்க்கம் உண்மையில் மக்களிடமிருந்தும் மக்கள் பிரச்சினைகளிடமிருந்தும் எத்தனை தூரம் அந்நியப்பட்டு கிடக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக சந்திரன் தன் துறைச் செயலருக்கு தேநீர் சூடாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுதும் குறிப்பு ஒரு அங்கத உச்சம். அதேபோல் எந்தெந்த கூட்டங்களுக்கு எந்தெந்த பருப்புகள் அவற்றில் பங்கேற்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்  என்பது குறித்தான விவாதம் மற்றொரு அபத்தத்தின் உச்சம்.

ரமேஷ் சுகன்யா உறவும், ப்ரியாவின் இழப்பு அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும் நுட்பமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ப்ரியாவின் மரணத்திற்கு ரமேஷ் மட்டுமே காரணம் எனும் நிலைப்பாட்டிலிருந்து மாறி  சுகன்யாவும் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும்  தருணம் மிக முக்கியமானது. மரணமடைந்த ப்ரியா தவிர்க்க முடியாத நினைவுகளின் மெல்லிய புகைமூட்டமாக நாவல் முழுதும் மீண்டும் மீண்டும் வெவ்வேறு சூழலில் வந்துகொண்டே இருக்கிறாள். ரமேஷ் –சுகன்யாவின் வாழ்க்கையை இமை அணையாத, குத்திட்ட கண்களுடன் அவள் தொடர்ந்து வருகிறாள் என்ற உணர்வில் நாம் வாசித்துச் செல்கிறோம்.

தற்போதைய அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநில கலவரங்களின் பின்னணியில் இந்த நாவலை வாசிக்கும்போது பல புதிய திறப்புகள் தென்படுகின்றன. வங்கதேச அகதிகள், இடப்பெயர்வுகள், தனி நாடு கோரிக்கைகள் என அவர்களுக்கான நியாயங்களையும் அதை அரசு சரிவர எதிர்கொள்ள தவறுவதையும் கதைப்போக்கினூடே தொட்டுச் செல்கிறார் கிருஷ்ணன். அஸ்ஸாம் தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையுள்ள பரஸ்பர  புரிதல் மற்றும் எதிரெதிர் தரப்புகள் செய்து கொள்ளும் சமரசங்கள்,.. எந்த எதிர்வினையும் ஆற்றாமல் சிக்கல்களை ஆரப்போடுவதே எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்கும் என்று  குருட்டுத்தனமாக நம்பும் அதிகார வர்க்கம்... அரசாங்க யந்திரத்தின் சோர்வளிக்கும் இயங்கு முறையை நமக்குத் தெளிவாக காட்டுகிறார் பி.ஏ.கே.

காந்தி பக்தரான ரமேஷின் தந்தை பக்ஷிராஜன் சுதந்திர போராட்ட களத்தில் தன் லட்சிய புருஷரான காந்தியுடன் கைகோர்த்துப் போராட வேண்டும் எனக் கனவு கண்டவர். ஆனால் இறுதிவரை முடிவெடுக்க தயங்கி எதிலும் பங்குபெறாமல் வாழ்ந்து அவர் காண விரும்பிய ராஜ் காட் காந்தி சமாதியை கூடக் காண முடியாமல் வயோதிகத்தால் விழுங்கப்பட்டு மறைகிறார், சாம்பலாகி ராஜ்காட்டின் பசும்புற்களுக்குதான் உரமாகிறார். 

ரமேஷ் தன் தந்தையைப் போல் தானும் ஆகிவிடுவோமோ என்று பயப்படுகிறார்.  செயலின்மை கரிய ஈரக் கம்பளமாய் இறுக்கி அச்சமும் தயக்கமுமாய் தன்னை நெருக்கிவிடுமோ என இறுதிவரை அஞ்சுகிறார். தனக்கு நேர்மாறான ஒருவராக அஸ்ஸாமின் முன்னாள் முதல்வராக இருந்த மூத்த காந்தியவாதி சரத் ராஜவம்ஷியைப் பார்க்கிறார் கரையான் புற்றை ஒத்த பழைய வீட்டில் வாழும் , பேருந்து நெரிசலில் பயணம் செய்யும் ஒரு முன்னாள் முதல்வர். மக்களுடன் வாழ்ந்து அவர்களுள் ஒருவனாக தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் பெரியவர். அவரை  இயக்கிக் கொண்டிருக்கும் விசையை கண்டுகொள்ள முயல்கிறார் ரமேஷ். 

நாவலில் வரக்கூடிய மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள், ரமேஷின் மனைவி சுகன்யா, அவனது உதவி செயலர் அனுபமா மற்றும் கடத்தப்பட்ட கோஷின் மனைவி நந்திதா கோஷ், மூவருமே வெவ்வேறு வார்ப்புகளில் உருவாகி கச்சிதமாக உருபெறும் பாத்திரங்கள். குறிப்பாக சுகன்யா. ரமேஷின் நாவலில் வரும் சுகன்யாவிற்கும் அந்த சித்தரிப்பின் மீது அதிருப்தி கொள்ளும் அசல் சுகன்யாவிற்கும் உள்ள வேறுபாடுகள் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
சுகன்யா, ரமேஷ் எழுதும் நாவலின் பகுதிகளை அவனுடைய நண்பர்களான சுபிருக்கும் ஹெர்பர்டுக்கும் அவ்வப்போது அனுப்பி வைக்கிறாள். அந்தந்த பகுதிகளைப் பற்றிய கடித பரிமாற்றங்கள் வழியாக நாவலின் மீதான மெல்லிய விமரிசனமும் நாவலுக்குள்ளே வந்து செல்வது ஒரு நல்ல யுத்தியாகவே தென்படுகிறது. 

நிதரிசனத்தில் கோஷ் விடுவிக்கப்பட்டதில் ரமேஷின் பங்கு, அவனுடைய மூர்க்கமான பிடிவாதம் என்பதைத் தாண்டி பெரிய அளவில் வேறு ஏதுமில்லை என இறுதியில் பூயான் சுகன்யாவிடம் சொல்லும் ரகசியம் மற்றுமொரு வேடிக்கையான தருணம். ரமேஷ் தன் செயல், தன் வெற்றியென நம்பிகொண்டிருப்பது உண்மையில் கணக்கற்ற கரங்களின் ஒத்திசைவில் அந்தரத்தில் இயங்கும்  பொம்மலாட்டத்தின் விளைவுதான்  என்பதை அறியாமலேயே பெருமிதம் கொண்டு இயங்கிக் கொண்டிருந்திருக்கிறான்.

சீன – இந்திய உறவைப் பற்றி புத்தகம் எழுதிய சுகன்யாவின் தந்தை, பெண் பித்தனாக வாழ்ந்து மடியும் ரமேஷின் நண்பன் ராமன், கருப்பு மசூதியின் வாயிலில் பழம் விற்று தெருமுனை கலவரத்தில் மரணிக்கும்  தள்ளுவண்டிக்காரன், ரூப்குன்ட் மலைக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டி, முதலில் விருந்தினர் மாளிகையில் சந்தித்து பின்னர் கடத்தல் கும்பலிடம் தூது போக முன்வரும்  கடத்தப்பட்ட கோஷின் வயோதிக உறவினர், அஸ்ஸாம் காவல் துறை தலைவர் நிர்மல் பூயான், போலீசாரால் வேட்டையாடப்படும் அனுபமாவின் போராளி நண்பனான கலிதா, போராளி தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி பேரத்தைக் குறைக்க உதவும் ஊடக நண்பன் கஷ்னபீஸ் என ஒவ்வொரு பாத்திரமும் நேர்த்தியுடன் உருப்பெற்றிருப்பது இந்த நாவலின் மிகப்பெரிய பலம்.

இ.பா, ஆதவன் வழிவந்தவர் என்று  பி.ஏ.கிருஷ்ணனை விமர்சகர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். கிருஷ்ணனின் பாத்திரங்கள் சமூக விமரிசனங்களை பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை. சூழலில் கட்டுண்ட ஒருவித இயலாமையின் தொனியே இந்த நாவலில் அதிகம் ஒலிக்கிறது. ஆழ்ந்த கவித்துவமான சித்திரங்களும், ஆண் – பெண் அகவெளி பரிமாணங்களும் நாவல் காட்டும் புற நிகழ்வுகளுக்கு ஈடாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.   

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த இந்து – இஸ்லாமிய மத கலவரத்தினால் நாட்டில் உதிரம் தெறித்துக் கொண்டிருந்த வேளையில் காந்தி சொல்கிறார் “ஒரு நதியில் வெள்ளம் வரும்போது அது மண்ணடர்ந்து எப்போதையும்விடக் கலங்கலாக இருக்கும். ஆனால் வெள்ளம் வடிந்தபின்னர் அது தெளிவாகிவிடும். முன்னைவிடத் தெளிவாக.”

‘நாப்பத்து எட்டுல எழுதினார். ஐம்பது வருஷத்துக்கு மேல ஆயிடுத்து. இன்னும் நதி கலங்கலாகத்தான் இருக்கு. எப்போ வெள்ளம் வடியும்? நம்ம காலகட்டத்தில் நடக்கும்னு தோணல. நாம கலங்கள் நதியப் பாத்துண்டு இருக்கணும்னு விதி’

‘அதனால என்ன? உடனடியா மாற்றம் நடந்துடுமா? நாம் முயற்சி செய்யலாமே. நதியைத் தெளிவா ஆக்குறதுக்கு.வெள்ளத்த வடியவைக்கறதுக்கு.நம்மோட மத்தவாளும் சேந்துப்பா.நேரம் ஆகட்டுமே’

ஆம் நேரம் ஆகட்டுமே. 

நதி அதன் அத்தனை கலங்கள்களுடனும் நமக்காகக் காத்திருக்கிறது.



கலங்கிய நதி
பி.ஏ.கிருஷ்ணன்
நாவல் 
தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்பு
காலச்சுவடு வெளியீடு.

Friday, June 23, 2017

பால்ய கால சகி - வைக்கம் முகமது பஷீர்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

பால்ய பருவத்து காதலின் நினைவுகள் முளைவிடாத களை விதைகள். சடாரென்று உடலெங்கும் பரவி மயிர்கால்களை சிலிர்க்கச் செய்யும், எதிர்பாரா கணத்தில் தோற்றம் கொள்ளும் அந்த பால்ய கால நினைவுகள் உக்கிரமானவை. கண்களை இறுக்கிப் பூட்டி, நினைவுக் கம்பளத்தால் நம்மைப் போர்த்தும் வெம்மை மிகுந்த அந்தத் தருணங்கள் வலிமையானவை, வழிந்தோடும் தூரத்து குழலோசையைப்  போல் காற்றில் அளையும் மென் சுகந்தமாய் நம்மை சுற்றிச் சுழலும் அதன் நினைவுச் சுருள்கள். சுகந்தமும், இசையும், இன்பமும் மெல்ல இறந்து, காட்டு விலங்கின் தொலைதூர  ஓலத்தின் தொடர் எதிரொலி போல் நினைவுகளின் வலியில் மனம் மீண்டும் மீண்டும் அதிரும். முதுகுத் தண்டின் வேரில் ஒரு குளிர்ந்த சிலிர்ப்பாய் குபுக்கென்று வியர்த்து விழிக்கும் நிகழ் காலம், ஒரு குரூர கனவாக. மனம் தரிசாகும்போது அந்த விதைகளின் முனைகளில் துளிர்ந்த  பசுங்கனவுகள் இதயத்தைத் தைக்கும் கூர் அம்புகளாகி மனம் முழுவதையும் துளைக்கின்றன.




பஷீரின் பால்ய கால சகி பெண்ணின் தோழமையுடன் வளர்ந்த ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவள். காலத்தால் கரைந்த அந்த சகியின் நினைவுகளை சுமந்து கொண்டு அவளுடைய சாயலையும் நிழலையும் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம்.. நிறைவடையாத காதல் ஒரு  மகத்தான காவியம் அல்லவா? கூடலும், ஊடலும், காதலும் , பிரிவும், எழுதித் தீராத மானுட பெருங்கதை அல்லவா?

காய்த்து தொங்கும் மாங்கனிகளை பறிக்க முடியாமல் தவிக்கும் சுகறாவிற்கு அதுவரை அவளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு மஜீத் உதவ முன்வரும்போது அவர்களுடைய நட்பு தொடங்குகிறது. சுகறாவின் கூரிய நக பிராண்டல்கள் தரும் அவமானத்தையும் வலியையும் தாண்டி வரத் துடித்துக்கொண்டிருக்கிறான் மஜீத். அவனுடைய ஒட்டு வீடோ, வாப்பாவின் மர வியாபாரமோ கூட சுகறாவிற்கு ஒரு பொருட்டல்ல. முசுருகளை பொருட்படுத்தாது மாமரத்தில் ஏறும் மஜீத்தின் திறமைதான் அவளை வியப்பில் ஆழ்த்துகிறது. 

வானளாவிய மாளிகைகளைக் கட்டி எழுப்பும் சுல்தான் மஜீத்தின் ராஜகுமாரி சுகறாதான். ராஜகுமாரி பிராண்டக்கூடாது அல்லவா? கடிக்கவும் கூடாதே! சுகறாவின் வலிமையான ஆயுதங்களிலிருந்து மஜீத் இதைச்  சொல்லித்தான் தப்புகிறான். ஒன்னும் ஒன்னும் எவ்வளவு என்று மஜீதின் ஆசிரியர் அவனிடம் கேட்கும்போது மஜீத் அதற்கு சொல்லும் பதிலே அவனது அடையாளமாக மாறிவிடுகிறது- ‘கொஞ்சம் பெரிய ஒன்னு’. ராஜகுமாரியும் கொஞ்சம் பெரிய ஒன்னும் காதல் வயப்படுகிறார்கள். பெண்ணை அடக்க முனையும் ஆணின் அகங்காரமும் அவனை ஆட்கொல்லும் பெண்ணின் திண்மையும், அவளை வெல்ல பச்சாதாபத்தைக் கையிலெடுக்கும் ஆண் எனத் தொடரும் இந்த விளையாட்டு   குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கி விடுகிறது என்பதை வெகு நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் பஷீர்.      

கணக்கு வராத மஜீத் சுகறாவின் புண்ணியத்தில் பரிட்சையில் தேறி பட்டணத்திற்கு படிக்கப் போகிறான். படிக்க வசதியில்லாத சுகறா இலக்கின்றி மஜீத் வீடே கதி என இருக்கிறாள். வாப்பாவோடு மனஸ்தாபம் கொண்டு மஜீத் வீட்டை விட்டு வெளியேறுகிறான். தேசாந்திரியாக எங்கும் சுற்றித் திரிகிறான். அவனுக்கு பொருளீட்டுவதில் பெரிய ஆர்வம் இல்லை. எங்கும் ஆண் பெண் என மனிதர்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள் என்று கண்டுகொள்கிறான். பல ஆண்டுகளுக்கு பின்னர் சுகறாவின் நினைவுகளை சுமந்துகொண்டு வெறும் கையோடு ஊருக்கு வருகிறான். வாப்பாவின் தொழில் பொய்த்து , உடல் சுகமின்றி , குடும்பம் நொடிந்திருக்கிறது. 

தங்கைகள் திருமணத்திற்கு காத்திருகின்றனர். சுகறா திருமணம் முடித்திருக்கிறாள். பிழைக்க வழியில்லாத ஊரில் உள்ள அனைவரையும் கரையேற்றவேண்டி வெளியூருக்கு வேலை தேடிப்  புறப்படுகிறான் மஜீத். கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட சுகறா மஜீதைக் காண வருகிறாள். அவனது குடும்பத்தை கவனித்துக் கொள்கிறாள். மீண்டும் பூந்தோட்டத்தை நிர்மாணிக்கிறாள். கடுமையாக உழைத்து குடும்பத்தைக்  கரையேற்றிவிட்ட பின்னர்,  சுகறாவைத் தான் மணந்துகொள்ள வேண்டும் என்று கனவு காண்கிறான் மஜீத். அந்தக் கனவே அவனை இயக்கும் விசையாகிறது. 


ஒரு சைக்கிள் விபத்தில் சுகறா முத்தமிட்டு புண் ஆற்றிய தன்  வலது காலின் பாதியை இழக்கிறான் அவன். செல்வந்தர்களிடம் உதவியை நாடுகிறான். எச்சில் பாத்திரம் கழுவி காலம் தள்ளுகிறான். அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டிருந்த மஜீத்திற்கு ஒரு நாள் உம்மாவின் அந்தக் கடிதம் பெரும் அதிர்ச்சியாய் வருகிறது சுகறா மரித்துவிட்டாள். அவள் தன் உடல்நலமின்மையை மஜீத்திடம் மறைத்து வைத்திருந்திருக்கிறாள்.

எல்லாமே அல்லாஹுவின் நாட்டம்.

மஜீது ஸ்தம்பித்து அமர்ந்திருந்தான்.

அனைத்துமே நிசப்தமாகிவிட்டதுபோல்.

பிரபஞ்சம் சூனியம்.

இல்லை...பிரபஞ்சத்திற்கு எதுவுமாகிவிடவில்லை. நகரம் இரைகிறது. சூரியன் பிரகாசிக்கிறது. காற்று வீசுகிறது.உள்ளுக்குள்ளிருந்து ரோமக்கால்கள் வழியாக மேலெழுந்த குளிர்ந்த ஆவியில் மஜீத் நனைந்துபோயிருப்பது மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. எல்லாமே ஆதரவற்றுப் போய்விட்டன. வாழ்க்கை அர்த்தமிழந்துப் போய்விட்டதா? கருணைமயமான பிரபஞ்சங்களை சிருஷ்டித்த இறைவா!

மஜீது பிழைப்பைத் தேடிச் செல்லும் முன்னர் சுகறா அவனிடம் ஏதோ ஒன்றை சொல்ல முயன்றிருக்கிறாள், மரிக்கும் முன் மஜீது வந்துவிட்டானா என்று கேட்டுக்கொண்டே இருந்தாள் அன்பதை அறியும் மஜீத் சுகறாவின் சொல்லப்படாத வார்த்தைகளை எண்ணி ஏங்கித் தவிக்கிறான். சொற்களின் வசப்படாத உணர்வுகள் பனிக்கத்தியாக நம் நெஞ்சங்களில் பாய்கிறது.   

பஷீரின் மொழியும் கதையாடலும் வெகு எளிமையானவை. இதில் அப்படி என்ன விசேஷம்? ஏன் மலையாள இலக்கிய உலகத்தில் தலை சிறந்த எழுத்தாளுமையாக பஷீர் புகழப் படுகிறார்? என்ற கேள்விகளை எழுப்பி நம்மை ஏமாற்றும் அளவிற்கு எளிமையானது அவரது நடை. அந்த எளிமையே அதன் அழகு , அதன் கம்பீரம். காதல் கதை என்பதைக் கடந்து கேரளத்து இஸ்லாமிய வாழ்க்கையையும் அதன்மீது அவருக்கிருக்கும் சிறுசிறு விமரிசனங்களையும் சேர்த்தே எழுதுகிறார் பஷீர்.

குழந்தைகளின் உலகை மையமாக வைத்து எழுதப்படும் புனைவு பகுதிகள் பெரும்பாலும் பெரியவர்களின் மொழியையும் காட்சியையுமே பயன்படுத்தும். அவை அதிகபிரசங்கித்தனமாகத் தென்படும் அபாயம் எப்போதுமே உண்டு. ஆனால் பஷீரின் உலகம் குழந்தையால் வரையப்பட்ட அழகான உலகம். அங்கே ஒவ்வொருவரும் தங்கள் பால்யத்தின் நுட்பமான நெடிகளையும், ஒலிகளையும், முகங்களையும்  கண்டுணர முடியும்.

பால்ய கால சகியை வாசிக்கையில் நுள்ளலும், பிராண்டல்களும், வெகுளித்தனமும், கற்பனைக் கனவுகளும், வெள்ளந்தி மனமும் நிறைந்த நம் பால்ய நினைவுகள் கிளர்ந்து எழுகின்றன. எண்பது பக்கங்களில் ஒரு வாழ்க்கையை நம் முன் முழுமையாகச் சித்தரித்து காட்டுகிறார் பஷீர். தமிழில் மொழிபெயர்த்திருக்கும் குளச்சல். எம்.யூசுப் மிக இயல்பாகவும் சிறப்பாகவும் தன் பணியை செய்துள்ளார் என்பதைக் குறிப்பிட வேண்டும். தவறவிடக்கூடாத மகத்தான இலக்கிய ஆக்கம் இது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. 


மஜீது எண்ணுவது போல்..

'இல்லை..வாழ வேண்டும்..வாழ்க்கை! கடினமும் கூர்மையும் கொண்ட வேதனைதான். இருந்தாலும் வாழ வேண்டும்'.



பால்யகால சகி 
வைக்கம் முகம்மது பஷீர் 
மலையாளம்- தமிழ் மொழியாக்கம் 
காலச்சுவடு வெளியீடு

Thursday, June 22, 2017

மிதவை - நாஞ்சில் நாடன்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

மலக்குவியலை மொய்க்கும் ஈக்களை போன்று பெருநகர வீதிகளில் எப்படியும் பிழைத்திடலாம் எனும் நம்பிக்கையை மட்டுமே சுமந்துக்கொண்டு மனிதர்கள் நகரங்களை  ஒவ்வொரு நாளும்  மொய்த்துக்கொண்டே இருக்கின்றார்கள். இதழ் விரித்துக் காத்திருக்கும் பலவண்ண உயிருண்ணும் பூச்செடியைப் போல் நகரம் மனிதர்களை தன்னகத்தே ஈர்த்துக் கொண்டே இருக்கிறது. 


நாஞ்சில் நாடனின் மிதவை, அறுபதுகளின் பிற்பாதி மற்றும் எழுபதுகளின் தொடக்கத்தில் வாழும் தமிழக கிராமப்புற  பட்டதாரி இளைஞனின் வாழ்க்கையைப் பேசுகிறது. கிராமத்து வேலைகளுக்குச் செல்ல தயங்குமளவிற்கு கல்வியும் அது சார்ந்த மிதப்பும், அரசாங்க வேலையை அடைவதில் நிலவிய போட்டியும் இணைந்து பலரை வேலையின்றி அலைகழித்த காலம் அது. இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தையும் மனதில் கொண்டு  நம் தந்தை காலகட்டத்தில் இருந்த வாழ்வியல் போராட்டங்களை அணுகினால் அது பிழையான சித்திரத்தை அளிக்கக்கூடும். உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் நிச்சயம் அதன் அத்தனை சாதக பாதகங்களை கடந்து இன்று பல குடும்பங்களின் நிதிநிலைமையை உயர்த்தி மேலெழ வித்திட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. 





பி.ஏ. பட்டதாரியான சண்முகம் பெரிய ஒரு குடும்பத்தின் மூத்த வாரிசு. பெரியசாமி ஐயரின் நிலத்தைக்  குத்தகையெடுத்து வெள்ளாமை செய்துகொண்டிருந்த தந்தை, கல்வி கற்ற தன் மகன் சண்முகம் குடும்ப பாரத்தை சுமப்பான் என்று ஆழமாக நம்புகிறார். இரண்டாம் வகுப்பில் பி.ஏ. தேறிய சண்முகம்தான் அவர்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி. படிப்பை முடித்து மூன்றாண்டுகளாக வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பங்கள் நிரப்பியும், அதற்கு பணம் கட்டியுமே காலம் கழிகிறது. உயரிடத்து சிபாரிசோ, வேலைக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணமோ அவனுக்கு வாய்க்கவில்லை. மலைபோல் நம்பி இருந்த பட்டணத்து பெரியப்பாவிடமிருந்தும் எந்த தகவலும் இல்லை. வேலை தேடி பம்பாய்க்கு பயணமாகிறான். உணவும் வசிப்பிடமும் அமையாமல் வேலை தேடி நகரெங்கும் அலைகிறான். நகரத்து நெரிசலில் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறான்.    பல மாத போராட்டங்களுக்குப் பின்னர் ஒரு வேலையில் அமர்கிறான். சொற்ப சம்பளத்தில் பணம் சேமித்து ஊர் திரும்பவேண்டும் என கனவு காண்கிறான். கடைசியில் கடனாளியாக இருந்தாலும் கூட பூரிப்புடன் ஊர் திரும்புகிறான்.

நாஞ்சில் நாட்டு கிராமம், சென்னை மற்றும் பம்பாய் என நாவல் மூன்று களங்களில் விரிகிறது. அந்தந்த ஊரின் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் நம் கண் முன் நிறுத்துகிறார் நாஞ்சில். சண்முகத்தின் கதையைக் கொண்டு அன்றைய அரசியல்- சமூக நிலைகளையும் அதன் மீதான விமர்சனத்தையும் பதிவு செய்திருக்கிறார். உதாரணத்துக்கு ஒன்று: குத்தகைக்கு விட்ட பிராமணரின் வீட்டு திருமணத்தில் பிராமணர்களுக்கும் பிறசாதியினருக்கும் தனித்தனி பந்தியில் உணவு பரிமாறப்படுவதை எண்ணி வருந்தும் தந்தைக்கு, தன் நிலத்தில் பாடுபடும் கூலிகளை தாமும் அப்படித்தான் நடத்துகிறோம் என்பதை எப்படி புரியவைக்க முடியும் என்று  சண்முகம் திகைப்பதாக எழுதுகிறார் நாஞ்சில் - சாதிப் படிநிலையில் உயர்ந்த இடத்தைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திய பிராமணர்களுக்கு எதிராக இடைநிலைச் சாதியினரால் மேற்கொள்ளப்பட்ட  திராவிட இயக்கம் சாதிமறுப்பு இயக்கமாக மாறாமல் தேக்கமடைந்த நிலையை இங்கு நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.

பெரியப்பாவுடனான விவாதத்தின் போது,  பெரிய வீட்டுப் பிள்ளைகள் மட்டும் தான் மருத்துவராகவும் பொறியாளராகவும் ஆக முடியுமா என்ன? அதை மாற்றிக் காட்டுவோம் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சூழலில் ஆட்சியை பிடித்த பின்னர் என்ன மாற்றம் கண்டுவிட்டது என நொந்து கொள்கிறான் சண்முகம். ஆட்சிக்கு வருவதற்கு முன்வரை இருந்த திராவிட கழக அரசியலின் மீதான நம்பிக்கை அவர்கள் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே பொய்த்துப் போனதைப் பற்றிய மனத் தாங்கலை இந்நாவலில்  பதிவு செய்கிறார் நாஞ்சில்.  கிராமத்தில் இருக்கும் மாடசாமி அண்ணனும், பம்பாயில் நூலகத்தில் பதிவு செய்துகொள்ள உதவிய கவிபித்தனையும் கழக அரசியலின் எஞ்சி இருக்கும் லட்சியவாத பிம்பங்களாக கோடிட்டுக் காட்டுகிறார் நாஞ்சில். சாதியின் நுட்பமான அவமானங்களையும் அதை எதிர்க்க துணியாத தனது கையறு நிலையையும் ஒருங்கே மிதவையில் பதிவு செய்திருக்கிறார்.

‘தமிழ் நாவல் உலகில் வரலாறும் ஆன்மீகமும் தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் எனது நாவல்கள் ஆன்ம, சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைகளைப் பெற்றுத் தரும் வல்லமை கொண்டவை அல்ல. கும்பி கொதித்தவனுக்கு சோறு வடித்த கஞ்சித் தண்ணீரில் தேங்காய் துருவிப் போட்டு , தேங்காய் சிரட்டையில் ஊற்றி, கறுப்புக் கட்டியைக் கடித்துக் கொண்டு கொதிக்கக் கொதிக்க உறிஞ்சத் தருவதைப் போல – என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் நாஞ்சில்நாடன். ஆம், நாஞ்சிலின் நாயகன் மகத்தான லட்சியவாதியல்ல. ரயிலில் எதிரில் உறங்கும் பெண்ணின் காலை சுரண்டி இன்பம் காணும், ஆபத்தில் நண்பனுக்கு உதவும், அவமானங்களை மனதிற்குள் புதைத்து சகித்துக்கொண்டு தன்னை ஸ்திரபடுத்திக்கொள்ள முயலும் நம்மைப்போன்ற சாமானியன்தான் அவன்.

இந்த நாவலின் மிக முக்கியமான பலம் நாவல் முழுவதும் உயிரோட்டத்துடன் நடமாடும் மனிதர்கள். வீட்டைவிட்டு ஓடிச்சென்று சென்னையில் நடிகனாக மாறும் பெரியப்பா, அரும்பு மீசையுடனும் சந்தேகக் கண்களுடனும் சண்முகத்தை நோக்கும் சக பணியாளர் ஆச்சார்யா, பூனைக் குட்டியைத் தூக்கி வந்து பால் ஊற்றும் ரூபென் ஜோசெப், தங்க இடம் கொடுத்து ஆதரிக்கும் ஊர்க்கார ராணுவ வீரன் சுந்தரண்ணன், வாஞ்சையுடன் அன்னமிட்டு பம்பாயில் வேலை வாங்கிக் கொடுக்கும் அய்யர், சண்முகத்தின் குடிசை வீட்டிற்கு அருகில் வசித்து அவன் உடல் வேட்கையை சீண்டும் பருத்த உடல் கொண்ட அன்னம்மை, அரிசி கடத்தலில் சிக்கி சிறைசென்று திரும்பும் சகவாசியான செண்பகம் என ஒவ்வொரு பாத்திரமும் கச்சிதமான வார்ப்பு.

நாஞ்சில் நாடனின் நாவல்களைப் பற்றி பேசும்போது, நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கைப் பேசாமலிருக்க  முடியாது. அந்த மண்ணின் தமிழுக்கு தனிப்பட்ட  மொழிவடிவம் கொடுத்த முன்னோடிகளில் நாஞ்சிலும் ஒருவர் என நிச்சயம் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை வட்டாரவழக்கில் எழுதப்படும் நாவல், வாசகனுக்கு அந்த பிரதேசத்து பண்பாட்டையும் வாழ்க்கையையும் புதிய சொற்களையும் அறிமுகப்படுத்தும் அதேவேளையில் நாவலை வாசித்து உள்வாங்க தடையாகவும் இருக்கக்கூடாது. இந்த சமநிலையை நாஞ்சிலின் எழுத்தில் காண முடிகிறது என்றே தோன்றுகிறது.  

சில வருடங்களுக்கு முன் ஒருமுறை பம்பாய் சென்றுள்ளேன். டிட்டுவாலா  பிள்ளையார் கோவில், எலிபண்டா குகைகள், ஜுஹூ கடற்கரை, இஸ்கான் கோவில் என சில சுற்றுலா தலங்களுக்கு சென்றுவந்தது சுமாராக நினைவில் இருக்கிறது. பொதுவான டூரிஸ்டுகள் பார்வையில் சிக்காத மற்றொரு பம்பாய் உண்டு. கிரெகொரி டேவிஸ் தன் வாழ்வனுபவங்களைக் கொண்டு எழுதிய சாந்தாராம் எனும் நூலில் பம்பாயின் இருண்ட பக்கங்களை அற்புதமாக சித்தரித்திருப்பார். பம்பாயின் நிழல் உலகத்தையும், விளிம்பு மனிதர்களையும், கழிவுகள் மிதக்கும்  குப்பத்து வாழ்வையும் வாசிக்கும்போது மனம் பதறும். மிதவையில் நாஞ்சில் காட்டும் பம்பாயில் நிழலுலகச் சித்தரிப்புகள் இல்லையென்றாலும், விளிம்புநிலை மக்களால் நிரம்பி வழியும் நாம் பார்த்திடாத மற்றொரு பம்பாயை மிக நுணுக்கமாக விவரிக்கிறார். நேவிநகரில் ராணுவ குவாட்டர்சில் திருட்டுத்தனமாக பதுங்கி அங்கிருந்து தப்பிப் பிழைத்து 'சாலில்'  இருபத்தேழு பேருடன் தங்கி பின்னர் அங்கிருந்து குடிசைக்கு இடம்பெயர்கிறான். 

 பெருநகரத்தில் ‘சன்டாசுக்கும்’ சாப்பாட்டிற்கும் அலைந்துகொண்டே இருக்கிறான் சண்முகம். நாவலை வாசிக்கும்போது இதையே ஏன் மீண்டும் மீண்டும் வளர்த்து எழுதுகிறார் என்று தோன்றக்கூடும். ஆனால், யோசித்துப் பார்த்தால், இடம்பெயரும் மனிதனுக்குள்ள மிக முக்கியமான பிரச்சனைகள் இவைதான் என்று தோன்றுகிறது. குறைந்த செலவில் நல்ல உணவைத் தேடி பம்பாய் முழுவதும் அலைகிறான் சண்முகம். தண்டவாளம், வெட்டவெளி, தமிழ் மையம், ரயில்நிலையம் என ‘சன்டாசுக்கு’ போக சுகாதாரமான இடத்தைத் தேடியும் அலைகிறான். நண்பர்களற்ற அன்னிய மண்ணில் ஆதரவையும் நட்பையும் தேடுகிறான்.

 தன்னுடைய இடத்தை சண்முகம் வென்றுவிடுவானோ என்று அஞ்சி சண்முகத்தின் உழைப்பைச் சந்தேகிக்கும் ஆச்சாரியா பற்றி சிந்திக்கும் வேளையில் அவனுடைய தகுதியையும் திறமையையும் எண்ணி வியப்படைகிறான் சண்முகம். பரீட்சையில் தேறியவுடன் பெரியப்பா வீட்டில் அண்ணன் அவமானப் படுத்துகிறான். உணவு உண்ணும்போது தினமும் தந்தை அவமானபடுத்துகிறார். நூலகத்தில் உறுப்பினராக முயலும்போது அங்குள்ள நிர்வாகிகளால் அவமானபடுத்தபடுகிறான்.  தொடர்ந்து நுண்ணிய அவமானங்களைச் சந்தித்து வரும் புனைவின் நாயகன் சண்முகம்  அவைகளை எண்ணி வருந்துகிறான், கோபப்படுகிறான்  ஆனால் எவர் மீதும் காழ்ப்போ வெறுப்போ அவனுக்கு இல்லை. அவனால் தன்னை அவமதித்தவர்களை மன்னிக்க முடிகிறது. அவர்களுடைய உயர்ந்த குணங்களை அங்கீகரிக்க முடிகிறது. ஒருவகையில் நாஞ்சில் எனும் தனிமனிதனின் அகத்தை எனக்கு நெருக்கமாகக் காட்டுவதாக இது இருக்கிறது. அத்தனை அவமானங்களையும் சகித்துக்கொண்டு தனக்கான இடத்தை உருவாக்க முயன்றுக்கொண்டே இருக்கிறான் சண்முகம். ஒருவகையில் இதுவே இந்த நாவலின் ஆன்மீக அம்சம் என கருதுகிறேன். 

இந்த நாவல் நேஷனல் புக் ட்ரஸ்ட் அமைப்பால் பத்து மொழியில் மொழி பெயர்க்கப்படப் போவதாக முன்னுரையில் சொல்கிறார் நாஞ்சில். அதற்கான அனைத்து தகுதிகளும் இந்த நாவலுக்கு உண்டு என்பதில் ஐயமில்லை.

எதையாவது பற்றிக்கொண்டு கரையேறிவிட முடியாதா என்று மனிதர்கள் ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆழியின் ஆழத்தில் அமிழ்ந்துவிடாமல் இருக்க கையில் கிடைக்கும் எதையும் பற்றிக்கொள்கிறார்கள். கரை கைக்கெட்டும் தொலைவில் நெருங்கும்போதேல்லாம் ஒரு பேரலை அவர்களை திசை மாற்றி அலைக்கழிக்கிறது. மனிதன் கரைதேடி அலைந்து கரையேற முடியாமல் அலைக்கழிந்து கரைந்து போகும் மிதவைதான் போலும். முடிவற்ற சாகரத்தில் காற்றால் அது விரும்பும் திசைக்கு அடித்துச் செல்லபடுகிறது கடலில் மிதக்கும் மிதவை. மிதவையின் இலக்கை அது முடிவு செய்து கொள்வதில்லை. மனிதனின் வாழ்வும் அப்படித்தான் இருக்கிறது.

மிதவை
நாஞ்சில்நாடன்
தமிழ், புனைவு, நாவல்
விஜயா பதிப்பக வெளியீடு
பக்கம்- 152, விலை-rs.60/-

Wednesday, June 21, 2017

சென்னைக்கு வந்தேன் - பழ.அதியமான்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

'சென்னையினுடான உறவு ஆணின் முறையற்ற பெண் தொடர்பு போல. பிடிக்கும், ஆனால் வெளியே சொல்ல முடியாது’. எழுத்தாளார் கு.அழகிரிசாமியின் சத்தியவாக்கு இது என பழ.அதியமான்,.தான் தொகுத்த சென்னைக்கு வந்தேன் எனும் நூலின் முன்னுரையில் பதிவு செய்கிறார்  

சென்னை என்றில்லை உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான பெருநகரங்களுக்கும் இது பொருந்தக்கூடும்.


காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள இந்த தொகுப்பு நூலில் மொத்தம் பதினைந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், கே.ராமநாதன், கு.அழகிரிசாமி, சாமி சிதம்பரனார், அசோகன், க.நா.சு, ந.சிதம்பர சுப்பிரமணியம், ஜெயகாந்தன், எம்.வி.வெங்கட்ராம் ஆகியவர்கள் சரஸ்வதி இதழுக்காக 1958-59 ஆண்டுகளில் பட்டின பிரவேசம் பகுதியில் எழுதிய கட்டுரைகள், இவற்றுடன் சின்ன அண்ணாமலை, கொத்தமங்கலம் சுப்பு, உ.வெ.சா, சுந்தர ராமசாமி, மற்றும் புதுமைபித்தனின் தனிக் கட்டுரைகளையும் இணைத்து தொகுப்பாக்கியுள்ளார் பழ.அதியமான்.

இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது வந்து விழும் பொதுச் சித்திரம் என்னவென்றால் நமது இலக்கிய முன்னோடிகளில் பலரும்  தங்கள் வசதியான வாழ்க்கையை (அல்லது நிம்மதியான வாழ்க்கையை) கைவிட்டு மகத்தான இலக்கிய ஆக்கங்களைப் படைக்கும் கனவுகளோடு இந்த பெரு நகரத்தில் காலடி வைத்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்களை உதாசீனப்படுத்தி அவமானங்களுக்கும்  புறக்கணிப்புகளுக்கும் பழக்கப்படுத்திய பின்னர் அள்ளி அரவணைத்துக் கொள்கிறது சென்னை. பட்டணத்து  வாழ்க்கையைப்   பற்றி விசனப்பட்டுக்கொண்டே இருந்தாலும் இவர்கள் பெரும்பாலும்  நகரங்களை விட்டுத் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லவில்லை. 

பெரும்பாலான கட்டுரைகள் இலக்கிய ஆளுமைகளின் படைப்புலக உறவு வட்டத்துக்குள் சுருங்கிவிடுகின்றன. அவர்கள் சந்தித்த இலக்கிய ஆளுமைகள், இலக்கிய நண்பர்கள், கொண்ட இலக்கிய பிணக்குகள், ‘இலக்கிய போலிகள்’, பெரிய மனிதர்களின் சின்னதனங்கள்’ என்றே பெரும்பாலான கட்டுரைகள் விரிகின்றன. ‘இலக்கியத்திற்காக வீட்டை விட்டு வெளியேறக்கூடிய தெம்பு இருந்தால்தான் ஒருவன் இலக்கிய உலகத்திலே முன்னேற முடியும்’ என்று ஒரு கட்டுரையில் ராமநாதன் சொன்னதாக வரும் மேற்கோள்தான் இவர்களின் ஆதார நம்பிக்கையாக இவர்களை இயக்கியதோ எனும் எண்ணம் எழுகிறது. வளர்ச்சிக்கான வாய்ப்பை எண்ணி மகிழும் அதே தருணம் கிராமத்து வாழ்விற்கான ஏக்கமும் தொனிக்கிறது. பொதுவாகச் சொன்னால்,கிராமத்து மனிதர்களின் நகரத்து வாழ்க்கை பற்றிய பதிவுகள் என்றும் இக்கட்டுரைகளை வகுக்கலாம். 

ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு ரகம் என்றாலும் என்னைக் கவர்ந்த கட்டுரைகள் என்று எம்.வி.வெங்கட்ராம், சாமி சிதம்பரனார் மற்றும் ஜெயகாந்தன் எழுதிய கட்டுரைகளைச் சொல்லலாம். சென்னைக்கும் தான் சொந்த ஊருக்குமான ஊசலாட்டமாக விரிகிறது சாமி சிதம்பரனாரின் அனுபவம். ஒவ்வொரு தொழிலாக தொடங்கி கைவிட்டுவிட்டு எழுதுவதற்காக சென்னைக்கு வருகிறார் சாமி சிதம்பரனார், பின்னர் கொஞ்சம் தெளிந்தவுடன் மீண்டும் ஊருக்கு போய் தொழில் தொடங்குகிறார். தான் உண்மையில் ஒரு எழுத்தாளன் தானா என்பது தெரியவில்லை ஆனால் பல வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் அவர். கையில் தான் மொழிபெயர்த்த மூன்று நான்கு பிரதிகளுடன் சென்னையை வந்தடைகிறார் எம்.வி.வெங்கட்ராம். சில வருத்தங்கள் துரோகங்கள் என அவருடைய வாழ்க்கை பாதை சுழிந்து தன்னை பிற எழுத்தாளர்கள் சமானமாக கருத வேண்டும் என தீவிரத்துடன் உழைத்து அந்த நிலையை எட்ட முயல்கிறார் அவர். எழுதுவதற்காக தான் சென்னைக்கு வரவில்லை ஏனெனில் தான் ஒரு பிறவி எழுத்தாளன் என்று தனக்கே உரிய பாணியில் அறிவிக்கிறார் ஜெயகாந்தன்.

சி.சு.செல்லப்பாவின் கட்டுரையில் அப்போதே வ.ராவிற்கும் கல்கிக்கும் நடந்த பாரதி மகாகவியா எனும் விவாதத்தின்போது வராவிற்கு ஆதரவாக புதுமைபித்தன் ராமையா உட்பட பலரும் பகலிரவு பாராமல் எழுதிக் குவித்ததை பற்றி சொல்கிறார். மணிக்கொடி அலுவலக அரட்டைகளுக்கு இடைஞ்சலாக அருகாமையில் இருந்த வங்காளிகளின் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எத்தனையோ முறை சொல்லியும் அவர்கள் தங்கள் உற்சாகத்தைக் கைவிடுவதாக இல்லை. ஒருநாள் ராமையாவும் ஆர்யாவும் தகரத்தையும் கோலையும் வைத்துக்கொண்டு வெளுத்து வாங்கி, அந்தச் சுற்று வட்டாரத்தையே பீதிக்குள்ளாக்கி அவர்களை வாயடைக்க வைத்த வேடிக்கையான நிகழ்வை நினைவு கூர்கிறார் செல்லப்பா.

ஒவ்வொருவரும் சென்னையைத் தேடிக் கண்டடையும் கதை சுவாரசியமானது. திருநெல்வேலியில் சர்க்கார் குமாஸ்தாவாக காலம் கழித்த வல்லிக்கண்ணன் தன் வேலையைத் துறந்து சென்னைக்கு வருகிறார். அதுவும் எப்படி! சென்னைக்கு வரும் முனைப்பில் மதுரை வரை மூன்று நாட்கள் நடந்தே வருகிறார் அவர். கிடைத்த சப் ரெஜிஸ்த்திரார் ஆபீஸ் குமாஸ்தா வேலையையும் விட்டுவிட்டு இடைசேவல் எனும் குக்கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் அழகிரிசாமி. வெகுகாலம்வரை எழுதுவதற்கு காசு கொடுப்பார்கள் என்பதே தெரியாத ‘அசடாக’ எழுதி கொண்டிருந்திருக்கிறார் சாமி சிதம்பரனார். இலக்கியம் படைக்க தகப்பனாருடன் கோபித்துக் கொண்டாக வேண்டும் எனும் இலக்கிய மரபை கஷ்டப்பட்டு கட்டிக் காப்பாற்ற முயன்று கடைசியில் அப்பாவின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டு ஒரேயொரு டைப்ரைட்டருடன் சென்னைக்கு வரும் க.நா.சு, அந்த டைப்ரைட்டரையும் ஹோட்டல் வாடகைக்கு ஈடுசெய்யப் பறிகொடுத்து விடுகிறார். திருட்டு ரயிலில் ஏறி சென்னையை வந்தடைந்த ஜெயகாந்தன் விளையாட்டாகத் திருடத் தொடங்கி செருப்பு திருடி மாட்டிக்கொண்டு வெட்கி ஊர் திரும்பி, வாழவேண்டும் எனும் வெறியுடன் மீண்டும் சென்னையை வந்தடைகிறார். ஆதீனத்தின் கோரிக்கைக்கு இணங்கி மத்தியார்ச்சுன மான்மியம் எனும் தல புராண நூலை அச்சிட சென்னைக்கு வருகிறார் உ.வே.சா. இப்படி ஒவ்வொருவரும் சென்னை வர ஒவ்வொரு கதை.

“என் வாழ்நாளில் அன்றுதான் நம் செருப்பை கழற்றிப்போட மற்றொருவனுக்கு காசு தர வேண்டிய நிலை உருவாகி இருப்பதைத் தெரிந்துகொண்டேன். முதலாளித்துவச் சமுதாயம் இப்படித்தான் இருக்கும் என்றும் கம்யுநிசச் சமுதாயத்தில் இலவசமாக செருப்பை போட்டுவிட்டுப் போக முடியும் என்றும் நினைத்தேன்.” என்று பதினேழு வயதில் சென்னைக்கு வந்த தன் அனுபவத்தை எழுதுகிறார் சுந்தர ராமசாமி..           

'சிகரெட்டு துண்டுகள் சூழ அதன் மத்தியில் படுக்கை விரித்து மணிக்கொடி அலுவலகத்தில்  படுத்திருக்கும் திருவாளர் விருதாசலம்தான் தமிழின் தலை சிறந்த சிறுகதை ஆசிரியன் புதுமைபித்தன்,; என்று விரியும்  சி.சு செல்லப்பாவின் அறிமுக விவரிப்பு  ஒரு காட்சியாக மனத்திரையில் ஓடிக்கொண்டே இருக்குமளவுக்குத் துல்லியமாகப் புதுமைபித்தனைச் சொற்களில் படம் பிடித்துவிடுகிறது.. உலகப்போர் சமயத்தில் சென்னைக்கு வந்த அசோகனின் எழுத்து சிப்பாய்களும் விலைமாதர்களும் நிறைந்த அன்றைய சென்னையை விவரிக்கிறது. ரயில்வண்டிகளும் ட்ராம் வண்டிகளும் ஓடிக்கொண்டிருந்த 1930-40 களின் சென்னையைப் பற்றி வாசிக்கும் போது நான் கண்ட, நான் வாழ்ந்த சென்னையை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

லாரியில் தண்ணீர் பிடிக்க குடங்களுடன் முண்டியடிக்கும், காலி மனைகளில் எல்லாம் பிளாஸ்டிக் குப்பையை கொட்டி தன் வீட்டை சுத்தமாக வைத்திருக்கும், முகமறியாத பண்பலை குரல்கள் வீட்டுக்கு வீடு ஒலிக்கும் , முகமெல்லாம் கரிபூசிவிடும் வாகனங்கள் நிறைந்த இந்த சென்னை மாநகரத்தில் ஐந்தாண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். அங்கு வாழ்ந்த காலத்தில் சென்னையையும் அதன் அழுக்கையும் ஒழுங்கற்ற அதன் மக்களையும் கரித்துக் கொட்டாத நாளே இல்லை. அழுக்குகளும், குப்பைகளும், மீறல்களும் மட்டுமல்ல சென்னை. மாறாக அவையனைத்தையும் தன்னிடத்தில் கொண்ட ஒரு குட்டி பிரபஞ்சம். அதன் அத்தனை அபத்தங்களையும் மீறி சென்னை இன்று எனக்கு அழகாகத் தெரிகிறது. தன்னை நோக்கி ஓடிவரும் அத்தனை அபலைகளையும் பெருங்கருணையுடன் அரவணைத்துக்கொள்ளும் தாய் அவள். நாகரீகமற்ற முரட்டு தாயாக இருந்தாலும், அசிங்கமாக இருந்தாலும்  அவள் கருணையுள்ளம் கொண்ட தாய்.

இந்தத் தொகுப்பு நூலிற்கு அதியமான் எழுதிய முன்னுரை இந்த நூலின் சாரம்சத்தை புரிந்துகொள்ள உதவும். ‘தொழுதுண்டு பின்செல்லும் நகரங்கள் சிந்தனையின் முன்னோடும் பிள்ளை. கிராமம் அதற்கு உணவூட்ட உழுதுண்டு பின்நிற்கும் தாய்.’ என்று கிராமத்திற்கும் நகரத்திற்கும் உண்டான உறவைப் பேசுகிறார் அதியமான். கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயரும் மனிதனின் கனவு முழுவதையும் கிராமமே நிறைக்கிறது ஆனால் அவனுடைய யதார்த்தம் என்னவோ நகரம்தான். இன்று கிராமங்களுக்கு உற்சாகத்துடன்  திரும்பி வருபவர்கள் மூன்றே நாட்களில் அந்த உற்சாகத்தை இழந்து விடுகின்றனர். அவர்களுடைய கிராமமும் அதன் மாந்தர்களும் நினைவில் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கக்கூடிய பிம்பங்கள் என்பதே இன்றைய யதார்த்தம். 

பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள புதுமைபித்தனின் கட்டுரை ஒருவகையில் இந்த நூல் எழுப்பும் எண்ணங்களைப் பற்றிய தொடர் விவாதங்களுக்கு களம்  அமைத்துக் கொடுப்பதாக இருக்கிறது. “நாகரீகம் என்பது சமுதாயம் இற்றுப்போகாமல் எடுத்துக் கட்டிய ஞாபகச் சரடு; நினைவுப் பாதை; சமுதாயம் , எறும்புச் சாரை போல் ஊர்ந்து ஊர்ந்து பழக்கப்பட்டுப், போன பாதை” என்று எழுதுகிறார் அவர். அன்றாடம் உழைத்துக்கொண்டிருக்கும் நகர மனிதனுக்கு ‘சுடுகாட்டுக்கும் தம்முடைய மிச்ச வாழ்வுக்கும் இடையில் கிடக்கும் ரேழியாக’ கிராமம் தென்படுகிறது என்று இன்றைய நகர மனிதனுக்கும் பொருந்தக்கூடிய  கிராமத்து வாழ்வை விவரிக்கிறார். பட்டணங்கள் என்றால் சிந்தனையின் பயனால் இயற்கையின் கை பார்க்காமல் வாழ மனிதன் வகுத்துக்கொள்ளும் ஏற்பாடு என்று பட்டணத்து வாழ்க்கையை வரையறுக்கிறார்.     
    
இன்றைய காலகட்டத்தை வைத்து சிந்திக்கும்போது, மெல்ல நகரங்களும் கிராமங்களும் தொலைதொடர்பு புரட்சி  எனும் ஒற்றைக்  குடையின் கீழ் பேதங்கள் மறைந்த கரிய பெரும் நிழலாக உருமாறிக்கொண்டிருப்பதை உணர முடிகிறது. பெரும்பாலும் வாழ்வின் ஒரு பகுதியை பெருநகரங்களில் கழித்தவர்கள் அத்தனை எளிதில் அவர்களாகவே இடம்பெயர மாட்டார்கள். அப்படியே மாறினாலும் அதைக் காட்டிலும் பிரம்மாண்ட நகரங்களே அவர்களது கனவாக இருக்கின்றன. நகரத்து மனிதன் நெரிசலில் தன் துக்கங்களைப் புதைத்துக் கொள்ளப் பழகுகிறான். பெருநகரங்கள் ஜெயமோகன் கதைகளில் வரும் யட்சிகளை போல், அத்தனை எளிதில் நம்மை விட்டுவிடாது.

வல்லிக்கண்ணன் சொல்வதுபோல் ‘சென்னையில் கிட்டும் அனுபவம் சென்னையில் மட்டுமே கிட்டும்’. நகரவாசிகளும், நகரத்தில் வசித்தவர்களும் தவறவிடக்கூடாத புத்தகம் இது.


சென்னைக்கு வந்தேன்
தொகுப்பாசிரியர்- பழ.அதியமான்
காலச்சுவடு வெளியீடு
தமிழ், கட்டுரைகள்
விலை-ரூ.95

Sunday, June 18, 2017

குமாயுன் புலிகள்- ஜிம் கார்பெட்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

நிசப்தமான நள்ளிரவின் இருளில், கானக மரக்கிளையொன்றில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். காலைமுதல் காட்டில் நடந்து களைத்துப்போன உடல், கண்கள் சொருகி உறக்கத்தில் தன்னையிழக்கக் காத்திருக்கும்பொழுது மென்பாதமொன்று அடியெடுத்து நடந்து வரும் சலனங்களும் உறுமலும் கேட்கின்றன - நீங்கள் அமர்ந்திருக்கும்  மரக்கிளையை  எம்பிக்குதித்தால்  அது தொட்டுவிட முடியும். அருகாமையில் நெருங்கி வந்துவிட்ட பத்தடி நீள ஆட்கொல்லி புலி ஒன்றிடமிருந்து அந்த உறுமல் எழுந்தால் எப்படி இருக்கும்? நாம் வியர்த்தெழும் கனவில் மட்டுமே நமக்கு அது சாத்தியமாகக்கூடும். அத்தகைய அனுபவங்கள் உண்மையில் வாய்க்கப்பெற்று அதை தரமான மொழியில் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தும் வாய்ப்பு கிட்டுவது வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியம். அவ்வகையில் ஜிம் கார்பெட்டின் குமாயுன் புலிகள் ஒரு அற்புதமான வாசிப்பனுபவத்தை நமக்களிக்கிறது.



ஆம்னிபஸ் இந்த வாரத்தை கானுயிர் வாரமாக கொண்டாடுகிறது. பறவைகள், குதிரைகள், வரிசையில் இன்று நம் தேசிய விலங்காக இருப்பினும், அழிவின் விளிம்பில் நிற்கும் புலியின் வாழ்க்கையைச்சொல்லும் நூல் அறிமுகம்தான் இன்றைய பதிவு. 


கானுயிர்கள் என் வாழ்வில் முதன்முதலாக எப்போது பரிச்சயமாயின என்று நினைவுக்கூர முயல்கிறேன். அநேகமாக சிறு வயதில் படித்த டிங்கில் காமிக்சும், சந்தாமாமா கதைபுத்தகமும் ஒரு தொடக்கமாக இருக்கலாம். இப்போது யோசிக்கையில் ஷிகாரி ஷாம்பு எனும் பாத்திரம்கூட ஒரு வகையில் கார்பெட்டின் பகடியோ என்று தோன்றுகிறது. நம்மைப் போன்றே சிந்திக்கும், நம்மைப் போன்ற உணர்வுகள் கொண்ட பறவைகளும் மிருகங்களும் வாழும் ஒரு அற்புத உலகம் காமிக்சின் உலகம். பஞ்சதந்திர கதையில் வரும் பிங்கலன் எனும் சிங்கமும், இரட்டைத் தலையும் ஒற்றை வயிறும் கொண்ட பாருண்ட பக்ஷியும், காலியா எனும் காகமும், கபீஷ் குரங்கும் ஜங்கிள் புக்கின் ஷேர்கானும், பாலுவும், பகீராவும் மனதை விட்டு  நீங்காதவை. 

கார்பெட் தன்னுடைய வேட்டை அனுபவங்களை பற்றி எழுதிய முதல் நூல்தான் குமாயுன் புலிகள். 1944ல் வெளியான ஆங்கில புத்தகமான man eaters of kumaon வணிக ரீதியாக மாபெரும் வெற்றியடைந்தது மட்டுமின்றி அக்கால விமர்சகர்களாலும் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழில் இதை மொழிபெயர்த்துள்ளார் தி.ஜ.ர. தமிழகத்தின் முக்கிய கானுயிர் ஆய்வாளர், தியோடர் பாஸ்கரன் அவர்களால் மேம்படுத்தப்பட்டு இப்போது காலச்சுவடு வெளியீடாக இந்த நூல் வந்துள்ளது.

ஜிம் கார்பெட்டின் வாழ்க்கை அசாதாரணமானது, ஒரு தேர்ந்த வேட்டையாடியாக தொடக்கத்தில் அறியப்பட்ட அவர் மெல்ல கானுயிர் புகைப்படக் கலைஞராக பரிணமிக்கத் தொடங்குகிறார், பின்னர் எந்த ‘பெரும் பூனை குடும்பத்து’ விலங்குகளை வேட்டையாடினாரோ அவைகளின் பாதுகாவலனாக உருமாறுகிறார். இன்றும் அவர் பெயரில் உத்தரகண்டில் உள்ள தேசிய புலிகள் சரணாலயமும் பூங்காவும் அவரது பெருமையை நமக்கு பறைசாற்றுகின்றன.

நூலை வாசிக்கையில் கார்பெட் ஒரு தேர்ந்த வேட்டையாடி மட்டுமின்றி நல்ல கதைசொல்லியும் கூட  எனும் உணர்வு மேலிடுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் சிறுகதைக்குரிய நேர்த்தியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேட்டையின்போதும் அவர் அசாத்திய துணிவுடனும் நிதானத்துடனும் அதைக் காட்டிலும் சமயோசித அறிவுடனும்,  பல உயிருக்கே ஆபத்தான நெருக்கடிகளையும் கடந்து வருகிறார். இந்த நூலில் கார்பெட் தன்னுடைய பலவீனங்களை நம்மிடமிருந்து மறைக்க முயற்சிக்கவில்லை. வீடு திரும்பவும் போதிய துணிவின்றி ஏன்தான் இங்கு வந்து மாட்டிக்கொண்டோமோ? என்று வேட்டையின்போது அங்கலாய்த்ததையும் அவர் பதிவு செய்கிறார். புலியைச் சந்திக்க வேண்டும் எனும் ஆவலும் அதே நேரம் சந்தித்து விடுவோமோ எனும் பயமும் அவரை அலைக்கழித்தன என்றும் எழுதுகிறார்.    



புத்தகம் முழுவதும் புலி, காடு, இந்திய மக்கள் என பலவற்றை பற்றிய மிக நுண்ணிய அவதானிப்புகளால் நிறைந்திருக்கிறது. புலியின் கால்தடத்தைக் கொண்டு அதன் நீளம் என்ன? அது எந்த வேகத்தில் செல்கிறது? ஏதேனும் இரையைக் கொண்டு சென்றதா என்று பல தகவல்களை அறிய முடியும் என்கிறார் கார்பெட். மரத்தில் பதிந்திருக்கும் நகப்பிராண்டல்களைக் கொண்டு பல தகவல்களை அறிய முடியும் என்கிறார் அவர். அதேபோல், சூழல் விவரணைகளுக்காகவே இந்த நூலை மற்றுமொரு முறை வாசிக்கலாம். புலன்களைத் தீட்டி வனங்களில் திரியும் வேட்டையாடியின் பார்வையில் விரியும் உலகம் என்பதாலோ என்னவோ கார்பெட்டின் வர்ணனைகளைக் கொண்டு நம்மால் துல்லியமான காட்சிகளும் சப்தங்களும் இணைந்த மெய் நிகர் அனுபவமாக ஒவ்வோர் அத்தியாயத்தையும் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. இமயமலைப் பகுதிகளில் உள்ள பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளும், மலை முகடுகளும் நம் கண்முன் விரிகின்றன.  

கார்பெட்டுக்கு சில தனிப்பட்ட பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் பிறருடைய நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாடுகிறான், ஆனால் அந்தரங்கத்தில் அவனுக்குள்ளும் ஏதோ ஒரு மூடநம்பிக்கை இருக்கவே செய்யும். ஆட்கொல்லி மிருகங்களைக் கொல்வதற்கு முன்னர் ஒரு பாம்பையாவது கொன்றால் தான் அந்த காரியம் சித்தியாகும் என்பது கார்பெட்டின் நம்பிக்கை. பெரும்பாலும் அவர் வேட்டைக்கு தனியாக செல்வதையே விரும்புகிறார், சிலகாலம், அவருடைய செல்ல வளர்ப்பு பிராணி ராபின் எனும் நாய் அவரோடு வேட்டைக்கு வந்தது. ஆயுதம் இல்லாத நபரை வேட்டைக்கு உடன் அழைத்து செல்வது மிகவும் ஆபத்தானது. அதேசமயம் ஆயுதத்தை சரிவர பிரயோகிக்க தெரியாதவருடன் வேட்டைக்குச் செல்வது அதைவிட ஆபத்து என்பதாலேயே அவர் தனியாகக் காட்டுக்குள் செல்கிறார். 

ஆரம்ப காலத்தில் எந்த கட்டுப்பாடும் இன்றி வேட்டையாடிய கார்பெட், பிற்காலங்களில் மனிதர்களைத் துன்புறுத்தும் ஆட்கொல்லி விலங்குகளை மட்டுமே வேட்டையாடுவது என்று தீர்மானம் செய்துகொண்டு அதையே இறுதிவரை பின்பற்றினார். உறங்கிக்கொண்டிருந்த புலியைச் சுட்டுக் கொன்றதும், அதுவரை ஆட்கொல்லியாக மாறாத அதே சமயம் எப்போது வேண்டுமானாலும் மாறிவிடும் நிலையில் அடிபட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த பீப்பல் பாநீ புலியை கொன்றதும் அவரை வெகுவாக வாட்டும் நினைவுகளாக மாறின.

புத்தகத்தின் தொடக்கத்தில் புலி ஒன்றும் நாம் கற்பனை செய்வதுபோல் கொடூரமான விலங்கல்ல என்று எழுதுகிறார். அத்தனை புலிகளும் ஆட்கொல்லிகள் அல்ல, மாறாக பல்லோ அல்லது உடலில் வேறு ஏதேனும் உறுப்பு பாதிக்கப்பட்டாலோ அல்லது முள்ளம்பன்றியின் முட்கள் குத்தி கிழித்து அடிபட்டிருந்தாலோ மட்டுமே ஒரு புலி ஆட்கொல்லியாக மாறுகிறது, மனிதன் ஒருபோதும் அதன் விருப்பத்தேர்வு இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறார். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுத்தையும் புலியும் ஒத்த குணம் கொண்டவையல்ல. ஆட்கொல்லியாக மாறிய பின்னர் வேங்கைக்கு மனிதர்கள் மீது எந்த பயமும் இருப்பதில்லை, ஆகவே பட்டப்பகலில் நடக்கும் அனைத்து கொலைகளுமே வேங்கையின் கைவண்ணம்தான். சிறுத்தை ஆட்கொல்லியாக மாறினாலும் கூட மனிதர்களை நேருக்கு நேராகச் சந்திக்கத் துணியாது என்பதால் பெரும்பாலும் இரவில் பதுங்கி பாய்ந்து கொல்கிறது. இதன் காரணமாகவே ஆட்கொல்லி புலியை வேட்டையாடுவது சிறுத்தையைக் காட்டிலும் சுலபமானது. சிறுத்தை. புலி என இரண்டு விலங்கினங்களுக்கும் முள்ளம்பன்றி மிகவும் பிடிக்கும் ஆனால் சிறுத்தை லாவகமாக நேரடியாக அதன் தலையை தாக்கி வேட்டையாடும், புலியோ முள்ளம்பன்றியை சரிவர எதிர்கொள்ளாமல் அதன் முட்களை தோலில் வாங்கி அவதியுறும். தானாகவே ரத்த வெறிக்கொண்டு மக்களை வேட்டையாடிய ஒரு வேங்கையைக்கூட தான் அறிந்ததில்லை என்கிறார் கார்பெட். மனிதர்கள் அதைச் சீண்டினால் ஒழிய அத்தனை சீக்கிரம் அது மனிதனைத் தாக்க முயற்சிக்காது.

அவருடைய வேட்டை பிரதாபங்கள் என்ற அளவில் மட்டும் இந்த நூல் நின்றிடாமல், அவர் பயணிக்கும் பகுதிவாழ் மக்களின் வீரத்தையும் தியாகத்தையும் பதிவு செய்கிறார் கார்பெட். அக்காவை புலியடித்துக் கொன்றதை அடுத்து அதை நேரில் கண்ட அதிர்ச்சியில் வாய்ப்பேசும் திறனை இழந்த தங்கை, அந்த புலியின் மரணம் குறித்தான செய்தியை கேட்டு மீண்டும் பேசத்தொடங்குவது ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு. அதேபோல் ராணுவத்திற்கு தேர்வாகிய மகன் காட்டுக்குச் சென்று திரும்பாததால் ஆட்கொல்லி நடமாடும் காட்டிற்குள் தன்னந்தனியாக இரவு முழுவதும் எவ்வித ஆயுதமும் இன்றி உலவிய முதியவரின் வீரச்செயல், அதுவும் அது ஒரு வீரச்செயல் எனும் பிரக்ஞை ஏதுமின்றி புலியால் கொல்லப்பட்ட மகனின் எலும்புகளைக் கொண்டு வரும் நிகழ்ச்சி மனதை பிசைகிறது. அதற்கு முன்பு வரை இருந்த பயம் என்ற ஒன்று என்ன? அதை அவரால் எப்படி கடந்து செல்ல முடிந்தது? மனித உணர்வுகள் சார்புத்தன்மை கொண்டவைதானா? 

சம்பாவதி, போவல்காட் பிரம்மச்சாரி, கண்டா, பீப்பல் பாநீ என நான்கு ஆட்கொல்லிகளை அவர் எதிர்கொன்ட கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எனக்கு இந்நூலில் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த பகுதி என்பது அவருடைய செல்லப்பிராணி ராபின் எனும் நாய் பற்றிய அத்தியாயம் தான். அவருடைய வேட்டைக்கு உதவிய, அவருடைய நெருங்கிய நண்பன் ராபின் ஒரேயொரு முறை நெருக்கடியான சூழலில் அவரை தனியே விட்டுவிட்டு ஓடிவிட்ட நிகழ்வை பகிர்கிறார். கார்பெட் அந்த நாயை பழி சொல்லவில்லை, வருத்தப்படவுமில்லை, மாறாக ஒரு நெருக்கடியை மனிதனும் நாயும் எப்படி வெவ்வேறு முறையில் எதிர்கொள்கின்றார்கள் என்பதை காட்டும் நிகழ்வாக அதை வேறோர் தளத்தில் அணுகுகிறார். 

வேட்டையாடியாக சுட்டுக்கொண்டிருந்த காலத்தில் கார்பெட் 33 பெரும் பூனை குடும்பத்து விலங்குகளைக் கொன்றிருக்கிறார். ஆனால் பின்னர் அப்புலிகளைக் காக்க குரல்கொடுக்கும் செயற்ப்பாட்டாளராக அவர் மாறிய இடம் மிக முக்கியம் என்றே கருதுகிறேன். புலியை துப்பாக்கியால் சுடுவதைக் காட்டிலும் மிகக் கடினமானது காமிராவில் சுடுவது என்று அவரே ஒப்புக்கொள்கிறார். வேட்டை மூலம் கிடைக்கும் சின்னஞ்சிறிய திருப்தி மற்றும் விருதுகளைக் காட்டிலும் வரலாற்று ஆவணமாக காலந்தோறும் தன்னுடைய பெயரைச் சொல்லும் புகைப்படங்கள் மற்றும் சலனப் படங்கள் எடுப்பது மிக முக்கியமானது எனக் கருதினார். எனினும் கார்பெட் போன்ற எத்தனையோ வேட்டையாடிகள் இந்திய மண்ணில் உலவிய கானுயிர்களை இரக்கமின்றி வெறும் வேடிக்கைக்காகவும் அன்னிய சந்தைக்காகவும்  அன்றும் இன்றும் வேட்டையாடி வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத வருந்தத்தக்க நிகழ்வு. அவர்கள் அனைவருக்கும் கார்பெட் போன்று மனமாற்றம் ஏற்படவில்லை, அதன் காரணமாகவே அவர் தனித்து தெரிகிறார். இன்றும்கூட வங்காளத்து புலிகளின் உடல் பாகங்கள்  சீன மருத்துவத்தில் பயன்படுவதால் அவை கண்காணிப்புகளை மீறி வேட்டையாடப்படுகின்றன. ஒற்றை கொம்பு காண்டா மிருகமும் அப்படியே.  

.   

"இயற்கையும் மனிதனும் என்று," எவரேனும் பேசத் தொடங்கும்போதெல்லாம் உண்மையில் எனக்கு சிரிப்புதான் வரும். இயற்கை என்பது எத்தனை பிரம்மாண்டமான ஒரு பேரிருப்பு, பேரியக்கம் - அதன் ஒரு மிகச்சிறிய பகுதி மனித இனம். இயற்கையும் மனிதனும் எனும் இருமை எத்தனை அபத்தமானது! மனிதன் இந்தப் பேரியக்கத்தின் ஒரு பகுதி என்றுணராது இயற்கையை தனக்கு வெளியே நிறுத்தி சம எதிரியாக பாவிக்கிறான். இயற்கையின் பிரமாண்டத்தில் ஒரு நகக்கண் அளவிற்கே இருக்கும் மனித இனம் தன்னை அனைத்துலக ரட்சகராக சிந்திக்கத் துணிவது வேடிக்கைதான். மனிதனும் இன்ன உயிர்களும் இயற்கையின் சக்தி ஊற்றிலிருந்து  பெறுவதிலும் கொடுப்பதிலும் ஒரு வித சக்தி சுழற்சி சமநிலை எப்போதும் உண்டு. ஆனால் மனிதன் அவனுடைய அதீத வாழ்விச்சை மற்றும் நுகர்வு வெறியின் காரணமாக இந்த சமநிலையை குலைக்கிறான். அனைத்தையும் உண்டு செரிக்கும் பகாசுரன் ஆகிவிடுகிறான். பிரபஞ்சமும் அதன் அத்தனை படைப்புகளும் அவன் உண்டு செரிக்க உருவாக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்கள். அவனுடைய ஒரே கேள்வி எதையும்  அவன் எப்படி தனக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதே. உடலின் ஒற்றை விரல்நுனி மட்டும் வீங்கி சிவப்பது போஷாக்கின் அறிகுறி அல்லவே.

மனிதன் காட்டை அஞ்சுகிறான், அவன் விரும்பாத ஏதோ ஒன்றை அவனுக்கு அது நினைவூட்டியப்படி இருக்கிறது. வளர்ச்சியின் பெயரால் அவன் காட்டை அழித்துக்கொண்டே இருக்கிறான். புலியோ கரடியோ பூனையோ தாவரன்களோ அவனுக்கு ஒரு பொருட்டல்ல. காடழித்து அதன் சிதை மீது விண்ணை முட்டும் தன் கோபுரங்களை எழுப்புகிறான். மனிதன் காட்டை அழிப்பது என்பது உண்மையில் அவனுடைய வரலாற்றை அழித்துக் கொள்வது. ஒருவகையில் தற்கொலைக்கு சமானம். இந்த ஆறுகோள் சுரண்டல் நாகரீகம் முடிவுக்கு வரவில்லை எனில் நாம் சந்திக்கப்போகும் இழப்பை எதிர்கொள்ள நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். 

காந்தி சொல்கிறார்- nature has enough in it to satisfy everyone’s need, but not to anyone’s greed.




குமாயுன் புலிகள்

ஜிம் கார்பெட்

தமிழில்- தி.ஜ.ர

காலச்சுவடு வெளியீடு 

Friday, June 16, 2017

பனிமனிதன் - ஜெயமோகன்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் ஆம்னிபஸ் தளம் குழந்தைகள் இலக்கியத்தைக் கொண்டாடுகிறது.  சிறார் இலக்கியத்தை பற்றிய எனது அடிப்படை புரிதல்களைப் பகிர்ந்துக்கொண்டு முன்செல்வதே சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.  ஓரளவு கோர்வையாக வாசிக்கத் தெரிந்த நாள் முதல் தினமலர் இதழின் சிறுவர் இணைப்பாக வெள்ளிதோறும் வரும் சிறுவர் மலரை வாசித்தது நினைவில் நிற்கிறது. இதழின் கடைசி பக்கத்தில் வரும் பலமுக மன்னன் ஜோ, பேய்ப் பள்ளி, சோனிப் பையன், எக்ஸ்- ரே கண், சிண்டன் போன்ற படக்கதை பாத்திரங்களின் உருவங்களைத் தெளிவாகவே நினைவுக்கூர முடிகிறது. பின்னர் கோகுலம், சந்தாமாமா, டின்கில் என்று சென்ற வாசிப்பு பதின்ம பருவத்தில் ஹாரி பாட்டருக்குத் தாவியது. ஏறத்தாழ அதே சமயத்தில் தமிழில் கல்கியும், தேவனும் எனக்கு அறிமுகமானார்கள்.



நண்பர் ஒருவர் சொன்னார், "குழந்தைகளுக்கான திரைப்படம், புத்தகம் என்று முன்னிறுத்தப்படுபவை பெரும்பாலும் குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களையே கவருகின்றன. காரணம் மனித மனம் அந்த அனுபவத்தின் வாயிலாக தன்னுடைய பால்யகால நினைவுகளைத் திரட்டி தற்காலிகமாகவேணும் காலயந்திரத்தில் பின்னோக்கிப் பயணிக்கிறது. முற்றுபெறாத ஏக்கங்களின், கனவுகளின் கதவுகளை அவை தட்டித் திறக்க முயல்கின்றன. கொண்டாடப்படும் அனைத்து சிறுவர் இலக்கியங்களும், படைப்புகளும் பெரியவர்களுக்கானதே. வளர்ந்த பெரியவர்களின் வாழ்வியல் வேட்கைகளில் சிக்கி ஒளிந்து நின்று குறுகுறுப்புடன் காத்திருக்கும் நமக்குள்ளிருக்கும் அந்தக் குழந்தையின் ஏக்கத்தை தீர்ப்பதே தேர்ந்த சிறார் இலக்கியம்," என்றார் அவர். "பெரியவர்கள் மீண்டும் குழந்தை பருவத்து பொருந்தாத ஆடைக்குள் நுழைய முனைவது போல குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தங்களை பெரியவர்களாகவே பாவித்து, விரைவில் வளர்ந்து ‘பெரிய ஆளாக’ வேண்டும் என்றே முனைகிறார்கள்," என்றார். யோசித்துப் பார்த்தால் இதில் ஓரளவு உண்மை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.

சிறுவர் இலக்கியத்திற்கான வரையறை என்ன என்பதே ஒரு முக்கியமான கேள்வி. தேர்ந்த சிறுவர் இலக்கியம் நமக்கு எவற்றை அளிக்கிறது?  எனது வாசிப்பின் எல்லையில் நின்றுகொண்டு சிறார் கதைகளில் தென்படும் சில வகைமாதிரிகளை சுட்டிக்காட்ட முனைகிறேன்.

பெரும்பாலும் கதையின் மைய பாத்திரம் ஒரு சிறுவன் அல்லது சிறுமி அல்லது ஒரு அதிநாயகன்

உடன்வரும் உற்ற தோழர் குழாமில் ஒரு வளர்ப்புப் பிராணி

கதை நாயகனுக்கு ஏதோ ஒரு அதீத திறன் வாய்த்திருக்கும்.

வீர வழிபாடு என்பதே பெரும்பாலான சிறார் கதைகளின் மைய இழை என சொல்லலாம்.

அபார கற்பனை வீச்சு கொண்ட தர்க்க அதீத நிகழ்வுகளால் நிறைந்த  ஃபேண்டஸி உலகம்.

கதை ஏதோ ஒருவகையில் அற மேன்மையை வலியுறுத்தும்.

இத்தனை வகைமாதிரிகளிலும் சிறுவர் இலக்கியத்தில் வீரவழிபாடு எனும் கதைக் களத்தை தாண்டி வேறோர் தளத்தைப் பேசும் கதைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். நீதிக்கதைகள், வீரவழிபாட்டுக் கதைகள் ஆகிய இவ்விரண்டின் பின்புலத்தில் நோக்கினால், தமிழின் மிக முக்கியமான சிறார் இலக்கிய ஆக்கமாக பனி மனிதனை குறிப்பிட முடியும்.

ஈசாப் நீதிக்கதைகள், விக்கிரமாதித்தியனும் வேதாளமும், பஞ்ச தந்திரகதைகள் - இவற்றில் சிறார்களுக்கான அற்புதமான கதைக் களன் உள்ளது என்றே குறிப்பிட வேண்டும். ஆனால் இவ்வகை நீதிக்கதைகளில் உள்ள சிக்கல், இவை பெரிய அளவிலான கற்பனைகளுக்கு இடம் கொடுப்பதில்லை. முல்லா நசுருதீன் கதைகளும், தெனாலி ராமன் கதைகளும், பீர்பால் கதைகளும் சாதுர்யமான நகைச்சுவையை களமாகக் கொண்ட கதைகள். அதிலுள்ள ஒருவித மிஸ்டிக் தன்மை காரணமாக முல்லா கதைகள் மீது எனக்கு சற்று கூடுதலான ஈர்ப்பு உண்டு. 

குழந்தைகளின் வாழ்வில் கதை எப்போது உள்நுழைகிறது? தாத்தாக்களும் பாட்டிகளும் வாய்மொழியாக சில கதைகளை உருவாக்கி நமக்களிக்கின்றனர். முடிவற்ற சாத்தியக்கூறுகள் உள்ளடங்கிய கதைகள். நேரத்திற்கு ஏற்ப, கதை கேட்பவருக்கு ஏற்ப உருமாறும் கதைகள். அதன்பின்னர் படக்கதைகள் காமிக்சுகள். பெரும்பாலான காமிக்ஸ் கதைகள் மேற்குலக தாக்கத்தில் உருவாகி இங்கு சந்தைப்படுத்தப்படுகிறது என்றே தோன்றுகிறது. இதற்கு ஒரு விதிவிலக்கு அமர் சித்திர கதா. 

பொதுவாக, வாய்வழி கதையாடல்- படக்கதை – நீதிக்கதை- நாவல் என்பதே இளமையிலிருந்து புனைவுலகை வந்தடையும் வாசகனின் பயணமாக இருக்கிறது. நீதிக்கதையிலிருந்து நாவலுக்கான தாவல் என்பது கொஞ்சம் அதிகமான தூரம்தான். அந்த இடைவெளியைக் குறைக்கும் விதமான இடைநிறுத்த படைப்புகள்தான் சிறார் இலக்கியம். நாவலின் அளவுக்கே வாழ்வின் விரிவையும் தரிசனத்தையும் சொல்லும் அவை அதே வேளையில் சிறார்களின் உலகத்திற்கு நெருக்கமாகவும் இருத்தல் வேண்டும், அத்தகைய படைப்புகளையே சரியான இடைநிறுத்தம் என்று கூறலாம். அவையே வாசிப்பின் திசையை முடிவு செய்யக்கூடியவை. 

சுயம் உருவாகும் தருணத்தில் வாசிக்கக் கிடைப்பவை நம்முடைய ரசனையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதை என் அனுபவம் சார்ந்தே புரிந்துகொள்கிறேன். பதின்ம வயதில் நான் வாசித்த ஜோனாதன் லிவிங்ஸ்டன் எனும் கடற்புள்ளு கதை, மற்றும் தாகூரின் காபுலிவாலா கதை, இவ்விரண்டும் என் வாசிப்பின் திசையை தீர்மானித்தன என்றே இன்று கருதுகிறேன். 



தினமணி நாளிதழின் சிறுவர் சிறப்பு இணைப்பிதழாக வெளிவரும் சிறுவர்மணியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடராக வந்த கதைதான் ஜெயமோகன் எழுதிய பனிமனிதன். முன்னுரையில் இது சிறுவர்களுக்கான கதை எனினும் சிறுவர்களுக்கானது மட்டுமல்ல, வாழ்க்கை பற்றிய சில அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது என்பதால் பெரியவர்களும் வாசிக்கக் கூடிய கதை என்று எழுதுகிறார் ஜெ. உண்மைதான், ஒருவனது சுயமறியும் பயணம் இங்கிருந்து தொடங்கக் கூடும். அதற்கு அவன் அறிவியலையோ அல்லது ஆன்மீகத்தையோ தனக்கு துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடும்.

கதையில் மூன்று பாத்திரங்கள் காத்திரமான மூவகை போக்குகளின் குறியீடுகளாக எனக்கு புலப்பட்டனர். ராணுவ அதிகாரி பாண்டியன், டாக்டர் மற்றும் கிம். இதில் கிம்மும் டாக்டரும் தங்களது பாதையை தெளிவாக ஆன்மீகத்திலும் அறிவியலிலும் கண்டுகொண்டவர்கள். இவ்விரண்டு போக்குகளின் மீதும் ஐயம் கொண்டு அலைகழியும் பாண்டியன் மூன்றாவது வகை. 

பனிமலையில் பதியும் பிரம்மாண்டமான கால் தடம் பற்றி ஆராய அனுப்பப்படுகிறான் ராணுவ அதிகாரி பாண்டியன். அவனுடைய ஆய்வுக்கு உதவ முன்வருகிறார் ஆய்வாளர் டாக்டர் திவாகர். பனிமனிதன் தூக்கிச் சென்று காப்பாற்றி மீண்டும் விட்டுச் சென்ற சிறுவன் கிம்மை அழைத்துக் கொண்டு அவர்கள் பனிமனிதனை தேடி புறப்படுகிறார்கள். இக்கட்டான பயணங்களைக் கடந்து யதிகள் வாழும் அற்புத உலகை அடைகிறார்கள். மனிதனின் மகத்தான மூதாதையர்களைக் கண்டு கொள்கிறார்கள். மகிழ்ச்சியும் அமைதியும் மட்டுமே நிலவும் தர்மஸ்தலம் அது. அங்கிருந்து வெளியேறி. ஞானமடைந்த கிம் திபெத்திய மடாலயத்தின் மகாலாமாவகிறான்.

கிம் மகா லாமாவாகத் தேர்வடைந்த பிறகு டாக்டரால் அவனை வணங்க முடிகிறது, பாண்டியன் தயங்குகிறான். வைரக் கற்கள் அவனை முழுவதுமாக ஈர்க்கின்றன. டாக்டரும் கிம்மும் அவனை மீட்டு மேல் செல்கிறார்கள். குவியாடி போல் செயல்படும் பனிமூடிய  மலைச் சரிவுகளில் தனது பிரம்மாண்ட பேருருவைக் கண்டு திகைத்து நின்று விடுகிறான் பாண்டியன். மனிதர்களுக்கு தங்கள் பிம்பங்கள் மீதான காதல் அபாயகரமான எல்லைகளில் கூட விட்டுப்போவதில்லை போலும். தனது பிம்பத்தைப் போல் ருசியளிப்பது அவனுக்கு வேறெதுவும் இல்லை, பிம்பங்கள் ஒருநாளும் அவனுக்கு சலிப்பு ஏற்படுத்துவதில்லை.

சிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான அம்சம், அதன் கற்பனையும் கனவு அம்சமும் தான். குழந்தைகளின் பார்வையில் வாழ்வின் ஒவ்வொரு அசைவும் மகத்தான ஆச்சரியமாக, ஒரு அறிதலாக பரிணமிக்கும். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு செயல்விதியும்ம் அதுவரை அது அறிந்தவற்றிலிருந்து வேறொன்றை அறிமுகப்படுத்தி ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் பண்டோரா பெட்டி. பொதுவாகவே ஜெயமோகனின் படைப்புகளில் மெய் நிகர் புலனனுபவங்கள் முக்கிய பங்களிப்பாற்றும். குறிப்பாக காட்சிப்படுத்துதல் அவருடைய மிகப்பெரிய பலம். இந்த கதையிலும் அவர் அதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். 

யதிகள் வாழும் காட்டுப்பகுதியும், அதில் வாழும் உயிரினங்களின் விவரணையும் அபார கற்பனை எழுச்சியில் உருவானவை என்பதை உணர முடிகிறது. கற்பனை என்பதைக் காட்டிலும் தன்னுடைய கனவுக்கு மொழி வடிவம் அளித்துள்ளார் என்றே தோன்றுகிறது. பெருச்சாளி அளவுக்கு இருந்துகொண்டு பிளிறும் யானைகள், கால்கள் கொண்டு மரம் மீது ஏறும் மீன்கள், நீருக்குள் மூழ்கி மேலெழும்பும் சீன ட்ராகன்கள், குரங்குக் கால்கள் கொண்ட பசுக்கள், எருமைகள் என ஒவ்வொரு சித்தரிப்பும் அபாரமான காட்சி அனுபவத்தை அளிக்கிறது. யாழி, ட்ராகன் என தொன்மங்களில் இருந்து சில உருவங்களை வடித்தாலும், பெரும்பாலும் கற்பனையில் உதித்தவைதான் அவைகள். பனி மலை மீது உறைந்திருக்கும் பாற்கடல், உறைகடலுக்கு அடியில் ஒரு அசைவில் உறைந்திருக்கும் அறிய கடலினங்கள், குழி ஆடியைப் போல் செயல்படும் பனி மலைச்சரிவுகள் என கதை முழுவதுமே காட்சிகளால் நிறைந்திருக்கிறது.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு உயிரும் மற்றவைகளுடன் உறவு கொண்டுள்ளது எனும் நம்பிக்கையை அற்புதமாக அவதார் திரைப்படத்தில் சித்தரித்திருப்பார் காமரூன். இக்ரானை கட்டுப்படுத்தி, அதைப் பழக்கிய பிறகு அது வார்த்தைகளில் அடைபடாத மொழியில் அவனுடைய எண்ணத்தைப் புரிந்துக்கொண்டு இலக்கைச் சென்றடையும். பனிமனிதனில் வரும் வவ்வால் பயணம் ஏறத்தாழ இதே அனுபவத்தை நமக்களிக்கிறது. 

ஒன்றையொன்று அழித்து வாழாத, சார்ந்து வாழும் உயிரினங்கள் நிரம்பியதுதான் தர்மஸ்தலம். பேராசைகளும் நுகர்வு வெறியும் இறுக்கிப் பிசையும் சமூகத்தில் யதிகள் ஒரு கனவு. மீட்சிக்கான விதை. மனிதனுக்குள் ‘இன்னும் இன்னும்’ என்று எரியும் த்ருஷ்னை எனும் தீ அவனுடைய இனத்தையே கூண்டோடு அழித்துவிடும். ஊழிக்குப் பின்னர் மீண்டும் வேளாண்மை தொடங்க ஏதுவாக உயர்ந்த கோபுர கலசத்தின் உச்சியில் தானிய விதைகளைச் சேகரித்து வைப்பதுப் போல் தர்மஸ்தலத்தின் பனிமனிதன் வெளியுலக பார்வை படாமல் வாழ்ந்து வருகிறான் என்பதே லாமாக்களின் நம்பிக்கை.

கூட்டு நனவிலி பற்றிய பகுதிகளும், ஆழ்மனம் மேல்மனம் அடிமனம் ஆகியவற்றைப் பற்றிய விவாதங்களும் இந்தக் கதையின் மிக முக்கிய பகுதிகளாகும். உயிர்களின் ஆழ்மனம் பூமிக்கடியில் ஓடும் நெருப்பாறு போல் ஒட்டுமொத்தமாக இணைந்து ஒற்றை சரடில் ஓடிக் கொண்டிருக்கிறது. மேல்மனம் எரிமலையின் முகவாயாக ஆங்காங்கு தோன்றுகிறது. தனி மனங்கள் மறைந்து பூச்சிகளின் ஒற்றை பெருமனத்தில் இணைகிறது என்று விரிகின்றன இந்த விவாதங்கள். இங்கு, மேல்மனம் அற்ற ஆழ்மனம் மட்டுமே கொண்ட யதிகளே வரம் பெற்றவர்கள். 

பரிணாமவியல், உளவியல் சார்ந்த பல ஆழமான கேள்விகளை இப்படைப்பு எழுப்புகிறது. டார்வினை இளைஞர்களுக்கு கச்சிதமாக அறிமுகம் செய்கிறார் ஜெ. டீன் பறவைகள் ஏன் ஓநாயை மனிதர்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் எனும் கேள்விக்கான விடை உயிரினங்களின் சார்புத்தன்மைக்கான ஆகச்சிறந்த விளக்கம். 

மனிதனின் பரிணாமத்தில் கரங்கள், குறிப்பாக கட்டைவிரல் ஏற்படுத்திய பங்களிப்பு ஆழமான சிந்தனைக்குரியது. யோசித்துப் பார்த்தால் நமது அத்தனை மகத்தான அறிவியல் பாய்ச்சல்களும் நமது கரங்களின் அமைப்பினால் மட்டுமே சாத்தியமானவை. சக்கரம், சிக்கி முக்கி கல் உரசி தீ உண்டாக்கியது முதல் விண்ணை முட்டும் கட்டிடங்கள் எழுப்பியதுவரை அனைத்துமே நம் கரங்களின் வல்லமையில் உருவானவைதான். பிற உயிரினங்களின் மீதான மேலாதிக்கம் தொடங்கியதும் அதிலிருந்துதான். கற்காலத்திற்குன் முற்கால  மனிதன் மிருகங்களை நேரடியாக வேட்டையாடினான், அதன் பின்னர் கற்கால மனிதன் கவட்டை, கூரிய கல் ஆயுதங்களைக் கொண்டு வேட்டையாடினான். 

எத்தனை அநீதியான முறை! அம்புகளும், ஈட்டிகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும், அணுகுண்டுகளும்! மறைந்திருந்து தூரத்தில் இருந்து தாக்கும் வல்லமையை இவை அவனுக்கு அளித்தன. இன்று அவன் வீட்டில் அமர்ந்தப்படி கணினியின் தொடுதிரையில் எதையும் அழித்துவிட முடியும். தன்னை அழிப்பவன் யார் எனும் அறிதல்கூட இன்றி உயிர்கள் கொத்துகொத்தாக மரித்துக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை நம் கரங்கள் பனிமனிதனது போல் இருந்திருந்தால், இப்படி கொத்துகொத்தாக பிற உயிர்களை அழித்திருக்க மாட்டோம் என்று தோன்றியது. கரங்கள் மனிதனின் ஆக்க சக்தியின் குறியீடு, அதுவே அவனது அழிவுக்கும் வழிவகுத்துவிடும் போலிருக்கிறது.   

கேளிக்கை – கற்பனாவாத எழுத்துக்களுடன் நின்றிடாமல் அங்கிருந்து மேலெழும்பி ஒரு ஆன்மீக தளத்தை தொடுவதே பனி மனிதனின் மிக முக்கிய அம்சம். சூரிய ஒளிபட்டு வெண்பட்டாக மிளிரும் பனிமலை புத்தரின் மனம், தூய்மையின் தூல வடிவம். மனிதன் இயற்கையின் பிரமாண்டத்திற்கு முன் நிற்கும்போது அவனுக்கு உதிக்கும் முதல் சிந்தனை அவன் யார் என்பதைக் காட்டிவிடும். பிரம்மாண்டத்தை எண்ணி புளகாங்கிதம் அடைந்து தன் சுயத்தின் சிறுமைகளை எண்ணிக் குறுகும் மனிதன் ஒருவகை, அந்த பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியை தனதாக்கி அங்கு புகை கக்கும் தொழில் கூடங்களை அமைத்து வேலியிட்டு உரிமை கொண்டாட நினைக்கும் மனிதன் மற்றொரு வகை. இவை இரண்டுமாக அல்லாமல், தர்மஸ்தலத்தின் விதவிதமான உயிரினங்கள் அனைத்தும் புத்தர் வரைந்த ஓவியங்கள் என அறிகிறான் கிம். செவ்வொளி பரவும் அந்திச் சூரியன் புத்தரின் சிரிப்பு. அஸ்தமித்த சூரியன் ஒடுங்கி அணைவது புத்தரின் உறக்கம். யதிகளின் கூட்டிசையில் தன்னையிழக்கும் கிம், தன்னையே அனைத்துமாகக் காண்கிறான். அகங்காரமும், தன்னிருப்பும் கரைந்து ஒரு ஆன்மீக அனுபவம் அவனுக்கு சாத்தியமாகிறது. இறுதியில் பத்மபாணி எனும் மகாலாமவாகிறான்.  

பேக்கர் பாணியிலான வீடுகள், கூட்டுறவுச் சமூகம் என காந்திய மாதிரியில் டாக்டர் திவாகர் வாழும் மலைகிராமத்தை உருவகித்துள்ளார் ஜெ. புத்தகம் முழுவதும் அறிவியலின் நடைமுறை பயன்பாடு பற்றி பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பானை வடிவிலான வீடுகள், கால்தடங்களைக் கொண்டு ஆராய்தல், போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள். மாயாஜால கதை என்ற அளவில் நின்றுவிடாமல், அறிவியல் விட்டுச் செல்லும் இடைவெளிகள் கற்பனையைக் கொண்டு நிரப்ப்பப்பட்டிருக்கின்றன. வாசித்து முடிக்கையில் யதிகளின் உலகம் உண்மையாக இருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது.

நேரடி பிரச்சாரம் போல் அலுப்பூட்டுவது ஏதுமில்லை. பெரும்பாலும் அவை கவனிக்கப்படுவதில்லை. ஆனால் நேர்மையாக எழுதப்பட்ட புனைவு பிரச்சார நூல்களைக் காட்டிலும் வலிமை வாய்ந்தது. அது அவனுக்கு வாழ்க்கையின் சித்திரத்தை அதன் தீவிரத்துடன் காட்டிச் செல்கிறது. வன்முறையும் சுரண்டலும் சர்வ சாதாரணமாக மனிதர்களின் இயங்குவிதியாக முன்வைக்கப்படும் காலகட்டத்தில் பனிமனிதன் நமக்கு மாற்றுப்பாதையை காட்டுகிறான். இயற்கையுடன் போரிடுவதை நிறுத்தி இயைந்து வாழத்தொடங்குவதே மீட்சிக்கான வழி. ஏனெனில், மனிதன் பிரபஞ்சத்தில் வாழும் எத்தனையோ உயிரினங்களில் ஒருவன். அவன் பொருட்டு இப்பிரபஞ்சம் உருவாகவில்லை. அவன் பொருட்டு இது இயங்கவும் இல்லை. இனியும் தான் தேர்ந்தெடுத்த தவறான வாழ்க்கை முறையைத் தொடர்ந்தால், அவனையும் கடந்து செல்லும் இப்பிரபஞ்சம். 

நம் வீட்டு பிள்ளைகள் தவறவிடக்கூடாத புத்தகம்..



பனி மனிதன்

ஜெயமோகன்

தமிழ்

சிறார் இலக்கியம்

கிழக்கு

இணையத்தில் வாங்க