Saturday, December 30, 2017

அம்புப் படுக்கை சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழா - ஏற்புரை

நண்பர்களே,

எனது ‘அம்புப் படுக்கை’ நூலை வெளியிட்ட ஜீவ கரிகாலன் மற்றும் ‘யாவரும்’ நண்பர்களுக்கும், லக்ஷ்மி சரவணகுமாருக்கும், ம. ராசேந்திரன் அவர்களுக்கும், அழைப்பை ஏற்று முதல் பிரதியை பெற்றுக்கொள்ள வந்த நண்பர் ‘நீயா நானா’ அந்தோணி அவர்களுக்கும், மற்றும் உங்களுக்கும் எனது நன்றிகள்.

பத்து சிறுகதைகளை கொண்டது இத்தொகுப்பு. 2013 துவங்கி 2017 வரை எழுதப்பட்டவை. பள்ளியில் ஐந்தாம் வகுப்புடன் எனது முறையான தமிழ்ப் பாடம் நின்று போனது. அதன் பின் இந்தியையும், சமஸ்க்ருதத்தையுமே இரண்டாம் மொழியாக பயின்றிருக்கிறேன். எனது மொழி முழுக்க முழுக்க நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் உருவானது. எனது புனைவு மொழியை ஜெயமோகன், அமி, முத்துலிங்கம், யுவன் போன்றவர்கள் அதிகம் பாதித்திருக்கிறார்கள்.

Wednesday, December 27, 2017

2017 நினைவுகள்

நேற்றும் நாளையும் இல்லை, இன்று, இப்போது மட்டுமே உண்டென வாழ்வதற்கு உயர் விழிப்பு நிலை வேண்டியதாய் இருக்கும். அத்தகைய பெருநிலை வாய்க்கும் வரை நேற்றின் நினைவுகள் நாளையை பற்றிய கனவுகளை எழுப்பி இன்றை தின்று கொண்டுதான் இருக்கும். நழுவிக்கொண்டிருக்கும் இன்று நேற்றின் சேகரத்தில் சேர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஊக்கத்திற்கும் பாடத்திற்கும் அந்த சேகரத்தையே நாம் நம்பியிருக்க வேண்டியதாய் இருக்கிறது. அப்படியாக இந்த 2017 ஆம் ஆண்டில் நினைவில் சுவைக்க, ஊக்கப்படுத்திகொள்ள,நெறிபடுத்திகொள்ள வாய்ப்புக்கள் அமைந்தன.

நண்பர்கள் எப்போதும் உடனிருக்கிறார்கள். வெங்கியும், கோவிந்தனும், தீபக்கும் வெளிநாடுகளில் இருந்து திரும்பி கொஞ்ச காலம் இங்கே இருந்த போது சேர்ந்து சுற்றியது நிறைவளித்தது. கோவிந்தனுக்கு திருமணம் முடிந்தது. கொண்டாட்டமாக இரண்டு நாட்களும் நாங்கள் அங்கிருந்தோம். பெரும் விழா என்பது சுதீருக்கு ஆயுஷ் ஹோமம் செய்து காது குத்தியது. நான் தலை எடுத்து, நானே நடத்தும் முதல் விழா. ஆரவாரமாக நண்பர்கள், உறவினர்கள் சூழ முடிந்தது. தங்கை ராகவிக்கு இவ்வாண்டு நவம்பரில் திருமணம் முடிந்தது. மற்றுமொரு கொண்டாட்டம். குடும்பகூடுகை. மாமனாரின் அறுபதாம் திருமணம் பாண்டிச்சேரியில் இவ்வாண்டு நல்லபடியாக நிகழ்ந்தது. கடும் மழையின் ஊடாக. அரிமளத்தில் தாத்தாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது பெரும் நிறைவை அளித்தது. சித்த மருத்துவர் திரு நாராயணன் அவர்களை கவுரவித்தோம். நாஞ்சில் முன்னிலை வகித்து நடத்தி கொடுத்தார். நண்பர்கள் திருவும், விக்ரமும் வந்திருந்தார்கள். முழு விழாவையும் தொகுத்து வழங்கினேன். புதிய அனுபவமாக இருந்தது.

புல்லட்டில் தஞ்சை வரை சென்று புதியவர்கள் சந்திப்பில் இருந்த ஜெயமோகனை ஒருநாள் சந்தித்து வந்தேன். வரும் போது துணைக்கு சீனுவையும் கூட்டி வந்தேன். ஊட்டி கூட்டத்திற்கு சென்று வந்தேன். பின்னர் விஷ்ணுபுர விழாவிற்கும் சென்று வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய ஆளுமையின் அண்மையில் இருந்து விலகி வருகிறேன் என்பதை உணர முடிகிறது. எல்லாம் நன்மைக்கே. இலக்கிய உலகில் சில புதிய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். கணையாழி அசோகமித்திரன் குறுநாவல் போட்டியில் பேசும் பூனைக்கு பரிசு கிடைத்தது. யாவரும் வெளியீடாக சிறுகதை தொகுப்பு ‘அம்புப் படுக்கை’ அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பே கவனம் பெற்றிருக்கிறது. உண்மையில் இதெல்லாம் பதட்டத்தையே அளிக்கிறது. இந்த மனநிலையிலிருந்து வெளியேறி அடுத்த வேலையை பார்க்க கிளம்ப வேண்டும்.

சென்னை ஞாயிறு கிளினிக் முயற்சியை கைவிட்டேன். விடாப்பிடியாக தொங்குவது சரி வராது என்று உணர்ந்து கொண்டேன். புதுகோட்டையில் புதிய கிளினிக் துவங்கி இருக்கிறேன். வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் மாலைகளில் அங்கு சென்று கொண்டிருக்கிறேன். வாசிக்க கூடுதல் நேரம் கிடைக்கிறது. தொழில் சற்று மந்தமாகத்தான் போய்கொண்டு இருக்கிறது. புதிதாக ஏதாவது செய்தாக வேண்டும். இந்த தேக்க நிலையை உடைத்தாக வேண்டும். வரும் ஆண்டு இதை கவனிக்க வேண்டும். இப்போது மாலைகளில் மானசா காரைக்குடி கிளினிக்கை கவனித்து கொள்வது மகிழ்ச்சியை அளிக்கிறது.

சுதீர் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறான். அறையை விட்டு வரும்போது எல்லாவற்றிற்கும் பை சொல்கிறான். அன்று காற்றுக்கு பை சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. சிவராஜ் அனுப்பிய தும்பி புத்தகங்களை வைத்துக்கொண்டு அவனுக்கு கதைகளை சொல்லி காண்பிக்கிறேன். தினமும் காலை எழுப்பி குளிப்பிப்பதும், இரவு உறங்க செய்வதும் எனது முறை. விளையாட்டுக்களும் பிடிவாதங்களும் சேர்ந்தே வளர்கின்றன. அவனை கவனிக்கும் இடைவெளிகளில், நெருக்கடிகளில் தான் இவ்வாண்டு நான் நிறைய வாசித்தேன், சொல்லிகொள்ளும் அளவுக்கு எழுதினேன். மானசாவும் மார்கழி திருப்பாவை படங்கள் வரைந்தாள். அவனுக்கு பயந்து ஷோ கேசில் கொலு வைத்தோம். இசை மீது தணியாத ஆர்வம் கொண்டிருக்கிறான். நாதஸ்வரம் தவில் என்றால் அங்கேயே சென்று அமர்ந்து கொள்கிறான். நிறைவின்மை கலையை பிறப்பிக்கும் என்று சொல்வார்கள், நிறைவும் கூட கலையை உருவாக்கும். அவனுடைய வருகையும் இருப்பும் வாழ்வை மாற்றியதை உணர்கிறேன். இவ்வருட மத்தியில் மனப் பதட்டங்கள் கூடின. அவன் வளர்ச்சி மகிழ்ச்சியை அளித்தது ஆனால் அதை முழுமையாக காண நான் இருக்க வேண்டும். என் தந்தையைப் போல் நானும் நட்டாற்றில் மறைந்துவிட கூடாது. இப்பதட்டத்திற்கு எந்த காரணங்களும் இல்லை ஆனால் இவை எப்படியோ தொற்றி படர்ந்தன. சௌந்தர் குருஜி சொல்லிக்கொடுத்த மகா மிருத்யுஞ்சய மந்திரத்தையும் யோக நித்திரையும் பற்றிக்கொண்டு எப்படியோ கடந்து வந்தேன். குறிப்பாக கார் ஓட்டும் போது panic attack அளவுக்கு இது வளர்ந்து விட்டது. முகம் மரத்து போகும். கைகால் சில்லிடும். எதையாவது தின்று ஆசுவாசப் படுத்திக்கொள்ள வேண்டும். அம்மா இதைகண்டு கொண்டு ஒருநாள் ‘உனக்கும் ஒன்னும் ஆகாது’ என்றாள். அந்த ஒற்றை சொல்லையும் பிடித்துக்கொண்டு வெளியேறி வந்துவிட்டேன்.சென்ற ஆண்டு நவம்பரில் 92 கிலோ எடையிலிருந்து படிப்படியாக குறைத்து 75 கிலோவிற்கு வந்தேன். இந்த எடையிழப்பிற்கு நான் செய்த எளிய உணவு மாற்றங்கள் தான் காரணம். பெரும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. எனினும் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இந்த எடையிழப்பை நோய்மையுடன் தொடர்புப்படுத்தி துக்கம் விசாரிக்கும் போது நமக்கே பதட்டமாகிறது. பரிசோதித்த வரையில் எந்த பிரச்சனையும் இல்லை நண்பர்களே. நம்புங்கள். தினமும் காலையில் தொடர்ந்து ஷட்டில் ஆடி வருகிறேன். எட்டு மணிக்கு சென்று கொண்டிருந்தது இப்போது ஆறு மணிக்கு. ஆகவே 5.30 க்கு எல்லாம் எழுந்து விடுகிறேன்.

இந்த ஆண்டு பயணங்கள் என எங்கும் பெரிதாக செல்லவில்லை. சுதீர் தயாராக வேண்டும். பிறகு தான் போக வேண்டும். சில பல முறை கோவைக்கும் சென்னைக்கும் சென்று வந்தேன். கோவையில் நண்பன் நாகராஜன் அழைப்பின் பேரில் நேரு பல்கலைகழகத்தில் மனமும் ஆயுர்வேதமும் என்றொரு உரை ஆற்றி வந்தேன். திருப்பூரில் விஜயதசமி எழுத்தறிவித்தல் விழாவில் பங்கு கொண்டது நிறைவான அனுபவம். சாருவை அன்று தான் முதன் முறையாக் சந்தித்து பேசினேன். எஸ்.ரா இங்கு வந்திருந்த போது இல்லத்திற்கு வந்திருந்தார். நிறைவாக சில மணி நேரங்கள் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்.  சென்னையில் நண்பர் ரா.கிரிதரனை சந்தித்தேன்.இருவருமாக் சென்று வசந்தகுமார் அண்ணாச்சியை சந்தித்து அவருடைய நாவல் பிரதியை அளித்துவிட்டு வந்தோம். கிரியின் நாவல் மிக முக்கயமான நாவலாக பேசப்படும் எனும் நம்பிக்கை எனக்குண்டு.  மானசாவின் பாட்டி பாண்டிச்சேரியில் இறந்து போனார். அதற்கு சென்று வந்தேன். அத்தை பெங்களூரில் இறந்து போனார்,  அதற்கொரு பயணம். வானதியின் மரணம் இவ்வாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்தது. உலுக்கியது. அவ்வப்போது வானதியை எண்ணிக்கொள்வேன். அவள் மரணித்த் பின் சேலம் சென்று வந்தேன். சில நேரங்களில் நாங்கள் எல்லாம் போலி நம்பிக்கைகளை ஊட்டி அவளை உசுப்பேற்றி, தூக்க முடியாத பாரத்தை கிடத்தி கொன்றுவிட்டோம் எனும் குற்ற உணர்வு மேலிடுகிறது. மறுத்து சொல்வதும் நட்பு தானே. வாழ்வை பிழையாக மதிப்பிட்டு விட்டேன். யாரிடம் மன்னிப்பு கோருவது இப்போது?

இந்த ஆண்டு நிறைய வாசித்தேன்,தமிழிலும் ஆங்கிலத்திலும். 2666, lolita, sea horses, charles yu எழுதிய how to survive in a science fictional world?, master and margarita, chasing the monsoon, போன்ற நூல்கள் சட்டென நினைவுக்கு வருகின்றன. தமிழில் வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். அப்பால் ஒரு நிலம், இருமுனை, எனும் போது நன்றி உனக்கு, கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் என பலவற்றை வாசித்தேன். காலச்சுவடில் ஹிலாரி மாண்டெல் கட்டுரை, தமிழ் தி இந்துவில் காந்தி அப்பையா கறித்த கட்டுரை, குமரப்பா குறித்து காண்டீபம்  சிறப்பிதழில் ஒரு கட்டுரை, பதாகைக்காக சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களை எடுத்த நேர்காணல், அவருடைய மொத்த தொகுப்பை வாசித்தது என ஓரளவு முனைப்பாக இயங்கி இருக்கிறேன். புதிய குரல்கள் மூன்று பகுதிகள் மற்றும் நேர்காணல்கள் கவனம் பெற்றன. சீ முத்துசாமியின் மண் புழுக்கள் நாவல் குறித்து எழுதிய கட்டுரை அவரை பற்றி தொகுக்கப்பட்ட நூலில் இடம் பெற்றுள்ளது. ஜானிஸ் பரியாதின் 19/87 எனும் கதையை மொழியாக்கம் செய்தேன். இந்த ஆண்டு புனை கதைகளில் சில மாற்றங்களை உணர முடிகிறது. ‘சிதல்’ என்றொரு கதை எழுதி காமன்வெல்த் போட்டிக்கு அனுப்பி இருக்கிறேன். முக்கியமான கதையாக இருக்கும். குறுங்கதைகளை எழுதினேன். பழுவேட்டையர் எனும் பாத்திரம் இலக்கிய பகடிகளை செய்கிறது. போகிற வரை போகட்டும். ஆயுர்வேத நூலுக்கான பணி கொஞ்சம் முனைப்புடன் செய்தேன். இந்த வருடம் முடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் இழுத்து விட்டது.முதல் கட்டுரை இந்திய மருத்துவத்தின் அடுக்குகள் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.முதல் வேலையாக இந்த புத்தக வேலையை முடித்து விட்டு தான் அடுத்து என்று உறுதி கொண்டுள்ளேன். காந்தி 150 க்காக homage to mahathma எனும் வானொலி உரை தொகையை மொழியாக்கம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளேன். 

நாளை இரவு சிறுகதை வெளியீட்டிற்கு செல்ல வேண்டும்.ஏற்புரையை தயார் சேது கொண்டிருக்கிறேன். புத்தாண்டு பாண்டிச்சேரியில் விடிய இருக்கிறது. மற்றுமொரு ஆண்டு நமக்காக காத்திருக்கிறது. திட்டங்கள் என ஏதுமில்லை. ஆயுர்வேத நூலை முடிக்க வேண்டும், பயணங்கள் செல்ல வேண்டும், தடைபட்டு இருக்கும் நீலகண்டம் நாவலை தூசி தட்டி மீண்டும் எழுதி முடிக்க வேண்டும். தொழில் வளர வேண்டும். ஆகட்டும் பார்ப்போம்.

பயணிப்போம் நண்பர்களே. புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Wednesday, November 15, 2017

அம்புப் படுக்கை சிறுகதை தொகுப்பின் முன்னுரை

சாளரம்
நரோபா விஷ்ணுபுரத்தில் வரும் பவுத்த துறவி. மொழியாக்கப் பணியின் பொருளின்மை அவனை அமைதியிழக்க செய்கின்றது. காலத்தை விஞ்சி நிற்கும் பயண நூலை தனக்கென உருவாக்குகிறான். ஒருவகையில் சுனில் கிருஷ்ணனின் சலிப்பான அன்றாடத்தை நுட்பமாக நோக்கி அதை இடம் மாற்றி அடுக்கி, சுழற்றி, வேறொன்றாக ஆக்கி வித்தைக் காட்டுவதற்காக உருவானவன் இந்த நரோபா. அவனுக்குத் துயரங்களின் மீதும், தோல்விகளின் மீதும் மாளா ஈர்ப்பும் காதலும் உண்டு. கனவுகளையும், கற்பனைகளையும் நிகழ்வுகளுடனும் நினைவுகளுடனும் கலந்து கட்டி தனக்கென உலகுகளை உருவாக்கி தன்னைப் புதைத்து கொள்கிறான்.

இக்கதைகள் 2013 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. தொகுப்புக்காக சில கதைகள் சற்றே திருத்தி எழுதப்பட்டுள்ளன. தொகுக்கப்பட்ட அளவுக்கே தொகுப்புக்கு வெளியேவும் கதைகள் உள்ளன. அவை மோசமானவை என்பதால் அல்ல, இத்தொகுப்பின் பொதுவான உணர்வு ஓட்டத்திலிருந்து விலகி நிற்பவை என்பதால் இத்தொகுப்பில் இடம்பெறவில்லை. இக்கதைகளைக் கால வரிசையின்படியும் தொகுக்கவில்லை. கதையின் பேசுபொருள் சார்ந்து விளக்கமுடியாத காரணிகள் இக்கதையின் வரிசையைத் தீர்மானித்தன. ஒருவகையான அகப் பயணத்தின் சான்று எனக் கொள்ளலாம்.

பலருக்கு நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக இருவருக்கு, ஜெயமோகனுக்கும் நட்பாசுக்கும். என்னை எழுத்தாளராக நான் அடையாளம் கண்டுகொண்டது இவர்களின் வழியேதான். இலக்கிய செயல்பாட்டின் மீது பெருமதிப்பும், குன்றா செயலூக்கமும் அவர்களிடமிருந்தே எப்போதும் பெற்று வருகிறேன். முதல் சிறுகதை தொகுப்பைத் தந்தைக்கு நிகரான ஜெயமோகனுக்கும் வழிகாட்டியாகத் திகழும் நட்பாசுக்கும் சமர்ப்பிப்பதே முறையாகும்.

முதல் தொகுப்பு கொண்டு வர யாரிடமும் கேட்க கூடாது என்றிருந்தேன். தயக்கமும் கூச்சமும்தான் காரணம். நம்மை வாசித்து எவரேனும் இக்கதைகள் தொகுப்பாக்க தகுதியானவை எனக்கருதி அழைப்பர் எனக் காத்திருந்தேன். ஆனால் எதுவும் நிகழவில்லை என்பது என் எழுத்தின் மீது எனக்கு ஐயத்தை ஏற்படுத்தியது. அச்சமயத்தில்தான் நண்பர் யாவரும்ஜீவ கரிகாலன் சில கதைகளை வாசித்து தொடர்பு கொண்டார். புதிய எழுத்தாளர்களுக்கு தமிழ்ச் சூழலில் போதிய கவனமும் விமரிசனமும் கிடைப்பது அரிது எனும் சூழலில், பெரிய விற்பனைச் சாத்தியங்கள் ஏதுமில்லை எனும்போது கூட, ‘யாவரும்தொடர்ந்து பல புதிய எழுத்தாளர்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறது. விமரிசனக் கூட்டங்களை ஒருங்கமைத்து கவனத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர வேண்டும். ஜீவ கரிகாலன் மற்றும் யாவரும்நண்பர்களுக்கு எனது நன்றிகள். கதைகளுக்கு தனது கோட்டோவியங்களை அளித்த கவிஞர்/ ஓவியர் ரமேஷ் சுப்பிரமணித்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இக்கதைகளை வெளியிட்ட பதாகை, சொல்வனம், கபாடபுரம் மற்றும் jeyamohan.in ஆகிய இணைய தளங்களுக்கு நன்றிகள். கதைகளுக்கு விமரிசனங்களையும் வாசிப்பையும் எப்போதும் அளித்து வரும் முன்னாள்/ இந்நாள் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களையும், பதாகை மற்றும் ஆம்னிபஸ் நண்பர்களையும் ஆரத்தழுவிக் கொள்கிறேன். என்னையும் ஒரு ஆளாக்கிய அம்மாவிற்கு வணக்கங்கள், படைப்பூக்கத்தை அணையாமல் பார்த்துக் கொள்ளும் இல்லாள் மானசாவிற்கு நெஞ்சம் நிறைந்த அன்பு, பிஞ்சுப் பாதங்களால் நெஞ்சை நொறுக்கி என்னை மீள வார்க்கும் சுதீர் குட்டிக்கு முத்தங்கள்.

அம்புப் படுக்கை என இத்தொகுதிக்குப் பெயரிடவும் தெளிவான காரணங்கள் ஏதுமில்லை. எனது அம்புப் படுக்கைகதையுள் பீஷ்மர் ஒரு பாத்திரம் அல்ல. எனினும் இக்கதை அவரை நினைவூட்டக்கூடும். பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறி அரற்றவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராகப் பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி, இயன்றவரை ஒத்திப் போடுபவராக, வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி, தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது. இக்கதை மாந்தர்களைப் போல்.

வாழ்வில் திளைத்து எழுந்து உதறிச் செல்வது ஒருவகை, கரையோரம் விலகி சாட்சியாக நோக்கிக் கடப்பது ஒருவகை. இரண்டையும் விழைந்து, இரண்டையும் துறந்து வாழும் சிற்றுயிர்களால் வேறென்ன இயலும், எழுதிக் கடப்போம் இவ்வாழ்வை.
சுனில் கிருஷ்ணன்
7-10-2017

காரைக்குடி 

Thursday, October 19, 2017

நிலவேம்பு குடிநீர் - விவாதம்

நிலவேம்பு குடிநீர் பற்றிய விவாதம் காரசாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சிலவற்றை தெளிவு படுத்த/படுத்திக்கொள்ள இதை எழுதுகிறேன். இந்திய மருத்துவ முறைகள் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பி.ஏ.கே போன்றவர்கள் சொல்வதில் நியாயமில்லாமல் இல்லை. குறைந்தபட்சம் இத்தகைய குரல்கள் வெகுமக்களின் நன்மை/பாதுகாப்பை பொருட்டே எழுகின்றன. ஆனால் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதும் அறிவியல்பூர்வமானது அல்ல என்பதும் ஒன்றல்ல. ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதற்கு அரசியல் காரணிகள் இருக்கக்கூடும். அவர்களிடம் விவாதித்து எந்தப்பயனும் இல்லை. 

1. இந்திய மருந்துகளின் அறிவியல் நிரூபணம்.
பாரம்பரிய மருந்துகளை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நிறுவ வேண்டும். அதன் பின்னரே பயன்படுத்த வேண்டும் எனும் வாதம் வைக்கப்படுகிறது. நவீன மருந்து உற்பத்தி பாணியில் பாரம்பரிய மருந்துகளை சோதிப்பதில் நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன. செயல்திறன் மற்றும் ஒப்பீட்டு செயல்திறன் சோதனைகள் செய்வது ஒருபுறம் இருக்கட்டும். விரிவாக பேச வேண்டிய விஷயம்.  அதைவிட முக்கியம் ஒவ்வொரு தனி மருந்துக்கும், செவ்வியல் மருந்து கலவைகளுக்கும் பாதுகாப்பான அளவு, ஆபத்தான அளவு, செயல்படத்தேவையான குறைந்தபட்ச அளவு ஆகிய பரிசோதனைகள் செய்தே தீர வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. 

2. நிலவேம்பும் மலட்டுத்தன்மையும் 
நிலவேம்பு குடிநீர் நிலவேம்பு மற்றும் மேலும் பல மருந்துகள் சேர்ந்து தயாரிக்கப் படுகின்றது. ஒற்றை மூலிகையாக நிலவேம்பு மற்றும் இன்னபிற கசப்பு மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தும்போது ஏற்படும் விளைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு எந்த முடிவுக்கும் வர இயலாது. நிலவேம்பு தினமும் உட்கொள்ள உரிய மருந்து அல்ல. ஆகவே மலட்டுத்தன்மை பற்றிய அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. 

3. நிலவேம்பு குடிநீரும் நோய்த்தடுப்பும்
நிலவேம்பு குடிநீருக்கு காய்ச்சலை சீராக்கும் குணம் உண்டு என்பதில் எவ்விதகுழப்பமும் இல்லை. ஆனால் நோய் தடுப்புக்கு எப்படி உதவும் என்பதைப் பற்றிய குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. இது சார்ந்து எழுப்பப்படும் கேள்விகள் நியாயமானதே. டெங்கு மழைகால நோய் என்பது போய், பருவ மாற்றத்தால் ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் நீடிக்கிறது. இச்சூழலில் எத்தனை முறை நிலவேம்பு குடிநீர் எடுத்துகொள்ள வேண்டும்? எத்தனை நாட்கள் வரை நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்கும்? எத்தனை நாட்களுக்கொரு முறை நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு தெளிவான விடையில்லை. கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கலாமா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். நிலவேம்பு குடிநீர் உட்கொண்டவர்களுக்கும் டெங்கு வருவதை காண முடிகிறது. ஆனால் எளிதாக நோயிலிருந்து மீள்கிறார்கள் என்பது மற்றுமொரு தனிப்பட்ட அவதானிப்பு. இதை ஆய்வுகள் மூலம் உறுதிபடுத்த முயல வேண்டும். 

4. நிலவேம்பு குடிநீரின் அரசியல் 
நிலவேம்பு குடிநீர் ஒரு மருந்து என்பதைத்தாண்டி மரபு மருத்துவத்தின் குறியீடாக மாறிவிட்டது. மரபு மருத்துவம்அரசிடமும் மக்களிடமும் மதிப்பின்றி இருந்த சூழலில் நிலவேம்பு குடிநீர் புதிய சாத்தியங்களை உருவாக்கியது. பாரம்பரிய மருத்துவத்தின் மறுமலர்ச்சிக்கான விதையாக கருதப்பட்டது. ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. சித்த மருத்துவமே நிலவேம்பாக சுருக்கிக் கட்டமைக்கபடுகிறது. நீர்மோர் பந்தலைப் போல் நிலவேம்பு குடிநீரும் ஒரு சடங்காக மாறிவிட்டது. சித்த மருத்துவர்களுக்கோ மருந்துகளுக்கோ எந்த அங்கீகாரமும் இல்லாமல்,நிலவேம்பு குடிநீரை  மட்டும் ஆரம்ப சுகாதார நிலையம் வரை எடுத்து சென்றார்கள். நிலவேம்பு குடிநீரின் செயல் திறனை நிறுவுவது இந்திய மருத்துவர்களுக்கு மிக முக்கியம்.ஏறத்தாழ இது ஒரு  புனித பிம்பமாக இன்று மாறிவிட்டது. மக்களின் நம்பிக்கையை பெற ஒரு இறுதி ஆயுதம் என கூட கூறலாம்.  நிலவேம்பின் மீதான தாக்குதல் என்பது இந்திய மருத்துவத்துறை மீதான தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது. இந்த குறியீட்டு தன்மை காரணமாகவே நவீன அறிவியலின் விமர்சனத்தையும் எதிர்கொள்ள நேர்கிறது. வெகுமக்களின் உடலை யார் கைப்பற்றுவது எனும் அதிகார போட்டியாக இது மாறிவிட்டது. நிலவேம்புக்கு சாதக பாதக பிரசாரங்களை இந்த பின்புலத்தின் கொண்டே காண வேண்டும். 

5. நிலவேம்பு குடிநீர் வெகுமக்கள் விநியோகம் 
இந்திய மருத்துவம் என்பதே ஒவ்வொரு மனிதரையும் தனிப்பட்ட அளவில் கணக்கில்கொண்டு மருத்துவம் அளிக்கும் முறை என்பதால் இப்படி வெகுமக்களுக்கு வேறுபாடின்றி விநியோகம் செய்வது அதன் அடிப்படைகளுக்கு விரோதமானது என்றொரு விமர்சனத்தை சில அறிஞர்கள் வைக்கிறார்கள். இது கவனத்தில் கொள்ள வேண்டிய விமர்சனம் என்றே நானும் எண்ணுகிறேன். ஆனால் இந்திய மருத்துவ முறைகள் 'முழுமைவாத' மருந்துகள் நோய்க்குறிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை, அது ஒரு இழிவானமுறை என்பது போன்ற கருத்துக்களில் எனக்கு ஏற்பில்லை. இந்திய மருத்துவம் பல்வேறு அடுக்குகளை கொண்டது. நோய்க்குறி சார்ந்து மருத்துவம் ஒரு சரடாக செவ்வியல் நூல்களில் எப்போதும் தொடர்ந்து வருகிறது. ஆகவே இந்த சித்தாந்த ரீதியான எதிர்ப்பு என்னளவில் பொருட்டல்ல.

6. ஆய்வு சாத்தியங்கள்
தேசிய சித்த மருத்துவ மையம் போன்ற நிறுவனங்களில் விரிவான கள ஆய்வுகளை இத்தனை ஆண்டுகளில் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இது நிகழவில்லை. இனி வரும் ஆண்டுகளில் ஐயத்திற்கு இடமின்றி செயல்பட வேண்டும். இதுவரையிலான ஆய்வுகள் எதிர்மறையாக எதையும் அளிக்கவில்லை. நோய்தடுப்பு சார்ந்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் கட்டுபாட்டில் இருப்பது வரை விளைவுகளுக்கு மருத்துவர் பொறுப்பாவர். ஆனால் நிலவேம்பு குடிநீர் இன்று பரவலாக பல்வேறு அமைப்புகளால் விநியோகிக்கப்படுகிறது. மருந்தின் தரம், காய்ச்சும் முறை போன்றவை எல்லாம் உரிய முறையில் இருப்பதில்லை. இத்தகைய சூழலில் இதை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சாரும்.

உணர்வுகளை தள்ளிவைத்துவிட்டு சற்று நிதானமாக என்ன செய்யலாம் என்பதை விவாதித்து பார்க்கலாம். 



Tuesday, September 26, 2017

எஸ்.ராவுடன் ஒரு மாலை

முன்னரே எஸ்ராவை விஷ்ணுபுர விழாவில் சந்தித்து பேசியிருக்கிறேன். காந்தி ஜெயந்தி நிகழ்ச்சி ஒன்றிலும் அவருடன் பங்கு கொண்டிருக்கிறேன். சில முறை அவருக்கு மின் அஞ்சல் எழுதியதும் உண்டு. கடந்த ஞாயிறன்று அவர் குடும்பத்துடன் காரைக்குடி வந்திருந்த போது அவரை நேரில் சந்தித்து ஏறத்தாழ மூன்று மணிநேரம் அவருடன் தனித்து உரையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. எங்கள் வீட்டிற்கு வந்தார். சுதீர் அவருடன் எளிதில் அன்டிக்கொண்டான். அவனுடன் சமமாக விளையாடினார். சுதீருக்கு மற்றொரு பெயர் ராமகிருஷ்ணன் தான். அவனும் ஒரு எஸ்.ராமகிருஷ்ணன் தான் என அறிமுகம் செய்தேன். 

Image may contain: 2 people, people smiling, people sitting, sunglasses and indoor

Thursday, June 29, 2017

தண்டி யாத்திரை- ஏ.கோபண்ணா

(ஆம்னிபஸ் பதிவு)

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவருடைய ‘இந்திய சுதந்திர போர்’ எனும் நூலில்  காந்தியின் தண்டி யாத்திரை குறித்து இவ்வாறு எழுதுகிறார்

“நெப்போலியன் எல்பாவிலிருந்து திரும்பியவுடன், பாரிஸ் நகர் நோக்கி நடந்து சென்ற காட்சியுடனோ , அல்லது முசோலினி இத்தாலியில் அரசியல் ஆதிக்கத்தை கைப்பற்றுவதற்காக ரோம் நோக்கிச் சென்ற காட்சியுடனோதான் மகாத்மாவின் தண்டி யாத்திரையை ஒப்பிட வேண்டும்”.

 ஏப்ரல் 6 , 1930. தொடுவானம் வரை பரந்து விரியும் ஆழ்கடல் முகட்டில்  காந்தி, அங்கு குழுமியிருக்கும் பெரும் மக்கள் திரளை நோக்கி நிற்கிறார். அவரது உள்ளத்தில் ஆழ்கடலின் அமைதி,  குழுமியிருக்கும் மக்களின் அலையோசையை ஒத்த ஆர்ப்பரிப்புகளுக்கு இடையே  மூடிய தன் கைவிரல்களைத் திறந்து அந்த வெள்ளை நிற உப்பை உயர்த்திக் காட்டுகிறார். இந்திய சுதந்திர போராட்டத்தின் மகத்தான மற்றுமொரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது.



1930 ஆம் ஆண்டு காந்தியின் தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்ரகத்தின் பவள விழாவை (75 ஆண்டுகள் நிறைவடைவதை) முன்னிட்டு  நவ இந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நூல், "தண்டி யாத்திரை". ஏ.கோபண்ணா அவர்களால் எழுதப்பட்ட 61 பக்கங்கள் கொண்ட இந்த சிறிய நூல் தண்டியாத்திரையை பற்றிய முக்கியமான தகவல்களையும் அந்த போராட்டத்தின் பின்புலத்தையும் எளிமையாக நமக்கு அறிமுகம் செய்கிறது. தண்டி யாத்திரை மட்டுமின்றி, வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் மற்றும் சென்னை உப்பு சத்தியாகிரகம் பற்றிய பல புதிய தகவல்களையும் நமக்கு எளிமையாக தொகுத்து அளிக்கிறது இந்த நூல்.

இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு பொருள் உப்பு. அதே சமயம் சாதாரண மக்கள்கூட இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க முடியும் எனும் அளவிற்கு இதன் போராட்ட வடிவம் எளிமையானது. யங் இந்தியாவில் தொடர்ந்து உப்பு வரியை பற்றியும் அதை மீறுவதை பற்றியும் எழுதுகிறார். இந்த அடாவடியான வரி திரும்பப் பெறப்படவில்லை என்றால் இன்னும் ஒன்பது நாட்களில் மெய்யான சத்தியாகிரக போராட்டம் தொடங்கும் என்று அன்றைய வைஸ்ராயை  பகிரங்கமாக எச்சரிக்கிறார்.

ஆங்கிலேய அரசாங்கம் இந்தப் போராட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தது. இவரை கைது செய்தாலும் பிரச்சனை, கைது செய்யவில்லை என்றாலும் பிரச்சனை எனும் சூழலில். நடப்பதை உன்னிப்பாக கவனித்து வந்தது. மார்ச் 11 ல் அகமதாபாதில்  தொடங்கி ஏப்ரல் 6 ல் தண்டியில் முடிவடைந்த இந்த 24 நாட்கள் நீண்ட யாத்திரையில் மொத்தம் 241 கிலோமீட்டர்களை காந்தியும் அவரது எண்பது தொண்டர்களும் நடந்தே கடந்தார்கள். காந்தி நினைத்திருந்தால் ரயிலிலோ மோட்டாரிலோ பயணித்து, ஏதோ ஒரு கடற்கரையை அடைந்து இந்தச் சட்டத்தை மீறியிருக்கலாம் ஆனால் அதை ஒரு நெடிய பயணமாக, ஒரு விரதமாக மாற்றி தேசத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தார். மிகப்பெரிய மக்கள் எழுச்சியை உருவாக்கினார். இந்த பயணத்தின்போது காந்தியின் அறைகூவலுக்கு செவி மடுத்து ஆங்கிலேய அரசாங்கத்தில் அங்கம் வகித்த முன்னூறுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்கள் பணிகளைத் துறந்து போராட்டக் களத்தில் ஐக்கியமாகினர் என்பதைக் கோடிட்டு காட்டுகிறார் கோபண்ணா.

 கோபண்ணா அவருடைய இந்த நூலில் பல புதிய தகவல்களை அளிக்கிறார். காந்தியுடன் சத்தியாகிரகத்தில் பங்குகொண்டவர்களில் இரண்டு இஸ்லாமியர்களும் ஒரு கிறித்தவரும் அடங்குவர். நேபாளத்தில் இருந்து வந்த கரக் பகதூர் சிங் கொலை குற்றத்திற்காக சிறை சென்றவர். அவரும் இந்த குழுவில் இணைந்து நடந்தார். அதற்கு எதிராக விமரிசனங்கள் எழுந்தபோது ‘ எந்த மன்னிப்பை பகதூர் சிங் சமூகத்திடம் எதிர்பார்க்கிராரோ அதை சமூகம் அவருக்கு அளிக்க வேண்டும்’ என்றார் காந்தி, அவரது மகன் மனி லால், பேரன் காந்தி லால் உட்பட   காந்தியின் குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையினர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் பங்கு பெரும் சத்தியாகிரகிகள் கடுமையான உணவு கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார். ஆனால் சென்ற இடங்களில் எல்லாம் உணவும் உபசாரமும் பலமாகவே இருந்தன. புரோச் எனும் இடத்தை வந்தடைந்தபோது மஜூம்தாரும் டாக்டர்.சந்துலால் தேசாயும் சத்தியாகிரகிகளுக்கு ஐஸ் க்ரீம் வழங்கிய விஷயத்தை அறிந்த காந்தி அவர்களைக் கடித்து கொண்டார். அதற்கு பிராயச்சித்தமாக யாத்திரை முடியும்வரை எலுமிச்சம் சாரும் பேரீச்சம் பழங்களும், ஆட்டுப்பாலும்யும் மட்டுமே உணவாக உட்கொள்வது என்று காந்தி முடிவெடுத்தார் எனும் செய்தியைப் பதிவு செய்கிறார் கோபண்ணா.

 61 வயதான காந்தியின் மூட்டுக்கள் கடுமையாக வலித்த காரணத்தால் பயணத்தைத் தொடர முடியாமல் போனால் என்னாவது என்பதற்காக, எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு குதிரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையும் யாத்திரை தொடங்கிய இரண்டாவது நாளிலேயே திருப்பி அனுப்பிவிட்டார் காந்தி.. இரவு கடைசியாக உறங்கி விடியலில் முதல் ஆளாகத் தயாராகி நின்றார் அவர். மூட்டு வலியின் காரணமாக காலை யாத்திரை தொடங்கியவுடன் சிறிது தூரம் இரு சத்தியாகிரகிகளின் தோள்களில் சாய்ந்தபடியே கடந்து வருவார். அதன் பின்னர் தன் தடியைத் துணையாக கொண்டு மீதி தூரத்தை நடந்தே  கடப்பார்.   

இப்படியே 241 கிலோமீட்டர்கள் நடைப்பயணம் செய்து தண்டியை வந்தடைந்த காந்தி “ நாளை உப்புடன் திரும்பி வருவேன், அல்லது என்னுடல் கடலில் பிணமாக மிதக்கும்” என உணர்ச்சி பொங்க உரையாற்றினார். தண்டியில் காந்தி பற்ற வைத்த அந்த உணர்வு அனலாக இந்தியா முழுவதும் கனன்று எரிந்தது.

 தமிழகத்தில் வேதாரண்யத்திலும் சென்னையிலும் நடந்த உப்பு சத்தியாகிரகம் பற்றிய குறிப்புகளையும் அளிக்கிறார் கோபண்ணா.  76 வயதான நாவிதர் வயிரப்பன் தியாகிகளுக்கும் தேசியவாதிகளுக்கு மட்டுமே சவரம் செய்வது என்றும்  ஆங்கிலேயர்களுக்கும், போலீசாருக்கும் அவர்களுக்கு துணை நிற்கும் இந்தியர்களுக்கும் சவரம் செய்வதில்லை எனும் கொள்கையை உறுதியாக கடைபிடித்தார். ஒருமுறை வரிசையில் வந்தமர்ந்த காவலருக்கு சவரம் செய்யத் தொடங்கிய பின்னர் அவர் ஒரு போலீஸ்காரர் எனும் தகவல் வயிரப்பனுக்குத் தெரியவருகிறது. போலீசாரின் மிரட்டலுக்கு அடிபணியாமல் தன் சவரக் கத்தியை அப்படியே போட்டுவிட்டு சவரத்தைப் பாதியில் விட்டுச் செல்கிறார். போலீசார் அவரை அழைத்து விசாரிக்கும்போது. ‘என் கையை வெட்டினாலும் போலீசாருக்கு வேலை செய்யமாட்டேன்’ என வயிரப்பன் உறுதியுடன் தன் எதிர்ப்பை வெளிபடுத்தியதன் விளைவாக,  ராஜாஜி, வேதரத்தினம் பிள்ளைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உப்புசத்தியாகிரக போராட்ட காலத்தில் ஆறு மாத கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்கும் பேறு வயிரப்பனுக்கும் வாய்க்கிறது.

காவலர் வரும் வரை காத்திருந்து கைதான ராஜாஜி, தன் சுமையைப் பிறர் சுமந்து வந்ததைக் கடித்து கொண்ட காந்தி, என பல புதிய தகவல்களை தன் போக்கில் சொல்லி செல்கிறது இந்தப் புத்தகம். அளவில் சிறியது என்றாலும் இந்நூல் இந்திய சுதந்திர போராட்டத்தின் மிக முக்கியமான சகாப்தத்தின் வரலாற்றை எளிமையாக நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. இந்த நூலை வாசிக்கும் போது லூயி பிஷர் அவருடைய நூலில் காந்தியின் இந்த தண்டி உப்பு சத்தியாகிரகத்தை பற்றி இவ்வாறு குறிப்பிடுவது நினைவுக்கு வருகிறது:

“ஒரு பிடி உப்பைக் கொண்டு வல்லமை மிக்க  ஒரு அரசாங்கத்தை எதிர்க்க  ஒரு கலைஞனுடைய திறமையும் கண்ணியமும் கற்பனைத் திறமும் காந்திக்கு இருந்திருக்க வேண்டும்”\

ஆம் அப்படியின்றி வேறெப்படி இருக்க முடியும்?


தண்டி யாத்திரை 
ஏ.கோபண்ணா
உள்ளடக்கம்- வரலாறு, அபுனைவு 

நவ இந்தியா பதிப்பகம் 
9, 2 வது பிரதான சாலை,
வெங்கீஸ்வரர்  நகர் 
வட பழனி 
சென்னை- 26

Wednesday, June 28, 2017

மகாத்மா காந்தி : ஒரு உன்னத வாழ்க்கையின் சிறு வரலாறு வின்சென்ட் ஷீன்

(ஆம்னிபஸ் பதிவு)

அண்மையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் உள்ள பிரபல கல்லூரியில் சிறப்புரை ஆற்ற ஒரு சிறப்பு பேச்சாளர் அழைக்கப்பட்டிருந்தார். நவீன காலகட்டத்தில் காந்திய சிந்தனையை தமிழக சூழலில் பல தளங்களில் கொண்டு செல்லும் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் அவர். நானும் சென்றிருந்தேன். சிறப்பான அந்த உரை முடிந்த பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. ஒரு கல்லூரி மாணவன் எழுந்து அந்த சிறப்பு பேச்சாளரிடம், “ காந்தி, தன்னுடைய பனியா இனம் வளம் பெற வேண்டும் என்பதற்காக குறுகிய நோக்கில் அனைவரையும் நூல் நூற்கச் சொன்னார் என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது, அப்படிச் சொல்லும் ஒரு புத்தகத்தை நான் வாசித்திருக்கிறேன் , இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். இந்த கேள்வி என்னை திடுக்கிட செய்தது.  நம் வரலாற்று உணர்வையும் புரிதலையும் எண்ணி நம்மை நாமே மெச்சிகொள்ளத்தான் வேண்டும். அந்த மாணவனை நான் குற்றம் சொல்ல மாட்டேன், எதிர்மறையாகவேணும் காந்தி குறித்து ஏதேனும் ஒன்றை வாசித்திருக்கிறான், அதைப் பற்றிய ஐயத்தை அவனால் எழுப்ப முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை என்னுடைய நிலைமை அதைவிட மோசம் என்றுதான் நினைத்துக் கொள்கிறேன்.




காந்தியின் வாழ்க்கை பதிவு செய்யப்பட்ட அளவிற்கு இருபதாம் நூற்றாண்டின் வேறெந்த மனிதரின் வாழ்வும் பதிவு செய்யப்பட்டதில்லை என்று எனக்கு தோன்றுவதுண்டு. இதற்கு மிக முக்கியமான காரணம், தன்னுடைய வாழ்வை முழுமையாக அதன் அத்தனை கீழ்மைகளுடனும் நம்முன் பரப்பிக் காட்டும் துணிவு காந்திக்கு இருந்ததுதான்.

காந்தியின் வாழ்க்கை பற்றிய பதிவுகள் சிதறிக்கிடக்கும் உலோக உதிரி பாகங்களைப் போல், அதை வைத்து ஒரு இயந்திர துப்பாக்கியையும் நாம் உருவாக்கலாம், அல்லது நமது இலக்கை நோக்கி பயணிக்க ஏதுவான வாகனத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம். நமக்குத் தேவையான துண்டு நிகழ்வுகளைக் கட்டமைத்து, அவரை கையை பிசைந்துக்கொண்டு மிரட்டலாக சிரிக்கும் வில்லனாக சித்தரிக்கலாம், அல்லது அத்தனை வில்லன்களையும் ஒரேயடியில் துவம்சம் செய்யும் புரட்சி நாயகனாகவும் சித்தரிக்கலாம். இத்தனை வாழ்க்கை வரலாறுகள் அவரைப் பற்றி எழுதப்பட்டுள்ளன, ஆனால் ஒரு எளிய மனப்பதிவு மூலமே பெரும்பாலான இந்தியர்கள் அவைகளை பொருட்படுத்தாமல் தாண்டிச் சென்றுவிடுகிறார்கள். 

காந்தியின் சரிதைகள் எனக்கு அலுப்பு தட்டுவதே இல்லை  ஒவ்வொரு சரிதையும் ஏதோ ஒருவகையில் காந்தியைப் புதிய கோணத்தில் காட்டுவதாகவே இருக்கிறது. அவ்வகையில் அமெரிக்க பத்திரிக்கையாளர் வின்சென்ட் ஷீன் எழுதி, சிவசாமியால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள வ.வு.சி நூலக வெளியீடான மகாத்மா காந்தியின் சரிதை மிக முக்கியமான நூலாகும். ஷீன் , ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளர், பலருடைய வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர். காந்தியின் இறுதி காலத்தில் அவருடன் காலம் கழித்தவர். காந்தியின் மரண தருணத்தின் நேரடி சாட்சியாக இருந்தவர்.

இன்றைய நூல் அறிமுகம், ஒட்டுமொத்தமாக காந்தியின் வாழ்க்கையை பற்றிய பதிவாக இல்லாமல், என்னுடைய பார்வையில் ஷீன் முன்வைக்கும் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பார்வைகளைக்கொண்டு காந்தியின் ஆளுமையை புரிந்துகொள்ள முயல்வதே இந்த கட்டுரையின் நோக்கம். ஷீனுக்கு உணர்ச்சிகரமான நடை எளிதில் கைகூடியிருக்கிறது என்பதை நிச்சயம் சொல்ல வேண்டும். மொழிபெயர்ப்பாளர் சிவசாமியும் அதே நடையை தன்னுடைய எழுத்தில் ஓரளவிற்கு வெற்றிகரமாக கொணர்ந்திருக்கிறார் என்றே எண்ணுகிறேன். 


வின்சென்ட் ஷீன் 


முதல் அத்தியாயத்தில் , ‘இந்த இருபதாம் நூற்றாண்டில் பொதுமக்களின் மகானாக ஆகும் அந்த இணையற்ற துர்பாக்கியம் அவருக்குக் கிட்டியது’ என்றே தொடங்குகிறார் ஷீன். காந்தி வாழ்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில் அவர் மீது கட்டி எழுப்பப்பட்ட தொன்மக்கதைகளை பற்றி சுவாரசியமாக குறிப்பிடுகிறார் ஷீன். காந்தியின் புகைப்படம் பொருந்திய டாலர் ஒன்றை அணிந்திருந்த வங்காளி ஒருவர் காந்தியை சந்திக்க வருகிறார், தனக்கு சில வருடங்களாக பார்ஸ்வ வாய்வு இருந்து அவதியுற்றதாகவும், அந்த டாலரை அணிந்து தினமும் காந்தியின் நாமத்தை செபித்துக் கொண்டிருந்ததால் அந்த நோயிலிருந்து மீண்டு எழுந்ததாகவும் காந்தியிடமே கூறுகிறார் அவர். உங்களை குணமாக்கியது கடவுளே அன்றி காந்தி அல்ல என்று மறுக்கிறார் காந்தி. காந்தி பயணித்துக் கொண்டிருந்த ரயில் பெட்டியில் இருந்து தலைக்குப்புற கீழே விழுகிறார் ஒருவர். அவர் இறந்திருப்பார் என்று அனவைரும் அஞ்சுகிறார்கள், ஆனால்  சிரித்துக்கொண்டே சிறு காயம் கூட இன்றி எழுந்து நடந்து வருகிறார் அவர். இதற்குக் காரணம் காந்தியின் அருகாமை என்று நம்பப்பட்டது. இறந்த குழந்தைக்கு காந்தி உயிர் கொடுத்தார் என்றார்கள் காந்தி கொடுத்தது என்னவோ எனிமா தான்.  ஆம் காந்தி சொல்வதுப்போல் “மகாத்மாக்களின் மனத்துயரின் ஆழம் மகாத்மாக்களுக்கு மட்டுமே தெரியும்.”

இந்த மகாத்மா எனும் சட்டகம் அவருக்கு நன்மை செய்ததா இல்லையா என்பது மிக சிக்கலான கேள்வி. அவரை அப்படி அழைப்பதில் அவருக்கு விருப்பமில்லைதான் எனினும். மக்கள் சக்தி ஒன்று திரள நிச்சயம் அந்த சட்டகம் அன்றைய சூழலில் உதவியது என்பதையும் மறுக்க முடியாது.  காந்தி தோட்டி வேலை உட்பட அனேக வேலைகளைத் தானே செய்தாலும், அவை எவர் கண்களையும் உறுத்தியதில்லை, ஏனெனில் அவர் மகான், மகான்கள் காலகாலமாக அப்படித்தான் இருந்திருக்கிறார்கள், மகான்கள் வணங்கப்பட வேண்டுமே அன்றி பின்பற்றப்பட வேண்டியதில்லை என்பதே மக்களின் மனோபாவமாக இருந்திருக்கிறது. 

மகாத்மாவாகவே இருந்தாலும், அவருடைய அத்தனை செயல்பாடுகளும் மக்கள் ஆதரவை பெறவில்லை. சாதியை பற்றியும் தீண்டாமை பற்றியும் சமஸ்தான ராஜாக்கள் தொடங்கி காங்கிரஸ் தொண்டர்கள் வரை முழங்கிக்கொண்டே தானிருந்தனர், ஆனால் யாரும் ஒரு தீண்டத்தகாதவருடன் சமமாக அமர்ந்து உணவை பகிர்ந்துண்ண தயாராக இல்லை. காந்தி சபர்மதி ஆசிரமத்தில் அதைச் செய்தார். அவர் ஆசிரமத்திற்கு நிதியுதவி அளித்துக்கொண்டிருந்த ஜாதி இந்துக்களின் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேரிட்டது. நிதியுதவி நிறுத்தப்பட்டது. காந்தி இந்த சூழலில் ஆற்றிய எதிர்வினை அபாரமானது, அந்த ஒரு எண்ணமே சராசரியிலிருந்து அவர் மாறுபட்டவர் என்பதைப் பறைசாற்றுவதாக இருந்தது எனலாம், தனது ஆசிரமத்தையே தீண்டத்தகாதவர்கள் வாழ்ந்த சேரிக்கு மாற்ற யத்தனித்தார் காந்தி. யாரோ முகமறியாத முகமதியர் ஆசிரமத்திற்கு நிதியளிக்க முன்வந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஷீன் காந்தியின் மிக முக்கியமான அணுகுமுறையை பற்றி பேசுகிறார், காந்தி அடிப்படையில் தன்னுடைய உள்ளுணர்வின் தடத்தைப் பின்பற்றி நடப்பவர். அவர் ஆதர்சமாக கொண்ட கீதை, தால்ஸ்தாய், ரஸ்கின் என ஒவ்வொன்றுமே ஏற்கனவே அவர் கொண்டிருந்த நம்பிக்கைகளை ஆழமாக்குவதாகவே இருந்தன. அவரது நம்பிக்கைக்கான ஆதாரங்களை தேடி சேகரித்து வலுபடுத்திக்கொண்டார் என்று.

வேறு பல நிலைப்பாடுகள் காலப்போக்கில் மாறியதுப் போல், ராணுவம் மற்றும் காவல் துறை பற்றிய பார்வையும் காந்திக்கு மாறியதாக சொல்கிறார் ஷீன். காந்தியின் மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் காந்தி தன்னிடம் ‘பலமான ராணுவமும் போலீசும் இல்லாமல் அரசாங்கம் நீடிக்க முடியாது’ என்று தெரிவித்ததாக சொல்கிறார். அன்றைய மதக் கலவரங்கள், உயிர் சேதங்கள் அவரை வெகுவாக பாதித்தது. ராணுவம் மற்றும் காவல்துறை போன்ற  கண்காணிப்பு அமைப்புகளின் முக்கியத்துவத்தை பற்றி அவரை சிந்திக்க செய்திருக்கக்கூடும்.  

காந்தியின் மிக முக்கியமான தவறு என ஷீன் கூறுவது விவாதத்திற்கு உரியது, தன்னைப் போன்ற சாதாரண பிறவியால் பல ஒழுக்கங்களைக் கடைபிடித்து சாதிக்க முடியும் எனும் போது பிற அனைவராலும் தன்னைக் காட்டிலும் சிறப்பாகவோ அல்லது குறைந்தது தன்னளவிலோ சாதிக்க முடியும் என்று மண்ணில் வாழ்ந்த அனேக மகான்களைப் போல் அவரும் தவறாக கணித்தார் என்கிறார் ஷீன். டால்ஸ்டாய் ஒரு இலக்கியவாதியாக பல விஷயங்களை எழுதினாரே ஒழிய அவைகளை தன்னுடைய தனிவாழ்வில் அவர் கடைபிடித்ததில்லை என்பது அவருக்கு உறைக்கவே இல்லை என்கிறார். காந்தி அவருடைய நெருங்கிய சீடர்களை வேண்டுமானால் இப்படி அணுகியிருக்கக் கூடும், ஆனால் மக்கள் திரளை பற்றியும், பெருந்திரள் மக்களின் மனோபாவம் பற்றியும் உலகின் பிற தலைவர்களைக் காட்டிலும் அதிகமான புரிதல் காந்திக்கு இருந்தது என்றே நம்புகிறேன். 

ஷீன் காந்தியிடம் இருந்த அபாரமான நோயெதிர்ப்பு சக்தியைப் பற்றியும் குறிப்பிடுகிறார். தென்னாப்ரிக்காவில் கடுமையான கருப்பு  பிளேக் பரவிய காலத்தில் சுரங்கத் தொழிலாளர்களை கவனித்துக் கொண்டார் அவர். அவர்களை கவனிக்க நியமிக்கப்பட்ட பெண் நர்சுக்கு நோய் தொற்று பரவி விடுமோ என்று அஞ்சி ஓரிரு நாட்களில் திரும்ப அனுப்பினார், ஆனால் அவரும் நோய் பீடித்து ஓரிரு நாட்களில் மரணித்தார். சுகாதாரம் குன்றிய, அசுத்தமான இடங்களிலும், நோயாளிகளுக்கும் இடையே காந்தி தன் வாழ்வின் பெரும் பகுதியை கழித்தாலும் அவரை பெரும் நோய் தொற்றுகள் ஏதும் பாதித்ததில்லை என்பது ஆச்சரியமானது. ஒருமுறை நுரையீரல் பாதிக்கப்படுகிறது, குடல்வால் அழற்சி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, ஆகாகான் சிறைசாலையில் மலேரியாவால் பீடிக்கப்பட்டார். அவருடைய நீண்ட வாழ்வையும், வாழ்ந்த சூழலையும் கணக்கில் கொண்டால் இது ஒன்றுமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சிறைசாலையில் குடல்வால் அழற்சி ஏற்பட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் அறுவை சிகிச்சையில் மரணம் நேரிட்டால் அதை பொருட்டு கிளர்ச்சியில் ஈடுபடக்கூடாது என்று ஆங்கிலேய அதிகாரிகள் பதறி சென்று காந்தியிடம் எழுதிவாங்கிக்கொண்டார்கள் என்கிறார் ஷீன்.

அடிப்படையில் காந்தி உள்முக ஆளுமை கொண்டவர் (introvert) இங்கிலாந்திலும் , பின்னர் இந்தியா வந்த புதிதிலும் அவர் பிறர் முன் பேசவே கூச்ச்சப்படுபவர்தான், தென்னாப்ரிக்காவில் அவரடைந்த மாற்றங்கள் நிச்சயம் அபாரமானவை. காந்தி வாதாடிய எழுபது வழக்குகளில், ஒன்றில் மட்டும்தான் தோற்றார் என்கிறார் ஷீன். காந்தி போராட்ட களத்திற்கு தயார்படுத்தும் முன்பு, அந்த போராட்டத்தில் பங்குபெறுவதால் நேரும் அதிகபட்ச இழப்புக்கான சாத்தியக்கூறுகளை விளக்கி புரியவைத்து அவர்களின் பூரண சம்மதத்துடன்தான் போராட்டத்தில் அவர்களை இணைத்துக் கொண்டார் என்பதையும் ஷீன் சுட்டிக்காட்டுகிறார்.    

காந்தி தொடர்ந்து எதிர் தரப்பின் மனசாட்சியுடன் உரையாடிக்கொண்டே இருந்தார். கொஞ்சம் குறும்பு நிறைந்த கோட்டி கிழவர்தான் இந்த காந்தி, தன்னை உளவு பார்க்க வந்த உளவு துறை போலீசாரை உபசரித்து நட்பாக்கிக்கொண்டது, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, தான் செய்தது உங்கள் சட்டப்படி மாபெரும் குற்றம்தான் என ஒப்புக்கொண்டு அதற்கு அதிகபட்ச தண்டனையை வழங்குமாறு கேட்டு நீதிபதியையே குழப்புவது, இந்தியாவில் வைஸ்ராயாக இருந்த லார்ட் ரீடிங், வேலிங்டன், இர்வின், மவுண்ட்பேட்டன் என அனேக ஆங்கிலேய அதிகாரிகளின் நன்மதிப்பையும் நட்பையும் சம்பாதித்தது என எதிர்த்தரப்பை தொடர்ந்து மரியாதையுடனே நடத்தி வந்திருக்கிறார் காந்தி.  அதேபோல் ரூஸ்வெல்ட், இந்தியா மீது எடுத்துக்கொண்ட அக்கறை பற்றியும், தொடர்ந்து இந்திய விடுதலை குறித்து சர்ச்சிலுக்கு ஏற்படுத்திய நிர்பந்தம் பற்றியும் ஷீன் பதிவு செய்துள்ளார், இந்த செய்தி எனக்கு புதிதாக இருந்தது. ஷீன், பகத் சிங் பிரச்சனை பற்றியோ அல்லது காந்தியின் பாலியல் சோதனைகள் பற்றியோ ஒருவரிக்கூட குறிப்பிடவில்லை என்பது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.

பொதுவாக காந்திக்கு கலை இலக்கிய ஆர்வம் குறைவு என்று சொல்லப்படுவதுண்டு. வட்டமேசை மாநாடு முடித்து ஊர் திரும்பும் பொழுது ரோமைன் ரோலாந்தை முதன்முதலாக சந்திக்கிறார் காந்தி, ரோலாந்தை தனக்காக பியானோ வாசிக்கச் சொல்லி கேட்கிறார், அவரும் மகிழ்ந்து பீத்தோவனின் அந்தாந்தே எனும் பிரபலமான இசைக் கோர்ப்பை வாசித்து காட்டுகிறார். பின்னர் ரோம் நகரில், பெனிட்டோ முசோலினியை சந்தித்து இருபது நிமிடம் பயனற்ற பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார் காந்தி. என்ன பேசியிருப்பார்?

உண்ணாவிரதத்தை அனைவரையும் மிரட்டிப் பணிய வைக்கும் ஆயுதமாக காந்தி பயன்படுத்தினார் என்பது அவர் மீது பரவலாக வைக்கப்படும் குற்றசாட்டுகளில் ஒன்று. காந்தி உண்மையில் அதை ஒரு பிரார்த்தனையாக, ஆன்மவலுவை அதிகப்படுத்தும் யுத்தியாக மட்டுமே பார்த்தார் என்கிறார் ஷீன். அதேபோல் அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பேசியதைக் காட்டிலும், தம்மக்களின் துன்பங்களை பற்றியே சிந்தித்தார், பேசினார் என்பதையும் குறிப்பிடுகிறார். இந்தியா தன்னை ஆங்கிலேயர்களுக்கு சமானமான தளத்தில் உயர்த்திக்கொள்ள வேண்டும், அதற்காக மக்களை தயார்படுத்த வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. ஷீனின் இந்த சரிதையைக்கொண்டே அட்டன்பரோ தன்னுடைய திரைப்படத்தை உருவாக்கி இருப்பார் என்று தோன்றுகிறது. ஷீனின் சரிதையின் பாதிப்பை கணிசமாக திரைப்படத்தில் காண முடியும்.

காந்தியின் மரணத்திற்கு பின்னர், முழுவதும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளால் ஆன சிறப்பு ரயில் ஒன்றில் அவருடைய சாம்பலைக் கொண்டு சென்று கரைத்தனர் என்று ஷீன் முன்வைக்கும் சித்திரம் மனதை பிசைகிறது. வாழ்க்கை முழுவதும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் காலம் கழித்த அந்த கிழவர், அந்த மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்த தம்மக்களையும் அவர்களுடைய வாழ்க்கையை உயர்த்துவதற்கும் சிந்தித்து செயல்பட்ட ஒரு மாமனிதனின் உடல் பிடி சாம்பலாக ஜல பிரவாகத்தில் சங்கமித்துவிட்டது. காந்தி, நெருப்பனைந்து நீர்த்த அந்த பிடி சாம்பல் அல்ல, தனது கீழ்மைகளை பொசுக்க முயன்று மேல்நோக்கி எழும் தழல். நேர்மையும், வாய்மையும் கொண்ட ஒவ்வொரு மனிதனின் ஆழத்திலும் அந்த தழல் சுடர்விட்டு எரிந்துக்கொண்டிருக்கும் வரை காந்திக்கு அழிவில்லை.


மகாத்மா காந்தி
வின்சென்ட் ஷீன்
சரிதை, ஆங்கிலம், தமிழ், மொழிபெயர்ப்பு,

Tuesday, June 27, 2017

உணவே மருந்து - டாக்டர்.எல்.மகாதேவன்

(ஆம்னிபஸ் பதிவு)

ஆயுர்வேத மாணவனாக அன்றுதான் நான் என் முதல் கருத்தரங்கில் அமர்கிறேன், ஆக்ஸிஜென், கார்பன் ஹைட்ரஜன் என்று அதுவரை அறிந்தவர்கள் வெளியேறி வாயு, அக்னி, கபம்  என  புதிய குணச்சித்திரங்கள் அறிமுகமான தருணம். குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்த வேறோர் உலகத்தில் திசை தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். பொறியியல் படித்திருக்க வேண்டும் , நாம் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்று குழம்பித் திரிந்த நாட்கள் அதைத் தொடர்ந்தன (இன்றும் அவ்வப்போது அந்த எண்ணம் குறுக்கிடுகின்றது என்பது வேறு விஷயம்). மீண்டும் மீண்டும், அடுத்தடுத்து, மேடையேறி புத்தகங்களில் உள்ளதை ஆசைதீர வாந்தியெடுத்த பேச்சாளர்களை பார்த்தபோது கிட்டத்தட்ட என் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது, இது நம் வாழ்விற்கு பயனளிக்கப் போவதில்லை, ஆயுர்வேத கல்லூரி செத்த கல்லூரிதான், நான் வாசிப்பது அறிவியல் பாடம் அல்ல இன்றைக்குப் பயன்படாத வரலாறுதான் என்று நினைத்துக் கொண்டேன். 




அந்த நேரத்தில் அரங்கத்தில் ஒரே பரபரப்பு, முழுக்கை சட்டைபோட்ட சிவந்த  மனிதர் ஒருவர் மேடைக்கு வந்தார். மற்றொரு அறுவை என்று எண்ணியிருந்த தருணத்தில், "ஆயுர்வேத சூத்திரங்களை மனனம் செய்து என்னுடைய நினைவுத்திறனை காண்பிக்க நான் வரவில்லை, ஆயுர்வேத சூத்திரங்கள் மருத்துவனுக்கு எங்கெங்கு உதவுகின்றன என்று என் அனுபவத்தில் கண்டுகொண்டதை உங்களுடன் பகிரவே நான் வந்திருக்கேன்," என்றார் அவர். சோம்பிக் கூனிய அரங்கமே நிமிர்ந்து அமர்ந்தது, அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்கள் அவராற்றிய உரை என் வாழ்வையே மாற்றியது என கூறலாம். ஆயுர்வேதத்தின் மீது நம்பிக்கை பிறந்தது, 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீண்டுக்கொண்டிருக்கும் மனிதகுலத்தின் நோய்களுக்கு எதிரான யுத்தத்தில் நானும் ஒரு கண்ணி என உணர்ந்தேன், இனி இதை ஒருபடி முன் கொண்டுசெல்ல வேண்டும், அதுவே என் கடமை. ஆயுர்வேதத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளைச் செய்து அதற்காக நோபல் பரிசு பெறும் போது என்ன உரையாற்ற வேண்டும்  என்றெல்லாம்  கனவு காணத் தொடங்கினேன்.  கனவுகளுக்கு ஒன்றும் குறைவில்லை. அன்று உரையாற்றியவர்தான் தெரிசனம்கோப்பு டாக்டர்.எல்.மகாதேவன். இன்றளவும் ஆயுர்வேதத்தைப் பொருத்தவரை அவரே என்னுடைய மானசீக குருவாக இருக்கிறார். அவர் எழுதிய நூல் தான் உணவே மருந்து.

“எனது பேற்றை வியக்காமல் என் செய? பேறு மாத்திரமன்றி நன்றிக் கடனும் ஆகும், அவரது நூலுக்கு இன்று நான் முன்னுரை எழுதுவது. யோசித்துப் பார்க்கையில், சமூகத்தின் சொறி சிரங்குக்கு அல்லது இளைப்புக்கு நானும் இன்று இலக்கியம் என்றொரு எண்ணெய் தயாரித்துக்கொண்டிருக்கிறேன் போலும். ஆனால் நோய் குணமாகியதா, குணமாகுமா என்பது வேறு கேள்வி!” என்று இந்த நூலிற்கான முன்னுரையில் குறிப்பிடுகிறார் நாஞ்சில் நாடன்.

பஞ்சமகாபூதங்களின் சேர்க்கையில் உருவானதால்தான் பிரபஞ்சம் என அழைக்கிறோம். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அம்சமும் பஞ்ச மகாபூதங்களின் வேறுபட்ட விகிதாசாரக் கூட்டினால் உருவானது என்று நம்புகிறது ஆயுர்வேதம். உட்கொள்ளும் உணவும் ஐம்பெரும் பூதங்களே, அதை உட்கொள்ளும் மனிதனும் ஐம்பெரும் பூதங்களால் ஆனவன்தான். மனிதனை இயக்கும் முக்குற்றங்கள் என அழைக்கப்படும் வாத, பித்த, கபமும் ஐம்பெரும் பூதங்களால் ஆனதே. உட்கொள்ளும் உணவு அக்னியால் செரிக்கப்பட்டு உடலில் அந்தந்த பரமாணுக்கள் அந்தந்த பூதங்களை போஷிக்கின்றன. உடலின் முக்குற்றங்களாகிய வாத பித்த கபமும், மனதின் முக்குற்றங்களாகிய சத்வ ரஜோ தமசும் வெகு நுட்பமான உறவுகளைக் கொண்டிருப்பதால், உண்ணும் உணவு மன செயல்பாடுகளையும் கணிசமாக பாதிக்கும் என்று சொல்கிறது ஆயுர்வேதம். ஆயுர்வேதத்தில் விவரிக்கப்படும் மன நோய்களுக்கும்கூட உணவு காரணிகளை பட்டியலிடுகின்றன மூல நூல்கள்.

டாக்டர்.எல்.மகாதேவன் 

இந்த நூலின் முதல் அறுபது பக்கங்கள் தேர்ந்த ஆய்வுக்கட்டுரையின் நேர்த்தியுடன் தொகுக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேத நூல்களிலும், தொன்மையான இந்திய நூல்களிலும் உள்ள பல குறிப்புகளைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர். இரண்டாம் பகுதி முழுவதும் கஞ்சி, பொடி வகைகள், சூப் வகைகள், சாத வகைகள், களி வகைகள், ரசம், கூட்டு, குழம்பு, பச்சடி என பதினேழு வகை உணவுகளில்  பல ஆரோக்கியமான உணவுக் குறிப்புகளையும், செய்முறைகளையும்  தொகுத்துள்ளார். ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுக் குறிப்புகள்  மட்டுமின்றி, மரபாக தமிழகத்திலும் கேரளத்திலும் புழக்கத்தில் உள்ள  மருத்துவ குணம் நிறைந்த தாவர வகைகளைக்கொண்டு புதிதுபுதிதாக பல குறிப்புகளையும் அளிக்கிறார் மகாதேவன் (இவை எதையும் இதுவரை நான் முயன்றதில்லை ). 

உதாரணமாக, வழமையான ரசப்பொடியுடன் சிறிது நெய்யும் கடுகு தாளித்த வாதநாராயண இலைகளையும் சேர்த்து ரசம் வைத்தால் கைகால் வலி, இடுப்பு-முதுகு வலி, வாதக் கோளாறுகள் மட்டுப்படும் என்கிறார். எள்ளுப் புண்ணாக்கு நீரிழவு நோய்க்கு பயன்படும் என்கிறார். நிலக்கடலையை 'ஏழைகளின் பாதாம்' (poorman's almond) என்று அழைக்கிறார்கள் நவீன ஊட்டசத்து நிபுணர்கள், வெல்லத்துடன் சேர்த்து கடலையை உண்ணும போது புரதம், இரும்புசத்து, என அனேக சத்துக்கள் கிடைக்கும் என்கிறார்கள். எள்ளு உருண்டையும், கடலை உருண்டையும்  நம் கைக்கெட்டும் தொலைவில் உள்ள ஆரோக்கியமான அதேவேளை ருசியான பண்டங்கள். இந்த நூலின் மிக முக்கியமான அம்சம் என நான் கருதுவது, பெரும்பாலும், இந்த நூலில்  குறிப்பிடப்படும்   உணவுப் பண்டங்கள் அனைத்துமே நம் அருகாமையில், எளிதில் கிடைக்கக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த தாவரங்களைக் கொண்டு செய்யப்படுவதுதான். ஆகவே செலவும் குறைவு , ஆரோக்கியமும் உறுதி.

உடலுள் இருக்கும் இறைவனின் வடிவான அக்னிக்கு ஆஹுதியாகக் கொடுக்கப்படுவதே உணவு. இந்த உடல் அன்னத்தினாலானது. ஆயுர்வேதத்தில் உணவு உட்கொள்ளும் விதிமுறைகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. முன்னர் உண்ட உணவு செரித்த பின்னர்தான் அடுத்து உண்ண வேண்டும், பசியில்லாமல் உண்ணக்கூடாது, இரைப்பையை நான்கு பாகங்களாக பிரித்தால், அதில் இரண்டு பாகத்திற்கு திட உணவுகளையும், ஒரு பங்கிற்கு திரவ உணவுகளையும் உட்கொண்டு மற்றொரு பங்கை காலியாக விடவேண்டும். அதிவேகமாகவோ, அதிமந்தமாகவோ உட்கொள்ளக்கூடாது. முதலில் இனிப்பு பண்டங்களும், பின்னர் மற்ற சுவை உணவுகளையும் உண்ண வேண்டும், இறுதியாகவே கசப்பான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். நம் பாரம்பரிய உணவு முறையில் உண்ணும்போது, தொடக்கத்தில் இனிப்பான உணவுகளை உண்பதால் வாத தோஷம் சமனடைகிறது, அடுத்ததாக புளிப்பு சுவையை அடிநாதமாக கொண்ட சாம்பார் ரசம் போன்ற உணவுவகைகள் அக்னியை தூண்டி பித்தத்தை முறைபடுத்துகின்றன, இறுதியாக கபத்தை சமன் செய்ய மோர் உதவும். 

மருதம், நெய்தல், பாலை, குறிஞ்சி, முல்லை என ஐவகை நிலங்களில் புழங்கிய உணவுமுறை பற்றிய குறிப்புகளும் உண்டு. ஆயுர்வேதம் உணவின் குணாம்சங்களை ஆறு சுவைகளைக் கொண்டே வரையறுக்கிறது, ஒவ்வொரு சுவையின் தன்மையும் அதை உட்கொள்வதால் ஏற்படும் மாற்றமும் விரிவாக அலசப்பட்டுள்ளன. வெவ்வேறு காய்கனிகள், தானியங்கள், மற்றும் உணவு வகைகளின் இயல்புகளையும் அது உடலில் ஏற்படுத்தும் விளைவுகளையும் ஆயுர்வேத மூல நூல்கள் விளக்குகின்றன, அவையும் இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக பண்டையகாலத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் உபகரணங்களின் படமும் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

கிருஷ்ண தேவ ராயர் காலத்து கல்வெட்டுகளில் அதிரசம் (அதீத இனிப்பு சுவை உடையது என்று பொருள்) பற்றிய குறிப்புகள் உள்ளன. வடமொழியில் இறைவனுக்கு பண்டைய  படைக்கப் படும் உத்காரிகை எனும் பண்டத்தை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன அதுவே இன்று தோசை என அழைக்கப்படுகிறது. இட்டு அவி எனும் சொல் மருவி இட்லி வந்தது என ஆங்காங்கு சில சுவாரசியமான வரலாற்று தகவல்களையும் நமக்கு சொல்லிச் செல்கிறது இந்நூல்.

இன்று உலகெங்கும் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைகளில் ஒன்று ஆரோக்கிய பராமரிப்பு துறை (wellness industry), சந்தையில் அநியாய விலையில் குவியும் விதவிதமான விளைவுகளைக் கோரும் பன்னாட்டு ஊட்டசத்து மாத்திரைகளும் பானங்களும் விற்றுத் தீர்வதைப் பார்க்கும்போது சற்று பயமாகத்தான் இருக்கிறது. அடிப்படையில் நம் ஒழுங்கீனமான உணவு வழக்கங்களை முறைப்படுத்தாமல் மருந்துகளாக வாங்கி அடுக்குவதில் என்ன பயன்?

முன்னுரையில் நாஞ்சில்நாடன் எழுதுகிறார், “உணவைக் கலோரியாக மட்டும் கருதாமல், வயிற்றுப் பையைக் குலுக்கி நிறைப்பதாக மட்டும் கருதாமல், தீட்டி வைத்திருக்கும் நாவுக்குத் தீனியாக மட்டும் நினைக்காமல் அதையோர் மருந்தாகக் கொண்டால் நோயற்ற வாழ்வை நாம் வாழலாம்.” இந்த செய்தியை இந்த நூல் நமக்கு கச்சிதமாக உணர்த்துகிறது.


உணவே மருந்து
டாக்டர்.எல்.மகாதேவன்
காலச்சுவடு வெளியீடு

Monday, June 26, 2017

உருமாற்றம்

(ஆம்னிபஸ் பதிவு)

சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில் வாசுதேவனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்தேன். நானும் என் நண்பனும், எங்கள் ஆசிரியர் ஒருவருடன் சென்னை புறநகரில் உள்ள அந்தத் துயரரின் வீட்டுக்குச் சென்றோம். அந்த மத்திய வர்க்க வாடகை வீட்டில்,  ஒய்வு பெற்ற  அவனது தந்தையும், தாயும், பாலிடெக்னிக் படித்துக்கொண்டிருந்த ஒரு  தம்பியும் வசித்து வந்தனர். வாசுதேவன் பொறியியல் படித்து நல்ல பணியில் இருந்த பொறுப்பான இளைஞர். எந்த தீய சகவாசங்களும், கெட்ட பழக்கங்களும் அவருக்குக் கிடையாது. 

அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  பணி முடித்து வீடு திரும்பிய ஓரிரவில் கொடுமையான விபத்தில் தலையில் பலத்த காயம்பட்டு, சுய நினைவை இழந்திருந்தார். மண்டையோட்டின் ஒரு பகுதியைப் பெயர்த்து எடுத்து அறுவை சிகிச்சை செய்திருந்தனர். கண்கள் அவ்வப்போது தன்னிச்சையாக திறந்து மூடும், கைகால்களும் அவ்வப்போது தன்னிச்சையாக அசையும். சளியடைத்த மாரை ஒரு சக்ஷன் இயந்திரம் சுத்திகரித்துக் கொண்டிருந்தது.  உணவு நேராகக் குடலுக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. வெளிறிய , அந்த ஈர்குச்சி தேகத்தின் குத்திட்ட கண்களும், தலையில் ஓடில்லாத இடத்தில் குழிந்த பள்ளமும் பல இரவுகளின் கனவுகளைக் கலைத்திருக்கின்றன. 

அவன் இன்னும் மரணிக்கவில்லை. என்றேனும் பழையபடி கண்விழிக்கக்கூடும் என்று அந்த குடும்பம் நம்பிக்கொண்டிருந்தது. அத்தனை வைத்தியமும் பொய்த்த நிலையில் ஆயுர்வேதம் நோக்கி வந்திருந்தார்கள். தினமும் காலை நானும் என் நண்பனும் அங்கு செல்வோம். அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகளை மட்டுமே எங்களால் கொடுக்க முடிந்தது. பதினைந்து நாள் சிகிச்சை கழிந்த பின்னர்,  போதுமென்று நிறுத்திக்கொண்டார்கள். அதற்கு பின் பதினைந்து நாட்களில், வாசுதேவன் மரணமடைந்துவிட்டார் எனும் செய்தி கிடைத்தது.  உணர்வற்ற வெறும் ஓலம் மட்டுமே அவ்வப்போது வெளிவரும் வாசுதேவன் மெல்ல மானுட அடையாளங்களை இழந்திருந்தான்.  அவன்தான் நான் கண்ட கிரேகர் சம்சா.





அன்று விழித்தெழும்வரை கிரேகர் சம்சா தன் குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தப் போராடும் ஒரு சாமானிய விற்பனை பிரதிநிதி, விசுவாசமான  ஊழியன், கடமை தவறாத மகன், நேசமுள்ள அண்ணன் என தான் பொறுப்பேற்ற பாத்திரங்களைக் கச்சிதமாக நிர்வகித்து வந்தவன். 

கனவுகள் குறுக்கிட்ட தூக்கமற்ற முந்தைய இரவிலிருந்து விழித்தெழுகிறான் சம்சா. தாழிட்ட தன்னறைக்குள் தான் பல குச்சிக் கால்கள் கொண்ட ஒரு பிரம்மாண்டமான புழுவாக மாறியிருப்பதை உணர்கிறான். நேற்றிரவு கண்ட கொடுங்கனவுகளின் நீட்சி என்று நம்புகிறான், மீண்டும் சற்று கண்ணயர்ந்து விழித்தெழுந்தால் எல்லாம் இயல்பாகிவிடும் என எண்ணுகிறான். தாயும், தங்கையும், தந்தையும் நிறுவன மேலாளரும் கதவருகே இவனைக் காணக் காத்திருக்கிறார்கள். 

பிரம்மாண்டமான புழுவாக  இவன் உருமாற்றம் அடைந்ததைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள், அருவெறுப்புடன் அங்கிருந்து நகர்கிறார்கள். தங்கை கிரீட் மட்டுமே அவனிடம் பரிவு கொள்கிறாள், உணவு பரிமாருகிறாள், அது அவளுடைய தனிப்பட்ட உரிமை என நிலைநாட்டிக் கொள்கிறாள். 

சம்சாவின் துணையின்றி வாழ வேண்டிய நிலை, குடும்பத்தினர் அனைவரும் கடுமையாக உழைக்கத் தொடங்குகிரார்கள். மெல்ல சம்சா தேவையற்ற ஒரு சுமையாகிறான், பரிவு கொண்ட தங்கையும் அவனை வெறுக்கத் தொடங்குகிறாள். தந்தை அவனைத் தொடக்கம் முதலே ஒரு விசித்திர உயிரினமாக மட்டுமே பார்த்தவர். தாய் நீண்ட தயக்கத்திற்குப் பின்னர்தான் அவன் அறைக்கே வந்தாள். வேலைக்காரி மட்டுமே அவனை  கொஞ்சமேனும் பொருட்படுத்துகிறாள். அசைவின்றி சிக்குண்ட அவன் மெல்ல உணவைத் தவிர்க்கத் துவங்குகிறான், நோய்வாய்ப்பட்டு, அமைதியாகிக் கிடக்கிறான். அப்படியொருவன் தங்கள் குடும்பத்தில் இருந்தான் எனும் நினைவையே நீக்கி நிம்மதி பெருமூச்சுடன் வெளிக்கிளம்புகிறார்கள் குடும்பத்தினர். காலம் மறக்கப்பட்ட நினைவுகளைத் திருடித் தின்னும் பசிகொண்ட பூனை.   

இந்த சிறிய கதை எழுதப்பட்ட இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒரு செவ்வியல் படைப்பு எனக் கொண்டாடப் படுகிறது. இந்தக்கதையில் உள்ள படிமத்தை நாம் நம் மன விரிவுக்கு ஏற்ப விரித்தெடுத்துக் கொள்ள முடியும். மனிதன் தன்னையே அருவெறுக்கதத்தக்க புழுவாக உணர முடியும், செயலின்மையில் சிக்கி, பயனற்ற வீண் சுமை என வெறுக்கப்படும் அற்பப் புழு. நோய்மையுடன் இந்தக்கதையை தொடர்புபடுத்தி வாசித்தால் வேறொரு தளம் திறந்துகொள்ள கூடும். அர்த்தமற்ற அன்றாட லௌகிக சுழலிலிருந்து மேலான ஆன்மீக தளத்தை நோக்கிய பயணம் என்றும் இதை வாசிக்க முடியும்.  

மனிதன் தனக்குக் கற்பிதமான இலக்குகளை நோக்கி வியர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டே இருக்கிறான். அலுப்புடன் சலித்துத் திரும்பினால், அத்தனையும் வியர்த்தம். சம்சா தவிக்கிறான், தன் குடும்பக் கடமைகளை தான் ஈடேற்ற போட்ட திட்டங்களை எண்ணி பதறுகிறான். வயோதிக தந்தையின் கடன்களை தீர்த்து, பதின்ம வயது தங்கையின் வயலின் கனவுகளை நிறைவேற்றிய பின்னர் தன் வாழ்வைப் பற்றிய கனவுகளை நோக்கிப் பயணப்பட வேண்டும் என எண்ணியிருந்தான் சம்சா. அக்குடும்பத்தின் வாழ்வில் அவனுடைய இன்றியமையாத, மிக முக்கியமான இடத்தைப் பற்றிய பதைபதைப்பு அவனுக்கு இருக்கிறது. தன் பங்களிப்பின்றி அந்த குடும்பம் தத்தளிக்கும் என்பதை உணர்ந்திருந்தான். 

பாலைவன மணலின் கால்சுவடுகள் மெல்லக் காற்றில் கரைவதுபோல் எப்பேர்பட்ட வெற்றிடத்தையும் காலம் நிரப்பி சமன்படுத்திவிடுகிறது. சம்சா உயிருடன் இருக்கும்போதே அவனில்லாமல் வாழப் பழகுகிறார்கள்.  மகன், அண்ணன் போன்ற பந்தங்கள் மறைந்து அவன் உயிருடன் இருக்கும்போதே,  பிறர் கண்ணில் படாமல் பாதுகாக்கப்பட வேண்டிய  பொதியாகிறான். மரணத்தைக் காட்டிலும் வலிமிகுந்தது புறக்கணிப்பு. அவர்களின் அன்பிற்காகவும், புரிதலுக்காகவும் ஏங்கும் அவன் மானுட அடையாளங்கள் இழந்த வெறும் புழுவென வெறுக்கப்படுகிறான்.   

ஆரம்பத்தில் கட்டிலில்  உருண்டு புரளவே சிரமப்படுகிறான் சம்சா. அவனது கால்களை எப்படி பயன்படுத்துவது என்பதுகூட அவனுக்குத் தெரிவதில்லை. யாரையும் அவன் அச்சுறுத்த விரும்பவில்லை, உணவு கொண்டு வரும் தன் தங்கை மற்றும் அறைக்குள் எப்போதாவது வரும் தாய் என எவர் கண்ணிலும் படாமல் வாழப் பழகுகிறான் சம்சா. மெல்ல ஊர்ந்து நடக்கிறான், அறையின் சுவர்களில் ஊர்கிறான், சாளர விளிம்பின் வழியாக வெளியுலகத்தை வேடிக்கை பார்க்கிறான். அறையின் மேற்கூரைக்கு  ஊர்கிறான் , அங்கிருந்து பொத்தென்று விழும் புதிய விளையாட்டைக் கண்டுகொள்கிறான், தன் இருண்ட அறையின் கதவிடுக்கின் வழியாக உணவரையில் தன் குடும்பம் பேசிக்கொள்வதை கவனிக்கிறான். இப்படி புதிதாய் பழகிய நேர்கோட்டு வாழ்க்கையில் அவன் தன் மானுட நினைவுகளை இழக்கத் தொடங்குகிறான்.  அவனறையில் உள்ள மேசைகளும், நாற்காலிகளும், சுவற்றில் உள்ள படமும் மட்டுமே அவனது முற்கால நினைவுகளின் சாட்சிகளாக நிற்கின்றன. அவன் நடமாட ஏதுவாக அவனறையில் இருந்து பொருட்கள் வெளியேற்றப்பட்ட காலம் சென்று, ஓட்டை உடைசல்கள் நிரம்பி வழியும் அறையானது.

ஒரு நாள், உள்வாடகைக்கு இருக்கும் மூவரை மகிழ்விக்க தங்கை கிரீட் நீண்டநாட்களுக்குப் பிறகு வயலின் வாசிக்கிறாள். அதைக் கேட்க பேரார்வத்துடன் வெளியே வரும் சம்சாவினால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ‘உண்மையில் அது என் அண்ணனில்லை, அது ஒரு ஜந்து, என் அண்ணனாக இருந்தால் நமக்கு இத்தனை துன்பங்களைக் கொடுத்துக்கொண்டு இங்கு இருக்க மாட்டான், இதை அழித்தாக வேண்டும்’ என்று அழுது அரற்றுகிறாள் கிரீட்.  சம்சா உயிர்வாழ எஞ்சியிருந்த இறுதி காரணமும் போயிற்று. அதுவே அவனது இறுதி இரவாகிறது.     

இந்த கதையை கிரேகரின் விழிவழியாக காண்பதற்கு பதிலாக, கிரீட்டின் வழியாக கண்டால் நாவல் மேலும் பிரம்மாண்டமாக உருகொள்கிறது. அண்ணன் மீதான பரிவு எப்படி இறுதியில் வெறுப்பாக மாறுகிறது எனும் கேள்வி முக்கியமானதாக படுகிறது. அந்த உள மாற்றம் நாவலில் மெலிதாக கோடிட்டுக் காட்டப்படுகிறது. இந்த கதையை மையமாகக் கொண்டு மேடை நாடகங்கள் உருவாகியுள்ளன, திரைப்படங்கள் வெளிவந்துள்ளன, ஒபேரா நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன, இதன் தொடர்ச்சியாகவும், இதற்கு முந்தைய பகுதியாகவும் நாவல்களும் கதைகளும் எழுதப்பட்டுள்ளன. விமர்சனங்களும், ஆய்வுகளும், மொழிபெயர்ப்புகளும் இன்றுவரை தொடர்ந்து வருகின்றன. இந்த கதையின் பூடகத் தன்மையின் காரணமாக பல தளத்தில் விவாதங்களை கோரும் செவ்வியல் படைப்பாக இது கருதப்படுகிறது. கிரேகர் சம்சா என்னவாக மாற்றமடைந்தான், அது எப்படிப்பட்ட உயிரினம் என்பதில் இன்றுவரை விவாதம் நீடிக்கிறது.   

இது கனவுதான் எனும் பிரக்ஞையுடன் நாம் காணும் கனவுகள் சில உண்டு. கனவினுள் நுட்பமாக மனம் கனவின் நெடியை முகர்ந்தப்படி கவனத்துடன் அதன் தடத்தில் பின்தொடரும். இந்தக் கனவிலிருந்து எப்போது வேண்டுமானாலும் விழித்தெழ முடியும் என்று அது நம்பும். ஒருவேளை அப்படி இல்லாமலானால்? நாம் வாழும் இந்த வாழ்க்கை உண்மையில் ஒரு மீட்பற்ற பெருங்கனவாகிப் போனால்? வாசல்களற்ற ஓர் குழிந்த அறைக்குள் மனம் கற்பனைப் பித்தேறித் தன்  சுவற்றில் தீட்டிக் கொள்ளும் மாய ஓவியமாக நம் வாழ்க்கையும் இருந்தால்? காப்ஃகாவின் உருமாற்றம் (the metamorphosis) நெடுங்கனவாக, தொடர்காட்சிகளாக மனத்திரையில் ஓடிக்கொண்டே இருக்கிறது.

ஆனால், ஒருவேளை நான் காஃப்காவை சந்திக்க நேரிட்டால் அவரிடம் கேட்க எனக்கொரு கேள்வியுண்டு, அது அபத்தமாகவும், கிறுக்குத்தனமாகவும் தென்படலாம்- இந்தக் கேள்வி என்னைக் குடைந்துக் கொண்டே இருக்கிறது- ஏன் சம்சாவிற்கு சிறகு முளைத்து பட்டாம்பூச்சியாக அவன் புதிய வானங்களை நோக்கிப் பறந்து செல்லவில்லை? ஏன் அவன் புழுவாகவே இருந்து மறைந்தான்?


The Metamorphosis
Franz kafka
ஆங்கிலம், நாவல்,

Sunday, June 25, 2017

கலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

“பாராளுமன்றம் என்பது ஒரு தேசம் விளையாடும் விலை உயர்ந்த விளையாட்டு பொம்மை”. இங்கிலாந்தின் பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கடுமையாக விமர்சித்து காந்தி 'இந்து ஸ்வராஜ்', நூலில் எழுதிய வாசகம்தான் இது. அரசு இதயமற்ற ஒரு யந்திரம், அதன் வன்முறை பன்மடங்கு வீரியமுள்ளதாக, கட்டுப்படுத்தப்பட முடியாததாக  இருக்கும் என்றார் காந்தி. பி.ஏ.கிருஷ்ணனின் 'கலங்கிய நதி' வாசித்து முடிக்கையில் காந்தியின் தீர்க்கதரிசனமே நினைவுக்கு வந்தது.  விரக்தியில் பெருமூச்சுத் விடுவதை  தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை.

 



பி.ஏ.கிருஷ்ணனின் இந்த நாவல் நதிக்கரையோரம் சஞ்சலத்தோடு காத்துக் கொண்டிருப்பவனின் கதை.  நதியின் ஆழமும் வேகமும் குளிரும் கலக்கமும் அவனை பயமுறுத்துகின்றன. பயமும் நிச்சயமின்மையும் மேலிட உரிய தருணத்திற்காகக் கரையில் அலுப்புடன் காத்துக்கொண்டே இருக்கிறான். மாற்றத்திற்காக ஏங்கி, செயல்படத் துடிக்கும் மனதிற்கும் அலுப்பூட்டும் அன்றாட நிதரிசன வாழ்விற்கும் இடையில் நடக்கும் போராட்டமே கலங்கிய நதி.


காந்தி கலங்கிய நதி நாவல் முழுவதும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வருகிறார். நாவல் தொடங்குவதும் முடிவதும் காந்தியில்தான்.  கருவேலம் முட்களில் சிக்கிய நூலாடையை கவனமாக எடுப்பதுபோல்,  சந்தேக முட்களில் சிக்கித் தனக்குள் தவித்து கொண்டிருக்கும் காந்தியை மீட்கும் முயற்சியே இந்த நாவல் என்று தோன்றுகிறது. 

டெல்லியில் உயர்பதவியில் உள்ள நேர்மையான மத்திய அரசு ஊழியன் ரமேஷ் சந்திரன், மகள் ப்ரியாவின் மறைவிற்குப் பின்னர், அஸ்ஸாமுக்கு மாற்றலாகிப் போகிறான். அவனுடைய நிறுவனத்தில் முதுநிலை பொறியாளராக பணிபுரியும் கோஷ் அஸ்ஸாம் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு அவர்களின் பிணைக் கைதியாகிறான். அவனை மீட்க தனியொருவனாக போராடுகிறான் ரமேஷ் சந்திரன். இதற்கிடையில் அங்கு நடந்த ஊழல் ஒன்றையும் அவன் தோண்டியெடுக்கிறான். விபத்தில் சிக்கிச் செயலிழந்து மீள்கிறான். தன் வாழ்க்கையைப் புனைவாக வடிக்கிறான். நாவலுக்குள் நாவல் என கதை சிலந்தி வலையாக விரிகிறது. 

மாறும் சூழல்களுக்கேற்ப ஒவ்வொரு மனிதனும் கற்பனையில் தன் ‘லட்சிய நானை’ உருவாக்கிக் கொண்டேயிருக்கிறான். அவனது ‘யதார்த்த நான்’ எப்போதும் எட்டமுடியாத உயரத்தில் உள்ள தன்னுடைய ‘லட்சிய நானை’ நோக்கிய தொடரும் பயணத்தில்தான் இருக்கிறது. ரமேஷ் சந்திரன் தன் நாவலின் வழியாக அந்தத் தனது லட்சிய நானை அடைய முயல்கிறான். தான் எழுதும் நாவலில் தனக்குத் தானே ஒரு காவிய முடிவையும் எழுதிக் கொள்கிறான். சுவாரசியமற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் கற்பனை நிரப்பி அவற்றைப் புனைவாக்கி, தானறிந்த உண்மையைத் தனது அந்தப் படைப்பைக் கொண்டு உணர்த்துவதில் ஒரு எழுத்தாளன் வெற்றி பெறும் இத்தகைய தருணங்கள் அற்புதமானவை. 

அமைப்புக்கு உள்ளிருந்தெழும் கலகக் குரலாகவே நாவலில் பி.ஏ.கிருஷ்ணனின் குரல் ஒலிக்கிறது. நாவலின் முன்னுரையில் அவர் இவ்வாறு எழுதுகிறார்: “உலகத்தின் மிக மோசமான முட்டாள்களின் வரிசையில் நான் நிறுத்தப்படலாம். ஆனால் நான் சொல்ல விரும்புவதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.” உயர்மட்ட அரசு அலுவலகங்களின் செயல்பாட்டில் உள்ள அபத்தங்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டிய வண்ணமிருக்கிறார். இந்திய அதிகார வர்க்கம் உண்மையில் மக்களிடமிருந்தும் மக்கள் பிரச்சினைகளிடமிருந்தும் எத்தனை தூரம் அந்நியப்பட்டு கிடக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக சந்திரன் தன் துறைச் செயலருக்கு தேநீர் சூடாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுதும் குறிப்பு ஒரு அங்கத உச்சம். அதேபோல் எந்தெந்த கூட்டங்களுக்கு எந்தெந்த பருப்புகள் அவற்றில் பங்கேற்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்  என்பது குறித்தான விவாதம் மற்றொரு அபத்தத்தின் உச்சம்.

ரமேஷ் சுகன்யா உறவும், ப்ரியாவின் இழப்பு அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும் நுட்பமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ப்ரியாவின் மரணத்திற்கு ரமேஷ் மட்டுமே காரணம் எனும் நிலைப்பாட்டிலிருந்து மாறி  சுகன்யாவும் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும்  தருணம் மிக முக்கியமானது. மரணமடைந்த ப்ரியா தவிர்க்க முடியாத நினைவுகளின் மெல்லிய புகைமூட்டமாக நாவல் முழுதும் மீண்டும் மீண்டும் வெவ்வேறு சூழலில் வந்துகொண்டே இருக்கிறாள். ரமேஷ் –சுகன்யாவின் வாழ்க்கையை இமை அணையாத, குத்திட்ட கண்களுடன் அவள் தொடர்ந்து வருகிறாள் என்ற உணர்வில் நாம் வாசித்துச் செல்கிறோம்.

தற்போதைய அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநில கலவரங்களின் பின்னணியில் இந்த நாவலை வாசிக்கும்போது பல புதிய திறப்புகள் தென்படுகின்றன. வங்கதேச அகதிகள், இடப்பெயர்வுகள், தனி நாடு கோரிக்கைகள் என அவர்களுக்கான நியாயங்களையும் அதை அரசு சரிவர எதிர்கொள்ள தவறுவதையும் கதைப்போக்கினூடே தொட்டுச் செல்கிறார் கிருஷ்ணன். அஸ்ஸாம் தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையுள்ள பரஸ்பர  புரிதல் மற்றும் எதிரெதிர் தரப்புகள் செய்து கொள்ளும் சமரசங்கள்,.. எந்த எதிர்வினையும் ஆற்றாமல் சிக்கல்களை ஆரப்போடுவதே எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்கும் என்று  குருட்டுத்தனமாக நம்பும் அதிகார வர்க்கம்... அரசாங்க யந்திரத்தின் சோர்வளிக்கும் இயங்கு முறையை நமக்குத் தெளிவாக காட்டுகிறார் பி.ஏ.கே.

காந்தி பக்தரான ரமேஷின் தந்தை பக்ஷிராஜன் சுதந்திர போராட்ட களத்தில் தன் லட்சிய புருஷரான காந்தியுடன் கைகோர்த்துப் போராட வேண்டும் எனக் கனவு கண்டவர். ஆனால் இறுதிவரை முடிவெடுக்க தயங்கி எதிலும் பங்குபெறாமல் வாழ்ந்து அவர் காண விரும்பிய ராஜ் காட் காந்தி சமாதியை கூடக் காண முடியாமல் வயோதிகத்தால் விழுங்கப்பட்டு மறைகிறார், சாம்பலாகி ராஜ்காட்டின் பசும்புற்களுக்குதான் உரமாகிறார். 

ரமேஷ் தன் தந்தையைப் போல் தானும் ஆகிவிடுவோமோ என்று பயப்படுகிறார்.  செயலின்மை கரிய ஈரக் கம்பளமாய் இறுக்கி அச்சமும் தயக்கமுமாய் தன்னை நெருக்கிவிடுமோ என இறுதிவரை அஞ்சுகிறார். தனக்கு நேர்மாறான ஒருவராக அஸ்ஸாமின் முன்னாள் முதல்வராக இருந்த மூத்த காந்தியவாதி சரத் ராஜவம்ஷியைப் பார்க்கிறார் கரையான் புற்றை ஒத்த பழைய வீட்டில் வாழும் , பேருந்து நெரிசலில் பயணம் செய்யும் ஒரு முன்னாள் முதல்வர். மக்களுடன் வாழ்ந்து அவர்களுள் ஒருவனாக தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் பெரியவர். அவரை  இயக்கிக் கொண்டிருக்கும் விசையை கண்டுகொள்ள முயல்கிறார் ரமேஷ். 

நாவலில் வரக்கூடிய மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள், ரமேஷின் மனைவி சுகன்யா, அவனது உதவி செயலர் அனுபமா மற்றும் கடத்தப்பட்ட கோஷின் மனைவி நந்திதா கோஷ், மூவருமே வெவ்வேறு வார்ப்புகளில் உருவாகி கச்சிதமாக உருபெறும் பாத்திரங்கள். குறிப்பாக சுகன்யா. ரமேஷின் நாவலில் வரும் சுகன்யாவிற்கும் அந்த சித்தரிப்பின் மீது அதிருப்தி கொள்ளும் அசல் சுகன்யாவிற்கும் உள்ள வேறுபாடுகள் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
சுகன்யா, ரமேஷ் எழுதும் நாவலின் பகுதிகளை அவனுடைய நண்பர்களான சுபிருக்கும் ஹெர்பர்டுக்கும் அவ்வப்போது அனுப்பி வைக்கிறாள். அந்தந்த பகுதிகளைப் பற்றிய கடித பரிமாற்றங்கள் வழியாக நாவலின் மீதான மெல்லிய விமரிசனமும் நாவலுக்குள்ளே வந்து செல்வது ஒரு நல்ல யுத்தியாகவே தென்படுகிறது. 

நிதரிசனத்தில் கோஷ் விடுவிக்கப்பட்டதில் ரமேஷின் பங்கு, அவனுடைய மூர்க்கமான பிடிவாதம் என்பதைத் தாண்டி பெரிய அளவில் வேறு ஏதுமில்லை என இறுதியில் பூயான் சுகன்யாவிடம் சொல்லும் ரகசியம் மற்றுமொரு வேடிக்கையான தருணம். ரமேஷ் தன் செயல், தன் வெற்றியென நம்பிகொண்டிருப்பது உண்மையில் கணக்கற்ற கரங்களின் ஒத்திசைவில் அந்தரத்தில் இயங்கும்  பொம்மலாட்டத்தின் விளைவுதான்  என்பதை அறியாமலேயே பெருமிதம் கொண்டு இயங்கிக் கொண்டிருந்திருக்கிறான்.

சீன – இந்திய உறவைப் பற்றி புத்தகம் எழுதிய சுகன்யாவின் தந்தை, பெண் பித்தனாக வாழ்ந்து மடியும் ரமேஷின் நண்பன் ராமன், கருப்பு மசூதியின் வாயிலில் பழம் விற்று தெருமுனை கலவரத்தில் மரணிக்கும்  தள்ளுவண்டிக்காரன், ரூப்குன்ட் மலைக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டி, முதலில் விருந்தினர் மாளிகையில் சந்தித்து பின்னர் கடத்தல் கும்பலிடம் தூது போக முன்வரும்  கடத்தப்பட்ட கோஷின் வயோதிக உறவினர், அஸ்ஸாம் காவல் துறை தலைவர் நிர்மல் பூயான், போலீசாரால் வேட்டையாடப்படும் அனுபமாவின் போராளி நண்பனான கலிதா, போராளி தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி பேரத்தைக் குறைக்க உதவும் ஊடக நண்பன் கஷ்னபீஸ் என ஒவ்வொரு பாத்திரமும் நேர்த்தியுடன் உருப்பெற்றிருப்பது இந்த நாவலின் மிகப்பெரிய பலம்.

இ.பா, ஆதவன் வழிவந்தவர் என்று  பி.ஏ.கிருஷ்ணனை விமர்சகர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். கிருஷ்ணனின் பாத்திரங்கள் சமூக விமரிசனங்களை பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை. சூழலில் கட்டுண்ட ஒருவித இயலாமையின் தொனியே இந்த நாவலில் அதிகம் ஒலிக்கிறது. ஆழ்ந்த கவித்துவமான சித்திரங்களும், ஆண் – பெண் அகவெளி பரிமாணங்களும் நாவல் காட்டும் புற நிகழ்வுகளுக்கு ஈடாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.   

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த இந்து – இஸ்லாமிய மத கலவரத்தினால் நாட்டில் உதிரம் தெறித்துக் கொண்டிருந்த வேளையில் காந்தி சொல்கிறார் “ஒரு நதியில் வெள்ளம் வரும்போது அது மண்ணடர்ந்து எப்போதையும்விடக் கலங்கலாக இருக்கும். ஆனால் வெள்ளம் வடிந்தபின்னர் அது தெளிவாகிவிடும். முன்னைவிடத் தெளிவாக.”

‘நாப்பத்து எட்டுல எழுதினார். ஐம்பது வருஷத்துக்கு மேல ஆயிடுத்து. இன்னும் நதி கலங்கலாகத்தான் இருக்கு. எப்போ வெள்ளம் வடியும்? நம்ம காலகட்டத்தில் நடக்கும்னு தோணல. நாம கலங்கள் நதியப் பாத்துண்டு இருக்கணும்னு விதி’

‘அதனால என்ன? உடனடியா மாற்றம் நடந்துடுமா? நாம் முயற்சி செய்யலாமே. நதியைத் தெளிவா ஆக்குறதுக்கு.வெள்ளத்த வடியவைக்கறதுக்கு.நம்மோட மத்தவாளும் சேந்துப்பா.நேரம் ஆகட்டுமே’

ஆம் நேரம் ஆகட்டுமே. 

நதி அதன் அத்தனை கலங்கள்களுடனும் நமக்காகக் காத்திருக்கிறது.



கலங்கிய நதி
பி.ஏ.கிருஷ்ணன்
நாவல் 
தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்பு
காலச்சுவடு வெளியீடு.

Friday, June 23, 2017

பால்ய கால சகி - வைக்கம் முகமது பஷீர்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

பால்ய பருவத்து காதலின் நினைவுகள் முளைவிடாத களை விதைகள். சடாரென்று உடலெங்கும் பரவி மயிர்கால்களை சிலிர்க்கச் செய்யும், எதிர்பாரா கணத்தில் தோற்றம் கொள்ளும் அந்த பால்ய கால நினைவுகள் உக்கிரமானவை. கண்களை இறுக்கிப் பூட்டி, நினைவுக் கம்பளத்தால் நம்மைப் போர்த்தும் வெம்மை மிகுந்த அந்தத் தருணங்கள் வலிமையானவை, வழிந்தோடும் தூரத்து குழலோசையைப்  போல் காற்றில் அளையும் மென் சுகந்தமாய் நம்மை சுற்றிச் சுழலும் அதன் நினைவுச் சுருள்கள். சுகந்தமும், இசையும், இன்பமும் மெல்ல இறந்து, காட்டு விலங்கின் தொலைதூர  ஓலத்தின் தொடர் எதிரொலி போல் நினைவுகளின் வலியில் மனம் மீண்டும் மீண்டும் அதிரும். முதுகுத் தண்டின் வேரில் ஒரு குளிர்ந்த சிலிர்ப்பாய் குபுக்கென்று வியர்த்து விழிக்கும் நிகழ் காலம், ஒரு குரூர கனவாக. மனம் தரிசாகும்போது அந்த விதைகளின் முனைகளில் துளிர்ந்த  பசுங்கனவுகள் இதயத்தைத் தைக்கும் கூர் அம்புகளாகி மனம் முழுவதையும் துளைக்கின்றன.




பஷீரின் பால்ய கால சகி பெண்ணின் தோழமையுடன் வளர்ந்த ஒவ்வொருவருக்கும் பரிச்சயமானவள். காலத்தால் கரைந்த அந்த சகியின் நினைவுகளை சுமந்து கொண்டு அவளுடைய சாயலையும் நிழலையும் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம்.. நிறைவடையாத காதல் ஒரு  மகத்தான காவியம் அல்லவா? கூடலும், ஊடலும், காதலும் , பிரிவும், எழுதித் தீராத மானுட பெருங்கதை அல்லவா?

காய்த்து தொங்கும் மாங்கனிகளை பறிக்க முடியாமல் தவிக்கும் சுகறாவிற்கு அதுவரை அவளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு மஜீத் உதவ முன்வரும்போது அவர்களுடைய நட்பு தொடங்குகிறது. சுகறாவின் கூரிய நக பிராண்டல்கள் தரும் அவமானத்தையும் வலியையும் தாண்டி வரத் துடித்துக்கொண்டிருக்கிறான் மஜீத். அவனுடைய ஒட்டு வீடோ, வாப்பாவின் மர வியாபாரமோ கூட சுகறாவிற்கு ஒரு பொருட்டல்ல. முசுருகளை பொருட்படுத்தாது மாமரத்தில் ஏறும் மஜீத்தின் திறமைதான் அவளை வியப்பில் ஆழ்த்துகிறது. 

வானளாவிய மாளிகைகளைக் கட்டி எழுப்பும் சுல்தான் மஜீத்தின் ராஜகுமாரி சுகறாதான். ராஜகுமாரி பிராண்டக்கூடாது அல்லவா? கடிக்கவும் கூடாதே! சுகறாவின் வலிமையான ஆயுதங்களிலிருந்து மஜீத் இதைச்  சொல்லித்தான் தப்புகிறான். ஒன்னும் ஒன்னும் எவ்வளவு என்று மஜீதின் ஆசிரியர் அவனிடம் கேட்கும்போது மஜீத் அதற்கு சொல்லும் பதிலே அவனது அடையாளமாக மாறிவிடுகிறது- ‘கொஞ்சம் பெரிய ஒன்னு’. ராஜகுமாரியும் கொஞ்சம் பெரிய ஒன்னும் காதல் வயப்படுகிறார்கள். பெண்ணை அடக்க முனையும் ஆணின் அகங்காரமும் அவனை ஆட்கொல்லும் பெண்ணின் திண்மையும், அவளை வெல்ல பச்சாதாபத்தைக் கையிலெடுக்கும் ஆண் எனத் தொடரும் இந்த விளையாட்டு   குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கி விடுகிறது என்பதை வெகு நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் பஷீர்.      

கணக்கு வராத மஜீத் சுகறாவின் புண்ணியத்தில் பரிட்சையில் தேறி பட்டணத்திற்கு படிக்கப் போகிறான். படிக்க வசதியில்லாத சுகறா இலக்கின்றி மஜீத் வீடே கதி என இருக்கிறாள். வாப்பாவோடு மனஸ்தாபம் கொண்டு மஜீத் வீட்டை விட்டு வெளியேறுகிறான். தேசாந்திரியாக எங்கும் சுற்றித் திரிகிறான். அவனுக்கு பொருளீட்டுவதில் பெரிய ஆர்வம் இல்லை. எங்கும் ஆண் பெண் என மனிதர்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள் என்று கண்டுகொள்கிறான். பல ஆண்டுகளுக்கு பின்னர் சுகறாவின் நினைவுகளை சுமந்துகொண்டு வெறும் கையோடு ஊருக்கு வருகிறான். வாப்பாவின் தொழில் பொய்த்து , உடல் சுகமின்றி , குடும்பம் நொடிந்திருக்கிறது. 

தங்கைகள் திருமணத்திற்கு காத்திருகின்றனர். சுகறா திருமணம் முடித்திருக்கிறாள். பிழைக்க வழியில்லாத ஊரில் உள்ள அனைவரையும் கரையேற்றவேண்டி வெளியூருக்கு வேலை தேடிப்  புறப்படுகிறான் மஜீத். கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு கைவிடப்பட்ட சுகறா மஜீதைக் காண வருகிறாள். அவனது குடும்பத்தை கவனித்துக் கொள்கிறாள். மீண்டும் பூந்தோட்டத்தை நிர்மாணிக்கிறாள். கடுமையாக உழைத்து குடும்பத்தைக்  கரையேற்றிவிட்ட பின்னர்,  சுகறாவைத் தான் மணந்துகொள்ள வேண்டும் என்று கனவு காண்கிறான் மஜீத். அந்தக் கனவே அவனை இயக்கும் விசையாகிறது. 


ஒரு சைக்கிள் விபத்தில் சுகறா முத்தமிட்டு புண் ஆற்றிய தன்  வலது காலின் பாதியை இழக்கிறான் அவன். செல்வந்தர்களிடம் உதவியை நாடுகிறான். எச்சில் பாத்திரம் கழுவி காலம் தள்ளுகிறான். அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டிருந்த மஜீத்திற்கு ஒரு நாள் உம்மாவின் அந்தக் கடிதம் பெரும் அதிர்ச்சியாய் வருகிறது சுகறா மரித்துவிட்டாள். அவள் தன் உடல்நலமின்மையை மஜீத்திடம் மறைத்து வைத்திருந்திருக்கிறாள்.

எல்லாமே அல்லாஹுவின் நாட்டம்.

மஜீது ஸ்தம்பித்து அமர்ந்திருந்தான்.

அனைத்துமே நிசப்தமாகிவிட்டதுபோல்.

பிரபஞ்சம் சூனியம்.

இல்லை...பிரபஞ்சத்திற்கு எதுவுமாகிவிடவில்லை. நகரம் இரைகிறது. சூரியன் பிரகாசிக்கிறது. காற்று வீசுகிறது.உள்ளுக்குள்ளிருந்து ரோமக்கால்கள் வழியாக மேலெழுந்த குளிர்ந்த ஆவியில் மஜீத் நனைந்துபோயிருப்பது மட்டுமே நிகழ்ந்திருக்கிறது. எல்லாமே ஆதரவற்றுப் போய்விட்டன. வாழ்க்கை அர்த்தமிழந்துப் போய்விட்டதா? கருணைமயமான பிரபஞ்சங்களை சிருஷ்டித்த இறைவா!

மஜீது பிழைப்பைத் தேடிச் செல்லும் முன்னர் சுகறா அவனிடம் ஏதோ ஒன்றை சொல்ல முயன்றிருக்கிறாள், மரிக்கும் முன் மஜீது வந்துவிட்டானா என்று கேட்டுக்கொண்டே இருந்தாள் அன்பதை அறியும் மஜீத் சுகறாவின் சொல்லப்படாத வார்த்தைகளை எண்ணி ஏங்கித் தவிக்கிறான். சொற்களின் வசப்படாத உணர்வுகள் பனிக்கத்தியாக நம் நெஞ்சங்களில் பாய்கிறது.   

பஷீரின் மொழியும் கதையாடலும் வெகு எளிமையானவை. இதில் அப்படி என்ன விசேஷம்? ஏன் மலையாள இலக்கிய உலகத்தில் தலை சிறந்த எழுத்தாளுமையாக பஷீர் புகழப் படுகிறார்? என்ற கேள்விகளை எழுப்பி நம்மை ஏமாற்றும் அளவிற்கு எளிமையானது அவரது நடை. அந்த எளிமையே அதன் அழகு , அதன் கம்பீரம். காதல் கதை என்பதைக் கடந்து கேரளத்து இஸ்லாமிய வாழ்க்கையையும் அதன்மீது அவருக்கிருக்கும் சிறுசிறு விமரிசனங்களையும் சேர்த்தே எழுதுகிறார் பஷீர்.

குழந்தைகளின் உலகை மையமாக வைத்து எழுதப்படும் புனைவு பகுதிகள் பெரும்பாலும் பெரியவர்களின் மொழியையும் காட்சியையுமே பயன்படுத்தும். அவை அதிகபிரசங்கித்தனமாகத் தென்படும் அபாயம் எப்போதுமே உண்டு. ஆனால் பஷீரின் உலகம் குழந்தையால் வரையப்பட்ட அழகான உலகம். அங்கே ஒவ்வொருவரும் தங்கள் பால்யத்தின் நுட்பமான நெடிகளையும், ஒலிகளையும், முகங்களையும்  கண்டுணர முடியும்.

பால்ய கால சகியை வாசிக்கையில் நுள்ளலும், பிராண்டல்களும், வெகுளித்தனமும், கற்பனைக் கனவுகளும், வெள்ளந்தி மனமும் நிறைந்த நம் பால்ய நினைவுகள் கிளர்ந்து எழுகின்றன. எண்பது பக்கங்களில் ஒரு வாழ்க்கையை நம் முன் முழுமையாகச் சித்தரித்து காட்டுகிறார் பஷீர். தமிழில் மொழிபெயர்த்திருக்கும் குளச்சல். எம்.யூசுப் மிக இயல்பாகவும் சிறப்பாகவும் தன் பணியை செய்துள்ளார் என்பதைக் குறிப்பிட வேண்டும். தவறவிடக்கூடாத மகத்தான இலக்கிய ஆக்கம் இது என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை. 


மஜீது எண்ணுவது போல்..

'இல்லை..வாழ வேண்டும்..வாழ்க்கை! கடினமும் கூர்மையும் கொண்ட வேதனைதான். இருந்தாலும் வாழ வேண்டும்'.



பால்யகால சகி 
வைக்கம் முகம்மது பஷீர் 
மலையாளம்- தமிழ் மொழியாக்கம் 
காலச்சுவடு வெளியீடு