Saturday, May 16, 2026

கவிதையின் உலைக்களன் - சம்யுக்தா மாயா கவிதைகள்




மனிதர்கள் வாழும் பொருட்டு, பிழைத்திருப்பதற்காக நகரங்களுக்கு பெயர்வதே வழமை.‌ காசி மட்டும் விதிவிலக்கு. வாழ்வை விட்டு விலக விரும்புபவர்களுக்காக உருவான நகரம் தான் வாரணாசி. மேற்பரப்பில் மினுங்கும் நியான் விளக்குகளுக்கு கீழ்‌ எல்லா நகரங்களுக்கும் இருண்ட அடிநகரம் ஒன்றுண்டு. காசிக்கு அடிநகரம் மேற்பரப்பு என்ற இருமை இல்லை. ஒரே சமயத்தில் பல நூற்றாண்டுகளில் வாழும் நகரம். ஈசனின்‌ உடுக்கை போல அதிர்ந்து கொண்டே இருக்கும் நகரமாகிறது காசி.