Saturday, May 30, 2020

நீலகண்டம்- துரை அறிவழகன், ரா.செந்தில்குமார் வாசிப்பு


  எழுத்தாளர் துரை அறிவழகன் சிற்றிதழ் சூழலில் புழங்குபவர். மலேசியாவில்;பணியாற்றிவிட்டு இப்போது காரைக்குடியில் வசிக்கிறார். அனன்யா வெளியீடாக 'தனபாக்கியத்தின் இரவு' என்றொரு சிறுகதை தொகுப்பின் தொகுப்பாசிரியர். நீலகண்டம் குறித்து அவர் எழுதியுள்ள குறிப்பு. நன்றி.

மூன்று வருடங்கள் இருக்கும் அந்த குறும்படம் இணையத்தில் பார்த்து. தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வை மையமாக வைத்து சஷிதரன் தயாரிப்பில் ஆட்டிசன் விழிப்புணர்வு குறும்படம் அது. லைட் அப் சம் ஒன்ஸ் லைப் எனும் 6 நிமிடங்கள் ஓட கூடிய குறும்படம்.  ஆட்டிசன் குறைபாடு உள்ள மேதை எடிசன். நீலகண்டம் வாசிப்பு அந்த நாளை நினைவுபடுத்தியது.  செந்தியும்,  ரம்யாவும் ஒரு மேதையை வருவுக்குள் தேடும் போது எடிசன் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. வரு ஆட்டிசன் குறைபாடு உள்ள குழந்தை.

 

 'நாவல் கோட்பாட்டில்' ஜெயமோகன்  சொல்வார் : "நாவல் என்பது தத்துவத்தின் கலை ". நீலகண்டம் நாவல் தத்துவத்தின் இறுக்கதுடன் அமையாது கலைக்குரிய நெகிழ்வு தன்மையுடன் அமைந்துள்ளது.

   

 ஒரு பறவையின் பார்வையில் விரிகிறது நாவல். கதை மாந்தர்கள் பிரவாகமாக கதை களத்தில் விரிகிறார்கள்.  'ஜெயமோகன்' கோட்பாட்டின்படி வடிவற்ற வடிவத்தை  கொண்டு வலை போல் கிளை பரப்பி நிற்கிறது நாவல்.

 

 'வரு ' முப்பட்டகத்தில் இருந்து சிதறும் ஒளி,  யதார்த்தம்,  மீயதார்த்தம் தளங்களின் வழி அற்புத உலகை காட்டுகிறது.

   

வேதாளம் கதைகள் மெய்யியல் விசாரணை சார்ந்த வாழ்வியல் பார்வையை திறந்து விடுகிறது.

     

அஷரா தேசத்தில் அச்சுவுடன் பேசும் நிமோ தங்க மீன்,  இசட் எறும்பு, பேக்மேன்,  கடல் ஆமை என விரிகிறது இன்னொரு உலகு.

   

 மலரின் பொருட்டு உயிரை கொடுப்பதை காட்டிலும் வாழ்விற்கு வேறு உன்னத நோக்கங்கள் ஏதுமில்லை எனும் வேதாளத்தின் பதில் வழி சுனிலின் உலகு புரிபடுகிறது 

     

பழகிய வழியிலிருந்து விலகி புதிய கலை நேர்த்தியுடனும்,  வடிவ நேர்த்தியுடனும் மலர்ந்துள்ள  நாவல் இது. மூங்கிலை  பிளந்து படல்களாக்கி  நம் முன் விரிந்து நிற்கிறது நீலகண்டம்.



----

எழுத்தாளர் ரா.செந்தில்குமார் டோக்கியோவில் வசித்து வருகிறார். தற்போது தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். நல்ல நண்பரும் கூட. ஃபேஸ்புக்கில் இந்த குறிப்பை எழுதி இருந்திருந்தார். நன்றி.





நமக்கு பிறக்கும் குழந்தைகள், நமக்கு என்னவாக இருக்கிறார்கள்? நம்முடைய கனவுகளை நிறைவேற்ற போகிறவர்களாய், அதீதமான திறமை வாய்ந்தவர்களாய், கருவிலேயே திருவுடையவர்களாய், சகலகலா வல்லவர்களாய் இப்படி என்னென்னவாகவோ இருப்பவர்கள், ஒருபோதும் குழந்தைகளாய் இருக்கமட்டும் நாம் அனுமதிப்பதில்லை. தம்மை முன்னிறுத்திக்கொள்ளாதவர்கள் கூட தம் குழந்தைகளின் அபாரங்களை பட்டியலிட தயங்குவதில்லை. ஏனெனில், அவர்கள் நம்முடைய வித்து. ஒருவகையில் அவர்கள் தம்முடைய உழைப்பால் அடையும் உயரங்களுக்கு கூட நாம் தான் காரணமென்கிற போலி பெருமிதம்.



இப்படிபட்ட சூழலில், ஆட்டிச குழந்தைகளாக இருக்க நேரிடுமென்றால், என்னவாகுமென்கிற புனைவே சுநீல் கிருஷ்ணனின் நீலகண்டம். முதலில், சிறப்பியல்புகளை, அவர்களிடம் அற்புதங்களை தேடும் பெற்றோரின் மனது, பிறகு கொள்ளும் ஏமாற்றங்கள், வாழ்வின் அன்றாட அலுப்புகளில் அடையும் தடுமாற்றம் என்று விரியும் நாவல், ஒரு உச்சகணத்தில் நமக்குள்ளே உள்ளுறைந்து ஒளிந்திருக்கும் நஞ்சை அடையாளம் கண்டு மீள்கிறது. 



டோராவும் சோட்டாபீமும் வருவை தேடிச்செல்வது, நீலயானையின் ஒப்புதல் வாக்குமூலம், வானதியின் வருகை போன்ற பகுதிகள் சுநீலின் சிறப்பம்சம். பேசும் பூனைகுட்டியை உருவாக்கி அதன் மூலம் கதையை நகர்த்திசெல்லும் மேஜிக்கல் ரியலிச உத்தியை தொடர்ந்து பயன்படுத்துகிறார். பெற்றோரால் பிள்ளைகறி சமைக்கப்பட்ட சீராளன் வரும்போது, இந்த உத்தி சிறப்பாக நாவலின் கருவுடன் பொருந்திவிடுகிறது. வருவின் நிலையை, நீலயானை கொண்டு விளக்குவது இதன் இன்னொரு உச்சம். 



இருநூறு பக்கங்கள் கொண்ட நாவலில், செந்திலின் முன்னோர்களின் கதை, ரம்யாவின் தாய் வந்து சேரும் இடங்கள், கரையான் அரிக்கும் வீடு போன்ற இடங்கள், நாவலின் மையத்தை விட்டு வாசகனை நகர்த்தியபடியே இருக்கிறது. இயல்பாக செந்தில், ரம்யா மற்றும் வரூ மீது எழவேண்டிய உணர்வு ரீதியான நெருக்கத்தை இது குறைத்து விடுகிறது. ஹரியின் கதாபாத்திரம் அவ்வளவாக நாவலுக்கு உதவவில்லை.



அமுதே நஞ்சாகும் தருணத்தை எழுத்தாக்கிய விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது நீலகண்டம்.

Monday, May 25, 2020

ஏதேன் மற்றும் லீலை- ஜெயமோகனின் இரு கதைகள்

ஜெயமோகனின் புனைவு களியாட்டு கதைகளை முழுவதுமாக வாசித்து முடிக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது வாசித்து வருகிறேன். நேற்று நண்பர்களுடன் விவாதிப்பதற்கு அவருடைய 'லீலை' மற்றும் 'ஏதேன்' கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. கதைகளின் பல்வேறு சாத்தியங்கள் விவாதத்தின் ஊடே துலங்கி வந்தன.

ஏதேன்

நண்பர் தன்ராஜ் மணி ஏதேன் கதை குறித்து ஒரு சிறு குறிப்பை எழுதியிருந்தார். அதில் திபெத் மலையேற்ற அனுபவத்தில் சாமை போன்ற ஒரு 'அசடரை' நினைவுகூர்ந்தார். காளி ஒரு நடைபயணத்தின்போது நண்பர்களுடன் ஜெய்மோகன் பகிர்ந்துகொண்ட இக்கதைக்கான ஆதார நிகழ்வை நினைவுகூர்ந்தார். வியப்பாக இருந்தது. ஒரு நிகழ்வு எப்படி கதையாகிறது? என்பதற்கு இது ஒரு பாடம் என தோன்றியது. ஒரு நிகழ்விலிருந்து சாரமான ஒரு கேள்வியை எழுப்பி அக்கேள்விக்கான விடையை கதையில் அடைதல் என கூறலாம். ஏதேன் கதையின் கேள்வி கடவுளுக்கு நெருக்கமானவர் யார் என்பதே. 

விவிலியத்தை அறியாதவனுக்கா? விவிலியத்தை போதிப்பவனுக்கா? விவிலியத்தை அறியாத கபடமற்ற ஒருவன் கர்த்தருக்கு வெகு அருகே இருப்பவன் எனும் விடையை கதை கண்டடைகிறது. மேற்கிலக்கியத்தில் இந்த ‘Holy fool’ என்பது ஒரு ஆழ்படிமம். தாஸ்தாவெஸ்கி, சிங்கர் என பலரும் கையாண்ட ஒரு படிமம். ஜெயமோகனின் கதைகளில் உலகியல் சமர்த்து இல்லாதவர்களின் ஆன்மீக மற்றும் கலை உன்னதம் தொடர்ச்சியான பேசுபொருட்களில் ஒன்று. விஷ்ணுபுரம் நாவலின் இறுதி தலைவன் வேத தத்தன் அறிவு எனும் நாகத்தால் தீண்டபடாதவன். நன்மை தீமை எனும் இருமை பகுத்தறிவின் விளைவு. அகங்காரத்தின் விளைவே உரிமை கொண்டாடுதல் என்பதும். ஆதி மனிதன் ஏதேன் தோட்டத்தில் உட்கொண்ட தடுக்கப்பட்ட கனி அவனுடைய துன்ப சுழலுக்கு காரணமாகியது. ஆப்பிரிக்க தொல்குடிகள் தனியுரிமை அறியாதவர்கள். பழுத்த பழம் என்பதொரு வேட்டை அவர்களுக்கு. இயற்கையின் கொடை. அது அனைவருக்குமானது. நிலத்தின் மீதிருக்கும் வேலிகள் அவற்றை எவருக்கும் உரிமையாக்கிவிடுவதில்லை.

ஜெயமோகனின் வெண் கடல் தொகுதியில் இடம்பெற்றுள்ள ‘அம்மையப்பம்’ கதையும் நினைவுக்கு வந்தது. ஏணி கூட்ட முடியாத ஆசாரி அபராமான மர புடைப்பு சிற்பத்தை செய்து முடிப்பான். இங்கு ஏணி உலகியலின் குறியீடாகிறது. பாலாஜி ப்ருத்வி ராஜ் இக்கதையில் கபடமற்ற தன்மை மூன்று தளங்களில் இருப்பதை குறிப்பிட்டார். தொல்குடிகளின் மற்றும் சாம் ஜெபத்துரையின் களங்கமின்மை கதைக்குள் துலங்கி வருவது. சாமிற்கு அவனுடைய அத்தனை தோல்விகளுக்கு பிறகும் செலவுக்கு பணம் அளிக்கும் அவனுடைய அம்மாவின் களங்கமின்மை மூன்றாவது. 

பொதுவாக ஜெயமோகன் புனைவு எழுத்திற்கு முன்வைக்கும் அடிப்படைகளில் ஒன்று என ‘சொல்லாதே காட்டு’ என்பதை சொல்லலாம். எதேன் கதை ஒரு குடி மேசையில் சொல்லப்படுகிறது. இது இந்த கதைக்கு ஒரு அழகியல் குறைபாடா என்றும் விவாதிக்கப்பட்டது. டாக்டர். வேணு வெற்றாயன் ஆப்பிரிக்க பின்புல கதையில் முதல்வரியில் வரும் கோக் பற்றிய குறிப்பு கதைக்கு ஒரு முக்கியமான பங்களிப்பை ஆற்றுகிறது என்றார். இந்த உரையாடலில் கதை சொல்லப்படுவது இந்த கதைக்கும் அதன் களத்திற்கும் பொருந்திவருவதாக செந்தில் குமார் கூறினார். முக்கியமாக சாமின் அன்னை சமாதனப்படுத்த அளித்த ஐம்பதாயிரத்தில் தான் அந்த குடிவிருந்தே நடைபெறுகிறது என்பது சாமின் இயல்பை சுட்டுகிறது என்றார்.

சத்தியசோதனை பற்றி ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது காந்தியின் நண்பர் ஷேக் மெஹ்தாப் பற்றி அறிந்துகொண்டேன். 

அவருடைய சகோதரரின் நண்பராகத்தான் மெஹ்தாப் காந்திக்கு அறிமுகமாகிறார். அவரை சீர்திருத்தச்வேண்டும் என்ற உணர்ச்சியின் பேரிலேயே இவருடன் நட்பு கொண்டேன். என எழுதுகிறார். திரிதீப் சுஹ்ருத்தின் அடிக்குறிப்பிலும், குகாவின் தென்னாப்பிரிக்காவில் காந்தி நூலிலும் மேதாப் பற்றிய சித்திரம் உண்டு. காந்திக்கு அசைவ உணவை பரிச்சயம் செய்யும் இதே மேதாப் தான் தென்னாப்பிரிக்காவில் காந்தியுடன் கொஞ்ச காலம் வீட்டை பகிர்ந்து கொள்கிறார். காந்தி இல்லாத போது விலைமாதரை வீட்டிற்கு அழைத்து வந்த விவரம் தெரிந்து காந்தி அவரை வெளியேற்றுகிறார். பின்னரும் மேத்தாப் தென்னாப்பிரிக்க போராட்டங்கள் குறித்து கவிதைகள் எழுதி அவை இந்தியன் ஒபினியனில். வெளியாயின. மேத்தாபும் அவருடைய மனைவி ஃபாத்திமாவும் போராட்டங்களில் பங்கு கொண்டார்கள். போராட்டத்தில் பங்கு கொண்டதும் கவிதைகள் எழுதியதும் இந்நிகழ்விற்கு பிறகு தான். ஏதோ ஒருவகையில் காந்தியின் இந்த அதீத நன்னம்பிக்கையை எனக்கு சாம் ஜெபத்துரையுடன் இணைத்து புரிந்து கொள்ள முடியும் என தோன்றியது.

--


முதல் வாசிப்பில் இந்த வரிசை கதைகளில் அத்தனை சிறந்த கதை இல்லையோ எனும் உணர்வு ஏற்பட்டது. ஜெயமோகனின் கெய்ஷா கதை நினைவுக்கு வந்தது. நீ விரும்பும் கதையை அல்லது வடிவை அளிப்பவள். ஒருபோதும் என்னை நீ அறியமுடியாது எனும் அதே விளையாட்டு. அல்லல்படும் மகளிர்களை ஆற்றுபடுத்தும் ஆடவர்களுக்கு என்றொரு உலகம் உண்டு. குறிபார்த்து அந்த உணர்வை பயன்படுத்தி தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்ளும் ஒரு பெண்ணின் கதை என சொல்லலாம். இந்த பொது மதிப்பீடுகளின் மீதான சீண்டல் இக்கதையை முக்கியமாக்குகிறது என பாலாஜி குறிப்பிட்டார். மேலும் இறுதி திருப்பத்தின் வலுவில் ஒரு கதை இன்று எழுதப்படுவது வாசகனை ஏமாற்றுவது என்றொரு பார்வை வலுபட்டிருக்கும் நிலையில் இக்கதை இறுதி திருப்பத்தை சரியாக பயன்படுதியுள்ளது என்றார். தாட்சாயினி யார் என இறுதியில் தெரிவது உண்மையில் திருப்பம் என சொல்லிவிட முடியாது. ஏனெனில் இறுதிக்கு சில பத்திகள் முன்னரே தாட்சாயினி சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பிக்கும்போதே அவள் யாரென தெரிந்துவிடுகிறது.

உரப்பன் கணேசனிடம் ஒரு உரையாடலில்  டேய் ஆளு அப்டியே மாறிடணும், அதாக்கும் கலை என்கிறாள். சர்க்கஸ் ஆட்டக்காரர்கள் எம்ஜியாரகவும் சிவாஜியாகவும் அந்தந்த பாத்திரங்களை ஏற்று அதை நகலெடுத்து ஆடுகிறார்கள். தாட்சாயினிக்கு நடனம் பெரிதாக வராது. ஒன்றுபோலவே சில அசைவுகளை திரும்பத்திரும்ப செய்வாள். ஆனால் மேற்சொன்ன 'ஏற்கும் பாத்திரத்தில் ஒன்றுதல்' என்பதைத்தான் அவள் இறுதிவரை பின்பற்றுகிறாள். கதையில் அவளுடைய உண்மையான பெயர் என்னவென்பதே தெரியாது. அவளுடைய இத்தகைய வாழ்க்கைக்கு ஒரு சோகக்கதையை காரணமாக// பின்புலமாக புனைந்துகொள்ள துவங்கினால் அது அவளின் வெற்றி. நம்மை நோக்கி தாட்சாயினி புன்னகைக்கக்கூடும்.

கதையின் திருப்பம் என்பது தாட்சாயினி யார் என்பதில் இல்லை, மாறாக உரப்பன் கணேசனின் சிரிப்பில் உள்ளது என நான் நம்புகிறேன். ஒருவகையில் இது கணேசனின் வயதடைதல் கதை என சொல்லலாம் என அனோஜன் ஒரு வாசிப்பை அளித்தார். வயதடைதல் என்பதைவிட அவனுக்கு வாழ்வின் தரிசனம் ஒன்று கிட்டுகிறது. வைரத்தின் வெவ்வேறு பட்டைகளை, அதன் முகங்களை காணும் தருணம் அது. தாட்சாயினி சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடியபின் அவன் கடும் வெறுமை தன்னை அழுத்துவதை உணர்கிறான். பேருந்தில் தன்னை கண்டுகொண்டு பேசும் தாட்சாயினி அங்கிருந்து மகேஸ்வரியாகி லீலாவாக இறங்கி செல்லும்போது அவளும் இவனை நோக்கி புன்னகைக்கிறாள் இவனுக்கும் முன்னர் இருந்த வெறுமை உணர்வோ/ ஏமாற்றப்பட்ட உணர்வோ இப்போது ஏற்படவில்லை. மாறாக புன்னகைக்கிறான். கதையின் தலைப்பான லீலையுடன் அவன் அறிந்து கொண்டது பொருந்தி போகிறது. கதை லீலையாக ஆகிறதா அல்லது லீலாவாக நின்றுவிடுகிறதா என்றொரு விவாதம் நிகழ்ந்தது. அன்னைமையின் கூறுகள் என அவளிடம் எதுவும் வெளிப்படவில்லை என்பதால் இதை அருளும் அழிக்கும் அன்னையின் வெவ்வேறு முகங்கள் எனும் ஆழ்படிமத்துடன் இணைக்க முடியவில்லை ஆகவே லீலையாக இல்லாமல் லீலாவை பற்றிய கதையாக எஞ்சிவிடுகிறது என்றொரு விமர்சனம் வைக்கப்பட்டது. தாட்சாயினியை அன்னை வடிவாக காண்பதில் உள்ள குழப்பத்தினால் நேர்வது இது. அவளுடைய பாத்திரத்தை இதே வரிசை கதைகளில் வரும் 'வருக்கை' கதையின் கள்ளனுடன் ஒப்பிடலாம். வருக்கையின் கள்ளன் ஒருவகையில் கிருஷ்ணனின் வடிவம். தாட்சாயினியையும் அத்தகைய தன்மை கொண்ட பெண்ணாகவே புரிந்துகொள்ள முடியும். உரப்பன் கணேசனின் சிரிப்பு வழியாக கெய்ஷாவில் கண்டடைந்த ஒன்றின் மற்றொரு பரிணாமத்தை இக்கதையில் அடைந்திருக்கிறார் என தோன்றியது. இயல்பாக ஆன்மீக தளத்தை நோக்கி கதை திறக்கிறது.

இந்த இருகதைகளும் இருவிதமான அறிதல்களை முன்வைக்கின்றன. ஏதேன் கள்ளம் கபடமற்ற, களங்கமற்ற தன்மையின் வழியாக கடவுளை நெருங்குதலை சொல்கிறது என்றால் லீலை கள்ளத்தனத்தை ஒரு விளையாட்டு என உணர்ந்துகொள்வதன் வழியாக ஏற்படும் அறிதலை சொல்கிறது. 

Wednesday, May 20, 2020

உடைந்த துண்டுகளில் உருக்கொள்ளும் சித்திரம்- எம்.கோபாலகிருஷ்ணன்

(நீலகண்டம், பாரிஸ், கழுதை பாதை மற்றும் நட்சத்திரவாசிகள் குறித்து எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் எழுதியிருக்கும் கட்டுரையில் நீலகண்டம் குறித்து அவர் எழுதிய பகுதியை இங்கு பதிகிறேன். நாவலின் வரைவு வடிவத்தில் வாசித்து சில அவதானிப்புகளை கூறினார். அவருக்கு எனது நன்றிகள். ) 

சுனில் கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ நாவலின் மையத்தை ‘குழந்தைகள்’ என்று ஒற்றைச் சொல்லில் வகுக்க முடியும். இன்னும் கறாராகச் சொல்லப் போனால் குழந்தையின்மை என்பது தனிமனித அளவிலும் குடும்ப உறவுகளுக்குள்ளும் சமூக உறவிலும் ஏற்படுத்தும் உளச் சிக்கல்களை மையம் கொண்டுள்ளது என்றே சொல்லலாம்.

இதுவொன்றும் புதியதல்ல என்றாலும் சொல்லி முடிக்கப்பட்டுவிட்ட கதை அல்ல. இன்றைய சமூக மனிதனிடம் வம்சவிருத்தி என்னும் அம்சம் ஏற்படுத்தும் அழுத்தங்கள் வேறானவை. அறியாமையும் பெண்களை மட்டுமே காரணமாக்கிய ஆணாதிக்கமும் வலுவாக இருந்த நேற்றைய சூழலும் தகவல்தொடர்பினால் திறக்கப்பட்டுள்ள உலகளாவிய அறிவுப்புலமும் மருத்துவம், அறிவியல் இரண்டின் உச்சபட்ச சாத்தியங்களாலும் பெருமளவு மாறியிருக்கும் இன்றைய நவீன சூழலும் வெவ்வேறானவை. இன்றைய தீர்வுகள் எளிதானவை என்ற எண்ணம் உடனடியாக எழுந்தபோதும் தனிமனித அளவில் அவை எழுப்பும் கேள்விகளும் சிக்கல்களும் நேற்றைய சூழலில் கிளைத்தவையே. தனிப்பட்ட ஆண் பெண் சார்ந்த உள மோதல்களில் தொடங்கி இந்தப் பிரச்சினை ஏற்படுத்தும் உடைப்புகள் பெரும் பாதிப்புகளை விளைவிப்பவை.

இந்த நாவல் அவ்வாறான மோதல்களையும் உடைப்புகளையும் வெவ்வேறு கோணங்களில் அணுகியுள்ளது. அந்த வகையில் நாவலின் மையம் மிக முக்கியமானது.

இந்த நாவல் சிதறலான ஒரு வடிவத்தில் சொல்லப்பட்டுள்ளது. நேர்கோட்டு வடிவத்திலேயே நாவல் இருக்கவேண்டிய அவசியம் இல்லைதான். வடிவத்தை கலைப்பதும் மீறுவதும் தேவையைப் பொறுத்து செய்யவேண்டியவைதான். முற்றிலும் நேரடியான கதைசொல்லல் முறையைக் கொண்ட நாவலாக இல்லாமல் ஒரு கோணத்தில் இது மீயதார்த்தமாகவும் இன்னொரு கோணத்தில் மாய யதார்த்த பாணியிலுமாக அமைந்துள்ளதால் வெவ்வேறு வடிவங்களை கையாண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தைகளைச் சுற்றிய உலகம் என்பதால் குழந்தைகளுக்கான உலகமும், விக்ரம் வேதாவும் உள்ளே வந்திருக்கவேண்டும். விக்ரம் வேதாவுக்கிடையே சொல்லப்படும் புராண கதைகள் நாவலின் மையத்தை சுற்றிய கேள்விகளாகவும் விளக்கங்களாகவும் அமைந்திருக்க குழந்தைகளின் உலகமாக அமைந்துள்ள பகுதிகள் குழந்தைகளுக்கேயுரிய வெகுளித்தனங்கள் இன்றி புத்திசாலித்தனமாக உள்ளன.  பழங்கதைகள் இரண்டும், நாடகமொன்றும், வழக்காடு மன்றத்திற்கான விண்ணப்பமொன்றும் கதாபாத்திரங்களே எழுதும் குறிப்புகளும் நாவலின் பல்வேறு பகுதிகளாக அமைந்துள்ளன. இவை யாவும் கதையின் முன்பின் உறுப்புகளாக அமைந்திருப்பவை. தொடர்ச்சியை வெவ்வேறு தளத்திலிருந்து வாசகனுக்குத் தெரிவிப்பவை. நாவலின் புரிதலுக்கும் மேலதிக வாசிப்புக்கும் இடமளித்துள்ளன. ஆனால் நாவலின் வாசிப்பு சுவாரஸ்யத்துக்கு இவை  இடமளிக்கவில்லை.

தமிழில் இதற்கு முன்னும் வடிவ அளவிலான பல பரிசோதனைகளும் முயற்சிகளும் நடந்துள்ளன. ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலின் வடிவம் அதன் மையத்துக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது. அண்மையில் வெளியான விவேக் ஷான்பாக்கின் ‘காச்சர் கோச்சர்’ நாவலும் வெவ்வேறு கதாபாத்திரங்களின் வழியாக சொல்லப்பட்ட கதைதான். அதன் வடிவ மீறல் நாவலின் மையத்துக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தது.

தமிழவன், எம்.ஜி.சுரேஷ், கோணங்கி ஆகியோர் நாவலின் புதிய சாத்தியங்களை வடிவங்களை எழுதிப் பார்த்திருக்கிறார்கள்.  நாவல் வடிவத்தில் தொடர்ந்து புதிய பாணிகளை பரிசோதிப்பவர் யுவன். பா.வெங்கடேசனின் நாவல்களும் அவ்வகையே. இவை இவ்வாறு தமிழின் பல்வேறு எழுத்து முறைகளையும் வடிவங்களையும் முன்வைத்த நாவல்களின்  வரிசையில் ‘நீலகண்டமு’ம் இடம்பெறுகிறது.

நாவலின் கச்சிதமான புனைவு மொழி வெவ்வேறு வடிவங்களிடையேயும் தனித்துவத்துடன் அமைந்துள்ளது. குழந்தைகளின் உலகத்தைச் சொல்லும் பகுதிகள் தமிழில் வெகுவாக இல்லாத சிறுவர் உலகத்தை அபாரமாக கட்டமைத்துள்ளன. மனவோட்டங்களாக அமைந்துள்ள குறிப்புகளும் ( கரையான் போன்றவை ) பல இடங்களில் புனைவுச்சம் பெற்றுள்ளன.

மனிதனின் எல்லா முயற்சிகளுக்கும் ஆதாரமாக அமைந்திருப்பது தனது சந்ததிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதுதான். இயற்கையாக ஒரு வாரிசு அமையாதபோது அந்தத் தம்பதிகளின்மீது ஏற்படும் அழுத்தங்கள் பல்வேறு வகையானவை. இன்றைய மருத்துவத் துறையில் பணம்பெருக்கும் மிகப் பெரும் வாய்ப்பாக மாறியிருக்கும் இந்தச் சிக்கலின் உளவியல் கூறுகளை வெவ்வேறு வடிவங்களின் வழியாக விவாதித்துள்ளது சுனில் கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’.

( நீலகண்டம், யாவரும் வெளியீடு )

ஈதே மூதுரையாகட்டும் - நீலகண்டம் குறித்து நம்பி கிருஷ்ணன்

(நண்பர் நம்பி பல உலக இலக்கிய படைப்புகளை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். அவருடைய கட்டுரை தொகுப்பு 'பாண்டியாட்டம்' விரைவில் பதாகை - யாவரும் வெளியீடாக வரவிருக்கிறது. விரிவான விமர்சனம் சொல்வனம் இதழில் வெளிவந்துள்ளது. சொல்வனமிதழுக்கும் நம்பிக்கும் நன்றிகள்.)


Man hands on misery to man.
It deepens like a coastal shelf.
Get out as early as you can,
And don’t have any kids yourself.
– Philip Larkin, This be the Verse

“No! The world must be peopled.”
– Benedick, from Shakespeare’s Much Ado About Nothing.

பிரதிகள் தம்மைத் தாமே எழுதிக் கொள்ளுமோ என்றும்கூட சில சமயம் நினைத்ததுண்டு – எழுதும் கை எழுதிக்கொண்டே செல்லும் என்கிற மாதிரியான விஷயத்தை சொல்கிறேன். சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம் படித்து முடித்ததும் இந்த விஷயங்களைப் பற்றி கொஞ்சம் இலக்கின்றி நினைத்துப் பார்க்கும் இடைவெளி கொரோனா வைரஸ் புண்ணியத்தில் அரசாங்கமே லாக் டவுன் கொடுக்கவும் ஏராளமான நேரம் கிடைத்ததால் அமைந்தது.

என்னைப் பற்றி கொஞ்சமே உங்களுக்கு தெரிந்திருந்தாலும் இதுபோல் எங்கெங்கோ செல்லும் நினைவுகளில் என்னைத் தொலைப்பவன் நான் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். எது எப்படியானாலும், முதலிலேயே சொன்னதுபோல, நான் 2019ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். வினோதமான வகையில், கிட்டத்தட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாய்ச் சொல்லப்படும் பாத்திரங்களுடன் இந்திய தொன்மத்தின் சுழல் ஆழங்களிலிருந்து அது விரிந்தெழுகிறது. இடம், பொருள், ஏவல் என்று எதையும் பொருட்படுத்தாது கதை மிக வித்தியாசமான வகையில் தனக்கே உரிய தொல் இசையுடன் துவங்குகிறது:

“கானகம் வெறும் ஓசைகளாக உயிர்த்திருந்த இரவில் கால்கள் அவசியமற்ற வெள்ளை வேதாளம் வெள்ளி மயிர் பறக்க விக்கிரமனின் தோளில் திமிறிக் கொண்டிருந்தது.“

வேதாளம் அவிழ்த்துவிட்ட கதைக் கடலில் விக்கிரமன் தன்னை இழக்கத் தயாராவதுடன் இந்த அத்தியாயம் இசைத் தொனியிலேயே நிறைவு பெறுகிறது:

“சினம் தணிந்து மனம் கிளர்ந்து நடை தளர்ந்தான். உலகு கதைகளால் புனையப்பட்டது என்பதை அவன் அறிந்தான். அரசன் மறைந்து சிறுவன் எழுந்து விந்தை உலகை விழி விரிய வாய்பிளந்து நோக்கி நினறான்…”

இந்தியக் கதைகளையும், காமிக் பூதங்களையும், தொலைக்காட்சித் தொடர்களையும் ரசித்தவர்களுக்குத் தெரியும், விக்கிரமனும் வேதாளமும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ‘வேதகால பஞ்சவிம்ஷதி’ என்ற தொகை நூலில் உள்ள நேசத்துக்குறிய இரட்டையர் என்பது. (இந்தக் கதை மக்களிடையே ‘பைதாள் பாசிசி’ என்று அறியப்படுகிறது.) இதன் மூல நூல் தொலைந்துவிட்டது என்றாலும், 11ஆம் நூற்றாண்டில் சோமதேவர் என்பவர் தொகுத்த புகழ்பெற்ற ‘கதாசரித்ர சாகரம்’ என்ற கதைத் தொகுதியில் இதன் பிற வடிவங்கள் முதலில் தோன்றுகின்றன. இவை இந்தியா எங்கும் அறியப்பட்ட கதைகள், நானும்கூட இதை அதன் தமிழ்ப் பேச்சு வடிவில் என் தாத்தா சொல்லக் கேட்டிருக்கிறேன்.

நீலகண்டம் படித்துக் கொண்டிருக்கும்போதே என் நூலகத்தில் எங்கோ புதைந்திருந்த ரிச்சர்ட் பர்டனின் ஆங்கில மொழியாக்கத்தைத் தேடியெடுத்துச் சற்றுப் புரட்டிப் பார்த்தேன். அவர் இதை தன் போக்கிற்கு ஏற்றவாறு மாற்றி எழுதினார் அல்லது படித்தார் என்பதில் ஆச்சரியம் இல்லை. அவரது கதை ரிக் வேத மேற்கோளுடன் இப்படித் துவங்குகிறது:

“கண் இருப்பவன் கண்டான்; விழியற்றவர் காண்கிலர். ஒரு கவிஞன், அவன் ஒரு சிறுவன், அதை உணர்ந்திருக்கிறான். இதைப் புரிந்து கொண்டவன் அவனது தந்தைக்குத் தந்தை ஆவான்”.

– ரிக் வேதம், 1.164.16

அம்மேற்கோளின் மற்றொரு மொழியாக்கம் இப்படிச் செல்கிறது:

“ரிஷி புதல்வன் இதைப் புரிந்து கொண்டான்; இதைச் சரியாக விளங்கிக் கொண்டவன் அவனது தந்தையின் தந்தை.”

(குழந்தை, பெரியவனின் தந்தை என்ற வொர்ட்ஸ்வர்த்தின் புகழ்பெற்ற வரியை நமக்கே உரிய புதிர்ப் பாணியில் அவருக்கு முன்னேயே நாம் மொழிந்துவிட்டோமோ?)

வெவ்வேறு சட்டகக் கதையாடல்கள், கதைக்குள் கதைகள், அறச் சிக்கல்கள், வம்ச விருத்தி… இனி வருவதை எப்படி வாசிக்க வேண்டும் என்பதற்கான சாத்தியங்களை வழிகாட்டும் (அல்லது கட்டுப்படுத்தும்), கதையாடல் உத்திகள் நாவலின் துவக்கத்திலேயே, அதன் அரங்கேற்ற வேளையிலேயே, அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன.

“விக்கிரமனும் வேதாளமும்” சட்டகக் கதையாடல் என்பதன் புகழ்பெற்ற உதாரணம், சட்டகத்தினுள் உள்ள கதைகள் பலவும் அதன் எல்லைகளுக்கு அப்பால் விரியும் அற / ஒழுக்கப் புதிர்களாய் இரட்டிக்கின்றன. இந்த இரட்டையர்களுடன் துவங்கும் நீலகண்டம், வம்ச விருத்தியின் புதிர்களை விவாதிக்கும் தன்மைகொண்ட சட்டகக் கதையாடலை இயல்பாகவே கைக்கொள்கிறது: குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டிய உள்ளார்ந்த தேவை மனிதனுக்கு உண்டா, அல்லது சமூகம் தன் இருப்பை உறுதி செய்துகொள்ளும் தேவையால் அவன் உள்ளத்தில் எழுப்பும் உந்துதலா? பிள்ளைப் பேறின்மை குறித்த இழிவுகள், அதைச் சரிக்கட்டும் விதமாய்த் தத்து எடுத்துக்கொள்வதில் உள்ள சங்கடங்கள், செயற்கைக் கருத்தரிப்பு முறைகள்; கருத்தரிக்க இயலாமை அளிக்கும் மிகப் பெரிய குற்றவுணர்வின் சுமை, அது குறித்து அர்த்தமற்ற காரண காரியங்களைக் கற்பனை செய்துகொள்வது, அதன் மிகையச்சங்கள் (பூர்வ ஜன்ம பாபங்களா, அல்லது மூதாதையரின் சாபங்கள் நம்மை வழிவழியாய்த் தொடர்கின்றனவா?), குழந்தை வளர்ப்பின் பொறுப்புகள், நவீன நகர்ப்புறக் குடும்பத்தில் இது போன்றவை விட்டுச்செல்லும் பொருளாதார, உணர்வுச் சிக்கல்கள்; குறையுடன் பிறக்கும் குழந்தைகளைக் கையாள்வதில் உள்ள அழுத்தங்கள், இவை எல்லாவற்றுக்கும் மேல், வரலாற்றுத் துவக்கம்முதல் நம்மீது சுமையாய்க் கவியும், “குழந்தையைச் சரியாய் வளர்ப்பது எப்படி?”, “செய்ய வேண்டியது அத்தனையும் செய்தோமா?” போன்ற கேள்விகள். இந்த மையத் தண்டுவடத்தில் பிரியும் பின்நவீனத்துவக் கிளைகளில் உண்மையான மற்றும் கற்பனை பாத்திரங்கள் (விக்கிரமாதித்தியன், வேதாளம் தவிர டிஜிடல் அவதார்களாகிய சோட்டா பீம், காப்டன் மிஸ்டர் இசட், நீமோ, பாக்மேன்… அதுபோக இப்புத்தகம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கும், ரத்தமும் சதையுமாய் நம்முடன் வாழ்ந்த / வாழும், வரலாற்றில் நீங்கா இடம்பெற்றுவிட்ட சமூக சேவை இரட்டையர்கள் வானவன் மாதவி மற்றும் இயல் இசை வல்லபி), வெவ்வேறு அத்தியாயங்களில் வருவதும் போவதுமாக இருப்பது கதையின் மையக் கருவின்மீது ஒரு திரிபு வெளிச்சம் வீசி சொல்லப்படும் கதை நிகழ்கையிலேயே அது குறித்து விமரிசிக்கவும் செய்கின்றது.

தொன்ம இசையின் செறிவு உங்களுக்கு அலுப்பூட்டுவதாக இருக்குமானால் நாவல் தன் குழப்பமான துவக்கங்களிலிருந்து வெகு சீக்கிரமே மருத்துவமனைக் காத்திருப்பு அறையின் கண் கூசவைக்கும் வெண்மைக்குத் தாவிச் சென்றுவிடும் என்ற முன்னறிவிப்பை ஆறுதலாக அளிக்கிறேன். அது வாசகரை அடுத்த அத்தியாயத்தின் துவக்கத்துக்கும் கொண்டு செல்கிறது. அந்த அத்தியாயம்தான் நாவலின் கதையாடலை நகர்த்தும் மையக்கருவை அறிமுகப்படுத்துகிறது. செந்திலும் அவனது ஏழு வயதுப் பெண் வர்ஷினியும் மருத்துவமனைக் காத்திருப்பு அறையில் ஸ்பீச் தெரபிஸ்ட்டைச் சந்திப்பதற்காகக் காத்திருக்கிறார்கள். இனிவரும் அத்தியாயங்கள் வர்ஷினியை அவர்கள் தத்தெடுத்த கதையை சீரான தொடர்ச்சியற்ற காலவரிசையில் விவரிக்கும்: செந்தில் – ரம்யா கலப்பு மணம், அதன் விளைவாய் ரம்யாவின் அம்மா விலகிக்கொள்வது, பணி அழுத்தங்கள் காரணமாய் இருவருக்கும் இடையே அதிகரிக்கும் இடைவெளி, கர்ப்பம் தரிக்க இயலாமை, பல்வேறு பகுத்தறிவுக்கு உட்பட்ட, அப்பாற்பட்ட உத்திகள் (பரிகாரங்கள், போலி மருத்துவம், விபசாரம்), ரம்யாவின் கருச்சிதைவு, அதன்பின் கணப்பொழுது முடிவாய் அவள் ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுக்க விரும்புவது, அந்தத் தத்தினை சட்டப்படி முறையாக்க மேற்கொண்ட தந்திரங்கள்…

இந்த அத்தியாயத்தில் பல்வேறு முன்னோட்டங்கள் அளிக்கப்படுகின்றன: ஆட்டிச குழந்தையை வளர்க்கும் பொறுப்பு ரம்யாவின்மீது மட்டுமே சுமத்தப்படுகிறது என்பதை உணர்கிறோம் (“… ஆபீசுக்கு தாமதமாக வருவதாகச் சொல்லிவிட்டு வந்தான். இவ்வளவு காலத்தை விழுங்கும் என்று அவன் நினைக்கவில்லை”), ஒற்றைப் பெற்றோராய் வளர்க்கும் நிர்ப்பந்தம் வலுக்கட்டாயமாக சுமத்தப்படுவதன் அடியாழ வாதையும் அறிந்தும் அறியாமலும் அந்தக் காயம் வெளிப்பட்டு தணிவதும்: “இல்ல… நீ போயிட்டு வா… அவ பழகிக்கணும். நீயும் பழகிக்கணும், அவ உம்பொண்ணும் தான்“.

நாவலின் உப திரிகள் மிகச் சுருக்கமாக இந்த அத்தியாயத்தில் அறிமுகப்படுத்தப்படுகின்றன: வர்ஷினிக்கு கிளிப்பச்சை பிராக் மீது இருக்கும் பிரத்யேக விருப்பம் கதையின் மையத்தை விட்டுவிட்டுத் தொடரும் வரலாற்றுத் தொன்மத் திரிகளுடன் இணைக்கின்றன. ஆட்டிசக் குழந்தை இந்த உலகை எப்படி அறிகிறது என்பது (எறும்புக்கூட்டம், வர்ஷினி அளிக்கும் ரொட்டித் தூள்கள்) மொபைல் கேம்கள் மற்றும் தொலைக்காட்சிப் பாத்திரங்களுடன் உறவாடும் டிஜிடல் யதார்த்த திரிகளில் எதிரொலிக்கிறது. துரதிருஷ்டங்களை ஒப்பிடுவது, “நிலைமை இன்னும் எவ்வளவோ மோசமாக இருந்திருக்கலாம்,” என்ற எண்ணத்தில் ஆறுதல் தேடுவது போன்ற பெற்றோரின் இயல்பான விழைவுகள் உட்பட, முந்தைய அத்தியாயத்தில் உள்ள புராதன சரக்கை வெறுத்த வாசகனுக்கு, பல சுவாரசியமான விஷயங்கள் இந்த அத்தியாயத்தில் அளிக்கப்படுகிறது. சமகால நவீனத்துவத்தில் அவன் தீர்மானமான நிலைகொள்கிறான், இனி கதையில் அவனால் பங்கேற்க இயலும்.

குழந்தைப் பேறின்மை இந்திய சமூகத்தில் ஒரு சாபமாய் பார்க்கப்படுகிறது, இதன் வேர்கள் பண்டைய காலங்களில் தொடங்கினாலும் இன்று வரையில் நீடிக்கின்றன. மூன்று மனைவிகள் இருந்தாலும் ராமாயண தசரதன் பிள்ளை இல்லாதவன், அவன் தந்தையாக ஒரு பரிகார யாகம் நடத்த வேண்டியிருக்கிறது. மகாபாரதத்தின் முக்கியக் கதை நாயகர்களான பாண்டவர்களும் கௌரவர்களும் பாலுறவில் பிறந்தவர்கள் அல்லர், வரத்தின் பலனாய் பெறப்பட்டவர்கள். அமங்கலம் என்று அறியப்படும் வம்சமின்மை ஏறத்தாழ எப்போதும் பெண்ணின் மலட்டுத் தன்மை என்று குற்றம் சாட்டப்படுகிறது., அது சில சமயம் ஆண்மையின்மை என்று ஆண் குற்றமாகிறது.

அண்மையில் வெளிவந்து அதிகம் வாசிக்கப்பட்ட புத்தகமொன்றில் குடி போதையில் இருவர் பேசிக் கொள்ளும்போது பேச்சு திடீரென்று தடம் மாறி குழந்தை இல்லாத நாயகனின் மனதைக் காயப்படுத்தி விடுகிறது:

“தண்ணி அருமைடா“

“குடிக்கற தண்ணி அருமையா இருந்து என்னடா. உடற தண்ணியும் அருமையா இருக்கோணும்டா“

நவீன காலம் வரை இந்தச் சிக்கலான பழி தன் ஆற்றலை இழக்காமல் தொடர்ந்து நீடிக்கிறது, அதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் உத்திகளும் அவ்வளவு அதிகம் மாறியதாய்த் தெரியவில்லை. யுவனின் குள்ளச் சித்திரன் சரித்திரத்தில், குழந்தைப் பேறு இல்லாத ஒரு தம்பதியர் ஜோதிடரை நாடுகிறார்கள், மணமாவதற்கு முன்பே கர்ப்பம் தரிக்கும் அபாக்கியவதி ஒருத்தியின் கன்னிமையை சாமியார் ஒருவர் மீட்டுத் தருகிறார், குழந்தைப் பேறு இல்லாத வேறொருவன் வீட்டு வாசலில் தொப்புள் கொடிகூட அறுபடாத, அப்போதுதான் பிறந்த அந்தக் குழந்தையை விட்டுவிடுகிறார் அவர். அண்மைக் காலத்தில், இன்னும் பரபரப்பாக பேசப்பட்ட பெருமாள் முருகனின் மாதொரு பாகன் கதை, காளியும் பொன்னாளும் பல பரிகாரங்கள் செய்வதைச் சொல்கிறது, இறுதியில் சிவ பெருமான் அவரது இருபால் அவதாரமான மாதொரு பாகன் வடிவில் வழிபடப்படும் தேர்த் திருவிழாவில், ஒரு அந்நியனோடு கலவி கொள்வது என்ற விபரீதமான தீர்வை தேர்ந்தெடுக்கிறாள் பொன்னாள். கதையின் பெரும்பாத்திரங்கள் இருவரும் நகரில் வாழ்ந்தாலும், தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற வாழ்க்கை முறை கொண்டிருந்தாலும், இது போன்ற இசைவு உத்திகள் இன்னும் அசாதாரண வகையில் மாறாதிருப்பதை நீலகண்டம் நினைவுபடுத்துகிறது.

ஆனால் குள்ளச் சித்தன், மாதொருபாகன் இடம் பெற்றிருக்கும் இலக்கிய மரபில்தான் அவை பேசும் யதார்த்தங்களை விமரிசிக்கும் போக்கும் உடனிருந்திருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் – புதுமைப்பித்தன் எழுதிய, பள்ளி நாள்களில் படித்த கவிதை, “உருக்கமுள்ள வித்தகரே” நினைவிற்கு வருகிறது. குறிப்பாக

“இடுப்பில் வலி இல்லாதான் 
இராமேசுரம் போனால் 
‘புள்ளை’ வரம் பெற்றிடலாம் 
புத்தைக் கடந்திடலாம் 
என்பதுபோல்-
சொத்தைக் கதை எல்லாம் 
அளக்காதீர்”

– என்ற வரிகள்.

நம்பிக்கை மற்றும் சடங்குகளைத் தாண்டி பகுத்தறிவுக்கு உட்பட்ட வகையிலும் இந்நாவல் மையச் சிக்கலை எதிர்கொள்கிறது. செந்திலும் ரம்யாவும் செயற்கைக் கருத்தரிப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள், இறுதியில் பெண் குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்கிறார்கள். இது போன்ற நடைமுறைச் சாத்தியம் கொண்ட அணுகுமுறையை தேர்ந்தெடுப்பதிலும் நிறைய உணர்ச்சிக் குழப்பங்கள் இருக்கின்றன. முதல் அணுகுமுறையைப் பகடி செய்யும் வகையில் நுகர்வுத் தன்மை கொண்ட குழந்தைப் பேற்றுச் சந்தையில் நிலவும் மோசமான எதிர்காலம் ஒன்றைக் கற்பனை செய்து நாவல் இந்த குழப்பத்தை இரட்டிப்பாக்கும் அதே வேளை, இரண்டாம் அணுகுமுறையில் உள்ள அரசமைப்பு முட்டுக்கட்டைகளை மையப்படுத்தி, அவற்றை அலட்சியப்படுத்துவதில் உள்ள தவிர்க்க முடியாத ஆபத்துகளையும் குறிப்பிடுகிறது.

தத்து எடுப்பது குறித்த அவர்களுடைய அர்த்தமற்ற அச்சங்களை உறுதி செய்வதுபோல் வர்ஷினி ஆட்டிசக் குழந்தையாய் வளர்கிறாள், அவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தையால் தவறு செய்துவிட்டோம் என்ற வருத்தம் அதிகரிக்கிறது, அதன்கூடவே அந்த வருத்தம் குறித்தக் குற்றவுணர்வும். தத்து எடுத்துக்கொள்ளும்போது ரம்யாவுக்கும் அவளது அம்மாவுக்கும் இடையே ஏற்கெனவே இருக்கும் இடைவெளி வளர்கிறது, அது குறித்து இருக்கும் எதிர்மறை எண்ணங்களை இது அடிக்கோடு இடுகிறது. இங்கே தாமஸ் ஹார்டியின் ஜூட் நினைவுக்கு வருகிறது, அவனே ஓர் அநாதை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில் வருந்துகிறான்:

“பெற்றவர் எவர் என்ற பிச்சைக்கார கேள்வி… என்ன இருந்தாலும் அதன் பொருள் என்ன? யோசித்துப் பார்த்தால், குழந்தையுடன் ரத்த சம்பந்தம் இருக்கிறதா இல்லையா என்ற கேள்வி நமக்கு ஏன் முக்கியமாக இருக்கிறது?நம் காலத்தின் குழந்தைகள் அத்தனை பேருமே இன்று பெரியவர்களாய் இருப்பவர்களின் குழந்தைகள், நம் பொது வளர்ப்புக்கு பாத்தியதைப் பட்டவர்கள். பெற்றவர்கள் தம் குழந்தைகள் மீது அளவுக்கதிகம் பாசம் வைப்பது, மற்றவர்கள் குழந்தைகள் குறித்து அசூயைப்படுவது என்பது வர்க்க உணர்வு, தேசபக்தி, உன் ஆன்மாவைக் மட்டுமே காப்பாற்றிக் கொள்ளச் சொல்லும் சித்தாந்தம் மற்றும் இன்ன பிற ஒழுக்கங்கள் போலவே அடிப்படையில் மிகவும் கேவலமான தான் மட்டும் தனி என்ற எண்ணத்தை ஊக்குவிக்கும் விஷயங்கள். ”

நீலகண்டம் சொல்வது உண்மை என்றால், இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் இருந்தாலும் நாம் போக வேண்டிய தூரம் அதிகம்.

ஆனால் நீலகண்டம் குழந்தையின்மை ஒன்றை மட்டும் பேசுவதில்லை. வம்ச விருத்தியில் தோற்றுப் போதல் என்ற விபத்தைத் தாண்டி, பிறந்தபின் குழந்தை எப்படிப் பேணப்படுகிறது என்ற இன்னும் முக்கியமான கேள்வியை எதிர்கொள்ள முனைகிறது. கதைக்கரு குழந்தை வளர்ப்பு என்ற திருப்தியற்ற, ஒழுங்கு செய்ய முடியாத வேலையைச் சரியாகப் பேச வராத ஆட்டிசக் குழந்தையை வளர்க்கும் அசாதாரண சூழ்நிலைக்குக் குறைத்துவிடுகிறது என்றாலும் அதன் மீகதையாடல்கள் அவற்றின் நிராகரிக்கப்பட்ட, பலி கொள்ளப்பட்ட குழந்தைகளின் வரிசையைக்கொண்டு பதில் சொல்ல முடியாத சான்றாவணங்களைக் குவிக்கின்றன: மெடியாவின் குழந்தைகள், சிறுதொண்டரின் மகன் சீராளன், செந்திலின் முன்னோர்களில் ஒருவரான நாகம்மை…

தனி மனிதர்களுக்கும், சமூகங்களிலும் வம்ச விருத்தி செய்வதற்கான உந்துதல் இருப்பதன் நியதிகள் குறித்து அண்மையில் என் மகனிடம் பேசிக்கொண்டிருந்தேன். அந்த வயதில் நானே வெகுளியாய் இருந்ததை நினைவுபடுத்தும் வகையில் அவன் நான் பிள்ளை பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்று உறுதியாய்ச் சொன்னான். இது போன்ற உரையாடல்கள் எப்படி முடியும் என்பது உங்களுக்கே தெரியும், இப்படிப்பட்ட உலகில் ஒரு குழந்தையைக் கொண்டுவந்து விடுவதில் எந்தப் பயனும் இல்லை என்றான் அவன், பொறுப்பேற்றுக் கொள்ள பயந்து கொண்டு, குற்ற உணர்ச்சியில் நீ சமூக ஒப்பந்தத்தின் உன் பங்கை நிறைவேற்ற மறுக்கிறாய், அதுவாவது பரவாயில்லை, பிறக்காத குழந்தைமீது ஏதோ தார்மீக அக்கறை இருப்பது போலவும், உலகின் குறுகிய வளங்களைக் காப்பாற்ற ஆசைப்படுவது போலவும், நீ பாவனை செய்கிறாய் என்று நான் எதிர்வாதம் செய்தேன். நினைத்தது போலவே இந்த விவாதம் முடிவற்று நீண்டது, ஆனால் அது தொண்ணூறுகளில் பி. டி. ஜேம்ஸ் எழுதிய நாவல் பற்றி நினைத்துப் பார்க்க ஒரு வாய்ப்புத் தந்தது. (நாம் வாசிக்கவே இவ்வுலகம் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது என்ற என் வழிகாட்டி வாசகத்தை நினைவுபடுத்துவதுபோல்.) The Children of Men என்ற அவரது பிறழ்வுலக நாவல் மனிதர்கள் பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு எதிர்காலத்தைக் கற்பனை செய்கிறது (இதோ வந்து விட்டது, அந்த 2021ஆம் ஆண்டு). “இறுதியில் காத்திருக்கும் இந்த தோல்வியின் அதீதத்திற்கும், கீழ்மைக்கும் நம்மை மேற்கத்திய அறிவியலும் மருத்துவமும் தயார்ப்படுத்தத் தவறிவிட்டது,” என்று அவரது ஆக்ஸ்போர்டு நாயகன் தியோ ஃபாரன் வருந்துகிறான், இந்தக் கீழ்மை, “மனித இனம் அழியப்போகிறது என்பதைவிடவும், நம்மால் அதைத் தடுக்க முடியாது என்பதைவிடவும், அதன் மூல காரணத்தை நாம் கண்டுபிடிக்கத் தவறிவிட்டோம் என்பதுதான்.”

நாம் நம் சந்ததியினருக்கு இன்னும் நல்ல எதிர்காலத்தை ஈட்டிக் கொடுக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை இல்லாதபோது, நம் தர்ம மற்றும் ஒழுக்கக் கட்டுமானங்கள் இடிந்துவிழும் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்வதோடு மட்டுமல்லாது , மீதமிருப்பது எதுவாக இருந்தாலும் அது தனி மனிதனின் இன்றைய, இப்போதைய வசதி, பாதுகாப்பு மற்றும் பெருமையைக் காப்பாற்றிக் கொள்வதற்கான, மனித ஆன்மாவைக் குறுக்கிவிடும் செயலாக மட்டுமே இருக்க முடியும் என்பதையும் அடிக்கோடிடுகிறது அந்த நாவல். ஜேம்ஸ்சின் பிறழ்வுலக, மென்பாசிச இங்கிலாந்தில், அரசு போர்ன் கடைகள் நடத்துவது என்ற இடத்திலிருந்து ஒரு காலத்தில் அமெரிக்காவாக இருந்த தேசத்தில் இப்போது எஞ்சியிருக்கும் கர்ப்பம் தரிக்கக்கூடிய பெண்கள் கைப்பாவைகள் என்று முத்திரை குத்தப்பட்டு கற்பழிக்கப்படும் சடங்குக்குப்பின் பிள்ளை பெற்றுத்தர கட்டாயப்படுத்தப்படும் சாமியாராட்சி நிலவும் மார்க்கரட் அட்வுட்டின் ஜிலியட் வெகு தூரமில்லை.

பாதி பிறழ்வுலகாய் மாறி விட்ட கொரானா காலத்தில் நீலகண்டம் படிப்பது ஒரு சுவையான பொழுதுபோக்காக இருந்தது, இதை எல்லாம் மீண்டும் நினைத்துச் சரிபார்க்கவும் வாய்ப்பு அளித்தது. ஆனால் நாவலைப் படிப்பது எப்போதும் சுலபமாக இருந்தது என்று சொல்ல முடியாது. நல்ல வகையில் எடிட் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று அவ்வப்போது எழுந்த எண்ணம் ஒரு காரணமாக இருக்கலாம் . தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு தாம் கற்பனை செய்து வைத்திருக்கும் எதிர்காலங்கள் குறித்து ரம்யா சொல்லிக்கொண்டே போகும் இடங்களில் தாட்சண்யமற்ற ஒரு எடிட்டிரின் கத்தரி நல்ல பலன் தருவதாக இருந்திருக்கும். அதேபோல் வர்ஷினியின் நீல யானை அவளது சகோதரன் சாகரை நீதிமன்ற மொழியில் நியாயப்படுத்துவது, அது கதைக்கு எதுவும் கூடுதலாய் சேர்க்காது துருத்திக் கொண்டு நிற்கிறது. அதைவிட முக்கியமாய், பேச்சு மொழி கவனமில்லாமல் கையாளப்படும் இடங்கள் உறுத்தலாக இருக்கின்றன. மெடியா- சுடலை நாடகத்தின் கோரஸ் பகுதிகளின் மொழியும் வினோதமாக இருந்தாலும், கோரஸ்சை சுடலை திட்டும்போது நாவலின் மிகவும் நகைச்சுவையான வசனம் வருவதால் அதைக் கடந்து செல்கிறோம்: “நிறுத்துங்கடி. சும்மா கத்திக்கிட்டு. அடுத்த முறை விளாத்திக்குளம் செட்ட வரச் சொல்லிருவேன்.” ரம்யா இரண்டு முறை பால்கனியிலிருந்து குதிக்க முயற்சித்துப் பின்னர் மணிக்கட்டை கீறிக்கொள்வதெல்லாம் சற்றுத் தேய்வழக்காகத் தோன்றியது. குறிப்பாகச் சுனிலின் பிரபலமான, பரிசு பெற்ற ‘பேசும் பூனை’ கதையைப் படித்தவர்களுக்கு (மொபைல் கேமில் வரும் பாத்திரம் ஒன்று மெய்ம்மையில் பிரவேசிப்பதை விவரிக்கும் அக்கதையிலும் கதாநாயகி மணிக்கட்டை கீறிக் கொள்கிறாள்) இம்மாதிரியான காட்சிகள் இன்னமுமே அலுப்பூட்டலாம். .

நாவலின் மிகப் பெரிய பலவீனம், இதுவரை துணிச்சலாக வெளிச்சமிட்ட முக்கியமான பிரச்சினைகளுக்கு யதார்த்தத் தளத்தில் தீர்வு காணமுடியாத முட்டுச் சந்தில் அதன் இறுதி அத்தியாயங்கள் வந்து நிற்பதுதான். வர்ஷினி காணாமல் போனது ஏதோ ஒரு மனமாற்றம் நிகழ்வதுபோல் சொல்லப்படுகிறது, ஆனால் அது பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதுபோல் கதைக்கு மிக எளிய தீர்வாக அமைந்துவிடுகிறது. நம் எல்லோருக்குமே குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமான விஷயம் என்பது தெரியும், ஆனால் நாம் வேண்டுவது பிரச்சினைகளை இரக்கத்துடன் அணுகும் புரிதலும், அவற்றின் தீவிரத்தைத் தணிக்க யதார்த்த உத்திகள் என்ன இருக்க முடியும் என்ற விவாதமும்தான். தம் பரம்பரை பற்றிய தனிப்பட்ட தொன்மக் கனவுக்குள் செந்தில் இறங்குவதும், விலக்கம் கொண்ட மகளுடன் இணக்கம் கொள்வதும் திருப்தி தருவதாய் இல்லை, என்னதான் தேவதைகள் சலங்கை ஒலிக்க அதை வரவேற்றாலும்.

தம் பெற்றோர், சகோதரன், மற்றும் தாத்தாக்கள் பாட்டிகளுக்கு நாவலை அர்ப்பணித்து வர்ஷினி முடிக்கும் “கும்பாயா” பின்குறிப்பையும் மீறி நாம் எடுத்துச் செல்லும் உணர்வு பிலிப் லார்கின் சொன்னதன் (‘ஈதே மூதுரையாகட்டும்’ என்று நக்கலாக தலைப்பிடப்பட்டிருக்கும் ‘This be the Verse’ என்ற கவிதையில்) சற்று மாற்றி சொல்லப்பட்ட வடிவத்தை ஒட்டியதாய் அமைகிறது: “They Fucked me up / my mum and dad.” (“என்னை வச்சு செஞ்சிட்டாங்க / என் ஆத்தாளும் அப்பனும்” – நன்றாக இருந்தாலும், மொழி கிட்டத்தட்ட ஒத்திருப்பினும், லார்கினின் வரிகளுக்கு இது நியாயம் செய்வதாக இருக்காது. ‘This be the Verse’ என்று ஹை ரிஜிஸ்டரில் தலைப்பு வைத்து, கவிதைக்குள் ‘They fucked me up’ என்று அனாயாசமாக பேச்சு மொழியில் இறங்கி விடுகிறார் லார்கின். ஆண்டனி த்வைட் எழுதிய லார்கினின் சரிதை அவரது ஈமச் சடங்கில் சிலர் அவரது முழுக் கவிதைகளை நினைவிலிருந்து வாசிப்பதுடனும், வேறு சில தனி வரிகளை, அதிலும் குறிப்பாய், இப்பத்தியின் துவக்கத்தில் வரும் மேற்கோளில் உள்ள அம்மா அப்பா பற்றிய வரிகளையும், அவரது ‘Arundel’s Tomb’ என்ற கவிதையின் இறுதியில் நகைமுரண் தன்மையுடன் எழுதப்பட்ட, “அன்பே நமக்குப் பின்னும் வாழும்” என்ற வரியையும் எடுத்துரைப்பதுடனும் முடிகிறது. சரி, லார்கின் பற்றி இது போதும். அவரைப் பற்றித் தனிக் கட்டுரையே எழுத வேண்டும்.)

நீலகண்டத்தைப் பொறுத்தமட்டில் வர்சினியின் அப்பனும் ஆத்தாளும் அவளை வச்சு செஞ்சுட்டாங்க என்ற உணர்வுடன் நாவலை வாசித்து முடிப்பது சற்றுக் கடுமையாக இருக்கலாம். அப்படியில்லாமல், ஒரு வேளை நாவல் முடிவில் ஒரு முட்டுச் சந்தில் நிற்பது, பிள்ளை வளர்ப்பில் சரியான தேர்வுகள் கிடையாது என்ற செய்தியைப் பிரதிபலிப்பதாய் இருக்கலாம். செய்தாலும் தப்பு, செய்யாமல் விட்டாலும் தப்பு என்ற நிலையில் தோன்றும் கையாலாகாத உணர்வைத் தலைப்பின் விடமேறிய நீலம் சுட்டுவதாகவும் இருக்கலாம். குழந்தைப் பேற்றின் அமிழ்தத்துக்கும், பிள்ளை வளர்ப்பின் நஞ்சைப் போல் அச்சுறுத்தும் கூழிற்கும் இடையில் நின்று கொண்டு, “தம்மின் தம் மக்கள் அறிவுடைமை” என்ற எதிர்காலத்தின் சாத்தியத்தை நோக்கி நம் குழந்தைகளின் சிறுவிரல்கள் சுட்டலாம் என்பதை நாவல் கற்பனை செய்து பார்க்கச் சொல்கிறது. ஒரு நாள் அவ்விரல்களைப் பற்றிக்கொண்டு அவற்றைப் பின்பற்றும் துணிச்சல் நமக்கு கிடைக்கலாம். ஒரு வேளை!

Monday, May 18, 2020

அதுக்கு என்ன இப்ப? – நரோபா



உச்சி வெயிலிலே, மலையுச்சியிலே, தனித்த பன்றிப் பாறையின் கொம்பிலே சாய்ந்து, வானத்தை வெறித்தபடி பீடி இழுத்து கொண்டிருந்தான் பழுவேட்டையன்.
மூச்சிரைக்க நிற்காமல் ஓடிவந்தான் கிடாரம் கொண்டான்.
பழுவேட்டையன் மெல்லத் திரும்பி, துச்சப் பார்வையை வீசினான். ‘என்ன?’ என அவன் கண்கள் வினவின.
“அண்ணே… காரமடையான் தாயோளி… பச்ச புள்ளையப் போடற மாதிரி ஒரு குற்ற உணர்ச்சி கத எழுதிப்புட்டாண்ணே”
பார்வை மீண்டும் வானத்தை வெறித்தது. நிதானமாக புகையை உமிழ்ந்தான்.
“அதுக்கு என்ன இப்ப?”
கிடாரம் வேகவேகமாக மூச்சிழுத்து விட்டான். வியர்வை கொட்டியது.
“அண்ணே… செல்லூர்க்காரன் மத்தவன் பொண்டாட்டியோட படுக்குறத நம்ம அண்ணி பேர வெச்சு கத எழுதி இருக்காண்ணே”
நெருப்பெரியும் பீடி முனையை திருப்பி கண்ணுக்கருகே வைத்து உற்று நோக்கினான் பழுவேட்டையன். “ஹ்ம்… அதுக்கு என்ன இப்ப?” என்றான் பீடியை திரும்பி வாயில் வைத்தபடி.
கிடாரம் முகம் சிவந்து பழுத்தது. பையில் வைத்திருந்த மானிடர் புட்டியை திறந்து, பிளாஸ்டிக் கோப்பையில் ஊற்றினான், அதில் தண்ணி பாக்கெட்டில் இருந்து நீர் பாய்ச்சி, ஒரு மிடறு குடித்தான். சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான்.
அவன் குரல் தளர்ந்தது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. நா தழுதழுக்க, “அண்ணே… போவட்டும் விடு… இந்த புதுப்பட்டிகாரன் நம்ம நெடுங்குடி முத்து ஆக்கிப் போட்ட வெண்டக்கா மண்டி நல்லாயில்லன்னு ஸ்டேடஸ் போட்ருக்காண்ணே”
பழுவேட்டையன் சட்டென நிமிர்ந்தான். பாறையிலிருந்து கீழே குதித்தான். பீடியை தரையில் வீசி வெறும் காலால் தேய்த்தான். குனிந்து தேம்பிக் கொண்டிருந்த கிடாரத்தின் சொக்காயை பிடித்து தூக்கினான். “த்தா… ஏண்டா இத முதல்லேயே சொல்லல…” என விறுவிறுவென மலையிறங்கிச் சென்றான்.

Friday, May 8, 2020

இச்சாதாரி

Snakes in Chinese mythology - Wikipedia

காய்ந்து உதிர்ந்து கிடந்த இலைகளின் ஊடாக அவர்கள் நடந்து சென்றபோது அதன் சரசாப்பு ஒலி கனத்து கிடந்த நிசப்தத்தை கீறி சென்றது. இரவுகளில் மட்டுமே அவர்கள் நடந்தார்கள். அதுவும் கூட தொடர்ச்சியாக அல்ல. ஒருமணிநேரத்திற்கு ஒருமுறை அவர்களுக்கு ஒய்வு தேவையாய் இருந்தது. கேசவன் கேட்டார் “நடக்க தொடங்கி ஒருமணிநேரம் ஆகிவிட்டதா?|” யாரும் எதுவும் சொல்லவில்லை. எல்லோரும் மெதுவாக தரையை ஊன்றி கவனித்தபடி நடந்தார்கள். “கொஞ்சம் ஓய்வெடுக்கலாமா?” என மீண்டும் கேட்டார். கேசவனின் கரம் கோர்த்து நடந்து வந்த அவருடைய மனைவி மட்டும் அவர் கையை இறுக அழுத்தினார். “இந்த இடம் அழகாக இருக்கிறது. மேலே நிலவு தெரிகிறது. அதற்காகத்தான் சொன்னேன்.. இதை விட்டால் நல்ல இடம் கிடைக்காமல் போகலாம்.” என்றார். அவருக்கு முன் சென்று கொண்டிருந்த ஜேக்கப் மெதுவாக திரும்பி “கேசவன் வாயை மூடு, உன்னை விட பத்து வயது அதிகம் நான் நடக்கிறேன், உனக்கென்ன வந்தது,  இப்போது தான் அரைமணிநேரம் கடந்திருக்கிறோம்.’ என மூச்சு வாங்க சொல்லிவிட்டு மீண்டும் முன்னே திரும்பினார். 

கேசவன் எதுவும் சொல்லவில்லை. பக்கவாட்டில் தெரிந்த இரண்டு பச்சை விழிகளை பார்த்ததும் உடல் வியர்த்தது. வலக்கையில் ஊன்றியிருந்த நடை கம்பை அதை நோக்கி சுட்டிக்காட்டி ‘கேப்டன் அது என்ன?’ என கேட்டார். கேப்டன் அஜய் குருவில்லா அணைத்து வைத்திருந்த டார்ச் ஒளியை பாய்ச்சியபோது அது புதருக்குள் மறைந்தது. ‘கேசவன் அஞ்ச வேண்டியதில்லை. இது காட்டுப்பூனைதான்.’ என்றார். கொஞ்சம் தொலைவு நடந்திருப்பார்கள் அப்போது சட்டென குருவில்லா உரக்க கூவினார் ‘ஜேக்கப் அங்கேயே நில்லுங்கள்’. அனைவரும் அந்தெந்த இடங்களில் அப்படியே சிலைந்து நின்றார்கள். இந்த ஒருவாரத்து நடையின் ஊடாக இதற்கு நன்கு பழகியிருந்தார்கள். இலை சரசரப்பு துல்லியமாக கேட்டன. காற்றில் ஊன் நெடி எழுந்தது. சரசரப்பு ஓசை ஓய்ந்ததும் “செல்லலாம்” என்றார் கேப்டன். 
கேசவன் கேப்டன் இருக்குமிடம் நோக்கி நெருங்கி சன்னமாக அவரிடம் ‘கேப்டன், அது என்ன, பாம்பா? ஊன் வீச்சம் எழுந்ததே?’ என கேட்டார். ‘கேப்டன் மெளனமாக நடந்தார். அவர்கள் தொடர்ந்து நடந்து சென்றார்கள். கொஞ்ச நேரத்தில் ஜேக்கப் நின்றார். ‘திரும்பி, இது ஒய்வு நேரம், ஓய்வெடுங்கள்’ என்றார். முந்தைய குழு விட்டுச்சென்ற அடையாளங்களை கொண்டே ஜேக்கப் ஒய்விடத்தை கண்டடைகிறார் என கேசவன் புரிந்து கொண்டார். ‘தயவு செய்து எவரும் தீ மூட்ட வேண்டாம். இலைகள் காய்ந்து உதிர்ந்து உள்ளன. தீப்பற்றி பரவ வாய்ப்பு உள்ளது. காற்றும் பலமாக வீசுகிறது.’ என்றார். பையில் வைத்திருந்த ரொட்டியையும் உலர்ந்த திராட்சையும் கேசவனும் அவரது மனைவியும் உண்டார்கள். கேப்டன் அவரருகே வந்து அமர்ந்து கொண்டார். ‘இங்கே முன்பு ராஜ நாகங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். நகரத்தின் கழிமுகம் மாசுபட்ட பிறகு அவற்றின் வாழ்விடங்கள் அழிந்து அவையும் அழிந்துவிட்டன என்றே ஆய்வாளர்கள் கூறியிருந்தார்கள். நாம் அங்கு பார்த்தது ஒரு ராஜ நாகம். வேட்டையாடிய உணவின் வீச்சமாக அதிருக்கலாம். அதை அங்கு சொல்லியிருந்தால். நீங்கள் பயந்திருப்பீர்கள் கேசவன்.’ என சிரித்தார். ‘இங்கு ராஜ நாகமா? விளையாடாதீர்கள் கேப்டன்.’ என்றார் கேசவன் படப்படப்புடன். ‘எனக்கும் அது ஆச்சரியம் தான். நம்மை கடந்தது பன்னிரண்டு அடியிருக்கும் என ஊகிக்கிறேன் எங்கள் ஊரில் பாம்புகளை பற்றி பல கதைகளை சொல்வார்கள். அவற்றை நினைத்துக்கொண்டிருந்தேன். எப்படியோ அவை பிழைத்து இருக்கின்றன. இப்போது மானுட நடமாட்டம் குறைந்ததும் அவை பல்கி பெருகி தங்கள் இடங்களை எடுத்துக்கொண்டிருக்கக்கூடும்.’ ‘இங்கும் பாம்பு பற்றிய கதைகள் உண்டு. இணை இறந்தால் பழிவாங்க புறப்படும் இச்சாதாரி நாகங்கள் பற்றி கதைகதையாக சொல்லக்கேட்டிருக்கிறேன் நூற்றாண்டுகள் கடந்தும் வாழும் என்பார் எனது பாட்டி.’ ‘ஆ..என்னவொரு பொருத்தமான பெயர். இச்சாதாரி. இச்சையின் பொருட்டு உயிரை பிடித்துக்கொண்டிருத்தல்.’ என சொல்லிச்சிரித்தார். 

ஜேக்கப் குறட்டை விடும் ஒலிகேட்டது. ‘கொடுத்து வைத்தவர்’ என்றார் கேசவன். பலரும் ஆங்காங்கு கால் நீட்டி படுத்திருந்தனர். 

நான்கைந்து மாதங்களில் வாழ்க்கை எப்படி மாறிவிட்டது என அசைபோட்டுக்கொண்டிருந்தார். எழுபத்து மூன்று வயதில் இப்படி இரவெல்லாம் நடந்து உயிர்பிழைத்திருக்க தான் ஓடிவரக்கூடும் என அவர்  ஒருபோதும் எண்ணியதில்லை. ஐந்து மாதங்களுக்கு முன்  வைரஸ் முதலில் செய்தியாக மட்டும் பரவிக்கொண்டிருந்த காலத்தில் எல்லாம் இயல்பாகத்தான் இருந்தது. நாள் தவறாமல் செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சிரிக்கவும், சிடுசிடுக்கவும் தருணங்கள் வாய்த்தன. பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக பரவியபோது பிராகிருதிஸ்தான் அரசு அதை முனைப்போடு கட்டுப்படுத்தியது. அஞ்சத்தேவைஇல்லை என்றார்கள். பிராகிருதிஸ்தானின் பெருந்தலைவர் தினமும் தோன்றி வெற்றிக்கதைகளை பேசியபடி இருந்தார். முதலில் எழுந்த  ஒவ்வாமை மெல்ல மெல்ல மறைந்தது அவரை ஒருமாதிரி ஏற்கவும் ரசிக்கவும் தொடங்கினார் கேசவன். இந்த இக்கட்டான காலகட்டத்தில் அரசை முழுமையாக நம்புவதைத்தவிர வேறுவழியில்லை எனும் அவருடைய கூற்றை முழுமையாக ஏற்றார். பரவல் அதிகரித்தபோது பலியும் புரளியும் அதிகரித்தது. எல்லா ஊடகங்களையும் அரசு தடை செய்தது. முன்பைவிட புரளி பாய்ந்து பரவியது. 

 கேசவன் வசித்த அடுக்ககத்தில் அவரைவிட இரண்டு வயது இளையவர் ஒருவர் இறந்து போனபோது தான் அவரை அச்சம் பீடிக்க தொடங்கியது  முதியவர்கள் அஞ்ச வேண்டியதில்லை. அரசு உரிய சிகிச்சை அளிக்கும் என உத்திரவாதம் அளித்தது. எல்லாம் கட்டுக்குள் இருந்ததாக நம்பப்பட்டுக்கொண்டிருந்த காலக்கட்டத்திற்கு பிறகு ஆழிப்பேரலை என வைரஸ் மீண்டும் எல்லோரையும் சுழற்றி வீசியது. கடந்த ஒரு மாதத்தில் அரசின் அணுகுமுறை மாறியிருப்பதை உணரமுடிந்தது. கேசவன் உணர்ந்து கொண்டது போலவே இவர்கள் அனைவரும் உணர்ந்து கொண்டார்கள். 

இது இப்படித்தான் தொடங்கியது. முதலில் வடக்கிருத்தல் எனும் கீழைத்தேய உன்னத பண்பாடு குறித்து அறிஞர்கள் ஆய்வாளர்கள் பேசும் ஆவணப்படம் நாளுக்கு மூன்றுமுறை ஒளிபரப்பப்பட்டது. பின்னர் போர் வெற்றிக்காக தன்னை பலிகொடுக்க ஒப்புக்கொண்ட அரவான் கதையை நாடகமாக்கினார்கள். ‘அறம் வெல்வதற்கு, நீங்கள் தழைத்திருக்க, உலகம் வளமுடன் இருக்க காலம் எனக்கு பணித்த பணி இது தந்தையே.’ என கூறிவிட்டு ‘காலம் அருஞ்செயல் கோரி உங்களையும் அழைக்கும்’ என பார்வையாளர்களை நோக்கி பேசும் அரவானின் இறுதி வசனத்தையும் கேசவனால் மறக்க முடியவில்லை. பிறகு உலகின் பாவங்களுக்காக சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்துவின் மரணத்தை பற்றி பேசினார்கள். அடுத்து மதநூல்களில் இருந்து புனிதக்கடமை குறித்து மேற்கோள்களை எடுத்துப்போட்டு மறுவிளக்கங்கள் அளித்தார்கள். மறுமையின் சாட்சியர்கள் புற்றீசல் போல தோன்றி வாக்களிக்கப்பட்ட புதிய உலகில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக அறிவித்தார்கள். ஆவிகள் அவர்கள் மீதிறங்கி ஆருடம் கூறின. தீரா நோயாளிகள் தங்கள் துயரமான வாழ்க்கை கதைகளை அழ அழ ஊடகங்களில் கூறினர். தங்களுக்கு இந்த வாழ்வு போதும் எங்களை விடுவியுங்கள் என இறைஞ்சி கதறினர்.

அப்போதுதான் மருத்துவமனைகளில் தொற்று உள்ள வயோதிகர்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் திருப்பி அனுப்பபடும் செய்திகள் வரத்தொடங்கின. மருத்துவமனை வாயிலில் அவர்கள் விரட்டியடிக்கப்படும் காட்சிகள் சமூக ஊடகங்களில் சுற்றத் தொடங்கின. இந்த இக்கட்டான தருணங்களில் நாம் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என பெருந்தலைவர் தோன்றி அறிவுறுத்தினார். மறுநாள் முதல் தியாகம் ஒரு கட்டாயவிதியாகி இருந்தது. மருத்துவமனை ஏற்க மறுத்தவர்களை வீடு மீண்டும் தொற்றுக்கு அஞ்சி ஏற்றுக்கொள்ள மறுத்தது. கேசவன் ஒருநாள் காலையில் ஜன்னலில் இருந்து சாலையில் கரையும் காக்கை கூட்டத்தை பார்த்தார். அவை விலகி பறந்த ஒரு கணத்தில் முதிய முகம் ஒன்று தென்பட்டது. முற்றுபெறாத அடுக்ககத்தின் மாடியிலிருந்து குதித்து இறந்ததாக சொன்னார்கள். அன்றுமுதல் கண்ணை மூடும் போதெல்லாம் காகங்களின் கீறலை எரிச்சலாக முகத்தில் உணர்ந்தார். 

மரணங்கள் பெருகின. தொற்றுள்ளவர்கள், தொற்று இருக்கக்கூடும் என அஞ்சுபவர்கள் என பலரும் மாண்டார்கள். ஊரெங்கும் ‘இனியும் வாழ்ந்து என்ன பயன்? முடிவெடுங்கள்’ என சிகப்பு நிற தட்டிகள் இரவோடு இரவாக வைக்கப்பட்டன. மறுநாள் பெருந்தலைவர் புதிய திட்டத்தை அறிவித்தார். தன்விருப்ப மரண தேர்வு சுருக்கமாக தம. நாடுமுழுவதும்  உள்ள ஆரோக்கியமான இளைஞர்களை இத்திட்டத்தை மேற்பார்வையிடும் தன்னார்வ தொண்டர் படையில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். மேலும் இந்த திட்டத்தில் தங்கள் மரணத்தை தேர்ந்தெடுத்து கொள்பவர்களுக்கு அரசு மூன்று சலுகைகளை அறிவித்தது.

1. அவரவர் மத நம்பிக்கையின் படி இறுதி சடங்கும் நல்லடக்கமும் உரிய நேரத்திற்குள் நிகழும். 
2. இதற்கான செலவை அரசாங்கமே ஏற்கும். 
3. அரசாங்க அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து மரண முறைகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அரசு பயனருக்கே அளிக்கிறது. அதை நிறைவேற்றும் செலவையும் அரசே ஏற்கிறது. மரண நேரத்தையும் பயனரே முடிவு செய்துகொள்ளலாம். 

காலத்தின் தொண்டர்கள்- தன்னார்வலர்கள் தங்களை அப்படித்தான் அழைத்து கொண்டார்கள். அரசு ஆங்காங்கு மையங்கள் அமைத்து அவர்களுக்கு பயிற்சி அளித்தது. அரசு திட்டத்தை அறிவித்தும் கூட முதல் ஒரு வாரத்தில் எவருமே தன்விருப்புடன் பதிந்துகொள்ள முன்வரவில்லை. இத்தனைக்கும் தற்கொலைகள் நிகழ்ந்தபடிதான் இருந்தன. ஒருவாரத்திற்கு பின் மூன்றாம் நிலை புற்றுநோயாளியான மருத்துவர் முதல் ஆளாக பதிந்து கொண்டார். மருத்துவர்கள் அவருடைய உயிரை அடக்க ஊசியை செலுத்தும்போது அரசாங்கத்திற்கு கண்ணீர் மல்க நன்றி கூறிவிட்டு ‘மரணம் இத்தனை இனிய அனுபவமாக இருக்கும் என நான் கற்பனை செய்ததில்லை என சொல்லியபடி கண்மூடி மரணித்ததை நாடு முழுக்க நேரலையில்  ஒளிபரப்பினார்கள்.  ‘மாற்றங்கள் தானாக நிகழாது நாம் தான் அதை நிகழ்த்த வேண்டும்.’ என காலத்தின் தொண்டர்கள் இடையே உரையாற்றினார் பெருந்தலைவர்.  காலத்தின் தொண்டர்கள் கருப்பு ஆடையும் அதன் மீது கருப்பு பாதுகாப்பு அங்கியும் அணிந்துக்கொண்டு வீடுவீடாக சென்று அறுபது வயதிற்கு மேல் உள்ளவர்களின் பட்டியலை சரிபார்த்தார்கள். ஒவ்வொரு தொண்டர் குழுவிற்கும் வாராந்திர இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விளக்கி கூறியும், கெஞ்சியும், மிரட்டியும் தங்களது இலக்குகளை அடைந்தார்கள். 

மக்கள் தேர்ந்தெடுத்த மரணத்தின் வழிமுறைகள் விநோதமாக இருந்தன. சிலர் தங்கள் குடும்ப வழக்கப்படி தொல்வழிமுறைகளை பின்பற்ற கோரினர். அதன்படி வயோதிகர்களுக்கு உடல்முழுக்க நல்லெண்ணெய் தேய்த்து குளிர்ந்த நீரில் குளிப்பித்து வெய்யிலில் கிடத்தினர். வலுக்கட்டாயமாக வீட்டு உறுப்பினர்களால் அனுப்பப்பட்டவர்கள் சிலர் கோர மரண வழிமுறைகளை தேர்ந்தெடுத்ததின் உளவியல் பின்னணி ஊடக விவாதங்களில் சுவாரசியமான பேசு  பொருளாயின.

இந்நிலையில் தான் கேசவன் இத்தகைய ரகசிய வயோதிகப்படை உருவாவதை தெரிந்து கொண்டு அவர்களுடன் இணைந்து கொண்டார். மொத்தம் முப்பத்தி மூன்று பேருடன் தொடங்கிய குழு இப்போது இருபத்தி ஏழாக குறைந்திருந்தது. ரகசிய இடத்தில் இருக்கும் கைவிடப்பட்ட கல்லூரிக்கு செல்வதே இவர்களுடைய திட்டம். 

ஜேக்கப் திடுக்கிட்டு எழுந்தார். வாயில் வழிந்த கோழையை உமிழ்ந்துவிட்டு கைக்கடிகாரத்தை பார்த்ததும் ‘செல்வோம்’ என உரக்க கூவினார். அனைவரும் மெதுவாக எழுந்து அலுப்புடன் நடக்கத் தொடங்கினர். 

கேசவனின் மனைவி அவர் கையை பிடித்தபடி உடன் நடந்துவந்தார். தொடுவானம் வெளுக்கத் தொடங்கியது. ஜேக்கப் லேசாக செருமியபடி ‘சீக்கிரம்..சீக்கிரம்’ விடிவதற்கு முன் நாம் அங்கு பொய் சேரவேண்டும்.’ என்றார். கேசவன் வேகவேகமாக நடந்தார். ‘சீக்கிரம் வா’ என கையை இழுத்துக்கொண்டே சென்றார். மனைவிக்கு மூச்சிரைத்தது. கையை உதறி நெஞ்சை பிடித்துக்கொண்டு சற்று பொறுங்கள் என சமிங்கை செய்தார். அவர்கள் செல்லவேண்டிய கட்டிடம் கண்ணுக்கு தெரிந்தது. கேசவனின் மனைவி வயிற்றைப்பிடித்துக்கொண்டு குனிந்து வாயால் மூச்சை இழுத்துவிட்டார். ஒருகணத்தில் மயங்கி சரிந்தார். ஜேக்கப்பும் குருவில்லாவும் அவர்களை நெருங்கினார்கள். அழுதபடி உலுக்கிக்கொண்டிருந்த கேசவனை விலக்கிவிட்டு குருவில்லா அவருடைய மூச்சையும் நாடியையும் பார்த்தார். கையிலிருந்த டார்ச்சின் ஒளியை கண்களில் பாய்ச்சினார். ‘மன்னிக்கவும் கேசவன்’ என கையை அழுத்திப்பிடித்தார். ‘என்னை விட்டுவிடுங்கள், நான் இங்கேயே இவளோடு செத்து விடுகிறேன்.’ என அழுது அரற்றினார். ஜேக்கப் தொப்பியை கழட்டி சிலுவையிட்டுக்கொண்டு கேசவனின் தோளை தட்டிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். பையிலிருந்து சிகார் ஒன்றை எடுத்து பற்றவைத்துக்கொண்டு ஆழ்ந்து மூச்சிழுத்தார். ஜேக்கப்புடன் கேப்டனும் இன்னும் இருவரும் சேர்ந்துக்கொண்டு அங்கேயே ஒரு குழி வெட்டினர். ஜேக்கப்பின் கங்கு செம்பொட்டாக துலங்கிக்கொண்டிருந்த சாம்பலில் ஒளிர்ந்தது. குழியில் இறக்கி மண் மூடி பிரார்த்தனை செய்தார்கள். ஒவ்வொரு படிநிலையிலும் கேசவன் கதறி அழுதார். ‘இதற்காகத்தான, இத்தனை சிரமமும், இங்கு இந்த காட்டில் சாகத்தானா’ என்றார். மற்றொரு சிகாரை புகைத்தபடி ஜேக்கப் ஒரு சிறிய பாறையில் அமர்ந்திருந்தார். குருவில்லா தோளை அணைத்து தேற்றிக்கொண்டிருந்தார். ‘என்னை விட்டு விடுங்கள், நான் இனி வாழ்ந்து என்னவாகப் போகிறது ..நான் அவளுடனேயே சாகிறேன்.’ என்று விடாமல் பிதற்றிக் கொண்டிருந்தார். ஜேக்கப் கங்கை காலால் அணைத்துவிட்டு எழுந்து கேசவனருகே வந்தார். ‘அது உன்னால் முடியாது, இங்கு எவராலும் முடியாது,’ கேசவன் அழுவதை நிறுத்திவிட்டு திகைப்புடன் அவரை நோக்கினார் அதுதான் கட்டிடம் நாங்கள் அங்கிருப்போம்.’ என சொல்லிவிட்டு எல்லோரையும் நோக்கி ‘கிளம்புங்கள்’ என்றார். குருவில்லா மட்டும் அவர்கள் கிளம்பும்வரை கேசவனுக்கு அருகே நின்றிருந்தார். அவரும் அகன்று சென்றபின்னர். அவர்கள் சென்ற வழியையே வெறித்துக்கொண்டிருந்தார். தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். அவருக்கு பின்பக்கத்தில் இலை சரசரப்பையும் ஊன் நெடியையும் ஒருசேர அவர் உணர்ந்ததும் உடல் பரபரக்க தொடங்கியது. திரும்பி நோக்க அவருக்கு துணிவில்லை. கொஞ்சம் தொலைவில் அவர்களுடைய தலைகள் தென்பட்டன எழுந்து விடுவிடுவென அவர்களை நோக்கி வேகவேகமாக நடந்தார்.