Wednesday, December 31, 2014

கரையா இனிமை

ஆயிற்று, இதோ மற்றொரு வருடம். நீரில் கரைந்த வெல்லம் என நாநுனியில் எஞ்சும் இனிமையை மட்டும் விட்டுசென்றுவிட்டு முழுமையாக கரைந்தே விட்டது.  இனிமை தான் எஞ்சுகிறதா என்றால், அப்படி அது மட்டுமே எஞ்ச வேண்டும் என பூரணமாக விழைகிறேன். காலம் தன் பங்கிற்கு எல்லா ருசிகளையும், விரும்பினாலும் இல்லாவிட்டாலும்  உணரசெய்து தான் புதிய வேறொன்றாக பிறப்பெடுக்கிறது. ஒற்றை ருசி நல்லதற்கில்லை, எல்லாமும் கலந்து தான் இருக்க வேண்டும் என்றாலும், நமக்கு உவப்பளிக்கும் விகிதங்களில் அவை பெரும்பாலும் இருப்பதில்லை என்பதே சிக்கல்.


Tuesday, December 30, 2014

விஷ்ணுபுரம் விழா 2014 - நினைவுகள்

கோவைக்கு கிளம்பியது முதல் ஊர் திரும்பியது வரை விழா ஒட்டுமொத்தமாக ஒரு இனிய அனுபவமாக அமைந்தது. அதற்குழைத்த அத்தனை கோவை நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள். 

சனிக்கிழமை காலை பத்துமணிக்கு யாத்ரி நிவாசில் விவாத அரங்கிற்கு மானசாவுடன் நுழைந்த போதே முன்னரே குழுமியிருந்த நண்பர்களின் முகங்களில் தென்பட்ட பிரமிப்பும் உற்சாகமும் எனக்கும் தொற்றிகொண்டது. பாவண்ணன் அவர்களுடனான உரையாடளில் எனக்கு மொழியாக்கம் குறித்து அவர் கூறியவை முக்கியமானதாக தோன்றின. தமிழ் இலக்கிய பிரதிகள் ஆங்கிலத்தையோ பிற இந்திய மொழிகளையோ சென்றடையவில்லை என்பதற்கு இன்று இரு மொழிகளில் ஆழ்ந்த அறிவும் பரிச்சயமும் கொண்டவர்கள் இல்லாதது மிகப்பெரிய குறை என்றார். அவருடைய கவலை நியாயமானதே, குறைந்தபட்சம் ஆங்கிலத்தின் வழியிலாவது அவை பிற மொழிகளை சென்றடைய வேண்டும். வேடிக்கையாக பல மொழியாக்க அபத்தங்களை நண்பர்கள் சுட்டிகாட்டிக்கொண்டே சென்றனர். 

DSC_3449.JPG