Wednesday, December 29, 2010

பின்னோக்கி

இதோ 2010 தனது மிச்ச சொச்ச உயிரை இரண்டொரு நாளில் விடுத்து ,நிகழ்காலத்திலிருந்து வரலாறு பெட்டகத்தில் இறந்தகாலமாக நினைவுகளில் மட்டும் வாழ போகிறது .நிகழ்காலம் என்று ஒன்று உண்டா என்று தெரியவில்லை இதோ என்று எண்ணுவதற்கு முன் அது கடந்து விடுகிறது .காலம் நம் வசதிக்காக நாம் உருவாக்கியது வருடம் ,நிமிடம் என எல்லாம் அப்படி தான்.புதிய மாற்றங்களை,புதிய சபதங்களை நாம் முன்மொழிய புத்தாண்டு ஒரு தினமாக இருக்கும் .மாற்றம் என்று முடிவாகிய பின் அதை அப்பொழுதே தொடங்க வேண்டும் ,இல்லையேல் அது நீர்த்துவிடும் என்று உணர்கிறேன் .ஆயினும் கூட இது ஒரு தொடக்கம் என்று எண்ணலாம்.ஒரு காலம் என்று ஒன்றை வரையறுத்து அதை பின்னோக்கி ஆராயும் பொழுது நிச்சயம் அது பெரும் சுகம் தரும் .
நாம் கடந்து வந்த உணர்வுபூர்வமான தருணங்கள்,நெகிழ்ச்சியான தருணங்கள் ,இதை எல்லாம் நாம் மனதில் மறு ஆக்கம் செய்து அந்த உணர்வுகளை மீள் எழுச்சி செய்தல் ஒரு பெரும் சுகம் .நாம் தவறிய இடங்கள் அப்பொழுது நமக்கு புரியாது ,உணர்வுகள் நமது நியாயத்தை மட்டும் பதிய செய்து புலன்களை கலங்கடிக்கும் .இப்பொழுது எண்ணி பார்த்தால் பிரச்சனையின் மறுப்பக்கத்தை புரிந்துக்கொள்ள முடியும் .நாம் அறியாத நமது இருட்டு பக்கங்கள் ,நாம் நம்மை வெறுத்த நமது கவனத்துக்காக எங்கும் நமது நிழல் அம்சங்களின் மீது சற்று ஒளியை பாய்ச்சினால் நம்மை நாம் இன்னும் ஒரு படி நெருங்கி விடுகிறோம் .

என்னை பொருத்தமட்டில் இந்த ஆண்டு கற்றவை ,பெற்றவை நிறைவாக உள்ளது .சமூக தளத்தில் யோசித்தால் என்னை மிகவும் வருத்தமாக்கிய நிகழ்வு என்றால் - பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்காக செய்த மதிப்பெண் பட்டியல் குளருபடி -இது ஒரு சமூகத்தின் ஆக பெரிய சீர்கேடாக நான் பார்க்கிறேன் ஊழல் என்பது அரசியல்வாதி ,அதிகாரி என்ற மையத்தை தாண்டி எப்படி வெகுஜன மார்கமாக மாறி ,ஒரு சராசரி மனிதன் சட்டத்தை தனது சுயநலத்துக்காக வளைக்கிறான் என்று உறைய வைத்தது .நியாயஸ்தன் ஒருவனுக்கும் மற்றவனுக்கும் உள்ள வேறுபாடு வாய்ப்பு மட்டுமோ என்று சந்தேகிக்க வைக்கிறது .யாரேனும் அரசின் ஊழலை பற்றி விமரிசித்தால் அவருக்கு அதில் பங்கு கிடைக்கவில்லை என்று ஆற்றாமையில் உழற்றுவது போல் இருக்கிறது .
ஆகபெரிய அவமானமாக நான் எண்ணுவது -சந்தேகமே இல்லாமல் எனது இயலாமையை தான் ,வருத்தபடுவதை ,கொபபடுவதை தவிர என்னால் ஏன் ஏதும் செய்ய இயலவில்லை என்று அவமானமாக இருக்கிறது .வரும் காலத்தில் இன்னும் சற்று கூடுதல் நேர்மையோடு இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது .பொது தளத்தில் யோசித்தால் - கல்மாடி இந்தியர்களின் மொத்த மானத்தையும் குத்தகைக்கு எடுத்துவிட்டார் .ஆனாலும் அமெரிக்காவின் மானம் விக்கி லீக்ஸ் -புண்ணியவான் அசெஞ் அவர்களினால் நன்றாக உலகமெங்கும் சந்தி சிரித்தது.இது அப்துல் கலாமின் கனவான (மற்றும் கேப்டனின் ) இந்தியா வல்லரசாக வேண்டும் என்பதை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது .இந்த மாறி கொடுமை எல்லாம் செஞ்சு என்னத்த வல்லரசாக வேண்டும் ? ஏற்கனவே இந்தியா இலங்கை தமிழர்களுக்கு புறமுதுகு காண்பித்து வல்லரசு ராஜப்பாட்டையில் கால்பதித்து விட்டது .இதை ஊர்ஜித படுத்து விதமாக சொந்த மக்களுக்கு சூனியம் வைக்கும் தண்டகாரண்யா பிரச்சனை -நினைத்தாலே இப்பவே கண்ண கட்டுதே.வல்லரசெல்லாம் வேண்டாம் சாமீ ,நல்லரசாக இருந்தால் போதும் .
நெகிழ்ச்சியான தருணம் என்று பார்த்தால் எங்கள் நண்பன் மணியின் பெயரால் உருவான அறக்கட்டளை சார்பாக ஒரு ஏழு குழந்தைகளின் கல்வி செலவை நண்பர்கள் இனைந்து ஏற்றது .பின்பு அவனது நினைவு நாளில் அவனது கிராமத்திற்கே சென்று மருத்துவ முகாம் நடத்தியது,உணவு அளித்தது .சிறிய மன பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு ஏழாம் வகுப்பு மாணவிக்கு கொஞ்சம் ஆலோசனை கூறி அனுப்பி வைத்தேன் ,அவள் திரும்பி வந்து அவளது பரிச்சை ரேங்க் கார்ட் கொண்டுவந்து தனது வகுப்பில் தான் முதலிடம் என்று கூறினால் -அப்பொழுது உண்மையிலயே எனக்கு தோன்றியது இது தான் "தன மகனை சான்றோன் என கேட்ட தாய் " .இதே போல் இன்னும் இரண்டு மூன்று மாணவர்களுக்கு ஆலோசனை பலனளித்து அவர்களின் பெற்றோர்கள் தொலைபேசியில் அதற்க்கு நன்றி தெரிவித்தது ,பல நேரங்களில் நாம் மருத்துவம் செய்யும் பொழுது அவருக்கு என்ன ஆனது இவருக்கு என்ன ஆனது என்று எண்ணி கவலை கொள்வேன் ,சிலர் தொலைபேசியில் கூப்பிட்டு உடம்பு சு
கமா இருக்கு சார் என்று சொல்லும் பொழுது ,மனம் எங்கும் ஒரு பரவசம் பரவும் .எனது அம்மாவின் ஐம்பதாவது பிறந்தநாளை அவருக்கு தெரியாமல் நண்பர்களின் உதவி உடன் நடு இரவில் கேக் வெட்டி கொண்டாடியது .படித்த பள்ளிக்கே மீண்டும் நுழைவது சுகம் அதுவும் சிறப்பு விருந்தினராக செல்வது இன்னும் பரம சுகம் அதுவும் இந்த வருடம் எனக்கு வாய்த்தது
படித்து முடித்து ஒன்றரை வருடத்திற்கு பின் வாங்கிய மருத்துவ பட்டம் .நெருங்கிய நண்பர்களின் திருமணம் என்று நெறைய தருணங்கள்

மகிழ்ச்சியான தருணங்கள் என்று பார்த்தால் -நண்பர்களுடன் சதுரகிரி பயணம் ,நண்பர்களுடன் கொண்டாடிய தீபாவளி ,எந்திரன் முதல் நாள் காட்சி ,பார்த்த பல திரைப்படங்கள்,ப்ரெசிடென்ட் ஹோட்டலில் உண்ட இரவு உணவுகள் ,அக்காவிற்கு பிறந்த குழந்தை ,சச்சின் இருநூறு அடித்த பொழுது ஏற்பட்ட மகிழ்ச்சி ,வருடத்தின் பிற்பாதியில் எனக்கு அறிமுகமான வலையுலகம் ,இப்பொழுதைக்கு -தமிழ்மண விருதுகளில் எனது மூன்று இடுகைகளும் அடுத்தகட்ட தேர்விற்கு சென்றுள்ளது ,இன்னும் பற்பல .பொது தளத்தில் யோசித்தால் -விளையாட்டு துறை மற்றும் பொழுது போக்கு துறையை தவிர்த்து வேறு எந்த துறையாலும் பெரிதும் மகிழ்ந்ததாக நினைவில்லை .
இந்த ஆண்டிற்கான சந்தேகம் -நான் என் மீது ஏதும் பிம்பம் எழுப்புகிறேனோ என்று ,எழுப்பாமல் இருக்க முயல்கிறேன் .கடவுளின் இருப்பை பற்றிய நம்பிக்கைகள் ,சந்தேகங்கள் வலுக்கிறது ,அதுவும் தமிழ் வலை உலகம் என்னை நெறைய சிந்திக்க வைத்துள்ளது .நெறைய இடங்களில் சிரிக்க வைத்தது .வாழ்க்கையை நாம் மட்டும் தான் தீர்மானிக்கிறோம் என்கின்ற எண்ணம் வலுவிழக்கிறது .ஒரு பெரும் கூட்டு முயற்ச்சியில் தன் பங்கை ஆற்றும் ஒரு துகள் என்று எண்ண தோன்றுகிறது .
ஆகபெரிய விழிப்பு -நிச்சயம் மக்களுக்கு சாமியார்களின் மேல் வந்துள்ள சந்தேக பார்வை என்று அடித்து சொல்லலாம் .என்னை பொறுத்த வரை எவர் ஒருவர் ஆன்மீகத்தை அமைப்பாக மாற்றுகிறாரோ அவருக்கு ஆன்மீகத்தை தாண்டி வேறு ஏதோ நோக்கம் இருக்கிறது என்று பொருள் .நித்தியை விட என்னை பாதித்த காணொளி கல்கி சாமியாருடயது .யோகத்தை பஞ்சு மிட்டாய் போல் இப்படி ஆளாளுக்கு விற்பது கொடுமை .
இன்னும் நெறையா எழுத வேண்டும் என்று தோன்றினாலும் ,பதிவின் நீ ..நீ ..நீளம் கருதி வேறு வழி இன்றி முடித்து கொள்கிறேன் ..
வரும் வருடம் நமக்கு தேர்தல் ஆண்டு -என்னென்ன தேவைகள் நமது அண்ணன்களை கேளுங்கள் ,பட்டியல் தயார் செஞ்சு வெச்சுக்கலாம் :)
நல்ல எண்ணங்கள் எல்லாம் உயிர் பெற்று ,வாழ்க்கை தரமும் நாம் வாழும் தரமும் ஒரு படியாவது உயர்ந்து ,மனங்களில் அமைதி குடி கொண்டு ,நெகிழ்ச்சியான மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் நிரம்பி வழியும் ஒரு ஆக்கப்பூர்வமான ஒரு ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் .நம்பிக்கையுடன் தொடங்குவோம் இந்த புத்தாண்டை .
தங்களுக்கும் ,நண்பர்களுக்கும் ,குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
குறிப்பு -சற்றே சுய சொரிதல் அதிகமாக இருக்கிறதோ ? மன்னிச்சுக்கோங்க :)

Friday, December 24, 2010

பெற்றால் மட்டும் போதுமா-3

நாம் ஏன் ஒரு குழந்தையை பெற்று கொள்ள வேண்டும் ? இந்த வினாவிற்கு நாம் நேர்மையாக யோசித்து ஒரு பதிலை அடைய வேண்டும் .பல நேரங்களில் என்ன நடக்கிறது என்றால் ,பிள்ளை பேறு ஒரு விபத்தாக இருக்கிறது ,அல்லது சமூகத்தின் கட்டாயத்திற்கு அடிபணியும் வண்ணம் அமைகிறது .இன விருத்தி என்று ஒரு காரணம் மட்டுமா ? இன விருத்தி தான் காரணம் என்றால் ஏற்கனவே உலகம் மனித கூட்டத்தால் நிரம்பி வழிகிறது .குழந்தை பெற்றுக்கொள்ள பல காரணங்கள் உண்டு .
பெற்றோர்கள் பிள்ளைகள் பிறந்த பின்பு ,பிள்ளைகளை பற்றி எண்ணும் பொழுது மூன்று விதமான எண்ணம் வரும் ,பிள்ளைகளின் பேரில் ஒரு வாஞ்சை,பெருமை ,பிள்ளைகள் மேல் வரும் கோவம்,இயலாமை ,தன எதிர்பார்ப்புக்கு விரோதமான நிலைப்பாடு என்று வரும் பொழுது வரும் எண்ணம்- நாம் பிள்ளையை சமூகத்தின் பார்வைக்கு ஏற்றார் போல் வளர்க்கவில்லை என்று தாழ்வுமனப்பான்மை ,அல்லது ஏன் தான் இப்படி ஒரு பிள்ளையை பெற்றோம் என்று ஒரு வெறுமை கோவம் .பொதுவாக ஒரு சராசரியான பெற்றோர் இந்த மூன்று நிலைகளையும் ஏதோ ஒரு இடத்தில் சந்திப்பார் .
"பட்டர் பேபி சிண்ட்ரோம்." (battered baby syndrome ) என்று ஒரு நோய் உள்ளது .குழந்தைகளை மிக வன்மையாக தண்டிப்பது ,சிறு சிறு தவறுகளுக்கு கூட பயங்கர தண்டனைகள் ,சூடு வைப்பது ,ரத்தம் வர அடிப்பது என்று இது நீளும் .இவ்வகை குழந்தைகள் தங்களை பற்றிய ஒரு மோசமான மன நிலையை எட்டி விடுகிறது .இவர்கள் இரண்டு வகையில் வெளி வருவார்கள் ஒன்று -என்னையா அடித்தாய் ,நான் மிகவும் சக்தி வாய்ந்தவனாக வந்து உன் கையை முறிக்கிறேன் என்று முடிவு செய்து ,பாதை மாறி அடாவடி -அட்டகாசங்கள் புரியும் ,பிறரை துன்புறுத்தி இன்புறும் ஒரு மனிதனாக அல்லது என்னை வெறுக்கிறார்கள் நான் வாழ தகுதி அற்றவன் ,எதுக்குமே லாயாக்கிலாதவன் , என்று எண்ணி இறுதி வரை லச்சியங்கள் ஏதும் இல்லாமல் ,தோல்வி முகம் கொண்ட ஒரு வாழ்க்கை .குழந்தைகளை துன்புறுத்தும் பெற்றோர் -அவரது இளமை கால நினைவுகளின் வாயிலாக அதை செய்கிறார் ,ஒரு தவறான முன்மாதிரியை தனது முன்மாதிரியாக ஏற்று கொண்டதன் விளைவு .தொண்ணூறு சத விகிதம் இத்தகைய பெற்றோர்கள் அவர்களது இளமை வாழ்வில் கடுமையாக புண்பட்டிருப்பார்கள்.அந்த குழந்தையை போட்டு உலுக்கி எடுப்பதால் என்ன என்ன விளைவுகள் வரும் எப்படி இறந்து போகும் என்று விரிவாக மருத்துவம் கூறுகிறது (மேலும் தெரிந்து கொள்ள -shaken baby syndrome)
ஒரு அமெரிக்க ஆய்வு சொல்லும் தகவல் இது -அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு சராசரியாக அறுபதாயிரம் குழந்தைகள் இவ்வகை பிரச்சனையால் பாதிப்பு அடைகிறார்கள் .சுமார் இரண்டாயிரம் குழந்தைகள் பெற்றோர்களின் கடுமையான நடத்தையால் இறக்கிறார்கள் .இதில் ஐம்பந்தைந்து சதம் ஒரு வயதினருக்கு கீழ் !!நமது நாட்டு நிலைமை ?!
ஒரு கேஸ் ஸ்டடி-ஒரு இளம் அமெரிக்க பெண் அவரது நாற்பது நாட்களே ஆன குழந்தையை அடித்து கொன்றுள்ளார் -காரணம் கேட்ட பொழுது யாரும் ஏன் மீது அன்பாக இல்லை ,எனக்கு பிறக்கும் குழந்தை ஏன் மீது அன்பாக இருக்கும் என்று எண்ணினேன் ,அது தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அதற்க்கும் என் மீது வெறுப்பு என்று எண்ணினேன் என்னை என் குழந்தை கூட ஏமாற்றிவிட்டது ,அதான் கொன்றேன் .!! இது மிகை அல்ல ,உண்மை .

ஒரு தாய் அவரின் இரண்டு வயது மகனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து வருகிறார் ,உடல் சுடுகிறது ஜுரம் என்கிறார் .மருத்துவர் காண்கிறார் ,மருந்து கொடுக்க படுகிறது ,மீண்டும் இரண்டு நாளில் தூக்கி வருகிறார் ,மருந்து- வீடு, மீண்டும் மருத்துவர் ஆனால் ஜுரம் இல்லை .ஆனாலும் மீண்டும் மீண்டும் மருத்துவரை காண வருகிறார் ,அவனுக்கு அது சரி இல்லை இது சரி இல்லை எப்பொழுதும் அழுகிறான், ஏதாவது மருந்து மாத்திரை கொடுத்து கொண்டே இருப்பார் .இன்னொரு தாய் தனது ஒன்றரை வயது மகளுக்கு கையில் சிறு வெட்டு என்று அழைத்து வருகிறார் , மருந்து போட பட்டு அழைத்து செல்ல படுகிறாள் ,மீண்டும் இரண்டொரு நாளில் வேறு விரலில் கட்டு .இப்படி தொடர்கதையாக தொடர்கிறது .இது என்ன தெரியுமா ? "முஞ்ஹாசன் பேபி சிண்ட்ரோம் " (munchaussen baby syndrome or munchaussen syndrome by proxy)
இந்த நோய் பொதுவாக செவிலி தாய்களுக்கும் ,தாய்மார்களுக்கும் ஏற்படுவது ஆகும் ,இது ஒரு விளாயாட்டு -தன் குழந்தையை ஆரோகியமாக இருக்க விட மாட்டார்கள் ,அவர்களின் வாழ்வின் பொருளே குழந்தைக்கு சேவை செய்வது தான் என்று எண்ணுவார்கள்,குழந்தை சரியானால் தங்களது வாழ்வின் நோக்கம் சரிகிறது என்பதால் ,குழந்தையை தொடர்ந்து படுக்கையில் ஆழ்த்தி ,அவர்களை நோய்வாய்ப்பட செய்து தொடர்ந்து தங்கள் கண்காணிப்பில் வைப்பார்கள் .தொடர்ந்து பொய்கள் மூலம் புதிய புதிய வியாதிகளை உருவாக்கலாம் .இது ஒரு மிக ஆபத்தான போக்கு .குழந்தையின் சுகவீனம் இவர்களுக்கு நிம்மதியை அளிக்கும் .பாசமாக உணவு ஊட்டுவார்கள் ,பக்கத்திலே அமர்ந்து கண்விழிப்பார்கள் ஆனால் உடல் நிலை மட்டும் சரியாகாது .(இதை கருவாக கொண்டு ஆங்கிலத்தில் ஒரு நல்ல திரைப்படம் வந்தது பெயர் நினைவில்லை) எனினும் இது சமூகத்தில் அவளவு பரவலாக இல்லை ,ஆகினும் கூட நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .

பிள்ளைகள் பெரும் முன் நாம் மனதளவில் இன்னொரு உயிரை பேணி காக்க தயாரா என்று கேட்டுக்கொள்ள வேண்டும் .வேண்டா வெறுப்பாக பிள்ளையை பெற்று கொண்டு சனியனே,ஏன் நேரம் என்று அவர்கள் மீது நம் இயலாமையை திணிக்க கூடாது.

ஏன் ஒரு பிள்ளை பாதை மாறுகிறது ? தொடுகையின் முக்கியத்துவம் என்ன ?
வரும் பதிவுகளில் ..
மேலும் அறியலாம் ....
பயனுள்ள சுட்டிகள்..

Thursday, December 16, 2010

போட்டி -சிறுகதை

குறுகலான அந்த சிமெண்ட் சாலை ,இருபுறமும் ஓடும் கழிவு நீரோடைகள் ,அதை ஒட்டி ' பிங்க் சிட்டி ' ஜெய்பூர் போல் வெள்ளை அடிக்காத சுட்ட செங்கல் சுவர்கள் கொண்ட பூசாத ஓர் அறை -ஓர் வாசல் மாளிகைகள் அணிவகுத்து நிற்கின்றன .சமத்துவம் பேசும் ஒற்றை சிமெண்ட் ஸ்லாப் ,யாராக இருந்தாலும், எங்கிருந்து வந்தாலும் சாக்கடையை தாண்டி வீட்டுக்குள் நுழைய அதில் கால் வைத்து ஆக வேண்டும் ,முதலைகள் நிறைந்த அகழியை தாண்டி கோட்டைக்குள் நுழைவது போல் .மழை காலங்களில் லோடு லோடாக முக்கால் ஜல்லி கற்களை கொட்டுவது போல் சட சடவென்று சப்தம் எழுப்பும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் .சைக்கிள்கள்,வண்டிகள்,குழந்தைகள், ஆடுகள்,மாடுகள்,கோழிகள்,மனிதர்கள் என்று சகலரும் சமமாக வாழும் வேதாந்த வீதி அது .
இதே தெருவின் கடை கோடியில் இருக்கும் வீடு ,அரசு பள்ளியில் அஞ்சாம் வகுப்பு படிக்கும் முத்துவின் வீடு " ஆத்தா ,பள்ளுடம் போய்ட்டாரேன் " தனது வயதிற்கும் உடலிற்கும் மீறிய அவனது அப்பாவின் சைக்கிளை கெந்தி கெந்தி ,குரங்கு பெடல் போட்ட படி கிளம்பினான் .இந்த நேரத்தில் நாம் ராஜாவை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் .

முத்துவிற்கு ஒரு எதிரி உண்டு என்றால் அது ராஜா தான் ,தினமும் அவன் ராஜாவினால் பரிகசிக்கப்பட்டான் ,அவனுக்கும் ராஜாவிற்கும் ஏழாம் பொருத்தம் .ராஜா-பெயருக்கு ஏற்றார் போல் அவன் அந்த தெருவுக்கே ராஜா,எல்லோரின் செல்ல பிள்ளை ,தெருவில் டக்லஸ் தாத்தா அவனை கண்டு எடுத்து சோறு போட்டு வளர்த்தார் ,அவரின் மறைவுக்கு பின் அவன் அந்த தெருவின் பொது உடமை ஆனான் .தினம் ஒரு வீட்டில் சாப்பாடு -பிரியாணி,தயிர் சாதம்,ரொட்டி ,மட்டன் என்று வெளுத்து வாங்கியதால் நல்ல தசை திரட்சி ,ராஜாவின் அனுமதி இன்றி அந்த தெருவில் ஒரு ஜீவன் நடமாடமுடியாது .கழுத்தில் இருக்கும் அரக்கு பட்டை ,வெந்தய நிறம்,செந்தூரம் தோய்ந்த அந்த நெற்றி இது தான் ராஜா .

முத்துவை பார்த்தாலே ராஜா எங்கிருந்தாலும் ஓடி வந்து நிப்பான்,அதுவும் அவன் பள்ளிக்கு செல்லும் சமயத்தில் அது ஒரு சடங்காகவே ஆகி விட்டது .அவனுக்கும் ராஜாவிற்கும் ஒரு போட்டி ,போட்டி களம் முத்துவின் வீட்டில் தொடங்கி அந்த தெரு சங்கமிக்கும் பள்ளிக்கூட தார் சாலை வரை .முத்துவை முன்னாள் விட்டு ராஜா நாலு கால் பாய்ச்சலில் அவனை கடந்து சென்று அந்த எல்லை கோட்டை தொட்டு எக்களிப்புடன் சிரிப்பதாக முத்து எண்ணுவான் ,இன்றும் அதுவே நடந்தது .ராஜா நாலு கால் பாய்ச்சலில் ஓடி தெரு முக்குக்கு வந்து இவனை பார்த்து வாலாட்டியது .முத்துவிற்கு இது பயங்கர எரிச்சலை கொடுக்கும் ."முதல்ல வரோம்னு உனக்கு ரொம்ப திமிரு ,பாரு ஒரு நாள் உன்ன நான் ஜெயிப்பேன் ,ஒருநா உன் கால உடச்சி உன்ன நொண்ட வெக்குறேன் பாருடி" கருவி கொண்டே கிளம்பினான் முத்து..
பள்ளிக்கூடம் முடிந்து திரும்பி வந்தான்,அம்மா ஆக்கி வைத்த சோற்றை தின்று பசியாறி படித்து கொண்டிருந்தான் .வெளியே அழு குரல் ,விடீரென்று ஒரு சத்தம் ,அவனது அம்மாவின் குரல் ,தொடர்ந்து அடி விழுவது போல் சத்தம் " சனியனே ,****, கைல இருக்குற காச கொடேண்டி , சிறுக்கி " தலை முடியை பிடித்து இழுத்து கத்தி கொண்டிருந்தான் முத்துவின் அப்பா , அம்மா விடவில்லை "போடா நாயே ,நீ ஊர் மேஞ்சுட்டு வர்றதுக்கு நான் அழுகனுமா ,என்னிக்காவது ஒரு நாள் ஒழுங்க இருந்துருக்கியாடா ,உன் புள்ளைக்கு ஒரு நல்ல அப்பனா நடத்துருக்கியா ," என்று முகத்தில் உமிழ்ந்தால் ,முத்து வெளியே வந்து இந்த கோலத்தை பார்த்தான் அது அவனுக்கு பழக்கப்பட்டது தான் ஆனாலும் அவனுக்கு வலித்தது "அப்பா ,நீ போ..நீ ஒன்னும் வர வேணாம் ,போ ..."கத்திக்கொண்டே ஓடிவந்தான் "அடிங்க ****மவனே ,பிச்சுருவேன் "என்று அவனும் கத்தியபடியே பக்கத்தில் கிடந்த அந்த செம்பரான்க்கல்லை கையில் எடுத்தான் ,ஊரே சுற்றி நின்று வேடிக்கை பார்த்தது ,முத்து ஓடி வருகிறான், பக்கத்தில் வந்து விட்டான் அப்பன் கல்லை தூக்கி எறிந்தான் ,சுரீர்ரென்று ஒரு சப்தம் ,எங்கிருந்தோ ஓடி வந்த ராஜா அவனை கடித்தத்தில் அந்த களேபரத்தில் அவன் அந்த கல்லை ராஜாவின் வலது முன்னங்காலில் போட்டான் ,கீச்சு குரலில் கத்தியபடியே ஆக்ரோஷமாக அவனை கவ்வியது ராஜா ,பிறகு அக்கம்பக்கத்தினர் வந்து விளக்கி விட்டு அவனை அனுப்பி வைத்தனர் ,"இன்னிக்கு நாய் உங்கள காப்பாத்திருச்சு ,இன்னொரு நாள் வரேன் ,எந்த நாயும் உங்கள காப்பாத்தாது ,நாய்களா",முத்துவும் அம்மாவும் அழுது கொண்டே வீட்டுக்குள் சென்றனர் .

விடிந்தது ,அதே போல் முத்து பள்ளிக்கூடம் கிளம்பினான் ,சைக்கிளில் கெந்தி குரங்கு பெடல் போட்டுக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்,அவன் பின்னால் முன்னங்காலை நொண்டிய படியே ஓடி வந்தது ராஜா ,வழக்கம் போல் இவனும் வேகமாக சைக்கிளை கெந்தினான் ,கிட்ட தட்ட அவனது எல்லை கோட்டை
அடைந்தான் ,கழுத்தை திருப்பி ஏகத்தாளமாக ராஜாவை நோக்கினான் ,நொண்டியபடியே தோல்வியின் கோரத்தால் முகம் தொங்கி வந்து கொண்டிருந்தது .முத்துவின் மனம் கனத்தது ,கண்ணீர் வழிந்தது ,காத்திருந்தான் ராஜாவிர்க்காக,ராஜா அவனை கடந்து சென்று வாலாட்டியது .சிரித்துக்கொண்டே பள்ளிக்கு சென்றான் .

மறுநாள் முத்து தனது சைக்கிளில் புத்தக பையை மாட்டி கொண்டு உருட்டி கொண்டு நடந்தான்,பக்கத்தில் ராஜா அவனோடு துணையாக நடந்து வந்தது .

Wednesday, December 15, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம்-10 -மருத்துவ தகவல்கள் (tips)


சில எளிய மருத்துவ தகவல்களை இப்பகுதியில் பகிர்கிறேன்
1.சைனஸ் தலைவலி பாதிப்பு உள்ளவர்கள் தலை குளிக்கும் நாட்களில் தலை பாரம்,தலை வலி வரும் ,இத்தகைய சமயங்களில் தலைக்கு இளம் சூடான ஒரே வெந்நீர் (அதவாது வெந்நீருடன்,குழாய் தண்ணி கலக்காமல் ) தலைக்கு ஊற்றிவிட்டு ,அரை டம்பளர் சுடு தண்ணீரில் ஒரு அரை டீ ஸ்பூன் மிளகு பொடி கலக்கி ஒரே மடக்கில் குடித்தால் அன்று தலை பாரம்,வலி வராது.
2.நாம் சமைக்கும் பொழுது மிளகாய்க்கு பதில் மிளகு ,கரும்பு வெள்ளத்திற்கு பதில் பனை வெள்ளம் (கருப்பட்டி),சீனிக்கு பதிலாக கற்கண்டு உபயோகித்தல் நலம் பயக்கும் .குறிப்பாக உருளை கிழங்கு 'ரோஸ்ட் ' செய்யும் பொழுது மிளகு போடி சேர்த்து வதக்கினால் ருசியும் நன்றாக இருக்கும்,உருளை சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் கால் வலி ,கை வலி வராது

3.ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு அதிகம் சேர்க்க கூடாது என்று ஒரு நம்பிக்கை உண்டு,இது ஆராய்ச்சிக்குட்பட்டது ,எனினும் எதுக்கு 'ரிஸ்க்' என்று எண்ணினால் நாம் உபயோகிக்கும் உப்பிற்கு பதிலாக இந்து உப்பு (pottasium salt)சிறிதளவில் உபயோகிக்கலாம் .

4.தூக்கமின்மை இருந்தால் உறங்குவதற்கு முன் உள்ளங்கால்களில் நன்றாக சூடான நல்லெண்ணெய் தேய்த்து ஒரு ஐந்து நிமிடம் மசாஜ் செய்தால் உறக்கம் வரலாம்.

5.திடிரென்று மூச்சு திணறல் ஏற்ப்பட்டால் ,(குறிப்பாக குழந்தைகள்,முதியவர்களுக்கு) கொஞ்சம் தேங்காய் எண்ணெய் எடுத்து சூடாக்கி அதில் சிறிது பச்சை கர்ப்பூரத்தை (இல்லாத பட்சத்தில் சூடம் உபயோகிக்கலாம் ) போட்டு அது கரைந்த பின் அந்த எண்ணெய் நெஞ்சு ,விளா,முதுகு பகுதிகளில் தடவினால் ஓரளவுக்கு மூச்சு திணறல் குறையும் .

6.மூட்டுகளில் வலி வீக்கம் இருந்தால் ,கொஞ்சம் ஆத்து மணலை எடுத்து இரும்பு வானெலியில் வறுத்து அதை துணியில் பொட்டலமாக கட்டி ஒத்தடம் கொடுத்தால் வலி நன்றாக குறையும் ,குறிப்பாக மூட்டுகளில் பிடிப்பு உள்ளவர்கள் இதை செய்வதன் மூலம் நல்ல பலன் அடையலாம் .
7.கொத்தவரங்காய் -(cluster beans) அடிக்கடி சேர்ப்பது மூலம் சர்க்கரை நோய் ஓரளவுக்கு கட்டுபடும்,அதுவும் இன்சுலின் எடுத்து கொண்டிருந்தால் அதன் தேவையை குறைக்கும் .

8.வேர்கடலை உள்ள ஊட்ட சத்துகள் பாதாம் பிஸ்தா ஆகியவையில் உள்ள புரதத்திற்கு இணை ஆனது .வேர்க்கடலை சாப்பிடும் பொழுது அதன் வெளி தோலை சேர்த்து சாப்பிட வேண்டும் , அதில் நம் உடலுக்கு தேவையான 'ஜின்க் ' மற்றும் ஆண்ட்டி - ஆக்சிடென்ட்ஸ் (anti-oxidants) அதிக அளவில் இருக்கிறது .
9.எலும்பு முறிவு, எலும்பு உருக்கி நோய்களால் பாதிக்க பட்டவர்கள் முளை கட்டிய பயறை சிறிது சர்க்கரை அல்லது உப்புடன் சேர்த்து தினமும் உண்டால் போதிய அளவு சுண்ணாம்பு சத்து உடலுக்கு கிட்டும் .பிரண்டை மோரில் ஊறவைத்து பின்பு துவையல் அரைத்து சாப்பிடுவது நன்மை பயக்கும் .

10.உடல்பயிற்ச்சி செய்யும் பொழுது நமது உடலுக்கு தகுந்த மாறி செய்ய வேண்டும் .அதிக எடை ,பளு தூக்குவது ஆபத்தானது .நமது வயிற்று பகுதிகளில் அதிக அழுத்தம் ஏற்படுவதால் குடலிறக்கம்(hernia) ஏற்பட வாய்ப்பு உண்டு .

Sunday, December 5, 2010

பெற்றால் மட்டும் போதுமா-2


ஒரு குழந்தை தன்னை பற்றிய ஒரு நிலைப்பாடை எட்டு வயதிலிருந்து பத்து வயதிற்குள் எடுத்து விடுகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள் .தன்னை பற்றிய ஒரு நிலை பாடும் அதன் புற சூழல்,உலகம் பற்றிய ஒரு நிலைப்பாடும் அது இந்த வயதில் அடைந்து விடுகிறது .அப்பொழுது எடுக்கும் அந்த முடிவு,அதன் குணாதிசயங்களை முடிவு செய்து அதற்கேற்ற ஒரு பாத்திரத்தை ஏற்று கொண்டு வாழ்க்கையை நடத்தும் .இதை 'ஸ்கிரிப்ட் ' என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள் .நாம் எல்லோரும் ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதற்கேற்ற வாறு நடித்து கொண்டு இருக்கிறோம்,அதையே நாம் திரும்ப திரும்ப செய்கிறோம்.
குழந்தைகள் எடுக்கும் நிலைபாடை நான்காக வகுக்கலாம்
நான் சரி ,உலகமும் சரியானதே -(i'm ok.you are ok-positive)- இது ஒரு ஆரோக்கியமான மன நிலையாக வளர்ச்சி பெரும் ,வாழ்க்கையின் பால் நம்பிக்கை இருக்கும்,மனிதர்கள் மீது நம்பிக்கை ,அன்பு இருக்கும்,வாழ்க்கை வாழ்வதற்கே எனும் மனப்பான்மை இருக்கும் .
நான் சரி ஆனால் உலகம் சரி இல்லை -(i am ok,you are not ok-projective) -இது குற்றம் சுமத்தும் மனம் ,நான் மட்டுமே சரி ஆனவன் ,வாழும் தகுதி உள்ளவன் ,நீ தகுதி அற்றவன்,மதிப்பில்லாதவன் ,தனது செயல்களின் விளைவிற்கு இன்னொருவன் மேல் பழி போடுவது .அடக்கி ஆள முயல்வது,அதிகார மையமாக செயல் படுவது

நான் சரி இல்லை, உலகம் சரியானது -(i am not ok,you are ok-introjective)- இத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் ,தன்னம்பிக்கை இன்றி தவிப்பர் ,தளர்ச்சி அடைவர் ,மன அழுத்தத்தால் பாதிப்பு ஏற்படும் .உற்சாகமின்மை ,மன சோர்வு .நான் இந்த உலகத்தில் வாழ தகுதி அற்றவன் என்று நம்புவர் ,உச்சகட்டமாக தற்கொலை நடக்கலாம் .

நானும் சரி இல்லை உலகமும் சரி இல்லை -(ii am not ok you are also not ok-futile)-வாழ்கை இவர்களுக்கு ருசிப்பதில்லை ,வாழ்க்கை ஒரு திக்கற்ற,நோக்கமற்ற ஒரு பயணம் ,எந்த சுவாரசியங்களும் இதில் இல்லை ,வாழ்க்கைக்கு மதிப்பே இல்லை ,வாழ்வதில் ஒரு பிடிமானம் இல்லாமல் தற்கொலைக்கு செல்லலாம் .

இந்த நிலைபாடுகளால் அரங்கேறுவது தான் வாழ்க்கை எனும் நாடகம் ,எட்டு வயதிலே நாம் நம் கதாப்பாத்திரத்தை தேர்வு செய்து விடுவோம்,இந்த பாத்திரங்களை குழந்தைகள் தனதாக்கிகொள்ள முக்கிய காரணம் பெற்றோர்கள் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை
இனி என்ன ? அந்த பாத்திரமாக வாழ்வது தான் பாக்கி .
உலகில் வசிக்கும் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான ஒரு எதிர்பார்ப்பு எது தெரியுமா ? நமது இருப்பின் மீதான கவனம் , நமது இருப்பை நாம் ஆழ படுத்துகிறோம் ,அதை பிறர் அங்கீகரிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம் .இது மிகவும் அடிப்படையான உணர்வு .இந்த அங்கீகாரம் ஒரு மென் சிரிப்பாகவும் இருக்கலாம், இல்லை கண் அசைவாகவும் இருக்கலாம் இல்லை முதுகில் விழும் அடியாகவும் இருக்கலாம், இல்லை கன்னத்தில் விழும் அறையாகவும் இருக்கலாம் .

ஒரு மனிதனுக்கு நாம் கொடுக்கும் மிக பெரிய வலி,அவமானம் அவனது இருப்பை நாம் புறக்கணிப்பதே ஆகும், நாம் நம் குழந்தைகளை புறக்கணித்தால் என்ன ஆகும் ?


தொடரும் ...

Saturday, December 4, 2010

ஜோனாதன் லிவிங்ஸ்டோன் எனும் சுதந்திரத்தின் குரல்

எனக்கு பெரிதாக ஆங்கில நாவல்,கதைகளில் அறிமுகம் ,ஆர்வம் இல்லை .இது வரை நான் மொத்தமே ஒரு இருபது ஆங்கில நாவல்கள் படித்து இருந்தால் பெரிய விஷயம் ,அதிலும் ஒரு நாலஞ்சு சிட்னி ஷெல்டன் நாவல்கள் ,பிறகு டேன் பிரவுன் நாவல்கள் ,பிறகு ஹாரி பாட்டர் அனைத்து பாகங்கள் , இதை தவிர இன்னும் நாலஞ்சு தேறலாம் ,பெரிதாக எந்த காரணமும் இல்லை -கதாப்பாத்திரங்களின் சூழலோடு எனக்கு ஓட்டுவது கொஞ்சம் கடினமாக இருந்தது .அதனால் என்னை தகவல் சார்ந்த பொது அறிவு புத்தகங்கள்,சிறு வயதில் சந்தாமமா ,டிங்கில் காமிக்ஸ்,பாட புத்தகங்கள்(குறிப்பாக நான் -டீடைல்) ,பின்னர் கல்லூரியில் ஆன்மீக புத்தகங்கள்,சுய முன்னேற்ற புத்தகங்கள் என்று என்னை சுருக்கி கொண்டேன் .(இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை)
நம் வாழ்வில் வாசிப்பதால் ஏதும் பலன் உண்டா ? சில வாசிப்புகள் நம் வாழ்க்கையே புரட்டி போட்டு விடும் .நேரடியாக நம் இதயத்தில் புகுந்து நம் நம்பிக்கை ,சித்தாந்தங்கள் என்று எல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் .கேள்விகள் ,பயம், உன்னதம் என்று அது பல தளத்தில் நின்று பேசும் ,ஒரு அங்குலமாவது நம்மை முன்னோக்கி நகர்த்தி செல்லும் .ஒரே படைப்பு எல்லாருக்கும் உன்னதத்தை தருவதில்லை ,ஒரு படைப்பு நமக்கு தாக்கத்தை தருகிறது என்றால் அதற்க்கு நாம் தயாராக இருக்கும் நேரத்தில் அதை படித்தால் மட்டுமே அது நம் உள்ளத்தில் மோதி பிரளயமாக வெடிக்கும் .ஒவ்வொரு வாசகனுக்கும் இத்தகைய அந்தரங்கமான அக அனுபவம் ஏதோ ஒரு படைப்பினால் ஏற்படும் .
வாழ்க்கையில் எத்தனையோ படைப்புகள் வரும்நாட்களில் தாக்கத்தை ஏற்படுத்தி கொடுக்கலாம் ஆனால் எதுவும் அந்த முதல் அனுபவத்திற்கு ஈடாகாது ,முதல் காதலை போல்.
கல்லூரி நான்காம் ஆண்டு படித்து கொண்டிருந்த சமயத்தில் ,மே மாத விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன் .அப்பொழுது எனக்கு மனதில் சில விஷயங்கள் என்னை போட்டு அழுத்தி கொண்டிருந்த காலம் .அப்பொழுது ஊரில் எனது நீண்ட நாள் பள்ளி தோழியை சந்தித்தேன் ,அவளுக்கு தேர்ந்த ரசனை உண்டு ,ஆங்கிலத்தில் நெறைய நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து வாசிப்பாள் ,பின்னர் படித்த புத்தகத்தை பற்றி நெறைய பேசுவாள் ,அப்படி அவள் எனக்கு பரிந்துரைத்த புத்தகம் ஏராளம் ,புத்தகத்தின் தடிமனை பார்த்து ஒதுங்கி விடுவேன் ,அவள் எனக்கு அந்த நேரத்தில் இரண்டு புத்தகங்களை அறிமுகம் செய்தால் ஒன்று the alchemist-by paulo coelho (அல் கெமிஸ்ட் ) இன்னொன்று ஜோனாதன் லிவிங்க்ஸ்டன் தி சீ கல் (jonathan livingston the seagull). அல் கெமிஸ்ட் நான் அப்போது படிக்கவில்லை ,அவள் வீட்டில் இருந்த அந்த சிறிய புத்தகத்தை எனக்கு படிக்க கொடுத்தால் ,இதையாவது படி என்றாள்
.அந்த புத்தகம் ஐம்பது அல்லது அறுபது பக்கங்கள் தான் இருக்கும்,அதிலும் நெறைய படங்கள் வேறு இருக்கும் ,சரி சின்ன புக் தான படிக்கலாம் என்று நானும் படித்தேன் , அது தான் ஜோனாதன் லிவிங்க்ஸ்டன் தி சீ கல் .
ரிச்சர்ட் பாச் எனும் முன்னாள் அமெரிக்க விமான படை விமானி எழுதிய புத்தகம் இது .சீ கல் எனும் கடலை நம்பி வாழும் ஒரு பறவை இனம் உண்டு .அந்த பறவை கூட்டத்தில் ஒரு பறவை தான் ஜோனாதன்.அந்த பறவை கூட்டதிலிருந்து தன்னை வேறுபடுத்தி கொண்டவன் ,அவனுக்கு பல லச்சியங்கள் உண்டு ,வெறும் உணவுக்காக பறப்பதில் அவனுக்கு விருப்பம் இல்லை ,பறப்பது சுகம்,உயரே உயரே ,மேலும் உயரே,வின் மீன்களை எட்டி பிடிக்க அவனுக்கு அடக்க முடியாத அவா ,அவன் அவனது சமூகத்தில் வேறுபட்டு சிந்திக்க தொடங்கியதால் அவனை அவனது சமூக பெரியவர்கள் அவனது பெற்றோர்கள் ,குடும்பம் என அனைவருமே அவனை அடக்க முயன்றனர் ,பொது புத்தி விளையாடியது ,அவனது தாய் தந்தை அவனை கண்டிக்கின்றனர் ,உணவுக்காக நாம் பறக்கிறோம் ,அதனால் நீ அந்த அளவுக்கு பறக்க நேர்ந்தால் போதும்,இதர பறவைகள் போல்,சீ கல் போல் உன்னால் ஏன் இருக்க முடியவில்லை ? நமக்கு எது வருமோ அதை மட்டும் செய்து சமூகத்தோடு ஒத்து வாழு என்று அறிவுரைகள் .ஜோ அவ்வாறு அமைதியாக் இருக்க முயல்கிறான் ,ஆனால் முடியவில்லை .பெற்றோர்களுக்கு தெரியாமல் தொடர்ந்து பறக்கும் நுணுக்கங்களை அறிகிறான் ,அவனுக்கு தன்னால் எது முடியும்,எது முடியாது ,அது ஏன் முடியாது இதை தெரிந்து கொள்ள வேண்டும் ,ஆயிரம் அடிகளிலிருந்து வேகம் எடுக்கிறான் ,கடலை ஒட்டி பறக்கிறான், இன்று அவனுடைய சமூகத்தில் உயிர் வாழும் எந்த சீ கல் விடவும் அவன் பறக்கும் நுணுக்கங்களை கற்று தேருகிறான்.


ஒரு கட்டத்தில் தன்னால் கழுகை போல் பறக்க முடியாது ,என்று தனது எல்லையை உணர்கிறான் ,நாம் கூட்டத்தினரோடு இனைந்து வாழ வேண்டும் என்று தன்னை தானே சமாதானப்படுத்துகிறான் .
ஆனால் மறு நொடி அவனது கனவு ,ஆசை அவனது தீர்மானத்தை நொறுக்குகிறது.எந்த ஒரு சீ கல் அடையாத ஒரு உயரத்தை அவன் அடைகிறான் ,பெருமையோடு கூட்டம் இருக்கும் கரைக்கு திரும்பினால் ,அங்கே ஒரு பெரும் கூட்டம் இவனுக்காக காத்து கொண்டிருக்கிறது , ஜோ ஒரு கிளர்ச்சிகாரனாக சித்தரிக்க படுகிறான் அவனது சாதனை அங்கு அங்கீகரிக்க பட வில்லை ,ஆனால் அது ஒரு விதி மீறலாகவும், அந்த இனத்திற்கு வந்த அவமானமாகவும் சித்தரிக்க படுகிறது ,ஜோ சமூகத்திலிருந்து தள்ளி வைக்க படுகிறான் .,ஜோ தனது கருத்தை சொல்கிறான் ,வாழ்க்கைக்கு மேலான அர்த்தம் இருக்கிறது,நாம் இப்பொழுது வாழும் வாழ்க்கையை விட மேலாக வாழலாம் ,ஆனால் செவி மடுக்கவில்லை .


அவனது தனிமையை விட சமூகத்தின் மூடதனம் அவனை அதிகமாக வாட்டியது .அவன் வேறு ஒரு சீ கல் உலகத்திற்கு அழைத்து செல்ல படுகிறான் .,அது சொர்க்கம், இவனை போலவே வெவ்வேறு கட்டத்தில் முயன்று வெகு சில சீ கல் அங்கு வந்து உள்ளன , கற்க இன்னும் நெறையா இருக்கிறது என்று உணர்கிறான் ,பழைய உலகை மறந்துவிட்டான் ,புதிய கேள்விகள் -விவாதங்கள் புரிதல்கள் ,தனது பறக்கும் திறமை உச்ச கட்ட நேர்த்தியை நோக்கி ஜோ வந்து கொண்டிருந்தான் , அவன் இந்த உலகத்திலிருந்து இதை விட மேலான உலகத்திற்கு செல்ல அவனுக்கு வாய்ப்பு வரும் காலம் நெருங்கியது ,ஆனால் ஜோ மீண்டும் அவனது கூட்டத்திற்கு திரும்ப விரும்பினான், தன்னை போல் உயரே பறக்க துடிக்கும் இளம் சீ கல்களை பயிற்றுவிக்க எண்ணினான் ,
ப்லேட்சேர் -தன்னை போல் உயரே பறக்க துடிக்கும் ஒரு இளம் கல் ,ஜோ தன்னையே காண்கிறான் ,அவனும் தனது கூட்டத்தால் வெறுக்க பட்டவன் ,அவனை பயிற்றுவிக்கிறான் .மேலும் பலர் இணைகிறார்கள்,ஜோ வின் சீடர்கள் அதிகமாகிறார்கள் ,சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர்கள் மீண்டும் சமூகத்திற்கு திரும்ப கூடாது ,ஆனால் ஜோ மற்றும் சீடர்கள் சமூகத்திற்கு திரும்புகிறார்கள் ,இவர்களின் செயலை கண்டு ,சமூக பெரியவர்கள் கொதிப்படைகிறார்கள் ,ஆனால் இவர்களின் திறமை கண்டு ஒரு கூட்டம் வாயை பிளக்கிறது ,இரவில் இவர்களை சுற்றி வட்டம் கூடுகிறது .ஜோ இறுதியில் இறை தூதுவனாக சித்தரிக்க படுகிறான்.சமூகம் ப்லேட்சரை சாத்தான் என்று சாடுகிறது ,வெறுப்பை உமிழ்கிறது .தங்களை வெறுத்து ஒதுக்கிய சமூகத்தை ப்லேட்சேர் வெறுக்கிறான், ஆனால் அவன் பார்வை மாறுகிறது,எல்லா சீ கல் இடமும் உள்ள மேன்மையை காண்கிறான்,நேசிக்கிறான் ,புதிய உச்சத்தை அடைகிறான் .

அதி அற்புதமான இந்த சிறிய நாவல் எனக்கு கொடுத்த உணர்வுகள் அபாரமானது ,எனக்கே இறக்கை முளைத்தது போல் இருந்தது ,எளிமையான நடை, அருமையான குறியீடுகள் மூலம் வாழ்க்கை பார்வையை உன்னதமாக சொல்லும் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது ,மற்றும் என்னை அதிகம் பாதித்தது என்றும் சொல்லலாம் .இதனுள் ப்லேட்சேர் - ஜோ நடத்தும் விவாதங்கள் ,ஜோ தன்னை விட மூத்த சியாங் கல் இடம் நடத்தும் விவாதம் ,சுலைவான் மற்றும் ஜோ விவாதம் என்று பல அற்புதமான,எளிமையான விவாதங்கள் கதை முழுவதிலும் உள்ளது .இந்த கதையை நாம் பல தளங்களில்,பல பொருள்கள் கொண்டு விவாதிக்க முடியும் அதுவே இதன் வெற்றி .இதை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன் .நிச்சயம் முயல்வேன் .நம் அகத்தை விரிக்கும் அனுபவம் இதில் கிடைக்கிறது .நெகிழ்ச்சியான இந்த கதையை அனைவரும் வாசிக்க வேண்டும் ..

எனக்கு இந்த கதையில் மிகவும் பிடித்த வரி.“The only true law is that which leads to freedom,” Jonathan said.“There is no other.”
குறிப்பு:மக்கள் பயன்பெறும் வண்ணம் இதை இலவச கணினி புத்தகமாக வெளியிட்டுள்ளனர் அதன் சுட்டி
http://img1.liveinternet.ru/images/attach/b/2/3599/3599086_richard_bach__jonathan_livingston_seagull.pdf
அத்துடன் இது திரைப்படமாகவும் வெளி வந்துள்ளது (நானும் கண்டததில்லை!!)
இந்த அற்புதமான இசையை தொடுத்து எடுக்க பட்ட இந்த காணொளியை காணுங்கள்

Wednesday, December 1, 2010

பெற்றால் மட்டும் போதுமா?-1

அண்மையில் பதிவர் கலகலப்ரியா ,தேகா ,மற்றும் பாலா அவர்கள் அவர்களுடைய பதிவுகளில் பிள்ளை வளர்ப்பு பற்றியும் ,அதன் அம்சங்களை பற்றியும் நல்ல விவாதங்களை தொடங்கி வைத்தனர் .அவர்களின் கருத்துக்கள் ,மற்றும் நவீன காலக்கட்டத்தில் இவ்வகை சிந்தனை போக்குகள் மிகவும் முக்கியமானவை .என் கருத்துக்களும் ,நான் சேகரித்த கருத்துக்களையும்,அனுபவங்களையும் இணைத்து ஒரு பதிவாக இடலாம் என்று இந்த முயற்ச்சியை தொடங்குகிறேன் .ஆகினும் கூட இது இன்னொரு தொடராக வருவது போல் நான் உணர்கிறேன் .இத்தகைய விவாதங்கள் சில உதாரணங்கள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம் .



அடிப்படையாக சில உளவியல் விஷயங்களின் தெளிவு நமக்கு முக்கியம்,அதிலிருந்து தொடங்குவோம் ." போர்ன் டு வின் " (born to win by muriel james and dorothy) எனும் தங்களது உளவியல் புத்தகத்தில் உளவியலாளர்கள் சில அற்புதமான அடிப்படைகளை நமக்கு அளிக்கின்றனர் ,அதை தொகுத்து நமக்கு நம்மை பற்றிய புரிதல் ஏற்ப்படுத்திக்கொள்ள இந்த சிறு முயற்ச்சி .நான் இத்துறை வல்லுநர் அல்ல என்றாலும் எனக்கு தெரிந்ததை கூற முயல்கிறேன்.
மரபு வழி குணங்களும் ,புறசூழலும் ஒரு தனிமனிதனின் குணாதிசயங்களையும் ,ஒரு சூழலுக்கு நாம் ஆற்றும் எதிர்வினையையும் முடிவு செய்வதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன,ஆயினும் கூட மனிதர்கள் இவைகளின் கருணையில் காலம் தள்ள அவசியம் இல்லை ,இதை நாம் நிச்சயம் நமக்கேற்ற வடிவில் மாற்றலாம் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள் .
மரபணு வழியாக வரும் குணங்களை பொறுத்த மட்டில் ,முக்கியமாக நாம் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் ,மரபணுக்கள் அப்படியே தந்தை ,தாய்களின் நோய்களை பிள்ளைகளுக்கு பரப்புவது இல்லை ,அந்த நோய் நம்மை எளிதில் ஆட்க்கொள்ளக்கூடிய தன்மையை (susceptiblity)மட்டுமே நமக்கு அளிக்கிறது,இது குணாதிசயங்கள் மற்றும் நடத்தைக்கும் கூட பொருந்தும் .அப்பாவிற்கு சர்க்கரை நோய் இருந்தால் மகனுக்கு அந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் ,அதை அறிந்து நம் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளை நாம் சீர்ப்படுத்திக்கொண்டாலே போதும் ,அந்நோயை தவிர்க்கலாம் .
மனிதர்களின் ஆளுமை மொத்தமாக மூன்று தளங்களில் செயல்படுகிறது என்று கூறலாம் .
பெற்றோர்கள் தளம்
குழந்தை தளம்
சராசரி மானுட தளம் (வளர்ந்த மனிதன் தளம்)
நாம் ஒவ்வொருவரும் இந்த மூன்று தளங்களில் மாறி மாறி பயணிக்கிறோம் ,ஒரு சில தளங்களில் நாம் அதிகமாகவும் வெளிப்படுகிறோம் .
இந்த தளங்களை புரிந்து கொள்ள ஒரு உதாரண சூழல் .
ஒரு மழை கால மாலை பொழுதில் தள்ளு வண்டியில் ஐஸ் கிரீம் உங்களை நோக்கி வருகிறது என்று நினைத்துகொள்ளுங்கள்
பெற்றோர் தளத்தின் சிந்தனை - இதை சாப்பிட கூடாது , சாபிட்டால் ஜுரம் வந்துடும்
குழந்தை - சூப்பர் !!! சாப்பிடனும் !!
சராசரி நிலை - இந்த மழை பொழுதில் நாம் சாப்பிட்டால் நாளை அலுவலகம் செல்வது கடினம் ,வேறு ஒரு முறை பார்க்கலாம் .
நம் வாழ்க்கையை முடிவு செய்யும் பலம் ஓரளவுக்கு நமக்கே இருக்கிறது என்பது உண்மை .ஆனாலும் நாம் மட்டுமே முடிவு செய்யும் வரம் எல்லா சமயங்களிலும் அமைவதில்லை என்பதும் உண்மை .

இந்த மூன்று தளங்களில் நாம் மாறி மாறி பயணிப்பது நமக்கு புரியும் .
பெற்றோர்கள் தளம்- இது நம் பெற்றோர்களிடமிருந்து நாம் பெற்று கொண்டது ,கண்டிப்பு தன்மை ,ஊக்க தன்மை ,முன் முடிவுகள் ,எச்சரிக்கை ,எதிலுமே ஒரு நம்பகமின்மை ஆகியவை இந்த தளத்தில் முக்கியமானது .நமக்குள் இருக்கும் ஒரு பெற்றோர் நமக்குள் இருக்கும் குழந்தையை போஷித்து பாதுகாக்கும் அமைப்பு இது .

குழந்தை தளம் -இது நாம் உணர்வுகள் சார்ந்து இயங்கும் தளம் ,இயற்கையான உந்துதல்கள் இதை வழி நடத்தி செல்கின்றன .சிரித்தல், மகிழ்தல் ,அடம் பிடித்தல் ,பிடிவாதம் இதெல்லாம் இந்த தளத்தின் வெளிப்பாடு .

சராசரி மானுட தளம் -ஒரு முதிர்ச்சியான மனம் கொண்ட ,சிந்திக்கும் தளம் , அறிவு ,அவதானிப்பு,சூழல் ,வாய்ப்புகள் என்று தர்க்கத்தின் அடிப்படையில் ஒரு சூழலை எடை போடும் நிலை .பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வு , பகுத்தறிவு ஆகியவை இந்த தளத்தின் செயல்பாடே .

இந்த கட்டமைப்புகள் நம்முள் எப்பொழுது ?எப்படி வருகின்றன ?
முதலில் குழந்தை தளம் ,இந்த தள செயல்பாடுகள் தான் நமக்கு கைகூடும் .உணர்வுகளின் வாயிலாக ,தனது தேவைகள் வாயிலாக இது நடக்கிறது ,பின்னர் ஒன்றரை வயதினிலே பெற்றோர் தளம் உருவாகிவிடுகிறது ! இது பெற்றோர்களை (நடத்தையை)அவதானிப்பது மூலமும், தண்டனை -பரிசு (punish-reward) நடத்தைகள் மூலமும் ஒரு தளத்தை உருவாக்குகிறது ,பிற்பாடு கேள்விகள் மூலம் புரிதல் எட்ட முயலும் பொழுது மானுட அறிவு நிலையை எட்டுகிறது.முக்கியமான இன்னொரு விஷயம் ,இந்த தளங்களுக்கு வயது தடை இல்லை ,குழந்தைகள் பெரிய மனிதர்கள் போலவும், பெற்றோர்கள் போலவும் நடக்கும் ,பெரியவர்கள் -குழந்தை போலவும் ,பெற்றோர்கள் போலவும் நடப்பார்கள் .அதை தான் படங்கள் குறிக்கின்றன

ஒரு குழந்தை தன்னை பற்றிய ஒரு ஆழமான அடிப்படை புரிதலை எப்பொழுது எட்டுகிறது தெரியுமா ?

வளரும் ....
குறிப்பு -நான் உளவியலாளர் அல்ல .எனது துறை உளவியல் அல்ல .ஆயினும் கூட அந்த துறையில் அடிப்படை அறிவு கொஞ்சம் உண்டு ,மேலும் ஆர்வம் உண்டு அவ்வளவே.
.
பட உதவி-கூகிள்

Sunday, November 28, 2010

காந்தியும் நானும் -சிறுகதை

காந்தி -இந்தியாவில் கடந்த நூற்றாண்டில் அதிகபச்ச முறை உச்சரிக்கப்பட்ட பெயர் இதுவாக தான் இருக்கும் .(போகும் போக்கை பார்த்தால் வரும் நூற்றாண்டில் கூட அதுவே தொடரும் போல இருக்கு !).காந்தி அண்ணலுக்கும் எனக்குமான அறிமுகம் நம் எல்லாரை போல நம் பாட புத்தகத்தின் வாயிலாக எனக்கும் நேர்ந்தது .ரூபாய் நோட்டுகளில் சிரிக்கும் அந்த போக்கை வாய் தாத்தா யாரென்று தெரியாத அந்த வயது ,காந்தியின் முதல் அறிமுகம்.முதல் பரிச்சயம் அநேகமாக ஒன்னாவது படிக்கும் போது இருக்கலாம் ,இந்தியாவின் தேச தந்தை என்று போட்டு வெள்ளுடை அணிந்த வட்ட கண்ணாடி போட்ட அந்த காந்தி படத்தை எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது .ஏதோ ஒரு வகுப்பில் ஒரு பாடமாக காந்தியின் வாழ்க்கை குறிப்பு இடம் பெற்றது ,பின்பு வரலாறு கற்கும் போது அவர் சுதந்திரத்துக்கு போராடினார் என்றும் ,வெள்ளையனே வெளியேறு என்று கூக்குரலிட்டார் என்றும் ,அவரது மனைவி பெயர் அம்மா பெயர் ஆகியவை பரிட்சையில் கேட்கப்படும் முக்கிய ஓர் வார்த்தை வினாக்கள் என்பதால் அதை எழுதி வைத்து மனப்பாடம் செய்தது நினைவுக்கு வந்தது .



எனது அம்மா வழி தாத்தா தொண்ணூறு வயது வாழ்ந்து மறைந்தவர் ,நான் பதினொன்றாவது படிக்கும் பொது அவர் மறைந்தார் ,அவர் அவருடைய காலத்தில் தன் அளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றவர் ,அவரது கடைசி காலங்கள் என் வீட்டில் தான் கழிந்தது ,பத்தாவது படிக்கும் போது
என் தந்தையின் இழப்பால் வாடி இருந்த பொழுது அவரும் பாட்டியும் அவர்கள் ஊரிலிருந்து காலி செய்து இங்கு எங்களுக்காக வந்தனர் .நான் பத்தாவது முடித்துவிட்டு இருந்த அந்த நேரம் ,அப்பொழுதும் அவருக்கு நல்ல உடல் நிலையும் ,நினைவு கூர்மையும் இருந்தது ,அவரிடம் சென்று சுதந்திர கதைகளை சொல்ல சொல்லி கேட்பேன் .அவர் நேதாஜியின் தீவிர பக்தர் ,அவர் எப்படி இந்திய தேசிய ராணுவத்திற்கு போக இருந்தார் என்றும் அதை என் பாட்டி எப்படி திட்டம் போட்டு கவுத்தார் என்றும் அவரது அன்றைய ஆற்றாமையை இன்று வரை வருத்தத்துடன் சொல்லுவார் .

காந்தியை ரயிலிருந்து பிடித்து தள்ளிய அந்த பரங்கியர்களை தன் கையால் கழுத்தை நெரித்து கொள்ள தான் எத்தனை பிரயாசை பட்டேன் என்று அவர் சொல்லும் போது எனக்கு ஒரு மாறி சில்லிடும் .
அப்பொழுது எனக்கு நேதாஜியை மிகவும் பிடித்தது .காந்தி அண்ணலின் மேல் ஒரு வித மரியாதை இருந்தது அவளவு தான் .எனக்கு என் பள்ளியில் வைத்த பட்டை பெயர் காந்தி தாத்தா ,நான் போட்டிருந்த முட்டை கார்பன் கண்ணாடி ப்ரேம் எனக்கு வாங்கி தந்த பெயர் இது .மேலும் என் நண்பர்களுக்குள் சில சிறு சிறு தகராறுகளை பேச்சுவார்த்தை மூலம் தவிர்க்க யத்தனித்தேன் ,எனக்கு இந்த பட்டை பெயர் பிடித்தது .
பள்ளி முடிக்கும் தருவாயில் ஒரு வினாடி வினா போட்டியில் பங்குக்கொண்டு பரிசு வாங்கியது நினைவில் உள்ளது ,அதற்க்கு எனக்கு காந்தி அடிகளின் சுய சரிதை எனக்கு பரிசளிக்க பட்டது ,அதில் காந்தி அண்ணல் ஒரு கம்பை வைத்துக்கொண்டு நடப்பார் அவரது கம்பை ஒரு குழந்தை இழுத்து கொண்டு போகும் .அதுவே என் நினைவில் நிற்கும் காந்தியாரின் முதல் நிழல் படம் .



வருடா வருடம் வரும் காந்தி ஜெயந்தி விடுமுறை ,மற்ற எல்லா விடுமுறை நாட்களை போல் சூரியனின் நேரடி கண்காணிப்பில் தான் போகும் ,மணிக்கணக்கில் கிரிக்கெட் விளையாடி ,சோர்ந்து அம்மாவிடம் திட்டு வாங்குவது தான் மிச்சம் .காந்தி இறந்த அன்று பள்ளி விடுமுறை கிடையாது ,நியாய படி அன்று தான் முக்கியமாக விடுமுறை விட வேண்டும் என்று கிட்டா சொல்லுவான் "எங்க வீட்ல தங்கச்சி பாப்பா பொறந்தப்போ நான் ஸ்கூலுக்கு வந்தேன் ,ஆனா தாத்தா சாமிக்கிட்ட போனப்ப நான் லீவு ,அப்ப காந்தி தாத்தா சாமி கிட்ட போனதுக்கு லீவு ஏன் விடல ?"என்று அவன் மூணாவது படிக்கையில் கேட்டது நினைவுக்கு வந்தது .

வருடாவருடம் குழந்தைகள் தினத்திற்கு நடக்கும் மாறுவேட போட்டியில் எப்படியும் மூன்று காந்திகலாவது ஒரு வகுப்புலிருந்து வருவார்கள் ,தொடர்ந்து ஐந்து வருடம் நான் காந்தி வேடம் தான் போட்டேன் .இதுவும் எனது காந்தி தாத்தா பட்டை பெயர் நிலைக்க காரணம். ஒரு குச்சி ,ஒரு கண்ணாடி, ஒரு வெள்ளை வேட்டி,சமீபத்தில் சோலையாண்டவர் கோயிலுக்கு முடி நேர்ந்து விட்டிருந்தால் அவன் இந்த வருடம் நிச்சயம் காந்தி தான் ,எல்லாரும் திருவள்ளுவர் ,முருகன்,சிவன்,விவேகானந்தர் ,பாரதியார்,கட்டபொம்மன் ,நேதாஜி என்று எக்கச்சக்க துணிமணிகளை சுமந்து ,ஒட்டு தாடி மீசை எல்லாம் உறுத்தி விழி பிதுங்கி மேடையில் ஏறி உளறி ,அலறி அழுதது மறக்கவே முடியாது ,காந்தி வேடத்திற்கு செலவே கிடையாது ,காந்தி மகானின் எளிமையோ இல்லை அவர் மேல் உள்ள பற்றோ இல்லை குடும்பத்தின் வருவாயோ எதுவென்று தெரியவில்லை ஒவ்வொரு வருடமும் போட்டியில் காந்தியின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனது ,சலூன்கடைக்காரின் மகன் என்பதாலோ என்னவோ எனக்கு வருடா வருடம் காந்தி வேஷம் தான் ,அப்பாவே மொட்டையும் அடித்து கூட்டி வந்து விடுவார் "அப்பா எப்ப பாத்தாலும் காந்தி தானா? ஒரு வருஷமாவது முருகன்,அம்மன் வேஷம் போடக்கூடாதா "என்று நான் கெஞ்சி அழுவதை நண்பர்கள் கேலி செய்தது உண்டு ,சக்தி ,முருகன் எல்லாம் பணக்கார பிள்ளைகள் போடும் வேஷம் அதில் நெறைய நகைகள் போடுவார்கள் ,அது எங்களுக்கு கனவு ,நான் ஒரு முறை அடம் பிடித்ததால் எனக்கு ஜடா முடி, விக் ,புலித்தோல் ,ரப்பர் பாம்பு எல்லாம் கொடுத்து கையில் சூலம் கொடுத்து சிவனாக்கி என்னை ஆடவைத்தது நினைவுக்கு வந்தது ,அந்த பாம்பு நான் போட்ட குதிஆட்டதில் கழுத்திலிருந்து கீழே வழுக்கி விழுந்து எல்லாரும் சிரித்தது ,பின்பு நான் அழுதது என்று பல நினைவுகள்
பாரதிக்குகூட கோட் .தலைப்பாகை தேவை ,வள்ளுவனுக்கு கூட ஒட்டு தாடி தேவை,ஆனால் காந்திக்கு எதுவுமே தேவை இல்லை மழுங்கிய மொட்டையும் , ஓட்டை கண்ணாடியும் ஒரு குச்சியும் போதும்.காந்தியின் எளிமை போட்டி நடுவர்களுக்கு பிடிக்கவில்லை போலும் ,அல்லது காந்தி அவர்களுக்கு சலிப்பை தந்துவிட்டாரோ என்னவோ ஒரு முறை கூட காந்தி வேடம் போட்ட யாருக்கும் பரிசு கிட்டியது கிடையாது



காந்தியின் நினைவு தினம் அன்று காலை பத்து மணிக்கு ஆசிரியர் எல்லாரையும் எழுந்து நிற்க சொல்லுவார் ,இரண்டு நிமிடம் மெளனமாக நிற்க வேண்டும் ,இடக்கையை கட்டி வலக்கை ஆட்காட்டி விரலால் உதடுகள் மேல் வைத்து சத்தம் போடாமால் கண்ணை இறுக மூடி நிற்க வேண்டும் ,அந்த நேரம் பார்த்து 'டமார் ' சுந்தரமோ இல்லை ரவியோ ஒரு 'பாம்' போடுவார்கள் ,அப்படி போடவில்லை என்றால் வாயாலாவது ரவி அந்த சப்தத்தை எழுப்புவான் ,அடக்க முடியாமல் வாயை பொத்தி கண்களால் சிரிப்போம் , யாரும் அத்தகைய நெருக்கடியான தருணத்தில் கண் திறக்க மாட்டோம் ,ஏனெனில் எல்லாரும் சிரிப்பை அடக்கி கொண்டிருக்கும் போது அதை நாம் பார்த்தால் நாம் சிரிப்பை அடக்க முடியாமல் எக்கு தப்பாக சிரித்து தொலைவோம் ,கண் கொத்தி பாம்பாக பார்த்து கொண்டிருக்கும் செல்லம்மா டீச்சர் ,திட்டி வகுப்புக்கு வெளியே முட்டி போட வைப்பார் ,அந்த பாக்கியம் எனக்கு ஓரிரு முறை வாய்த்து இருக்கிறது .


அடுத்ததாக காந்தி என்றால் எனக்கு நினைவுக்கு வருவது அவரை சார்ந்த கிண்டல்கள்,கேலிகள், பிற்காலத்தில் அதுவே அவரை பற்றிய சில கீழான நகைச்சுவை துணுக்குகள் என்று பரிணமித்தது ,ஏழாவது படிக்கும் பொழுது சந்தத்தோடு இனைந்து புது புது வரிகள் எங்களுக்கு அறிமுகம் ஆனது ,காந்தியை பற்றிய அத்தகைய முதல் பகடி பாடல் ,"காந்தி வந்தாராம் ,பூந்தி திண்ணாராம்,வாந்தி எடுத்தாராம் ,சாந்தி ஆனாராம் ," என்று கூட்டமாக எல்லாரும் ஒரே ஸ்ருதியில் பாடி களித்தது ,பதினொன்றாவது ,பன்னிரெண்டாவது படிக்கும் சமயத்தில் அவர் பெயரை பயன் படுத்தி பல கீழான நகைச்சுவை துணுக்குகளை நண்பர்கள் சொல்லுவார்கள் ,எனக்கு அது ஒரு மாதிரி உவர்ப்பை தந்தது ,தினம் இது தொடர்ந்தது ,ஒரு நாள் எனக்கு கோபம் வந்து இதற்காக நண்பர்களுடன் சண்டைக்கு சென்றேன் ,"அவரு என்ன உன்ன பெத்த அப்பா வா ? என் கெடந்து துள்ளுற ?" என்று அவர்கள் கேட்டது ,பின்பு சமாதன உடன்படிக்கை எட்டினோம், நான் இருக்கும் பொழுதில் அத்தகைய பேச்சுகள் காந்தியை பற்றி பேசக்கூடாது என்று .அது இறுதி வரை நீடித்தது .நான் என்னையே காந்தியாக உணர்ந்த தருணங்கள் அது ,அவர்களின் காந்தியை பற்றிய ஆபாச,வசை மொழிகள் என்னையே திட்டுவது போல் உணர்ந்தேன் .

என் குடும்ப சூழல் ,நான் எனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு .கல்லூரியை மறந்து சென்னையில் ஒரு தொழிற்சாலையில் வேலை .புதிய நண்பர்கள், வயதின் வலு ,கையில் காசு ,வாழ்க்கையின் வேறொரு பக்கம் நான் பயணிக்க துணிந்தேன் .அங்கே இருக்கும் தொழிற்சங்கம் ,தோழர்கள் என்று புதிய உலகம் பிறந்தது ,நண்பர்கள் கூடினாலே தவறாமல் தாக்க படும் ஒரு நபர் காந்தியாக தான் இருப்பார் ,எனக்கு அது பெரும் அதிர்ச்சியை தந்தது ,நம் இனத்துக்கு காந்தி துரோகம் இழைத்தார் , என் மதத்திற்கு அவர் துரோகம் இழைத்தார் ,என்று பலர் என் காதில் ஓதினார்கள் ,அவர் ஒரு வியாபாரி ,தந்திரமானவர் ,சுயநலவாதி,அவரது நடத்தை சரி இல்லை என்று பல பல குற்றசாட்டுகள்.அவர் பாப்பான் என்றும் பனியா என்றும் வசைகள் நீண்டது ,தன் வீட்டு குழாயில் தண்ணீர் வரவில்லை என்றாலும் கூட அதற்க்கு காந்தி தான் காரணம் என்று வசை மொழிகள் தினம் என் செவிகளில் விழுந்தது .

ஒரே மனிதர் ,எப்படி இப்படி எல்லா குழுவினராலும் வெறுக்கப்படுகிறார் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது ,மத அடிப்படைவாதிகளால் ,நாத்திகவாதிகளால் ,முதலாலீகளால் ,தொழிலாளர்களால் என்று ,இவர்களின் இத்தனை வெறுப்பு பிராச்சாரம் எனக்கு காந்தியை இன்னும் நெருக்கமாகியது ,ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் முன் சிக்கிய கலைஞன் எனக்கு முன் தெரிந்தான் ,அவனிடம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு ,எல்லாரையும் திருப்தி படுத்த முயன்று அம்முயர்ச்சியில் தோல்வி அடைந்த சமரசமற்ற நேர்மையான லட்சியவாதியாக என் கண்ணுக்கு தெரிந்தார் காந்தி .சிறுபான்மையினரும் ,பெரும்பான்மையினரும் காந்தி ஒன்று சேர்த்தார் ,இருவருமே தங்களுக்கு காந்தி எதிராக செயல் பட்டார் என்று எண்ணும் தளத்தில் .
காந்தி மகாத்மாவா ? எனக்கு தெரியாது ,அது எனக்கு தேவையும் இல்லை .ஆனால் அவர் நிறை குறைகளை கொண்ட, அதை பூசி மெழுகாத ,உண்மையின் வடிவம் காந்தி ,தன் வாழ்க்கையை நமக்கு முன் விரித்து காட்டிய ஒரு மனிதன் காந்தி ,அந்த துணிவு யாருக்கு வரும் ?

வருடங்கள் ஓடிவிட்டன ,என் மகளை எனது பெட்டியில் இருக்கும் அந்த சுய சரிதை புத்தகத்தை பத்து வருடங்களுக்கு முன் தேடி எடுத்து தர சொன்னேன் ,அவளும் கொடுத்தால் ,அது மட்டுமே எனக்கு பொழுது போக்கு ,உடைந்திருந்த என்னை நான் கட்டி எழுப்பினேன் ,மகாத்மா ,தேச பிதா எனும் பூச்சுகளை களைந்து ,காந்தி எனும் அந்த பிடிவாதக்கார லட்சியவாதியை நான் தேடி அடைந்தேன் .நாளை மறுநாள் எனக்கு "இன்றைய பிரச்சனைகளும் அதன் காந்தீய தீர்வும் " எனும் எனது ஆய்வு கட்டுரையை ஏற்று கொண்டு எனக்கு முனைவர் பட்டம் வழங்குகிறது அழகப்பா பல்கலைகழகம் .
நான் காந்தியவாதியா ?
இன்றோடு எனது பதினான்கு வருட ஆயுள் தண்டனை முடிவடைகிறது .எனக்குள் இருக்கும் காந்தியை நான் கண்டுக்கொள்ள இந்த பதினான்கு வருடம் எனக்கு தேவை பட்டது .விடிந்தால் விடுதலை ,
இல்லை ,நான் காந்தியவாதி இல்லை,நான் ஒரு கொலைகாரன் ,தன் கண் முன்னாள் தனது ஐந்து வயது பெண் குழந்தை சீரழியும் கொடுமையை காந்தி கண்டிருக்க மாட்டார் .


குறிப்பு-எனக்குள் இருக்கும் காந்தியை நான் கண்டடைய (முயன்றுகொண்டிருக்கும் !!)எனக்கும் பெரிதும் உதவிய "இன்றைய காந்தி " எனும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் படைப்புக்கு வந்தனம் .
பட உதவி-கூகிள்
.

Friday, November 26, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -9-சிகிச்சை

நோய் என்பது சமநிலை குலைவு என்றால் அந்த சமநிலை குலைவை சீர் செய்ய நாம் எடுக்கும் அனைத்து முயர்ச்சிகளுமே சிகிச்சை எனலாம் .ஆயுர்வேதத்தின் அடிப்படை சித்தாந்தங்கலான முக்குற்ற கோட்பாடு ,ஐம் பரு பொருட்கள் கோட்பாடு ஆகியவை முக்கியமானவை ,அதை பற்றி மற்றொரு சமயம் விரிவாக அலசலாம் .

நவீன மருத்துவம் சிகிச்சையை மூன்று தொகுதிகளாக பிரிக்கிறது .
1.முதற்கட்ட சிகிச்சை (primary intervention)
2 .இரண்டாம் கட்ட சிகிச்சை (secondary intervention)
3.சீரமைப்பு ,மறுவாழ்வு சிகிச்சை (rehabilitative measures)

இதை புரிந்த்க்கொள்ள சிறிய உதாரணம் , உடலை ஒரு நீர் தேக்கத்தோடு நாம் ஒப்பிடுவோம் .
முதற்கட்டமாக -நீர் தேக்கம் வலுவாக இருக்க வேண்டும் ,கசிவு ஏற்படக்கூடாது ,பெருவெள்ளங்களை தாங்கும் வல்லமை அதற்க்கு வேண்டும் .
பேராபத்துகளை தடுக்கும் முயற்ச்சி -வருமுன் காப்போம் (preventive measure) இதை தான் முதற்கட்ட சிகிச்சை என்று சொல்கிறோம் , தடுப்பூசி ,சுகாதாரம், உணவு முறைகள்,உடல் பயிற்சி ,தேர்ந்த வாழ்கை முறை இவை எல்லாம் இதில் அடங்கும் .
சரி அணை உடைந்துவிட்டது -அதி சரி செய்ய நாம் முயல்கிறோம் -இது இரண்டாம் கட்ட சிகிச்சை ,இப்பொழுது நம் முன் ஒரு பிரச்சனை ,அதை நாம் சரி செய்ய முயல்கிறோம் ,அதற்கேற்ற கவனத்தை நாம் அதற்க்கு அளிக்கிறோம் ,மருந்துகள், அறுவை சிகிச்சை எல்லாம் இதில் தான் அடங்கும் .இதில் இரு முடிவுகள் சாத்தியம் ,நமது சிகிச்சையால் அவர் நலம் பெறலாம் அல்லது அது பலனளிக்காமல் தவிக்கலாம் .
உடைந்த அணையை நம்மால் சரி செய்ய இயலவில்லை ,அதன் பாதிப்பை நாம் குறைக்க முயல்கிறோம் -இதுவே இறுதியான முயற்ச்சி ,நோய் நம்மை தாக்கி நிலை குலைய வைத்துவிட்டது ,ஆகினும் கூட நமக்கு நம் அன்றாட தேவைகள் இருக்கிறது ,அதை பிறர் உதவி இன்றி இறுதி வரை நாம் நம் வாழ்கையை வாழ நமக்கு உதவுவது , நமது இழப்புகளுக்கு ஏற்ற மாற்று முறைகளை பயன்ப்படுத்துவது .இரண்டாம் கட்ட சிகிச்சை தேறவில்லை என்றால் ,அவருக்கு இரு சாத்தியங்கள் ,ஒன்று நோயோடு நைந்து வாழ்வது அல்லது இறுதியாக உயிர் துறப்பது .இறுதி வரை அவரது வாழும் தரத்தை நாம் உயர்த்த முயன்றுக்கொண்டே இருக்க வேண்டும் .காலுடைந்தவருக்கு கம்பு போல இந்த முறைகள் மனிதனுக்கு உதவ வேண்டும் .
இந்த சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு மருத்துவத்தின் முக்கிய நோக்கு - வாழ்க்கையை ஜவ்வு மாறி இழுத்து வெறும் வருடங்களை சேர்ப்பது அல்ல ,இருக்கும் காலத்தை மேலும் பயனுள்ளதாக சுய சார்புடன் வாழ செய்வதே ஆகும் ,ஆங்கிலத்தில் இதை இப்படி கூறுகிறார்கள்
"the aim of rehabilitaion is not to add years to life,but to add life to years" (இது எனக்கு பிடித்த மிக சிறந்த வாக்கியம் ஆகும் !)

மருத்துவத்தின் நோக்கம் மரணமில்லா மனிதனை உருவாக்குவது அல்ல,அவனுக்கு இயல்பான மற்றும் அமைதியான ஒரு மரணத்தை ஏற்றுக்கொள்ள செய்வதே ஆகும் .
ஆயுர்வேதத்தின் நோக்கம் என்ன என்று சரகர் ஒரு கேள்வி எழுப்புகிறார்
அப்பொழுது அதற்க்கு ஆத்ரேயர் இவ்வாறு விடை அளிக்கிறார் ஆரோகியமானவனுக்குஅந்த ஆரோகியத்தை நீடிக்க செய்வது ,நோயாளிக்கு அந்த பிணியை போக்குவது ,இது இரண்டும் ஆயுர்வேதத்தின் நோக்கம் .இது கிட்ட தட்ட நவீன மருத்துவத்தின் கோட்ப்பாடுகளை ஒத்ததே .

நோய்களை சிகிச்சையை பொருட்டு இரண்டாக பிரிக்கிறது ஆயுர்வேதம்
சாத்யம் மற்றும் அஸாத்யம் (குறிப்பு -இன்றைய டி வீ மருத்துவர்கள் போல் டவுன் சின்றோம் உட்பட எல்லா நோயையும் ஆயுர்வேதம் முற்றிலும் குணப்படுத்தும் என்று அது கூறுவதில்லை )

சாத்யம் -மீண்டும் இரண்டாக பிரிக்கிறது ,சுசாத்யம்-எளிதாக குணப்படுத்தகூடியது ,க்ருச்ற சாத்யம் -அறுவை சிகிச்சை ,பஞ்ச கர்மா மூலம் குணப்படுத்துவது,சற்று கடினமானது ஆகினும் கூட குணப்படுத்த முடியும்
அஸாத்யம் -இதுவும் இரண்டு வகை , யாப்யம் - இவ்வகை நோய்கள் குணப்படுத்த முடியாது ஆகினும் கூட சில விதிமுறைகள் ,பத்தியம் கடைப்பிடித்தல் மூலம் நீண்ட நாள் வாழலாம் ,உதாரணம் -சர்க்கரை நோய் .
ஆணுபக்ரமம் -எதுவுமே செய்ய முடியாது ,உயிரை பறிப்பது நிச்சயம் .
எந்த வகை நோய்களாக இருந்தாலும் சிகிச்சை முக்கியம் என்கிறது ,ஆணுபக்ரமமாக இருந்தாலும் கூட, அவரது உயிர் பிரிதல் அவருக்கு வலியின்றி பிரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிறது ஆயுர்வேதம் .

முக்கியமாக இன்னொரு கருத்தை வைக்கிறது ,அசாத்ய நோய்கள் சாத்யமாவது மிக கடினம் ,ஆனால் ,சாத்ய நோய்கள் தவறான சிகிச்சையின் வாயிலாகவோ அல்லது கவனக்குறைவு காரணமாகவோ அசாத்யம் ஆகிவிடும் என்று எச்சரிக்கிறது
நோய்கள் அதன் பிரிவுகள் ,சிக்கிச்சை அதன் பிரிவுகள் என்று பல விஷயங்கள் உள்ளன ,வரும் பதிவுகளில் விரிவாக பார்க்கலாம் .

மேலும் தெரிந்துக்கொள்வோம் ....

குறிப்பு -உங்களுக்கு ஏதேனும் ஆலோசனை ,சந்தேகம் இருந்தால் அதை பின்னூட்டங்களில் தெரிய படுத்தலாம் ,அல்லது இந்த மின் அஞ்சலிலும் nalanda.aho@gmail.com தெரியப்படுத்தலாம் ,நேரம் கிடைக்கும் போது ஓரளவுக்கு நியாயமான ,நேர்மையான கேள்விகளுக்கு என் அறிவுக்கு எட்டிய வரை விடை சொல்ல முயல்கிறேன்.

Tuesday, November 23, 2010

அதிமானுடன்- sci-fi சிறுகதை




"வணக்கம் ,என்னை தெரிகிறதா ?,நான் உங்களுக்கு நல்லா பரிச்சயமானவங்க ,கொஞ்சம் யோசிங்க ,இன்னுமா தெரியல ,சரி என்ன பத்தி சொல்லுறேன் ,இப்பவாவது நினைவுக்கு வருதான்னு பாப்போம் ,என்னை எல்லா எடத்துலயும் பாக்கலாம் ,காலேல வாக்கிங் போகும் போது தெரு நாய்களுக்கு ரொட்டி துண்டு வீசிருக்கேன் ,குளத்துல மீன்களுக்கு பொறி போற்றுக்கேன், வீட்டுல எலிய உயிரோட பிடிச்சு வெளிய விட்ருக்கேன்,எல்லா அரசு அலுவலங்களிலும் என்னை பாக்கலாம் ஒரு சின்ன மஞ்ச பையோட ,ஒரு சாதரன சான்றிதழ்க்காக நடையா நடந்து தேஞ்சிருக்கேன் ,அதே அலுவலகத்துல அரசு பேருந்துல வந்து இறங்கி நடந்து அலுவலகுத்துல உக்காந்து எந்த கையூட்டும் வாங்காம கடைசி வரைக்கும் குமாஸ்தாவாகவே காலம் தள்ளும் என்னை,இந்த விசித்திர அரசு ஊழியனை உங்களுக்கு தெரியலையா ?ஒரு நயா பைசா கூட லஞ்சமாக கொடுக்காத / வாங்காத இந்த நியாயஸ்தனை நினைவில்லையா ? இன்னும் சொல்றேன் கேளுங்க ,கண்ணுக்கு முன்னாடி அக்கிரமம் நடக்கும், அத பார்த்து நீங்களாம் நாம தப்பிச்சோம்னு ,நமக்கென்ன வந்ததுன்னு சொல்லி வேலைய பாக்க போகும் போது,அதை கண்டு தூக்கமிழந்து ,அழுது புலம்பி ,உயிர் வாழும் இச்சயால் ஏதும் செய்ய இயலாத கையாலகத்தனத்தை கொண்ட ஒரு சாமான்யனுக்கு என்ன தெரியலாம் ,உங்களுக்கு எப்படி தெரியும் ?,அக்கிரமங்களை கண்டு அதை சொந்த விருப்பு வெறுப்பு ஏதும் இல்லாமல் அவர்களுக்காக ரோட்டில் வந்து குரல்கொடுக்கும் பொழுது போலீஸ் குடுக்குமே முதல் அடி அது எனக்கு தான் , ஆயிரம் ஆயிரம் கோடிகள் அனாயாசமாக அமுக்க படும் போது அதை படிச்சு மன வருத்த பட்டு கோர்ட்ல சொந்த செலவுல கேஸ் போட்டு அதிகார வர்கத்தின் எதிரியாகி ,சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளும் இந்த அம்மாஞ்சியை தெரியவில்லையா ?
ஒவ்வொரு தேர்தலின் போதும் மறக்காமல் ஒட்டு சாவடிக்கு சென்று ஒட்டு போடும் பொழுது ,என் வோட்டை யாரோ ஒரு மகான் எனக்காக போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சு நொந்து வீடு வந்து சேரும் இந்த சாமானியனை தெரியலையா ?ஐந்து ரூபாய்க்கு செலோடேப் வாங்கினாலும் ,ஐந்த லட்சத்திற்கு வைரங்கள் வாங்கினாலும் தவறாமல் பில் கேட்டு வாங்கும் இந்த அப்பாவியை தெரியவில்லையா ? வருடம் தவறாமல் வீட்டு வரி,சொத்து வரி,வருமான வரி என்று ஆர்வத்துடன் க்யூவில் நின்று கட்டி ,இந்த அராசங்கத்தில் நாமும் ஒரு பங்கு என்று எண்ணி அக மகிழும் அந்த அசடை உங்களுக்கு தெரியவில்லையா ?

ஹ்ம்ம் ,என்ன எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ? நான் என்ன டாட்டாவா,அம்பானியா ,இல்லை யாருக்காவது பினாமியா ?
என் கைய்ய ,கால ,வெட்டி பிச்சி ,கிட்ட தட்ட குழி தோண்டி பொதச்சு தானே நீங்க இந்த நெலமைக்கு வந்தீங்க ? ஆனா நான் இன்னும் சாகலை , இன்னும் உயிரோட தான் இருக்கேன் ,இன்னும் என் கிட்ட போராடுற வலிமை இருக்கு , நான் பொருத்து போறவன் ,ஆனா நீங்க என்ன ரொம்ப சீன்டிடீங்க ,எனக்கு இப்ப கோவம் ,பயங்கர கோபம் ,என் கோபம் ரொம்ப கொடூரமானது எல்லாரையும் அழிச்சிடும் ,மதுரைய எரிச்ச கண்ணகி கோபம் நினைவுல இருக்குல ? இது உங்களுக்கு நான் தர்ற கடைசி வாய்ப்பு ,உங்கள மாத்திக்க இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்குறேன் ,முடிஞ்சா பிழைச்சுக்குங்க,இத உங்ககிட்ட சொல்ல தான் வந்தேன் ,சொல்லிட்டேன் ,நான் வரேன் ...ஆங் ..என் பேரு என்னன்னு சொல்லலயே ..திருவள்ளுவர் எனக்கு ஒரு பேரு வெச்சுருக்காரு..
"மானுட அறம்"..

குப்பென்று வியர்த்து ,திடிக்கிட்டு எழுந்தார்,மணி காலை நான்கு , என்ன கனவு இது ,இதயம் படபடத்தது ,தலையை பிடித்து யாரோ ரோடு ரோலர் கீழ வைத்தது போல் ஒரு அழுத்தம் ,வலி ,சற்றே நிதானித்தார் ,தடுமாறி வேட்டியை சரி செய்துக்கொண்டு,விளக்கை போட்டு அமர்ந்தார் ,அந்த மங்கலான அருவமான உருவம் பளிச்சென்று ஒளிந்தது போல் இருந்தது.
முந்தைய நாள் இரவு பதினொரு மணி வரை அந்த வெளிநாட்டு தரகரிடம் பேசியது நினைவுக்கு வந்தது ,இந்த பெரிய டெண்டரை அந்த நிறுவனத்திற்கு சாதகமாக முடித்தால் போதும் , அதன் பங்கு இவருக்கு 50,000 கோடி கிடைக்கும் என்று அந்த பன்னாட்டு நிறுவனம் இவருக்கு உத்தரவாதம் அளித்தது .அதை வைத்து சிங்கப்பூர் அருகே ஒரு சிறிய தீவை விலை பேசியது நினைவுக்கு வந்தது .
சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு ,அலைபேசியில் தொடர்பு கொண்டார் ,அந்த விடிய காலை பொழுதில் இவரது அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார் அமைச்சர் அன்புராஜ
" என்னய்யா அன்பு ,என்ன தூங்கலையா ,டக்குனு போன எடுக்குற ?"
"இல்ல தலைவரே ,நல்லா தான் தூங்குனேன் ,ஒரு கெட்ட கனவு,அதான் டக்குனு எந்திருச்சு உக்காந்து இருந்தேன் ,மனசு சரி இல்ல தலைவரே "
"என்னய்யா உனக்கும் கனவா ? சரி சரி எனக்கும் ஒரு மோசமான கனவுயா நேத்திக்கு பேசுனோமே அந்த டீலிங்க பத்தி ,அதான் பதறி எந்திருச்சு உக்காந்து இருக்கேன் ,அது சரியா வரும்னு படல பேசாம அத விட்ருவோமாயா? என்ன சொல்லுற "
"அதான் தலைவரே எனக்கும் சரியா படுது ,ஒன்னு ரெண்டாவது நல்லது செய்வோம் தலைவரே ,சனங்க முகத்துல முழிக்க முடியாது "
"சரிதான்யா,நானும் அத சொல்ல தான் போன் பண்ணேன் ,இதுக்கு முன்னாடி எப்படியோ அது கடக்கட்டும் ,இனிமே இதெல்லாம் வேண்டாம்யா,கொஞ்ச காலம் தான் இன்னும் ,அவுங்க கிட்ட சொல்லிரு எல்லாம் முறைப்படி தான் நடக்கும்னு ,பாக்கிய காலேல பாத்துக்கலாம் "
"சரிங்க தலைவரே " என்று போனை வைத்துவிட்டு நேராக தனது வீட்டு பூஜை அறைக்கு ஓடினார் அமைச்சர் அன்புராஜ ,முதல்வர் வீரப்பன் சாய்வு நாற்காலியை இழுத்து முற்றத்தில் போட்டு விடிவெள்ளியை ஊற்று பார்த்து அமர்ந்தார்.


அதே சமயம் மொட்டை மாடியில் இவர்களின் பேச்சை ஒட்டு கேட்டு ,வெற்றி களிப்பில் சிரித்தார் பேராசிரியார் .டாக்டர் .அமுதன் அருள்ராஜ்,மின் இயற்பியல் துறையில் உலக அளவில் பல அறிய கண்டுபிடுப்புகளை உலகுக்கு தந்த இந்திய விஞ்ஞானி ,இவரது சிரிப்பை முகமெல்லாம் ஆச்சர்யத்தோடு கண்டு கொண்டிருந்ததான் சிவா, அதே துறையில் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்து கொண்டிருக்கும் ஐ .ஐ .டி மாணவன் .
" சார் இப்ப இங்க என்ன நடந்துச்சு ,எப்படி நடந்துச்சு ,ஒன்னுமே புரியல !இதுக்கு தான் என்ன வர சொல்லிருந்தீங்களா ?"
"சிவா ,ஆமாம் ,இதுக்கு தான், இது என் வாழ் நாள் சாதனையா நான் நினைக்கிறேன் ,இங்க நீ பார்த்தது அறிவியலின் அற்புதம் "
"டாக்டர் ,கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க"
"சிவா ,நம் மூளையில் எண்ணங்கள், இயக்கங்கள் ,கற்பனைகள் எல்லாவற்றிருக்கும் அலை வடிவம் உண்டு , உங்களுக்கு தெரிஞ்சுருக்கும் வலிப்பு நோய்க்கு மூளையின் அலைகளை கொண்டு ஈ.ஈ.ஜி (electro encephalo gram) எனும் முறை பயன்படுத்தப்படுகிறது ,மூளையின் மின்காந்த அலைகள் நம் அலைபேசி ,தொலைக்காட்சி போல தான் ,ஆனால் இன்னும் கொஞ்சம் நுணுக்கமானவை ,தொன்று தொட்டு டெலிபதி முறை உலகமெங்கும் மொழிகள் இல்லாமல் ,வெவ்வேறு நாடுகளில் இருக்கும் மனிதர்களிடம் கூட தொடர்பு கொள்ள பயன் படுத்த படுகிறது ,ஒவ்வொரு மூளைக்கும் குறிப்பிட்ட ஒரு அலைவரிசை உண்டு ,அந்த மூளை வெளியேற்றும் எண்ணங்கள் ,செய்திகள் ,அதற்க்கு ஒரு அலைவரிசை உண்டு , அலைபேசி இயங்குவது போல தான், தொலைக்காட்சி இயங்குவது போலதான் ,அண்ட வெளியில் நம் எண்ணங்கள்,பேச்சுக்கள்,செய்திகள் எல்லாம் அலைவடிவில் உலாவுகின்றன ,அதை நாம் ஒரு ரிசீவர் மூலம் வாங்கலாம் ,இப்பொழுது நாம் வீட்டில் உபயோகிக்கும் டிஷ் டி வீ போல தான் ,அதே மாறி மூளை அந்த அலைவரிசைக்கு ஏற்ற மாறி ட்யூன் செய்தால் அந்த அலைவடிவை நாம் உணர்ந்துக்கொள்ளலாம் .இப்பொழுது நான் கண்டுபிடித்து இருக்கும் இந்த கருவி ,ஒவ்வொரு அலையையும் நுணுக்கமாக ஆராயக்கூடியது ,இது உள்வாங்குவது மட்டும் அன்றி ,இதன் மூலம் நாம் அந்த அலைவரிசையில் அந்த மூளைக்கு செய்தி அனுப்பலாம்"

"ஆச்சர்யமா இருக்கு டாக்டர் ,அப்படினா நாம் உங்களது மடிக்கணினியில் உள்ள இந்த வீடியோ பதிவை அந்த மூளைக்கேற்ற அலைவடிவமாக மாற்றி அவுங்க ,தூங்கும் நேரத்துல கனவா அனுப்பி இருக்கோம் ,அப்படி தானே ?"
"அதே தான் சிவா ,மூளை அதிர்வலைகள் ,ஆல்பா ,பீட்டா ,காம்மா ,தீட்டா எனும் நாலு வகை ,பொதுவா நாம் இயங்கும் போது அதிக எதிர் மறை எண்ணம் கொண்டு இயங்குவோம் அப்பொழுது பீட்டா அலைகள் பிரதானமா இருக்கும், நேர்மறை சிந்தனை அதிகம் இருக்கும் போது ஆல்பா அலைகள் அதிகமாக இருக்கும்"
"டாக்டர் ,ஆம் ,கேள்விப்பட்டுருக்கேன் ,ஆல்பா த்யான முறைன்னு கூட இப்போ சொல்லி கொடுக்கராங்கலே !"
"அதான் சிவா, இந்த ஆல்பா ,பீட்டா ரெண்டும் மேல் மனம் ,தீட்டா நம் ஆழ மனம் ,இது இயல்பிலயே பிரதானமாக யோகிகளுக்கு இருக்கும் , மனம் பிரண்டவர்களுக்கும் இருக்கும் ,அதை தவிர நாம் உறங்கும் போது ,கனவு காணும் போது இவ்வலைகலே இருக்கும்,நாம இப்ப அமைச்சர் ,மற்றும் முதலமைச்சர் கிட்ட இந்த அலைவரிசையில் தான் தொடர்பு ஏற்படுத்தி கொண்டோம் , அதனால் இது அவர்களின் கனவில் வந்ததாக அவர்கள் எண்ணுவார்கள் "
"டாக்டர் ,பிராமாதம் ,என்னால நம்பவே முடியல ,வாழ்த்துக்கள் ,எப்படி இத சாதிச்சீங்கன்னு நெனச்சா ஆச்சர்யமா இருக்கு "
"சிவா ,இதுக்கு நான் ரொம்ப கஷ்ட்டபட்டேன் ,இப்போ நாம பார்த்தது ஒரு பரிசோதனை முயற்ச்சி தான் ,நான் முதல்வர் மற்றும் அமைச்சரின் அலைகளை தொடர்ந்து பத்து நாட்களாக அவதானித்து வருகிறேன் ,தகுந்த ஏற்பாடுகள் ,அவர்களின் அறைக்கருகே இருக்கும் சென்சார்கள் ,ஆம்பிளிபாயர்கள் என்று நான் மெனக்கெட்டேன் ,இதை நடைமுறை படுத்த இன்னும் நெறைய உழைக்கணும் ,ஆகினும் கூட நம் நாட்டிற்க்கு ஒரு 50,000 கோடிகள் இதனால் சேமிக்க பட்டுள்ளது "
"டாக்டர், உங்களின் இந்த கண்டுபிடிப்பை எப்ப உலகத்துக்கு அறிவிக்க போறீங்க ? கட்டாயம் இந்த ஆண்டிற்கான நோபல் உங்களுக்கு தான் "
"நோ சிவா ,நான் உங்கள வர சொன்னதே அதுக்காக தான் ,இந்த கண்டுபிடிப்பா நான் வெளிய சொல்றதா இல்ல ,இதுக்கு சமூகத்துல நெறையா வேலை இருக்கு ,நம்ம நாடு இப்படி அதல பாதலத்திற்கு போக என்ன காரணம் தெரியுமா ? பொறுப்பான ,உயர்ந்த இடத்துல இருக்கும் தனிமனிதன் மனசாட்சிய மறந்துட்டு சுயநலத்தோட செயல் படறது தான் ,மனுஷங்க எல்லாமே ஆரம்பத்துல நல்லவங்களா தான் இருக்காங்க, பணமும், சூழலும் அவுங்கள மாத்திடுது ,அவுங்க மனசாட்சிய இன்னிக்கு நாம செஞ்ச மாறி தட்டி எழுப்பினாலே போதும் பெருமளவு குற்றங்கள் குறையும் ,அதனால இத நான் சமூக வளர்ச்சிக்காக பயன் படுத்த விரும்புறேன் ,எனக்கு உங்க உதவி வேணும் சிவா "
"சொல்லுங்க டாக்டர் நிச்சயம் செய்றேன் "
"எனக்கு வயசாய்டுச்சு ,அதனால எனக்கு அப்புறம் இந்த கருவிய பாத்துக்குற ,பாரமரிக்கிற பொறுப்பு உங்களோடது ,நிச்சயம் செய்வீங்கன்னு நம்புறேன் "
"டாக்டர் ,நிச்சயம் செய்கிறேன் ,இந்த கருவிக்கு நீங்க என்ன பெயர் வெச்சுருக்கீங்க "
"இதற்க்கு நான் வெச்ச பேரு அதிமானுடன் -அதாவது சூப்பர் மேன்,மனிதனை ,அவனது சிந்தனையை மாற்றும் வல்லமை இருப்பதால் இந்த பெயர்,இதை நாம ரொம்ப கவனமா பயன் படுத்தனும் ,தனி மனிதர்களோட சுதந்திரம் கெடக்கூடாது ,எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகள் போல இதற்கும் நன்மை தீமைகள் உண்டு ,இந்த அதிமானுடன் பற்றிய எல்லா தகவல்கள்,அதனுடைய வரைபடம் எல்லாம் இந்த குறுந்தகடில் இருக்கு ,பத்தரம் ,இது வெளிய தெரிஞ்சா ஆபத்து " என்று பேசிய படியே இருவரும் கணினியையும் ,அந்த கருவியையும் கொண்டு இறங்கினர் .
மறுநாள் காலை எட்டு மணி செய்திகள் "முக்கிய செய்தி- பிரபல இந்திய விஞ்ஞானி பேராசிரியர் .டாக்டர் .அமுதன் அருள்ராஜ் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார் "
நமுட்டு சிரிப்புடன் "வாட் இஸ் யுவர் லாஸ்ட் டாக்" என்று அந்த அதிமானுடனை வருடிய படி பேரம் பேசிக்கொண்டிருந்தான் சிவா .

குறிப்பு- இக்கதையில் வரும் சம்பவங்களும் ,கதாப்பாத்திரங்களும் ,முற்றிலும் புனைவே .இது யாரையும் குறிப்பது அல்ல .

கதை உதவி -உன்னைப்போல் ஒருவன் .இன்செப்ஷன்,இந்திய அரசு ,சி.பி.ஐ :) அப்புறம் எனக்கே எனக்கென்று இருக்கும் கற்பனை , கொஞ்சமாக மருத்துவ அறிவு .
பட உதவி-கூகிள்