Saturday, February 19, 2022

நீலகண்டம்: அமுதென்றும் நஞ்சென்றுமான பிரபஞ்சங்களின் சந்திப்பு- விக்னேஷ் ஹரிஹரன்


(நீலகண்டம் குறித்து விக்னேஷ் எழுதிய கட்டுரை) 

இந்திய சிந்தனை மரபில் உள்ள அடிப்படை தொன்மங்களில் ஒன்று நாம் வாழும் உலகம் பல்வேறு உலகங்களுக்கு மத்தியில் இயங்கும் மற்றொரு உலகம் மட்டுமே எனும் தொன்மம். நம் தொன்மங்களில் பூமிக்கு மேல் 7 மேலுலகங்களும் நமக்கு கீழ் 7 கீழுலகங்களுமாக மொத்தம் 14 உலகங்களாக அவை அடுக்கப்பட்டிருக்கின்றன. அவை முழுவதுமாக பிரிக்கப்பட்ட தனி உலகங்களாக இன்றி ஒன்றுடனொன்று கலந்தே இருக்கின்றன. ஒரு உலகத்தின் நிகழ்வுகள் மற்ற உலகங்களில் எதிர்வினைகளையும் உண்டாக்குகின்றன. ஒரு விதத்தில் நவீன இயற்பியலின் மல்டிவர்ஸ் தியரியின் ஒரு பாகமான பிரேன் காஸ்மாலஜிக்கு அணுக்கமான ஒரு தொன்மமாகவே நாம் இதை புரிந்துகொள்ளலாம். புராணக் கதைகளில் தொடங்கி நவீன இயற்பியல் வரையிலான இச்சிந்தனைகள் அனைத்தின் பின்புலத்திலும் அமைவது நாம் காணும் பிரபஞ்சத்தின் சித்திரம் முழுமையானது அல்ல என்ற புரிதலே. 

நாம் காணும் இவ்வுலகம் நம் தற்போதைய மூளையின் நரம்பியல் அமைப்பாலும், நம்மைச் சுற்றி அமைந்த புறக்காரணிகளாலும் கட்டமைக்கப்படுவதே. அதைக்கொண்டு இப்பிரபஞ்சத்தின் அத்தனை செயல்பாடுகளையும் திட்டவட்டமாக வரையறுத்துவிட முடியாது. நம் அறிதலின் எல்லைக்கு உட்பட்டவற்றை அவற்றின் எல்லைகளுக்கு உட்பட்ட அளவிலேயே நாம் அறிகிறோம். பிரபஞ்சமோ நம் அறிதல்களுக்கும் அப்பால் விரிந்து கிடக்கிறது. நம் கண்ணுக்கு புலப்படாத பல்வேறு செயல்பாடுகளின் விளைவே நாம் அறியும் உலகம்.  அச்செயல்பாடுகளால் அமையும் காரண-காரிய உறவுகளை புரிந்துகொள்ள முடியாமலேயே நாம் தத்தளிக்கிறோம். அத்தகைய காலாதீதமான தத்தளிப்புகளை நவீன வாழ்வின் மிக முக்கியமான சிக்கல்களான குழந்தையின்மை, ஆட்டிசம் ஆகியவற்றின் பின்புலத்தில் அணுகுகிறது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்.

நம் வாழ்வில் துயரங்களையும், அவலங்களையும் சந்திக்கும்தோறும் நம் மனதில் எழும் அடிப்படையான கேள்வி "இது ஏன் எனக்கு நடக்கிறது?" (Why Me?) என்பதுதான். இந்த கேள்வியின் வழியே நம் அனுபவத்திற்கான அர்த்தத்தையே நாம் கண்டடைய முற்படுகிறோம். உலகின் அத்தனை மதங்களும் அதற்கான விடையை வெவ்வேறு சொற்களில் சொல்லிவிட முயல்கின்றன. பெரும்பாலும் அவ்விடைகள் ஒரு அளவில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கின்றன. இது மதங்களின் குறைபாடன்றி நம் உலகத்தின் காரண-காரிய உறவுகள் தர்க்கத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை என்பதற்கான சான்றுகளே. அதன் சிடுக்குகளை முழுவதுமாக பிரித்து அறிந்துவிட முடியாததனாலேயே நவீன பகுத்தறிவுவாதம் இவ்வுலகத்தை அர்த்தமற்ற, காரண-காரிய உறவென்று ஒன்றுமில்லாத தற்செயல்களின் பெருந்தொகுப்பாக புரிந்துகொள்ள முற்பட்டது. ஆனால் மனித மனமோ இந்த வாதத்தை ஏற்க மறுக்கிறது. துயரங்களில் மனம் அதற்கான காரணத்தையே தேடுகிறது. அப்படி ஒன்றை கண்டுபிடித்துவிட்டால் அந்த துயரை வெல்ல முடியும், அதிலிருந்து மீண்டுவிட முடியும் என்று நம்புகிறது. அதனாலேயே அத்தகைய காரணங்கள் தர்க்கத்துக்கு அப்பால் இருந்தாலும் மனம் அதை ஏற்கிறது. நாவலில் செந்திலும், ரம்யாவும் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். குடும்பத்தை எதிர்த்து செய்துகொண்ட காதல் திருமணத்தில் வென்று காட்டுவதற்கான போராட்டம், குழந்தையின்மை, அதன் காரணமாக ஏற்படும் சமூக அழுத்தம், உளவியல் சிக்கல்கள், உறவுச்சிக்கல்கள் என்று தொடங்கி வரூவின் ஆட்டிசம், அதனால் ஏற்படும் சிக்கல்கள், போராட்டங்கள் என்று தொடர்ந்து அலைக்கழிக்கும் வாழ்வின் சூழல்களில் இருந்து, மேலெழுவதற்கான ஒரு பிடிப்பையே இருவரும் தேடுகிறார்கள். செந்தில் "இது ஏன் எனக்கு நடக்கிறது?" என்ற கேள்வியையும் ரம்யா "இதிலிருந்து எப்படி மீள்வது?" என்ற கேள்வியையுமே அவர்களுக்கான பிடிப்பாக கொள்கிறார்கள்.

செந்தில் முதல் கேள்வியை சுமந்துகொண்டு அலைகிறான். அவன் வழியே நாவல் தர்க்கத்திலிருந்து தர்க்கத்திற்கு அப்பால் உள்ள காரண-காரிய உறவை நோக்கி எழுகிறது. வரூ ஏன் தன் வாழ்வில் வந்தாள்? என்ற கேள்வியே அவனை அலைக்கழிக்கிறது. வரூவுக்கு பதிலாக தன்னால் வேறு ஒரு குழந்தையை தன் வாழ்வுக்குள் கொண்டுவந்திருக்க முடியுமா? என்று தவிக்கிறான். தன் சிக்கலுக்கான காரணத்தை ஜோசியம், ஆன்மீகம், குடும்ப வரலாறு என்று அனைத்திலும் தேடி அலைகிறான். தன் குடும்ப வரலாற்றில் தான் அறிந்திராத நாகம்மையின் இருண்ட பக்கங்களை கண்டடைகிறான். தன் பூர்வீகத்தையே தன் சிக்கல்களுக்கான காரணமாக காண்கிறான். தன் துயர்களின் ஊற்றுக்கண்ணாக இருந்தாலும் அதை சரிசெய்ய முயல்கிறான். கரையான்களால் முழுவதுமாக உள்ளிருந்து அரித்துப்போன தன் பூர்வீக வீட்டின் வெளித்தோற்றத்தை புனரமைக்க முற்படும் செந்திலின் சித்திரமே அவனது ஒட்டுமொத்த சித்திரமாக நாவலில் நிலைபெறுகிறது.

செந்திலுக்கு நேர் எதிராக ரம்யாவோ தன்னை இச்சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது? என்பதை நோக்கி செலுத்திக்கொள்கிறாள். ரம்யாவின் வழியே நாம் குழந்தையின்மையின், ஆட்டிசத்தின் உலகியல் சிக்கல்களை காண்கிறோம். காதல் திருமணத்தில் வென்று காட்டுவதற்கான போராட்டம், குழந்தையின்மையால் ஏற்படும் சிக்கல்கள், வரூவின் மீதான பொறுப்புணர்வு, பயம், கசப்பு, சாகரின் மீதான அன்பு, ஏக்கம் என்று ரம்யா தன்னை உலகியலில் முற்றிலுமாக கரைத்துக்கொள்கிறாள். ரம்யாவின் குடும்பத்தின் பின்புலத்தில் அவர்களின் துயருக்கான தர்க்கத்தை மீறிய சில காரணங்களை கண்டடைவதற்கான சாத்தியங்கள் நாவலில் இருப்பினும் ரம்யா அவற்றை புறந்தள்ளி தன் சிக்கல்களை முழுக்க உலகியலிலேயே எதிர்கொள்ள முற்படுகிறாள். தன் பூர்வீக வீட்டை புனரமைக்க செந்தில் பணம் திரட்டும்பொழுது அந்த பணம் வரூவின் கல்விக்கும் சிகிச்சைக்கும் பயன்படும் என்று வாதிடுகிறாள். தன் குடும்பத்தை எதிர்த்து வாழவேண்டும் என்ற வைராக்கியத்திற்கும் தன் தாயின் அரவணைப்பிற்கான ஏக்கத்திற்கும் இடையே ஊசலாடுகிறாள். தன் தாயின் முன் வரூவை மறைத்து வைக்க முயலும் ரம்யாவின் சித்திரம் நுட்பமானது. நாவலில் செந்திலின் பார்வையில் நாம் காணும் ரம்யாவின் சித்தரிப்பு செந்திலின் மனப்போக்கை பிரதிபலிக்கிறது. அதிலிருந்து ரம்யாவின் சித்திரத்தை பிரித்து அறிகையிலேயே அக்கதாப்பாத்திரம் அடையும் வலியும் வெறுமையும் நமக்கு புலப்படுகின்றன.

இவ்விருவருக்கும் அப்பால் நாவலின் உயிராக அமர்ந்திருப்பவள் வரூ. அவளது பார்வையில் முன்வைக்கப்படும் அத்தியாயங்களே நாவலின் எல்லைகளை மறுவரையரை செய்கின்றன. நாம் வாழும் உலகிற்குள் பின்னியிருக்கும் பிற உலகங்களை நமக்கு காட்டுபவள் வரூ. அவளே காரணமாகவும், காரியமாகவும் ஆனவள். அவளது பார்வையில் உலகம் வேறொன்றாக மாறிவிடுகிறது. அவளை சாபமாகவும், பாரமாகவும், தன் இயலாமையின் வெளிப்பாடாகவும், வணிகப்பொருளாகவும் பார்க்கும் உலகத்திற்கு மத்தியில் அவள் சோட்டா பீமுடனும், நீமோவுடனும், பேக் மேனுடனும் விளையாடிக்கொண்டிருக்கிறாள். நம் அறிதல்கள், கட்டமைப்புகள், நம்பிக்கைகள் அனைத்தையும் நிராகரிக்கிறாள். அவள் மீது நிகழ்த்தப்படும் அத்தனை வன்முறைகளுக்கும் அதுவே காரணமாகிறது. அவளது உலகத்திற்கும் நமது உலகத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு இடைவெளியே (communication gap) நாவலின் அத்தனை துயர்களுக்கும் காரணமாகிறது. நாவலின் முடிவில் வரூ தன் உலகத்திற்கும் அப்பால் இருக்கும் நாகம்மையை சந்திக்கையில் நாவல் தன் உச்சத்தை அடைகிறது.

ஆலகால விஷமும் அமுதும் ஒரு நாணயத்தின் இரு முகங்களே. எந்த நொடியிலும் அமுது திரிந்து விஷமாகவும். விஷம் திரிந்து அமுதாகவும் மாறக்கூடும். அவ்விருமைகளின் முடிவற்ற விளையாட்டை உணர்ந்து அதை தங்கள் கழுத்தில் நிலைநிறுத்தக்கூடிய நீலகண்டர்களாலேயே இவ்வுலகம் நிலைநிறுத்தப்படுகிறது. அவ்வகையில் நீலகண்டமும் செய்ய முற்படுவது அதையே. 14 உலகங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு உயிரும் பிறவிகள்தோறும் இந்த உலகங்களின் வழியே தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஏறியும் இறங்கியும் ஆடும் இந்த பரமபத விளையாட்டில் ஒரு உயிர் மோட்சத்தை அடைய தேவையான அடிப்படைகளில் ஒன்றாக முன்வைக்கப்படுபவர்கள் குழந்தைகள். அத்தனை உலகங்களையும் பூமியோடு இணைக்கும் கண்ணிகள் அவர்கள். நாம் வாழும் உலகிற்குள் பிணைந்திருக்கும் பிற உலகங்களை காணும் ஆற்றல் படைத்தவர்கள். உயிர்களுக்கு அமரத்துவத்தை அளிக்கும் அமுது அவர்களே. அத்தகைய குழந்தைகளையும், குழந்தைமையையும் பற்றிய காலாதீதமான அறச்சிக்கல்களை நவீன வாழ்வின் குழந்தையின்மை, ஆட்டிசத்தின் பின்புலத்தில் கிரேக்க நாயகி மெடிசா முதல் சுடலைமாடன் வரை, குழந்தைகள் கார்ட்டூன் முதல் தொன்மக்கதைகள் வரை அனைத்து தளங்களிலும் நீலகண்டம் கையாள்கிறது. நம் உலகம் அதனுள் பிணைந்திருக்கும் பிற உலகங்களை சந்திக்கும் தருணங்கள் மகத்தானவை. அமுதும் நஞ்சும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளிகள் அவை. அத்தகைய சந்திப்புகளில் உலகத்தின் தர்க்கமும், அத்தர்க்கத்திற்கு உட்பட்ட காரண-காரிய உறவும் அர்த்தமற்றுப் போகின்றன. அத்தகைய உலகங்களின் சந்திப்புகளில் நாம் நம் அறிதலின் எல்லைகளை கண்டடைந்து கடக்கும் தருணங்களின் தொகுப்பே நீலகண்டம்.      

Monday, February 14, 2022

எனது நூல்கள்


இந்த புத்தக கண்காட்சிக்கு எனது பங்களிப்பில் ஐந்து நூல்கள் உருவாகியுள்ளன. 

முதற்கால் - ஆயுர்வேத மருத்துவர் இல . மகாதேவனுடனான நேர்காணல் - காலச்சுவடு வெளியீடு 

https://www.commonfolks.in/books/d/mutharkaal

காந்தியைச் சுமப்பவர்கள்- காந்தியை கதை மாந்தராக கொண்ட சிறுகதைகளின் தொகை நூல்,. தொகுப்பாசிரியர்- சுனில் கிருஷ்ணன். நீண்ட முன்னுரையும் எழுதியிருக்கிறேன். பரிசல் வெளியீடு. 

https://www.commonfolks.in/books/d/gandhiyai-sumappavargal

ஆயிரம் காந்திக்கு- காந்திய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள். வெளியீடு, நன்னூல் பதிப்பகம். 

https://www.commonfolks.in/books/d/aayiram-gandhigal

நாளைய காந்தி- காந்தி கட்டுரைகள், யாவரும் வெளியீடு 

https://www.commonfolks.in/books/d/naalaiya-gandhi

எழுத்தாளர் பழுவேட்டையருக்கு குழந்தை பிறந்திருக்கிறது - தொகுப்பாசிரியர் நரோபா- தேர்ந்தெடுத்த படைப்புகள்- யாவரும் வெளியீடு 

https://www.commonfolks.in/books/d/ezhuththaalar-pazhuvettaiyarukku-kuzhandhai-pirandhirukkirathu 


காந்தியைச் சுமப்பவர்கள் - எழுத்தாளர் பாவண்ணன் உரை

 காந்தியை கதை மாந்தராக கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகை நூல் 'காந்தியைச் சுமப்பவர்கள்' பரிசல் வெளியீடாக வெளிவந்துள்ளது. காந்தி கல்வி நிலையம் - புதன் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்த இணைய வழி நூல் அறிமுக கூட்டத்தில் எழுத்தாளர் பாவண்ணன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றியுள்ளார் நன்றி  பாவண்ணன் அவர்களுக்கு. 

இணையத்தில் வாங்க 



நாளைய காந்தி ஒரு வாசிப்பு


'யாவரும்' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'நாளைய காந்தி' குறித்தான தனது வாசிப்பை நண்பர் முத்துக்குமார் அவரது இணைய பக்கத்தில் எழுதியுள்ளார். நன்றி முத்து.  

https://www.commonfolks.in/books/d/naalaiya-gandhi 




 மலை உச்சியில் நின்று கொண்டு பார்த்த நகரத்தின் அசைவின்மையிலிருந்தெழுந்த அழகு, அதனை நெருங்கும் போது தொலைந்து நம்மை ஒரு விலக்கம் கொள்ளச் செய்கிறது. காந்தியை நெருங்கி அறிய முயலும் போது நமக்கு நடப்பதும் இதுவாகத் தான் இருக்குமோ என்று எண்ண வைக்கிறது எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் அவர்களுடைய ‘நாளைய காந்தி’ என்ற கட்டுரைத் தொகுப்பு. காந்திய ஆர்வலரும், காந்தி பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான இவர், இக்கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுவதும் இந்த விலக்கத்தைத்தானா என்று புரியவில்லை. காந்தியைப் பற்றி தொடர்ந்து எழுதி வரும் இவர், ‘காந்தியை வெறும் பண்டமாக மாற்றி விற்கிறேனா நான்?’ என்று கேட்டிருப்பது சற்று திடுக்கிடவும் வைக்கிறது. இனிமேல் நான் தொடர்ந்து காந்தியைப் பற்றி எழுதுவேனா? என்று தெரியவில்லை என்றும் குறிப்பிடுகிறார். இப்படி தொடர்ந்து அவரைப் பற்றி எழுதுவது மிகப் பெரிய சுமையாக இருக்கிறது என்று கூறுவது விலக்கத்தின் உச்சம். இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகளை விட இந்த முன்னுரையின் தாக்கம் அதிகம்.


The Holy Trinity


இந்த மாற்றத்தின் விதைகளை இக்கட்டுரைத் தொகுப்பில் கல்மலர் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகளில் கண்டு கொள்ள முடிகிறது. காந்தியை சமகாலத்தில் வைத்து எப்படிப் புரிந்து கொள்வது என்பதை எழுத்தாளர் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ மிக நுட்பமாகவும், விரிவாகவும் வெளிப்படுத்தியிருக்கும். பள்ளிப் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களில் இருந்து நான் வார்ப்பெடுத்திருந்த காந்தியின் பிமபத்தை இப்புத்தகம் உடைத்து மறுவார்ப்பெடுத்தது. காந்தி என்ற பிம்ப மாயையிலிருந்து விலகி, அவரை ஒரு ஆளுமையாக அவருடைய குறை நிறைகளோடு நெருங்க முடிந்தது ‘இன்றைய காந்தி’ வாசிப்பிற்கு பின்புதான். ஆனால் ‘நாளைய காந்தி’ யின் வழியாக இன்னமும் நெருங்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம் காந்தி எழுதிய மூன்று நூல்களான இந்திய சுயராஜ்யம், தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம் மற்றும் சத்தியசோதனை பற்றிய கட்டுரைகள் தான்.


சத்தியசோதனை என்பது, நேரம் கிடைத்தால் வாசிப்பதற்கு ஏதுவாக புத்தக அலமாரியில் இருக்க வேண்டிய புத்தகம் மட்டுமே என்ற பொது மனநிலையில் தான் தானும் இருந்ததாக சுனீல் இங்கு ஒப்புக் கொள்கிறார். கல்மலர் என்ற தலைப்பில் உள்ள மூன்று கட்டுரைகளும் காந்தி எழுதிய இம்மூன்று நூல்களையும் முழுதும் படித்த பிறகு சாகித்ய அகாடமியில் அவர் ஆற்றிய உரைகளின் கட்டுரை வடிவம்.


இந்திய சுயராஜ்யத்தை காந்தியுடைய அரசியலின் தத்துவ வடிவமென்றால், அதன் செயல்வடிவம் தான் தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம் என்று உருவகிக்கிறது இக்கட்டுரைகள். சுயராஜ்யம் ஒரு அறிவுஜீவியினுடையது என்றால், சத்யாகிரகம் ஒரு போர்ப்படைத் தளபதியினுடையது. சத்யசோதனை ஒரு ஆன்ம சாதகன் தன்னுடைய பயணத்தை ஆசானாக நின்று தன் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது. அபாரமான உருவகமிது.


ரயில்வே துறையை பரிசகிக்கும் காந்தி, தன் லட்சியங்களுக்காக அவற்றை உபயோகிக்காமல் இருக்கவில்லை. லட்சியத்தை அடைவதற்கான நடைமுறையில் ஏற்படும் சவால்கள் தன்னை பலகீனமாக்கினாலும், வெற்று கௌரவத்திற்காக அப்பலகீனங்களை மறைக்காத காந்தியின் எதார்த்தம் எந்த லட்சியவாதியையும் சீண்டக்கூடியது.


அகிம்சை என்பது கோழைகளின் அச்சத்தை மறைக்கும் ஆயுதமல்ல. வலியவர்களின் (உடல் சதையின் வலிமையல்ல) கையில் இருக்க வேண்டிய திசைகாட்டி.


கடமையுணர்வு உள்ளவர்களே உரிமையைக் கோரும் போராட்டத்தை சத்யாகிரக வழியில் நடத்தமுடியும்.


பழக்கப்படாத திரள் போராட்டத்திற்கு உகந்ததல்ல.


போராட்டங்கள் எதிரிகளை வெல்வதற்கான வடிவமல்ல. நம்முடைய அச்சங்களை நேர்மையாக எதிர்கொள்வதற்கான வடிவம்.


இப்படி காந்தியை நெருங்க நெருங்க நமக்கு கிடைக்கும் இந்த புரிதல்கள் தான் நம்மை பதற்றம் கொள்ளச் செய்கின்றன. அவரிடமிருந்து நாம் விலக்கம் கொள்வதும் இதனால் தான் என்று எண்ண முடிகிறது. அவருடன் சமகாலச் சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கும் இப்பதற்றமும், விலக்கமும் இருந்திருக்க வேண்டும். நிகழ்காலத்தில் உள்ள நாமெல்லாம் எம்மாத்திரம்.


இறைவனை வணங்குவதும், பூஜிப்பதும் எளிய வழிகள் தான். அவனை அறிவது….காந்தியின் இம்மூன்று புத்தகங்களும் The holy Trinity என்று உணர வைத்தன இக்கட்டுரைகள்.

'முதற்கால்' முன்னுரை


முதற்கால் (டாக்டர் இல. மகாதேவன் நேர்காணல்)’

நேர்கண்டவர்: சுனில் கிருஷ்ணன்

ஆழ்ந்த அறிவு, சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை, அசாத்தியமான ஆசிரியத்துவம், ஆயுர்வேதத்தை வெறும் மருத்துவ முறையாக மட்டுமின்றி முழுமையான வாழ்க்கைமுறையாகவே காணும் அணுகுமுறை முதலானவற்றைக்கொண்ட டாக்டர் மகாதேவன் இந்திய ஆயுர்வேத உலகில் ஓர் இயக்கமாக விளங்குகிறார் என்று சற்றும் மிகைப்படுத்தாமலேயே சொல்லலாம்.

ஆயுர்வேதத்தின் தற்காலச் சவால்கள், போக்குகள், நவீன மருத்துவத்திற்கும் அறிவியலுக்கும் அதற்குமான உறவு என வரலாற்று நோக்கில் ஆயுர்வேதத்தை இந்த நேர்காணல் அணுகுகிறது. நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைவதின் சாத்தியக்கூறுகள், அதிலுள்ள அறச்சிக்கல்கள், அதிகாரப் போட்டிகள் எனப் பலவற்றைக் குறித்து ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகள் இந்த நேர்காணலில் உள்ளன.

தத்தளிப்புகளின் ஊடாக மகாதேவன் மேற்கொண்டுவரும் ஆன்மிகப் பயணத்தின் தடங்களையும் இதில் காணலாம். நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவராக மட்டுமின்றி, மொத்த வாழ்க்கையையும் முழுமையான ஆரோக்கியத்தை நோக்கிச் செலுத்தக்கூடிய முழுமையான ஆயுர்வேத வைத்தியராகத் தனது இலக்கை அடையும் பயணத்தில் உள்ள மகாதேவன் என்னும் அலாதியான ஆளுமையையும் அறிந்துகொள்ளலாம்.

ஆயுர்வேதத்திலும் இந்திய மருத்துவ முறைகளிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி சாமானிய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் இந்த நேர்காணல் அமைந்துள்ளது.

அச்சு நூல் விலை: ரூ. 120

மின் நூல் விலை: ரூ. 94

காலச்சுவடு இணையதள இணைப்பு

https://books.kalachuvadu.com/.../u0baeu0ba4u0bb1u0b95u0.../

மின் நூலின் இணைய இணைப்பு

https://www.amazon.in/dp/B09Q3KJX9D

அச்சுநூலின் இணைய இணைப்பு

https://www.amazon.in/dp/B09Q1D1GF1

முன்னுரை

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று இந்நேர்காணல் டாக்டர்.‌இல. மகாதேவன் வசிக்கும் தெரிசனம்கோப்பில் எடுக்கப்பட்டது. காலை ஐந்து மணிக்கு அவர் வீட்டை சென்றடைந்தபோது புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார். ஆறேழு மாதங்கள் முயன்று பெற்ற தேதி. அவரழைக்கும் நேரத்திற்கு என்னால் செல்ல முடியாத சூழல். வார இறுதிகளில் அவருக்கு ஓய்வோ விடுப்போ இல்லை. ஓருவழியாக இந்த தேதி முடிவானது.  முறையான நேர்காணலுக்கு முன்னும் பின்னுமாய் நிறைய உரையாடினோம்‌. காலை உணவுக்கு பிறகு மாலை 3.30 வரை இடைவெளிவிட்டு மொத்தம் ஐந்து மணிநேர உரையாடல் பதிவு செய்யப்பட்டது. நேர்காணல் இறுதி வடிவம் பெறுவதற்கு முன், காலமாற்றத்தை கருத்தில் கொண்டு  மேலும் சில கேள்விகளை அனுப்பி பதில் பெற்றுக்கொண்டு நேர்காணலை விரிவாக்கினேன். மகாதேவன் அவர்களுடன் காரில் பயணித்தபடியும் அவருடன் உள்நோயாளிகள் பிரிவில் அமர்ந்தபடியும் உரையாடினேன். ஏறத்தாழ ஒருமணிநேர உரையாடல் தொழில்நுட்ப பிழையால் பதிவாகாமல் போனது. இருவரையுமே அது சோர்வடையச்செய்தது. எனினும் அதே கேள்விகளை மீண்டும் கேட்டு பதில்களை பெற்றுக்கொண்டேன். ஒலிப்பதிவை அச்சு வடிவத்தில் ஆக்குவதே நேர்காணலில் ஆகக்கடினமான வேலை. படைப்பூக்கமிக்க எழுத்தாளர்களுக்கு அயர்ச்சியூட்டும் பணியும் கூட. அந்த பணியை  மகாதேவன் அவர்களின் செயலர் சஜுவும் சாராதா ஆயுர்வேத மருத்துவமனையின் இளம் மருத்துவர்களும் சிறப்பாக செய்து கொடுத்தார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.  முக்கியமாக சஜுவையே அடிக்கடி தொடர்புகொள்ளவும் தொந்திரவு செய்யவும் வேண்டியிருந்தது. இந்த நேர்காணலை நூலாக கொண்டுவரும் யோசனையை அளித்தவர் காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன். அவருக்கும் புத்தக வடிவமைப்பு மற்றும் பிழைதிருத்தத்திற்கு பொறுப்பேற்ற காலச்சுவடு நண்பர்களுக்கு நன்றி. அவருக்கான கேள்விகளை தயார் செய்ய உதவிய என் மனைவி டாக்டர். மானசாவிற்கும் நன்றி. டாக்டர். மகாதேவன் கோரிக்கையின் பெயரில் நூலுக்கு தெளிவான அணிந்துரை அளித்துள்ள கீழப்பாவூர் ஆ. சண்முகையா அவர்களுக்கும் நன்றி. நேர்காணல் அச்சாகும் முன்னர் வாசித்து கருத்துக்களை சொன்ன நவீன மருத்துவர் டாக்டர். மாரி ராஜ், யோக ஆசிரியர் சவுந்தர் மற்றும் நண்பர் சுபஸ்ரீ

ஏன் மகாதேவன் முக்கியமானவர்? ஏறத்தாழ எட்டு ஆண்டுகளுக்கு முன் சொல்வனம் இணைய இதழில் அவர் குறித்து 'பிஷக் உத்தமன்' எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அந்த கட்டுரையை சில திருத்தங்களுடன் இந்த நூலுக்கான அறிமுகமாக பயன்படுத்திக்கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளில் ஆயுர்வேத உலகத்திலும், தனியாக எனது ஆயுர்வேத மருத்துவ செயல்பாடுகளிலும் அவருடைய தாக்கம் பெருகியுள்ளதே தவிர குறையவில்லை‌. அன்றும் இன்றும் அவரை என் ஆசிரியராகவே கருதுகிறேன். ஒரு தனி மனிதர் எப்போது இயக்கமாகிறார்?  தனது சுற்றத்தையும் சம காலத்தையும் கடந்து தலைமுறைகளை தொட்டு அவர்களுடைய வாழ்வை நேரடியாகவோ மறைமுகமாகவோ மாற்றியமைக்கும் ஆற்றல் பெறும் போது தனி மனிதர் இயக்கமாக ஆகிவிட்டதாக கொள்ளலாம். டாக்டர். மகாதேவன், இந்திய அளவில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்களை பொறுத்தவரை அந்நிலையை அடைந்துவிட்டார்.  நான் எப்போதும் என்னை அவரது பள்ளியை சேர்ந்த வைத்தியனாகவே கருதி வருகிறேன். இந்த நேர்காணல் ஆயுர்வேதம் மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி சாமானிய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையிலேயே தொகுக்கப்பட்டுள்ளது. இயன்ற வரை சமஸ்க்ருத சொற்களுக்கு தமிழில் பொருள் அளிக்க முயன்றிருக்கிறேன். ஆங்கில மருத்துவ கலை சொற்களுக்கு விளக்கம் கொடுக்க முயன்றிருக்கிறேன். அவருடைய மாணவனாக இந்த நேர்காணல் மிகுந்த நிறைவை அளித்தது. நேர்காணல் இரண்டு தன்மைகளை கொண்டுள்ளதை கவனிக்கிறேன். ஒருபக்கம், ஆயுர்வேதத்தின் தற்கால சவால்கள், போக்குகள், நவீன மருத்துவத்திற்கும், அறிவியலிற்கும் அதற்குமான உறவு என வரலாற்று நோக்கில் ஆயுர்வேதத்தை அணுகுகிறது. ஆன்மீகத்தையும் மதத்தையும் நீக்கிவிட்டு ஒரு மதச்சார்ப்பற்ற அறிவியல் துறையாக நவீன காலகட்டத்தில் ஆயுர்வேதத்தை நிலைநிறுத்தும் முயற்சி ஒரு முக்கியமான முன்னெடுப்பாக பார்க்கிறேன். ஆனால் இந்த மாற்றத்தினால் ஏற்பட்ட சிக்கல்களையும் இழப்புகளையும் சேர்த்தே மதிப்பிட  வேண்டும் என்பதை மகாதேவனின் நேர்காணல் உணர்த்துகிறது. இதற்கான தீர்வு குறித்த உரையாடலையும் தொடங்கிவைக்கும் என நம்புகிறேன்.  நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைவதின் சாத்தியக்கூறுகள், அதிலுள்ள அறச்சிக்கல்கள், அதிகார போட்டிகள் என பலவற்றை குறித்து இந்நேர்காணல் நல்ல விவாதங்களை ஏற்படுத்தும். மறுபக்கம்  மகாதேவன் எனும் தனிமனிதரின் பயணம். தத்தளிப்புகளின் ஊடாக அவரடைந்த ஆன்மீக பயணம் எனக்கு மிக முக்கியமானது. அவ்வகையில் அவர் முழு ஆயுர்வேத வைத்தியராக தனது இலக்கை அடையும் பயணத்தில் உள்ளார். இவ்விரண்டு தன்மைகளும் இணைந்தே நேர்காணலில் வெளிப்படுகிறது. இந்த நூல் அவர் ஆயுர்வேத சமூகத்திற்கு அளித்தவற்றுக்கான ஒரு சிறிய செய்நன்றியும் கூட. இந்த நூலுக்கு "முதற்கால்" என தலைப்பிட்டுள்ளேன். வெற்றிகரமான சிகிச்சைக்கு மருத்துவர், மருந்து, நோயாளி மற்றும், பரிசாரகர் (இன்றைய நோக்கில் செவிலி என சொல்லலாம். நோயாளியை கவனித்து கொள்பவர் என பொருள்) என நான்கு பாதங்கள் முழுமையாக அதன் இயல்புகளுடன் இருக்க வேண்டும் என சொல்கிறது ஆயுர்வேதம். அதில் முதலாவதும் மிக முக்கியமானதுமான பாதம் மருத்துவர். அதை குறிக்கும் வகையிலேயே இத்தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இந்த நூலை என் தந்தை காலஞ்சென்ற மருத்துவர். ராமச்சந்திரனுக்கு சமர்ப்பிக்கிறேன். தன் குறுகிய வாழ்நாளில் மக்கள் மருத்துவர் என பெயரெடுத்தவர். நினைவுகளாகவும் கதைகளாகவும் காலந்தோறும் அவர் பெருகுவதை காண்கிறேன். அவரேந்திய சுடர் அணையாமல் இருக்கட்டும். 

சுனில் கிருஷ்ணன்

10-5-21

காரைக்குடி


நாற்கூற்று மருத்துவம்- ரா. கிரிதரன்

 ஆயுர்வேத மருத்துவர் இல. மகாதேவனுடன் நான் எடுத்த நேர்காணல் 'முதற்கால்' எனும் நூலாக  காலச்சுவடு வெளியீட்டுள்ளது.   அது குறித்து எழுத்தாளர் ரா. கிரிதரன் எழுதிய கட்டுரை சொல்வனம் இணைய இதழில் வெளிவந்துள்ளது. நன்றி 



மருத்துவர் இல.மகாதேவன் தெரிசனங்கோப்பில் ஆயுர்வேத மருத்துவராக அவரது பரம்பரை வைத்தியத்தை பயின்று வருகிறார். ஆயுர்வேதம் பற்றி அறிந்தவர்களுக்கு அவரைத் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்புகளையும் எல்லைகளையும் தனது சிகிச்சை வழியாகவும் மேடை உரைகள் வழியாகவும் பிரபலப்படுத்தி வருபவர். நவீன மருத்துவத்தோடு ஒட்டியும் விலகியும் அவர் பயின்று வரும் வைத்தியங்கள் ஆயுர்வேதத்தின் நவீனப் போக்கைத் தீர்மானித்து வருகிறது. இந்நூல் முழுவதும் ஒரே நேர்காணலைக் கொண்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவரும் எழுத்தாளருமான சுனில் கிருஷ்ணன் பல வாரங்கள் காத்திருந்து இல.மகாதேவனோடு இந்த நேர்காணலை நிகழ்த்தியுள்ளார்.


ஆயுர்வேதம் பற்றிய எவ்விதமான அடிப்படையும் தெரியாமல் இந்நூலைப் படிக்கத் தொடங்கினேன். இக்கால விளம்பரங்களிலும் தொலைக்காட்சி மேடை உரைகளிலும் ஆயுர்வேத முறைப்படி மருத்துவமும் மருந்துகளும் விற்கப்படும் வீச்சைப் பார்க்கும்போது நமக்கு பொதுவாக அதன் முறைமைகள் மீது அதிக அறிவு இருந்திருக்க வேண்டும் என நினைப்போம். எப்பொருளை எடுத்தாளும் மூலிகைகளின் படி சேர்த்த ரசாயனம், சித்தா முறைப்படி தயாரித்த பல் பொடி எனப் பலவிதமான எடுத்தாள்கைக்கு ஆயுர்வேதமும் சித்தா மருந்துகளும் உட்படுகின்றன. போலியான செய்திகளை அவை பரப்புவதோடு மட்டுமல்லாது நம் பாரம்பரிய சிகிச்சை முறைகளிலும் மருந்துகளிலும் இருக்கும் மகத்துவத்தைப் பற்றி மிகையான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பிவிடுகின்றன.


முழுவதும் நேர்காணலாக அமைந்திருக்கும் இந்நூலில் நான்கு விதமான விஷயக்கொத்துக்கள் நமக்குக் கிடைக்கின்றன.


ப்ராசீனமாக நமக்குக் கிடைக்கும் ஆயுர்வேத அறிவு

ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும் மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளைக் கூறும் சமஸ்கிருத புத்தகங்கள் பற்றிய அறிமுகம்.

பல்துறையோடு சேரும் ஆயுர்வேதம் எனும் சமன்வய ஞானம்

நவீன மருத்துவமும் ஆயுர்வேதமும் இணையும் அல்லது விலகும் புள்ளிகள்

மூல நூல்கள்


ஆயுர்வேதத்துக்கான மூல நூல்கள் பலவும் சமஸ்கிருதத்தில் உள்ளன.    சரக சம்ஹிதை, அஷ்டாங்க ஹ்ருதயம் போன்ற நூல்களைப் பற்றிய அடிப்படைகள் தமிழில் கிடைத்தாலும் முழுமையான மொழியாக்கங்கள் இல்லாதது ஒரு குறை என்கிறார். தமிழ் வழி படித்ததால் மகாதேவன் சமஸ்கிருத மூல நூலின் தத்துவங்களோடு நெருங்க முடியாததை ஒரு குறையாக முன் வைக்கிறார். ப்ராசீனமாகக் கிடைக்கும் ஆயுர்வேத அறிவு என்பது பல நூல்களில் பரந்துள்ளதால் விரிவான அறிவு கல்லூரிகளில் கிடைக்காது என்கிறார். பல வருடங்கள் தனிப்பட்ட முறையில் பயில்வதும், பயிற்சி செய்வதும் மூல நூல்களை தன்வசப்படுத்தும் வழி என அவர் கூறுகிறார்.


ஆயுர்வேதத் துறையின் பயிற்சிகள்


ஆயுர்வேதக் கல்வி என்பது பயிற்சியுடன் நூலறிவும் சேர்ந்த ஒன்றாகவே பார்க்க வேண்டும் என்பது மிக முக்கியமான பார்வையாக இந்நூலில் வெளிப்படுகிறது. மூல நூலில் கொடுக்கப்பட்டுள்ள வியாதியும் அதற்குண்டான சிகிச்சையும் அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு பிரத்யேகமான ஒன்று. அதில் சொல்லப்பட்டுள்ள மூளிகைகள் கால மாற்றத்தினால் கிடைக்காமல் இருக்கலாம், அதே போல ஆங்கில மருத்துவத்தின் முன்னேற்றத்தினால் பல நோய்களுக்கான அடிப்படைப்பார்வை முன் போல இல்லாமல் மாறி இருக்கலாம். இன்றைய காலத்தில் ஆயுர்வேதப் பயிற்சி என்பது மூல நூலை அப்படியே வழி மொழிவதோ, அப்பயிற்சிகளை எல்லா நோயாளிகள் மீதும் செயல்படுத்துவதோ அல்ல.


இன்றைக்கு ஆயுர்வேதம் படிக்க வரும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வி முடிவும் வரை மூலிகைகளை அடையாளம் காணும் ஞானம் வருவதில்லை என மகாதேவன் சொல்வதை நம் பிற துறை படிப்புகளோடு பொருத்திப் பார்க்க முடிகிறது. சமஸ்கிருத அறிவின் போதாமை, நம்மைச் சுற்றி இருக்கும் தாவரங்கள் பற்றிய அறியாமை, உடலின் முற்குணங்களைப் பற்றிய தெளிவு இல்லாமை, ஒரு குருவிடம் சென்று பயிலும் ஆர்வமோ வாய்ப்போ இல்லாமை போன்ற பல காரணங்களால் கல்லூரிப்படிப்பில் முழுமையான பயனை மாணவர்களால் பெற முடியாது என்கிறார் மகாதேவன். பொறியியல் போன்ற துறையிலும் இப்படிப்பட்ட போதாமைகளை நம்மால் பார்க்க முடிகிறது. விஞ்ஞானப் படிப்பின் அடிப்படைகள் பற்றி ஆர்வம் இல்லாததும், பயிற்சியாக எதையும் செய்யாமல் ஏட்டுப்படிப்பாக மட்டுமே இருக்கும் கல்வி அமைப்பின் சிக்கல்கள் இதோடு ஒத்துப்போகின்றன. ஆயுர்வேத மூல நூல்கள் சமஸ்கிருதத்தில் இருப்பது கூடுதல் சிக்கல். ஆனாலும் அது கடக்க முடியாத சிக்கல் அல்ல என்பதே மகாதேவனின் வாதம். ஆயுர்வேதம் போன்ற பன்முக ஞானத் தேவை இருக்கும் துறை, பிற அறிவுத் துறையிலிருந்து பலவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது அவரது அனுபவ அறிவு. நன்னூல், நாலடியார், திருக்குறள், சித்தர் பாடல்கள் போன்றவற்றில் ஆயுர்வேத அறிவின் சாரம் இருப்பதை அவரது ஒவ்வொரு பதிலிலும் நம்மால் பார்க்க முடிகிறது.


இன்றும் அவர் காலை நான்கு மணிக்கு எழுந்து மூல நூல்களயும், பிற தமிழ் நூல்களையும் படிக்கிறார். அதிலிருந்து கற்றுக்கொள்வதை நேரடியாகப் பயன்படுத்தாமல் நோயாளியின் தன்மை, நோயின் குறியீடுகள் போன்றவற்றைக் கொண்டு சிகிச்சை செய்கிறார்.


உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற்கூற்றே மருந்து


அது மட்டுமல்லாது ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சிப்பாதையை உற்று கற்று வருகிறார். இதனால் பிற ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் போல கிணற்றில் அடைந்து கிடைக்கும் பார்வை இவரிடம் இல்லை. ஆங்கில மருத்துவம், சித்தர் மருத்துவம் போன்றவற்றின் வளர்ச்சிகளிலிருந்தும் தோல்வியிலிருந்தும் அவர் தொடர்ந்து கற்று வருகிறார். அதோடு மட்டுமல்லாது அவற்றை சிகிச்சையிலும் செய்து காட்டுகிறார். உதாரணத்துக்கு ஆயுர்வேதத்தில் அவசர சிகிச்சைக்கு இடமில்லை என்பதை உணர்ந்திருப்பதால் நோயாளிகளின் குடும்பங்களுக்கு சரியான திசையைக் காட்ட முடிகிறது என்கிறார்.


இந்நூலின் ஆசிரியர் சுனில் கிருஷ்ணன் ஆயுர்வேத மருத்துவராக இருப்பதால் பல கேள்விகளை அவருடைய அனுபவத்திலிருந்தே கேட்டிருக்கிறார். இது ஒரு விதத்தில் ஆழமான விளக்கங்களைக் கோரி நிற்கிறது. குறிப்பாக ஆயுர்வேதம் பற்றிய அறிமுகமில்லாத வாசகர்களுக்கு ஒரு சிறு அறிமுகத்தைத் தந்திருந்தால் இக்கேள்விகளின் ஆழத்தை மேலும் அதிகமாகப் புரிந்துகொண்டிருக்க முடியும். பல சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு சிறு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் அவற்றை விரிவாகப் பேசமுடியா விட்டாலும், முடிவில் ஒரு அட்டவணையாகக் கொடுத்திருந்தால் மேலதிகத் தகவல்களை வாசகர்கள் அறிந்து கொண்டிருக்க முடியும். அதே போல, நவீன மருத்துவத்தை விட ஆழமான மருத்துவர் நோயாளி உறவையும், நோயாளி மருந்து அளிப்பவர் உறவு


ஆயுர்வேதத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், மருத்துவர் மகாதேவன் அவர்களின் பங்களிப்பினால் இந்தக் கிளையானது எவ்வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையும் அறிந்துகொள்ள மிக முக்கியமான நூலாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, எவ்விதமான வியாதிகளுக்கு ஆயுர்வேதம் நல்ல சிகிச்சை அளிக்கிறது எனத் தெரிந்துகொள்ளவும், ஆயுர்வேதப் படிப்பை பயில விருப்பமுள்ளோருக்கும் நல்ல ஒரு வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது.


இதைத் தொடக்கமாகக் கொண்டு ஆயுர்வேதம் சார்ந்து மேலும் பல நூல்கள் தமிழில் வர வேண்டும் எனும் விருப்பத்தை அதிகரித்துள்ளது. இந்த நூலைத் தொகுத்த சுனில் கிருஷ்ணனும், இல. மகாதேவனும் முன்னெத்தி ஏராக இருப்பார்கள் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.


அச்சு நூல் விலை: ரூ. 120
மின் நூல் விலை: ரூ. 94
காலச்சுவடு இணையதள இணைப்பு
மின் நூலின் இணைய இணைப்பு
அச்சுநூலின் இணைய இணைப்பு