Tuesday, December 31, 2013

சுருள் நீவி விரியும் காலம்

காலம் சுருண்டுகொண்டுவிட்டது. பெட்டிக்குள் அடங்கும் சர்ப்பத்தின் நாக்கு நுனி மட்டும் இன்னும் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கிறது, நாளை அதுவும் அடங்கிவிடும். ஆயிற்று, மற்றுமொரு வருடம் இதோ தன்னுள் என்னை செரித்துகொண்டுவிட்டது. முடிவற்று நீளும் நதிக்கரையில் நின்று ஒரு சான் நிலமளக்கும் சிறுமி போல் காலத்தை துண்டங்களாக ஆக்கி விட்டிருக்கிறான் மனிதன். முடிவற்ற சாத்தியங்களை தன்னுள் புதைத்துவைத்துக்கொண்டு கைமூடி குறும்பு மின்ன தெற்றுப்பல் தெரிய சிரித்து நிற்கிறாள் காலமெனும் சிறுமி.  வேறு அனேக காலதுன்டங்கள் போல் சென்ற ஆண்டும் எனக்கு எல்லாவகையிலும் முக்கியமானதே. வரும் ஆண்டும், ஆண்டுகளும் அப்படித்தான் இருக்கும். ஒரு அற்ப மகிழ்ச்சி, எங்கிருந்தோ எங்கு செல்வதற்கோ ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் போது கடக்கும் தொலைவு ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை. ஆனால் எங்கோ ஓரிடத்தில் நின்று இளைப்பாறும் கணத்தில் திரும்பி நோக்கும் போது ஒரு பயணம் நிகழ்ந்திருப்பது புலப்படுகிறது.


Friday, December 20, 2013

ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன்

ஆம்னிபஸ் தளத்தில் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம் 

கல்கி, தேவன், சேத்தன் பகத், ஹாரி பாட்டர் எனும் வட்டத்தில் புழங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நவீன தமிழ் இலக்கிய உலகை அறிமுகம் செய்த நண்பன் அவன். இணையத்தில் அவன் புழங்குவதில்லை என்றாலும் சிற்றிதழ் வட்டத்தில் முனைப்புடன் இயங்கிக்கொண்டு தானிருக்கிறான். நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் அவனை நண்பனின் திருமணத்தில் சந்திக்க நேர்ந்தது. ஏதேதோ இலக்கிய அரட்டைகள் என சுகமாக கழிந்துக்கொண்டிருந்த எங்கள் உரையாடல் மெல்ல காந்தியை பற்றியும் அண்மைய காலத்து அரசியல் நிகழ்வுகள் பற்றியும் திரும்பியது. சில நிகழ்வுகளில் எனது அரசியல் நிலைப்பாடை தெளிவு படுத்த வேண்டும் என்று கோரினான் ஒவ்வொரு விஷயத்திலும் நான் ஒரு நிலைபாட்டை எடுத்துத்தான் ஆக வேண்டுமா? ..இது சார்ந்து நான் எந்தவொரு நிலைப்பாடையும் எடுக்கவில்லை..நான் எழுதுவதும் வாசிப்பதும் உண்மையில் எனக்கொரு ஆன்மீக அனுபவம் அவ்வளவே..அரசியல் சர்ச்சைகளை பற்றி அதிகம் அலட்டிகொள்வதில்லை’ என்றேன். ‘ காந்தியின் பெயரை சொல்லிக்கொண்டு திரிகிறாயே தவிர அவரின் நேர்மை உன்னிடம் இல்லை’ என்று கோபமாக சொல்லிவிட்டு அகன்று சென்றான். அவன் சென்றபிறகு யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் எனக்கு நேர்மை இல்லையா? சிந்தனைகள் சுழற்றியடித்தன. வேறு பலரைப்போல் நானும் காந்தியின் பிம்பத்து நிழலில், ஒளிபுகாத இருளில் என் அகத்தை மறைத்து வைக்கிறேனா? கொஞ்சம் சுய விமர்சனங்களுக்கு பின்னர் இறுதியாக இப்படியொரு முடிவுக்கு வந்தேன், காந்தியின் அளவுக்கு இல்லையென்றாலும், ஓரளவு நேர்மை இருக்கவே செய்கிறது. ஆனால் காந்திக்கு இருந்த துணிவில் கால் பங்கு கூட எனக்கில்லை.






தமிழில் ‘cult status’ அனுபவித்த கொண்டாடப்பட்ட/ கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. ஒட்டுமொத்தமாகவே வாசிக்கும் விகிதாச்சாரம் குறைவு என்பது முக்கிய காரணமாக இருக்கலாம். ஜெயகாந்தன், சுஜாதா இருவரையுமே இவ்வகையில் முன்னோடிகள் என வரையறுக்கலாம். மக்கள் இவர்களை பின்தொடர்ந்தார்கள், அவர்களுடைய கருத்துக்களை வாழ்வில் பொருத்தி பார்த்தார்கள், எழுத்தாளர்கள் வாசகர்களுடைய அந்தரங்கமான மனவெளியை ஆக்கிரமித்தார்கள். அதுவும் குறிப்பாக ஜெயகாந்தன் எழுத்துலகில் ஒரு நாயகராகவே உலா வந்தவர். எழுபது எண்பதுகளில் பிறந்தவர்களில் ஊருக்கு ஒருவரின் பெயராவது ஜெயகாந்தன் என்று இருக்கும்.

ஜெயகாந்தனின் சில சிறுகதைகளை தான் நான் முதன்முதலில் வாசித்தேன். உண்மையில் பெருத்த ஏமாற்றமே எஞ்சியது. அதன் பின்னர் மீண்டும் கொஞ்ச காலம் கழிந்து அவருடைய சில நாவல்களை வாசிக்க நேர்ந்தது. ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ உண்மையில் ஒரு நல்ல படைப்பாக என்னை கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும். ஆனாலும் அக்காலக் கட்டத்தை சேர்ந்த, அவரைக்காட்டிலும் அபார மொழித்திறன் கொண்ட கதை சொல்லிகளை நான் வாசித்திருக்கிறேன். அவருக்கிருந்த வசீகரத்திற்கான காரணம் எனக்கு விளங்காமலே இருந்தது, ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவத்தை வாசிக்கும் வரை. ஏனெனில் ஜெ.கேவைப் பொருத்தவரை எழுத்து என்பதை தாண்டி எழுத்தாளர் எனும் ஆளுமையின் மீதான ஈர்ப்பு. தான் அவரை அத்தனை பிரம்மாண்டமாக ஆக்கியது என தோன்றுகிறது. படைப்பாளி எனும் திமிரும், உச்சபட்ச நேர்மையும் அவரை இன்றும் வாசகர்கள் கொண்டாடும் ஒரு படைப்பாளியாக ஆக்கியுள்ளது.

ஜெ.கே இளமை காலத்தில் காந்தியின் பால் ஈர்க்கப்பட்டு, கம்யுனிச பின்னணியில் வளர்ந்து, நேரு, காமராஜர் காட்டிய சோசியலிச சமூக கனவை தனதாக சுவீகரித்து கொண்டவர். 1971 முதல் மூன்றாண்டுகளுக்கு துக்ளக் இதழில் வெளிவந்த தொடர் தான் இந்த நூல். அதன் பின்னர் எத்தனையோ மாற்றங்கள் நேர்ந்துவிட்டன. எமெர்ஜென்சி, காமராஜரின் மரணம், இந்திராவின் மரணம், எம்.ஜி.ஆரின் எழுச்சி மற்றும் மரணம், இன்னும் என்னென்னவோ. தி.மு.க தலைவர் கருணாநிதியையும், அண்ணாவையும், ஒட்டுமொத்தமாக தி.மு.கவின் கொள்கைகளையும் கடுமையாக இந்நூலில் விமர்சித்து எழுதியிருக்கும் ஜெ.கே கூட தி.மு.க தலைவருடன் ஒரே மேடையில் அமர்ந்து சில காலத்திற்கு முன்பு உரையாற்றியது சிலருக்கு கடும் அதிருப்தியை அளித்தது. நான் அதை தவறென்று சொல்ல மாட்டேன்.. உக்கிரமும் கொதிப்பும் அடங்கி முதுமையில் பேரமைதியை நெருங்கும் தருணத்தில் கடந்த கால சில்லறை சர்ச்சைகள் எல்லாம் பொருளிழந்து போகக்கூடும் அல்லது வழி தவறிய சாதாரண வாய்ப்புகள் கூட அதி பிரம்மாண்டமாக மீண்டெழுந்து விரக்தியை அளிக்கக்கூடும். ஜெ.கே அவ்வகையில் மனவிரிவுடன் அமைதிக்கு அருகாமையில் இருக்கிறார் என்று மகிழ்ச்சியடைய வேண்டும். ஒருகால் இந்த நூலை ஜெ.கே இன்று எழுதியிருந்தால் இது இன்னும் பல உள் அடுக்குகளை கொண்டதாக இருந்திருக்கும்.

பொது வாழ்வில் நேர்மையும் துணிவும் கொண்ட நுட்பமான படைப்பிலக்கியவாதியின் வழியாக வரலாற்றை வாசிப்பது ஒரு அனுபவம். அதுவும் ஜெ.கே போன்று அக்கால அரசியல் ஆளுமைகளுடன் பழகிய, அரசியல் மேடைகளில் புழங்கியவர் முன்வைக்கும் விமர்சனங்களும் பார்வைகளும் கூர்மையானவை. காந்தி, நேரு, காமராஜர் ஆகிய மூன்று ஆளுமைகள் மீது மிகப்பெரிய அளவில் மரியாதை கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக காமராஜரைப் பற்றி இவரளிக்கும் சித்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. எனக்கு தெரிந்து காமராஜரை மட்டுமே அவர் தலைவர் காமராஜர் என்று விளிக்கிறார். காந்தியை நெருங்கி அறிய முற்பட்ட தொடக்க காலத்தில் நேருவின் மீது எனக்கொரு விளக்க முடியாத வெறுப்பு இருந்ததுண்டு.. ஆனால் அண்மைய காலத்து வாசிப்புகள் வழியாக அவருடைய அத்தனை பலவீனங்களுடனும் நேரு எனும் மகத்தான மக்கள் தலைவரை என்னால் நெருங்கி புரிந்துகொள்ள முடிகிறது. இந்நூல் அப்புரிதலை உறுதிப் படுத்தி விரிவு படுத்துகிறது என்று நிச்சயம் சொல்வேன்.





ஒட்டுமொத்தமாக இந்நூலின் உள்ளடக்கத்தை இப்படி தொகுத்து சொல்லலாம், மானுடத்தை மீட்டு சமதர்ம சோசியலிச சமூகத்தை கட்டமைக்க நமக்கிருக்கும் ஒற்றை பெரும் வாய்ப்பாக ஜெ.கேவிற்கு கம்யூனிசத்தின் மீதிருந்த நம்பிக்கை, மற்றும் அவர் அனுபவம் வழியாக இந்தியாவில் நடைமுறையில் அது அடைந்த வீழ்ச்சி. இந்தப் புள்ளியை சுற்றியே அவருடைய அரசியல் செயல்பாடுகள் மற்றும் பார்வைகள் இருந்தன. ஒரு இயக்கம் அல்லது அமைப்பிற்கு ஒரு பொது செயல்திட்டமிருக்கும், அவ்வியக்கத்தில் பங்கு வகிக்கும் தனிமனிதனுக்கு அந்த செயல்திட்டத்தின் பால் மாற்று கருத்து இல்லையென்றால் சந்தோஷம். ஆனால் தனி மனிதனாக தான் பங்கு வகிக்கும் இயக்கம் தான் அறமென்று நம்பும் ஒரு திசைக்கு நேரெதிர் திசையில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் பயணித்தால் தனி நபராக நாம் அங்கு என்ன செய்ய இயலும்? நாமும் அந்த சுழலில் நம்மை பொருத்திக்கொண்டு கரையேறலாம் அல்லது நாம் சரி என்று நம்பும் திசையை நோக்கி எதிர்த்து நீந்தலாம் அல்லது போதும் நமக்கேன் வம்பு என்று கரை ஒதுங்கலாம். ஜெ.கே தான் நம்பும் கம்யுநிசத்திற்கு விசுவாசமாக இருக்கும் அதேவேளையில் கட்சி எதிரி என அரசியல் காரணங்களுக்காக கட்டம் கட்டும் நபர்களை அப்படியே எதிரி என்று ஏற்றுக் கொள்பவர் அல்ல. காந்தியையும் நேருவையும் காமராஜரையும் வெவ்வேறு காலகட்டத்தில் எதிரிகளாக கட்டமைத்த கட்சியின் நிலைபாட்டிற்கு உடன்பட மறுக்கிறார். சோசியலிச நாடாக தன்னை பிரகடனப் படுத்திக்கொண்ட சீனா இந்தியாவை ஆக்கிரமிக்க தொடங்கியபோது கம்யுனிஸ்டுகளில் இரு பிரிவுகள் தோன்றின. சீனாவின் நாடுபிடிக்கும் வேட்கையை ஆதரிக்கும் ஒரு கோஷ்டியும் அதை எதிர்த்து நிற்கும் மற்றொரு பிரிவும். (CPI க்கும் CPM க்கும் உள்ள வேறுபாடு இப்போது தான் புரிந்தது) ஜெ.கே பால தண்டாயுதபாணி, மோகன் குமாரமங்கலம் வழியில் நேருவின் இந்தியாவிற்கு துணையாக நின்றார்.

ஜெ.கேவிற்கு இருந்த சில நுட்பமான அரசியல் புரிதல்கள் உண்மையில் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஜீன் ஷார்ப், எரிக்கா போன்ற அரசியல் ஆய்வாளர்கள் அகிம்சை மற்றும் வன்முறை போராட்டங்களை பற்றி ஆராய்ந்து அண்மைய காலங்களில் கண்டடைந்த முடிவுகளை ஐம்பதுகளின் தொடக்கத்திலேயே அதாவது அவருடைய பதின்ம வயதினிலேயே அடைந்துவிடுகிறார் ஜெ.கே.

சுதந்திரத்திற்கு பின்பான இந்தியாவில் நேருவுக்கு ஆதரவாக இருந்த ஜோஷியின் தலைமை அகன்று ரனதிவே அப்பதவியை அடைந்தவுடன் அரைக்குறையாக புரட்சிக்கு அறைக்கூவல் விடுக்கப்பட்டு, அரசால் கம்யுனிஸ்டுகள் ஒடுக்கப்பட்டனர். சில காலம் கம்யுனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. அந்த கால கட்டத்தில் ரகசிய நடவடிக்கைகளில் பங்கு வகித்த ஜெ.கே சொல்லும் மிக நுட்பமான அவதானிப்பு ஒன்றை சூட்டுகிறேன்.
“ஒரு இயக்கம் தனது லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள ரகசியமான வழிகளையும், பலாத்காரமான முறைகளையும் கைக்கொள்ளும்போது அந்த இயக்கம் சம்பந்தப்பட்ட தனி மனிதர்களிடம் ஒளிந்துக் கொண்டிருக்கிற பலவீனங்களும் தனிமனிதக் குறைபாடுகளும் இந்த ரகசிய முறையைப் பயன்படுத்திக்கொண்டு வெளிபடுகிற விபரீதங்களை நான் கண்டதால் ரகசிய முறைகளை வெறுத்தேன்”.

ஜெ.கேயின் மேடை பேச்சை கேட்டு வளராத தலைமுறையை சேர்ந்தவன் என்றாலும் கூட அவர் உரையாற்றிய காலகட்டம் மற்றும் சூழலை கணக்கில் கொண்டு அவர் உரை எத்தகையதாக இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. உதாரணமாக திருச்சியில் நடைபெற்ற எழுத்தாளர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த பெரியாரின் முன்னிலையில் அவராற்றிய உரை http://www.thoguppukal.in/2011/02/blog-post_2364.htmlஒரு உதாரணம். சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றதற்கு பிராமணர்கள் ராஜாஜியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வாக்களித்தது தான் என்றொரு பேச்சு கிளம்பியிருந்த சூழலில் சென்னை வாழ் பிராமண இளைஞர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு, “யார் பிராமணன்?” என்று அவராற்றிய உரை அவருடைய துணிச்சலுக்கு எடுத்துக்காட்டு. அண்ணாவின் மரணத்திற்கு பின்பான காலகட்டத்தில் கண்ணதாசன் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை மற்றொரு உதாரணம். இறந்துவிட்டார் என்பதில் வருத்தம் தான் என்றாலும், அதற்காக அவரை விமர்சிக்காமல் இருக்க முடியாது என்று கடுமையாகவே உரையாற்றுகிறார். பண்பாட்டு சீரழிவுக்கு காரணம் தி.க / தி.மு.க அல்ல மாறாக சீர்கேட்ட பண்பாட்டின் விளைவே அது என்கிறார். அண்ணாவின் மரணத்திற்கு கூடிய கும்பலை பற்றி பலரும் வியந்து பெசிக்கொண்டிருத சூழலில் கும்பலுக்கும் (mob) கூட்டத்திற்கும் (gathering) உள்ள வேற்றுமையை கோடிட்டு காட்டுகிறார். இளமை பருவத்தில் அமெரிக்க தூதரகத்தின் மீது கல்லெறியும் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டு இறுதியில் தவறாக நூலகத்தின் மீது கல் எறிந்தனர். அவர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. இவர் திட்டமிட்ட எண்ணிக்கையை காட்டிலும் , சம்பந்தமில்லாத நபர்கள் கூட கல் எறிந்துவிட்டு சென்றதை கவனித்து இத்தகைய கும்பல் கலாச்சாரத்தின் அழிவு தன்மையை உணர்ந்ததாக சொல்கிறார். “காந்திஜியைப் பற்றியும் சாத்வீகப் புரட்சி பற்றியும் பெரிய நினைப்புகள் வைத்திருந்த எனக்கு இந்தப் பேதைத்தனம் எப்படி வந்தது? மனிதர்களை பலாத்காரம் எவ்வளவு வேகமாக பற்றிப் பிடித்துகொள்கிறது? தங்களுக்கு சொந்தமில்லாதவற்றை எல்லாம் அழித்து விடுவதிலே அவன் எவ்வளவு மும்முரமாக நிற்கிறான்!”

தோழர் ஜீவானந்தத்துடன் பழகியவர் ஜெ.கே. அவருடைய மரணத்திற்கு பின்னர் எழுதிய டைரிக் குறிப்பின் சில பகுதிகள் இந்நூலில் உள்ளது. தன்னை தானே அந்த துக்கத்திலிருந்து மீட்டுக்கொள்ளும் அற்புதமான எழுத்துக்கள். மார்க்சிய அரசியலில் அவர் ஆசானாக கருதும் பால தண்டாயுதபாணி காமராஜுக்கு எதிரான நிலைப்பாடை எடுத்தபோது அத்தனை ஆண்டுகால நட்பில் விரிசல் வந்து பிரிய நேர்கிறது. உணர்ச்சிகரமான பிரிவுக்கு பின்னரும் அவர்களுடைய நட்பு நீடித்தது. பாலன், எஸ்.ராமகிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம், ஆர்.கே.கண்ணன் போன்ற அக்காலத்திய கம்யுனிச தலைவர்களைப் பற்றி விரிவாகவே பேசுகிறார். அதேப்போல் திமுக விலிருந்து விலகிய ஈ.வி.கே சம்பத் பற்றியும் மதிப்புடன் பேசுகிறார். 

“ராஜாஜியின் தோல்விகளுக்கெல்லாம் கரணம் அவர் காந்தியாக முயன்றது தான். காந்திஜியின் தத்துவங்களையும் லட்சியங்களையும் அவர் சித்த சுத்தியுடன் ஏற்றுக்கொண்டாலும் அவர் காந்திஜிக்கு இணையானவராக இல்லை. காந்திஜி வர்ணாசிரம தர்மத்தை மந்திரிசபைகள் நிறைவேற்றும் சட்டங்களின் துணைக் கொண்டு நாட்டில் புகுத்த நினைக்கவோ முயலவோ இல்லை.” என்று ராஜாஜிக்கு உரிய மரியாதையை அளித்த பின்னர் தான் கடுமையாக விமர்சிக்கிறார். மற்றொரு தருணத்தில் காமராஜரை வீழ்த்த ராஜாஜி தி.மு.க துணை நாடிய சல்லிசான அரசியலை கடுமையாக விமர்சிக்கிறார். அவ்வகையான கொள்கையற்ற கூட்டணிகள் அமைவதற்கு இந்திய அளவில் ராஜாஜியே வழிகாட்டினார் என்கிறார். சுதந்திரா கட்சியின் உதயத்தை தேசிய அரசியலின் மிக முக்கியமான கட்டம் என கருதும் ஜெ.கே, அதற்கான காரணங்களை பட்டியலிடுகிறார்- சோசியலிச இடது சாரி சார்புடைய, சோவியத்துக்கு அணுக்கமான காங்கிரஸ் கட்சிக்கு நேரெதிராக காந்திய, அமெரிக்காவுக்கு அணுக்கமான, வலது சாரி சார்புடைய சுதந்திரா கட்சி உருவாவதன் மூலம் அது ஒரு வலுவான எதிர்தரப்பாக இருக்க முடியும் என்று கருதுகிறார். ஆனால் அக்கட்சியும் வீழ்ந்தது. 
     
துணைப் பிரதமராக திகழ்ந்த மொரார்ஜி தேசாயை விமர்சித்து எழுதிய தலையங்கம் இப்படி தொடங்குகிறது – ‘நேருவைப் போல் தொப்பி அணிந்துள்ள மொரார்ஜி அவர்களே’. தி.க/தி.மு.க, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியவர்களின் மீது ஜெ.கே வைக்கும் கடுமையான விமர்சனங்கள் இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கவனப்படுத்தாமல் செல்வது இந்நூலுக்கும் ஜெ.கேவிற்கும் செய்யும் அவமரியாதை. தேசிய ஒருமைப்பாடை குலைக்கும் குறுகிய இன/மொழி/ பிராந்திய வாதத்தை முன்மொழியும் ஃபாசிச கூறுகள் கொண்ட இயக்கம் தான் தி.க/தி.மு.க என்பதே அவருடைய கருத்தாக இருந்திருக்கிறது. தெளிவாக தி.க/ தி.மு.க தனது எதிரி என்பதை அறிவித்துவிட்டு, அவர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடையே தொடர்ந்து எடுக்கிறார். மேம்போக்கான கடவுள் மறுப்பு, பிராமண த்வேஷம், அதீத தமிழ் பற்று போன்றவை திராவிட கட்சி ஏற்படுத்திய மாயைகள். நாத்திக வாதம் ஒன்றும் இந்திய மரபிற்கு புதிதல்ல மாறாக ஆத்திக வாதத்தின் அளவிற்கே இந்திய பண்பாட்டில் தொன்மையாக வேரூன்றிய மாற்று தரப்பு என்பதே அவருடைய கருத்தாக இருக்கிறது. கருணாநிதி வலிந்து உருவாக்கிய அண்ணா மாயைக்கு அவரே பலியானார் என்கிறார் ஜெ.கே. அவரை பொருத்தவரை கருணாநிதி அண்ணாதுரையை காட்டிலும் திறன் மிகுந்தவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் மிகக் கடுமையாக எதிர்க்கிறார். அண்ணாவை அறிஞர் என்று அழைப்பதை கூட கடுமையாக பகடி செய்கிறார்.

அவருடைய விமர்சனத்திற்கு உள்ளாகும் மற்றொரு இயக்கம் அவர் சார்ந்த கம்யுனிஸ்ட் கட்சி. கம்யுனிஸ்டுகளின் கனவான சோசியலிச சமூகத்திற்கான மாற்றம் நேருவின் அரசால் மிக இயல்பாக மலர்ந்து கொண்டிருந்தது. எந்த வன்முறையும் இல்லை. நேருவின் அரசிற்கு தோள்கொடுத்து வலதுசாரிகளின் ஆதிக்கத்தை கட்டுபடுத்த வேண்டிய கம்யுனிஸ்ட் கட்சி அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது அவருக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளித்தது. தமிழகத்திலும் காமராஜர் விரோத சக்திகளுடன் கம்யுனிஸ்ட் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரு ‘பெட்டி பூர்ஷ்வா’ இயக்கமாக மாறியதை எண்ணி வருந்துகிறார். சோசியலிச நாடாக மலர்ந்த சீனா இந்தியாவை ஆக்கிரமிக்க முயன்ற போது மா செ துங்கை விமர்சிக்கிறார். இது சித்தாந்த வீழ்ச்சியல்ல மாறாக தனி ஒரு மனிதரின் அதிகார வேட்கை. காந்திக்கும் காங்கிரசுக்கும் உள்ள தொடர்பு என்னவோ, இந்து தர்மத்திற்கும் இன்றைய சமூக இந்துவிற்கும் என்ன தொடர்போ அதுவே மார்க்சியதிற்கும் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் உள்ள தொடர்பு என்கிறார். சோவியத்தின் வீழ்ச்சியை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று தெரியவில்லை. ஏனெனில் சோவியத் மீது ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். மார்க்ச, லெனின் என்றில்லை ஸ்டாலின் மீதும் அவருக்கு அபார நம்பிக்கை இருந்தது. ஸ்டாலினின் சோவியத் களையெடுப்புகள் பற்றி அரசால புரசலாக அப்போதே எழுந்த குற்றசாட்டுகளை முதாளித்துவ தேசங்களின் கட்டுக்கதை என்று ஏற்க மறுக்கிறார். கம்யுனிச தேசங்களில் நடைபெறும் தவறுகளுக்கு கம்யுனிச சித்தாந்தம் பொறுப்பாகாது மாறாக அதைக்கொண்டு அதிகாரத்தை அடைந்த தனிநபர்களின் பலவீனம் மட்டுமே எனும் பார்வை நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதாகவே எனக்கு தோன்றுகிறது. ஒரு முற்றதிகார நபருக்கு மாற்றாக அந்த இடத்தில் ஒரு சித்தாந்தம் வந்து அமர்கிறது என்பதே கம்யுநிசத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் உள்ள வேறுபாடு எனும் எண்ணமே மேலிடுகிறது. 

ஒரு காலகட்டத்தின் அரசியல் நிகழ்வுகளின் மீது தனது தனித்த பார்வைகளை முன்வைத்து அதன் வழியாக வரலாற்றை காட்டி செல்லும் இந்நூல் மிக முக்கியமானது என்பதில் மாற்றுகருத்து இல்லை.

“ஒன்றின் மீது நம்பிக்கையற்று போவதற்கு நாம் மட்டும் காரணமல்ல; அந்த ஒன்றும் சம அளவோ அல்லது பெருமளவோ காரணமாகும். இருந்த நம்பிக்கை அற்றுப் போனால் அதற்கு அவநம்பிக்கை என்று பொருளல்ல. ஒன்றின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களாவது பின்னொரு காலத்தில் அதன் மீது நம்பிக்கை கொல்வதற்கு இடமிருக்கிறது. ஆனால் நம்பியவர்கள் ஒருபோதும் அவநம்பிக்கை கொள்வதில்லை. வேறு வேறு காரணங்களால் அவர்கள் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். ஆனால் தீமையும் வீழ்ச்சியும் எங்கு எப்படி ஏற்படுகிறது தெரியுமா? நமது நம்பிக்கையின்மையை நாம் மறைத்து கொள்கிற பொழுது; நம்புவதாக வேஷம் போடுகிற பொழுது.”

ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்
ஜெயகாந்தன்
தமிழ்/ அபுனைவு/ அரசியல்/ சுய சரிதை
மீனாட்சி புத்தகாலயம்

Monday, October 28, 2013

தற்செயல்களின் ரசவாதம்


(ஆம்னிபஸ் கட்டுரையின் மீள்பதிவு) 

முற்றிலும் புதிய ஒரு பாதையில், பார்த்துப் பழகியிராத மனிதர்களுடன் பேருந்தில் பயணிக்கும்போது, திடீர் என்று இந்த இடத்தையும் இந்த மனிதர்களையும் நாம் இதற்கு முன் பார்த்த மாதிரியும் பழகிய மாதிரியும் உங்களில் எவருக்கேனும் தோன்றியிருக்கிறதா? அது மட்டுமல்லாமல் இன்ன இடத்தில் ஒரு வேகத்தடையோ பள்ளமோ இருந்து, முன்பு எப்போதோ கடைசி சீட்டில் அமர்ந்திருக்கும்போது எகிறியடித்து புடறி வலித்த அனுபவம் நினைவுக்கு வந்து, சுதாரிப்புடன் அமரும் அந்தக் கணத்தில் உண்மையிலேயே அங்கு ஒரு வேகத்தடை வந்தால் மனம் கொள்ளும் பரபரப்பு இருக்கிறதல்லவா- . யுவனின் சிறுகதைகளை வாசித்த அனுபவத்தை இப்படித்தான் விளங்கிக்கொள்ள முடியும். யுவனின் கவிதைகள் மீது கொஞ்சம் அறிமுகம் உண்டு என்றாலும் அவருடைய  சிறுகதைகளை வாசிப்பது இதுவே முதல்முறை. உண்மையில் அபாரமான வாசிப்பனுபத்தை அளித்தது.



மருத்துவத்திற்கு மருத்துவம் – டாக்டர்.பி.எம்.ஹெக்டே – தமிழில். டாக்டர்.ஜீவானந்தம்


(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை ஒன்று)  

இன்றைக்கு இந்திய மருத்துவம் பயின்றவர்களுக்கு உள்ள மிகப்பெரிய சிக்கல் என்பது அவர்களுக்கு இந்திய மருத்துவத்தின் மீதும் பூரண நம்பிக்கை இல்லை, நவீன மருத்துவத்தின் மீதும் பூரண நம்பிக்கை இல்லை என்பதே. நவீன மருத்துவத்தின் எல்லையும் இந்திய மருத்துவத்தின் எல்லையும் வேறானவை. நவீன மருத்துவம் கைகழுவிய நோயாளிகளே பெரும்பாலும் இந்திய மருத்துவ முறைகளை நாடி வருகிறார்கள். நம்பிக்கை நீர்த்து தீராத பிணியிலிருந்து மீண்டெழ முடியும் என தங்கள் இறுதி நம்பிக்கையாக இந்திய மருத்துவத்தை நாடி வரும் ஒவ்வொரு நோயாளியை பார்க்கும் போதும் என் மனம் கலக்கமடையும். உண்மை நிலையை சொல்வது அவர்களின் நம்பிக்கையை அழிப்பதாகும், போலி வாக்குறுதிகளையும் அள்ளி வீசிவிட முடியாது. பெரும் மனப்போராட்டம் தான். நான் உண்மை நிலையை விளக்குவதையே எனது வழிமுறையாக கொண்டிருந்தேன், அண்மைய காலம் வரை. 


                                                  டாக்டர் பி.எம் ஹெக்டே 

Monday, September 9, 2013

உருகும் மெழுகின் வெளிச்சத்தில் - பால் சக்காரியாவின் 'சந்தனுவின் பறவைகள்'

ஜெயமோகன் நடத்தும் இலக்கிய முகாம்களுக்கு கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து சென்றுவருகிறேன். இணையம் வழி உரையாடும் நண்பர்களை நேரில் சந்தித்து உரையாடுவது நல்ல அனுபவம். இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில் வழக்கமாக நடைபெறும் ஊட்டியில் இல்லாமல் ஏற்காடில் நடைபெற்றது. கம்பன், வில்லி பாரதம் மட்டுமின்றி சிறுகதை விவாத அரங்கும் கவிதை விவாத அரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்கால இந்திய மாற்றுமொழி சிறுகதைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து உரையாற்ற வேண்டும் என எனக்கு என் பங்கு பணி பிரித்து கொடுக்கப்பட்டது. மாற்றுமொழி சிறுகதைகளை தொடர்ந்து அதிகம் வாசிப்பவன் இல்லை நான். மே மாத இறுதியில் திருமணம் வேறு, ஆனாலும் இது ஒரு பெரிய வாய்ப்பு என்பதால் விட்டுகொடுக்க மனம் ஒப்பவில்லை. நண்பர் நட்பாசிடம் சொல்லி ஏதேனும் புத்தகங்களை சென்னையிலிருந்து வாங்கி அனுப்புங்கள் என கேட்டுக்கொண்டேன். என்னிடம் இருந்த மகாஸ்வேதா தேவி சிறுகதை தொகுப்பில் எனக்கு எதையும் தேர்வு செய்ய பிடிக்கவில்லை. வம்சி வெளியீட்டில் வெளிவந்த இரு மொழியாக்க தொகுப்புக்களை அனுப்பினார், அவற்றில் பால் சக்காரியாவின் தொகுப்பும் ஒன்று. மற்றொன்று சூர்ப்பனகை எனும் தொகுப்பு. அவற்றில் பால் சக்காரியாவின் தொகுப்பை தேர்வு செய்தேன். அத்தொகுப்பில் இரு கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. எனினும் இக்கதை அகத்திற்கு நெருக்கமாக இருந்தது.   ஆகவே இக்கதையை தேர்வு செய்தேன். இது ஒரு சிறுகதையே அல்ல என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்தன. எனினும் இக்கட்டுரை பலரையும் சென்று சேர்ந்தது என்றே எண்ணுகிறேன். ஜெயமோகன் தளத்தில் வெளியான கட்டுரை.

Tuesday, September 3, 2013

காந்தியின் மதம்

காந்தியின் மதம் காந்தி இன்று இணைய தளத்தில் வெளிவந்த கட்டுரை. எழுதப்பட்ட போது. இக்கட்டுரையின் பேசு பொருள் குறித்து காரசராமான விவாதம் நண்பர் நட்பாசுடன்  நிகழ்ந்தது நினைவுக்கு வருகிறது. மதச்சார்பின்மை, போலி மதச்சார்பின்மை என ஆக்ரோஷமாக விவாதித்தோம். மதச்சார்பின்மை என்பதே ஒரு ஐரோப்பிய இறக்குமதி என்றார். காந்தியின் மதச்சார்பின்மை என்பது பன்மையை அங்கீகரித்து ஏற்றுகொள்வதன் விளைவு, அது இந்த மண்ணிலும் மரபிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்து வருகிறது எனும் புரிதலை நாங்கள் ஒரு மாதிரியாக இறுதியில் அடைந்தோம், அதுவே போலி மதச்சார்பின்மைவாதிகளிடம் இருந்து காந்தியை தனித்து காட்டுகிறது.

--------------------------- 

பிபன் சந்திரா , நேஷனல் புக் ட்ரஸ்டின் தலைவராவார். புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். அவர் 2003 ஆம் ஆண்டு பல்கலைகழகத்தில், மகாத்மா –மதச்சார்பின்மை, மதவெறி எனும் தலைப்பில் நீண்ட உரை ஒன்றை ஆற்றினார். அந்த உரையை தமிழில் அ.குமரேசன் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் சிறிய நூலாக வெளியிட்டுள்ளது.

Sunday, September 1, 2013

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே

நண்பர் ஒருவர் நாகராஜனின் குறத்திமுடுக்கு குறுநாவலுக்கான சுட்டி அனுப்பியிருந்தார். எப்போதோ ஆம்னிபஸ் இணையதளத்தில் நாளை மற்றொரு நாளே குறித்து எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது, அதை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.  
--------------------

நண்பர்களுடனான விவாதத்தின்போது, ஒரு நண்பர் சொன்னார், ‘ஒரு நாள் பிறருடைய புலன்களுக்குச் சிறைபடாத ‘ஹாலோ மேன்களாக’ மாறும் வாய்ப்பு கிட்டினால் நாம் செய்யும் முதல் காரியமே நம்மைப் பற்றி நாம் கொண்டுள்ள மிகையான மகானுபாவ பிம்பங்களுக்குப் பின் ஒளிந்திருக்கும் உண்மை முகத்தை நமக்கு காட்டிவிடுவதாக இருக்கும்’. அவரை கோபமாக எதிர்த்து விவாதித்து மறுத்தேன், ஆனால் நம் லட்சிய பிம்பங்களைக் கலைக்கும் இந்த அவநம்பிக்கை செருப்பில் ஏறிய முள்ளாக என்னைக் குத்திக்கொண்டே இருக்கிறது. ஆகாய விமானத்தின் தரை நிழல்போல அற்பத்தனங்களும், சல்லித்தனங்களும் மானுட வாழ்வில் தவிர்க்க முடியாதவை போலும்.  அவற்றைத் தாண்டி வருவதும், அழித்து எழுவதும் சாத்தியமா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் புரிந்து ஏற்றுகொள்வதைத் தவிர வேறு வழியேதும் இல்லை. 

Thursday, August 29, 2013

வாசுதேவன் சிறுகதை- சில எதிர்வினைகள்

இக்கதைக்கு வந்த எதிர்வினைகளை ஒட்டுமொத்தமாக தொகுத்து வைத்துள்ளேன். அவை பாராட்டுகிறதா நிராகரிக்கிறதா என்பது முக்கியமல்ல. கதையை வாசித்து காழ்ப்பின்றி ஆற்றப்படும் அத்தனை எதிர்வினைகளும் முக்கியமானதே, ஆக்கப்பூர்வமானதே. ஒட்டுமொத்தமாக அனைத்து எதிர்வினைகளையும் சேர்த்து வாசிக்கும் போது ஒரு முழுமையான சித்திரம் கிட்டுவதாக தோன்றுகிறது.


Tuesday, August 27, 2013

வாசுதேவன் - சிறுகதை



பட்டணத்து அரவங்கள் வந்தடைய முடியாத புறநகர்ப் பகுதியில் அவர்களின் வீடு இருந்தது. மின்சார ரயில்கள் கணப்பொழுதில் ஓடி மறையும் ஒரு ரயில்வே கேட்டில் மணிக்கணக்காக காத்து நின்றுதான் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியும். பொறுமையிழந்து மெல்ல வண்டியை விட்டிறங்கி, வண்டியை ஒருபக்கம் சாய்த்து நானொரு பக்கம் சாய்ந்து கேட்டின் அடிப்புறம் வழியாக புகுந்து வெளிவந்தேன். இளங்கோ இறங்கிச் சென்று மறுவாயிலில் காத்திருந்தான்.

“மாப்ள இடம் சரியா நெனவிருக்கா…? எங்கயோ பொட்டலுக்கு நடுவுல கூட்டிட்டு போனாய்ங்க.”

“அவர் ஃபோன் நம்பர் இருக்குல... வேணும்னா கேட்டுக்குவோம்”

“ பிசாத்து காசு முன்னூறு ரூவாக்காக எவ்ளோ தூரம்டா வர்றது? ச்ச. நாய் பொழப்புடா மாப்ள, பொணத்துக்கெல்லாம் வைத்தியம் பாக்க வேண்டியதாப் போச்சு”

திரும்பிப் பார்த்து முறைத்தேன். சரளை கற்கள் குத்தீட்டிப் போல் நீட்டிக்கொண்டிருக்கும் அந்தச் செம்மண் சாலையில் சென்று கொண்டிருந்த போது, தற்செயலாக அவன் வாய்விட்டு சொன்னதைத்தான், நானும் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

பணம்கூட பிரச்சனையில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் எங்கள் துறைத் தலைவரின் ஏவலாட்கள் மட்டுமே. பயிற்சிக் காலத்தை ஒழுங்காக முடித்துக்கொண்டு ஊர் திரும்ப வேண்டும். நோயாளிகள் தப்பித்தவறிகூட எட்டிப் பார்க்காத புறநோய்ப் பிரிவு கொண்ட மருத்துவமனை எங்கள் கல்லூரியுடையது. அனுபவ அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமே என வேண்டி விரும்பி நாங்களாக சென்றுதான் அவ்வட்டாரத்தில் பெரும் புகழோடு இருக்கும் அவரிடம் பணி செய்ய ஒப்புக் கொண்டோம். காலையும் மாலையும் அங்கேயே தவம் கிடந்தோம். காலப்போக்கில் சலிக்கத் தொடங்கியது. சம்பளமில்லாத அடிமைகளாக சிக்கிவிட்டதால் சக்கையாக வேலை வாங்கினார். மருத்துவ நுட்பங்களைக் கற்றுக் கொண்டோமா என்றால் அதுவுமில்லை. நோயாளிகளை அண்ட விடமாட்டார். மருந்துகள்கூட பட்டிகளைப் பிய்த்து மொத்தமாக புட்டிகளில் அடைத்து, வரிசை எண் போட்டு வைத்திருப்பார். எல்லாவற்றிலும் ஒரு ரகசியத்தன்மை. எரிச்சலாக வந்தது. எண்ணெய் தேய்த்து விடுவது, பிழிச்சல், கிழிகள் செய்வது எங்கள் வேலை. அத்துடன் துண்டுச் சீட்டில் அவர் எழுதிக் கொடுக்கும் எண் கொண்ட மருந்துகளை எடுத்துக் கொடுக்க வேண்டும். இன்னும் மூன்று மாதங்கள்தான் எங்கள் பயிற்சிக் காலம் என்பதால் சகித்துக் கொண்டு வெளியேறிவிடலாம் எனக் கனவு கண்டு கொண்டிருந்தபோதுதான் இங்கு வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது.

“மாப்ள... இந்த வீடுதான்னு நெனக்கிறேன்...வெளியே அந்த ஆர்ச் வளவு இருக்கு பாரு” .

கை கால்களில் பாயும் ரத்தமெல்லாம் வற்றி வயிற்றுக்குள் வடிந்து புரண்டு புரண்டு பாய்ந்தோடுவது போலிருந்தது. அச்சமா? அருவருப்பா? சொல்லத் தெரியவில்லை. உருக்குலைந்து துருப்பிடித்த இரும்புக் கம்பி மீது அடர்நீல சங்குப்பூ  செடி சாய்ந்திருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு நானும் இளங்கோவும் இறங்கிச் சென்றோம். சாம்பல் நிற நாட்டு நாயொன்று ‘வள்ளென’ பாய்ந்து வந்தது. கதவருகே பம்மி நின்றுவிட்டோம்.

மண்ணில் எதையோ கொத்திக் கொண்டிருந்த வரதராஜன் சத்தம் கேட்டு மெல்ல எழுந்து நின்றார்.

“வாங்க தம்பி… வாங்க... இப்பத்தான் சார் ஃபோன் பண்ணாரு.” களைக்கொத்தியை கீழே போட்டுவிட்டு, முண்டா பனியனில் கை துடைத்துக்கொண்டு கைலியை உதறியபடியே எங்களை நோக்கி வந்தார்.
“உள்ற வாங்க தம்பி...”

“இல்ல... நாயி”

கதவை அவரே திறந்துவிட்டப்படி, “அது இப்படிதான் சும்மா கத்தும்...ரே லோப்ல போரா” என்று அதட்டினார்.

“உள்ற  வாங்க... நான் பாத்துக்குறேன்”

மெல்ல வீட்டிற்குள் நுழைந்தோம். நடுத்தர வர்க்கத்துச் சிறிய வீடுதான். வர்ணங்கள் உதிர்ந்து ஆங்காங்கு உலர்ந்த சிமிண்ட் சர்மம் புலப்பட்டது. முன்பகுதியில் சிறிய தோட்டம் போட்டிருந்தார்கள். வெண்டைக்காய், மணத்தக்காளி, கர்ப்பூரவல்லி, இன்னும் விதவிதமான பூச்செடிகள் தென்பட்டன. நல்ல வளமான செம்மண் நிலம். சுற்றுச் சுவரோரம் நான்கு தென்னை மரங்கள் இருந்தன. மாமரங்களும் பலாமரங்களும்கூட இருந்தன.
“உக்காருங்க தம்பி... வாசுவ தயார் செஞ்சுட்டு கூப்புடுறேன்... காபி கொண்டாரச் சொல்லட்டா?”

“இல்லை, வேணாம் சார்”

“ஏன்?”

“காப்பி, டீ சாப்புடுறதில்ல”

இடைமறித்து இளங்கோ, “சார் பூஸ்ட் ஹார்லிக்ஸ்ன்ன ஓகே” என்றான்.
“சரி தம்பி... பூஸ்ட் தரச் சொல்லுறேன்... இருங்க... அம்மாயி, வாலிக்கி பூஸ்ட் ஈமா” என்று கூறியபடி வேறோர் அறைக்குள் மறைந்தார்.

எதிர்ச்சுவற்றில் பல கருப்பு வெள்ளை மற்றும் வண்ணப் புகைப்படங்கள் தொங்கின. அவற்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒற்றைக் கோட்டு நாமம், காதில் கடுக்கன், அடர்ந்த தொங்கு மீசை என ஒருவரின் படமிருந்தது. பரட்டைத் தலையும் உடலை இறுகப் பற்றியிருக்கும் பூப் போட்ட சட்டை, பட்டுப் புடவை மற்றும் வைர ஆரமும் அணிந்த ஒரு பெண்ணுடன் அவர் நிற்கும் படம் அடுத்து இருந்தது. வரதராஜனை அந்த அம்மாளின் முகத்தைக் கொண்டுதான் கண்டுபிடிக்க முடிந்தது. ஏறத்தாழ இதேபோலொரு புகைப்படத்தில் இருக்கும் அப்பாவின் தோற்றம் நினைவில் எழுந்து அமிழ்ந்தது. 

வண்ணத் திருமணப் புகைப்படத்தில் வரதராஜன் சஃபாரி அணிந்து ஒரு பக்கம் நின்றிருந்தார். ஆறேழு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருக்கலாம். அநேகமாக மகளுடைய திருமணமாக இருக்க வேண்டும். இரண்டு இளைஞர்கள் பேண்ட் சட்டை அணிந்து காணப்பட்டனர். இதிலொருவன் வாசுதேவனாக இருக்கக்கூடும். அதற்கடுத்தாற்போல் பட்டதாரி கோலத்தில் ஒரு வண்ணப் புகைப்படம் தென்பட்டது. கண்ணாடி அணிந்த சிரித்த முகம். என் வயதிருக்கும். சிரிக்கையில் அழகாக கன்னத்தில் குழி விழுந்தது. மின்னல் போல சடாரென்று சென்ற வாரம் அங்கு வந்தபோது நான் பார்த்த வாசுதேவனின் முகம் நினைவுக்கு வந்தது. நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தது. என் வாழ்வில் நான் அப்படியான ஒரு முகத்தை பார்த்ததே இல்லை.

சரியாக ஒரு வாரத்திற்கு முன், நானும் இளங்கோவும் எங்கள் பேராசிரியருடன், வாசுதேவனின் தந்தை வரதராஜனின் அழைப்பின் பேரில் இங்கு வந்திருந்தோம். பேராசிரியர் தொலைக்காட்சிகளில் தோன்றி அவ்வப்போது ஆயுர்வேதம் குறித்து உரையாற்றுவது வழக்கம். அவ்வகையில் இப்பகுதியில் ஓரளவிற்கு புகழ் பெற்றிருந்தார். எதற்காக வருகிறோம் என்பதெல்லாம் அப்போது எங்களுக்கு தெரியாது. காரில் வரும்போது பேராசிரியருடன் வரதராஜன் மேற்கொண்ட உரையாடலை கவனித்து சில விஷயங்களை கிரகித்துக் கொண்டோம்.

வரதராஜன், சென்னையின் புறநகர்ப்பகுதியிலுள்ள பிரபலமான சைக்கிள் உற்பத்தி தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளுமுண்டு. அதிலொருவன் தான் நாங்கள் காணச் செல்லும் வாசுதேவன். வாசுதேவனுக்கு இப்போது முப்பத்தியிரண்டு வயது. நான்கு வருடங்களாக சுய நினைவின்றி இருக்கிறான். பல மருத்துவ முறைகளை முயற்சி செய்தாகிவிட்டது. ஆனால் இதுவரை எதிலும் பயனில்லை. இறுதி நம்பிக்கையாக அவர்கள் ஆயுர்வேதத்தை நாடி எங்கள் பேராசிரியரிடம் வந்திருக்கிறார்கள்.

வீட்டின் உள்ளறை ஒன்றில் ஆஸ்பத்திரி மடக்கு கட்டிலில் கிடந்தது அந்த உருவம். ஒரு கணம் மனம் அதிர்ந்தது. வெறும் எலும்புகளை மட்டும் கொண்டு மூட்டிய உடல். எலும்புகளுக்கு மேல் தோலை யாரோ உருக்கி ஊற்றியது போலிருந்தது. சதை என்ற ஒன்று இல்லவே இல்லை. இரண்டு நாசிகள் வழியாகவும் குழாய்கள் உள்ளே சென்றன. புறங்கையில் ட்ரிப்ஸ் ஏற்றுவதற்குத் தோதாக நிரந்தரமாக நாள ஊசி குத்தப் பட்டிருந்தது. கண்கள் குழியின் ஆழத்திற்குள் தத்தளித்துக் கொண்டிருந்ததை மூடிய இமைகளுக்கு மேல் புலப்படும் அசைவுகள் காட்டிக் கொடுத்தன. கன்னங்கள் உள் பக்கமாகச் சப்பிப் போயிருந்தன. மொட்டையடித்து இரண்டு நாள் ஆன மாதிரி ஒட்ட வெட்டப்பட்ட தலை மயிர். அதுவும் தாறுமாறாக வெட்டப் பட்டிருந்தது. அநேகமாக வரதராஜனின் வேலையாக இருக்கும். வலது பக்கம் மண்டையோட்டின் ஒரு பகுதியைக் காணவில்லை. அங்கு ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. இரண்டு கோரைப் பற்கள் இருந்தால் ஆங்கில சினிமாக்களில் வரும் உயிர் குடிக்கும் உயிரற்ற ஃஜோம்பி என சொல்லிவிடலாம். இளங்கோ அந்தப் பகுதியை தொட்டுப் பார்த்தான். “மெதுக்குன்னு இருக்குடா... மூளைய தொட்டுட்டேனோ?” என காதில் கிசுகிசுத்தான்.

“அது, தலையில ப்ரெஷர் அதிகமாயிடுச்சுன்னு இந்த மண்டையோட்டு எலும்ப எடுத்துட்டாங்க, இங்கிருந்து அந்த மூளை திரவம் நேரா குடலுக்கு போற மாதிரி ட்யூப் போட்ருக்காங்க” என்றார் வரதராஜன்.

“வாசு…வாசு…இங்கப்பாருப்பா… இங்க பாரு... கண்ணு முழிச்சி பாருப்பா... கண்ணு தெரிச்சி சூடுப்பா... டாக்டர் ஒச்சினாரு...”

அனிச்சையாக கைகால்கள் அசைந்தன.

“டாக்டர்ன சூடுப்பா… கொஞ்சம் சூடுப்பா”

இடது குச்சிக்கை கட்டிலின் விளிம்பில் நின்று கொண்டிருந்த என்னைத் தீண்டியது. கையை உதறிக்கொண்டு பின்வாங்கினேன். ஒரு அமானுஷ்யமான ஒலி வாசுவிடமிருந்து எழுந்தது. அடிவயிற்றிலிருந்து கிளர்ந்தெழும் கேவல். புறா குனுகும் ஒலியையொத்திருந்தது.

வரதராஜன் கீழே இருந்த சக்சன் எந்திரத்தை அழுத்தினார். ஒரு குழாயை எடுத்து வாய் வழியாக உள்ளே சொருகினார். கபத்தை மெல்ல அந்த எந்திரம் இழுத்தது. மெல்ல நெஞ்சை நீவிவிட்டார்.

“ஒகட்டிலேதுப்பா ஒகட்டிலேது… அது புது ஆளுங்க இல்லையா... அதான் பதட்டப்படுறான்... நாம சொல்றது எல்லாம் அவனுக்கு கேக்கும் சார்... பழகப் பழக சரியாயிடும்”

என்னால் அங்கு நிற்க முடியவில்லை. இன்ன உணர்வு என்று பிரித்தறிய முடியாத ஏதோ ஒன்று என்னை உந்தித் தள்ளியது. நான் அந்த அறையை விட்டு வெளியேறி முன்னறை சோஃபாவில் சென்றமர்ந்தேன். உள்ளே பேராசியரும் வரதராஜனும் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். இளங்கோவும் உள்ளே இருந்தான்.

“என்ன தம்பி... வந்துட்டிங்க?” என்றார் அந்த வீட்டு அம்மா.

வியர்த்திருந்தது .“இல்ல... ஒருமாதிரி காத்து இல்லாம இருந்துது அதான்”.

ஃபோனை எடுத்துக்கொண்டு பேசும் பாவனையுடன் வேக வேகமாக வீட்டைவிட்டு வெளியேறி பேராசிரியரின் காருக்கருகே நின்றுகொண்டிருந்தேன். படபடப்பும் வியர்வையும் அடங்குவதாகத் தெரியவில்லை.

வாசுதேவன், பூமியின் நாயகன். பூவுலகத்தை காப்பவன். அலகிலா விளையாட்டு புரியும் லீலா வினோதன். அழிவற்ற பரம்பொருள். நல்ல அவல நகைச்சுவை. காலடி விழும்தோறும் சிதறும் எறும்புக் கூட்டம் போல் மனம் சிதறிச் சிதறிக் கூடியது. பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து இளங்கோவும் பேராசிரியரும் பேசிக்கொண்டே வெளியே வந்தார்கள். வரதராஜனும் அவருடைய மனைவியும் வாசல்வரை வந்து வழியனுப்பியபோதும்கூட நான் அவர்களை கண் கொண்டு பார்க்கவில்லை.

“தம்பி... உங்களத்தான்... ஏதோ பதட்டமா இருக்குறாப்ல தெரியுது... ஃபோன்ல ஏதாவது செய்தியா? எதுவா இருந்தாலும் பாத்து நிதானமா போங்க” புண்ணுக்குள் விரல் விட்டது போலிருந்தது அந்த அம்மையாரின் கரிசனம்.

எங்களிடம் சிகிச்சை செயல் திட்டத்தை விளக்கிக்கொண்டே வந்தார் பேராசிரியர். எதுவும் என்னுள் போய்ச் சேரவில்லை. சிகிச்சை செய்ய இவர் ஏன் ஒப்புக்கொண்டார் எனத் தெரியவில்லை. அங்கு என்ன இருக்கிறது? உயிருள்ள பிணம்.

எங்களை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுவிட்டு கார் விரைந்தது.
“மாப்ள, இவருக்குன்னு வந்து வாய்க்குறானுங்க பாரு. ..பாத்திய அங்க கொண்டு போய் இறக்கி வெக்க சொல்லிருக்கார்... பிழிச்சலாம், நவரக் கிழியாம், வஸ்தியாம், மூக்குக் குழாய் வழியா தங்க பஸ்மமாம், என்னென்ன எல்லாம் வில ஜாஸ்தியோ எல்லாத்தையும் அடுக்கிட்டாரு நம்மாளு... எங்க பிள்ளைய காப்பாத்தி கொடுத்தா போதும், என்ன வேணாலும் செய்ங்க அப்டினுட்டாரு அந்த ஆளு... நாளுக்கு ஆயிரத்தைந்நூறு ரூபா சொல்லிருக்கார்... உனக்கும் எனக்கும் சேத்து முன்னூறு தராராம்... எல்லாம் காசுடா”

“அவருகிட்ட சொல்லி பாப்போம்டா... இது சரி வராது...”

“பேசிப் பாரு... அதெல்லாம் அவருக்கும் தெரியும்டா... தெரியாமையா? அந்தாளா வந்து சிக்குறார்... எதுக்கு விடணும்னு நெனப்பார்... வண்டில அவரு பேசுனத நீ கேக்கலையா? நீ எங்கயோ பாத்துக்கிட்டு வரும்போதே நெனைச்சேன்..யாரோ ஒருத்தன் இப்படி தான் இருபத்து மூணு வருஷம் கழிச்சி கோமாவுலேந்து கண்ணு முழிச்சானாம் அமெரிக்காவுல, ஃப்ரான்சுல பத்து வயசு பையனா கோமாவுல போனவன் அப்புறம் பதினெட்டு வருஷம் கழிச்சி முழிச்சானாம்... அதனால நம்பிக்கையோட செய்யனும்னு சொல்றாரு”

“இதெல்லாம் எங்கயோ, யாருக்கோ நடக்கிறதுடா... அவனுங்க எல்லாம் ஆயுர்வேத ட்ரீட்மென்ட்  எடுத்து  தான் கண் முழிச்சாங்களா? எனக்கு அவனத் திரும்பிப் பாக்க போகனும்னாலே என்னமோ செய்யுது... நீ வேணும்னா கணேஷ கூட்டிட்டுப் போ”

ஒரு வாரம் கழித்து நானே இங்கு வந்து நிற்கிறேன். கணேஷுக்கு வேறு இடத்தில் வேலை கொடுத்திருந்தார். பட்டணத்தின் மறுகோடியில் உள்ள வேறொரு நோயாளிக்கு கண் சிகிச்சை செய்ய வேண்டும்.

“டே குடிடா” இளங்கோ பூஸ்ட் குடித்துவிட்டு என்னைப் பார்த்துச் சொன்னான்.

வரதராஜன் கையை கைலியில் துடைத்தபடியே வெளியே வந்தார்.

“வாங்க தம்பி... போலாம்”

ஒரே மடக்கில் ஆறிய பூஸ்டைக் குடித்துவிட்டு எழுந்தோம்.

“ரே வாசு... இக்கட சூடுப்பா...”

ஒன்றும் அசையவில்லை. குச்சிக்கால்கள் இரண்டும் வலப்பக்கமாக மடிந்து கிடந்தன. நானும் இளங்கோவும் எண்ணெய் சூடு செய்தோம். அன்று அபியங்கமும் கிழியும் செய்ய வேண்டும்.

எண்ணெய் கிண்ணத்தில் விரல் விட்டு பார்த்தார். “பார்த்துப்பா..ரொம்ப சூடாக்க வேணாம்” என்று வாசுவை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர் வெளியேறினார்.
ஏதோ நினைவு வந்தவராக மீண்டும் அறைக்குள் வந்து, “தம்பி, திடீர்னு சளி ஒரு மாதிரி அடைக்கும், சத்தம் போடுவான் , அப்ப இந்த சக்சன் போட்றுங்க” என்று சொல்லிவிட்டு மீண்டும் மறைந்தார். சுவற்றில் ரமணரும், அரவிந்தரும், இன்னும் இன்ன பிற நவீன குருமார்களும் புகைப்படங்களாக வாசுதேவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருதார்கள்.

அருகிலுள்ள மரப்பாத்தியில் வாசு படுத்துறங்கிய விரிப்புடன் சேர்த்து தூக்கி வைத்தோம். ஆறடி வளர்ந்த எலும்பாலான குழந்தை. எடையற்று இருந்தான். முதல் ஸ்பரிசத்தில் ஏதோ ஒன்று பிசுபிசுவென்று ஒட்டுவது போலிருந்தது. மெல்ல தயங்கித் தயங்கி எண்ணெயை எடுத்து மெதுவாக கரங்களில் தடவினோம். மூங்கில் கழிகளுக்கு நீவி விடுவது போலிருந்தது. அவனுடைய முகத்தைப் பார்க்காமல் வேலை செய்ய பழகிக் கொள்ள வேண்டும். அவனுக்கு இது எப்படி இருக்கும்? வலிக்குமா? சுடுமா? சுகமாக உறக்கம் வருமா?

காலைப் புரட்டும் போதுதான் கவனித்தோம் சப்பைக்கு கீழ் படுக்கைப் புண் உண்டாயிருந்தது. கதவை திறந்து கொண்டு வரதராஜன் வந்தார்.
“தம்பி முடிஞ்சுருச்சா? அவனுக்கு பசிக்கும்... கஞ்சி கொடுக்கணும்...”

“நீங்க கொடுங்க... இன்னும் கிழி பாக்கியிருக்கு... ஒரு பதினஞ்சு நிமிஷம் ஆகும்... கொஞ்சம் பவுடர் போடுங்க, அப்பப்ப திருப்பிப் படுக்க வைங்க. .. கீழ புண்ணு இருக்கு” என அவரிடம் புண்ணிருக்கும் பகுதியை சுட்டிக் காட்டினேன்.
“அய்யய்யோ... கவனமாதான் இருந்தோம்... எப்படியோ வந்துடுச்சு...  பாத்துக்குறேன்’”
மூக்குக் குழாய் வழியாக கஞ்சியை ஊற்றினார்.
“வாய் வழியா சாப்ட்டு பல வருஷம் ஆச்சு, ருசிய மறந்திருப்பான்...”. நிதானமாக கடைசி துளி வரை ஊற்றி முடித்துவிட்டு “சரி நீங்க வேலைய பாருங்க..” என்று சொல்லிவிட்டு சடாரென்று வெளியேறினார்.

கிழி செய்து முடித்து துடைத்து விட்டு மெதுவாக தூக்கி மீண்டும் படுக்கையில் கிடத்தினோம். போர்வையும் கோமணமும்தான் வாசுவின் உடை. கிழி செய்து முடித்தால் குளிரும். போர்வையைப் போர்த்திவிட்டு வியர்வை வழிய வெளியே வந்தோம்.

“முடிஞ்சுருச்சா? அங்க கைகால் கழுவிக்கலாம்...போங்க” என்றார் அம்மா.
கிளம்பினோம். மீண்டும் நாளைக் காலை இதே நேரத்திற்கு வருவதாக சொல்லிச் சென்றோம். அத்தனை அருவருப்பாக தோன்றவில்லை இப்போது. ஆனால் நம்பிக்கையில்லை. உண்மையில் இவன் உயிர் வாழ்ந்து என்ன பயன் என எனக்கு விளங்கவில்லை. உண்மையில் அவனை மீட்டிட முடியும் எனத் தோன்றவில்லை. இத்தனை செலவு செய்து சிகிச்சை செய்வது வீண் என்பதே எண்ணம். இப்படியே காத்துக் கொண்டிருப்பதில் என்ன பொருள்? எஞ்சியிருப்பவர்களின் ஆற்றலையும், நம்பிக்கையையும், செல்வத்தையும் உறிஞ்சுவதைத் தவிர வேறு என்ன பயனுள்ளது இந்த உயிருக்கு? உண்மையில் என் உயிருக்கு என்ன பயன்? அல்லது பிறக்கும் மரிக்கும் எந்த உயிருக்கும்தான் என்ன பயன் இருந்திட முடியும்? விளங்கவில்லை. சுவாசம் ஒருமாதிரி தறிகெட்டு ஓடிக்கொண்டிருந்தது. மெல்ல கேள்விக் களைகளை ஒவ்வொன்றாக கெல்லி எறிந்து கொண்டிருந்தேன். வீரியத்துடன் புதிது புதிதாக அவை எழுந்து வந்தபடியே இருந்தன.

மறுநாளும் சென்றோம். கலக்கம் கொஞ்சம் குறைந்தது. ஒவ்வாத விஷயங்களுக்கும் மனம், வேறு கதியில்லை எனும்போது மெல்ல சமரசமடைந்து பழகிக் கொள்கிறது. ஒருவாரம் இப்படியே வருவதும் போவதுமாக கழிந்தது. மெல்ல எனக்கும் வாசுவுக்கும் ஒருவித பரிச்சயமும் நட்பும் மலர்ந்தது. உடல் ரீதியாக எந்த மாற்றமும் அவனிடம் தென்படவில்லை. அவ்வப்போது தன்னிச்சையாக கைகால்கள் அசையும். சில முனகல் ஒலிகள் எழும். வாய் மட்டும் திறந்து மூடும். இளங்கோவும் இப்போது புலம்புவதில்லை. அவனும் ஏறத்தாழ இதே மனநிலைக்கு வந்துவிட்டான். நொட்டை சொல்லாத வாடிக்கையாளர் இக்காலத்தில் கிடைப்பதரிது என எண்ணியிருக்கக்கூடும். நாளடைவில் வாசு சொல்பேச்சு கேட்கும் விளையாட்டுப் பொருள் ஆனான். உற்சாகமாகக் கிளம்பி வரத் தொடங்கினோம். தினமும் வரதராஜன் தவறாமல் “என்னப்பா சரியாயிடுமா? ஏதாவது முன்னேற்றம் தெரியுதா?” என்று கேட்பார். கொஞ்சம் காலம் பிடிக்கும் பார்க்கலாம், என்பது போல் பட்டும் படாமல் எதையாவது சொல்லிச் செல்வோம்.

பத்து பதினோரு நாள் கழிந்திருக்கும். அன்று வஸ்தி கொடுத்தோம். கஷாயம் செய்து ஆசனவாய் வழியாக மருந்தைச் செலுத்தினோம். ஒரு நிமிடம் கூட மருந்து தங்கவில்லை. போன வேகத்தில் திரும்பி வந்தது. கை சுத்தம் செய்து கொண்டு கிளம்பும்போது வரதராஜன் வந்தார்.

“தம்பி உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்... சத்த நேரம் இருக்க முடியுமா?”
சோஃபாவில் அமர்ந்தோம். அந்த வீட்டு அம்மாவும் வந்து எங்களுடன் கூடத்தில் அமர்ந்தார். மெல்ல பேசத் தொடங்கினார்.

“தம்பி தப்பா எடுத்துக்காதீங்க… வாசுவப் பத்தி கொஞ்சம் பேசலாம்னு… இவன மாதிரி ஒரு புள்ள கிடைக்கமாட்டான் தம்பி... முன்னாடி கெடக்குற செடியெல்லாம் அவன் நட்டது தான்... பாத்துப் பாத்து தண்ணீயூத்துவான்... இப்ப அவனுக்கு நாங்க தண்ணியா ஊத்திகிட்டு கிடக்கோம்... எங்க புள்ள வேலைக்கு எல்லாம் போக வேண்டாம். நடக்கக்கூட வேண்டாம், எங்ககூட பேசுனா போதும்... உங்க கைலதான் இருக்கு தம்பி” கண்களில் நீர் முட்டியது அவருக்கு.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒருகணம் நான் உண்மையில் நம்புவதைச் சொல்லிவிடலாமா என்றுகூட தோன்றியது.
“சார் எங்களால என்ன முடியுமோ அதச் செய்றோம்.. மீதி எல்லாம் அந்த கடவுள் கையிலதான்” என்று முந்திக்கொண்டு சொன்னான் இளங்கோ.
“புரியுது, நான் உங்கள குற சொல்லல... ஏதோ தோணுச்சு சொல்றேன். நீங்க அவன்கிட்ட பேசிப் பாருங்க தம்பி... நாம சொல்லுறது அவனுக்கு கேக்கும்... நல்லதா நாலு வார்த்தைய மனசார நினைச்சுக்கிட்டே நம்பிக்கையோட செஞ்சு பாருங்க… தப்பா எடுத்துக்காதீங்க... அவன உங்க அண்ணனா நெனைச்சு செஞ்சு பாருங்க... அவன் நிச்சயம் நல்லா வருவான்..”

மௌனமாக அமர்ந்திருந்தோம். மெல்ல எழுந்து நின்று கிளம்பினோம். “சரி வர்றோம்... நாளைக்கு பாப்போம் சார்”.

வண்டியில் அமர்ந்த பின் இளங்கோ சொன்னான் “மாப்ள.. அவுங்க பாவம்டா. ரொம்ப நம்புறாங்க. பூஸ்ட் குடிச்ச வீட்டுக்கு துரோகம் பண்ணக் கூடாதுடா. ஒரு மாதிரியா இருக்கு... எதுவும் நடக்காதுன்னு சொல்லிரணும்டா. எதையாவது செஞ்சுக்குவாய்ங்க”

“வாசுகூட மனசு ரொம்ப நெருக்கமா ஆயிட்டிருக்குற மாறி இருக்குடா.. உனக்கு அந்த மாதிரி எதாவது தோணுதா? ரொம்ப நாள் பழகுன மாதிரி ஒரு ஃபீலிங்..”
சற்று நேரம் மெளனமாக இருந்தான். “எனக்கு அவன் மேல எல்லாம் எதுவும் தோணலடா. ஆனா அவன் அப்பன் ஆத்தாள நெனைச்சாதான் ஒரு மாதிரியா இருக்கு.. அவன் போய்ட்டானா அவிங்களுக்கு செய்யுறதுக்கு எதுவுமே இருக்காதுல?”
பேச்சு கொடுத்தால்தான் என்ன? ஒருவேளை ஆழ்மனதில் அவனுக்கிருக்கும் உயிர் இச்சையைத் தூண்டி விட முடியுமோ என்னவோ. அவர் சொல்வதிலும் ஒரு நியாயமிருப்பதாக தோன்றியது. இளங்கோவிடம் நான் எதுவும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் முதல் நான் மானசீகமாக அவனுடன் பேசத் தொடங்கினேன். “குட்மார்னிங் வாசு”. “நீங்க சீக்கிரம் குணமாயிருவீங்க... பழையபடி கைய அசைக்க முடியும்... கால அசைக்க முடியும்... வேலைக்குப் போகலாம்... அம்மாவும் அப்பாவும் உங்களுக்காக காத்துகிட்டிருக்காங்க...” “எல்லாம் சரியாயிடும்”. மீண்டும் மீண்டும் மந்திரம் போல் மனம் அதையே உச்சரித்துக் கொண்டிருந்தது. “எல்லாம் சரியாயிடும்... எல்லாம் சரியாயிடும் நண்பா... எல்லாமே சரியாயிடும்” கண்களிலிருந்து நீர் தளும்பி வாசுவின் தோள் பட்டையில் வழிந்தது. எந்த அசைவும் இல்லை. எதுவுமே சரியாகாது. ஒருவேளை வாசுவிற்கும் இது தெரிந்திருக்கக் கூடும்.

நான்கைந்து நாள் கழிந்தது. வாசுவின் அறையிலிருந்து வரதராஜனுக்கு பதிலாக அவனுடைய அம்மா வெளியே வந்தார். பூஸ்ட் கலந்து எடுத்து வந்து கொடுத்தார்.
“தம்பி... சாப்பிடுங்க...”
“வாசு எங்களுக்குச் செல்லப் பிள்ள. .. தவமிருந்து பொறந்தவன். இப்பக்கூட அவன் கிட்ட மனசு விட்டு பேசிட்டு தான் வர்றேன். பாரமெல்லாம் கரைஞ்சுடும்… பேசுறத கேக்க யாருக்கு தம்பி இப்ப பொறுமை இருக்கு... வாசு கேப்பான். தினம் நான் அவன்கிட்ட கதையெல்லாம் சொல்லுவேன். கஷ்டமெல்லாம் சொல்லுவேன். கண்ணத் திறந்து ஒருநாள் அவன் கவலைப் படாதம்மான்னு சொல்லுவான். அது மட்டும்தான் என் நம்பிக்கை...” குரல் நெகிழ்ந்தது.

“எங்க வீட்டுல முதமுதல்ல டிகிரி வாங்கினது வாசுதான். எஞ்சினியர் ஆனான். நல்லா சம்பாதிச்சான். ஒரு ஆக்சிடென்ட்ல விழுந்து தலையில அடி பட்டுடுச்சு. உசுரு பிழைச்சதே பெருசு. பாக்காத வைத்தியமில்ல..போகாத சாமியில்ல.. எல்லாம் அவன் சேத்து வெச்ச காச வெச்சு தான். சின்னவன் டிப்ளமா முடிச்சுட்டு கார் கம்பனில வேலைக்கு இருக்கான். அவனுக்கும் கல்யாணமாயி சம்சாரம் முழுகாம இருக்கா..அவனையும் கேக்க முடியாது. மூத்த பொண்ணு வீட்டுக்காரர் பி.எஸ்.ஃப்ல வேலை பாத்து போன வருஷம் அஸ்ஸாம்ல இறந்துட்டாரு. அவ பேங்குல வேல பாக்குறா. மூணு வயசு குழந்தைய வெச்சுகிட்டு ஊர் ஊரா திரிஞ்சுகிட்டு இருக்கா. எங்ககிட்ட இருக்குறத பிரட்டி தர்றோம். நீங்கதான் ஏதாவது செய்யணும், உங்களையும் எங்க பிள்ளையா நெனைச்சு கேக்குறோம்” என்று சொன்னபோது அந்த அம்மாவின் குரல் தழுதழுத்தது.

இனியும் மறைப்பதில் புண்ணியமில்லை. தோன்றுவதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். முதற்கட்ட சிகிச்சை இன்னும் நான்கு நாளில் முடிவுக்கு வந்துவிடும். இளங்கோ என்னையே பார்த்தான்.

தயங்கியபடியே மெதுவாக பேசத் தொடங்கினேன். “அம்மா... கொஞ்சம் நான் சொல்லுறத கவனமா கேளுங்க... கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். ஆனா எனக்கு தோணுறத இப்பயும் சொல்லாம விட்டுறக் கூடாது. வாசுவோட பிரச்சனைக்கு எந்த வைத்தியமும் சரியா வரும்னு எனக்கு தோணலை.”

 “இத்தன நாளு வந்துட்டு போனதெல்லாம் இத சொல்லத்தானா தம்பி? என்னதான் செய்ய முடியும்? அதையாவது சொல்லுங்க... அவனுக்கு வலிக்குதா எரியுதா எதுவுமே தெரியல”

“அம்மா... நல்லதுக்குதான் சொல்லுறேன். தப்பா எடுத்துக்காதீங்க. எவ்ளோ நாள் உங்களால இத செய்ய முடியும்... எனக்குத் தெரியல. யோசிச்சுக்குங்க. சக்சன் போட கொஞ்சம் லேட்டானாக் கூட மூச்சு நின்னுடும். அதான் அவர் நிலைமை”. படபடப்பாக இருந்தது. இத்தனை நாளாக மனம் இந்தப் பதிலை தான் யோசித்து சேமித்து வைத்திருக்கிறது போலும். தங்கு தடையின்றி குதித்து வந்துவிட்டது.

வரதராஜன் வாசலில் வரும் சத்தம் கேட்டது. அழுகை சட்டென்று நின்றது. எழுந்து சென்று கதவை திறந்துவிட்டு வீட்டுக்குள் மறைந்தார்.

வெளியே வந்தவுடன் இளங்கோ சீறினான்
“என்னமோ அன்பு, நட்புன்னு அன்னிக்கு பேசிக்கிட்டு திரிஞ்ச? நீ என்ன சொல்லிட்டு வந்துட்ட தெரியுதா? சரியான கிறுக்கன்டா நீ” அவன் கண்களும் லேசாக கலங்கியிருந்தது.
அடுத்து வந்த மூன்று நாட்களும் அந்த அம்மா எதுவுமே எங்களிடம் பேசவில்லை. வரதராஜனும்கூட சரியாக பேசாதது போலிருந்தது. மறு நாளுடன் எங்கள் முதல் சுற்று சிகிச்சை முடிவுக்கு வருகிறது. எல்லாம் எடுத்து வைத்து சுத்தம் செய்துக் கொண்டிருந்தோம். வாசுவை பாத்தியிலிருந்து கட்டிலுக்குக் கிடத்தினோம். அப்போது அவன் கண்களை திறந்து ஒரு நொடி சிமிட்டியது போலிருந்தது. பிரமையா எனத் தெரியவில்லை. உற்று நோக்கினேன் எந்த மாற்றமும் தெரியவில்லை. மனம் கனத்திருந்தது.  நண்பனிடம் பிரியா விடை பெறும் உணர்வு ஒரு மாதிரி நெஞ்சை பிழிந்துக் கொண்டிருந்தது.

வழக்கத்திற்கு மாறாக வரதராஜன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.
“தம்பி... கொஞ்சம் பேசணும்.”

“நீங்க அன்னிக்கு வாசுவப் பத்தி சொன்னத அவ என்கிட்டே சொன்னா. நாளையோட முடிச்சுக்கலாம். அடுத்த சுத்து எல்லாம் வேணாம். இது சரியா வரும்னு தோணலை. எனக்கு கொஞ்சம் பயமாருக்கு. அவன் திருப்பி பேசணும், நிக்கணும் நடக்கணுங்கற ஆசகூட இப்ப எனக்கு போய்டுச்சு. நாங்க பேசுறத கேட்டுகிட்டு அவன் இப்படியே வேணாலும் கிடக்கட்டும். தயவு செஞ்சு அவன இப்படியே விட்டு வைங்க அது போதும். எங்க காலம் வரை நாங்க என்னமோ பண்ணிக்குறோம்” குரல் ஒரு மாதிரி தாழத் தொடங்கியது.

“ரெண்டு மூணு நாள் கழிச்சு ஃபோன் செய்றேன், வந்து பாத்திய தூக்கிட்டு போய்டுங்க’ என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று உள்ளே சென்றார்.

இறுதிநாள் அன்று. வரதராஜன் வீட்டில் கூடுதலாக சலசலப்பு கேட்டுக் கொண்டிருப்பது போலிருந்தது. சிகிச்சை முடித்து அவனைக் கட்டிலில் கிடத்தினோம். எனது உணர்வை வாசு உணரக்கூடும். ஒரேயொரு சமிக்ஞை போதுமெனக்கு, நம் நட்புக்கு அடையாளமாக. மனம் ஏங்கியது. புதிதாக ஒரு படுக்கைப்புண் கிளம்பியிருப்பதை கவனித்தோம். சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும். கிளம்பும் போது அவன் கரங்கள் என் கரங்களைப் பிடித்து இழுத்தன. அல்லது இழுத்தது போலிருந்தது.

வெளியே வந்தபோதுதான் கவனித்தோம் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு பெண்ணும் அவருடைய பெண் குழந்தையும் வந்திருந்தனர். அந்த குட்டிப்பெண் பொம்மைகளை எல்லாம் பரப்பி ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள்.

“இது வாசுவோட அக்கா. வசுமதி. பேங்க்ல வேல பாக்குறா. வீட்டுக்காரர் எல்லை காவல் படையில இருந்தாரு” என்றார் வரதராஜன்.
“தெரியும் அம்மா சொன்னாங்க” வணக்கம் வைத்தோம்.
“அவளுக்கு இங்க ட்ரான்ஸ்பர் கிடைச்சுருக்கு. அதான் குழந்தையையும் கூட்டிக்கிட்டு இங்கயே வந்துட்டா...” என்றார்.
அவரிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பி வந்தோம்.

“மாப்ள, ஒரு மாதிரி நிம்மதியா இருக்குடா... கஷ்டமாவும் இருக்கு. ஒரு மாசம் இப்படியே பழகிட்டோம்ல” என்று சொல்லிக்கொண்டு வந்தான் இளங்கோ.

மனம் அமைதியில் நிலைத்தது. அரித்துக் கொண்டிருந்த ஏதோ ஒரு கேள்விக்கு மனம் விடையை உணர்ந்தது போல். பிரபஞ்ச நியதிகள் எல்லாம் இதுதான் என்று தெளிவாகத் துலக்கமடைந்துவிட்டது போல் தோன்றியது. ஒவ்வொரு வாழ்க்கைக்கும் ஒரு நோக்கமிருக்கிறது, என் வாழ்விற்கும் ஒரு அர்த்தமிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின்னர் நிம்மதியாக உறங்கினேன்.

மூன்று நாட்களுக்குப் பின்னர் இளங்கோவிடமிருந்து அழைப்பு வந்தது. வண்டியை எடுத்துக்கொண்டு உடனே வரதராஜனின் வீட்டிற்கு போனேன். வாயிலில் நான்கைந்து பைக்குகளும்,  இரண்டு மூன்று கார்களும் நின்றன.
வரதராஜன் வெற்றுடம்புடன் முற்றத்தில் தலை குனிந்து அமர்ந்திருந்தார். நான்கைந்து பேர் அவரை சுற்றி அரைவட்டமாக மவுனமாக நின்றிருந்தனர். இளங்கோ ஒரு மூலையில் தென்னமரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்.

“பாத்திய ஏத்திட்டு வர சொன்னாருடா, அதான் வந்தேன்... பாத்தா வாசு காலேல போய்ட்டானாம்” இளங்கோ தணிந்த குரலில் சொன்னான். என்னென்னவோ காட்சிகள் ஒரு நிமிடம் தோன்றி மறைந்தன. மெல்ல வாசு வைத்திருக்கப்பட்ட அறைக்கு அருகே சென்றோம். அந்த அம்மா சுவரோரம் சாய்ந்து கண்களை அகல விரித்து எதையோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள். வாசுவின் அக்கா “இட்ட போட்தீவேரா“ என்று அழுது அரற்றிக் கொண்டிருந்தாள்.

“ரெண்டு மூணு தடவ கண்ணு முழிச்சிப் பாத்தானாம். கையக்கூட பிடிச்சானாம். காலேல பெருசா சத்தம் போட்டானாம்..பக்கத்துல யாருமில்லயாம்..இந்தக் குழந்த மட்டும் ஏதோ விளையாடிகிட்டு இருந்துச்சாம்… கபம் அடைச்சுருக்கும் போல.. சக்சன் போடுறதுக்குள்ள போய்ட்டானாம். பாவம்” என்று யாரோ கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது.

எல்லாரும் அமைதியாக முணுமுணுத்துக் கொண்டிருந்த போது சோஃபாவிற்கு அருகே ஏதோ சத்தம் கேட்டது. அந்தக் குட்டிப் பெண் குழந்தை கூடைநிறைய விளையாட்டு சாமான்களை கொட்டி கொண்டிருந்தாள். பொம்மைகளின் கைகளையும் கால்களையும் கழுத்தையும் திருகி கோணலாக என்னமோ செய்து கொண்டிருந்தாள்.

“யாலவே இட்ட செஸ்தா…தெப்பலு காவன்னா” சீறிக்கொண்டு எழுந்தாள் வாசுவின் அக்கா.
அதட்டிய அம்மாவின் குரலை காதில் வாங்காமல் அவள் தனக்குள் சிரித்து திளைத்தபடி தன்போக்கில் விளையாடிக் கொண்டிருந்தாள்.


Friday, August 23, 2013

அரவிந்த் கேஜ்ரிவால் -ஒரு நேர்காணல்

காந்தி இன்று காந்திக்கான தளமாக உருமாறுவதற்கு முன்னர் நான் மொழியாக்கம் செய்த நேர்காணல் இது. ஆகஸ்ட் 23, 2011 அன்று வலையேற்றப் பட்டது. கேஜ்ரிவால் டெல்லி தேர்தலில் வெற்றி பெறுவதை கனவாக கொண்டவர், ஹசாரேயை அதற்காக பயன்படுத்திக் கொண்டவர் போன்ற குற்றசாட்டுகளில் நியாயம் இல்லாமல் இல்லை. கூடங்குளம் போராட்டத்தில் பங்கெடுத்தது வரை கூட அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் இருந்தது. நேரடி தீவிர அரசியலில், தேர்தல் அரசியலில் ஈடுபட தொடங்கியவுடன் கொஞ்சம் சோர்வடைய துவங்கினேன். எனினும் ஜனநாயகம் என்பது அப்படித்தான். பல்வேறு தரப்பு மக்கள் தொடர் பேரங்களில் ஈடுபடும் ஒரு அமைப்பு. ஒன்று திரட்டி தன் மக்கள் தரப்பின் குரலை ஒலிக்க செய்து, அதன் மீது கவனம் குவிய செய்வதே ஜனநாயகத்தில் ஒரு நல்ல கட்சியும் தலைமையும் செய்யக் கூடியது. அந்தவகையில் நேரடி அரசியல் செயல்பாடு என்பதை புரிந்து கொள்கிறேன். வருத்தங்களும் விமர்சனங்களும் இருந்தாலும் கூட தேசிய - மாநில கட்சிகளின் இளைஞர் சக்தியின் அடையாளமாக சுட்டிக் காட்டப்படும் பெரும்பாலான ஆளுமைகளைக் காட்டிலும் அரவிந்த் பலவகையிலும் தகுதியானவர், திறமையானவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை நேரில் நேர்காணல் செய்ய வேண்டும் எனும் அவா எனக்குண்டு. இந்தப் பேட்டியில் அவருக்கிருக்கும் தெளிவு என்னை ஆச்சரியப்படவைத்தது. குறிப்பாக முற்றதிகாரம் மற்றும் அதிகார பரவலாக்கம் குறித்து தீவிரமான சிந்தனைகளை இப்போது வாசிக்கும் போது கூட எழுப்புகிறது. டெல்லி தேர்தலில் ஏதேனும் மாற்றம் வருமா என பொருத்திருந்து பார்ப்போம். காந்தி - இன்றில் இரு பகுதிகளாக வந்த நேர்காணலை ஒரே பதிவாக இங்கே அளித்துள்ளேன். இப்போது மீண்டும் வாசித்து சிலப்பல திருத்தங்களை செய்துள்ளேன்.

Thursday, August 22, 2013

தடங்கலுக்கு வருந்துகிறேன்


"உங்க வலைப்பூ முகவரி சொல்லுங்க?" 

"www.gandhitoday.in" 

"இது இல்ல, உங்களுக்குன்னு ஒன்னு இருக்குமே ..அது"

"இல்லை இப்ப கொஞ்ச நாளா அங்க நான் ஒன்னும் பெருசா எழுதுறது இல்லை.."

"அப்படியா..இது காந்திய தான எனக்கு யாருன்னு காட்டும்..உங்கள எப்படி தெரிஞ்சுக்குறது?"
---
இப்படியாக ஒரு உரையாடல் ஜூன் மாத விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் ஏற்காடு முகாமில் எனக்கும் பசுமைப் புரட்சியின் கதை எழுதிய சங்கீதா ஸ்ரீராமுக்கும் நடைப்பெற்றது. யோசித்து பார்த்தேன்.நெசந்தான். இதுவே மீண்டும் வலைப்பூவுக்கு வர முதல் காரணம்.  

Tuesday, February 5, 2013

அந்த நூறு பேர்.....


 (ஃபிப்ரவரி மூன்று அன்று கும்பகோணம் வி.எஸ். ராமனுஜம் அரங்கில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தர் நூற்றி ஐம்பதாம் பிறந்த நாள் நினைவு கருந்தரங்கில்  மாணவர்களுக்கு ஆற்றிய உரை) 


அசத்தொமா சத் கமைய
தமசோமா ஜோதிர் கமைய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமைய

                   இருள் விலகி எங்கும் ஒளி பெருகட்டும். 

சகோதர சகோதரிகளே, இப்படி தொடங்குவதே சுவாமி விவேகானந்தரின் நினைவுகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும். சுவாமி விவேகானந்தரின் நூற்றி ஐம்பதாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் பகுதியாக நடைபெறும் இந்த விழாவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.