Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Saturday, March 27, 2021

நான் ஏன் மக்கள் நீதி மய்யத்தை ஆதரிக்கிறேன்

கணையாழியில் ஒரு பத்தியில் படைப்பாளிகளின் ஆதரவு யாருக்கு என எழுதச்சொல்லி கேட்டிருந்தார்கள். அதையொட்டி அவர்களுக்கு எழுதியனுப்பிய எனது கருத்தை சற்றே கூடுதல் விரிவுடன் எழுத விரும்பினேன். எனக்கு மக்கள் நீதி மய்யத்தின் மீது நன்மதிப்பும் எதிர்பார்ப்பும் உள்ளது. நாளை இவை இல்லாமல் போகலாம். ஆனால் இன்று எனக்கு நம்பிக்கை உள்ளது.‌ ஆகவே எழுதுகிறேன். 


இந்த தேர்தலில் ஆட்சியமைக்க சாத்தியமில்லை என்றாலும் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். அடையாள அரசியல் முதன்மை பெற்றிருக்கும் இக்காலகட்டத்தில் அது உருவாக்கும் துருவப்படுத்துதலை சமன் செய்ய உள்ளடக்கும் (inclusive) அரசியலை முன்வைக்கும் இயக்கங்கள் வளரவேண்டும். கொள்கை அரசியல் ஒரு வழி என்றால் செயலூக்கமிக்க களச்செயல்பாடு வழியாக அரசியல் அமைப்பாக திரள்வது மற்றுமொரு வழி. கொள்கை அரசியல் என்பது  வழிகாட்டுதல் நெறி என்ற அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. நீதி கட்சி, திராவிட கட்சி, தலித் இயக்கங்கள், பொதுவுடமை இயக்கங்கள், பாஜக மற்றும் இந்துத்துவ இயக்கங்கள், இஸ்லாமிய கட்சிகள், நாம் தமிழர் என இவையாவும் கொள்கை அரசியலின் உதாரணங்கள். கொள்கை அரசியல் என்பது அடையாள அரசியலுக்கான தேவையிலிருந்து உருவாவவது. ஆகவே அவை உயிர்த்திருக்க அந்நியர்களை அல்லது பொது எதிரிகளை கட்டமைத்தபடி இருக்க வேண்டியுள்ளது. 

 தேசிய அளவில் செயல்வழி இயக்கமாக திரண்ட முதல் இயக்கம் இந்திய தேசிய காங்கிரஸ், பிறகு ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பங்களிப்பில் உருவான ஜனதா கட்சி போன்றவற்றை சுட்டலாம். சமீபத்திய உதாரணம் ஆம் ஆத்மி கட்சி. தமிழகத்தில் எம்.‌எஸ் உதயமூர்த்தி போன்றோர் இப்பாதையில் பயணித்திருந்தாலும் பெரும் தாக்கத்தை செலுத்த முடியவில்லை. மக்கள் நீதி மய்யத்தை நான் இந்த வரிசையிலேயே வைப்பேன். அறப்போர் இயக்கம், சகாயம் ஐ ஏ எஸின் இயக்கத்தை கூட இதனுடன் சேர்த்தே காண முடியும். இந்த வரிசையில் உள்ள கட்சிகளுக்கும் மேற்சொன்ன பட்டியலில் உள்ள கட்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடை எளிதில் நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். கமலிடம் கொள்கை என்ன என திரும்ப திரும்ப கேட்பவர்கள் சூசகமாக கேட்பது உங்கள் எதிரி யார் என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டு அரசியல் செய்யுங்கள் என்பதையே. அனைவரையும் உள்ளடக்கிய எதிரியற்ற அரசியல் ஒரு சாத்தியமாகக்கூட நமக்கு தோன்றவில்லை. 

செயல்வழி அரசியலுக்கு சில எல்லைகள் உண்டு. நடைமுறையில் உள்ள வழிமுறைகளின் மீது இருக்கும் அதிருப்தியே அதை இயக்கும் ஆற்றல். பெரும்பாலும் அதிருப்திக்கான காரணத்தை விசையுடன் முட்டி மோதிய பிறகு விசையழிந்து மற்றுமொரு அரசியல் இயக்கமாக நீடிக்கும். ரஜினி இந்த அதிருப்தி விசையை உசுப்ப முயன்றார். அவருடைய தாரக மந்திரம் 'மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்' என்பதாக இருந்தது. தமிழருவி மணியன் போன்ற செயலூக்க அரசியல் தலைவர்களை உடன் இருத்திக்கொண்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவுக்கு அதிருப்தி ஆற்றல் விசைகொள்ளவில்லை. ஆகவே அவருக்கும் வேறு வழியில்லை. அவரையும் கொள்கை கோடாலியை வைத்து பெயர்த்து பார்த்தார்கள்.‌ உண்மையில் கொள்கைகள் அதிகாரத்தில் இருக்கும் போது சமரசத்திற்குட்பட்டதாகவும் அதிகாரமற்ற போது வீரியமானதாகவும் இருநிலைகொண்டதாகவே உள்ளது. கொள்கைகள் என்பதல்ல நிலைப்பாடுகளே இருக்க முடியும் எனும் புரிதலையே நான் கொண்டுள்ளேன். நிலைப்பாடுகள் காலத்தாலும் சூழலாலும் கட்டுப்படுத்தப்படுபவை. மாற்றத்துக்குட்பட்டவை.‌ நிலைப்பாடுகள் எவ்வகையிலும் இழிவானவை அல்ல. நல்ல ஆளுகை அளிப்பதாக சொல்லும் கட்சியை நான் நிச்சயம் பரிசீலிப்பேன். நடைமுறையில் ஊழலற்ற ஆட்சி சாத்தியமில்லை என்பது உண்மையாக இருக்கலாம். அதை மீற நம் கூட்டு முயற்சி தேவை. அரசு மாற்றத்தால் அது மாறுமா என சொல்வதற்கில்லை. எனினும் அத்திசையை நோக்கி பயணிக்கவாவது வேண்டும். நாம் அரசியலை துருவங்களாக உருவகித்து கொள்கிறோம். யார் வரக்கூடாது எனும் தேர்வு மட்டுமே நம்மை இயக்குவதாக உள்ளது. அதுவே ஒரு கட்சியை பி டீம் என சொல்ல வைக்கிறது. இதன் பின் உள்ள மனநிலை நீங்கள் எங்களுடன் உள்ளீர்கள் அல்லது எங்களுக்கு எதிராக உள்ளீர்கள் என்பதே. இந்த மனநிலையே பாசிசத்தின் ஊற்று. 

அதிருப்தியினால் ஏற்படும் செயலூக்கம் விசையழியும். இதை கடக்க நேர்மறை கனவு வேண்டும். காந்தி சவுரி சவுராவிற்கு பிறகு ஆக்கப்பூர்வ செயல்திட்டத்திற்கு தான் திரும்புகிறார். அதற்கே அதிக ஆற்றலை செலவு செய்கிறார். காந்தி இந்த அதிருப்தியின் ஆற்றல் சிதறுவதை அவர் காலத்தில் முன் உணர்ந்த ஒரே தலைவர். ஆகவே செயலூக்கத்தை இயக்கும் அதிருப்தியை வெளியேற்றி நேர்மறை இயல்புகள் கொண்ட ஒரு இயக்கத்தை நடத்த முயல்கிறார். கீதையை இந்த தளத்திலேயே அவர் பயன்படுத்துகிறார். கொள்கை அரசியல் இந்த தளத்தில் வலுவானது. அதன் கருத்தியல் எதிரி நன்கு வரையறை செய்யப்பட்டதால் அதுவே அவர்களை இயக்கும் விசையாகி சிதறாமல் காக்கிறது. கமல் 'சீரமைப்போம் தமிழகத்தை' என சொல்லும்போது அதில் ஒரு நேர்மறை கனவு உள்ளது. தேர்தல் அரசியலுக்கு அப்பால் களத்தில் இந்த நேர்மறை செயலூக்கத்துடன் செயல்படுவாரா என்பதே அவருக்கு முன் இருக்கும் சவால். செயலூக்க அரசியல் தனக்கான தவைவர்களை திரளில் இருந்து உருவாக்கிகொள்ளும். காந்தி, ஜெ.பி, கெஜ்ரிவால் போன்றோர் தவைவர்களாக உருவானபோது அவர்களுக்கு பின் பெரும் வரலாறு ஏதுமில்லை. கமலுக்கு உள்ள மற்றொரு சவால் அவர் ஏற்கனவே தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட பிம்பம். பிம்பங்கள் குறித்து கூட்டு நனவிலியில் சில பொது கற்பிதங்கள் படிந்திருக்கும். அதை குலைக்கும் செயலை அத்தனை எளிதில் அனுமதிக்காது. கமல் மக்கள் நீதி மய்யத்தின் ஒரு முகமாக இருந்தாலும் அதன் ஆற்றல் என்பது, தங்கள் தங்கள் பகுதிகளில் செயல் முனைப்போடு களத்தில்  ஈடுபடுபவர்கள்  தேர்தல் அரசியலில் ஈடுபடுவதற்கான தங்கள் முகமையாக மக்கள் நீதி மய்யத்தை காண்பதுதான்‌. அத்தகையவர்களுடன் கமல் தானும் ஒரு முகமாக இருக்கும்போது இதில் ஓரு சமநிலையை அடைய முடியும். எங்கள் தொகுதியில் மநீம சார்பாக நிற்கும் ராசக்குமார் பல ஆண்டுகளாக களப்பணியாற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயரெடுத்தவர். ஆலந்தூஅ சரத் பாபு மற்றொரு உதாரணம். மக்கள் நீதி மய்யம் செயல்வழி அரசியலின் பாதையை தேர்வதற்கான தொடக்க அறிகுறிகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. அத்திசையில் தனது பயணத்தை தொடரும் பட்சத்தில் பல புதியவர்களை அரசியலுக்கு கொணரும், புதிய முன்மாதிரியை தமிழகத்தில் ஏற்படுத்தும். எப்போதும் புதிய திரளை அரசியல்படுத்தும் பணியை செயல்வழி அரசியல் இயக்கங்களே வரலாற்றில் நிகழ்த்தியுள்ளன. மக்கள்  நீதி மய்யம் வளர்வது நீண்ட கால அளவில் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் வளர வழிவகுக்கும். 

Saturday, February 26, 2011

மாற்று அரசியல் -சில புரிதல்கள்

மாற்று அரசியல் -லட்சியவாதம் என்று அவ்வபொழுது எங்கேனும் சில குரல்கள் ஒலிக்கும் அதை கேட்கும் பொழுதெல்லாம் மனதில் ஒருவித மென்னகை படர்கிறது .எந்த கட்சியையும் சாராத மனசாட்சியுள்ள மனிதர்கள் இன்னும் ஆங்காங்கு வாழ்கிறார்கள் .இனி இந்தியாவில் ஒரு மகாத்மா வந்து நம்மை கைதூக்குவார் எனும் நம்பிக்கை மெல்ல மெல்ல மூச்சைடத்து மூர்ச்சையாகிறது ,ஆகினும் நம்பிக்கைதானே வாழ்க்கை எங்கோ ஒரு மூலையில் மானுடம் இன்னும் புலன்களுக்கு சிக்காமல் வாழ்கிறது எனும் நம்பிக்கையில் இந்த பதிவு .

பலநேரங்களில் நம்மை ஏன் மற்றொருவர் ஆள வேண்டும் எனும் வினா மனதில் கடும் அமளியை ஏற்படுத்துவதுண்டு ,ஒரு தேசம் என்பது சமூகங்களின் தொகுப்பு ,சமூகங்களோ குடும்பங்களின் தொகுப்பு ,குடும்பங்கள் தனிமனிதர்களின் தொகுப்பு .இந்த புரிதலில் அமிழ்ந்தோம் எனில் நமக்கு புரிவது தேசம் என்பது பல சமூகங்கள் ,குடும்பங்கள் ,தனிமனிதர்களின் கூட்டு சாத்தியம் .அதே போல் ஒவ்வொரு தனிமனிதனும்,சமூகமும்,குடும்பமும் சிறு சிறு தேசங்களே .தேசத்தை நிர்வகித்தல் என்பது இவை அனைத்தையும் நிர்வகித்தல் ,ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை நிர்வகித்தால் தேசமே நிர்வகிக்கப்படும் ,இது ஏற்கனவே உள்ள கோட்பாடுகள் தான்

சுதந்திரம் என்பது என்ன ? பல சமயங்களில் மூளை முறுக்கி சிந்தித்ததுண்டு .நாம் முற்றிலும் சுதந்திரமாக இயங்க முடியுமா ? உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்பவை ,சுதந்திரம் என்பது ஒரு வித மாயை ,வண்டலூர் மிருககாட்சி சாலையினுள் சுத்தி திரியும் புலியை போல் நாம் ,நமது உலகம் வண்டலூர் மட்டும் என்று எண்ணுவதால் வரும் குழப்பம் ,independence அல்ல interdependence என்பதே பிரபஞ்ச நியதி .

தன்னை தானே நிர்வகிக்கும் தனிமனிதர்கள் கொண்ட சமூகம் பிறக்கும் பொழுது அரசின் தேவை நமக்கு இல்லை ,இதையே அரசின்மை வாதம் முன்வைக்கிறது ,அத்தகைய நிலையை நாம் எட்டும் வரை அதிகாரமும் அராசங்கமும் மந்தையை கவனித்து ஆக வேண்டும்

சரி இதெல்லாம் இருக்கட்டும் ,இனி தமிழகத்தில் தேர்தல் திருவிழா .தேர்தல் எனும் ஒரு நாள் கூத்திற்கு செலவழிக்க படும் தொகை எவளவு தெரியுமா ? ஒரு தொகுதிக்கு ஆளும் கட்சி .எதிர் கட்சி ,உதிரி கட்சி ,அரசு எல்லாரும் செலவழிப்பது தொரயாமாக குறைந்தபட்சம் பத்து கோடிகள் அல்லது அதற்கு மேல் செலவு ஆகலாம் .அப்படியானால் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்காக 2340 கோடிகள் ஒரே நாளில் விரயமாகப்போகிறது ,இறுதியில் யார் அதிகம் செலவு செய்தார்களோ அவர்களை மக்கள் வெற்றி பெற செய்கின்றனர் .மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியன் ,அல்லது ஆசிரியர்,மென்பொருள் நிறுவனத்தார் இவர்கள் யாரும் செலவு செய்ய துணியாத ஒரு தொகையை அதே முப்பதாயிரம் சம்பளமாக பெரும் ஒரு மக்கள் பிரதிநிதி அந்த பதிவிக்காக தன சம்பாத்தியத்தை விட மூவாயிரம் மடங்கு செலவழிக்க தயாராக இருக்கிறார் எனில் அவர்களுடைய நோக்கம் எத்தகையது என்பதை நாம் அறிய வேண்டும் .

இதிலே மக்கள் சேவை எங்கிருந்து வரும் ?மக்களை கவனிப்பாரா அல்லது போட்ட காசை திருப்பி மீண்டும் அடுத்த தேர்தலுக்கு காசை பிரட்ட முயல்வாரா ?
மக்கள் சேவை எனும் முகமூடி அணிந்து நம் முன் கட்சி கொடிகளை ஏந்தி வரும் இவர்களுக்கு நாமும் வேறு வழி இல்லாமல் ஒட்டு போடுகிறோம் ,இவருக்கு அவர் மேல் அவருக்கு இவர் மேல் இதுவே நம் ஓட்டை நிர்ணயிக்கும் சக்தி !

யார் ஒருவர் தன சக்திக்கு மீறி காசை இறைக்கிராரோ அவருக்கு வேறு நோக்கம் உள்ளது என்பதை அறிந்து ,இத்தகைய வேட்ப்பாளர்களை கட்சி ,ஜாதி சார்பின்றி புறக்கணிக்க வேண்டும் .யார் மிக குறைவாக செலவழித்து அதே சமயம் நிறைவாக நமக்காக குரல் கொடுப்பார் என்று தோன்றுகிறதோ அவர் சுயேட்சையாக இருந்தாலும் சரி அவர் வெல்ல மாட்டார் என்றாலும் சரி -அவருக்கு தான் நமது ஒட்டு போய் சேர வேண்டும் .
இதுவே மெய்யான ஜனநாயகத்தின் செயல்பாடு .நாம் ஒட்டு போட்டவர் வெல்வதும் தோற்பதும் அல்ல ,நாம் சரியான மனிதருக்கு வாக்களித்தோம் எனும் மன நிறைவே இங்கு முக்கியம் .இது ஒரு இயக்கமாக நம் மக்கள் முன் மலர வேண்டும் .அப்படி மலர்ந்தால் ஒழிய தேர்தல் நேர அதீத காசு மழை நிற்காது .ஒட்டு மொத்தமாக மக்கள் இவர்களை புறக்கணிக்க தொடங்கினால் ஒழிய இது சாத்தியம் இல்லை .
ஒரு அரசியல் இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் ,எனக்கும் உண்டு .
ஒரு அரசியல் தலைவனின் பார்வையில் முதல் முக்கியத்துவம் தேசத்துக்கு ,மக்களுக்கு அதன் பின்பு கட்சிக்கும் கொள்கைக்கும் அதன் பின்பே தனக்கும் தனது குடும்பத்துக்கும் என்பதை உறுதியாக கடைபிடிக்க வேண்டும்

கவர்ச்சி திட்டங்கள், இலவசங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டு .மக்களின் வாழ்க்கை தரம் உயரும் வண்ணம் அவர்களின் சுயமரியாதை பங்கம் விளைவிக்காமல் நல்ல தனி மனிதர்களை உருவாக்க முனைய வேண்டும் .

தங்களது கொள்கைகள்,நம்பிக்கைகள் மேல் பற்று இருக்கலாம் -ஆனால் அது வெறியாகி அதை நிறுவ முயன்று வெறுப்பை விதைக்க கூடாது . அவரவர் கொள்கைகளில் உறுதியாக இருந்தாலும் மாற்று கொள்கைகளை ,நம்பிக்கைகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்

வீண் ஆடம்பரங்கள் கூடாது ,நெடுஞ்சாலையை நோண்டி வளைவுகள் வைத்தல் ,ரோட்டை மறித்து மேடை போடுதல் ,பெரும் கூட்டத்தை கடற்கரையில் கூட்டி கடற்பரப்பு எங்கும் கண்ணாடி பீர் குப்பிகளும் ,பாதி குதறிய பிரியாணி பொட்டலங்களும் நிறைந்து கிடக்கும் அவலம் இனி கூடாது .

தனி மனித தாக்குதல்களில் ஈடுபடாத அமைப்பு வேண்டும்.மக்கள் நலன் முன்னிலை வகித்தால் போதும் .நீ டாஸ்மாக்ல உருண்டது தெரியாதா ,நீ திருட்டு ரயில் ஏறியது தெரியாதா ,உனது நடத்தை பற்றி தெரியாதா எனும் சவடால்களும் ,அறைக்கூவல்களும் முதலில் நிற்க வேண்டும் .எதிர் கட்சி நம் எதிரி கட்சி அல்ல ,கருத்துக்களின் ஊடே மோதல்கள் நிலவலாம்,சமரசங்கள் இன்றி பயணிக்கலாம் ஆனால் அடிப்படை மனித உணர்வுகளை பாதிக்காது அவை நிகழ வேண்டும் .அவரும் மக்கள் மீது உள்ள அக்கறையில தான் சொல்லுறாரு என்று உணர வேண்டும் .