Monday, September 17, 2018

சிதல்

சிதல் 











(ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளிவந்த இடைவெளி இதழில் வெளியான சிறுகதை. நன்றி இடைவெளி ஆசிரியர் குழு)

1
செம்மண் படிந்து பழுப்பேறிய வாயில் சுவரின் விலா எலும்புகள் என செங்கல் பூச்சு ஆங்காங்கு தென்பட்டது. கருத்து துருவேறி இருக்கும் தாமரைக்கதவு வெள்ளி நிறத்தில் இருந்ததாக ஞாபகம், கருப்பு என்றால் கருப்பும் அடர் அரக்கும் சேர்ந்த அப்பத்தாவின் புகையிலைக் கறை படிந்த பற்களின் கருகருப்பு. வாயில் வளைவில் ஆங்கிலத்தில் புடைத்திருந்த கே எல் எஸ்சில், எல்லின் கீழ்க்கோடு சிதைந்து ஐ போல இருந்தது. சிரித்துக் கொண்டான். வளைவின் இரு பக்கமும் வரவேற்கக் குந்தியமர்ந்திருக்கும் சிங்கங்களின் வளைந்த வாலுக்கு பதிலாக ஒரேயொரு கம்பி நீட்டியிருந்தது. வலப்பக்க சிங்கத்தின் ‘மொகரையை’ வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடிப் பெயர்த்தது நினைவுக்கு வந்தது. இப்போது அதன் முன்னங்காலும் உதிர்ந்திருந்தது. தன்னிச்சையாக அவன் விழிகள் கிணற்றடியில் நிலைபெற்றன. பவளமல்லி இருந்த இடத்தை நோக்கினான். தந்தரையாக சிமிண்டு பூசப்பட்டிருந்தது. 

“அக்கா..” என்று அழைத்தான். குரல் அவன் எதிர்நோக்கிய விசையை அடையாமல் கம்மியது. தொலைகாட்சியில் யாரோ ஒரு பெண்  ஆவேசமாக அழுது கொண்டிருந்தது கேட்டது. மீண்டும் குரலைச் செருமிக்கொண்டு சற்றே உரக்க “அக்கா” என்றான். அதிகாரமாக ஒலித்த அத்தொனி அவனுக்கு பிடிக்கவில்லை. விரித்த தலைமுடியுடன் ஊதா பூ போட்ட நைட்டி அணிந்த ஒடிசலான பெண் வாயில் சீப்பை கவ்விக்கொண்டு அரக்கப்பரக்க வந்தாள். 
“மீனா அக்கா இருக்காங்களா?”

வாயிலிருந்த சீப்பை எடுக்காமலே, உள்பக்கமாக கதவை பின்னியிருந்த வளைக் கம்பியை இழுத்து தாமரைக் கதவை திறந்தாள். கையிலிருந்த இழு பெட்டியையும் முதுகில் சுமந்த பயணப் பொதியையும் பார்த்தவுடன் அவளுக்கு யாரென்று தெரிந்திருக்க வேண்டும். அவள் உள்ளே சென்றதும் மீனா அக்கா வந்தாள். 

“வாய்யா தம்பு... கார்த்தியா, அண்ணனுக்கு சேரு கொண்டாடி... எம்மவதான், தெரியலையா...” என்றாள்.

“இருக்கட்டும்க்கா... நல்லா இருக்கிங்களா?” என்று பெரிய திண்ணையில் ஏறியமர்ந்தான். கை வைத்த இடத்தில் தூசி மறைந்து துலக்கம் அடைந்தது. செந்தியின் அப்பத்தாவிடம் ‘குட்டி கொடுத்து’ வந்தவள் மீனா. அவனை விட எப்படியும் பத்து வயது மூத்தவள். கூடமாட ஒத்தாசையாக இருப்பாள். அய்யா இறந்தபிறகு அவள்தான் சமையல். செந்தியின் அப்பனும் ஆத்தாளும் அவனுக்கு நான்கு வயதிருக்கும்போதே காப்பி எஸ்டேட் அருகே  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தபின் செந்தியை கவனிக்கும் பொறுப்பு  அதிகமும் அவளே ஏற்றுக் கொண்டாள். பதின்மம் என வகுக்கும் முன்னரே துவங்கிய கனவுகளை அதிகமும் ஆரம்ப நாட்களில் நிறைத்தவள் அவள்தான். என்னவென்று விளங்குவதற்கே அவனுக்கு சில வருடங்களானது. அதற்குள் அவளுக்கு பத்து பவுன் போட்டு பழனிக்கு அப்பத்தாதான் திருமணம் செய்து முகப்பில் குடி வைத்தாள். பழனி அரண்மனையில் எடுபிடியாக இருந்தான்.  வாடகை ஒன்றும் தர வேண்டாம். வீட்டைப் பார்த்து கொள்ளுங்கள். மாதமொரு முறை கூட்டி மொழுக வேண்டும் என அப்பத்தா இருந்த காலத்திலேயே  முடிவாகி இருந்தது. 

“பழனி ஐத்தான் சமாசாரம் கேள்வி பட்டேன்... தைரியமா இருங்கக்கா”

கண்ணிலிருந்து நீர்த்தாரை கன்னத்தை பகுத்து இறங்கியது. திண்ணையில் பதிந்திருந்த கருப்பு வெள்ளை முக்கோண ஆத்தங்குடி கற்களை வெறுமே வெறித்துக் கொண்டிருந்தான். உத்திரத்தைத் தாங்கும் வழவழப்பான தூண்கள் திண்ணையிலிருந்து முளைத்தன. அவனுடைய நினைவில் அவை கொண்டிருந்த பிரம்மாண்டம் நேரில் இல்லை என்பது ஏமாற்றமாக இருந்தது. உள்ளே சென்று பெரிய இரும்புச் சாவியையும் கொத்துச் சாவியையும் எடுத்து வந்தாள். கார்த்திகா பச்சைநிறக் குடத்தை தூக்கிக் கொண்டு பதுங்கு குழி போல் இருக்கும் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி காணாமலானாள். 

செந்தி கனத்த இரும்புச் சாவியை பூட்டுத் துளையில் விட்டு இரண்டு முறை திருகினான். அப்போதுதான் நிலைக்கதவின் மேலிருந்த சரசுவதியின் கையிலிருந்த வீணை சிதைந்திருந்ததை கவனித்தான். 

2

ஐந்து மணிக்கெல்லாம் இருட்டத் துவங்கியது. வெளிர் நீல வானத்தில் ஒரு துளி கருமை சேர்ந்து கலக்கியது போல் சாம்பல் கொண்டது வானம். காற்றின் வெம்மையும் வறட்சியும் ஏதோ ஒரு நொடியில் மாறி இப்போது குளிர்ந்து கனத்தது. மூங்கில் கழிகளால் ஆன சாரத்தில் ஏறி சாத்தையா சுதைச் சிற்பங்களுக்கு வர்ணம் அடித்து கொண்டிருந்தான். சரசுவதியின் கையிலிருக்கும் வீணைக்கு அரக்குடன் கொஞ்சம் வெள்ளை வர்ணத்தைக் கலந்து காய்ந்த மரப்பட்டையின் உட்புற நிறத்தை உருவாக்கிப் பூசினான். புளியமரத்தில் கட்டப்பட்டிருந்த குழாயில், “ஈசுவரியே மகமாயி மாரியம்மா...” என ஈசுவரி உச்சக் குரலில் பாடிக் கொண்டிருந்தார். நிழலில் பரவியிருந்த மணலில் துண்டை விரித்து ஒருக்களித்து படுத்துக்கொண்டு கோபுர வேலையை பார்த்து கொண்டிருந்தான் பாண்டி. அடிமரத்தையொட்டி வளர்ந்திருந்த பிரம்மாண்டமான புற்றுக்கு   அருகே கறுப்பு எறும்புகள் ஊறிக் கொண்டிருந்தன. 

அத்தனை நாள் ஒரேயொரு திட்டில் இருந்த பீடமும் அருகில் நடப்பட்டிருந்த சூலமும்தான் காளியாத்தாவாக இருந்தது. சூலத்தின் நுனியில் குத்தியிருக்கும் எலுமிச்சை மண்ணிறத்தில் வதங்கிச் சுருங்கி மாதக்கணக்காக கிடக்கும். சூலத்தின் இரு பிரிகளில் தொங்கும் வளையல்களை கொண்டுதான் அது காளியாத்தா என உறுதி செய்து கொண்டார்களாம். பீடத்தைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் சிவப்பு ரவிக்கைத் துணி காற்றில் உளையாமல் இருக்க எடைக்கு கல் வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். வானே கூரையாக ஆத்தா வெயிலிலும் மழையிலும் எப்போதைக்குமாக நின்றிருந்தாள். 

பாண்டி முணுமுணுத்தான், “ஒனக்கு வந்த வாழ்வப் பாரேன்... கட்டடம், மதிலு, கோவுரம்... நல்லாயிரு ஆத்தா” என்று கேலியாகச் சிரித்தான். இரண்டடிக்கு ஒரு சிறிய அம்மன் சிலையொன்று பீடத்திற்குப் பின் நிறுவப்பட்டிருந்தது. அடுத்த வாரத்தில் அதற்கு வெள்ளிக் கவசம் வரும் என்று ஸ்தபதி கூறிவிட்டு சென்றிருந்தார். “திருழா சமயத்துலதான் சனம் வரும்... பொங்கல வைக்கும்... கோழியறுத்து, கிடாவெட்டிட்டு போய்கிட்டே இருக்கும். இப்ப என்னடான்னா ஒனக்கு ஆறுகால யாகசால பூச... பிள்ளையார்பட்டி ஐயருங்க வாராகளாம்... கும்பத்துக்கு தண்ணி விடுறாங்களாம்,” என்று அந்தரத்தில் பேசிக்கொண்டிருந்தான். 

இடிச்சத்தம் கேட்டது. சாத்தையா மளமளவென இறங்கி வந்தான். “சத்த நேரம் மழ வரலைனா போதும்... காஞ்சுரும்... மீத வேலைய நாளைக்கு முடிச்சிரலாம்” என்று கிளம்பினான். பாண்டி துண்டை உதறிவிட்டு மரத்தடியில் சிமிண்டு மூட்டை அடுக்கப் போட்டிருந்த கொட்டகைக்குள் சென்றான். கோவில் வேலை ஆரம்பித்ததில் இருந்து அவன் அங்குதான் உறக்கம். சாய்த்து வைத்திருந்த கயிற்றுக் கட்டிலை நேராக்கிவிட்டு தலைக்கு துண்டை வைத்துக்கொண்டு படுத்தான்.  கும்பாபிஷேகம் முடிந்த கையோடு திருவிழாவும் வருகிறது. இம்முறை ஆட்டம், சினிமா என எல்லாமும் உண்டு. “எல்லாத்துக்கும் ஒரு  காலநேரம் வரும் போல... சாமிக்கும்தான்... எட்டாம் நாள் மண்டகப்படிகாரவுக என்ன ஆனாங்கன்னே தெரியல... இம்புட்டு வருஷமா புத்து மண்ணுல அவிசெகம் பண்ணிக்கிட்டு கிடந்தோம்... இப்ப என்னடான்னா அம்பேரிக்காவுலேந்து பணம் வருது... அவுகதான்னு சொல்றாக” என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். 

பாண்டிக்கு ஆற்றாமை பொறுக்க முடியாமல் புலம்பிக் கொண்டிருந்தான். பரம்பரையாக கோவில் பூசை பார்த்து வந்தாலும் அவனுக்கு என்றிருந்த நிலத்தையும் கோவில் நிலத்தையும் அவன்தான் கவனித்தான். செல்வியை மணமுடித்து ஆறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் புழு பூச்சி ஏதும் உண்டாகவில்லை. நான்கு ஆண்டுகளாக வெள்ளாமை இல்லை. கம்மாய்கள் எல்லாம் வறண்டு பாளம் பாளமாக வெடித்துக் கிடந்தன. ஊரில் யாருமே விதைக்கவில்லை. தண்ணிக்குடத்தை தூக்கிக் கொண்டு பஞ்சாயத்து குழாயடிக்கு சென்று வந்தார்கள். இப்போது மூன்று மாதமாக தேவகோட்டைக்கும் காரைக்குடிக்கும் கட்டட வேலைக்கு நாள் கூலி நானூறு ரூபாய் கொடுக்கிறார்கள் என போய்க் கொண்டிருந்தான். பத்து நாள் சென்றால்கூட போதும், அந்த மாசத்தை ஓட்டிவிடலாம். ஆனால் அதற்கும் இருநூறு ரூபாய்க்கு வேலை பார்க்க வடக்கிலிருந்து ஆட்களை கூட்டி வருகிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் மீது ஆத்திரமாக வந்தது. பிறகு இருநூறுக்கே வழியில்லாமல் வருகிறார்களே என பரிவு கொண்டான். செல்வியும் மண்ணு வார அவ்வப்போது செல்வாள். நாலு சட்டி மண்ணை அள்ளிக் கொட்டிவிட்டு கொண்டு போன கட்டுச் சோற்றை தின்றுவிட்டு செட்டாக கிளம்பிவிடுவார்கள்.

 இரண்டு மாதங்களுக்கு முன் கோவில் திருவிழா நடத்த கூட்டம் கூட்டி கணக்கு போட்டபோது. காசு கொடுக்க யாருமே முன்வரவில்லை. கொடுப்பதற்கு எதுவுமில்லை என்பது ஒருபுறம், கொடுக்க மனமில்லை. “இங்கே சோத்துக்கே வழியில்ல..” என்று கரித்துக் கொட்டினார்கள். கடைசியில் மண்டகப்படிகாரர்கள் மட்டும் ஆளுக்கு ஆயிரம் தருவதாக முடிவானது. சக்கர சோறு, சுண்டல் எல்லாம் போட வேண்டியதில்லை. வெறும் தேங்காய் பழம் வைத்து கும்பிட்டால் போதும் என்றார்கள். 

பாண்டி மனம் நொந்திருந்தான். ஒரு நாளைக்காவது நல்ல பிரசாதம் போட வேண்டும். காசைப் புரட்டிவிடலாம் என திட்டவட்டமாக இருந்தான். இப்போது நிலைமை தலைகீழானது. சாரத்தின் மீது தார்பாலினை போட வேண்டும், மழை உறுதியாக வரும் போலிருக்கிறது. எழுந்து வெளியே வந்தான்.  

பளீர் என ஒரு வெளிச்சம், பின் பேரிரைச்ச்சல். உடல் அதிர்ந்து சில அடி தூரம் அப்பால் கிடந்தான். என்னவென்று சுதாரித்துக் கொள்வதற்கு முன் கொட்டகை தீப்பற்றி எரிந்தது. புளிய மரம் பொசுங்கிச் சாய்ந்திருந்தது.  

3
சமையற்கட்டு உத்திரத்திலிருந்து ஒரு கட்டை அரித்து விழுந்தது. கொலுப் பொம்மைகள் இருக்கும் மர பீரோவின் காலை அரித்தது. மேலேறும் முன் அப்பத்தா கவனித்து மண்ணெண்ணெய் ஊற்றினாள். “ராவோடா ராவா நம்மளையும் அரிச்சுப்புடும் போலிருக்கே” என்று அலுத்துக் கொண்டாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் கரையானைக் கண்டுபிடித்தார்கள். அப்பத்தாவின் சீலை, அம்மாவின் கல்யாண சீதனமாக வந்த பாய், ஐயாவின் புகைப்படங்கள், அழகிய வேலைப்பாடுகள் உடைய புகைக்கும் பைப், அய்யா சேர்த்து வைத்த சித்த மருத்துவச் சுவடிகள், பழைய பதிப்பில் வெளிவந்த அரபளீசுவர சதகம் என சகட்டுமேனிக்கு அரித்துத் தீர்த்தது. ஒவ்வொரு நாள் விடியும் போதும் இன்று எங்கிருந்து கரையான் புறப்படும் எனும் பய பீதியுடனே விடியும். பள்ளிக்குச் செல்வதற்கு முன் சுற்றிச் சுற்றி பார்த்துவிட்டுதான் செல்வான். மாலை வீடு வந்தவுடன் செந்திக்கு சாமான்களை திரும்ப அடுக்கி முடிப்பதற்கே எட்டு மணியாகிவிடும். அப்பத்தா ஆயாசமடைந்து நொந்து போவாள். மண்ணெண்ணெய் கலந்த நீரில் வாசல் தெளித்தார்கள். தூரிகையால் சுவற்றை ஒட்டி மண்ணெண்ணெய்யில் முக்கித் தீட்டினான். எலி விளக்குத் திரியை இழுத்து போட்டால்கூட வீடே பற்றிக்கொண்டு எரிந்து சாம்பலாகியிருக்கும்.  பர்மா தேக்குகளும் பிர்மிங்காம் இரும்பும் உருகி உருவழிந்துவிடும். நீரை அஞ்சிய இம்மக்கள் நெருப்பை அஞ்சவில்லை போலும். மரத்தை இழைத்து மாளிகை எழுப்பியிருக்க மாட்டார்கள். கரையான் மண்ணுக்குள் ஒரு தீக்கங்கைச் சுமந்து கொண்டு திரிகிறது.

 மண்ணெண்ணெய் காய்ந்து மூன்று நாட்களில் கரையான் மீண்டும் பெருகி வந்தது. மண்ணுக்குள்ளிருந்து ஒரு முடிவற்ற ராணுவம் எழுந்து வருகிறது. அவனுடைய கனவுகளில் கரையான்கள் வரத்துவங்கின. சுவடிகளில் ஊரும் கரையான்கள் பூதக்கண்ணாடியை சுமந்துக்கொண்டு எழுத்துக்களில் ஊர்ந்தன. என்றோ எப்போதோ தொலைத்த எழுத்துக்களை தேடித் தேடி உண்டன. அல்லது ஒவ்வொரு கரையானும் ஒரு வாக்கியத்தை நிரப்புவதற்கு உரிய சொற்களை தேடித்தேடி உண்கின்றன.  தங்க சரிகை பின்னிய சிவப்பு பட்டு புடவையை அணிந்துகொண்டு ஆடிக்கு முன் நின்றது ஓர் ஆளுயர கரையான். நாணத்துடன் முந்தியை வாயில் செருகி மெல்ல மொத்த சேலையையும் விழுங்கியது. ஒரு குண்டு புத்தகத்தின் நடுபக்கத்தில் இரண்டு தாள்களிலும் கவச உடையணிந்த கரையான்கள் ஒன்றையொன்று மூர்க்கமாக தாக்க துவங்கின. இதன் தாளை அது திண்பதும். அதன் தாளை இது தின்பதுமாக மாற்றி மாற்றி ஆக்கிரமித்தன. அவை அவனுடன் பேச துவங்கின. அவனறிந்த மனிதர்களின் உருவை ஏற்றன. எப்போதும் அவனுடலில் அவை ஊறிக்கொண்டிருந்தன.. செவிவழியாக, மூக்கு வழியாக அவன் மூளைக்குள் நுழைந்தன. இரவுகளில் பற்களை நறநறவென கடித்தான், உரக்க பிதற்றினான்.  

முகப்பில்  இருக்கும் பவளமல்லி வேரில் கரையான் ஏறியது. அம்மா ஆசையாக வைத்தச் செடி என்பாள் அப்பத்தா. சின்னஞ்சிறிய அழகிய பூ. வெள்ளை இதழ்களும் சிவந்த அடித்தண்டும். காலையில் எழுந்து போனிமையாக பொறுக்கி எடுத்து நீரில் போட்டு வைத்து ஒவ்வொன்றாக நூலில் தொடுப்பாள். அத்தனை அழகு. ஒவ்வொருநாளும் பூக்கள் குறைந்தன. இலைகள் காய்ந்தன. வாடிய இலைகள் கிளையிலிருந்து உதிரக்கூட தெம்பில்லாமல் ஒட்டிக் கிடந்தன. வேப்பெண்ணெய்க் கசடை வேரில் ஊற்றினான். கொஞ்சம் எடுத்து பட்டையிலும் தடவினான். மறுநாள் மீண்டும் இலைகள் துளிர்த்தன. நம்பிக்கையடைந்தான். மீண்டும் கசடை தெளித்தான். மூன்றாம் நாள் கரையான் மறுபக்கம் பட்டையில் ஏறியது. இந்தமுறை இன்னும்  உக்கிரமாக. நடுத்தண்டு வரை. அவனுக்கு பித்தேறியது. இம்முறை வேரில் மண்ணெண்ணெய் ஊற்றினான். பட்டைகளில் தடவினான். காலை மேலும் இலைகள் பட்டுப் போயின. எப்படியாவது பிழைக்க வைக்க வேண்டும். செய்வதறியாது தவித்தான். ஒரேநாளில் கரையான் பச்சைத்தண்டை சுள்ளியாக்கியது. ஒரேயொரு கிளை மட்டும் காயாதிருந்தது. அதை மட்டும் வெட்டி வைத்துக்கொண்டு பொறுக்க முடியாமல் மரத்தை வேரோடு ஆட்டினான். ஒரே உலுக்கில் சாய்ந்தது. அடி வேரில் கரையான்கள் வெள்ளை மூக்குடன் அலமளந்து கொண்டிருந்தன. ஆத்திரம் தீர மண்ணெண்ணெய் ஊற்றி அங்கேயே கொளுத்தினான். மூன்றிரவு அவன் உறங்கவில்லை.    

புதுகோட்டையிலிருந்து கரையான் மருந்தடிப்பவர்கள் வந்தார்கள். ஓரடிக்கு ஓரடி துளையிட்டு மருந்தை செலுத்தினார்கள். ஒரு வாரத்திற்கு எந்த தொந்திரவும் இல்லை. நிம்மதியாக இருந்தது. கரப்பான்கள் ஆங்காங்கு செத்து மிதந்தன. பத்து நாளில் செத்து விழுந்த பல்லிகளை எறும்பு மொய்த்து சாமியறையில் துர்நாற்றம் வீசியது. பின்கட்டில், முற்றத்தில், மாடியில், என பல்லிகள் செத்து விழுந்தன. அங்கணத்தில் ஒரு எலி அசைவற்று வாய் பிளந்து கிடந்தது. பின்கட்டு சாக்கடையில் இரண்டு எலிகள் செத்து கிடந்தன. மறுநாள் மரப்படிக்கு கீழ் இரண்டு எலிகள் செத்து கிடந்தன. மீனா வளர்த்த சாம்பல் நிறத்து பூனை செத்து விரைத்திருந்தது. “பூச்சியண்டாத எடத்துல மனுஷன் வாழக்கூடாது ராசா” என அப்பத்தா புலம்பத் துவங்கினாள். காற்றிலும் சுவரிலும் நஞ்சு சூழ்ந்தது. 

அந்தவருடம் மழையின்றி கிணற்றில் நீர்வற்றியது. அறுபதடிக்கு கிணற்றுக்குள் இறங்கிய ஆழ்துளைகிணறு கூட தூர்த்துவிட்டது. கிணற்றுக்குள் இறங்கிச் சென்று தூரெடுக்க பழனி இருவரை கொத்தமங்கலத்திலிருந்து அழைத்து வந்திருந்தான். மூச்சு முட்டி சடலமாக மேலே வந்தான் அதிலொருவன். 

பனிரெண்டாம் வகுப்பு பரீட்சை முடியும்வரை சின்னையா சேனா சூனா வீட்டிற்கு மாறினார்கள். அப்பத்தா சாகும்வரை அங்குதான் இருந்தாள். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது சாகக் கிடந்து இழுத்து கொண்டிருந்த அப்பத்தாவை அங்கே கொண்டு போய் ஓரிரவு வைத்திருந்தார்கள். அதன் பின்னர்தான் மூச்சடங்கியது. அப்பா, அம்மா, அய்யா, கடைசியாக அப்பத்தா எனச் சில வருடங்களுக்குள் தொடர்ந்து கேதங்கள். எஞ்சியது அவன்  மட்டுமே. அய்யாவின் அப்பா பர்மாவிலும் சிங்கப்பூரிலும் சென்று சேர்த்து கட்டிய வீடு. 

இரவும், மழையும் வெயிலும் சகஜமாக வந்துபோகும் வீடு. பால்யத்தின் ஏக்கங்களையும் நினைவுகளையும் தேக்கி வைத்திருக்கும் வீடு. மனிதர்களை விழுங்கிய புதைகுழியாகி கிடந்தது. 

அப்பத்தாவின் காரியம் முடிந்தவுடன் இரண்டு பைகளில் தனக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு அந்தப் பெரிய வீட்டை நினைவில் சுமந்தபடி இனி ஒருபோதும் திரும்புவதில்லை எனும் உறுதியுடன் அங்கிருந்து வெளியேறினான். 


4

உடல் மெலிந்து கோடுகளாக துருத்தி நின்றதாலோ என்னவோ மாட்டின் தலை மட்டும் பெரிதாக இருந்தது. மூட்டை முடிச்சுகளுடன் மாட்டை ஓட்டிக்கொண்டு போய் புளியமரத்தடியில் அவர்கள் நின்றனர். நாலைந்து பிள்ளைகள் செம்மண் பொட்டலில் ஓடியாடிக் கொண்டிருந்தார்கள். சிறிய மேடையின் மீதிருந்த பீடத்தின் மீது நேற்றைய மாலை காய்ந்து கிடந்தது. இரண்டு புதிய எலுமிச்சைகள் சூலத்தில் செருகியிருந்தன. கரி படிந்த மூன்று செம்பறான் கல் கொண்ட அடுப்பு அருகே சாம்பல் படிந்து உச்சி வெயிலில் உறங்கியது. அம்பலம் மாட்டை புளியமரத்தில் கட்டினார். மூன்று பிள்ளைகளும் அவருடைய மனைவியும் மூட்டை முடிச்சுகளை இறக்கி வைத்துவிட்டு நிழலில் அமர்ந்தார்கள். சோலச்சி கைவைத்த இடத்திற்கு கீழே கரையான் ஊறிக் கொண்டிருந்தது. முட்டியில் முகம் புதைத்து அமர்ந்தார். 

பூசாரி பாண்டி அள்ளி முடிந்த நீண்ட வெண்குழலுடன் குளத்திற்கு சென்று நடுவிலிருக்கும் கிணற்றில் வாளியை விட்டு வெண்கலப் பானையில் நீர் மொண்டு வந்தார். “என்னண்ணே  இம்புட்டு நேரம் காக்க வெச்சுடீக... இனி அடுப்ப மூட்டி சக்கர சாதம் போட்டு... ரவைக்கிதான் முடியும்” என்று அலுத்துக் கொண்டார். சொக்கையா அம்பலம் மவுனமாக நின்றிருந்தார். கண்கள் குருதி வரியோடிச் சிவந்திருந்தன. உதடுகள் துடித்தன. 

இரண்டு வருடங்களுக்கு முன் சொக்கையாவின் மகளை இருமதியில் கட்டிக் கொடுத்தார். அதற்காக காவன்னா லேனாவிடம் கொஞ்சம் ரொக்கம் வட்டிக்கு வாங்கியிருந்தார். வெள்ளாமை முடிந்தவுடன் திருப்புகிறேன் என வாக்களித்தார். வானம் பொய்த்தது. வெள்ளாமையும் நட்டம். அடுத்த போகம் விதைக்கவே இல்லை. இந்த ஆண்டு குடிக்கவே தண்ணியில்லை. காவன்னா லேனா ஆள் மீது ஆள் அனுப்பினார். கையிலிருந்த ரொக்கம் எல்லாம் கொடுத்து, நகையெல்லாம் விற்றும்கூட அசலை நெருங்க முடியவில்லை. அவரைப் பார்த்து கொஞ்சம் அவகாசம் கேட்டு வரச்  சென்றார். 

“வாங்க அம்பலத்தாரே. இப்புடி உக்காருங்க” என்று அழைத்து உட்கார சொன்னார். கனத்த உடலில் மகர கண்டியும் தங்கப்பூண் போட்ட ருத்திராட்சமும் அணிந்து அவர் குலுங்கிச் சிரிப்பதை பார்க்க வேடிக்கையாக இருக்கும். எப்படியும் சுளுவில் முடிந்து விடும் என சொக்கையா நம்பினார். எத்தனையோ வருட பழக்கம் அவர்களுடையது. வரக்காப்பி கொண்டு வரச் சொன்னார். போட் மெயிலில் கொழும்புக்கு சென்று வந்த கதையைக் கூறினார். சிநேகமாகச் சிரித்து பழங்கதைகள் பேசினார்.  அவர்கள் இருவரும், ஊரார் பலரும் புழங்கிய ரங்கம்மாவை பற்றி பேச்சு வந்தது. சிங்கப்பூர் லேவாதேவி கடையை கவனிக்க மகன் சென்றிருக்கிறான் என்பதால் இனி இங்குதான் இருக்கப் போவதாக சொன்னார். சொக்கையா தருணம் பார்த்து தனது பேச்சை எடுக்க முயலும்போதெல்லாம், “அது கெடக்கட்டும்” என பேச்சை மாற்றி வேறேதோ விஷயங்களுக்குப் போய் விடுவார். சரி இன்று சரிப்படாது என புரிந்துகொண்டு சொக்கையா கிளம்ப யத்தனித்தபோது. “அட உக்காருங்க போவலாம்... என்ன அவசரம்” எனச் சொல்லி அவருடன் சுடுசோறு சாப்பிட அமர்த்தினார். வெயில் தாழ்ந்து விளக்கு வைக்கும் நேரம் வந்தது. 

காவன்னா லேனாவின் ஆளோடு சோலச்சி அரக்கப் பரக்க ஓடி வந்தாள். சொக்கையாவைக் கண்டதும் கதறி அழுதாள். அங்கேயும் இங்கேயுமாக ஒரு தொகையை பிரட்டி சேலையில் முடிந்ததை காவன்னா லேனாவின் முன் கொட்டினாள். பொறுமையாக எண்ணிப் பார்த்துவிட்டு “வட்டிக்கே காணாது” என்று வாங்க மறுத்து விட்டார். சொக்கையா நிலைமையை புரிந்து கொண்டார். நிலத்தை எழுதிக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதன் பேரில் வீட்டுக்கு வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தார். “சாவகாசமாக வாரும். எனக்கும் பொழுது போகணுமே” என்றார். 

சொக்கையாவிற்கு அவமானம் தாங்கவில்லை. ஊருக்குள் பேச்சாவதற்கு முன் எங்காவது கிளம்பிவிட வேண்டும் என அவசரம் அவசரமாக மூட்டை முடிச்சுகளை கட்டினார்.  

அன்று எட்டாம் நாள் திருவிழா அவருடைய மண்டகப்படி. எப்போதும் அமர்க்களப்படும். இந்த வருடம் எதுவும் பெரிதாக செய்ய முடியாது. குறைந்தது இரண்டு படி சக்கரை சோறும் ஒரு படி சுண்டலும் போட்டுவிடலாம், எதாவது ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன் என பூசாரியிடம் உறுதியளித்திருந்தார். ஆனால் அதற்குள் நிலைமை தலைகீழாகும் என அவர் எண்ணவில்லை. 

நேற்று இரவு இருமதியிலிருந்து தகவல் வந்தது. கழிசலில் பெண் இறந்துவிட்டாள் என்று. கால் தளர அப்படியே சிலைந்து அமர்ந்தார். பூசாரியிடம் தளர்ந்த குரலில் மகள் இறந்ததை சொல்லிக்கொண்டிருந்த போது, சோலச்சி அமர்ந்திருந்த இடத்திலிருந்து கரையான் நெளிந்து கொண்டிருந்த கைப்பிடி மண்ணை அள்ளிக்கொண்டு விடுவிடுவென பீடத்தை நோக்கி சென்றாள். கூந்தலை அவிழ்த்தாள். கண்கள் செம்மண் குட்டையைப்போல் கலங்கியிருந்தன. பீடத்தின் முன் மண்டியிட்டு கையை பக்கவாட்டில் விரித்தாள். 

“நீயெல்லாம் ஒரு ஆத்தாவா... தூ... இப்புடி எங்கள அழிச்சிப் போட்டியே... ஒனக்கெல்லாம் பூச ஒரு கேடா... ” என கையிலிருந்த மண்ணை பீடத்தின் மீது இறைத்துத் தூற்றிவிட்டு விடுவிடுவென அங்கிருந்து சென்றாள்.  

5

ஒவ்வொரு  அறையைத் திறக்கும்போதும் அவன் கைகால்கள் அசைவற்று குளிர்ந்தன. உச்சியிலிருந்து வியர்வை வழிந்தது. “இங்குதான்.. இங்குதான்” எனத் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால் எல்லா அறைகளும் துப்புரவாக இருந்தன. அவன் எதிர்பார்த்ததுபோல் எதுவுமே இல்லை. ஜே.சி எனும் ஜெயச்சந்திரனுக்கு பிடித்துப் போனது. அறைகளில் வெளிச்சம் மட்டும் குறைவு எனினும் பார்த்துக் கொள்ளலாம் என்றான். அங்கு வந்த அன்றே “இப்பலாம் கரையான் வர்ரதில்லையா அக்கா?” எனக் கேட்டான். “என்ன மாய மந்திரமோ... நீ போனப்புறம் நாங்க ஒருநா  கூட கரையானப் பாத்ததில்ல தம்பி” என்றாள். 

கனடாவிற்கு நிரந்தரமாகப் பெயர்வதற்கு முன் வீட்டிற்கு ஏதேனும் ஒரு வழி செய்துவிட வேண்டும் என விரும்பினான். அதற்காகத்தான் செந்தியின் அலுவலக சகா பிஜு அவனுடைய நண்பன் ஜெயச்சந்திரனை கொச்சியிலிருந்து அழைத்து வந்திருந்தான். ஜெயச்சந்திரனுக்கு அலப்பெயிலும் வயநாட்டிலும் சொகுசு விடுதிகள் உண்டு. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள மூன்று நான்கு சொகுசு விடுதிகள் ஓரளவு நன்றாக ஓடுவதால் இவ்வீட்டையும் அப்படி ஆக்க முடியுமா என நோக்கினான். மற்ற விடுதிகள் குத்தகைக்கோ வாடகைக்கோதான் விட்டிருந்தார்கள். பெரிய தொகையை கொடுத்து வாங்குவதற்கு யாரும் தயாரில்லை. ஜெயச்சந்திரன் மட்டுமே வாங்குவதற்கு முன் வந்தான். “இவுட ரிசெப்ஷன்... கெஸ்ட் வெயிட்டிங் ஹால்... அவுட ஒரேயொரு எல் ஈ டி “ என்று வரைபடம் போட்டுக்கொண்டிருந்தான். அவ்வப்போது வழுக்கைத் தலையை நீவிக் கொண்டான். மீனா சமைத்துக் கொடுத்த செட்டிநாடு சிக்கன் அவனுக்கு பிடித்துப் போனது. விரும்பினால் அவர்கள் இங்கேயே தங்கி விருந்தினருக்கு செட்டிநாட்டு உணவுகளை சமைத்துக் கொடுக்கலாம் என்றான். செந்திக்கு நிம்மதியாக இருந்தது. அக்காவை எப்படி வெளியே போகச் சொல்வது எனக் குழம்பிக் கொண்டிருந்தான். திருமயத்தில் பாட்டில் கம்பெனிக்கு அவ்வப்போது வேலைக்குப் போவதாக சொன்னாள். இங்கு நிச்சயம் நல்ல சம்பளம் தருவார்கள். வெளிநாட்டுக்காரர்கள் விரும்பி கொடுக்கும் டிப்ஸ் வகையறாவில் அவள் பங்கிற்கு கவுரவமான தொகை கிடைக்கும். 
பிஜு காதருகே கிசுகிசுத்தான், “எல்லாமே ஓகே ப்ரோ... சொட்டை இஸ் ஹேப்பி... டாக்குமெண்ட்ட மட்டும் கொடுத்தா வக்கீல் கிட்ட பேசிட்டு அடுத்த விஷயத்துக்குப் போலாம்னு சொல்றான்”.

பத்திரம் சின்ன ஐயா வீட்டில் இருந்ததாக நினைவு. அவர்கள் யாரும் இப்போது இங்கு இல்லை. மதுரையில் அவர்களைப் போய் பார்த்து வரலாம் என்றால் திருமணச் சங்கதிகளை பேச ஆரம்பித்துவிடுவார். அமெரிக்காவில் இருக்கும் அவர்களின் பேரன் வீரப்பனிடம் பேசிப் பார்க்கலாம் என அழைத்திருந்தான். வீட்டில் பேசி பத்திரம் அவர்கள் வீட்டிலேயே வெள்ளிச் சாமான் அறையில் இருப்பதாக சொன்னான். சாளரமற்ற இறுக்கமான அறை. பாதுகாப்புப் பெட்டகம் போல் முக்கியமான பொருட்கள் எல்லாம் அங்குதான் வைப்பார்கள். கனமான சுவர். வந்ததிலிருந்து அந்த ஒரு அறை அவன் நினைவில் எழவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்த அறையின் சாவி மட்டும் சற்றே வேறு மாதிரி இருக்கும். கொத்துச் சாவிகளில் அது இல்லை. மீனாவுக்கும் தெரியவில்லை. சின்ன அய்யாவுக்கும் நினைவில்லை. ஒவ்வொரு அறையாகத் தேடினான். எங்குமே கிடைக்கவில்லை. ஜே.சி ஆசுவாசப்படுத்தினான். பதட்டப்பட வேண்டாம் என்றான். கொஞ்சம் நிதானமாக பார்க்கலாம் என்றான். ஆனால் அதற்குரிய அவகாசம் அவனுக்கு இல்லை என்பதை அவனுக்கு புரிய வைக்க இயலவில்லை. ஓய்ந்து குழம்பியமர்ந்தான். பெரிய கல்லைக் கொண்டு ஓங்கி அடித்துப் பார்த்தான். ஒன்றுமே ஆகவில்லை. பூட்டுக்காரனை வரச்சொன்னான். நீண்ட நாட்களாக திறக்காததால் உள்ளே எல்லாம் பிணைந்து கிடக்கிறது. இந்த சாவி – பூட்டு அமைப்பை உடைப்பதும் கடினம் என்றான். 

செந்தி ஒரு இடம் விடாமல் தேடி ஓய்ந்தான். அறுவை இயந்திரத்தைத் தருவித்து பிளந்து விடலாம் என முடிவுக்கு வந்தான். அக்கதவில் அழகிய லக்ஷ்மி செதுக்கப்பட்டிருந்தாள். ஜே.சி பொறுமை காக்கச் சொன்னான். இதன் கலை மதிப்பு உனக்குத் தெரியாது. நாம் இதற்கு எந்த சேதமும் விளைவிக்கக் கூடாது. அவசரப்பட வேண்டாம். ஏதாவது வழியிருக்கும் என்றான். 

ஏதோ நினைவு வந்தவனாக பரபரத்தான். வளவு சுவற்றில் மாட்டியிருக்கும் படங்கள் சட்டத்திலிருந்து நீண்டிருக்கும். அதன் பின்புறங்களில் தேடினான். சட்டையணியாத பருத்த உடலுடன் திண்ணையில் அமர்ந்திருக்கும் தாத்தாவின் புகைப்படத்திற்கு பின் அந்த சாவி இருந்தது. அதை எடுத்துக்கொண்டு ஓடினான். அறையைத் திறக்க முயன்றான். சாவி திரும்பவில்லை. இறுகியிருந்தது. ஜே.சி, பிஜூ, மீனா, கார்த்திகா என அனைவரும் அவன் ஓடுவதைக் கண்டு பின்தொடர்ந்தார்கள். குந்தியமர்ந்து சாவித்துளையை நோக்கினான். தூர்த்திருந்தது. கார்த்திகா விளக்கமாற்று ஈர்குச்சியை எடுத்து வந்து கொடுத்தாள். காத்திரமாக இருக்கும் அதன் பின்புறத்தை துளையில் விட்டுக் குத்தினான். ஈர்க்குச்சி மேல் ஏறி ஒரு வெள்ளை மூக்கு கரையான் ஊர்ந்து வெளியே வந்தது. விளக்கைப் போடச் சொன்னான். கணநேரம் பொன்னிறத்தில் மின்னி அணைந்த குண்டு பல்பு வெளிச்சத்தில் அறையை நிரப்பிய பிரம்மாண்டமான புற்று சாவித்துளையில் தென்பட்டு மறைந்தது. 

  


Sunday, September 16, 2018

யுகசந்தியின் கலைஞன்: கூந்தப்பனையை முன்வைத்து

கடந்த மாதம் வல்லினம் இதழில் வெளியான கட்டுரை.

கூந்தப்பனைதேர்ந்த எழுத்தாளன் உலகை உன்னிப்பாக கவனிக்கிறான். நாம் அன்றாடம் புழங்கும் வெளியில் நாம் கவனிக்கத் தவறிய ஏதோ ஒன்றை புலனுக்கு உணர்த்தும்போது நம்முள் ஒரு சன்னமான வியப்பு மேலிடுகிறது.“இந்த உலகம் எனக்கும் நன்கு பரிச்சயமானதுதான்.இதை ஏன் நான் கவனிக்கவில்லை?” அறிந்த உலகில் அறியாத ஒன்றைக் காட்டுகிறான். இந்த நம்பகத்தன்மையும் அணுக்கமுமே வாசகன் எழுத்தாளனின் உலகில் நுழைவதற்கான மந்திரவாசல். ஒரு கசகசப்பான பேருந்து பயணத்தின் ஊடாக மொத்த வாழ்வையும் சித்தரித்துவிட சு. வேனுகோபாலால் முடிகிறது.

பதாகை இணைய இதழில் சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சு. வேணுகோபால் சிறப்பிதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்று கட்டுரைகளை தொகுத்திருக்கிறேன். ‘ஆட்டம்’ ‘நிலம் எனும் நல்லாள்’ ஆகிய நாவல்களைக் கொண்டு ஒரு கட்டுரையை அப்போது எழுதி இருந்தேன். கூந்தப்பனை குறுநாவல் தொகுப்பை முன்வைத்து சு. வேணுகோபாலின் மொத்த படைப்புலகைப் பற்றிய சில அவதானிப்புக்களை இக்கட்டுரையில் எழுத முயல்கிறேன்.

2001ஆம் ஆண்டு வெளியான ‘கூந்தப்பனை’ தொகுப்பு(தமிழினி வெளியீடு) – ‘கண்ணிகள்’, ‘வேதாளம் ஒளிந்திருக்கும்’,  ‘அபாயச் சங்கு’,  ‘கூந்தப்பனை’ ஆகிய நான்கு குறுநாவல்களை கொண்டது. இத்தனை ஆண்டுகளில் பல்வேறுவிதமான வாசிப்புகளும் விமர்சனங்களும் இக்கதைகளுக்கு கிடைத்திருக்கும். இலக்கியம் சமகாலத்தைப் பேச வேண்டும், எக்காலத்திற்கும் உரியதைப் பேச வேண்டும் என்பதாக பன்னெடுங்காலமாக விவாதங்கள் நடந்துவருகின்றன. வேணு சமகால சித்தரிப்புகளின் ஊடாக காலதீதத்தை நோக்கிப் பயணிக்க முயற்சிக்கிறார். காமமும், அகங்காரமும், கருணையும் வழியும் கதைமாந்தர்களை உலவவிடுகிறார்.

‘கண்ணிகள்’ ஒரு புதிர் விளையாட்டைப் போல்ஒரு வாயிலை திறந்து பல பாதைகளில் ஒன்றை தேர்ந்து, இறுதியாக அனைத்து பாதைகளுமே பாதாளத்தில் முட்டி நிற்குமாறு அமைக்கப்பட்ட புதிர்ப்பாதை (maze). எல்லா பாதைகளிலும் ஆளுண்ணும் பூதங்கள் வாய்பிளந்து காத்திருக்கின்றன. மனிதன் எங்குதான் செல்ல முடியும்? ஜின்னிங் தொழில் துவங்கி விவசாயக் கூலியாள் கிடைக்காமல் வேளாண்மை நட்டமாகி பயிரிடுவதை நிறுத்திவிட்டு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றுகிறார் ரங்கராஜன். ஆனால் காய்கள் சூம்பி விடுகின்றன. பிள்ளையின் படிப்புச் செலவுக்கு கந்து வட்டி வாங்கி திருப்ப முடியாமல் நிலத்தை எழுதிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களிடமிருந்து நிலத்தை மீட்க அவர் எடுக்கும் மற்றொரு முயற்சியின் இறுதியில் மதம் மாற வலியுறுத்தப்படுவதோடு கதை முடிகிறது. இந்தக் கதையின் பொருட்டு குறிப்பாக அதன் முடிவின் பொருட்டு வேணு கடுமையாக விமர்சிக்கப்பட்டிருப்பார். வாழ்வாதாரத்திற்காக தன் அடையாளத்தை தொலைத்தல் என்பதே இக்கதையின் மையம். உடைமைகள், உறவுகள் என ஒவ்வொன்றாக அவரிடமிருந்து வாழ்க்கையின் புதிராட்டம் பிடுங்கிக் கொள்கிறது. எளிய மதச் சிக்கலாக கதையை குறைத்து புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் இதே தொகுப்பில் உள்ள மற்றொரு கதையான கூந்தப்பனையில் ஒரு தேவாலயத்தின் அருகே அமர்ந்து கதை நாயகன் புலம்புவான்,“எத்தனைமுறை கேட்டிருப்பேன்? தரவில்லையே இறைவா! நீ ஒரு இந்துவுக்கு தரமாட்டாயா? இந்த சன்னிதானத்தில் சொல்கிறேன். எனக்கு அதை ஒரே ஒருமுறை போதும் – தந்து எடுத்துக்கொள். மதம் மாறி உன் பாதங்களில் கிடக்கிறேன்”. “கண்ணிகள்” வலிமிகுந்த வீழ்ச்சியின் சித்திரத்தைச் சொல்கிறது.

“வேதாளம் ஒளிந்திருக்கும்” தொகுப்பில் சற்றே இலகுவான கதை. நுண்சித்தரிப்புகள் வழியே கதை நகர்கிறது. அடிக்கடி சண்டையிட்டு அற்ப காரணங்களுக்காக பிரிந்து செல்லும் தம்பதிகளை சேர்த்து வைக்கும் சங்கடமான பணியை கதைநாயகன் எப்படியோ ஏற்றுக் கொண்டு விடுகிறான். எனக்கு இத்தொகுதியின் சிறந்த கதையாக இக்கதையே தோன்றியது. பேருந்துப் பயணத்தின் ஊடாக விசுவநாதனின் பார்வையும் பின்னர் அவனுடைய மனைவி ஈசுவரியின் பார்வையும் ஒன்றையொன்று நிரப்பும் வண்ணம் எளிய உரையாடலின் வழியே கடத்தப்படுகின்றன. விசுவநாதனுக்குள் உள்ள வேதாளத்தை ஒளித்துக்கொண்டுதான் ஈசுவரியை அழைக்க செல்கிறார்கள். கதைசொல்லிக்கு சர்வ நிச்சயமாக விசுவநாதனின் வேதாளம் வெளிப்படும் என்பது தெரிந்திருக்கிறது. கதையின் மற்றொரு நுட்பமான தளம் என்பது ஈசுவரியின் கூற்றுக்கள் வழியாக கதைசொல்லி தனக்கும் தன் மனைவிக்குமான உறவை பரிசீலனை செய்வது. இறுதியில் தனக்குள்ளும் ஒரு வேதாளம் இருப்பதை கதைசொல்லி கண்டுகொள்கிறான். சற்றே தேவைக்கு அதிகமாக விவரிக்கப்பட்டதாக தோன்றும் பேருந்துப் பயணம் என்பது அவன் தனக்குள் நிகழ்த்திக் கொள்ளும் பயணமும்கூட.  இக்கதையில் மெல்லிய அங்கத தருணங்கள் இழையோடி வாசிப்பின்பத்தை அளிக்கின்றன. மனைவியை சமாதானம் செய்து அழைத்துவர பெரும் குடிகாரனான விஸ்வநாதன் கதைசொல்லியைச் சந்திக்கும் தருணத்தில் “விஸ்வநாதர்களுக்கு இந்த மாதிரி சமயங்களில் பவ்யம் பிச்சு உதறுகிறது” என்று எழுதுகிறார். கதைசொல்லி வீட்டை அடைந்து உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியை வழமைப்போல் எழுப்பாமல் தானே உண்டு தட்டைக் கழுவி வைத்ததும் தூக்கம் முழிக்கும் மனைவி அவனுடைய வினோத நடத்தையை கண்டு குடித்திருக்கிறானோ என்று சந்தேகிப்பது சிறந்த இருள் நகைச்சுவை. “ஒன்ன வெட்டாட்டியும் ஒம் பிய்ய வெட்டுவேங்குற கததான்” எனும் சொலவடையை வெவ்வேறு சூழல்களுக்கு எண்ணி எண்ணி பொருத்திக்கொண்டேன்.

“அபாயச் சங்கு” சுருளி குடும்பத்துடன் இடம் பெயர்ந்து விவசாயத்தை விடாப்பிடியாக செய்து வருகிறார். சுரேந்திரன் எதிர்வீட்டு பெண் மீது காதல் கொள்கிறான். அவள் அவனைக் கைவிடும்போது காமத்தில் தன்னை அமிழ்த்திக் கொள்கிறான். ஒட்டுமொத்தமாகவே உக்கிரமான வீழ்ச்சியின் சித்திரத்தைச் சொல்கிறது கதை. இந்தக் கதையில் சுரேந்திரன் – கோகிலா, சுரேந்திரன் – ரத்னமணி உறவு சார்ந்து பிரதானமாக கதை நகர்ந்தாலும் சொல்லப்படாத ஊக இடைவேளியில் சுரேந்திரன் – கனகா சார்ந்த திரியும் ஓடுகிறது. ஒருவகையில் அவனால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு தொந்தரவு செய்கிறது.கோமதி பெரியம்மாவின் குடும்பக் கதை கதைக்கொரு கூடுதல் அடர்த்தியை அளிக்கிறது. நில உடமையாளனும் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவனும் ஏறத்தாழ ஒரே விதியை சென்றடைகிறார்கள். சுரேந்திரன் வாழ்விலிருந்து தப்பிச்செல்லும் முடிவை எடுக்கும் முன்னரே முதலாளி வீட்டு பாஸ்கரன் கடிதம் எழுதிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி செல்கிறான். “அபாயச் சங்கு” யாருக்காக?எதற்காக? என்றொரு கேள்வியை இந்தச் சூழலைப் பொறுத்தே எழுப்ப முடியும். வேளாண்மையும் கிராமங்களும் இங்கே செத்து அழிகிறது என்பதற்கான அபாயச் சங்கு இது.எளிய உரையாடல் வழியாக சமூக மாற்றங்களை அவதானித்து தன் கதைகளில் இயல்பாக கொணர்வதில் வேணு தேர்ந்தவர். வேளாண்மையின் நசிவு மற்றும் நிரந்தர அரசு வேலையின் மீதான ஈடுபாடு, அதன் பொருட்டு சாதிகூட இரண்டாமிடத்திற்கு சென்றுவிடுகிறது. சுருளியப்பனின் பாத்திரமும் அம்மாவின் பாத்திரமும்கூட முக்கியத்துவம் பெறுகின்றன. மொழியாலும் கூர்மையான உணர்வு வெளிப்பாடுகளாலும்  இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.

தொகுப்பின் இறுதி கதையான “கூந்தப்பனை” தமிழில் எழுதப்பட்ட முக்கியமான கதைகளில் ஒன்றாக விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. கதை ஒரு அசாதாரண சூழலை கற்பனை செய்து பார்க்கிறது. அந்தச் சூழலில் மனித மனம் எப்படி செயல்படும் என்று சிந்தித்துப் பார்க்கிறது. பிள்ளைப் பேறு அற்றவர்களின் கதைகள் நாமறிந்தவைத்தான், ஆனால் ஆண்மையற்றவனின் கதை அவனுடைய கோணத்தில் விரிவது தமிழுக்கு இக்கதை வந்தபோது புதிய களமாக இருந்திருக்கும். சதீஷின் தத்தளிப்புகளும் சீற்றங்களும் வாசகனை வெகுவாக அலைக்கழிப்பவை. திடகாத்திரமான கதைநாயகன் சதீஷ் அவனுடைய உடற்கட்டின் காரணமாக எந்தப் பெண்ணையும் தன்னை நோக்கி திரும்ப செய்பவன்.


வேணுவின் பல பாத்திரங்கள் பெரும்பாலும் திடகாத்திரமான உடலுடையவர்களாகவும் இருக்கிறார்கள். பாலியல் சித்தரிப்பில் விரசத்திற்கும் கலைக்குமான சன்னமான கோடு உள்ளது. தண்டவாளத்தில் சைக்கிள் ஓட்டுவதைப் போன்று அந்த கோட்டில் பயணிக்கிறார். சில இடங்களில் தவறினாலும் பெரும்பாலும் கச்சிதமாக இருக்கிறது அவருடைய அகமொழி. இந்தக் கதையின் புறச் சித்தரிப்பைப் பற்றியும் சொல்ல வேண்டும். நீர் ஒரு பெரும் படிமமாக கதையில் விரிகிறது. நீர் மரபில் இனப்பெருக்க வளத்தின் குறியீடு. சோமனாக சுக்கிலமாக நீரே கொண்டாடப்படுகிறது. கதை முடிவில் சதீஷ் அடையும் தரிசனம் நீரைக் கொண்டு அபாரமாக வெளிப்பட்டுள்ளது. வேணு தன் கதைகளில் மரபான படிமங்களை அதே பொருளில் பயன்படுத்துவதற்கு தயங்கியதில்லை. நிலம் எனும் நல்லாளில் நிலம் பெண்ணாக உருவகப் படுத்தப்படுகிறாள். கூந்தப்பனையில் இறுதிக் காட்சியில் நீரை கண்டடையும் வரை அனைத்துமே வறட்சியாக காய்ந்து கிடக்கின்றன.

கூந்தப்பனை காட்டும் சூழல் முதலில் நம்பகத்தன்மை சார்ந்த கேள்வியை எழுப்பியது. இப்படியொரு வாழ்க்கை சாத்தியமா? நண்பன் மற்றும் மனைவியின் மனமாற்றம் போதிய வலுவுடன் சித்தரிக்கப்படவில்லையோ எனத் தோன்றியது. ஆனால் வாசிக்க வாசிக்க இது எங்கோ நடந்து கொண்டிருக்கும், நடக்கச் சாத்தியமுள்ள நிகழ்வும்கூட என்ற எண்ணம் வலுவடைந்தது. மேலும் புனைவெழுத்தாளன் ஒரு சன்னமான சாத்தியத்தை ஊதிப் பெருக்குபவன், ஆகவே நடைமுறைச் சாத்தியத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பொருளில்லை.

சதீஷ் காமத்தால் அல்லல்படுபவன். “அவனுக்குள் இன்னொருவன் இருந்து கொண்டு கேலி பண்ணுவதை என்ன செய்வது?அந்த இன்னொருவனை உசுப்பிவிட்டது ஜனங்களாகத்தான் இருக்க வேண்டும். தன்னைவிட பலம் பொருந்திய இன்னொருவனை உதறவே முடியவில்லை. அந்த ஆகிருதி விருட்சமாக உள்ளே விரிய விரிய இவன் கூனிக்குறுகிப் போனான்.” மற்றொரு இடத்தில் சதீஷுக்குள் இருக்கும் காமத்தைப் பற்றி இப்படி எழுதுகிறார்-“வெடிக்கவே வெடிக்காத பலூன்போல சிந்தனையில் காமம் ஊதிப் பெருகிகொண்டிருந்தது.”

ஒருவகையில் கூந்தப்பனை சதீஷ் வெண்முரசின் விசித்திர வீரியன் பாத்திரத்தின் அகச் சித்தரிப்புடன் நெருக்கமானவனாக இருக்கிறான்.  உடலில் காமம் அணைந்து மனதில் காமம் கனன்று கொண்டிருப்பவர்களின் தத்தளிப்பை வேணு கதையாக்கியிருக்கிறார். உடல் காமம் மனக் காமமாக தகிக்கிறது. அறைச் சிப்பந்திக் கிழவரின் உரையாடல் வழியாக மீட்சியின் வாசலை முதன்முதலாக கண்டுகொள்கிறான்.“உப்புதான் சாப்பாடுன்னு நினைக்கப் படாதில்லையா?உங்க மனசு முழுக்க அது இருக்கு. வாழ்க்கையில் அது முக்கியந்தான். ஒத்துக்கிடுதேன்  ஆனா அதுவே முக்கியமில்லை .” அடுத்த நிலையில் இரு ஆட்டுக்குட்டிகள் அன்னை ஆட்டின் மடியில் முட்டி பால் குடிக்கும்போது அவை சிணுங்குவது பாலுவின் குரலைப் போலவும் தன் குரலைப்போலவும் கேட்கிறது என்று எழுதும் இடம் நுட்பமானது. அங்கே ஹேமலதா இருவருக்கும் அன்னையாகிறாள். காமம் உன்னத நிலையை நோக்கி நகர்கிறது. இந்த அகமாற்றம் புறத்திலும் பிரதிபலிக்கிறது. ஆணி மாத உச்சி வெயிலில், உலகமே காய்ந்திருக்கையில் மந்தாரை மலர் மட்டும் பூத்து குலுங்குகிறது. இதற்கடுத்த புள்ளியில் எது அழகு என்றொரு விவாதத்தை கதை மேற்கொள்வதன் வழியாக சதீஷின் காமம் அழகாக உன்னதமடைகிறது. அதன் ஊடாக அழகு புனிதம் கொள்வதுதான் ஆண்மையாஎன்றொரு கேள்வியை எழுப்பிகொள்கிறான். துயரத்துக்குள் துடிக்கும் ஜீவனை உணராதவன் அழகினைக் கண்டுவிட முடியுமாஎன்றொரு கேள்வியை எழுப்பிகொள்கிறான். தனக்குள் சுரக்கும் கருணையை, நீர்மையை கண்டுகொள்கிறான். அவனுடைய காமம் பெரும் கருணையாக, பேரன்பாக உன்னதமடைகிறது. அதை அள்ளி உலகுக்கெல்லாம் அளிக்கிறான். பாறைக்கடியில் உள்ள  ஊற்றுக்கண் திறந்து கொண்டது.

வேணுவின் மொழி கட்டற்ற பாய்ச்சலை நிகழ்த்தும் இடங்கள் என கதைகளில் நிகழும் கனவுகளை சொல்லலாம். ராட்டினம் சுற்றும் முகமூடி கிழவன் வரும் ‘அபாயச் சங்கு’ மற்றும் ‘கூந்தப்பனை’ கதைகளில் வரும் கனவுப் பகுதிகள் கதையை யதார்த்த தளத்திலிருந்து நகர்த்துகிறது. மொழியில் நுண்ணிய அக அசைவுகளை கைப்பற்ற முனைகிறார்.

வேணுவின் பாத்திரங்கள் இயற்கையுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். “தோப்புகள் அழியத் தொடங்கும் பரிதவிப்பு அங்கு மிதந்து கொண்டிருந்தது. மலட்டு வெள்ளாமையை வைத்து என்ன செய்வது? மரத்தை அழிப்பது சிசுக்கொலை போலத்தான்.” (கண்ணிகள்).“தோப்பு போடுவதில் மனைவிக்கு இஷ்டமில்லை. பருத்தி, கேழ்வரகு, கம்பு பயிரிட்டு வந்த பழக்கம். அவற்றைப் பயிரிட்டுப் பார்க்காமல் போவோமே என்ற வேதனை தொத்திக் கொண்டது. காலங்காலமாக உறவாடி வந்த பயிர்கள் இனி இல்லை என்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.”  “ பிஞ்சுகளை இப்படியெல்லாம் வெட்டி ஒதுக்கி குறிப்பிட்ட கொத்துக்களை உருவாக்கின பழக்கம் இல்லை. வெட்டி ஒதுக்குவது பாவச் செயல்போலத் தாக்கியது. “சாகும் தறுவாயை உதறிய சில மரங்களின் குருத்து ஓலைகள் இளம் பச்சையை நீட்டிக் கிடந்தாலும் ஓரக்கீற்று நுனிகள் ஏற்கனவே காய்ந்து கிடந்தன.” அவருடைய புதிய நாவலான ‘வலசை’ கூட சூழலியல் பிரக்ஞையை அடிநாதமாகக் கொண்டதே. தாவரங்களின் மரணம் வெகுவாக அவர்களை அலைக்கழிக்கிறது.

சு.வேணுகோபாலின் இக்கதைகள் எண்பதுகளின் இறுதி மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் நிகழ்பவை. துல்லியமாகச் சொல்வதென்றால் உலகமயமாக்கலுக்குப் பின் வேணு எழுத வருகிறார். ஆனால் அவருடைய வாழ்வும் விழுமியங்களும் இளமையும் உலகமயமாக்கலுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. விழுமியங்களும், இளமையும், கிராமங்களும், வாழ்க்கையும், முந்தைய தொழில்களும் குறுகிய காலத்தில் பழையதாக ஆகி காலாவதியாகும் யுகத்தில் முந்தைய காலத்திணனின் திகைப்பை எழுதுகிறார். தூர்தர்ஷனில் இருந்து ஸ்டார் டிவி அறிமுகம் ஆகும் காலகட்டம்.

பெரும்பாலான வேணுவின் கதைகளைப் போல் இக்கதைகளும் சிறு நகரங்களில் நிகழ்பவை. “ஊரில் இன்னார் இனியார் தெரிந்திருப்பது சாதாரணமாகவே இருக்கிறது. அதனால் இது கிராமம். சுடிதார் , பேக்கிஸ் போட்டுக்கொண்டு அடுத்த தெருவில் உள்ள நண்பர்கள் வீட்டில் அரட்டை அடித்துவிட்டு வருவது வளர்ந்து வருவதால் கிராமத்தின் சாயலை நழுவவிட்டு நகரத்தின் மோஸ்தரை  உடுத்திக்கொண்டது மஞ்சனத்தாம்பட்டி. அர்த்தநாரீஸ்வரர் வடிவம்.” மொத்தமாகவே வேணுகோபாலின் படைப்புக்களில் நகரமயமாகி வரும் தமிழகத்தைப் பற்றிய சித்திரம் தொடர்ந்து ஊடாடிவருவதை காண முடிகிறது. கிராமங்களின் வீழ்ச்சியும் தொடர் சித்திரமாக, அவை நகரங்களின் நீட்சியாக தனித்தன்மை இழப்பதை காட்டுவதாகவும் இருக்கிறது. ஆகவே அவருடைய கதை மாந்தர்கள் இருவேறு நாகரீக உலகிற்கு இடையே தத்தளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஒருவகையில் கிராமத்திலிருந்து வேளாண்மை நசிந்து சிறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தவர்களின் முதல்தலைமுறை கதைசொல்லியாக வேணுவை புரிந்துகொள்ளலாம்.

வேளாண்மையை,பூர்வ நிலத்தைக் கைவிட்ட வேதனை வேணுவின் கதை மாந்தர்களில் பிரதிபலிக்கிறது. தனக்குள் இருக்கும் கிராமத்தானை கொல்ல முடியாமல் தவிக்கும் சிறுநகர பாத்திரங்கள் என ‘ஆட்டம்’, ‘கூந்தப்பனை’, ‘அபாயச் சங்கு’, ‘நிலம் எனும் நல்லாள்’ ஆகிய கதைகளைக் கொண்டு ஒரு பார்வைக் கோணத்தை முன்வைக்க இயலும்.  நசிவிலிருந்து முழுச்சீரழிவுக்கும் (‘அபாயச் சங்கு’, ‘கண்ணிகள்’) மீட்சிக்கும் (‘கூந்தப்பனை’, ‘வேதாளம் ஒளிந்திருக்கும்’) இடையிலான ஊசல் என வேணுவின் படைப்புகளை வகைப்படுத்தலாம்.

இன்னும் சற்று நுணுக்கமாக வேணுவின் கதைமாந்தர்களை நோக்கினால் அவர்கள் தங்கள் கனவுகளை தொலைத்தவர்கள். நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையே ஊசலாடும் மனிதர்களைப் போல் வாலிபத்திற்கும் மத்திய வயதிற்கும் இடையே ஊசலாடுபவர்கள். தங்கள் இளமையின் ஆற்றலும், லட்சியமும், வேகமும், துடிப்பும் கண் முன் துடித்து அடங்குவதை கண்டு பதட்டம் கொள்பவர்கள். பற்றுகோல் கிடைப்பவன் எப்படியோ மேலேறி விடுகிறான். வாழ்வதற்கான நம்பிக்கையை அடைந்துவிடுகிறான். அப்படி கிட்டாதவன் அழிந்து போகிறான். கதைகளின் ஊடாக இந்த இருமை துலங்கி வருவதை காண முடிகிறது. அபாயச் சங்கு கதையில் வரும் சுரேந்திரனைப் பற்றிய இவ்வரிகள் ஒட்டுமொத்தமாக வேணுவின் கதைமாந்தர்களைப் பற்றியதும்கூட எனத் தோன்றியது-“நிகழமுடியாத விசயங்கள் மனதைப் புரட்டி அலைக்கழித்து தனக்குள்ளே வெறிகொண்டு நீள, முடிவில் சிதறிப் போய் விடுகின்றன.சிதறியதில் மிச்சம் மீதியை நினைவின் துருத்தி ஊதி ஊதி அவஸ்தையை நீண்ட நாள் உயிரோடு வைத்திருக்கிறது. அப்படியும் நிகழ்ந்து விடுகிறபோது,ஓர் அமைதி மட்டும். சொல்லமுடியாத அமைதி.”

இக்கதைகளில் சில சிக்கல்கள் இல்லாமல் இல்லை. அபாயச் சங்கு கதையில் ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் வரும் கவித்துவமான வரி ஏனோ துருத்தலாக, தொந்திரவாக தென்பட்டது. வேணுவின் கதைகளில் உள்ள மிக முக்கியமான சிக்கல், வீழ்ச்சியின் கதைகள் இயல்பாக, வீரியத்துடன் வெளிப்படுவது போல் வலுவாக மீட்சியின் கதைகள் வெளிப்படவில்லை என்பதே என் எண்ணமாக இருந்தது. கதைப்போக்கில் ஒட்டாமல் ஞானம் போதிக்கும் கதாபாத்திரங்கள் வேணுவின் கதைகளில் தோன்றிவிடுகிறார்கள். இதையே நான் ‘நிலம் எனும் நல்லாள்’, ‘ஆட்டம்’ ஆகிய கதைகளைப் பற்றிய விமர்சனமாகவும் வைத்திருந்தேன். ‘கூந்தப்பனை’, ‘அபாயச் சங்கு’ ஆகிய கதைகளிலும் இத்தகைய தருணங்கள் உண்டு. ஆனால் இம்முறை அது எனக்கு பெரிய துருத்தலாக தெரியவில்லை. ஏனென்று யோசிக்கையில், ஒருவகையில் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறார், அத்தோடு தன்னையொத்த, கிராமங்களில் இருந்து பெயர்ந்து, ஊசலாடிக் கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களை நோக்கியும் வேணு பேசுகிறார். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். “பார் இதோ நான் புதிய நிலத்தில் காலூன்றி விட்டேன், அச்சத்தை கைவிடு, மனிதர்கள் அபாயமானவர்கள்தான் ஆனால் உலகம் ஒன்றும் அத்தனை மோசமில்லை, எப்படியும் பிழைத்துகொள்ளலாம்.”


வேணுவின் ஆதர்சங்களில் ஒருவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் வேறொரு யுக சந்தியில் நின்று பேசியவர். ஏதோ ஒருவகையில் எழுத்தாளன் அல்லது கலைஞன் எப்போதும் யுக சந்தியில் நின்று பேசுபவனாகத்தான் இருக்க முடியும். சு.வேணுகோபாலின் யுக சந்தி புறவயமானது மட்டுமல்ல அகவயமானதும் கூட. சு.வேணுகோபால் யுகசந்தியின் கலைஞன்.

Wednesday, September 12, 2018

இறுதியில் எஞ்சும் மலர்

செப்டம்பர் மாத தும்பி இதழில் ஜேம்ஸ் தர்பர் எழுதிய 'கடைசிப் பூ' வெளியாகியுள்ளது. தர்பர் அமெரிக்கர். பிரகாஷ் இக்கதைக்கு இந்திய பின்புல ஓவியங்களை பொருத்தமாக தீட்டியிருக்கிறார். இந்தக் கதை வாசித்ததில் இருந்து வெகுவாக என்னை தொந்தரவு செய்தது. ஒரு எல்லையில் இந்த கதையின் மொத்த உரைநடையையும் ஒரு பக்கத்தில் முடிந்து விடும் ஒரு கவிதை என சொல்லலாம். மறு எல்லையில் ஒரு முழு யுக சுழற்சியை, வாழ்வை விரித்து காட்டும் பெருநாவல் எனக் கொள்ளலாம். மிகக் குறைவான சொற்களில் எழுதப்பட்ட பிரம்மாண்டமான நாவல். வாசித்ததும் பெரும் மனவெழுச்சியை அடைந்தேன். 

பனிரெண்டாம் உலகப் போருக்கு பின்பான பேரழிவை கற்பனை செய்வதோடு கதை துவங்குகிறது. உலகமே அழிந்து அன்பற்று வறண்டு விடுகிறது. மக்களிடம்பெயர்ந்து ஏதிலிகளாக எங்கோ செல்கிறார்கள். வளர்ப்பு பிராணிகள் கூட அவர்களை கைவிட்டுச் செல்கின்றன. அப்போது ஒரு பூ மலர்ந்திருப்பதை இளம் பெண் பார்க்கிறாள். அது அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை, உற்சாகத்தை அளிக்கிறது. ஆனால் அவளுடைய உணர்வுகளை உள்வாங்கி உற்சாகத்தை தமதாக்கிக் கொள்ளும் மற்றொரு மனிதனை சந்திக்கவில்லை. சோர்வும், அக்கறையின்மையும் தான் அவளை அடைகின்றன. அப்போது மற்றுமொரு இளைஞனை அந்த மலர் உற்சாகம் கொள்ள செய்கிறது. அதை அவர்கள் இருவரும் நீரூற்றி பேணுகிறார்கள். தேனீயும், பட்டாம்பூச்சியும் நாடி வருகின்றன. மெல்ல அங்கு பலமலர் செடிகள் முளைக்கின்றன. உலகம் உலராமல் அன்பின் ஈரத்தில் பெருகுகிறது. மனிதர்கள் அன்பை நாடுகிறார்கள்.  பின்னர் ஒரு வனம் உருவாகிறது, வேட்டையும், வேளாண்மையும், நாடும் நகரமும், தலைவரும், ராணுவமும் உருவாகின்றன. மீண்டும் ஒரு போர் மூண்டு உலகம் எச்சமின்றி அழிகிறது. அப்போதும் ஒரு மலர், ஒரு பெண், ஒரு ஆண் எஞ்சியிருக்கிறார்கள் என்பதோடு கதை முடிகிறது. 

மலர் சவுந்தர்யத்தின் உச்சம். யோகத்தில் ஆயிரமிதழ் கொண்ட தாமரையை முழுமையின் சின்னமாக கருதுகிறோம். அழகியலின் உச்சமும் ஞானத்தின் உச்சமும் குடிகொள்ளும் இடம் மலர். இந்த கதை சிறுவர் கதை என்பதை காட்டிலும் பெரும் ஆன்மீக பொருள் அளிப்பவையாக இருக்கிறது. எண்ணும் தோறும் கதை விரிவுகொள்கிறது. 

நாம் நம்மை அழித்துக்கொள்ள உருவாக்கும் அத்தனை பேரழிவிலிருந்து நம்மை மீட்டுக்கொள்ள நமக்கு ஒரேயொரு மலர் போதும். 

தும்பி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் 


Sunday, September 9, 2018

கனவுகள் என்னை இயக்குகின்றன


விகடன் தடம் இதழில் 'அடுத்து என்ன' என்றொரு பகுதிக்காக எழுதிய கட்டுரை இந்த மாத இதழில் (செப்டம்பர்) வெளிவந்துள்ளது. வழக்கம் போல் கட்டுரை அரைநாளில் எழுதி முடித்துவிட்டேன். புகைப்படம் சரியில்லை என்பதால் விகடன் புகைப்பட நிபுணர் சாய் தர்மராஜ் நகராட்சி பூங்காவிற்கு ஆளரவமற்ற காலைப்பொழுதில் அழைத்துச்சென்று விதவிதமாக படமெடுத்தார். அதே காலையில் ஒரு திருமண தம்பதியினரின் புகைப்பட வைபவமும் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒற்றை ஆளாக வந்து நின்றிருக்கும் என்னைப் பார்க்க அவர்களுக்கு விநோதமாக இருந்திருக்கலாம். எனக்கே பெரும் வேடிக்கையாக இருந்தது. எங்கே ஏதோ ஒரு புள்ளியில் என்னையும் மீறி முஷ்டி மடக்கி வீர வசனம் பேசிவிடுவேனோ என்று அஞ்சினேன். வெய்யில், தமிழ்செல்வன் மற்றும் சாய் தரம்ராஜ் ஆகியோருக்கு நன்றி. ஒரு முழு பக்கத்திற்கு புகைப்படம் அதுவும் ஒளிவட்டத்துடன் வந்துள்ளது. 
https://www.vikatan.com/thadam/2018-sep-01/column/143814-dreams-drives-me-sunil-krishnan.html
புகைப்படம்- நட்ன்ரி விகடன்- சாய் தர்மராஜ் 


---

கனவுகளில் என்ன கஞ்சத்தனம்? ஆகவே அடுத்து என்ன என்றொரு கேள்விக்கு ஒரேயொரு பதிலைச் சொல்வதைக் காட்டிலும் என்னவெல்லாம் இந்த ஆண்டிலும் வரும் ஆண்டிலும் நிகழ்த்த விழைகிறேன் என்பதை பகிர்ந்துகொள்வது மேல். ஒருவகையில் பொதுவெளியில் பதிவாகும் சொல் ஒரு எச்சரிக்கை மணியைப் போல், ரப்பர் காலணியில் புதைந்த முள்ளைப் போல் எப்போதும் பிரக்ஞையை தீண்டியபடியே இருக்கும். ஆக்க சக்தியாக என்னை அது எழுத வைக்கலாம் அல்லது ஊக்கத்தை உரித்து வாட்டவும் செய்யலாம். 

சிறுகதை தொகுதிக்கு முன்பே நாவலாசிரியனாகத்தான் நான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். நான்கைந்து சிறுகதைகள் எழுதி முடித்த சூழலிலேயே ஒரு நாவலைத் துவங்கினேன். நாவலின் மையக் கேள்வி என்னை பற்றி ஏறிக்கொண்டவுடன், அதன் முதல் வரியை எழுதும் முன் நாவலின் தலைப்பு துலங்கிவிட்டது. ‘நீலகண்டம்’. ஒரு மந்திரச்சொல் போல் எனை ஆக்கிரமித்தது. விழுங்கவும் முடியாத, உமிழவும் முடியாத ஆலகாலத்தை கழுத்தில் என்றென்றைக்குமாக நிறுத்தப் போராடும் நீலகண்டர்கள். விடம் உண்ட கண்டர்கள் என்பதைக் காட்டிலும் விடம் சுரக்கும் கண்டர்கள். 

நாவல் நினைவிலும் கனவிலும் பெருகி சட்டென நூறு பக்கங்கள் வரை வளர்ந்தது. நவீன வாழ்வில் பிள்ளைப்பேறு சார்ந்த வினாக்களை அலசும் களம். ஒரு குடும்பத்தை அலகாகக் கொண்டு, அதிலும் ஆட்டிச நிலையில் உள்ள ஒரு பெண் குழந்தையை மையமாகக் கொண்டு விரியும் நாவல். ஆட்டிச குழந்தை அச்சுவின் அகத்திலிருந்தும் புறத்திலிருந்தும் நாவல் சுருள் அவிழ்கிறது. ஒரு கட்டத்தில் கர்ப்பம் கலையும் பகுதியை எப்படியோ சென்று சேர்ந்தது. அப்போது என் மனைவியின் கர்ப்பமும் உறுதியாகியிருந்தது. நாவலின் சிசு அழிவும் நிகழுலகின் தந்தைமைக்கான ஆவலும் சமரிடத் துவங்கின. கனவும் நிகழ்வும் ஒன்றையொன்று குழப்பி நிரப்பின. அலைக்கழிப்புகளின் ஊடாக கழிந்த இரவுகளில் இருந்து தப்பிக்க நாவலை நிறுத்துவதைத் தவிர வேறுவழி புலப்படவில்லை. இப்போது மகனுக்கு இரண்டரை வயது ஆகிவிட்டது. அந்நாவலை மீண்டும் எழுதத் திட்டமிட்டு இருக்கிறேன். ‘டெம்பிள் கிராண்டின்’ ‘நவோகி ஹிகஷிடா’ துவங்கி பாலபாரதியின் ‘துலக்கம்’ வரை தொடர்ந்து வாசித்திருந்த காலகட்டம் ஒன்றுண்டு. அவை எனக்கு புதிய உலகை காட்டின. எல்லாவற்றையும் அளக்க நமக்கோர் அளவையுண்டு. ஒருபோதும் அதை நாம் கீழே வைப்பதில்லை. அன்பையும், வாழ்வையும், உறவையும் கூட பயன்மதிப்பைக் கொண்டுதான் அளக்க வேண்டியதாய் இருக்கிறது. இந்த அபத்தத்திலிருந்து வேர்பிடித்து எழுகிறது நாவல். வேறு வடிவில், வேறு மொழியில் இந்நாவலை அடுத்த ஆண்டிற்குள் எழுதி முடிக்க தேவையான மனத் திண்மை இருக்கும் என்றே நம்புகிறேன். 

துறை சார்ந்து ஒரு புத்தகமாவது எழுத வேண்டும் என்பது என் நெடுங்கால கனவு. ஒரு ஆயுர்வேத மருத்துவராக சுய உதவி மருத்துவம் அல்லது மருத்துவப் பயன்பாட்டு குறிப்புகள் எழுதுவது சுலபம். ஆனால் அது என் நோக்கமில்லை. அத்தகைய நூல்கள் சந்தையில் ஏராளமாக புழங்குகின்றன. அடிப்படைகளைப் பற்றி எழுதலாம் என்றால் தெள்ளிய மொழியில் எனது ஆசிரியர்களில் ஒருவரான தெரிசனம்கோப்பு டாக்டர். மகாதேவன் அத்தகைய பல நூல்களை எழுதிவிட்டார். ஏழெட்டு அத்தியாயங்களாக மனதில் உருக்கொண்டிருக்கும் இந்நூல் இந்திய மருத்துவத்தின் வேறு பரிணாமங்களைப் பற்றி பேசுவதாக இருக்கும். வரலாற்று ரீதியாக அது எத்தகைய மாற்றங்களை உள்வாங்கி செழித்தது? அதன் வெவ்வேறு மரபுகள் எவை? நவீன காலகட்டத்தில் அதன் சவால்கள் எத்தகையவை? காலனீய காலத்தில் அதில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன? இப்படியான கேள்விகளை இந்நூல் எதிர்கொள்ள வேண்டும். இந்நூலுக்கான ஆரம்பகட்ட தரவு சேகரிப்பு முடிந்துவிட்டது. ‘இந்திய மருத்துவத்தின் அடுக்குகள்’ ‘வேதமும் ஆயுர்வேதமும்’ ஆகிய இரண்டு அத்தியாயங்களை நிறைவு செய்துவிட்டேன். இந்த வகையான நூல் எழுதுவதில் உள்ள ஆகப்பெரிய சவால் யாதெனில், முடிவற்று தரவுகளை சேகரித்து வாசித்துக்கொண்டே இருக்கும்போது ஏதோ ஒரு புள்ளியில் போதும் என்று நிறுத்தி புத்தகத்தை எழுதத் துவங்க வேண்டும். அந்தப் புள்ளி நழுவிச் செல்லும்போது இருள் சூழ்ந்து விடுகிறது. பொது வாசகர், இந்திய மருத்துவ முறைகளைப் பற்றி பரிச்சயம் உடையவர்கள் என இரு தரப்புமே வாசிக்கும் வண்ணம் இந்நூல் உருப்பெற வேண்டும் என உழைக்கிறேன். அடுத்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்குள் இந்நூல் முழுவதும் தயாராகிவிடும் என்றே நம்புகிறேன். 

‘காந்தி- இன்று’ தளத்தில் பல மொழியாக்கங்கள் செய்த அனுபவம் உண்டு. ஆனால் அபுனைவுகள் மொழியாக்கம் செய்வதில் முன்பிருந்த ஆர்வம் இப்போது வற்றிவிட்டது. இந்திய பதிப்பகப் பிரிவிற்காக காந்தியின் மரணத்தையொட்டி வானொலியில் பதிவான அஞ்சலி குறிப்புகளை தமிழாக்கம் செய்துள்ளேன். சுவாரசியமான நூல். விரைவில் வெளியாகும். அபுனைவு நூல் மொழியாக்கம் செய்ய தயங்குவதற்கு மிக முக்கியமான காரணம், இத்தனை மெனக்கெடலுக்கான பயன்மதிப்பு உள்ளதா எனும் கேள்வியே. இந்த தொய்வு புனைவுகளை மொழியாக்கம் செய்யும்போது நேர்வதில்லை. மேகாலய எழுத்தாளர் ஜானிஸ் பாரியட்டின் ‘19/87’ என்று ஒரு சிறுகதையை வரவிருக்கும் அவருடைய தமிழ் தொகுதிக்காக மொழியாக்கம் செய்தேன். ‘கல்குதிரை’ இதழுக்கு அமெரிக்க எழுத்தாளர் டான் டெலிலோவின் ஒரு சிறுகதையை மொழியாக்கம் செய்யும்போது என் மொழிநடையே அதன் தாக்கத்தில் குழைவதை உணர்ந்தேன். தமிழுக்கு வரவேண்டிய எழுத்தாளர்கள் இன்னும் எத்தனையோ பேர் உள்ளார்கள். அப்படி எனக்கு இருவரை தமிழுக்கு கொண்டுவர வேண்டும் என்பது நெடுநாள் கனவு. கிரேக்க எழுத்தாளர் நிகோஸ் கசன்ஜாகிஸ் மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக் (‘டாக்டர். ஷிவாகோ’). இருவரையும் வாசிக்கச் சொல்லி தூண்டியது ஜெயமோகன். கசன்ஜாகிசின் ‘ஜோர்பா எனும் கிரேக்கனை’ சில ஆண்டுகளுக்கு முன் இரு அத்தியாயங்கள் மட்டும் ‘பதாகை’க்காக மொழியாக்கம் செய்தேன். இப்போது மீண்டும் மொழியாக்கம் செய்யத் துவங்கி இருக்கிறேன். ஜோர்பா ஒருவகையில் என் லட்சிய பிம்பம், யாராக இருக்க விழைகிறேனோ அதுதான் அவன். நாவலில் கதைசொல்லி ஜோர்பாவாக ஏங்குவதைப் போல் நானும் ஏங்குகிறேன். நேற்றும் நாளையும் அற்ற இன்றும் இப்போதும் மட்டுமே உள்ள முழு மனிதன். கசன்ஜாகிசின் மொழி கவித்துவமானது. கிரேக்க தொன்மங்களை கையாள்வது. இருபத்தியாறு அத்தியாயங்கள் கொண்ட இந்நாவலின் ஆறு அத்தியாயங்களை மொழியாக்கம் செய்து முடித்திருக்கிறேன். இம்மொழியாக்கத்தை நிறைவுசெய்வது முதன்மை கனவுகளில் ஒன்று. 

இவை தவிர பிரியத்திற்குரிய எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுதி என் தேர்வு மற்றும் முன்னுரையுடன் காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கிறது. தமிழ் சிறுகதை உலகில் தனித்துவமான கூறுமுறையும் பேசுபொருளும் கொண்டவர் சுரேஷ்குமார இந்திரஜித். நமக்குப் பிடித்த ஒரு முன்னோடி எழுத்தாளர் அளித்தவையின் பொருட்டு வாசகனாக நாம் செலுத்தும் எளிய நன்றியே இத்தொகைநூல். ஓரிருமாதங்களில் புத்தகம் வெளிவரும். ‘புதிய குரல்கள்’ என்றொரு பகுதியில் அண்மைய ஆண்டுகளில் அறிமுகம் ஆன எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சனத்துடன் அவர்களுடனான நேர்காணலும் செய்து வருகிறேன். இதுவரை ஏழு எழுத்தாளர்கள் ‘புதிய குரல்கள்’ பகுதியில் இடம்பெற்றிருக்கிறார்கள். பலருக்கு இதுவே முதல் நேர்காணல். இன்னும் குறைந்தது இப்படி பத்து எழுத்தாளர்களைப் பற்றியாவது எழுத வேண்டும். சமகால எழுத்தாளர்களை வாசித்து அறிமுகம் செய்வது மகிழ்ச்சியான பணி. 

தற்போது பாரதிய வித்யா பவனுக்காக ‘தமிழில் காந்தி’ எனும் பேசுபொருளில் அறுநூறு பக்க தொகை நூலை உருவாக்க முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறேன். இந்நூல் அடுத்த ஆண்டு வெளியாகும். ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்படும். பாரதி துவங்கி பூ.கொ சரவணன் வரை பல்வேறு எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், ஆளுமைகள் தமிழில் காந்தியைக் குறித்து எழுதியவற்றின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிப்பதே இந்நூலின் நோக்கம். நாவல் பகுதிகள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நினைவுக் குறிப்புகள் என பல்வேறு வடிவங்களைக் கொண்ட தொகுப்பு. இதன் பொருட்டு நிறைய வாசித்துக் கொண்டிருக்கிறேன். குறுகிய காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டிய பணி என்பதால் முழு நேரத்தையும் அதற்கே செலவிடுகிறேன். காந்தியைப் பற்றி வாசிப்பது எப்போதும் எனக்கு உற்சாகமளிக்கும் அனுபவம்தான். தமிழ் நனவிலியில் காந்தி எப்படியெல்லாம் பதிந்திருக்கிறார் என்பதை அறிய சுவாரசியமாக இருக்கிறது. 

இவை தவிர்த்து எப்போதும்போல் சிறுகதைகளும், குறுங்கதைகளும் எழுத வேண்டும்.  சு. வேணுகோபால் மற்றும் சுரேஷ்குமார இந்திரஜித்திற்கு கொணர்ந்ததுபோல் நீண்ட நேர்காணலும், கட்டுரைகளும் கொண்ட எழுத்தாளர் சிறப்பிதழை எழுத்தாளர்கள் தேவிபாரதி, எம். கோபாலகிருஷ்ணன், இரா. முருகன் ஆகியோருக்கு கொண்டு வரவேண்டும் என்பதும் ஒரு கனவு.  இங்கே பட்டியலிடப்பட்ட எல்லாவற்றையும் அடுத்த வருடத்திற்குள் நிகழ்த்தி முடிப்பேனா என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் கனவு என்னை இயக்குகிறது. சிலவற்றைக் கைவிட்டு புதிய கனவுகளை கைகொள்ளலாம். ஏனெனில், வாசிக்கவும், எழுதவும், கனவு காணவும் எல்லையில்லை. 

  சுனில் கிருஷ்ணன் 

Saturday, September 8, 2018

சுயத்தின் வெளுக்கும் சாயங்கள் – ஜேவியர் செர்கொசின் ‘தி இம்போஸடரை’ முன்வைத்து

(செப்டம்பர் மாத கணையாழி இதழில் வெளியான கட்டுரை)

“உண்மை கொல்லும், புனைவு காக்கும்”- ஜேவியர் செர்காஸ்


சென்ற கட்டுரையைப் போலவே இந்த கட்டுரையும் இவ்வாண்டு புக்கர் பரிசின் நீள் பட்டியலில் இடம்பெற்ற ஒரு நாவலைப் பற்றியது. இந்த மாத கட்டுரைக்கு யாரை வாசிக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தபோது ஜேவியர் செர்காசின் மேற்கோள் ஒன்றை வாசித்தேன். “நினைவுகளால் நிறைவுறும் ஒரு யுகத்தில், நினைவுகள் வரலாறின் இடத்தை அடையும் ஆபத்து உள்ளது. ..நினைவும் வரலாறும் சார்புத்தன்மை உடையவை. நினைவுக்கு வரலாறு பொருள் அளிக்கிறது, நினைவு வரலாறின் ஒரு கருவி, இடுபொருள், அதன் ஒரு பகுதி, ஆனால் நினைவு வரலாறல்ல.” இந்த மேற்கோள் வழியாகவே செர்காஸ் எனும் எழுத்தாளனை கண்டுகொண்டேன்.