Wednesday, September 12, 2018

இறுதியில் எஞ்சும் மலர்

செப்டம்பர் மாத தும்பி இதழில் ஜேம்ஸ் தர்பர் எழுதிய 'கடைசிப் பூ' வெளியாகியுள்ளது. தர்பர் அமெரிக்கர். பிரகாஷ் இக்கதைக்கு இந்திய பின்புல ஓவியங்களை பொருத்தமாக தீட்டியிருக்கிறார். இந்தக் கதை வாசித்ததில் இருந்து வெகுவாக என்னை தொந்தரவு செய்தது. ஒரு எல்லையில் இந்த கதையின் மொத்த உரைநடையையும் ஒரு பக்கத்தில் முடிந்து விடும் ஒரு கவிதை என சொல்லலாம். மறு எல்லையில் ஒரு முழு யுக சுழற்சியை, வாழ்வை விரித்து காட்டும் பெருநாவல் எனக் கொள்ளலாம். மிகக் குறைவான சொற்களில் எழுதப்பட்ட பிரம்மாண்டமான நாவல். வாசித்ததும் பெரும் மனவெழுச்சியை அடைந்தேன். 

பனிரெண்டாம் உலகப் போருக்கு பின்பான பேரழிவை கற்பனை செய்வதோடு கதை துவங்குகிறது. உலகமே அழிந்து அன்பற்று வறண்டு விடுகிறது. மக்களிடம்பெயர்ந்து ஏதிலிகளாக எங்கோ செல்கிறார்கள். வளர்ப்பு பிராணிகள் கூட அவர்களை கைவிட்டுச் செல்கின்றன. அப்போது ஒரு பூ மலர்ந்திருப்பதை இளம் பெண் பார்க்கிறாள். அது அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை, உற்சாகத்தை அளிக்கிறது. ஆனால் அவளுடைய உணர்வுகளை உள்வாங்கி உற்சாகத்தை தமதாக்கிக் கொள்ளும் மற்றொரு மனிதனை சந்திக்கவில்லை. சோர்வும், அக்கறையின்மையும் தான் அவளை அடைகின்றன. அப்போது மற்றுமொரு இளைஞனை அந்த மலர் உற்சாகம் கொள்ள செய்கிறது. அதை அவர்கள் இருவரும் நீரூற்றி பேணுகிறார்கள். தேனீயும், பட்டாம்பூச்சியும் நாடி வருகின்றன. மெல்ல அங்கு பலமலர் செடிகள் முளைக்கின்றன. உலகம் உலராமல் அன்பின் ஈரத்தில் பெருகுகிறது. மனிதர்கள் அன்பை நாடுகிறார்கள்.  பின்னர் ஒரு வனம் உருவாகிறது, வேட்டையும், வேளாண்மையும், நாடும் நகரமும், தலைவரும், ராணுவமும் உருவாகின்றன. மீண்டும் ஒரு போர் மூண்டு உலகம் எச்சமின்றி அழிகிறது. அப்போதும் ஒரு மலர், ஒரு பெண், ஒரு ஆண் எஞ்சியிருக்கிறார்கள் என்பதோடு கதை முடிகிறது. 

மலர் சவுந்தர்யத்தின் உச்சம். யோகத்தில் ஆயிரமிதழ் கொண்ட தாமரையை முழுமையின் சின்னமாக கருதுகிறோம். அழகியலின் உச்சமும் ஞானத்தின் உச்சமும் குடிகொள்ளும் இடம் மலர். இந்த கதை சிறுவர் கதை என்பதை காட்டிலும் பெரும் ஆன்மீக பொருள் அளிப்பவையாக இருக்கிறது. எண்ணும் தோறும் கதை விரிவுகொள்கிறது. 

நாம் நம்மை அழித்துக்கொள்ள உருவாக்கும் அத்தனை பேரழிவிலிருந்து நம்மை மீட்டுக்கொள்ள நமக்கு ஒரேயொரு மலர் போதும். 

தும்பி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் 


No comments:

Post a Comment