Thursday, March 10, 2022

கூண்டு- சக்திவேல் கடிதம்

 அன்புள்ள சுனீல் அண்ணா,


 அம்புப்படுக்கை தொகுப்பிலிருந்து கூண்டு சிறுகதையை வாசித்தேன். கூண்டு ஏறத்தாழ நம்முடைய மரபான உருவக கதையே ஆகும். ஆனால் அதை நவீன சிறுகதையாக்குவது எது ? அதன் உள்ளடக்கத்தில் அமைந்த அமைப்பை பகடிக்குள்ளாக்கும் விமர்சனத் தன்மை தான் என்று நினைக்கிறேன். ஒட்டுமொத்ததில் நவீன சிறுகதையில் எக்காலத்தும் பொருந்தும் உருவக வடிவில் அமைந்ததே கூண்டு. கூடுதலாக அவன் ஏன் வெளியே உள்ளான் என்ற கேள்வியை வாசகனில் ஏற்படுத்தி செல்லும் அம்சம்.

கூண்டை வாசித்து முடித்தவுடன், ‘பசுவை தன் கைக்கயிற்றால் பிணைத்து வைத்திருப்பவன், தானும் உடன் பிணைக்கப்பட்டிருக்கிறான்.’ என்ற ஜென் வரியே நினைவுக்கு வந்தது. ஒவ்வொருவரையும் போலவே அவனும் தன்னை வஞ்சித்தவர்கள் கூண்டில் அடைப்படுவார்கள் என நினைத்து மகிழ்கிறான். ஆனால் கூண்டால் ஒவ்வொரு கூட்டமும் பிடிக்கப்படும் போது பிறரில் உருவாகும் எந்த உணர்ச்சிகளும் அவனில் எழவில்லை. ஆம் இவை எல்லாம் இப்படி நடக்கின்றன என்று பார்க்கும் விலக்கல் தன்மையினால் போலும் வெளியே நிற்கிறான். பிறர் அனைவரும் கண்ணீரோடு கம்பிகளில் முட்டி அழுது என்னை ஏற்றுகொள் என கெஞ்சுகையில், ‘நானும் செய்திருக்கிறேன் நீ என்னை தேடி வா,’ என்கிறான். நாம் தேடிச்செல்லாதவை நம்மை நாடி வருதில்லையா ? எல்லோரும் உள்ளே இருக்கும் தங்கள் உறவுகளை நினைத்து ஏங்குகையில் அவனுக்கு மட்டும் கொல்லனின் குழந்தை புன்னகை தெரிவதன் மர்மம் என்ன ? ஆக்கப்பட்டதற்கு அப்பால் ஆக்கியவனை காண துடிக்கும் கண்கள் தான் அவனை விலக்குகின்றன போலும்.


இப்படி கேள்விகள் மனதில் எழும்போதே அந்த கூண்டு உருவாவதிலுள்ள ஒரு அபத்தம் கண்ணில் படுகிறது. அதற்காக கொல்லன் கேட்ட பொருள்கள் என்று சொல்லப்படுபவை எல்லாமே கற்பனையில் உதித்தவை. ஒவ்வொரு புதுச்சிறையை பற்றிய கற்பனைக்களும் அவை எழுந்து வருகையில் இருக்கும் யாதார்த்திற்குமான முரண்பாடு. சிறியவையே வளர்ந்து சிறையென்றாகும் விந்தை. அந்த உண்மையை காண மறுக்கும் அபத்தம். இப்படித்தானே மனித குலத்தை ஆட்கொண்ட ஒவ்வொரு புது கண்டுபிடிப்பும் எழுந்து வந்துள்ளது.


 எப்போதும் நம் அரசாங்க அமைப்புகளின் ஒருபகுதியாக உள்ள அராஜக கூட்டத்தினரின் இயல்பும் தொன்றுதொட்டு வருவது. இப்போது எழுதி கொண்டிருக்கையில் ஒவ்வொரு கூண்டும் முந்தைய கூண்டுடன் இணையும் சித்திரம் ஒன்றில்லாமல் இன்னொன்று இயங்க முடியாதன் இயல்பை குறிப்பதாக விரிகிறது. ஒன்று இன்னொன்றுடன் இணைந்து உருவாகி கொண்டே இருக்கும் முழுமையை பார்ப்பதன் விளைவே வெளியில் மொட்டை பாறையில் காயும் அவனது வேதனை போலும்.


 


அன்புடன்


சக்திவேல்