Saturday, August 22, 2020

காசியபனின் அசடு- ஒரு வாசிப்பு குறிப்பு

 சில ஆண்டுகளுக்கு முன் சென்னை புத்தக கண்காட்சியில் விருட்சம் ஸ்டாலில் காசியபனின் அசடு நாவலை கையில் எடுத்தேன். மிக நல்ல நாவல் அவசியம் படியுங்கள் என அழகிய சிங்கர் கூறினார். சமீபத்தில் தமிழினி இணைய தளத்தில் கயல்விழி ஐசக் பாஷவிஸ் சிங்கரின் 'கிம்பல் த ஃபூல்' கதை மொழியாக்கம் வாசித்தேன். அபாரமான கதை. அதைப்பற்றிய விவாதத்தில் சரவணன் மாணிக்கவாசகம் காசியபனின் அசடை விட மோசம் இவன் என்பதாக ஒரு வார்த்தை எழுதி இருந்தார். 

Kasiyaban (Tamil Edition) eBook: Kesavamani, Revathi: Amazon.com ...

ஒரு வேதாந்த மாணவனாக பொதுவாக தமிழ் நாவல்களில் ஆன்மிகம், அதிலும் குறிப்பாக வேதாந்தம் எந்த தளத்தில் எப்படி கையாளப்படுகிறது என்றறிய முயன்று கொண்டிருக்கிறேன். வேதாந்தத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்குமான தொடர்பு பாரதியிடமிருந்தே தொடங்குகிறது. நவ வேதாந்தம்- குறிப்பாக அரவிந்தர், ஜே.கே, நித்ய சைதன்ய எதி ஆகியோர் தமிழ் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் என்பதை உணர முடிகிறது. புனைவு எழுத்தாளன் வேதாந்தத்தை கைகொள்ளும்போது என்ன நிகழ்கிறது? குறிப்பாக அவனுடைய புனைவுகளை அவன் வேதாந்த சாதனையின் பகுதியாக எப்படி மாற்றிக்கொள்கிறான்? ஒரு அவன் செய்யவேண்டியது எல்லாம் அடையாளக் குறிகளை காட்டும் பதாகைகளை நாடுவதுதான். செல்திசையை குரிப்பவையும் எச்சரிக்கைகளை உரைப்பவையும் என இரண்டாக வகுக்கலாம். மனிதனின் கீழ்மைகளை எழுதுவதும், அவனுடைய மேன்மைகளை எழுதுவதும் ஒன்றின் இருவேறு செயல்திட்டங்கள் எனும் புரிதலை வேதாந்தம் வழியாகவே அடைய முடிகிறது.

 அசடு - காசியபன் - விருட்சம் | panuval.com

அழகிய சிங்கர் காசியபனை பற்றி ஒரு சிறிய அறிமுகம் எழுதியுள்ளார். வெங்கட் சாமிநாதனின் முன்னுரையும் உள்ளது. அம்முன்னுரை ஒரு ஏமாற்றம். எவ்வகையிலும் அசடு நாவலின் தனித்தன்மை அல்லது முக்கியத்துவத்தை அது சுட்டவில்லை. ஒருவேளை அப்படி எதுவும் இல்லை என்பதைத்தான் சொல்கிறாரோ என்னவோ. 

காசியபன் மலையாளம் அறிந்தவர். 53 வயதில் முதல் கதையை எழுதத் தொடங்கினார் என்பது ஆச்சரியமான தகவல். சில கவிதைகள், சிறுகதைகள், மூன்று நான்கு நாவல்கள் எழுதியுள்ளார். அசடு- 1978 ஆம் ஆண்டு வெளியானது. காசியபனுக்கு தத்துவ ஆர்வமும் வாசிப்பும் உண்டு. இந்நாவலில் வேதாந்த வரிகள் காயங்குளம் எனும் பித்தனின் பாடல் வரிகளாக இடையிடையே வருகின்றன. 

கணேசன் எனும் ஒரு மனிதனின் வாழ்க்கை கதை என சொல்லலாம். கதை சொல்லி கணேசனின் ஒன்றுவிட்ட தம்பி ஹரி. கதையை வாசிக்கும் நம்மிடம் சொல்கிறார். ஹரியின் பார்வையில் கணேசனின் பாலிய காலம் தொட்டு மரணம் வரையிலும் தாவித்தாவி நினைவுகூரப்படுகிறது. இந்த நினைவு தாவல் வழியாக இயல்பாக ஓர்  இடைவெளி உருவாகிறது. ஒரே மூச்சில் அத்தியாய பகுப்பு ஏதுமற்ற கூறுமுறை. பெரும் மிராசுதாரரின் வீட்டு பிள்ளையாக ஆனால் தாயில்லா பிள்ளையாக பாட்டியிடம் வளர்கிறான். அதன் காரணமாக அவனை எவரும் கண்டிப்பதில்லை. ஒருமாதிரி முரட்டு இயல்பு உடையவனாக. எவருடனும் இணங்க முடியாதவனாக இருக்கிறான். வாழ்க்கை முழுக்க ஊர் ஊராக தொழில் தொழிலாக மாறுகிறான். கொல்கத்தாவில், புனாவில், சென்னையில், பாலக்காட்டில் என அலைந்து கொண்டே இருக்கிறான். அவனுக்கும் அவனுடைய தந்தைக்குமான உறவு உராய்வுகள் மிகுந்தது. திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் மனைவியுடனான உறவும் நிலைக்கவில்லை. அவளும் அவனை கைவிட்டு செல்கிறாள். அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கு கணேசன் தந்தையில்லை என்பது லேசாக கோடிட்டு காட்டப்படுகிறது. இங்கு தான் கிம்பல் உடன் ஒப்பிட முடியும். ஆனால் கிம்பலின் வெகுளித்தனம் பெரும் ஆன்மீக ஆற்றலாக வளர்கிறது. உணவகம் வைத்திருக்கும் ஆண்டி ஐயரின் பாத்திரம் சுவாரசியமானது. ஏறத்தாழ கணேசனின் தந்தையின் இடத்தை எடுத்து கொள்கிறார்.  மனைவி விட்டு சென்றதும் மீண்டும் அவன் விருப்பம் போல் தன்போக்கில் அலைந்தபடி இருக்கிறான். கணேசனின் வாழ்வு அலைகழிப்பு மிகுந்ததா? அலைக்கழிப்பும் அலைந்து திரிவதும் ஒன்றா? இவற்றுக்கு இடையே நுண்ணிய வேறுபாடு உண்டு. அலைகழிப்பு புறக் காரணிகளால் உந்தப்பட்டு நேர்வது. ஆனால் அலைந்து திரிதல் சுய தேர்வாக நிகழ்வது. கணேசனே பெரும்பாலும் இந்த வாழ்க்கை முறையை தேர்கிறான். அவனுக்கு புண்ணிய தளங்களுக்கு செல்வதன் மீதிருக்கும் விருப்பம் சுட்டிக்காட்டபடுகிறது என்பதைத்தவிர இந்த அலைகழிப்பில் ஆன்மீகத்தன்மை எதுவும் வெளிப்படவில்லை. இதுவே பசித்த மானிடத்தின் கணேசனுக்கும் அசடு கணேசனுக்கும் இடையிலான வேறுபாடு. கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் பல மடங்கு சிறந்த நாவல் என சொல்லிவிட முடியும். அசடு கணேசனின் அலைச்சல் எவ்வகையிலும் அவனுடைய ஆன்மீக பயணத்தின் குறியீடாக ஆகவில்லை. அவனுக்கென தன இருப்பு சார்ந்தோ வாழ்க்கை சார்ந்தோ பெரிதாக எந்த கேள்விகளும் இருப்பதாக தெரியவில்லை. வாழ்ந்து கெட்ட குடும்பத்தின்/ அல்லது செல்லமாக வளர்ந்து பணிய முடியாதவனின் ஆளுமை சிக்கலை சொல்வதாகவே தெரிகிறது. அவனும் பசித்த மானுடம் கணேசனை போல் துய்த்து துறந்து கடக்கிறான். ஆனால் இவனிடம் அதிகமும் கசப்பே எஞ்சி இருக்கிறது எனும் தோற்றம் இந்த கதைசொல்லியின் பார்வையினால் ஏற்படுகிறது எனத் தோன்றுகிறது. இடையிடையே வேதாந்த விசாரங்களை கொண்டுவருவதால் கதை பெரிதாக மாறிவிடவில்லை என்றே சொல்ல வேண்டும். அல்லது காயங்குளம் எனும் பித்தனுக்கும் கணேசனுக்கும் இடையிலான உறவு சரியாக இணை வைக்கப்படவில்லை. கணேசனின் வாழ்க்கை மீதான ஹரியின் பார்வை என்பதாலேயே இயல்பாக பச்சாதாப குரல் மேலெழுகிறது. ஹரி பாதுகாப்பான நிலையான வாழ்வில் நின்றுக்கொண்டு கணேசனின் கதையை சொல்கிறான். அவனுக்கு தானும் இப்படி ஊர் ஊராக அலையவேண்டும் எனும் விருப்பம் ஏதுமில்லையா? வேதாந்த புரிதலின் படி ஹரியின் பாதுகாப்பு நிலையே முதன்மையாக கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். கணேசனின் உருவம் தொடங்கி பாத்திர வார்ப்பு வரை எல்லாம் துல்லியமாக துலங்கி வருகிறது. கதைசொல்லிக்கு வெறும் குரல் மட்டும் தான். ஆனால் கணேசனின் விவரணை நாமறிந்த பல்வேறு மனிதர்களுடன் தொடர்புகொள்ள முடிந்தது. எஸ்.ரா அசடு பற்றிய கட்டுரையில் தாஸ்தாவேஸ்கி பாத்திரங்களுடன், குறிப்பாக காரம்சொவ் சகோதரர்களுடன் ஒப்பிட்டு எழுதி இருக்கும் கோணம் ஒரு முக்கியமான திறப்பு. 

நாவல் ஒரு நீண்ட உரையாடல் வடிவத்தை கொண்டிருக்கிறது. நினைவுக்குறிப்பு அல்லது நினைவஞ்சலி எனும் வடிவத்தை தேர்கிறது. கணேசனின் அகத்தத்தளிப்புகள், ஆன்மீக கேள்விகள் எதுவுமே பதியவில்லை. எலி செத்து அதை காக்கைகள் பிடுங்கும் ஒரு சித்திரமும் கணேசன் பெரும் புகையெழுப்பி விறகடுப்பில் தோசை வார்க்கும் சித்திரமும் மனதில் நிற்கும்.  வாசித்து முடித்ததும் ஒரு நிறைவற்ற உணர்வே எஞ்சியிருந்தது. 

Thursday, August 20, 2020

மோக முள் – ஒரு வாசிப்பு

TNPSC notes: தி.ஜானகிராமன்-தமிழ் அறிஞர்கள்

இந்த ஆண்டு தி.ஜா நூற்றாண்டு. தி. ஜானகிராமனின் சிறுகதைகள் பற்றி ஒரு கட்டுரை கனலி சிறப்பிதழுக்கு எழுதலாம் என திட்டமிட்டிருந்தேன். ஆனால் என்னிடம் இருப்பது எழுபது கதைகள் கொண்ட ஐந்திணை வெளியீடாக வந்த பழைய தொகுதி. முன் அட்டையும் பின் அட்டையும் காணவில்லை. தவிர முன்னுரையின் சில பக்கங்களும் அக்கு அக்காக போய்விட்டன. புத்தகத்தை கையாளும்போது மேலும் கிழிந்து விடுமோ என அஞ்சி அதை எடுக்கவில்லை. முன்னரே வாசித்த மரப்பசு அம்மா வந்தாள் பற்றி எழுதலாம் என் யோசித்தால் மீள வாசிக்க சோம்பல். இப்படியாக ‘மோக முள்’ வாசிப்பது எனும் முடிவுக்கு தள்ளப்பட்டேன். அப்போதும் கூட அடி, நளபாகம் வாசிக்கலாம் என தோன்றியது. நாஞ்சில் நாடன் ‘செம்பருத்தி’ மோக முள்ளை விட நல்ல நாவல் என நேர்பேச்சில் ஒருமுறை பரிந்துரை செய்தது நினைவுக்கு வந்தது. இயல்பாக எழக்கூடிய கேள்வி – இத்தனை ஆண்டுகளாக ஏன் வாசிக்கவில்லை? வாசிப்பதில் என்ன தயக்கம்? தயக்கத்திற்கு முக்கியமான காரணம் இதன் தீவிர வாசகர்கள்தான். அவர்கள் இதை தாங்கள் பாபுக்களாக இருந்தபோது சந்திக்க நேர்ந்த யமுனாக்களை பற்றி நீர் கசிய தொண்டை நெகிழ பேசிப்பேசி இந்த காரணத்தினாலேயே இது தமிழின் முதன்மையான நாவல்களில் ஒன்று என்றார்கள். எப்படி முக்கியம்? எப்படி முதன்மையானது? என்றெல்லாம் கேட்டால் எங்களுக்கும் இந்நாவலுக்குமான உறவு  அந்தரங்கமானது என முற்றிலும் அகவயமான ஒரு பதிலை சொல்வார்கள். நம்மூரில் அந்தரங்கம் வேறு புனிதமானது ஆயிற்றே. ஆகவே மேற்கொண்டு எதையும் பேசாமல் நகர்ந்து விடுவேன்.. இது ஒரு விடலை பருவத்து காதலை நினைவேக்கமாக சொல்லும் கதை என்பதே என் மனப்பதிவாக இருந்தது. தேசிபாபா பார்த்து வளர்ந்த தலைமுறையில் வயது வித்தியாச காதல் பெரும் கிளர்ச்சி தரும் பேசுபொருளாக, அதுவும் இருபத்தி மூன்று வயதிற்கு மேல் நான் வாசிக்க தொடங்கிய காலத்தில், என்னை ஈர்க்கவும்  இல்லை. 

அணுக்க வாசகர்களே ஒரு ஆக்கத்திற்கு சத்ருக்களாக ஆகிவிடுவதும் உண்டு. இவற்றை மீறி எப்போதும் மோக முள் வாசிக்க வேண்டும் எனும் குறுகுறுப்பு உண்டு. இப்போது முப்பத்தி நான்கு வயதில் முதன்முறையாக மோகமுள் வாசித்து முடித்தேன். ஒருவேளை நானும் என் பதின்மத்தில் இந்நாவலை வாசித்திருந்தால் இது அந்தரங்கமான நாவலாக இருந்திருக்க கூடும். இப்போது எனக்கு இந்நாவல் முக்கியமானது தான். ஆனால் வேறுவகையில். 

 ‘மோக முள்’ ஒரு காதல் கதையா? காதல் கதையும் தான் ஆனால் காதல் கதை மட்டுமல்ல. இதை சமூக ஒழுங்கிலிருந்து விலகிய காதல் கதையாக, நினைவேக்க கதையாக சுருக்கி நிறுவியது ஒரு பிழை. நான் இந்நாவலை எப்படி வகுத்துக் கொள்வேன்? மூன்று அடுக்குகள் கொண்டது இந்நாவல். மனிதனின் ஆன்மீக லட்சியத்திற்கும் அதை அடைய விடாமல் இழுத்தடிக்கும் உலகியலுக்கும் இடையிலான ஊசலாட்டம் என்பது ஒன்று. கலைக்கும் கலைஞனுக்கும் இடையிலான உறவு என்ன என்பதை பரிசீலிப்பது இரண்டு. மனித உறவுகளை பற்றிய சாராம்சமான கேள்விகளை கொண்டது மூன்று. நாவலின் கதை மாந்தர்கள் மூன்று தளங்களுக்கும் ஊடாடி வருகிறார்கள்.   

முதல் இரண்டு கேள்விகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. நாவலின் ஆன்மீக தளம் என்பது நாத யோகம் மற்றும் தேவி உபாசனை என இரு தளங்களை கொண்டது. ரங்கண்ணாவை சந்திக்கும் முன்னரே பாபு இசை என்பது ஒரு தியானம். ஆன்ம சாதகத்தின் வழி எனும் அடைதலை ராஜத்திடம் பகிர்ந்து கொள்கிறான். இசை வெளிப்படுவதால் தான் அதன் மகத்துவம் தெரிகிறது என்பது ராஜத்தின் வாதம். அப்படி எதுவும் அவசியமில்லை என்பது பாபுவின் தரப்பு. ஏறத்தாழ பாபுவின் தரப்பின் உருவமாக தனது கலையையே ஆன்மீக சாதனையாக வரிந்து கொண்டவர் ரங்கண்ணா. நாத பிரம்மமாகி கலந்து விடுபவர். கலைஞனின் லட்சிய பேருரு. ‘உலகமே ஒரு இசையில் ஓடும் பாவுமாக இழைந்து ஒலிக்கிறது.’ லய யோகம் அல்லது நாத யோகம் என சொல்லலாம். ரங்கண்ணாவிற்கு ‘தீயும் சூடும் போல சுருதி சேர்கிறது,’ இப்படியான இரண்டற்ற நிலையை கலையின் வழி அடைய முற்படுவதே பாபுவின் இலக்கும் கூட.சில்வண்டு, காக்கா, நள்ளிரவு ஒலிக்கும் ரிக்ஷா என எல்லாவற்றையும் ஸ்வரமாக காணும் பேறு ரங்கண்ணாவால் அவனுக்கு அளிக்கப்படுகிறது. சீடர்கள் சூழ இசையை கேட்டபடி ரங்கண்ணா உடலை உதிர்க்கும் சித்திரம் என்றன்றைக்கும் மனதை நிறைப்பது. 

bol.com | மோக முள் / Moga Mul (ebook), தி ...
பாபுவின் தந்தை வைத்தியும் ஒரு பாகவதர். அவர் இரவெல்லாம் ஜபித்து கொண்டே இருப்பவர். அவர் வழியாக அவருடைய குரு ராஜூ பாபுவிற்கு அறிமுகம் ஆகிறார். அவருடைய காமாட்சி தரிசன கதை ஒரு நாட்டார் தன்மை உடையது என சொல்லலாம். ‘ராஜூ கடவுளை தாயாக உபாசிக்கிற சம்பிரதாயத்தில் சித்தி கண்டு அருள் கண்டவர்.’ என வைத்தி குறிப்பிட்டு பாபுவிற்கு மந்திர உபதேசம் அளிக்கிறார். இந்த உபதேசம் பெறுவதற்கு முன்னரே இப்படியான ஒரு வழிமுறையை உற்ற நண்பன் ராஜத்திடம் இருந்து அறிந்து கொள்கிறான். இது சார்ந்து அவர்களுக்குள் நிகழும் உரையாடல் சுவாரசியமானது. ஒரு பெண்ணை வணக்கத்திற்குரியவளாக வரிந்து கொண்டபிறகு அவளுடைய நடத்தை வேறானதாக இருந்தால், அவள் நீ எண்ணும் அளவிற்கு தூய்மை இல்லாதவளாக இருந்தால் அப்போதும் நீ வணங்குவாயா என்று ராஜத்திடம் கேள்வி எழுப்புகிறான். அதற்கு பதில் அளிக்கும் ராஜம் அவளுக்கு என்னவானாலும் அதுவொரு பொருட்டல்ல. என்னளவில் அவள் தூய்மையானவள். தொழத்தகுந்தவள் என்கிறான். இந்தப் புள்ளியில் இருந்தே பாபு- யமுனா உறவை பரிசீலிக்க முடியும்.   

உண்மையில் பாபுவிற்கு யமுனா யார்? இது ஒரு தொடர்கதையாக எழுதப்பட்டது என்பது நினைவிலிருக்க வேண்டும். நாவலின் தொடக்கத்தில் யமுனா அத்தனை அழகுள்ளவளாக கம்பீரமானவளாக எல்லாம் சித்தரிக்கப்படவில்லை. யமுனாவையும் அவளுடைய தாய் பார்வதியையும் சேர்த்து நோக்கினால் பார்வதி தான் அழகு என குழந்தையும் சொல்லிவிடும் என்கிறார். யமுனாவின் முகத்தில் அத்தனை முழுமை அல்ல என வேறு சொல்கிறார். யமுனாவா பார்வதியா? யாரை தொடர்வது என்பதில் அவருக்கு ஒரு ஊசலாட்டம் இருந்திருக்க கூடும் என ஊகிக்க முடிகிறது. அடுத்த அத்தியாயத்தில் யமுனா என முடிவாகி அவள் அவருடைய இதயத்தில் குடி கொண்ட தெய்வமாக ஆகிறாள். ஏறத்தாழ யமுனாவின் சகோதரனை போல், அவள் மடியில் உறங்கி, ஆவலுடன் விளையாடி வளர்பவன். அவளுடைய திருமணத்திற்காக கோவையிலிருந்து வரும் மாப்பிள்ளையை அழைத்து வருபவன், அவர் அவமதித்ததும் சண்டைக்கு நிற்கிறான். அவள் மீதான காதலையும் உணர்ந்து கொள்கிறான். நாவலின் கடைசியில் முதிர் கன்னியாகிப்போன நாற்பது யமுனாவுடன் உறவு கொள்கிறான். அவள் அவனிடம் “இதற்குத்தானா?” என கேட்டு “இதற்குத்தான்” என பதிலும் சொல்கிறாள். எது புனிதம்? எது இழிவு? ஒன்று மற்றொன்றாக தலைகீழாக்கம் பெறுகிறது. நாவலின் தொடக்கத்தில் காவேரியும் கும்பகோணமும் பற்றிய விவரணை அதையே சுட்டுகிறது. ‘இவ்வளவு புழுதி, இவ்வளவு சாக்கடைத் தேக்கங்கள் எல்லாவற்றையும் பற்றி நினைக்கக்கூட நினைக்காமல் ஒரு கவலை இல்லாமல் இருக்கும் இந்த ஊருக்குக் கூட அழகு உண்டு என்று இந்த காவேரி மன்றாடிக் கொண்டிருக்கிறது.’ காவேரி கலை அலல்து ஆன்மீக அருள் என கொள்ளலாம். அழுக்குகளை பொருட்படுத்தாமல் அது ஓடிக்கொண்டிருக்கிறது. தங்கம்மா அறிமுகம் ஆகி மனம் சபலமடைந்த தருணத்தில் ‘காவேரி புனிதமாக ஓடிக்கொண்டிருந்தது. இவ்வளவு வேகம் எதற்கோ? சொல்லைக் காப்பாற்றதவர்களின் கண் அவ்வளவு சுடுமா? அந்தச் சூடு தாங்காமலா தப்பித்து ஓடுகிறது இந்தப் பிரவாகம்? அகவுவமான மனிதர்களை கண்டு தூர விலகும் விரைவா?’ என எழுதும்போது இந்த உருவக நேர்த்தி முழுமை அடைகிறது. ஓடும் காவேரி படைப்பூக்கத்திற்கு அல்லது ஆன்ம ஒளியை குறிக்கிறது என்றால் தி.ஜா தேங்கிய நீரை என்னவாக சித்தரிக்கிறார் என்பதை வகுத்துக்கொள்ள வேண்டும். யமுனாவை பெண் பார்க்க வந்தவருடன் சண்டையிட்டு எரிச்சலில் திரும்பும் போது கும்பகோணம் கோவில் குளத்தை பற்றிய ஒரு சித்தரிப்பு வருகிறது. ‘குளத்தின் வடமேற்கு மூலையில் பெரிய மண்டபத்தை நெருங்கும் போது, மூலையில் நுரையும் பத்தையுமாகப் பாசிக் குப்பலின் நாற்றம் வயிற்றைக் குமட்டிற்று. குமட்டலைத் துப்பினபோது கண்ணில் ஜலம் வந்துவிட்டது அவனுக்கு அந்தப் பாசிக்குப் பக்கத்திலேயே ஒரு கூட்டம் துணிகளுக்கும் தோலுக்கும் சோப்பைப் போட்டுக் கழுவிக்கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சகித்து சகித்து இந்த நாற்றத்தில் திளைக்கப் பழகி கொண்டுவிட்டார்கள். பாபுவுக்கு கோபம் கோபமாக வந்தது. கோயம்புத்தூர்க்காரர், யமுனா, பார்வதி, குளத்தில் குளிப்பவர்கள்- எல்லார்மீதும்தான்.’ இங்கே தேங்கிய நீர் உலகியல் வாழ்க்கை, அல்லது குடும்ப – சமூக அமைப்பு என பொருள் கொள்கிறது. குடும்ப சூழல் காரணமாக முதிய கணவனை திருமணம் செய்துகொண்ட தங்கம்மா மகாமக குளத்தில் தான் இறந்து தற்கொலை செய்து கொள்கிறாள். குளம் தொடர்ச்சியாக உயிர்களை பலிவாங்கிக்கொண்டே இருக்கிறது. காவேரி எனும் கட்டற்ற பிரவாகமும் குளம் எனும் தேங்கிய நீரும் எதிரெதிர் உருவகங்களாக நிலைபெறுகின்றன.    

பாபு யமுனா உறவில் கவனிக்கத்தக்க சில புள்ளிகள் உள்ளன. ‘தூய்மையின் காலடி படும் ஒவ்வொரு இடமும் புனிதமாகிவிடுமா? எல்லையில்லாத சக்தியை ஊட்டும் அருளாக கனிவது போலிருக்கிறது.’ என யமுனாவின் இருப்பை பற்றி எழுதுகிறார். யமுனா இங்கே காவேரிக்கு இணை வைக்கப்படுகிறாள். நதிகளின் பெயர்களில் உள்ள ஒப்புமையையும் கவனிக்கலாம். அதன் வழியாக உள்ளே பொங்கும் படைப்பூக்கத்திற்கும் ஆன்மீக நிலைக்கும் கூட இணை வைக்கப்படுகிறாள்.  அவர்களுள் உறவு நிகழ்வதற்கு முன் ‘ஜுரத்தில் இருக்கும்போது ‘உலகத்து ஆறுகள் எல்லாம் கணவனான கடலை தான் இறுதியில் அடைகின்றன. எந்த தேவனுக்கு வணக்கம் செய்தாலும் அது கடைசியில் பரம்பொருளைத் தான் அடைகிறது என்று தினமும் சொல்லுகிற செய்யுள் பாபுவின் மனதில் ஒலித்தது.’ என எழுதுகிறார். காமாட்சியை காணும்போது பாபு சொல்கிறான்- ‘பெயருக்கு தகுந்தார்போலத்தான் இவளைக் கல்லில் வடித்திருக்கிறான் சிற்பி. அதைப் பார்க்க பார்க்க என்னமோ செய்கிறது எனக்கு. மேலே போகக் கூட இந்த வாசல் வழியாகத்தான் போக வேண்டியிருக்கிறது.’ யமுனா அவனுடைய ஆன்மீக உன்னதத்திற்கான வாசல் என்றே அவன் நம்புகிறான். தங்கம்மா மீது அவனுக்கு இருப்பது கிளர்ச்சி. அந்த வேறுபாடும் பதிவாகிறது. ‘வெறுப்பது நியாயம் தானா? வெறுத்து வெறுத்தா அருளை அடைய முடியும்? அவளை வணங்கி வணங்கி வெறுப்பை வண்ணக்கமாக மாற்றிவிட்டால் என்ன?ஆனால் மனதிற்குள் தகாதபடி வந்து நிற்கிறாள்.’ தங்கம்மாவிடம் பாபுவிற்கு இருந்தது மோகம் என்பதும் யமுனாவிடமிருந்தது அதுவல்ல என்பதும் தெளிவாகிறது.  தங்கம்மாளின் இந்த சித்தரிப்பு காதுகளின் நாசகாளியை எனக்கு நினைவுறுத்தியது. பெண் அருளும் அன்னையாகவும் வீழ்த்தும் மாயையாகவும் உருக்கொள்கிறாள். ‘மோக முள் முப்பதுநாள் குத்தும் பின்ன மழுங்கிப்போயிடும்பாங்க..எட்டின மோகம் மட்டும் இல்லை எட்டாத மோகமும் அப்படித்தான். ஆனா நீ அப்படி இல்லை.’ என்கிறாள் யமுனா. இதன் வழியாக அந்த வேற்றுமை சுட்டிக்காட்டப்படுகிறது. நாவலின் இறுதியில் ‘சபரி ராமனை வரவேற்றது போல் உன்னை வரவேற்பது சந்தோஷமாக இருக்கிறது.’ என சொல்வதன் வழியாக உபாசகன்- தேவதை உறவு தலைகீழாககப் படுகிறது. ‘உடலையும் உள்ளத்தையும் செருப்பாக தைத்து போடும் இந்த வாழ்வை எப்போதாவது கனவு காண முடியுமா நம்மால்?’ என பாபு வியந்துகொள்கிறான். அவன் காத்துக்கொண்டிருந்த அருளின் கனிவு அது. வைத்தியை பார்வதியுடன் தொடர்பு படுத்தி பேசும் பட்டப்பாவை பற்றி சங்கு சொன்னபோது ‘பாபுவுக்கு ஒரே குழப்பமாயிருந்தது. சரீர சம்ப்வந்தத்தைத் தவிர வேறு ஒன்றுமே மனிதர்களுக்கு புரியாதா? வேறு தினுசாக எதையும் அர்த்தம் செய்துகொள்ளும் கற்பனையே இல்லையா?’ என எழுதுகிறார். இங்கிருந்து நாம் ‘இதற்குத்தானா?’ எனும் கேள்விக்கு ஒரு இணைப்பை இட்டுக்கொள்ளலாம். யமுனா பாடலை கேட்ட பிறகு சொல்வது ‘ஆமாம் நல்லதா ஒண்ணை அனுபவிச்சதுக்கப்புறம் உசிரோட இருக்கலாமா? மறுபடியும் மன்னிலேதானே வந்து புரள வேண்டியிருக்கு’ என்கிறாள். பாபு ஆட்கொள்ளப்பட்டதை பற்றி சொல்லும்போது ‘ஆனால் எங்கேயோ தொத்திண்டு இருக்கிற கம்பியிலே இடி மின்னல் இறங்குவது போல அது வந்து இறங்கி என்னை ஸ்தம்பிக்க அடித்துவிட்டது.’ என எழுதுகிறார். பாபு- யமுனா என இருவருக்குமே இங்கு இருநிலைகள் உண்டு. மண்ணிலிருந்து மீண்டும் மீண்டும் விண்ணுக்கு எழும்ப முயல்பவர்களாக இருக்கிறார்கள். பாபு- யமுனா உறவை தரைத்தளத்திலும் அதன் உன்னத தளத்திலும் இணைத்தே புரிந்துகொள்ள வேண்டும். இந்த இரு நிலைகளுக்கு இடையிலான முரணே நாவல் என சொல்லலாம்.   

பாபு யமுனா உறவு என்பது நாவலின் முக்கியமான சரடுகளில் ஒன்று. பாபு- ராஜம் நட்புறவு, பாபு- ரங்கண்ணா குரு சீட உறவு, வைத்தி- பாபு தந்தை மகன் உறவு ஆகியவை ஏறத்தாழ இதேயளவு முக்கியதத்துவம் வாய்ந்தவை. பாபு- யமுனா உறவை யதார்த்த தளத்தில் இன்று எழுதுவது எளிது, ஆனால் உண்மையில் பாபு- ராஜம் நட்புணர்வு போன்ற ஒன்றை நம்மால் யதார்த்த தளத்தில் இன்று எழுத முடியுமா என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டேன். அப்படி இயலாமல் போனதற்கு மாறிப்போன இலக்கிய/ வாழ்க்கை எப்படி காரணம் என யோசித்துக் கொண்டிருந்தேன். நாவலில் எம்.வி.வி ஒரு சிறிய பாத்திரமாக வருகிறார். அவருடைய ஆளுமை சித்திரம் நன்றாக பதிவாகியுள்ளது. கு.ப.ராவின் ஒரு கதை குறிப்பிடப்படுகிறது. மோக முள் நாவலில் வரும் தண்டபாணி அய்யர் பற்றிய சித்திரம் கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடத்தில் காட்டப்படும் ஒரு சித்தரிப்பின் தொடர்ச்சி என சொல்லலாம். தண்டபாணி அய்யர் அன்னதாதா என பிராமணர்களுக்கு உணவிட்டு பெயர் எடுத்தவர். பிற சாதிகாரர்களை துரத்தி விடுபவர். அக்காவின் சொத்தை ஏமாற்றி கையகப்படுத்தி கொள்பவர். மற்றொரு இடத்தில் சிறு வயதிலேயே முண்டனம் செய்து விதவையாகும் பாட்டியை பற்றிய சித்திரத்தின் வழியாக சமூக விமர்சனத்தை முன்வைக்கிறார். பெண்களின் நிலை பற்றியும், சாதி பற்றியும் சில விமர்சனங்கள் வந்து செல்கின்றன. காந்தியின் மரணம் கூட நினைவுக்கூரப் படுகிறது.

பாபு- யமுனா- தங்கம்மா முக்கோணம் போலவே ரங்கண்ணா- பாபு- பாலூர் ராமு என்றொரு முக்கோணமும் உருகொள்கிறது. கர்நாடக இசை வடக்கிந்திய இசைக்கும் இடையிலான வேறுபாடு சார்ந்து ஒரு விவாதமும் நாவலுக்குள் நிகழ்கிறது. வடக்கத்திய பாடகரான விஸ்வம்பர காணே பாபுவின் மற்றொரு லட்சியம். அவரிடமே பாபு இசை பயில இறுதியாக செல்கிறான். பாலூர் ராமு தொடக்கத்தில் நிராகரிக்கப்பட வேண்டிய போலி கலைஞன் என்றே கருதப்படுகிறார். நாவலின் இறுதியில் வெகு மக்களுக்கு கலையை கொண்டு செல்ல சமரசம் செய்துகொண்டாலும் நல்ல கலைஞன் எனும் பரிணாமத்தை அடைகிறார். கலை குறித்த லட்சியவாத உரையாடல்கள் பலவும் இங்கு நிகழ்கின்றன.

இவை அல்லாது நாவல்களில் பல சிறு கதை மாந்தர்கள் புழங்குகிறார்கள். யமுனாவின் அண்ணா சுந்தரம், பாபுவின் அண்ணன் சங்கு, பெரியப்பா, அக்கா. சிறுவயதில் டெட்டனஸ் வந்து இறந்து போகும் அக்கா மகள் பட்டு. பட்டுவின் சித்தரிப்பு எனக்கு லாசராவின் அபிதாவை நினைவுபடுத்தியது. பிறகு தி சாவின் சொற்களில் காவேரியும் கும்பகோணமும் வெகு சுகம். கல்லூரிக்கு படகில் ஏறி செல்கிறார்கள். இடைவேளையில் கானோ ஓட்டுகிறார்கள் என்பதெல்லாம் இன்றைய கும்பகோணத்தில் கற்பனையே செய்து பார்க்க முடியவில்லை.      

நாவலின் சிக்கல்கள் எவை? முதன்மையாக தொடர் கதையாக எழுதுவதாலேயே நேரும் சிக்கல்கள் என சிலவற்றை சொல்லலாம். பாத்திரங்கள், முடிவுகள் கணப் பொழுதில் நிகழ்ந்து விடுபவையாக உள்ளன. ராஜத்தின் மனமாற்றம், யமுனாவிடம் பாபு சொல்வது, மீண்டும் சொல்வது, யமுனா ஏற்பது என பல முக்கிய தருணங்கள் கணநேர உந்துதல் வழியாகவே சொல்லப்படுகிறது. எதை தேர்வது? எதை வளர்ப்பது? எதை கைகொள்வது போன்றவற்றில் இருக்கும் தடுமாற்றங்கள் சில இடங்களில் புலப்படுகின்றன. இதை ஒரு அழகியல் பிழை என்றே மனம் கருத்தில் கொள்கிறது. நாவல் வாசித்து முடித்ததும் மெல்லிய ஏமாற்றமே மேலோங்கியது. காரணம் நாவலின் முரண்களும் முடிசுகளும் வலுவாக உருவாகியிருந்தது அந்த வலு முடிவில் இல்லை. மிகவும் கற்பனாவாதத்தன்மை கொண்ட முடிவு என்றே தோன்றியது. தி.ஜா நாவலில் எல்லாம் எப்படி நடந்திருக்க வேண்டும் என நான் விரும்பினேனோ அப்படி எழுதி இருக்கிறேன் என எழுதி இருக்கிறேன் என்கிறார். எப்படி வந்திருக்க வேண்டுமோ அப்படி வந்திருந்தால் இந்நாவல் எடுத்துக்கொண்ட பேசு பொருட்களுக்கும் உருவகங்களுக்கும் நியாயம் செய்திருக்கும் எனத் தோன்றியது. தி ஜாவின் கூறுமுறையில் உள்ள சிக்கல் என்பது வாசகர் மீது அவர் கொள்ளும் அவநம்பிக்கை என சொல்லலாம். யானையை சித்தரித்தாலே வாசகன் அது யமுனாவை குறிக்கிறது என உய்த்து கொள்ள முடியும். ஆனால் பின்னர் அதையும் அவரே விளக்கி சொல்கிறார். எனினும் இவை அனைத்தையும் மீறி மோக முள் இன்றும் வாசிக்க வேண்டிய, வாசிக்கத்தக்க முக்கிய நாவலாகவே இருக்கிறது.    






.

Friday, August 7, 2020

கலையெனும் நுதல்விழி- கல்குதிரை கட்டுரைகள் ஒரு பார்வை

(இது 2019 ஆம் ஆண்டு வெளியான கல்குதிரை இதழில் வெளிவந்த கட்டுரைகள் பற்றிய கட்டுரை.. நாகர்கோவிலில் கல்குதிரை படைப்புகளை விவாதிக்க ஒருநாள் அமர்வை லக்ஷ்மி மணிவண்ணன் ஒருங்கிணைத்திருந்தார். அதேநாள் புத்தக வெளியீடு இருந்ததால் கட்டுரை மட்டும் எழுதி ரோஸ் ஆன்றோவுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அடுத்த இதழில் வெளிவரும் என கோணங்கி என்னிடம் கூறியிருந்தார். இதழில் வெளிவரவில்லை என அறிகிறேன். ஆகவே இங்கே பதிகிறேன். இத்தனை காலதாமதமாக இதை வாசிக்கும்போது விநோதமாக இருக்கலாம். எனினும் எழுதிவிட்டேன் ஆகவே பதிகிறேன்)

கடவுளே 

நான் மாற்ற முடியாத நிகழ்வுகளை 

ஏற்கும் அமைதியையும் 

நான் மாற்றக் கூடியவற்றுக்கு 

துணிவையும் 

அதிலுள்ள வேறுபாட்டைச் சொல்வதற்கான 

ஞானத்தையும் 

எனக்குக் கொடு. 

(முபீன் சாதிகா கட்டுரையில் ஸ்லாட்டர் ஹவுஸ் நாவலில் இருந்து மேற்கோள் காட்டப்படும் வரிகள்)

     



‘கல்குதிரை’ இன்றைய தமிழ் இலக்கிய சூழலில் மிக முக்கியமான இதழ் என்பதைவிட ஒரு இயக்கம் என்று சொல்லலாம். அருகிவரும் சிற்றிதழ் மரபின் வலுவான கன்னி. தொடர்ந்து பல முக்கிய உலக இலக்கிய ஆளுமைகளையும், உலகளாவிய இலக்கிய போக்குகளையும், வெவ்வேறு கலை வடிவங்களின் முக்கிய ஆளுமைகளையும் தமிழுக்கு பரிச்சயப்படுத்தி வருகிறது. 2018 ஆம் ஆண்டு கார்கால மற்றும் பனிக்கால இதழ்கள் (30,31) அவ்வகையில் முக்கியமான தொடர்ச்சி. ஒரு அமர்வில் வாசிக்கத்தக்க அம்சம் என்பது விலகி ஏறத்தாழ ‘கல்குதிரை’ ஒரு ஆவணத்தன்மை கொண்ட, சுட்டுநூல் (reference text) தன்மை கொண்ட இதழாக பரிணாமம் கொண்டுள்ளது. ஒருவகையில் இது அதன் நேர்த்தியை மற்றும் முக்கியத்துவத்தை கூட்டுகிறது என்றாலும் மொத்தமாக வாசிப்பதை சவாலாகவும் ஆக்குகிறது. இத்தகைய சூழலில் அதில் வெளிவந்த படைப்புகளுக்காக ஒரு விமர்சன அரங்கை ஏற்பாடு செய்வது என்பது வரவேற்கத்தக்க செயல்பாடாகும்.  

கல்குதிரை 30 கார்கால இதழில் மொத்தம் பதிமூன்று விமர்சன கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கல்குதிரை 31 பனிக்கால இதழில் மொத்தம் ஆறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கார்கால இதழில் உள்ள 13 கட்டுரைகளில் இரண்டு நாவலைப் பற்றியும், மூன்று கவிதை தொகுப்புக்களைப் பற்றியும், எட்டு சிறுகதை தொகுப்புக்களைப் பற்றியும் பேசுகின்றன.  வெய்யிலின் ‘மகிழ்ச்சியான பன்றிக் குட்டி’ பற்றிய இளங்கோ கிருஷ்ணனின் கட்டுரையும் பத்மபாரதியின் ‘நீர்ச்சாரி’ மற்றும் சம்யுக்தா மாயாவின் ‘டல்ஹௌசியின் ஆரஞ்சு இரவு’ பற்றிய கட்டுரைகளும் நிறைவான வாசிப்பனுபவத்தை அளித்தன. இவற்றுடன் சேர்த்து முபீன் சாதிகாவின் ‘slaughter house 5’ பற்றிய கட்டுரையும் பிரவீன் பஃறுளி பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் சிறுகதைகளை முன்வைத்து எழுதிய கட்டுரைகளும் இந்த இதழின் முக்கியமான கட்டுரைகள் ஆகின்றன. ‘கற்றாழைப் பச்சை’ ‘லங்கூர்’ மற்றும் ‘கேசம்’ ஆகிய தொகுதிகளைப் பற்றிய கட்டுரைகளில் விமர்சன கண்ணோட்டம் இல்லை என்பதே முதன்மை குறைபாடு. ஆகவே பிரதியின் மீதான வாசிப்பின்பத்தை சுட்டுவதோடு நின்றுவிடுகிறது. அவ்வகையில் ‘ஆதாளி’ ‘மெடுசாவின்  கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ ‘அம்புப் படுக்கை’ மற்றும் ‘டொரினா’ பற்றிய கட்டுரைகள் விமர்சனப் பூர்வமாகவும் அணுகுகின்றன என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒருவகையில் சமகால சிறுகதை சூழலின் குறுக்குவெட்டு சித்திரம் மட்டுமின்றி தற்கால விமர்சன சூழலின் சித்திரத்தையும் இக்கட்டுரைகள் அளிக்கின்றன. 

பனிக்கால இதழின் ஆறு கட்டுரைகளுமே காத்திரமானவை. நாட்டிய நாடக மேதையான பீனா பௌஷ் மற்றும் ஓவியர் பால் கோகின் என எழில் சின்னத்தம்பி இரண்டு கலைஞர்களை அறிமுகப்படுத்தும் இரண்டு கட்டுரைகளை எழுதி இருக்கிறார். இவை இரண்டும் ஆழமான கட்டுரைகள் எனச் சொல்லமுடியாது என்றாலும் இவ்வாளுமைகளை துவக்க நிலையில் அறிமுகம் செய்து அவர்களின்பால் நமக்கொரு ஈடுபாட்டை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டவை. அவ்வகையில் ஒரு பறவை கோணத்தில் அவர்களை அறிமுகம் செய்பவை. இன்றைக்கு கட்டுரை எழுதுவதில் உள்ள சவால் என்பது இணையத்தில் கிடைக்கும் தரவுகளுக்கு அப்பால் அசலான அவதானிப்பை அளிக்க முடியுமா என்பதில் உள்ளது. அகிலா எழுதிய ‘மாற்றுடலின் சமகாலப் பயணம்’, முருகபூபதியின் ‘நடிகனைப் பிடித்த யாக்கைச் சுருட்டுகள்’, பினுக்குமாரின் ‘அரங்காடும் ஒளியிருள்’ ராம்ராஜின் ‘ஹொணே ஏத்தினா’ ஆகிய பிற கட்டுரைகளை ஒன்றாக பிணைக்கும் சரடு என மானுட உடல் மற்றும் அதன் பரிமாணங்களை அவதானித்தல் எனச் சொல்லலாம். 

ச. முருகபூபதியின் கட்டுரை நாடகக் கலை மற்றும் அதன் நடிகர்களின் முக்கியத்தவத்தை, அவர்களின் அர்ப்பணிப்பைப் பற்றி பேசுகிறது. தமிழ் நாடக மரபு என்பதே வீட்டை விட்டு கலைத் துறவு கொண்ட பார்வையாளர்களிடம் இருந்தே துவங்குகிறது என்கிறார். பார்வையாளனின் கலை ஈடுபாடு வெளிப்பட்டு அவனும் பங்கேற்பாளனாக உருமாற்றம் அடைகிறான். காலந்தோறும் அப்படி உருவாகிவந்த நடிகர்களைப் பற்றி முருகபூபதி சொல்கிறார். தமிழ் பண்பாட்டில் தன் உடல் எல்லையை மீறும் வாய்ப்புகள் நாட்டுப்புற சடங்குகள் வழி அடையப் படுகிறது. தன்னுடலை கடந்து ஒரு மீ உடலை அடைகிறான். முருகபூபதி இவ்வகையான பண்பாட்டு கூறுகளை உள்வாங்க வேண்டியது நடிகனுக்கு அவசியம் என்கிறார். சடங்குகள், விழாவின் வழியாக வெவ்வேறு உயிரினங்களை நடிக்கும் வழக்கம் உண்டு. குலசேகரப்பட்டணம் தசரா, எஹுதி மெனுகின், சைபீரிய ஷமன்கள் என பல்வேறு உதாரணங்கள் வழி கலையின் உன்னதப் பாதையை கைகொள்வதைப் பேசுகிறது. நாடகம்- நடிப்பு என்பதற்கு அப்பால் கலை குறித்தான தீவிரபார்வையை அளிப்பவையாக முருகபூபதியின் கட்டுரையில் உள்ள நிகழ்வுகள் உள்ளன. நடிகனின் உடல் அவனைக் காட்டிலும் பிரம்மாண்டமானது. அவனில் அவனுக்கு அன்னியமானவற்றை கூட நிகழ அனுமதிப்பது. குருதி பீறிட நாக்கை மேடையிலேயே துண்டித்துக் கொள்கிறார் மாரியப்ப சாமிகள். சனீஸ்வரனாக வேடம் புனைந்து ஒப்பனை கலைக்காமல் தோன்றும்போது அவரைக் காணும் ஒரு பெண் கிணற்றுள் விழுந்து மரிக்கிறாள். குற்ற உணர்வுகொண்டு ஆண்டியாகி அலைகிறார் சங்கரதாஸ் சாமிகள். விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாடகங்களின், பாடல்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு சக்தியைக்கொண்ட கலைஞர்களின் பாதையிலிருந்துதான் இன்றைய நடிகர்களின் அரசியல் களம் எழுந்திருக்க வேண்டும்’ என்பது சுவாரசியமான கூற்று. ’தொன்மம் என்பது நம் நாவுகளில், நினைவுகளில், உடல்களில், நிலத்தில் வாழும் வாழ்வியல் கலை. பல்முனைகளைக் கொண்ட வேர்ப்பாதைகள் அது.’ என்று எழுதுகிறார். நாடக நடிகன் வெறுமே வசனங்களை அர்த்தப்படுத்துபவன் அல்ல என்பதையே இக்கட்டுரையில் அழுத்தமாக சொல்கிறார். நவீன சந்தை மனிதனிடம் ‘நார்சிச’ போக்கு அதிகரித்துக்கொண்டே உள்ளது. ஒருவகையில் இந்திய பண்பாட்டில் படைப்பாளன் தன்னை முன்னிறுத்தியதில்லை படைப்பையே முன்னிறுத்தியிருக்கிறான். ‘மனித மையவாதத்தின்’ மீதான ஆழமான விமர்சனம் வெளிப்படுகிறது. இவ்வகையான மனப்போக்கு வேறு சில கட்டுரைகளிலும் தொனிக்கின்றன. நவீன இலக்கியத்தின் பிறப்பும் வளர்சிதை மாற்றமும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நெருக்கமாக தொடர்புடையது. அவை உருவாகி வந்த தத்துவப் பின்புலத்துடன் நெருக்கமாக ஊடாடுவது. குடும்பம், அரசு என அமைப்புகளில் நம்பிக்கை இழந்த அல்லது கைவிடப்படுவதாக உணர்வதே நவீனத்துவ எழுத்தின் ஆதார உணர்வு. கூரைகள் அற்று நிற்கும் தனிமனிதன் தன் ஆழங்களைத் துழாவிக் காண அவனுக்கோர் ஆடி தேவையாய் இருக்கிறது. பின் நவீனத்துவ மனிதன் ஆடியில் கல்லெறிந்து உடைத்துவிட்டான். உடைத்தபின்னரும் சிதறிய தன் சுயத்தின் ஒருநூறு சில்லுகளில் ஆழ்ந்திருக்கிறான். இவைத் தவிர்க்க முடியாத உலகபோக்கு எனும் எண்ணம் தோன்றியது. பல்வேறு நிகழ்சிகளை நினைவுக்கூர்வதன் வழியாக கலையின் பித்துநிலையை, அதன் ஈடுபாட்டை நிலைநிறுத்தும் முக்கியமான கட்டுரை. அறிவார்தமாகவும் உணர்சிகரமாகவும் வாசகனின் மனதில் கிளைபரப்பி தீவிரம் அவனைப் பற்றிக்கொள்ளும்.

‘பீனா பௌஷ் (Pina Boush): சிகரட் புகையின் ஊடே அதிரும் நடனம்’ எனும் எழில் சின்னத்தம்பியின் கட்டுரை ஜெர்மனியின் நடன நாடக மேதையை அறிமுகப் படுத்தும் பணியை செவ்வனே செய்கிறது. ‘தேவதையின் மேன்மையையும் கொடூர வன்மையையும் ஒருங்கே எழுப்ப முடியும். அவர் அறிமுகப்படுத்திய நடன நாடகங்கள் ஆழ்மன அமைதியையும் முழுக் குழப்ப நிலையையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை.’ எனும் குறிப்பும் மேடையில் பெரிய உயிருள்ள முதலைகளுக்கு ஊன் துண்டுகள் நீட்டிக்கொண்டிருக்கும் புகைப்படமும் அவரை விளக்குவதாக தோன்றியது. ஒரு புதிய கலைஞன் அறிமுகப்படுத்தப்படும்போது அவனுடைய தனித்துவமும், கலைக் கேள்விகளும், ஒட்டுமொத்த கலைக் களத்தில் அவனுடைய பங்களிப்பு எவை ஆகியன சேர்த்து வெளிப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. அவருடைய கலைக் கேள்விகளும், அதை அடைவதற்கு அவர் பின்பற்றும் வழிமுறைகளும் புதிதாக இருந்தன. மேலும் சபரிநாதன் தொகுத்த நேர்காணல் அவருடைய ஆளுமையை வெளிக்கொணர்வதாக உள்ளது. இவையிரண்டும் இணைந்து ஒரு முழுமைப் பார்வை அளிப்பதாக உள்ளது. 

ராம் ராஜ் எழுதிய ‘ஹொணே ஏத்தினா’ ஒருவகையில் முருகபூபதியின் கட்டுரையில் அவர் என்ன கோரினாரோ அதை செயலாக்கம் புரிவதற்கான ஒரு முயற்சி. அவரே கவனப்படுத்துவது போல் “ஒரு நாடகக்காரனாக அச்சடங்குகளை மரியாதையுடனும் மதிப்போடும் உற்று நோக்கும்போது நாடகத்திற்கான நிகழ்த்து வடிவத்துடன் அவை இருப்பதை உணர முடிந்தது.” இவை ஒரு குழு நிகழ்த்துகளாக உள்ளன என்கிறார். கலைக்கான கச்சா பொருட்களை தேடி அலையும் ஒரு தன்மை. நீலகிரி தொல்குடிகளில் ஒன்றான ‘படுகு தொரையவின்’ மரணச் சடங்கை ஆவணப் படுத்துகிறார். மரண தினத்தன்று ஊரில் யாரும் வேலைக்குச் செல்வதில்லை. ஒருமணிநேரம் மட்டுமே வீட்டில் இறந்தவரின் உடல் வைக்கப்படுகிறது. பின்னர் ஒரு மூங்கில் கட்டுமானத்தை ஏற்படுத்தி (குடிக்கட்டு) அதில் உடலைக் கிடத்துகிறார்கள். செலவு பிரித்துகொள்ளப் படுகிறது. அவர்களுடைய சடங்குகளில் முக்கியமானது ‘பாவங்களை நீக்குதல்’. சமவெளி மனிதர்களின் பாவ நம்பிக்கைகளுக்கும் தொல்குடிகளின் பாவத்தொகை நம்பிக்கைகளும் வெவ்வேறானவை. மண்ணை வெட்டிய பாவம், பசுவை உதைத்த பாவம், செடியை பிடுங்கிய பாவம், காய்ந்த சருகுகளை, இலைகளை, குச்சிகளை பெருக்கிய பாவம் என இவை மனிதன் இயற்கைக்கு எதிராக நிகழ்த்தும் வன்முறைகளுக்காக பாவமன்னிப்பு கோருவதாகும்.  

இசை நடனக் கலைஞர் அகிலா எழுதிய ‘மாற்றுடலின் சமகாலப் பயணம்’ மரபான இசை மற்றும் நாட்டிய பயிற்சியடைந்த ஒருவர் மரபுக் கூறுகளை தக்கவைத்தபடி தனக்கான தனித்துவமான கலைவடிவை அடைய முனைவதன் பயணத்தைச் சொல்கிறது. பீனா அடிப்படையில் ஒரு பாலே நடனக்காரர் ஆனால் அதிலிருந்து விலகி தனக்கென தனித்துவமான ஒரு கலை வடிவை தேர்கிறார். ஏறத்தாழ அத்தகைய முயற்சி என்று அகிலாவின் கலைப் பயணத்தை சொல்லலாம். இசைக்கு நடனம் என்பதொரு நிலை இசையை உள்வாங்கி நடனமாடுதல் என்பதொரு நிலை. இசையும் நடனமும் ஒன்றென ஆதல். பறையிசையுடன் சேர்ந்து ஆடலும் உள்ளதை அகிலா நினைவுபடுத்துகிறார். மைக்கேல் ஜாக்சனின் இயக்க இசை உடல் (dynamic musical body) அவர் மீது இளம் வயதிலேயே ஆளுகை செலுத்தியதை பதிவு செய்கிறார். தொடர் பயணங்களின் ஊடாக அவர் கண்டுகொள்வது ‘உணர்ச்சி வெளிப்பாடான கதை சொல்லும் கருவியாக உடல் பார்க்கப்படவில்லை. உடலே முதன்மை உள்ளடக்கமாக இருந்தது’ யோகத்தின் துணையோடு உடல்சார்ந்த தன்னறிவை பெருக்குகிறார். ஒட்டுமொத்தமாக ‘உடலின் நுண் விழிகளைத் திறப்பதன் மூலம் மனதின் நுண்ணுணர்வுகளும் திறக்கின்றன. அந்நுண்ணுனர்வுகளால் இயற்கையின் பேராற்றலையும், மனித ஆற்றலின் எல்லைகளையும் உணர்ந்து, அற உணர்வுகளின் வாயிலாக இயற்கையின் மீதும், மானுடத்தின் மீதும் கொண்டிருக்கும் அன்போடும், மதிப்போடும், சமகாலத் துடிப்பை உடலியக்கத்தில் ஒலிப்பதே இந்த மாற்றுடலின் சமகாலப் பயணம்’ என முடிக்கிறார். 

எழில் நல்லதம்பி எழுதிய மற்றொரு கட்டுரை ‘பால்கோகினும் தகித்தியின் ஆவிகளும்’. ஃபிரெஞ்சு ஆதிக்கத்திற்கு உள்ளான பாலினேசிய தீவுக்கூட்டங்களில் ஒன்றான தகிதியில் ஓவியர் பால் கோகின் வாழ்ந்ததைப் பற்றியும் அவருடைய ஓவியம் உருவான விதங்கள் குறித்தும் எழுதி இருக்கும் நல்ல கட்டுரை. கட்டுரை என்பதை விடவும் பால் கோகினின் எழுத்துக்களில் இருந்து தேர்ந்தேடுத்தப்பட்ட பகுதிகள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. மவோரி பழங்குடியினருடன் சேர்ந்து வாழ்கிறார். ஓவியங்கள் தீட்டுகிறார். ஒரு இளம் மனைவியை கண்டடைகிறார். அவருடைய அண்டைவீட்டுக்கார இளைஞனுடன் நூக்கமரத்துண்டு தேடி மலை ஏறுகிறார். அந்த இளைஞன் அவரைப் பார்த்து பிறருக்கு மிகவும் உபயோகமானவன் எனச் சொல்கிறான். அப்போது ‘இந்த உலகத்தில் என்னை உபயோகமானவன் என்று முதன்முதலாய் சொன்னவன் டோடீபா மட்டும்தான். கலைஞன் மனித இனத்திற்கே உபயோகமானவன்.’ முருகபூபதி, ராம் ராஜ், பால் கோகின் கட்டுரைகளை இணைக்கும் புள்ளி என்பது கலைகளுக்கான வேர்களைத் தேடிச் செல்வது எனச் சொல்லலாம். நவீன நாகரீகத்தின் அழுத்தங்களை மீறி தன்னை கண்டடைய, பின் காலனிய காலத்தில் என்னவழி என்று யோசிக்கும்போது தொல்குடிகளை இவர்கள் இயல்பாக சென்று அடைகிறார்கள். கலை தன்னை மீறுவதுதான். பேராற்றலின் ஊடகமாக தன்னை மாற்றிக்கொள்வதுதான். அதற்கு கற்றவற்றை துறந்து காட்டுமிராண்டியாக வேண்டி ஐரோப்பாவின் பண்பாட்டு உச்சத்திலிருந்த ஃபிரெஞ்சு தேசத்திலிருந்து சிறிய தீவிற்கு வருகிறார் கோகின். அகிலாவின் கட்டுரையையும் சேர்த்துக்கொண்டால் இக்கட்டுரைகளின் மையச் சரடு என்பது தன் சுயத்தை, தன்னுடலை கலைக்கான ஊடகமாக ஆக்குவது எப்படி என்பதே. பால் கோகினின் வாழ்வை வாசிக்கும்போது அவன் தொல்குடி மனைவியை, அங்குள்ள வாழ்வை ஓவியமாக்கி விற்பனைக்காக ஃபிரான்சில் இருக்கும் தன் மனைவிக்கு உண்மையை மறைத்து வேறு குறிப்புகளுடன் அனுப்புகிறான். அப்பழங்குடி மக்கள் கேட்கிறார்கள், ஏன் நீங்கள் எங்களோடு பழகி எங்களை விட்டுச் செல்கிறீர்கள் என. கோகினும் கப்பலில் புறப்பட்டுச் செல்கிறார், தன் மனைவியை அங்கேயே விட்டுவிட்டு, தன் தேசத்திற்கு. தற்காலத்தில் தொல்குடி வாழ்வும் அவர்களின் சடங்குகளும் கூட பண்டமாக்கப்படுகிறதா என்றொரு கேள்வி நெஞ்சை அறுவுகிறது. கலைஞன் என்றுமே கழைக் கூத்தாடித்தான். ஊசலாட்டங்களை சமன்படுத்த முயன்று ஊசலாடிக்கொண்டே இருப்பவன் என்பதைத் தவிர வேறு பதில்கள் இல்லை. 


பினுக்குமாரின் ‘அரங்காடும் ஒளியிருள்’ வாசகனாக எனக்கு புதிய வாசிப்பை அளித்தது. மேடை நாடக ஒளியமைப்பில் இத்தனை நுட்பங்களும் கவனமும் உண்டு என்பதை அறிந்துகொண்டேன். நுண்ணுணர்வும் அர்ப்பணிப்பும் இணையும்போது எதையும் கலையாக்க முடியும். அரங்க ஒளியமைப்பும் முக்கியமான கலை.  துவக்கத்தில் இருள் ஒளி சார்ந்த பகுதிகள் கவித்துவமானவை. ‘ஒளியைப் பாய்ச்சுவதல்ல நிழலையும் நிழலுருவங்களையும் முப்பரிமாண பிம்பங்களையும் உருவாக்குவதே அரங்க ஒளியமைப்பின் அடிப்படை என்பது கோட்பாடாய் பரிணமிக்கிறது. இருட்டுக்கு மேடையில் இடம் கொடுக்காது போகையில் காட்சிகள் உயிரற்றுப் போய் தட்டையான உருவங்களாய்த் தோன்றுகின்றன. இருட்டே ஒளியை உணரச் செய்வதால் பார்க்கப்படும் ஒளி இருட்டை (நிழலை) உருவாக்குவதாய் இருக்க வேண்டும்.’ இவ்வரிகள் ஒரு முக்கியமான மேற்கோளாக எப்போதும் தங்கி இருக்கும். இலக்கியத்திலும் ஒளியைப் பேசும், இருளை பேசும் ஆக்கங்களுக்கு பொருத்திப் பார்க்க முடியும். ‘கலைகளின் பிரசவம் இருட்டிலேயே நிகழ்கிறது’ என்பது மற்றுமொரு கூர்மையான வரி. இந்தக் கட்டுரை ஒளியமைப்பு சார்ந்தும் பொதுவாக கலை பார்வை குறித்தும் பல்வேறு துல்லிய அவதானிப்புகளை உள்ளடக்கியது. 

கார்கால இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளில் பிரவீன் பஃறுளி பால சுப்பிரமணியன் பொன்ராஜ் சிறுகதைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.’புனைவு ஓர் அறிவுவித வினைபுரிவாக; மனிதவாத மையம் விலகிய சாத்தியங்கள்’. முருகபூபதியின் கருத்தையொட்டி நவீன மனிதமையவாத எழுத்தின் நார்சிச தன்பித்தை ஒரு முக்கிய சிக்கலாக பிரவீன் காண்கிறார். ‘நவீனத்துவத்தின் மனிதமுதல்வாத மையத்திலிருந்து சலிக்கச் சலிக்க உற்பத்தி செய்யப்பட யதார்த்தவாதப் பெருந்தொகுதிகள், மனிதன் மட்டுமே நிரம்பியிருக்கும் உலகியல்- வாழ்வியல் புனைவுகள் யாவும் மனிதனின் அதீதத் தன்னின சுயப்பித்தின் நார்சிசப் பிறழ்ச்சியின் சாட்சியாகின்றன. காலனியத்துக்கும் நவீனத்துவத்துக்கும் அந்தப் பக்கம் போய்விட்டால் வரலாற்றுக் காலத்துக்கும் முன்பிருந்தே நம் தொல் புனைவுகள், ஆதி இனக்குழுக் கதையாடல்கள் யாவும் அசேதனங்களோடும், அமனிதமான பிரபஞ்சக் கூறுகளோடும் தீராத உரையாடல் கொண்டவையே.” என்கிறார். மேலும் லத்தீன் அமெரிக்க சிறுகதை வருகையின் போது கட்டற்ற புனைவுவெளி பற்றிய கற்பனைகள் இருந்தன. ஆனால் மீண்டும் எழுத்தாளனை அனுபவ வட்டத்திற்குள் சுருங்கச் செய்வதே இப்போது நிகழ்ந்துள்ளது என்கிறார். பாலாவின் கதைகளின் அடிப்படை இயல்புகள் என ‘கனவுநிலை, அறிவார்த்தம், தத்துவமை, பரிசோதனை’ ஆகிய நான்கு அம்சங்கள் உள்ளன. அதன் காரணமாகவே தற்கால யதார்த்தவாத எழுத்துக்களில் இருந்து வெகுவாக விலகியும் உள்ளது. பாலாவின் கதைகளை அதன் இயங்குதளம் சார்ந்து இரண்டாக வகுத்துள்ளார் பிரவீன். ‘தந்திகள்’ ‘உடைந்துபோன பூர்ஷ்வா கனவு’ போன்ற அனுபவ மற்றும் யதார்த்த தளம் சார்ந்தவை. மற்றொன்று ‘பிரமிடுகள் அளக்கும் தவளை’ ‘பனிரெண்டு மரணங்களின் துயர் மிகுந்த தொகுப்பேடு’ ‘வலை’ போன்ற மிகு புனைவும் கனவுத் தன்மையும் கொண்டதாக உள்ளன. பாலாவின் முதல் வகை கதைகளில் பண்பாட்டு உடல் என எதுவும் இருப்பதில்லை. ‘மேற்கத்திய எக்ஸ்ப்ளோரர்கள் போன்ற குணாம்சம்’ என சரியாக அடையாளம் காண்கிறார். மேலும் ‘புனைவு என்பது தப்பித்துச் செல்லும் வழித்தடமாகத்தான் பா.பொவின் கதைகளில் இருக்கிறது.’ என்கிறார். 

இரண்டாம் வகையான கதைகளைப் பற்றி பிரவீனின் பார்வை நுண்ணியது. பாலாவின் கதையில் பெருவெடிப்பை ஒரு துப்பாக்கிச் சூடாக படிமம் ஆக்கியிருப்பது பிரபஞ்சவியலில் வன்முறைக்கு உள்ளார்ந்த இடமுண்டு என்பதை காட்டுவதாக உள்ளது என்கிறார். மேலும் ‘புனைவு வாழ்வியலைப் பிழிந்தளிக்க அல்ல அது அடிப்படையில் வாழ்விலிருந்து தன்னைச் சேய்மைப்படுத்த வைக்கும் ஒரு விளையாட்டு என்ற ஒரு அம்சம்.’ என்பதும் பாலாவின் எழுத்துக்களைப் பற்றிய பொருத்தமான அவதானிப்பு. குமார் அம்பாயிரத்தின் கதைகளோடு ஒப்பிட்டு பாலாவின் கதைகளில் ஒரு அறிவு ஜீவித்தன்மை உள்ளதை பிரவீன் சுட்டிக் காட்டுகிறார். கட்டுரையின் பெரும்பகுதி சென்ற ஆண்டு கல்குதிரை இதழில் வெளிவந்த ‘பிரமிடுகளை அளக்கும் தவளை’ கதை பற்றியது. வோல்டேரின் ‘மைக்ரோமேகாசுடன்’ ஒப்பிட்டு மிக நல்ல வாசிப்பை அளித்துள்ளார் பிரவீன். 

‘தியானமும் உறக்கமும் இல்லாமல் நத்தை பொறுக்கும் புத்தன்’  எனும் தலைப்பில் இளங்கோ கிருஷ்ணன் வெய்யிலின் ‘மகிழ்ச்சியான பன்றிக்குட்டி’ பற்றி எழுதியிருக்கும் கட்டுரை சிறப்பான வாசிப்பனுபவத்தை அளித்தது. வெய்யிலின் கவிதைகளை பற்றி மட்டுமின்றி பொதுவாகவே கவிதை போக்குகள் குறித்து அசலான அவதானிப்புகளை இக்கட்டுரை கொண்டுள்ளது. 90 களுக்கு பின்பான கவிதை மரபு என்பது எப்படி அதற்கு முந்தைய ‘எழுத்து’ vs ‘வானம்பாடி’ எனும் இரு எதிரெதிர் மரபுகளின் சமரச புள்ளியில் கிளைத்து வந்தது என்பதை பதிவு செய்கிறார். கவிதைகளின் ஆழத்தில் இருப்பது ஒரு நிரந்தர மௌனம் என்பதே செவ்வியல்வாதத்தின் நம்பிக்கை. முடிவற்ற மோதல்களை சமன் செய்ய முயல்கிறது. ஆகவே அதை கட்டுபடுத்த முயல்கிறது. மாறாக நாட்டார் பண்புகள் கரடு முரடான பாதைகளை தேர்கிறது. அதன் ஆழத்தில் இருப்பது ஒரு மௌனம் அல்ல. ‘மௌனம் ஓய்ந்த நிலையில் இருந்து தொடங்கும் நடனம். வெடித்துச் சிதற தயாராக இருக்கும் இயக்கம்.’90 களுக்கு பின்பான தமிழ் கவிதையில் செவ்வியல் தன்மை குறைந்து இந்த நாட்டார் பண்பை கைக்கொண்டது என்பதால் ஆழத்து மௌனத்தின் இடத்தில் நடனம் குடிகொண்டது என்கிறார் இளங்கோ கிருஷ்ணன். மற்றுமொரு முக்கிய கூறாக ‘தேய்ந்து தன்னில் உறையும் தனிமையை அசைத்து மற்றமையில் காணும் அனுபவமாக மாற்றுகிறது.’ என்கிறார். மேலும் நாட்டார் தன்மை என்பதும் கூட அரசியல் தளத்தில் தான் அழகியல் தளத்தில் அல்ல என தெளிவுபடுத்துகிறார். 

வெய்யிலின் கவிதைகளைப் பற்றி எழுதும்போது அவர் தன்னுடைய கவிதைகளில் அரசியல் சரிநிலைகள் இருக்க வேண்டும் என்று விரும்புபவர் என்கிறார். அரசியல் சரிநிலைகளுக்காகவே கவிதை எழதுவது என்பது வேறு என்றும் அடையாளம் காட்டுகிறார். காலத்தில் பற்றி எரியும் சிக்கலைப் பற்றி எழுதுவதற்கு ஒரு குரல் தேவை என்றாலும். இதன் எல்லைகள் உண்டு என்பதை பாரதியின் கவிதைகளைக் கொண்டு உணர்த்துகிறார் இளங்கோ. வெய்யிலை ‘பின் காலனிய கவிஞன்’ என்கிறார். தீவிரமும் விளையாட்டுதன்மையும் அவருடைய கவிதைகளில் ஒருங்கே அமைகிறது என்கிறார். வெய்யிலின் கவிதைகள் மட்டுமின்றி கவிதை குறித்து பொதுவான பார்வையை அளிக்கிறது. விவாதித்து வளர்த்தெடுக்க பல்வேறு புள்ளிகளை அளிக்கிறது. கலைஞன் காலத்தின் குரல் மட்டும் தானா? அவனுடைய தனித்தன்மைகள் என்ன? இப்படியான கேள்விகள் வேர்கொண்டு வளர்கிறது.      

ஆனந்த் சோலையப்பன் கறுத்தடையானின் ‘ஆதாளி’ குறித்து எழுதிய சுருக்கமான கட்டுரையில் ‘தனிமையும், உள் ஒடுங்கிய நிலையுமே கறுத்தடையானின் சாரம்’ என்கிறார். அவரிடம் தன்னையே துன்புறுத்தி இன்பம் காணும் மனநிலை உள்ளது என அவதானிக்கிறார். ‘அனைத்து உணர்வுகளையும் தனக்குத்தானே சுகிப்பதால்தான் என்னவோ காமம் கூட வீச்சு புரோட்டாவாகவே வாய்க்கிறது’ என அவருடைய எல்லையைச் சொல்லும் ஆனந்த் தனிமை, வெறுமை மற்றும் நாட்டார் தெய்வங்களை அவருடைய பலமாகவும் அடையாளம் காண்கிறார். குணா கந்தசாமி சுருக்கமாக எழுதி இருக்கும் ‘கல்லாக உறைந்த காலத்தின் கதைகள்’ கட்டுரையில் யதார்த்தனின் ‘மெடுசாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம்’ தொகுப்பு பேசு பொருளாகிறது. பல கதைகளும் சிறுகதையின் முடிப்பு என்ற இலக்கணத்திற்குள் நின்று எழுதப்பட்ட தோற்றத்தை தருகின்றன. இவ்வகையான தொழில்நுட்பத்தை தவிர்த்து கதை, தன் உலகத்துக்குள்ளிருந்து தன்னியல்பான முடிவை அடைய முயற்சிக்க வேண்டும் என்பதில் ஒரு சிறுகதை எழுத்தாளனாக எனக்கு விருப்பும் நோக்கும் உள்ளன’ என்கிறார். சிதைக்கப்படும் ஆன்மாக்களின், பெண்களின் சாட்சியங்களாக யதார்த்தனின் கதைகள் உள்ளன என்கிறார். ‘அறிவார்த்தம், உணர்வுநிலை மற்றும் பகடி ஆகிய மூன்றும் கூடிய கதைகளை அவர் எழுத முயற்சிப்பதை ஊகிக்க முடிகிறது’ என்கிறார். 

சா.தேவதாஸ் லக்ஷ்மி சிவகுமாரின் லங்கூர் தொகுப்பைப் பற்றி ‘குரங்கும் யானையும் குழந்தையும்’ என்றொரு கட்டுரை எழுதி இருக்கிறார். எழுத்து மற்றும் இலக்கியம் சார்ந்து பன்முக அணுகுமுறை கொண்டவர் என சொல்கிறார். ‘அம்புப் படுக்கை’ பற்றிய அதீதனின் கட்டுரை மொத்த கதைகளையும் ‘சொல்லல் முறையிலும் வடிவத்திலும் சிறப்பான கதைகள்’ ‘கருப்பொருள் சிறப்புற அமைந்தவை’ மற்றும் ‘மேற்சொன்ன இரண்டும் ஓரளவே அமையப்பெற்றவை’ என மூன்றாக வகுக்கிறது. ‘கதைசொல்லி வேறெங்கோ இருக்கும் தன் சுயத்திடம் பிரதியின் வழியே உரையாடும் நிகழ்வே கதைகளாக உருக்கொள்கின்றன’ என்கிறார். ஒவ்வொரு கதையைப் பற்றியும் தனித்தனியாக தன் அவதானிப்புகளை வைத்துள்ளார். ‘டொரினா’ பற்றிய கட்டுரையை நானே எழுதி இருப்பதால் அதை விமர்சனத்திற்கு பரிசீலிக்கவில்லை. மணிமாறன் ‘மரணத்தின் துடிப் பாடல்கள்’ என நரனின் கேசம் குறித்து எழுதி இருக்கும் கட்டுரையும் விமர்சன அம்சம் ஏதுமற்றதாக உள்ளது. ‘மௌனியும் பித்தனும் பரிட்சித்த கதை பொம்மைகளின் உதிர்ந்த சிதில்களின் நுண் துணுக்குகளில் இருந்து உருவாகிப் படர்பவையே கதை’ என்கிறார். நரன் ‘யாவரின் கதைகளையும் தன் கதையாக்குவதும், தன் கதையை யாவருக்குமாக்குவதும் உருமாற்றுகிறார்’ என்று எழுதுகிறார். ‘எல்லாவற்றையும் ஒன்றின் குறியீடாக்கிப் பார்க்கும் பித்துநிலை எல்லோருக்கும் ஏதோ ஒருகணத்தில் வாய்க்கிறது. அந்தக் கணத்தின் நுண் புள்ளிகளை கண்டடைபவனே கலைஞன்’ எனும் வரி யோசிக்கத் தூண்டியது. ‘கொம்மை’ பற்றி வடகரை ரவிச்சந்திரன் எழுதியிருக்கும் கட்டுரை பாரதத்தின் வெவ்வேறு வடிவ சாத்தியங்களை சுட்டிக்காட்டுகிறது. 

 முபீன் சாதிகாவின் கர்ட் வன்னேகாட்டின் ஸ்லாட்டர் ஹவுஸ் 5 பற்றிய கட்டுரை விரிவான மேற்கோள்கள் மற்றும் அடிக்குறிப்புகளுடன் வெளிவந்துள்ளது. பல்வேறு உப தலைப்புகளுடன் வெளிவந்துள்ளதால் ஒரு முழு சித்திரத்தை அடைவதில் குழப்பம் இருக்கிறது என்பதை இக்கட்டுரையின் மீதான விமர்சனமாக கொள்ளலாம். எனினும் அதையும் தாண்டி நாவலின் அரசியலை, பாத்திரங்களை நுண்மையுடன் வளர்த்தெடுக்கிறது இக்கட்டுரை. போர் உடல் vs  இயல் உடல் எனும் இருமையின் வாயிலாக இயல் உடலை மீட்கும் முயற்சியாக இந்நாவலை குறிக்கிறார் முபீன் சாதிகா. வரலாற்றில் நாம் அறிந்த ஃபாசிசம் என்பது ஒன்று அதை அழிக்க கைகொண்ட வழிமுறையும் ஃபாசிசமே என இந்நாவல் பேசுகிறது என்கிறார். ‘போர் இயந்திரமும்’ அதிகாரமும் எவர் கையை அடைகிறது என்பதை பொறுத்தே நீதியும் ஃபாசிசமும் என்பது ஒரு நல்ல கோணம். 


சபரியின் நீர்ச்சாரி தொகுதியை பற்றிய கட்டுரையில் பின் நவீனத்துவத்தின் பங்களிப்பு என்பது நவீனத்துவத்தின் இறுக்கத்தை கடக்க உதவி இருக்கிறது. எனினும் தற்போது பின் நவீனத்துவத்திற்கு அப்பால் பல முயற்சிகள்  உலகெங்கும் நிகழ்ந்து வருகிறது என்கிறார். செவ்வியளுக்கு இலக்கு இருந்தது, நவீனத்துவத்திற்கு தாக்குதல் இலக்கு இருந்தது. பின் நவீனத்துவத்தில் விளையாட்டு மட்டுமே எஞ்சியுள்ளது.மீ பொருண்மையின் தளத்தை முரண்நகை அடைந்துள்ளது என்கிறார். இத்தொகுதியின் கவிதைகள் பழையபாணி கவிதைகள் போல் நிதானமும் மௌனமும் நிறைந்தவை என்பதே அதன் தனித்தன்மை என்கிறார். நவீன கவிதைகைளில் அரிதாக கிடைக்கும் அனுபவமான தயக்கமற்ற தன்வெளிப்பாடு இக்கவிதைகளில் நிகழ்கிறது என்கிறார்.கவிதையை பற்றிய விமர்சன கட்டுரை ஒரு கவிஞன் எழுதும்போது அதிலும் இயல்பான கவித்துவம் அப்பிக்கொள்கிறது. இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம் ‘சாமான்கள் அதிகம் இல்லாத வீட்டில் உரையாடல்கள் ஆழ்ந்து ஒலிப்பது போல்’ பொருண்மை பெருக்கமில்லாத இக்கவிதைகளில் சன்னமான குரலும் ஆழ்ந்து ஒலிக்கின்றது என்கிறார். மற்றோர் இடத்தில் கவிதையின் வரியமைப்பில் உள்ள சிடுக்குகளை பற்றி சொல்லும்போது பாடல் கேட்கும் ஆர்வத்துடன் இருக்கும்போது சிக்கில் கிடக்கும் ஹெட்போனை நேராக்குவது என்றொரு உவமை தோன்றுகிறது. சபரி சம்யுக்தா மாயா கவிதை தொகுப்பைப் பற்றி எழுதிய கட்டுரையில் சில தீர்க்கமான அவதானிப்புகளை வைக்கிறார். தமிழ் பண்பாடு என்பதே பெண் மையத்தன்மை கொண்டது என்பதொரு விவாதத்திற்குரிய சரியான புள்ளி. பெண் கவிதைகளில் ‘நீ’ சுட்டல் ஆண் கவிதைகளை காட்டிலும் அதிகமென்பது மற்றுமொரு நல்ல கவனிப்பு. இத்தகைய கவிதைகளின் பார்வை என்பது ‘வாழ்வின் பொருளை உறவில் தேடுவது தானோ’ என்றொரு கேள்வியை எழுப்புகிறார். டேவிட் ஷுல்மேன் மேற்கோள் வழியாக ‘விரலிடுக்கில் நழுவச் சாத்தியமான மணலிழை போன்ற உணர் நிலைகளை எடுத்துச்சொல்ல ஏற்றதொரு மொழி தமிழ்” என்பதை சம்யுக்தா மாயாவின் கவிதைகளுடன் பொருத்தி காட்டுகிறார். கவிதையின் ஆண் தன்மை பெண் தன்மை பற்றிய கூற்றும் அதன் மீதான விமர்சன சத்தியமும் அதற்கான விளக்கமும் சிந்தனையில் விரித்தெடுக்கபட வேண்டியவை. 

வடகரை ரவிச்சந்திரன் எழுதிய பூமணியின் 'கொம்மை' பற்றிய கட்டுரை முதலில் எங்கோ வாசித்த உணர்வை ஏற்படுத்தியது. பிறகுதான் அடிக்குறிப்பில் எனது வலைதள சுட்டி அளிக்கப்பட்டதை கவனித்தேன். .

ஒட்டுமொத்தமாக இக்கட்டுரைகள் செறிவான வாசிப்பனுபவத்தை அளித்தன. 




   


Wednesday, August 5, 2020

கிளாரிஸ் லிஸ்பெக்டர்- மூன்று குறுங்கதைகள்


கிளாரிஸ் லிஸ்பெக்டர் (1920-1977) பிரேசிலை சேர்ந்த பெண் எழுத்தாளர். லத்தீன் அமெரிக்க எழுத்துலகில் மிக முக்கியமான ஆளுமையாக கருதப்படுபவர். அவருடைய மொத்த தொகுப்பிலிருந்து மூன்று கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். போர்த்துகீசிய மொழியிலிருந்து மொழியாக்கம் செய்தவர் கத்தரீனா டாட்சன். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு செய்தவர் நரோபா.    
2020 கல்குதிரை இதழில் வெளிவந்துள்ளது. 

Clarice Lispector novel published in Egypt - ANBA News Agency
 

நூற்றாண்டு கால மன்னிப்பு 

நீங்கள் இதுவரை திருடியதே இல்லை என்றால்  என்னை புரிந்துகொள்ள இயலாது. அதுவும் நீங்கள் ரோஜாக்களை திருடியதே இல்லை என்றால் என்னை ஒருகாலும் புரிந்துகொள்ள இயலாது. நான் என் பால்யத்தில் ரோஜாக்களை திருடியிருக்கிறேன்.  

ரெசிஃபியில் எத்தனையோ தெருக்கள் இருந்தன, செல்வந்தர்களின் தெருக்கள், விசாலமான  தோட்டங்களுக்கு மத்தியிலே இருக்கும் மாளிகைளின் வரிசையால் ஆனவை. எனது பால்ய சிநேகிதியும் நானும் இந்த மாளிகைகள் எவருடையது என தீர்மானிக்கும் விளையாட்டில்  அடிக்கடி ஈடுபடுவோம். “அந்த வெள்ளை மாளிகை என்னுடையது.” “இல்லை, வெளுப்பானவை எல்லாம் என்னுடையவை என முன்னரே  சொல்லியிருக்கிறேன்.” “ஆனால் இது முழுக்க வெளுப்பாக இல்லையே. அதற்கு பச்சைநிற சாளரங்கள் உள்ளனவே.”

பல சமயங்களில் எங்கள் முகங்கள் இரும்பு கம்பி வேலிகளில் பதிய நெடுநேரம் வெறித்திருப்போம்.

இப்படித்தான் அது தொடங்கியது. “இது என் வீடு” என்று விளையாடிக் கொண்டிருந்த ஒரு தருணத்தில், நாங்கள் சிறுகோட்டையைப் போலிருந்த மாளிகைக்கு முன் நின்றிருந்தோம். அதன் பின்புறம் பெரிய பழத்தோட்டம் இருந்ததை காண முடிந்தது, முன்புறத்தில் நன்கு பராமரிக்கப்பட்ட மலர் வெளியில் மலர்ச்  செடிகள் நடப்பட்டிருந்தன.    

எனினும், மலர் வெளியில் ஒளிரும் இளஞ்சிவப்பில் அலர்ந்து கொண்டிருந்த ஒற்றை ரோஜா தனித்து தெரிந்தது. இன்னும் முழுதாக மலர்ந்திடாத செருக்கு மிகுந்த ரோஜாவை பிரியத்துடன் கண்ணிமைக்காது சொல்லற்று திகைத்து பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு அது நிகழ்ந்தது, இதயத்தின் அடியாழத்திலிருந்து நான் அந்த மலரை எனக்கென விழைந்தேன்.  எனக்கு அது வேண்டும், ஒ, எனக்கு அது எந்த அளவிற்கு வேண்டியதாய் இருந்தது! ஆனால் அது எனக்கு கிடைப்பதற்கு எந்த வழியும் இல்லை. தோட்டக்காரர் அருகிருந்திருந்தால் இந்த ரோஜாவை கேட்டிருப்பேன். கேட்டிருந்தாலும் கூட, தெருப் பிள்ளைகளை வெளியே விரட்டிவிடுவது போல எங்களையும் செய்திருப்பார் என்பதை நன்கறிவேன். தோட்டக்காரர் கண்ணுக்குப் புலப்படவில்லை, எவருமே புலப்படவில்லை. வெயிலின் பொருட்டு சாளரங்கள் அடைக்கப்பட்டிருந்தன. டிராம்கள் கடக்காத, அரிதாக கார்கள் செல்லும் தெருவது. எனது மௌனத்திற்கும் ரோஜாவின் மௌனத்திற்கும் இடையே, எனக்கு மட்டுமே உரிமையுள்ள பொருளை- எனதாக்கிக் கொள்ளவேண்டும் எனும் எனது அவா இருந்தது. நான் அதை பறித்து பற்றிக்கொள்ள முடிய வேண்டும். அதன் மதிமயக்கும் தீவிர வாசனையில் கண்கள் சொக்கி இருளும் வரை அதை நுகர வேண்டும் என்று விழைந்தேன்.

அதற்கு மேலும் என்னால் பொறுக்க முடியவில்லை. ஆவலின் உந்துதலில் உடனடியாக ஒரு திட்டம் என்னில் உருக்கொண்டது. திட்டமிடுவதில் நானொரு நிபுணர் என்பதைப்போல், எனது விளையாட்டு தோழியுடன் சேர்ந்து நிதானமாக ஒரு திட்டத்தை வகுத்தேன். சாளரங்களை நோட்டம் விடுவது அல்லது  தோட்டக்காரர் நெருங்கி வருகிறாரா என கவனிப்பது, தெருவைக் கடந்து செல்லும் சிலரை கண்காணிப்பது என அவளுடைய பங்களிப்பை விளக்கினேன். இதற்கிடையே, திறக்கும்போது எழும் லேசான கிறீச் ஒலியை எதிர்பார்த்து, கொஞ்சமாக துருவேறிய கதவை மெதுவாகத் திறந்தேன். எனது ஒல்லியான குட்டிப்பெண் உடல் கடந்து செல்லும் அளவிற்கே திறந்தேன். வேகமாகவும் ஒசை எழுப்பாமலும் நடந்து மலர் வெளியை சூழ்ந்திருக்கும் சரளைக் கற்களை கடந்தேன். எனது இதயம் ஒருநூறு முறை துடித்த காலத்தில் நான் ரோஜாவை அடைந்திருந்தேன். .

பிறகு, ஒருவழியாக நான் அதன் முன் நின்றிருந்தேன். ஆபத்தான நிலை என்றாலும் கூட அதன் முன் ஒரு நொடி நின்றேன், ஏனெனில் நெருக்கத்தில் இது இன்னும் வசீகரமாக இருந்தது. கடைசியாக, அதன் முட்களில் விரலைக் கீறிக்கொண்டு, விரல்களில் வழிந்த உதிரத்தை உறிஞ்சியபடி அதன் கிளையை முறித்தேன்.    

சட்டென அது முழுமையாக என் கைக்கு வந்துவிட்டது. வாயில்கதவுக்கு திரும்ப ஓடுவதும் ஓசையின்றி இருக்க வேண்டும். ரோஜாவைப் பற்றியபடி, லேசாக திறந்துவைத்திருந்த கதவின் வழியாக வெளியேறினேன். நானும் அந்த ரோஜாவும், இருவருமே வெளிறிப்போயிருந்தோம், அந்த வீட்டைவிட்டு வெகுதொலைவு ஓடினேன். 

            

நான் அந்த ரோஜாவை வைத்துகொண்டு என்ன செய்தேன்? அது என்னுடையது ஆகவே இதைச்செய்தேன்.  

வீட்டுக்கு கொண்டு சென்றேன், நீர் நிரம்பிய பூக்குவளையில் வைத்தேன். அதன் இதழ்கள் அடர்ந்து, மென்மையாக, வெளிறிய இளஞ்சிவப்பின் பல்வேறு அடர்வுகள் கொண்டதாக, பார்க்க அதி அற்புதமாக இருந்தது. அதன் நிறம் குவிமையத்தை நோக்கி செல்லும்தோறும் அடர்ந்துக்கொண்டே இருந்தது, அதன் இதயம் கிட்டத்தட்ட செந்நிறத்தில் இருந்தது.

மிக மகிழ்ச்சியாக உணர்ந்தேன்.

மிக மகிழ்ச்சியாக உணர்ந்ததால் நான் தொடர்ந்து ரோஜாக்களை திருடினேன். அதன் வழிமுறை எப்போதும் ஒன்றுதான். அந்த சிறுமி நோட்டம் பார்ப்பாள், நான் உள்ளே சென்று, கிளை முறித்து, ரோஜாவுடன் தப்பித்து வருவேன். எப்போதும் என் இதயம் படபடக்க, எப்போதும் என்னிடமிருந்து எவரும் பறிக்க முடியாத பெருமிதத்துடனும் வெளியே வருவேன்.

நான் பிதாங்க (முளகு நெல்லி) பழங்களையும் திருடியிருக்கிறேன். எனது வீட்டருகே உயர்ந்த பசுமை வேலியால் சூழப்பட்ட பிரஸ்பீடிரியன் தேவாலயம் இருக்கிறது. தேவாலயத்தையே மறைக்கும் அளவிற்கு அந்த பசுமை வேலி அடர்த்தியானது. அதன் கூரையின் ஒரு மூலையைத் தவிர வேறெதையும் நான் பார்க்க முடிந்ததில்லை. அந்த பசுமை வேலி பிதாங்க புதர்ச்செடியால் ஆனது. ஆனால் பிதாங்க பழங்கள் ஒளிந்து கொள்பவை: ஒரு பழம் கூட தென்படவில்லை. வேறு எவரும் வரவில்லையா என சுற்றிமுற்றி பார்த்துவிட்டு, இரும்பு கம்பிகளுக்குள் கையை விட்டு புதருக்குள் ஆழ்ந்து சிறிய பழத்தின் ஈரத்தை என் விரல்கள் உணரும்வரை துழாவினேன். பலமுறை எனது அவசரத்தில் பழுத்த பிதாங்க பழங்களை விரல்களாலேயே நசுக்கியிருக்கிறேன். என் விரல்கள் ரத்தக்கறை படிந்ததைப் போல் ஆகும். பறித்த பழங்களில் பலதை அங்கேயே உண்பேன். பழுக்காத காய்களை அங்கேயே வீசியெறிவேன்.

எவருமே எப்போதுமே இதை கண்டுபிடித்ததில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை: ரோஜாக்கள் மற்றும் பிதாங்க பழத் திருடர்களுக்கு நூற்றாண்டு கால மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, பிதாங்க பழங்களே தாம், கிளையிலேயே பழுத்து கொள்ளப்படாமலேயே மரிப்பதற்கு பதில், எம்மை பறித்துகொள்ளுங்கள் என கெஞ்சுகிறது.  

 

-    (one hundred years of forgiveness- from the complete stories Clarice Lispector, new direction publication) 

கடவுளை மன்னித்தல்

எதைப்பற்றியும் எண்ணாமல் கவனமின்றி கட்டிடங்களையும், துண்டுகளாக தெரியும் கடலையும்,  மனிதர்களையும் பார்த்தபடி அவெனிடா கோப்பகபானாவில் நடந்து கொண்டிருந்தேன். உண்மையில் நான் கவனமின்றி இல்லை என்பதை நான் அதுவரை உணரவில்லை, எச்சரிக்கையுணர்வு இல்லாமல் இருந்த அரிதான ஒருநிலையில் நான் இருந்தேன்: சுதந்திரமாக. நான் எல்லாவற்றின் மீதும் பார்வையை வெறுமே அலையவிட்டேன். நான் பொருட்களை கவனிக்கிறேன் என்பதை இயல்பாக கவனிக்கத் தொடங்கினேன். எனது சுதந்திரம் சுதந்திரமாக இல்லாமல் ஆகாமலேயே இன்னும் தீவிரமாக வளர்ந்தது. இது உரிமையாளரின் மேற்பார்வை பயணம் அல்ல, அவற்றில் எதுவும் என்னுடையது அல்ல, அவற்றை எனதாக்கிக்கொள்ளவும் நான் விழையவில்லை. ஆனால் நான் கண்டவை எனக்கு நிறைவை அளிப்பதாக உணர்ந்தேன்.

அதற்கு முன் தோன்றியிராத ஒரு உணர்வு என்னை அப்போது ஆட்கொண்டது. தூய்மையான அன்பினால் நான் என்னை கடவுளின் அன்னையாக உணர்ந்தேன், நான் இந்த புவி, இந்த உலகம். உண்மையில் அகந்தையோ பெருமிதமோ அற்ற, இம்மியளவு உயர்வுமனப்பாங்கோ சமத்துவ மனநிலையோ இல்லாத, தூய்மையான அன்பின் பாற்பட்டு இங்கு இருக்கும் யாவற்றுக்கும் அன்னையென உணர்ந்தேன்.  மேலும் நான் இப்போது உணர்வது தவறான உணர்வாக இல்லாத பட்சத்தில், உண்மையென்றாகும் போது, கடவுள் பெருமிதமோ அற்பத்தனமோ கொள்ளாத ஒருவரை அவரை நோக்கி அன்பு காட்ட, எவ்வித நிபந்தனையும் இன்றி  அனுமதிப்பார் என்பதை கண்டடைந்தேன். நான் அன்பை அத்தனை அணுக்கமாக உணர்வது அவருக்கு ஏற்புடையதாகவே இருந்திருக்கும். இந்த உணர்வு எனக்கு புதியது. முன்னர் அது என்னுள் இல்லாததால் எனக்கு அது தோன்றியதில்லை என்பது உறுதியானது. நாம் எதை நேசிக்கிறோமோ அதுதான் கடவுள் என்றறிவேன். உண்மையான அன்புடன், தீவிரமான நேசத்துடன், மரியாதையுடன், அச்சத்துடன், வணக்கத்துடன் அவரை அணுகுகிறோம். ஆனால் கடவுள் மீது ஒரு அன்னையாக அன்பு செலுத்துவதை பற்றி நான் கேள்வியுற்றதே இல்லை. மகன் மீது நான் வைக்கும் அன்பு அவனை குறுக்காது, அது அவனை விரியச்செய்யும் என்பதால் இந்த உலகத்தின் அன்னையாக இருப்பது என்பது தடையற்ற அன்பை அளிப்பதுதான்.

அப்படியான தருணத்தில்தான்  நான் கீழே மரித்துக்கிடந்த பெரிய எலியின் மீது கால்பதிக்க இருந்தேன். ஒருநொடிக்கும் குறைவான காலத்தில் வாழ்தலில் உள்ள அச்சுறுத்தலால் உடல் நடுங்கிக்கொண்டிருந்தேன், ஒரு நொடிக்குள்ளாக பீதியில் சிதைந்து கொண்டிருந்தேன், அடியாழத்தில் எழுந்த ஓலத்தை கட்டுக்குள் வைக்க இயன்ற அளவு போராடிக்கொண்டிருந்தேன். பயத்தில் ஓட முயன்று, இத்தனை மக்கள் சூழ இருந்தும் பார்வையிழந்தவளாக, எதையும் பார்க்க விரும்பாதவளாக கண்ணை வலுக்கட்டாயமாக இறுக மூடியபடி, அடுத்த கட்டிடத்தின் அருகே இருந்த தூணில் சாய்ந்துக்கொண்டு என்னுள் சுருண்டிருந்தேன். ஆனால் அந்த பிம்பம் என் கண்ணிமைக்குள் சிக்கிக்கொண்டுவிட்டது. பெருத்த, நீண்ட வாலுடைய, கால்கள் நசிந்த, சிவப்பு குறுமயிர்கள் கொண்ட அசைவற்ற, பழுப்புநிற செத்த எலி. எலிகளின் மீதான எனது அச்சத்திற்கு எல்லையே இல்லை.

உடல் முழுக்க நடுங்கியது என்றாலும் எப்படியோ நான் தொடர்ந்து உயிர்த்திருந்தேன். முற்றிலும் குழம்பிய நிலையில் நான் தொடர்ந்து நடந்தேன். என் வாய் வியப்பினால் ஒருவித குழந்தைத்தனத்தை அடைந்திருந்தது. நான் சில நிமிடங்களுக்கு முன்னர் உணர்ந்தது மற்றும் இந்த எலி, இவ்விரு உண்மைகளுக்கு இடையிலான உறவை துண்டிக்க முயற்சித்தேன். ஆனால் பலனில்லை. நிகழ்வு தொடர்ச்சி காரணமாகவேனும் அவை உறவு கொண்டிருந்தன. இரண்டு உண்மைகள் எவ்வித தர்க்கமும் இல்லாமல் ஒன்றாக பிணைந்திருந்தன. ஒரு எலி என்னுடைய இணையாக இருந்தது என்பது அதிர்ச்சியளித்தது. சட்டென ஒருவித கலகக்குரல் என்னை பீடித்தது: அப்படியென்றால் நான் தடையற்று அன்பிடம் சரணடைய முடியாதா? கடவுள் எனக்கு எதை நினைவூட்ட விரும்பினார்? உள்ளே இருப்பது முழுக்க குருதி என நினைவுறுத்தப்பட வேண்டிய நபரல்ல நான். நான் உள்ளிருக்கும் குருதியை மறந்தவளில்லை என்பதோடு நான் அந்த குருதியை விழைபவளும் கூட, அந்த விழைவை அனுமதிப்பவளும் கூட. குருதியை மறக்கமுடியாத அளவிற்கு நான் குருதியால் நிரம்பியவள். எனக்கு ஆன்மீக தளம் எவ்விதத்திலும் பொருட்டில்லை. பூவுலகும் கூட பொருட்டில்லைதான். என் முகத்திற்கு நேராக அப்பட்டமாக ஒரு எலியைத் தூக்கி வீசியிருக்கத் தேவையில்லை. அது சரியான செயலில்லை. குழந்தைப்பருவத்தில் இருந்து என்னை பேதலிக்கச் செய்யும், என்னை இழிவு செய்யும், சென்ற உலகத்தில் என்னை வேகவேகமாகவும் ஆக்ரோஷமாகவும் தின்று தீர்த்த எலிமீது எனக்கிருந்த பீதியை எளிதாக கணக்கில் கொண்டிருக்க வேண்டும். அப்படித்தானே? நான் இந்த உலகத்தில் எதையும் கோராமல், எதையும் விழையாமல், தூய்மையான பரிசுத்தமான அன்பை அளித்துக்கொண்டு சுற்றித்திரிந்தபோது கடவுள் அவருடைய எலியை எனக்கு காட்டுகிறார். கடவுளின் கருணையின்மை என்னை புண்படுத்தி அவமதித்தது. கடவுள் ஒரு காட்டுமிராண்டி. மூடிக்கொண்ட இதயத்துடன் நடந்து கொண்டிருந்தேன். எனது ஏமாற்றம் தேற்றமுடியாதது. குழந்தையாக நான் உணர்ந்த தேற்றமுடியாத ஏமாற்றத்திற்கு இணையானது. மறக்க முயன்று தொடர்ந்து நடந்தேன். ஆனால் அப்போது எனக்கு தோன்றிய ஒன்றேயொன்று பழிதீர்த்தல்தான். ஆனால் சர்வ வல்லமை வாய்ந்த கடவுளை, வெறும் ஒரேயொரு நசுங்கிய எலியைக் கொண்டு என்னை நசுக்கிய கடவுளை, பாதிக்கும் வகையில் நான் எப்படி பழிதீர்க்க முடியும்? ஒற்றை உயிராக நான் பலவீனமானவள். பழிதீர்க்கும் விழைவில் நான் அவரை சந்திக்க கூட முடியாது, ஏனெனில் அவர் பெரும்பாலும் எங்கு வசிப்பார் என்பதை நானறியேன். எந்த பொருளில் அவர் அதிகமும் வசிப்பார் என்பதும் தெரியவில்லை. அப்படி அந்த பொருளை கண்டடைந்தால் கூட அதை கோபமாக உற்றுநோக்கினால் அதில் அவரைக் காண்பேனா? இந்த எலியில்? அந்த ஜன்னலில்? தரையில் கிடக்கும் கற்களில்? எனக்குள் அவர் இப்போது இல்லை. எனக்குள் தான் நான் அவரை காணவே முடியாது.

பிறகு பலவீனரின் பழிதீர்த்தல் முறை எனக்குள் உதித்தது; ஆ, அது அப்படித்தானே? நான் இனி எந்த ரகசியத்தையும் பேண மாட்டேன், நான் அம்பலப்படுத்தப் போகிறேன். ஒருவரின் தனிவாழ்க்கையில் நுழைந்து அவருடைய ரகசியங்களை அம்பலப்படுத்துவது கீழ்மையானது என்றறிவேன். ஆனால் நான் சொல்லத்தான் போகிறேன்- சொல்லிவிடாதே, அன்பின் பொருட்டேனும் சொல்லிவிடாதே, உனக்குள்ளேயே இருக்கட்டும், உனக்கு முன் அவர் வெட்கித் தலைகுனிகிறார்- ஆனால் நான் சொல்லத்தான் போகிறேன், ஆம், எனக்கு என்ன நடந்தது என்பதை அனைவருக்கும் சொல்லத்தான் போகிறேன். இந்தமுறை, அதுவும் இந்த நிகழ்வில் அவர் என்னிடமிருந்து தப்பிவிட முடியாது. அவர் எனக்கு என்ன செய்தார் என்பதை சொல்லி அவருடைய நற்பெயரை களங்கப்படுத்துவேன்..

... ஆனால் யாருக்குத் தெரியும், ஒருகால் இந்த உலகமே ஒரு எலி என்பதால் இது நடந்திருக்கலாமோ, மேலும் நானும் இந்த எலியை எதிர்கொள்ள தயார் என்று எண்ணியிருக்கக் கூடும். ஏனெனில் நான் என்னை இதைவிட வலுவானவளாக கற்பனை செய்துகொண்டேன். அன்பைப்பற்றி நான் பிழையாக கணக்கிட்டிருந்தேன்: எல்லாவற்றையும் கூட்டிச் சேர்க்கும்போது நான் அன்பு செய்தேன் என புரிந்து கொண்டிருந்தேன். எல்லாவற்றையும் கூட்டிச் சேர்த்தல் உண்மையான அன்பிற்கான வழியல்ல என்பதை நான் புரிந்துகொள்ளவில்லை. நேசத்தை உணர்ந்த மாத்திரத்தில் அன்பு செலுத்துதல் எளிது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஏனெனில் நான் புனிதமான அன்பை விழையவில்லை, புனிதப்படுத்துதல் புரிந்துகொள்ளமுடியாததை சடங்காக மாற்றியளிக்கும் என்பதை நான் உணரவில்லை. மேலும் நான் எப்போதும் அதிகம் சண்டையிட்டே வந்திருக்கிறேன், சண்டையிடுவதே என் வழிமுறையில் செயலாற்றுவதாகும். ஏனெனில் நிகழ்வுகளை என்போக்கில் எதிர்கொள்ளவே எப்போதும் விரும்புவேன். ஏனெனில் எப்படி வளைந்து கொடுப்பது என்பதை இப்போது வரை நானறியேன். ஏனெனில் நான் உள்ளார்ந்து எதன் மீது அன்பு செலுத்த விழைகிறேனோ அதன்மீது அன்பு செலுத்தவே விரும்புகிறேன்- அது எதுவாக இருந்தாலும். ஏனெனில் நான் இன்னும் நானாகவே இல்லை ஆகவே தானாக இல்லாத இந்த உலகத்தை நேசித்தற்கான தண்டனை இது. ஏனெனில் நான் என்னையே காரணமின்றி புன்படுத்திக்கொண்டேன். ஏனெனில் நான் மிகவும் பிடிவாதம் கொண்டவள் என்பதால் முகத்தில் அடித்தாற்போல் எனக்கு உணர்த்த வேண்டியிருக்கிறது. ஏனெனில் நான் மிகுந்த உடமையுணர்வோடு இருப்பதால் சற்றே முரண்நகையாக இப்படியொரு எலி எனக்கும் வேண்டுமா என என்னிடம் கேட்கப்பட்டது. ஏனெனில் நான் எனது கையினால் எலியை எடுக்கமுடியும்போதுதான் யாவற்றின் அன்னையாக ஆக முடியும். மிக மோசமாக மரணமடைந்த பின்னும் கூட என்னால் ஒரு எலியை கையில் எடுக்க முடியாது என்பதை நான் அறிவேன். ஆகவே அறியமுடியாததை அல்லது பார்க்கமுடியாததை பற்றி புகழ்பாடும் ‘மேக்னிபிகாட்டை(கன்னி மேரி பற்றிய துதிப்பாடல்)’ கைக்கொள்கிறேன். மேலும் என்னை வெளியே தள்ளும் சடங்கு சம்பிரதாயங்களையே கைக்கொள்கிறேன். ஏனெனில் சடங்கு சம்பிரதாயம் எனது எளிமையை பாதிக்கவில்லை ஆனால் எனது பெருமையை பாதித்திருக்கிறது. இந்த உலகத்துடன் நான் மிக அணுக்கமாக உணர்வது இந்த உலகத்தில் பிறந்தேன் எனும் பெருமிதத்தால் தான். எனினும் நான் இந்த உலகத்தை என்னுள்ளே இருந்து ஒரு மௌன அலறலில் பிறப்பித்தேன். ஏனெனில் நான் இருப்பது போலவே இந்த எலியும் இங்கிருக்கிறது, ஒருகால் நானோ இல்லை எலியோ ஒருவரை ஒருவர் சந்தித்திருக்க கூடாதோ என்னவோ, தொலைவு எங்களை சமானமானவர்களாக ஆக்கியது. ஒருவேளை இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு எலியின் மரணத்தை தான் என் இயல்பு விழைகிறது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமோ என்னவோ. ஒருவேளை, நான் இன்னும் எனது குற்றங்களை நிகழ்தாததால் என்னைப் பற்றி நானே மிகையான கண்ணியவானாக கருதிக்கொள்கிறேனோ என்னவோ. எனது குற்றங்களை கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரே காரணத்தினால் நான் பரிச்சுதமான அன்பினால் ஆனவன் என எண்ணிக்கொண்டேன். ஒருவேளை எனது தளையுண்ட ஆன்மாவை பெரும் ஆவேசம் இன்றி நோக்க முடியாதவரை என்னால் இந்த எலியை நோக்க முடியாதோ என்னவோ. ஒருவேளை இந்த “உலகத்தை” இப்படி எல்லாவற்றின் கலவை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டுமோ. எனது இயல்பின் தன்மையை நேசிக்காமல் இந்த உலகத்தின் மகத்துவத்தை என்னால் எப்படி நேசிக்க இயலும்? நான் மோசமானவள் என்பதால் “கடவுள்” நல்லவர் என கற்பனை செய்துகொள்ளும் வரை என்னால் எதையும் நேசிக்க முடியாது. உண்மையில் அது என்னை நானே மறுதலிக்கும் வழிமுறையாக மட்டுமே இருக்கும். என்னை நானே முழுமையாக தேடியறிந்து கொள்வதற்கு முன்னரே எனது எதிரீடை நேசிக்க முடிவு செய்துகொண்டேன், எனது எதிரீடை கடவுள் என அழைக்க விரும்பினேன். என்னை நானே ஒருபோதும் முழுமையாக ஏற்றுக்கொண்டதில்லை எனும்போது இந்த உலகம் என்னை அச்சுறுத்தாது என நம்பிக்கொண்டிருந்தேன். ஏனெனில் இதுவரை என்னிடம் நான் மட்டுமே சரணடைந்திருக்கிறேன், காரணம் நான் எனக்காக கூட கொஞ்சமும் மனமிரங்க மாட்டேன். எனக்கு ஈடாக என்னவிவிட வன்முறை குறைந்த புவியை சேர்ந்த என்னையே முன்வைக்க முடியும் என நம்பினேன், ஏனெனில் எனக்கு நான் தேவைப்படாத காரணத்தினால் கடவுளை நேசிக்கும் வரை நான் ஒரு கள்ளப் பகடை மட்டுமே, எனது பெருவாழ்வின் ஆட்டம் விளையாடப்படவே மாட்டாது. நானாக கடவுளை உருவாக்குவதற்கு முன்புவரை அவர்  இருந்ததே இல்லை.                       

-    Forgivig God, Clarice Lispector, The complete stories

 

அதீத அன்பின் கதை

முன்பொரு காலத்தில் ஒரு சிறுமி இருந்தாள். அவள் கோழிக்குஞ்சுகளை எந்த அளவிற்கு நுண்மையாக அவதானித்தாள் என்றால் அவற்றின் ஆன்மாவையும் உள்ளார்ந்த ஏக்கங்களையும் அறிந்தவள் ஆனாள். கோழி பதட்டமாக இருக்கிறது ஆனால் சேவல் ஏறத்தாழ மனிதனைப்போலான துயரத்தில் வாடுகிறது. அதன் அந்தப்புரத்தில் அதற்கு உண்மையான காதல் கிடைக்கவில்லை. மேலும் இரவெல்லாம் கண்விழித்து கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது, அப்போதுதான் எங்கோ வெகு தொலைவில் எழும் முதல் புலரி ஒளியை விட்டுவிடாமல் எவ்வளவு உரக்கக் கூவ முடியுமோ அவ்வளவு உரக்க கூவ முடியும். அதுதான் அதன் கடமையும் கலைவெளிப்பாடும் கூட. இப்போது மீண்டும் கோழி குஞ்சுகளுக்கு வருவோம், இந்தச் சிறுமி அவளுக்கென இரண்டு கோழிக்குஞ்சுகளை வளர்த்தாள். ஒன்றின் பெயர் பெட்ரினா மற்றொன்றின் பெயர் பெற்றோநிலா.

இவற்றில் ஒன்றுக்கு கல்லீரல் பாதிப்பு உள்ளது என எப்போதெல்லாம் அவள் எண்ணுகிறாளோ அப்போதெல்லாம் அவற்றின் ரெக்கைக்கு அடியில், ஒரு செவிலியின் நேர்த்தியுடன், நோயின் முதன்மை அறிகுறி அதுதான் என்பதுபோல், முகர்ந்து பார்ப்பாள். உயிருள்ள கோழியின் வாசனையை அறிவது ஒன்றும் விளையாட்டல்ல. பிறகு அவளுடைய அத்தையிடம் சென்று அதற்காக ஏதேனும் மருந்தை கோருவாள். அதற்கு அவளுடைய அத்தை சொல்வார் “உனது கல்லீரலில் எந்தவித சிக்கலும் இல்லை.” பிறகு அவளுக்கு பிடித்த அந்த அத்தையுடன் மனதில் நெருக்கமாக உணர்வதால், இந்த மருந்து யாருக்கு என அவருக்கு விளக்கினாள். நோய் தொற்று புலப்படாத வகையில் பரவாமல் இருக்க பெற்றோநிலாவிற்கு அளிப்பது போலவே பெட்ரினாவிற்கும் மருந்து அளிப்பது புத்திசாலித்தனம் என அந்தச் சிறுமி கருதினாள். பெட்ரினாவிற்கும் பெற்றோநிலாவிற்கும் மருந்து கொடுப்பது கிட்டத்தட்ட பொருளற்ற செயல். நாள் முழுக்க மண்ணைக் கொத்தி கண்டதையும் உண்பதை தொடர்வதால் கல்லீரலை துன்புறுத்தி கொள்கிறார்கள். ரெக்கைகளுக்கு அடியில் எழும் மணம் என்பது அதனால் எழும் கெடுமணம்தான். அவளுக்கு அதற்கு நாற்றப்போக்கியை (deodarant) பூசிவிட வேண்டும் எனத் தோன்றவில்லை. ஏனெனில் அவர்கள் வசித்த மீனாஸ் ஜெராயிஸ் பகுதியில் மஸ்லின் உள்ளாடைகளை அணிவதால் நைலான் உள்ளாடைகள் எப்படி அணிவதில்லையோ அதேப்போல் நாற்றப்போக்கியை  யாரும் பயன்படுத்துவதில்லை. அவளுடைய அத்தை அவளுக்கு தொடர்ந்து மருந்தை கொடுத்து வந்தாள். ஒரு கரிய திரவம். சில துளிகள் காபி கலக்கப்பட்ட தண்ணீர் தான் அது என அந்தச் சிறுமி ஐயுற்றாள். அதன் பிறகு கோழிக் குஞ்சுகளின் அலகை பிளந்து அவை கோழிக் குஞ்சாக இருப்பதை குணமாக்கும்  மருந்தை புகட்ட கடுமையாக முயன்றாள். மனிதர்கள் மனிதர்களாக இருப்பதையும், கோழிகள் கோழிகளாக இருப்பதையும் குணப்படுத்த முடியாது என அவளுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை. மனிதர்களும் சரி கோழிகளும் சரி அந்தந்த இனங்களுக்கே உரிய துயரங்களையும் மகத்துவங்களையும் கொண்டவர்கள்தான். (கோழிகள் வடிவ நேர்த்தி கொண்ட  வெண் முட்டைகளை இடுகின்றன). அந்தச் சிறுமி கிராமப்புறத்தில் வசித்ததால் அவளுக்கு ஆலோசனை சொல்ல அங்கு எந்த மருந்துக்கடைகளும் இல்லை.

பெட்ரினாவோ பெற்றோநிலாவோ இறகுகளுக்கு அடியில் மிகவும் ஒல்லியாக இருப்பதாக, அவர்கள் நாளெல்லாம் அப்படியே இருந்தாலும் கூட ,அந்தச் சிறுமிக்கு திடிரென தோன்றும்போதெல்லாம் மற்றுமொரு நரக வேதனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவற்றை குண்டாக்குவது உணவு மேஜையில் சீக்கிரம் கொண்டு சேர்க்கும் எனும் விதியை அந்தச் சிறுமி புரிந்துகொள்ளவில்லை. மீண்டும் எல்லாவற்றிலும் கடினமான அந்தப்பணியை செய்யத் தொடங்குவாள்- அலகை பிளக்கும் முயற்சியில் ஈடுபடுவாள். மீனாஸ் ஜெராயிஸ்சின் அந்தப்பெரிய பண்ணையில் அந்தச் சிறுமி கோழிகளின் உள்ளுணர்வை அறிவதில் நிபுணரானாள். அவள் வளர்ந்தபிறகுதான் வட்டார மொழியில் கோழி என்பது வேறொன்றை குறிப்பது என உணர்ந்துகொண்டாள் (உறவுக்கு அலைபவள்). இந்த மொத்த நிகழ்வின் வேடிக்கை புரியாமல் அவள் சொன்னாள்:

“ஆனால் இந்த சேவல் தான் கடினமாக உழைக்கிறது, ஆனால் யாருக்கும் அது தேவையில்லை! கோழிகள் எதையுமே செய்வதில்லை! நீங்கள் அதை கவனிக்கும் முன்னே உங்களை விட்டு விரைவாக சென்றுவிடுகிறது! சேவல் தான் எப்போதும் இவற்றில் ஒன்றை காதலிக்க முயல்கிறது ஆனால் அதனால் முடியவில்லை!”

வீட்டைவிட்டு தொலைவில் இருக்கும் உறவினரின் இல்லத்திற்கு சிறுமியை ஒரு நாள் கூட்டிச்செல்வதாக குடும்பத்தினர் முடிவு செய்தார்கள். அந்த சிறுமி திரும்பியபின், உயிருடன் இருந்தபோது பெற்றோநிலா என அழைக்கப்பட்ட கோழிக்குஞ்சை காணவில்லை. அவளுடைய அத்தை அவளிடத்தே சொன்னாள்:

“நாங்கள் பெற்றோநிலாவை உண்டுவிட்டோம்”

அந்தச் சிறுமிக்கு அபரிமிதமான நேசிக்கும் ஆற்றல் உண்டு. நீங்கள் கொடுக்கும் அன்பை ஒரு கோழியால் உங்களுக்கு திருப்பியளிக்க முடியாது என்றாலும் எதிர்பார்ப்பின்றி அந்தச் சிறுமி அதை தொடர்ந்து நேசித்து கொண்டிருந்தாள். பெற்றோநிலாவிற்கு என்ன ஆனதென அறிந்து கொண்டதிலிருந்து அவள் கோழி சாப்பிட பிடிக்காத அம்மாவையும் மாட்டுக்கறி அல்லது வால்கறியை சாப்பிடும் வேலையாட்களைத் தவிர்த்து வீட்டிலிருந்த பிற எல்லோரையும் வெறுக்கத் தொடங்கினாள். அவளுடைய தந்தையைப் பொறுத்தவரை, அவருடைய முகத்தில் முழிக்கக்கூட அவளுக்கு பிடிக்கவில்லை. உள்ளதிலேயே அவருக்கு தான் கோழிக்கறி மிகவும் பிடிக்கும். அவளுடைய அம்மா எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தாள். அவளிடம் விளக்கிச் சொன்னாள்.

“மனிதர்கள் பிராணிகளை உட்கொள்ளும்போது அந்த பிராணிகள் அதிகமும் மனிதர்கள் போலவே ஆகின்றன. ஏனெனில் அவை நம்முள் சென்றுவிடுகின்றன. இந்த வீட்டில் உள்ளவர்களில் நம்மிருவரின் உள்ளே மட்டும்தான் பெற்றோநிலா இல்லை. இது மிக துயரமானது.”

பெட்ரினாவை சிறுமி ரகசியமாக அதிகம் நேசித்தாள். அது இயற்கையான காரணங்களினால் செத்து விழுந்தது. அது எப்போதுமே பலவீனமானது தான். பண்ணையில் சுட்டெரிக்கும் வெயிலில் நடுங்கிக்கொண்டிருந்த பெட்ரினாவை கண்ட சிறுமி அதை ஒரு கரிய துணியில் சுற்றினாள். முழுமையாக சுற்றியபிறகு கொண்டு பொய் மீனாஸ் ஜெராயிசின் பண்ணைகளில்  உள்ள பெரிய செங்கல் தணல் அடுப்பின் மேலே வைத்தாள். அவள் பெட்ரினாவின் மரணத்தை துரிதப்படுத்துகிறாள் என எல்லோரும் எச்சரித்தனர். ஆனால் அந்த சிறுமி பிடிவாதமாக துணி போர்த்திய பெட்ரினாவை சூடான கற்களின் மீது வைத்தாள். மறுநாள் காலை பெட்ரினாவின் நாள் மரணத்தின் விறைப்போடு தொடங்கியது. ஓயாத கண்ணீருக்கிடையே அந்த சிறுமி அன்பிற்குரிய பெட்ரினாவின் மரணத்தை துரிதப்படுத்திவிட்டதை அப்போதுதான் உணர்ந்து கொண்டாள்.

அவள் இன்னும் கொஞ்சம் வளர்ந்தபோது ஈபோனினா எனும் கோழியை வளர்த்தாள்.

ஈபோனினாவின் மீது இம்முறை அவளுக்கிருந்த அன்பு கற்பனாவதத்தன்மையானது அல்ல, யதார்த்தமானது. முன்னரே அன்பினால் துன்புற்ற ஒருவரின் அன்பு அது. ஈபோனினாவை உட்கொள்ளவேண்டிய தருணம் வந்தபோது அந்த சிறுமிக்கு அது தெரிந்திருந்தது மட்டுமில்லாமல்,  எவரொருவர் கோழியாக பிறந்தாலும் அவர்களின் தவிர்க்க முடியாத விதிப்பயன் இதுதான் என்பதை ஒருமாதிரி ஏற்றுக்கொண்டாள். கோழிகளுக்கு தங்கள் விதியை முன்னுணரும் ஆற்றல் உண்டு போலும். ஆகவேதான் அவை அதன் உரிமையாளர்களின் மீதோ சேவலின் மீதோ அன்பு செலுத்த கற்றுக்கொள்வதே இல்லை. ஒரு கோழி இந்த உலகில் தனித்திருக்கிறது.

அந்தச் சிறுமி அவளுடைய அம்மா பிரியத்திற்குரிய பிராணிகளை உட்கொள்வதை பற்றி சொன்னதை மறக்கவில்லை: ஈபோனினாவை மற்ற குடும்பத்தாரைக் காட்டிலும் அதிகமாக உட்கொண்டாள். பசியில்லாதபோதும் உண்டாள். ஆனால் மகிழ்ச்சியாக உண்டாள். ஏனெனில் ஈபோனினா அவளுடைய பகுதியாக ஆகி உயிருடன் இருந்ததைக் காட்டிலும் அதிகமாக அவளுடையதாக ஆவாள் என இப்போது அறிந்திருந்தாள். ஈபோனினாவை குருதி சாறில் சமைத்திருந்தார்கள். அந்த சிறுமி பாகனிய சடங்கில் ஈடுபடுவதைபோல் உடலில் இருந்து உடலை கடத்தினாள். நூற்றாண்டுகளுக்கு முன்பு செய்ததைப்போல் அதன் மாமிசத்தை உண்டு குருதியை குடித்தாள். இந்த உணவு வேளையில் ஈபோனினாவை உட்கொண்ட பிறர் மீது பொறாமை கொண்டாள். அந்தச் சிறுமி அன்பு செலுத்தவே உருவானவள். ஆண்கள் இருக்கும் உலகில் இளம் பெண்ணாக வளரும் வரை அப்படித்தான் இருந்தாள்.              

-    A tale of so much love, -Clarice Lispector, The complete stories