Thursday, October 13, 2011

இடைவேளையும் காந்தியும்


கொஞ்ச காலம் ஆகிவிட்டது இங்கு எழுதி .இங்கு எழுதுவதில்லையே தவிர இணையத்தில் பிழைப்பு ஓடிக்கொண்டுதான இருக்கிறது .நண்பர்களுடன் இனைந்து அண்ணா ஹசாறேவுக்காக ஒரு வலைப்பூ தொடங்கி இப்பொழுது அது காந்தி ,காந்தியர் ,காந்தியம் குறித்து தமிழில் தொகுக்கும் தளமாக வளர்ந்துவிட்டது .அதில் அதிக நேரம் செலவிட வேண்டிய சூழல் .அண்மையில் அங்கு சில கட்டுரைகள் தொடர்ந்து மொழிமாற்றம் செய்து வருகிறேன் .

எனது பிரச்சனை இயங்குவது தான், சட்டென்று வாழ்வின் பொருள் பற்றிய கேள்விகள் எழுந்து பொறுமையின்மையை ஏற்படுத்தும், பின்னர் ஒருவித வெறுமையும் சோர்வும் படரும் .  இலக்கியங்களும் , தத்துவங்களும் கொடுக்காத ஒன்றை இந்த பொக்கை வாய் கிழவர் எனக்கு கொடுக்கிறார் , ஆம் காந்தியை வாசிக்க வாசிக்க அபார செயலூக்கம் கிடைக்கிறது ,இயங்கிக்கொண்டே இருக்க முடிகிறது , அடுத்து என்னவென்று ஆர்வம் தலைகேருகிறது . கடலில் தத்தளித்து அமிழ்ந்து விடுவேனோ என்று பயந்து இருந்தேன் ,இப்பொழுது எனக்கு மிதந்து கரை சேர காந்தி எனும் கட்டுமரம் கிடைத்துவிட்டது .

காந்தியின் ஒவ்வொரு நுட்பங்களை ஆழமாக வாசித்து புரிந்துகொள்ள முயல்கிறேன் .சில விஷயங்களை செயல் தளத்தில் பரிசோதனை முயற்சிகளாக முயன்று பார்க்கிறேன் . அபார மன நிறைவு வருகிறது .வரலாறு ஒரு மிகப்பெரிய வல்லமை ,அது மின்சாரம் போல நம் கண்களுக்கு புலப்படுவதில்லை ஆனால் அது இயங்குவதை நாம் உணர முடிகிறது .அந்த மாபெரும் வரலாறு நம் வழியாக தன்னை நிகழ்த்திகொள்கிறது எனும் ப்ரங்ஞை பலருக்கும் இருப்பதில்லை , ஆனால் காந்தி அளவிற்கு யாருக்கும் அந்த ப்ரங்ஞை இருந்ததாக எனக்கு தெரியவில்லை .காந்தியை முழுவதும் புரிந்துகொண்டால் தான் அவரை எப்படி தாண்டி அடுத்தகட்ட நகர்வுக்கு நாம் செல்ல முடியும் ,இப்பொழுது எனது ஆசை அது தான் ,காந்தியோடு நான் நின்றுவிட விரும்பவில்லை,அவரது அடுத்தகட்டம் என்னவாக இருக்கும் என்பதிலே எனக்கு ஆவல் .

காந்தி தளத்தில் எழுதியுள்ள சில கட்டுரைகளின் சுட்டிகளை இங்கு அளிக்கிறேன் நேரம் இருந்தால் படித்துபாருங்கள் .

மோகன்தாஸ் to மகாத்மா



Saturday, September 3, 2011

குற்றமும் தண்டனையும்



அண்மையில் முன்னால் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் .செப்டம்பர் 9 தூக்கு என்று உறுதியானது ,பின்னர் பெருத்த பரபரப்புக்கு பின் உயர்நீதிமன்றம் இடைகால தடை விதித்து இருக்கிறது .முதல்வரும் சட்டசபையில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி சட்டசபையில் தீர்மானத்தை முன்மொழிந்து அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது .இடையில் செங்கொடி எனும் பெண்ணின் மரணமும் அதை ஒட்டி எழுந்த சர்ச்சைகளும் இன்னும் ஓயவில்லை .

இப்பொழுது நாம் பேசவேண்டியதை இரண்டு பகுதியாக புரிந்துகொள்ளவேண்டும் .இந்த வழக்கை பொறுத்தவரை உள்ள நிலைப்பாடு என்ன ? பொதுவாக மரண தண்டனை பற்றிய நிலைப்பாடு என்ன ?

என்னை பொறுத்தவரை - எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் தமிழகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை .கடைசியாக ஆட்டோ ஷங்கருக்கு நிறைவேற்றப்பட்டது என்று சொல்கிறார்கள் ,ஆனால் அது என் நினைவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை .ஆனால் இப்பொழுது தூக்கு என்று செய்தி வந்தவுடன் ,அதை செரித்துக்கொள்ள மிக கடினமாக இருந்தது .ஒரு அரசாங்கம் என்பது ஒரு மிகபெரிய அதிகார அமைப்பு ,அதன் பல்வேறு சக்கரங்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றி அதை இயக்குகிறது ,ஒரு மிக பிரம்மாண்டமான முரணியக்கம் .அத்தனை பெரிய மகத்தான மக்களமைப்பு ஒரு தனிமனிதனை உயிர் வாழ தகுதியில்லை என்று முத்திரை குத்தி நசுக்குவதேன்பது மனதை உண்மையில் மிகவும் ரணபடுத்தியது என்பதே உண்மை .எங்கே இது நடந்துவிடுமோ என்று பயம் ஏற்பட்டது .

இனி வருங்காலங்களில் செங்கொடி போன்ற பொருளற்ற உயிர்பலிகளுக்கு உலகத்தில் இடமளிக்க கூடாது .மிகுந்த வேதனை அளிக்கிறது .தற்கொலைகள் த்யாகம் ஆகாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .அவளது உணர்வுகளை மதிக்கும் அதே நேரத்தில் இவ்வகையான செயல்கள் நல்லது அல்ல  .போராட்டங்கள் ,உண்ணாவிரதம் என்பது வேறு,இப்படி தனிச்சையாக உயிரை துறப்பது என்பது வேறு  நிச்சயம் நல்ல விஷயம் அல்ல,இதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் காரணமாகவே மேலும் பலர் இந்த வழியை தேர்ந்தெடுக்க கூடும் .


இந்த வழக்கை பொறுத்த வரையில் பேரறிவாளன் விடுதலை செய்ய தகுதியானவர் என்றே இது வரையிலான வாசிப்பில் புரிகிறது .மற்ற இருவரின் பங்களிப்புகள் பற்றி அதிகம் பொது வெளியில் பேச்சு  எழவில்லை .அவர்களுக்கு  நேரடியாக ராஜீவ் கொலையில் சம்பந்தம் இல்லை என்றே எண்ண தோன்றுகிறது .இருந்தாலும் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது .ஆகினும் கூட இருபது வருடங்கள் மரணம் என்பது எப்பொழுது என்று ஒரு வித கலவர மனதோடு வாழ்ந்து வருவதென்பது,நொடி பொழுதில் நிகழும் மரணத்தை காட்டிலும் கொடியது என்றே எண்ணுகிறேன் .அதனால் இந்த வழக்கை பொறுத்தவரையில் எனது நிலைப்பாடு இது தான் - பேரறிவாளன விடுதலை செய்யப்படவேண்டும்,மற்றவர்கள் மரண தண்டனை ரத்து செய்யப்படட்டும்  .ஆனால் இந்த சிக்கலை தமிழ் இன உணர்வாக கொண்டு செல்வதில் ,தமிழர்களை விளிம்பு நிலை மனிதர்களாக சித்தரிப்பது தவறான போக்காக எனக்கு படுகிறது .இந்தியா போன்ற விஸ்தாரமான தேசத்தில் -ஒவ்வொரு இனத்திற்கும் ,ஒவ்வொரு மக்கள் குழுவிற்கும், டெல்லியை தவிர பிற அனைத்து பிராந்தியங்களும் ஏதோ ஒரு வகையில் வஞ்சிக்க படுவதாக உணர்த்தபடுகின்றனர் .ஒரு மைய்ய அரசாங்க அமைப்பானது அதன் அத்தனை விளிம்புகளையும் தொட முயற்சி செய்ய வேண்டும்,நிச்சயம் இந்திய அரசு அப்படி செய்து வர முயன்றே வருகிறது .ஆனால் பல சமரசங்களும் ,விடுபடல்களும் இருந்தே வருகிறது .ஆனால் இதற்கு மாற்று பிரிவினை அல்ல என்பதை நாம் உணர்ந்தே ஆகவேண்டும் .திரு.வைகோ அவர்களின் சமூக பணியின் மீது ஆழமான மதிப்பு இருந்தாலும் ,அவரது அதீத உணர்ச்சி நிலைபாடுகள் அச்சம் தருவதாக உள்ளது .நாம் போராடவேண்டியது பிரிவினைக்காக அல்ல ,அதிகார பரவலாக்கதிர்காக ,அதுவே நல்ல மக்கள் ஆட்சி முறையை நமக்கு தரவல்லது .ராஜீவ் ஒன்றும் நல்லவர் அல்ல அவர் கொல்லபடவேண்டியவர் எனும் வாதம் ஏற்க தக்கது அல்ல.அவர் பல தவறுகளை செய்து இருக்கிறார் ,அதை விமர்சிக்கலாம் ,ஆனால் அதற்காக அவரது கொலையை நியாயபடுத்த முடியாது .இந்த வாதம் ஒருவகையில் அவர்களுக்கு எதிராக திரும்ப கூடும் .

காவேரி பிரச்சனை குறித்து கர்நாடகத்தில் தொழில் நடத்தும் ஒரு எங்கள் ஊர் நண்பருடன் சூடாக விவாதம் செய்து கொண்டிருந்தேன் .அவர் சொன்னார் " தம்பி ,இவளவு பெசுரீகலே ,நம்ம காரகுடியிளிருந்து இந்த இருக்குற பக்கத்தூர் திருபத்தூர் அங்கன மனுஷாளுக தண்ணிக்கு தவிக்கையில ,இங்குட்டு நீங்க அவுகளுக்கு நீர கொடுக்கபடாதுன்னு உங்க ஊர் காரங்க  போராட்டம் பண்றீகளே ,இத என்ன சொல்லுறது ?"
உண்மையில் நான் வாயடைத்து போய் விட்டேன் .தமிழகம் தனி நாடாக 2047 உருவாகிறது என்றே வைத்துகொள்வோம்,அப்பொழுதும் ராமனாதபுரமும் ,சாயல்குடியும் விளிம்பாகவே உணரும்,அப்பொழுது ராமனதாபுரம் சமஸ்தானம் தனி நாடாக அறிவிக்க கோரி போராடும் .


பொதுவில் மரண தண்டனை பற்றிய நிலைப்பாடு என்று யோசித்தால் -இந்த தண்டனையின் நோக்கம் என்ன ? என்பதை ஆராய வேண்டும் .ஒரு குற்றம் நடக்கையில் அதன் பின்னணி என்ன ? அதன் விளைவுகள் என்ன ? நோக்கம் என்ன ? போன்றவை ஆராய படவேண்டும் .காந்திக்கு ஒருவர் கடிதம் எழுதினாராம் -மும்பையில் வெறிநாய்களை கொல்லும் ஆணைக்கு எதிராக குரல் கொடுக்க சொல்லி,ஏனெனில் அது உயிர் வதை என்று முன்வைத்தார் .காந்தி அதற்கு மறுப்பு தெரிவித்து அதை நிராகரித்துவிட்டார் .

ஒரு ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தி அவளது உயிரை பறிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன .இந்த மாதிரி குற்றங்களின் நோக்கம் என்ன ? அவனது அடக்கமுடியாத மனநோய் குறிகள் அவனை அப்படி செய்ய வைக்கிறது .இதன் பின்னணி என்ன ? ஏதோ ஒரு பலத்த காயம் ஒன்று ஆள் மனதில் சிறு வயதில் நடைபெறுகிறது .பொதுவாக பீடோபிளியாக்கள் அவர்களது சிறு வயதில் சில கொடுமைகளுக்கு ஆட்படுத்தபட்டிருப்பார்கள் ,அது ஒரு வித மரபணு தொடர்ச்சி போல் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு பாதிப்பை கொடுத்துகொண்டே இருக்கும் .இந்த கன்னியை உடைத்தாக வேண்டும் .பலர் இதிலிருந்து தங்களை விடுவித்துகொள்கிரார்கள்  சிலர் அதில் ஈடுபடுகிறார்கள் .

தண்டனை என்பது என்ன ? அதன் மூலம் என்ன நிகழும் ? ஏன் அது கொடுக்கப்படவேண்டும் ?
தண்டனை என்பது குற்றவாளியின் செயலுக்கான எதிர் செயல் அல்ல.அவனது குற்றத்தின் நோக்கத்திற்கான சமூக ஒருமைப்பாட்டின்,பொது விழுமியங்களின் எதிர்வினை .அதாவது குற்றவாளியின் மனசாட்சிக்கு அவனது தீய நோக்கத்தை நினைவுகூர ஒரு வாய்ப்பேற்படுத்தி கொடுத்து ,அதிலிருந்து அவனை மீட்டு இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப செய்வது .

ஆனால் எல்லா சமயங்களிலும் அது நிகழ்வதில்லை .குற்றஉணர்வு என்பதே இல்லாத ஆட்களை நாம் காண்கிறோம் .நொடி பொழுது கிறுக்கு தனம் என்பதன் விளைவாக நடக்கும் குற்ற சம்பவங்கள் வாழ்நாள் முழுவதும் தீராத காயமாக ஆழத்தில் இருக்கும் .மேலும் தண்டனை- சிறை வாசமேன்பது ,அந்த குற்றவாலியால் பொதுமக்களுக்கு ஆபத்து என்று ஒன்று இருக்கும் பட்சத்தில் வழங்கபடுவது.அந்த ஆபத்து நீங்கியதர்கான அறிகுறிகள் தெரிந்தால் நிச்சயம் அவரை அங்கு வைப்பதில் பொருள் இல்லை .


பொதுவில் மரண தண்டனை என்பது அவசியமில்லை.கடுமையான சட்டம் வரவேண்டும் என்று வாதிடுகிறார்கள் .குற்றம் செய்பவர் யாரும் சட்டத்திற்கு பயந்து செய்யாமல் இருப்பதில்லை என்பதே நிதரிசனம் .ஆகவே மரண தண்டனைக்கு பயந்து குற்றங்கள் குறைந்து இருக்கிறது என்று சொல்வது சரியல்ல.மாறாக மரண தண்டனை அழிந்த நாடுகளில் குற்றங்கள் குறைந்து இருக்கின்றது .மசூத் ஆசாத் பற்றி என் நண்பன் சொன்னான் ,காந்தஹார் விமான கடத்தலின் பொழுது அவனை விடுவிக்க கோரினார்கள் .பின்னர் ஜெய்ஷ்-ஈ -முகம்மது எனும் இயக்கத்தை தொடங்கி,மும்பை தாஜ் ஹோட்டல் மீதான தாக்குதலில் அவனுக்கு மிக முக்கிய பங்கு இருப்பதாக நம்பபடுகிறது .நாளை இதே நிலை அஜ்மல் கசாபிற்கும் வரலாம் இல்லையா என்று கேட்டார் .சிந்திக்க வைத்த கேள்வி .

இளமையில் சில உக்கிரமான சித்தாந்தங்களால் மூளை சலவை செய்யப்பட்டு , சக மனிதர்கள் பால் தீராத வெறுப்பை விஷமாக கக்கி வருபவர்களை என்ன செய்வது ? .அந்த சித்தாந்த கதவுகள் அவர்களுக்கு சில தர்க்க தாழ்களை ஏற்படுத்தி கொடுத்து மொத்தமாக அடைத்து வைத்து விடுகிறது,அதை எக்கணம் உடைக்க முடியும் ?
ஆனால் அது யாருடைய தவறு ? தான் நம்பும் ஒரு  விஷயத்திற்காக உயிரையும் கொடுக்க முன்வரும் மனிதர்கள்,அந்த விஷயத்தின் ஒட்டு மொத்த விளைவுகளை பற்றி சிந்தனை செய்வதில்லை , ஒரு போலி த்யாகி பட்டம் உருவாக்க பட்டு ,அவர்களை ஒரு மகத்தான கனவிற்காக உயிர் நீத்த த்யாகியாக சித்தரித்து விடுகின்றனர் .இதுவே இவு இரக்கமற்ற தற்கொலை படை தாக்குதல்களில் ஈடுபடுவோரின் மனநிலையாகும் .

மரண தண்டனை என்பது - ஒரு பெரிய நல்லதிற்காக செய்யப்படும் ஒரு செயல் .அந்த பெரிய நல்லது (for the greater good) என்னவென்று யோசிக்க வேண்டும் .ஒரு வளர்ந்த நாகரீக சமூகத்தில் நிச்சயம் மரண தண்டனைக்கு இடமில்லை .

மரண தண்டனைக்கு ஆதரவாகவும் எதிராகவும் எத்தனையோ தர்க்கங்கள் எதிர் தர்க்கங்கள் ,இரு தரப்புகளிலும் சில நியாயங்கள் ,பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் .இது அத்தனையும் கேட்டு புரிந்து அறிவார்ந்த ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை .ஆனால் என் உள்ளம் செல்லும் திசை தெளிவாகவே தெரிகிறது .நிச்சயம் ஒரு மனிதனுக்கு எக்காலத்திலும் அவனது உயிரை போக்கிகொள்ளும் உரிமை கூட கிடையாது என்பதே அது .அப்படி இருக்கையில் மரண தண்டனைக்கு வேலையே இல்லை .

                                An eye for an eye makes the world blind- gandhi 

Friday, August 19, 2011

அண்ணா ஹசாரே -சில விமரிசனங்களும் அதற்கு எதிர்வினைகளும்

இன்று இந்தியா முழுவதும் பரவலாக ஊழலுக்கு எதிரான பேரும் கொந்தளிப்புகள் நம் மக்களின் மனதில் உருவாகி பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது ,ஆனால் தமிழகத்தில் இது ஒரு பெறும் தீயாக பற்றிக்கொள்ளவில்லை .நம் மக்களுக்கு அடி ஆழத்தில் இருக்கும் சந்தேகமே இதற்கு காரணம் என்று சொல்லலாம் .மேலும் இந்த போராட்டம் குறித்து தமிழகத்தின் எந்த ஒரு பெரிய அரசியல் தலைவர்களும் ,இயக்கங்களும் வாய் திறக்காமல் கள்ள மௌனம் சாதித்து வருகிறது .திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது.மேலும் வெகு சிலரை தவிர நமது அறிவு சமூகமும்,ஊடகங்களும் இதற்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமல் இதை வெற்று விளம்பர உத்தி என்று புறம் தள்ளுவதில் பெரும் முனைப்புகளோடு செயலாற்றுகின்றனர் .
இந்த விளம்பரங்களினால் அவருக்கு ஆக போவது என்ன ? அவர் ஒன்றும் பிரதமராகவோ குறைந்த பட்சம் வார்ட் தலைவராக கூட ஆகபோவதில்லை .
அண்ணா -ஒரு விளம்பர விரும்பி ,அவர் செய்யும் உண்ணாவிரதம் என்பது ஒரு விளம்பர 'ஸ்டன்ட்'

Monday, August 1, 2011

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் - குழந்தைகள் மருத்துவம்-12

மறுக்க முடியாமல் இன்றைய பெரியவர்களும் ,பெரியவர்கள் போல் எண்ணிக்கொள்ளும் அனைவரும் திரும்ப செல்ல நினைக்கும் பிராயம் அந்த பால்ய பிராயம் .எத்தனை ஆனந்தங்கள் ,துள்ளல்கள் ? என்றும் அதிலயே வாழ்த்திட மாட்டோமா என்று ஏக்கம் பிறக்கிறது .அறியாமையின் அறிய வேண்டும் எனும் பரபரப்பு ஒரு ஆனந்தம்,அது அறிந்த பின்பு நீர்த்து அணைந்து விடுகிறது .குழந்தையாய் இருந்த பொழுது வாழ்வில் வண்ணங்களும் ,குறுகுறுப்பும் நிறைந்த நாட்கள் போயி , வாழ்வே சுவைத்து சப்பிய பப்புல் கம் போல சுவையின்றி நிறமின்றி வெளிறி உமிழ முடியாமல் சிக்கி தவிக்கும் நாட்களாய் மாறிவிடுகிறது .எந்த மனதிற்கும் குழந்தையை பார்த்தால் ,வாழ்தலில் ஒரு பிடிப்பும்,அழகும்,ஆசையும் பிறந்து மனம் உற்சாகம் அடைகிறது .அதே ஒரு வீட்டில் அந்த குழந்தைக்கு உடல் சுகமில்லை என்றால் வீடே வெயிலில் வாடிய ரோஜா இதழ் போல் வதங்கி சுருங்கி விடுகிறது ,எல்லோர் மனத்திலும் ஒரு பயம் கவிகிறது .


ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களில் ஒரு முக்கியமான அங்கம் பால சிகிச்சை .இதை கௌமார ப்ருத்யம் அல்லது குமார தந்திரம் என்று ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன .முழுவதும் கிட்டாவிட்டாலும் காஷ்யப முனிவர் இயற்றிய சம்ஹிதை இன்றளவிலும் குழந்தைகள் நோய்களுக்கு வெகு முக்கியமான நூல் .அஷ்டாங்க ஹ்ருதயத்திலும் விரிவாக பால ரோகங்களை பற்றியும் அதன் சிகிச்சைகளை பற்றியும் பேசுகிறது .

ஆயுர்வேதத்தின் பால சிகிச்சை நவீன மருத்துவத்தின்' பீடியாட்ரிக்ஸ்' துறையிலிருந்து மாறுபாடு கொண்டது .மேலும் இப்பொழுது பீடியாட்ரிக்ஸ் துறை கூட மேலும் வளர்ந்து குழந்தைகள் நல அறுவை சிகிச்சை (pediatrics surgeon), பிறந்த குழந்தையை கவனிக்கும் நியோனடாலஜிஸ்ட் (neonatologist) என்று புதிய துறைகள் அறிவியல் வளர்ச்சி காரணமாக பிறந்துகொண்டே இருக்கின்றன .மாறாக ஆயுர்வேதத்தில் -எதிலும் ஒரு முழுமை நோக்கு இருக்கும் (wholistic approach) .ஆயுர்வேதத்தின் குழந்தை மருத்துவம் குழந்தையின் பிறப்புக்கு முன்பே ,இன்னும் சொல்ல போனால் கருத்தரிப்புக்கு முன்பே குழந்தைகளின் தாய் தந்தையிடமிருந்து தொடங்குகிறது .
ஒரு நல்ல ஆரோகியமான மரம் தான் நல்ல விதையை கொடுக்க முடியும் ,அப்படி கிடைக்கும் நல்ல விதையே உயர்ந்த மரமாக வளர்ந்து தழைக்க முடியும் .இதனால் கருத்தரிப்பதற்கு முன் ,பஞ்ச கர்ம சோதனைகள் வலியுறுத்தபடுகின்றன .அதன் மூலம் தாய் தந்தையர்களின் நோய் நீக்கி ,பீஜங்களில் உள்ள தோஷங்களை நீக்கி நல்ல பிள்ளைகள் பிறக்க வழிவகை செய்கின்றனர் .

ஆயுர்வேதத்தின் பால சிகிச்சை நவீன மருத்துவத்தின் மகபேறு (obstetric medicine) மற்றும் குழந்தைகள் மருத்துவத்தை கூட்டாக கொண்டது .கர்பிணி பரிசர்யா -எனும் பெயரில் ஒவ்வொரு மாதமும் தாய்க்கு என்னென சிகிச்சைகள் செய்ய வேண்டும் , அவர்களுக்கு ஒவ்வொரு மாதங்களிலும் என்ன உணவளிக்க வேண்டும் என்று விரிவாக சொல்கிறது .இன்றும் எனக்கு தெரிந்து சென்னையில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் டாக்டர்.கிரிஜா ,தனது சஞ்சீவனி ஆயுர்வேத மருத்துவமனையில் இவ்வண்ணம் வெற்றிகரமாக பிரசவம் பார்த்து வருகிறார் .இதில் முக்கியமானது என்னவென்றால் அனேக பிரசவங்கள் சுக பிரசவமே .அவர் முற்றிலுமாக அலோபதி முறையை புறக்கணிக்கிறார் ,அது என்னை பொறுத்தவரை உவப்பானது அல்ல .இதற்கும் அதற்குமான இடையில் ஒரு மைய புள்ளியை கண்டுகொண்டால் அது சரியானதாக இருக்கும் .
கர்பபைய்யில் வளரும் கரு ,ஒவ்வொரு மாதமும் எக்கணம் மாற்றம் கொண்டு வளர்கிறது என்பதை பற்றி ஆயுர்வேத ஆசான்கள் கூறுகின்றனர் .எந்த 'ஸ்கானிங் ' வசதியும் அல்லாத அந்த காலத்தில் கரு கொள்ளும் மாற்றங்களை ஓரளவுக்கு கால பிராமனத்தோடு சரியாகவே சொல்லி இருக்கிறார்கள் .முதல் மாதத்தில் உருவமற்ற ஒரு பிண்டமாக உருவாகி ,பின்னர் அடுத்து கை கால்கள்,தலை ஆகியவைகள் சிறு மொட்டு போன்று வளர்ந்து ,நான்காவது மாதத்தில் இதையா துடிப்பு ,ஆறாவது மாதத்தில் புத்தி என்று செல்கிறது அவர்களது கூற்று .

பிரசவத்தின் சமயத்தில் ஏற்படும் வெவ்வேறு சிக்கல்கள் குறித்தும் அதை எவ்வாறு சரி செய்வதென்றும் விரிவாக பேசுகின்றனர் .கொடி சுற்றிகொள்வது , தலை அல்லாது பிற உறுப்புகள் முதலில் வெளிவருவது,சரியான காலத்திற்கு முன்பே வெளிவருவது இப்படி இன்றைய பல சிக்கல்கள் அன்றும் பேசப்பட்டுள்ளது .ஆயுதம் கொண்டு குழந்தையை வெளியில் இழுப்பது ,மற்றும் இன்றும் பின்பற்றப்படும் பல்வேறு நுட்பங்கள் (maneuvers ) பதிவு செய்யப்பட்டுள்ளது .பின்னர் பிறந்த குழந்தையை சுத்தம் செய்வது ,தாய்க்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள் ,தாய்ப்பாலின் மகத்துவம்,தாய்ப்பாலுக்கு மாற்று, பால் சுரக்கும் மார்புகளில் வரும் நோய்கள் மற்றும் அதன் தீர்வுகள் என்று பல்வேறு தலைப்புகளை விரிவாக அலசுகிறது .

சில இடங்கள் வாசிக்கும் பொழுது கொஞ்சம் கரடுமுரடாக ,நமது இன்றைய நாகரீக வாழ்விற்கு ஒவ்வாதது போல் தோன்றுகிறது .ஆகினும் கூட ,இது தோல்வி அடைந்த முறை அல்ல, இத்தனை வம்சங்களாக நாம் தழைத்து இருப்பதே இதற்கு மிக சிறந்த உதாரணம் .ஆகினும் சில எளிய மாற்றங்கள் மூலமும் ,கொஞ்சம் விசாலமான பார்வை இருந்தால் இதிலிருந்து சில சாராம்சங்களை நாம் மேலே எடுத்து செல்ல முடியும் .பிறிதொரு சமயம் மகபேறு மற்றும் பெண்கள் மருத்துவத்தை பற்றி விரிவாக எழுதுகிறேன் .

எனது அனுபவத்தில் குழந்தைகளுக்கு மிக உகந்த மற்றும் சிறந்த மருத்துவம் ஆயுர்வேதம் தான் .அன்றாடம் குழந்தைகள் சந்திக்கும் எளிய நோய்களுக்கு ஆயுர்வேதம் மிக சிறந்த தீர்வை முன்வைக்கிறது .சளி ,காய்ச்சல் போன்ற நோய்களுக்கு நவீன மருத்துவத்திற்கு ஈடாக இந்த மருந்துகள் வேகமாக செயலாற்றுகின்றன .அதே போல் பசியின்மை ,மலசிக்கல் ,அதிசாரம் ,பூச்சி ,தோலில் வரும் சிரங்குகள் ,அரிப்பு ஆகியவற்றுக்கும் மிக நல்ல தீர்வை கொடுக்கிறது .

கண்களில் உள்ள பார்வை கோளாறுகளால் சிறு வயதில் கண்ணாடி அணிகின்றனர் ,ஆரம்ப கட்டத்தில் இதை சரியாக கண்டுபிடித்தால் சில பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் கண்ணாடியை தவிர்க்கலாம் .

மூளை வளர்ச்சி குன்றுதல்,வலிப்பு நோய்கள் ,நினைவாற்றல் குறைதல் ,குன்றிய வளர்ச்சி ஆகிய பிரச்சனைகளில் உடல் தன்னை தானே குணபடுத்தி தனது இயல்பு நிலையை அடைய ஆயுர்வேத மருந்துகள்,சிகிச்சைகள்,பயிற்சிகள் நாளடைவில் உதவும்.

ஆயுர்வேதம் சொல்லும் ஆரோகியமான பிள்ளை வளர்ப்பு முறைகள்

எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவது- லாக்ஷாதி கேர தைலம் என்று ஒரு எண்ணெய் உண்டு ,கேரள ஆயுர்வேத மருந்தகங்களில் கிட்டும் .அதை இளம் சூடாக வாட்டி குழந்தைக்கு தேய்க்க வேண்டும் ,பின்பு சற்று நேரம் இளம் காலை வெயிலில் காண்பித்துவிட்டு சுடுதண்ணீர் வைத்து குளிப்பிக்க வேண்டும் .

தாய்ப்பால் கொடுப்பது -இது மிக முக்கியமாகும் குறைந்தது ஆறு மாதங்களேனும் கொடுக்க வேண்டும் ,பால் சுரத்தளில் பிரச்சனை இருந்தால் - பிரசவ லேஹியம் என்று அறியப்படும் சௌபாக்ய சுண்டி அல்லது சதாவரி குளம் அல்லது பத்மகாதி சூரணம் ஆகியவைகளை தாய் உட்கொள்ள வேண்டும் .பெரும்பாலும் பால் குடியில் இருக்கும் குழந்தைகளுக்கு வயிற்று பொருமல்,மல சிக்கல்,அதிசாரம்,வாந்தி ஆகியவை வர காரணம் தாயின் உணவு பழக்க வழக்கங்களே .அதில் மிகுந்த கவனம் தேவை .
சில குழந்தைகளுக்கு - தாய்ப்பாலிளிருந்து பசும்பாலுக்கு மாறும் பொழுது அல்லது சில சமயம் தாய் பால் குடிக்கும் பொழுதே ,மாந்தம் ஏற்பட்டு பச்சை நிறமாக பேதி போகும் .lactose intolerance கூட காரணாமாக இருக்கலாம் ,இம்மாதிரி சமயங்களில் ரஜன்யாதி சூரணம் என்று ஒரு அற்புத மருந்து ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது .இதுவும் கடைகளில் கிடைக்க கூடியதே .பிறந்த குழந்தை முதல் எல்லா குழந்தைகளுக்கும் ஜீரண உறுப்புகள் தொடர்பாக எந்த கோளாறு வந்தாலும் இதை கண்ணை மூடி கொண்டு கொடுக்கலாம் .அளவு மட்டும் மாறுபடும் .இது குழந்தைகளுக்கான ஒரு சர்வ ரோக நிவாரணி .

அதே போல் குழந்தைகளின் சளி ,ஜலதோஷம் மூக்குற்றுதல் போன்ற பிரச்சனைகளுக்கு மிக சிறந்த மருந்து கர்ப்பூராதி சூரணம் .கஸ்தூரி மாத்திரை ,கோரோச்சனாதி குளிகா ஆகியவையும் நல்ல மருந்துகள் .நீர்கொர்வை மாத்திரை எடுத்து சுடுதண்ணீரில் குழைத்து நெற்றியில் பற்று போட்டால் மூக்குற்றுவது நின்றுவிடும் .

மூன்று வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை வேப்பங்கொழுந்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்து இரண்டு உருண்டைகள் கொடுத்தால் ,வயிற்று பூச்சிகள் வராமல் இருக்கும்,மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும் .ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதிக்கு கொடுப்பதும் உத்தமம் .

கரப்பான் மற்றும் அனேக தோல் நோய்களுக்கு அருகம்புல் தைலம் நன்றாக கேட்கும் .

சிக்கன்குன்யா போன்ற விஷ காய்ச்சல் சீசன் வந்துவிட்டால் - நில வேம்பு குடிநீர் காய்ச்சி குடும்பமே குடிப்பது நல்லது .இது அனுபவபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நோய் தடுப்பு முறையாகும் .

ஓரளவு நினைவிலிருந்தும் ,அனுபவத்திலிருந்தும் எழுதியது ,உங்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்,மேற்கொண்டு பேசலாம் .

அனைவருமே ஒரு மிக சிறந்த தாயாகவோ தந்தையாகவோ இருந்து ஒரு உத்தமமான குழந்தையை பெற்று வளர்த்தெடுக்க கனவு காண்கிறோம் .நம்மை போன்றே ,ஆனால் நம்மை காட்டிலும் மேம்பட்ட,நமது குறைகள் இல்லாத ,அல்லது குறைகளே இல்லாத மனிதர்களை உருவாக்க நாம் ஒரு பெரும் கனவு காண்கிறோம் .சில நேரங்களில் நாம் வாழ துடித்த கனவுகளை அவர்களின் கழுத்தில் எடை கற்களாக கட்டி அவர்களின் சொந்த கனவுகளை நோக்கி தலையை நிமிர்த்த கூடவிடுவத்தில்லை. இங்கே வாழும் யாரை கேட்டாலும் ,நிராசயே பதிலாக எஞ்சுகிறது .அனைத்து கனவுகளும் ,ஆசைகளும் அனைவருக்கும் நிறைவேறாது தான் ,ஆனால் அந்த கனவுகளை நோக்கி செல்ல அவர்களுக்கு வாய்ப்பு மறுக்க படுவது நிச்சயம் ஒரு மானிட கொடூரம் .

உலகிற்கு மிக சிறந்த செல்வங்களாய் நம் பிள்ளைகளை வளர்ப்போம் ,அவர்களோடு சேர்ந்து நாமும் வளர்வோம் .

Friday, July 22, 2011

ஞானேஸ்வரி







குற்றாலம் பற்றிய பதிவில் ராஜபாளையம் சென்றதை பற்றி கூறி இருந்தேன் ,அதை பற்றி விரிவாக எழுதுவதாகவும் கூறி இருந்தேன் .குற்றாலம் செல்லும் வழியில் எனது பெரியப்பாவின் நண்பர் திரு.செல்லம்மா ராஜூ அவர்களின் இல்லம் இருக்கிறது , பல வருடங்களாக அழைத்து கொண்டிருப்பதால் அங்கு செல்லலாம் என்று முடிவானது .உண்மையில் எனக்கு விருப்பமே இல்லை,குற்றால கனவுகளில் மிதந்து கொண்டிருந்தேன் .ராஜபாளையத்தில் இருக்கும் அவரது ஹார்ட்வேர் கடைக்கு வர சொன்னார் , சரி வந்தவர்களுக்கு டி வாங்கி அனுப்பி வைத்துவிடுவார் என்றே எண்ணினேன் .பழைய காலத்து பாகவதர் ஜிப்பா ,ஜரிகை வேட்டி ,பக்கவாட்டு வழுக்கை ,பென்சில் மீசை என்று ஒரு வித வித்யாசமான தோற்றத்தில் இருந்தார் அவர் .டீயை குடித்துவிட்டு கிளம்பலாம் என்றோம் ,பக்கத்தில் தான் வீடு வந்துவிட்டு போகலாம் என்றார் .தட்டமுடியவில்லை அதனால் சென்றோம் ,ஐம்பதுகளில் கட்டப்பட்ட வீடு ,நீல சாயம் போட்டு வெளிறிய பனியன் போல் இருந்த சுவர்களுக்குள் ஒரு கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பிகள் அவரவர் குடும்பத்தோடு ஒரே கூரையின் கீழ் வசிக்கின்றனர் .பழைய காலத்து கட்டிடம் ,குறுகிய படிகளை கடந்து மாடிக்கு சென்றோம்.
அவரது தாத்தா சுதந்திர போராட்ட த்யாகி என்றார்,நேரு ராஜபாளையம் வந்த பொழுது எடுத்த புகைப்படம் ஒன்றை காண்பித்தார் .அன்றைய காங்கிரசையும் ,இன்றைய காங்கிரசையும் மனம் ஒப்பிட்டு சிரித்ததை தடுக்க முடியவில்லை .கொஞ்ச நேரம் பொதுவாக பேசி கொண்டிருந்தார்கள் , எப்படா கிளம்புவது என்று காத்து கொண்டிருந்தேன் நான் .அம்மாவிற்கும் ,பெரியாம்மாவிற்கும் சிக்னல் கொடுத்து கிளப்பினேன் , "கொஞ்சம் இருங்க " என்று சொல்லியபடியே ஒரு பை நிறைய மாம்பழங்கள் ,அத்தோடு ஒரு பெரிய தாம்பாளம் நெறைய தோல் சீவிய வெட்டிய துண்டுகள் .தோட்டத்தில் விளைந்தது ,தயங்காமல் சாப்பிடுங்கள் என்றார் .வேண்டாம் வேண்டாம் என்று வாயளவில் மறுத்துக்கொண்டே கண்களால் அந்த பழங்களை ருசித்தேன் ,பின்பு எப்படி அந்த தட்டு காலியாகியது என்றே தெரியவில்லை .சரி இத்தோடு கிளம்பலாம் என்று எழுந்தோம் ,உள்ளிரிந்து ஒரு பெண்மணி நாலைந்து டார்ச் லைட்டுகளோடு வெளியே வந்தார் ,சரி விருந்தாளிகளுக்கு பரிசு கொடுக்க எடுத்து வருகிறார் என்று எண்ணினோம் ."கீழே சாக் பீஸ்ல செஞ்ச சில சிற்பங்கள் இருக்கு ,கொஞ்சம் பாத்துட்டு கிளம்பலாம் " என்றார் .
குடும்பமே முன்னாள் வழி நடத்தி செல்ல ,பின்னால் தொடர்ந்து இறங்கினோம் .பூட்டியிருந்த ஒரு அறையை மெதுவாக திறந்தார் ,உத்திர திருநாள் உதய மார்த்தாண்ட வர்மன் பத்மநாபசாமி கோவில் பொக்கிஷத்தை பார்த்து ஏற்படும் ஒரு வியப்பு ,அது எங்கள் அனைவரின் முகத்திலும் வழிந்தது .ஆம் ,அங்கு ஒரு பொக்கிஷம் இருந்தது ,கலை பொக்கிஷம் .கண்களை விரித்து அகல சுற்றி நோக்கினேன் ,எங்கும் கண்ணாடி பேழைகள் ,அதற்குள் இருப்பது ஒரு உலகம் .காலத்தால் பிந்தியதால் என்பதாலோ என்னவோ எல்லாம் சுருங்கி சின்ன சின்ன துண்டுகளால் ஆன உலகம், சாக் பீசும், பிளாஸ்டர் ஒப் பாரிசால் ஆன உலகம் ,கும்பகர்ணன் இருந்து இருந்தால் நம்மை எல்லாம் எப்படி பார்த்து இருப்பான் என்று அறை வினாடி யோசித்தேன் அப்படி நான் கும்பகர்ணனை பார்த்தேன் - ஒரு அலைமாரியில் உறங்கும் கும்பகர்ணனை எழுப்பும் சேனை .
திரு.செல்லமா ராஜுவின் தம்பியின் மனைவியார் திருமதி.ஞானேஸ்வரி ,பெயருக்கு ஏற்ற மாதிரி அவர் ஞானேஸ்வரி தான் .அவர் தனியாளாக அந்த அறை முழுக்க சாக் பீசினாலும் , பீ.ஒ.பீ.யினாலும் மிக நுணுக்கமாக ஜீவனுள்ள அந்த சிற்பங்களை வடித்துள்ளார் .இராமாயண நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு அலமாரி முழுவதும் வைத்துள்ளார்கள் .பத்து தலைகளோடு ராவணன் எகத்தாளமாக தனது சயன அறையில் படுத்து இருப்பதாகட்டும் , அனாயாசமாக படுத்து உறங்கும் கும்பகர்ணனை எழுப்ப வாசிக்க படும் பேரி,துந்துபிகலாகட்டும் , இன்று போய் நாளை வா என்று ராமன் ராவணனை போர்களத்தில் தனது அறத்தால் வீழ்துவதாகட்டும்- அதே களத்தில் போரின் சேதாரங்களை , மானுட அழிவுகளை சித்தரிப்பது ஆகட்டும், அனைத்திலும் அத்தனை நேர்த்தி ,வியக்க வைக்கும் நுணுக்கம்.இதற்கு ஒரு சிறிய உதாரணம் - சிவன் மதயானை உரித்தல் நிகழ்வில் உட்பக்கமாக நோக்கினால் வெள்ளை நிறத்தில் யானையின் விளா எலும்புகள் செதுக்கபட்டுளது தெரிகின்றது .
பால கிருஷ்ணன் ஆடும் காலிங்க நர்த்தனத்தில் அந்தரத்தில் மிதக்கும் கிருஷ்ணன் என்று ஒவ்வொன்றும் மீள முடியாத பிரமிப்பையும் ,பரவசத்தையும் அளித்தது .ஒரு பெரிய மலை
போன்ற அமைப்பு அதில் வெவ்வேறு சன்னிதானங்கள் ,திருப்பதி ஏழுமலையான் முதல் ஐயப்பன் வரை ,கோவிலின் கச்சிதமான அமைப்பு ,உள்ளே டார்ச் அடித்தால் அங்கு விக்ரஹ ரூபமாக வடிக்கபட்டுளது தெரியும்.
இத்துடன் அங்கு நான் எடுத்த படங்களை இனைக்கிறேன் - காண்க .எனது புகைப்பட கருவி ஆறு மெகா பிக்சல் அளவே ,மேலும் உற்சாகத்தில் சரியாக எடுக்கவில்லை இருந்தாலும் பார்க்க வேண்டும் .புகைப்படங்களை தரவிறக்கம் செய்து பெரிதாக்கி பார்ப்பது நலம் .
அத்தனை அமைதியாக அவர் ஒவ்வொன்றாக விளக்கினார் , மாடியில் முற்று பெறாத நிலையில் மகாபாரதம் உருவாகி கொண்டிருக்கிறது .இவர் எதையும் பார்த்து வரையவில்லயாம் ,அவராக கதையை வாசித்து வாசித்து உருவாக்கி கொண்ட உருவகங்களை நமக்கு அளிக்கிறார் .இதை செய்து முடிக்க அவருக்கு பத்து வருடம் ஆகி உள்ளது .ஒரு சிறு கோணல் கூட இதை அவலட்சணம் படுத்தி விடும் ,மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டும் .
இது ஒரு தவம் போன்றது ,மனம் முழுவதையும் குவிய செய்ய வேண்டும் ,ஒரு யோகம் போல ,தியானம் போல செயலும் செய்பவனும் ஒன்றாக இணையும் உத்தம புள்ளியில் உயர்ந்து நிற்கும் கலை வடிவம் ,அதை அவர் கைவர பெற்றுள்ளார் .இவருடைய திறன் வெளியில் அவளாக பிரபலமாகவில்லை ,ஒரு தனி பெரும் கண்காட்சி நடத்தும் அளவிற்கு அங்கு விஷயம் இருக்கிறது .
இதை ஒரு நிரந்தர கண்காட்சியாக வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு கோரிக்கை வைத்து விட்டு வந்தேன் .சிறு வயதிலிருந்து அவர் இதை செய்து வருகிறார் ,அவருக்கு இப்பொழுது சுமார் ஐம்பது வயது இருக்கலாம் .முக்கியமாக மனமார பாராட்ட வேண்டியது அவர்களது குடும்பத்தை .பொதுவாக ஒரு இந்திய கூட்டு குடும்பத்தில் பெண்களின் தனி திறன்கள் வெளிபடுவதர்கான சாத்தியங்கள் மிக மிக குறைவு."போய் வேலை வெட்டிய பாரு " என்று அனுப்பிவைத்து விடுவார்கள் ,இப்படி பல திறன்கள் கொண்ட பெண்கள் வெளி உலகிற்கு வரமாலே மறைந்து போய்விடுகின்றனர் .ஆனால் மாறாக ஒரு நாளைக்கு பல மணி நேரம் செலவிட வேண்டிய இத்தகைய படைப்பூக்கம் மிக்க திறன்கள் ஒரு கூட்டு குடும்பத்தில் வெளிக்கொணர பட்டுள்ளது என்பது அந்த குடும்பம் இவருக்கு கொடுத்த ஊக்கத்திற்கு சான்று .
தொன்மங்களும் காப்பியங்களும் கேட்டு வளர்ந்த சூழலில் இத்தகைய படைப்புகள் எமக்களித்த எழுச்சி தீவிரமானது .அன்றைய மாலையை மிக சிறப்பான மறக்கமுடியாத அனுபவங்களாக மாற்றியதற்கு திருமதி .ஞானேஸ்வரி மற்றும் குடும்பத்தாருக்கும் உளமார்ந்த நன்றி .


நான் பல சமயங்களில் யோசிப்பதுண்டு ,கலைகளின் நோக்கம் தான் என்ன? மனிதனுள் நிரப்பிடமுடியாத ஒரு ஏக்கமும் வெறுமையும் எப்பொழுதும் இருக்கிறது ,அதை கண பொழுதேனும் கலை நிரப்புகிறது ,ஒரு நொடியேனும் முழுமையின் ருசியை நமக்கு தருகிறது .

Saturday, July 2, 2011

குற்றால குறிப்புகள்

குற்றாலம்.இந்த வாரம் போகலாம் என்று முடிவு எடுத்த சமயத்திலிருந்து மனம் அதன் நினைவாகவே இருந்தது .கடைசியாக எட்டு வருடங்களுக்கு முன் சென்றது ,பனிரெண்டாம் வகுப்பு முடித்து விட்டு ,கலந்தாய்வுக்காக காத்திருந்த நேரம் ,அத்தனை சான்றிதழ்களையும் கையில் வைத்து கொண்டு ஒவ்வொரு அருவியாக குளித்த நினைவு . வருடம் தவறாமல் சென்று கொண்டிருந்த காலம் மாறி விட்டது .ஒவ்வொரு வருடமும் திட்டம் பலமாக இருக்கும் ,ஆனால் ஏதோ ஒரு சிக்கல் வந்து திட்டத்தை குலைத்து விடும் .

ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் சீசன் ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கும் .அந்த தூய வெள்ளை நிற அலை அலையாக பரவும் தேவதை கூந்தல் போல் தூரத்தில் தெரியும் அருவி ,அருகில் செல்ல செல்ல ஒம்காரமாக ஒலிக்கும் அந்த ஒலி,வெடவெடவென்று தாடை நடுங்க உடல் குளிர தண்ணீரின் முதல் ஸ்பரிசம் நம் உடலை தீண்டும் அந்த கணம் ,அது ஏற்படுத்தும் பரவசம் . மனம் முழுவதும் நினைவுகள் பாய்ந்து வந்தது .
திங்கள் மதியம் எனது வண்டியில் நான் ,அம்மா ,பெரியம்மா பெரியப்பா எல்லாரும் காரைக்குடியிலிருந்து புறப்பட்டோம் .மாலை ராஜபாளையத்தில் பெரியப்பாவின் நண்பர் ஒருவரை சந்திக்க வேண்டும் என்று சொன்னார் .ஐந்து மணிக்கு ராஜபாளையம் சென்றோம் ,அந்த நண்பர் சுமார் அறுபது வயது மதிக்க தக்க செல்லம்மா ராஜூ. பின்னர் அவர் வீட்டிற்கு அழைத்து சென்றார் .
குற்றால குளியல் பற்றி எண்ணம் தவழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் அவரது வீட்டிற்கு போவதெல்லாம் அலுப்பாக இருந்தது ,போய்விட்டு உடனே கிளம்பிவிட வேண்டும் என்று எண்ணி இருந்தேன் .ஆனால் உண்மையில் அவரது வீட்டிற்கு சென்றது ஒரு மகத்தான அனுபவம். அதை பற்றி தனியாக புகைப்படங்களோடு அடுத்த பதிவில் விரிவாக பேச வேண்டும் .உண்மையில் அது வாழ்வில் மறக்க முடியாத மாலைகளில் ஒன்று .

அங்கிருந்து புறப்பட்டு எட்டுமணிக்கு குற்றாலம் வந்தடைந்தோம்.வரும் வழி எங்கும் சாலை பராமரிப்பு வேலை நடைபெறுவதால் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும் பொழுது கூடுதல் கவனம் தேவை .இலஞ்சி நெருங்கும் பொழுதே காற்றில் ஒரு குளிரும் மெல்லிய சாரலும் வர ஆரம்பித்து விட்டது . இரவு சாப்பாட்டிற்கு ,மிளகாய் பொடி தடவிய இட்லியும் தயிர் சாதமும் கட்டி எடுத்து வந்தாள் அம்மா .மிளகாய் பொடியில் ஊரும் இட்லி திராட்சை மது போல ,நேரமாக நேரமாக அதன் சுவை கூடிகொண்டே போகும் .ஹோட்டல் குறுஞ்சி வில்லா -பேரருவிக்கு பக்கத்திலயே இருந்தது ,அறைகள் நல்ல விசாலமானதாக இருந்தது .நால்வருக்கும் ஒரே அறை போதுமானதாக இருந்தது .ஒரு நாள் வாடகை 1300 ரூபாய் (சீசன் சமயம் என்பதால் ).கார் நிறுத்தவும் நல்ல வசதி உள்ளது .கீழே சைவ- அசைவ உணவகம் ஒன்று உள்ளது . நேரே அறைக்கு சென்று வேகவேகமாக உணவை முடித்து கொண்டோம் .பிறகு 'குற்றால காஸ்ட்யும்' க்கு மாறினோம் .ஒரு பெர்முடாசும் துண்டும் ஆண்களுக்கு ,பெண்களுக்கு நைட்டி -இதுவே குற்றால காஸ்ட்யும் .
மெல்லிய சாரல் ,சிலுசிலுவென்று வருடும் காற்று ,ஓட்டமும் நடையுமாக பேரருவி -மெயின் பால்ஸ் நோக்கி சென்றோம் .இரவு ஒன்பது மணி .அருவியை நெருங்க நெருங்க அந்த தூய நிறமற்ற அந்த குளிர்ந்த நீர் மௌன பாறைகளில் மோதி எழுப்பும் பேரிரைச்சல் அதிகரித்து கொண்டே வந்தது .குற்றால நாதர் கோவிலை தாண்டி அந்த பாலத்தில் ஏறியவுடன் அருவியின் முழு தரிசனம் கிட்டியது .ஜனக்கூட்டம் ஒன்றும் அந்த அளவிற்கு இல்லை .கண்ணாடியை கழட்டி பையில் வைத்துவிட்டு மெதுவாக அருவியை நோக்கி நடக்க தொடங்கினேன் .அந்த குளிர்ந்த நீர் வெம்மையான சருமத்தின் மீது பட்டு ஒரு எக்களிப்பை அளித்தது ,உடல் ரோமங்கள் எல்லாம் சிலிர்த்து எழுந்தது .மெல்ல உடல் சுரபிகள் எம்மை அந்த குளிருக்கு தயார் படுத்தும் மாற்றங்களை உணர முடிந்தது .மூலிகையும் நீரும் கலந்த அந்த வாசனை ,அது குற்றாலத்திற்கு மட்டுமே உரித்தான வாசனை .

ஓரமாக கொஞ்சமாக வழிந்து கொண்டிருந்த நீரில் ஒரு கரிய பெரிய பழுவேட்டையறை ஒத்த ஒரு உருவம் , போலார் வெண் கரடி போல உடலெங்கும் சோப்பு போட்டுகொண்டு இதற்கு முன் வருடக்கணக்காக இங்கு குளிக்கவே காத்திருந்து பிறவி எடுத்தது போல் தேயோ தேய் என்று தேய்த்து கொண்டிருந்தார் .மெதுவாக அந்த வழியும் தண்ணீரில் காலை மட்டும் நீட்டி சட்டென்று எடுத்து விட்டேன் .குழந்தையிடம் முகம் பொத்தி விளையாடும் தாய் போல உடலின் ஒவ்வொரு பகுதியையும் லேசாக காண்பித்து பின்வாங்கி சூடு தேடி ஒளிந்து கொண்டேன் .இந்த சில்மிஷ விளையாட்டு அதிக நேரம் நீடிக்கவில்லை ,பிறகு புதியதொரு துணிவு பிறந்து சடாரென்று உள்ளே நுழைந்து முழுவதும் நனைந்து விட்டேன் .கண்களை அகல விரிக்க முடியவில்லை ,நீர் கோடுகள் மட்டுமே தெரிகின்றன .அருவி ஒரு பால்ய பள்ளி தோழனை போல் அனைவரின் 'டௌசரையும் ' கழட்டி விளையாட முயன்றது ,நாணம் வந்த நம் மக்கள் ஒரு கையில் மானம் காத்து கொண்டே அங்கிருந்து நட்பு பாராட்டி கொண்டிருந்தார்கள் .
பாறைகளிலிருந்து பட்டு தெறிக்கும் நீர் நம் மேல் விழுவதற்கு முன் நடமாடும் கரும்பாறையாக வளர்ந்து நிற்கும் பிரம்மாண்ட உந்தியின் மேல் பட்டு ஊரார் மேல் விழும்.ஆடும் பாறைகளாக அந்த தொந்திகள் நம்மை சூழ்ந்து கொண்டு இருக்கும் . அருவியில் நின்று நீர் விழுந்து உடல் மரத்து போனதாலோ என்னவோ ,தன் கையில் 'சோப்பு ' போடுவதாக எண்ணிக்கொண்டு பக்கத்தில் இருக்கும் என் கைக்கு தேய்த்துவிட்டார் .அருவியில் சோப்பு ,ஷாம்பூ போடும் கலாச்சாரத்தை யார் தான் தொடங்கினார்களோ ? எரிச்சலாக இருந்தது . இயற்கையின் முன் சிறுமை பட்டது போல் ஒரு உணர்வு .
அருவிக்கு முன் எத்தகைய மாபெரும் வீரரும் நெஞ்சை நிமிர்த்தி கொண்டு அதிக நேரம் நின்றிட முடியாது ,பணியாத வணங்கமுடிகளையும் அருவி நீர் முதுகில் அடித்து தலையை குனிய செய்து முதுகை வளைத்து விடும் , ஆம் நம் அகந்தை இல்லாமல் போகும் தருணம் .அத்தனை ஜன நெரிசலின் ஊடேயும் நமக்குள் பூக்கும் ஒரு மௌனம் ,அந்த மாபெரும் மகத்தான தனிமை , அந்த அருவியோடு அருவியாக கரைந்து மறைந்திட முயலும் மனம் .இயற்கையின் கருணை பெருன்கொடையை எண்ணி அந்த அருவியின் நீரோடு இரு சொட்டு என் கண்ணீரும் கலந்து பரவியது .இது ஒரு அனுபவம் ,மகத்தான அனுபவம் .மனதின் அழுக்குகள் அனைத்தும் கரைந்து மறைகின்றது .பெரும் அமைதி குடிகொண்டுள்ளது .
குற்றாலத்தின் அருவிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை .ஊசி குத்துவது போல் குத்தும் பழைய குற்றாலம் -நீர் ஒவ்வொரு படியாக தத்தி தத்தி குதித்து ஓடிவந்து ஒரே பாய்ச்சலாக முதுகில் அறையும் .இங்கு நீர் ஒரு போர் வீரனை போல் ,திடிரென்று பதுங்கி தண்ணீர் இல்லாமல் போகும் ,பதுங்கிய பின்பு சடாரென்று முழு பலம் கொண்டு பாயும் செங்கிஸ்கான் படை போல .சிற்றருவி ஒரு நீரோடை போல ஒரே சீரான வேகத்தோடு கொப்பளித்து சிரிக்கும் பழைய தமிழ் பட நாயகி போல இருக்கும் .கொஞ்சம் சங்கோஜ பேர்வழிகளுக்கு ஏற்ற அருவி .இங்கு குளிக்க ஒரு தனி திறன் வேண்டும் .சக்கர வ்யூஹத்தை பிளந்து கொண்டு உள்ளே செல்லும் அபிமன்யு கூட இங்கு வெற்றி பெறுவது கடினம் தான் .பத்து பதினைந்து ஸ்தூல சரிரங்கள் அருவியின் நீருக்கு பாதுக்காப்பாக அரண் அமைத்து நிற்பார்கள் ,அவர்களை மீறி உள்ளே நுழைந்து குளிப்பது என்பது சற்று கடினம் தான் .பாறையை ஒட்டி இடுக்கில் சென்று பின்புறத்திலிருந்து முன்புறம் வந்து குளிக்கும் லாவகம் தெரியவேண்டும் ,இல்லையேல் ஓரமாக வேடிக்கை பார்த்துவிட்டு திரும்ப வேண்டியது தான் .

குழாங்கற்களை கொண்டு அடிப்பது போல் இருக்கும் பேரருவி .முதுகில் கருஞ்சிவப்பாக ரத்த கட்டு ஏற்படுத்திவிடும் வல்லமை உடையது .ஐந்து விரல்களை நீட்டியது போல் உள்ள ஐந்தருவி ,ஒவ்வொரு விரலிலும் வெவேறான அனுபவம் கொடுக்கும் ஐந்து இந்திரியங்கள் போல இருக்கும் .சூரிய ஒளியில் நீர் பட்டு அத்தோடு உடலெங்கும் உள்ள எண்ணெய் கலந்து அங்காங்கு ஏற்படும் குட்டி குட்டி வானவில்கள் .

மனிதர்கள் தான் எத்தனை ரகம்? முழு போதையில் வெறித்த பார்வையுடன் நேர் கொண்டு நடக்கும் திறமைசாலிகள் ,அருவியினிடம் கூட தன் உடலை காட்ட தயங்கி பேன்ட் சட்டை போட்டு குளிக்கும் கூச்ச சுபாவிகள், அருவி நீரில் அனைத்து ஆடைகளும் அடித்து சென்றாலும் அதை பற்றி கவலை படாத வேதாந்திகள் ,அத்தனை பெரிய கருணை பொழிவில் ஓரத்தில் நின்று கொண்டு சொம்பில் தலைக்கு ஊற்றிகொள்ளும் எளிய மனிதர்கள் ,இதற்கு முன் குளித்தே இல்லாதது போலும் இதுவே கடைசி
முறை என்பது போலும் குளிக்கும் தீவிரவாதிகள் ,தயங்கி தயங்கி குரங்கிற்கு முறுக்கு ஊட்டிவிட்டு அதை புகைப்படம் எடுக்கும் நிபுணர்கள் ,பின்பு அந்த குரங்கு மேலும் முறுக்கு வேண்டும் என்று சீரும் பொழுது பயந்து ஓடும் பெண்கள் ..இன்னும் எத்தனையோ சித்திரங்கள் .
திங்கள் இரவு தொடங்கி செவ்வாய் முழுவதும் பின்பு புதன் மதியம் வரை நீடித்தது இந்த குளிவெறி.எட்டு முறை குளித்தோம் ,ஒவ்வொரு முறையும் ஒரு மணி நேரத்திற்கு குறைவில்லாமல் .மூன்று முறை பழைய குற்றாலம் ,ஐந்தருவியிலும் பேரருவியிலும் தலா இரண்டு முறைகள் ,சிற்றருவியில் ஒரு முறை .குளித்தவுடன் ஒரு அகோர பசி பீடிக்கும் ,குற்றாலத்தில் உணவகங்கள் சுமாராகவே இருப்பது வருத்தம் தான் .பேரருவிக்கு அருகில் கோமதி விலாஸ் என்று ஒரு கடை உண்டு அங்கு தான் முன்பு சாப்பிடுவது வழக்கம் .இப்பொழுதும் அந்த கடை அங்கு உண்டு .ஒரு சிறிய அக்ரஹாரத்து வீட்டை உணவகமாக சீசனுக்காக மாற்றி உள்ளனர். மெட்ராஸ் சரவணா பவன் போல சற்று நேரம் நின்று அதன் பின்பு தான் சாப்பிட முடியும் .முன்பு இங்கு மதியம் எடுப்பு சாப்பாடு உண்டு இப்பொழுது ஆள் பற்றாகுறையால் நிறுத்திவிட்டிருந்தார்கள் .ஓரளவுக்கு தரமான ருசியான சிற்றுண்டி இங்கு கிடைக்கிறது .

அருகில் உள்ள இலஞ்சி முருகன் கோவிலுக்கும் ,குற்றாலநாதர் கோவிலுக்கும் சென்று வந்தோம் .படகுகுழாமில் 'போட்டிங்' சென்றோம் .சுகமான காற்றோடு இளம் சூடான வெயில் சேர்ந்து அந்த படகில் மீது அமர்ந்து நிதானமாக பெடல் செய்து போகும் பொழுது மனம் மிக அமைதியாக இருப்பதை உணர முடிந்தது .
அருவி நீருக்கு தோல் ,முடியை வரல செய்யும் தன்மை உண்டு ,அதனால் எப்பொழுதும் தலைக்கும் உடலுக்கும் சிறிது எண்ணெய் வைத்து கொண்டு குளிக்க செல்வதே உத்தமம் .அங்கு மாலிஷ் என்ற பெயரில் தன் இஷ்டத்திற்கு கையை காலை முறிக்கும் ஒரு புதிய கலை உருவாகி இருப்பதை பார்க்க வேடிக்கையாக இருந்தது .காசும் கொடுத்தும் நம் மக்கள் நன்றாக அடி வாங்கி சென்று கொண்டிருந்தனர் .முடிந்தவரை இத்தகைய முரட்டு முறைகளை தவிர்ப்பதே நலம் .

பொதுவாக வீட்டில் தலைக்கு ஊற்றிகொண்டாலே எனக்கு தலையில் நீர் இறங்கி கனத்து விடும் ,பின்னர் வலி எடுக்கும் .இத்தனை முறை குளித்ததற்கு ஒரு சிறு தும்மல் கூட வரவில்லை ! ஆனால் உடலெல்லாம் களைத்து வலித்தது .அந்த களைப்பும் வலியும் குளிப்பதாலே நீங்கியது .இது ஒரு சங்கிலி தொடர் போல் நீண்டது .குளித்து குளித்து களைத்துவிட்டோம்.
அங்கிருந்து புறப்பட்ட பின்பு இரவெல்லாம் அருவியில் குளித்தது போல் அந்த பிரமை நீடித்தது .ஒரு நல்ல பயணம் என்பது அதை முடிக்கும் பொழுது நம் இயல்பு வாழ்கையின் சலிப்பை நமக்கு ஞாபகபடுத்தும் ,அதற்குள்ளாக முடிந்துவிட்டதே என்று வருத்தம் ஏற்படும் ,இன்னும் கொஞ்சம் நீடிக்க கூடாதா என்று ஏக்கம் நம்மை வாட்டும் ,இவை அனைத்துமே குற்றாலத்தை விட்டு கிளம்பி செல்லும் சமயத்தில் மனமெங்கும் நிறைந்தது . தனக்குள் ஆழ்ந்து இருக்கும் மௌன ஞானியை போல் அந்த பாறைகள் வெறும் பார்வையாளர்களாக என்னையும் அதன் மீது விழுந்து ஓடி வரும் நீரையும் பார்த்து கொண்டிருந்தது .அடுத்த வருடம் வரும் சமயம் என்னை அதற்கு அடையாளம் தெரியுமா என்று தெரியவில்லை .

Friday, June 24, 2011

கடவுளுக்கு ஒரு விண்ணப்பம்


பலர் பல பெயரால் பணிபரம் பொருளே
உலகில் ஓர் அணுவும் உனையலாது அசையாது
என்னும் உரை நினைந்து உன்னை வேண்டுவல் இது
முன்னை நாள் இளமையும் முடிவிலா வாழ்வும்
உதவினை சிலர்க்கு என ஓதுவார் ஒரு கதை
இதமுற அவ்வரன் எனக்கு நீ உதவினும்
கொள்ளேன் தள்ளோணாச் சள்ளையே கொடுக்குமால்
செல்வமும் இன்பமும் செல் சினச் செருக்கும்
நல்கு என நயவேன் நன்மைதீர் வறுமையும்
பலப்பல இன்னலும் விலக்கு எனப் பணிகிலேன்
நன்றே வருகினும் தீதே விளைகினும்
ஒன்றே என மதித்து ஏற்கும் என் உள்ளம்
வேண்டிலேன் கீர்த்தி ஈண்டு அது நிகர்க்கும்
வறிய பேய்த் தேர் எனறிவேன் மற்று யான்
உன்னை இன்று இரப்பது என்ன வெனில் கேள்
என்னின் எளியவர்க்கு என்னால் இயன்றதை
மன்னும் என் அகஒளி காட்டும் வழியினில்
உன்னி யுழைக்க உகந்தருள் அதன் பொருட்டு
இந்த என் உடல் இருக்கு நாள் மட்டும்
நொந்து நோவாதருள் நோய் வருமாயினும்
மனமும் அறிவும் மயங்கி விடாது அருள்
தினமும் இதுவே செய்யும் அவா அருள்
உடல்வலியோயுமேல் மனோவலி நிலைபெராவிடில்
உடனே உயோர் ஒழிந்து உலக
நடனசாலையை நான் நழுவிட அருள்கவே
.
(தனி பாடல் திரட்டு - கடவுளிடம் விண்ணப்பம் -குருவென நான் கருதும் -டாக்டர் .மகாதேவன் எழுதிய திரிதோஷ மெய்ஞான தத்துவ விளக்கம் எனில் நூலிலிருந்து இங்கு பதிக்க பட்டுள்ளது )
முதல் வாசிப்பிலயே என்னை கரைய செய்த வரிகள் ,இறைவன் எனும் கட்டமைப்போ /சக்தியோ /உருவமோ /அருவமோ /பிரபஞ்ச நியதியோ -அது எதுவாக இருந்தாலும் மனமார ,உளமார என் உள்ளம் வேண்டுவது இதுவே .

Sunday, June 19, 2011

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் -1

மானுடன் ஞானத்தை நோக்கி பயணம் செய்யும் தருணம் எது ? மானுட வாழ்வின் பொருளென்ன ? பிறப்பதும் மரிப்பதும் ஏன் ? உறவுகளின் பொருளென்ன ? துக்கமும் சுகமும் ஏன் ? காலம் என்பது என்ன ?
புலன்களுக்கு புலப்படாத ஒரு மிக பெரிய பகடை ஆட்டத்தின் காய்களா? வீழ்வதும் ,பிழைத்து இருப்பதும் மட்டுமே சாத்தியமான கோடானகோடி உயிரின் அர்த்தமற்ற சாகரத்தின் ஒரு சிறு துளி மட்டும் தானோ ?
எதன் மீது நிற்கிறோமோ ,எதை சாஸ்வதம் என்கிறோமோ அவை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டால் ,பின்பு எதன் மீது நிற்பது ,எதை பற்றி கடப்பது ? அப்படி ஏதேனும் ஒன்றை பற்றி தான் ஆகவேண்டுமா ? அக இருட்டில் தொலைந்து விடுவோம் , மனிதன் தனியன் .அவனுக்கு ஆக பெரிய பயம் அவனது மனம் தான் ,ஆம் அதை அவன் நெருங்குவதில்லை ,பாவனைகளால் விளக்கி அதை தர்க்க சட்டகத்தில் அடைத்து சொற்களால் பூசி ஒரு மாய மாளிகையை எழுப்புகிறான் .மனதை சந்திக்கும் திராணி மனிதனுக்கு இருப்பதில்லை ,உண்மைக்காக தேடல்களும் ,விவாதங்களும் ,தரிசனங்களும் ,இலக்கியங்களும் ,காப்பியங்களும் ,காவியங்களும் இன்னும் அனைத்தும்- சொற்களின் பிரவாகங்கள் நிரப்பி தன்னை தானே நம்ப வைக்கும் முயற்சி தானோ ? வாழ்க்கைக்கு பொருள் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் உரக்க சொல்வது தன் மனதை நம்ப வைக்கும் வெற்று உத்தியோ ?
மனிதனின் ஆக பெரிய சுமை ஞானம் தான் .ஆம் இந்த ஞானம் சுமை ,அதை உருவாக்க தர்க்கங்களை சுமக்க வேண்டும் ,தர்க்கங்களை உருவாக்கி நம் அகந்தைக்கு தீனி போட வேண்டும் .மனிதனுக்கு 'நான்' மட்டுமே உண்டு ,பிறது அனைத்தும் அவனை சார்ந்தது எனும் எண்ணம் .'நான்' மட்டுமே அவனது நிரந்தர முகம்,அவன் மட்டுமே அவனுக்கு மிக முக்கியமானவன் .பிறிது அனைத்தும் அவனது தேவைகள் மட்டும் தானோ ? எத்தனை பெரிய செருக்கு ? பிரபஞ்ச மகா இயக்கத்தின் ஒரு துளி ,ஒரு சிறிய அணு கொள்ளும் செருக்கு .அவனுக்கு சூரியனும் சந்திரனும் ,பிரபஞ்சமும் ,காலமும் அவனை சுற்றி மட்டுமே சுற்றுகிறது .அவனுக்கு அவனை தவிர வேறு யாரும் முக்கியம் இல்லை போலும் . மனிதன் பூரணத்தை நோக்கி ,முழுமையை நோக்கி ஓடுகிறான் ,அவன் தன்னளவில் முழுமையாக இல்லை என்று அவன் எண்ணுவதாலே ஓடுகிறான் .பூனையும் ,புலியும் எதை தேடியும் ஓடுவதில்லை ,இரையும்,துணையையும் தவிர ,அவைக்கு நோக்கங்களை பற்றி கவலை இல்லை .இம்மையின் துயரங்களை பற்றியும் மறுமையின் பயமோ அவைகளுக்கு இல்லை .
நாம் நம் இயல்பை தொலைத்து விட்டோம் ,வெறும் மிகைகளும் ,பாவனைகளும் நம்மை கட்டமைத்துவிட்டது .மிகைகளும் பாவனைகளும் நம்மை ஆட்கொண்டுவிட்டது ,நம்மை நாமாக இல்லாமல் ஆக்கி புதிய பிம்பங்களை உருவாக்கி சுற்றி எழுப்புகிறது .
வேண்டாம் எதையும் அறிந்துகொள்ள வேண்டாம் ,அறிதல் ஒளியல்ல ஒளி போல் ஒரு பாவனை.அறிதல் சுமை என்று அறிந்த பின்னும் ,மதுவின் போதை போல் நம்மை ஞானம் உள்ளிழுக்கிறது .ஆழம் ,இருட்டு ,பயம் என்று அறிந்த பின்னும் நம்மால் மீண்டு வர முடியவில்லை .ஆம் இது ஒரு போதை ,ஞான போதை ,இன்னும் இன்னும் என்று நம்மை இழுத்து செல்லும் போதை ,நம்மை தனியனாக்கி வெட்டவெளியில் கூரைகளும் ,தளங்களும் இல்லாது அந்தரத்தில் அந்தகாரத்தில் ஆழ்த்திவிடும் போதை .ஆம் நாம் ஒரு அடிமை ,இவை அனைத்தும் தெரிந்தும் இதிலிருந்து மீள வழி இல்லாது யுகங்களாக கேள்விகளோடு ஓடி களைக்கும் அடிமைகள்.
இதுவரையிலான மானுட அறிதல் தான் என்ன ? எதையும் அறிய முடியாது என்பதே ஆக சிறந்த அறிதல் .
இந்த வாழ்வு துக்கமா ? இல்லை மனிதனுக்கு மகிழ்ச்சியே இயல்பு ,உயிரின் துடிப்பு மகிழ்ச்சியே ,ஆனந்தமே சாஸ்வதம் .இதை தான் மனம் நம்பவேண்டும் என்கிறது ,ஆயினும் இது உண்மை இல்லை என்று மனதின் ஓரத்தில் ஒரு விஷ பாம்பு சீறுகிறது .மனிதன் விஷமா ? உயிர் விஷமா ? இல்லை என்னுள் சுகந்தம் இருக்கிறது ,பூக்கள் மலர்கிறது ,பட்சிகள் சிறகுகளை அழுத்தி எழும்புகிறது .எல்லையற்ற இருமை ,எங்கும் ,இது தான் வாழ்வா ? பிரபஞ்சத்தில் இருமையை கடந்த ஒருமையை நம் அனுபவத்தில் உணர முடியாதா ? அப்படி எதுவுமே இல்லையோ ? தீராத வினாக்கள் .
இல்லை இவை எவற்றிக்கும் நான் செவி சாயக்கபோவதில்லை,வினாக்களுக்கு விடை தேடினால் விடயுள் பல வினாக்கள் முளைக்கும்.ஆம் ஞானம் ஒரு மகிசாசுரன் ,அவன் எழும்போது அவனை வீழ்த்த நாம் உபயோகிக்கும் தர்க்கம் எனும் ஆயுதம் ,அவனை குத்தி செருகி சிதறடித்த பின்பு ,ஒவ்வொரு சிதறல்களும் ஒரு கேள்வியாக முளைக்கிறது ,இந்த பிரபஞ்சமே கேள்விகுறிகளின் காடோ ? நேற்றைய,இன்றைய ,நாளைய கேள்விகள் வளைந்து எழுந்து எங்கும் நிற்கின்றன .கனவு தான் ,வாழ்வே ஒரு பெரும் கனவோ ? யாருடைய கனவு ?யாருடைய கனவில் நான் வாழ்கிறேன் ? இதிலிருந்து என்றேனும் ஒரு நாள் ஒரு புன்முறுவலோடு விழித்து எழலாம் என்பது தான் நமது வாழ்வின் நம்பிக்கையோ ? விழிக்க வேண்டும் என்று நினைக்கும் தோறும் அதுவும் கனவின் ஆழத்தில் சென்று சேர்ந்து ,அதுவும் கனவின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது ,விழிக்க வேண்டும் எனும் எண்ணம் கூட ஒரு கனவோ ? விழிப்பு தன்னிச்சயானதோ ? அதை எதுவும் நிகழ்த்த முடியாதோ ?

மரணம் என்றால் என்ன? தணியாத இந்த கேள்வி ,மானுடன் வாழ்வை தொடங்கியது முதல் அணையாது இருக்கிறது .மரணம் ,சதுரங்கம் விளையாடும் சிறு பிள்ளை போல் ,தனக்கு தோன்றிய நேரத்தில் விளையாட்டை குற்ற உணர்வின்றி குதூகலமாக கலைத்து விடும் .கட்டங்களில் சிக்கிய ராஜாக்களும் ,மந்திரிகளும் ,ராணிகளும் இதை உணர்வதில்லை .மரணத்தின் பின்பு என்ன ?

வேண்டாம் ,எனக்கு அந்த மிருக நயனியின் பச்சை நிற பார்வை .வாழ்ந்து சுவடற்று மறையும் தொள்ளாயிரம் பூச்சிகளை போல் ,தினம் தினம் மண்ணில் உதிர்ந்து தனது சுகந்தத்தை காற்றுக்கு தந்து மண்ணில் மட்கிபோகும் பல லட்சம் காட்டு பூக்களை போல் நானும் ஆகிவிட வேண்டும் .

Saturday, June 4, 2011

ஒளியிலே நனைவது

சில சம்பவங்கள் ஏன் நடக்கிறது என்பது நமக்கு புரிவதில்லை .சில சம்பவங்கள் நடக்க வேண்டும் என்று உளமார பிரார்த்தித்தும் பல நேரங்களில் நமக்கு அது நடக்கமால் நழுவி ஓடி விடும் .சில நேரங்களில் நாம் கனவு கண்ட அத்தனை மகத்தான தருணங்களும் ஒரு சேர அமைந்தால் நாம் எப்படி அதை தாங்கிகொள்வோம்?
மனிதர்களுக்கு துக்கத்தில் ஒரு ருசி இருப்பதை புரிந்து கொண்டுவிட்டனர் .மனித துக்கங்கள் பரவி வசீகரிப்பது போல் சந்தோஷம் பரவுவது இல்லை .அதனாலே மகத்தான ,மகிழ்ச்சியான தருணங்களில் நாம் வாயடைத்து நின்றுவிடுகிறோம் .
ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கி மே மாத முதல்வாரம் வரை எனக்கு அப்படி சில தருணங்கள் வாய்க்க பெற்றது .
கடந்த ஒரு வருடமாகவே ஜெயமோகன் மேல் ஒரு ஈர்ப்பு என்னை அறியாமல் எனக்குள் வளர்ந்து வந்துள்ளது .தொடர்ந்து இணையத்தில் அவருடைய கட்டுரைகள் ,கதைகள் அதன் பின்பு கடந்த இரண்டு புத்தக திருவிழாவிலும் அதிகம் வாங்கியது அவரது எழுத்துக்களே .ஆழ்ந்த இலக்கிய ஞானம் ஏதும் இல்லையென்றாலும் தொடர்ந்து ஒரு வசீகரம் எனக்கு ஜெயமோகனின் எழுத்துக்கள் பால் உள்ளது .இதற்கு தொடக்கமாக இன்றைய காந்தியை தான் சொல்ல வேண்டும் .இன்றைய காந்தி என்னுள் பெரும் தாக்கத்தையும் ,நான் நம்பிய பல விஷயங்களின் வேறு கோணத்தையும் எனக்கு வெளிச்சம் போட்டு காட்டியது .இணையத்தில் உள்ள அவரது கூகிள் குழுமத்தில் இணைந்தேன் .அவரை நேரில் சந்திக்கவேண்டும் எனும் அவா மனதை அழுத்தியது .
இதற்கும் ஒரு காரணம் உண்டு ,சென்றவருடம் ஈரோடு கதிர் அவர்கள் பதிவில் ஏழூர் அய்யாசாமி எனும் பெரியவரை பற்றி வாசித்தேன் .பத்தாயிரம் மரங்களை தனிமனிதனாக வளர்த்தெடுத்தார் .அவரது ஏழ்மையை கடந்து ,சமூகத்தை மேம்படுத்த அவர் வாழ்நாள் முழுவது செயாலாற்றினார் .அவரை சந்திக்கவேண்டும் எனும் ஆசை எனக்கு வந்தது .பின்பு இங்கு காரைக்குடியில் நாங்கள் நண்பர்களாக சேர்ந்து ஒரு பதினைந்து மரங்களை தெருக்களில் நட்டோம் .அதில் இரண்டு மட்டுமே பிழைத்து உள்ளது .அவரை சந்திக்க பல தடவை திட்டம் இட்டும் ஏதோ ஒரு தடை வந்தது .என் மனம் அந்த திட்டம் நிறைவேற தடையாக இருந்ததே நிஜம் ,ஏதேனும் ஒரு காரண கிளையை பற்றிக்கொண்டு அது தொங்கியது .பின்பு இந்த வருடம் ,சில மாதங்களுக்கு முன்பு அவர் மறைந்தார் எனும் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் தள்ளியது .இனி யாரேனும் சந்திக்க எண்ணினால் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது முட்டாள் தனம் ,வாழ்க்கை மிகவும் சிறியது என்பதே நான் கற்ற பாடம் .
தொடர் கடித பரிமாற்றம் மூலம் மே ஒன்று -ஞாயிறு அன்று அவரை சந்திக்க அனுமதி கொடுத்தார் .ஆயினும் இறுதியில் அவர் அன்று சென்னை செல்வதாக முதல் நாள் சொல்லிவிட்டார் .மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த சந்திப்பு நிகழவில்லை எனும் வருத்தம் இருந்தது .
சரி இந்த ஞாயிறு எனது 'சந்திக்க வேண்டிய நபர் ' லிஸ்டில் உள்ள இன்னொருவரை சந்திக்க முடியுமா என்று பார்த்தேன் .அவர் தமிழருவி மணியன் அய்யா .கடந்த சில ஆண்டுகளாகவே அவரை எனக்கு பிடித்தது ,அவரது நேர்மை பிடித்தது ,மேலும் மனதில் இருக்கும் காந்தி பிசாசு வேறு ஆட்டுவித்ததால் அவரை சந்திக்க சந்தர்பம் தேடி நின்றேன் .அவரை தொடர்புகொள்ள வழி ஏதும் கிடைக்கவில்லை .வலையில் அவரது முகவரியை தேடி பார்க்க முயன்று தோற்றேன் .விகடனுக்கு கேட்கலாம் என்று எண்ணினேன் .யதார்த்தமாக எங்கள் ஊர் கேபிள் சானலை நோட்டம் விட்டு கொண்டிருந்த பொழுது கீழே ஒரு விளம்பரம் ஓடியது .தமிழருவி மணியன் முப்பதாம் தேதி காரைக்குடி அருகே பலவான்குடி வருகிறார் என்று .நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ,மீண்டும் எவளவோ முயன்றும் அந்த விளம்பரம் கண்ணில் படவில்லை .
பின்னர் அந்த கேபிள் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கேட்டறிந்தேன் .எல்லாம் நண்மைக்கே என்பது போல் உணர்ந்தேன் .
நானும் என் நண்பனும் பின்னர் மணியம்மாவும் எங்கள் ஊரிலிருந்து காரில் புறப்பட்டு பலவான்குடி சென்றோம் ,காரைக்குடிக்கு அருகே என்றாலும் ,இதற்கு முன் நான் அங்கு சென்றதில்லை ,வழி விசாரித்து செல்ல இரவு எட்டு ஆகிவிட்டது .கொஞ்சம் பதட்டம் ,கொஞ்சம் ஆர்வம் என்று அவர் பேசும் இடத்தை நோக்கி சென்றோம் .நல்லவேளையாக அப்பொழுது தான் தொடங்கினார் .இரவு ஒன்பதே கால் வரை அவரது பிரசங்கம் தொடர்ந்தது .
மிக தெளிவான ,அவசியாமான கருத்துக்களை கோர்வையாக எடுத்துரைத்தார் .காமராஜர் சரியாகவே அவருக்கு தமிழருவி என்று பட்டம் கொடுத்துள்ளார் .
விழா முடிந்தபின்னர் ,மேடையிலிருந்து இறங்கியவரை வழிமறித்து ,என்னை அறிமுகம் செய்து கொண்டு ,சுப்புவையும் மணியம்மாவையும் அறிமுகம் செய்து கொண்டு ,அவரிடம் ஒரு இரண்டு நிமிடம் பேசினேன் .காந்திய மக்கள் இயக்கம் தொடர்பாக ."காசு சம்பாதிக்கணும் ,பதவி வேணும் என்றால் இங்க வராதிங்க தம்பி ,நம்கிட்ட இருக்குறத கொடுக்க தயாரா இருக்கணும் ,களப்பணி செய்யணும் அப்டின வாங்க ,இதுக்கு சில படிவங்கள் விதிகள் எல்லாம் இருக்கு ,புதிய ஆட்சி வந்தவுடன் இதன் அடுத்தகட்டம் பற்றி பேசலாம் "-என்றார் மிகுந்த நம்பிக்கையுடன் .பின்பு அவரது செல் நம்பரை கொடுத்தார் வாங்கிகொண்டு விடைபெற்றோம் .மனம் நிறைவாக இருந்தது .ஒரு நல்ல மனிதரை ,நேர்மையான காந்தியரை ,நமது வாழ்க்கை தரத்தை ஒரு படியேனும் உயர்த்த முயலும் ஒரு நல்ல ஆத்மாவை சந்தித்த நிறைவு .
மீண்டும் மனம் ஒரு மாதிரி அரித்து கொண்டே இருந்தது ,ஞாயிறு தவிர வேறு நாட்கள் எனக்கு கிளினிக் உண்டு .மே முழுவதும் ஒவ்வொரு ஞாயிறும் ஏதேதோ வேலைகள் .ஜெயமோஹனை ஞாயிறு என்று இல்லாமல் வார நட்களிலேனும் சந்திக்க முடிவு செய்தேன் .

ஆயுர்வேதத்தை பொறுத்தவரையில் எனக்கு தேரிசனம்கோப் டாக்டர் .மகாதேவன் துரோணரை போல் .நான் ஒன்றும் ஏகலைவன் இல்லை ,ஆனாலும் அந்த இடத்திற்கு என்னை உயர்த்திக்கொள்ள முயல்பவன் .எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆயுர்வேத அறிவுஜீவி .அத்தனை மகத்தான மருத்தவரை நான் சந்தித்ததே இல்லை .சென்னையில் பயின்று கொண்டிருந்த சமயங்களில் அவரது புத்தகங்களும் அவர் பேசிய சி டிகளும் தினம் தோறும் என் மூளையை ஆக்கிரமித்தது .அவரிடம் சீடனாக சென்று ஒரு ஆறுமாதமாவது பயில வேண்டும் என்பது எனது கனவு ,ஆயினும் எனது குடும்ப சூழல் அதற்கு என்னை அனுமதிக்கவில்லை .அவரிடம் பயின்ற மாணவர்கள் அவரை பற்றி சொல்லியது எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது ,எனது சுயத்தை அடமானம் வைக்க வேண்டும் என்பது போல் இருந்ததால் நான் அவரிடமிருந்து சற்று தொலைவில் என்னை தள்ளி வைத்துக்கொண்டேன் .எல்லாம் இந்த பாழாய் போன ஈகோ !ஒரு மனிதனை அவனது விருப்பத்திளிருந்தும் ,ஞானத்திளிருந்தும் ,விடுதளையிளிருந்தும் எத்தனை தூரம் தள்ளி வைக்கிறது ?.இவர் எழுதிய சில புத்தகங்கள் எனக்கு தேவையாக இருந்தது .சென்னையில் அது கிடைக்கவில்லை .அவருடைய இடத்தில் மட்டுமே உள்ளதாக தகவல் வந்தது .தேரிசனம்கோப் அதுவும் நாகர்கோவிலில் பக்கமே இருப்பதாக சொன்னார்கள் .அவரையும் ஒரு மெயிலில் தொடர்புகொண்டேன் .அவருக்கு இருக்கும் வேலையில் திருப்பி தொடர்பு கொள்வார் எனும் நம்பிக்கை இன்றியே அதை செய்தேன் .மனதிற்கு சாக்கு வேண்டுமே ?எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று பதில் அனுப்பினார் .ஆச்சர்யமாக இருந்தது

சடாரென்று முடிவெடுத்தேன் -மே நான்காம் தேதி ,புதன் கிழமை வார நாள் என்றாலும் பரவா இல்லை அன்றே சந்திக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன் .செவ்வாய் இரவு கிளினிக் முடித்துவிட்டு .மதுரைக்கு புறப்பட்டேன் ,அங்கிருந்து எக்ஸ்பிரஸ் பேருந்து மூலம் நாகர்கோவில் .அதிகாலை நான்குமணிக்கு அங்கு பொய் சேர்ந்தேன் .இத்தனை சீக்கிரம் வருவேன் என்று எதிர் பார்க்கவில்லை .நமக்கு என்று ஒரு திசை உணர்வு உண்டு .அதை நம்பி அங்கு சுற்றி வந்து ஏதேனும் விடுதி தென்படுகிறதா என்று பார்க்கலாம் என்று பார்த்தேன் .சுற்றி சுற்றி அலைந்தேன் திசை உணர்வு பறந்து பொய் வியர்க்க விருவிருக்க தெருத்தெருவாக நடந்ததுதான் மிச்சம் .ஜெயன் கதையில் வரும் யட்சி ஏதேனும் பிடித்ததோ என்று பயம் வந்துவிட்டது .மணி ஐந்தாகியது .மீண்டும் வடசேரி பேருந்து நிலையத்துக்கே வந்தேன் .கோடைகால இரவுகளும்,காலைகளும் மிக அற்புதமாக இருக்கும் ,நல்ல காற்றோடு தெளிவான வானத்தொடும் இருக்கும் .
தேரிசனம்கோப் பேருந்து நின்றது ஏறி அமர்ந்துகொண்டு உறங்கிவிட்டேன் ,பின்னர் நடத்துனர் எழுப்பி டிக்கட் கேட்டார் .இடம் வந்தால் இறக்கிவிடுமாறு சொல்லிவிட்டு மீண்டும் உறக்கம் .காலை ஐந்தரைமனிக்கு இறக்கிவிட்டார் .அங்கேனும் தங்குவதற்கு ஏதும் வசதி இருக்கும் எனும் குருட்டு நம்பிக்கையில் அத்தனை சீக்கிரம் அங்கு வந்து இறங்கினேன் .அந்தகாரம் வரைந்த இருள் ஓவியம் .இருட்டுகளின் வெவ்வேறு நிழல்களை கண்டேன் .கருமையின் வெவ்வேறு அடர்த்திகள் சூழ்ந்து இருந்தன .முப்பக்கமும் சூழ்ந்த சிகரங்களின் கருமை ..இறங்கி ஆஸ்பத்திரி எங்குள்ளது என்று விசாரித்து சென்றேன் .உள்நோயாளிகள் வளாகத்தில் நடந்துகொண்டிருந்தனர் .கேட் வெளிப்புறம் நின்று பார்த்துகொண்டிருந்தேன் .யாரையும் எழுப்ப மனம்வரவில்லை .வாக்கிங் போய்கொண்டிருந்த ஒரு அம்மா -வாட்ச் மானை எழுப்பினார் .நான் இம்மாதிரி மகாதேவன் அவர்களை காண வந்துள்ளேன் நானும் ஒரு மருத்துவன் என்று சொன்னேன் .தங்க ஏதேனும் இடம் கிடைக்குமா என்று கேட்டேன் ,இங்கு விடுதி ஏதும் இல்லை என்றார் ,ஆஸ்பத்திரியில் வார்ட் ஏதும் காலியாக உள்ளதா என்று கேட்டேன் ,அதுவும் இல்லை என்றார் .அங்கு வாசலில் ,வேப்பெமரத்தடியில் ஒரு திண்ணை இருந்தது அதை பார்த்து இந்த இடம் கிடைக்குமா என்றேன் ,ஒரு மாதிரி சந்தேக கண்ணோடு உள்ளே விட்டார் .
திண்ணையில் பையை வைத்துவிட்டு கண்ணை அயர்ந்தேன் .இரவெல்லாம் இவர்களை சந்திக்க போகிறோம் எனும் உற்சகாமே எனது தூக்கத்தை களவாடியது .கொசுக்கள் என்னை என் தாய் போல் நேசிக்கிறது ,சுற்றி சுற்றி வந்து ராகம் பாடியது .கொஞ்சம் விடிந்தவுடன் அங்குள்ள குழாயில் பல் விளக்கி காலாற வெளியே நடந்தேன் .வயலும் மலையும் சூழ்ந்த அற்புத பிரதேசமது .
பசி என் கவனத்தை உடலின் இருப்பை நோக்கி திருப்பியது .பஸ்சில் இறங்கிய பிரதான சாலையில் ஒரு சாயா கடை,சிவன் பாடல்கள் சத்தமாக ஒளித்து கொண்டிருந்தது .அத்தனை காலை பொழுதில் நல்ல கூட்டம் பலர் அமர்ந்து ரசவடை சாப்பிட்டு கொண்டிருந்தனர் .எனக்கும் இரண்டு வடை இரண்டு ஆப்பம் கொண்டுவர சொன்னேன் .காலையில் புளித்த மாவால் செய்த ஆப்பத்தை உண்பது சரியா என்று யோசித்தேன்,பசி என்னை வென்றது .அந்த வடையும் ஆப்பமும் அத்தனை ருசி .ருசியை என் மூக்கு உணர முடிகிறது .இதை எழுதும் சமயம் கூட .
பின்னர் அங்கு டுட்டி டாக்டராக பணிபுரிபவரின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டேன் .அங்கு குளித்துவிட்டு .அந்த ஆஸ்பத்திரியை சுற்றி பார்த்தேன் ,மிகவும் நேர்த்தியாக அதிக காசு பிடுங்குதல் இல்லாத எளிய ஆஸ்பத்திரி .
அங்கு உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு சென்றேன் .கோவில் பழைய சோழர் ஆலயம் .நடமாட்டமே இல்லை .கீழிறங்கி பிரஹாரம் சுற்றி வந்தேன் .கோவில் அய்யரும் வாதியகாரரும் அமர்ந்திருந்தனர் .சற்று பேச்சு கொடுத்தேன் .இந்த இடத்தின் முழு பெயர் - திரு சரம் கோர்ப்பு -அது மருவி தேரிசனம்கொப் என்றாகிவிட்டது .ராமாயணம் பால காண்டத்தில் தாடகையை வதம் செய்ய ராமர் வில்லில் நாண் ஏற்றி அம்பை குறி பார்த்த தளம் என்று சொன்னார் .இங்குள்ள சிவனுக்கு ராகவேச்வரன் என்று பெயர் .
பின்னர் மகாதேவனை சந்திக்க திரும்பினேன் .அவர் புதன் மற்றும் வெள்ளி இருக்கமாட்டார் என்று சொன்னார்கள் .நல்லவேளை நான் சென்ற சமயம் அவர் இருந்தார் .உள்ளே அவரது நோயாளிகளை பார்க்கும் அறைக்கு சென்றேன் ,காலில் விழுந்தேன் .அமர சொன்னார் .என்ன விஷயம் என்று கேட்டார் .வாய் குழற உளறினேன் .அவரே ஒருவாறாக புரிந்துகொண்டார் .பையில்லிருந்து எங்கள் ஊரின் ஸ்பெஷல் ஐட்டங்களை எடுத்து வைத்தேன் ,நெய் வறுவல் சீவல் , மிச்சேர்,நன்னாரி சர்பத் .அவர் வெவ்வேறு கூட்டங்களில் சொன்ன கருத்துக்களை அவருக்கே திருப்பி சொன்னேன் .
அத்தனை பெரிய மருத்துவர் ,ஒரு நாளுக்கு நூறு புற நோயாளிகளை பார்க்கும் மருத்துவர் -அவர் என்னிடம் கேட்டார் -"என்பா நம்ம மருத்துவ முறையே ஒரு ஏமாற்று முறையோனு சில நேரங்களில் தோணுது ".நான் கலங்கிவிட்டேன் .
ஆம் சில சமயங்களில் எனக்கும் இம்மாரி தோன்றியது உண்டு .ஆனால் நமக்கு தான் அறிவு போதவில்லை என்று எண்ணி இருந்தேன் ."நமது மருத்துவம் மட்டும் இல்லை ,ஒரு கோணத்தில் பார்க்கையில் ஒட்டு மொத்த மருத்துவும் ஒரு ஏமாற்று வேலை என்று தோன்றுவதும் உண்டு " என்று சொன்னேன் .சிரித்தார் .அவருடைய புத்தகங்களை வாங்க வேண்டும் என்று கேட்டேன் .மற்றுமொரு மருத்துவரை அறிமுகம் செய்து எடுத்து கொடுக்க சொன்னார் .ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்று எண்ணினேன் ,ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு புத்தகம் வாங்கி செல்லலாம் என்றும் எண்ணி இருந்தேன் .கையிருப்பு 1500 இருந்தது .1700 மதிப்புள்ள இரு புத்தகங்களை அவருடைய கையெழுத்தோடு மிக குறைந்த விலையில் (525) ரூபாய்க்கு ஆசீர்வதித்து கொடுத்தார் .பின்பு சாப்பிடாமல் செல்ல கூடாது என்று சொல்லி வீட்டிற்கு சென்று சாப்பிட சொன்னார் .ஏற்கனவே காலை ஆறு மணிக்கு தின்ற ஆப்பமும் வடையும் செரிமானமாகி அடுத்த உணவை ஆவலோடு வயிறு எதிர்பார்த்த தருணம் .அவியலும் ரசமும் ,கேரளா அரிசியும் சுட சுட அன்புடன் மகாதேவன் அவர்களின் தாயார் கையால் பரிமாறப்பட்டது .பெரும் நன்றி பெருக்கோடு அங்கிருந்து புறப்பட்டேன் .அவரிடம் நான் ஜெயமோஹனை பார்க்க போகிறேன் என்று சொன்னவுடன் அவருக்கு அது மிக பெரிய மகிழ்ச்சியை அளித்தது .அகம் மகிழ்ந்து இலக்கியம் பற்றி சற்று நேரம் பேசினார் .
அங்கிருந்து வடசெரிக்கு பஸ்சில் வந்து ,பின்பு அங்கிருந்து பார்வதிபுரம் பேருந்தில் ஏறினேன் .அங்கிருந்து சாரதாநகர் கண்டுபிடித்து ஐந்தாவது கிராஸ் கண்டுபிடித்தேன் .ஜெயன் அணைத்து லண்ட்மார்க்சையும் முன்பே சொல்லிருந்தபடியால் எளிதாக செல்ல முடிந்தது .
ஹரிதம் -இது அந்த விசாலமான மாடி வீட்டின் பெயர் .உள்ளே படபடுப்புடன் நுழைந்து பெல் அழுத்தினேன் .கதவை ஒரு பையன் திறந்தான் ,கண்டவுடன் அவன் ஜெயன் அவர்களின் மகன் அஜிதன் என்று கண்டுகொண்டேன் .அப்பா இருக்கிறாரா என்று கேட்டு உள்ளே நுழைந்தேன் .வாங்க ,வருவீங்கன்னு சொன்னாரு என்றான் .ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது .ஜெயமோகன் கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு அஜிதன் பற்றிய ஒரு சித்திரம் இருக்கும் ,அவனை அங்கு சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .புதியவர் எனும் கூச்சம் இல்லாமல் நீண்ட நேரம் அவனோடும் பேசினேன் .அப்பா ,அவர் வந்துட்டார் என்று மாடியில் இருக்கும் தந்தையுடன் இங்கிருந்தபடியே கூறினான் .சற்று நேரம் கழித்து ஜெயமோகன் வந்தார் -கிட்டத்தட்ட இரண்டு மணியில் அவருடன் தொடங்கிய பேச்சு ,நான் ஆறரை மணிக்கு கிளம்பும் வரை நீடித்தது .
நம் ஆதர்ச நபரை சந்திக்கும் முன்பு நமக்கு மனதில் ஒரு பிம்பம் இருக்கும் ,அவர் இப்படி பேசுவார் ,அப்படி பழகுவார் என்று ஏதேதோ எதிர்பார்ப்புகள் இருக்கும் .ஜெயமோகன் அவர்களை சந்திக்கும் முன் அவரை அணுகுவதற்கு கடினமான ஒரு அறிவுஜீவி என்றே மனதில் எண்ணி இருந்தேன் .ஆனால் நிஜத்தில் மிகவும் எளிமையான மனிதர் , பேசும் நபரின் தகுதியும் ,ஆர்வமும் தெரிந்துகொண்டு அதற்கேற்றமாதிரி புரியும்படியான வாதங்களை முன்வைத்தார் .காந்தியம் குறித்தும் அண்ணா ஹசாரே குறித்தும், ஆயுர்வேதம் குறித்தும் ,மருத்துவம் குறித்தும் ,நகைச்சுவை அனுபவங்கள் ,இலக்கியம் குறித்தும் என்று பல்வேறு தலைப்புகளை தொட்டு சென்ற உரையாடல் ,அதே சோபாவில் அமர்ந்து இருந்த இடத்திலிருந்து பெயராமல் ஐந்து மணிநேரம் நீடித்தது .அவர் போட்டு கொடுத்த துளசி டி ,பின்பு அருண்மொழி அக்கா கொடுத்த பட்டினம் பக்கோடா,தேநீர் என்று வயிறுக்கும் தலைக்கும் வஞ்சனை இல்லாத உணவு .

அஜிதன் ,அருண்மொழி அக்கா என்று வீட்டில் இருக்கும் அனைவரும் இயல்பாக அந்த விவாதத்தில் பங்கெடுத்தனர் .மனிதருக்கு பகலில் ஒரு குட்டி தூக்கம் போடும் பழக்கம் உண்டு,நான் பாட்டுக்கும் பேசிகொண்டே அதை கெடுத்துவிட்டேன் ,இன்னமும் பேசி இருப்பேன் ,கடைசியில் அவர் கண்களில் தெரிந்த அயர்ச்சி ,அவருக்கு ஒய்வு தேவை என்பதை எனக்கு புரிய வைத்தது .புறப்படும் நேரத்தில் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்து கொண்டு சென்றேன் .

ஆறரைக்கு அங்கிருந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டேன் .வடசேரி வந்து உணவரருந்தி பின்னர் மதுரைக்கு பேருந்து பிடித்து ,அங்கிருந்து காரைக்குடி வந்து சேர காலை நான்கு மணி ஆனது .நான் ஏதேதோ விஷயங்கள் பேசவேண்டும் என்று திட்டம் இட்டிருந்தேன் ,ஆனால் அங்கு பொய் ஏதோ விஷயங்களை மணிகணக்கில் பேசியாகிவிட்டது .அதை எண்ணி பார்க்கையில் மனம் சோர்வாக இருந்தது ,ஒரு நல்ல வாய்ப்பை முழுவதும் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனதான ஒரு உணர்வு .ஒரு பெரிய எழுத்தாளுமையின் நேரத்தை விழுங்கி விட்டேனோ எனும் குற்றஉணர்வு ,சுய பரிதாபம் சுழலில் சிக்கியது மனம் .
மறுநாள் காலை நல்ல படியாக வந்து சேர்ந்தேன் என்று அவருக்கு தகவல் அனுப்பினேன் ,எனது பிரச்சனையை அவர் சரியாகவே கண்டுகொண்டிருக்கிறார் "இந்த சந்திப்பு உங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது என்று எண்ணுகிறேன் ,முதல் சந்திப்பில் எப்பவுமே அப்படி தான் " என்றார் .ஆம் இனி அவரிடம் பேசும் பொழுது ஒரு புதியவரிடம் பேசும் தயக்கம் இருக்காது ,நல்ல நட்பும் இனிய சூழலும் இருக்கும் .எல்லாம் நன்மைக்கே என்று தோன்றியது .

அந்த வாரம் ,என் வாழ்வில் மிக முக்கியமான வாரம் ,என்னை ஆழமாக பாதித்த ஆளுமைகளை ஒரு சேர சந்தித்தேன் ,தேடல் இருப்பவனுக்கு பாதைகள் பிறக்கும் .அகந்தையை புறம் தள்ள முயல்வது என்பது நமக்குள்ளே நடக்கும் போராட்டம் ,இருமையின் இருட்டு பக்கங்களில் தொடர்ந்து வரும் போர் ,அகந்தையை கசட்டி வைக்க முடியாமலே நான் மதிப்பு கொண்டிருந்த இந்த மனிதர்களை சந்திக்காமல் காலம் தாழ்த்தி வந்தேன் ,ஒரு வகையில் இது என் உடல் மற்றும் மனம் மீது நான் முழு ஆளுகை செலுத்தியதில் எனக்கு கிடைத்த பகுதி வெற்றி என்றே எண்ணுகிறேன் .என் அகந்தையை என் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டேன் என்று நம்புகிறேன் ,நான் எனது முதல் அடியை சரியான திசையில் வைத்துள்ளதாகவே எண்ணுகிறேன் .இனி இங்கிருந்து பிரபஞ்சமும் அதன் நியதிகளும் என்னை என் இலக்கை நோக்கி அழைத்து செல்லட்டும்