காந்தி இன்று காந்திக்கான தளமாக உருமாறுவதற்கு முன்னர் நான் மொழியாக்கம் செய்த நேர்காணல் இது. ஆகஸ்ட் 23, 2011 அன்று வலையேற்றப் பட்டது. கேஜ்ரிவால் டெல்லி தேர்தலில் வெற்றி பெறுவதை கனவாக கொண்டவர், ஹசாரேயை அதற்காக பயன்படுத்திக் கொண்டவர் போன்ற குற்றசாட்டுகளில் நியாயம் இல்லாமல் இல்லை. கூடங்குளம் போராட்டத்தில் பங்கெடுத்தது வரை கூட அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் நம்பிக்கையும் இருந்தது. நேரடி தீவிர அரசியலில், தேர்தல் அரசியலில் ஈடுபட தொடங்கியவுடன் கொஞ்சம் சோர்வடைய துவங்கினேன். எனினும் ஜனநாயகம் என்பது அப்படித்தான். பல்வேறு தரப்பு மக்கள் தொடர் பேரங்களில் ஈடுபடும் ஒரு அமைப்பு. ஒன்று திரட்டி தன் மக்கள் தரப்பின் குரலை ஒலிக்க செய்து, அதன் மீது கவனம் குவிய செய்வதே ஜனநாயகத்தில் ஒரு நல்ல கட்சியும் தலைமையும் செய்யக் கூடியது. அந்தவகையில் நேரடி அரசியல் செயல்பாடு என்பதை புரிந்து கொள்கிறேன். வருத்தங்களும் விமர்சனங்களும் இருந்தாலும் கூட தேசிய - மாநில கட்சிகளின் இளைஞர் சக்தியின் அடையாளமாக சுட்டிக் காட்டப்படும் பெரும்பாலான ஆளுமைகளைக் காட்டிலும் அரவிந்த் பலவகையிலும் தகுதியானவர், திறமையானவர் என்பதில் எனக்கு ஐயமில்லை. வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை நேரில் நேர்காணல் செய்ய வேண்டும் எனும் அவா எனக்குண்டு. இந்தப் பேட்டியில் அவருக்கிருக்கும் தெளிவு என்னை ஆச்சரியப்படவைத்தது. குறிப்பாக முற்றதிகாரம் மற்றும் அதிகார பரவலாக்கம் குறித்து தீவிரமான சிந்தனைகளை இப்போது வாசிக்கும் போது கூட எழுப்புகிறது. டெல்லி தேர்தலில் ஏதேனும் மாற்றம் வருமா என பொருத்திருந்து பார்ப்போம். காந்தி - இன்றில் இரு பகுதிகளாக வந்த நேர்காணலை ஒரே பதிவாக இங்கே அளித்துள்ளேன். இப்போது மீண்டும் வாசித்து சிலப்பல திருத்தங்களை செய்துள்ளேன்.