Monday, September 27, 2010

செப்டம்பர் - 30

அன்பு மணிக்கு ,

இன்று நினைத்தாலும் மனம் வலிக்கும் , மறக்க முடியாத அந்த நாள் . ஒரு பெரிய முட்டாள் தனத்தின் பிடியில் சிக்கி கோபம் , ஏமாற்றம் ,பச்சாதாபம் , கண்ணீர் என்று பல்வேறு உணர்வுகள் சுழற்றி அடித்த நாள் .நண்பனின் நினைவு நாள் .
மணி , பதின்மூன்று வருடம் பள்ளி தோழர்கள் நாம்
.அந்த ஒளி நிறைந்த கண்கள் , இன்னும் எங்களை கண்டு கொண்டே இருக்கிறது .விவரம் புரியாத எட்டு வயதில் ,இழப்பை உணர முடியாத எனக்கு என் தந்தையின் இழப்பு ,அதற்க்கு ஆறுதல் சொன்ன உனது
அந்த பக்குவம் எங்கே ? பள்ளியின் பக்கத்து தெருவில் இருக்கும் உன்
வீட்டில் நாங்கள் கழித்த காலம் எத்தனை? மதியம் உண்டு , உனது
தொலைகாட்சியில் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் கண்டது , முதல் நாள் தலைவரின் படத்தை காண நாம் எல்லாம் முயன்றது எத்தனை முறை ? கடைசியில் உனக்கு துணைக்கு வந்தது கூட பாபா பாட்டு தானே .சுப்புவையும் , கோவிந்தனையும் , சாஸ்தனயும், வெங்கட்டையும் நீ ஓட்டி அள்ளிய நாட்கள் எத்தனை ? விளையாடிய கிரிக்கெட் போட்டிகளில் அழுகுணி ஆட்டம் ஆடியது எத்தனை ?"அதெல்லாம் நான் சிங்கபூர் போய்டுவேன் டா " என்று நீ சொன்னது எத்தனை முறை? இப்பொழுது எங்கே இருகிறாய் ? .இதையெல்லாம் எழுத வேண்டாம் என்று நான் இத்தனை நாள் எழுதவில்லை இருந்தும் எனது உணர்வெழுச்சியில் இதையெல்லாம் தவிர்க்க முடியவில்லை .நீ மட்டும் அந்த தற்கொலை முயற்சியில் தோற்றிருந்தால் நாங்களே
உன்னை கொன்றிருப்போம் அந்த அளவுக்கு உன் முட்டாள் தனத்தின் மேல் கோபம் .நீ யாருடனும் சண்டை போட்டு நாங்கள் பார்த்தது இல்லை , சிவா உடன் , ஸ்ரீ ராம் உடன் உனது சிறிய ஊடல்கள் மட்டும் தான் நினைவில் உள்ளது . நீ யாரையும் காதலித்து ஏமாறவோ , ஏமாற்ற்றவோ இல்லை , நீ சித காரியத்தின் விளைவை நீ அறிவாயா ? இன்றும் அம்மா உனை எண்ணி கண்ணீர் வடிக்கிறாள் , உங்கள் ஒரு மகன் போனால் என்ன நாங்கள் பல மகன்கள் உங்களுக்கு உள்ளோம் இது மட்டுமே எங்களால் அம்மாவிடம் சொல்ல முடியும் .அப்பா அவரது உணர்வுகளை வெளிக்காட்டவில்லை ,மென்று முழுங்கி அவர் படும் அவஸ்தை நீ அறிவாயா ?
உனக்கு மனதில் தைரியம் அதிகம் அதான் உன்னால் உன்னை முடித்து கொள்ள முடிந்தது ,அதுவும் ஊஞ்சல் கம்பியை கொண்டு .நல்ல வேலை நாங்கள் யாரும் உனது முகத்தை கடைசியில் பார்க்கவில்லை
உன் பெயரை சொல்லி இன்று நாங்கள் சேர்ந்துள்ளோம் , எங்களுக்கு அம்மா , அக்கா என்று புதிய உறவுகள் .மணிகண்டன் நினைவு அறக்கட்டளை, மனம் வலிக்கிறது மணி, உன் வாழ்வின் பயனே எங்களின் எழுச்சி தானோ ? .கனவுகள் பெரியது , தூக்கம் தொலைந்து விட்ட பின் கனவுகளை எங்கே தேடுவது .செப்டம்பர் 30 , இன்று உன் பெயரில் இலவச மருத்துவ முகாம் .அரூபமாய் இருக்கும் நண்பா , நீ மகிழ்ச்சியுடன் இருப்பாய் , நீ எங்களை காண்கிறாய் .அம்மா எங்கள் எல்லோர் மூலமாகவும் உன்னை தான் காண்கிறாள் .நீ எழுதினாயே ஒரு கடிதம் , உன் நண்பர்களுக்கு என்று , அடடா என்ன உபதேசங்கள் , வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டு வாழ்கையை வாழ உபதேசமா ?
பிறப்பு இறப்பு என்று தத்துவம் பேசினாலும் இழப்பின் வலி வாட்டுகிறது.
ஒன்றும் இல்லை இதற்க்கு மேல் உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை

எங்கோ நீ நலமுடன் இருப்பாய் என்ற நம்பிக்கையுடன்
உனது நண்பர்கள்

Sunday, September 26, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -4

ஆயுர்வேதம் வழங்கிய அறுவை சிகிச்சை முறைகளை பற்றி சென்ற பதிவில் கண்டோம் .இனி வரும் பதிவுகளில் ஆயுர்வேதத்தின் அடிப்படை அறிந்து கொள்வோம் . இதில் நாம் இறங்கும் முன் சில விஷயங்களை தெளிவுப்படுத்த ஆசைப்படுகிறேன்.பண்டைய மருத்துவ முறைகள் எல்லாவற்றுக்குமே ஒரு பொதுத்தன்மை இருக்கும் அது சமநிலை கோட்பாடு .நம் உடலில் , உள்ளத்தில் , உணர்வில் சம நிலையில் இருப்பது ஆரோக்கியம் என்று கூறப்படுகிறது .சீன மருத்துவ முறைகளில் கூட யின் யங் என்றும் நான்கு அடிப்படை பரு பொருட்கள் என்றும் அதன் சமநிலை கூறித்து பேசுகிறது .முன் கூறியபடி கிரேக்க மருத்துவமும் சம நிலை கோட்பாடை நம்பியது .
மனிதனை இயற்கையின் ஒரு பகுதியாக கருதியது , இன்று போல் மனிதன் உலகத்தின் மையம் எனும் கருத்து அப்பொழுது இல்லை .இயற்கையின் மாற்றங்கள் மனிதனை எவ்வாறு மாற்றும் அதை எவ்வாறு எதிர்க்கொள்வது என்பது பண்டைய மருத்துவங்களின் முக்கிய விஷயமாக அலசப்படுகிறது .
சரக சம்ஹிதை முழுவதும் ஒரு உரையாடல் தான் . அக்னிவேஷர் தனது குருவிடம் ஆயுர்வேதம் குறித்து எழுப்பும் கேள்விகள் அதற்க்கு அவர் அளிக்கும் விடை ,இது தான் அந்த படைப்பே .இதில் சிஷ்யருக்கும் குருவுக்கும் கருத்து வேறுபாடு உண்டு , உடன்படுதல் உண்டு ஏன் புறக்கணித்தல் கூட உண்டு .சில விஷயங்களை குரு ஆத்ரேயர் கூறும் பொழுது அதை மறுத்தலித்து இதை நான் எப்படி நம்புவது என்று கூட அக்னிவேஷர் வினா எழுப்பி உள்ளார் .ஆயுர்வேதத்தை பொறுத்த மட்டில் மொத்த கருத்துகளை மூன்றாக பிரிக்கலாம் நம் வசதிக்காக
1.எக்காலத்திற்கும் பொருந்தும் அடிப்படைகள்
தத்துவ சித்தாந்தங்கள் , முக்குற்ற அடிப்படை , பஞ்ச பூத கொள்கை , நோயின் அடிப்படைகள் ,சிகிச்சையின் அடிப்படைகள் இவை எல்லாம் அடங்கும் .
2. அக்காலத்திய வழிமுறைகள்
சில சிகிச்சை முறைகள் , சில எண்ணங்கள் வாசிக்கும் போது நமக்கு இன்றைய அறிவுக்கு தர்க்கத்திற்கு ஏற்பவையாக இருக்காது அதை அக்காலத்தின் மன ஓட்டம் கொண்டு நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் .
3.இப்பொழுதிற்கு புரிந்து கொள்ள முடியாத செயல் முறைகள் , அல்லது திரிபு , நடைமுறை சாத்தியங்களின் உள்ள குறைபாடு .சற்று ஆய்வு செய்தால் இவை நமக்கு நல்ல பலன் அளிக்க கூடியவை .
அதே போல் ஆயுர்வேதம் என்றுமே ஒற்றை படை சிந்தனையை கொண்டது அல்ல.ஒரு அத்தியாயத்தில் மது வகைகளின் தீய குணங்களை பற்றி இடித்து கூறும் , மற்றொரு இடத்தில் மது வகைகள் தயாரித்தல் , அதை உட்கொள்ளுவதர்கான விதிமுறைகளை கூறும் .அதே போல் ஆயுர்வேதத்தின் அடிப்படை கட்டமைப்பு வலுவாக உள்ளதால் மாற்று சிந்தனைகளையும் , முறைகளையும் உள்வாங்கி வளரும் தகுதி அதற்க்கு உண்டு .
இந்திய மருத்துவமா இல்லை ஆங்கில மருத்துவமா எது சிறந்தது என்று மிக முக்கியமான கேள்வி ஒன்று உண்டு .என்னை பொறுத்த வரை இந்த போட்டியே அர்த்தமற்றது , ஒரு தாய்க்கு மூத்தமகன் மேல் பாசம் அதிகமா இல்லை இளைய மகன் மேல் பாசம் அதிகமா என்று வரையறுப்பது எவ்வளவு மூடத்தனமோ அதே போல் தான் இதுவும் .இன்றைய நவீன மருத்துவம் என்பது பண்டைய சிந்தனையை கொண்டு அதை பரிசீலித்தோ இல்லை நிராகரித்தோ வளர்ந்த முறை , அது இன்னும் வளர்ச்சி காணும் ஒரு துறை . நான் நவீன மருத்துவத்தை பண்டைய மருத்துவ பண்பாட்டின் நீட்சியாகவே காண்கிறேன் .மனிதன் நோய்களுக்கு எதிரான போராட்டத்தை அவன் இந்த மண்ணில் ஜனித்த முதல் தொடங்கிவிட்டான் .உலகில் எந்த ஒரு மருத்துவ முறையுமே முழுமை கிடையாது , அதற்கென்று சில எல்லைகள் உள்ளது .தன மருத்துவத்தை புகழ நமக்கு அடிப்படை புரிதலே இல்லாத இன்னொரு மருத்துவமுறையை சாடும் இந்த இரு கோடுகள் பழக்கம் அபாயமானது .நவீன மருத்துவத்தை இந்திய மருத்துவ நம்பிக்கை உள்ளவர்களோ , இல்லை நவீன மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தையோ புறம் தள்ள முடியாது .

இதை எல்லாம் நாம் மனதில் நிலை நிறுத்தி கொண்டு சற்று அகலமான பார்வையுடன் ஆயுர்வேதத்தை பற்றி மேலும்
அறிவோம் .

Wednesday, September 22, 2010

பிடிச்சிருக்கு ...

நம் வாழ்வில் முக்கியமான முடிவுகள் இந்த ஒரு வார்த்தை தான் முடிவு செய்கிறது . "பிடிச்சிருக்கு .." ஒரு கல்யாணம் .காதல் ஆரம்பித்து காலையில் குடிக்கும் காபி வரை நம் தேர்வுக்கு காரணம் " அது பிடிச்சிருக்கு .." ஏன் பிடிச்சிருக்கு , எது பிடிச்சிருக்கு ? இது முற்றிலும் என் அனுபவங்களை சார்ந்து , நான் புரிந்து கொண்டதை எழுதும் முயற்ச்சி.நமது ரசனைக்கான காரணத்தை அலசும் பதிவு தான் இது ...

மனித மனத்திற்கு எப்பொழுதுமே சாகசம் பிடிக்கும்.சாகசம் என்பது அற்புதம் .அற்புதம் என்பது நமக்கு புரியாதது அல்லது இதுவரை நாம் உணராதது .இன்றும் நம்மால் எளிதில் செய்ய முடியாததை அதே சமயம் செய்ய வேண்டும் என்று எண்ணுவதை வேறு யாரேனும் செய்தால் அதை நாம் ரசிக்கிறோம் .சாமியார், சினிமா, சர்கஸ் எல்லாம் இதில் தான் சேரும்.ஒரு குழந்தையாக நமக்கு இந்த உலக நிகழ்வுகள் அனைத்தும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.ஒரு குழல் விளக்கு , கிலுகிலுப்பை என்று எல்லாமே நமக்கு அற்புதம் தான் .நமக்கு என்ன பிடிக்கும் என்பது நாம் மட்டும் தீர்மானிப்பது இல்லை .நாம் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே அதற்கு அடித்தளம் அமைகிறது .உதாரணம் அதிகமான மெல்லிசை பாடல்களோ , பக்தி பாடல்களோ இல்லை அதிரடி பாடல்களோ எந்த இசையை தாய் அதிகம் கேட்கிறாளோ அந்த இசை பிற்காலத்தில் குழந்தைக்கு எளிதில் பிடித்துவிடும் , ஏனெனில் இந்த ஒலியுடன் தனக்கு ஏதோ ஒரு வித தொடர்ப்பு உண்டு என்பதை உணர செய்யும் .

எனக்கு எப்பொழுதுமே ஒரு நம்பிக்கை உண்டு .மனிதனை சுற்றி ஒரு மின் காந்த விசை இருக்கும் என்று . இதை ஆரா என்றும் சொல்லலாம் .சில பேரை பார்த்த உடன் இதற்க்கு முன் எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல் போனாலும் கூட விரும்பவோ, வெறுக்கவோ , நம்பவோ இல்லை சுதாரிப்பாக இருக்கவோ தோன்றும் .இதை அறிவியல் பூர்வமாக விளக்குவது சற்று கடினம் .ஆனால் உணர்வு பூர்வமாக விளக்கலாம் .இது காலம்காலமாக , விலங்கினத்திலிருந்து நாம் கொண்டுள்ள எச்சரிக்கை உணர்வு மற்றும் உள்ளுணர்வு என்றும் கூறலாம் .நாம் வளரும் சூழல் நமது விருப்பங்களை பெரிதும் தீர்மானிக்கிறது .முப்பது வருடங்களுக்கு முன் தான் சாப்பிட்ட பழைய சோறு , சின்ன வெங்காயத்தின் ருசியை இன்றும் மறக்காமல் தேடி உண்ணும் எத்தனையோ கோடீசுவரர்கள் உள்ளனர் .
பொதுவாகவே ஒன்று பிடிப்பதற்கு காரணம் அது ஏதோ ஒரு வகையில் நமது கடந்த கால மகிழ்ச்சியை நினைவூட்டுவதாக இருப்பதால் தான் .எனக்கு சிறு வயதில் நான் பார்த்த படங்களில் நன்றாக நினைவில் உள்ள முதல் படம் ராஜ சின்ன ரோஜா ,அதிலிருந்தோ என்னவோ எனக்கு எல்லா ரஜினி படமும் என்னை குழந்தையாக ஆக்கி தன்னை மறக்க செய்வதால் இன்றும் என்றும் பிடிக்கும் .மனித உள்ளுணர்வுக்கு தனி சிறப்பு உண்டு , உற்று கவனித்தால் அதற்க்கு உண்மையான அன்பை வார்த்தைகள் இன்றி உணர்ந்து கொள்ள முடியும் .அதே போல் வெறுப்பையும் , பொறாமையையும் கூட உணர முடியும் . நம்மீது உளமார்ந்த அன்பை செலுத்தும் அணைத்து ஜீவன்களையும் நமக்கு பிடிக்கும் , அன்பில் உண்மை இருக்கும் பட்சத்தில் அது கண்டிப்பாகவோ அல்லது கோபமாகவோ வெளிவந்தால் கூட நமக்கு பிடிக்கும் .உதாரணம் அன்று திட்டிய ஆசிரியரை இன்றும் நன்றி மறவாமல் எண்ணுவது .


சாகசங்களையும் புதுமையும் விரும்பிய நாம் வளர வளர பழக்கங்களின் கையில் சிக்கி விடுகிறோம் .நாம் பழகிய விஷயம் நமக்கு பிடிக்கும் நமக்கு பிடித்தால் நாம் அதை பழகுவோம் .இங்கிருந்து அமெரிக்கா சென்றும் இட்லி சாம்பார் சாப்பிடுவது கூட ஒரு உதாரணம் தான் .நமக்கு பயத்தை அளிக்கக்கூடிய , நமது நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கக்கூடிய எந்த விஷயமும் நமக்கு பிடிப்பதில்லை , எனக்கு இன்று வரை ராட்டினம் என்றால் பயம் சிறு வயதில் ஒரு முறை ராட்டினம் ஏறிவிட்டு வந்து வாந்தி எடுத்தேன், அந்த கசப்பான அனுபவம் இன்று வரை தொடர்கிறது.

இதையெல்லாம் தாண்டி நாம் கல்வியினாலும் , அறிவினாலும் , தேடல்களின் மூலமாகவும் சில விஷயங்களை கண்டடைந்து அதை நேசிக்க தொடங்குவோம் .அடிப்படையில் நம் எல்லோர் மனதினிலும் ஒரு தேடல் இருக்கிறது அந்த தேடல் எது என்பதை தெரிந்துக்கொள்ள நாம் பல விஷயங்களை தேடுகிறோம் , பல விஷயங்களை முயல்கிறோம் .இப்படி தான் வெவ்வேறு வாழ்க்கை சித்தாந்தங்கள் , ஆன்மீகம், தத்துவம் , புத்தகம் , இலக்கியம் என்று நம் வாழ்வில் நுழைகிறது .ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்று நமக்கு உதவுகிறது , எனக்கு இலக்கிய பரிட்சயம் தமிழ் நாட்டின் பலரை போல கல்கியில் தான் தொடங்கியது பொன்னியின் செல்வனும் சிவகாமியின் சபதமும் எனது கற்பனைகளை விரிய செய்தது .பின் தேவன் எழுத்துக்கள் , பின் நா பா . ஜெயகாந்தன் , சுஜாதா என்று மாறி மாறி இப்பொழுது ஜெயமோஹனில் நிற்கிறது .இலக்கியம் , சினிமா இவை இரண்டிலும் ஒப்பீடு சர்ச்சை தான் வளர்க்கும் .எனக்கு வெவ்வேறு எழுத்துக்கள் வெவ்வேறு வகையில் உதவி இருக்கின்றன .

இதெல்லாம் இருக்கட்டும் நண்பர்கள் மற்றும் வாழ்க்கை துணை தேர்வில் என்ன நடக்கிறது ?.நண்பர்கள் பொறுத்த மட்டில் ஒத்த மனம் கொண்டவர்கள் , ரசனை கொண்டவர்கள் எளிதில் நண்பர்களாகிடுவர்.இன்னொரு வகையான நடப்பு உண்டு பெரியாருக்கும் மூதரிஞருக்கும் இருந்தது போல .நேர் எதிர் குணங்கள் கொண்ட மனங்களின் நட்பு .அதிகம் பேசுபவர்களின் நட்பு வட்டத்தில் நிச்சயம் ஓரிரு நண்பர்கள் அதிகம் பேசாதவர்கள் இருப்பார்கள் .தங்களின் குணங்களை கொண்டு நிரப்பி கொள்ளும் முயற்சி எனவும் எண்ணலாம்.எதிர் குணங்கள் மேல் உள்ள ஈர்ப்பு அல்லது அதை அறியும் ஆர்வம் என்றும் எடுத்து கொள்ளலாம் .இப்படி எவ்வளவு சொன்னாலும் நமக்கு உணர்வுப்பூர்வமாக பிடித்ததை அறிவு பூர்வமாக அதன் காரணத்தை கண்டடைவது சற்று கடினம் தான் .உணர்வும் அறிவும் சம நிலைக்கொள்ளும் போது எல்லாரையும் பிடிக்கலாம் அல்லது மொத்தமாக பற்றற்றும் போகலாம் .ஏன் ஒரு விஷயம் பிடித்துள்ளது என்று ஆராய்ந்தால் நாம் நம்மை புரிந்துக்கொள்ள மற்றும் ஒரு அடி வைத்துள்ளோம் என்று பொருள் .சார்பு நிலையின்றி மனசாட்சியின் துணையோடு இதை அணுகினால் நமக்கு நம்மை பற்றி மேலும் தெளிவான சித்திரம் கிட்டும் .முயற்சி செஞ்சு தான் பாப்போமே .
நமது பழக்கம் எனும் சக்கரத்திலிருந்து சற்று வெளியே வந்து கைகளை அகல விரித்தால் மேலும் பல விஷயங்களை பார்த்து சொல்லலாம் " பிடிச்சிருக்கு .." என்று .
ஆண் பெண் தேர்வை பற்றி சொல்லும் ஒரு நல்ல குரும்படம் :)

Sunday, September 19, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -3


நாம் பண்டைய அறுவை சிகிச்சை முறைகளை ஆராய்ந்தோம் .அதன் தொடர்ச்சியாக சுஸ்ருதரின் காலத்தில் வியக்கத்தக்க சில விஷயங்களை
முயன்றுள்ளனர் அதை காண்போம் .
இன்று மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கு உடற்கூறு விஞ்ஞானம்(anatomy) ஒரு பாடமாகும் .அதில் இறந்த மனித உடல்களை பதப்படுத்தி ஒவ்வொரு அங்கத்தையும் அதன் அமைப்பையும் கூறாக்கி(dissection) கற்று தரப்படுகிறது .இந்த அறிவு மிக முக்கியம் ஆகும் , அதுவும் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு எது எங்கு உள்ளது , இந்த நெரம்பு ,தசை எங்கிருந்து தொடங்குகிறது போன்ற எல்லா விஷயங்களிலும் நுண்ணறிவு வேண்டும் .
பிணத்தை மருத்துவம் பயில பயன்படுத்தும் முறை இந்தியாவில் எப்பொழுதோ உண்டு .ஆம் . சுஸ்ருதர் காலத்தில் அவர் இதை பற்றி கூறியிருக்கிறார். பிணத்தை மூலிகைகள் கொண்டு பதப்படுத்தும் முறையையும் விளக்கி இருக்கிறார் .(இது எகிப்திய முறைகளிலிருந்து வேறுப்பட்டது ).அறுவை சிகிச்சையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமே போர் தான் .அம்புகள் , வாள் வீச்சுகள் உடலின் பல்வேறு பாகங்களை பாதித்த பொழுது அதை போக்கவே அறுவை சிகிச்சை முதலில் வழக்கிற்கு வந்தது .உள் உறுப்புகளை அம்புகள் தாக்கி இருந்தால் அதை எவ்வாறு எடுப்பது என்பது தான் , ஆரம்பக்கட்ட அறுவை சிகிச்சை ஆகும் .
மேலும் இன்றைய அறுவை சிகிச்சை முறையில் பயன்படுதப்படும் பல சாதனங்களின் முன்மாதிரி சுஸ்ருதர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது . வெவ்வேறு மிருகங்கள் ,பறவைகளின் தாடை அமைப்பை , பற்களை கண்டு அது போல் அவர் காலத்தில் பல சாதனங்கள் வெவ்வேறு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது .இதை சஸ்திரம் , யந்திரம் என்று கூறுகிறார்கள் .சிங்க முகம் , முதலை முகம் , கிளி முகம் என்று இவைகளின் பெயரும் அதையே குறிக்கின்றன ..இன்று இவை மறைந்து பல வேறு போர்செப்ஸ், கத்திரி , ப்ரோப் ,என அன்று சொன்ன அதே வர்ணனைகளுக்கு பொருத்தமாக உருமாறி வழக்கில் இருப்பது தான் ஆச்சர்யம் !.

முதன் முதலில் கண்புரை அறுவை சிகிச்சை செய்ததாக இவருக்கு ஒரு பெருமை உண்டு . அவரது cupping Technic இன்றும் சில மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது .மேலும் முதல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் என்கின்ற பெருமையும் இவருக்கே சேரும் .மூக்கு , காது ஆகியவைகளை போரின் முடிவில் வென்றவர்கள் தோற்ற நாட்டின் வீரர்களுக்கு வெட்டி விடும் பழக்கம் அந்த காலத்தில் உண்டு .இதை சரி செய்ய சுஸ்ருதர் ஒரு முறையை
விளக்குகிறார் , அது தான் இன்றைய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் அடிப்படை .மூக்கின் வெட்டுபட்ட இடத்தை ஒரு இலையை கொண்டு அளவு எடுத்து அந்த இலையின் வடிவத்தில் முகத்தின் கன்ன பகுதியில் தோலை வெட்டி வெட்டுப்பட்ட இடத்தில பொருத்திவிடுவார்கள் .இம்முறையை reconstructive rhinoplasty என்று கூறுகிறார்கள் .இது இந்தியாவில் பதினெட்டாம் நூன்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது .திப்பு சுல்தானின் அரண்மனை வைத்தியர்கள் இதை போர் வீரர்களுக்கு செய்துள்ளனர் .இங்கிருந்து 1794 gentleman's magazine எனும் இங்கிலாந்து பத்திரிக்கை இதை பற்றி தகவல் வெளியிட்டுரிக்கிறது . இதன் பின்பு தான் உலகம் முழுவதும் இந்த முறை பிரபலம் ஆனது ..
அறுவை சிகிச்சை எல்லாம் சரி , மீண்டும் அதை மூடுவதற்கு தையல் போட வேண்டாமா ? உள் உறுப்புகளுக்கு பட்டு நூல் கொண்டு தையல் போடப்படுகிறது ,(இம்முறையே இன்றும் பயன்படுத்தப்படுகிறது ) பிரத்யேகமாக இதற்க்கு என்று சில ஊசிகளை பற்றிய வர்ணனை கிட்டுகிறது .வெளி தோலிற்கு தையல் போட எறும்புகளை பயன் படுத்தினார்கள் ! ஆம் .பெரிய கட்டெறும்புகளை வரிசையாக வெட்டுபட்டுள்ள இரண்டு பாகங்களையும் இணைத்து கடிக்க செய்து அது கடித்த உடன் அதன் தலையை மட்டும் அப்படியே விட்டு விடுவார்கள் .உடல் பகுதியை அப்படியே எடுத்துவிடுவார்கள் தலை மட்டும் 'கப்' என்று பிடித்துக்கொள்ளும் (கிழிந்த இரு பக்கங்களை stapler போட்டு இணைப்பது போல் நான் சொல்லுவது புரியும் என்று எண்ணுகிறேன் !) , கொஞ்ச காலம் கழித்து அது நன்றாக சேர்ந்து விடும் , பின் இந்த எறும்பின் தலைகள் தானாக உதிர்ந்து விழுந்துவிடும் .

பி.கு - இதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் யாரும் முயற்சிக்க வேண்டாம் :)நான் பொறுப்பு அல்ல :) இம்மாரி முறைகள் வழக்கில் இருந்தது என்று சொல்லுவது மட்டுமே நோக்கம் , இன்றைய யதார்த்தத்தில் இம்மாரி முறைகளின் பங்களிப்பை பறை சாற்ற அல்ல.இவை எல்லாம் இன்றைய நவீன மருத்துவத்திற்கு அடித்தளம் வழங்கி இருக்கிறது என்பதை எடுத்து சொல்ல மட்டுமே .மேலும் தெரிந்துக்கொள்வோம் ..

முந்தைய பதிவுகளை காண ..

Wednesday, September 15, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -2

ஆயுர்வேதத்தை பொறுத்த மட்டில் மூன்று முக்கிய நூல்கள் -ப்ருஹத் த்ரயீ - மூன்று முக்கிய படைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன . அவை முறையே சரக சம்ஹிதை , சுஸ்ருத சம்ஹிதை , அஷ்டாங்க ஹ்ருதயம் ஆகும் .
இதில் அஷ்டாங்க ஹ்ருதயம் என்னும் படைப்பு சரக .சுஸ்ருத கோட்பாடுகளை ஒருங்கிணைத்து தொகுத்த ஒரு படைப்பாகும் , இன்று பெரும்பான்மையான
ஆயுர்வேத வைத்தியர்கள் பயன்படுத்தும் மூல புத்தகமும் இதுவே ஆகும் .இதை இயற்றியவர் வாக்பட்டர், கேரளத்தை சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது .இவரின் படைப்பையே மூலமாக கொண்டு கேரளாவில் ஆயுர்வேதம் இன்றும் சிறப்பாக திகழ்கிறது .இவரது காலம் 5-8 AD என்று கணிக்கப்பட்டுள்ளது .

இந்த மூன்று படைப்புகளும் வெவ்வேறு காலகட்டத்தில் படைக்கப்பட்டது , இவை அக்கால மனிதர்களின் தேவையை மற்றும் வாழ்க்கைமுறையை மனதில் கொண்டு பல விஷயங்களை முன்வைக்கிறது . சரகரின் காலத்தில் அறுவை சிகிச்சை அந்த அளவுக்கு பிரபலம் இல்லை .பாதரசம் ,கந்தகம் ,மனோசிலை போன்ற கனிமங்கள் பிரயோகம் அவ்வளவாக இல்லை அப்படியே இருந்தாலும் அவை வெளிப்ரயோகத்திற்கு மட்டுமே உள்ளது ,மூலிகை மருந்துகளே பெரும்பாலும் கையாளப்பட்டுள்ளது .சுஸ்ருதரின் காலக்கட்டத்தில் அறுவை சிகிச்சை பிராதானமாக முன்னிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் சற்றே அவசர பட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதிற்கு அறிகுறி .பின்னர் பௌத்த மதம் இந்தியாவில் வேரூன்றிய பின் அறுவை சிகிச்சை ஒரு விதமான ஹிம்சை என்றும் அது பௌத்த கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் ஒரு சித்திரம் தீட்டப்பட்டது ஆகையால் அது தடை செய்யப்பட்டது.

வாக்பட்டர் காலத்தில் கனிமங்களின் பயன்பாடு மருந்தாக எடுத்துரைக்கபடுகின்றன.அறுவை சிகிச்சைக்கு மாற்றாக அதே சமயம் வேகமாக பலனளிக்கும் சிகிச்சை முறையை கண்டெடுக்க முயன்றனர். அதன் விளைவு தான் ரச சாத்திரம் . தங்கம் ,பாதரசம் ,கந்தகம் ,இரும்பு ,தாமரம்,ஈயம் ,mica, ரத்தினங்கள் போன்றவற்றை மருத்துவத்திற்கு பயன்படுத்துவது இதன் நோக்கம் ஆகும் .நமது தமிழகத்தில் சித்தர்கள் இந்த கலையில் வல்லவர்கள் .இங்கிருந்து இம்முறைகள் நிச்சயமாக அங்கு சென்றதுக்கான சான்றுகள் நமக்கு கிடைக்கிறது .


பண்டைய காலத்து அறுவை சிகிச்சை முறை நமக்கு பெரும் ஆச்சர்யத்தை தர வல்லது .இன்றைக்கு உள்ளது போல் மயக்க மருந்துகள்(anaesthesia) அக்காலத்தில் இல்லை மது வகைகள் அறுவை சிகிச்சைக்கு முன் அளிக்கப்பட்டு முழுவதும் போதை ஏறிய அரைமயக்க நிலையில் தான் அந்த கால ஆபரேஷன் நடைபெற்றது .இன்றைக்கு உள்ளது போல் antiseptic measures அன்றைக்கு இல்லை ,ஆனால் வேப்பிலை ,மஞ்சள், குக்குலு போன்ற மூலிகைகளை அறுவை சிகிச்சை அறையில் புகை போடும் பழக்கம் உண்டு ,ரக்ஷோ தூபம் என்று பெயர், ராக்ஷஷர்களை அண்டவிடாது என்பதினால்
.இவை அனைத்திற்கும் கிருமி நாசம் செய்யும் வல்லமை கொண்டது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது .இன்றைய கிருமி தான் அன்றைய ராக்ஷசர்கள் போலும் .
மேலும் தெரிந்து கொள்வோம்...

Saturday, September 11, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -1






உலக அரங்கில் இன்று பெருவாரியான மக்கள் பயன்படுத்தும் மாற்று மருத்துவ முறைகளில் சீன மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் முன்னிலையில் இருக்கிறது .உலக மூலிகை சந்தையில் இந்தியாவிற்கு பெரும் பலம் உண்டு .இன்று தழைத்து இருக்கும் பழமையான மருத்துவ முறைகளில் சித்த மருத்துவமும் ஆயுர்வேத மருத்துவமும் மிகவும் முக்கியமானது .

ஆயுர்வேதம் என்கின்ற இந்த சொல் வட மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது . ஆயுர் + வேதம் , வேதம் என்பது அறிதல் ,அறிவு என்பதை குறிக்கும் .ஆயுர்வேதம் என்பது வாழ்கையை பற்றிய அறிதல் / அறிவு என்று பொருள்ப்படகூடியது.
இது ஒரு மருத்துவ முறை என்பதை காட்டிலும் , ஒரு வாழ்கை முறை என்பதே பொருத்தம் .

ஆயுர்வேதத்தில் மருத்துவம் மட்டும் இன்றி , உணவு பழக்கங்கள் , அன்றாடம் செயல் படுத்த வேண்டிய கடமைகள் , புவியியல் , வேளாண்மை , சமையல் கலை . பௌதிகம் , வேதியல் ,மனோ தத்துவம்,தத்துவம் , ஜோதிடம் ,தாவரவியல் ,விலங்கியல் என பல விஷயங்களை உள்ளடக்கப்பட்டுள்ளது .மேலும் எக்காலத்திற்கும் பொருந்தும் வண்ணம் அதனின் அடிப்படை விரிவாக பேசப்படுகிறது.
ஆயுர்வேதத்தின் வரலாறு
இன்று ஓரளவுக்கு முழுமையாக நமக்கு கிட்டும் ஆயுர்வேத படைப்பு சரக சம்ஹிதையே ஆகும் .இதன் காலம் 1200-1000 BC என்று அனுமானிக்க படுகிறது .சரகர் , அக்னிவேஷ சம்ஹிதை என்னும் மூல புத்தகத்திலிருந்து இயற்றியதாக கூறுகிறார் .இன்று வரை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அதன் அடிப்படை அறிய இதுவே சிறந்த புத்தகமாக கருதப்படுகிறது .
இதன் பின் வந்த முக்கியாமான படைப்பு சுஸ்ருத சம்ஹிதை .இதன் காலம் 200-2 BC என்று கணிக்க பட்டுள்ளது .


சுஸ்ருதரே உலக அளவில் இன்றும் அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக அறிய படுகிறார் .இவரது சிக்கிச்சை முறைகள் கோட்பாடுகள் ஐரோப்பிய கண்டத்திற்கு பரவி தாக்கம் ஏற்படுத்தியது .நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்ற படும் ஹிப்போ கிரேட்ஸ் முன்மொழிந்த 4 humor கோட்பாடு சுஸ்ருதரின் அடிபடையில் வந்தது .


four humor theory என்பது இது தான் , உடலில் நான்கு மூல சக்திகள் உள்ளது அதன் சம நிலை ஆரோகியமாகவும் அதன் ஏற்ற தாழ்வுகள் நோயாகவும் வெளிபடுகின்றன .ஹிப்போ கிரேட்ஸ் சொன்ன நான்கு ஹுமோர் -black bile,yellow bile, phlegm and blood.இன்று வரை நாம் சகஜமாக அறியும் வாதம் ,பித்தம் , கபம் ஆகியவை மூன்று தோஷங்கள் என்று ஆயுர்வேத சித்த மருத்துவ முறைகளில் விளக்கப்பட்டுள்ளது .சரகரும் இதே தான் சொன்னார் , அவருக்கு பின் வந்த சுஸ்ருதரே முதல் முறையாக நான்கு தோஷ கோட்பாடுகளை சொன்னார் .சரகர் சொன்ன மூன்றை விட ரக்தம் எனும் நான்காவது தோஷத்தை சேர்த்தார் .இதுவே தான் ஹிப்போ கிரேட்ஸ் வழங்கிய கோட்பாடுகள் ஆகும் .
மேலும் தெரிந்துகொள்வோம்....

Friday, September 3, 2010

எனக்கு தெரிந்த கடவுள்!!-1


கடவுளும் குழந்தையும் ஒன்று என்று சொல்லுவர் . சில இழப்புகளை சந்திக்கும் போதோ ,விரக்தியின் உச்சத்தில் உழலும் போதோ கடவுளின் இருப்பை பற்றி நமக்குள் ஒரு கோபக்கனல் கேள்வி எழுப்பும் .
நான் பயின்ற ஆயுர்வேத மருத்துவத்தின் துணையால் நான் என் வாழ்வில் சிலரை சந்திக்க நேர்ந்தது .இன்று வரை எனக்கு அவர்கள் அளித்த நெகிழ்ச்சியான சம்பவங்கள் பல .அதை இன்று நினைத்தாலும் என் மனம் கனத்து விடும் .அப்படி என் வாழ்வில் நோயாளிகளாக உள்நுழைந்து என் வாழ்கை பார்வையை மாற்றிய சில ஜீவன்களை பற்றி இந்த பதிவு ...

ஜனார்தனன்
நான் கல்லூரியில் பயின்று கொண்டு இருந்த சமயம் எனது பேராசிரியருடன் சென்று அவரது கிளினிக் அமரும் பழக்கம் உண்டு எனக்கு .சில சிகிச்சை முறைகளை கற்றுக்கொண்டும் , மேற்பார்வை செய்து கொண்டும் இருந்த காலம் அது .ஒரு நாள் நானும் என் நண்பனும் பேராசியர் அவர்களின் அழைப்பின் பேரில் அவருடன் இனைந்து ஊரப்பாக்கம் சென்றோம் .அங்கே கவலைக்கிடமான நிலையில் தன் மகன் உள்ளதாகவும் , பல வருடங்களாக நினைவு தப்பி படுத்த படுக்கையாக இருப்பதாகவும், கோமா நிலையிலிருந்து மீள வழி இல்லை என்று ஆங்கில மருத்துவர்கள் கூறிவிட்ட படியால் தான் ஆயுர்வேத முறையை நம்பி இங்கு வந்ததாகவும் அவரது தந்தை சொன்னார். தந்தையின் அழைப்பின் பேரில் நாங்கள் அங்கு சென்றோம் , ஊரப்பாக்கம் ரயில்வே கேட் தாண்டி சிறு மண் ரோடு கடந்து அவர் வீடு இருந்தது .இங்கே என்ன மாதிரியான அனுபவம் கிடைக்கும் என்று தெரியாமல் நாங்கள் சென்றோம் , 2 அறைகள் உள்ள சராசரி மத்திய வர்க்க வீடு தான் அவர்களின் வீடு .ஒரு அம்மா வந்து எங்களுக்கு ஹோர்லிக்ஸ் போட்டு கொடுத்தார் .உள்ளே சென்று பார்க்கலாம் என்று அழைத்து போனார் .ஒரு சிறிய அறை, மத்தியில் ஒரு ஆஸ்பத்திரி கட்டில் சாய்ந்து படுத்து இருந்த அந்த உருவத்தை கண்டு திடுக்கிட்டு தான் போனோம் .

உடம்பே ஒடுங்கி உருகி வெறும் எலும்பின் மேல் தோல் போர்த்திய போல் ஒரு மனிதர் , தலையில் ஒரு பக்கம் மண்டை ஓடே இல்லை வெறும் பள்ளம் , அதன் மேல் ஒட்டவைத்தது போல் தோல் , கண்கள் இரண்டும் இடுங்கி உள்வயமாக ஆழ்ந்து இருக்கும் ஒரு ஞானியை போல் ,மூக்கில் ஒரு ரப்பர் குழாய்,மொட்டை அடித்து மூன்று நாள் ஆன மாறி இருக்கும் முடி தலையில் ,பக்கவாட்டில் தொங்கும் மூத்திர பை .அவரது அப்பா பக்கம் சென்று அழைத்தார் " ஜனா , ஜனா "..உஹும் அசைவு ஏதும் இல்லை , "ஜனா ,அப்பா வந்துருக்கேன் டா, டாக்டர் வந்துருக்காரு பாரு " இம்முறை வலது கை அனிச்சையாக நகர்ந்து அருகில் இருந்த என் மேல் பட்டது , நான் பயந்து இரண்டடி பின்வாங்கினேன் ."ஒன்னும் இல்லைங்க பழக்க படாத ஆளுன இப்படி தான் கொவ படுவான் , ஜனா அவரு டாக்டர் உன்ன குண படுத்த வந்துருக்காரு
, இனிமே அவரு தான் உன்ன பாத்துக்குவாரு" கை மீண்டும் பழைய இடத்துக்கு சென்றது . "பாத்தீங்களா இப்ப அமைதி ஆகிட்டான் " , எங்களுக்கு என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை
.இவருக்கு நாம் என்ன செய்ய போகிறோம் என்று தெரியவில்லை . இந்த நிலையில் உள்ள ஜீவனுக்கு ஏன் இவளவு மெனக்கெடல்
என்று எனக்குள்ளே
ஒரு வினா எழுந்தது , இவரை வாழவைத்து என்ன நடக்க போகிறது என்று எதிர்மறை சிந்தனை நிரம்பி வழிந்தது .
ஜனா என்கிற ஜனார்தனன் , உலகத்தை ரட்சிக்கும் கடவுளின் பெயர் .இன்று அந்த ஜனார்தனன் பலருடைய
இரட்சிப்பில் உயிரை கையில் பிடித்து கொண்டு இருக்கிறார் .என்னால் அங்கு இருக்க முடியவில்லை ,நான் அந்த அறையிலிருந்து வெளியேறினேன் , எனது பேராசிரியர் தொடர்ந்து பரிட்சித்து கொண்டிருந்தார் அவரை .நான் அவசரமாக ஒரு போன் வருகிறது என்று கூறி செல் எடுத்து காதில் வைத்து கொண்டு அப்படியே அந்த வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன் , நான் உள்ளே போகவே இல்லை .பத்து பதினைந்து நிமிஷம் கழிந்தது ஆசிரியரும் நண்பனும் அவரது தந்தையிடம் ஏதோ பேசிக்கொண்டே
வெளியே வந்தார்கள் .நான் முகத்தை திருப்பி கொண்டு செல்லில் பேசுவது போல் நின்று இருந்தேன் .அவரது அப்பா வாயில் வரை வந்து அவர்களை வழியனுப்பினார். நான் அவரின் கண்களை பார்ப்பதை தவிர்த்தேன் அவர் என்னை பார்த்தார் "தம்பி , ஏதோ அவசர செய்தி போல , பாத்து பதட்ட படாம போயிட்டு வாங்க என்றார் ", நான் தலை மட்டும் ஆட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினால் போதும் என்று புறப்பட்டு விட்டேன் .. ஜனாவை நான் ஏன் வாழ்க்கையில் மீண்டும் பார்கவே கூடாது என்று எண்ணி கிளம்பினேன் ..ஆனால் ....(அடுத்த பகுதியில்)