Monday, April 18, 2011

உதிரி பட்டாசுகள்

இந்த பகுதியில் பொதுவாக தோன்றும் எண்ணங்களையும் ,அனுபவங்களயும் பார்வைகளயும் பதிவு செய்கிறேன் .எந்த கோர்வையும் இல்லாத ,எந்த வரையரையும் இல்லாத கோர்ப்பு .

1.பன்றிகளையும் பாம்புகளையும் பறவைகளையும் அணில்களையும் ஆடுகளையும் உற்று அவதநித்துகொண்டே இருக்கிறேன் .அனேக மிருகங்கள் ஒரே மாதிரி இருப்பதாகவே பார்வைக்கு புலபடுகின்றன ,ஆகினும் ஏதோ ஒரு நுட்பமான வித்யாசம் இருக்கிறது நெஜம்.பலநூறு அல்சேஷன் நாய்களில் நமது நாயை கண்டுகொள்ள முடியுமா என்று எனக்கு தெரியவில்லை .பூச்சிகளும் ,பாம்புகளும்,பறவைகளும் நம் கண்களுக்கு தனித்தனியாக அடையாளம் கண்டு பிடிக்கும் திறனில்லை .நம் புலன்களில் நமக்கு கண்கள் மட்டுமே பிரதானம் என்று தோன்றுகிறது .என் சந்தேகம் என்னவென்றால் மிருகங்களின் பார்வையில் நாம் எப்படி தெரிவோம் ? எல்லாரும் வெறும் மனிதர்களாகவா ? நாய்களுக்கு அந்த நுட்பம் உண்டு என்று நிச்சயம் தெரிகிறது .மற்ற உயிர்வாழிகள் கண்களை மட்டும் நம்பி காலம்தள்ளுவது இல்லை.வளர்ப்பு பிராணிகள் தத்தமது எஜமானரை கண்டுகொண்டுவிடும் .மற்ற மனிதர்களை எவ்வாறு அது உள்வாங்கும் ? அடையாளங்கள் சுமப்பது மனிதனுக்கு மட்டுமே உரித்தான ஒன்றா ?
2.ஒரு நாள் காலை கிளினிக் செல்லும் சமயம் சாலையோரத்தில் நடந்து செல்லும் ஒரு மனிதரை கண்டேன் .அந்த காட்சி இன்னும் என் அகக்கண்ணில் அகலாது ஆழத்தில் அமிழ்ந்து இருக்கிறது .கந்தல் துணி உடுத்திய கரிய நிறமுடைய ,நெடிய மனிதன் அந்த குருவிகூட்டு மண்டையுடன் சென்ற மனம் பிறழ்ந்த மனிதரை நான் சந்தித்தேன் .தலையில் ஒரு பெரும் சாக்கு மூட்டை .தோளிலே ஒரு அழுக்கு பை ,இரு கரங்களிலும் பெரும் சாக்கு பைகள் .அத்தனை பாரத்தையும் சுமந்து கொண்டு நடந்து வந்தார் .பைகள் நெறைய கந்தல் துணிகளும் பிளாஸ்டிக் குப்பைகளும் நிரம்பி வழிந்தன . அந்த நொடி ,அது ஒரு தரிசனம் ,பிரபஞ்ச தரிசனம் ! ஆம் நாம் அனைவரும் இப்படி நமது கடந்தகால அக கழிவுகளை சுமந்து கொண்டு திரிகிறோம் .அது கழிவுகள் என்று தெரிந்தும் நாம் அதை இறக்கி வைத்து தூர எரிய மனமில்லாது ,அதை நம் அகந்தையோடு தொடர்பு படுத்தி ,அதை நமது உடைமையாக எண்ணி சுமந்து கொண்டிருக்கிறோம் .அக கழிவுகள் சுமக்கும் நாம் சற்று தெளிவானா பைத்தியமோ ?
3.வாசித்துகொண்டே இருக்கிறேன் சலிப்பு தட்டும் வரை வாசிப்பேன் .இது ஒரு பருவகாலம் ,என் மனம் எழுதுவதை காட்டிலும் வாசிப்பதில் அதிக நாட்டம் கொண்டு இழுத்து செல்கிறது .இப்பொழுது மனம் முழுவதும் ஜெயமோகன் தான் உக்காந்து பாடாய்படுத்துகிறார் .அன்றாடம் புதிய புதிய வாசல்களை திறந்துகொண்டே இருக்கிறார் .இப்பொழுது வாசித்து கொண்டிருக்கும் நாவல் அவருடைய காடு .காடு ,நம் மனதில் இருக்கிறது .காடும் நகரமும் பெரும் குறியீடுகள் .குட்டப்பனும் ,ரெசாலமும் நீலியும் பாத்திரங்களாக விரிந்து செல்கின்றனர் .காடும் காடு சார்ந்த ஒலிகளும் ஒளிகளும் வாசிக்க வாசிக்க நம்மை அங்கு கொண்டு சேர்கிறது .இது ஒரு அபாரமான வாசிப்பனுபவம் .கொஞ்சம் விரிவாக முழுவதும் வாசித்துவிட்டு பகிர்கிறேன் .
4.கிளினிக் வரும் கிராமப்புற நோயாளிகளுடன் தேர்தல் குறித்து பொதுவாக பேச்சு கொடுத்து பார்த்தேன் .தேர்தல் கமிசன் கண்களில் இறுதி கட்டத்தில் நன்றாக மன்னை தூவி இருக்கீறார்கள் .11 ஆம் தேதி முதல் பண பட்டுவாடா கனஜோராக நிகழ்ந்து உள்ளது .இதில் ஆளும் கட்சி எதிர் கட்சி என்று பெரிய வித்யாசம் ஏதும் இல்லை .ஆளும் கட்சி -இந்த முறை ஆட்சியிலிருந்து தங்களது பைகளை ரொப்பியதால் ஐநூறு கொடுத்து இருக்கீறார்கள் .எதிர் கட்சி இருநூறு கொடுத்து இருக்கீறார்கள் .கிராமபுரங்களில் இந்த முறை ஆளும் கட்சி அதிக வாக்குகளை வாங்கும் என்பதே என் கணிப்பு .பெரும் திரளான மக்களின் பங்கெடுப்பு என்னவென்று யாருக்கும் புரியவில்லை .எதிர் ஓட்டுகளா ? இல்லை காசினால் கிட்டிய ஓட்டுகளா என்பது விரைவில் தெரியும் .அரசியல்வாதிகளும் ,அதிகாரிகளும் ஊழல்வாதிகளாக இருந்தது போய் அதன் உச்சகட்டமாக ஒரு சமூகத்தையே ,ஒரு தேசத்தையே -அதன் ஒட்டுமொத்த மக்களையும் ஊழல்வாதிகளாக மாற்றி சாதிதுள்ளனர் நம் தலைவர்கள் .உண்மையில் மனம் வெதும்பியது .ஜனநாயகம் இப்படி நகைபுக்குள்ளாக்கபட்டுளது.நம் மக்களின் இந்த பலகீனத்தை அரசியல்வாதிகள் கடந்த இரண்டு தேர்தல்களில் நன்கு உணர்ந்துவிட்டனர் .இனி இந்த மாதிரி அணுகுமுறையே தொடருமோ எனும் பயம் நெஞ்சை வாட்டுகிறது .பாப்போம் .