Saturday, April 14, 2018

மக்கள் மொழியில் மகாபாரதம் - பூமணியின் கொம்மை

இன்றைய தமிழ் தி இந்துவில் (15/4/2018) எழுத்தாளர் பூமணியின் 'கொம்மை' நாவலைப் பற்றி எழுதியிருக்கும் சிறிய அறிமுகக் கட்டுரை வெளியாகியுள்ளது. சற்றே சுருக்கப்பட்டு வெளியாகி இருக்கும் கட்டுரையின் விரிந்த வடிவம் இது. 
--

வில்லி பாரதம் துவங்கி பாரதியின் பாஞ்சாலி சபதம், எம்.வி. வெங்கட்ராமின் நித்திய கன்னி, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உப பாண்டவம்’, ஜெயமோகனின் ‘வெண் முரசு’ நாவல் வரிசை என தமிழகத்தில் மகாபாரதம் படைப்பாளிகளை எக்காலத்திலும் வசீகரித்தபடியே தான் உள்ளது. இந்திய அளவிலும் எம்.டி வாசுதேவ நாயர், பைரப்பா, காண்டேகர் என பல எழுத்தாளர்களும் பாரதத்தின் கதைகளை எடுத்தாண்டுள்ளார்கள். பாரதத்தை மீளுருவாக்கம் செய்யும் மரபு என்பது மாகவி காளிதாசனில் இருந்தே துவங்குகிறது. சாகுந்தலம் அத்தகைய முயற்சியே. அ.கா பெருமாள் ‘அர்ஜுனனின் தமிழ் காதலிகள்’ என்றொரு தமிழக நாட்டரியல் பாரத கதைகளின் தொகுப்பையும் கொண்டு வந்துள்ளார். பிராந்திய நாட்டாரியல் தொன்மங்கள் வியாச பாரத கதையுடன் இணைந்து ஒரு கதை பெருவெளியை உருவாக்குகிறது. யட்ச கானம், தெரு கூத்து, நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்கள், உபன்யாசங்கள், திரைப்படங்கள் என பல்வேறு வடிவங்களில் மகாபாரதம் இந்திய மக்களின் வாழ்வுடன் நெருக்கமாக பின்னிப் பிணைந்து கிடக்கிறது. இவ்வரிசையில் எழுத்தாளர் பூமணியின் கொம்மையும் இணைந்து கொள்கிறது. 

மகாபாரதம் ஏன் மீள மீள எழுதப்படுகிறது, வாசிக்கப்படுகிறது என்பதற்கு ஒற்றைப்படையான பதில் ஏதும் இல்லை. ஆன்மீக நூலாக, கதை மாந்தர்களும் அவர்களின் அகங்காரங்களும் மோதி சிதறும் பெரும் மானுட நாடகமாக, மாயாஜால குழந்தை கதையாக, வெவ்வேறு மெய்யியல் மரபுகள் பொருதும் களமாக, அரசியல் பிரதியாக, பெண்ணிய பிரதியாக என பலவாறாக பல நோக்கங்களுக்காக வாசிக்கப் படுகிறது.  ஒவ்வொரு வாசிப்பிற்கும் அதற்குரிய தனிச்சையான வசீகரம் உண்டு. மறுகுரலில் மகாபாரதம் எனும் அடிக்குறிப்புடன் வெளியாகியுள்ள ‘கொம்மை’ பெண்களின் துயர நாடகத்தை மையப் படுத்தும் பிரதியாக மக்கள் மொழியில் தனித்தன்மையுடன் உருவாகியுள்ளது. 

நாவலை ‘ஆதிக்கத்தால் அலைக்கழியும் அபலைகளுக்கு’ தான் அர்ப்பணித்துள்ளார் பூமணி. சத்தியவதி, குந்தி, காந்தாரி, திரௌபதி, இடும்பி, உத்தரை என விழைவுகளின், விதியின் விசையில் துன்புறும் பெண்களின் கதைகளை கரிசனத்துடன் அணுகி இருக்கிறார் பூமணி. காந்தாரி போருக்கு முன் தான் கண்ணை கட்டி திரட்டிய தவ ஆற்றலை மகனுக்கு செலுத்துவதற்காக கட்டை அவிழ்த்து துரியனை காண்பது தான் நாமறிந்த பாரத கதை ஆனால் ‘கொம்மையில்’ குருக்ஷேத்திரத்தில் கவுரவர்கள் மாண்டுபோன பின்னர் அப்போதவாது அவர்களின் முகத்தை இறுதியாக காண வேண்டும் என்பதற்காக கண் கட்டை அவிழ்க்கும் போது அந்த துயரத்தின் வீச்சு முந்தைய வடிவத்தை காட்டிலும் பன்மடங்கு உக்கிரமாக நம்மை சூழ்கிறது. 

நாமறிந்த பாரத கதையிலிருந்து விலகி சில புதிய கதைகளை பூமணி சொல்கிறார். தெரு கூத்து, நாட்டாரியல் தளங்களில் இருந்து எடுத்தாண்டிருக்கலாம் அல்லது அவரே உருவாக்கியும் இருக்கலாம். அதற்கான சுதந்திரத்தை பாரதம் எப்போதும் படைப்பாளிகளுக்கு அளித்தே உள்ளது. அதன் காரணமாகவே இந்திய துணைகண்டம் முழுவதும் விரவி பரவ அதனால் இயன்றது. பீஷ்மனை வதைக்க புறப்படும் அம்பையின் தவத்திற்கு முருகன் இறங்கி வருகிறான். அவனொரு மாலையை அளிக்கிறான். அதை அணிபவன் பீஷ்மனை வீழ்த்த முடியும் என ஆசிர்வதிக்கிறான். விதுரனின் தாய் சிவை ஒரு சூதர்குல சேடி என்பதற்கு அப்பால் நாம் ஏதும் அறிவதில்லை. ஜெயமோகனின் வெண் முரசிலும் சிவை ஒரு பாத்திரமாக விரிவாக வருகிறார். ‘கொம்மையில்’ சிவைக்கு கடம்பன் என்றொரு கணவன் இருந்ததாகவும், அந்தப்புரத்து காவலுக்கு அவன் மாற்றப்பட்டதால் காயடிக்கப்பட்டு குழந்தை இன்றி இருந்ததாக பூமணி எழுதுகிறார். அதேப்போல் கம்சன் வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறக்கும் எல்லா குழந்தைகளையும் பிறந்தவுடன் கொல்வான் என்பதாக இல்லாமல் ஐந்து குழந்தைகள் தப்பித்து பிழைத்திருந்ததாக சொல்கிறார். கிருஷ்ணனின் துனைவிகளில் ஒருவரான நக்னஜித்தி தான் நப்பின்னை என்பதும் புதிய கோணம் தான். அரவானின் மரணத்திற்கு பின் அவளுடைய தாய் உலூபி அர்ஜுனனின் மற்றொரு மனைவியான சித்திராங்கதையுடன் சேர்ந்து வாழ்கிறாள். பீமனை நெறித்து கொல்ல திருதாஷ்டிரன் முயலும் போது பீமன் அவன் காதில் முணுமுணுத்து மிரட்டுகிறான். அதன் பின்னே அவனுடைய பிடி நெகிழ்கிறது. இது போன்ற தருணங்கள் பூமணியின் கற்பனைக்கு சான்று. ஏகலைவன் குரு காணிக்கையாக கட்டைவிரலை அளித்தபின்னர் வாய்பூட்டு போடபட்டிருந்த பசித்த வேட்டை நாய் வாய் கட்டு அவிழ்ந்தவுடன் அந்த கட்டை விரலை தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற உணர்சிகரமான இடங்களில் பூமணி முழுமையாக வெளிப்படுகிறார்.. 

உரையாடல்கள் வட்டார வழக்கில் மிளிர்கின்றன. கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்குமமான உரையாடல்கள் இரண்டு அணுக்க நண்பர்கள் பேசிகொள்வதாக இருப்பது அவர்களை நமக்கு நெருக்கமாக்குகிறது. அர்ஜுனன் கிருஷ்ணனை கறுத்த மச்சான் என்றே அழைக்கிறான். கர்ணனின் மனைவி பொன்னுருவி பற்றிய கதை நாட்டார் மரபில் உள்ளது. கண் தெரியாத ராதை புளிய மரத்தை ‘ஒங்கிட்ட காய்க்கிற பழம் அதிகமா வாடாமலும் முழுக்கப் பழுக்காமலும் ஆகட்டும்’ என்று சபிப்பதும் கூட நாட்டார் தன்மை கொண்ட கதை தான். யதார்த்த கதையாக சுருக்கிவிடாமல் பாரதத்தின் மாயத்தன்மையையும் தக்கவைத்தபடி இரண்டிற்கும் இடையில் சமநிலை பேண முயன்றுள்ளார். அவ்வப்போது நாவலில் சில பஎளிய பாடல்கள் வருகின்றன, அவற்றில் சில ரசிக்கும் படியாகவும் சில துருத்தலாகவும் தென்பட்டன. சாமானிய மனிதர்களின் கதை எனும் தளத்தில் பயனிப்பதாலேயே, பூமணி ஏற்றுக்கொண்ட பேசு பொருளுக்கு இணங்க, கீதை உபதேசம், பீஷ்மரின் அம்புப் படுக்கை உபதேசம் போன்ற தத்துவ பகுதிகள் எதிர்கொள்ளப்படாமல் கடக்கப் படுகிறது.

ஒட்டுமொத்தமாக  600 பக்கங்களில் முழு மகாபாரதத்தையும், கதை மாந்தர்களின் மோதல்களையும், வீழ்ச்சியையும் அவருடைய கோணத்தில், மக்கள் மொழியில் உணர்ச்சி பூர்வமான காவியமாக படைத்திருக்கிறார் பூமணி. 

கொம்மை
பூமணி
டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு 

Thursday, April 5, 2018

அம்புப் படுக்கை தொகுப்பு- ரமேஷ் கல்யாண் கடிதம்


அன்புள்ள சுனில் கிருஷ்ணன்,

உங்கள் அம்புப்படுக்கை தொகுதி வாசித்தேன். ஆரோக்கியமான துவக்கம். ஒன்றை சொல்லிவிடவேண்டும்.முதலில் நான் வாசகன். பிறகுதான் அபிப்ராயம் சொல்பவன். விமர்சனம் என்பது பெரிய வார்த்தை. அது இன்று படாத பாடு படுகிறது. நேர்மையான வாசகன் என்பவன்தான் எழுதுபவரின் தெம்பு. படிக்கும்போது விமர்சகனுக்கு இருக்கும் ஆளுமையின் கனம் வாசகனுக்கு இல்லை. அவனுக்கு அது ஒரு குழந்தையை தூக்கி கொஞ்சி பிறகு விட்டுவிடுவது போல. அப்படித்தான் நான் நினைக்கிறேன். ஒருவன் விமர்சகனுக்காக எப்படி எழுதுவது இல்லையோ அப்படி நான் வாசிக்கையில் விமர்சகனாக இருப்பதில்லை. அதுவே படைப்புக்கு செய்யும் நேர்மை. பிறகு வரும் அபிப்ராயங்கள் அதனளவில் முக்கியமானவை.

உண்மையாக சொல்வதானால் அம்புப்படுக்கை கதை எனக்கு  லேசான சோர்வை அளித்தது. கதையில் இருக்கும் (அல்லது அப்படி எனக்கு தோன்றிய ) ஜெயமோகனின் வாசனை ஒரு காரணம். அம்புப்படுக்கை பீஷ்மர்,  லாசராவின் உத்தராயணம் போன்றவற்றை அறிந்தபின் இந்த கதை போதிய உந்துதலை எனக்கு தரவில்லை. ஒருவேளை  எனது எதிர்பார்ப்பு மேலதிகமானதாக இருந்திருக்கவும் கூடும். 

பீஷ்மர் நீங்கள் சொல்வது போலவே பற்றற்றவர் இல்லை. அதீத பற்று கொண்டவர். பற்று என்பது நியாயம் என்பதற்கு எண்ணையில் நீர் நிலைமை. அதில்தான் அவர் இருந்தார். அது தாமரை இல்லை தண்ணீர் விஷயம் அல்ல. ராஜ்யத்தின் மேல் இருந்த பற்று (சுயம் சார்ந்த ஒன்று அல்ல) போரையே கொண்டுவந்தது. ஆனால் அம்புப்படுக்கை ஒரு வலிமை. தனது முடிவை தான் விரும்புகையில் ஏற்பது என்பதற்கு மாபெரும் மனோவலிமை வேண்டும். தற்கொலையின் கோழைத்தனம் இதிலிருந்து எவ்வளவு தூரம் என்பதை அறிய முடியும். இதற்கிடையில் தனது இருப்பை தனது நியாயங்கள் தராசில் தானே இட்டுக்கொண்டு மிதக்கும் நிலையே அம்புப்படுக்கை. அது இம்சை அல்ல. அது ஒரு பெருவலிமை. இந்த கதையில் கிழவரைப் பற்றிய விவரணைகள் அருமை. இறுதியில் மருத்துவன் அவர் பிழைப்பார் என்று சொல்லி வந்த சில நிமிடங்களில் பின்னால் அழுகுரல் கேட்பது என்பது வாசகன் தனக்குள் பேசிக்கொள்ளும் இடத்தை அளிப்பது கதைக்கு வலு சேர்க்கிறது.

ஆனால் ஆரோகணம் நிறைவளிக்கும், தொகுப்பின் மிக நல்ல கதை. மறுபடி அதை வாசித்தேன். கதை சொல்லியிருக்கும் விதம் அருமை. பனி படர்ந்த வெளியை பக்கங்களில் விரவ விட்டிருக்கிறீர்கள். பனிப்பரப்பில் நடக்கும் கிழவர் யார் என்பதை மெதுவாக ஊகிக்க விட்டிருக்கிறீர்கள். இந்நேரம் பா இருந்தால் என்று சொல்லும் வரியில். காந்தியடிகளின் ஆளுமை நம்பற்கரிய ஒன்று. அவரை வெறுக்கவோ எள்ளிப்பேசவோ மறுக்கவோ அதிகம் பிரயாசைப் பட வேண்டியதில்லை. ஆனால் அவரை அறிந்துகொள்ளத்தான் பிரயாசைப் படவேண்டும். காந்தி எனும்  திராட்சைக் கொடியில் உள்ள இனிப்புகளை அடைய புளிப்புகளை தாண்டி செல்லவேண்டும். அந்த முனைப்பு இல்லாத போது அவர் புளிக்கவே செய்வார். கோட்ஸே தனது புத்தகத்தில், முதல்நாள் குண்டு வெடிப்பு முயற்சி தோற்றபோது, அந்த இடத்தில் பதட்டமும் பரபரப்பும் இருந்தபோது, அதை பற்றிய துளி அச்சமும் இல்லாமால் - எதுவுமே நடவாதது போல கூட்டத்தில்  தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த காந்தியின் தைரியம், கோட்ஸேவை ஆச்சரிய படுத்தி இருக்கிறது. நாம் கொல்லப்போவது ஒரு சராசரி மனிதனை அல்ல என்ற உண்மை கோட்ஸேவுக்கு தெரிந்திருந்தது. 
அதுதான் காந்தி. 
அதனால் கோட்ஸே.
காந்தி என்ற மனிதராக இல்லாமல் ஒரு பண்பின் உருவமாக கதையில் உலவ விட்டிருக்கிறீர்கள். முன்னும் பின்னும் பனி படர்ந்து நீளும் அமானுஷ்யப் பரப்பில், எத்தனை தூரம் கடந்து வந்தாலும் கடந்தது போலவே இல்லை என்று சொல்லும் வரி, அது பாதையே இல்லை. ஒரு விரிவு என்று சொல்கிறது. ஆகாயத்தில் பாதை இல்லாதது போல பூமியில் ஒரு பனி ஆகாயம்.  பிரமிள் எழுதிய ஒரு கதையில் ஒருவன், நடந்து செல்லும் ஒரு புத்த பிட்சுவை (சரியாக நினைவில்லை) பார்த்து அவரை பிடிக்க ஓடுவான். ஆனால் அவர்களிடையே இருக்கும் தூரம் எப்போதும் குறையாது.  ஏறக்குறைய அப்படி ஒரு உணர்வை இந்த வரி தந்தது. பனிப்புயலில் கிழவர் தடுமாறும்போது நாய் மட்டும் சாதாரணமாக ஒரு பாறையின் மேல் அமர்ந்து அவரைப் பார்த்துக்கொண்டிருக்கும். மிக நல்ல ஒரு குறிப்புணர்த்து வரி. அந்த நாய் என்ன என்பது போகப்போக புரிய ஆரம்பிக்கிறது. ஆனால் அது என்ன என்று நீங்கள் உடைத்து சொல்லி விட்டீர்கள். அப்படி சொல்லாமல் விட்டிருந்தால் கதை இன்னும் ஒரு படி மேலே மிதக்கும். கதையின் இறுதியில் எவ்வித கிளர்ச்சியும் இல்லாமல் கால தேவனை அவர் சாமான்யமாக பார்க்கும் இடத்தில் நன்றி என்று ஒரு வார்த்தையை மட்டும் உதிர்க்கும் இடத்தில்  , குண்டு வெடித்த சப்தம் கேட்டு பதறாத மோகன்தாஸ் தெரிந்தார். சொர்க்கத்தில் எனக்கென்ன வேலை என்று கேட்கும் இடத்தில் மோகன்தாஸ் காந்தி மகாத்மா காந்தியாக மாறும் இடம்.  இதோ நீங்கள் விரும்பும் இடம் என்று காட்டும்போது அங்கே வருந்துபவனும், அதற்கு மருந்து ஈடுபவனும், எரியூட்டுபவனும், சாம்பலாபவனும் என எல்லோரும் தன்னுடைய உருவத்தை போலவே இருப்பவனாக இருப்பது என்பதை கதையின் உச்சம். இந்த கதையின் வெற்றி என்பது காந்தியின் பெருமையாக மாறிவிடும் - மாற்றிவிடுவது அல்ல, மாறிவிடுவது - இந்த புள்ளியில் கதை ஓங்கி நிற்கிறது. ஆரோகணம் என்ற பெயர்ப்பொருத்தம்! 

பேசும் பூனை - ஒரு மிக நல்ல சமகால நவீன கதை. இவைதான் தற்போது தேவை. மொபைலில் பூனை அப்ளிகேஷன் விளையாட்டைப் பற்றி தெரியாதவர்கள் இந்த கதைக்குள் நுழைய முடியாது. அந்த விளையாட்டை விளையாடியதைப் பார்த்தவர்கள் இன்னும் எளிதாகவும், தானே விளையாடிப் பார்த்தவர்கள் அதைவிட இன்னும் எளிதாகவும் நுழையலாம். ப்ளூ வேல் அபாயங்களை மிருதுவாக பூனை வழியாக நுழைந்துவிட்டது சாமார்த்தியத்தின் அழகு. தற்போதைய துடுப்பாட்ட வாழ்வுச் சூழலை சொல்வதில்தான் இந்த கதை மெருகு பெற்றுள்ளது. சுருக்கமாக - பண வசதி இருக்கும்போது, வீட்டு நபர்கள் தொலைவில் இருக்கையில், நேரம் நமது கையில் அதிகமாக புரளும்போது, நமது அறிவு என்பது எவ்வளவு முக்கியமான உபகரணம் என்பதை இக்கதை சொல்கிறது. குழந்தை லயித்து விளையாடும் பூனை விளையாட்டு பெரியவர்கள் விளையாடுகையில் வேறொரு பூனை ஆகிறது. அவள் அதற்கு அடிமையாகி அது சொல்லும்படியெல்லாம் நடப்பதும், வீட்டு தேவைகள் அனைத்தையும் அதுவே கண்காணித்து, நிர்வகிக்க ஆரம்பித்து அது அடையும் இடம் ராட்சசமான இடம். கணிப்பொறிகளும் கைப்பேசிகளை என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மை. இதில் ஒரு நகைச்சுவையான நிஜம் என்ன என்றால் - அவள் தனது குழந்தையிடம் பூனைக்கு சோறு வைக்கவில்லையா என்னு கேட்க - அது ..அட போம்மா.. அது சின்ன பசங்க விளையாட்டு என்று சொல்லி வேறொரு விளையாட்டுக்கு மாறி விட்டிருப்பாள். உண்மையில் இவை குழந்தைகளை விட பெரியவர்களுக்குதான் ஆபத்து. இதன் நடுவே அவள் கணவன் வெளிநாட்டில் இருந்து பேசுவதை, வீடியோவில் பேசுவதை சொல்லி - இப்போதெல்லாம் பிலிப்பைன்ஸ் நண்பர்கள் எண்கள் தேவையாய் இருக்கவில்லை என்ற ஒரு வரியில் அவனது வாழ்க்கை தேவையை சொல்லிக் கடக்கும் சூட்சுமம் நன்றாக இருக்கிறது.  இறுதியில் அந்த பாடல் கூட பூனையை குரலில் ஒலிப்பதாக முடித்திருப்பது, புதிய கவலையை சூசகமாக காட்டி சென்றுவிடுகிறது. ஒரே ஒரு திருத்தம். அவனுக்கு ஒரு செய்தியை வாட்சப்பில் அனுப்பிவிட்டு, பிறகு அதை நீக்க முடியாம போவதாக ஒரு வரி வருகிறது. அதனால் கொஞ்சம் பிணக்கு போன்ற நிலைமையும் உருவாகிறது என கதை நகர்கிறது. ஆனால் அனுப்பிய வரியை நீக்கும் வசதி இப்போது வந்து விட்டது. அதற்கு தகுந்தபடிகதையில் சிறிய  காஸ்மெட்டிக்  மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்.(அடுத்த தொகுப்பில்). நவீன கதைகளுக்கான கரு இப்படி சாதாரண விஷயங்களில் உள்ள அசாதாரணங்களில் இருந்தே எழவேண்டும். வாழ்த்துக்கள் சுநீல்! 

கூண்டு என்ற கதையும் ஒரு மாய யதார்த்த வகையில் இருக்கிறது பல வருடங்களாக கூண்டு செய்யப்படும்போது மக்களின் எதிர்பார்ப்பு ஒரு பிரம்மாண்டமான ஒன்று. ஆனால் வருவதோ சாதாரண ஒன்று. ஆனால் அது நிகழ்த்தும் ஆச்சரியம் மிகப் பிரமாண்டம். ஆனால் இதில் கூண்டுக்கு வெளியே இருப்பவர்கள் தாம் சுதந்திரமாக இருப்பதாக என்னும்போது அடுத்த சுற்று கூண்டு எழுகிறது. பிறகு அதை சுற்றி மற்றொன்று. இந்த மாயத்தன்மையில் நாம் ஏதோ ஒருவகையில் வேறொரு கூண்டுக்குள் அடைபட்டபடியேதான் இருக்கிறோம் என்பதை சொல்கிறது. இயக்கம் சார்ந்த சமூக மனிதன் இதிலிருந்தும் விடுபட முடிவதில்லை. அப்படி விடுபடுவதும் வேறொரு தளைக்குள் நுழைவதே. ஒரு கவிதையின் படிமத்துக்கு உரிய விஷயம் ஒன்றை கதையாக எழுதி இருக்கிறீர்கள்.

பூ முகத்தை பா போ மு பெ.. கதையை ஒரு நடைமுறைச்சூழலின் ஒரு பக்கம். ஒரு ஆல்பத்தை புரட்டும்போது கண்ணில் படும் ஒரு புகைப்படம்.

வாசுதேவன் ஆயுர்வேத சிகிச்சை முறை சார்ந்த மற்றொரு கதை. ஆனால் இந்த கதையின் உயிர் என்பது அந்த மருத்துவரின் வார்த்தையில் இருக்கிறதாக உணர்கிறேன். பல வருடமாக சுயநினைவற்று கிடைக்கும் வாசு பிழைத்துவிடுவான் என கடைசி நொடிவரை நம்பி காத்திருக்கும் அந்த அப்பா-அம்மா அருமை. நாம பேசறது அவனுக்கு கேக்கும். நல்லதா நாலு வார்த்தை மனசார நினைச்சுகிட்டு நம்பிக்கையோட செஞ்சு பாருங்க.. என்ற அதுதான் இன்றைய மருத்துவத்தில் காணாமல் போயிருக்கும் வஸ்து. உண்மையை சொல்லிவிடலாம் என்று மருத்துவ அறிவும், அனுபவமும் சேர்ந்த உண்மையை அந்த அம்மாவிடம்  சொல்லும்போது, இந்த உலகில் அவனது உயிர்பிழைத்தலுக்கு ஒருவேளை சாத்தியமாகி இருக்க கூடிய ஒரே நம்பிக்கை இழையும் பலமிழக்கிறது. அது அவன் அப்பாவையும் தொற்றிக்கொள்கிறது. இனி நம்பிக்கை என்பது மறைந்து போகும்போது அவனது இறப்பு நிகழ்கிறது. இந்த இடம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சன்னமாக கதையில் நிகழ்கிறது. என்னை சற்றே இம்சித்த கதை. அசைவற்று கிடைக்கும் வாசுவின் கண்களில் துளிர்த்து வழியும் கண்ணீருக்கு என்ன பொருள்? அதுதான் மருத்துவத்தின் சவால். அறிவியலைத் தாண்டி நிகழும் விஷயங்களுக்கு நாம் அறிவியல் காரணங்களால் அர்த்தம் தேட முயல்வதும், அளவிட முயலும் அபத்தமும்  நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  என்னுடைய கிராமத்தில் ஒரு ஆள். கட்டை குட்டை. சிக்ஸ் பேக் என்று பெயரிடப்படாத ஆனாலந்த திண்மை. தலைமுடிகள் கருப்பு போலோ மிட்டாய்களை குவித்தது போலிருக்கும். மரம் வெட்டும் வேலை. அவனுக்கு சுகவீனம் என்று வந்து அதிகம் பார்த்ததில்லை. அவன் சொல்வான் காய்ச்சல் வந்ததுன்னா போத்திகிட்டு படுக்க மாட்டேன். விடிய காலைல சூரியன் வரும் முன்னாடியே குளத்தில் போய் முழுக்கு போடுவேன். அப்படியே வந்து துர்கை கோவிலை பதினெட்டு முறை சுத்துவேன். அந்நேரத்துக்கு சூரியன் எழுந்துவிடும். அன்று ஒரு நாள் அசைவம் சாப்பிடாமல் ஒரு வேலை கஞ்சி. மறுநாள் வேலைக்கு போயிடுவேன் என்பான். அந்த சூத்திரத்துக்கு எந்த அறிவியல் விளக்கமும் இன்றுவரை எனக்கு தெரிந்ததில்லை. 

திமிங்கிலம் கதை சுவாரசியமான ஒன்று. தொழில் நுட்பம் என்பதே ஒரு திமிங்கிலம். அது தன் இனத்தையே தானே தின்று  கொழுக்கும் உயிரி. குறிப்பாக தற்போது  இணைய ஊடகத்தில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை பார்க்கும்போது இதன் தாக்கமும் ஆழமும் புரியும். பஸ்மாசுரன்கள்தான் நாம். சில வருடங்கள் முன்பு - மனிதர்கள் இயந்திரமாகி வருவதைப் பற்றி கவலை இல்லை. இயந்திரங்கள் மனிதர்களாகி வருவதே ஆபத்து என்று ஒரு சுண்டல் காகிதத்தில் படித்தேன். இன்று அதை நினைத்துக் கொள்கிறேன். அறிவும் அது உண்டாக்கும் வெற்றியின் வெளிச்சமும் மயக்கமும் மனிதர்களை மனிதர்களிடம் இருந்து பிரித்து விடுகிறது. ஆனால் இது பற்றிய பிரஞை இருவரிடமும் இல்லை என்பதே சோகம். எல்லாமே அறிவின் கண்கொண்டு பார்க்கப்படுகிறது. மனிதர்கள் திரும்பவும் குழுவாகவும், தனித்த உயிரியாகவும் திரும்புகிறானோ என்று தோன்றியது.  

"கனவு நினைவில் இருக்கிறது என்றாலே அதை நீ புனைகிறாய் என்றுதானே பொருள்" "பிணப் பொறுக்கிகள்" (எனது உடல் அரசுக்கு உரியது என்று எழுதி வாங்கிக்கொண்ட பின்பே மருத்துவத்துக்கு அனுமதி) "உனது கண்களில் நான் அதை கண்டுகொண்டேன். நீ என்னை வெற்றி கொண்டுவிட்டாய். இந்த நிறைவுடன் நாம் பிரிவோம்" போன்ற நல்ல வரிகள் உள்ள சற்று தேவைக்கு அதிகமாக நீண்டுவிட்ட கதை.

குருதிசோறு ஒரு விசேஷ முடிச்சுள்ள கதை. கிராமத்தது நம்பிக்கைகள் வெறும் கட்டுக்கதையாக இல்லை.வேறு ஏதோ அதற்குள் இருக்கிறது. அது மூடி இருக்கும் உள்ளங்கை. மூடி இருக்கும்போது அதில் உள்ளதாக நம்பியது திறக்கும்போது இருப்பதில்லை. மருளாளி, சுடலை,கதைசொல்லி, பாலாயி, வறட்சி, நோய்,இறப்பு, என பல இடங்களை தொட்டுச்செல்லும் கதை யாருமே பார்க்காத கிராமத்து பூஜை  ஒன்றை இரு சிறுவர்கள்  பார்ப்பதும், அதனால் இருவரும் இருவரும் உடல் நலம் குன்றி விழுவதும், தேறி எழுவதும், படையல் நடக்கும் இடத்தில் இருக்கும் கற்கள் பதினொன்று என்று கதையை முடிப்பதுமாக  நன்றாக அமைந்த கதை. தொகுப்பிலேயே அதிக பக்கங்கள் கொண்ட கதை. ஆனால் நீளம் அதற்கு தடையாக இல்லை என்பதே கதையின் வெற்றி என்பேன். 


வாழ்த்துக்கள்.

வாய்ப்பு கிடைப்பின் சந்தித்து பேசுவோம்.

அன்புடன் 
ரமேஷ் கல்யாண்



ரமேஷ் கல்யாண் அவர்களுக்கு நன்றி.