Monday, May 18, 2020

அதுக்கு என்ன இப்ப? – நரோபா



உச்சி வெயிலிலே, மலையுச்சியிலே, தனித்த பன்றிப் பாறையின் கொம்பிலே சாய்ந்து, வானத்தை வெறித்தபடி பீடி இழுத்து கொண்டிருந்தான் பழுவேட்டையன்.
மூச்சிரைக்க நிற்காமல் ஓடிவந்தான் கிடாரம் கொண்டான்.
பழுவேட்டையன் மெல்லத் திரும்பி, துச்சப் பார்வையை வீசினான். ‘என்ன?’ என அவன் கண்கள் வினவின.
“அண்ணே… காரமடையான் தாயோளி… பச்ச புள்ளையப் போடற மாதிரி ஒரு குற்ற உணர்ச்சி கத எழுதிப்புட்டாண்ணே”
பார்வை மீண்டும் வானத்தை வெறித்தது. நிதானமாக புகையை உமிழ்ந்தான்.
“அதுக்கு என்ன இப்ப?”
கிடாரம் வேகவேகமாக மூச்சிழுத்து விட்டான். வியர்வை கொட்டியது.
“அண்ணே… செல்லூர்க்காரன் மத்தவன் பொண்டாட்டியோட படுக்குறத நம்ம அண்ணி பேர வெச்சு கத எழுதி இருக்காண்ணே”
நெருப்பெரியும் பீடி முனையை திருப்பி கண்ணுக்கருகே வைத்து உற்று நோக்கினான் பழுவேட்டையன். “ஹ்ம்… அதுக்கு என்ன இப்ப?” என்றான் பீடியை திரும்பி வாயில் வைத்தபடி.
கிடாரம் முகம் சிவந்து பழுத்தது. பையில் வைத்திருந்த மானிடர் புட்டியை திறந்து, பிளாஸ்டிக் கோப்பையில் ஊற்றினான், அதில் தண்ணி பாக்கெட்டில் இருந்து நீர் பாய்ச்சி, ஒரு மிடறு குடித்தான். சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான்.
அவன் குரல் தளர்ந்தது. அழுகை முட்டிக்கொண்டு வந்தது. நா தழுதழுக்க, “அண்ணே… போவட்டும் விடு… இந்த புதுப்பட்டிகாரன் நம்ம நெடுங்குடி முத்து ஆக்கிப் போட்ட வெண்டக்கா மண்டி நல்லாயில்லன்னு ஸ்டேடஸ் போட்ருக்காண்ணே”
பழுவேட்டையன் சட்டென நிமிர்ந்தான். பாறையிலிருந்து கீழே குதித்தான். பீடியை தரையில் வீசி வெறும் காலால் தேய்த்தான். குனிந்து தேம்பிக் கொண்டிருந்த கிடாரத்தின் சொக்காயை பிடித்து தூக்கினான். “த்தா… ஏண்டா இத முதல்லேயே சொல்லல…” என விறுவிறுவென மலையிறங்கிச் சென்றான்.

No comments:

Post a Comment