Monday, January 20, 2020

நீலகண்டம் வாசிப்பு - கமலதேவி

(எழுத்தாளர் கமலதேவி பதாகை மற்றும் சொல்வனம் இதழ்களில் தொடர்ச்சியாக எழுதி வருபவர். சென்ற ஆண்டு அவருடைய முதல் தொகுப்பு 'சக்யை' வாசகசாலை வெளியீடாக வெளிவந்தது. இந்த ஆண்டு மற்றொரு தொகுப்பு வந்துள்ளது. அவருடைய இந்த கட்டுரை சிறுமிகளின் கதையாக, குறிப்பாக வருவின் வெவ்வேறு வடிவங்களை பற்றிய கதை என்பதொரு புதிய பார்வை. நன்றி) 

அன்புள்ள சுனில்கிருஷ்ணன் அவர்களுக்கு,

 நாவல் முடித்த இன்று முதலில் தாேன்றியது இதில் வரும் அனைத்து சிறுமிகளும் ஒருவரே தான் என்று.இதை சிறுமிகளின் கதை என்று சாெல்லலாம் என்று நினைக்கிறேன்.சதங்கை ஒலியை மாெழியாக காெண்டவள்,பெற்றாேரை தாெலைத்தவள்,இந்த உலகின் தர்கங்களுக்கு அப்பாற்பட்டவள்,மூத்தவள்,இளையவள் என்று அனைவரும் வருவின் வடிவங்கள்.வெவ்வேறு கலன்களில் ஒரே காவிரி.

நாம் வகுத்த வாழ்வியல் கடமைகளை, நம் ஊழாக மாற்றியிருப்பதும் அமுது நஞ்சான நிலைதான்.குழந்தையின்மை என்பதை எத்தனை சுமையாக மாற்றியிருக்கிறாேம்.
கர்ணனின் ராதையிலிருந்து எத்தனை ராதைகளின் வாழ்வு குழந்தை என்ற ஒற்றை நிகழ்வினால் மட்டுமே நிம்மதியற்ற ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது.அத்தனை எளியதா பெண்ணின் வாழ்வு? என்ற என் நித்யகேள்விக்கான தாெடர்ச்சியாக நீலகண்டம் என்னுடன் உரையாடுகிறது.தன் நீட்சியை உலகில் விட்டு செல்ல வேண்டும் என்ற ஆதிஉணர்வின் வெளிப்பாட்டின் தாக்கத்தின் இன்றைய நிலை நாவலில் உளவியல் ரீதியாக சாெல்லப்பட்டிருக்கிறது.

குழந்தைகள் தவறாக பயன்படுத்தப்படும் இடங்கள் பதற்றம் தருபவை.குறிப்பாக நந்தகாேபால் கதாப்பாத்திரம் சிறுவயதில் திரிபடையும் இடம்.

வம்சக்கதைகளை சிறுவயதிலிருந்து கேட்டு கேட்டு அது செந்திலின் மனதை ஆட்காெள்ளும் இடங்களில்... நாம் நினைவாற்றலால் எத்தனை தூரத்திற்கு அஞ்சியவர்கள் என்று தாேன்றியது.
வருவின் பச்சை கவுனும் நாகம்மையின் பச்சை பாவாடையுமாக காமாட்சியம்மனை மனதில் காெண்டு வருகிறார்கள்.
நாவலின் கதாப்பாத்திரங்களின் மனசிக்கல்களுக்கான விடுதலை ஹரியிடம் இருக்கிறது அல்லது ஹரி செந்திலின் மனசாட்சியின் வடிவம்.

பெரியவீடு பற்றிய சித்தரிப்புகள் மனதில் நிற்கின்றன.எங்கள் பக்கம் அவ்வளவு பெரியவீடுகளே கிடையாது.கரையான் பரவும் இல்லம் என்ற அழிவின் சித்திரம் ஒரு நகரும் காட்சியாக மனதிலிருக்கிறது.

'எவருக்காே காத்திருந்து செம்மை ஏறிய விழிகள்' என்று வீட்டை சாெல்லும் வரி அழகானது.அந்த அமுதே நஞ்சாகிறது.காத்திருப்பின் அமுது.
ஆதியில் பாலாழி கடைவதிலிருந்து அது தாெடங்குகிறது.விக்கிரமனின் முடிவில்லாத காத்திருப்பு.குழந்தைக்கான காத்திருப்பு. நாேய்தீர்வதற்கான காத்திருப்பு என்று.காத்திருப்பு என்பதே முடிவிலியின் ஒரு சிறுகீற்றை உணர்த்துவது தானே.

அவ்வளவு பெரியவீட்டை விற்று சென்னையில் இவ்வளவு சிறிய இடம் வாங்க வேண்டுமா? என்று செந்தில் நினைக்கும் இடத்தை விரித்துக்காெள்ள முடியும்.
அன்பின் மீதான என் கேள்வி நாவலில் வலுப்படுகிறது.ரம்யாவின் பெற்றாேர் அன்பு திரிபடையும் இடத்தில்...அன்பென்பது நதி பாேல கடந்து செல்லும் நிலையா? என்று நாவலை வாசிக்கும்பாேது தாேன்றியது.உடல்வலு குறையும் நேரத்தில் 
அவரின் அன்பு என்பது நீலம்பாரித்த ஒன்று.

தூயவெகுளித்தனத்தின் மீது விழும் முதல் பாெறி.நாயனார் கதையின் சிறுவனின் கேள்வி.எதுக்காகவாவது என்ன விடுவன்னா நான் உனக்கு யார்? என்ற கேள்வி மானுடமனதில் ஒவ்வாெரு உறவிலும் முடிவில்லாமல் பற்றி எரிகிறது.

ஆலம் அளவில் குறைகையில் ஓளடதமாகும். சிறுவிலகலில் அன்பு பேரன்பாகும்.இந்தநாவலில் ஹரி அப்படியானவன்.உண்மையில் இவர்களைப்பாேன்றவர்கள் நீலகண்டர்கள் என்று தாேன்றுகிறது.அன்பை நிறுத்திவைக்கத் தெரிந்தவர்கள்.

குழந்தையை முழுதாக ஏற்க இயலாத ,ஒதுக்கமுடியாத நிலையை  நாவல் துணை கதைகள் வழியாக சாெல்வதன் மூலம் ,இதுஒன்றும் புதிதல்ல என்றுமுள்ள சிக்கல் என்கிறது.பெற்றாேர் அன்பை லட்சியவாதத்திலிருந்து யாதார்த்தத்தில் காெண்டுவந்து வைக்கிறது.

பேரன்பை எய்தஇயலாத, பெருவஞ்சத்தை எட்டிப்பிடிக்காத நிலையே சராசரி மானுடஅன்பு.ஆலமுமல்லாத அமுதமும் அல்லாத ஆலஅமுதமே நீலகண்டம்.

முதல்நாவல் என்பது எழுதுபவர்களின் அழகிய பதட்டமான கனவு.முதல் நாவலுக்கு என் வாழ்த்துக்கள்.நான் எவ்வாறு இந்த நாவலை உள்வாங்குகிறேன் என்ற தனிப்பட்ட அனுபவம் இது.அதில் தவறும் இடங்கள் இருப்பது இயல்பு.
                                                    அன்புடன்,
                                                     கமலதேவி

No comments:

Post a Comment