Monday, January 13, 2020

நீலகண்டம்- கோமளா


(கோமளா எங்கள் பகுதியில் அரசு பள்ளியில் கணக்கு ஆசிரியையாக இருக்கிறார். மரப்பாச்சி இலக்கிய வட்டத்தில் முக்கிய உறுப்பினர். தொடர்ந்து பங்களிப்பு ஆற்றி வருபவர். அவர் நீலகண்டம் நாவல் குறித்து அவருடைய வாசிப்பை எழுதியுள்ளார். நன்றி)      

  ஆலகால விஷம் அனைவரும் அறிந்ததே...இது விஷத்தைப் பற்றிய வித்தியாமான விளக்கம்..நச்சைப் பற்றி புதிய கோணம் ..ஆட்டிச குறைபாடு பற்றிய நாவலோ இது என ஆரம்பத்தில் தோன்றினாலும் போகப்போக ஆட்டிச பின்புலத்தை அடிப்படையாகக் கொண்ட அகச்சிக்கலை பிரதிபலிக்கும் கதை என உணர முடிகிறது..நாம் அனைவருமே ஒரு வகையில் நீலகண்டர்கள் தான் என்ற உணர்வு தந்து முற்றுப் பெறுகிறது..

                   இன்றைய நவீன யுகத்தின் குழந்தையின்மை தம்பதியரின் அகச்சிக்கலே நீலகண்டத்துதுக்கு அடித்தண்டாக நான் உணர்ந்தது..செந்தில்-ரம்யா வெவ்வேறு வாழ்வியல் சூழலில் வளர்ந்த இவர்கள், மனமொத்து,குடும்பம் பிரிந்து,மணம் செய்து வாழும் நிலையில், குழந்தையின்மை  பிரச்சினை உருவெடுக்க,ஒரு குழந்தையை தத்தெடுக்க, தத்தெடுக்கப்பட்ட அக்குழந்தையோ ஆட்டிச குறைபாடுடையதாக அமைகிறது.அக்குழந்தையை வளர்க்கும் பொருட்டு விளையும் சிக்கல்கள்,உண்டாகும் அவமானங்கள்,ஏற்படும் சலிப்புகள் இவற்றோடு பயணிக்கும்போது முடிவில் மனம் கனக்கிறது.

        வரு என்கிற வர்ஷினி பேசாவிட்டாலும் உணர்வுகளால் மனதை நிரப்புகிறாள்.நீலயானை பொம்மை,சோட்டாபீம் கோஷ்டி,நீமோ,நிஞ்சாஸ் என எல்லோரும் உலா வரும் பக்கங்கள் ரசிக்க வைக்கிறது.அதுவும் சுடலைமாடன்-மெடியா ஒருங்கிணைப்பு மிகச்சிறப்பு..பரம்பரையாக குலங்களில் தோன்றி மறைந்த பெண் குழந்தை தெய்வ வழிபாடு புனைவு அல்லாத விசயமே. இன்றுமே எல்லா சமூகத்திலும்  பின்பற்றப்படும் பழக்கமே..இவ்வாறாக ஆங்காங்கு நிகழும் நிகழ்வுகள் முடிவில் ஒரு புள்ளியில் இணையும் விதம் நன்று.

         அவமானம்,புறகணிப்பு,ஒருதலைப்பட்சம்,சலிப்பு,வன்மம் இப்படி உள்ளத்துக்குள் ஊறும் நச்சை உமிழ்ந்து அழிப்பற்கும், உள்ளுக்குள்ளே வைத்து வாழ்வதற்குமான ஒரு வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறது இந்நாவல்...அருமை ரைட்டர் நல்ல படைப்பு..

1 comment:

  1. விமர்சனம் அருமை... வாழ்த்துகள்

    ReplyDelete