Wednesday, November 13, 2019

களி- சிவமணியன் கடிதம்

அன்புள்ள சுனீலுக்கு,


நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். 



ஒரு இலக்கிய படைப்பினை முதன் முறையாக வாசிப்பது என்பதை ஒரு புதிய ஊருக்கு செல்லும் களிப்பூட்டும் பயணம் எனக் கொண்டால், அந்தப் பயணத்தின் சரியான வழிகாட்டும் பதாகைகளாக அந்தக் கதையின் போக்கில் பொருத்தமான தருணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படிமங்களையும் உவமைகளையும் சொல்லலாம். நல்ல படைப்புகளில் மட்டுமே அந்த மைல்கல்களும் பாதைகாட்டிகளும் அந்தக் கதைக்கான நோக்கத்தோடு ஒத்திசையும் வகையில் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட கதைகளில் களியும்  ஒன்று. 



‘நாள்முழுக்க புது கத்தியைப் போல் எவரையேனும் பதம் பார்க்கத் துடிக்கும்’


‘கோட்ட நாச்சி சல்லட சதங்கையோட இறங்கி ஆடுற மாதிர’


‘மெல்ல மெல்ல இரையைச் சுற்றி வரும் புலியைப் போல’


போன்ற உவமைகள் கதைத்தருணங்களை மேலும் சில முறை ஆழ்ந்து வாசிக்க வைத்தன. 



‘சுவர்க்கோழிகள் சென்றுகொண்டிருக்கும் இரவை கத்தி பிடித்து இழுத்து வைத்திருந்தன’


‘விளையாட்டு வீரனால் எந்த விளையாட்டையும் விளையாட முடியும்’



போன்ற அவதானிப்புகளும் கதைக்கு மேலும் வலு சேர்த்தது. 



விளையாட்டின் பின்புலம் படைப்புகளுக்கு எப்போதுமே புதிய வாசல்களை திறக்கும். இறகுப் பந்து விளையாட்டின் பின்புலத்தில் தமிழில் நான் வாசித்த முதல் சிறுகதை இதுதான்.   விளையாட்டு எந்த அளவிற்கு களிப்பினை தருமோ, அந்த அளவிற்கு கடுமையான தோல்வி கசப்பினையும், மீளமுடியாத மனக்காயத்தையும் ஏற்படுத்தும். விளையாட்டு வாழ்க்கையின் மாதிரிதான்,  ஆட்டத்தினை வெல்வதற்கு கேம், செட்களின் இறுதிப்புள்ளியை சீராக வென்றால் போதும், எல்லாப் புள்ளிகளையும் வெல்ல வேண்டியதில்லை.   சில தேவையில்லாத புள்ளிகளை விட்டுக்கொடுத்து கடந்து செல்லலாம்.  



கணேசன், சுந்தர் உறவு ஊடுபாயும் பல பாத்திரங்களின் நிழல் மோதல்களுக்கு அடியில் ஒரு மர்மமாக புனையப்பட்டிருக்கிறது .  கதையில் வாசக கற்பனைக்கு வாயப்பிருக்கும்  இடைவெளிகள் விடப்பட்டிருக்கிறது, சுந்தருக்கும் கணேசனுக்குமான மனவிலக்கத்தின் காரணம் என்ன? சந்திரனின் மீது சுந்தருக்கு  கசப்பு ஏன்?  பூரணிக்கும் கணேசனுக்குமான உறவு என்ன?நிதானமான பாத்திரமாக புனையப்பட்டிருக்கும் சந்திரனின் மரணம் ஏன் நிகழ்ந்து?



இதில் சந்திரனின் மரணம் பற்றிய இடைவிடலில்தான் என் கவனம் சென்றது.  சந்திரன் விளையாடும்போது இறந்திருக்கிறார். அதுநாள் வரை இணைஜோடியாக விளையாடிய கணேசனும், சந்திரனும், ஏதேச்சையான ஒரு நாளில் எதிராளிகளாக விளையாட தூண்டப்பட்டிருக்கலாம். ‘தேவையற்ற அசைவு என எதுவுமே இரல்லாமல்  எப்போதும் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில்’ வைத்திருக்கும் சந்திரனுக்கு , ஆட்ட உச்ச தருணத்தில் பழகியிராத கணேசனின் எதிர் மூர்க்கத் தாக்குதல் ஒரு உச்ச தருணத்தில் மனக்காயத்தை (mental injury) ஏற்படுத்தி  எங்கோ முட்டி மோத மீளவழியில்லாமல் மார் உறைந்து இறந்திருக்கலாம். எப்போதுமே கட்டற்று ஆடினாலும், இறுதிப் புள்ளியை தன் வசப்படுத்தும் கணேசனுக்கு,  முன்னர் சந்திரனால், இப்போது சுந்தரினால் மனக்காயம் பெற்றாலும், வேறு விளையாட்டிற்கு தன்னை மாற்றிக்கொண்டு மீள்வார் எனத் தோன்றுகிறது. 


அன்புடன்,

சிவமணியன்

அன்புள்ள சிவமணியன்,

நலம். கடிதத்திற்கு நன்றி. சந்திரனின் மரணம் குறித்து சுவாரசியமான அவதானிப்பு. இதை இன்னொரு கதையாக எழுதிப்பார்க்கலாம். ஆனால் இந்தக்கதைக்குள் அவர் எதிரே விளையாடியதற்காக தடம் ஏதுமில்லை என்றே எண்ணுகிறேன். 

அன்புடன் 
சுனில் 

No comments:

Post a Comment