Wednesday, November 6, 2019

களி – சுசித்ரா, கார்த்திக்- எதிர்வினைகள்


அன்புள்ள சுனீல்,

கதையை இன்று தான் வாசிக்க நேரம் அமைந்தது, தாமதத்துக்கு மன்னிக்கவும். 

கதை மிகச்சிறப்பாக இருந்தது. உங்கள் கதைகளிலேயே மிகவும் நுண்ணுய தளங்களை தொட்டவற்றில் ஒன்று என சொல்லலாம். அவை எல்லாம் பின்னியிருந்த விதம், பல அடுக்குகளை கோத்து வைக்கும்போது உருவாகும் மயக்கம், எல்லாம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. 

ஒரு பக்கம் கணேசன் - சந்திரனுக்கு இடையேயான முந்தைய தலைமுறைபாணி உறவு. ஒரு வழியில் அந்தஸ்து பார்க்காத நட்பு. அதன் அடியில் அவர்களுடைய வெவ்வேறு ஆளுமைகள், அதன் வெளிப்பாடு. 

இருவருக்கும் அடிப்படையாக வாய்த்த அதிர்ஷ்டத்தில் ஒரு சமமின்மை உள்ளது - வாழ்க்கையில் பொதிந்துள்ள ஆதார அநீதி என்று அதனை சொல்லலாம். பிறப்பில் ஆரம்பித்து தொடர்கிறது. ஆனால் அவர்களுடைய ஆளுமைப்பண்புகளே விதி போட்ட புள்ளிகளை கோலமாக்கி அவ்வாழ்க்கைகளை தீர்மானிக்கிறது. உதாரணம் கணேசன் படிக்காமல் போவது, அவன் தென்காசிக்கு போய் மாட்டிக்கொள்ளும் இக்கட்டு இத்யாதி. 

இவர்கள் இருவருக்கிடையேயான முரண் கதைக்குள் தெளிவாக இருந்தாலும் அவர்களது உறவும் நெருக்கமும் சற்று பூடகமாக சொல்லப்படுகிறது. என்னை மிகக்கவர்ந்த பகுதி இது. குறிப்பாக கணேசன் குடித்து விட்டு படுத்திருக்கையில் சந்திரன் அவன் முன்னால் தோன்றும் இடம். இறுதிக்களத்தில் கணேசன் கிட்டத்தட்ட சந்திரனாகவே மாறுவது.  கணேசன், சந்திரன், இருவரும் அவரவர்கள் விதத்தில் அகங்காரிகள். அவர்களுக்கிடையேயான உறவில் சமநிலை என்பது என்பது எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்று யோசிக்க வைத்தது.

இன்னொரு திரி இறந்துபோன சந்திரனுக்கும் அவன் மகன் சுந்தருக்குமான உறவு. ஒரு விதத்தில் மொத்தக்கதையையும் இந்த ஒரு உறவுச்சிக்கலின் விரிவாக்கம் என்று படிப்பதற்க்கான இடம் கதைக்குள் இருக்கிறது.

மூன்றாவது கணேசனுக்கும் சுந்தருக்குமான உறவு. சமூகப்படிநிலை, அந்தஸ்து, என்பதைத்தாண்டி அப்பாவின் நண்பர் என்ற அகங்காரமோதலையும் தாண்டி ஒரு மாற்று அப்பா உறு என்ற இடம் வரை வாசிக்க வைத்தது.

சாதி, கல்வி, அந்தஸ்து, உறவுகள், அன்பு, என்று மனிதர்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் அதில் விளையும் அகங்காரத்தையும் கதை பல தளங்களில் தொட்டு விரிக்கிறது. இந்தகக்தையை ஷட்டில் விளையாட்டு போன்ற வித்தியாசமான கதைகளத்தின் பின்னணியில் அமைத்தது இன்னும் வலு சேர்க்கிறது. இறகுப்பந்து மென்மையானது, ஆனால் அதை அடித்து அடித்து மட்டையாடுகிறார்கள். அகங்காரத்தை எவோக் பண்ண நல்ல குறியீடு. 

தமிழகத்துச் சிற்றூர்களில் வெவ்வேறு விளையாட்டுகளுக்கு இப்படி குழு உருவாக்கி கேம் ஆடி ஊருஊராகச்சென்று கப் அடித்து வரும் ஒரு subculture உள்ளது. எங்கள் ஊர் பக்கம் ஹாக்கி அப்படியான ஒரு விளையாட்டு. என் நண்பன் ஒருவன் கல்லூரி படிக்கையில் யோகா சேம்பியன்ஷிப் என்று சொல்லி இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறான் - பெரும்பாலும் சிற்றூர்கள், கிராமங்கள். இலக்கியத்தில் இதெல்லம் அதிகம் எழுதப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. உங்கள் கதையில் அந்த பின்னணி மிக இயல்பாக வந்திருக்கிறது.

மிகச்சிறப்பான கதை சுனீல். வாசித்து உடனே எழுதுகிறேன். கொஞ்சம் அசைபோட்டால் வேறு வகைகளிலும் கதை திறந்துகொள்ளும் என்று நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

சுசித்ரா

----

மூன்று ஆண்கள் தனிப்பட்ட முறையில் வெவ்வேறு ஆளுமைகள் , வெவ்வேறு காலகட்டங்கள் அவர்களிடையேயான தனிப்பட்ட உறவுகள்.அந்தரங்கமான உறவுகள் - பள்ளி கால நண்பன் , பாட்மிண்டன் சொல்லி தரும்
ஆசிரியன் ,அப்பாவின் நண்பர் .

குடும்ப அமைப்பில் ஒரு லேயர் , குடும்பத்தில் அவர்களின்  பங்களிப்பு , அவர்களின் மேல் குடும்பத்தின் பாதிப்பு (சுந்தர் படிப்பு குறித்து அப்பா தக்க இடத்தில் மடை மாற்றி விடுதல் ) குடும்பத்தில் அவர்களின் இடம் , அணுகுமுறை அதில் காணக்கிடைக்கும் பேதங்கள்.
குடும்ப ரீதியான உறவு முறைகள் ( மாமா , தாத்தா , தங்கச்சி ) 

சமூக அமைப்பில் அவரவர்களின் இடம் , அது சார்ந்த privilege , அது அளிக்கும் பாதுகாப்பு ( சுமூகமான காதல் திருமணம் vs கைகலப்பில் முடியும் காதல் ) அதன் அடுக்குமுறை ( முதலாளி /தொழிலாளி , நட்பு vs மரியாதை)

இதையெல்லாம் இணைத்து லாவகமாக ,உறுத்தாமல மிக அழகாக பின்னப்பட்டதும் தான் கதையின் ஹைலைட்டே.

Badminton game என்பது ஒரு proxy, அகத்தில் அந்தரங்கமாக நடக்கும் விஷயம் புறத்தில் ஒரு ஆட்டமாக உருக்கொள்கிறது .

இதிலிருந்தும் முளைத்துச்  செல்லும்
பல்வேறு கிளைகள் , சுந்தரின் அப்பா மீதான கோபம் , சுந்தரோடு இணைந்து ஆட என்னும்
கணேசனின் விழைவு ...அதை மூர்க்கமாக மறுக்கும் சுந்தர் மனநிலை ..மற்றவர்களிடம் தோற்றாலும் சுந்தரிடம் தோற்றுவிட முடியாத / கூடாத ஒரு மனநிலை ..

தன்னாலும் சங்கரனைப்போல ஆட முடியும் என்று அறிவிக்கும் புள்ளி இன்னும் நுட்பமா இருக்கு ..
i can be him , i could have been him , நண்பனை அந்தரங்கமாகவும் , புறவயமாகவும் internalise செய்ய முடிகின்ற ஒரு புள்ளி .

இந்த ஊடுபாவுகளை subtle ஆக சொல்லியிருந்தது சிறப்பு.- 

கார்த்திக் 

No comments:

Post a Comment