Friday, May 19, 2017

நிலமும் நினைவும்- சு. வேணுகோபாலின் நிலம் எனும் நல்லாள் நாவலை முன்வைத்து


(பதாகை சு.வேணுகோபால் சிறப்பிதழுக்காக எழுதிய கட்டுரை)
யசோதா அக்கா சூடச்சுடர் முன் மண்டியிட்டு வணங்கினாள். சேலையையும் நாடாவையும் தளர்த்தி இறக்கினாள். தொய்வில்லாமல் வயிறு புடைத்திருக்கிறது. இரு கைகளிலும் செம்மண்ணை அள்ளி ஈசான மூலை வேம்பாண்டசாமி கோயிலை நோக்கி வணங்கினாள். அந்த மண்ணைத் தன் வயிற்றில் மெல்லத் தடவ சேலையிலும் நிலத்திலும் உதிர்ந்து விழுந்தது. உதிராத மண்ணோடு சேலையை ஏற்றிக் கட்டிக்கொண்டு சிரித்தாள்.“
-நிலம் எனும் நல்லாள், சு.வேணுகோபால்.
சு.வேணுகோபாலின் நிலம் எனும் நல்லாளில் வரும் இச்சித்தரிப்பு என்னுள் பல நினைவுகளை, கேள்விகளைக் கிளர்த்தியது. சென்னைக்கு வரும் ஒவ்வொருமுறையும் முருகையாவை பார்ப்பேன். வழக்கமாகச் செல்லும் உறவினர் வீட்டு அடுக்குமாடி கட்டிடத்தின் வாட்ச்மேன் அவர். எங்கள் பகுதியை சேர்ந்தவர் என்பதால் கூடுதல் பிரியம். பதினெட்டு ஏக்கர் நஞ்சை, தென்னந்தோப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆறாயிரம் சம்பளத்திற்காக பட்டணம் வந்து வாயில் காத்துக் கொண்டிருக்கிறார். ஊர் திரும்புவதைப் பற்றியும் மீண்டும் விவசாயம் செய்வதைப் பற்றியும் பேசிக்கொண்டே இருப்பார். கடந்தகாலத்து நினைவுகளும் என்றேனும் ஒருநாள் ஊர் திரும்பி விவசாயம் செய்து விட முடியும் எனும் எதிர்காலத்து கனவும் நிகழ்காலத்து அவமானங்களை அசவுகரியங்களைப் பொறுத்துக்கொள்ளச் செய்கிறது.
சென்றமுறை சென்னைக்குச் சென்றபோது முருகையா அங்கில்லை. வேறு எவரோ ஒரு கிழவர் பெரிய மீசையுடன் நின்றிருந்தார். முதுகுளத்தூரோ சிங்கம்புணரியோ தெரியவில்லை. கேட்கவேண்டும். முருகையா ஒருவேளை ஊர் திரும்பியிருப்பாரோ என மகிழ்ந்து விசாரித்தேன். அந்த பில்டர் கட்டும் புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்கு நம்பகமான காவலாள் தேவை என அழைத்துச் சென்றதாக சொன்னார்கள். புதைகுழியென நகரம் தன்னுள் எல்லோரையும் இழுத்துக் கொள்கிறது. இந்தக் காட்சி இந்த ஒட்டுமொத்த கதையின் சாரத்தையும் தன்னுள் திரட்டி வைத்திருப்பதாகக்கூட தோன்றுகிறது.
சு.வேணுகோபாலின் நிலம் எனும் நல்லாள் நவீன இந்திய சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனைகளான இடப்பெயர்வை, நகரமயமாதலை பழனிகுமார் எனும் தனிமனிதனை அலகாகக் கொண்டு விரிவாகப் பேசுகிறது. நிலம், நினைவுகள், குடும்பம், பொருளியல் தேவை என பல்வேறு விசைகளால் அவன் இழுபடுகிறான். அண்ணன் தம்பியென தேனிக்கு அருகே கிராமத்தில் விவசாயம் செய்து வாழும் பெரும் குடும்பம் அவனுடையது. படித்து கிராமத்தை விட்டு வெளியேறி ஏதோ ஒரு அலுவலக வேலைக்காக மதுரைக்கு வருகிறான். வேலைபார்க்கும் மனைவியும் குழந்தைகளும் கோவைக்கருகே வசிக்கிறார்கள். விடுமுறையில் ஊரிலிருக்கும் அம்மாவையும் தம்பி குழந்தைகளையும் காண வேண்டும் என விரும்புபவன் மனைவி பிள்ளைகளைக் காணச் செல்வதோடு துவங்குகிறது கதை.
அன்னை நினைவுகளோடும் சேர்ந்து வளர்ந்த நிலத்தோடும் இணை வைக்கப்படுகிறாள். மனைவி நிகழ் வாழ்க்கையோடும் புதிய நிலத்தோடும். கதையின் துவக்கமே நேரடியாக அதன் மைய சிடுக்குக்குள் நம்மை இழுத்துவிடுகிறது. இருவேறு விசைகள் வெவ்வேறு திசைகளில் அவனை இழுக்கின்றன. ஒருவகையில் அவைகளுக்கு இடையிலான சமரச புள்ளியை கண்டடைவது தான் கதை எனலாம். பழனியின் தரப்பைப் பேசத் துவங்கும் கதை அவன் மனைவி ராதாவை முதலில் இகழ்கிறது. மெல்ல ராதாவின் தரப்பை நோக்கி நகர்ந்து அதை புரிந்துகொள்ளும் முயற்சியில் பழனியின் மனம் திறந்துகொள்வதோடு கதை முடிகிறது. புதிய நிலத்தில் வேர் துளிர்க்கிறது.
பெண்ணையும் நிலத்தையும் ஒப்பும சொல்வது நம் மரபின் வழக்கம். பூதேவி எனும் அன்னையின் வடிவமாக நம் புவியை வணங்குகிறோம். எல்லா வளத்தையும் தன்னில் புதைத்துக் கொள்பவள். வேணு இந்த உருவகத்தையே நவீன கதையாடலுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். புதிய நிலத்தில் பழனி அன்னியமாகும் இடங்களை நுட்பமாக சுட்டிக்காட்டுகிறார். பேருந்துகளில் கூட அவனுக்கு எவரும் இடமளிப்பதில்லை. பழனி தன்னை பயன்மதிப்பற்று உணர்கிறான். அவன் அங்கு எவருக்கும் தேவைப்படவில்லை. தன் பிள்ளைகள்கூட மனைவி வழி உறவையே அறிந்து வளர்கின்றன. அவனிடம்கூட ஒட்டுவதில்லை. அவர்களாவது தன்னிடம் ஒட்டவேண்டும் என ராதாவிற்கு தெரியாமல் ஆற்றுக்கு அழைத்துச் செல்கிறான். வேண்டியதை வாங்கித் தருகிறான். ஊரில் தன் சுற்றம் சூழ வாழ்ந்த போது தன் சொல்லிற்கு இருந்த மதிப்பை எண்ணி வருந்துகிறான். கதையின் கடைசியில் ஆட்டுக்குட்டியின் வயிற்றிலிருந்து சிதைந்த குட்டிகளை எடுத்து ஆட்டைக் காப்பாற்றுவதன் வழியாக தனக்கான பயன் மதிப்பை உணர்ந்து கொள்கிறான்.
கதைக்குள் கர்ணபரம்பரை கதையாக சொல்லப்படும் நாகலாதேவி கதை முக்கியமானது. நாகலாபுரத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க பழனியின் தாத்தாவின் தாத்தா ஆறு மைல் அப்பாலுள்ள காளனூருக்கு வந்தார்கள். ‘நாகலாபுரத்தான்’ என்றே பழனியின் தாத்தா அவருடைய கூட்டுக்காரர்களால் அழைக்கப்படுவாராம். பழனியின் அப்பா காளனூரை தன் உயிராக எண்ணுபவர். பழனியின் மகன் அவன் வளர்ந்த கொங்கு மண்ணை இயல்பாக அப்படித்தான் எண்ணுவான் அல்லவா? முன் எப்போதோ இஸ்லாமிய படையெடுப்பின் விளைவாக (இதற்காக அவர் மீது இந்துத்துவ முத்திரை குத்தப்பட்டது என்றெண்ணுகிறேன்) ஆந்திரத்தில் இருந்து பெயர்ந்து தான் நாகலாபுரம் வந்தார்கள். அவர்களுடைய குலதெய்வம் நாகலாதேவி வாக்களிப்பதாக வரும் பாடலில்
‘தெற்கு நோக்கி நடங்கள்..
திருவிளக்கு நானாவேன்…
வெறியாட்டம் அடக்க..
வீரமெல்லாம் திரட்டி வருவேன்…
விட்டு வந்த மண்ணிலே..
பட்டுருள பிஞ்சுகள் வரும்.
.பட்டழிந்த காயமெல்லாம்..
செம்புழுதி மேவி ஆத்தும்…
வீரமெல்லாம் திரட்டிவர..
வேகமாக நடங்கள்.’
என்று முடியும் அப்பாடலின் இறுதியில் ‘தெற்கே வந்த நாகலாதேவி திரும்பாமலே உறங்குகின்றாள்’ என்றெழுதுகிறார் வேணு. இடப்பெயர்வு என்பது தவிர்க்கமுடியாதது என்பதை சொல்கிறது. அன்னை நிலம் பற்றிய கனவு மனிதர்களை இயக்குகிறது. ஒரு கோணத்தில் இந்த கதை நிலபிரபுத்துவத்திலிருந்து நவீன காலகட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருந்த தலைமுறையின் அலைகழிப்பை பேசுகிறது. நவீன சமூகம் இத்தகைய பிடிப்புகளை பொருட்படுத்துவதில்லை. நிலத்தினுடனான உணர்வுரீதியான பிணைப்பை துண்டிப்பதன் வழியாகவே அது முன்னகர்கிறது.
வேணுவின் மிக முக்கியமான பலம் என்பது பாத்திரங்களை உருவாக்கி நிலைநிறுத்தும் அவருடைய முறை. நுண் விவரணைகள், மானுட இயல்புகளைப் பற்றிய கூரிய அவதானிப்புகள் மிகச் சரளமாக அவருடைய கதைகளில் காணக் கிடைக்கின்றன. பழனிகுமாருக்கும் ராதாவிற்கும் இடையிலான உரையாடல்களில் வன்மம் தெறிக்கிறது. பாத்திரங்களின் அக விவரிப்புகள் மிக நுட்பமானவை. ஆட்டம் குறுநாவலில் மத்திய வயதிலும் தனது மிடுக்கை நிரூபிக்கத் துடிக்கும் வடிவேலும், நிலம் எனும் நல்லாளில் இச்சைகளுக்கும் கனவுகளுக்கும் நிதர்சனத்திற்கும் இடையில் ஊடாடி புதிய நிலத்தில் வேர்விட முடியாமல் தவிக்கும் பழனிகுமாரும் அத்தனை கச்சிதமாக அவர்களுடைய கீழ்மைகளுடனும் உன்னதங்களுடனும் உருவாகி இருக்கிறார்கள்.
‘அடுத்தவனோடு தொடுப்பிருந்த’ காரணத்திற்காக புருஷனால் இடது கை வெட்டப்பட்ட மீனாட்சிபுரத்துகாரி, பொலிகாளையாக மாறி பொதபொதவென ஆன முன்னாள் கபடி வீரன் (ஆட்டம் குறுநாவல்) என முதன்மை பாத்திரங்களைத் தவிர்த்து உதிரி பாத்திரங்கள் கூட சொற்ப சொற்களில் உயிர்பெறுகிறார்கள். நினைவுகளின் வழியாக துலங்கிவரும் பழனிகுமாரின் தம்பி குமரனின் பாத்திரம் முக்கியமானது. குமரன் பள்ளி படிப்பில் ஆர்வமற்றவன். அனுபவத்தின் வழியாக விவசாய நுட்பங்களில் தேர்ந்தவன். வலிப்பு நோய்க்காரன் என்பதால் ஆசைப்பட்ட பெண்ணை அடைய முடியாதவன். குமரன் நிலத்தை தொழுதவன், அதன் ரகசியங்களை அறிந்தவன். பிற விவசாயிகள் தோல்வியடைந்த காலங்களிலும் கூட விடாப்பிடியாக விவசாயத்தை கைக்கொண்டு லாபம் பார்க்கிறான். குமரன் அவன் நம்பிய நிலத்திலேயே நிராதரவாக மூச்சடங்குகிறான். ‘எவ்வளவோ முயன்றும் மண் அவனை எழவிடாமல் வீழ்த்திக்கொண்டே இருந்தது’. நிலத்தின் மீதிருந்த இறுதி பிடிமானமும் அற்றுப் போய்விடுகிறது. பழனியால் ஒருபோதும் அவன் நிலத்திற்கு திரும்ப முடியாது.
நிலம் எனும் நல்லாள் நாவலின் இறுதியில் மாதவன் பழனியின் சிக்கலை துல்லியமாக சொல்கிறான். “நீ வாழ்ந்த்த நெனச்சுகிட்டே இருக்க. வாழப்போறதப் பத்தி நெனை. நெனைக்காதது தான் புதுசா வரும். அதுதானே வாழ்க்கை. அதுல முழுசா மூழ்கத்தான் வேணும். நீ ஒதுங்கியே நிக்கிறடா. இது இன்னொரு பயணம். நீ குதிச்சுதான் ஆகணும். தெரிஞ்சுக்கோ” என்கிறான். இப்புள்ளியில் கதை நினைவுகளுக்கும் நிகழ்காலத்திற்குமான ஊசலாட்டமாக தென்படுகிறது. வாழ்ந்த நிலமும் அன்னையும் கூட நினைவுகள் தானே. யானைக் கூட்டத்திலிருந்து விலகிய ஒற்றைக் கொம்பன் யானையை புதிய கூட்டம் ஏற்க மறுப்பதாக கனவு காண்கிறான் பழனி. பழனியால் உடலளவில் கிராமத்தை உதறிவிட முடிந்தாலும். மனதளவில் அவனால் கூட்டத்திலிருந்து தனித்து வந்துவிட முடியவில்லை. மிருகங்களால் நினைவுகளை உதறிவிட முடிகிறது மனிதர்களால் முடிவதில்லை என அங்கலாய்க்கிறான். அவை ‘நினைவுகள் குறைய குறைய தன் கடமைகள் குறைந்து நிம்மதியடைகின்றன.’ ஆனால் நாகலாதேவியை பற்றி எண்ணும் போது “உருமாறியபடியே இரு என நிர்பந்தித்தபடியே இருக்கிறது நவீனகாலம். அதனுடைய தாரக மந்திரமே அதுதானா. நினைவுகளை இழப்பது பெரும் துன்பம் தான். நவீனகாலம் மனிதர்களின் துன்பத்தைப்பற்றி நினைப்பதே இல்லை.” என்பதையும் உணர்கிறான்.
வேணுவின் மற்றொரு மிகப்பெரிய பலம் அவர் கட்டமைக்கும் புற உலகத்தில் உள்ள நம்பகத்தன்மை. அதுவே கதையில் நம்மை மனம் விலகாமல் ஒன்றச் செய்கிறது. பள்ளியளவில் சாதாரணமாக கபடியாடியிருக்கிறார் என்றறிகிறேன். கபடி களத்தை, அவர்களுடைய அசைவுகளைத் துல்லியமாக படம்பிடித்து காட்ட முடிகிறது. நிலம் எனும் நல்லாள் குறுநாவலிலும் வேளாண்மை சார்ந்த தகவல்களை செறிவுடன் அடுக்குகிறார். அது சார்ந்த நுண் தகவல்களை நுட்பங்களை விவரிக்கிறார். பல எளிய நாட்டுமருத்துவக் குறிப்புகளை அளிக்கிறார். (உண்மையில் பல வேளாண்சார் வட்டார சொற்களுக்கு குத்துமதிப்பாகத்தான் பொருள் கொண்டேன்). அன்றாட விவரணைகளில் இருந்து கவித்துவ எல்லைக்குள் அவர் தாவிச் செல்லும் இடங்கள் மன எழுச்சி அளிக்கின்றன. தன் நிலத்தில் வளரும் சூரியகாந்தி மலர்களை குமரன் காணும்போது எண்ணுவதை ஒரு உதாரணமாக கொள்ளலாம்
“சூரியன் எழும் கணத்திலிருந்து மறையும் கணம் வரை மஞ்சள் முகம் காட்டி முத்தமிடத் துரத்தியபடியே இருக்கும் பரிசுத்தம். கோடானுகோடி நட்சத்திரங்கள் ஒளிவீசி அழைத்தாலும் ஏறிட்டுபார்க்காத தியானம். இரவெல்லாம் கனவுகளைத் திரட்டி திரட்டி விடிந்ததும் தலைதூக்கி சூரியனில் விழிக்கும் மனதிடம். வேரில் பசியிருந்தாலும் முகத்திலே வாடாத மஞ்சள் பொலிவுடன் அண்ணாந்து பார்க்கும் காதல். வாட்டத்தில் தலைபாரம் தாங்காது கழுத்து வளைந்தாலும் முகத்தை தூக்க முடியாமல் தொக்கி ஓரக்கண்ணால் போகும் சூரியனைப் புன்னகையுடன் பார்க்கும் உயிர்கோலம். எவ்வளவு பெரிய சூரியன். எவ்வளவு சிறிய மஞ்சள் பூமுகம். நேருக்குநேர் யாரால் பகலெல்லாம் இப்படி முத்தமிட முடியும். ஒளிமழையில் நனைந்து கருவுறும், தாய்மையடையும்.”
மொழி, உரையாடல், நம்பகத்தன்மை, புற – அக சித்தரிப்பு, கூர்மையான அவதானிப்புகள் ஆகியவை சு.வேணுகோபாலின் படைப்புகளில் கச்சிதமாக கைகூடி வருகின்றன. எனினும் ஒரு குறுநாவல் அளிக்கும் ஒட்டுமொத்த தரிசனம் என்ன? எனும் கேள்வி முக்கியமானதே. அது புதிய திறப்பை அளிக்கிறதா அல்லது புதிய கோணங்களை முன்வைக்கிறதா? எல்லா ஆக்கங்களும் புதிய தரிசனத்தை அளித்துதான் ஆக வேண்டும் என்பதல்ல. வேணு மனிதர்களை நம்புகிறார். அவனுடைய அத்தனை சிடுக்குகளை மீறி அவன் இயல்பாக வாழ்ந்துவிட முடியும் எனும் நன்னம்பிக்கை அவருடைய படைப்புகளில் தென்படுகிறது. அந்த நன்னம்பிக்கை முன்முடிவின் அளவிற்கு செல்கிறதா? நிலம் எனும் நல்லாளை எடுத்துக் கொண்டாலும் சரி ஆட்டத்தை எடுத்துக் கொண்டாலும் சரி அவை முன்வைக்கும் இறுதி தரிசனத்தை இயல்பாக அடையவில்லையோ எனும் ஐயம் எழுகிறது.
ஆட்டம் குறுநாவலில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தை வடிவேல் எண்ணிப் பார்க்கிறான். நெடுங்காலமாக குறுஞ்செய்திகளில் புழங்கி வரும் ஒரு செய்தி தான். அதை நாவலின் தரிசனமாக காண்பதில் தவறேதும் இல்லை தான். ஆட்டம் என்பதே இனிமை. இழப்பதற்கு ஏதுமில்லை. இலக்குகளை அடைவதைப்பற்றி கவலையின்றி ஆட வேண்டும். ஆட்டத்தை நிறுத்திவிடவும் கூடாது எனும் தரிசனத்தை வடிவேல் அடைகிறான். ஆட்டத்தில் வெல்ல வேண்டும் எனும் வெறியடங்கி ஆட்டத்தை புரிந்துகொள்ள முயல்கிறான். ‘நிலம் எனும் நல்லாளை’ பொறுத்தவரை மாதவன் என்றொரு நண்பன் எப்போதோ கூறியதை திடிரென்று கதை முடிவதற்கு கொஞ்சம் முன் எண்ணி பார்க்கிறான் பழனிகுமார். “நீ எத்தன வருசம்டா இந்த உலகத்தில இருந்திட போற. போறப்ப எத தூக்கிட்டு போகப் போற. இருக்கிற எடத்துல நல்லத மொதல்ல பாருடா. நீ வாழ்ந்த வாழ்க்கைய உன் பிள்ளைக வாழணும்னு நெனைக்கிற..அது எப்பிடிடா?” என்றும் இன்னும் பல கேள்விகளை கேட்கிறான், ஆலோசனைகளை சொல்கிறான். வேணுவின் படைப்புகளில் பிரசார தோனி எழுகிறது என விமர்சகர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இத்தகைய முடிவுகள் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது. மையப் பாத்திரத்தின் நகர்வு இயல்பாகவும் அழுத்தமாகவும் அந்த பார்வையை அடையவில்லை என்பதே நிலம் எனும் நல்லாள் மற்றும் ஆட்டம் ஆகிய படைப்புகளின் பலவீனம். ஒருவேளை இன்னும் விரித்து எழுதி இருந்தால் இது நிரடாமல் இருந்திருக்கும்.
வேணு ஆணாதிக்க எழுத்தாளர் என்றொரு விமர்சனமும் வைக்கபடுவதுண்டு. ஆனால் அது ஏற்புடையதல்ல. நிலப்பிரபுத்துவ மனநிலையை பிரதிநிதிப்படுத்தும் ஆண் கதையின் பிரதான பாத்திரமாகிறான். அவனுடைய தரப்புகளும் சிந்தனைகளும் எப்படி இருக்குமோ அதைத்தான் அவர் எழுதியிருக்கிறார். பிற பாத்திரங்கள் வழியாக அதைக் கேள்விகுட்படுத்தவும் செய்கிறார். பழனிக்கு எப்படி தன்னுடைய நிலத்தைப் பற்றிய கனவு இருக்கிறதோ அப்படி ராதாவிற்கு தனது நிலத்தை பற்றிய பெருமிதமும் பிடிப்பும் இருப்பது இயல்பே என்பதையும் பதிவு செய்கிறார். விவசாயம் நிலம் என கனவு கண்டுகொண்டிருக்கும் பழனியிடம் இத்தனை இருந்தும் நீ ஏன் கிராமத்தை விட்டு வெளியேறினாய்? எனும் கேள்வியை மாதவன் நேரடியாக பழனியிடம் கேட்கிறான்.
வேணுவிற்கு மனப்பிறழ்வு கொண்டவர்கள் மீது ஒருவித ஈர்ப்பிருக்கிறது. அவர்களின் களங்கமின்மை கடவுளுக்கு நிகராக எண்ணச் செய்கிறது. ஆட்டத்தில் வரும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் ஓட்டப்பந்தயத்தை போலவே நிலம் எனும் நல்லாளிலும் மாசாணி எனும் பதின்மூன்று வயது சிறுமி வருகிறாள். புதிய ஊரில் பழனி நெகிழும் முதல் நட்பு. அந்த மண்ணின் மீது அவனுக்கு ஒரு பிடிப்பு பிறக்கிறது.
தொலை நிலங்களில் வாழ்பவர்கள் எப்போதும் தங்கள் நிலத்திற்கு திரும்புவதைப் பற்றிய கனவுகளைச் சுமந்து அலைகிறார்கள். நிலம் வெறும் இடம் அல்ல. அது ஒரு வாழ்க்கைமுறையின் பிரதிநிதி. நினைவுகள் பின்னிக் கிடக்கும் அடர் கானகம். அதுவும் பெரும்பான்மை வேளாண் சமூகமாக இருக்கும் இந்தியா போன்ற தேசத்தில் நிலம் ஆன்மாவிற்கு அணுக்கமானது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்திய சமூகம் அதிவேகமாக நிறம் மாறி வருகிறது. நான் வாழும் பகுதியில் வேளாண்மையைக் கைவிட்டவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலைக்குச் செல்வதை பார்க்கிறேன். சேற்றைக் காட்டிலும் சிமிண்டு கறை படிந்த கால்களையே அதிகமும் காண முடிகிறது. ஒரு மிகப்பெரிய உளவியல் மாற்றத்தின் குறியீடாக இதைக் காண்கிறேன். இயற்கையின் தயவில் இருந்த வாழ்வாதாரத்தைக் கைவிட்டு இயற்கைக்கு எதிராக வீம்புடன் நிமிர்ந்து நிற்கும் கட்டிடங்களை நம்பத் துவங்கிவிட்டார்கள். நிலம் மனிதர்களைக் கைவிடுகிறதா? அல்லது மனிதர்கள் நிலத்தைக் கைவிடுகிறார்களா? எனும் கேள்விக்கு அத்தனை எளிதாக விடையளித்துவிட முடியாது.
இறுதியில் பழனி எந்த நிலமும் எவரையும் வஞ்சிப்பதில்லை எனும் இடத்திற்கு வந்து சேர்கிறான். சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் கணியன் பூங்குன்றனார் வந்தடைந்த அதே இடத்திற்க- “யாதும் ஊரே ..யாவரும் கேளீர்”

No comments:

Post a Comment