Sunday, April 30, 2017

தாத்தா - சில நினைவுகள்

(எனது தாத்தா அரிமளம் ராமகிருஷ்ண வைத்தியரின் நூற்றாண்டை முன்னிட்டு தொகுக்கப்படும் நூலுக்காக எழுதிய நினைவஞ்சலி கட்டுரை)

இப்போது கண்ணை மூடிக்கொண்டு தாத்தாவை நினைத்தால் என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறது?

 சற்றே கூனிய மேல் முதுகும், சிவப்பு தோலில் படிந்த தேன் புள்ளிகளும், பளிங்கு நீல விழிகளும் தான் மனதை நிறைக்கின்றன. பின்னங்கழுத்துக்கு கீழே தோல் தடித்த அரக்கு நிற அடையை அவ்வப்போது சொறிந்துகொள்வார். கை எட்டாத போது சீப்பால் நாங்கள் யாராவது சொறிந்து விட்டதும் கூட உண்டு. சட்டையணியாத வெற்றுடலுடன் திண்ணையில் அமர்ந்து வைத்தியம் பார்ப்பார். நாங்கள் யாராவது ஊரிலிருந்து வந்தால் தெலுங்கில் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு அவர் பாட்டுக்கும் வைத்தியத்தை தொடர்வார். அவரிடம் இரண்டே இரண்டு சட்டைகள் தான் இருந்ததாக நினைவு. வான் நீல நிற ஜிப்பா போன்ற அரைக்கை சட்டை ஒன்று, சந்தன நிறத்தில் மற்றொன்று. மூன்றோ, நான்கோ தங்க நிற பித்தான்கள் இருக்கும். வெளியூர்களுக்கு பேருந்தில் செல்வதாக இருந்தால் மட்டுமே அதை அணிவார். சிறிய எவர்சில்வர் செவ்வக பெட்டி ஒன்று அவரிடம் இருக்கும். அதில் மூக்குபொடியை போட்டு வைத்திருப்பார். அதன் துளைக்கும் நெடியை நாசி நுனி நன்றாக நினைவில் வைத்திருக்கிறது, பொடி உறிஞ்சிய பிறகு வீடதிற எழும் தொடர் தும்மல் ஒலிகளையும் கேட்க முடியும். முற்றத்தின் அலுமினிய கம்பிகளில் தொங்கும் பொடி கறை படிந்த வெள்ளை கைக்குட்டைகளையும், கெளபீனங்களையும், அழுக்கேறிய குத்தால சிவப்பு துண்டையும் நினைவில் கொள்கிறேன். ஒரு பெரிய அலுமினிய பெட்டி ஒன்றிருக்கும். அந்த காலத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வார்களே அந்த மாதிரி. வெளியே வைத்தியத்துக்கு செல்லும்போது அந்த பெட்டியை தூக்கிக்கொண்டு தான் போவார். மனமார சிரிக்கும் ஒலி, கீழே அமர்ந்து கல்வத்தில் அரைக்கும் போது எழும்’ டணங்’. கூடத்தில் சாய்வு நாற்காலியில் வாய் பிளந்து உறங்கும் போது அடித்தொண்டையிலிருந்து எழும் குறட்டை என அவருக்கே உரித்த ஒலிகளை செவி மீட்டு எடுக்கின்றன.

Friday, April 14, 2017

வெள்ளிகிழமை ராமசாமி வாராண்டி

திருவாளர் வெள்ளிக்கிழமை ராமசாமி திங்கள்கிழமையே வந்துவிட்டார்.
இப்பொழுது தான், இதோ இரண்டொரு நாட்களுக்கு முன் வந்திருந்தார். 
சனிக்கிழமை சந்திரசேகரன் வரும்வரை இரவெல்லாம் தங்கியிருந்தார். 
காலையிலேயே வந்திருந்தாலும் கூட அவர் பாட்டுக்கும் ஏதுமறியா சினைபூனை போல மூலையில் சுருண்டு படுத்திருப்பார். 
வியாழக்கிழமை வெங்கடாசலம் செல்வதற்கு முன்பா பின்பா? எப்போது வந்தார் என்று கூட தெரியாது. 
அரிதினும் அரிதாக சனிக்கிழமையும் தங்கி சந்திரசேகருடன் சண்டைபிடிப்பதும் கூட உண்டு. 
ஆனால் ஒருபோதும் ஞாயிற்றுக்கிழமை ஞானபிரகாசத்தை கண்டதே இல்லை.
கொஞ்சம் பொறுங்கள், நீங்கள் வர இன்னும் நாளிருக்கிறது
சொன்னாலும் கேட்காமல் நாற்காலியை இழுத்துபோட்டு 
நடுக்கூடத்தில் அமர்ந்திருக்கிறார்.
'வெள்ளிகிழம வர்ற வர இங்கயே இருக்குறேன்.'
என்றார் வெற்றிலை குதப்பியபடி
அப்போதாவது ஒருபோதும் இங்கிருந்து செல்லும் உத்தேசமில்லை
 என்பதை சொல்லி தொலைந்திருக்கலாம்.  



வாசுதேவன் - சிறுகதை குறித்து

அண்மையில் நான் எழுதிய சிறுகதை ஜெயமோகன் தளத்தில் வெளியாகி உள்ளது. வாசுதேவன் நான்கைந்து ஆண்டுகளுக்கு மேலாக மனதின் மூலையில் உறங்கிக்கொண்டிருப்பவன். அவன் விழித்தெழும் போதெல்லாம் அவன் மவுனத்தின் வழியாக எனக்குள் கேள்விகளை எழுப்பியபடியே இருப்பான். யுகம் யுகமாக மனிதர்கள் விடை காண முயன்று அலுத்து சோர்ந்து விழும் கேள்விகள். எனக்கு மட்டும் அத்தனை எளிதில் விடைக் கிடைத்து விடுமா என்ன? 

எழுத தொடங்கிய காலகட்டத்தில், நான் வாசுதேவனை பற்றி எழுதி இருக்கிறேன். பின்னர் மீண்டும் கொஞ்ச காலத்திற்கு முன்னர் காப்காவின் உருமாற்றம் பற்றி ஆம்னியில் எழுதும் போது மீண்டும் வந்து சென்றான். ஆனால் முழுவதுமாக அவனை என் அகத்திலிருந்து இறக்கி வைக்க முடியவில்லை. இப்போது வாசுதேவனாக அவன் என்னைவிட்டு இறங்கி சென்றுவிட்டான். ஏதோ ஒருவகையில் அவனுடைய நினைவுகளுக்கு நான் நியாயம் செய்துவிட்டதாக ஒரு நிறைவு. அவனுக்கு நீதி கிடைத்துவிட்டதாக எனக்கொரு நிம்மதி. இனி அடுத்த வேலையை பார்க்க செல்லலாம். மீண்டும் அவன் என் அகத்தில் துயில் எழ மாட்டான் என்பது எனக்கு உறுதியாக தெரிகிறது. 

இது ஒரு அனுபவப் பகிர்வாக நின்றுவிடுகிறது, தரிசனம் என ஏதுமில்லை என பல நுண்மையான வாசகர்கள் சொன்னார்கள். வேறு பலர் தாங்கள் இக்கதையின் வழியாக உணர்ந்து கொண்டதையும் சொன்னார்கள். பல விஷயங்கள் தொக்கி நிற்பதாகவும், வலிய திணிக்கபட்டதாகவும், நெகிழ்வான தருணங்கள் இன்னும் இறுக்கமானதாகவும் இருக்க வேண்டும் என்று சில வாசக விமர்சகர்கள் சொன்னார்கள். இன்னும் கொஞ்சம் பூடகமாக சொல்லவேண்டும் என்றார்கள். இறுதி வரிகள் தெலுங்கில் இருப்பது வாசிப்பிற்கு தடையாக இருப்பதாக சொன்னார்கள். தெலுங்கில் அவ்வரிகள் வரவேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து இடையில் உள்ள உரையாடல்கள் தெலுங்கில் அமைத்ததாக சொன்னார்கள்.ஜெ மொழி நடையை பின்பற்றுவதாக சொன்னார்கள். ஒவ்வொரு விமர்சினத்தையும் கவனித்து வருகிறேன். சரியாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எனக்கும் இவைகளுக்கு விடையளிக்க இப்போது இயலவில்லை. ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். நடையைப் பொருத்தவரை மீண்டும் மீண்டும் எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் என்னை எச்சரித்த வண்ணமிருக்கிறார்கள்.முழுமையாக புரிந்துகொள்கிறேன். ஒவ்வொரு ஆரம்ப எழுத்தாளருமே அவருடைய ஆதர்ச எழுத்தாளர் நடையில் தான் எழுத துவங்குவார்கள். ஜெ மாதிரி எழுத வேண்டும் என வலிந்து இப்படி எழுதுவதில்லை எனும் நம்பிக்கையை மட்டுமாவது நான் கோருகிறேன். அதுவே என் அகமொழியாக இருக்கும் போது வேறு என்ன செய்ய இயலும்? காலபோக்கில் இது மாறிவிடும என நம்புவோமாக என்பதைத்தவிர வேறெதுவும் சொல்லுவதற்கில்லை.  

இது வடிவ போதத்துடன், சிறுகதை பிரக்ஞையுடன் எழுதப்பட்ட கதையா எனும் கேள்வி எனக்கும் உண்டு. ஏனெனில் சேலம் வானவன் மாதேவி - வல்லபி சகோதரிகளையும் அங்கு வேறு பல தசை சிதைவு அன்பர்களையும் சந்தித்துவிட்டு வந்த பின்னர் ஒரே மூச்சில், மிக குறுகிய காலத்தில் ஒருவித உணர்வெழுச்சியில் எழுதப்பட்ட கதை.  ஆனால் இது அனுபவ பகிர்வாக நின்றுவிடுகிறதா? தரிசனம் என ஏதுமில்லையா? என்னளவில் இக்கதையில் தரிசனம் இருக்கிறது. ஒரு  கண்டடைதல் இருக்கிறது. வாழ்வைப் பற்றிய மிக முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அதற்கானவிடை காணும் திசையில் பயணிக்கிறது. ஒருகால் சரிவர உணர்த்தப்படாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் இருக்கிறது. அதுவே இந்த அனுபவத்தை புனைவாக்கியது. ஏனெனில் இது எங்கோ நடந்ததை அப்படியே மீள் பதிவு செய்யவில்லை. வேறுவகையில் நிகழ்வுகளையும் நினைவுகளையும் மாற்றி களைத்து அடுக்கியிருக்கிறது. இம்முறை வாசுதேவன் அவனுடைய முழு உருவத்துடன் தன்னை வெளிக்காட்டி இருக்கிறான் என்றே எண்ணுகிறேன். ஒன்றிரண்டு கதைகளை எழுதிவிட்டு அவை சரியாக வாசிக்க படவில்லை என  எண்ணுவது முட்டாள் தனம் தான். அதுவும் ஆரம்ப நிலையில்.



-சுகி 

Monday, February 20, 2017

காரைக்குடி புத்தக கண்காட்சி அனுபவங்கள்


ஃபிப்ரவரி பத்தாம் தேதி துவங்கி பத்தொன்பதாம் தேதி வரை காரைக்குடி கம்பன் அரங்கில் வருடாந்திர புத்தககண்காட்சி நிகழ்ந்தது. இது பதினைந்தாவது ஆண்டு என நினைவு. முதல் சில ஆண்டுகள் மத்திய மின் வேதியல் ஆய்வகம் காரைக்குடி கண்காட்சியை எடுத்து நடத்தியது. இன்றும் கூட அது மிக நேர்த்தியாக நடத்தப்பட்டதை பதிப்பத்தார் நினைவு கூர்கிறார்கள். சென்றாண்டு முதன்முறையாக ஒரு அரங்கை எடுத்தேன். நவீன இலக்கிய பதிப்பகங்கள் பெரிதாக ஏதும் இங்கு வருவதில்லை. அவர்களுக்கு கட்டுபடி ஆவதில்லை என்பதே முக்கிய காரணம். எனினும் ஒரு ஆர்வத்தில் சென்ற ஆண்டு நண்பர்கள் துணையோடு ஈடுபட்டேன். லாபமில்லை என்றாலும் நட்டமில்லை எனும் நிலையில் இருந்தது. இந்த ஆண்டு கடிதம் அனுப்புவோம் என்றார்கள். ஆனால் எந்த தகவலும் வரவில்லை. ஃபிப்ரவரி மூன்றாம் தேதி வாக்கில் தமிழினி வசந்தகுமார் அழைத்து “உங்க ஊர்ல பத்தாம் தேதி லேந்து புத்தக கண்காட்சியாமே? கட போடலையா?” என்றார். நிர்வாகிகளிடம் கேட்டால் “லெட்டர் வரலையா?” என்கிறார்கள். ஸ்டால் மீதி இருந்ததால் ஒன்றை பதிந்து கொண்டேன். ஒரு புத்தக கண்காட்சியை ஜனநாயக நாட்டில் இத்தனை ரகசியமாக ஏன் நடத்த வேண்டும் என புரியவில்லை.

Tuesday, January 24, 2017

சிரிக்க கற்றுகொடுத்தவள்

பிரியத்துற்குரிய வானவன் மாதேவியைப்பற்றி சொல்வதற்கும் எழுதுவதற்கும் எனக்கு அனேக விஷயங்கள் உண்டு. எழுதும் மனநிலை எனக்கில்லை. வானதியை எப்போது சந்தித்துவிட்டு வந்தாலும் “சார் எழுதிடிங்களா?” என கேட்பார். கேட்க அவரில்லை என்பதற்காக எழுதாமல் இருக்க முடியாதே. 

Image result for வானவன் மாதேவி

Wednesday, January 4, 2017

தம்பட்டம்

எழுத்தாளன் தனது கதைகளை பற்றி தானே பேசகூடாது தான். ஆனால் வேறு எவரும் எதையும் பெரிதாக பேசாத போது அவனே பேசும் துர்பாக்கியமான நிலைக்கு தள்ளபடுகிறான். பெரிய எழுத்தாளனோ தக்குனூன்டு எழுத்தாளனோ அவனுக்கு வாசிக்கப்படவில்லை அல்லது சரியாக வாசிக்கப்படவில்லை எனும் கவலை இருப்பது இயல்பே. எனக்கும் அது உண்டு. ஒருவேளை சரியாக வாசித்தால் இன்னும் கூட மதிப்பீடு கீழிrங்கலாம்: J

சுருக்கமாக எனது சிறுகதைகளை பற்றி கொஞ்சம் எழுதலாம் என்றிருக்கிறேன். இதுவரையில் தமிழில் பனிரெண்டு கதைகள் பிரசுரமாகி உள்ளன. ஆங்கிலத்தில் ஒரு அறிவியல் புனைவு எழுதி ஒரு போட்டிக்கு அனுப்பி இருக்கிறேன். மற்றொரு தமிழ் சிறுகதை பிரசுரத்திற்கு உள்ளது. இரண்டு விதமான கதைகளை எழுதி இருக்கிறேன் என கூறலாம்.

Tuesday, January 3, 2017

நினைவசை

சற்றே தாமதமாகத்தான் சென்ற ஆண்டின் நினைவுகளை எழுதுகிறேன். புதுவருடம் எனக்கு ரயிலில் பிறந்தது. திருவண்ணாமலைக்கு பயணமாகி கொண்டிருந்தோம். சுதீருக்கு கரும்பு தொட்டில் பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டி இருந்தது. ஆலயத்தினுள் நுழைய முடியாத அளவுக்கு கூட்டம். சுற்று சுவரை கரும்பு தொட்டிலோடு சுற்றி வந்ததோடு சரி. மலையையே ஈசனாக எண்ணி வணங்கி விடைபெற்று, சென்னை பயணம் முடித்து இன்று தான் வீடு திரும்பினேன்.

ஜனவரியில் வளைகாப்பு, அதன் பின்னர் மார்ச் 8 அன்று அதிகாலை பிறந்தான். முந்தைய நாள் காலை ஈற்றரையுள் அனுமதிக்கப்பட்டாள் மானசா, அந்த மகா சிவராத்திரி முழுவதும்  விடிய விடிய ஜிப்மர் மரத்தடியில் பதட்டத்துடன் கண்விழித்து கிடந்தேன். குழந்தை பிறப்பதற்கு முன் இரண்டு மூன்று முறையும், சுதீர் பிறந்த பிறகு இரண்டு மூன்று முறையுமாக இந்த ஆண்டு பாண்டிச்சேரிக்கு சென்றபடி இருந்தேன். இரண்டாவது இல்லம் என கூறும் அளவுக்கு அந்நகரை நேசிக்க துவங்கினேன். இரவுகளில் பொன்னொளி உமிழும் சோடியம் விளக்குகளில் கடலை காண்பதும், அங்கு வரும் மனிதர்களை வேடிக்கை பார்ப்பதும் அலாதியான அனுபவம். சில நேரம் பகல்களில் அம்பேத்கர் மண்டபத்தில் அமர்ந்துவிட்டு வருவேன். சிவாத்மா, ரமேஷ் போன்ற நண்பர்களை ஒருவேளையாவது சந்தித்து பேசி விட்டு ஊர் திரும்புவேன். 

Wednesday, December 14, 2016

ஜெயலலிதா

ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் சிறப்பு நீயா நானாவிற்கு அழைப்பு வந்த போது அதை வரிந்துகொள்வதா வேண்டாமா என்றொரு குழப்பம் நேர்ந்தது. ஏனெனில் தமிழக அரசியல் அறிவுலக சூழலில் துருவ படுத்துதலுக்கு குறைவேதுமில்லை. ஆதரவு அல்லது எதிர்ப்பு. ஒன்றை எதிர்த்தாலே மற்றொன்றின் ஆதரவு. நடுநிலை என்பது இந்திய அரசியலில் கேலிக்குரியதாக கருதபடுகிறது. சார்புடையவர்களை கூட மன்னித்து ஏற்கும் சமூகம் ஐயபடுபவர்களை படுத்தி எடுக்கிறது. எனக்கு சிலவற்றில் தீர்மானமாக யாதொரு முடிவும் இல்லை, ஏன் இல்லை என்பதற்கு காரணம், நான் அவை குறித்து சிந்திக்கவில்லை, தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டவில்லை, அறிந்து கொண்டால் ஒரு முடிவை எடுத்தேயாக வேண்டிய நிர்பந்தத்தின் மீதான அச்சம், பச்சோந்தி தனம் என சொல்லலாம் தான். நாம் எல்லோரும் கண்ணிருந்தும் குருடர்களாக சில தருணங்களில் இருக்க தேர்வு செய்து கொள்கிறோம். அது நமது மன அமைதிக்கு உகந்தது. சுயநலமி என்றும் சந்தர்ப்பவாதி என்றும் துணிவற்றவன் என்றும் அடையாளபடுத்தபடுவதற்கான எல்லா வாய்ப்புகளும் உண்டு. என்ன செய்ய! சில நேரங்களில் நான் யோசிபப்துண்டு இத்தகைய இருதலை கொல்லி நிலையை நான் விரும்பி ஏற்கிறேனோ என்று.
ஜெயலலிதா குறித்தும் எனக்கு சொல்வதற்கு சில நல்ல விஷயங்கள் உண்டு. அவருடைய மரணத்தின் போது என் மனம் அவருக்காக இறங்கியது. இதை நேர்மையாக ஒப்புகொள்ளத்தான் வேண்டும். ஆகவே ஏனிந்த பரிவுணர்ச்சி எனும் ஆராய்ச்சி என்னை ஒப்புகொள்ள செய்த காரணிகளில் ஒன்று. மற்றொன்று நான் என் வீட்டு பெண்களின் பிரதிநிதியாக அவர்களின் பிரியத்தின் துயரத்தின் தூதுவனாக நிகழ்வில் பங்குபெற முடிவெடுத்தேன்.
விவரமறிந்த நாட்களில் இருந்தே நானொரு ரஜினி ரசிகன். ரஜினிக்கு பிடிக்காத ஜெயலலிதா எனக்கும் பள்ளி நாட்களில் பிடிக்காது. அவ்வளவு தான் எனது அரசியல் அறிவு. பத்து பனிரெண்டு வயதிருந்த போது தொலைகாட்சியில் அவர் வீட்டில் இருந்த புடைவைகளையும் காலணிகளையும் திரும்ப திரும்ப போட்டு காண்பித்தது நன்றாக நினைவிருக்கிறது. கொஞ்சம் விவரமறிந்த பின் எனது பிரியத்துற்குரிய தலைவராக ப.சிதம்பரம் இருந்தார். குறிப்பாக தமாகாவை உடைத்துக்கொண்டு காங்கிரஸ் ஜனநயாக பேரவை துவங்கிய காலகட்டங்களிலும் அதற்கு பின்பான மத்திய அரசில் அவர் பங்கு வகித்த காலகட்டங்களிலும் அவருடைய உரைகளை பொதுவாக கவனித்து கேட்பேன். இங்கே பிரசாரம் செய்ய வந்த போது கூட அவர் இன்ன கட்சிக்கு வாக்களியுங்கள் என அவர் கேட்டதில்லை. சரியான வேட்பாளரை தேர்ந்தெடுங்கள் என பேசியதன் கண்ணியம் என்னை ஈர்த்தது. இன்றும் அவர் எனக்கொரு மதிப்புமிக்க தலைவர் தான். ஆனால் ஏனோ அவர் மீதிருந்த நம்பிக்கையெல்லாம் முந்தைய பாராளுமன்ற தேர்தலோடு முடிந்து விட்டது.
ஜெயலலிதா ஒரு தேர்ந்த நிர்வாகியா என்றால், இல்லை என்றே எண்ணுகிறேன். அவர் அமைச்சர்களை அல்ல அதிகாரிகளையே நம்பினார். ஜெயலலிதா அதிகாரிகளின் முதல்வர் என கூறலாம். காவல் துறையும் பிற உயரதிகாரிகளும் மிகுந்த உற்சாகத்தோடு அவராட்சியை எதிர்நோக்கினார்கள். பொதுவாகவே அவருக்கு அறிவாளிகளை தன்னருகே வைத்திருக்க வேண்டும் என விருப்பிருந்திருக்கிறது. திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலின் பேரில் நிதியமைச்சர் எப்படி அவருடைய பட்ஜெட் மீதான விமர்சனங்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து விரிவான பதிலுரைத்தார் என குறிப்பிட்டார். ஆனால் அறிவு செயல்பாட்டின் மீது அவருக்கு பெரும் நம்பிக்கை இருந்ததா என தெரியவில்லை. அரசு நூலகங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டதும், அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் காழ்புகளுக்காக முடக்க முனைந்ததும் அவருடைய ஆட்சியில் தான். அமைச்சர்கள் இலாகாவை பற்றி அறிந்து பரிச்சயம் செய்வதற்கு முன்னரே மாற்றப்பட்டு விடுகின்றனர். பிழை செய்தால் பதவி போய்விடும் எனும் அச்சம் அமைச்சர்களை இயக்கியது என்றே எண்ணுகிறேன். ஆனால் அது ஊழலை குறைத்ததா? இந்த பதவி குறுகிய காலம் தன் நீடிக்கும், ஆகவே இயன்றவரை பயன்படுத்திகொள்ள வேண்டும் எனும் எதிர்மறை நிலையை இது அவர்களை எடுக்க செய்தது என சந்தேகிக்கிறேன்.  தொழில் முனைவோர் பலரும் இச்சிக்கல்களை சந்தித்துள்ளார்கள். ஒரு சிறிய கடைநிலை பதவிக்காக அமைச்ச்சஸ்ருக்கு கப்பம் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்ட வேளாண் துறை அதிகாரி கதையெல்லாம் நினைவுக்கு வருகிறது. லஞ்சம் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு வளர்த்தெடுக்கபட்டது. அரசு பதவிகளுக்கு லஞ்சம் என்பது ஜெயலலிதா கண்டுபிடித்த ஒன்றல்ல. இரு திராவிட கட்சிகளுக்கும், காங்கிரசுக்கும் அதில் பங்குண்டு. முன்பு  பூடகமாக இருந்தவை இங்கு யாவரும் அறிந்த இரகசியமாகி போனது. இவையெல்லாம் ஜெயலலிதா அறிந்து நடந்ததா இல்லையா என தெரியவில்லை. இரண்டில் எதுவாக இருந்தாலும் தேர்ந்த நிர்வாகிக்குரிய முறையல்ல.
ஜெயலலிதா தன்னை பெண் தலைவராக முன்வைத்துகொண்டதில்லை, ஒரு தலைவராகவே முன்வைத்திருக்கிறார். ஆனால் தமிழக பெண்கள் அவரை அப்படித்தான் காண்கிறார்கள், முதலில் அவர் ஒரு பெண், எல்லா வித போராட்டங்களையும் சதிகளையும் சூழ்சிகளையும் மீறி தன்னை நிறுவிக்கொண்ட பெண். ஜெயலலிதாவின் மீது ஒரு மூலையில் அவர்களுக்கு எப்போதும் பரிவுணர்ச்சியும் பெருமிதமும் உண்டு. இதை அவரும் அறிந்திருக்கிறார். அவருடைய நலத்திட்டங்கள் அனைத்துமே பெண்களை மனதில் கொண்டு திட்டமிடப்பட்டவை. தமிழக பெண்களுக்கு அவர் பார்த்து பார்த்து செய்தார் என சொல்வது மிகையாகாது. நாள்தோறும் எளிய கிராமத்து பெண்களை சந்திப்பவன் என்ற வகையில் அவர்களுக்கு அவர் மீதிருக்கும் பிணைப்பை, நம்பிக்கையை, தர்க்கத்தால் வரையறுத்துவிட முடியாது. அந்த பிணைப்பை புரிந்துகொள்ள மட்டுமே முடியும். ஆண்களற்ற ஒரு வெளியில் அவர்கள் உரையாடிக்கொண்டே இருக்கிறார்கள். கணவர்களின் ஆளுமையை சார்ந்தவர்கள் என சொல்லப்படும் கிராமத்து பெண்கள் கூட அவர்களின் விருப்புக்கு மாறாக வாக்களித்து இருக்கிறார்கள். பெண்கள் அவரை விடுதலையின் சின்னமாக, பெண்ணிய தலைவராக, தங்கள் அநீதிகளுக்கு வஞ்சம் தீர்ப்பவராக எல்லாம் கண்டார்களா என சொல்ல தெரியவில்லை. ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். புள்ளிவிபரங்கள் அவருடைய ஆட்சியில் குற்றங்களின் எண்ணிக்கையில் பெரிய மாற்றத்தை காட்டுமா என தெரியவில்லை. ஆனால் மனதளவில் அவர்கள் பாதுகாப்பாக உணர்ந்தார்கள். தொட்டில் குழந்தை முதல் தாலிக்கு தங்கம் வரை பெண்களுக்கான திட்டங்கள் ஏராளமானவை.
என்னால் ஜெயலலிதாவை ஒரு விஷயத்திற்காக மன்னிக்கவே முடியாது எனில், அது டாஸ்மாக்கில் தான். குடி அடிமைகளை அன்றாடம் சந்தித்து வருபவன் எனும் வகையில் அவர் பெண்களுக்கு செய்த அனைத்து திட்டங்களும் பொருளற்று போகும் அளவுக்கு மோசமான செயல் இது. பொருளியல் ரீதியாக அரசு மது விற்பனையை ஏற்று நடத்துவது பற்றி பல்வேறு சாதக கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அது ஒரு அற வீழ்ச்சியே. கடைகளின் எண்ணிக்கையை குறைத்ததும் நேரத்தை சுருக்கியதும் ஒரு நல்ல தொடக்கம். பூரண மதுவிலக்கு கிடக்கட்டும் மது விற்பனையை ஊக்குவிக்காமளாவது இருக்கலாம். குறிப்பாக சசி பெருமாளின் மரணம் என்னை வெகுகாலம் பாதித்த ஓர் விஷயம் (அவரை எவரும் இப்போது நினைவில் கொண்டிருக்கிறார்களா என தெரியவில்லை. அவருடைய பிடிவாதமும் காரணம் என்றாலும்). தர்மபுரி மாணவிகள் கொலைக்கு நேரடியாக ஜெயலலிதா பொறுப்பில்லை எனினும் கண்மூடித்தனமான நம்பிக்கையை மட்டும் நம்பி கட்சியை கட்டி எழுப்பிய கருத்தியலை பொறுப்பிலிருந்து துண்டிக்க இயலாது.
ஜெயலலிதா பலவகையிலும் நிலப்ரபுத்துவ அலல்து மன்னராட்சி கூறுகளை கையாண்டவர். நம்பிக்கையை கோருவதும், அதை சோதிப்பதும் அவரது வழிமுறைகளில் ஒன்று. சொந்த கட்சிகாரர்களை இத்தனை நுட்பமாக உளவறிந்து வைத்திருப்பதும் அந்த கூற்றின் ஒரு பகுதியே. அநேகமாக தமிழக முதல்வர்களில் உளவுத்துறையை அவரளவுக்கு எவரும் பயன்படுத்தியிருபார்களா என தெரியவில்லை. அவருக்கு அபார நினைவாற்றல் இருந்திருக்கிறது. புதியவற்றை கிரகிக்கும் திறனும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருந்திருக்கிறது. தனிப்பட்ட முறையில் அனேக உதவிகளை செய்திருக்கிறார். நலத்திட்ட உதவிகள் பெற்றவர்கள் எவ்வித அரசியல் அழுத்தங்கள் அளிக்காமலே பரிவுடன் அனுகபட்டிருக்கிறார்கள். அப்படி ஆட்சியரான சரவணனை பற்றி நான் வாசித்திருக்கிறேன். அரசனும் ஆண்டவனும் சமமாக கருதப்பட்ட நிலமிது. ஜெயலலிதா தன்னையும் அப்படிதான் பொருத்த முயன்றிருக்கிறார். துஷ்ட நிக்ரகம் சிஷ்ட பரிபாலனம். அழிவையும் ஆதரவையும் முகங்களாக கொண்டவர். மன்னிப்பையும் ஏற்பவர். ஷங்கர்ராமசுப்பிரமணியன் தமிழ் தி இந்துவில் எழுதிய கட்டுரையில் இந்திய பெண் அரசியல் தலைவர்கள் துர்க்கையின் பிம்பத்தை விரும்பியோ வலிந்தோ ஏற்க வேண்டியதை இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். நிகழ்வின் போது பாலா நந்தகுமார் ஜெயலலிதாவை சந்திக்கும் அறையை பற்றிய விவரணையை கூறினார். ஏறத்தாழ கருவறையில் கடவுளை காணும் அதே அனுபவம், அதே குறியீடுகளை ஜெயலலிதாவும் பின்பற்றியிருக்கிறார். ஆண்களுடன் இருந்தாலும் ஆண்கள் நெருங்க முடியாத ஒரு உயரத்தில் நின்றாக வேண்டிய நிர்பந்தம் அவருக்கிருக்கிருந்தது. எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதியால் நேரடியாக பல்வேறு அவமானங்களை அடைந்தவர். நடிகை எனும் பிம்பத்தை உடைத்து அன்னை எனும் பிம்பத்தில் புகுந்து கொள்கிறார். அதுவே அவருக்கு பாதுகாப்பும் கூட.

மணல் கொள்ளையை தடுக்க முனைந்தது, லாட்டரி ஒழிப்பு, வீரப்பனை ஒடுக்கியது (கொன்றிருக்க வேண்டியதில்லை, ஆனால் அவர் ஒன்றும் தமிழர் தலைவரோ தியாகியோ அல்ல), புலிகள் எதிர்ப்பு அதே சமயம் ஈழ ஆதரவு எனும் நிலைப்பாடு, மாநில உரிமைகளுக்கு கடுமையாக குரல் கொடுத்தது, இட ஒதுக்கீடுக்கான சட்ட பாதுகாப்பு, நதிநீர் உரிமைகளில் உறுதியான நிலைப்பாடு, மூவர் தூக்குக்கு எதிரான தீர்மானம் (மொத்தமாக மரண தண்டனைக்கு எதிராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்) அம்மா உணவகம், தொட்டில் குழந்தை, முதல்வர் காப்பீடு திட்டம், சுனாமி சீரமைப்பு, சென்னையை வாகன தொழிபெட்டையாக முனைந்து உருவாக்கியது, தமிழக கோவில்கள் சீரமைப்பு பணி மீதிருந்த சிறப்பு ஆர்வம் போன்றவைகளில் அவருடைய பங்களிப்பு நினைவில் வைத்திருக்கப்படும். ஒட்டு வங்கி குறித்து அஞ்சாமல் சில அதிரடி முடிவுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அரசூழியர்கள் வேளை நிறுத்தம், ஆட்டோ மீட்டர் மற்றும் கட்டண முறைபடுத்துதலுக்கான முயற்சி. எனினும் அவை எவையும் முழுமையான பலனளிக்கவில்லை. ஜெயலலிதாவின் அன்னை பிம்பம் உறுதிபட அவர் உருவாக்கிய முக்கியமான திட்டங்களில் ஒன்று அம்மா உணவகம், அதற்கு முன்னரே கோவில்களில் அன்னதானம் மிக முக்கியமான திட்டம். தமிழகத்தில் இன்று பசியால் வாடி மறுப்பது என்பது இயற்கையானதல்ல. இதுவே ஜெயலலிதாவின் ஆகப்பெரிய சாதனை என எண்ணுகிறேன்.

அதிகாரம் ஒற்றை புள்ளியில் குவிந்திருக்கிறது. விசுவாசம் இருந்தால் போதும் பெயரற்றவர்களும் முகவரியற்றவர்களும் தலைவர்களாக முடியும். தொண்டர்கள் இக்கட்சியின் மீது பினைப்புகொள்ள இது ஒரு முக்கிய காரணம். தங்கள் பணி எங்கோ இருக்கும் தலைவரால் கவனிக்கபடுகிறது எனும் நம்பிக்கை, நாளை நானும் சட்டமன்றத்தில் காலூன்றலாம் எனும் உணர்வு.
ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவும் சரி கருணாநிதியும் சரி ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள், இருவருமே சம அளவில் விமர்சிக்கதக்கவர்கள், சமஅளவில் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்றவர்களும் கூட.

தலைவர்களின் பிம்பங்களை முன்வைத்து இயங்கிய தமிழக அரசியல் ஜெயலலிதாவின் மரணத்தின் மூலம் தமிழகத்தில் முடிவுக்கு வெகு அருகில் வரலாம். தலைவர்களின் பிம்ப அரசியல் கொள்கை சார் அரசியலை காட்டிலும் இழிவானதாக கருதப்படுகிறது. ஆனால் எனக்கு அது ஏற்புடைய கருத்தல்ல. மக்கள் தலைவர்கள் அடையாளங்களை மீறி செல்பவர்கள். அவர்களால் தான் 'இன்க்ளுசிவ்' ஆட்சியை அளிக்க இயலும் என நம்புகிறேன். விவாதத்தின் போது ஒரு நண்பர் என்டிஆர் - சந்திர பாபு நாயுடு விவாகரத்தை முன்வைத்து சொன்ன விஷயம் முக்கியமானதாக பட்டது. சந்திரபாபு நாயுடு முதல்வராகும் போது அவர் மக்கள் செல்வாக்குடையவர் அல்ல. லட்சுமி சிவ பார்வதிக்கு துரோகம் இழைத்தவர் என கருதப்பட்டார். ஆனால் தேர்ந்த முன்னேற்ற மற்றும் வளர்ச்சி பணிகளின் ஊடாக ஒரு தலைவராக உருவாகிறார். எங்களிடம் இப்போது கவர்ச்சிகரமான தலைவர் இல்லை ஆனால் செயல்திறன் மூலம் ஈடு செய்வோம் என்றார். ஒருவேளை அத்தகைய ஒரு அரசியல் இங்கு மலர்ந்தால் மகிழ்ச்சியே. ஒரு புதிய துவக்கமாக அது இருக்கும். 


இந்து ஆங்கில நாளிதழில் ஒரு செய்தி வந்திருந்தது. 96 தேர்தல் தோல்விக்கு பின்னர் பனிரெண்டு வழக்குகள் போடப்பட்டு சிறையில் அடைக்கபட்டிருந்த போது அவர் மனமுடைகிறார். அரசியலை விட்டு வெளியேற முடிவெடுக்கிறார். திருநாவுக்கரசர் மூலம் இவ்விஷயம் கருணாநிதிக்கு கொண்டு செல்லபடுகிறது. வழக்குகள் திரும்பபெற பட்டால் அரசியலை விட்டு வெளியேற தயார் எனும் செய்தி சொல்லப்பட்டது. ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதன் பின் சிறைவாசம் அவரை உறுதியாக்குகிறது. தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்கிறார். ஒட்டுமொத்தமாகவே அவர் விருப்பில்லாமலே யானை சவாரி செய்தவர். அந்த சவாரியையும் யானையும் அவர் ஒவ்வொரு நொடியும் வெறுத்திருப்பார். அந்த தனிமை. அம்புபடுக்கையில் உறங்கும் பீஷ்மனை போல்.
வெண்முரசில் பீமன் சொல்லும் ஒரு வாக்கியம் உண்டு.
காடேகும் செய்தியை குடிகள் கேட்டால் என்ன நினைப்பார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் கொந்தளிப்பார்கள்என்றார் சௌனகர். பீமன் வெடித்து நகைத்து ஆம், கொந்தளிப்பார்கள். கண்ணீர்விடுவார்கள். ஏனென்றால் அவர்களால் கூட்டாக செய்யத்தக்க எளிய செயல் அது மட்டுமே. வாளாவிருக்கவில்லை, உகந்ததை செய்துவிட்டோம் என்று நிறைவுகொண்டு தங்கள் அன்றாடச் சிறுமைகளுக்கு மீளவும் முடியும்என்றான். கும்பலும் கொந்தளிப்பும் தற்காலிகமானது அதற்கப்பால் மக்களும் பழகி விடுவார்கள் என்கிறான் பீமன். மக்களின் இந்த இயல்பை குறித்து நுட்பமான ஒரு பார்வையை அளிக்கிறான். மந்தா, மக்களை வெறுப்பவன் காலப்போக்கில் அவர்களால் வெறுக்கப்படுவான்என்றார் யுதிஷ்டிரர். இல்லை மூத்தவரே, மக்களை புரிந்துகொண்டவன் அவர்களை வெறுப்பான். அவன் மட்டுமே அவர்களை கட்டுப்படுத்தவும் முடியும். கட்டுப்பாடான ஆட்சியை அளிப்பதனால் அவனை அவர்கள் விரும்புவார்கள்என்றான் பீமன்.- வெண்முரசு, சொல்வளர்காடு
ஜெயலலிதாவிற்கு அஞ்சலி..
      
  


Saturday, November 12, 2016

நரோபாவின் கதைகள்

சுனில் கிருஷ்ணனே ஒரு புனை பெயரை போலத்தான் இருக்கிறது, அது என்ன நரோபா? புனை பெயரின் நோக்கம் பெயர் குழப்பம் நீங்குவதற்காக மட்டுமல்ல, ஒரு இணை அடையாளத்தை உருவாக்க. காந்தி, ஜெயமோகன் என சுனில் கிருஷ்ணனின் மீது படியும் நிழல்கள் ஏதுமற்ற மற்றொருவன் நரோபா. நரோபா விஷ்ணுபுரத்தில் வரும் பவுத்த பிரயாணி. நூல்களை மொழிமாற்றம் செய்து கொண்டிருப்பான். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் அதன் வியர்த்தம் அவனை அலைக்கழிக்கும். இப்படித்தான்நானொரு நரோபாவாக ஆனேன். திபத்திய பவுத்தத்தின் முக்கியமானவர் என அறிந்துகொண்டேன். 

முதல் கதை வாசுதேவன் 2013 ஆம் ஆண்டு ஜெயமோகன் தளத்தில் வெளிவந்தது. அதன் பின்னர் இந்த மூன்றாண்டுகளில் மொத்தம் பனிரெண்டு கதைகள் எழுதி இருக்கிறேன். அண்மையில் ஜெயமோகன் தளத்தில் சுட்டியளிக்கபட்ட கதை 'ருசி' 2014 ஆம் ஆண்டு எழுதியது. இவை வெற்றியடைந்த படைப்புகளா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. அதை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன். இக்கதைகளை பலவகையிலும் எழுதி பார்த்திருக்கிறேன். சில கதைகள் மிகுந்த மனநிறைவை அளித்திருக்கின்றன, சில கதைகள் ஆறுதலையும் மீட்சியையும் அளித்திருக்கின்றன, சில கதைகள் கொந்தளிக்க செய்திருக்கின்றன. கதைகள் என்னை எனக்கே அடையாளம் காட்டுகின்றன. இந்த விளையாட்டு அலுப்பு தட்டவில்லை. அலுப்பு தட்டாதவரை  விளையாடுவேன். 

இதுவரை நரோபா எழுதிய  கதைகள்.  
1.திருமிகு பரிசுத்தம் -https://padhaakai.com/2016/07/24/mr_parisuttam/
4.அம்புபடுக்கை - https://padhaakai.com/2015/12/27/bed-of-arrows/
5.இங்கர்சால் - https://padhaakai.com/2014/09/21/ingersoll/
6.நாற்காலி - https://padhaakai.com/2014/07/27/the-chair/
7.குருதி சோறு - 

9. வாசுதேவன் - http://www.jeyamohan.in/38230
10. காலிங்க நர்த்தனம் - http://solvanam.com/?p=37324
11. ஆரோகணம் - http://solvanam.com/?p=33741

Thursday, December 31, 2015

கரையடைந்த களிப்பு

புத்தாண்டிற்கு புத்தாண்டு வந்து பிலாக்கணம் வைக்கக்கூடிய இடமாக இது ஆகிவிட்டது. இருந்தாலும் அப்படி உரிமையோடு எழுதவும் புழங்கவும் ஒரு இடம் வேண்டியதாய் இருக்கிறது. நழுவி சென்ற காலதுண்டை கண் சுருக்கி நோக்குவது ஒரு பயிற்சிக்காக என கொள்ளலாம். கொண்டதும் தவறியதும் எதுவென நோக்கலாம், சுமையழித்தும் புதுசுமை சுமந்தும் முன்நகர வேண்டும். ஒரு மருத்துவனாக இந்தாண்டு ஏற்றதாழ்வற்று சென்றது. சென்னையில் நண்பர்களின் உதவியுடன் வருமாண்டு வடபழனியில் மாதாந்திர ஆலோசனை வழங்கும் திட்டமிருக்கிறது. இவ்வாண்டே துவக்கி இருக்க வேண்டும் மழை கொஞ்சம் சோம்பல் கொஞ்சம் என தயங்கி தள்ளி சென்றது. தனிவாழ்வில் நாங்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நற்செய்தி கிட்டியது எங்கள் இருவருக்கும் மிகப்பெரிய மனநிம்மதி. வருமாண்டு இருவர் மூவராகும் மகிழ்வான ஆண்டாக இருக்கும். 

காந்தி தளத்தில் எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டது. ராஜ்மோகன் காந்தி அருந்ததி ராய்க்கு எழுதிய மறுப்புரையை சர்வோதயா இலக்கிய பண்ணை நூலாக வெளிக்கொணர்ந்தது. அந்த எழுபது பக்க புத்தகத்தை எழுதியதோடு சரி. ஆனால் அதைத்தவிர எழுதிய ஒன்றிரண்டு கட்டுரைகளும் கூட காத்திரமாக கொஞ்சம் முனைந்து எழுதியது என்ற வகையில் திருப்தியே. தமிழ் தி இந்து, காலச்சுவடு, காலம் என இவ்வாண்டு தான் அச்சில் என் கட்டுரைகள் வரத்துவங்கியுள்ளது. தேவதச்சன் கவிதையுலகம் பற்றி எழுதிய கட்டுரை ஜெயமோகன் அவருக்காக தொகுத்த நூலில் இடம்பெற்றுள்ளது.  ஜெயமோகன் புண்ணியத்தில் புனைபெயர் உடைபட்டது. சுப்பிரமணியம் ராமசாமி என்றிருந்தால் புனைபெயர் வேண்டும், உங்கள் பெயரே புனைப்பெயர் மாதிரித்தான் இருக்கிறது என்றார் ஜெயமோகன். ஆம் அது என்னவோ உண்மைதான். புனைபெயரில் எழுத ஒரு காரணமுண்டு. என் மேல் படிந்திருக்கும் பிம்பங்களை கடந்து என் எழுத்து எப்படி வாசிக்கபடுகிறது என்றறிய முயன்றேன். காந்தி தளத்தில் கட்டுரைகள் எழுதுபவன், ஜெயமோகனுக்கு அணுக்கமானவன், ஆயுர்வேத மருத்துவன் போன்ற பிம்பங்களுக்கு அப்பால் என் புனைவெழுத்து எப்படி செல்கிறது என அறிய விழைந்தேன். நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும். சிலருக்கு ஆச்சரியம். பலரும் சீந்தவில்லை. போகட்டும் எல்லாம் நன்மைக்கே. எழுதியது குறைவாகினும் ஓரளவு நிறைவாக இருந்ததாகவே எண்ணுகிறேன். பதாகைக்காக எழுத்தாளர் சு.வேணுகோபால் சிறப்பிதழை தொகுத்தது மிக நல்ல அனுபவம். சிறுகதை பொட்டியை ஒருங்கிணைக்க உதவியதும் கூட செறிவான அனுபவம். சுடச்சுட சக படைப்பாளிகளின் படைப்புகளை வாசித்து அதன் நிறைகுறைகளை அறிந்துகொள்ளுதல் வாசிப்பை நுட்பமாக்கியது. நண்பர் ரா.கிரிதரன் எழுதிகொண்டிருக்கும் நாவலின் (அவர் எழுதிய வரையிலான) பகுதிகளை வாசிக்க நேர்ந்தது மிக நல்ல அனுபவம். வருமாண்டில் மிக முக்கியமான நாவலாக அது இருக்கும். நாள் தவறாமல் வெண்முரசு வாசித்து வருகிறேன். கொஞ்சம் பின் தங்கினாலும் அத்தியாயங்களை சேர்த்து வாசித்து விடுகிறேன். என்ன பிரச்சனை என்றால் நூலாக்கம் பெற்ற பிறகு வெண்முரசு நாவல்களை மீள வாசிக்க இயல்வதில்லை. மீள வாசிக்காமல் நாவலை பற்றி எதுவும் எழுத மனம் ஒப்பவில்லை. மீள வாசித்து அது குறித்து சென்ற ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு வாசித்தது அதிகம். பயணித்தது மிக குறைவு.  பெரும்பாலும் சென்னைக்கு தொலைக்காட்சி நிகழ்சிகளுக்காக சென்றதும், பாண்டிச்சேரிக்கு ஓரிருமுறை சென்றதும், ஒரு சேலம் பயணம், இரு கோவை பயணங்கள். புதிய இடம் என எங்கும் செல்லவில்லை. வரும் வருடம் இது மாற வேண்டும். 
ஆட்டிசத்தை பின்புலமாக கொண்ட ஒரு நாவலை எழுத துவங்கினேன். அதற்கு ‘நீலகண்டம்’ என தலைப்பும் இட்டேன். நூற்றைம்பது பக்கங்கள் எழுதி இருக்கலாம். சில சிக்கல்களால் அதை தொடர முடியாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டியதாகி விட்டது. மேற்கொண்டு எழுத முடியாத அளவிற்கு மனம் சிக்குண்டது, எழுதுவதை நிறுத்தியதும் பெரும் சோர்வை அளித்தது. அந்த நாவலுக்கான காலம் இதுவல்ல என்பதை மட்டும் மனம் உணர்ந்துகொண்டது. எப்போது இந்த நாவலை எழுதும் துணிவு வரவேண்டும் என்றிருக்கிறதோ அப்போது வரட்டும். ஆனால் ஒரு நாவல் எழுதும் மனநிலை என்ன என்பதை அறிந்துகொண்டேன். போதையூட்டும் அனுபவம் இன்னும் இரு நாவல்களுக்கான கரு இருக்கிறது. அதற்கு அதிக ஆய்வுகள் செய்ய வேண்டியது இருக்கிறது. பார்ப்போம். வருமாண்டு அந்த கனவை நோக்கி பயணிக்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள ஆயுர்வேத நூலை முடித்தே ஆக வேண்டும். அதற்கும் அதிகம் படிக்க வேண்டியது இருக்கிறது. கண்ணில் ஒரு சிறிய பிரச்சனை ஆகவே கணினியில் அதிக நேரம் படிக்க முடிவதில்லை. எழுத மட்டுமே கணினியை பயன்படுத்துகிறேன். மேலும் நேர்த்தியுடன் உழைக்க வேண்டும். திட்டமிட வேண்டும். சென்ற ஆண்டு உடலை பேண வேண்டும் என முடிவெடுத்து ஷட்டில் விளையாட துவங்கினேன். ஒரு நல்ல பழக்கமாக அது என்னுடன் தொற்றிக்கொண்டு விட்டது. கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் உருப்படியாக விளையாடியது இல்லை நான். வியர்க்க வியர்க்க விளையாடுவது சவாலாக இருக்கிறது. பிடித்தும் இருக்கிறது. இது தொடர வேண்டும். இந்த ஆண்டும் தொடர்ந்து டைரி எழுதியிருக்கிறேன். பெரும் அதிசயம் தான். 

வருட இறுதியில் எனது சகோதரனுக்கு இணையாக கருதும் கல்லூரி ஜூனியர் ஆகாஷின் மரணம் நிலைகுலைய செய்தது. மீண்டுவரவே எனக்கு மூன்று நாட்கள் ஆயின. 
வருத்தங்களுக்கும் துக்கங்களுக்கும் அப்பால் நம்பிக்கையுடன் நடக்க இன்னும் எத்தனையோ இருக்கிறது. 

நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்