Friday, November 30, 2018

அரிப்பு - டான் டெலிலோ


நன்றி - கல்குதிரை கார்கால இதழ் 30 
மொழியாக்கம்- நரோபா
மொழியாக்க மேம்படுத்துனர்- நட்பாஸ் 

ஆனால் எவருமே வந்திருக்கவில்லை, ஆகவே சற்றுநேரம் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தான். ஞாயிற்றுக்கிழமை போல் உணரச் செய்யும் சனிக்கிழமைகளில் ஒன்று அன்றைய நாள். இதை எப்படி விளக்குவது என்று அவனுக்கு தெரியவில்லை. அவ்வப்போது இப்படி நிகழ்வதுண்டு, குறிப்பாக வெப்பம் கூடுதலான மாதங்களில், ஒருவேளை அது இயல்பானதாகக் கூட இருக்கலாம், எனினும் அது குறித்து எவரிடமும் அவன் விவாதித்ததில்லை.  

விவாக ரத்திற்கு பிறகு மனத்திலும் உடலிலும் அவன் ஒரு வினோதமான உணர்வின்மையை உணர்ந்தான். அவன் கண்ணாடியை நோக்கினான்,  தன்னை திரும்ப நோக்கிய முகத்தை கூர்ந்து கவனித்தான். இரவில் படுக்கையில் தன்னுடைய பாதியிலேயே தொடர்ந்தான், மற்றொரு பாதிக்கு தன் முதுகை காட்டினான். காலப்போக்கில் ஒரு வாழ்க்கை ஊர்ந்து வெளிவந்தது. மனிதர்களிடம் பேசினான், நெடிய நடை சென்றான். ஜோடி சப்பாத்துக்களை வாங்கினான் அதுவும் ஒன்றல்ல, இரு சப்பாத்துக்களையும் தீவிரமாக சோதித்த பிறகு வாங்கினான். காலணி கடையின் ஒருமுனையிலிருந்து மறுமுனை வரை வெவ்வேறு வேகங்களில் நான்கு முறை நடந்தான், பின்னர் அமர்ந்து சப்பாத்துக்களை குனிந்து நோக்கினான். ஒரு சப்பாத்தை கழட்டி கையில் எடுத்தான், முன்வளைவை அழுத்தியபடி, சப்பாத்திற்குள் கையை வைத்துப் பார்த்தான், அதை நோக்கி தலையசைத்து ஆமோதித்தான், உறுதியான அதன் குதியையும் பாதத்தையும் சும்மா இருக்கும் கைவிரல்கள் கொண்டு தட்டினான். 
விற்பனையாளன் சற்று தொலைவில் நின்றான், கவனித்தபடி காத்திருந்தான், அவன் யாரோ, அவன் அங்கு இல்லாதபோது என்ன சொன்னாலும் செய்தாலும் சரி.
அலுவலகத்தில் அவனுடைய மேசை சன்னலையொட்டி அமைக்கப்பட்டிருந்தது, வீதியின் எதிர்சாரியில் உள்ள கட்டிடத்தை வெறித்தபடி காலம் கழித்தான், சாளர வரிசைகளின் உள்ளே அங்கு எதுவுமே புலப்படவில்லை. அவனால் வெறிப்பதை நிறுத்த முடியாத காலங்களும் உண்டு. 
அவன் பார்க்கிறான், சிறிது கள்ளத்தனமாய் சொறிந்து கொள்கிறான். . சிலநாட்கள் இடது மணிக்கட்டில். மாலை பொழுதுகளில் வீட்டிலிருக்கும்போது புஜங்களில். இரவில் பெரும்பாலும் தொடைகளிலும் கெண்டைக்கால்களிலும். அவன் வெளியே நடந்து செல்கையில், பெரும்பாலும் கரங்களில் அவ்வப்போது அரிக்கிறது. 
அவன் நாற்பத்து நான்கு வயதானவன். தன் உடலில் சிக்குண்டவன். கரங்கள், கால்கள், நெஞ்சும் வயிறும். முகம் அரிப்பதில்லை. தலையில் உருவான ஏதோ ஒன்றுக்கு மருத்துவர் ஒரு பெயரளித்தார். ஆனால் அது எப்போதாவதுதான் அரித்தது. பிறகு அரிக்கவே இல்லை. ஆகவே அந்தப்பெயர் ஒரு பொருட்டில்லை. 
அவனுடைய கண்கள் தெருவுக்கு எதிர்சாரியில் உள்ள சாளரங்களை கிடைமட்டமாக மேய்ந்தது, ஒருபோதும் செங்குத்தாக இல்லை. உள்ளுக்குள் உள்ள வாழ்க்கைகளை கற்பனை செய்ய அவன் முயன்றதில்லை. 

அவன் அரிப்பை புறத்திலிருந்து வரும் புலனறிவு என்று எண்ணத் துவங்கினான், வெளியே இருக்கக் கூடிய, ஆய்வு செய்யவியலாத ஏதோ ஒரு பொருளின் விளைவு, அறையுள் உள்ள காற்று, அல்லது தெருவில் உள்ளது அல்லது வளிமண்டலத்திலேயே, பூகோளச் சூழலில் ஏற்பட்ட சீர்கேடு. 
அவன்  இதை நினைத்தான்,  ஆனால் நம்பவில்லை. அது ஓரளவு அறிவியல் புனைவு. நீட்டி, சுருண்டு, படுக்கையில் குப்புறப் படுத்து, பருத்தி பைஜாமா அணிந்த வெற்றுடலுடன், கிரீம்களிலும் லோஷன்களிலும் மிதந்து கொண்டு, நெடுநேரம் அமைதியற்று இருக்கும் காலங்களில் சொறியாமலோ தேய்க்காமலோ இருக்கமுனையும் போது அந்த எண்ணம் ஒரு வகையான ஆறுதலாகவும் இருந்தது. 
அவன் அவனுடைய நண்பன் ஜோயலிடம் சில நேரங்களில் சனிக்கிழமை ஞாயிற்றுகிழமையை போல் தோன்றுவதாக சொல்லிவிட்டு அவனுடைய மறுமொழிக்காக காத்திருந்தான். ஜோயலுக்கு இரு குழந்தைகளும் சாண்ட்ரா என்ற பெயருடைய ஒரு மனைவியும் உண்டு. அவர்கள் எப்போதுமே சாண்ட்ராவும் ஜோயலும் தான், இது தலைகீழானதே இல்லை. 

 “சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை, அதனால் என்ன. செவ்வாய்க்கிழமை புதன்கிழமையைப் போல் இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்காதா என்ன? அதைவிடவும் மேல், இந்த வாரத்தின் செவ்வாய்கிழமை அடுத்த வாரத்தின் புதன்கிழமையாக தோன்றுவது.” 

ஜோயல் அலுவலக சகா. நேரம் கிடைக்கும்போது கவிதைகள் எழுதினான். அண்மையில் படைப்புக்களை பிரசுரிக்கும் முயற்சிகளை நிறுத்திக்கொண்டான். அவன் சொன்னான் “அரிப்பு எப்படி இருக்கிறது? உலக வரலாற்றில் அரிப்பைப் பற்றி யோசித்து பார்க்கிறேன் என் மனதில் எதுவும் தோன்றுவதில்லை.”

நண்பன்,  முன்னாள் மனைவி, மருத்துவர்கள், துடைத்து சீராடைகளும் அவற்றுக்கேற்ற காலணிகளும் அணிந்த செவிலியர்கள். இவர்கள் அறிவார்கள். வேறு எவருக்கும் தெரியாது. 

 “ஓர் பேரரசர், அரச குடும்பத்தின் உறுப்பினர். நீ பணியாற்ற ஒரு பின்புலம் தேவை. ஒரு புகழ்பெற்ற அரசியல்வாதி ரகசியமாக சொறிந்துகொள்பவன். இப்படி ஆய்வு செய்து திருப்தி அடையத்தக்க ஏதோ ஒன்று.”

“அப்படியா நினைக்கிறாய்”

“அல்லது விவிலியத்தில்.  நிச்சயமாக. ஒரு பெரும் கதையாடலின் பகுதியாக உன்னை உணர்வாய், ஆயிரக்கணக்கான வருடங்கள். புனித தலம். அரிப்பு.”

“ஒரு வார்த்தை. ஒரு அசை.”

“நான்கு எழுத்துகள். எப்போதாவது விவிலியத்தை வாசிக்கிறாயா? விவிலிய காலத்தில் ஒரு ப்ளேக் உண்டு. நிஜமாகத்தான் கேட்கிறேன்.”

“நானும் அப்படியேதான்”

“ஆய்வு செய். நானாக இருந்தால் செய்வேன். எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை கற்பனை செய்ய முடிகிறது. நடு ராத்திரியில்”
“பட்டப்பகலில்”

“இன்னும் மோசம்” என்றான் அவன் நண்பன்.  
அவன் ஒரு பெண்ணை பார்த்துக் கொண்டிருந்தான், மேம்போக்காக நோக்கிக் கொண்டிருந்தான். அவர்கள் தயங்கும் இரு தனியர்கள். அரிப்பைப் பற்றி அவன் ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை. ஒருவேளை நெருக்கம் ஏற்பட்டால், அப்படி நிகழ்வது எதிர்பாராததாக இருக்கக்கூடாது என விரும்பினான். அவன் உடலை அவளுக்கு அளிக்கையில், கரங்கள், கால்கள், பிற இடங்களில், களிம்புகள் மற்றும் ஒவ்வாமை குறைக்கும் பூச்சுகள், அதி பயங்கர வீரியம் கொண்ட கார்டிகோ ஸ்டீராய்டுகள் மற்றும் லோஷன்களின் மிச்சில்களை அவள் உணரக்கூடும்.   
.
அவர்கள் அவ்வப்போது சேர்ந்து இரவுணவு உண்டார்கள், திரைப்படம் சென்றார்கள், பரஸ்பரம் முழு பெயரிலிகளாய் புதையுண்டு போகக் கூடாதென்பதை மனதில் கொண்டு அன்றாட நடைமுறையொன்றை உருவாக்கிக் கொண்டார்கள்.

அவள் பெயர் அனா (ana). ஒரேயொரு n தான். இந்த தகவல் துணுக்கு அவனுக்கு ஆர்வமூட்டும் ஒன்று. காணாமல் போன ஒரு n எனும் உண்மை. நோட்டுப் புத்தகத்தில் பென்சிலில் அந்தப் பெயரை  கிறுக்குவதை விரும்பினான். பெரிய “A”  சிறிய “n”, சிறிய “a”. அலுவலகத்தில் அவனுடைய கணினியில் வெவ்வேறு எழுத்துருக்களில், முழுவதும் பெரிய எழுத்துக்களில், அல்லது தலை கீழாக அல்லது சாய்வு எழுத்தாக அல்லது அழுத்தமாக அல்லது ரோமானிய எழுத்துருக்கள் அல்லாத தூரதேசத்து எழுத்துருக்களில் தட்டச்சு செய்து பார்த்தான். 

இரவுணவின்போது அவர்கள் அப்போது பார்த்து முடித்த திரைப்படத்தை பற்றி பேசினாள். அவன் கிட்டத்தட்ட மறந்திருந்தான். காட்சிக்கு காட்சி அச்சுறுத்தல் அதிகரித்து கொண்டே இருந்தது.  படத்தைக் காட்டிலும் ஏறத்தாழ காலியாகிக் கிடந்த திரையரங்கம் ஆர்வமூட்டுவதாக இருந்தது. உணவு மேஜையின் குறுக்கே சாய்ந்தபடி, கொஞ்சம் கோமாளித்தனமாக, அவளுடைய பெயரைப் பற்றி கேட்டான். குடும்ப பாரம்பரியத்தை ஒட்டியதா? ஐரோப்பிய நாவலில் உள்ள பெயரா?

அப்படி எந்த பாரம்பரியமும் இல்லை என்றாள். வெளிநாட்டு தாக்கமும் இல்லை. குறிப்பிட்ட ஒரு வகையில் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் அவ்வளவே.  

மெதுவாக தலையசைத்தான், உடலின் சாய்வு நிலையில் கைவிடப்பட்டவனாக, தான் உணர்ந்த ஏமாற்றத்தை எண்ணி வியந்தான். ஒருவழியாக மீண்டும் அமர்ந்தான், அப்போதும் தலையாட்டிக் கொண்டிருந்தான், அவளுடைய உடலை அவன் கற்பனையில் செய்வதை உணர்ந்துகொண்டான், எப்போதுமே உடலைத்தான். இது ஒன்றும் காமம் தூண்டும் வளைவுகள் கொண்ட உடலல்ல ஆனால் அதைவிடவும் அற்புதமானது, வெறும் உடல், ஆதி பௌதிக அமைப்பு. 

அவளுடைய அன்னையின் பெயர் ஃபிளாரன்ஸ் என்றாள். 
ஆனால் மேஜையின் எதிர்ப்புற நாற்காலியில் உள்ள அவளுடைய உடல், அந்த மானுடம், அந்த ஆளுமை, பல நூறாயிரம் வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக, பல மில்லியன் ஆண்டுகளாக பரிணமித்த ரத்தமும் சதையுமான திரள். அதன் உடல்தன்மையைப் பொறுத்தவரை கூனி, பாதி தவழும் அதன் முந்தைய வடிவங்களில் இருந்து, எந்த வகையிலும் பிரித்தறியமுடியாத உடல். 

நிறுத்து, என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.  அவர்கள் உணவைப் பற்றியும் உணவகத்தைப் பற்றியும் பேசினார்கள். அவன் அவளிடம் அவள் தந்தையின் பெயரென்ன எனக் கேட்டான். 
காலையில் அவன் பணியாற்றிய கட்டிடத்தின் நடைகூடத்தில் நடந்தான். அவரவர் அலுவலகங்களுக்கு செல்லும் பிறரை நேருக்கு நேர் பார்ப்பதை கவனமாக தவிர்த்தான், நான்கைந்து சூட்டுகள், டைகள், மேற்சட்டைகள் மற்றும் பாவாடைகள். அவர்கள் எங்குமே செல்லாமல், ஒரே இடத்தில் கால்களை மேலும் கீழுமாக அசைத்து கைகளை லேசாக வீசுவதாக கற்பனை செய்து பார்க்க விரும்பினான். 
அவனுடைய முன்னாள் மனைவியிடமிருந்த ஒருவிதமான புன்னகையை திரும்ப திரும்ப நினைவுகூர்ந்தான். அவள் அவனை நோக்கவில்லை, அவள் வெற்றிடத்தில் புன்னகைத்து கொண்டிருந்தாள். சண்டைகளால் கொதித்த வாரங்களுக்கு முன் சேர்ந்திருந்த அந்த நான்கு ஆண்டுகளில் இரவுணவு மேசையின் எதிர்ப்புறத்திலிருந்து அவள் எப்படி முத்தங்களை பறக்கவிட்டு அரிப்பை விரட்ட வேண்டினாள், நதியை ஒட்டி கோடைக்கால மாலைகளில் சென்ற அந்த மென் ஓட்டங்கள். 

அரிப்பின் சீர்மை, இரண்டு தொடைகளிலும், முழங்கை வளைவுகளிலும், இடது முன்னங்கால், பின்னர் வலது. கவட்டை அரிப்பதில்லை. புட்டத்தில், ஆம், படுக்கைக்கு செல்லும் முன் தனது கால் சராய்களை அவிழ்க்கும் போது, பிறகு நின்றுவிடும்.  

அவனால் அந்த புன்னகையை மறக்க முடியவில்லை. அது ஒரு அழகிய கணம், நினைவால் ஏந்தப்பட்டது, உருவம் மாறிக் கொண்டிருக்கும் கடந்த காலத்தை நோக்கி திரும்பியிருந்த அவள் தலை, கதைசொல்லும் வரம் பெற்ற பாட்டி, அப்போது எப்போதோ இருந்த ஏதோவொன்று, அந்தப் புன்னகையைத் தொடர்ந்து சென்று அவள் வாழ்வினுள் புக, ஒரு நிமிடமோ அல்லது ஒரு மணி நேரமோ, குற்றமற்ற காலத்தில் அவளது நினைவுகூர்தலின் வசியத்தில் சேர்ந்திருக்க, விரும்பினான்.
அவர்கள் ஞாயிறு ப்ரஞ்சுக்காக சந்தித்தார்கள், இரு தம்பதிகள், அறையின் மறுமுனையில் உள்ள கட்டையின் மீதிருந்த தொலைகாட்சியில் கால்பந்து விளையாட்டு ஓடிக்கொண்டிருந்தது, ஓசை அணைக்கப்பட்டிருந்தது. திரையை காண்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை. குறுகியகால பரபரப்பு, மந்தகதி ரீப்ளேக்கள், சாதாரணமான ஓட்டத்திற்கோ, பந்து கடத்துவதற்கோ, துரத்தலுக்கோ மூன்று நான்கு ரீப்ளேக்கள், வெவ்வேறு காமிரா கோணங்கள், மேஜையில் நிகழ்ந்த உரையாடலில் கலந்து கொண்டான், தனது பான் கேக்குகளை உண்டபடி தொடர்ந்து பார்த்தான். விளம்பரங்களையும் கூட பார்த்தான்.     

 “ஞாயிறு ப்ரஞ்ச்” எனும் வார்த்தை நலமாக இருக்கும் உலகை சுட்டுவது
ஆனால் ஜோயல் முழங்கையை மேஜையின் மீது ஆணியடித்தாற்போல் ஊன்றி,  கையை உயர்த்திச் சுழற்றிக் காட்டுவதற்காக முள்கரண்டியை கீழே வைத்துவிட்டு தற்போதைய சூழலைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான், ஓயாத உலகளாவிய கொந்தளிப்பு, தேசங்களையும் சூழல்களையும் பெயர் சொல்லி குறிப்பிட்டான், .  அதன் பின் அவன் பேசுவதை நிறுத்தி யோசிக்க இடைவெளி விட்டான், அடுத்து என்ன சொல்ல நினைத்தான் என்பது அவனுக்கு இறுதியில் நினைவுக்கு வந்து விட்டது போலிருந்தது, கை இன்னும் உயர்ந்திருந்தது ஆனால் பிறர் அமைதியாய் இருக்க வேண்டுமென்ற கோரிக்கையில் இப்போது அசைவற்றிருந்தது, காலம் மற்றும் வெளியை நோக்கி வெறித்திருந்தான், பின் கடைசியில் அனா என்ற பெயரில் உள்ள எழுத்துகள் அனைத்தும் சாண்ட்ரா என்ற பெயரிலும் இருக்கிறது என்றான்.

சாண்ட்ரா சொன்னாள், “இந்த தகவலை வைத்துக்கொண்டு என்ன செய்வது?”

ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்கும் மூன்று அல்லது நான்கு விளம்பரங்கள். கொத்துகொத்தாக விளம்பரங்கள். எங்கும், எல்லா இடத்திலும் இருப்பவர்களில் தான் மட்டுமே விளம்பரங்களை பார்ப்பவன் என்று எண்ணுவதற்கு தலைப்பட்டான். அந்த தொலைவில் திரையில் தெரியும் பிம்பங்களோடு இணைந்த வார்த்தைகளை வாசிக்கவே முடியவில்லை.  

அனா சொன்னாள், “நான் என் தட்டிலுள்ள உணவை பார்த்துக்கொண்டிருக்கிறேன்”

பிறர் காத்திருந்தார்கள், ஆனால் அவள் சொல்வதற்கு இது மட்டும்தான் இருந்தது.

அவன் தன் முள்கரண்டியை நேராய் உயர்த்திப் பற்றியிருந்தான். முதல் பாதி முடிந்திருந்தது, சற்றே நீண்ட இடைவெளிக்கு பின் அவனால் பார்ப்பதை நிறுத்த முடிந்தது. 
“என் சட்டையை கழட்டினால் அரிக்கத் துவங்குகிறது”

அரைக்கால் சட்டைக்கு மேல், முட்டிவரை நீளும், முன்பக்கம் திறந்த அங்கியை அணிந்து மல்லாந்து  பரிசோதனை அறையில் படுத்திருந்தபோது தன் நிலையை தோல் மருத்துவரிடம் விளக்கிக் கொண்டிருந்தான். அவள் அவனுடைய கணுக்கால், கெண்டைக்கால் மற்றும் தொடைகளை சோதித்துக் கொண்டிருந்தாள். தோல் நோய் உருவாவதைப் பற்றி கவனமின்றி பேசினாள். அவனுக்கு இந்த சொல் பிடித்திருந்தது. மேலிருந்து கீழே உருட்டிவிட்டது போல் ஒரு மனிதனின் மீது குற்றம் புரியும் நோக்கம் அல்லது தீமை கவிவது என்பதாக இருந்தது, அரிப்பின் சபிக்கத்தக்க இயல்பைப் பற்றி ஜோயலின் விவிலிய சார்பான கூற்று நினைவுக்கு வந்தது. 

இந்த மருத்துவருடனான மூன்றாம் சந்திப்பு முடியவிருந்தபோது அவனை அடுத்த வாரமோ அல்லது ஆறு மாதத்திலோ அல்லது வரவே வேண்டாம் என்றோ சொல்வாரா என யோசித்து கொண்டிருந்தான். சோப்புகள் மற்றும் ஷாம்பூக்களின் பெயர்களை பட்டியலிட்டாள், அவனுடைய நோய்க்குறிகளை ஒட்டி வரக்கூடிய பிரச்சனைகளை விளக்கினாள், அவன் இவை எல்லாவற்றையும் மனனம் செய்ய முயன்றான். ஆனால் அரைகுறை ஆடையணிந்த சூழலில் அது கடினமாக இருந்தது.  

குறிப்பிட்ட வலிநீக்கி வெளிபூச்சு மருந்தின் உட்பொருள்களின் பயன்பாட்டினால் வரும் வெளித்தெரியாத ஆபத்தான விளைவுகளை பட்டியலிட்டாள். 

நம் நினைவாற்றல் சரியாக இயங்குவதற்கு நாம் முழுவதுமாக ஆடை அணிந்திருக்க வேண்டுமா என்று யோசித்தான். 

“சில நோயாளிகளுக்கு மாத்திரை, பிளாஸ்திரி, அல்லது ஊசி கொடுக்கிறேன். ஆனால் உங்களைப் பொறுத்தவரை நீங்கள் உங்கள் அரிப்பை நீண்டகால பொறுப்பாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் பார்க்கிறேன்.”  

மருத்துவர் கையுறை அணிந்த விரல்களை அவனது கன்ன எலும்புகளின் மீது, நெற்றியின் மீது, கிருதாவின் மீது வைத்து முகத்தை சோதித்தார். அவளுடைய உதவியாளர் ஹன்னா அறையின் மூலையில் சட்டென தோன்றினாள், ஹன்னாவும் அவனும் ஒருவரையொருவர் வெறுமே வெறித்துகொண்டார்கள், அவனும் ஹன்னாவும், பின் அவள் வெளியேறினாள். 
தனிப்பட்டமுறையில் ஏதாவது சொல்லவேண்டும் என்றால் ஜோயல் வேக வேகமாக கண் சிமிட்ட தொடங்குவான். 

இதுதான் அவன் சொன்னது.

சில நேரங்களில், வீட்டிலுள்ள கழிவுச் சட்டி அருகே நின்றிருக்கும்போது, சட்டியில் உள்ள நீருடன் மூத்திரம் மோதும்போது சொற்களை போல் ஏதோ ஒலிப்பதை அவன் கேட்டிருக்கிறான். 

“இது எத்தனை கால இடைவேளையில் நிகழும்?”

சராசரியாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இது நிகழ்கிறது என்றான். சொற்கள். சிறிய குரல் உதிர்க்கும் சொல்லை ஒத்த ஒன்றை அவன் கேட்டான், பிறகு சில சமயங்களில் மற்றொரு சொல், அவன் அந்த ஒலியை விளக்க முற்பட்டான், காலை பரப்பி, அவன் கரங்களைக் குவித்து கவட்டைக்கு அருகில் வைத்து நிகழ்த்திக் காட்ட முனைந்தான்.  

 “சிறு சொற்கள்”

“நான் இதை கற்பனை செய்துகொள்ளவில்லை”

“அல்லது ஏதோ ஒரு ஓசை ஏதோ ஒன்றை சொல்கிறது”

“மூத்திர ஓட்டம் இலகுவாக இருக்கும்போது மட்டும்”

“ஏதோ ஒன்று சொல்லப்பட்டதைப் போல். ஒரு உச்சாடனம்”

“ஒற்றை அசை”

உள்ளூர் உடற்பயிற்சி நிலையத்தின் உடுப்பு மாற்று அறையில் உடற்பயிற்சிக்குரிய ஆடையணிந்து, பஸ்கி, குதித்தல் மற்றும் ட்ரெட்மில்லுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

“நீ ஒரு கவிஞன். எங்கெங்கும் சொற்கள்”

“சௌம் (zaum). பகுத்தறிவுக்கு அப்பாலான கவிதை. நூறு வருடங்களுக்கு முன். வடிவமும் ஒலியும் கொண்ட சொற்கள்.”

“சட்டியிலுள்ள நீரில் ஏற்படும் சிறு துடிப்புகள்”

“சௌம்”

“பகுத்தறிவுக்கு அப்பால்”  

 “பகுத்தறிவுக்கும் மரபுக்கும் வெளியே, சொற்களும் எழுத்துக்களும் சுதந்திரமானவை. ஆனால் அது எப்போதும் அப்படித்தானே, மொழியால் எப்போது உண்மையாக நிதர்சனத்தை விளக்க முடிந்திருக்கிறது என்பதுதானே கேள்வி?.” ஜோயல் கூறினான். 

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவ்வப்போது அது நிகழ்வதுதான். அவள்தான் பார்ப்பதை தொடங்குவாள், அவள் முகத்தில் உணர்ச்சி இருக்காது, அவன் பேசுவதை அல்லது சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இப்போது பார்வை பரிமாறிக்கொள்ள வேண்டிய நேரம் என தனக்குத் தானே சொல்லிக் கொள்வான். 

கண்களை சற்று நேரம் மூச்சு விடாமல் இருப்பதோடு துவங்குகிறான். அவர்கள் என்ன செய்தாலும் அதில் அவளுக்கு உதவியாளனாக தன்னை இருத்திக் கொள்வான். பார்த்துக்கொள்வதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் பேசிக்கொள்வதில்லை. அதுவே நிகழும் பிறகு நின்றுவிடும். 

கண் திறந்து மீண்டும் மூச்சு விடத் துவங்கும்போது, அதோ இருக்கிறாள், அனா, அவன் முகத்தில் அவள் கண்கள் ஆழ்ந்து இருக்கின்றன.  அவனுள்ளே அல்லது அவனைத் துளைத்துப் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். மனிதனை அவனது தனித்தன்மைகள் அனைத்திலும் கரைத்து வேறொன்றைக் கண்டெடுக்க வேண்டி. எதுவானாலும் சரி.. 

அவள் முகம் சலனமற்றும் தீவிரமாகவும் இருந்தது. இது பரஸ்பர சுயபரிசோதனையா? முடிவற்ற மானுட பரிமாற்றம் எனும் தொடர்பு வலையிலிருந்து எளிய ஓய்வா? இந்த விஷயத்தை ஆய்வதை தவிர்க்க முயல்கிறான். அவளது பால்யகாலத்துக்குரிய வேடிக்கையான ஒரு துண்டம், கசப்பும் இனிமையும் கலந்த ஏக்கத்தின் நினைவு. 

முகம் மற்றும் கண்களின் உறைந்த சட்டகத்தில் இருப்பவர் எவர் என ஒவ்வொருவரும் கற்பனை செய்து காண முயல்கிறார்களா? அவரவர் அடையாளத்தின் சொல்லற்ற கண்ணுறுதலா அல்லது வெற்றுப் பார்வையா?
எண்ணங்களின்றி இருக்க முயன்றான். கண்களில் இருந்தும் மனதில் இருந்தும் சூழல் சார்ந்த புலன் அனுபவங்களை நீக்க முயன்றான், மனக் குப்பைகள். 
ஒருகால் அவள் வெறுமே பார்க்கவும் பார்க்கப்படவும் விழையலாம். 
பின், நோக்கமாய்க் கொள்ளாத விழைவைத் திருப்தி செய்வதற்கான ஒரு பண்படாத உணர்வு இருக்கிறது, ஒரு ஜீவத்துவ தேவை. இடது முன்கையில் வலது கையை வைத்து விரல் நுனிகளால் அரிப்பை தணிக்க முயல்கின்றன, ஆனால் சற்று நேரத்தில் கரம் அசைய துவங்கி விரல் நகங்கள் மண்ணை கிளரும் இயந்திரங்களாக தோண்டுகின்றன. பின்னால் சாய்ந்து, கண்களை மூடி, பழியுணர்வு ஓர் படலமாய் மிதப்பதை உணர்கிறான். இது முட்டாள்தனமானது என்பது அவனுக்கொரு பொருட்டல்ல. 

“உன் உடலைப் பழி தீர்க்கிறாய்?” என்றான் ஜோயல்.

“இருக்கலாம். எனக்கு தெரியவில்லை.”

“இந்த அரிப்பை ஒரு குறியீடாக எண்ணுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. தனிப்பட்டமுறையில், உன்னைப் பற்றி என்ன சொல்ல முடிகிறது என்று பார்க்கலாம்.”

“கவிதை எழுதுவதோடு நிறுத்திக் கொள்”

“இப்போது எழுதி முடித்த ஒன்றுக்கு தலைப்பை முடிவு செய்ய முயன்று கொண்டிருக்கிறேன்”

“நீ சாண்ட்ராவுடன் பேசுவதுண்டா?”

 “சில நேரங்களில், ஆம். நான் எழுதுபவை பற்றி அவளுக்கு கருத்துக்கள் உண்டு.”

“அரிப்பைப் பற்றி சாண்ட்ராவிடம் பேசியதுண்டா?”

“அது எப்படி முடியும். இல்லை”

“அது எப்படி முடியும். எனக்கு அது தெரியும். நன்றி” என்றான்.
விளக்கொளி மாறுவதற்காக மூலையில் காத்திருந்தான். வாரில் கட்டப்பட்ட நாய்கள் ஒன்றின் மீது ஒன்று பாய்ந்து கொண்டிருந்தன. இடது கை வலது மணிக்கட்டை தேய்க்கிறது, பின்னர் வலக்கை இடது மணிக்கட்டை தேய்க்கிறது. போக்குவரத்து இடை நின்றதும் இருவர் தெருவை கடந்தார்கள், ஆனால் விளக்கு மூன்று, இரண்டு, ஒரு வினாடியில் மாறிவிடும் என்பதை அறிந்தவனாக, அவன் எங்கிருக்கிறானோ அங்கேயே தொடர்வதாக முடிவு செய்துகொண்டான். எண்கள் இறங்குவதை காண அவனுக்கு பிடிக்கும். 

இரு சதவிகித ஓட்ஸ் கூழ்மம் கலந்த சிரங்கு களிம்பு. 

மூன்று சதவிகித சாலிசிலிக் அமிலம் கலந்த சொரியாசிஸ்சின் பல அறிகுறிகளை தணிக்கும் களிம்பு. 

இருபத்தி நான்கு மணிநேரம் ஈரப்பதம் தக்க வைத்து மிருதுவாக்கும் தன்மை (emollient) நிறைந்த மருந்து கூட்டு. 
உயர்ந்த, மெலிந்த உடல் தோற்றமும் பெரிய முன் பற்களும் அவனை நட்புக்குரியவனாக காட்டின. அலுவலகத்தில் உள்ளவர்கள் சில சமயங்களில் தங்களின் அழுக்கு ரகசியங்களை அவனை நம்பி பகிர்ந்து கொண்டார்கள். அவனுடைய சுவாரசியமற்றது போல் தோன்றும் சுபாவத்தின் மீதான நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவன் எதுவும் செய்ய மாட்டான், அல்லது எதுவும் சொல்ல மாட்டான்,  

அவனும் ஜோயலும் அணுக்க வல்லுனர்கள்(access specialist), சட்ட விரோத மருந்துகளை உட்கொள்ளும் உடல் ஊனமற்ற வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடி மருந்து பெறுவதைச் சாத்தியமாக்குபவர்கள்.

அரிதாகவே அவர்கள் செய்யும் பணியைப் பற்றி பேசிக் கொண்டார்கள். உள்ளூர் செய்திகள், பருவநிலை, தேசமெங்கும் மனிதர்கள் நிகழ்த்தும் துப்பாக்கிசூடு என அவர்கள் தோன்றி மறையும் விஷயங்களைப் பற்றி பேசினார்கள். 

அவ்வப்போது ஜோயல் அறையிலிருக்கும் பிறருக்கு அஞ்சலி செய்தியை வாசித்து காட்டுவான். ஆண்களும் பெண்களுமாய் திரையை எதிர்கொண்டிருக்கும் ஆறு பேர். சில அஞ்சலிகளை அவனே இட்டு கட்டினான், முழு புனைவு, அதற்கு சில சிரிப்புகளைப் பெற்றான், சில சமயங்களில் கைத்தட்டல்கள் வெடித்தன. 
“நான் உன்னிடம் பொய்யுரைக்க விரும்பவில்லை. சொபினின் இறுதி ஊர்வலம் ஒரு தவறான அறிகுறி.”

இணையத்தில் புதிய மருத்துவரின் பெயர், அவரை புகழும் விதமாக, ‘அரிப்பு நிபுணர்’ என்றிருந்தது. குள்ளமாகவும், அகலமாகவும் இருந்தார், ஒரே தீவிர விழைவு கொண்டவனைப் போல் தோற்றமளித்தார். சோதனை அறையில் பாக்சர் அரைக்கால் சட்டையணிந்த நோயாளியை ஆழமாக கவனித்தார். பிறகு மருத்துவர் கையை சுழற்றினார் நோயாளி திரும்பினான். மருத்துவர் நோயாளியின் நோய் வரலாறு குறித்து சோதனை முடிவுகளில் இருந்து சேகரித்ததைக் கொண்டும் உடலில் என்ன காண்கிறாரோ அதைக்கொண்டும் தீர்மானமாக பேசினார். 

இப்போது மேசையில் நோயாளி மல்லாக்க படுத்திருந்தான். 

“நான் என் சட்டையையோ கால் சராயையோ கழட்டியவுடன் அரிப்பு துவங்குகிறது. அல்லது அரிப்பு அங்குதான் உள்ளது, இரவும் பகலும் வந்து செல்கிறது.” 

அவன் அணியும் ஆடை குறித்து பேசினார்கள். உள்ளாடைகள், தலையணை மற்றும் போர்வைகள். நோயாளியின் கருத்துகளுக்கு நேரடியாகவும் தெளிவாகவும் பதிலுரைக்கவில்லை என்றாலும் ‘அரிப்பு நிபுணர்’ சில சிறிய வாக்கியங்கள் வழியாக நம்பிக்கை ஏற்படுத்தினார், 

 “நான் பார்த்தவரை, நீங்கள் ‘அழும் புண்ணால்’ அல்லது அடோபிக் டெர்மடைடிசால் பாதிக்கப்படவில்லை”

வெவ்வேறு வகையான அரிப்புகளுக்கு வெவ்வேறு வகையான களிம்புகளை பட்டியலிட்டார். தொடர் பயன்பாட்டில் தோலை சன்னமாக்கும்  ஸ்டீராய்டைப் பற்றி எச்சரித்தார். அவர் அணிந்திருந்த அறுவை கவுன் அவருடைய காலணியையே மறைக்கும் அளவு நீளமாய் இருந்தது. 

“இங்கு அக்குளுக்கு அருகில் உள்ள தனித்த தடிப்பு. அதை தொட வேண்டாம். சொறிவதற்கு உரியதல்ல.”

அவர் கூறிய மருந்துகள் குறிப்பிட்ட ஒருவிதமான மொழியில் அடைபட்டிருந்தன, மூட்டமான சொற்கள் மற்றும் பதங்கள், அசைகள் நிறைந்தவை, ஏதோ ஒருவகையில் முற்றாதிக்கம் செலுத்துபவை. 

மருத்துவர் நோயாளியிடம் முகத்தை திருப்ப சொன்னார். 

“இந்த சீர்மை பிரமிப்பூட்டுவது. அதன் இடது மற்றும் வலதுத்தனம். இல்லையா? உலகமெங்கும் அரிப்பெடுப்பவர்களுக்கு முன்கை முன்கை, புட்டம், புட்டம். ஒரே சமயத்தில் நிகழ்கிறது.” 

மருத்துவர் மேசையின் மீதிருக்கும் உடலிடம் பேசவில்லை, மாறாக அந்த அறையிடம், சுவர்களிடம், அல்லது எங்கோ பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒலிப்பதிவு கருவியிடம் பேசினார். இந்த முழு அமர்வுமே குற்றங்கள் நிகழாத புறநகர் ஆய்வு மையத்தில் உள்ள மருத்துவரின் சகாக்கள் பயன்பெறுவதற்காக என்றொரு எண்ணம் நோயாளிக்கு தோன்றியது. 

ஆலோசனை முடிந்தவுடன், ‘அரிப்பு நிபுணர்’ வெறுமே அறையை விட்டு வெளியேறவில்லை. தப்பியோடுவது போல் இருந்தது. 
ஆரம்ப காலங்களில் நதியோரம் மனைவியுடன் சேர்ந்து ஓடும்போது அவனுக்கு அரிப்பை பின்னால் விட்டுவிட்டு வருவதாக தோன்றியதுண்டு. அவன் அதை ஓடிக் கடந்தான். சில நேரங்களில் அவன் கருணை மிகுந்த உயிர் ஆற்றலிடம் சரணடைந்தபடி, தன் கரங்களை தூக்கியபடி ஓடினான்.
ஜோயல் வரிகளைப் பற்றி விவாதிக்க மாட்டான். அவை வெறும் வரிகள். இடைவெளியும்தான், அது என்னவோ அதுவே தான். துண்டிக்கப்பட்ட இடைவெளி, துண்டிக்கப்பட்ட சொற்கள்,  தொங்கும் சொல். 

“நான் முழு கவிஞனாக விரும்புகிறேன். ஆனால் என் படைப்பில் நான் பேசும்படி எதுவுமேயில்லை.”

“நீ அரிப்பைப் பற்றி பேச வேண்டும்.”

“மருத்துவர் என்ன சொன்னாரோ அதை எனக்கு திரும்பச் சொல்”

“அழும் புண்கள். அதைப்பற்றி மேற்கொண்டு அறிய மறந்துவிடுகிறேன்.”

“அதன் அறிவியல் பெயர் என்னவேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் இந்த பதத்திற்கு அபாரமான அழகியல் தன்மை உள்ளது.”

“அடோபிக் டெர்மடைடிஸ்”

“மனிதத்தன்மையே அற்றது. மறந்துவிடு”

ஜோயல் “அழும் புண்கள்” எனும் சொற்றொடரை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான். அதைப்பற்றி யோசித்து கேலியாக ஏதாவது சொல்ல முயன்றான். 
அவனுடைய அரைக்கால்சராயை கழட்டியவுடன் தொடைகள் அரிக்கத் துவங்கின. அனா கட்டிலில் பார்த்தபடி காத்திருந்தாள், அவனுடைய கரங்களை அழுத்தமாக பக்கவாட்டில் வைத்துகொண்டான். அவளுடைய படுக்கையறைச் சூழல் பரிச்சயமற்று இருந்தது. ஒரு நொடி நின்றான், அவளுடைய கனிவான துளைக்கும் பார்வையை அங்கீகரிக்கும் வண்ணம் புன்னகைத்தான். அரிப்பு போய்விட்டது ஆனால் அவள் அங்குதான் இருந்தாள். அவனுக்கு இது எத்தகைய விடுதலையை அளித்தது, அன்றாடத்திலிருந்து விடுதலை, அவனும் அவளும் மட்டும் கொஞ்சநேரத்திற்கு மகிழ்ந்திருப்பது எத்தனை எளிது.
அவர்கள் கட்டிடத்தின் சுவரில் சாய்ந்தபடி நின்றார்கள், உணவு இடைவேளை, இரு பெண்கள், சக பணியாளர்கள், புகைத்து கொண்டிருந்தார்கள், அவன் தெருவிளிம்புக் கல்லருகே தன்னை நிறுத்திக்கொண்டு அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான். 

“நான் என் வாழ்வில் இரு முறை புகைத்திருக்கிறேன்” என்றான் அவன். 
முதல் பெண் கேட்டாள் “அப்போது உனக்கு எத்தனை வயது?”
“பதினேழு, பிறகு இருபத்தியேழு”
“இந்த எண்களை நினைவு வைத்திருக்கிறாய்” என்றாள். 
“அவற்றை நினைவில் வைத்திருக்கிறேன். நான் அவற்றை பற்றி எண்ணுவதுண்டு.”
அவர்கள் புகைப்பதைக் காண அவனுக்கு பிடித்திருந்தது. அவர்களுடைய செயல்களில் எளிய நளினம் இருந்தது, முகத்தை நோக்கி மிதக்கும் கையின் தன்னிச்சை அசைவுகள், விரிந்த உதடுகள், புகையை உள்ளிழுக்கையில், முதலில் ஒருத்தி அப்புறம் மற்றொருத்தி, அவர்கள் முகம் எப்படி பின்னோக்கிச் சாய்கிறது, கவனத்தைத் தப்பும்  வகையில், அதன்பின் அவள் புகையை வாய்வழி வெளியேற்றுகையில்  தலை மெல்ல முன்னும் பின்னும் அசைகிறது, ஆழ்ந்த நிம்மதி, கண்கள் மூடிக் கொள்கின்றன, முதலில் ஒருத்தி, சற்று நேரம், அதன் பின் மற்றொருத்தி. செயலை அதன் விளைவுகளில் இருந்து பிரித்துப் பார்க்கிறேன் என தனக்குத்தானே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. 
“எத்தனை காலம் புகைத்தாய்?” முதலாமவள் கேட்டாள். 
“முதல் முறை, ஒன்றரை வாரம் இருக்கலாம்.”
“இரண்டாம் முறை?.”
“இரண்டாம் முறை. இரண்டு வாரங்கள்.”
“இனி இப்போது நீ நிரந்தரமாக வாழ்வாய் என்று எதிர்பார்க்கிறாயா?”
“அலுவலகத்தில் இருக்கும்போது இல்லை”
“அப்படியென்றால் என்ன எதிர்பார்க்கிறாய்?”
“எனது மேஜைக்கு அருகேயுள்ள சாளரத்தின் வழியே குதிப்பதை எதிர்பார்க்கிறேன்.”
இரண்டாமவள் சொன்னாள், ”எங்களையும் உன்னோடு அழைத்துக் கொள்”
வீட்டில் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு நடந்தான், பிறகு அங்கு ஏன் இருந்தான் என்பதை மறந்தான். அவனுடைய அலைபேசி ஒலித்தது. அவன் ஏன் மற்றொரு அறைக்கு சென்றான் என்பதை அவனுக்கு உரைக்கும் குறுஞ்செய்தியை வாசிப்பேன் எனும் அரைகுறை எதிர்பார்ப்புடன் முதல் அறைக்கு சென்று அதை எடுத்தான். 

இரண்டு மணிநேரத்திற்கு பிறகு அவன் மீண்டும் பரிசோதனை மேஜையில் இருந்தான், அறுபதுகளில் இருக்கும் மருத்துவர் நாற்காலி நுனியில் அமர்ந்து கொண்டு அவனுடைய இடது முன்கையை தூக்குவதும் நோக்குவதுமாக, அரிப்புத் தடங்களில் உற்று நோக்கி, மயிர்க்கால்களின் உள், திசுக்களைக்கூட கவனமாகச் சோதித்து கொண்டிருந்தார்.

“உனது அரிப்பிற்கு பிறரை சொறியச் சொல்லாதே. அது பயன்தராது.” என்றாள். “நீயேதான் சொறிந்துகொள்ள வேண்டும்”

அந்த சிறிய அறை ஏறத்தாழ கைவிடப்பட்டதாக தோன்றியது- தேங்கிய காற்று, தகவல் பலகையில் குத்தியிருந்த கசங்கிய ஆவணங்கள்,  பொருட்கள் சிதறிக் கிடந்தன. 

மருத்துவர் அவனிடம் கேள்விகளை கேட்டார், பிறகு அவன் கூறியதை திரும்பச் சொன்னார். அவளுடைய பேச்சு வழக்கை அடையாளம் காண முயன்றான், ஒருவேளை மத்திய ஐரோப்பாவா, அவளுடைய திறன் மீது இது அவனுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. 

“அரிப்பு அவ்வப்போது நிற்கும்போது, ஐந்து நிமிடங்களோ ஆறு நிமிடங்களோ, நீங்கள் கொஞ்சம் வெறுமையை உணர்வீர்கள்.  என்ன எண்ணுவீர்கள்?”  

அவன் சிரிப்பைத் தேடினான், ஆனால் அது அங்கு இல்லை. 
“குளிக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்”
“எனக்கு இது சொல்லப்பட்டிருக்கிறது”
“உங்களுக்கு இது சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் என்னால் அல்ல.” என்றாள் . 
அவள் அவனுடைய முகத்தை நேரடியாக நோக்கிக் கொண்டிருந்தாள். பார்த்தாள் பேசினாள். அவள் நான்கு அல்லது ஐந்து மொழிகளைப் பேசுபவள் என்று அவன் உறுதியாக நம்பினான்.  
 “பிற நோயாளிகள், இன்னும் மோசம்”
“என் நிலையும் மோசம்தான்”
“இந்த போட்டியில் நீங்கள் இல்லவே இல்லை”
“நான் என்னையே ஏமாற்றிக் கொள்கிறேன். மோசமான நிலையில்லை என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்”
“உங்களால் உண்ண முடிகிறது. உறங்க முடிகிறது.”
“நான் உண்கிறேன். உறங்குவது எப்படி என்பதை மறந்துவிட்டேன்.”
“வயதாக ஆக, நான் சொல்வதை கேளுங்கள், பேசுவதும் நடப்பதும் குறையக் குறைய அரிப்பு அதிகரிக்கும்.”
ஆழமாக ஊடுருவி, அவன் பின்வாங்கும் வரை, அவள் தொடர்ந்து நோக்கியபடியே இருந்தாள்.

 “நாம் எங்கிருக்கிறோம் என்பதைப் பாருங்கள், நீண்ட கூடத்தின் கடைசி அறையில். நான் நாளுக்கு நான்குமுறை அங்கிருந்து இங்கும் பிறகு இங்கிருந்து அங்கும் திரும்ப நடப்பேன். இது பதிமூன்றாம் நூற்றாண்டு ஆதரவற்றோர் மற்றும் இறப்பவர்களுக்கான நோயாளர் விடுதி இல்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்ள முயல்கிறேன். ஆனால் என்னை ஏற்கச் செய்வது அத்தனை எளிதல்ல.”

அவள் பேசுவதை கேட்க அவனுக்கு பிடித்திருந்தது ஆனால்  அவள் வெற்றுவெளியை நோக்கி பேசினாள். 

“அரிப்பு இல்லாத மக்களிடம் அரிப்பைப் பற்றி நான் பேசினால் அவர்களுக்கு அரிக்கத் துவங்கிவிடுகிறது.”
“இது உண்மையா?”
“இது உண்மைதான்.” என்றாள். “வார்சாவில் ஒரு குழுவிடம் பேசினேன். அவர்கள் பேராசிரியரும் மாணவர்களும். அரிப்புக்கு என்று உரிய நரம்புகள், எலிகளில் உள்ள உணர்வு நியுரான்கள் பற்றி பேசப்பேச பார்வையாளர்கள் மத்தியில் அரிப்பு அதிகமாவதை காண முடிந்தது.” 
 “அவர்கள் இதைப்பற்றி கேள்வி கேட்டார்களா?”
“கேள்விகள் ஏதுமில்லை. பொது  மேடையில் நான் கேள்விகளை ஏற்பதில்லை.”
நீட்டப்பட்டிருந்த கரத்தை நோண்டுவதை நிறுத்தியபின் அதை அதன் பக்கத்திற்கு திருப்பாமல் அப்படியே கீழே விட்டாள், பிறகு மேசையை சுற்றி வந்து இன்னொரு கையை தூக்கினாள். 
அவன் கேட்டான், “உங்களுக்கு எப்போதாவது அரிக்குமா?”
அவனைப் பார்த்தாள், இந்த குறிப்பிட்ட நோயாளியிடம் புதிய கோணத்தை கண்டுகொண்டாள், அவனுடைய குரலை நகல் செய்வதாக எண்ணிக்கொண்டு இந்த கேள்வியை திரும்ப எழுப்பிக் கொண்டாள். 
“எனது ஒரே அரிப்பு என்பது என்னை சுற்றி என்ன இருக்கிறது என்பதே.” அவளுடைய சொந்த குரலில் கூறினாள். “மேலும் நான் ஏன் இங்கிருக்கிறேன் என்பதும்”
அந்தச் சந்திப்பு முடியவிருந்த சமயத்தில், நோயாளி கால்சராய், சட்டை மற்றும் சப்பாத்துக்களை அணிந்துகொண்டான், மருத்துவர் ஓரிரு மருந்துகளை பரிந்துரைத்தார். 
 “நீங்கள் உங்கள் மருந்துகளை வாங்கும்போது அதில் செருகப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்களை வாசிப்பீர்கள், ஆனால் அதைப் பின்பற்ற வேண்டியதில்லை. அவை முட்டாள்தனமானவை, தவறாக வழிநடத்தக் கூடியவை. நாளுக்கு இருமுறை, மும்முறை, நான்கு முறை மருந்துகளை பயன்படுத்தாதீர். நான் சொல்வதை நீங்கள் கேட்கிறீர்கள். நாளைக்கொரு முறை.”
இதை திரும்பச் சொல்ல கடமைபட்டவனானான். 
“நீங்கள் சொறிவீர்கள், தொடர்ந்து சொறிவீர்கள். ஆனால் நான் என்ன சொல்கிறேனோ அதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.”
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”
 “உங்களை நீங்களே தெளிவான, கச்சிதமான எந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்து கொண்டாலும் நல்லது என் அன்பரே”
“அரிப்பில்லை என்றால் நீங்கள் ஒரு ஆளே இல்லை” 
கூடத்தில் நீண்டதுரம் நடந்தான். தனித்தீவாக இருக்கும் அலுவலகத்தில் தனித்திருக்கும் மருத்துவரைப் பற்றி எண்ணினான். மின்தூக்கி வருவதற்கு வெகுநேரம் ஆனது.

அவனும் அனாவும் எதைப் பற்றியும் அதிகம் பேசாமல், சில சமயங்களில் இடைகளை இடித்தபடி  நடை சென்றபோது, நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம், நாங்களாகவே இருக்கிறோம், என்று எண்ணிக் கொண்டான். அவர்களை ஒரு களங்கமின்மை பொறுப்பிற்கு அப்பால் கொஞ்ச நேரத்திற்கு கொண்டு வைத்தது. 

காலப்போக்கில் இந்த தொடர்பு திரவ நிலையிலிருந்து திடமாக மாறியது. 
“நாம் காதலில் விழுகிறோம் என்றால் அதற்கு என்ன பொருள்?” அவள் கேட்டாள் “எனக்கு சரிவரத் தெரியாத ஒரு மனிதனின் மீது இத்தனை அன்பு வைப்பது எனக்கு விந்தையாக இருக்கிறது.”
அவன் தலை குனிந்து, அவள் சொல்வதைக் கூர்ந்து கவனித்தபடி நடந்தான். 
“எனக்கு உண்மையில் உன்னை தெரியாது. இது வெறும் தகவல் இல்லை.” பரிதாபமாக சிரிப்பது போன்ற பாவனையில் சொன்னாள்.   
லாபியில் இருந்த மனிதர்கள் வரிசையாக காத்திருந்தார்கள். ஒரு மின்தூக்கி சீரமைக்கப்பட்டு கொண்டிருந்தது. மற்றொன்று ஐந்தாம் தளத்தில் இருந்து கீழிருக்கும் அவர்களை நோக்கிச் சிமிட்டிக் கொண்டிருந்தது, அதன் இறக்கம் தடைப்பட்டு விட்டது. 
பதினோராம் மாடியில் உள்ள அவனது அலுவலகத்திற்கு படி ஏறலாம் என்று முடிவு செய்தான், இதே புகாரை பொதுவாக கொண்டிருந்த வேறு சிலரும் அவனோடு சேர்ந்து கொண்டார்கள். முதற் தள படிக்கட்டுகளில் பாதிதூரம் கடந்ததும் படிகளை எண்ண துவங்கினான், பிறகு மீண்டும் கீழே சென்று முதற் படியிலிருந்து சரியாக எண்ண வேண்டும் என முடிவு செய்துகொண்டான். 
எண்ணிக்கொண்டிருக்கையில் அவ்வப்போது கீழே பார்த்தான், அவனது உதடுகள் அசைவதை குறித்த பிரக்ஞை அவனுக்கிருந்தது. சூட்டும் டையும் அணிந்து பேஸ்பால் தொப்பி அணிந்த ஒருவன் ஒரு சமயத்தில் இரண்டு படிகளை தாவி அவனை உரசிக் கொண்டு கடந்து சென்றான். 
ஒன்றரை மாடி கடந்தபோது தான் அணிந்திருந்த சப்பாத்துக்களை கவனித்தான். பார்த்துக் கொண்டே எண்ணினான், தனக்கு இந்த சப்பாத்துக்கள் பிடிக்கவில்லை எனும் உண்மையை நினைவு கூர்ந்தான், அப்படி இருந்தும் இவற்றை ஏன் வாங்கினான் என புரிந்துகொள்ள முயன்றான். 
இன்னும் நிதானமாக படியேறினான், செருப்புக் கடையில் சப்பாத்துகளுடன் அதை வாகாக உணர்வதற்காக மேலும் கீழும் நடந்து சென்றதை கண்டு கொண்டிருந்தான். உண்மையிலேயே தன்னைக் காணவில்லை, ஆனால் ஒரு கை தொலைவில் காற்றில் எங்கோ புகைமூட்டமான உருவமாக அதை உணர்ந்தபடி இருந்தான். மனிதர்கள் படிகளில் அவனை கடந்து சென்றபடி இருந்தார்கள். அவன் கீழே நோக்கி படிகளை எண்ணியபடி, சப்பாத்துகளை பார்த்துக் கொண்டிருந்தான்.  
அவன் முன்னும் பின்னுமாக பலமுறை நடந்து பின்னர் அமர்ந்திருந்தான், அவன் மட்டுமே கடையிலிருந்த ஒரே வாடிக்கையாளர், ஒரு சப்பாத்தை கைக்கொண்டும் கண் கொண்டும் கவனமாக சோதித்திருந்தான். 
அவனுக்கு சப்பாத்துக்கள் தேவையில்லை என்று விற்பனை பிரதிநிதியிடம் சொல்வது அத்தனை சிக்கலா, அத்தனை சங்கடமான விஷயமா? விற்பனை பிரதிநிதி அவனுடைய நாள் நாசமாகிப்போனது என்று வருந்துவானோ என்றெண்ணினானோ?
அவனுக்கு விடை தெரியவில்லை ஆனால் தாமதமாக, விற்பனை பிரதிநிதியால், செருப்பு கடையால், சப்பாத்துக்களால் ஏமாற்றப்பட்டதாக உணரத் துவங்கினான். தன்னுடைய தளத்தை அடைய ஒரு மாடி இருக்கும்போதே படிகளை எண்ணுவதை நிறுத்திவிட்டான். 
அலுவலகத்தில் அவனுடைய மேஜையில் அமர்ந்தான், இடது மணிக்கட்டு காலை அரிப்பின் உச்சத்தில் இருந்தது, சாளரத்தின் வெளியே நோக்கினான், கொஞ்ச தூரத்தில் இருக்கும் கட்டிடத்தின் முகப்பை கண்கள் ஒட்டின, சாளரங்களின் நேர்கோட்டு வடிவை மீண்டும் நோக்கினான். அவன் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் நோக்கி சாளரங்களை புத்தகத்தைபோல் வரிவரியாக வாசித்தான்.  
இறுதியில், அவளிடம் சொல்லாமல் இருப்பது ஏமாற்றுவதாக தோன்றியது. 
பெரும்பாலும் காலியாகிக் கிடந்த கஃபே மூலை மேஜையில் அமர்ந்திருந்தார்கள். அதிக தகவல்களை தவிர்த்துவிட்டு இந்த அரிப்பு பொறுத்துக் கொள்ளத்தக்க நிலைதான், ஆனால் அத்தனை சீக்கிரத்தில் தணியப்போவதில்லை என்று சொல்வதுதான் அவன் திட்டம். 
இதற்கிடையே வானிலிருந்த இடிமுழக்கத்தை கேட்டார்கள், அவள் வளர்ந்த பகுதியின் இடியைப் பற்றி பேசினாள். புயல் நெருங்குகையில், பேரிகை முழக்கமும், கோணல்மாணலான வெளிச்சக்கீற்றுகளும் அளித்த அச்சம் மிகுந்த வியப்பு. 
அவள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். 
அவள் வெளிர்நிறம், முகம், தலைமயிர் மற்றும் சிறிய கைகள், ஒரு கையின் மூன்று மத்திய விரல்களைக் கொண்டு இன்னொரு கையின் அதே விரல்களை மென்மையாக தடவிய பாங்கு. நினைவுகொள்வதன் சமிக்ஞை, பதட்டமானதா அல்லது அமைதிப்படுத்துவதா – அவனுக்கு உறுதியாக தெரியவில்லை. 
அது தொற்றுவியாதி அல்ல என அவன் சொல்வான், அல்லது வருங்கால சந்ததியில் தன் சுவடுகளை விட்டுச் செல்லும் முன்னோர்களின் சுமையும் அல்ல. சிரிக்காமல் நகைச்சுவையாக ஏதாவது சொல்லி இதை முடித்துக் கொள்வான். 
உனக்கும் அரிப்பிருந்தால், நாம் பேசுவதற்கு எத்தனை இருக்கும் என்று எண்ணிப் பார்.’
அவன் வாழும் கட்டிடம் அங்கிருந்து நடக்கும் தொலைவில் இருந்தது. ஆகவே அவர்கள் அங்கே செல்லலாம் என்று யோசனை சொன்னான். அவனுடைய குடியிருப்பிற்கு அவள் வந்ததே இல்லை, தோளைக் குலுக்கி சின்னதாக ஒகே என்றாள். அவள் கழிவறைக்கு சென்றபோது சற்றே நிதானித்தான். பின்னர் வேகமாக ஆண்கள் பகுதிக்கு சென்று ஒரு அறையில் தன்னை பூட்டிக்கொண்டு இடத்து கால்சராயை தூக்கி வெறித்தனமாக சொரிந்துகொண்டான், இறுதிகட்ட அவசரத்தில், அவள் மேஜைக்கு திரும்புவதற்குள் திரும்பினான். 
மழை பெய்யத் துவங்கியது, அவர்கள் கட்டிடங்களின் சுவற்றையொட்டி ஒருவர்பின் ஒருவராக ஒற்றை வரிசையில் லேசான வசைசொற்களை உதிர்த்தபடி சென்றார்கள். புத்தகங்கள், புகைப்படங்கள் மற்றும் சிறிய, சுத்தமான, குறுகலான சமையலறையை நோட்டம்விட்டபடி வாழறையை அவள் சுற்றி வருவதை கவனித்தான்.  
அவள் சோபாவில் அமர்ந்தாள், காபி மேஜையின் மறுபுறம் இருந்த நாற்காலியில் அவன்  அமர்ந்திருந்தான். அவன் எங்கெல்லாம் வாழ்ந்திருக்கிறான் எனும் வரலாற்றை சுருக்கமாக அவளுக்கு சொன்னான். என்ன காரணத்தினாலோ அவன் குசுகுசுத்தான். 
அவன் அரிப்பைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. 
படுக்கையில் சொற்களற்ற உடல் செயல்பாடுகள் மட்டும்தான், அதைத் தொடர்ந்த இடைவெளியில் தன்னினைவின்றி சொறிந்து கொண்டு அவன் தனியாய்ப் படுத்திருந்தான், அவளுடைய பார்வையின் எல்லைக்கு அப்பால் கழுவு தொட்டிக்கு கீழே உள்ள சிறிய சேமிப்பு இடத்தில் உள்ள மருந்து அலமாரியில் எல்லா களிம்புகளையும் ஜாடிகளையும் வைத்திருந்தான் என்பதை தனக்குத் தானே நினைவுகூர்ந்து கொண்டான்.   
ஒவ்வொருவரும் பிறிதொருவர் இல்லாமல் இருக்கவே முடியாது எனும் அளவிற்கு இது ஓர் ஈடுபாடு இல்லை என எண்ணிக்கொண்டான். ஆனால் இதை எப்படி புரிந்துகொள்வது என்பதில் அவனுக்கு தெளிவில்லை. 
அவள் அறைக்கு திரும்பியபோது அவள் பெயரை உரக்க உச்சரித்தான். 
பிறகு அவளை வீட்டிற்கு நடத்திச் சென்றான், காற்றுக்கு எதிராக சாய்த்து அவன் பிடித்திருந்த குடைக்குப்  பின் இரு கூனிய உருவங்கள் சென்றன. 
ஜோயல் அலுவலகத்தின் மூலையில் அமைதியாக அவனிடம் பேசுகிறான். அவனுடைய மூத்திரம் கழிவுச் சட்டியில் மென்மையாக தெறித்தபோது பேசிய வார்த்தைகள், மீண்டும் கேட்டிருக்கின்றன. 
“எங்கு, இங்கா?”
“வீட்டில், வீட்டில் தான் இருக்க வேண்டும். இங்கு நான் யூரினலை பயன்படுத்துகிறேன். வீட்டில், கழிவுச் சட்டி  மட்டுமே உள்ளது.”
“ஒரு வார்த்தையைப் போல் ஒலிக்கும் ஓசை இல்லை அது”
“அது என்னவோ சொல்கிறது.”
 “ஆனால் அது ஒரு சொல்லென்றால் உன்னால் அந்த சொல்லை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?”
“அந்தச் சிறிய தெறிப்பை நோக்குகிறேன். நோக்கி, செவி கூர்கிறேன். நான் முயல்கிறேன்.”
“அது எதையோ சொல்கிறது என்று எண்ணுகிறாயா.”
“அதற்கு தன்னை வெளிபடுத்தும் தன்மை உள்ளது. அது எதையோ சொல்கிறது, தொடர்பு கொள்கிறது.”
அவன் வேகவேகமாக கண் சிமிட்டினான். 
  “சரி. அது ஒரு சொல், ஆனால் அது ஆங்கில வார்த்தை என்பது எப்படி தெரியும்?”
“அதுதானே என் மொழி.”
“இது முட்டாள்தனமாக போய்க்கொண்டிருக்கிறது. உனக்கது தெரியும்.”
“நான் உன்னை நம்புவதால் உன்னிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.”
“சாண்ட்ராவுக்கு இதைப்பற்றி தெரியுமா?”
“அவளிடம் சொல்வதற்குரிய துணிவு எனக்கு இதுவரை இல்லை”
“அவளிடம் சொல். அதை கேட்க ஆவலாக உள்ளேன்.”
“இந்த காட்சியை கற்பனை செய்து பார்.” ஜோயல் சொன்னான். “அவள் கழிவறைக்கு என்னை பின்தொடர்ந்து வருகிறாள், நான் ஜிப்பை கழட்டுவதற்கு காத்திருந்து நிற்கிறாள்.”
 “அவளிடம் காட்டாமலே அவளிடம் சொல்லலாம்”
“அவள் சிரிப்பாள். எங்கள் பிள்ளைகளிடம் சொல்வாள்.”
“நான் அதை யோசிக்கவில்லை.”
“எட்டு வயதும், ஆறு வயதும் ஆனவர்கள். அவர்களுடைய எதிர்வினையை கற்பனை செய்துபார்.”
“சௌம்”
“நினைவிருக்கிறதா. நல்லது.”
“பகுத்தறிவுக்கு அப்பாலான கவிதை.”
“வடிவங்களும் ஒலிகளும். வருங்காலத்துக்குரிய சௌம். உனக்கு நினைவிருக்கிறது. ஒரு வடிவம், ஒரு ஒலி.”
“குழந்தைகளிடம் சொல். சௌம். அவர்கள் அந்த சொல்லை சொல்வார்கள்.”
அவர்கள் மீண்டும் தங்கள் மேசைகளுக்கு திரும்பினார்கள், திரையை நோக்கி குனிந்து செய்திகளில் கண்களை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். 
இப்படித்தான் உறக்கத்தின் அண்மைய நிலை ஒரு மனிதனின் பிரக்ஞையை இணக்கப்படுத்துகிறது. பிற எல்லாமும் மறைந்து விடுகின்றன. கடந்த காலமும் இல்லை வருங்காலமும் இல்லை, மனித வடிவில் வாழும் அரிப்பு, முன்னுக்கு பின் முரணாக சிந்திக்கும் ராபர்ட் டி வால்ட்ரன்,  போர்வையில் ஓர் உடல், தனக்குள் குவிந்தவன்.  ♦


டான் டெலிலோ “the angel esmeralda” மற்றும் வேறு பல தொகுப்புக்களை எழுதியவர். “zero k “ அவருடைய அண்மைய நாவல். 









No comments:

Post a Comment