Friday, November 23, 2018

சிதல்- ஸ்ரீநிவாச கோபாலன் கடிதம்

சிவமணியன் கடிதம் 
சிதல் 

மதிப்பிற்குரிய எழுத்தாளருக்கு,

உங்கள் வலைப்பூவில் 'சிதல்' கதையை முதலில் படித்தது நள்ளிரவொன்றில். முடித்ததும் என் மனதில் நிலைத்தது கரையான் அப்பிய புத்தக அடுக்குகள்தான். எங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களை, மரங்களை, தரையைச் சிதைத்த கரையான்களை எண்ணி பயன்கொண்டேன். உடனே அம்மாவிடம் புத்தகங்களை அடிக்கடி தட்டிவைக்கச் சொல்ல விரும்பினேன். நடு இரவில் அதைச் செய்ய முடியவில்லை. மீண்டும் இப்போது படித்தபோதும் அதே பயம் தலை காட்டுகிறது.

இக்கதைக்காக உங்களுக்கு என் சிறப்பான நன்றியை உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் கிராமத்தின் பழைய சித்திரம் ஒன்றை தீட்டிக்கொடுத்திருக்கறீர்கள். கீழநத்தம் என அரசேடுகளில் உள்ள என் கிராமத்தை பழைய ஆட்களுக்கு நரையங்குறிப்பு என்றால்தான் தெரியும். கரையான்குடியிருப்பு என்பதன் மறுவல் இப்பெயர் என யாரோ சொல்லக்கேட்டிருக்கிறேன். (சில ஆடுகள் முன் நடைபெற்ற பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில் தற்போதைய கீழநத்தம் என்ற பெயருக்கு கிருஷ்ண நிருத்தம் என்ற முன்வடிவொன்றின் மறுவல் என தலவரலாற்றில் கற்பித்துள்ளது கோயில் நிர்வாகம்!) கரையான்களால் ஆளப்பட்ட ஊர் எங்கள் கிராமம். இப்போதும் அதன் ராஜ்ஜியம் பூமிக்கடியில் நடத்துகொண்டே வருகிறது.

மாதம் ஒரு முறை பெருக்கி மெழுகினாலே போதுமான வீடுதான் எங்களுடையதும். ஆனால், பல ஆண்டுகளாக அதைச் செய்யவில்லை. என் நினைவு தெரிந்து ஒரே ஒரு முறை நாங்கள் இல்லாத நாளில் அப்பா வீட்டை முழுதும் மெழுகினார். புசுஞ்சாண மெழுகலில் மணம் போவதற்குள் தரையெங்கும் கரையான்களின் மண் வரைபடங்கள் தோன்றிவிட்டன. பிறகு மெழுகப்படவே இல்லை. நாள் கிழமைகளில் அம்மா விளக்கு வைக்கும் இடத்தை மட்டும் மெழுவதற்கே அப்பா அதிருப்தி தெரிவிப்பார்.

சிதலில் வரும் அந்த அறையைப் போல எங்கள் வீட்டு மாடி அறையில் ஒரு காட்சியைப் பார்த்தேன் சில நாட்களுக்கு முன். அந்த அறையில் இரு மரப்பெட்டிகள் உள்ளன. சிறிய பெட்டியில் கொலு மொம்மைகள். பாதி பொம்மைகள் சிந்தவை. மற்றொரு பெட்டியை பொக்கிஷமாக நினைத்துக்கொள்வேன் நான். மிக அரிதாகவே புழங்கும் அந்த அறையில் ஒரு பக்க சுவரை பாதி மறைத்து அந்த கருப்புப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. சிறு வயதில் கனமான அதன் மூடியை திறக்க முயன்றுதோற்பேன். இப்போதும் அது சற்று கடினமானதே. அதில் நான் நினைத்தபடி பொக்கிஷம் ஏதும் இல்லை என பிறகு தெரிந்தது. பயன்படுத்தாக பாத்திரங்கள்தான் கிடந்தன. அந்தப் பெட்டியை சில நாட்கள் முன் திறந்தபோது அதன் உடலை கரையான் தின்றுகொண்டிருப்பதைப் பார்த்து மிரண்டேன். பகலிலும் இருண்ட அந்த அறையில் ஜன்னலின் சிறு வெளிச்சக் கசிவில் அந்தப் பெட்டி இப்போதும் என் மனதில் ஒரு பொக்கிஷமாகவே உள்ளது.

இனி, 'கரையான் மண்ணுக்குள் ஒரு தீக்கங்கைச் சுமந்து கொண்டு திரிகிறது.' என்ற இக்கதையின் வரியிலிருந்தே என் ஊரின் பழைய சித்தரத்தை என்னால் மீட்டுக்கொள்ள முடியும். மறுகாலை எடுத்து வைப்பதற்குள் முன்வைத்த கால் செல்லரித்துவிடும் என 'மோக முள்' நாவலில் தி.ஜா. எழுதிய நடை வர்ணனையும் நினைவில் மீள்கிறது.

சிவமணியன் எழுதியக் கடிதத்தைப் பகிர்ந்திருந்தீர்கள். அவர் சொல்வதுபோல 'குறுதிச்சோறு' கதையை நினைக்காமல் இக்கதையை வாசித்து முடிக்க இயலாது. ஆனால் எனக்கு இக்கதை குறுதிச்சோறு கதையின் தொடர்ச்சி போல தெரியவில்லை. அந்தக் களத்தில் எழுதவிரும்பிய மற்றொரு கதையையே எழுதிப்பார்த்திருக்கிறீர்கள் சிதலில்.

இரு முறை வாசித்தபோது இக்கதைக்குப் போதுமான வாசிப்பைக் கொடுத்தேனா என்பது எனக்கு சந்தேகம்தான். ஆனால், இன்னும் ஏதோ எஞ்சியிருக்கிறது என்ற உணர்வை கதை கடத்திவிட்டது. கதையின் பகுதிகளில் வீழ்ச்சியும் புனரமைப்பும் மாறிமாறி சித்தரிக்கப்படுகின்றன. அவை கட்டிடங்களில் மட்டுமின்றி அவற்றைச் சார்ந்துள்ள மனித உள்ளங்களில் பெருகிச்சரியும் நம்பிக்கையையும் குறிக்கின்றன. கதையின் முடிவு இவ்விரு நிலைகளுக்குமிடையே விட்டுவிடுகிறது.

பல சிறுகதைகளில் பேசப்பட்ட அறவீழ்ச்சியின் முகமாக இக்கதையைப் பார்ப்பது பழைய வாசிப்பாகவே இருக்கும். கதைக்களத்தை சூழலியல் ரீதியாக அணுகலாம் எனவும் தோன்றுகிறது. அறிவியல் புனைவாக எழுதப்பட்டால் எப்படி வந்திருக்கும் என்றும் யோசித்துப்பார்க்கிறேன்.

முடிவில், இதைவிட சிறந்த கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் நம்பிக்கையை உங்கள் முதல் தொகுப்பு கொடுத்திருக்கிறது என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

அன்புடன்
வே. ஸ்ரீநிவாச கோபாலன்

நன்றி ஸ்ரீநிவாச கோபாலன் 

No comments:

Post a Comment