Wednesday, November 21, 2018

சிதல் - சிவமணியன் கடிதம்


அன்புள்ள சுனீலுக்கு,


நலம் மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். 


‘சிதல்’ சிறுகதை முதல் வாசிப்பில் உங்கள் சிறுகதையான ‘குருதிச்சோறு’வின் நீட்சி போலத் தோன்றியது. நிலத்தால் தொலைவினில் இருந்தாலும் என் மனமொழியில் என்றும் இருக்கும் வட்டாரச் சொற்களான துப்புரவாக, சுளுவில் , சகட்டுமேனி, தந்தரை, மொகரை, ரவைக்கு போன்ற சொற்கள் நிரம்பிய வர்ணனை வாசிப்பினை  அணுக்கமாக்கின. 



பெரிய செந்தியின் குழந்தைக்கால நினைவுகளின் மீட்டெடுப்பின் சூழல் விவரம் குறியீட்டு ரீதியாக அவனின் அணுக்கமான உறவுகளை சுட்டுகிறதோ என எண்ண வைத்து கதைக்குள் ஆழ்ந்து இழுத்தது. சிங்கங்களை அய்யா, அப்பா எனவும், பவளமல்லி செடியை அன்னையாகவும்,  முன்பு வெள்ளி நிறத்திலிருந்து  இப்போது கருப்பேறியிருக்கும் தாமரைக்கதவினை அப்பத்தாவாகவும் அடையாளமிடத் தோன்றியது.  கரையான்கள் ‘பவளமல்லி’ தண்டு முதலாக அனைத்து அழிக்கும் கணமும், செந்தியின்  கனவுகளில் கரையான்கள் மாறி மாறி வேறு உருவேடமணிந்து வரும்  வரிகளையும் மீண்டும் மீண்டும் வாசித்தேன். 


வாசிக்கையில் நினைவில் பதிந்த விவரணைகள்


கைவைத்த  இடத்தில் தூசி மறைந்து துலக்கமடைந்தது. 


செந்தியின் அப்பத்தாவிடம் ‘குட்டி கொடுத்து’ வந்தவள் மீனா. (தத்துகொடுப்பது போல நிகழ்வோ?)


ஆத்தங்குடி கற்கள்


வாடகை எதுவும் தரவேண்டாம். மாதமொரு முறை வீட்டை கூட்டி மொழுக வேண்டும் (அவ்வளவு பெரியவீட்டிற்கு மாதமொருமுறையே அதீதம்தான்)


சூலத்தின் இரு பிரிகளில் தொங்கும் வளையல்களை கொண்டுதான் அது காளியாத்தா என உறுதி செய்து கொண்டார்களாம்



காவன்னா லேனாவிடம் வதைபடும் சாத்தையா , சோலச்சியின் வாழ்வு தருணத்தின் விவரிப்பு மிகையற்ற சொற்களானாலும், அழுத்தமாக அமைந்திருந்தது. பாண்டியின் சுருக்கமான விவரிப்பிலிருந்து அவன் பெற்ற தண்டனைக்கு காரணம் என்னவென ஊகிக்க முடிந்தது.  



ஈர்க்குச்சி வழியாக மண் உதிர்ந்து, சாவித்துளை வழியாக தெரியவந்தஅறையளவு கரையான் புற்றிலும், நீரைக்கண்டு அஞ்சும்  மக்கள் நெருப்பைக் கண்டு அஞ்சவில்லை போலும் , கரையான் மண்ணுக்குள் ஒரு தீக்கங்கைச் சுமந்து கொண்டு திரிகிறது போன்ற வரிகளிலும் மனம் மீண்டும் மீண்டும் சென்று குவிகிறது. 



பரிவற்ற லேவாதேவித்தனத்தினால் மனிதமனங்கள் மட்டுமில்லாமல், சூழலும் ஈரம் துவர்ந்து பாலையாகிப்போகும் என இந்தக் கதையிலிருந்து பெற்றுக்கொண்டேன். 



வாழ்த்துக்கள்.


அன்புடன்,

சிவமணியன்

நன்றி சிவமணியன்.

Tuesday, October 30, 2018

இன்று

இன்று

உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது
சக்தி வாய்ந்த இரு அதிபர்கள் கைகுலுக்கிக் கொண்டார்கள்
தீவிரவாத தாக்குதலில் முப்பது பேர் மரணமடைந்தார்கள்
புறநகர்ச் சாலையில் ஒரு பேருந்து கவிழ்ந்துவிட்டது
எங்கள் தெரு பிள்ளையார் கோவிலுக்கு குடமுழுக்கு
விராட் கோலி சதமடித்தார்
ஒன்றுவிட்ட பெரியப்பா இறைவனடி சேர்ந்தார்
குட்டிப் பயலுக்கு வயிற்றுப்போக்கு
ஒரு கதையையும் எழுதினேன்
அதுபாட்டுக்கும் எதன் மேலும் விழாமல்
நடந்து சென்று அடுப்பு சாம்பலில் சுருண்டு படுத்து கொண்டது.

Sunday, October 28, 2018

Sahitya Akademi yuva puraskar 2018 acceptance speech 27.10.18

Vanakkam
I come from the land which embraced the whole world as  “yaadhum oore yaavarum keleer” several centuries before. The land that created Thiruvalluvar, Ilango, Andal, Kamban and Bharathi.

Gandhi is neither a Mahatma nor the father of a nation, for me he is a failed philosopher, a wounded warrior, a wretched grandfather whom I adore and feel close to. He is a harmless scapegoat who can be blamed for every misery. In times of disquiet I converse with him.  In our times, Don’t we have any other choice than to live with our fractured selves ? Free market was supposed to be the panacea for all the troubles of India. But after the euphoric first decade post liberalisation, the historical wounds fester. In lies, manipulation and half-truth the wound still bleeds. Truth is dead, atleast in the allegorical sense, like in an Orwellian world. Today truth is manufactured and customised. What could I do? unlike Bapu I am  puny, imperfect, indifferent and lazy.  I imagine Bapu looking at me with his reassuring toothless grin and saying ‘So were our times. So was every time in the past, Every era has its own distress and unrest to live with. Face it, seek it, embrace it.’ Then he disappeared in the mist.

And what would a ‘not so courageous’ man do? As Javier Cercas says, “Fiction saves, reality kills”. I read and write. I hide, I debate, I project and I dissipate myself.

In a world that is increasingly paranoid and polarized, Art is a powerful tool, or rather the only tool against dangerous stereotypes. Art is all that we have when propaganda dents our deepest selves and alters our sub conscious. Fiction is a way to retain our private universe. I read fiction, I live a hundred lives, I live in the fictional town of the past, Vishnupuram and confront the deluge that encompasses everything. I live in a small mansion in a crowded street and face the drought along with Jamuna, the drought that destroys compassion. I am in the courtroom where Mr. K is sentenced during  the trial anxiously. I am there in the shores of Crete, where Zorba dances and laughs merrily as if there is no tomorrow.

I create my universe, in ‘Thimingilam,’ in ‘Vasudevan’, where I face the question that torments me, the meaning and meaninglessness of our life. I lose myself in the grips of ancient myths, they surface in my stories as images. I write to keep myself sane, I write to preserve my occasional insanity. I write to know myself, I write to heal, sometimes to purge. I write because I know that I am no Bapu, and never can I be. I have to live with this naked truth, with my hypocrite self. Being a hypocrite is easy when we are unaware of it. Being a vigilant hypocrite, I have nowhere else to go but to fiction. Hypocrisy is the fuel of my creativity. Once we learn to live with it, we may even start loving the life being  in the conflict zone always and the world looks beautiful.

I sincerely thank my publisher ‘Yavarum’and their publishing team, especially Mr. Jeeva Karikalan for trusting me. My heartfelt gratitude for writer Jeyamohan, who is a father  figure to me and a mentor. Warm hugs to the friends of Vishnupuram literary circle and Padhakai ezine, for they provided a learning platform for me. Thanks would not suffice for Mr. Baskar, who played a crucial role in editing my writings.


The arrival of two important persons in my life officially kick-started my creative life: my wife Manasa, who, being a creative person herself, knows the turbulence of the creative process. She inspires me. Our son Sudhir, fosters my creativity through his presence and inquisitiveness.

I dedicate this Sahitya Akademi Yuva Puraskar award to my mother Smt. Ramadevi, for being a pillar in our lives, standing steady and strong amidst the torments of life.

Thank you
Suneel Krishnan

Monday, September 17, 2018

சிதல்

சிதல் 











(ஆகஸ்ட் மாதம் இறுதியில் வெளிவந்த இடைவெளி இதழில் வெளியான சிறுகதை. நன்றி இடைவெளி ஆசிரியர் குழு)

1
செம்மண் படிந்து பழுப்பேறிய வாயில் சுவரின் விலா எலும்புகள் என செங்கல் பூச்சு ஆங்காங்கு தென்பட்டது. கருத்து துருவேறி இருக்கும் தாமரைக்கதவு வெள்ளி நிறத்தில் இருந்ததாக ஞாபகம், கருப்பு என்றால் கருப்பும் அடர் அரக்கும் சேர்ந்த அப்பத்தாவின் புகையிலைக் கறை படிந்த பற்களின் கருகருப்பு. வாயில் வளைவில் ஆங்கிலத்தில் புடைத்திருந்த கே எல் எஸ்சில், எல்லின் கீழ்க்கோடு சிதைந்து ஐ போல இருந்தது. சிரித்துக் கொண்டான். வளைவின் இரு பக்கமும் வரவேற்கக் குந்தியமர்ந்திருக்கும் சிங்கங்களின் வளைந்த வாலுக்கு பதிலாக ஒரேயொரு கம்பி நீட்டியிருந்தது. வலப்பக்க சிங்கத்தின் ‘மொகரையை’ வீட்டுக்குள் கிரிக்கெட் விளையாடிப் பெயர்த்தது நினைவுக்கு வந்தது. இப்போது அதன் முன்னங்காலும் உதிர்ந்திருந்தது. தன்னிச்சையாக அவன் விழிகள் கிணற்றடியில் நிலைபெற்றன. பவளமல்லி இருந்த இடத்தை நோக்கினான். தந்தரையாக சிமிண்டு பூசப்பட்டிருந்தது. 

“அக்கா..” என்று அழைத்தான். குரல் அவன் எதிர்நோக்கிய விசையை அடையாமல் கம்மியது. தொலைகாட்சியில் யாரோ ஒரு பெண்  ஆவேசமாக அழுது கொண்டிருந்தது கேட்டது. மீண்டும் குரலைச் செருமிக்கொண்டு சற்றே உரக்க “அக்கா” என்றான். அதிகாரமாக ஒலித்த அத்தொனி அவனுக்கு பிடிக்கவில்லை. விரித்த தலைமுடியுடன் ஊதா பூ போட்ட நைட்டி அணிந்த ஒடிசலான பெண் வாயில் சீப்பை கவ்விக்கொண்டு அரக்கப்பரக்க வந்தாள். 
“மீனா அக்கா இருக்காங்களா?”

வாயிலிருந்த சீப்பை எடுக்காமலே, உள்பக்கமாக கதவை பின்னியிருந்த வளைக் கம்பியை இழுத்து தாமரைக் கதவை திறந்தாள். கையிலிருந்த இழு பெட்டியையும் முதுகில் சுமந்த பயணப் பொதியையும் பார்த்தவுடன் அவளுக்கு யாரென்று தெரிந்திருக்க வேண்டும். அவள் உள்ளே சென்றதும் மீனா அக்கா வந்தாள். 

“வாய்யா தம்பு... கார்த்தியா, அண்ணனுக்கு சேரு கொண்டாடி... எம்மவதான், தெரியலையா...” என்றாள்.

“இருக்கட்டும்க்கா... நல்லா இருக்கிங்களா?” என்று பெரிய திண்ணையில் ஏறியமர்ந்தான். கை வைத்த இடத்தில் தூசி மறைந்து துலக்கம் அடைந்தது. செந்தியின் அப்பத்தாவிடம் ‘குட்டி கொடுத்து’ வந்தவள் மீனா. அவனை விட எப்படியும் பத்து வயது மூத்தவள். கூடமாட ஒத்தாசையாக இருப்பாள். அய்யா இறந்தபிறகு அவள்தான் சமையல். செந்தியின் அப்பனும் ஆத்தாளும் அவனுக்கு நான்கு வயதிருக்கும்போதே காப்பி எஸ்டேட் அருகே  ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தபின் செந்தியை கவனிக்கும் பொறுப்பு  அதிகமும் அவளே ஏற்றுக் கொண்டாள். பதின்மம் என வகுக்கும் முன்னரே துவங்கிய கனவுகளை அதிகமும் ஆரம்ப நாட்களில் நிறைத்தவள் அவள்தான். என்னவென்று விளங்குவதற்கே அவனுக்கு சில வருடங்களானது. அதற்குள் அவளுக்கு பத்து பவுன் போட்டு பழனிக்கு அப்பத்தாதான் திருமணம் செய்து முகப்பில் குடி வைத்தாள். பழனி அரண்மனையில் எடுபிடியாக இருந்தான்.  வாடகை ஒன்றும் தர வேண்டாம். வீட்டைப் பார்த்து கொள்ளுங்கள். மாதமொரு முறை கூட்டி மொழுக வேண்டும் என அப்பத்தா இருந்த காலத்திலேயே  முடிவாகி இருந்தது. 

“பழனி ஐத்தான் சமாசாரம் கேள்வி பட்டேன்... தைரியமா இருங்கக்கா”

கண்ணிலிருந்து நீர்த்தாரை கன்னத்தை பகுத்து இறங்கியது. திண்ணையில் பதிந்திருந்த கருப்பு வெள்ளை முக்கோண ஆத்தங்குடி கற்களை வெறுமே வெறித்துக் கொண்டிருந்தான். உத்திரத்தைத் தாங்கும் வழவழப்பான தூண்கள் திண்ணையிலிருந்து முளைத்தன. அவனுடைய நினைவில் அவை கொண்டிருந்த பிரம்மாண்டம் நேரில் இல்லை என்பது ஏமாற்றமாக இருந்தது. உள்ளே சென்று பெரிய இரும்புச் சாவியையும் கொத்துச் சாவியையும் எடுத்து வந்தாள். கார்த்திகா பச்சைநிறக் குடத்தை தூக்கிக் கொண்டு பதுங்கு குழி போல் இருக்கும் தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி காணாமலானாள். 

செந்தி கனத்த இரும்புச் சாவியை பூட்டுத் துளையில் விட்டு இரண்டு முறை திருகினான். அப்போதுதான் நிலைக்கதவின் மேலிருந்த சரசுவதியின் கையிலிருந்த வீணை சிதைந்திருந்ததை கவனித்தான். 

2

ஐந்து மணிக்கெல்லாம் இருட்டத் துவங்கியது. வெளிர் நீல வானத்தில் ஒரு துளி கருமை சேர்ந்து கலக்கியது போல் சாம்பல் கொண்டது வானம். காற்றின் வெம்மையும் வறட்சியும் ஏதோ ஒரு நொடியில் மாறி இப்போது குளிர்ந்து கனத்தது. மூங்கில் கழிகளால் ஆன சாரத்தில் ஏறி சாத்தையா சுதைச் சிற்பங்களுக்கு வர்ணம் அடித்து கொண்டிருந்தான். சரசுவதியின் கையிலிருக்கும் வீணைக்கு அரக்குடன் கொஞ்சம் வெள்ளை வர்ணத்தைக் கலந்து காய்ந்த மரப்பட்டையின் உட்புற நிறத்தை உருவாக்கிப் பூசினான். புளியமரத்தில் கட்டப்பட்டிருந்த குழாயில், “ஈசுவரியே மகமாயி மாரியம்மா...” என ஈசுவரி உச்சக் குரலில் பாடிக் கொண்டிருந்தார். நிழலில் பரவியிருந்த மணலில் துண்டை விரித்து ஒருக்களித்து படுத்துக்கொண்டு கோபுர வேலையை பார்த்து கொண்டிருந்தான் பாண்டி. அடிமரத்தையொட்டி வளர்ந்திருந்த பிரம்மாண்டமான புற்றுக்கு   அருகே கறுப்பு எறும்புகள் ஊறிக் கொண்டிருந்தன. 

அத்தனை நாள் ஒரேயொரு திட்டில் இருந்த பீடமும் அருகில் நடப்பட்டிருந்த சூலமும்தான் காளியாத்தாவாக இருந்தது. சூலத்தின் நுனியில் குத்தியிருக்கும் எலுமிச்சை மண்ணிறத்தில் வதங்கிச் சுருங்கி மாதக்கணக்காக கிடக்கும். சூலத்தின் இரு பிரிகளில் தொங்கும் வளையல்களை கொண்டுதான் அது காளியாத்தா என உறுதி செய்து கொண்டார்களாம். பீடத்தைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் சிவப்பு ரவிக்கைத் துணி காற்றில் உளையாமல் இருக்க எடைக்கு கல் வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். வானே கூரையாக ஆத்தா வெயிலிலும் மழையிலும் எப்போதைக்குமாக நின்றிருந்தாள். 

பாண்டி முணுமுணுத்தான், “ஒனக்கு வந்த வாழ்வப் பாரேன்... கட்டடம், மதிலு, கோவுரம்... நல்லாயிரு ஆத்தா” என்று கேலியாகச் சிரித்தான். இரண்டடிக்கு ஒரு சிறிய அம்மன் சிலையொன்று பீடத்திற்குப் பின் நிறுவப்பட்டிருந்தது. அடுத்த வாரத்தில் அதற்கு வெள்ளிக் கவசம் வரும் என்று ஸ்தபதி கூறிவிட்டு சென்றிருந்தார். “திருழா சமயத்துலதான் சனம் வரும்... பொங்கல வைக்கும்... கோழியறுத்து, கிடாவெட்டிட்டு போய்கிட்டே இருக்கும். இப்ப என்னடான்னா ஒனக்கு ஆறுகால யாகசால பூச... பிள்ளையார்பட்டி ஐயருங்க வாராகளாம்... கும்பத்துக்கு தண்ணி விடுறாங்களாம்,” என்று அந்தரத்தில் பேசிக்கொண்டிருந்தான். 

இடிச்சத்தம் கேட்டது. சாத்தையா மளமளவென இறங்கி வந்தான். “சத்த நேரம் மழ வரலைனா போதும்... காஞ்சுரும்... மீத வேலைய நாளைக்கு முடிச்சிரலாம்” என்று கிளம்பினான். பாண்டி துண்டை உதறிவிட்டு மரத்தடியில் சிமிண்டு மூட்டை அடுக்கப் போட்டிருந்த கொட்டகைக்குள் சென்றான். கோவில் வேலை ஆரம்பித்ததில் இருந்து அவன் அங்குதான் உறக்கம். சாய்த்து வைத்திருந்த கயிற்றுக் கட்டிலை நேராக்கிவிட்டு தலைக்கு துண்டை வைத்துக்கொண்டு படுத்தான்.  கும்பாபிஷேகம் முடிந்த கையோடு திருவிழாவும் வருகிறது. இம்முறை ஆட்டம், சினிமா என எல்லாமும் உண்டு. “எல்லாத்துக்கும் ஒரு  காலநேரம் வரும் போல... சாமிக்கும்தான்... எட்டாம் நாள் மண்டகப்படிகாரவுக என்ன ஆனாங்கன்னே தெரியல... இம்புட்டு வருஷமா புத்து மண்ணுல அவிசெகம் பண்ணிக்கிட்டு கிடந்தோம்... இப்ப என்னடான்னா அம்பேரிக்காவுலேந்து பணம் வருது... அவுகதான்னு சொல்றாக” என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். 

பாண்டிக்கு ஆற்றாமை பொறுக்க முடியாமல் புலம்பிக் கொண்டிருந்தான். பரம்பரையாக கோவில் பூசை பார்த்து வந்தாலும் அவனுக்கு என்றிருந்த நிலத்தையும் கோவில் நிலத்தையும் அவன்தான் கவனித்தான். செல்வியை மணமுடித்து ஆறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் புழு பூச்சி ஏதும் உண்டாகவில்லை. நான்கு ஆண்டுகளாக வெள்ளாமை இல்லை. கம்மாய்கள் எல்லாம் வறண்டு பாளம் பாளமாக வெடித்துக் கிடந்தன. ஊரில் யாருமே விதைக்கவில்லை. தண்ணிக்குடத்தை தூக்கிக் கொண்டு பஞ்சாயத்து குழாயடிக்கு சென்று வந்தார்கள். இப்போது மூன்று மாதமாக தேவகோட்டைக்கும் காரைக்குடிக்கும் கட்டட வேலைக்கு நாள் கூலி நானூறு ரூபாய் கொடுக்கிறார்கள் என போய்க் கொண்டிருந்தான். பத்து நாள் சென்றால்கூட போதும், அந்த மாசத்தை ஓட்டிவிடலாம். ஆனால் அதற்கும் இருநூறு ரூபாய்க்கு வேலை பார்க்க வடக்கிலிருந்து ஆட்களை கூட்டி வருகிறார்கள். ஆரம்பத்தில் அவர்கள் மீது ஆத்திரமாக வந்தது. பிறகு இருநூறுக்கே வழியில்லாமல் வருகிறார்களே என பரிவு கொண்டான். செல்வியும் மண்ணு வார அவ்வப்போது செல்வாள். நாலு சட்டி மண்ணை அள்ளிக் கொட்டிவிட்டு கொண்டு போன கட்டுச் சோற்றை தின்றுவிட்டு செட்டாக கிளம்பிவிடுவார்கள்.

 இரண்டு மாதங்களுக்கு முன் கோவில் திருவிழா நடத்த கூட்டம் கூட்டி கணக்கு போட்டபோது. காசு கொடுக்க யாருமே முன்வரவில்லை. கொடுப்பதற்கு எதுவுமில்லை என்பது ஒருபுறம், கொடுக்க மனமில்லை. “இங்கே சோத்துக்கே வழியில்ல..” என்று கரித்துக் கொட்டினார்கள். கடைசியில் மண்டகப்படிகாரர்கள் மட்டும் ஆளுக்கு ஆயிரம் தருவதாக முடிவானது. சக்கர சோறு, சுண்டல் எல்லாம் போட வேண்டியதில்லை. வெறும் தேங்காய் பழம் வைத்து கும்பிட்டால் போதும் என்றார்கள். 

பாண்டி மனம் நொந்திருந்தான். ஒரு நாளைக்காவது நல்ல பிரசாதம் போட வேண்டும். காசைப் புரட்டிவிடலாம் என திட்டவட்டமாக இருந்தான். இப்போது நிலைமை தலைகீழானது. சாரத்தின் மீது தார்பாலினை போட வேண்டும், மழை உறுதியாக வரும் போலிருக்கிறது. எழுந்து வெளியே வந்தான்.  

பளீர் என ஒரு வெளிச்சம், பின் பேரிரைச்ச்சல். உடல் அதிர்ந்து சில அடி தூரம் அப்பால் கிடந்தான். என்னவென்று சுதாரித்துக் கொள்வதற்கு முன் கொட்டகை தீப்பற்றி எரிந்தது. புளிய மரம் பொசுங்கிச் சாய்ந்திருந்தது.  

3
சமையற்கட்டு உத்திரத்திலிருந்து ஒரு கட்டை அரித்து விழுந்தது. கொலுப் பொம்மைகள் இருக்கும் மர பீரோவின் காலை அரித்தது. மேலேறும் முன் அப்பத்தா கவனித்து மண்ணெண்ணெய் ஊற்றினாள். “ராவோடா ராவா நம்மளையும் அரிச்சுப்புடும் போலிருக்கே” என்று அலுத்துக் கொண்டாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியில் கரையானைக் கண்டுபிடித்தார்கள். அப்பத்தாவின் சீலை, அம்மாவின் கல்யாண சீதனமாக வந்த பாய், ஐயாவின் புகைப்படங்கள், அழகிய வேலைப்பாடுகள் உடைய புகைக்கும் பைப், அய்யா சேர்த்து வைத்த சித்த மருத்துவச் சுவடிகள், பழைய பதிப்பில் வெளிவந்த அரபளீசுவர சதகம் என சகட்டுமேனிக்கு அரித்துத் தீர்த்தது. ஒவ்வொரு நாள் விடியும் போதும் இன்று எங்கிருந்து கரையான் புறப்படும் எனும் பய பீதியுடனே விடியும். பள்ளிக்குச் செல்வதற்கு முன் சுற்றிச் சுற்றி பார்த்துவிட்டுதான் செல்வான். மாலை வீடு வந்தவுடன் செந்திக்கு சாமான்களை திரும்ப அடுக்கி முடிப்பதற்கே எட்டு மணியாகிவிடும். அப்பத்தா ஆயாசமடைந்து நொந்து போவாள். மண்ணெண்ணெய் கலந்த நீரில் வாசல் தெளித்தார்கள். தூரிகையால் சுவற்றை ஒட்டி மண்ணெண்ணெய்யில் முக்கித் தீட்டினான். எலி விளக்குத் திரியை இழுத்து போட்டால்கூட வீடே பற்றிக்கொண்டு எரிந்து சாம்பலாகியிருக்கும்.  பர்மா தேக்குகளும் பிர்மிங்காம் இரும்பும் உருகி உருவழிந்துவிடும். நீரை அஞ்சிய இம்மக்கள் நெருப்பை அஞ்சவில்லை போலும். மரத்தை இழைத்து மாளிகை எழுப்பியிருக்க மாட்டார்கள். கரையான் மண்ணுக்குள் ஒரு தீக்கங்கைச் சுமந்து கொண்டு திரிகிறது.

 மண்ணெண்ணெய் காய்ந்து மூன்று நாட்களில் கரையான் மீண்டும் பெருகி வந்தது. மண்ணுக்குள்ளிருந்து ஒரு முடிவற்ற ராணுவம் எழுந்து வருகிறது. அவனுடைய கனவுகளில் கரையான்கள் வரத்துவங்கின. சுவடிகளில் ஊரும் கரையான்கள் பூதக்கண்ணாடியை சுமந்துக்கொண்டு எழுத்துக்களில் ஊர்ந்தன. என்றோ எப்போதோ தொலைத்த எழுத்துக்களை தேடித் தேடி உண்டன. அல்லது ஒவ்வொரு கரையானும் ஒரு வாக்கியத்தை நிரப்புவதற்கு உரிய சொற்களை தேடித்தேடி உண்கின்றன.  தங்க சரிகை பின்னிய சிவப்பு பட்டு புடவையை அணிந்துகொண்டு ஆடிக்கு முன் நின்றது ஓர் ஆளுயர கரையான். நாணத்துடன் முந்தியை வாயில் செருகி மெல்ல மொத்த சேலையையும் விழுங்கியது. ஒரு குண்டு புத்தகத்தின் நடுபக்கத்தில் இரண்டு தாள்களிலும் கவச உடையணிந்த கரையான்கள் ஒன்றையொன்று மூர்க்கமாக தாக்க துவங்கின. இதன் தாளை அது திண்பதும். அதன் தாளை இது தின்பதுமாக மாற்றி மாற்றி ஆக்கிரமித்தன. அவை அவனுடன் பேச துவங்கின. அவனறிந்த மனிதர்களின் உருவை ஏற்றன. எப்போதும் அவனுடலில் அவை ஊறிக்கொண்டிருந்தன.. செவிவழியாக, மூக்கு வழியாக அவன் மூளைக்குள் நுழைந்தன. இரவுகளில் பற்களை நறநறவென கடித்தான், உரக்க பிதற்றினான்.  

முகப்பில்  இருக்கும் பவளமல்லி வேரில் கரையான் ஏறியது. அம்மா ஆசையாக வைத்தச் செடி என்பாள் அப்பத்தா. சின்னஞ்சிறிய அழகிய பூ. வெள்ளை இதழ்களும் சிவந்த அடித்தண்டும். காலையில் எழுந்து போனிமையாக பொறுக்கி எடுத்து நீரில் போட்டு வைத்து ஒவ்வொன்றாக நூலில் தொடுப்பாள். அத்தனை அழகு. ஒவ்வொருநாளும் பூக்கள் குறைந்தன. இலைகள் காய்ந்தன. வாடிய இலைகள் கிளையிலிருந்து உதிரக்கூட தெம்பில்லாமல் ஒட்டிக் கிடந்தன. வேப்பெண்ணெய்க் கசடை வேரில் ஊற்றினான். கொஞ்சம் எடுத்து பட்டையிலும் தடவினான். மறுநாள் மீண்டும் இலைகள் துளிர்த்தன. நம்பிக்கையடைந்தான். மீண்டும் கசடை தெளித்தான். மூன்றாம் நாள் கரையான் மறுபக்கம் பட்டையில் ஏறியது. இந்தமுறை இன்னும்  உக்கிரமாக. நடுத்தண்டு வரை. அவனுக்கு பித்தேறியது. இம்முறை வேரில் மண்ணெண்ணெய் ஊற்றினான். பட்டைகளில் தடவினான். காலை மேலும் இலைகள் பட்டுப் போயின. எப்படியாவது பிழைக்க வைக்க வேண்டும். செய்வதறியாது தவித்தான். ஒரேநாளில் கரையான் பச்சைத்தண்டை சுள்ளியாக்கியது. ஒரேயொரு கிளை மட்டும் காயாதிருந்தது. அதை மட்டும் வெட்டி வைத்துக்கொண்டு பொறுக்க முடியாமல் மரத்தை வேரோடு ஆட்டினான். ஒரே உலுக்கில் சாய்ந்தது. அடி வேரில் கரையான்கள் வெள்ளை மூக்குடன் அலமளந்து கொண்டிருந்தன. ஆத்திரம் தீர மண்ணெண்ணெய் ஊற்றி அங்கேயே கொளுத்தினான். மூன்றிரவு அவன் உறங்கவில்லை.    

புதுகோட்டையிலிருந்து கரையான் மருந்தடிப்பவர்கள் வந்தார்கள். ஓரடிக்கு ஓரடி துளையிட்டு மருந்தை செலுத்தினார்கள். ஒரு வாரத்திற்கு எந்த தொந்திரவும் இல்லை. நிம்மதியாக இருந்தது. கரப்பான்கள் ஆங்காங்கு செத்து மிதந்தன. பத்து நாளில் செத்து விழுந்த பல்லிகளை எறும்பு மொய்த்து சாமியறையில் துர்நாற்றம் வீசியது. பின்கட்டில், முற்றத்தில், மாடியில், என பல்லிகள் செத்து விழுந்தன. அங்கணத்தில் ஒரு எலி அசைவற்று வாய் பிளந்து கிடந்தது. பின்கட்டு சாக்கடையில் இரண்டு எலிகள் செத்து கிடந்தன. மறுநாள் மரப்படிக்கு கீழ் இரண்டு எலிகள் செத்து கிடந்தன. மீனா வளர்த்த சாம்பல் நிறத்து பூனை செத்து விரைத்திருந்தது. “பூச்சியண்டாத எடத்துல மனுஷன் வாழக்கூடாது ராசா” என அப்பத்தா புலம்பத் துவங்கினாள். காற்றிலும் சுவரிலும் நஞ்சு சூழ்ந்தது. 

அந்தவருடம் மழையின்றி கிணற்றில் நீர்வற்றியது. அறுபதடிக்கு கிணற்றுக்குள் இறங்கிய ஆழ்துளைகிணறு கூட தூர்த்துவிட்டது. கிணற்றுக்குள் இறங்கிச் சென்று தூரெடுக்க பழனி இருவரை கொத்தமங்கலத்திலிருந்து அழைத்து வந்திருந்தான். மூச்சு முட்டி சடலமாக மேலே வந்தான் அதிலொருவன். 

பனிரெண்டாம் வகுப்பு பரீட்சை முடியும்வரை சின்னையா சேனா சூனா வீட்டிற்கு மாறினார்கள். அப்பத்தா சாகும்வரை அங்குதான் இருந்தாள். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது சாகக் கிடந்து இழுத்து கொண்டிருந்த அப்பத்தாவை அங்கே கொண்டு போய் ஓரிரவு வைத்திருந்தார்கள். அதன் பின்னர்தான் மூச்சடங்கியது. அப்பா, அம்மா, அய்யா, கடைசியாக அப்பத்தா எனச் சில வருடங்களுக்குள் தொடர்ந்து கேதங்கள். எஞ்சியது அவன்  மட்டுமே. அய்யாவின் அப்பா பர்மாவிலும் சிங்கப்பூரிலும் சென்று சேர்த்து கட்டிய வீடு. 

இரவும், மழையும் வெயிலும் சகஜமாக வந்துபோகும் வீடு. பால்யத்தின் ஏக்கங்களையும் நினைவுகளையும் தேக்கி வைத்திருக்கும் வீடு. மனிதர்களை விழுங்கிய புதைகுழியாகி கிடந்தது. 

அப்பத்தாவின் காரியம் முடிந்தவுடன் இரண்டு பைகளில் தனக்கு வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு அந்தப் பெரிய வீட்டை நினைவில் சுமந்தபடி இனி ஒருபோதும் திரும்புவதில்லை எனும் உறுதியுடன் அங்கிருந்து வெளியேறினான். 


4

உடல் மெலிந்து கோடுகளாக துருத்தி நின்றதாலோ என்னவோ மாட்டின் தலை மட்டும் பெரிதாக இருந்தது. மூட்டை முடிச்சுகளுடன் மாட்டை ஓட்டிக்கொண்டு போய் புளியமரத்தடியில் அவர்கள் நின்றனர். நாலைந்து பிள்ளைகள் செம்மண் பொட்டலில் ஓடியாடிக் கொண்டிருந்தார்கள். சிறிய மேடையின் மீதிருந்த பீடத்தின் மீது நேற்றைய மாலை காய்ந்து கிடந்தது. இரண்டு புதிய எலுமிச்சைகள் சூலத்தில் செருகியிருந்தன. கரி படிந்த மூன்று செம்பறான் கல் கொண்ட அடுப்பு அருகே சாம்பல் படிந்து உச்சி வெயிலில் உறங்கியது. அம்பலம் மாட்டை புளியமரத்தில் கட்டினார். மூன்று பிள்ளைகளும் அவருடைய மனைவியும் மூட்டை முடிச்சுகளை இறக்கி வைத்துவிட்டு நிழலில் அமர்ந்தார்கள். சோலச்சி கைவைத்த இடத்திற்கு கீழே கரையான் ஊறிக் கொண்டிருந்தது. முட்டியில் முகம் புதைத்து அமர்ந்தார். 

பூசாரி பாண்டி அள்ளி முடிந்த நீண்ட வெண்குழலுடன் குளத்திற்கு சென்று நடுவிலிருக்கும் கிணற்றில் வாளியை விட்டு வெண்கலப் பானையில் நீர் மொண்டு வந்தார். “என்னண்ணே  இம்புட்டு நேரம் காக்க வெச்சுடீக... இனி அடுப்ப மூட்டி சக்கர சாதம் போட்டு... ரவைக்கிதான் முடியும்” என்று அலுத்துக் கொண்டார். சொக்கையா அம்பலம் மவுனமாக நின்றிருந்தார். கண்கள் குருதி வரியோடிச் சிவந்திருந்தன. உதடுகள் துடித்தன. 

இரண்டு வருடங்களுக்கு முன் சொக்கையாவின் மகளை இருமதியில் கட்டிக் கொடுத்தார். அதற்காக காவன்னா லேனாவிடம் கொஞ்சம் ரொக்கம் வட்டிக்கு வாங்கியிருந்தார். வெள்ளாமை முடிந்தவுடன் திருப்புகிறேன் என வாக்களித்தார். வானம் பொய்த்தது. வெள்ளாமையும் நட்டம். அடுத்த போகம் விதைக்கவே இல்லை. இந்த ஆண்டு குடிக்கவே தண்ணியில்லை. காவன்னா லேனா ஆள் மீது ஆள் அனுப்பினார். கையிலிருந்த ரொக்கம் எல்லாம் கொடுத்து, நகையெல்லாம் விற்றும்கூட அசலை நெருங்க முடியவில்லை. அவரைப் பார்த்து கொஞ்சம் அவகாசம் கேட்டு வரச்  சென்றார். 

“வாங்க அம்பலத்தாரே. இப்புடி உக்காருங்க” என்று அழைத்து உட்கார சொன்னார். கனத்த உடலில் மகர கண்டியும் தங்கப்பூண் போட்ட ருத்திராட்சமும் அணிந்து அவர் குலுங்கிச் சிரிப்பதை பார்க்க வேடிக்கையாக இருக்கும். எப்படியும் சுளுவில் முடிந்து விடும் என சொக்கையா நம்பினார். எத்தனையோ வருட பழக்கம் அவர்களுடையது. வரக்காப்பி கொண்டு வரச் சொன்னார். போட் மெயிலில் கொழும்புக்கு சென்று வந்த கதையைக் கூறினார். சிநேகமாகச் சிரித்து பழங்கதைகள் பேசினார்.  அவர்கள் இருவரும், ஊரார் பலரும் புழங்கிய ரங்கம்மாவை பற்றி பேச்சு வந்தது. சிங்கப்பூர் லேவாதேவி கடையை கவனிக்க மகன் சென்றிருக்கிறான் என்பதால் இனி இங்குதான் இருக்கப் போவதாக சொன்னார். சொக்கையா தருணம் பார்த்து தனது பேச்சை எடுக்க முயலும்போதெல்லாம், “அது கெடக்கட்டும்” என பேச்சை மாற்றி வேறேதோ விஷயங்களுக்குப் போய் விடுவார். சரி இன்று சரிப்படாது என புரிந்துகொண்டு சொக்கையா கிளம்ப யத்தனித்தபோது. “அட உக்காருங்க போவலாம்... என்ன அவசரம்” எனச் சொல்லி அவருடன் சுடுசோறு சாப்பிட அமர்த்தினார். வெயில் தாழ்ந்து விளக்கு வைக்கும் நேரம் வந்தது. 

காவன்னா லேனாவின் ஆளோடு சோலச்சி அரக்கப் பரக்க ஓடி வந்தாள். சொக்கையாவைக் கண்டதும் கதறி அழுதாள். அங்கேயும் இங்கேயுமாக ஒரு தொகையை பிரட்டி சேலையில் முடிந்ததை காவன்னா லேனாவின் முன் கொட்டினாள். பொறுமையாக எண்ணிப் பார்த்துவிட்டு “வட்டிக்கே காணாது” என்று வாங்க மறுத்து விட்டார். சொக்கையா நிலைமையை புரிந்து கொண்டார். நிலத்தை எழுதிக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டதன் பேரில் வீட்டுக்கு வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தார். “சாவகாசமாக வாரும். எனக்கும் பொழுது போகணுமே” என்றார். 

சொக்கையாவிற்கு அவமானம் தாங்கவில்லை. ஊருக்குள் பேச்சாவதற்கு முன் எங்காவது கிளம்பிவிட வேண்டும் என அவசரம் அவசரமாக மூட்டை முடிச்சுகளை கட்டினார்.  

அன்று எட்டாம் நாள் திருவிழா அவருடைய மண்டகப்படி. எப்போதும் அமர்க்களப்படும். இந்த வருடம் எதுவும் பெரிதாக செய்ய முடியாது. குறைந்தது இரண்டு படி சக்கரை சோறும் ஒரு படி சுண்டலும் போட்டுவிடலாம், எதாவது ஏற்பாடு செய்துவிட்டு வருகிறேன் என பூசாரியிடம் உறுதியளித்திருந்தார். ஆனால் அதற்குள் நிலைமை தலைகீழாகும் என அவர் எண்ணவில்லை. 

நேற்று இரவு இருமதியிலிருந்து தகவல் வந்தது. கழிசலில் பெண் இறந்துவிட்டாள் என்று. கால் தளர அப்படியே சிலைந்து அமர்ந்தார். பூசாரியிடம் தளர்ந்த குரலில் மகள் இறந்ததை சொல்லிக்கொண்டிருந்த போது, சோலச்சி அமர்ந்திருந்த இடத்திலிருந்து கரையான் நெளிந்து கொண்டிருந்த கைப்பிடி மண்ணை அள்ளிக்கொண்டு விடுவிடுவென பீடத்தை நோக்கி சென்றாள். கூந்தலை அவிழ்த்தாள். கண்கள் செம்மண் குட்டையைப்போல் கலங்கியிருந்தன. பீடத்தின் முன் மண்டியிட்டு கையை பக்கவாட்டில் விரித்தாள். 

“நீயெல்லாம் ஒரு ஆத்தாவா... தூ... இப்புடி எங்கள அழிச்சிப் போட்டியே... ஒனக்கெல்லாம் பூச ஒரு கேடா... ” என கையிலிருந்த மண்ணை பீடத்தின் மீது இறைத்துத் தூற்றிவிட்டு விடுவிடுவென அங்கிருந்து சென்றாள்.  

5

ஒவ்வொரு  அறையைத் திறக்கும்போதும் அவன் கைகால்கள் அசைவற்று குளிர்ந்தன. உச்சியிலிருந்து வியர்வை வழிந்தது. “இங்குதான்.. இங்குதான்” எனத் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆனால் எல்லா அறைகளும் துப்புரவாக இருந்தன. அவன் எதிர்பார்த்ததுபோல் எதுவுமே இல்லை. ஜே.சி எனும் ஜெயச்சந்திரனுக்கு பிடித்துப் போனது. அறைகளில் வெளிச்சம் மட்டும் குறைவு எனினும் பார்த்துக் கொள்ளலாம் என்றான். அங்கு வந்த அன்றே “இப்பலாம் கரையான் வர்ரதில்லையா அக்கா?” எனக் கேட்டான். “என்ன மாய மந்திரமோ... நீ போனப்புறம் நாங்க ஒருநா  கூட கரையானப் பாத்ததில்ல தம்பி” என்றாள். 

கனடாவிற்கு நிரந்தரமாகப் பெயர்வதற்கு முன் வீட்டிற்கு ஏதேனும் ஒரு வழி செய்துவிட வேண்டும் என விரும்பினான். அதற்காகத்தான் செந்தியின் அலுவலக சகா பிஜு அவனுடைய நண்பன் ஜெயச்சந்திரனை கொச்சியிலிருந்து அழைத்து வந்திருந்தான். ஜெயச்சந்திரனுக்கு அலப்பெயிலும் வயநாட்டிலும் சொகுசு விடுதிகள் உண்டு. ஏற்கனவே இப்பகுதியில் உள்ள மூன்று நான்கு சொகுசு விடுதிகள் ஓரளவு நன்றாக ஓடுவதால் இவ்வீட்டையும் அப்படி ஆக்க முடியுமா என நோக்கினான். மற்ற விடுதிகள் குத்தகைக்கோ வாடகைக்கோதான் விட்டிருந்தார்கள். பெரிய தொகையை கொடுத்து வாங்குவதற்கு யாரும் தயாரில்லை. ஜெயச்சந்திரன் மட்டுமே வாங்குவதற்கு முன் வந்தான். “இவுட ரிசெப்ஷன்... கெஸ்ட் வெயிட்டிங் ஹால்... அவுட ஒரேயொரு எல் ஈ டி “ என்று வரைபடம் போட்டுக்கொண்டிருந்தான். அவ்வப்போது வழுக்கைத் தலையை நீவிக் கொண்டான். மீனா சமைத்துக் கொடுத்த செட்டிநாடு சிக்கன் அவனுக்கு பிடித்துப் போனது. விரும்பினால் அவர்கள் இங்கேயே தங்கி விருந்தினருக்கு செட்டிநாட்டு உணவுகளை சமைத்துக் கொடுக்கலாம் என்றான். செந்திக்கு நிம்மதியாக இருந்தது. அக்காவை எப்படி வெளியே போகச் சொல்வது எனக் குழம்பிக் கொண்டிருந்தான். திருமயத்தில் பாட்டில் கம்பெனிக்கு அவ்வப்போது வேலைக்குப் போவதாக சொன்னாள். இங்கு நிச்சயம் நல்ல சம்பளம் தருவார்கள். வெளிநாட்டுக்காரர்கள் விரும்பி கொடுக்கும் டிப்ஸ் வகையறாவில் அவள் பங்கிற்கு கவுரவமான தொகை கிடைக்கும். 
பிஜு காதருகே கிசுகிசுத்தான், “எல்லாமே ஓகே ப்ரோ... சொட்டை இஸ் ஹேப்பி... டாக்குமெண்ட்ட மட்டும் கொடுத்தா வக்கீல் கிட்ட பேசிட்டு அடுத்த விஷயத்துக்குப் போலாம்னு சொல்றான்”.

பத்திரம் சின்ன ஐயா வீட்டில் இருந்ததாக நினைவு. அவர்கள் யாரும் இப்போது இங்கு இல்லை. மதுரையில் அவர்களைப் போய் பார்த்து வரலாம் என்றால் திருமணச் சங்கதிகளை பேச ஆரம்பித்துவிடுவார். அமெரிக்காவில் இருக்கும் அவர்களின் பேரன் வீரப்பனிடம் பேசிப் பார்க்கலாம் என அழைத்திருந்தான். வீட்டில் பேசி பத்திரம் அவர்கள் வீட்டிலேயே வெள்ளிச் சாமான் அறையில் இருப்பதாக சொன்னான். சாளரமற்ற இறுக்கமான அறை. பாதுகாப்புப் பெட்டகம் போல் முக்கியமான பொருட்கள் எல்லாம் அங்குதான் வைப்பார்கள். கனமான சுவர். வந்ததிலிருந்து அந்த ஒரு அறை அவன் நினைவில் எழவே இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. அந்த அறையின் சாவி மட்டும் சற்றே வேறு மாதிரி இருக்கும். கொத்துச் சாவிகளில் அது இல்லை. மீனாவுக்கும் தெரியவில்லை. சின்ன அய்யாவுக்கும் நினைவில்லை. ஒவ்வொரு அறையாகத் தேடினான். எங்குமே கிடைக்கவில்லை. ஜே.சி ஆசுவாசப்படுத்தினான். பதட்டப்பட வேண்டாம் என்றான். கொஞ்சம் நிதானமாக பார்க்கலாம் என்றான். ஆனால் அதற்குரிய அவகாசம் அவனுக்கு இல்லை என்பதை அவனுக்கு புரிய வைக்க இயலவில்லை. ஓய்ந்து குழம்பியமர்ந்தான். பெரிய கல்லைக் கொண்டு ஓங்கி அடித்துப் பார்த்தான். ஒன்றுமே ஆகவில்லை. பூட்டுக்காரனை வரச்சொன்னான். நீண்ட நாட்களாக திறக்காததால் உள்ளே எல்லாம் பிணைந்து கிடக்கிறது. இந்த சாவி – பூட்டு அமைப்பை உடைப்பதும் கடினம் என்றான். 

செந்தி ஒரு இடம் விடாமல் தேடி ஓய்ந்தான். அறுவை இயந்திரத்தைத் தருவித்து பிளந்து விடலாம் என முடிவுக்கு வந்தான். அக்கதவில் அழகிய லக்ஷ்மி செதுக்கப்பட்டிருந்தாள். ஜே.சி பொறுமை காக்கச் சொன்னான். இதன் கலை மதிப்பு உனக்குத் தெரியாது. நாம் இதற்கு எந்த சேதமும் விளைவிக்கக் கூடாது. அவசரப்பட வேண்டாம். ஏதாவது வழியிருக்கும் என்றான். 

ஏதோ நினைவு வந்தவனாக பரபரத்தான். வளவு சுவற்றில் மாட்டியிருக்கும் படங்கள் சட்டத்திலிருந்து நீண்டிருக்கும். அதன் பின்புறங்களில் தேடினான். சட்டையணியாத பருத்த உடலுடன் திண்ணையில் அமர்ந்திருக்கும் தாத்தாவின் புகைப்படத்திற்கு பின் அந்த சாவி இருந்தது. அதை எடுத்துக்கொண்டு ஓடினான். அறையைத் திறக்க முயன்றான். சாவி திரும்பவில்லை. இறுகியிருந்தது. ஜே.சி, பிஜூ, மீனா, கார்த்திகா என அனைவரும் அவன் ஓடுவதைக் கண்டு பின்தொடர்ந்தார்கள். குந்தியமர்ந்து சாவித்துளையை நோக்கினான். தூர்த்திருந்தது. கார்த்திகா விளக்கமாற்று ஈர்குச்சியை எடுத்து வந்து கொடுத்தாள். காத்திரமாக இருக்கும் அதன் பின்புறத்தை துளையில் விட்டுக் குத்தினான். ஈர்க்குச்சி மேல் ஏறி ஒரு வெள்ளை மூக்கு கரையான் ஊர்ந்து வெளியே வந்தது. விளக்கைப் போடச் சொன்னான். கணநேரம் பொன்னிறத்தில் மின்னி அணைந்த குண்டு பல்பு வெளிச்சத்தில் அறையை நிரப்பிய பிரம்மாண்டமான புற்று சாவித்துளையில் தென்பட்டு மறைந்தது. 

  


Sunday, September 16, 2018

யுகசந்தியின் கலைஞன்: கூந்தப்பனையை முன்வைத்து

கடந்த மாதம் வல்லினம் இதழில் வெளியான கட்டுரை.

கூந்தப்பனைதேர்ந்த எழுத்தாளன் உலகை உன்னிப்பாக கவனிக்கிறான். நாம் அன்றாடம் புழங்கும் வெளியில் நாம் கவனிக்கத் தவறிய ஏதோ ஒன்றை புலனுக்கு உணர்த்தும்போது நம்முள் ஒரு சன்னமான வியப்பு மேலிடுகிறது.“இந்த உலகம் எனக்கும் நன்கு பரிச்சயமானதுதான்.இதை ஏன் நான் கவனிக்கவில்லை?” அறிந்த உலகில் அறியாத ஒன்றைக் காட்டுகிறான். இந்த நம்பகத்தன்மையும் அணுக்கமுமே வாசகன் எழுத்தாளனின் உலகில் நுழைவதற்கான மந்திரவாசல். ஒரு கசகசப்பான பேருந்து பயணத்தின் ஊடாக மொத்த வாழ்வையும் சித்தரித்துவிட சு. வேனுகோபாலால் முடிகிறது.

பதாகை இணைய இதழில் சில ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சு. வேணுகோபால் சிறப்பிதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்று கட்டுரைகளை தொகுத்திருக்கிறேன். ‘ஆட்டம்’ ‘நிலம் எனும் நல்லாள்’ ஆகிய நாவல்களைக் கொண்டு ஒரு கட்டுரையை அப்போது எழுதி இருந்தேன். கூந்தப்பனை குறுநாவல் தொகுப்பை முன்வைத்து சு. வேணுகோபாலின் மொத்த படைப்புலகைப் பற்றிய சில அவதானிப்புக்களை இக்கட்டுரையில் எழுத முயல்கிறேன்.

2001ஆம் ஆண்டு வெளியான ‘கூந்தப்பனை’ தொகுப்பு(தமிழினி வெளியீடு) – ‘கண்ணிகள்’, ‘வேதாளம் ஒளிந்திருக்கும்’,  ‘அபாயச் சங்கு’,  ‘கூந்தப்பனை’ ஆகிய நான்கு குறுநாவல்களை கொண்டது. இத்தனை ஆண்டுகளில் பல்வேறுவிதமான வாசிப்புகளும் விமர்சனங்களும் இக்கதைகளுக்கு கிடைத்திருக்கும். இலக்கியம் சமகாலத்தைப் பேச வேண்டும், எக்காலத்திற்கும் உரியதைப் பேச வேண்டும் என்பதாக பன்னெடுங்காலமாக விவாதங்கள் நடந்துவருகின்றன. வேணு சமகால சித்தரிப்புகளின் ஊடாக காலதீதத்தை நோக்கிப் பயணிக்க முயற்சிக்கிறார். காமமும், அகங்காரமும், கருணையும் வழியும் கதைமாந்தர்களை உலவவிடுகிறார்.

‘கண்ணிகள்’ ஒரு புதிர் விளையாட்டைப் போல்ஒரு வாயிலை திறந்து பல பாதைகளில் ஒன்றை தேர்ந்து, இறுதியாக அனைத்து பாதைகளுமே பாதாளத்தில் முட்டி நிற்குமாறு அமைக்கப்பட்ட புதிர்ப்பாதை (maze). எல்லா பாதைகளிலும் ஆளுண்ணும் பூதங்கள் வாய்பிளந்து காத்திருக்கின்றன. மனிதன் எங்குதான் செல்ல முடியும்? ஜின்னிங் தொழில் துவங்கி விவசாயக் கூலியாள் கிடைக்காமல் வேளாண்மை நட்டமாகி பயிரிடுவதை நிறுத்திவிட்டு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றுகிறார் ரங்கராஜன். ஆனால் காய்கள் சூம்பி விடுகின்றன. பிள்ளையின் படிப்புச் செலவுக்கு கந்து வட்டி வாங்கி திருப்ப முடியாமல் நிலத்தை எழுதிக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அவர்களிடமிருந்து நிலத்தை மீட்க அவர் எடுக்கும் மற்றொரு முயற்சியின் இறுதியில் மதம் மாற வலியுறுத்தப்படுவதோடு கதை முடிகிறது. இந்தக் கதையின் பொருட்டு குறிப்பாக அதன் முடிவின் பொருட்டு வேணு கடுமையாக விமர்சிக்கப்பட்டிருப்பார். வாழ்வாதாரத்திற்காக தன் அடையாளத்தை தொலைத்தல் என்பதே இக்கதையின் மையம். உடைமைகள், உறவுகள் என ஒவ்வொன்றாக அவரிடமிருந்து வாழ்க்கையின் புதிராட்டம் பிடுங்கிக் கொள்கிறது. எளிய மதச் சிக்கலாக கதையை குறைத்து புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் இதே தொகுப்பில் உள்ள மற்றொரு கதையான கூந்தப்பனையில் ஒரு தேவாலயத்தின் அருகே அமர்ந்து கதை நாயகன் புலம்புவான்,“எத்தனைமுறை கேட்டிருப்பேன்? தரவில்லையே இறைவா! நீ ஒரு இந்துவுக்கு தரமாட்டாயா? இந்த சன்னிதானத்தில் சொல்கிறேன். எனக்கு அதை ஒரே ஒருமுறை போதும் – தந்து எடுத்துக்கொள். மதம் மாறி உன் பாதங்களில் கிடக்கிறேன்”. “கண்ணிகள்” வலிமிகுந்த வீழ்ச்சியின் சித்திரத்தைச் சொல்கிறது.

“வேதாளம் ஒளிந்திருக்கும்” தொகுப்பில் சற்றே இலகுவான கதை. நுண்சித்தரிப்புகள் வழியே கதை நகர்கிறது. அடிக்கடி சண்டையிட்டு அற்ப காரணங்களுக்காக பிரிந்து செல்லும் தம்பதிகளை சேர்த்து வைக்கும் சங்கடமான பணியை கதைநாயகன் எப்படியோ ஏற்றுக் கொண்டு விடுகிறான். எனக்கு இத்தொகுதியின் சிறந்த கதையாக இக்கதையே தோன்றியது. பேருந்துப் பயணத்தின் ஊடாக விசுவநாதனின் பார்வையும் பின்னர் அவனுடைய மனைவி ஈசுவரியின் பார்வையும் ஒன்றையொன்று நிரப்பும் வண்ணம் எளிய உரையாடலின் வழியே கடத்தப்படுகின்றன. விசுவநாதனுக்குள் உள்ள வேதாளத்தை ஒளித்துக்கொண்டுதான் ஈசுவரியை அழைக்க செல்கிறார்கள். கதைசொல்லிக்கு சர்வ நிச்சயமாக விசுவநாதனின் வேதாளம் வெளிப்படும் என்பது தெரிந்திருக்கிறது. கதையின் மற்றொரு நுட்பமான தளம் என்பது ஈசுவரியின் கூற்றுக்கள் வழியாக கதைசொல்லி தனக்கும் தன் மனைவிக்குமான உறவை பரிசீலனை செய்வது. இறுதியில் தனக்குள்ளும் ஒரு வேதாளம் இருப்பதை கதைசொல்லி கண்டுகொள்கிறான். சற்றே தேவைக்கு அதிகமாக விவரிக்கப்பட்டதாக தோன்றும் பேருந்துப் பயணம் என்பது அவன் தனக்குள் நிகழ்த்திக் கொள்ளும் பயணமும்கூட.  இக்கதையில் மெல்லிய அங்கத தருணங்கள் இழையோடி வாசிப்பின்பத்தை அளிக்கின்றன. மனைவியை சமாதானம் செய்து அழைத்துவர பெரும் குடிகாரனான விஸ்வநாதன் கதைசொல்லியைச் சந்திக்கும் தருணத்தில் “விஸ்வநாதர்களுக்கு இந்த மாதிரி சமயங்களில் பவ்யம் பிச்சு உதறுகிறது” என்று எழுதுகிறார். கதைசொல்லி வீட்டை அடைந்து உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியை வழமைப்போல் எழுப்பாமல் தானே உண்டு தட்டைக் கழுவி வைத்ததும் தூக்கம் முழிக்கும் மனைவி அவனுடைய வினோத நடத்தையை கண்டு குடித்திருக்கிறானோ என்று சந்தேகிப்பது சிறந்த இருள் நகைச்சுவை. “ஒன்ன வெட்டாட்டியும் ஒம் பிய்ய வெட்டுவேங்குற கததான்” எனும் சொலவடையை வெவ்வேறு சூழல்களுக்கு எண்ணி எண்ணி பொருத்திக்கொண்டேன்.

“அபாயச் சங்கு” சுருளி குடும்பத்துடன் இடம் பெயர்ந்து விவசாயத்தை விடாப்பிடியாக செய்து வருகிறார். சுரேந்திரன் எதிர்வீட்டு பெண் மீது காதல் கொள்கிறான். அவள் அவனைக் கைவிடும்போது காமத்தில் தன்னை அமிழ்த்திக் கொள்கிறான். ஒட்டுமொத்தமாகவே உக்கிரமான வீழ்ச்சியின் சித்திரத்தைச் சொல்கிறது கதை. இந்தக் கதையில் சுரேந்திரன் – கோகிலா, சுரேந்திரன் – ரத்னமணி உறவு சார்ந்து பிரதானமாக கதை நகர்ந்தாலும் சொல்லப்படாத ஊக இடைவேளியில் சுரேந்திரன் – கனகா சார்ந்த திரியும் ஓடுகிறது. ஒருவகையில் அவனால் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு தொந்தரவு செய்கிறது.கோமதி பெரியம்மாவின் குடும்பக் கதை கதைக்கொரு கூடுதல் அடர்த்தியை அளிக்கிறது. நில உடமையாளனும் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவனும் ஏறத்தாழ ஒரே விதியை சென்றடைகிறார்கள். சுரேந்திரன் வாழ்விலிருந்து தப்பிச்செல்லும் முடிவை எடுக்கும் முன்னரே முதலாளி வீட்டு பாஸ்கரன் கடிதம் எழுதிவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி செல்கிறான். “அபாயச் சங்கு” யாருக்காக?எதற்காக? என்றொரு கேள்வியை இந்தச் சூழலைப் பொறுத்தே எழுப்ப முடியும். வேளாண்மையும் கிராமங்களும் இங்கே செத்து அழிகிறது என்பதற்கான அபாயச் சங்கு இது.எளிய உரையாடல் வழியாக சமூக மாற்றங்களை அவதானித்து தன் கதைகளில் இயல்பாக கொணர்வதில் வேணு தேர்ந்தவர். வேளாண்மையின் நசிவு மற்றும் நிரந்தர அரசு வேலையின் மீதான ஈடுபாடு, அதன் பொருட்டு சாதிகூட இரண்டாமிடத்திற்கு சென்றுவிடுகிறது. சுருளியப்பனின் பாத்திரமும் அம்மாவின் பாத்திரமும்கூட முக்கியத்துவம் பெறுகின்றன. மொழியாலும் கூர்மையான உணர்வு வெளிப்பாடுகளாலும்  இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது.

தொகுப்பின் இறுதி கதையான “கூந்தப்பனை” தமிழில் எழுதப்பட்ட முக்கியமான கதைகளில் ஒன்றாக விமர்சகர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. கதை ஒரு அசாதாரண சூழலை கற்பனை செய்து பார்க்கிறது. அந்தச் சூழலில் மனித மனம் எப்படி செயல்படும் என்று சிந்தித்துப் பார்க்கிறது. பிள்ளைப் பேறு அற்றவர்களின் கதைகள் நாமறிந்தவைத்தான், ஆனால் ஆண்மையற்றவனின் கதை அவனுடைய கோணத்தில் விரிவது தமிழுக்கு இக்கதை வந்தபோது புதிய களமாக இருந்திருக்கும். சதீஷின் தத்தளிப்புகளும் சீற்றங்களும் வாசகனை வெகுவாக அலைக்கழிப்பவை. திடகாத்திரமான கதைநாயகன் சதீஷ் அவனுடைய உடற்கட்டின் காரணமாக எந்தப் பெண்ணையும் தன்னை நோக்கி திரும்ப செய்பவன்.


வேணுவின் பல பாத்திரங்கள் பெரும்பாலும் திடகாத்திரமான உடலுடையவர்களாகவும் இருக்கிறார்கள். பாலியல் சித்தரிப்பில் விரசத்திற்கும் கலைக்குமான சன்னமான கோடு உள்ளது. தண்டவாளத்தில் சைக்கிள் ஓட்டுவதைப் போன்று அந்த கோட்டில் பயணிக்கிறார். சில இடங்களில் தவறினாலும் பெரும்பாலும் கச்சிதமாக இருக்கிறது அவருடைய அகமொழி. இந்தக் கதையின் புறச் சித்தரிப்பைப் பற்றியும் சொல்ல வேண்டும். நீர் ஒரு பெரும் படிமமாக கதையில் விரிகிறது. நீர் மரபில் இனப்பெருக்க வளத்தின் குறியீடு. சோமனாக சுக்கிலமாக நீரே கொண்டாடப்படுகிறது. கதை முடிவில் சதீஷ் அடையும் தரிசனம் நீரைக் கொண்டு அபாரமாக வெளிப்பட்டுள்ளது. வேணு தன் கதைகளில் மரபான படிமங்களை அதே பொருளில் பயன்படுத்துவதற்கு தயங்கியதில்லை. நிலம் எனும் நல்லாளில் நிலம் பெண்ணாக உருவகப் படுத்தப்படுகிறாள். கூந்தப்பனையில் இறுதிக் காட்சியில் நீரை கண்டடையும் வரை அனைத்துமே வறட்சியாக காய்ந்து கிடக்கின்றன.

கூந்தப்பனை காட்டும் சூழல் முதலில் நம்பகத்தன்மை சார்ந்த கேள்வியை எழுப்பியது. இப்படியொரு வாழ்க்கை சாத்தியமா? நண்பன் மற்றும் மனைவியின் மனமாற்றம் போதிய வலுவுடன் சித்தரிக்கப்படவில்லையோ எனத் தோன்றியது. ஆனால் வாசிக்க வாசிக்க இது எங்கோ நடந்து கொண்டிருக்கும், நடக்கச் சாத்தியமுள்ள நிகழ்வும்கூட என்ற எண்ணம் வலுவடைந்தது. மேலும் புனைவெழுத்தாளன் ஒரு சன்னமான சாத்தியத்தை ஊதிப் பெருக்குபவன், ஆகவே நடைமுறைச் சாத்தியத்தைப் பற்றிய கேள்விகளுக்கு பொருளில்லை.

சதீஷ் காமத்தால் அல்லல்படுபவன். “அவனுக்குள் இன்னொருவன் இருந்து கொண்டு கேலி பண்ணுவதை என்ன செய்வது?அந்த இன்னொருவனை உசுப்பிவிட்டது ஜனங்களாகத்தான் இருக்க வேண்டும். தன்னைவிட பலம் பொருந்திய இன்னொருவனை உதறவே முடியவில்லை. அந்த ஆகிருதி விருட்சமாக உள்ளே விரிய விரிய இவன் கூனிக்குறுகிப் போனான்.” மற்றொரு இடத்தில் சதீஷுக்குள் இருக்கும் காமத்தைப் பற்றி இப்படி எழுதுகிறார்-“வெடிக்கவே வெடிக்காத பலூன்போல சிந்தனையில் காமம் ஊதிப் பெருகிகொண்டிருந்தது.”

ஒருவகையில் கூந்தப்பனை சதீஷ் வெண்முரசின் விசித்திர வீரியன் பாத்திரத்தின் அகச் சித்தரிப்புடன் நெருக்கமானவனாக இருக்கிறான்.  உடலில் காமம் அணைந்து மனதில் காமம் கனன்று கொண்டிருப்பவர்களின் தத்தளிப்பை வேணு கதையாக்கியிருக்கிறார். உடல் காமம் மனக் காமமாக தகிக்கிறது. அறைச் சிப்பந்திக் கிழவரின் உரையாடல் வழியாக மீட்சியின் வாசலை முதன்முதலாக கண்டுகொள்கிறான்.“உப்புதான் சாப்பாடுன்னு நினைக்கப் படாதில்லையா?உங்க மனசு முழுக்க அது இருக்கு. வாழ்க்கையில் அது முக்கியந்தான். ஒத்துக்கிடுதேன்  ஆனா அதுவே முக்கியமில்லை .” அடுத்த நிலையில் இரு ஆட்டுக்குட்டிகள் அன்னை ஆட்டின் மடியில் முட்டி பால் குடிக்கும்போது அவை சிணுங்குவது பாலுவின் குரலைப் போலவும் தன் குரலைப்போலவும் கேட்கிறது என்று எழுதும் இடம் நுட்பமானது. அங்கே ஹேமலதா இருவருக்கும் அன்னையாகிறாள். காமம் உன்னத நிலையை நோக்கி நகர்கிறது. இந்த அகமாற்றம் புறத்திலும் பிரதிபலிக்கிறது. ஆணி மாத உச்சி வெயிலில், உலகமே காய்ந்திருக்கையில் மந்தாரை மலர் மட்டும் பூத்து குலுங்குகிறது. இதற்கடுத்த புள்ளியில் எது அழகு என்றொரு விவாதத்தை கதை மேற்கொள்வதன் வழியாக சதீஷின் காமம் அழகாக உன்னதமடைகிறது. அதன் ஊடாக அழகு புனிதம் கொள்வதுதான் ஆண்மையாஎன்றொரு கேள்வியை எழுப்பிகொள்கிறான். துயரத்துக்குள் துடிக்கும் ஜீவனை உணராதவன் அழகினைக் கண்டுவிட முடியுமாஎன்றொரு கேள்வியை எழுப்பிகொள்கிறான். தனக்குள் சுரக்கும் கருணையை, நீர்மையை கண்டுகொள்கிறான். அவனுடைய காமம் பெரும் கருணையாக, பேரன்பாக உன்னதமடைகிறது. அதை அள்ளி உலகுக்கெல்லாம் அளிக்கிறான். பாறைக்கடியில் உள்ள  ஊற்றுக்கண் திறந்து கொண்டது.

வேணுவின் மொழி கட்டற்ற பாய்ச்சலை நிகழ்த்தும் இடங்கள் என கதைகளில் நிகழும் கனவுகளை சொல்லலாம். ராட்டினம் சுற்றும் முகமூடி கிழவன் வரும் ‘அபாயச் சங்கு’ மற்றும் ‘கூந்தப்பனை’ கதைகளில் வரும் கனவுப் பகுதிகள் கதையை யதார்த்த தளத்திலிருந்து நகர்த்துகிறது. மொழியில் நுண்ணிய அக அசைவுகளை கைப்பற்ற முனைகிறார்.

வேணுவின் பாத்திரங்கள் இயற்கையுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். “தோப்புகள் அழியத் தொடங்கும் பரிதவிப்பு அங்கு மிதந்து கொண்டிருந்தது. மலட்டு வெள்ளாமையை வைத்து என்ன செய்வது? மரத்தை அழிப்பது சிசுக்கொலை போலத்தான்.” (கண்ணிகள்).“தோப்பு போடுவதில் மனைவிக்கு இஷ்டமில்லை. பருத்தி, கேழ்வரகு, கம்பு பயிரிட்டு வந்த பழக்கம். அவற்றைப் பயிரிட்டுப் பார்க்காமல் போவோமே என்ற வேதனை தொத்திக் கொண்டது. காலங்காலமாக உறவாடி வந்த பயிர்கள் இனி இல்லை என்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை.”  “ பிஞ்சுகளை இப்படியெல்லாம் வெட்டி ஒதுக்கி குறிப்பிட்ட கொத்துக்களை உருவாக்கின பழக்கம் இல்லை. வெட்டி ஒதுக்குவது பாவச் செயல்போலத் தாக்கியது. “சாகும் தறுவாயை உதறிய சில மரங்களின் குருத்து ஓலைகள் இளம் பச்சையை நீட்டிக் கிடந்தாலும் ஓரக்கீற்று நுனிகள் ஏற்கனவே காய்ந்து கிடந்தன.” அவருடைய புதிய நாவலான ‘வலசை’ கூட சூழலியல் பிரக்ஞையை அடிநாதமாகக் கொண்டதே. தாவரங்களின் மரணம் வெகுவாக அவர்களை அலைக்கழிக்கிறது.

சு.வேணுகோபாலின் இக்கதைகள் எண்பதுகளின் இறுதி மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் நிகழ்பவை. துல்லியமாகச் சொல்வதென்றால் உலகமயமாக்கலுக்குப் பின் வேணு எழுத வருகிறார். ஆனால் அவருடைய வாழ்வும் விழுமியங்களும் இளமையும் உலகமயமாக்கலுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவை. விழுமியங்களும், இளமையும், கிராமங்களும், வாழ்க்கையும், முந்தைய தொழில்களும் குறுகிய காலத்தில் பழையதாக ஆகி காலாவதியாகும் யுகத்தில் முந்தைய காலத்திணனின் திகைப்பை எழுதுகிறார். தூர்தர்ஷனில் இருந்து ஸ்டார் டிவி அறிமுகம் ஆகும் காலகட்டம்.

பெரும்பாலான வேணுவின் கதைகளைப் போல் இக்கதைகளும் சிறு நகரங்களில் நிகழ்பவை. “ஊரில் இன்னார் இனியார் தெரிந்திருப்பது சாதாரணமாகவே இருக்கிறது. அதனால் இது கிராமம். சுடிதார் , பேக்கிஸ் போட்டுக்கொண்டு அடுத்த தெருவில் உள்ள நண்பர்கள் வீட்டில் அரட்டை அடித்துவிட்டு வருவது வளர்ந்து வருவதால் கிராமத்தின் சாயலை நழுவவிட்டு நகரத்தின் மோஸ்தரை  உடுத்திக்கொண்டது மஞ்சனத்தாம்பட்டி. அர்த்தநாரீஸ்வரர் வடிவம்.” மொத்தமாகவே வேணுகோபாலின் படைப்புக்களில் நகரமயமாகி வரும் தமிழகத்தைப் பற்றிய சித்திரம் தொடர்ந்து ஊடாடிவருவதை காண முடிகிறது. கிராமங்களின் வீழ்ச்சியும் தொடர் சித்திரமாக, அவை நகரங்களின் நீட்சியாக தனித்தன்மை இழப்பதை காட்டுவதாகவும் இருக்கிறது. ஆகவே அவருடைய கதை மாந்தர்கள் இருவேறு நாகரீக உலகிற்கு இடையே தத்தளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஒருவகையில் கிராமத்திலிருந்து வேளாண்மை நசிந்து சிறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தவர்களின் முதல்தலைமுறை கதைசொல்லியாக வேணுவை புரிந்துகொள்ளலாம்.

வேளாண்மையை,பூர்வ நிலத்தைக் கைவிட்ட வேதனை வேணுவின் கதை மாந்தர்களில் பிரதிபலிக்கிறது. தனக்குள் இருக்கும் கிராமத்தானை கொல்ல முடியாமல் தவிக்கும் சிறுநகர பாத்திரங்கள் என ‘ஆட்டம்’, ‘கூந்தப்பனை’, ‘அபாயச் சங்கு’, ‘நிலம் எனும் நல்லாள்’ ஆகிய கதைகளைக் கொண்டு ஒரு பார்வைக் கோணத்தை முன்வைக்க இயலும்.  நசிவிலிருந்து முழுச்சீரழிவுக்கும் (‘அபாயச் சங்கு’, ‘கண்ணிகள்’) மீட்சிக்கும் (‘கூந்தப்பனை’, ‘வேதாளம் ஒளிந்திருக்கும்’) இடையிலான ஊசல் என வேணுவின் படைப்புகளை வகைப்படுத்தலாம்.

இன்னும் சற்று நுணுக்கமாக வேணுவின் கதைமாந்தர்களை நோக்கினால் அவர்கள் தங்கள் கனவுகளை தொலைத்தவர்கள். நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையே ஊசலாடும் மனிதர்களைப் போல் வாலிபத்திற்கும் மத்திய வயதிற்கும் இடையே ஊசலாடுபவர்கள். தங்கள் இளமையின் ஆற்றலும், லட்சியமும், வேகமும், துடிப்பும் கண் முன் துடித்து அடங்குவதை கண்டு பதட்டம் கொள்பவர்கள். பற்றுகோல் கிடைப்பவன் எப்படியோ மேலேறி விடுகிறான். வாழ்வதற்கான நம்பிக்கையை அடைந்துவிடுகிறான். அப்படி கிட்டாதவன் அழிந்து போகிறான். கதைகளின் ஊடாக இந்த இருமை துலங்கி வருவதை காண முடிகிறது. அபாயச் சங்கு கதையில் வரும் சுரேந்திரனைப் பற்றிய இவ்வரிகள் ஒட்டுமொத்தமாக வேணுவின் கதைமாந்தர்களைப் பற்றியதும்கூட எனத் தோன்றியது-“நிகழமுடியாத விசயங்கள் மனதைப் புரட்டி அலைக்கழித்து தனக்குள்ளே வெறிகொண்டு நீள, முடிவில் சிதறிப் போய் விடுகின்றன.சிதறியதில் மிச்சம் மீதியை நினைவின் துருத்தி ஊதி ஊதி அவஸ்தையை நீண்ட நாள் உயிரோடு வைத்திருக்கிறது. அப்படியும் நிகழ்ந்து விடுகிறபோது,ஓர் அமைதி மட்டும். சொல்லமுடியாத அமைதி.”

இக்கதைகளில் சில சிக்கல்கள் இல்லாமல் இல்லை. அபாயச் சங்கு கதையில் ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் வரும் கவித்துவமான வரி ஏனோ துருத்தலாக, தொந்திரவாக தென்பட்டது. வேணுவின் கதைகளில் உள்ள மிக முக்கியமான சிக்கல், வீழ்ச்சியின் கதைகள் இயல்பாக, வீரியத்துடன் வெளிப்படுவது போல் வலுவாக மீட்சியின் கதைகள் வெளிப்படவில்லை என்பதே என் எண்ணமாக இருந்தது. கதைப்போக்கில் ஒட்டாமல் ஞானம் போதிக்கும் கதாபாத்திரங்கள் வேணுவின் கதைகளில் தோன்றிவிடுகிறார்கள். இதையே நான் ‘நிலம் எனும் நல்லாள்’, ‘ஆட்டம்’ ஆகிய கதைகளைப் பற்றிய விமர்சனமாகவும் வைத்திருந்தேன். ‘கூந்தப்பனை’, ‘அபாயச் சங்கு’ ஆகிய கதைகளிலும் இத்தகைய தருணங்கள் உண்டு. ஆனால் இம்முறை அது எனக்கு பெரிய துருத்தலாக தெரியவில்லை. ஏனென்று யோசிக்கையில், ஒருவகையில் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறார், அத்தோடு தன்னையொத்த, கிராமங்களில் இருந்து பெயர்ந்து, ஊசலாடிக் கொண்டிருக்கும் அத்தனை மனிதர்களை நோக்கியும் வேணு பேசுகிறார். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறார். “பார் இதோ நான் புதிய நிலத்தில் காலூன்றி விட்டேன், அச்சத்தை கைவிடு, மனிதர்கள் அபாயமானவர்கள்தான் ஆனால் உலகம் ஒன்றும் அத்தனை மோசமில்லை, எப்படியும் பிழைத்துகொள்ளலாம்.”


வேணுவின் ஆதர்சங்களில் ஒருவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் வேறொரு யுக சந்தியில் நின்று பேசியவர். ஏதோ ஒருவகையில் எழுத்தாளன் அல்லது கலைஞன் எப்போதும் யுக சந்தியில் நின்று பேசுபவனாகத்தான் இருக்க முடியும். சு.வேணுகோபாலின் யுக சந்தி புறவயமானது மட்டுமல்ல அகவயமானதும் கூட. சு.வேணுகோபால் யுகசந்தியின் கலைஞன்.

Wednesday, September 12, 2018

இறுதியில் எஞ்சும் மலர்

செப்டம்பர் மாத தும்பி இதழில் ஜேம்ஸ் தர்பர் எழுதிய 'கடைசிப் பூ' வெளியாகியுள்ளது. தர்பர் அமெரிக்கர். பிரகாஷ் இக்கதைக்கு இந்திய பின்புல ஓவியங்களை பொருத்தமாக தீட்டியிருக்கிறார். இந்தக் கதை வாசித்ததில் இருந்து வெகுவாக என்னை தொந்தரவு செய்தது. ஒரு எல்லையில் இந்த கதையின் மொத்த உரைநடையையும் ஒரு பக்கத்தில் முடிந்து விடும் ஒரு கவிதை என சொல்லலாம். மறு எல்லையில் ஒரு முழு யுக சுழற்சியை, வாழ்வை விரித்து காட்டும் பெருநாவல் எனக் கொள்ளலாம். மிகக் குறைவான சொற்களில் எழுதப்பட்ட பிரம்மாண்டமான நாவல். வாசித்ததும் பெரும் மனவெழுச்சியை அடைந்தேன். 

பனிரெண்டாம் உலகப் போருக்கு பின்பான பேரழிவை கற்பனை செய்வதோடு கதை துவங்குகிறது. உலகமே அழிந்து அன்பற்று வறண்டு விடுகிறது. மக்களிடம்பெயர்ந்து ஏதிலிகளாக எங்கோ செல்கிறார்கள். வளர்ப்பு பிராணிகள் கூட அவர்களை கைவிட்டுச் செல்கின்றன. அப்போது ஒரு பூ மலர்ந்திருப்பதை இளம் பெண் பார்க்கிறாள். அது அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை, உற்சாகத்தை அளிக்கிறது. ஆனால் அவளுடைய உணர்வுகளை உள்வாங்கி உற்சாகத்தை தமதாக்கிக் கொள்ளும் மற்றொரு மனிதனை சந்திக்கவில்லை. சோர்வும், அக்கறையின்மையும் தான் அவளை அடைகின்றன. அப்போது மற்றுமொரு இளைஞனை அந்த மலர் உற்சாகம் கொள்ள செய்கிறது. அதை அவர்கள் இருவரும் நீரூற்றி பேணுகிறார்கள். தேனீயும், பட்டாம்பூச்சியும் நாடி வருகின்றன. மெல்ல அங்கு பலமலர் செடிகள் முளைக்கின்றன. உலகம் உலராமல் அன்பின் ஈரத்தில் பெருகுகிறது. மனிதர்கள் அன்பை நாடுகிறார்கள்.  பின்னர் ஒரு வனம் உருவாகிறது, வேட்டையும், வேளாண்மையும், நாடும் நகரமும், தலைவரும், ராணுவமும் உருவாகின்றன. மீண்டும் ஒரு போர் மூண்டு உலகம் எச்சமின்றி அழிகிறது. அப்போதும் ஒரு மலர், ஒரு பெண், ஒரு ஆண் எஞ்சியிருக்கிறார்கள் என்பதோடு கதை முடிகிறது. 

மலர் சவுந்தர்யத்தின் உச்சம். யோகத்தில் ஆயிரமிதழ் கொண்ட தாமரையை முழுமையின் சின்னமாக கருதுகிறோம். அழகியலின் உச்சமும் ஞானத்தின் உச்சமும் குடிகொள்ளும் இடம் மலர். இந்த கதை சிறுவர் கதை என்பதை காட்டிலும் பெரும் ஆன்மீக பொருள் அளிப்பவையாக இருக்கிறது. எண்ணும் தோறும் கதை விரிவுகொள்கிறது. 

நாம் நம்மை அழித்துக்கொள்ள உருவாக்கும் அத்தனை பேரழிவிலிருந்து நம்மை மீட்டுக்கொள்ள நமக்கு ஒரேயொரு மலர் போதும். 

தும்பி நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் 


Sunday, September 9, 2018

கனவுகள் என்னை இயக்குகின்றன


விகடன் தடம் இதழில் 'அடுத்து என்ன' என்றொரு பகுதிக்காக எழுதிய கட்டுரை இந்த மாத இதழில் (செப்டம்பர்) வெளிவந்துள்ளது. வழக்கம் போல் கட்டுரை அரைநாளில் எழுதி முடித்துவிட்டேன். புகைப்படம் சரியில்லை என்பதால் விகடன் புகைப்பட நிபுணர் சாய் தர்மராஜ் நகராட்சி பூங்காவிற்கு ஆளரவமற்ற காலைப்பொழுதில் அழைத்துச்சென்று விதவிதமாக படமெடுத்தார். அதே காலையில் ஒரு திருமண தம்பதியினரின் புகைப்பட வைபவமும் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒற்றை ஆளாக வந்து நின்றிருக்கும் என்னைப் பார்க்க அவர்களுக்கு விநோதமாக இருந்திருக்கலாம். எனக்கே பெரும் வேடிக்கையாக இருந்தது. எங்கே ஏதோ ஒரு புள்ளியில் என்னையும் மீறி முஷ்டி மடக்கி வீர வசனம் பேசிவிடுவேனோ என்று அஞ்சினேன். வெய்யில், தமிழ்செல்வன் மற்றும் சாய் தரம்ராஜ் ஆகியோருக்கு நன்றி. ஒரு முழு பக்கத்திற்கு புகைப்படம் அதுவும் ஒளிவட்டத்துடன் வந்துள்ளது. 
https://www.vikatan.com/thadam/2018-sep-01/column/143814-dreams-drives-me-sunil-krishnan.html
புகைப்படம்- நட்ன்ரி விகடன்- சாய் தர்மராஜ் 


---

கனவுகளில் என்ன கஞ்சத்தனம்? ஆகவே அடுத்து என்ன என்றொரு கேள்விக்கு ஒரேயொரு பதிலைச் சொல்வதைக் காட்டிலும் என்னவெல்லாம் இந்த ஆண்டிலும் வரும் ஆண்டிலும் நிகழ்த்த விழைகிறேன் என்பதை பகிர்ந்துகொள்வது மேல். ஒருவகையில் பொதுவெளியில் பதிவாகும் சொல் ஒரு எச்சரிக்கை மணியைப் போல், ரப்பர் காலணியில் புதைந்த முள்ளைப் போல் எப்போதும் பிரக்ஞையை தீண்டியபடியே இருக்கும். ஆக்க சக்தியாக என்னை அது எழுத வைக்கலாம் அல்லது ஊக்கத்தை உரித்து வாட்டவும் செய்யலாம். 

சிறுகதை தொகுதிக்கு முன்பே நாவலாசிரியனாகத்தான் நான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டும். நான்கைந்து சிறுகதைகள் எழுதி முடித்த சூழலிலேயே ஒரு நாவலைத் துவங்கினேன். நாவலின் மையக் கேள்வி என்னை பற்றி ஏறிக்கொண்டவுடன், அதன் முதல் வரியை எழுதும் முன் நாவலின் தலைப்பு துலங்கிவிட்டது. ‘நீலகண்டம்’. ஒரு மந்திரச்சொல் போல் எனை ஆக்கிரமித்தது. விழுங்கவும் முடியாத, உமிழவும் முடியாத ஆலகாலத்தை கழுத்தில் என்றென்றைக்குமாக நிறுத்தப் போராடும் நீலகண்டர்கள். விடம் உண்ட கண்டர்கள் என்பதைக் காட்டிலும் விடம் சுரக்கும் கண்டர்கள். 

நாவல் நினைவிலும் கனவிலும் பெருகி சட்டென நூறு பக்கங்கள் வரை வளர்ந்தது. நவீன வாழ்வில் பிள்ளைப்பேறு சார்ந்த வினாக்களை அலசும் களம். ஒரு குடும்பத்தை அலகாகக் கொண்டு, அதிலும் ஆட்டிச நிலையில் உள்ள ஒரு பெண் குழந்தையை மையமாகக் கொண்டு விரியும் நாவல். ஆட்டிச குழந்தை அச்சுவின் அகத்திலிருந்தும் புறத்திலிருந்தும் நாவல் சுருள் அவிழ்கிறது. ஒரு கட்டத்தில் கர்ப்பம் கலையும் பகுதியை எப்படியோ சென்று சேர்ந்தது. அப்போது என் மனைவியின் கர்ப்பமும் உறுதியாகியிருந்தது. நாவலின் சிசு அழிவும் நிகழுலகின் தந்தைமைக்கான ஆவலும் சமரிடத் துவங்கின. கனவும் நிகழ்வும் ஒன்றையொன்று குழப்பி நிரப்பின. அலைக்கழிப்புகளின் ஊடாக கழிந்த இரவுகளில் இருந்து தப்பிக்க நாவலை நிறுத்துவதைத் தவிர வேறுவழி புலப்படவில்லை. இப்போது மகனுக்கு இரண்டரை வயது ஆகிவிட்டது. அந்நாவலை மீண்டும் எழுதத் திட்டமிட்டு இருக்கிறேன். ‘டெம்பிள் கிராண்டின்’ ‘நவோகி ஹிகஷிடா’ துவங்கி பாலபாரதியின் ‘துலக்கம்’ வரை தொடர்ந்து வாசித்திருந்த காலகட்டம் ஒன்றுண்டு. அவை எனக்கு புதிய உலகை காட்டின. எல்லாவற்றையும் அளக்க நமக்கோர் அளவையுண்டு. ஒருபோதும் அதை நாம் கீழே வைப்பதில்லை. அன்பையும், வாழ்வையும், உறவையும் கூட பயன்மதிப்பைக் கொண்டுதான் அளக்க வேண்டியதாய் இருக்கிறது. இந்த அபத்தத்திலிருந்து வேர்பிடித்து எழுகிறது நாவல். வேறு வடிவில், வேறு மொழியில் இந்நாவலை அடுத்த ஆண்டிற்குள் எழுதி முடிக்க தேவையான மனத் திண்மை இருக்கும் என்றே நம்புகிறேன். 

துறை சார்ந்து ஒரு புத்தகமாவது எழுத வேண்டும் என்பது என் நெடுங்கால கனவு. ஒரு ஆயுர்வேத மருத்துவராக சுய உதவி மருத்துவம் அல்லது மருத்துவப் பயன்பாட்டு குறிப்புகள் எழுதுவது சுலபம். ஆனால் அது என் நோக்கமில்லை. அத்தகைய நூல்கள் சந்தையில் ஏராளமாக புழங்குகின்றன. அடிப்படைகளைப் பற்றி எழுதலாம் என்றால் தெள்ளிய மொழியில் எனது ஆசிரியர்களில் ஒருவரான தெரிசனம்கோப்பு டாக்டர். மகாதேவன் அத்தகைய பல நூல்களை எழுதிவிட்டார். ஏழெட்டு அத்தியாயங்களாக மனதில் உருக்கொண்டிருக்கும் இந்நூல் இந்திய மருத்துவத்தின் வேறு பரிணாமங்களைப் பற்றி பேசுவதாக இருக்கும். வரலாற்று ரீதியாக அது எத்தகைய மாற்றங்களை உள்வாங்கி செழித்தது? அதன் வெவ்வேறு மரபுகள் எவை? நவீன காலகட்டத்தில் அதன் சவால்கள் எத்தகையவை? காலனீய காலத்தில் அதில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன? இப்படியான கேள்விகளை இந்நூல் எதிர்கொள்ள வேண்டும். இந்நூலுக்கான ஆரம்பகட்ட தரவு சேகரிப்பு முடிந்துவிட்டது. ‘இந்திய மருத்துவத்தின் அடுக்குகள்’ ‘வேதமும் ஆயுர்வேதமும்’ ஆகிய இரண்டு அத்தியாயங்களை நிறைவு செய்துவிட்டேன். இந்த வகையான நூல் எழுதுவதில் உள்ள ஆகப்பெரிய சவால் யாதெனில், முடிவற்று தரவுகளை சேகரித்து வாசித்துக்கொண்டே இருக்கும்போது ஏதோ ஒரு புள்ளியில் போதும் என்று நிறுத்தி புத்தகத்தை எழுதத் துவங்க வேண்டும். அந்தப் புள்ளி நழுவிச் செல்லும்போது இருள் சூழ்ந்து விடுகிறது. பொது வாசகர், இந்திய மருத்துவ முறைகளைப் பற்றி பரிச்சயம் உடையவர்கள் என இரு தரப்புமே வாசிக்கும் வண்ணம் இந்நூல் உருப்பெற வேண்டும் என உழைக்கிறேன். அடுத்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்குள் இந்நூல் முழுவதும் தயாராகிவிடும் என்றே நம்புகிறேன். 

‘காந்தி- இன்று’ தளத்தில் பல மொழியாக்கங்கள் செய்த அனுபவம் உண்டு. ஆனால் அபுனைவுகள் மொழியாக்கம் செய்வதில் முன்பிருந்த ஆர்வம் இப்போது வற்றிவிட்டது. இந்திய பதிப்பகப் பிரிவிற்காக காந்தியின் மரணத்தையொட்டி வானொலியில் பதிவான அஞ்சலி குறிப்புகளை தமிழாக்கம் செய்துள்ளேன். சுவாரசியமான நூல். விரைவில் வெளியாகும். அபுனைவு நூல் மொழியாக்கம் செய்ய தயங்குவதற்கு மிக முக்கியமான காரணம், இத்தனை மெனக்கெடலுக்கான பயன்மதிப்பு உள்ளதா எனும் கேள்வியே. இந்த தொய்வு புனைவுகளை மொழியாக்கம் செய்யும்போது நேர்வதில்லை. மேகாலய எழுத்தாளர் ஜானிஸ் பாரியட்டின் ‘19/87’ என்று ஒரு சிறுகதையை வரவிருக்கும் அவருடைய தமிழ் தொகுதிக்காக மொழியாக்கம் செய்தேன். ‘கல்குதிரை’ இதழுக்கு அமெரிக்க எழுத்தாளர் டான் டெலிலோவின் ஒரு சிறுகதையை மொழியாக்கம் செய்யும்போது என் மொழிநடையே அதன் தாக்கத்தில் குழைவதை உணர்ந்தேன். தமிழுக்கு வரவேண்டிய எழுத்தாளர்கள் இன்னும் எத்தனையோ பேர் உள்ளார்கள். அப்படி எனக்கு இருவரை தமிழுக்கு கொண்டுவர வேண்டும் என்பது நெடுநாள் கனவு. கிரேக்க எழுத்தாளர் நிகோஸ் கசன்ஜாகிஸ் மற்றும் போரிஸ் பாஸ்டர்நாக் (‘டாக்டர். ஷிவாகோ’). இருவரையும் வாசிக்கச் சொல்லி தூண்டியது ஜெயமோகன். கசன்ஜாகிசின் ‘ஜோர்பா எனும் கிரேக்கனை’ சில ஆண்டுகளுக்கு முன் இரு அத்தியாயங்கள் மட்டும் ‘பதாகை’க்காக மொழியாக்கம் செய்தேன். இப்போது மீண்டும் மொழியாக்கம் செய்யத் துவங்கி இருக்கிறேன். ஜோர்பா ஒருவகையில் என் லட்சிய பிம்பம், யாராக இருக்க விழைகிறேனோ அதுதான் அவன். நாவலில் கதைசொல்லி ஜோர்பாவாக ஏங்குவதைப் போல் நானும் ஏங்குகிறேன். நேற்றும் நாளையும் அற்ற இன்றும் இப்போதும் மட்டுமே உள்ள முழு மனிதன். கசன்ஜாகிசின் மொழி கவித்துவமானது. கிரேக்க தொன்மங்களை கையாள்வது. இருபத்தியாறு அத்தியாயங்கள் கொண்ட இந்நாவலின் ஆறு அத்தியாயங்களை மொழியாக்கம் செய்து முடித்திருக்கிறேன். இம்மொழியாக்கத்தை நிறைவுசெய்வது முதன்மை கனவுகளில் ஒன்று. 

இவை தவிர பிரியத்திற்குரிய எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்தின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுதி என் தேர்வு மற்றும் முன்னுரையுடன் காலச்சுவடு வெளியீடாக வரவிருக்கிறது. தமிழ் சிறுகதை உலகில் தனித்துவமான கூறுமுறையும் பேசுபொருளும் கொண்டவர் சுரேஷ்குமார இந்திரஜித். நமக்குப் பிடித்த ஒரு முன்னோடி எழுத்தாளர் அளித்தவையின் பொருட்டு வாசகனாக நாம் செலுத்தும் எளிய நன்றியே இத்தொகைநூல். ஓரிருமாதங்களில் புத்தகம் வெளிவரும். ‘புதிய குரல்கள்’ என்றொரு பகுதியில் அண்மைய ஆண்டுகளில் அறிமுகம் ஆன எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சனத்துடன் அவர்களுடனான நேர்காணலும் செய்து வருகிறேன். இதுவரை ஏழு எழுத்தாளர்கள் ‘புதிய குரல்கள்’ பகுதியில் இடம்பெற்றிருக்கிறார்கள். பலருக்கு இதுவே முதல் நேர்காணல். இன்னும் குறைந்தது இப்படி பத்து எழுத்தாளர்களைப் பற்றியாவது எழுத வேண்டும். சமகால எழுத்தாளர்களை வாசித்து அறிமுகம் செய்வது மகிழ்ச்சியான பணி. 

தற்போது பாரதிய வித்யா பவனுக்காக ‘தமிழில் காந்தி’ எனும் பேசுபொருளில் அறுநூறு பக்க தொகை நூலை உருவாக்க முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறேன். இந்நூல் அடுத்த ஆண்டு வெளியாகும். ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்படும். பாரதி துவங்கி பூ.கொ சரவணன் வரை பல்வேறு எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், ஆளுமைகள் தமிழில் காந்தியைக் குறித்து எழுதியவற்றின் குறுக்குவெட்டுச் சித்திரத்தை அளிப்பதே இந்நூலின் நோக்கம். நாவல் பகுதிகள், கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நினைவுக் குறிப்புகள் என பல்வேறு வடிவங்களைக் கொண்ட தொகுப்பு. இதன் பொருட்டு நிறைய வாசித்துக் கொண்டிருக்கிறேன். குறுகிய காலக்கெடுவிற்குள் முடிக்க வேண்டிய பணி என்பதால் முழு நேரத்தையும் அதற்கே செலவிடுகிறேன். காந்தியைப் பற்றி வாசிப்பது எப்போதும் எனக்கு உற்சாகமளிக்கும் அனுபவம்தான். தமிழ் நனவிலியில் காந்தி எப்படியெல்லாம் பதிந்திருக்கிறார் என்பதை அறிய சுவாரசியமாக இருக்கிறது. 

இவை தவிர்த்து எப்போதும்போல் சிறுகதைகளும், குறுங்கதைகளும் எழுத வேண்டும்.  சு. வேணுகோபால் மற்றும் சுரேஷ்குமார இந்திரஜித்திற்கு கொணர்ந்ததுபோல் நீண்ட நேர்காணலும், கட்டுரைகளும் கொண்ட எழுத்தாளர் சிறப்பிதழை எழுத்தாளர்கள் தேவிபாரதி, எம். கோபாலகிருஷ்ணன், இரா. முருகன் ஆகியோருக்கு கொண்டு வரவேண்டும் என்பதும் ஒரு கனவு.  இங்கே பட்டியலிடப்பட்ட எல்லாவற்றையும் அடுத்த வருடத்திற்குள் நிகழ்த்தி முடிப்பேனா என்று தெரியவில்லை. ஆனால் அந்தக் கனவு என்னை இயக்குகிறது. சிலவற்றைக் கைவிட்டு புதிய கனவுகளை கைகொள்ளலாம். ஏனெனில், வாசிக்கவும், எழுதவும், கனவு காணவும் எல்லையில்லை. 

  சுனில் கிருஷ்ணன் 

Saturday, September 8, 2018

சுயத்தின் வெளுக்கும் சாயங்கள் – ஜேவியர் செர்கொசின் ‘தி இம்போஸடரை’ முன்வைத்து

(செப்டம்பர் மாத கணையாழி இதழில் வெளியான கட்டுரை)

“உண்மை கொல்லும், புனைவு காக்கும்”- ஜேவியர் செர்காஸ்


சென்ற கட்டுரையைப் போலவே இந்த கட்டுரையும் இவ்வாண்டு புக்கர் பரிசின் நீள் பட்டியலில் இடம்பெற்ற ஒரு நாவலைப் பற்றியது. இந்த மாத கட்டுரைக்கு யாரை வாசிக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தபோது ஜேவியர் செர்காசின் மேற்கோள் ஒன்றை வாசித்தேன். “நினைவுகளால் நிறைவுறும் ஒரு யுகத்தில், நினைவுகள் வரலாறின் இடத்தை அடையும் ஆபத்து உள்ளது. ..நினைவும் வரலாறும் சார்புத்தன்மை உடையவை. நினைவுக்கு வரலாறு பொருள் அளிக்கிறது, நினைவு வரலாறின் ஒரு கருவி, இடுபொருள், அதன் ஒரு பகுதி, ஆனால் நினைவு வரலாறல்ல.” இந்த மேற்கோள் வழியாகவே செர்காஸ் எனும் எழுத்தாளனை கண்டுகொண்டேன். 

Monday, August 13, 2018

வேதமும் ஆயுர்வேதமும்


(ஜூலை தமிழினி இதழில் வெளியான கட்டுரை)
1

முன்பொரு காலத்தில் அருந்தவம் புரிந்த துறவிகளை அவர்களுடைய இறுதி இலக்கான வீடுபேறை அடைய விடாமல் நோய்கள் சூழ்ந்து வாட்டின. செய்வதறியாது திகைத்த முனிவர்கள் ஆத்ரேயர் தலைமையில் இந்திரனிடம் தங்கள் குறையை முறையிட்டனர். உலக உயிர்கள் பிணியின்றி வாழ இந்திரன் அவர்களுக்கு ஆயுர்வேதத்தை பாடம் சொன்னான். இந்திரனுக்கு தக்கனும், தக்கனுக்கு அஸ்வினி குமாரர்களும், அஸ்வினி குமாரர்களுக்கு நான்முகனும் ஆயுர்வேதத்தை பாடம் சொன்னார்கள். பிரம்மன் ஆயுர்வேதத்தை படைக்கவில்லை எல்லையற்ற ஞானத் தொகையிலிருந்து நினைவு கூர்ந்தான் – ஆயுர்வேதம் மண்ணுக்கு வந்த கதை, சரக சம்ஹிதை

சரக சம்ஹிதையின் துவக்கத்திலேயே இக்கதை கூறப்படுகிறது. இந்திரனிடமிருந்து கற்ற ஆத்ரேயர் அக்னிவேஷர் உட்பட அவருடைய ஆறு சீடர்களுக்கு ஆயுர்வேதத்தை அளிக்கிறார். சரகர் அக்னிவேஷரின் சம்ஹிதையைத்தான் சீரமைத்து சரக சம்ஹிதையாக உருவாக்குகிறார். சுசுருத சம்ஹிதையில் இந்திரன் வரை இதே வரிசை தான், ஆனால் இந்திரனிடமிருந்து நேரடியாக தன்வந்தரி பாடம் கற்று சுசுருதர் உட்பட அவருடைய சீடர்களுக்கு அளிக்கிறார். காசியப சம்ஹிதையில் இந்திரனிடமிருந்து நேரடியாக பரத்வாஜர் கற்கிறார், பின்னர் காசியபருக்கு அளிக்கிறார். சரக சம்ஹிதை காய சிகிச்சை எனும் பொது மருத்துவ பிரிவுக்கும், சுசுருத சம்ஹிதை அறுவை மருத்துவத்திற்கும், காசியப சம்ஹிதை குழந்தைகள் மற்றும் மகப்பேறு மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன. ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் மூன்று முக்கிய பிரிவுகளை இந்த சம்ஹிதைகள் விவாதிக்கின்றன. மீதி பிரிவுகளுக்கும் இத்தகைய மூல நூல்களும் குரு பரம்பரையும் இருந்திருக்கலாம். நிமி தோளுக்கு மேலுள்ள உறுப்புகளின் நோய்களை மற்றும் சிகிச்சைகளை பற்றி பேசும் ஷாலாக்கியம் எனும் பிரிவைப் பற்றி ‘நிமி தந்திரம்’ என்று ஒரு நூல் எழுதியதாக  நம்பப் படுகிறது. நிமியின் வழி வந்த விதேக தேசத்து ஜனகரும் முக்கியமான மருத்துவ நிபுணராக கருதப் படுகிறார். நிமியைப் பற்றிய சுவாரசியமான தொன்மம் ஒன்றுண்டு. நிமி வஷிஸ்டரால் சபிக்கப்பட்டு தனது உடலை இழக்கிறான். தேகமற்றவனின் அரசு என்பதாலே விதேகம் என்று அவனுடைய அரசு அழைக்கப்படுகிறது. விதேகத்தில் இருந்து வந்தவள் என்பதால் வைதேகி என்று சீதைக்கு பெயருண்டு. நிமி பின்னர் சாப மீட்சியாக மனிதர்களின் கண்ணிமைகளில் வாழ்கிறான். கண் மூடுவதை நிமிலனம் என்றும் திறப்பதை உன்மீலனும் என்றும் சமஸ்க்ருதத்தில் சொல்கிறார்கள். ஒரு முறை கண் சிமிட்டும் நேரத்தையே ’நிமேஷம்’ என்று அழைக்கிறோம். இதுவே காலப்போக்கில் மருவி நிமிடம் என்றானது. நிமி கண்ணுடன் தொடர்புபடுத்தப்படுகிறார், கண் உட்பட தோளுக்கு மேலுள்ள  உறுப்புகளின் மருத்துவ நிபுணராகவும் கருதப்படுகிறார்.        

ஆயுர்வேதத்திற்கும் வேதத்திற்குமான தொடர்பு எத்தகையது? எனும் கேள்வியை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். வேதத்திற்கும் ஆயுர்வேதத்திற்குமான உறவு என்ன? வேதத்திற்கு முற்காலத்தில் இருந்து வேதம் மற்றும் சம்ஹிதைகளின் காலத்திற்கான வளர்சிதை மாற்றம் யாவை? ஆயுர்வேத நூல்களில் உள்ள வேதத்தின் தாக்கம் கொண்ட பகுதிகள் எவை? வேதத்தில் உள்ள மருத்துவ தகவல்கள் எவை? ஆகிய நான்கு கேள்விகளை இந்த அத்தியாயத்தின் நான்கு பகுதிகளில் விவாதிக்க முயல்கிறது. இதற்கு இரண்டு முக்கியமான நூல்களின் துணையை தேர்ந்திருக்கிறேன். டாக்டர். விநாயக் வாமன் கரம்பெல்கர் எழுதிய ‘அதர்வ வேதமும் ஆயுர்வேதமும்’ (Vedas and Ayurveda, Chowkhamba Krishnadas Academy, Varanasi பதிப்பித்தது) 1961 ஆம் ஆண்டு பதிபிக்கப்பட்ட முக்கியமான நூல். மற்றொன்று பிரித்தானிய மருத்துவ வரலாற்று ஆய்வாளர் கென்னெத் ஜிஸ்க் எழுதிய ‘வேதத்தில் மருத்துவம்’ (Medicine in Vedas, Motilal Banarasidas publishers, 2009). இதன் முதல் பதிப்பு 1985 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியானது.

கரம்பெல்கரின் நூல் இந்தியரால் எழுதப்பட்டது, இத்தகைய ஆய்வின் முதல் முயற்சி. அவ்வகையில் முக்கியமானதும் கூட. அதன் முன்னுரையில் அன்றைய கல்வி அமைச்சராக இருந்த ஆர்.பி. நாயக் இந்நூலின் சில மிகைகளை சுட்டிக்காட்டுகிறார் “ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட, நுண்ணோக்கியில் மட்டுமே புலப்படும் வெவ்வேறு பாக்டீரியாக்களை அதர்வ வேதத்தின் கிருமிகளுடன்  தொடர்புபடுத்துவது நெருடலை ஏற்படுத்துகிறது.” சிற்சில இடங்களில் இத்தகைய தாவல்களை காண முடிகிறது. கந்தர்வர்களை விஷ கொடுக்கு உள்ள  பூச்சிகள் என்றும் அப்சரஸ்களை விஷமற்ற நீர் வாழ் பூச்சிகள் என்றும் உய்த்துணர முடியும் என்று அவர் சொல்வதை உதாரணமாக்கலாம். கென்னெத் ஜிஸ்க் கரம்பெல்கர் மற்றும் அவருக்கு பின்பான காலகட்டத்தில் ஆய்வு செய்த பலருடைய ஆய்வு கட்டுரைகளை துணைக்கழைத்து காத்திரமாக தனது நோக்கை பதிவு செய்கிறார்.

கரம்பெல்கர் அவருடைய நூலின் முன்னுரையில் மருத்துவ வரலாறின் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்கிறார். “மருத்துவ வரலாறு என்பது தொல்கால மனிதன் அவனுடைய சவாலான சூழலை எப்படி எதிர்கொண்டான், துயரத்திலிருந்து மீள என்ன செய்தான், அக்காலத்து மருத்துவர்கள் அவனை நாடிவருபவர்களை நோயிலிருந்து மீட்க என்ன செய்தார்கள் போன்ற கேள்விகளை எதிர்கொள்கிறது. மருத்துவ அடிப்படைகளின் பரிணாமத்தை கவனிக்கிறது.”

மேலும் ஆயுர்வேதத்தின் வரலாறு என்பது ஒட்டுமொத்த இந்தியவியலின் பின்புலத்திலேயே புரிந்துகொள்ள முடியும் என்கிறார். “முழுமையாக இந்திய மருத்துவ வரலாறை புரிந்துகொள்ள ஆயுர்வேத நூல்கள் மட்டும் உதவாது. ‘தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், மொழியறிவியல், மெய்யியல், தொன்மவியல், வேத அறிவு, புராணங்கள் மற்றும் தாந்த்ரீக அறிதல் என இந்தியவியலின் எல்லா கிளைகளையும் பயன்படுத்தியே மருத்துவ வரலாற்று புதிர்களை விடுவிக்க முடியும். இந்த வேத மந்திரங்கள், தாந்த்ரீக வழிபாடு சாஞ்சி தூணின் புடைப்பு சிற்பங்கள் , ஜாதக கதைகள், ஜைன மதநூல்கள் என எல்லாமும் ஒன்றையொன்று நிறைவு செய்கின்றன.”

ஆயுர்வேதம் மண்ணுக்கு வந்த கதை அதற்கொரு காலாதீத தன்மையை அளிக்கிறது. தொடக்கமும் ஒடுக்கமும் அற்ற பேரறிவு. வேதங்களுக்கு அளிக்கப்படும் அதே நிலை. ஆயுர்வேதம் என்றில்லை பொதுவாகவே சம்ஸ்க்ருத இலக்கியங்களில் காணக்கிடைக்கும் இந்த காலாதீத தன்மையைப் பற்றி ஷெல்டன் போலாக்கின் அவதானிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. “நம்ப முடியாத அளவுக்கு, சம்ஸ்க்ருத நூல்களை இயற்றியவர்களை பற்றி நாம் ஏதும் அறிவதில்லை, அல்லது புனைபெயர்களை மட்டுமே அறிகிறோம். எவ்வித நூலாக இருந்தாலும்  எழுதியவரின் ஆளுமையை மற்றும் அவருடைய காலகட்டத்தை அடையாளம் காணும் அம்சங்களை நூலிலிருந்து முழுவதுமாக வெளியேற்றி வரலாறற்ற தன்மையை அளிப்பதற்கு ஓர் உத்தியாக கையாள்கிறார்கள். உதாரணமாக அரசாளுமை பற்றிய நூல்கள் வரலாற்று பூர்வமாக திகழ்ந்த ஒரேயொரு அரசை கூட சூட்டாமல் அதன் குடிமகன்களைப் பற்றி விவரிக்கிறது…சுருக்கமாக நாம் வெவ்வேறு பேசுபொருளில் ஒரேயொரு வரலாற்று ஆளுமை, இடம், நிகழ்வை அல்லது வரலாற்று ரீதியாக பொருள் தரக்கூடிய ஒன்றை எதிர்கொள்ளாமலேயே சம்ஸ்க்ருதத்தில் ஆயிரகணக்கான பக்கங்கள் வாசிக்கலாம்.”

ஆய்வாளர் முளேன்பால்ட் ஆயுர்வேதத்தின் தெய்வீக தோற்றம் என்பது அதன் நிரந்தர இயல்புகளில் ஒன்றல்ல, மாறாக இடைகாலங்களில் வளர்ச்சியின் போக்கில்அடைந்ததாக இருக்கக் கூடும் என்கிறார். “ஆயுர்வேதத்தின் தெய்வீக துவக்கத்தை ஏற்றோம் எனில் அதை அறிவியலாக கருத முடியாது.  ஆயுர்வேதத்தின் புனித தன்மையின் காரணமாக அதன் அடிப்படை கோட்பாடுகளில் புதிய போக்குகள் ஏதும் பெரிதாக உருவாகவில்லை. ஆனால் எக்காலத்திலும் அது ஓர் மூடிய அறிவுத்துறையாக இருந்ததில்லை” என்கிறார் முளேன்பால்ட்

ஆயுர்வேதம் தன்னை ரிக் வேதத்துடனும் தொடர்புறுத்தி கொள்கிறது. சரகரும் சுசுருதரும் ஆயுர்வேதத்தை அதர்வ வேதத்தின் உபவேதமாக குறிப்பிடுகிறார்கள். அதர்வ வேதத்தில் தான் அதிகமும் தாவர பயன்பாடுகள் மற்றும் மாந்த்ரீக மருத்துவம் பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. ஆகவே இயல்பாக ஆயுர்வேதத்தை அதர்வ வேதத்தின் உபவேதமாக கருத முடியும். காசியபர் ஆயுர்வேதத்தை ‘ஐந்தாம் வேதம்’ என பிரகடனப்படுத்துகிறார். 

ஆயுர்வேதத்திற்கும் வேதத்திற்குமான தொடர்பைப் பற்றி ஐந்துவிதமான கருத்துக்கள் நிலவுவதாக கரம்பெல்கர் தொகுத்து பட்டியலிடுகிறார்.

ஐந்தாம் வேதம்

வேதத்தைக் காட்டிலும் மேன்மையானது.

அதர்வ வேதத்தின் உபவேதம்.

அதர்வ வேதத்தின் உபாங்கம்

தனித்த வேதாங்கம்.

இத்தனை விதமான பார்வை பகுப்புகள் உண்டெனினும், அதர்வ வேதத்துடன் கொண்ட உறவின் பரிணாமம் என்றவகையில் ஆயுர்வேதத்தை காண்பதே உகந்தது என்கிறார் கரும்பெல்கர். அதர்வ வேதத்தின் ஒரு பகுதியாக மட்டும் (உபாங்கம்) இருந்தது, பின்னர் காலப்போக்கில்  மதிப்புக்குரிய வகையில் வளர்ந்து உபவேதமாக பரிணாமம் கொள்கிறது.  பின்னர் அதன் பயன்மதிப்பின் காரணமாக ஐந்தாம் வேதம் என்றும் வேதத்திற்கு மேலானது என்றும் புகழப்படும் நிலையை எட்டியிருக்க கூடும் என்கிறார்.   

கென்னெத் ஜிஸ்க் வேறு மாதிரியான பார்வையை முன்வைக்கிறார். வேதத்தில் ஆயுர்வேதத்தின் அடிப்படைகள் போதுமான அளவு உருவாகவில்லை. அதர்வ வேதத்தில் பிணி நீக்கும் துதிகள், மந்திரங்கள் காணக்கிடைக்கின்றன. மூலிகைகள், சில நோய்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்பது உண்மை தான். ஆயுர்வேதத்தின் அடிப்படைகளில் ஒன்றான வாத, பித்த, கபங்களை பற்றிய தெளிவான பகுப்புகள்  இடம்பெறவில்லை என்பதே நிதர்சனம். உடலியங்கியலில் வேதத்தின் சில சிந்தனை ஓட்டங்கள் பரிசீலிக்கபட்டாலும், இவை தவிர்த்து வேத காலத்து நோயியலுடன் ஆயுர்வேதத்திற்கு பெரிய தொடர்ச்சி என ஏதுமில்லை. 

ஆயுர்வேதம் தன்னை வேதத்தில் வேர்கொண்டதாக அறிவித்துக்கொள்ள வரலாற்று காரணிகளை காட்டிலும் சமூக காரணிகளே அதிகம் என்பது அவர்ருடைய தரப்பாக உள்ளது. முளேன்பால்ட்டும் இதையே வலியுறுத்துகிறார் “சம்ஹிதைகளில் முந்தைய காலங்களில் புழக்கத்தில் இருந்த முரண்பட்ட மருத்துவ போக்குகளை பற்றிய தகவல்கள் சிதறிக் கிடக்கின்றன. சில கோட்பாடுகள் செல்வாக்கடைந்து எக்காலத்திற்குமான உண்மையை இயம்புவதாக தன்னை முன்வைத்துக்கொண்டன. இத்தகைய மாற்றத்தின் காரணங்களை ஊகிக்கவே முடியும். இறுக்கமற்ற மத நம்பிக்கைகள் கொண்ட மருத்துவ கோட்பாட்டாளர்கள் மீது இறுக்கமான மத பிரதிநிதிகளின் அழுத்தம் அதிகரித்திருக்கலாம்” என்கிறார். கரம்பெல்கர் இந்த சமூக தேவையை வேறு சொற்களில் சொல்கிறார். தர்க்க அடிப்படையான மருத்துவ முறை முன்னரே உருவாகி பயனுள்ளதாக இருந்தும் கூட பரவலான மக்கள் நம்பிக்கையை பெறவில்லை. ஆகவே அதற்கு ஒரு மத தொடர்பும் புனித பிம்பமும் தேவையாய் இருந்து . அதர்வ வேதத்தின் மாத்ரீக மருத்துவமும் முழுமை அடையவில்லை என்பதால் இவை ஒன்றிணைய வேண்டிய நிர்பந்தம் உருவானது என கௌஷிக சூத்திரத்தைப் பற்றி அவர் சொல்கிறார்.

கௌசிக சூத்திரம் தான் அதர்வ வேதத்தின் மாந்த்ரீக மருத்துவத்திற்கும் மருந்துகளை பயன்படுத்தும் மருத்துவ முறைக்குமான பாலமாக இருந்திருக்க வேண்டும் என கரம்பெல்கர் அடையாளபடுத்துவது இந்திய மருத்துவ வரலாற்றில் அவருடைய முக்கியமான பங்களிப்பாகும். கௌசிக சூத்திரம் வேத காலத்தில் மாந்த்ரீகம் அல்லாத மருத்துவ தரப்பை சார்ந்தது என்று கரம்பெல்கர் வாதிடுகிறார்.

வேத சம்ஹிதைகளின் காலத்திற்கும் ஆயுர்வேத நூல்களுக்கும் இடையிலான காலகட்டம் முக்கியமான ஆய்வுகளை மாற்றங்களை முன்னெடுத்தது. சரக சம்ஹிதையில் வரும் யஜ்ஜஹபுருஷியம் அத்தியாயத்தில் நிகழும் கூடுகை, ருசியைப் பற்றிய கூடுகை, கர்ப்ப வளர்ச்சியைப் பற்றிய விவாதம் ஆகியவை உபநிடத காலத்து இடையறாத ஞான தேடலை, வினாக்களை நமக்கு நினைவுறுத்துகின்றன. கௌசிக சூத்திரமும் இந்த இடைவெளி காலகட்டத்தை சார்ந்ததே. வேதத்தின் அங்கீகாரத்தை மருத்துவருக்கு வழங்குவதன் வழியாக மருத்துவர்களின் மதிப்பை பொது வெளியில் கௌஷிக சூத்திரம் நிறுவ முயன்றது. மருந்துகளுடன், சில மாந்த்ரீக வேத சடங்குகளை சேர்த்து செய்தது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது என்கிறார். எனினும் கென்னெத் ஜிஸ்க் கௌஷிக சூத்திரத்தின் காலகட்டத்தை பொ.மு இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என வகுக்கிறார்.

  ஆயுர்வேத கோட்பாடுகள் வேத மருத்துவத்தின் அடிப்படைகளில் உருவானதல்ல. ஆனால் வேத உருவகங்களை, தொன்மங்களை பயன்படுத்துகிறது. ஆயுர்வேதத்தின் வேர்கள் தேசாந்திரிகளாக திரிந்த துறவிகளை சார்ந்திருந்தது, குறிப்பாக பவுத்த துறவிகளை சார்ந்திருந்ததாக ஆய்வாளர் கென்னெத் ஜிஸ்க் குறிப்பிடுகிறார். ஆயுர்வேதத்தின் அடிப்படைகளை கட்டமைப்பதில் பவுத்தம் அளப்பறியா பங்காற்றி உள்ளது என்பதே வரலாற்று ஆய்வாளர்கள் முன்மொழியும் கருத்தாக இருக்கிறது. சம்ஹிதைகளில் நாம் முறையாக வரையறுக்கப்பட்ட ஆயுர்வேதத்தின் முதல் வடிவம் பவுத்த நூல்களிலேயே உள்ளன.

மருத்துவம் பண்டைய காலத்தில் மெச்சத்தக்க தொழிலாக இருந்ததில்லை. தைத்திரிய சம்ஹிதையில் அஸ்வினி குமாரர்கள் மனிதர்களோடு மருத்துவர்களாக புழங்குவதால் தூய்மையற்றவர்கள் எனும் கருத்து நிலவுகிறது (6.4.9 1-3). தேவ மருத்துவர்கள் என புகழப்படும் அஸ்வினி குமாரர்களுக்கு அவிசு அளிக்கும் வழக்கம் கூட நின்று போனது. மருத்துவர்கள் தூய்மையற்றவர்கள், ஆகவே யாகத்திற்கு தகுதியற்றவர்கள் என்பதால் பிராமணர்கள் மருத்துவம் புரிய கூடாது என்று அறிவுறுத்துகிறது. (6.4.9.2.2). சதபத பிராமனத்திலும் இதே போன்ற ஒரு சிந்தனையோட்டம் காணப்படுகிறது. (4.1.5.14). பிற்கால நீதிநெறி நூல்கள் பிராமண ஆண்கள் பிணத்தை அண்டக்கூடாது என வரையறுக்கிறது. மருத்துவர்களுக்கு யாகத்தில் அனுமதியில்லை, அவர்களின் உணவையும் மறுக்க வேண்டும் என்கிறது மனு சாத்திரம். (மனு 3:152; 2:212,220). பிராமணர்களின் தூய்மைவாத நோக்கின் காரணமாக மருத்துவம் பிராமணர் அல்லாதவர்களிடமிருந்தே வலுபெற்றிருக்க வேண்டும் என்பது முக்கிய நோக்காக வெளிப்படுகிறது. சென்ற கட்டுரையில் இந்திய மருத்துவத்தின் வெவ்வேறு அடுக்குகள் பற்றிய சென்ற கட்டுரையில் விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளதால் அவை இங்கே மீண்டும் பதியவில்லை.

இந்திய வேதியல் மற்றும் ரசவாதம் குறித்து சிறப்பான ஆராய்ச்சிகளை நிகழ்த்திய பூர்ண சந்திர ரே இந்திய வரலாற்றில் வர்ண/சாதி அமைப்பு இறுகியதால் நேர்ந்த அறிவிழப்பை சுட்டிக்காட்டுகிறார். “இந்தியாவில் கைவினை கலைகளுக்கு அப்பால், நன்மை பயக்கும் அறிவியல் மற்றும் கலைத்துறைகள் உயர்குடிகளால் பேணப் பட்டன. சுக்ல யஜுர் வேதத்திலும் தைதிரிய பிராமணத்திலும், பல்வேறு தொழில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்கால சமூக சூழல் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன. கெடுவாய்ப்பாக இறுக்கமான சாதியமைப்பு காரணமாக இந்த அறிவு நம்மிடமிருந்து மறைந்துவிட்டது. வேத காலங்களில் ரிஷிகள் தங்களை ஒரு சாதியாக திரட்டிக்கொள்ளவில்லை, மாறாக அவர்களுடைய வசதிக்கும் இயல்புக்கும் ஏற்ப வெவ்வேறு தொழில்களை தேர்ந்தார்கள். ஆனால் பவுத்தத்தின் வீழ்ச்சி அல்லது வெளியேற்றத்தை ஒட்டி பிராமணர்கள் தங்களின் ஆதிக்கத்தை மீள்நிறுவியபோது இவையெல்லாம் மாறியது. சாதியமைப்பு எப்போதும் இல்லாத வகையில் வலுவாக காலூன்றியது. மனு மற்றும் பிற்கால புராணங்கள் பிராமணர்களை விதந்தோதும் வகையில் திசை மாறியது, ஏற்கமுடியாத, அடவாடியான உரிமைக்கோரலுக்கு காரணமாயின.  சுசுருதர் அறுவை சிகிச்சையின் மாணவனுக்கு சடலம் அறுத்தல் இன்றியமையாத பயிற்சியாக கருதினார். நேரடி அனுபவம் மற்றும் ஞானம் வழியாகவே அவன் நிபுணத்துவம் அடைவான் என்றார். ஆனால் மனுவுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. மனுவை பொறுத்தவரை சடலத்தை தீண்டுவதே தூய்மையான பிராமணருக்கு இழுக்கு. வாக்பட்டரின் காலத்திற்கு பிறகு அறுவைகத்திகள் பயன்பாடு ஊக்கப்படுத்தப்படவில்லை. நாளடைவில் அறுவை சிகிச்சையும், உடற்கூரியலும் பயன்பாட்டிலிருந்து மறைந்தன. விளைவாக இந்துக்கள் ஒரு அறிவுத்துறையை இழந்தனர்.”

அறிவு தேடல், சமூக அழுத்தகங்கள், மத குறுக்கீடுகள், பண்பாட்டு தாக்கங்கள் என அனைத்தும் சேர்ந்தே ஆயுர்வேதத்திற்கு உருவமளிக்கிறது.

2

கென்னெத் ஜிஸ்க் அவருடைய ‘வேதங்களில் மருத்துவம்’ நூலில் சில காலக் கணக்குகளை அளிக்கிறார். 2700 பொ.மு – 1500 பொ.மு காலகட்டத்தை வேதத்திற்கு முற்காலம் என்கிறார், ஏறத்தாழ 2000 பொ.முவை வேத காலம் என்றும் வரையறை செய்கிறார்.  ஆயுர்வேதத்தின் தர்க்க சட்டகங்கள் வேதத்திலிருந்து கிளைத்ததில்லை என்றாலும் மருந்து பொருட்கள் வேதத்திலிருந்து வந்திருக்ககூடும், அல்லது வேதத்திற்கு முற்பட்ட மருத்துவ மரபிலிருந்து வந்திருக்க கூடும் என்கிறார்.

ஜாங்கிட எனும் மந்திரித்த தாயத்தின் மகிமையை பற்றி அதர்வ வேதத்தில் குறிப்பிடும் போது அதன் செயல்திறன் தொல்கால மற்றும் தற்கால மருந்துகளை காட்டிலும் அதிகமானது என்று குறிப்பிடப் படுகிறது. ஆக மாந்த்ரீக மருத்துவத்திற்கு முன்பிலிருந்தே மருந்துகள் பயன்படுத்தும் வழக்கம் இருந்திருக்கிறது என்பது புலனாகிறது. அதாவது அதர்வ வேதத்தின் மாந்த்ரீக மருத்துவம் புழக்கத்திற்கு வரும் முன்னரே, வேத காலத்திற்கு முன்னரே மூலிகை மருந்துகளை பயன்படுத்தும் மருத்துவ முறை இருந்திருக்கிறது.

வேதத்திற்கு முற்காலத்தில் நமது மருத்துவ மரபு என்னவாக இருந்தது என்பதை குறித்து ஜிஸ்க் வைக்கும் பார்வைகள் சுவாரசியமானவை. மொகஞ்சதாரோவின் ‘பெரும் குளியல் குளம்’ கூடாக புரியக்கூடிய மருத்துவ சடங்கிற்காக கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார். நீர் சிகிச்சை சிந்து சமவெளி நாகரீகத்தில் முக்கியமான பங்காற்றி  இருக்கலாம். பிற்காலத்தில் நீர் மருத்துவ குணம் வாய்ந்ததாக புகழப் படுகிறது. மாதலி தனது தேரை விற்று கொணர்ந்த அமிர்தத்தை இந்திரன் நீரில் வீசினான். நதிகளே அதை திருப்பி கொடுத்தன என்பது வேதத்தில் நீரின் மகத்துவத்தை பறைசாற்றும் தொன்மக் கதை.  எட்டு பிரிவுகளில் ஒன்றான ரசாயனத்தின் உருவாக்கத்திற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ‘ஆபம் ரசஹா’ – நீரே ரசம் என்கிறது அதர்வ வேதம். உடலை வளமாக்கும் சாரமாக ரச தாதுவாக பிற்காலங்களில் பரிணாமம் கொள்கிறது. சோம ரசத்துடன் தொடர்புறுத்தப் படுகிறது. அன்றாட புத்துயிர்ப்பு மருந்தாக நீர் குறிப்பிடப்படுகிறது.

சிந்து சமவெளி நாகரீகத்து சுவடுகளில் அரச மரத்தை பெண் கடவுளாக உருவகித்து ஏழு பேர் வணங்கும் அச்சு கிடைத்திருக்கிறது. தலைகீழாக ஒரு பெண், (பூமி தாயாக இருக்கலாம்) ஒரு தாவரத்தை பிரசவிப்பதும், மறுபுறம் ஒரு மனிதன் கதிரருவாளுடன் நின்றிருப்பதும் ஒரு அச்சில் புலப்படுகிறது. இயற்கையை துதிக்கும் வழக்கம் இருந்ததற்கான சான்றாக கொள்ளலாம். இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை இவை கூறுவதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இந்த தொன்மத்தின் நீட்சியை வராக, பலராம போன்ற அவதாரங்களில் கூட குறியீட்டு ரீதியாக நாம் கானலாம். வராக அவதாரம் நிலத்தை உழுவதை குறிக்கும், நிலத்தின் வளத்தை மேலே எழுப்பி கொணர்வதன் குறியீடு என்றொரு புரிதல் உண்டு. பலராமர் கலப்பையுடன் சித்தரிக்கப்படுகிறார்.

மண்டையோட்டில் துளை இடுதல் சிந்து சமவெளி நாகரீகத்தில் வழக்கத்தில் இருந்துள்ளது. ஒரு குழந்தையின் மண்டையோட்டில் வெம்மையான இரும்பு கம்பியால் மூன்று துளைகள் இடப்பட்டுள்ளன என்று தொல்லியல் சான்றுகள் தெரிவிக்கின்றன. புண்ணும் ஆறி அதற்கு பின்னும் அவள் வாழ்ந்திருக்கிறாள். நீர் கோர்த்து மண்டை வீங்கியிருக்கலாம் (ஹைட்ரோசெபலஸ்). மூளையில் அழுத்தம் குறைவதற்கான வழியாக இம்முறை பயன்படுத்தியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் ஊகிக்கிறார்கள். இந்திய மருத்துவ நூல்களில் இவ்வழக்கத்தைப்  பற்றிய குறிப்புகள் எங்குமே இல்லை, ஆனால் பொது யுகத்துக்கு முன், நாலாம் நூற்றாண்டை சேர்ந்த பாலி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாவாக எனும் வினய பீடக நூலில் சீவகர் ராஜகிருஹத்தின் குடிமகன் ஒருவனுக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்து சிறிதும் பெரிதுமாக இரண்டு கிருமிகளை எடுத்ததாக ஒரு நிகழ்வு பதிவாகிறது. இத்தகைய அறுவை சிகிச்சையின் தொன்மையான முதல் பதிவு  இதுதான். மண்டையோட்டில் துளையிடும் வழக்கத்துடன் இதை தொடர்புறுத்த முடிகிறது. சிபி ஜாதக கதையில் சீவகரின் மருத்துவ அற்புதங்கள் குறித்து குறிப்பிடபட்டுள்ளன. சிபி மன்னனின் கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்கிறார். வேத மருத்துவத்திற்கும் பவுத்த மருத்துவத்திற்குமான பாலமாக மருத்துவ துறவி சீவகரை கருதலாம் என்கிறார் கரம்பெல்கர்.

ஒட்டுமொத்தமாக, ஹரப்பன் காலத்தில் பொது சுகாதாரம் பற்றிய அக்கறைகள் இருந்ததும், தாவரங்கள் மருத்துவத்திற்கும் சடங்கிற்கும்  பயன்படுத்தியிருக்க கூடும் எனும் ஊகமும் நமக்கு கிடைக்கிறது.

வேதங்களில் மருத்துவம் சார்ந்த சில அவதானிப்புகளை கரம்பெல்கரும் கென்னெத் ஜிஸ்கும் முன்வைக்கிறார்கள். வேதங்களை பொறுத்தவரை அதர்வ வேதத்தில் ஒப்பீட்டளவில் மருத்துவ தகவல்கள் ரிக் வேதத்தை காட்டிலும் அதிகமாக இருக்கிறது. மேலும் ரிக் வேதம் ‘மருத்துவ அற்புதங்கள்’ சார்ந்த தொன்மங்களை அதிகம் முன்வைக்கிறது. அஸ்வினி குமாரர்கள் தேவ மருத்துவர்களாக கருதப்படுகின்றனர். சியவனர் மற்றும் வந்தனாவிற்கு ரசயானம் மூலம் உயிர் அளித்தனர். தீர்க்க தமசின் தலை துண்டிக்கபட்டபோதும் அவருடைய வாழ்வை நீட்டித்தனர். போட்டியில் காலிழந்த விஷ்பல எனும் பெண் குதிரைக்கு இரும்பு கால் பொருத்தினர், எதிரிகளால் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சிரவ்யாசவை உயிர்ப்பித்தனர். ததீசிக்கு குதிரையின் தலையை வைத்து பின்னர் அவருடைய தலையையே மாற்றினர். இப்படி மேலும் சில அற்புதங்கள் அவர்கள் நிகழ்த்தியதாக வேதங்கள் கூறுகின்றன. இவை அனைத்துமே நடைமுறையில் சாத்தியமற்றவை. பெரும் கற்பனையில் உதித்தவை.

பிராஜபதியும் மருத்துவம் அறிந்தவர் என்று அதர்வ வேதம் சொல்கிறது. குறிப்பாக குழந்தை பேறு மற்றும் மகளிர் மருத்துவத்தை உள்ளடக்கிய பால சிகிச்சை எனும் ஆயுர்வேத பிரிவின் தொன்ம துவக்கமாக கொள்ளலாம் என்கிறார். இந்திரன் அறுவை சிகிச்சையில் தேர்ந்தவன் என்றொரு குறிப்பு அதர்வ வேதத்தில் காணக்கிடைக்கிறது. 10.4.  14- 18 ல் இந்திரன் பாம்பு மற்றும் தேள்கடி வைத்தியத்தில் நிபுணனான இளம் மருத்துவராக தென்படுகிறார். மலைவாழ் வேடனின் மகள் மலை சூழ் சதுப்பு நிலத்தில் மூலிகையை தோண்டி கொண்டிருக்கிறாள். அவளை  இந்திரன் அணுகுவதாக சித்தரிக்கப்படுகிறான்.

உடல் பற்றிய அக்கறையை கவனபடுத்திய விதத்தில் அதர்வ வேதம் ஒரு துவக்க புள்ளியாக முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் தாந்த்ரீக மரபின் தாக்கத்தையும், துவக்கத்தையும், நீட்சியையும் அதர்வ வேதத்தில் காண முடிகிறது. தாந்த்ரீகம் உடலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மரபு. அதை பேணுவதன் வழியாகவும் பயிற்றுவிப்பதன் வழியாகவும் உடலின் நியதிகளை வளைக்க முடியும் என நம்புகிறது.

அண்டத்தில் என்பது வேதத்தின் ‘பலி’ சடங்கின் அடிப்படை குறியீட்டு கருதுகோளாக இருந்தது. அதையே ஆயுர்வேதம் வளர்த்தெடுத்தது என்கிறார் ஜிஸ்க். பலி சடங்குகள் வழியாகவே வேத காலத்தில் உடற்கூரியல் பற்றிய அறிதல்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்கிறார் ஜிஸ்க். குறிப்பாக குதிரைகள் மற்றும் மனித உடல் பாகங்கள் ஒவ்வொன்றையும் சடங்கின் ஒரு பகுதியாக உச்சரிக்கும் வழக்கம் இருந்தது.எனினும் உள்ளுறுப்புகள் சார்ந்த விவரணைகளில் தெளிவில்லை. மேற்கின் தாக்கத்தின் ஊடாக சம்ஹிதைகளின் காலகட்டத்தில் முறையாக உடலை அறுத்து நோக்கும் வழக்கம் வந்திருக்கலாம் என்கிறார். கிரேக்கத்தில் ஹெரோபிலஸ் காலத்தில் (பொ.மு நான்காம் நூற்றாண்டு) மனித சடலங்கள், குறிப்பாக தண்டிக்கப்பட்டவர்களின் சடலங்கள் கூரு போடும் முறை புழக்கத்தில் வந்தது. ஆனால் அங்கும் கூட கேலன் காலத்தில் மனித உடலை கூரு போடும் வழக்கம் நின்று போனது. பன்றிகளை அறுத்து நோக்கி மனித உடலுடன் ஒப்பிட்டே உடற்கூரு புரிந்துகொள்ளப்பட்டது. பதினைந்தாம் நூற்றாண்டில் தான் இவ்வழக்கம் மாறியது. அண்டத்தில் இருப்பது பிண்டத்தில். பிண்டத்திலிருப்பது

வேதகாலத்து இந்தியர்கள் நோயை தீய ஆற்றல்கள் பீடித்து கொள்வதால் நேர்வது என்றே நம்பினார்கள். இவை மனிதருக்குள் நுழைந்து அவர்களை நிலைகுலைய செய்கிறது. இத்தகைய ஆற்றல்கள் ஒவ்வொன்றையும் பெயரிட்டு அடையாளப்படுத்தி கடவுளாக்கினர். மீறலின் விளைவோ, அல்லது பாவங்களின் காரணமாகவோ அல்லது மாந்த்ரீக செய்வினையின் விளைவாகவோ நோய்கள் உருவாயின என்று நம்பினார்கள். எலும்பு முறிவு, காயங்கள் போன்றவை விபத்தில் நேர்பவை எனும் புரிதலும் நிலவியது.

நேர்நிலையில் நலமான மனிதன் குறித்த பார்வை வேதங்களில் வெகு அரிதாகவே வெளிப்படுகின்றன. இந்நோய்கள் பீடிக்கபடாத மனிதன் என்றே புரிந்து கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. தொல் பண்பாட்டு நம்பிக்கைகளின் படி நெடுநாள் வாழ்வது நலமாக வாழ்வதாக பொருள் கொள்ளப்பட்டது. பிறை காண்பது, சூரிய உதயத்தை காண்பது போன்றவை நீண்டாயுளுக்காண அளவுகோளாக திகழ்ந்தன. நூறு வேனிற்காலம் நீண்ட ஆயுளுடன் வாழ்க என்று வாழ்த்துவது வழக்கம். சரத் கால நிலவின் தெளிவும் வெண்மையும் பண்டைய சமஸ்க்ருத இலக்கியங்களில் புகழப் படுகிறது. காளிதாசர் கூட தயிர் சோற்றுக்கு உவமையாக்குகிறார். நிலவு சோமனை, உடலின் வளத்தை, ஞானத்தை என பலவற்றை அர்த்தப் படுத்துகிறது. முழுநிலவை, சூரிய உதயத்தை காண்பது புலனோர்மையுடன் இருப்பது என்பதையும் சுட்டுகிறது. நூறு சரத் காலம் வாழ், ஆயிரம் பிறைகளை காண் போன்ற வாழ்த்துக்கள் வெறுமே உயிருடன் இருப்பது குறித்தான வாழ்த்துக்கள் அல்ல. 

நறுமண தாவரங்களை எரித்து புகை மூட்டி தீய ஆற்றல்களை ஓட்டும் வழக்கம் இருந்தது. மேலும் சில சடங்குகள் நட்சத்திரங்களின் நிலையோடு தொடர்பு படுத்த பட்டுள்ளதால் சோதிட நம்பிக்கைகள் இருந்திருக்கலாம் என்கிறார் ஜிஸ்க். வேத காலத்து இந்திய மருத்துவ  மரபில் தாவரங்கள் போற்றப்பட்டன. பிற்கால மருத்துவ ஆக்கங்களில் வேத காலத்து மூலிகைகளின் தாக்கம் புலப்படுகிறது. வேதகாலத்து மருத்துவர்கள் பிசக் என அழைக்கப்படுபவர்கள், சன்னதம் அடைந்து நடனமிடுபவர்கள் என்றும் மந்திரங்களை உச்சரிப்பவர்கள் என்றும், எலும்பு முறிவையும் சரி செய்பவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மூலிகைகள் மந்திரித்து கட்டுவதற்கும், நறுமண மூலிகைகள் புகைபோட்டு தூய்மையாக்கவும் குணமாக்கவும் பயன்படுத்தப்பட்டன. நோய்களும் தீர்வுகளும் தொன்மங்களுடன் இணைந்தே வழங்கப்பட்டன. மூலிகைகள் கூட தனித்த ஆளுமைகளாக உருவகபடுத்தி, தெய்வங்களாக வணங்கப்பட்டன. வேதத்தில் குறிபிடப்பட்டுள்ள சோமம் எதுவென்று பல்வேறு யூகங்களும் ஆய்வுகளும் நடைபெற்றிருக்கின்றன. இன்றைய தேதியில் இமையமலையில் வளரும் Ephedra வகையாக இருக்ககூடும் என ஆய்வு தரவுகள் வலுவான வாதத்தை முன்வைக்கின்றன. முற்காலத்தில் பெரும் போதையளிக்க கூடிய மூலிகை கூட கால ஓட்டத்தில் நீர்த்து நாம் புழங்கும் சாமனிய தாவரங்களில் ஒன்றாகவும் இருக்கலாம் என்றொரு பார்வையும் உண்டு.   

குஷ்டம் (கோட்டம் என நாம் இன்று பயன்படுத்தும் Sausurea lappa வாக இருக்கலாம் எனினும் உறுதியாக கூற முடியாது) சுரங்களை தீர்க்கும் வல்லமை கொண்ட ஆண் மூலிகை கடவுள் என சோமத்துக்கு நிகராக புகழப்படுகிறது. அதர்வ வேதத்தில் ‘அருந்ததி’ (சகதேவி, சிற்றாமுட்டி, குறுந்தோட்டியாக இருக்கலாம்) எலும்பு முறிவுக்கான பெண் மூலிகை கடவுள் என புகழப் படுகிறது. காய சிகிச்சையை முன்னெடுத்த ஆத்ரேய மரபு மற்றும் அறுவை சிகிச்சையை மையபடுத்திய தன்வந்தரி மரபு என இரு மரபுக்கான வேர்களை இம்மூலிகைகளுக்கு அளிக்கபப்டும் கடவுளின் இடத்தைக்கொண்டு புரிந்துகொள்ளலாம்.

பிராணிகளின் நடத்தை மற்றும் செயல்பாடுகள் பண்டைய மருத்துவ மரபிற்கு மிக முக்கிய பங்காற்றியிருக்கிறது என அதர்வ வேதம் அடையாளப் படுத்துகிறது. காட்டுப் பன்றி, கீரி, பாம்பு, கழுகு, பருந்து, பறவைகள், ஆடு, மாடு, எருது, செம்மறியாடு போன்ற பிராணிகள் மருந்துகளை அறிந்தவை என்கிறது. (AV 8.7-23-26). மற்றொரு தருணத்தில் முள்ளம் பன்றி மருத்துவ தாவரத்தை அடையாளம் காட்டியது என குறிப்பிடப் படுகிறது (AV 5.13.9).

ஆகவே மனிதன் பிராணிகளின் உள்ளுணர்வை நம்பினான், அவதானித்து தனக்கு சாதகமாக பயன்படுத்த துவங்கினான். சம்ஹிதைகளின் காலகட்டத்தில் ஆடு மாடு மேய்ப்பவர்களிடமிருந்தும் வனவாசிகளிடமிருந்தும் மூலிகைகளின் பயன்பாடை அறிந்துகொள்ளலாம் என்று சரகர் கூறுகிறார். தற்காலத்தில் காணிப் பழங்குடிகளின் ‘ஆரோக்கிய பச்சை’ வரை இந்த மரபு நீள்வதை உணர முடிகிறது.

வாத பித்த கபங்களுக்கான அடிப்படை வேதங்களில் உண்டா என ஆய்வாளர்கள் தேடி சலிக்கிறார்கள். ரிக் வேதத்தில் இந்திரன் அக்னி வருணன் நமது மூன்று தாதுக்களை காக்கட்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் முக்குற்றங்களை முத்தாதுக்கள் என குறிப்பிடும் வழக்கமும் உண்டு. எனினும் சாந்தோகிய உபநிடத்தில் அனல், அன்னம், நீர் ஆகிய மூன்றும் முத்தாதுக்கள் என வகுக்கப்படுகின்றன. பின்னர் இது ஐந்தாக பரிணமித்து ஐம்பெரும் பருக்களாக மாறியிருக்க கூடும்.

அதர்வ வேதத்தில் நோய் என்பது நீர் சுமக்கும் மேகங்கள், மின்னல் மற்றும் வாய்வினால் உருவாகிறது என்றொரு வரி வருகிறது. இது தான் பிற்காலத்தில் முக்குற்றமாக வளர்ந்திருக்க கூடுமா? புற வாயுவையும் உடலுக்குள் ஓடும் வாதத்தையும் இணைத்து சரகர் வாதத்தின் மகிமையை போற்றும் வாத கலாகலியம் எனும் அத்தியாயம் எழுதி இருக்கிறார். அதர்வ வேதத்தில் பிராண, உதான, சமான, வியான அபான எனும் ஐவகை வாயுக்களுக்கு மாற்றாக உதானனை விடுத்து நால்வகை வாயுக்கள் குறிப்பிடப்படுகின்றன. (a.v.10.2)

டேவிட் கோர்டன் வைட் வேத காலத்து யாகம், பலி அதன் நீட்சியாகவே வாத பித்த கபங்கள் உருவகப் படுத்தப்பட்டன என்றொரு வாதத்தை வைக்கிறார். அவிசு, யாகம், அக்னி எனும் மூன்றையும் கப, வாத பித்தமாக உருவகிக்கிறார். ஆனால் அவருடைய தரப்பிற்கு போதுமான வலுவில்லை. வாதம் கிரேக்க ஹுமர்களில் ஒப்பிடக்கூடிய ஒன்றல்ல. யின் – யாங் போல் இரு எதிரெதிர் இயல்புகளே இந்திய மருத்துவத்திலும் இருந்திருக்க வேண்டும் என்கிறார் டொமினிக் உஜாஸ்டிக். சுசுருத சம்ஹிதையிலும் கூட அக்னி- சோமா என வெம்மை – குளிர்ச்சிக்கு இடையிலான சமநிலையே உடல் நலத்தை நிர்ணயிக்கிறது என்றொரு பார்வையும் பதிவாகிறது. மருந்துகளின் செயல்திறனை (வீரியம்) கூட வெம்மை – குளிர்ச்சி என்றே வகுக்கிறார்கள். வெம்மை – குளிர்ச்சி எனும் இருமை இந்திய பண்பாட்டில் வெவ்வேறு தளங்களில் நீட்சியடைகிறது. அக்னி- சோமனாக, சூரிய – சந்திரனாக, பித்த – கபமாக, பாதரசம் – கந்தகமாக இந்த எதிரெதிர் துருவங்களை வகுத்துகொள்ள முடியும். அக்னி – சோமா இருமைக்கு அப்பால் வாதத்தை புதிதாக உருவகித்ததால் அதன் சார்பாக பல்வேறு தர்க்க விளக்கங்களை அளிக்க வேண்டி இருந்திருக்கலாம், இந்த அதீத முக்கியத்துவத்துக்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம் எனும் வாதத்தை முன்வைக்கிறார். சில ஆரம்பகால பவுத்த நூல்களில் முக்குற்றங்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. வினைய பீடக நூல்களிலும், மகாபாரதத்திலும் கூட உள்ளன. டொமினிக் உஜாஸ்டிக் வாதத்தை வேதத்திற்கு பிந்தைய பண்பாடு ஆயுர்வேதத்திற்கு செய்த தனித்துவமான முக்கியமான பங்களிப்பு என்றே கருதுகிறார்.

ஆயுர்வேதத்தின் அடிப்படைகள் என்று கருதப்படும் முக்குற்றங்கள், அறுசுவைகள், ஐம்பெரும் பருக்கள், ஏழு தாதுக்கள், ஸ்ரோதஸ்கள் என இதுவுமே வேதங்களில் இருந்து ஆயுர்வேதத்தை அடைந்தற்கான சான்றுகள் இல்லை.

3

மருத்துவன் மாயாவியின் மந்திரவாதியின் நேரடி வாரிசு – டாக்டர். விண்டர்நிட்ஸ்.

வேதத்தின் மாந்த்ரீக மருத்துவம் செவ்வியல் ஆயுர்வேதத்தில் குறைந்தது ஐந்து பகுதிகளிலாவது தனது செல்வாக்கை தொடர்ந்தது என்கிறார் அரியான் ரோசு.

புண், கட்டி, வீக்கம் போன்றவைகளின் சிகிச்சை.
விட சிகிச்சை.
மன நோய்கள் – குறிப்பாக உன்மாதம் (மனப் பிறழ்வு) மற்றும் அபஸ்மாரம் (வெட்டு)
காய்ச்சல் சிகிச்சை
மூலிகைகளின் சேகரிப்பு மற்றும் மருந்து செய்முறை.
இவைத்தவிர குழந்தைகள் நலம், மகப்பேறு மருத்துவத்திலும், குழந்தைகளை பீடிக்கும் கிரக நோய்கள் மற்றும் புத்தாற்றல் பெருக்கும் சிகிச்சை முறைகள் சார்ந்த பகுதிகளில் அதர்வ வேத பாணியிலான மாந்த்ரீக சடங்குகள் சார்ந்த சிகிச்சை முறைகளின் தாக்கம் எஞ்சி இருக்கிறது. தாந்த்ரீக மரபில் காக்கும் கவச மந்திரங்கள், ரக்ஷைகள் போன்றவை புழக்கத்தில் இருந்தன.

மூவித துயரங்கள் ஆதி தைவிகம்- கர்மங்களின் விளைவு, ஆதி பவுதிகம் – உடல் சார்ந்தது, ஆதி ஆத்மிகம் – தன்னுணர்வு, ஆன்மீகம் சார்ந்தது எனும் வகைப்பாடு வேதத்தில் துவங்கி சரக சுசுருத சம்ஹிதைகளிலும் தொடர்ச்சியை காண முடிகிறது. சாந்தோகிய உபநிடத்தில் ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளில் ஒன்றான பூத வித்யா குறிப்பிடப்படுகிறது. இந்த எண் பிரிவுகள் பற்றிய நேரடி தகவல்கள் ஏதும் வேதத்தில் இல்லை என்றாலும் அவை வளர்ந்து வந்ததற்கான அடிப்படைகள் வேதத்தில் உள்ளன என்கிறார் கரம்பெல்கர்.

சரகரும், சுசுருதரும் அவர்கள் காலகட்டத்தின் உச்சபட்ச சாதனைகளாக நிற்பதற்கு அவை பல்வேறு போக்குகளை உள்ளடக்கிய தொகை நூல்கள் என்பதும் காரணம். சுசுருத சம்ஹிதை மற்றும் காசியப சம்ஹிதையில் உள்ள குறிப்புகள் ஆயுர்வேத தரவுகள் அமைப்பு ரீதியாக ஒருங்கிணைக்கப்பட்டு வேர் கொண்டவை அல்ல, தளையற்ற மிதக்கும் தன்மை கொண்ட மரபாக இருந்தது என காட்டுகின்றன.  அதர்வ வேதத்தின் ஒரு பிரிவின் பெயர் ‘சரண வைத்தியா’. அதாவது நாடோடி மருத்துவன். ஆனால் இப்பிரிவு இப்போது கிடைக்கவில்லை. ஆயுர்வேதத்தை பற்றிய தொல் குறிப்புகள் அதில் கிடைக்ககூடும். சரகர் எனும் பிற்கால பெயருடன் மிக நெருங்கிய தொடர்பை அளிக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

அதர்வ வேதத்தில் எலும்புகளின் எண்ணிக்கை மற்றும் பட்டியல் சரக சம்ஹிதையுடன் நெருக்கமாக இருக்கிறது.ஆனால் சுசுருத சம்ஹிதை வேறோர் எண்ணிக்கையை முன்வைக்கிறது. எலும்புகளை ஊன்றி ஆராய்ந்திருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. அதர்வ வேதத்தின் ஸ்திரீகர்மாணி மந்திரங்கள் கர்ப்பமடைவதை மற்றும் கர்ப்ப வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு பற்றியது. ஆயுர்வேதம் இப்பகுதிகளை கையாள்கிறது.

குழந்தைகளை உண்ணும் கண்வர்களிடம் இருந்து காக்க வேண்டும் என ப்ருஷ்ணிபர்னி (சித்திர பர்னி) தாவரத்திடம் பிரார்த்தனை செய்யும் மந்திரம் அதர்வ வேதத்தில் காணக்கிடைக்கிறது. சுசுருத சம்ஹிதையில் இதே ப்ருஷ்ணிபர்னி பாலுடன் சேர்த்து கர்ப்ப கலைவிற்கு உரிய மருந்தாக அளிக்கப் படுகிறது.

ஆயுர்வேதம் மூவித சிகிச்சைகளைப் பற்றி சொல்கிறது. தைவ வியாபஷ்ரயம், யுக்தி வியாப்ஷ்ரயம், சத்வாவஜயம். யுக்தி வியாபஸ்ரையம் சிகிச்சை முறையில் தர்க்க ரீதியான சிகிச்சை முறைகளை மருந்துகளை பரிந்துரைக்கும். சத்வாவஜயம் என்பது மனதை வெல்லுதல், புலனடக்கம் என்றும் கூறலாம். தெய்வம்/ தைவம் என்பது சமஸ்க்ருதத்தில் கர்மவினையை சூட்டுவதற்கான சொல்லாகவும் இருக்கிறது. கர்ம வினையை ஆற்றுபடுத்த தைவ வியாபஷ்ரய சிகிச்சை பரிந்துரைக்கப் படுகிறது.  மணி, மந்திர, ஹோமம், ஜபம், பிரார்த்தனை போன்றவை அதன் வழிமுறைகள் என்று வகுக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேதத்தின் இந்தப் பிரிவு அதர்வ வேதத்துடன் நெருங்கிய தொடர்புடையது.

அதர்வ வேதத்தில் மந்திரங்கள் மற்றும் பிரார்த்தனைகளே நோய் தீர்க்கப் பயன்பட்டிருக்கின்றன. ஒற்றை மூலிகைகளை சடங்குகளில் பயன்படுத்துவதும் வாடிக்கை தான். பின்னர் காலபோக்கில் மருந்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த இருமை பிற்கால ஆயுர்வேத ஆக்கங்களிலும் தொடர்ந்தது. மேலும், மாந்த்ரீக சிகிச்சை மருத்துவ சிகிச்சையை காட்டிலும் புனிதமானது எனும் போக்கு நிலவியதால் மருத்துவ சிகிச்சையை இரண்டாமிடத்தில் வைத்தே அதர்வ வேதம் நோக்கியது. ‘உணவு பிழைகளால் நேரும் நோயை ஆயுர்வேதத்தின் மருத்துவ முறை குணமாக்கும். பாவங்களாலும், மீறல்களாலும் நிகழும் நோய்களை அதர்வ வேதத்து மந்திரங்கள் குணமாக்கும். எனினும் ‘அதர்வன்’ உணவு வழி வரும் நோயிலிருந்தும் காக்கிறான்’ என்கிறது கௌஷிக சூத்திரம்.

அதர்வ வேதத்திலிருந்து ஆயுர்வேதத்திர்கான பரிணாமத்தை நாம் காண முடிகிறது. முழுக்க சடங்குகளும், மந்திரங்களும் கொண்ட அதர்வ வேதம், பின்னர் மருத்துவம் புகுத்தப்பட்ட சடங்குகள் உள்ள கௌசிக சூத்திரத்தின் காலம், பின்னர் மந்திரங்களும் சடங்குகளும் செல்வாக்கிழந்து மருத்துவம் மேலெழுந்த சம்ஹிதைகளின் காலகட்டம். செவ்வியல் ஆயுர்வேத மருத்துவத்தின் எழுச்சி வேத மருத்துவத்தின் மீது ஆதிக்கம் செய்து மந்திர பயன்பாடுகளை முற்றிலும் அழிக்கவில்லை என்றாலும் கீழிறக்கியது. மதத்திற்கும் மருத்துவத்திற்கும் இடையிலான உறவு எல்லா நாகரீகங்களிலும் உள்ளது தான். பிரார்த்தனை வழியாகவும் சடங்குகள் வழியாகவும் தெய்வ ஆற்றலின் துணையுடன் எல்லா நோயையும் குணப்படுத்திவிடலாம் எனும் நம்பிக்கை எல்லா பண்பாடுகளுக்கும் பொது. இன்றும் கூட உபவாச ஜெபங்கள், பிரார்த்தனைகள் நம்பிக்கை மருத்துவம் போல் செயலாற்றி நோயாளிகளை ஆற்றுபடுத்துகிறது. 

புறக் காரணங்களினால் வரும் வீக்கம், கட்டிகளுக்கு மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. சரக சம்ஹிதை சூத்திர ஸ்தானம் 18 ஆம் அத்தியாயத்தில் கட்டுகள் மற்றும் மந்திரங்கள் பயன்படுத்தலாம் என அறிவுறுத்துகிறது. காயங்களை ஆற்றவும், வீக்கம் வடியவும் மந்திரங்கள் சம்ஹிதையில் உள்ளன. பாம்பு மாற்றம் இன்னபிற விஷ கடிகளுக்கு மந்திரங்களின் பயன்பாடு சரக மற்றும் சுசுருத சம்ஹிதைகளில் புழக்கத்தில் உள்ளன. சுசுருதர் ஒரு படி மேலே சென்று, மந்திரங்கள் பயனளிக்கவில்லை எனில் விட முறிவு மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என நடைமுறை அறிவோடு கூறுகிறார். நாய் கடிக்கு சுசுருதர் மந்திரங்களை கூறுகிறார். மந்திரித்த நீரை நாற்சந்தியில் அல்லது நதிக்கரையில் தெளிக்க வேண்டும் என்றும் சொல்கிறார். கௌசிக சூத்திரத்தில் தீய சக்திகளை விரட்ட நாற்சந்தியில் புனித நீர் தெளிக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை தொடர்புறுத்தி கொள்ளலாம். 

ரிக் மற்றும் அதர்வ வேதங்களில் பிராணிகளின் விஷத்தன்மை மற்றும் அதை தீர்க்கும் முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. போவர் சுவடிக்கட்டில் பிக்குவை தீண்டிய கருநாக விடத்தை இறக்கும் புத்தர் கூறிய ஆறு மந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. சம்ஹிதைகளில் மந்திரங்கள் விஷமுறிவு மருந்து தயாரிப்பின் போதும் உச்சரிக்கப் பட்டுள்ளன. (ச.ச.சி. 23, 223). விஷம் பற்றிய போலியான பயத்தை நீக்க மந்திரித்த நீர் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. மகா கந்தி ஹஸ்தி எனும் விஷமுறிவு மருந்தை தயாரிக்கும் போது (ச.சி.23, 90-94) குறிப்பாக மருந்தை அரைக்கும் போது உச்சரிக்க வேண்டிய மந்திரம் சொல்லப்பட்டுள்ளது. உரிய முறையில் மந்திரித்து செய்யப்பட்ட இம்மருந்தை அதர்வ வேதங்களின் தீய மந்திரங்கள் கூட அழிக்க இயலாது என்கிறார் சரகர். அரக்கிற்கு ஆற்றல் ஊட்ட (a.v.5.5. 1,8) குஷ்டம் எனும் மூலிகைக்கு  ஆற்றல் ஊட்ட (a.v.5.4.8, 19.39.3,)  என இதன் முன் தொடர்சிகளை வேதத்தில் காணலாம்.

ம்ருதசஞ்சீவன அகதம் (ச.சி.23- 59) தீவினை, செய்வினை, தீவினை  மந்திரங்களுக்கு எதிராக செயல்படும் என்று அதன் பயன்மதிப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. இன்றும் கூட கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் கைவிஷ பரிஹாராதி குளிகை என்றொரு மருந்து செய்வினை அகற்றும் மருந்தாக தயாரிக்கப் படுகிறது.  பேள சம்ஹிதை சரக- சுசுருத சம்ஹிதைகளை காட்டிலும் தொன்மையாக இருக்கலாம். ஈசனின் கோபத்தினால் சுரம் உருவானது என்பதால் ஈசனை வணங்க வேண்டும்  என்று அறிவுறுத்துகிறது. ருத்திரனை வணங்கும் தூய்மையான, துறவி, கடமை தவறாத, மருத்துவனே சுர சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் சொல்கிறது. விஷ்ணு சகஸ்ர நாமம் சுரத்தின் போது வாசிக்கலாம் என்று சரக சம்ஹிதையில் உள்ளது. இந்த்ராக்ஷி சிவகவசம் முதல் கந்தர் சஷ்டி கவசம் வரை பல்வேறு மந்திரங்கள் உடல் ஆரோக்கியத்தை கோரி பாராயணம் செய்யப்படுவது மரபாக உள்ளது.   

உன்மாதம் (மனப் பிறழ்வு) அபஸ்மாரம் (வலிப்பு) போன்ற நோய்களுக்கு மாந்த்ரீக சிகிச்சைகள் பரிந்துரைக்கப் படுகின்றன. அக்னி, அப்சரஸ்கள், பகன், இந்திரன் போன்றவர்களுக்கு ஆகுதி வழங்கவேண்டும். மந்திரங்கள் உச்சரிக்க வேண்டும், மந்திரித்த மருந்தை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. ரிக்வேதம் அதர்வ வேதங்களில் அபஸ்மாரம் எனும் சொல் பயன்பாட்டிலே இல்லை என்பது கவனிக்கத் தக்கது.

அஷ்டாங்க சங்கிரகத்தில் வாக்பட்டர் இரண்டு மாந்த்ரீக மண்டல வரைபடங்களை அளிக்கிறார். அதன் பின்னர் பதினாறாம் நூற்றாண்டில் தோடரநாதர் ஆக்கத்தில் தான் வரைபடம் காணக் கிடைக்கிறது. ரசவாத நூலான ரசார்ணவத்திலிருந்து பெறப்பட்டதது. இதற்கு முந்தைய காலத்தை சேர்ந்ததாக கருதப்படும் ஹாரித சம்ஹிதையில் சுலபமான பிரசவத்திற்காக ஒரு யந்திரத்தின் வரைபடம் அளிக்கப்பட்டுள்ளது. பொ.பி 850 வாக்கில் அரேபிய மருத்துவத்தில் காணக்கிடைக்கும் சதுர மாந்த்ரீக யந்திரத்தை ஒத்த வடிவம் ஒன்பதாம் அல்லது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த  வ்ருந்த மாதவரின் நூலிலும் தென்படுகிறது என்கிறார் ரோசு.

சாரங்கதர பத்ததி எனும் நூலில் விருக்ஷ ஆயுர்வேதத்தின் பகுதியாக சில மந்திரங்களை பிரதியெடுத்து செடி மரங்களுக்கு கீழ் புதைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சுசுருத சம்ஹிதையில் தாவரங்களை வேரோடு பிடுங்கும் போது ஆற்றுபடுத்த கூறப்படும் மந்திரம் உள்ளது. வேருடன் தாவரங்களை பிடுங்கும் முறை அதர்வவேதத்தில் உள்ளது தான். அதற்காக மன்னிப்பு கோரி ஆற்றுப்படுத்தும் மந்திரம் ரிக் வேதத்தில்(10. 97.20) குறிப்பிடபட்டுள்ளது.

சுசுருத சம்ஹிதை உத்திர ஸ்தானத்தில் புராணங்கள் மற்றும் மகாபாரதத்திலிருந்து சகஜமாக தொன்மங்கள் கையாளப்படுகிறது. பிற்கால சேர்க்கைகளாக இருக்கக்கூடும். குழந்தைகள் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள மந்திரங்கள் அதர்வ வேதத்தில் வேர்கொண்டவை. குழந்தைகளை பீடிக்கும் கிரக நோய்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பேர்கள் யாவுமே தொன்மத்துடன் தொடர்புடையவை. பூதனை என்றொரு நோய்க்கு பெயர். தாய்பால் வழி வருவது. நாமறிந்த தொன்மத்தில் பூதனை குழந்தை கண்ணனை கொல்வதற்கு நஞ்சு ஏறிய பால் ஊட்டுகிறாள். ரேவதி என்பது மற்றொரு நோய்க்கு பெயர். பலராமரின் மனைவி என்று நமக்கு இப்பெயர் நினைவில் இருக்கிறது. நைகமேஷம், ஸ்கந்தம் போன்றவைகள் எல்லாம் கிரகங்களின் பெயர்களாகவே வருகின்றன.

ஆயுர்வேதத்தில் வேதத்தின் தாக்கம் உள்ள பகுதிகள் எவை என்று பார்க்கும் போது,  தொல்கால மனிதர்கள் தங்கள் தர்க்கத்திற்கு அப்பால் உள்ள தளங்களை, மரண அச்சம் அதீதமாக உள்ள இடங்களில், முழுக்கவும் தற்செயல் சார்ந்திருக்க வேண்டிய தருணங்களில் மாந்த்ரீக மருத்துவத்தை அதிகமும் நாடி இருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. அச்சம் நம்மை இயக்கம் போது நாம் தர்க்கத்தை காட்டிலும் இயல்பாக நம்பிக்கையில் தஞ்சமடைகிறோம்.

4

நோய் நீக்குபவன் மருத்துவன். நோயை எவையெல்லாம் நீக்குமா அவை மருந்தாகும் – சரகர்

அதர்வ வேதம் 9.6 பாடலில் மேம்போக்காக தலை, நெஞ்சு மற்றும் வயிறு, முதுகு மற்றும் ஆசன வாய், கால்கள், கரங்கள், உதிரம் மற்றும் பிற பகுதிகள் என நோய் பிரிவை அதன் இருப்பிடம் சார்ந்து வகுக்கிறது. வேதத்தில் கூறப்பட்டுள்ள நோய்களை உள் நோய்கள், புற நோய்கள் என பொதுவாக இரண்டாக வகுக்கலாம். உள் நோய்களை மேலும் மூன்றாக வகைப்படுத்தலாம் – யக்ஷ்மன் தொடர்புடைய நோய்கள், தாக்மன் தொடர்புடைய நோய்கள், இரண்டும் அற்ற வேறு நோய்கள். புற நோய்கள் பொதுவாக  காயம், தோல் நோய்கள் மற்றும் விடம் தொடர்பானவை.

யக்ஷ்மன் மனிதர்களையும் மிருகங்களையும் பீடிக்கும் அசுரன். ஒவ்வொரு பாகமாக பற்றுவான். கைகால்களை செயலிழக்கச் செய்வான், சுரம் தருவிப்பான், நெஞ்சு வலி அளிப்பான், உடல் வலி ஏற்படுத்துவான் என்கிறது அதர்வ வேதம். தேய்மான நோய்களுடன் தொடர்புடையவை என யக்ஷ்மனின் நோய் குறிகளை கூறலாம்.

பல்வேறு வகையான யக்ஷ்மன்கள் உள்ளன. குழந்தைகளையும் பெரியவர்களையும் அவை பீடிக்கும். வேறு வேறு நோய்களுடன் சேர்ந்து வரும் என்றும் சொல்கிறது. பெண்வழி உறவின் வழியே யக்ஷ்மன் வரலாம் என்றும் சோமத்தை சரியாக பக்குவப்படுத்தவில்லை என்றாலும் வரலாம். பாவத்துடன் இந்நோய் தொடர்புப் படுத்தப்படுகிறது. கையில் மூலிகையை வைத்துக்கொண்டு மந்திரங்களை உச்சரித்தால் யக்ஷ்மன் பறவைகளுடன் சேர்ந்து பறந்துவிடும் என்கிறது அதர்வ வேதம். அக்னி வாயு, சாவித்திரி, ஆதித்ய போன்றவர்கள் கடவுளால் அனுப்பப்பட்ட யக்ஷ்மனை விரட்டுவார்கள் (2.33) என்றும் சொல்கிறது.

பிரஜாபதியின் 33 மகள்களை (பிற்கால தொன்மங்களில் இந்த எண்ணிக்கை 27 ஆக நட்சத்திரங்களின் எண்ணிக்கையுடன் இயைந்து வருகிறது) நிலவரசன் மணந்து கொள்கிறான், ஆனால் ரோஹினியின் மீது அதீத மையல் கொண்டிருந்தான். மீதி 32 பேரும் தந்தையிடம் திரும்புகிறார்கள். அனைவரையும் சமமாக நடத்துகிறேன் என உறுதியளிக்கிறான், ஆனால் உறுதியை மீறி மீண்டும் ரோகினியை தேர்கிறான். அப்போது அவனை யக்ஷ்மன் பீடித்தது. அரசனை பீடித்தது என்பதால் ராஜ யக்ஷ்மா என்றும், பாவத்தால் விளைந்தது என்பதால் பாவ யக்ஷ்மன் என்றும், மனைவியிடமிருந்து வந்தது என்பதால் ஜயேன்யா என்றும் வழங்கப்படுகிறது. ஆதித்தியனுக்கு அவிசளிக்க வேண்டும் என்பதே சிகிச்சை. ஜயேன்யா எனும் சொல் ஜனனத்துடன் தொடர்புடையது. பாலுறவு வழி பரவும் நோய் அல்லது பிறப்பிலிருந்து இருக்கும் நோயாக இருக்கலாம்.

அதர்வ வேதத்தில் நெஞ்சு வலியை பற்றி குறிப்பு கானக்கிடைக்கிறது. பலாசம் என்றொரு நோய், யக்ஷ்மனின் வகையாக, தாக்மனின் சகோதரனாக கூறப்படுகிறது. கைகால்களில் உள்ள மூட்டுகளை பலவீனப்படுத்தி இதயத்தை தாக்கும், அக்குளில் விரையளவுக்கு சிவந்த வீக்கம் தென்படும். அதர்வ வேதம் எல்லா நோய்களையும் எதிரிகளுக்கு ஏவிவிட முடியும் என்று நம்புகிறது.

க்ஷேத்ரிய எனும் சொல் விளைநிலத்தை குறிப்பதாக உள்ளது. பரம்பரை நோயாக இருக்கலாம் என்கிறார் ஜிஸ்க். ஒருவகையான யக்ஷ்மன். குழி விழுந்த கண்கள், வலிப்பு போன்றவை இருக்கும். மாந்த்ரீக விடமேரிய உணவை உட்கொள்வதால் நேர்வது என்று சொல்கிறது வேதம். களிமண், மான் கொம்பு போன்றவை நோயை விரட்ட பயன்படுத்தப்பட்டன. தொல்லியல் ஆய்வுகள் மான் கொம்பின் நெடுங்கால பயன்பாட்டிற்கு சான்றுரைக்கின்றன. நாயுருவியும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதர்வ வேதத்தில் குறிபிடப்பட்டுள்ள தாக்மன் நோய் ருத்திரனுடன் தொடர்புபடுத்தபடுகிறது. வருணனின் புதல்வன். கூர்மையான வலி ருத்திரனால் ஏற்படுகிறது. ருத்திரனின் பானங்கள் கட்டிகளை எழுப்புகிறது. தாக்மன் மற்றும் காசம் ருத்திரனின் படைக்கலம்.  ருத்திரனின் கோபத்தின் காரணமாகவே சுரம் உருவானது என்பது சரக சுசுருத சம்ஹிதையில் உள்ள நம்பிக்கை. ரிக் வேத கூற்றின் படி ருத்திரனே முதன்மை மருத்துவனும் கூட..

க்ரோமான் அவருடைய ஆய்வு கட்டுரையில் தாக்மனை மலேரியா காய்ச்சலுடன் ஒப்புமை செய்து நிறுவியிருக்கிறார். அதன் அறிகுறிகள் ஹிப்போகிரேட்ஸ் வகுத்த மலேரியா குறிகளுடன் மிக நெருக்கமாக ஒத்துள்ளன. மழை காலத்துடன் தாக்மன் தொடர்பு படுத்தப்படுகிறது. இடியும் மின்னலும் அதன் ஆயுதம் என்கிறது வேதம். இடி மனிதர்களில் அதையொத்த இருமலை ஏற்படுத்துகிறது. மின்னலின் மஞ்சள் ஒளி காமாலையை ஏற்படுத்துகிறது. அதன் தீவிரம் தலையில் பிளக்கும் வலியை ஏற்படுத்துகிறது. தாக்மன் நீரிலிருந்து பிறந்த நெருப்பு என்றும் சுட்டப்படுகிறது. அதே காலத்தில் தான் மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். எனினும் அனைத்து அறிகுறிகளும் மலேரியாவை ஒட்டியதாகவும் இல்லை. குளிரும் சுரமும் மாற்றி மாற்றி வரும் வெவ்வேறு நோய்களுக்கும் இது பொருந்தக்கூடும். கரம்பெல்கர் டைபாய்ட், ஃப்ளு மற்றும் மலேரியா என மூன்று வெப்ப மண்டல நோய்களுடன் தொடர்பு படுத்துகிறார். எனினும் வரலாற்று ரீதியாக மலேரியாவின் முதல் ஆவணம் இதுவாகவே இருக்கும் என்கிறார் ஜிஸ்க்.

நோயுற்றவரின் உடலிலி இருந்து தாக்மனை மழைகாலத்தில் புழங்கும் தவளைகள் மீது ஏவிவிடுவது சிகிச்சை முறையாக வேதத்தில் கூறப்பட்டுள்ளது. குளிர்ந்த, ஈரமான தவளை கொதிக்கும் சுரத்தை தணிக்கும் என்றொரு நம்பிக்கை நிலவியது. க்ரோமன் ஐரோப்பாவில் இதே போன்று நிலவிய போகிமிய பழக்கத்தை சுட்டி காட்டுகிறார். புனித கிரேகர் நாளுக்கு முந்தைய பனிபடர்ந்த நாளில் பச்சை தவளை ஒன்றை பிடித்து ஒரு பையில் இட்டு தைத்து சுர நோயாளி கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். அந்த பையின் உள்ளே என்ன இருக்கிறது என்பது நோயாளிக்கு தெரியவேண்டியதில்லை. ஒன்பது நாட்கள் அப்படி இருந்தால் சுரம் நீங்கிவிடும் என்றொரு நம்பிக்கை நிலவியதை பதிவு செய்கிறார். குஷ்ட (கோஷ்டம் என்று அறியப்படும் அதே மூலிகையா என்பது தெளிவாகவில்லை) தாக்மனை விரட்டும் முக்கிய மூலிகையாக கூறப்பட்டுள்ளது. சோமனுக்கு சகோதரன் என புகழ்ந்து கடவுளின் நிலையில் போற்றப் படுகிறது. தாக்மன் (காய்ச்சல்) நோய்க்கு பழுக்க காய்ச்சிய கோடாரியை நீருக்குள் அமிழ்த்தி, அந்நீரை குடிக்க செய்வது ஒரு சிகிச்சையாக கூறப் பட்டுள்ளது. இன்று வரை குழந்தைகளுக்கு பயத்தால் வரும் சுரத்திற்கு குழுமோர் காய்ச்சி கொடுக்கும் வழக்கம் நம்முள் உள்ளது.

ரபஸ் என்றொரு நோய் க்ஷேத்ரிய மற்றும் தாக்மனுக்கு நெருக்கமான விவரணைகள கொண்டுள்ளது. மீறல்களால் நேர்கிறது, கால் வழியாக பரவும். அஜகவா எனும் கிருமி இதற்கு காரணமாக சொல்லப்பட்டுள்ளது. மலினப்பட்ட நீருடன் தொடர்புடையது. நீர் அல்லது நீர்மை கொண்ட மருந்து தீர்வுக்காக அளிக்கப்படுகிறது. தோலுக்கு அடியில் வளரும் புழு என்றும் கூறப்படுகிறது. வேதத்தில் கிருமி எனும் பயன்பாடு புழு எனும் நோக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. குடல் புழு, கொக்கி புழு போன்றவைக்கு நெருக்கமான விவரணைகளை கவனிக்க முடிகிறது.

கிருமி பற்றிய குறிப்பு ரிக் வேதத்திழ்க் இல்லை. அதர்வ வேதத்தில் ஊர்ந்து மனிதர்கள் அல்லது பிராணிகளின் உள்ளே புகும் புழுவாக கிருமி கூறப்பட்டுள்ளது. கிருமிகள் புலப்படுபவை, புலபடாதவை என இரண்டாக வகுக்கப் படுகிறது. கிருமிகளின் பாலினத்தை அடையாளம் கண்டார்கள். அவை சமூகமாக ஒரு தலைவர், பிரஜைகள் மற்றும் சார்ந்தவர்கள் என வாழ்வதாக புரிந்து கொள்கிறார்கள். மழைகாலத்தின் முற்பகுதியில் இக்கிருமிகள் பெருகும் என்றும் கூறுகிறது. சூரிய ஒலி புலப்படாத கிருமிகளை கூட கொல்லும் என்கிறது அதர்வ வேதம். ஜெர்மனியின் மரபு மருத்துவத்தில் கிருமிகள் பற்றியுள்ள புரிதல்கள் இந்திய வேத காலத்து புரிதல்களுடன் மிகவும் ஒத்து வருவதாக ஜிஸ்க் சொல்கிறார். கிருமி நோயாகவும், அதன் நிறம் மற்றும் வடிவங்கள் ஒத்ததாகவும், பல் பூச்சி பற்றிய புரிதலும் ஒரே மாதிரி இருப்பதாகவும் சொல்கிறார்.

ரிக் வேதத்தில் அதற்கு முன் எங்குமே குறிப்பிடபடாத நோய் உருவாக்கும் ஆப்வ எனும் பெண் தீய ஆற்றலை பற்றிய சிறிய விவரணை வருகிறது. வயிற்றில் வசிக்கும் அவள் பீடிக்கபட்டவரின் மனதை குழப்புவாள், கை கால்களை இழுத்துப் பற்றுவாள், நெஞ்செரிச்சல் ஏற்படுத்துவாள், இருள் மூட செய்வாள். இந்த அறிகுறிகள் ‘அச்ச தாக்குதலின்’ (panic attack) விவரணைகளுடன் நெருக்கமாக இருப்பதை ஜெல்நேர் சுட்டிக்காட்டுகிறார்.

ஆமீவா என்று குறிப்பிடப்படும் பெண் தீய ஆற்றல் ஏழ்மையுடன் தொடர்புடைய ஊட்டக் குறைவாக இருக்கும் என்கிறார் ஜிஸ்க். மாட்டுப் பால், நெய் போன்றவை அதை விரட்டும் சடங்குகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. ஆமீவா வயிற்றில் உள்ள குழந்தைகளின் மாமிசத்தை உண்ணும் என்றொரு குறிப்பும் காணக் கிடைக்கிறது. மகோதரம் வருணனால் உருவாகிறது. மகோதர நோய் வந்தவன் நீர் நிரம்பிய  தோல் பை போல இருப்பான். சுற்றியும் நீரிருந்தும் அருந்த முடியாதவன் என்று ரிக் வேதம் கூறுகிறது.

விஸ்கந்த – சம்ஸ்கந்த எனும் தீய ஆற்றல்களின் விவரணை டெட்டனசை ஒட்டியுள்ளது. விஸ்கந்தம் என்றால் தோள்களை கிழித்து அப்பால் எறிவது, சம்ஸ்கந்த என்றால் தோள்களை ஒன்றாக பிணைவது. டெட்டனஸ் நோயின் இழுக்கும் தளர்வாக்கும் தொடர் தன்மையை குறிக்கிறது. தாடை பூட்டு ஒரு அறிகுறியாக சொல்லப்பட்டுள்ளது. ஹிப்போகிரேட்ஸ் முதன் முறையாக டெட்டனசை விவரிக்கிறார்.  திறந்த புண்ணுடன் தொடர்புபடுத்துகிறார். கடுமையான பக்கவாட்டு வலி, நெஞ்செலும்பு வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் கூறப்பட்டுள்ளன.

வாஜிகரணம் எனும் ஆண்மைபெருக்கி பிரிவுக்கு தொடர்புடைய பகுதிகளையும் அதர்வ வேதத்தில் காணமுடிகிறது. குதிரை (வாஜி), காளை, கழுதை, யானை, ஆடு போன்றவை ஆண்மையின் சின்னமாக வழங்கப்படுகிறது. விருஷ்யம் எனும் சொல் ரிஷபத்திலிருந்து உருவானது. அதாவது காளையை குறிக்கும். virility எனும் சொல்லுக்கு நெருக்கமாக திகழ்கிறது. உச்சுஷ்மா எனும் மூலிகையைப் பற்றிய குறிப்பு சுவாரசியமாக உள்ளது. ஆண்மையை பெருக்கும் என்று அதர்வ வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தாவரம் ஆண் குறியை வலுப்படுத்தி, இறுக்கி, தூண்டுதலின் போது ஆண் குறியிலிருந்து வெப்பம் உமிழ செய்யும் என்பதாலேயே உச்சுஷ்மா என்று பெயர்.  இந்த தாவரத்தை கந்தர்வர்கள் வருணனனுக்காக தோண்டி எடுத்தார்கள். இது இன்றுவரை ஆண்மை பெருக்கியாக பயன்படும் பூனைக்காலி தாவரமாக இருக்கலாம் என்றொரு ஊகம் உள்ளது.

அதிமானுட ஆற்றல்கள் மனிதர்களுக்கு நோயை உருவாக்குகின்றன என்பது பரவலான வேத காலத்து நம்பிக்கை. நான்கு முக்கிய வகையான தீய ஆற்றல்கள் நோய்களை உருவாக்குகின்றன. ராக்ஷசர்கள் – புலன்களை களவாடுபவர்கள், மூட்டுகளை பீடிப்பவர்கள், பைசாசம் – பீடித்தவர்களின் மாமிசத்தை உண்பவர்கள், அத்ரின்களும் அப்படியே, கண்வர்கள் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளை உண்பவர்கள். இவைத்தவிர்த்து கந்தர்வர்கள் நாயை போன்றவர்கள், அப்சரஸ்கள் சித்தப் பிரமை ஏற்படுத்தி மனப் பிறழ்வை ஏற்படுத்துபவர்கள். நோயை உருவாக்கும் தீய ஆற்றல்களை இருவகையில் எதிர் கொள்கிறது அதர்வ வேதம். பலி சடங்குகள் மூலம் வணங்கி, வேண்டியதை அளித்து விடைப்பெற செய்கிறது அல்லது அதை விரட்டும் எதிர் இயல்புகளை திணித்து வழிக்கு கொண்டு வர முயல்கிறது.

அதர்வ வேதத்தில் வெண் புள்ளி கிலாசம் மற்றும் பலித எனும் இரு பெயர்களில் வெவ்வேறு நோயாக குறிப்பிடப் படுகிறது. பலித பிற்காலத்தில் நரை முடிக்கு உரிய சொல்லாக ஆனது. pale எனும் ஆங்கில சொல்லுக்கு வெளிறல் என்று பொருள். அதனுடன் உள்ள ஒற்றுமை கவனிக்கத்தக்கது. கிலாசம் சாபத்தால் நேர்வதாக அதர்வ வேதம் சொல்கிறது. யானை முடி மற்றும் தந்தம் கொண்ட கை காப்பு நீண்ட ஆயுள் வழங்கும் எனும் நம்பிக்கை வேதத்திலேயே உள்ளது. மணத்தக்காளி முடி வளர்ச்சிக்கு உகந்ததாக துதிக்கப் படுகிறது. தலை வலிக்கு மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே நெய்,நல்லெண்ணெய்,அல்லது கொழுப்பை அருந்துவது ஒரு சிகிச்சை முறையாக கூறப்பட்டுள்ளது. இது ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் ஒன்றான சிநேக பானத்திற்கு நெருக்கமானது.

அதர்வ வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாஷகம் ( mosquito எனும் சொல்லிற்கு உள்ள நெருக்கம் கவனிக்கத்தக்கது) கொசுவாக இருக்கக்கூடும். உபாஜிக எனும் ஒருவகையான எறும்பு (அல்லது கரையான்) உருவாக்கும் நீர் மருத்துவ பயன் கொண்டது என புகழப் படுகிறது. ஒத்த வடிவு/ பண்பு உடையவை அதே போன்ற உறுப்புகளுக்கு நன்மை அளிக்கும் எனும் நம்பிக்கை தொல்கால மருத்துவ முறைகளில் புழங்கியது. கொம்பரக்கு ரத்த விருத்திக்கு பயன்படும் என்று சொல்லப்பட்டது. பக்க வாதத்திற்கு நாயின் காலடி மண்ணை பாதித்த பகுதியில் தடவும் வழக்கம் உள்ளது.நாய் அசைந்து கொண்டே இருக்கும் என்பதால் அதன் இயல்பை ஊட்ட முயல்கிறார்கள்.

அஞ்சன எனும் தாவரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என அதர்வ வேதம் கூறுகிறது. ‘வெளி பூச்சாக, தாயத்தாக, குளிப்பதற்கு, குடிப்பதற்கு என நன்கு வகையில் பயன்படுத்த வேண்டும்”. சடங்குகளுடன் சேர்த்து மூலிகைகள் உட்பயன்பாட்டிலும் இருந்ததை கௌஷிக சூத்திரம் சுட்டிக்காட்டுகிறது. கௌசிக சூத்திரத்தின் பங்களிப்பே கூட இந்த உட்பயன்பாட்டை கொணர்ந்ததாக இருக்கலாம்.

ஆச்சரியமாக சில புற நோய்கள் வேதத்தில் தர்க்கபூர்வமாக அணுகப்பட்டுள்ளன. குருதி வழிவதை நிறுத்த மண்ணை தடவுதல், செடிகளின் நாளங்களை கொண்டு மூத்திர அடைப்பை நீக்குதல், சில கொப்பளங்களை கீறுதல் மற்றும் உப்பு பூசுதல், க்ஷார கர்மம், அக்னி கர்மம், புண்ணின் மீது மரப்பிசின் பூசுதல், தலைமுடி வளர்வதற்கான மூலிகை போன்றவைகளை சில எடுத்துக்காட்டுகளாக கூறலாம். சிந்து சமவெளி நாகரீகத்தின் எச்சங்கள். கொம்பரக்கை பாலில் கொதிக்க வைத்து அடிபட்டவனுக்கு வழங்குவது, அட்டை விடுதல், கட்டிகளை உடைக்க உப்பு தடவுவது, கோமயத்தை கொண்டு திறந்த புண்களை கழுவுவது என பல வழக்கங்கள் கௌஷிக சூத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதர்வ வேதத்தை காட்டிலும் கௌஷிக சூத்திரத்தில் அதிக மருத்துவ குறிப்புகள் உள்ளன என்பதே நிதர்சனம்.

இரண்டு நூல்களும் மேலும் பல தரவுகளை சுவாரசியமாக அடுக்குகின்றன. இந்த நீள் கட்டுரையில்  முக்கியமான போக்குகள், வளர்சிதை மாற்றங்கள், சுவாரசியமான தொன்மங்கள் மற்றும் பண்பாட்டு தொடர்சிகளை ஓரளவு சுட்டிக் காட்டியிருக்கிறேன். வேதங்களையோ, ஆயுர்வேத மூல நூல்களையோ வருடக் கணக்கில் ஆய்வு செய்தால் ஒழிய இவ்விதமான புத்தகத்தை எழுத முடியாது. அதர்வ வேதம் அதிமானுட ஆற்றல்களை அதிகமும் நோய்க்கான காரணிகளாக அடையாளம் காண்கிறது. எனினும் சில தர்க்க தெறிப்புகள், பிற்கால வழக்கங்களின் முதல் புள்ளிகள் தென்படுகின்றன.

ஒட்டுமொத்தமாக, ஆயுர்வேதத்தில் பவுத்தத்தின் பங்களிப்பு மறுக்கமுடியாதது. வேதத்தின் தாக்கமும் பங்களிப்பும் கரம்பெல்கர் முன்வைக்கும் அளவுக்கு அதீதமாகவோ ஜிஸ்க் மறுதலிக்கும் அளவுக்கு அற்பமாகவோ இல்லை என்பதையே சான்றுகள் நமக்கு உணர்த்துகின்றன.