சில வரிகள் நீளும் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்களை தாண்டி நான் பொதுவாக விரிவான சினிமா விமர்சனங்கள் எதுவும் எழுதியதில்லை. காரணம் நான் முறையாக சினிமாவை அறிந்தவன் அல்ல. எனது உலக சினிமா/ மாற்று சினிமா/ வேற்று மொழி சினிமா பரிச்சயம் ஆரம்பநிலையில் தான் இருக்கிறது. ஆனால் தமிழில் வரும் முக்கியமான திரைப்படங்களை திரையரங்கிற்கு சென்று கண்டுவருவது வாடிக்கை. அவ்வகையில் இன்று பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் மெட்ராஸ் பார்த்துவிட்டு வந்தேன். மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று என உறுதியாக சொல்வேன். மிகப்பிராமதமான திரைப்படமாக வந்திருக்க வேண்டியது ஒரு படி கீழிறங்கி மிகநல்ல திரைப்படமாக வந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன். தெளிவாகவும் தீர்க்கமாகவும் தனது அரசியல் பார்வையை முன்வைத்திருக்கிறார் ரஞ்சித். இத்திரைப்படத்தை நான் புரிந்துகொண்ட விதத்தை சற்றே விரிவாக பதிவு செய்யும் முயற்சியே இது, இது விரிவான, முழுமையான விமர்சனம் அல்ல.
Monday, September 29, 2014
Thursday, June 26, 2014
மனம்வெளுக்க காத்திருத்தல் - தெளிவத்தை ஜோசப்பின் படைப்புலகம்
(2013 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது தெளிவத்தை ஜோசெப் அவர்களுக்கு அளிக்கப்பட்டதை ஒட்டி ஜெயமோகன் தளத்தில் வெளியான கட்டுரை)
மலையகத் தமிழ் எழுத்தின் முன்னோடி தெளிவத்தை ஜோசப் அவர்களின் படைப்புலக வாசல் எனக்கு திறந்து கொண்டது என்னவோ அண்மைய விஷ்ணுபுர விருது அறிவிப்பிற்கு பின்னர் தான். எனக்கு வாசிக்கக் கிடைத்த ஏழு சிறுகதைகள், மூன்று குறுநாவல்கள், சுப்பையா கமலதாசன் அவருடைய இலக்கிய வாழ்வைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை, மற்றும் ஒரு நாவல் ஆகியவை அளித்த சித்திரத்தை தொகுக்கும் முயற்சியே இக்கட்டுரை.
என்வரையில் அவருடைய படைப்புகள் இரு களங்களில் இயங்குகின்றன. ஒன்று மலையக தோட்ட வாழ்க்கை மற்றொன்று மலையகத்திலிருந்து கொழும்பு போன்ற பெருநகருக்கு புலம்பெயர்ந்த நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கை. அவருடைய மூன்று குறுநாவல்கள், மீன்கள், கத்தியின்றி ரத்தமின்றி போன்ற சிறுகதைகள் தேயிலைத் தோட்டப் பின்புலத்தில் உருவாகியுள்ளன. அவருடைய நாவலான குடைநிழல், சிறுகதைகளான அம்மா, மழலை, பயணம், மனிதர்கள் நல்லவர்கள், இருப்பியல் போன்றவைகள் நகரத்து பின்புலத்தில் உருவாகியுள்ளன.
ஒற்றன்
(சொல்வனம் இணைய இதழில் ஒற்றன் குறித்து வெளிவந்த வாசிப்பு கட்டுரை -,நரோபா)
ஒற்றனை சில மாதங்களுக்கு முன்னர் முதல்முறை வாசித்திருந்தேன், பின்னர் அதைப் பற்றி எழுத வேண்டும் என்ற விருப்பத்தில் மற்றுமொருமுறை மீள்வாசிப்பு செய்தேன். ஆனால் அப்போதும் எழுத முடியவில்லை. மிகவும் பிடித்திருந்தது என்று சொல்வதை தாண்டி எனக்கு எழுத எதுவுமே இல்லையோ என்று தோன்றியது. அமியின் எழுத்தின் நுண்மைகளை எப்படி விமர்சன கட்டுரையில் கடத்துவது என ஒரு திகைப்பு. வெறும் கதைசுருக்கமாக ஆகிவிடுமோ என்றொரு பயம். மேலும் இதுவே நான் வாசித்த அமியின் முதல் நாவலும் கூட ஆகவே அவருடைய பிற படைப்புகளுடனான ஒப்புமைகளையும் எழுத முடியாது.
அண்மைய சொல்வனம் அசோகமித்திரன் சிறப்பிதழில் வந்த கட்டுரைகளையும் அவருடைய நேர்காணலையும் வாசித்தேன்.
சிறப்பிதழ் கட்டுரைகள் வாசித்தபின்னர் மீண்டுமொருமுறை ஒற்றன் வாசித்தேன். அ.மியின் உலகம் கொஞ்சம் கொஞ்சமாக துலக்கம் பெற்றது. குறிப்பாக திலீப் குமாரின் நேர்காணல் அசோகமித்திரனின் உலகிற்கு கச்சிதமான அறிமுகம் என்றே எண்ணுகிறேன். விரிவாக சில மேற்கோள்கள் வழியாக விவாதிக்க வேண்டிய நேர்காணல் அது.
இயல்புவாத எழுத்தாளர் எனும் அடையாளத்தை கடலூர் சீனு அவருடைய அமானுஷ்ய கதைகளை பற்றி எழுதிய கட்டுரை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. அந்த சட்டகங்களை அவர் மீறி செல்லும் புள்ளிகளை தொட்டுகாட்டுகிறது. அசோகமித்திரன் எழுத்து குறித்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருத்துகள் திலீப்குமாரின் நேர்முகத்தில் சில பகுதிகளாக இடம் பெற்றுள்ளன. அவற்றில் எனக்கு நெருடலாக இருக்கும் கருத்துகளை சூட்ட விரும்புகிறேன்: :
“அசோகமித்திரன் தன் எழுத்தில் நாடகீய உச்சங்களையும் அலங்காரங்களையும் தவிர்த்தவர். எளிமையான, இயல்பான தமிழில் கதை சொல்பவர். மிக மென்மையான உணர்வுகளைப் பேசியவர் என்ற காரணங்களுக்காக அசோகமித்திரனை மதிக்கிறார் திலீப் குமார்.
“அசோகமித்திரனின் எழுத்தில் யாருடைய தாக்கமும் இருக்காது. தாக்கம் இருந்தாலும், வடிவ அளவில் எங்காவது இருந்தாலும் இருக்கலாமே தவிர, உள்ளடக்கத்தில் அப்படி எதையும் பார்க்க முடியாது. குறியீட்டுத்தன்மை கொண்ட கதைகளை அவரிடம் நீங்கள் பார்க்க முடியாது. அப்படி ஒரு குறியீடு இருப்பதே எழுதி முடித்தபின்னர் எங்காவது தெரிய வரலாம். அப்படி எதுவும் எழுத வேண்டும் என்று வலிந்து முயற்சிக்கவே மாட்டார். எதையும் உரக்கச் சொல்லவே மாட்டார், மௌனத்தில்தான் உணர்த்துவார்”.
அயோவாவில் வசதியான அறையில் குடியிருக்கும் போது மழைகால மெட்ராஸ் அவருக்கு நினைவுக்கு வருகிறது. ‘என் அறையில் எல்லா வசதிகளுடன் சௌகரியமாயிருப்பதே பெரும் பாவம் போலத் தோன்றியது,’ என்று உணர்ச்சி வசபடுகிறார். இப்பகுதிகள் உட்பட நாவலில் சில பகுதிகளை வாசிக்கும் போது, இயல்பானதொரு வேகம் இருப்பது புலப்படுகிறது, சே வுடன் தனது நட்பை விவரிக்கும் பகுதிகள், வாழ்க்கையின் மீது பிடிப்பற்று மரணத்தை பற்றி கனா காணும் பகுதிகள், சாலையில் உறைபனியில் சறுக்கி விழுந்து எவரும் அதை பொருட்படுத்தாத தருணம், கண்ணாடி அறையின் பீரோவில் ஒடுங்கி உயிரை கையில் பிடித்து கொண்டு அமெரிக்க விஜயத்தை எண்ணி மறுகும் தருணம், என சிலபகுதிகளில் பொதுவாக அவருடைய எழுத்துடன் அடையாளபடுத்தபடும் இயல்புகளை மீறி ஒருவித கட்டற்ற பெருக்கு வெளிபடுவதாக எண்ணுகிறேன்.
a.mi[படம் : திரு. சேது வேலுமணி]
அமி தன் அனுபவ வட்டத்திற்கு அப்பால் எதையும் மிகைபடுத்தி சொல்வதில்லை என்பதொரு பரவலான நம்பிக்கை. ஒற்றனின் முதல் அத்தியாயத்தில் விமானத்திற்காக லவுஞ்சில் காத்திருக்கும் சித்திரம் வரும். ‘லவுஞ்சு ஒரு ராட்சச திமிங்கலத்தின் உட்புறம் போலிருந்தது. நான் திமிங்கலத்தின் உட்புறத்தை பார்த்ததில்லை. ஆனால் ஏனோ அப்போது திமிங்கலத்தின் நினைவு தான் வந்தது’ என்று எழுதுகிறார். மிஸ்ஸிசிப்பி நதியை படகில் கண்ட போது ‘அக்கரையே தெரியாத மிஸ்ஸிசிப்பி ஆறு அங்கிருந்து சிறிது தொலைவில் தெரிந்தது. அக்கரை தெரியாததற்கு இன்னொரு காரணம் ஆற்றுப் பரப்பைப் பனிப்படலம் மூடியிருந்தது.’ சட்டென்று கற்பனை வீச்சில் ஒன்றை சொல்லிவிட்டு அதற்கடுத்தகனம் தான் எதையோ மிகையாக சொல்லிவிட்டோமோ எனும் பிரக்ஞை எழுந்து, அதை தர்க்கப்படுத்திகொள்ள முயல்கிறார்.
குறியீடுகளை வலிந்து முனைந்து உருவாக்குவதில்லை என்பதும் அவருடைய படைப்புக்களை பற்றி சொல்லப்படும் மற்றொரு கருத்து. நாவலின் இறுதி அத்தியாயத்தில் ஊர் திரும்புவதை பற்றி எழுதுகிறார். ‘நெடுங்காலப் பழக்கம் காரணமாகப் பார்த்து அல்லது கேட்ட மாத்திரத்தில் நான் அறியக்கூடும் பறவைகள் அல்ல அவை. சில மாதங்களே அவற்றை கேட்டிருக்கிறேன். ஓரிடத்தின் உயிரினங்களை அறிய சில மாதங்கள் போதுமா? ஒருவேளை போதுமோ என்னவோ, நான் அப்பறவைகளின் பெயர்களை அறிய முயன்றதில்லை. ஆனால் நிறையக் கூர்ந்து கேட்டிருக்கிறேன். அவை என்ன சொல்ல முயல்கின்றன என்று கூட அவ்வப்போது தெரிய வருவதாகத் தோன்றிற்று.” ஏதோ ஒருவகையில் அயோவாவின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் இவ்வரிகளுக்குள் கடத்தி செல்கிறார் என்றே எண்ணுகிறேன். இதுவுமே கூட துருத்திக்கொண்டு நிற்கவில்லை. இயல்பாக பொருந்திபோகிறது. ஒரு படைப்பாளியின் இயங்கு தளத்தை அப்படி எளிய வாய்ப்பாடுகளாக சுருக்கிவிட முடியாது என்பதற்கு இவை சில உதாரணம்
மேலும், நாடகீய தருணங்கள் எத்தனைக்கு எத்தனை நுட்பமாக, அதிக இரைச்சல் இன்றி சித்தரிக்கபடுகிறதோ அத்தனைக்கு அத்தனை கூர்மையாக இருக்கும் என்றொரு நண்பர் பகர்ந்தது நினைவுக்கு வருகிறது. இது அனைவருக்கும், எல்லா தருணங்களுக்கும் பொருந்தும் விதி அல்ல. ஏனெனில் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் நாடகீய தருணங்களை நாம் அனைவரும் ஒரேபோல் எதிர்கொள்வதில்லை. ஹெமிங்வே பாணி எழுத்து இவருடையது என விமர்சகர்கள் சூட்ட கேட்டிருக்கிறேன். கிழவனும் கடலும் மொழியாக்கம் நாவலை வாசிக்கும் போது அனிச்சையாக நினைவுக்கு வந்தது. ஆனால் மினிமலிஸ்ட் எழுத்து பாணி என்பதை தாண்டி பெரும் ஒற்றுமைகள் ஏதுமில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. அதற்கான காரணம் அவர்களுடைய ஆளுமையில் இருக்கலாம். ஹெமிங்வே ஓர் ஆர்பாட்டமான எழுத்தாளர், அமி அதற்கு நேர்மாறான நிறைவும் அமைதியும் கொண்டவர்.
அசோகமித்திரனின் படைப்புலகத்தை அறிமுகம் செய்யும் சில மேற்கோள்கள்கள் திலீப் குமாரின் நேர்காணலில் இருந்து சூட்டுவது அவசியமாகும்.
“அசோகமித்திரன் துவக்கத்திலிருந்தே தடுமாற்றம் இல்லாமல் எழுதி வருகிறார். ஆரம்ப நாட்களில் இருந்தே சக மனிதர்கள் மீதிருக்கும் அக்கறை அப்படியே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. யாரையும் அலட்சியப்படுத்த மாட்டார். இந்த இயல்பு அவரது கதைகளிலும் வெளிப்படுகிறது. ஒரு கருணையுடன்தான் இந்த உலகத்தைப் பார்க்க வேண்டும், கழிவிரக்கமே இல்லாமல் அனைத்தையும் சொல்ல வேண்டும், இன்னொரு மனிதனைப் பற்றி நல்லவிதமாகச் சொல்ல ஏதாவது இருக்க வேண்டும் என்றுதான் எழுதுகிறார். அவரது இன்சைட்டே அப்படிதான் இருக்கிறது.
“வாழ்க்கையை கண்ணியமாக எதிர்கொள்ளும் பக்குவம் இருக்கிறதா என்ற கேள்வி அவருக்கு முக்கியமான ஒன்று. தன் கண் முன்னால் இருக்கும் ஒருத்தர் படும் கஷ்டங்களைப் பேசும்போதும், அவர் அந்தக் கேள்வியைத்தான் கேட்டுக் கொள்கிறார் – இந்த நிலைமை நமக்கு வந்தால் நாம் இவர்கள் அளவுக்கு பக்குவமாக நடந்து கொள்வோமா என்று.”
Asoka_Mitran_Books_Novelotran
இம்மேற்கோள்கள் எனக்கு ஒற்றனை மற்றுமொரு கோணத்தில் திறந்து காட்டியது. சக மனிதர்களின் மீது, குறிப்பாக வெளிச்சம் படாமல் ஒண்டி வாழும் மனிதர்களின் மீதும் கூட அக்கறையும் வாஞ்சையும் தான் அமியின் படைப்புலகம். இப்படி சுருக்குவது ஆபத்தானது தான் ஆனால் இது மிக முக்கியமான பார்வை. அந்த அக்கறை தான் எவருடனும் ஒட்டாமல் ஒதுங்கியே இருக்கும் தென்னமெரிக்க கவிஞன் வெண்டுராவுடன் நட்பு பாராட்ட வைக்கிறது, அவனுக்காக ‘அவனுடைய ஊரில் அவன் மிகவும் புகழ்பெற்ற கவிஞனாக இருக்கக்கூடும். எப்போதும் அவனை சுற்றி பத்து பேர் இருந்துகொண்டு பேசி சிரித்து உற்சாகமாக இருக்கக்கூடும். இங்கே அவனுக்கு கிடைத்ததெல்லாம் நான்தான்’ என்று கவலையடைய வைக்கிறது, அவன் எடுக்கும் வாந்தியை சுத்தபடுத்த வைக்கிறது. கே மார்ட் கடையில் வாங்கி திருப்பிகொடுத்த அந்த பாழாய் போன தட்டச்சு இயந்திரம் வேறு எவரையும் சென்று சேர்ந்திட கூடாது என்று விசனப்பட வைக்கிறது. ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த வாஞ்சை அவருக்கு நன்மை செய்வதில்லை. எவரிடமும் நட்பு பாராட்டாத அபே குபெக்னாவை அவரிடம் கொண்டு சேர்த்து மூக்கில் குத்துப்பட வைக்கிறது. எளிய மனிதர்களின் மீதான அக்கறை தான் அவரை பீதியுடன் கண்ணாடி அறையில் ஓர் இரவை கழிக்க வைக்கிறது.
அண்மையில் அமெரிக்க கவிஞர் ஆடனின் மறுபக்கம் பற்றி ஒரு அற்புதமான கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. ஆடனின் மனிதாபிமானத்திற்கு எடுத்துகாட்டு. ஆடனின் நுண் உணர்வுக்கும், சக மனிதர்கள் மீது அவர் கொண்டிருந்த அக்கறைக்கும் மிகச்சிறந்த சான்று. அக்கட்டுரையில் ஒரு நிகழ்வை சூட்டுகிறார்.
இலக்கியச் சந்திப்புகளில் அவர் பேராளுமைகளிடமிருந்து தப்பி, அறையில் உள்ளவர்களில் மிகவும் எளிய நபரைத் தேடிச் சென்று சந்திப்பதைப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார். சென்ற ஆண்டு டைம்ஸ் ஆஃப் லண்டன் இதழில் ஒருவர் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் குறித்து கடிதம் எழுதினார்:”அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், என் ஆங்கில ஆசிரியர் கிராமப்புறத்தில் இருந்த பள்ளியில் படித்துக் கொண்டிருந்த என்ன ஒரு இலக்கியக் கூடுகைக்காக லண்டன் அழைத்து வந்தார். அங்கே சென்றதும் அவர் என்னைத் தனியாக விட்டுவிட்டு தன் நண்பர்களைச் சந்திக்கச் சென்று விட்டார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். எனக்கு நாகரிகம் தெரியாது, நளினமாக நடந்து கொளத்த தெரியாது. என்ன செய்வது என்று எதுவும் தெரியாமல் அங்கிருந்தேன். ஆடன் என் நிலையை உணர்ந்திருக்க வேண்டும். அவர் என்னிடம் வந்து, ‘இங்கிருக்கும் எல்லாரும் உன்னைப் போன்ற தடுமாற்றத்தில்தான் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதைக் காட்டிக் கொள்ளாமல் ஏய்க்கிறார்கள். நீயும் ஏய்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்றார்.”
இந்நிகழ்வு எனக்கு அமியை நினைவுபடுத்தியது. ஒற்றனில் அயோவா சிட்டியில் உதவிக்கு அமர்த்தப்பட்ட மாணாக்கன் தான் பர்ட். சமூக அந்தஸ்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கபெற்ற விருந்து ஒன்றில் ஒரு மூலையில் அவனும் அவன் நண்பனும் ஒடுங்கிகிடக்கிறார்கள். பர்ட் கொஞ்சம் கவிதையும் எழுதுவான், ஆனால் இத்தகைய இளம் கவிஞர்கள் கவனம் அடைவது அத்தனை எளிதல்ல. அவனிடம் அவ்விருந்தில் வேலை மெனக்கெட்டு அந்தரங்கமாக கவிதையை பற்றி விவாதிக்கிறார். படைப்பாளிகள் எளிய மனிதர்கள் தான், அவர்களுக்குள் அசூயை இருக்கும், கோபமும், கொந்தளிப்பும், உணர்ச்சி பெருக்கும் இருக்கும். இந்த சமநிலையும் அக்கறையும் படைப்பளிக்கும் உதார குணங்களா என்று தெரியவில்லை, எதையுமே எழுதவில்லை என்றாலும் கூட இவர்களுக்கு இவ்வக்கறை இருந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.
மனிதர்களையும் அவர்களது குணாதிசயங்களையும் நுணுக்கமாக பின்தொடர்கிறது அவருடைய மனம். சிறு சிறு சங்கடங்களையும் கவனிக்கிறது. வரிசையில் நிற்கும் பெண்ணின் காலத்தால் பிந்திய புகைப்படம் அவளுக்கு எழுப்பும் சங்கடத்தை உணர்த்துகிறார். ‘எனக்கு மனிதர்கள் பிரச்சனையாக இருக்கவில்லை. நிறையவே மனிதர்கள். கருப்பு, சிவப்பு, மஞ்சள், மாநிறம், கண்ணை பறிக்கும் வெள்ளை, ஆங்கிலம், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், கொஞ்சம் தெரிந்தவர்கள், நிரம்ப படித்தவர்கள், படித்தவர்கள் போலப் பாவனை செய்பவர்கள். ஆனால் துக்கம், சங்கடம் என்று வந்தபோது எல்லாரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள்.’ எத்தனையோ வகையான மனிதர்கள் அமியை நம்புவதும் நட்புடன் அணுகுவதும் நாடுவதும் ஏன்? பொதுவாகவே அவருக்கு இருக்கும் இந்த அக்கறையும் அன்பும் தான் காரணம் என்று தோன்றுகிறது. எவருடனும் ஒட்டாமல் இருக்கும் பெரு நாட்டு எழுத்தாளர் பிராவோவுடன் நட்பாக இருக்க முடிகிறது. சாதாரண உதவியாளனாக இருக்கும் பர்ட்டுடன் நட்பு பேண முடிகிறது. போலந்து விமர்சகன் வபின்ஸ்கி பற்றி ‘எப்போதும் தனியனாகத்தான் இருப்பான் என்று பிற போலந்து எழுத்தாளர்கள் கூறுவார்கள். ஆனால் அயோவா சிட்டியில் அவன் பெரும்பாலும் என்னுடனேயே இருப்பான்.’ இப்படி சொல்கிறார் அமி. “நீ ஒருவன் தான் நாங்கள் ஆங்கிலம் பேச முயலும் போது எங்களை சங்கடபடாமல் இருக்கும்படி காதுகொடுத்து கேட்கிறாய்” என்கிறார் ஒரு தென்னமெரிக்க எழுத்தாளர்.
oOo
பதினான்கு அத்தியாயங்கள் கொண்ட இந்த சிறுநாவல், நாவல் எனும் வடிவில் மிக முக்கியமான முயற்சி. அசோகமித்திரன் தன்னுடைய முன்னுரையில் இதை எவ்வகை புதினமாக அடையாளபடுத்துவது எனும் தன்னுடைய குழப்பத்தை பதிவு செய்கிறார். இந்த புதினம் ஒரு களம், ஒரு நாயகன், ஒரு காலகட்டத்தில் இயங்குவதால் நாவலே இதற்கு நெருக்கமான வகைப்பாடாக இருக்கும் என்கிறார். தன்னளவில் ஒவ்வொரு பகுதியுமே சிறுகதைக்குரிய நேர்த்தி கொண்டவைதாம். ஆங்கில பத்திரிக்கைக்கு பயனகட்டுரையாக இவர் எழுதி அனுப்பிய பகுதி தவறுதலாக சிறுகதை எனும் தலைப்பின் கீழ் வெளியான வகையில் உருவானது தான் ஒற்றன் என்றும் பதிவு செய்கிறார் அசோகமித்திரன். ஆக நாவல், சிறுகதை, பயண/அனுபவ பதிவு என எப்படியும் வாசிக்க இடமுண்டு. என்னளவில் நான் வாசித்தவகையில் சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் மற்றும் அண்மையில் ஜெயமோகன் இணையதளத்தில் வாசித்த புறப்பாடு தொடர் ஆகியவைகளை இதே வகைபாட்டிற்குள் கொண்டுவரலாம் என தோன்றியது.
அசோகமித்திரனின் இந்நாவலில் ஒரு மெல்லிய அங்கதமும் ஏதோ ஒரு இழப்புணர்ச்சியும் அடிநாதமாக ஓடிக்கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது. ஒரு புகைப்படம் காலமாற்றத்தை சொல்லிவிடுகிறது. எத்தனையோ விஷயங்களின் சாட்சியாகவும் மாறிபோகிறது. ஏழு வருட காலத்தில் புயலும், வெள்ளமும், இழப்புகளும், மரணமும், அன்பும் கோபமும் வந்து போவது போல் ரேஷன் கார்டு தொலைந்துவிடுகிறது, கழுத்து சுளுக்கி கொண்டுவிடுகிறது. எத்தனை பிரம்மாண்டமான விஷயங்களுடன் அத்தனை முக்கியமற்ற நிகழ்வுகளும் கடந்து போகின்றன. அமி இப்படி சொல்வது அவருடைய எழுத்தின் இயல்பு. வாழ்க்கையின் சிறு சிறு சலனங்களையும் கவனிக்கிறார். நினைவுகூர்கிறார். ஷூ வாங்கிபோனதை, பேருந்துக்காக பதைபதைப்புடன் காத்திருந்து சரக்கு வண்டியில் ஏறியதை, பேனா கடிகாரம் தொலைந்து தேடியதையும் வெகு நுட்பமாக பதிவு செய்கிறார்.
அன்னிய தேசத்தில் வசிக்கும் ஒருவர் சந்திக்கும் இரு முக்கிய பிரச்சனைகள் என்று உணவையும் வீட்டு நினைவுகளையும் குறிப்பிடலாம். எழுபதுகளில் தொலைபேசி என்பது எத்தனை அபூர்வமானது. தன் வீட்டிற்கு தொலைபேச முயலும் அனுபவத்தை சொல்கிறார். ஒவ்வொரு எக்ஸ்சேஞ்சாக தொடர்பு கிட்டி இறுதியில் அயோவாவில் பேசும் வாய்ப்பு கிட்டும் போது ‘ஹலோ, நீதானா..?’ என்று மாறி மாறி கேட்டுகொண்டிருப்போம் என்கிறார். அமிக்கு கைவரும் இருண்ட நகைச்சுவைக்கு இது ஓர் நல்ல உதாரணம்.
பூண்டு, இலாரியா, ஒற்றன், மகா ஒற்றன், கண்ணாடி அறை ஆகிய அத்தியாயங்கள் மேலான வாசிப்பனுபவத்தை எனக்களித்தது. அமியின் எழுத்துக்களில் மெல்லிய நீரோட்டமாக ஒருவித நகைச்சுவை ஓடிக்கொண்டே இருப்பதை உணர முடிகிறது. அதிர்ந்து சிரிக்க இயலாத, விளக்கவும் முடியாத, ஒரு புன்னகை மனதிற்குள் விரிகிறது. ஜிம் பார்க்கரின் வீட்டை தேடி செல்கிறார். அவரை ஒரு மெதடிஸ்ட் பாதிரியாரின் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்கள். ‘நான் கிறிஸ்தவ மதத்தில் சேருவதற்கு இன்னும் என்ன தயக்கம் என்று கேட்டார். நான் ஜிம் பார்க்கர் முகவரியை கொடுத்து, “இந்த இடத்திற்கு எப்படி செல்வது?” என்று கேட்டேன்” என்று எழுதுகிறார். எழுத்தாளர்களை ஒரு விழாவில் பாட சொன்ன போது குத்துமதிப்பாக தமிழ் மொழியின் எழுத்துக்களைதான் ராகம் போட்டு பாடுகிறார்.அதையே தான் அவருடைய தோழரும் செய்கிறார்.
பூண்டு, அம்மாவின் பொய்கள் ஆகிய இரண்டு அத்தியாயமும் உணர்ச்சிபூர்வமான முடிவுகள் கொண்டவை. அபேயிடம் குத்துபட்டபோது கூட கோபப்படாத டகராஜான் (அப்படித்தான் ஜப்பானிய கஜுகோ அழைக்கிறார்) சூசியின் கணவரின் கொலைவெறிக்கு பயந்து பதுங்கி உயிர்பிழைத்து வந்த போது தான் கோபப்பட்டு ஜிம் பார்க்கரை பிடித்து உலுக்குகிறார்.
பெரு நாட்டு எழுத்தாளன் பிராவோ ஒரு பிரம்மாண்டமான வரைபடத்தை உருவாக்குகிறான். தன்னுடைய நாவலின் முக்கிய பாத்திரங்கள், எதிர்கொள்ளும் முக்கிய கட்டங்கள் என அத்தியாய வாரியாக வெவ்வேறு வண்ணங்களை பயன்படுத்தி ஒட்டுமொத்த நாவலையும் தன்னுடைய வரைபடத்திற்குள் அடைக்கிறான். அவனுடைய மகத்தான சாதனையை கண்டு வியக்கிறார். அடுத்த அத்தியாயம், ஏன் அடுத்தவரியை கூட தன்னால் திட்டமிட முடியாத போது, இப்படி ஒருவன் இலக்கியத்தை துல்லியமான தொழில்நுட்பமாக மாற்றி வைத்திருக்கிறான் என்று வியக்கிறார். ஆனால் வேடிக்கை என்னவென்றால், இறுதிவரை அவனால் அந்த நாவலை முடிக்கவே முடியவில்லை. அதற்கு பின்னரும் பல நாவல்களை எழுதியிருக்கிறான். படைப்பூக்கம் குறித்து மிக ஆதாரமான கேள்வியை இப்பகுதி எழுப்புகிறது.
மகா ஒற்றன் அத்தியாயத்தில் ‘கலாச்சார வேறுபாடுகள் மனித உறவுகளில் எப்படி விளைவுகள் ஏற்படுத்திவிடுகின்றன என்று துக்கபட்டுக் கொண்டிருந்தேன்.’ என்று எழுதுகிறார். இந்தநாவளின் சாராம்சமும் கூட இது தான் என தோன்றுகிறது. ‘பூண்டு’ அத்தியாயத்தில் சே எனும் கொரிய நண்பருடன் அறையை பகிர்ந்துகொள்ள நேர்ந்த அனுபவமும் இதே சிக்கலை தான் கையாள்கிறது. உக்கிரமான பூண்டு நெடிக்காக தொடக்கத்தில் கொபப்படுகிறார், சே உணர்ச்சிவசப்பட்டு எல்லாவற்றையும் கொட்டிவிட்டு அம்மாவின் மரண செய்திக்காக காத்திருக்கிறான். எந்த பூண்டு பெரும் இடைஞ்சலாக இருந்ததோ, அதன் நெடி அப்போது அவருக்கு பழகி இருந்தது. காப்பியில் அடிக்கும் பூண்டு நெடிகூட பழகிவிட்டது. அதை நல்ல ஔடதம் என்று கூட நம்ப தொடங்கினார். ஒரு நுட்பமான மனமாற்றத்தை இதனூடாக சொல்லி செல்கிறார்.
“அசோகமித்திரனைப் படிக்கும்போது, சென்ற தடவை படித்தபோது எதையோ தவற விட்டுவிட்டோம் என்ற உணர்வோடு படிக்க நேர்கிறது. அவரை மீள்வாசிப்பு செய்யவும், அவரைப் புதிதாகக் கண்டடையவும் ஒரு வாய்ப்பு அவரது எழுத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.”
என்று திலிப் குமார் சொல்கிறார். அதை நினைவுகூர்ந்து இந்தக் கட்டுரையை முடிப்பதே பொருத்தமாக இருக்கும். இன்னும் கூட இந்நாவலை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது எனும் உணர்வே இறுதியில் மேலிடுகிறது.
அந்தரங்க ஆனந்தம்
கிளாரிஸ் லிஸ்பெக்டர்- தமிழில் :நரோபா
போர்ச்சுகீசியத்திலிருந்து ஆங்கிலத்தில்: ரேச்சல் க்ளீன்
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: நரோபா
(சொல்வனம் இதழில் வெளியான மொழியாக்க சிறுகதை)
அவள் குண்டாக, குள்ளமாக, ஒருவித சிவந்த சுருட்டையான தலைமயிர் கொண்டவள். இன்னும் எங்களுக்கெல்லாம் தட்டையான மாரிருந்த போது, அவளுக்கு மார் பெருத்திருந்தது. போதாக்குறைக்கு, மாருக்கு மேலிருக்கும் அவளுடைய சட்டை பைகள் முழுவதும் கேரமெல் சாக்லேட்களால் நிறைத்திருந்தாள். ஆனால் புத்தகங்கள் மீது தீராப்பசி கொண்ட எந்த குழந்தையும் கனவு காணும் ஒன்று அவளுக்கு வாய்த் திருந்தது, புத்தகக்கடை உரிமையாளரான தந்தை.
Tuesday, June 24, 2014
ஆரோகணம்
சொல்வனம் சிறுகதை சிறப்பிதழில் வெளிவந்த நரோபாவின் கதை...
அந்த உயரத்திலிருந்து கீழ் நோக்கினால் எவருக்காயினும் மனம் சில கணங்கள் அதன் உச்ச விசையில் ஓடியடங்கும். எந்த நொடியும் விழுந்து விடுவோம் என்ற பயமும் அந்த உயரத்தின் பிரமிப்பில் கடந்து வந்த தொலைவை நோக்க வேண்டும் என்றொரு குறுகுறுப்பும். பாற்கடலை கடைந்த போது பொங்கிய நுரைத் துளிகள் எல்லாம் உறைந்த மலையாகிவிட்டன போலும், பனி மலையல்ல முடிவற்று நீளும் பனிக் கடல் என்று எண்ணிக்கொண்டார் அந்தக் கிழவர். வாழ்க்கையும் நினைவுகளும் எல்லாம் எங்கோ தொலைவின் அடிவானக் கிடங்கில் சென்று ஒளிந்துக் கொண்டன. காலமும், தேசமும், தொலைவும் எதுவும் அவருக்கு புலப்படவில்லை. ‘பட்’ ‘பட்’ இரண்டுமுறை அந்த ஒலியை செவிக்கு வெகு அருகில் கேட்டவுடன், அத்தனை ஆண்டுகளாக அந்தக் கணத்தை எதிர்கொள்ளும் போது உதிர்ப்பதற்காக சுமந்து இருந்த சொல்லை முணுமுணுக்க முயன்றது மட்டும் மங்கிய நினைவாக எஞ்சியிருந்தது.
Thursday, June 19, 2014
அழியா அழல்
(ஆம்னிபஸ் தளத்தில் வந்த கட்டுரையின் மறுபிரசுரம்)
“அறம் என்ற சொல்லை அறியாத எவரும் இல்லை. அறமென்றால் எதுவென்று முழுதறிந்தவரும் இல்லை” – ஆஸ்திகன், முதற்கனல்
காவியத்திற்கும் இதிகாசத்திற்கும் நுட்பமான வேறுபாடுண்டு. இதிகாசம் எனும் சொல் ‘இது இப்படி நடந்தது’ என்பதை குறிக்கும். காவியம் லட்சிய மனிதர்களைக் காட்டுவதாகும். ராமாயணத்தை காவியம் என்றும் மகாபாரதத்தை இதிகாசம் என்றும் வரையறை செய்யலாம். பாரதத்தின் மாந்தர்கள் கூர்மையானவர்கள் கட்டற்ற அதிகார விழைவும் காமமும் கொண்டவர்கள், குரோதத்தின், வன்மத்தின் பெருநெருப்பில் தங்களையே அவியாக்கிக் கொண்டவர்கள். காவிய நாயகர்கள் லட்சிய குணங்களுடன் காவிய தருணங்களில் வாழ்பவர்கள். இதிகாச மாந்தர்கள் மானுட குணம் கொண்டு காவிய தருணங்களில் வாழ்பவர்கள். அதன் காரணமாகவே நமக்கு மிகவும் நெருக்கமானவர்களும் கூட.

Sunday, February 16, 2014
நீர் திவலைகள்
நேற்று மாலை மருத்துவமனைக்கு வயோதிக பெண்மணியொருவர் ஒரு பதினோரு மாத பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்தார். கழுத்து நிற்கவில்லை, கையை முறுக்கிக்கொண்டே கிடக்கிறாள் எப்போதும் என்றார்கள். ஸ்வெட்டருக்கு உள் பல்லடுக்கு உடைகளுக்குள் ஆழத்தில் கிடந்தாள் அவள். மார் சளி கரட்டு கரட்டென்று இழுத்துகொண்டிருந்தது. மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டது. பிறந்ததும் அழவில்லையாம், பிறகு கொஞ்ச நாட்களில் வெட்டியதாம். மூளையின் எம்.ஆர்.ஐயில் சிறுமூளை சுருங்கிவிட்டதாகவும், மூளையின் வெள்ளை பகுதியில் பாதிப்பு இருப்பதாகவும் தகவல்கள் சொன்னது. என்னுடன் மானசாவும் சேர்ந்துதான் பார்த்துகொண்டிருந்தாள். சட்டென்று ஒருநிமிடம் என பக்கத்து அறைக்கு சென்றுவிட்டாள். குழந்தையின் தந்தைக்கு சென்னையில் ஏதோ ஒருவேலை. இரண்டு வயதில் மூத்த ஆண் குழந்தை வேறு உண்டு. மதுரை குழந்தைநல மருத்துவர் எழுதிய குறிப்பில், சரிவர தொடர் சிகிச்சை எடுத்துகொள்வதில்லை என்று எழுதியிருந்தார். நல்லவார்த்தை சொல்லி, தொடர் சிகிச்சையின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி சில மருந்துகளை கொடுத்தனுப்பினேன். இவர்கள் எனக்கு புதியவர்கள் அல்ல. மாதம் மூன்று நான்கு குழந்தைகளையாவது பார்த்துக்கொண்டு தானிருக்கிறேன். தசை சிதைவும் மூளை பாதிப்பும் இணைந்த குழந்தைகளை மொத்தமாக கண்டு பெரும் அதிர்ச்சியில் உறைந்தது என்னவோ சேலத்தில் வானவன்மாதேவி- வல்லபி சகோதரிகள் நடத்திய முகாமில் பங்குகொண்ட போது தான்.
![]() |
| ராமநாதபுரம் முகாம்- வல்லபி, ஆட்சியர் நந்தகுமார், வானதி |
Labels:
அனுபவம்,
சுகி,
நோய்மை,
மானசா,
முகாம்,
ராமநாதபுரம்,
வல்லபி,
வானவன் மாதேவி
Monday, January 27, 2014
காந்தி – ஒரு மும்முனை விவாதம்
(காந்தி இன்று தளத்தில் வெளியான எனது தமிழாக்கத்தின் மீள்பதிவு)
(Decolonization and Development – Hind Swaraj Revisioned எனும் மகரந்த் பரஞ்சபேயின் முக்கியமான நூலில் ஆஷிஷ் நந்தி எழுதிய முன்னுரையின் மொழியாக்கம்)
ஹரிலால்- உங்களை தீவிரமாக கருத்தில் கொள்ளவேண்டிய அவசியம்தான் என்ன? சொல்லுங்கள்..
காந்தி (மவுனம்)
ஹரிலால்- (வலியுறுத்தும் விதமாக) நீங்கள் சொல்லித்தானாக வேண்டும், ஏனெனில் அந்த கேள்விக்கான விடையை அறிய வேண்டியே நான் என் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்..
காந்தி- என்னை நீ பெரிதாக பொருட்படுத்தவேண்டிய தேவையில்லை.
Tuesday, December 31, 2013
சுருள் நீவி விரியும் காலம்
காலம் சுருண்டுகொண்டுவிட்டது. பெட்டிக்குள் அடங்கும் சர்ப்பத்தின் நாக்கு நுனி மட்டும் இன்னும் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கிறது, நாளை அதுவும் அடங்கிவிடும். ஆயிற்று, மற்றுமொரு வருடம் இதோ தன்னுள் என்னை செரித்துகொண்டுவிட்டது. முடிவற்று நீளும் நதிக்கரையில் நின்று ஒரு சான் நிலமளக்கும் சிறுமி போல் காலத்தை துண்டங்களாக ஆக்கி விட்டிருக்கிறான் மனிதன். முடிவற்ற சாத்தியங்களை தன்னுள் புதைத்துவைத்துக்கொண்டு கைமூடி குறும்பு மின்ன தெற்றுப்பல் தெரிய சிரித்து நிற்கிறாள் காலமெனும் சிறுமி. வேறு அனேக காலதுன்டங்கள் போல் சென்ற ஆண்டும் எனக்கு எல்லாவகையிலும் முக்கியமானதே. வரும் ஆண்டும், ஆண்டுகளும் அப்படித்தான் இருக்கும். ஒரு அற்ப மகிழ்ச்சி, எங்கிருந்தோ எங்கு செல்வதற்கோ ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் போது கடக்கும் தொலைவு ஒன்றும் பெரிதாக தெரிவதில்லை. ஆனால் எங்கோ ஓரிடத்தில் நின்று இளைப்பாறும் கணத்தில் திரும்பி நோக்கும் போது ஒரு பயணம் நிகழ்ந்திருப்பது புலப்படுகிறது.
Friday, December 20, 2013
ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் – ஜெயகாந்தன்
ஆம்னிபஸ் தளத்தில் எழுதிய கட்டுரையின் மீள் பிரசுரம்
கல்கி, தேவன், சேத்தன் பகத், ஹாரி பாட்டர் எனும் வட்டத்தில் புழங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் நவீன தமிழ் இலக்கிய உலகை அறிமுகம் செய்த நண்பன் அவன். இணையத்தில் அவன் புழங்குவதில்லை என்றாலும் சிற்றிதழ் வட்டத்தில் முனைப்புடன் இயங்கிக்கொண்டு தானிருக்கிறான். நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் அவனை நண்பனின் திருமணத்தில் சந்திக்க நேர்ந்தது. ஏதேதோ இலக்கிய அரட்டைகள் என சுகமாக கழிந்துக்கொண்டிருந்த எங்கள் உரையாடல் மெல்ல காந்தியை பற்றியும் அண்மைய காலத்து அரசியல் நிகழ்வுகள் பற்றியும் திரும்பியது. சில நிகழ்வுகளில் எனது அரசியல் நிலைப்பாடை தெளிவு படுத்த வேண்டும் என்று கோரினான் ஒவ்வொரு விஷயத்திலும் நான் ஒரு நிலைபாட்டை எடுத்துத்தான் ஆக வேண்டுமா? ..இது சார்ந்து நான் எந்தவொரு நிலைப்பாடையும் எடுக்கவில்லை..நான் எழுதுவதும் வாசிப்பதும் உண்மையில் எனக்கொரு ஆன்மீக அனுபவம் அவ்வளவே..அரசியல் சர்ச்சைகளை பற்றி அதிகம் அலட்டிகொள்வதில்லை’ என்றேன். ‘ காந்தியின் பெயரை சொல்லிக்கொண்டு திரிகிறாயே தவிர அவரின் நேர்மை உன்னிடம் இல்லை’ என்று கோபமாக சொல்லிவிட்டு அகன்று சென்றான். அவன் சென்றபிறகு யோசித்துக் கொண்டிருந்தேன். உண்மையில் எனக்கு நேர்மை இல்லையா? சிந்தனைகள் சுழற்றியடித்தன. வேறு பலரைப்போல் நானும் காந்தியின் பிம்பத்து நிழலில், ஒளிபுகாத இருளில் என் அகத்தை மறைத்து வைக்கிறேனா? கொஞ்சம் சுய விமர்சனங்களுக்கு பின்னர் இறுதியாக இப்படியொரு முடிவுக்கு வந்தேன், காந்தியின் அளவுக்கு இல்லையென்றாலும், ஓரளவு நேர்மை இருக்கவே செய்கிறது. ஆனால் காந்திக்கு இருந்த துணிவில் கால் பங்கு கூட எனக்கில்லை.

தமிழில் ‘cult status’ அனுபவித்த கொண்டாடப்பட்ட/ கொண்டாடப்படும் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. ஒட்டுமொத்தமாகவே வாசிக்கும் விகிதாச்சாரம் குறைவு என்பது முக்கிய காரணமாக இருக்கலாம். ஜெயகாந்தன், சுஜாதா இருவரையுமே இவ்வகையில் முன்னோடிகள் என வரையறுக்கலாம். மக்கள் இவர்களை பின்தொடர்ந்தார்கள், அவர்களுடைய கருத்துக்களை வாழ்வில் பொருத்தி பார்த்தார்கள், எழுத்தாளர்கள் வாசகர்களுடைய அந்தரங்கமான மனவெளியை ஆக்கிரமித்தார்கள். அதுவும் குறிப்பாக ஜெயகாந்தன் எழுத்துலகில் ஒரு நாயகராகவே உலா வந்தவர். எழுபது எண்பதுகளில் பிறந்தவர்களில் ஊருக்கு ஒருவரின் பெயராவது ஜெயகாந்தன் என்று இருக்கும்.
ஜெயகாந்தனின் சில சிறுகதைகளை தான் நான் முதன்முதலில் வாசித்தேன். உண்மையில் பெருத்த ஏமாற்றமே எஞ்சியது. அதன் பின்னர் மீண்டும் கொஞ்ச காலம் கழிந்து அவருடைய சில நாவல்களை வாசிக்க நேர்ந்தது. ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ உண்மையில் ஒரு நல்ல படைப்பாக என்னை கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும். ஆனாலும் அக்காலக் கட்டத்தை சேர்ந்த, அவரைக்காட்டிலும் அபார மொழித்திறன் கொண்ட கதை சொல்லிகளை நான் வாசித்திருக்கிறேன். அவருக்கிருந்த வசீகரத்திற்கான காரணம் எனக்கு விளங்காமலே இருந்தது, ஒரு இலக்கியவாதியின் அரசியல் அனுபவத்தை வாசிக்கும் வரை. ஏனெனில் ஜெ.கேவைப் பொருத்தவரை எழுத்து என்பதை தாண்டி எழுத்தாளர் எனும் ஆளுமையின் மீதான ஈர்ப்பு. தான் அவரை அத்தனை பிரம்மாண்டமாக ஆக்கியது என தோன்றுகிறது. படைப்பாளி எனும் திமிரும், உச்சபட்ச நேர்மையும் அவரை இன்றும் வாசகர்கள் கொண்டாடும் ஒரு படைப்பாளியாக ஆக்கியுள்ளது.
ஜெ.கே இளமை காலத்தில் காந்தியின் பால் ஈர்க்கப்பட்டு, கம்யுனிச பின்னணியில் வளர்ந்து, நேரு, காமராஜர் காட்டிய சோசியலிச சமூக கனவை தனதாக சுவீகரித்து கொண்டவர். 1971 முதல் மூன்றாண்டுகளுக்கு துக்ளக் இதழில் வெளிவந்த தொடர் தான் இந்த நூல். அதன் பின்னர் எத்தனையோ மாற்றங்கள் நேர்ந்துவிட்டன. எமெர்ஜென்சி, காமராஜரின் மரணம், இந்திராவின் மரணம், எம்.ஜி.ஆரின் எழுச்சி மற்றும் மரணம், இன்னும் என்னென்னவோ. தி.மு.க தலைவர் கருணாநிதியையும், அண்ணாவையும், ஒட்டுமொத்தமாக தி.மு.கவின் கொள்கைகளையும் கடுமையாக இந்நூலில் விமர்சித்து எழுதியிருக்கும் ஜெ.கே கூட தி.மு.க தலைவருடன் ஒரே மேடையில் அமர்ந்து சில காலத்திற்கு முன்பு உரையாற்றியது சிலருக்கு கடும் அதிருப்தியை அளித்தது. நான் அதை தவறென்று சொல்ல மாட்டேன்.. உக்கிரமும் கொதிப்பும் அடங்கி முதுமையில் பேரமைதியை நெருங்கும் தருணத்தில் கடந்த கால சில்லறை சர்ச்சைகள் எல்லாம் பொருளிழந்து போகக்கூடும் அல்லது வழி தவறிய சாதாரண வாய்ப்புகள் கூட அதி பிரம்மாண்டமாக மீண்டெழுந்து விரக்தியை அளிக்கக்கூடும். ஜெ.கே அவ்வகையில் மனவிரிவுடன் அமைதிக்கு அருகாமையில் இருக்கிறார் என்று மகிழ்ச்சியடைய வேண்டும். ஒருகால் இந்த நூலை ஜெ.கே இன்று எழுதியிருந்தால் இது இன்னும் பல உள் அடுக்குகளை கொண்டதாக இருந்திருக்கும்.
பொது வாழ்வில் நேர்மையும் துணிவும் கொண்ட நுட்பமான படைப்பிலக்கியவாதியின் வழியாக வரலாற்றை வாசிப்பது ஒரு அனுபவம். அதுவும் ஜெ.கே போன்று அக்கால அரசியல் ஆளுமைகளுடன் பழகிய, அரசியல் மேடைகளில் புழங்கியவர் முன்வைக்கும் விமர்சனங்களும் பார்வைகளும் கூர்மையானவை. காந்தி, நேரு, காமராஜர் ஆகிய மூன்று ஆளுமைகள் மீது மிகப்பெரிய அளவில் மரியாதை கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக காமராஜரைப் பற்றி இவரளிக்கும் சித்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது. எனக்கு தெரிந்து காமராஜரை மட்டுமே அவர் தலைவர் காமராஜர் என்று விளிக்கிறார். காந்தியை நெருங்கி அறிய முற்பட்ட தொடக்க காலத்தில் நேருவின் மீது எனக்கொரு விளக்க முடியாத வெறுப்பு இருந்ததுண்டு.. ஆனால் அண்மைய காலத்து வாசிப்புகள் வழியாக அவருடைய அத்தனை பலவீனங்களுடனும் நேரு எனும் மகத்தான மக்கள் தலைவரை என்னால் நெருங்கி புரிந்துகொள்ள முடிகிறது. இந்நூல் அப்புரிதலை உறுதிப் படுத்தி விரிவு படுத்துகிறது என்று நிச்சயம் சொல்வேன்.

ஒட்டுமொத்தமாக இந்நூலின் உள்ளடக்கத்தை இப்படி தொகுத்து சொல்லலாம், மானுடத்தை மீட்டு சமதர்ம சோசியலிச சமூகத்தை கட்டமைக்க நமக்கிருக்கும் ஒற்றை பெரும் வாய்ப்பாக ஜெ.கேவிற்கு கம்யூனிசத்தின் மீதிருந்த நம்பிக்கை, மற்றும் அவர் அனுபவம் வழியாக இந்தியாவில் நடைமுறையில் அது அடைந்த வீழ்ச்சி. இந்தப் புள்ளியை சுற்றியே அவருடைய அரசியல் செயல்பாடுகள் மற்றும் பார்வைகள் இருந்தன. ஒரு இயக்கம் அல்லது அமைப்பிற்கு ஒரு பொது செயல்திட்டமிருக்கும், அவ்வியக்கத்தில் பங்கு வகிக்கும் தனிமனிதனுக்கு அந்த செயல்திட்டத்தின் பால் மாற்று கருத்து இல்லையென்றால் சந்தோஷம். ஆனால் தனி மனிதனாக தான் பங்கு வகிக்கும் இயக்கம் தான் அறமென்று நம்பும் ஒரு திசைக்கு நேரெதிர் திசையில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் பயணித்தால் தனி நபராக நாம் அங்கு என்ன செய்ய இயலும்? நாமும் அந்த சுழலில் நம்மை பொருத்திக்கொண்டு கரையேறலாம் அல்லது நாம் சரி என்று நம்பும் திசையை நோக்கி எதிர்த்து நீந்தலாம் அல்லது போதும் நமக்கேன் வம்பு என்று கரை ஒதுங்கலாம். ஜெ.கே தான் நம்பும் கம்யுநிசத்திற்கு விசுவாசமாக இருக்கும் அதேவேளையில் கட்சி எதிரி என அரசியல் காரணங்களுக்காக கட்டம் கட்டும் நபர்களை அப்படியே எதிரி என்று ஏற்றுக் கொள்பவர் அல்ல. காந்தியையும் நேருவையும் காமராஜரையும் வெவ்வேறு காலகட்டத்தில் எதிரிகளாக கட்டமைத்த கட்சியின் நிலைபாட்டிற்கு உடன்பட மறுக்கிறார். சோசியலிச நாடாக தன்னை பிரகடனப் படுத்திக்கொண்ட சீனா இந்தியாவை ஆக்கிரமிக்க தொடங்கியபோது கம்யுனிஸ்டுகளில் இரு பிரிவுகள் தோன்றின. சீனாவின் நாடுபிடிக்கும் வேட்கையை ஆதரிக்கும் ஒரு கோஷ்டியும் அதை எதிர்த்து நிற்கும் மற்றொரு பிரிவும். (CPI க்கும் CPM க்கும் உள்ள வேறுபாடு இப்போது தான் புரிந்தது) ஜெ.கே பால தண்டாயுதபாணி, மோகன் குமாரமங்கலம் வழியில் நேருவின் இந்தியாவிற்கு துணையாக நின்றார்.
ஜெ.கேவிற்கு இருந்த சில நுட்பமான அரசியல் புரிதல்கள் உண்மையில் என்னை வியப்பில் ஆழ்த்துகிறது. ஜீன் ஷார்ப், எரிக்கா போன்ற அரசியல் ஆய்வாளர்கள் அகிம்சை மற்றும் வன்முறை போராட்டங்களை பற்றி ஆராய்ந்து அண்மைய காலங்களில் கண்டடைந்த முடிவுகளை ஐம்பதுகளின் தொடக்கத்திலேயே அதாவது அவருடைய பதின்ம வயதினிலேயே அடைந்துவிடுகிறார் ஜெ.கே.
சுதந்திரத்திற்கு பின்பான இந்தியாவில் நேருவுக்கு ஆதரவாக இருந்த ஜோஷியின் தலைமை அகன்று ரனதிவே அப்பதவியை அடைந்தவுடன் அரைக்குறையாக புரட்சிக்கு அறைக்கூவல் விடுக்கப்பட்டு, அரசால் கம்யுனிஸ்டுகள் ஒடுக்கப்பட்டனர். சில காலம் கம்யுனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. அந்த கால கட்டத்தில் ரகசிய நடவடிக்கைகளில் பங்கு வகித்த ஜெ.கே சொல்லும் மிக நுட்பமான அவதானிப்பு ஒன்றை சூட்டுகிறேன்.
“ஒரு இயக்கம் தனது லட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ள ரகசியமான வழிகளையும், பலாத்காரமான முறைகளையும் கைக்கொள்ளும்போது அந்த இயக்கம் சம்பந்தப்பட்ட தனி மனிதர்களிடம் ஒளிந்துக் கொண்டிருக்கிற பலவீனங்களும் தனிமனிதக் குறைபாடுகளும் இந்த ரகசிய முறையைப் பயன்படுத்திக்கொண்டு வெளிபடுகிற விபரீதங்களை நான் கண்டதால் ரகசிய முறைகளை வெறுத்தேன்”.
ஜெ.கேயின் மேடை பேச்சை கேட்டு வளராத தலைமுறையை சேர்ந்தவன் என்றாலும் கூட அவர் உரையாற்றிய காலகட்டம் மற்றும் சூழலை கணக்கில் கொண்டு அவர் உரை எத்தகையதாக இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. உதாரணமாக திருச்சியில் நடைபெற்ற எழுத்தாளர்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த பெரியாரின் முன்னிலையில் அவராற்றிய உரை http://www.thoguppukal.in/2011/02/blog-post_2364.htmlஒரு உதாரணம். சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றதற்கு பிராமணர்கள் ராஜாஜியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வாக்களித்தது தான் என்றொரு பேச்சு கிளம்பியிருந்த சூழலில் சென்னை வாழ் பிராமண இளைஞர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு, “யார் பிராமணன்?” என்று அவராற்றிய உரை அவருடைய துணிச்சலுக்கு எடுத்துக்காட்டு. அண்ணாவின் மரணத்திற்கு பின்பான காலகட்டத்தில் கண்ணதாசன் ஏற்பாடு செய்திருந்த அஞ்சலி கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை மற்றொரு உதாரணம். இறந்துவிட்டார் என்பதில் வருத்தம் தான் என்றாலும், அதற்காக அவரை விமர்சிக்காமல் இருக்க முடியாது என்று கடுமையாகவே உரையாற்றுகிறார். பண்பாட்டு சீரழிவுக்கு காரணம் தி.க / தி.மு.க அல்ல மாறாக சீர்கேட்ட பண்பாட்டின் விளைவே அது என்கிறார். அண்ணாவின் மரணத்திற்கு கூடிய கும்பலை பற்றி பலரும் வியந்து பெசிக்கொண்டிருத சூழலில் கும்பலுக்கும் (mob) கூட்டத்திற்கும் (gathering) உள்ள வேற்றுமையை கோடிட்டு காட்டுகிறார். இளமை பருவத்தில் அமெரிக்க தூதரகத்தின் மீது கல்லெறியும் போராட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டு இறுதியில் தவறாக நூலகத்தின் மீது கல் எறிந்தனர். அவர் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. இவர் திட்டமிட்ட எண்ணிக்கையை காட்டிலும் , சம்பந்தமில்லாத நபர்கள் கூட கல் எறிந்துவிட்டு சென்றதை கவனித்து இத்தகைய கும்பல் கலாச்சாரத்தின் அழிவு தன்மையை உணர்ந்ததாக சொல்கிறார். “காந்திஜியைப் பற்றியும் சாத்வீகப் புரட்சி பற்றியும் பெரிய நினைப்புகள் வைத்திருந்த எனக்கு இந்தப் பேதைத்தனம் எப்படி வந்தது? மனிதர்களை பலாத்காரம் எவ்வளவு வேகமாக பற்றிப் பிடித்துகொள்கிறது? தங்களுக்கு சொந்தமில்லாதவற்றை எல்லாம் அழித்து விடுவதிலே அவன் எவ்வளவு மும்முரமாக நிற்கிறான்!”
தோழர் ஜீவானந்தத்துடன் பழகியவர் ஜெ.கே. அவருடைய மரணத்திற்கு பின்னர் எழுதிய டைரிக் குறிப்பின் சில பகுதிகள் இந்நூலில் உள்ளது. தன்னை தானே அந்த துக்கத்திலிருந்து மீட்டுக்கொள்ளும் அற்புதமான எழுத்துக்கள். மார்க்சிய அரசியலில் அவர் ஆசானாக கருதும் பால தண்டாயுதபாணி காமராஜுக்கு எதிரான நிலைப்பாடை எடுத்தபோது அத்தனை ஆண்டுகால நட்பில் விரிசல் வந்து பிரிய நேர்கிறது. உணர்ச்சிகரமான பிரிவுக்கு பின்னரும் அவர்களுடைய நட்பு நீடித்தது. பாலன், எஸ்.ராமகிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம், ஆர்.கே.கண்ணன் போன்ற அக்காலத்திய கம்யுனிச தலைவர்களைப் பற்றி விரிவாகவே பேசுகிறார். அதேப்போல் திமுக விலிருந்து விலகிய ஈ.வி.கே சம்பத் பற்றியும் மதிப்புடன் பேசுகிறார்.
“ராஜாஜியின் தோல்விகளுக்கெல்லாம் கரணம் அவர் காந்தியாக முயன்றது தான். காந்திஜியின் தத்துவங்களையும் லட்சியங்களையும் அவர் சித்த சுத்தியுடன் ஏற்றுக்கொண்டாலும் அவர் காந்திஜிக்கு இணையானவராக இல்லை. காந்திஜி வர்ணாசிரம தர்மத்தை மந்திரிசபைகள் நிறைவேற்றும் சட்டங்களின் துணைக் கொண்டு நாட்டில் புகுத்த நினைக்கவோ முயலவோ இல்லை.” என்று ராஜாஜிக்கு உரிய மரியாதையை அளித்த பின்னர் தான் கடுமையாக விமர்சிக்கிறார். மற்றொரு தருணத்தில் காமராஜரை வீழ்த்த ராஜாஜி தி.மு.க துணை நாடிய சல்லிசான அரசியலை கடுமையாக விமர்சிக்கிறார். அவ்வகையான கொள்கையற்ற கூட்டணிகள் அமைவதற்கு இந்திய அளவில் ராஜாஜியே வழிகாட்டினார் என்கிறார். சுதந்திரா கட்சியின் உதயத்தை தேசிய அரசியலின் மிக முக்கியமான கட்டம் என கருதும் ஜெ.கே, அதற்கான காரணங்களை பட்டியலிடுகிறார்- சோசியலிச இடது சாரி சார்புடைய, சோவியத்துக்கு அணுக்கமான காங்கிரஸ் கட்சிக்கு நேரெதிராக காந்திய, அமெரிக்காவுக்கு அணுக்கமான, வலது சாரி சார்புடைய சுதந்திரா கட்சி உருவாவதன் மூலம் அது ஒரு வலுவான எதிர்தரப்பாக இருக்க முடியும் என்று கருதுகிறார். ஆனால் அக்கட்சியும் வீழ்ந்தது.
துணைப் பிரதமராக திகழ்ந்த மொரார்ஜி தேசாயை விமர்சித்து எழுதிய தலையங்கம் இப்படி தொடங்குகிறது – ‘நேருவைப் போல் தொப்பி அணிந்துள்ள மொரார்ஜி அவர்களே’. தி.க/தி.மு.க, அண்ணாதுரை, கருணாநிதி ஆகியவர்களின் மீது ஜெ.கே வைக்கும் கடுமையான விமர்சனங்கள் இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கவனப்படுத்தாமல் செல்வது இந்நூலுக்கும் ஜெ.கேவிற்கும் செய்யும் அவமரியாதை. தேசிய ஒருமைப்பாடை குலைக்கும் குறுகிய இன/மொழி/ பிராந்திய வாதத்தை முன்மொழியும் ஃபாசிச கூறுகள் கொண்ட இயக்கம் தான் தி.க/தி.மு.க என்பதே அவருடைய கருத்தாக இருந்திருக்கிறது. தெளிவாக தி.க/ தி.மு.க தனது எதிரி என்பதை அறிவித்துவிட்டு, அவர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடையே தொடர்ந்து எடுக்கிறார். மேம்போக்கான கடவுள் மறுப்பு, பிராமண த்வேஷம், அதீத தமிழ் பற்று போன்றவை திராவிட கட்சி ஏற்படுத்திய மாயைகள். நாத்திக வாதம் ஒன்றும் இந்திய மரபிற்கு புதிதல்ல மாறாக ஆத்திக வாதத்தின் அளவிற்கே இந்திய பண்பாட்டில் தொன்மையாக வேரூன்றிய மாற்று தரப்பு என்பதே அவருடைய கருத்தாக இருக்கிறது. கருணாநிதி வலிந்து உருவாக்கிய அண்ணா மாயைக்கு அவரே பலியானார் என்கிறார் ஜெ.கே. அவரை பொருத்தவரை கருணாநிதி அண்ணாதுரையை காட்டிலும் திறன் மிகுந்தவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தையும் மிகக் கடுமையாக எதிர்க்கிறார். அண்ணாவை அறிஞர் என்று அழைப்பதை கூட கடுமையாக பகடி செய்கிறார்.
அவருடைய விமர்சனத்திற்கு உள்ளாகும் மற்றொரு இயக்கம் அவர் சார்ந்த கம்யுனிஸ்ட் கட்சி. கம்யுனிஸ்டுகளின் கனவான சோசியலிச சமூகத்திற்கான மாற்றம் நேருவின் அரசால் மிக இயல்பாக மலர்ந்து கொண்டிருந்தது. எந்த வன்முறையும் இல்லை. நேருவின் அரசிற்கு தோள்கொடுத்து வலதுசாரிகளின் ஆதிக்கத்தை கட்டுபடுத்த வேண்டிய கம்யுனிஸ்ட் கட்சி அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது அவருக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளித்தது. தமிழகத்திலும் காமராஜர் விரோத சக்திகளுடன் கம்யுனிஸ்ட் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துக்கொண்டு ஒரு ‘பெட்டி பூர்ஷ்வா’ இயக்கமாக மாறியதை எண்ணி வருந்துகிறார். சோசியலிச நாடாக மலர்ந்த சீனா இந்தியாவை ஆக்கிரமிக்க முயன்ற போது மா செ துங்கை விமர்சிக்கிறார். இது சித்தாந்த வீழ்ச்சியல்ல மாறாக தனி ஒரு மனிதரின் அதிகார வேட்கை. காந்திக்கும் காங்கிரசுக்கும் உள்ள தொடர்பு என்னவோ, இந்து தர்மத்திற்கும் இன்றைய சமூக இந்துவிற்கும் என்ன தொடர்போ அதுவே மார்க்சியதிற்கும் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் உள்ள தொடர்பு என்கிறார். சோவியத்தின் வீழ்ச்சியை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார் என்று தெரியவில்லை. ஏனெனில் சோவியத் மீது ஆழ்ந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறார். மார்க்ச, லெனின் என்றில்லை ஸ்டாலின் மீதும் அவருக்கு அபார நம்பிக்கை இருந்தது. ஸ்டாலினின் சோவியத் களையெடுப்புகள் பற்றி அரசால புரசலாக அப்போதே எழுந்த குற்றசாட்டுகளை முதாளித்துவ தேசங்களின் கட்டுக்கதை என்று ஏற்க மறுக்கிறார். கம்யுனிச தேசங்களில் நடைபெறும் தவறுகளுக்கு கம்யுனிச சித்தாந்தம் பொறுப்பாகாது மாறாக அதைக்கொண்டு அதிகாரத்தை அடைந்த தனிநபர்களின் பலவீனம் மட்டுமே எனும் பார்வை நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதாகவே எனக்கு தோன்றுகிறது. ஒரு முற்றதிகார நபருக்கு மாற்றாக அந்த இடத்தில் ஒரு சித்தாந்தம் வந்து அமர்கிறது என்பதே கம்யுநிசத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் உள்ள வேறுபாடு எனும் எண்ணமே மேலிடுகிறது.
ஒரு காலகட்டத்தின் அரசியல் நிகழ்வுகளின் மீது தனது தனித்த பார்வைகளை முன்வைத்து அதன் வழியாக வரலாற்றை காட்டி செல்லும் இந்நூல் மிக முக்கியமானது என்பதில் மாற்றுகருத்து இல்லை.
“ஒன்றின் மீது நம்பிக்கையற்று போவதற்கு நாம் மட்டும் காரணமல்ல; அந்த ஒன்றும் சம அளவோ அல்லது பெருமளவோ காரணமாகும். இருந்த நம்பிக்கை அற்றுப் போனால் அதற்கு அவநம்பிக்கை என்று பொருளல்ல. ஒன்றின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களாவது பின்னொரு காலத்தில் அதன் மீது நம்பிக்கை கொல்வதற்கு இடமிருக்கிறது. ஆனால் நம்பியவர்கள் ஒருபோதும் அவநம்பிக்கை கொள்வதில்லை. வேறு வேறு காரணங்களால் அவர்கள் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். ஆனால் தீமையும் வீழ்ச்சியும் எங்கு எப்படி ஏற்படுகிறது தெரியுமா? நமது நம்பிக்கையின்மையை நாம் மறைத்து கொள்கிற பொழுது; நம்புவதாக வேஷம் போடுகிற பொழுது.”
ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்
ஜெயகாந்தன்
தமிழ்/ அபுனைவு/ அரசியல்/ சுய சரிதை
மீனாட்சி புத்தகாலயம்
Subscribe to:
Posts (Atom)
