Friday, March 30, 2018

சம்பை ஊற்று பாதுகாப்பு

நேற்று (29/3/18) கண்ணதாசன் மணிமண்டபத்தில் சம்பை ஊற்று மற்றும் சமூக பாதுகாப்பு இயக்கம் நடத்திய இரண்டாம் ஆண்டு உலக தண்ணீர் தின கருந்தரங்கில் பார்வையாளாராக கலந்துகொண்டேன். 

சம்பை ஊற்று காரைக்குடியின் முக்கியமான நீராதாரம். artesian spring என்று சொல்வார்கள், அவ்வகையான இயற்கை ஊற்று. அரியவகையிலான இவ்வகை ஊற்று இந்தியாவிலேயே இப்பகுதியில் மட்டுமே உள்ளது என்கிறார்கள். சம்பை ஊற்று தாழ்வான பகுதியில் உள்ளது. அதை மையமாக கொண்ட பதினைந்து கிமீ வட்டம் மேடான பகுதிகள். மழைநீர் வந்து சேரும் பகுதியாகவும் உள்ளது. சம்பை ஊற்றை ஒட்டி மூன்று கண்மாய்கள் உள்ளன. அவை வேளாண்மைக்கு பாசன நீர் அளிக்கின்றன. பல வருடங்களுக்கு முன் கடப்பாரை வைத்து குத்தினாலே நீர் பீறிடுமாம். இப்போது சுமார் முன்னூறு அடி ஆழத்திலிருந்து நீர் உறிஞ்சி காரைக்குடிக்கு அளிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் ஒருலட்சம் லிட்டர் நீர் இரண்டு லட்சம் பேர் வசிக்கும்  காரைக்குடியின் தேவைக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

அண்மையில் மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் நிகழ்த்திய ஆய்வில் சம்பை ஊற்று நீர் 180 அடிவரை மாசடைந்ததாக அறிக்கை அளித்துள்ளது. இதற்கு இரு முக்கிய காரணிகள் அங்கு பேசியவர்களால் அடையாளம் காட்டப்பட்டன. முதலாவதும் முக்கியமானதுமான காரணம் கோவிலூர் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் ப்ரைவேட் லிமிடட் எனும் வேதிப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை. நாளொன்றுக்கு சுமார் இருபது லட்சம் லிட்டர் தண்ணீரை சம்பை ஊற்றிலிருந்து எடுத்துக்கொண்டு கழிவை வெளியே விடுகிறது. அக்கழிவு கோவிலூர் கண்மாயை பாழ்படுத்தி நிலத்தடி நீரையும் மாசாக்கியுள்ளது. அண்மைய ஆண்டுகளில் இரண்டு மூன்று முறை ஏதோ வாய்வு கசிவு ஏற்பட்டு அப்பகுதியில், சுற்றியுள்ள பள்ளிகளில் மூச்சு திணறல் ஏற்பட்டது. கருத்தரங்கில் பேசிய முன்னாள் ஊராட்சி தலைவர் பாதரக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் கோவிலூர் வாசிகளுக்கு நிகழும் உடல் உபாதைகளைப் பற்றி குறிப்பிட்டு பேசினார். குறிப்பாக பெண்களுக்கு கரு சிதைவு அதிக அளவில் ஏற்படுகிறது என்றார். உதயகுமார் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுகிறது என்றார். இவற்றுக்கெல்லாம் போதிய ஆதாரம் உள்ளதா என்பது வேறு விஷயம். ஆனால் இந்த வேதியல் ஆலை சர்வ நிச்சயமாக பெரும் சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. பசுமை தீர்ப்பாயம், வழக்குகள் என்று அலைந்தும் கூட இந்த ஆலையை மூட இயலவில்லை. காரணம் இது ராமச்சந்திர உடையார் அவர்களின் நிறுவனம். மேலும் ஆலை உள்ள பகுதியை மட்டும் தொகுதி மறுசீரமைப்பின் போது சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவிலூரில் இருந்து பிரித்து சங்கராபுரம் ஊராட்சியில் கொண்டு சேர்த்துள்ளார்கள். இந்த ஆலைக்கு எதிராக இன்று வரை சங்கராபுரம் ஊராட்சி தீர்மானம் இயற்றவில்லை. 

இரண்டாவது காரணம் காரைக்குடி நகராட்சியின் அலட்சியம். காரைக்குடியின் கழிவு நீர் மொத்தமும் ஊற்றுக்கு அருகே உள்ள காரைக்குடி பெரிய கண்மாயில் சென்று சேர்கிறது. இப்போது பாதாள சாக்கடை திட்டம் வேறு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நீரை எங்கே சென்று வெளியேற்ற போகிறார்கள் என தெரியவில்லை? 

ஒட்டுமொத்தமாக தீர்வுகள் என யோசிக்கும் போது கீழ்வரும் புள்ளிகள் முக்கியமாகின்றன 
1. தமிழ்நாடு வேதிப்பொருள் ஆலையை இங்கிருந்து அகற்றுவது. அதற்கு காரைக்குடி முழுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வெகு மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல வேண்டியது அவசியம். 

2. நகராட்சியின் செயல்களை சீர் செய்தல். குறிப்பாக கழிவுகளை திசை  திருப்பி, சுத்திகரித்து, மறு சுழற்சியில் பயன்படுத்த வேண்டியது அவசியம். 

3. சம்பை ஊற்றை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என்று அரசானை இருந்தும் அது மீறப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

4. கண்மாய்களை தூர்வார வேண்டும். நீர் வரத்து பகுதிகளை கண்காணித்து சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

5. காரைக்குடியில் புதிய குடியிருப்புகள் பெருகுகின்றன. தான்தோன்றித்தனமாக ஆழ்துளை கிணறுகளை போட்டுக்கொண்டு செல்கிறார்கள். நிலத்தடி நீரை பாதுகாக்க உடனடியாக புதிய ஆழ்துளை கிணறுக்கு அனுமதி அளிப்பதை நகராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும்.

குடிநீர் ஆதாரம் சார்ந்து மிக முக்கியமான சிக்கலாக இது வரும் நாட்களில் வெடிக்கும். சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும். 

Sunday, March 25, 2018

சிறுகதை குறிப்பு - 3- வேட்டை- யூமா வாசுகி

முன்னரே இக்கதையை வாசித்திருந்தாலும், இன்றைய மரப்பாச்சி இலக்கிய வட்ட கூடுகைக்கு இக்கதையை பேசுவதாக தீர்மானம் செய்துகொண்டதால் மீண்டும் இக்கதையை வாசித்தேன். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் தமிழின் சிறந்த கதைகளில் ஒன்றாக அடையாளபடுத்தபடும் கதைகளிலொன்று. எனது வாசிப்பையும், கூடுகையில் நிகழ்ந்த வாசிப்பையும் தொகுத்து விளக்கிகொள்ளும் முயற்சி இக்கட்டுரை.

கதை குடகை களமாக கொண்டது. குடகின் கூர்கி மக்களின் வாழ்வை சொல்வது. இந்து இஸ்லாமிய மதங்கள் இருந்தாலும் கூர்கிகளாக, அண்ணன் தங்கையாக உறவுள்ளவர்களாக உள்ளார்கள். கூர்கி சமூகம் ஏறத்தாழ பழங்குடி சமூகம்போல தொன்மையான வழமைகளை கொண்டது. உஸ்மானி, பொனச்சா, பினு, ராசய்யா, ஷகீலா என கலவையான அடையாளங்களை சுட்டும் பெயர்கள். மத அடையாளம் பின்னுக்கு தள்ளப்பட்டு பிராந்திய இனக்குழு அடையாளத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூகம். இனக்குழு சார்ந்த பெருமிதமும் வெளிப்படுகிறது. தன் மகனை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் கூட மற்றொரு கூர்கியை தான் தங்கை மகள் தேர்கிறாள் என்று உஸ்மானி ஆசுவாசம் கொள்கிறார். 

நிகழ்கால திருமண நிகழ்வும், அதற்கு முன்பான மகனுடனான உரையாடலும் ஊடுபாவாக பின்னிசெல்கிறது. துவக்கத்திலேயே குடகின் பெருமைகளை யாரும் பேணுவதில்லை எனும் வருத்தம் உஸ்மானிக்கு வருகிறது. அப்பர் கொடவா பிரிட்ஜ் எழுத்துக்கள் அழிந்து போயிருக்கிறது. "கூர்க் ஆச்சாரப்படி நடப்பவன் எவனைப் பார்க்க முடிகிறது. சண்டை சச்சரவின் போது ஒருத்தருக்கொருத்தர் வெட்டிக் கொல்லும்ம்போதுதான் மூதாதைகளின் வேட்டைப் புத்தி தெரிகிறது. மற்றபடி நிஜ கூர்க் என்று எவனுமில்லை. கல்யாணம் கருமாதின்னு வரும்போது செய்கிற சடங்குகளெல்லாம் கூட கொஞ்ச நாளைக்குத்தான். பிள்ளைகளை வெளிநாடு, வெளி மாநிலம்னு படிக்க அனுப்பிவிடுகிறார்கள். அதுகள் படிக்கப் போனபோது கத்துக்கிட்ட பழக்கத்தையெல்லாம் இங்கேயும் நடத்த ஆரம்பிச்சாச்சு. எதுவானாலும் ராசையா, இந்த மடிக்கேரி மண்ணில் கூர்க்கியா பொறந்த ஒருவர் எந்த நிலையிலேயும் வாக்குத் தவறக்கூடாது" என்று அங்கலாய்க்கிறார். பண்பாட்டு கலப்பு குறித்து கவலை கொள்கிறார். இந்த வரிகளில் உஸ்மானியின் பாத்திரம் துலக்கம் அடைந்து விடுகிறது.மேலும் கதைக்கான முக்கிய முடிச்சும் புலப்பட்டு விடுகிறது. தான் விரும்பிய பெண் கிடைக்காத விரக்தியில் மகன் உடைந்து போயிருக்கிறான். இதற்கெல்லாம் உடைந்து விடலாமா? இத்தனை பலவீனமாக வளர்த்து விட்டேனா? "நீ அழுகின்ற பாவம் அவளைத் தொட வேண்டாம். போகட்டும் விடு. போகிற இடத்தில் நல்லா இருக்கட்டும்..." என்று ஆறுதல் சொல்கிறார். அவனுடைய உற்சாகம் வற்றி, அவள் நன்றாகவே இருக்கட்டும், நாம் அங்கிருந்து வெளியேறி வேறு இடத்திற்கு குடி பெயரலாம் என்கிறான். தந்தையை திருமணத்திற்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கிறான். மீறி சென்றால் தான அங்கு இருக்க மாட்டேன் என்கிறான். தந்தை அவனை தேற்றுகிறார்.  

திருமண விழா விரிவாக சித்தரிக்கப்படுகிறது. கூர்க் திருமண வழக்கங்கள், அதன் கொண்டாட்டங்கள்,மது விருந்து என பண்பாட்டு சித்தரிப்பு வலுவாக உள்ளது. உஸ்மானி முழு மனதோடு கொண்டாட்டங்களில் உற்சாகமாக பங்கு கொள்கிறார். கொண்டாட்டத்திற்கு ஏதுவாக மூத்திர பையையும் தூக்கிக்கொண்டு வருகிறார். தந்தை மன்னிக்கும் பரந்த மனமுடையவர்,மகன் குறுகிய மனமுடைய இறுக்கமானவன் எனும் சித்திரமே கதையின் இறுதி முடிச்சு வரை தென்படுகிறது. இறுதி நிகழ்வின் வழியாக இந்த சமன்பாடு அப்படியே தலைகீழாகிறது. ஒரு அதிர்ச்சிகரமான திருப்பத்துடன் கதை முடிகிறது. 

விமலாதித்த மாமல்லன் இக்கதை குறித்து எழுதியுள்ள சிறு விமர்சன குறிப்பை வாசித்தேன். அதில் இந்த இறுதி திருப்பத்தை சுட்டிக்காட்டி ஒரு விமர்சனத்தை வைத்திருந்தார். இறுதி திருப்பத்திற்கான குறிப்புகள் கதையில் இல்லாததால் இது மேலான கதையாக இல்லை என்று வரையறை செய்திருந்தார். இந்த விமர்சனத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. இப்போது எழுப்பிக்கொள்ள வேண்டிய கேள்வி உஸ்மானி கொலைக்கான திட்டமிடலுடன் தான் வீட்டிலிருந்தே கிளம்பினாரா? அல்லது கணப்பொழுதில் நிகழ்ந்ததா? முந்தையதாக இருந்தால் மாமல்லனின் விமர்சனம் ஏற்புடையதே. ஆனால் 'சண்டை சச்சரவுகளின் பொது விழிப்பு கொள்ளும் மூதாதையின் வேட்டை புத்தி' சட்டென எதிர்பாராமல் அவரையும் மீறி வெளிப்பட்ட தருணமாக இறுதி நிகழ்வை கொண்டோம் என்றால் மாமல்லனின் விமர்சனத்தை ஏற்க வேண்டியதில்லை. இரண்டாவது வாசிப்பிற்கான குறிப்புகளே கதையில் உள்ளது என்று எண்ணுகிறேன். 

மேலும் உஸ்மானி யாரை கொல்கிறார் எனும் தேர்வில் இக்கதையின் தலைப்பும் முடிச்சும் உள்ளது என்றே எண்ணுகிறேன். மலைவாழ் வேட்டை சமூகம், இன உணர்வும் மேட்டிமையும் உண்டு. அன்னியரை எதிரியாக காண்கிறது. ஆகவே மகனை கைவிட்ட தன் உறவினரான தங்கை மகளை விட்டுவிட்டு அவள் தேர்ந்தெடுத்த கணவனை கொல்கிறார். இதுவே வேளாண் சமூகமாக இருந்தால் சாதி ஆணவ படுகொலையே நிகழ அதிக வாய்ப்பு. பழைய கூர்கிக்கும் நவீன கூர்கிக்கும் இடையிலான மோதல்.அல்லது நவீனத்திற்கு எதிரான பழமைவாதத்தின் பிடிவாதம் என்று வெவ்வேறு கோணங்களில் இக்கதையை அணுக முடியும். 

"விளக்கிலிருந்து தவறி விழுந்த வெட்டுக்கிளியொன்று மதுவிற்குள் தத்தளித்தது." எனும் வரிக்கு அடுத்த் வரியாக "பாதி நிரம்பிய பன்னீர்ப் பானையை தலையில் வைத்துப் பிடித்திருந்தாள். பானைக்குள் ரோஜா இதழ்கள் மிதந்தன." என்று வருகிறது. இவ்வரிகள் இக்கதையை கவிஞனின் கதையாக்குகிறது. ஒருவகையில் இக்கதையை இவ்விரு உருவகங்களின் முரணாக காணமுடியும் என்றே எண்ணுகிறேன். யூமாவின் படைப்புலகே கூட மென்மைக்கும் குரூரதிற்குமான முரணில் உருவாகுபவை என்று தோன்றுகிறது. கவித்துவமான விவரணைகளும் உக்கிரமான உணர்வுகளும் சங்கமிக்கும் நல்ல கதைகளிலொன்று.  



x

Thursday, March 22, 2018

ரத்த உறவு - நாவல் வாசிப்பு

சில வருடங்களாக வாசிக்க விரும்பிய நாவல். தற்போது அச்சில் இல்லை என்பதால் கிடைப்பதற்கு அரிய நாவலும் கூட. யூமா வாசுகி தன் கையெழுத்து போட்டு நண்பர் காளி பிரசாத்திற்கு அளித்த அவருடைய பிரதியை கடன் பெற்று வாசித்து முடித்தேன்.

தமிழ் நாவல் வரிசையில் 'ரத்த உறவிற்கு' மிக முக்கியமான இடமுண்டு. இயல்புவாத எழுத்தில் ஒரு மைல்கல். எனது வாசிப்பின் எல்லையில் தமிழில் குடும்ப வன்முறையை இத்தனை அப்பட்டமாக இந்நாவல் சித்தரித்த அளவிற்கு வேறு எந்த நாவலும் சித்தரித்ததில்லை. ரத்த உறவுடன் ஒப்பிடத்தக்க நாவல் என்றால் பைரப்பாவின் ' ஒரு குடும்பம் சிதைகிறது' நாவலை சொல்லலாம். எனினும் கதாபாத்திரங்களின் பன்முகத்தன்மை காரணமாக குடும்பம் சிதைகிறது ரத்த உறவை காட்டிலும் மேம்பட்ட நாவலாக மதிப்பிடுவேன்.

ஒன்றாக வசிக்கும் மூன்று சகோதரர்களின் குடும்பத்தில், இரண்டாமவரின் குடும்ப கதை ரத்த உறவு.  தினகரனின் மூத்த மகனின் காமாலை மரணத்துடன் துவங்குகிறது நாவல். மகனின் மரணத்திற்கு தந்தையின் அசட்டைத்தான் காரணம் என கொந்தளிக்கிறாள் அன்னை. தினகரன் குடியும் வன்முறையுமாக சீரழிகிறான். மகளை துரத்தி துரத்தி அடிக்கிறான், தம்பியுடன் சேர்ந்து மனைவியின் புடவையை உருவி அடித்து மண்டையை பிளக்கிறான், மகனை ஆல மரத்தில் கட்டிபோட்டு சாத்துகிறான், சிறிய மகனை வெயிலில் பிரட்டுகிறான், திருக்கை எலும்பை கொண்டு ரத்த விளாரை ஏற்படுத்துகிறான். இதே தீனன் தான் தன் மகன்களை கைபிடித்து அலுவலக விழாவிற்கு அழைத்து செல்கிறான். சாராயக்கடையில் தன் மகளையொத்த வயதுடைய பெண்ணை பார்த்து மருகுகிறான், அவளுக்கு மாமன் சடங்கு செய்கிறான். எல்லோரின் மரியாதைக்குரியவனாகவும் இருக்கிறான். அவ்வகையில் தீனன் நமது தந்தைகளின் பிரதிநிதி. இந்திய ஆண்களின் விந்தையான இரட்டை நிலையின் சான்று. அவன் மீது அத்தனை வெறுப்பு பொங்கினாலும் அவனுடைய மரணம் நம்மை வதைக்கிறது. ஓட ஓட விரட்டி அடித்தாலும், முகத்தில் காறி உமிழந்தாலும் கூட சாலையில் விழுந் கிடக்கும் அவனை மகள் சுமந்து வருகிறாள். அழாமல் விளையாடிக்கொண்டிருக்கும் தம்பியிடம் அழ சொல்லி வற்புறுத்துகிறாள்.

தீனனுக்கு எதிர்மாறாக அவருடைய அண்ணனின் பாத்திரம். பொறுப்பற்ற குடிகாரனாக மனைவியிடம் மிதிபட்டு புண்பட்டு இறக்கிறார். குழந்தைகளுக்கு பிரியமானவர். அவருடைய வீழ்ச்சி மனதை வதைக்கிறது. சித்தப்பா குடிக்காதவர் (ஒரேயொரு முறை குடிக்கிறார்) கிராம கணக்குபிள்ளை. அவருக்கும் அவருடைய மனைவிக்குமான உறவு சுமூகமாகவே செல்கிறது.ஆனால் அண்ணனின் பலவீனத்தை பயன்படுத்திகொள்ளும் சந்தர்ப்பவாதியாக இருக்கிறார். கடன் கணக்கை பொய்யாக எழுதி வீட்டை எழுதி வாங்குகிறார். போதையின் துணை இல்லாமலேயே அவரால் அடித்து துன்புறுத்தவும் முடிகிறது.  பூடகமாக தீனனுக்கும் அவருடைய தம்பி மனைவிக்கும் இடையிலான உறவு சொல்லப்படுகிறது.  மனைவியின் ஆதிக்கம், இணக்கம், கணவனின் ஆதிக்கம் என   மூன்று சகோதரர்களின் குடும்பங்களின் வழியாக மூன்று விதமான குடும்ப இயல்பை காட்டுகிறார் யூமா. நியாயமாக இணக்கமான தம்பதிகளின் மீது நேர்மறை பார்வை எழ வேண்டும் ஆனால் அவர்கள் சூழ்ச்சி மிகுந்தவர்களாக, சுரண்டுபவர்களாக இருக்கிறார்கள் எனும் போது இந்த தேர்வுகள் பொருளற்றவையாக ஆகின்றன. ஒழுக்க நடத்தைக்கும் உள்மன விரிவுக்குமான தொடர்பு கற்பிதம் என்பது இலக்கியத்தின்  வலுவான பேசுபொருள். 

ஒவ்வொரு அத்தியாமும் பெரும் பதைப்புடனே கடக்க முடிந்தது. எப்போது யார்? என்னவிதமான துன்புறுதலுக்கு ஆளாவார்கள் என பதறியது? வாசுகியோ, சின்னவனோ, பெரியவனோ அல்லது ரமணி அம்மாளோ இப்போது இறந்து விடுவார்களோ எனும் அச்சத்துடனே வாசித்தேன். சின்னவனின் கனவுப் பகுதிகள் கவித்துவமானவை, அபார கற்பனைகளால் நிறைந்தவை. நாவலின் மைய ஓட்டத்திற்கு இது தேவையற்ற தடை என்றொரு விமர்சனம் உள்ளதை அறிகிறேன். நேர்மாறாக எனக்கு இவை நாவலின் மிக முக்கியமான, உயிர்த்துடிப்பான அங்கமாக தோன்றியது. பிள்ளைகளின் உளநிலையில் குடும்ப வன்முறை செலுத்தும் பாதிப்பை வேறு எப்படி சொல்லிவிட முடியும்? வேறொன்றையும் அந்த கனவுகள் நிகழ்த்தின, தொடர் குரூரங்களில் இருந்து தேவையான பெரும் ஆசுவாசத்தையும் அளித்தன. மேலும் இந்த கனவு பகுதிகள் நாவலை யதார்த்தவாத தளத்திலிருந்து வேறு தளங்களுக்கு உயர்த்தி செல்கின்றன. நாவலின் இறுக்கத்தை மீறி பீறிடும் அபத்த நகைச்சுவை பகுதிகள் என பாட்டி மொட்டையிடம் குறி கேட்கும் பகுதி, சித்தப்பா தற்கொலை முயற்சியின் போது அண்டைவீட்டு பாய் கிணற்றில் குதித்து தடுக்க முயலும் கூத்து, பஞ்சாயத்தை குலைக்க பாட்டி முன்னெடுக்கும் யுத்தி, போன்ற பகுதிகளை சொல்லலாம்.

இந்த குடும்ப வன்முறை சுழலை எப்படி உடைக்க முடியும்? யாரேனும் மனம் திருந்தி விடுவார்களா? மரணம் மட்டுமே மீட்பளிக்க முடியும் என்பதும் புரிகிறது. சீக்கிரம் வந்து தொலைந்து இவர்களை மீட்டு தொலைக்க கூடாதா என்று கூட தோன்றியது. நாவலின் மிக முக்கியமான தருணங்களில் ஒன்று ரமணி அம்மாள் காவல்துறையை நாடும் இடம். காவலர் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த பிறகு சகோதரர்களின் உடல்மொழி முழுதும் மாற்றம் அடைகிறது. வெறுப்பும் கூட உடல்ரீதியான துன்புறுத்தலாக வெளிபடாமல் மட்டுபடுகிறது. ஆனால் அண்டைவீட்டார் அவர் மீது கொண்ட பரிவு சுத்தமாக காணாமல் போகிறது. அவர் மீதான வன்முறையை எவ்வித தயக்கமும் இன்றி, 'போலீஸ் ஸ்டேஷன் போனவ' எனும் ஒற்றை புள்ளியில் புறம் தள்ளுகிறது. ஏனெனில் ரமணி அம்மாள் அங்கு ஒரு முன்மாதிரியை வைக்கிறார். குடும்ப வன்முறைக்கு காவல்துறையை நாடுவது என்பது அந்த கிராமத்தில் இல்லாத வழக்கம். அந்த புள்ளியில் அவரை அத்தனை ஆண்களும் எதிரியாக வரிந்து கொள்கிறார்கள். வாசுகி அக்காவும் ரமணியம்மாவும் எனக்கு குடும்பம் சிதைகிறது நாவலின் பார்வதியையும் நஞ்சம்மாவையும் நினைவுபடுத்தினார்கள். மனித உறவுகளின் வினோத நடத்தைகளை தீர்ப்பெழுதாமல் யதார்த்த தொனியில் சொல்லி செல்கிறார் யூமா. பெரியம்மாவின் வன்மமும் அவளுடைய மாறுதலும், அத்தனை அவமானத்திற்கு பின்னும் தீனன் மீது வாசுகியும், அம்மாவும் கொண்டிருக்கும் பற்றும், அந்த வீட்டிலேயே இருக்க வேண்டும் என விழைவது ஆச்சரியம் தான்.

 குறிப்பிட்டு கவனப்படுத்த வேண்டியது பாட்டியின் பாத்திர சித்தரிப்பு. முழுக்க சுயநலவாதியாக உலவுகிறார். இந்த சித்தரிப்பும் கூட என ஒரு குடும்பம் சிதைகிறது கங்கம்மாவை நினைவுபடுத்தியது. ஆனால் இவர் அவரை விடவும் ஈரமற்றவர். சொந்தமகன் இறந்த போதும் கூட அவன் விட்டு சென்ற சிறிய கடனை எப்படி வசூலிப்பது என மருகிக் கொண்டிருப்பார். பேரன் பேத்திகளின் மீது அணுவளவும் ஈர்ப்போ பாசமோ அற்றவர். மகன்களுக்கு சமமாக அமர்ந்து குடித்து அவர்களை தூண்டிவிடுபவர். தமிழ் இலக்கிய உலகில் பெண்களின் வழமையான தாய்மை, கருணை சித்தரிப்பை உடைத்த முதல் படைப்பு என்று ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாவை குறிப்பிடுவார்கள். எதிர்மறைத்தன்மை கொண்டவரை நாவலின் முக்கிய பாத்திரமாக ஆக்கி எழுதப்பட்ட நாவல். ரத்த உறவில் பாட்டி மைய பாத்திரம் அல்ல. அவரிடம் கனிவோ அல்லது இனிமையோ புலப்படும் தருணம் வராதா என மனம் துழாவி சலித்தது. நாவலின் மீதான விமர்சனமாக இந்த ஒற்றைப்படைத்தன்மை வாய்ந்த சித்தரிப்புகளை சொல்லலாம். மொத்த குடும்பமும் தீணனின் மனைவி மக்களை மட்டும் வஞ்சிப்பதாக உள்ளது. ஒருவகையில் தீணனின் தந்தையின் மரணத்திற்கு ரமணியம்மாவின் சகோதரர் காரணம் எனும் வன்மம் தான் இவர்களின் இந்த வஞ்சத்தின் முதல் கங்கு என தோன்றியது. இப்படி ஒரு சமநிலை பேணப்பட்டாக வேண்டுமா? அப்படி இருந்தால் தான் மேம்பட்ட இலக்கியமாகுமா? என்றொரு துணை கேள்வியை கேட்டுகொண்டால், அவசியமில்லை, அத்தகைய நிர்பந்தங்கள் ஏதுமில்லை. வலிய எழுதி அடையப்படும் சமநிலையை காட்டிலும் அகசான்றுக்கு நேர்மையாக திகழும் ஒற்றைப்படைத்தன்மை மேலானது. நாவலின் இறுதி பகுதி அளிக்கும் நிம்மதி அலாதியானது.

அன்பிற்கான ஏக்கத்தை கலையாக்கிய மிக முக்கியமான நாவலாக ரத்த உறவை குறிப்பிடலாம். விரைவில் மறுபிரசுரம் வரும் என எதிர்பார்க்கிறேன்.








Wednesday, March 14, 2018

காமமெனும் வாதை – லோலிதாவும் அபிதாவும்


Lolita, light of my life, fire of my loins. My sin, my soul. Lo-lee-ta: the tip of the tongue taking a trip of three steps down the palate to tap, at three, on the teeth. Lo. Lee. Ta. – Lolita, Vladimir Nabokov
அபிதா, அ – சிமிழ் போன்ற வாயின் லேசான குமிழ்வில், பி- உதடுகளின் சந்திப்பில், தா- நாக்கின் தெறிப்பில். – அபிதா, லாசரா.
இரு முன்னோடிகள், இருவரும் மொழியின் அழகியலை முன்னெடுத்தவர்கள், அதன் இசைத்தன்மையை, லயத்தை நம்பியவர்கள். நபகோவ் ருஷ்ய எழுத்தாளர். லா. ச. ரா தமிழகத்தின் லால்குடியில் பிறந்தவர். நபகோவ் 78 ஆண்டுகளும் லா. ச. ரா 91 ஆண்டுகளும் வாழ்ந்தவர்கள். நபகோவின் லோலிதா 1955 ஆம் ஆண்டு வெளியானது. இன்றுவரை மிக முக்கியமான ஆக்கமாக விமர்சகர்களால் அடையாளப்படுத்தப்படுகிறது. லா.ச.ராவின் அபிதா 1970 ஆம் ஆண்டு வெளியானது தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இன்றுவரை வாசிக்கவும் படுகிறது. அபிதாவின் மொழி இன்று வாசிக்கையில் கூட காலாவதி ஆகாமல் புதிதாகவே இருக்கிறது.
சாலமன் அரசனின் இளமையை மீட்க/ தக்கவைத்துக்கொள்ள இளம் கன்னியர்களை அவருடன் உறங்க செய்யும் கதை பைபிளில் உள்ளது. இதன் நேர் நீட்சியாக லோலிதாவையும் அபிதாவையும் காண முடியும். அபிதாவை ஒரு காயகல்பம் என்றே ஓரிடத்தில் சுட்டுகிறார்.
இரு நாவலிலும் 'தன்மையில்' கதை சொல்கிறார்கள். லோலிதாவின் நாயகன் ஹம்பர்ட் அன்னையை இழந்தவன், பெரும் செல்வந்தரின் குடும்பம். தந்தையை அவ்வப்போது தான் காண்கிறான். கண்டிப்பான உறவினர் வீட்டில் தான் வளர்கிறான். அபிதாவின் கதை சொல்லி ஏழை பிராமணன். தந்தை திருமணம் செய்தவுடன் நகையை தூக்கிக்கொண்டு மனைவியையும் வயிற்றில் வளரும் பிள்ளையையும் கைவிட்டு ஓடிவிடுகிறான். தனியாளாக அம்மாவிடம் வளரும் போது அவளும் மரணிக்கிறாள். விதிவசமாக உறவினர் வீட்டில் வளர்கிறான். ஹம்பர்ட்டுக்கு ஒரு அண்ண பெல் என்றால் இவனுக்கொரு ‘சகுந்தலை’. இழந்த காதல்கள். அண்ண பெல் அவளுடைய பன்னிரெண்டாம் வயதிலேயே டைபஸ் காய்ச்சல் வந்து இறக்கிறாள். ஹம்பர்டின் பதின் பருவ பெண்களுக்கான வேட்கையை இதைக்கொண்டே புரிந்து கொள்ள முடியும். பிற்காலத்தில் லோலிதாவிடம் அவன் ஈர்க்கப்படவும் இது தான் காரணம். அவன் அவளிடமும் அண்ண பெல்லைத்தான் தேடுகிறான். லோலிதாவில் அண்ணபெல் மிக சிறிய பாத்திரம். ஓரு அத்தியாயத்திற்கு மேல் அவளுக்கு இடமில்லை. ஆனால் அபிதாவின் சக்கு என்கிற சகுந்தலை பெரும் பாத்திரமாக வளர்கிறாள். நொண்டி குருக்கள் பெண்ணாக அவளுடைய குறுகுறுப்பும், திருமண வாழ்வும், திருவேல நாதனை தழுவிக்கொண்டு இறக்கும் அவளுடைய மரணமும் என விரிகிறாள். லோலிதாவிடம் அண்ணபெல்லின் சாயலைத்தான் தேடுகிறான் ஹம்பர்ட். அபிதா சக்குவின் மகளாக, இழந்த நினைவுகளின், கடந்த வாழ்வின் உருவாக அப்படியே வருகிறாள். ஹம்பர்ட் லோலிதாவை அடையும் முயற்சியில் அவளுடைய அன்னையும், அழகியும், செல்வந்தருமான சார்லட்டை திருமணம் செய்து கொள்கிறான். அபிதாவில் முதலாளியின் மகள் ‘சாவித்திரியை’ திருமணம் செய்து புலிக்கூண்டுக்குள் வாழ்வது போல் இருவரும் வாழ்கிறார்கள். சார்லடின் மரணத்திற்கு கூட ஏதோ ஒரு வகையில் ஹம்பர்ட் காரணமாயிருக்கிறான். அவனுக்கு அவளுடைய பணத்தை பயன்படுத்துவதிலோ செலவழிப்பதிலோ எந்த நாணமும் இல்லை. ஆனால் அபிதாவின் நாயகன் முதலாளியின் மகளை திருமணம் செய்து கொண்டதை எண்ணி வெட்கி தலை குனிகிறான். அவனுக்கு ‘நாணயம்’ பறிபோன உணர்வே மேலிடுகிறது.
சார்லட் ஹம்பர்ட்டின் பிறழ் காமத்தை அறிந்து முகாமில் இருக்கும் மகளை எச்சரிக்க முயல்கிறாள். சாவித்திரி தனது கணவனின் பிறழ் காமத்தை அறிந்து ஆத்திரம் கொள்கிறாள். தொடுத்த பூக்களை எல்லாம் அபிதாவிற்கு சூட்டி மகிழ்கிறாள். இரு நாவல்களிலும் ஊழின் நெசவு வலுவாக வெளிப்படுகிறது. ஹம்பர்ட்டின் மீது ஆத்திரம் கொண்டு மகளை எச்சரிக்க கிளம்பும் போது விதிவசத்தால் விபத்தில் இறந்து போகிறாள் சார்லட். நாவலின் இறுதியில் பூவிதழ் விழ விபத்தில் அபிதா இறந்து போகிறாள்.  
ஒரு பொறி, தன் மகளை ஒத்த வயதுடைய பெண்ணின் மீதான காமத்தை எப்படி எதிர்கொள்வது? இதுவே இருவரையும் கிளர்த்துகிறது. நவீன மனமும், இந்திய தத்துவங்களில் திளைத்த மரபான மனமும் இப்படி உதித்த அசந்தர்ப்பான காமத்தை எப்படி எதிர்கொள்கின்றன. லோலிதாவுடன் பயணிக்கிறான், வாழ்கிறான், உறவு கொள்கிறான், அவளை தன் கட்டுபாட்டில் வைத்துகொள்ள முயல்கிறான். லோலிதா அவனிடமிருந்து தப்பி க்வில்டியை அடைகிறாள். அவன் விதவிதமான பாலியல் தேவைகளுக்கு அவளை நிர்பந்திக்கிறான். லோலிதாவை மீட்க வரும் மீட்பரான க்வில்டி ஹம்பர்டை விட இழிவானவனாக இருக்கிறான். ஆனால் அபிதாவின் இரட்சகனான அம்பியோ பெரு மதிப்பிற்குரியவன், உழைப்பால் உயர்ந்தவன், தன்னை போல் ஒருவன் அல்லது தன்னை விடவும் மேலானவன், அபிதாவிற்கு உகந்தவன் எனும் எண்ணம் கதை சொல்லிக்கு திகழ்கிறது. சிற்றன்னையும் தந்தையும் சம்மதிக்க அம்பியுடன் மோட்டார் சைக்கிளில் செல்வதே அவளுக்கு கிடைத்த உச்சபட்ச கிளர்ச்சி.
ஹம்பர்ட் – லோலிதா உறவு ஐயமும், வன்முறையும், சுரண்டலும் நிறைந்தது. அவள் அவனிடமிருந்து தப்ப விழைகிறாள். தப்பவும் செய்கிறாள். அவளை தேடி அலைகிறான். இறுதியில் மிக சாதாரண வாழ்வில் அவளுடைய பதின்மத்தை இழந்து, அழகை இழந்து வயிற்றில் பிள்ளையோடு வாழ்கிறாள். லோலிதா நாவலின் உயரத்திற்கு இந்த பகுதி மிக முக்கியமான காரணம். அத்தனை அலைச்சலுக்கு பின் அவனுக்கு காத்திருப்பது ஒரு பெரும் கனவின் கலைதல். அந்த கனவு கலைந்த பின்னும் காதல் எஞ்சியிருக்கிறது என்று புரிந்து கொள்கிறான். அந்த கனவை அவனிடமிருந்து தட்டிப்பறித்த க்வில்டியைத் தேடி பழி தீர்க்கிறான் ஹம்பர்ட். அபிதாவில் கதைசொல்லியின் கனவு கலைத்துவிடாமல் ஊழால் பாதுகாக்கப் படுகிறது. அழகின்மையை, அதன் வீழ்ச்சியை, சாதாரணத்தை அறிவதற்கு இடமின்றி அபிதா மரித்துபோகிறாள். கற்பனாவாத உச்சம். லோலிதா ஒரு பாரபோலா என்றால் அபிதா ஒரு வட்டம். இங்கே சக்குவிற்கு நிகழ்ந்தது அபிதாவிற்கும் நிகழ்கிறது. கதை சொல்லியும் அம்பி, அபிதாவின் மாமனும் அம்பி என்றொரு இணை வைப்பு வருகிறது. இரு அம்பிகளுமே நினைவுகளின் கரிசனத்தில் எஞ்சிய நாட்களை உயிருடன் கழிக்க சபிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்.  
லோலிதாவில் ஹம்பர்ட் லோலிதாவின் அழகை இழந்த பின்னும் தன்னுள் அவள் மீதான காதல் எஞ்சி இருக்கிறது என்று உணரும் தருணம் முக்கியமானது. அதன் பொருட்டே அவன் பழி தீர்க்க போகிறான். அவனுடைய காமம் காதலாக உன்னதமாகிறது. அபிதாவில் அபிதா கடந்தகால சக்குவாக ஆகி, சக்கு அபிதா, சாவித்திரி என எல்லாம் மறைந்து அன்னையின் வடிவாகிறார்கள். ஒரு கட்டத்தில் அவருடைய காமத்திற்கு அபிதாவே தேவையில்லை என உணர்கிறார். கண்ணிக்குளம், எண்ணெய் குளியல் என மீள் பிறப்பெடுத்து வருகிறார். இவ்விடங்கள் அபிதாவிற்கு ஒரு இந்தியத்தன்மையை, ஆன்மீக பிரதியாக வேறு பொருளையும் அளிக்கிறது. கரடிமலை, சிவலிங்கத்தை கட்டிக்கொண்டு மரணித்த சக்கு, நொண்டிக் குருக்கள் என எல்லாமே குறியீடுகளாக வாசிக்க சன்னமான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி அளிக்கிறது.
நபகோவின் கேள்வியை தனதாக்கிக்கொண்டு நபகோவ் அளித்த விடையிலிருந்து, தனது பண்பாட்டு பின்புலத்தில் முற்றிலும் வேறோர் விடையை நோக்கிப் பயணித்திருக்கிறார் லா.ச.ரா. ஆனால் ஒரு இலக்கிய ஆக்கமாக எனக்கு லோலிதா அபிதாவைக் காட்டிலும் பலவகையில் மேம்பட்டதாக தோன்றுகிறது. பண்பாட்டு காரணிகள், நெருக்கடிகள் கூட காரணமாய் இருக்கலாம். காமம் கொண்ட மனதின் தீவிரம், கதை முடிச்சு, காமத்தின் அலைக்கழிப்பு, லோலிதாவின் சித்தரிப்பு என்று பெரும் வாழ்வை சித்தரித்து காட்டி இருப்பார். ஆனால் க்வில்டியை அதீத பிறழ்வு கொண்டவனாக காட்டி தனது பிறழ்வை சிறிதாக்கி நியாயபடுத்தி தப்பிக்கும் யுத்தி நெருடலாக இருக்கிறது. அவ்விதத்தில் லா.ச.ராவின் கற்பனாவாத முடிவு, ஒருவகையில் தப்பித்தல் என்று தோன்றினாலும் கூட, நேர்மையாக உள்ளதாக தோன்றுகிறது.

Monday, March 12, 2018

How to confront hate in social media?

Though i have quit facebook seems it has never left me totally. I get screen shots, then some links to the posts. Somehow i stumbled upon a 2015 year post which called names on me for a write up on the Roy Moxham's Karaikudi visit. I recorded what he told, and whether he was right or wrong i was not sure and recorded them with doubt. I was shocked to read the post, it claimed me as a Nair, called me as an secret agent (of what). Of course Jeyamohan had his course of slander in the post. The absurdity was so striking i took it lightly at the onset, but it did not fade away that easily. It lingered for a long moment, so long that i am making the post. 

So what would you do when you are confronted with hate in the social media or virtual world? 
Either become a man of tao, live with it sail over it, give back and move away. If you want attention and enjoyed the popularity then be ready for getting branded and defamed. This is part and parcel of social media life. Never mind them. Take them also in the right spirit of attention. Social media bigwigs develop this numbness as they grew in stature. It is not easy to pin them down. They are masters at bullying. They comeback at you pouncing with vengeance and vigor. They have an inflated super ego, that guards them from casual injury. They become opinion makers. They are their in the soc media round the clock, commenting on every other issue.

This is a brave social life but a vain one too. Our thinking become conditioned, sometimes when you are not moved by an incident and did not want to react you do not have that freedom. You are forced to maintain your stature and gradually this takes toll on the sensitivity. We have inherent biases. Our true selves, we react selectively, whether we acknowledge it or not, not all news affects us. Social media becomes a grand stage for theatrics. Whether you believe it or not, whether you are moved or not does not matter. Hence we start faking righteousness and justice to satisfy something transient, in the way losing our true self and identity. I have succumbed to them couple of times myself. Gradually our virtual selves become bigger than our true selves and we start believing the virtual self as the real one too. 

The other way is to become a saint, just become a spectator, do not indulge in anything. Just like whatever you see, wish good morning to whoever you come across, No one expects you to react. Can live happily ever after. The stark indifference is again a buffer to guard us from affecting. The former have a moral highness though a hypocritical one, in this case we have nothing else left other than the inert selfishness. We end up hypersensitive to even trivial criticisms and end up losing mental peace which we maintained desperately. I had tried this mode too. A grand failure. 

Here I am, out of facebook, this is the plausible method i found working. This space allows me to be selectively reactive instead of inertness, without the urge of proving anything to anyone. 


Wednesday, February 28, 2018

புயலிலே ஒரு தோணி - நாவல் வாசிப்பு

நெடுங்காலமாக வாசிக்க வேண்டும் என்றிருந்த நாவல். முன்னரே ஓரிருமுறை சில அத்தியாயங்கள் வரை வாசித்து தொடர முடியாமல் போன நாவலும் கூட. இம்முறை தடையின்றி வாசித்து முடித்தேன். அவருடைய மற்றொரு நாவலான கடலுக்கு அப்பால் இன்னும் வாசிக்கவில்லை. 

சிங்காரம் எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர். அயல் நிலத்தில் நகரத்தார் வாழ்வை மிக நெருக்கமாக எழுதிய படைப்பாளியும் கூட. இந்நாவல் தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 

எழுபதுகளில் இந்நாவல் எழுதப்பட்டது. அன்றைய மைய இலக்கிய போக்கிலிருந்து வெகுவாக அன்னியப்பட்ட களத்தில் நாவல் நிகழ்கிறது. அதனாலேயே சரியாக கவனிக்கப்படாமலும் ஆனது. (அப்படி கவனிக்கபடாமல் மீண்டும் கண்டேடுக்கபட்டதாலே மிகையாக கொண்டாடப்படவும் படுகிறது) தமிழில் சர்வதேச களத்தில் எழுதப்பட்ட முதல் இலக்கியத்தரம் வாய்ந்த நாவல். உலகை உலுக்கிய இரண்டாம் உலகப்போரை களமாகக் கொண்டு எத்தனை படைப்புகள் தமிழில் உள்ளன? இந்திய விடுதலை போராட்டத்தை மையமாக கொண்ட இலக்கியதரம் வாய்ந்த புனைவுகள் கூட ஒப்பீட்டு அளவில் குறைவே. இந்த பின்புலத்தில் புயலிலே ஒரு தோணி முக்கியத்துவம் பெறுகிறது. 

அடிப்படையில் புயலிலே ஒரு தோணி நாயக சாகச கதை. தமிழக கிராமத்திலிருந்து அந்நிய தேசத்திற்கு பிழைக்க செல்லும் ஒருவன். அங்கிருந்து ராணுவத்தில் இணைகிறான். பெரும் சூரனாக எல்லா எதிரிகளையும் வெல்கிறான். ஊர் திரும்பாமல் பெரும் லட்சிய வேட்கையுடன் அந்நிய நாட்டு கொரில்லா படையில் இணைந்து அந்நாட்டின் விடுதலைக்காக போராடுகிறான். அங்கேயே மரிக்கிறான். கற்பனாவாத சாகசக் கதை என சொல்லிவிட முடியும்.  பாண்டியன் செகுவேராவாக முயன்ற கதை என்று கூட சொல்லலாம். பாண்டியன் யாமசக்கி, விலாசினி, சுந்தரம் பகுதிகள் எல்லாம் ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு உரியவை. அதேப் போல் பாண்டியன் எப்பேர்பட்ட பெண்களையும் வென்றெடுக்கும் பேராற்றல் கொண்ட ஆண்மகனாக சித்தரிக்கப் படுவதும் கூட பெரும் பகல் கனவின் விளைவோ என தோன்றியது.  

இப்படியான நாவலுக்கு முதன்மை இலக்கிய அந்தஸ்து எப்படி வழங்கப்படுகிறது?

இரு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று வேறு எவரும் தமிழில் எழுதிவிடாத கதை களம். அதன் நம்பகமான சித்தரிப்பு. புலம் பெயர் தமிழரில் ஒரு சாராரின் வாழ்க்கை பதிவு. (ரப்பர் தோட்டமோ தொழிலாளிகளோ நாவலில் ஓரிடத்தில் கூட வரவில்லை). ஊர் கதைகள்,நினைவுகள் பகிரப்படும் போது பயன்படுத்தப்படும் வட்டார வழக்கு. நானறிந்த வரை செட்டிநாட்டு வழக்கு பதிவான ஒரே முக்கியமான இலக்கிய ஆக்கம் இதுவே. நினைவுகளின் ஊடாக சித்தரிக்கப்படும் மதுரை, சின்னமங்கலம், காரைக்குடி பகுதிகள் முக்கியமானவை. ஆவன்னா, நாவன்னா, மாணிக்கம், அயிஷா, இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரிகளின் பாத்திர வார்ப்புகள் சிறப்பாக உள்ளன. 

இதைவிடவும் முக்கிய காரணம் என்பது நாவலுக்குள் உள்ள பகடி. புதுமைபித்தனின் நேர் வாரிசு என சிங்காரத்தை அடையாளப் படுத்தலாம். தமிழ் பேரவை, மதுக்கூட பிரசங்கம் போன்ற பகுதிகளில் மொழி கட்டற்று பாய்ந்து செல்கிறது. ஐ.என்.ஏ அதிகாரியை பாண்டியன் சந்திக்கும், உரையாடும் பகுதிகள் எல்லாம் அபார பகடி. தமிழினத்தை கடைத்தேற்ற எதாவது செய்தாக வேண்டும் என்று எண்ணும் பாண்டியன் சுமத்திராவின் 'மெர்டேக்கா' போராட்டத்தில் உயிர்விடுகிறான். 

 நாவலில் வடிவக் குறைபாடுகளும் உண்டு. அயிஷாவின் பாத்திரம் என்னவோ செய்யப்போகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கையில் திருமணம் முடித்து 'மெர்டேக்கா' காரர்களோடு சேர்ந்துவிடாதே உன் முகத்தை பார்த்தால் தெரிகிறது என்று சொல்லி எச்சரித்துவிட்டு, நாவலில் அடுத்து பாண்டியன் என்ன முடிவெடுக்க போகிறான் என முன்னோட்டம் காட்டிவிட்டு சென்றுவிடுகிறது. சுமத்திராவிற்காக போரில் பங்கேற்பது வலுவான வாதங்களால் நியாயப்படுத்தப் படுகிறது ஆனால் அவன் ஊர் திரும்ப முடிவெடுப்பதற்கு போதிய நியாயங்கள் நாவலில் உருவாகவில்லை. ஆனால் நாவலில் பாண்டியன் அப்படி முடிவெடுக்கும் தருணம் எனக்கு முக்கியமாக பட்டது. நாவல் போதும், முடித்துவிடலாம் என்று முடிவெடுத்ததன் விளைவா அல்லது ஏதோ ஒரு மன உந்துதலில் எடுத்த முடிவா என தெரியவில்லை. ஆனால் பாண்டியனின் பலவீனத்தையும் காட்டி செல்லும் தருணமாக அவனுடைய ஊர் திரும்பும் முடிவை புரிந்து கொள்கிறேன். நாவலின் 'உண்மை' 'வடிவத்தை' உதறி எழும் தருணம் என்பதாலேயே இது என்னை ஈர்க்கிறது. பாண்டியன் ஊர் திரும்ப முடிவெடுக்க என்ன காரணம் இருக்கும் என யோசித்து கொண்டிருந்தேன். தனது லட்சியவாதத்தின் மீதான அலுப்பாக கூட இருக்கலாம். 

தமிழ் சமூகத்தின் போலி பெருமிதத்தை பகடி செய்தபடியே தமிழ் சமூகத்தின் இலட்சியவாதியாகவும் உருவெடுக்கும் முரணை சிங்காரம் வெற்றிகரமாகா நெய்துவிட்டிருக்கிறார். இந்நாவலின் பகடி பகுதிகளை எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காது. இவை இந்நாவலுக்கு காலாதீத தன்மையும் முன்னோடி இடத்தையும் அளிக்கின்றன. 


Life without facebook

I am intending to use this space as a bi lingual try out. Just to stay in touch with the language. Henceforth there will be occasional posts in English too.

So, there exists life without facebook. Its been two days since i deactivated facebook. Too early to boast, I understand. But life looks peaceful and lovely. You need not see blood bath, need not read hypocritical blabbering, importantly the negativity and hatred that one feels around, with adrenaline gushing over your veins. The biggest thing is you will be saved from observing the fall of icons and people whom you respected for their intellectual augur. Enough of disillusionment.  You can still respect them. Thank God.The internal rage has disappeared. When you come across some stupid and fundamentally flawed idea, there will be an internal urge to engage in discourse with him. Try to explain him. But what a vain! No one moves an inch in social media. You cannot convince anyone in a debate. OK in that case why is our mind resting in peace and move away. It is strange. while you refrain from debating there will be internal debate. What i miss? Yes some friends who are acquaintances in social media. I miss them. But yes will learn to live. I also miss the occasionally brilliant and creative memes in the flood of insensitive and stupid ones.

My mobile time has come down drastically, which has increased my reading time.Also i feel more attentive to Manasa and Sudhir. Life is Good.  

Sunday, February 25, 2018

சபிக்கப்பட்டவர்கள்

மனிதர்களே உங்கள் எலும்புகள்  ஓநாய்களுக்கு இரையாக படைக்கப்பட்டன. உங்கள் சதைகள் சிதலுக்குரியவை. நீங்கள் பெருமழையை புயலை பூமிப் பிளவை வென்றுவிட்டதால் அமரர்களாகிவிட முடியாது. உங்கள் அருகமர்ந்தவனின் நம்பிக்கையை, நன்மதிப்பை நீங்கள் ஒருபோதும் அடையாதபடிக்கு நாங்கள் அதை ஒளித்து வைத்துள்ளோம். உங்களை அழிக்க நாங்கள் ஆடிகளை படைத்திருக்கிறோம்.  நீங்கள் உங்களையன்றி வேறு எதையும் நோக்காமல் ஆவீர்கள். உங்கள் அழகில், பிசகில் லயித்து குலாவிக் கிடப்பீர்கள்  சோற்று மூட்டை அழுகி புழுத்தாலும் அதிலிருந்து ஒரு பருக்கையை கூட சிந்தவிட மாட்டீர்கள். உணவின்றியும் உணவுண்டும் மெல்ல மெல்ல மட்கி அழிவீர்கள். நீங்கள் வேட்டையாடிய மாமத யானைகளும், தோலுரித்த புலிகளும், நசுக்கிய சிற்றெறும்புகளும் தங்கள் ஆவிகளை உங்களுக்குள் புகுத்துவதற்காக தருணம் பார்த்து சுமந்து அலைகின்றன. அவை வேட்டையாடி பழிதீர்க்க வெறித்து திரிகின்றன. உங்கள் கட்டைவிரல் தளுக்கிற்கும், கண்னசைவிற்கும் எரிமலை வெடிக்கும் அதிகாரத்தை சும்மா ஒன்றும் அளித்துவிடவில்லை. உங்கள் மாமேருக்களை கரையான்கள் மூடி மறைக்கும் காலம் நோக்கி ஓடத்துவங்கி நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

இனி கறையான்களின் காலம்...


Sunday, February 18, 2018

காரைக்குடி புத்தக கண்காட்சி 2018 அனுபவங்கள்


ஃ பிப்ரவரி 9 ஆம் தேதி துவங்கிய காரைக்குடி புத்தக கண்காட்சி 18 ஆம் தேதி வரை காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் நிகழ்ந்தது. சிறுநகரமான காரைக்குடியில் தொடர்ந்து 16 ஆவது ஆண்டாக பெரும் சவால்களை கடந்து உயிர்ப்புடன்  நடைபெறுகிறது. முதல் மூன்று ஆண்டுகள் மத்தியல் மின் வேதியல் ஆய்வு மையம் புத்தக கண்காட்சியை ஒருங்கிணைத்தது. அப்போது பெரும் வரவேற்பு கிடைத்தது. பல எழுத்தாளர்களை அழைத்து வந்தார்கள். பின்னர் அவர்கள் விலகிக் கொண்டதும் வாசிப்பின் மீது ஆர்வமுள்ள தன்னார்வ குழு புத்தக கண்காட்சியை ஒருங்கிணைக்க தொடங்கியது. பிற மாவட்டங்களைப் போல் மாவட்ட ஆட்சியர் ஆர்வமுடன் முன்னெடுப்பதில்லை. ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், பாரதி கிருஷ்ணகுமார் என பல எழுத்தாளர்கள் காரைக்குடி புத்தக கண்காட்சிக்கு வருகை புரிந்துள்ளார்கள். தமிழ்த்தாய் கோவில் வளாகத்திலேயே புத்தக கண்காட்சி நிகழ்வது பெரும் அறிவு தொடர்ச்சியை பறைசாற்றுவதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நிறைவு விழாவின் போது மாநில அளவில் சாதனை படைத்த காரைக்குடி மாணவர்களை மேடையில் மரியாதை செய்கிறார்கள். இந்த அண்டு பத்து அரசு பள்ளிகளுக்கு மொத்தம் இரண்டு லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை நூலகங்களுக்காக வழங்கினார்கள். ஆனால் இந்த புத்தகங்களை உள்ளிருக்கும் அரங்குகளில் இருந்து வாங்குவதே முறை. ஆனால் புரவலர்கள் முடிவில் நாங்கள் தலையிட முடியாது என ஒதுங்கிவிட்டனர். கௌரா ஏஜென்சீஸ் 50 சதவித தள்ளுபடியில் விற்றுக் கொண்டிருந்த புத்தகங்கள் எல்லோருடைய தேர்வாகவும் ஆயின. கல்லூரி நூலகத்திற்காக வாங்குபவர்களும் மொத்தமாக அங்கு வாங்கி சென்றனர்.சில லட்சங்களுக்கு புத்தகம் விற்பனை ஆனதாக பேச்சு. ஆக புத்தக விற்பனை என்பது அல்ல சிக்கல். என்ன விதமான புத்தகங்கள் என்பதே.

காரைக்குடியைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் டாக்டர். அய்க்கண் இன்று வரை முனைப்புடன் கண்காட்சியை ஒருங்கிணைத்து வருகிறார். ஐம்பது புத்தக அரங்குகள் உள்ள கண்காட்சியில் பெரும்பாலான அரங்குகள் வாடிக்கையாக வரும் பதிப்பகங்களே எடுத்துக் கொள்கின்றன. இம்முறை சுமார் 30 விற்பனை நிலையங்கள் பங்கு கொண்டன. தொடர்ந்து வருவதற்கு மிக முக்கிய காரணம் பதிப்பகத்தாருக்கு வசிப்பிடம் இலவசமாக வி.கே. என் அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது என்பதே. தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை செட்டிநாட்டை கழித்து விட்டு எழுதிவிட முடியாது. முக்கியமான பதிப்பாளர்கள் காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தான். சா. கணேசன் துவங்கிய காரைக்குடி கம்பன் கழகம் மரபிலக்கியத்தை இன்று வரை உயிர்ப்பித்து பெரும் தொண்டாற்றி வருகிறது. கந்த ஷஷ்டி விழா, ராமாயண சொற்பொழிவு, திருக்குறள் விழா, சிலம்பு விழா என கொண்டாட்டங்கள் வருடம் முழுக்க நீளும். இன்றும் திருமணம் மற்றும் பிற குடும்ப விழாக்களில் புத்தகங்களை அச்சடித்து பரிசாக வழங்கும் வழக்கம் நீடிக்கிறது. ரோஜா முத்தையா புத்தக சேகரிப்பைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. மரபிலக்கியத்தில் வலுவான தடம் பதித்த காரைக்குடி நவீன தமிழ் இலக்கியத்தில் சன்னமாகவே தடம் பதித்துள்ளது. ப. சிங்காரம் ஓரளவு இப்பகுதியின் வாழ்வியலை  அந்நிய நிலத்தின் பின்புலத்தில் பதிவு செய்திருக்கிறார்.முத்து மீனாள், ரமா இன்ப சுப்பிரமணியன், ஆறாவயல் பெரியய்யா, ஆறுமுக தமிழன், தேனம்மை லக்ஷ்மணன் போன்றோர் கவனிக்கத்தக்க எழுத்தாளுமைகள் என நினைவில் எழுகிறார்கள்.

என்.பி.டி, என்.சி.பி எச், சாகித்திய அகாதமி, கிழக்கு, பாரதி புத்தகாலயம் போன்ற முக்கிய பதிப்பகங்கள் எப்போதும் அரங்குகள் அமைப்பார்கள். முக்கியமான புதிய மற்றும் பழைய ஆங்கில நூல்களை விற்பனை செய்யும் புக் வேர்ல்ட் வருவார்கள். காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, சந்தியா போன்ற நவீன இலக்கியத்தின் முக்கிய பதிப்பகங்கள் துவக்க காலங்களில் வந்தாலும் போதிய லாபம் இல்லை என்பதால் கடந்த சில ஆண்டுகளாக வருவதில்லை. இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளாக நவீன இலக்கிய நூல்களை கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘மரப்பாச்சி’ எனும் பேரில் ஓர் அரங்கை நடத்தி வருகிறோம். தமிழினி, வம்சி, எதிர், சர்வோதயா, யாவரும், இந்து, மணல்வீடு, தேசாந்திரி பதிப்பக வெளியீடுகளை விற்பனைக்கு வைத்தோம்.

சிறுநகரங்களில் தன்னார்வமாக ஏற்பாடு செய்யப்படும் புத்தக கண்காட்சி சந்திக்கும் சவால்கள் காரைக்குடிக்கும் பொருந்தும். புரவலர்கள் அளிக்கும் நிதியுதவியால் தான் இவ்விழா தொடர்ந்து நிகழ்கிறது. வார இறுதி நாட்களில் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் விற்பனை வார நாட்களில் மிகவும் மந்தமாகத்தான் இருக்கும். பள்ளி வளாகம் என்பதால்  வார நாட்களில் அரங்குகளுக்குள் மாலையில் தான் அனுமதி. மாணவர்களின் கலை நிகழ்சிகள் மாணவர்களையும், காண வருபவர்களையும் கண்காட்சிக்குள் அழைத்து வரும் எனும் நம்பிக்கை பொய்த்து போகிறது. கலை நிகழ்வுகளை காண வருபவர்கள் உள்ளே வருவதில்லை. அப்படியே வந்தாலும் நிதானமாக அரங்குகளுக்குள் சுற்றிப்பார்த்து  புத்தகங்களை வாங்குவதில்லை. தொடர் விளம்பரங்களும் வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியும் தேவையாய் உள்ளன. சமூக ஊடகங்களிலும் காரைக்குடி புத்தக கண்காட்சிக்கு இருப்பு வேண்டியதாய் உள்ளது. இன்றைய இணைய யுகத்தில் நமக்கு தேவையான புத்தகங்களை தருவிப்பது மிகவும் எளிது. எந்த புத்தகங்கள் தேவை? எவை தரமானவை என்றறிவதே சவால். இச்சூழலில் புத்தக கண்காட்சி புத்தக விற்பனைக்கான ஏற்பாடு என்பதிலிருந்து பண்பாட்டு செயல்பாடாக பரிணாமிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. சென்னை புத்தக கண்காட்சி தமிழக அளவில் பண்பாட்டு விழாவாக, எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுடன் தொடர்ந்து சந்திப்புகளை ஒவ்வொருநாளும் ஒருங்கிணைக்க வேண்டும். அதுவே நாளடைவில் தரமான வாசக பரப்பை ஏற்படுத்தும்.

அண்மைய காலங்களில் வாசிப்பு ஆர்வம் பெருகுவதை கண்கூடாக உணர முடிகிறது. ஆனால் இந்த ஆர்வம் புத்தகங்களை நுகர் பொருளாக அணுகி வாங்குவதுடன் வடிந்து விடுகிறதோ எனும் ஐயம் ஏற்படுகிறது. உள்ளூர் அளவில் நல்ல புத்தகங்களை அடையாளம் காட்டும் வாசக அமைப்புகள் உருவாகி வலுப்பெற வேண்டும். புதிய ஊர்களில் முதல் ஓரிரு ஆண்டுகள் ஆர்வத்துடன் மக்கள் பங்கு கொள்ளும் புத்தக கண்காட்சிகள் காலபோக்கில் வெளிறிவிடுகின்றன. ஆர்வமுள்ள மூத்தோருக்கு பின் மெல்ல சிறு நகரங்களில் புத்தக கண்காட்சி நிகழாமல் ஆவதற்கே வாய்ப்புக்கள் அதிகம். புத்தக வணிகம் என்பதை தாண்டி அறிவு திருவிழாவாக புத்தக கண்காட்சி மாற வேண்டியதே இன்றைய காலத்தின் கட்டாயம்.  

சிறிய தட்டியில் காரைக்குடி நவீன இலக்கிய வாசகர வட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் என எழுதி வைத்திருந்தோம். சுமார் 30 பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள் என்பது நிறைவளிக்கும் செய்தி. மாதமொரு முறை கூடுகைகளை ஒருங்கிணைக்கலாம் என யோசனை. இந்த புத்தக கண்காட்சியில் கவிஞர் விஷ்ணு குமார், ராமச்சந்திரன் மற்றும் குயலவனை சந்தித்து உரையாடியது நிறைவான தருணங்களாக அமைந்தன. முதல் முறை சந்தித்தாலும் வெகு இயல்பாக உரையாட முடிந்தது. சென்னை போன்ற நகரங்களில் இயல்பாக இப்படி உரையாட பல வாய்ப்புகள் உள்ளன. உள்ளூரில் ஒத்த ரசனையும் தேடலும் உள்ள நண்பர்களை கண்டுபிடிப்பது குதிரை கொம்பு. தம்பி விஷ்ணு தான் எழுதப்போகும் நாவலைப் பற்றி சொன்னார். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. குயலவன் அளவுக்கோ விஷ்ணு அளவுக்கோ அவர்களுடைய வயதில் நவீன இலக்கிய வாசிப்பு எனக்கு இருந்தது இல்லை. விட்டதைப் பிடிக்க இரு மடங்கு வேகமாக ஓட வேண்டும்.

நரகத்தில் ஒரு பருவகாலம், நீரோட்டம் பார்ப்பது எப்படி, திராவிடம் மார்க்சியம்,தமிழ் தேசியம் – ராஜேந்திர சோழன் எழுதியது ஆகிய நூல்களை முழுக்க வாசித்தேன். அமரந்தா மொழியாக்கம் செய்த கூகி வாங் தியோவின் சிலுவையில் தொங்கும் சாத்தான், ஸ்ரீதர் ரங்கராஜ் மொழியாக்கம் செய்த சாமர் யாஸ்பெக்கின் பயணம்  மற்றும் கினோ, கார்த்திகை பாண்டியன் மொழியாக்கம் செய்த முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் விஜய பத்மா மொழியாக்கம் செய்த இஸ்மத் சுக்தாய் கதைகள் ஆகிய நூல்களை கொஞ்சம் வாசித்தேன். பாமாவின் கருக்கு, தேவி பிரசாத் சட்டோபத்யாயவின் இந்திய நாத்திகம், அவன் காட்டை வென்றான் ஆகியவற்றை பிற அரங்குகளில் இருந்து வாங்கினேன். ஜஸ்டின் கார்டனர் (சோபியின் உலகம் எழுதியவர்) எழுதிய இரு நூல்கள், மற்றும் இந்திய தத்துவம் பற்றிய அறிமுக நூல் ஆகியவை புக் வேர்ல்டில் கிடைத்தன. ஆஸ்டிரிக்ஸ் காமிக்ஸ் விலையை பார்த்து பயந்து அங்கேயே  வைத்துவிட்டேன்.

லாப நட்ட கணக்குகளைப் பற்றி பேசினால் விரக்தி தான் எஞ்சும். நண்பர்கள் ஆளுக்கு ஆயிரமாக இந்த கண்காட்சியை நடத்த மூன்றாண்டுகளாக பிரதிபலன் இன்றி உதவி வருகிறார்கள். பங்குதாரர்கள் போல் செயலாற்றி வருகிறார்கள். அதவாது எனது நட்டத்தை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை எழுதுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். மேலும் சில வெளியூர்/ வெளிநாட்டு  நண்பர்கள் அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் இருந்தும் கூட என்னிடமிருந்து புத்தகங்களை வாங்கிக் கொள்கிறார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் 'மரப்பாச்சி' செயல்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு கிடைத்த விழுப்புண் இன்னும் நினைவில் உள்ளதால் இந்த ஆண்டு அரங்கை பதிவு செய்யும் எண்ணமே எனக்கில்லை. ஆனால் நிர்வாகிகளே அழைத்த போது மீண்டும் சபலம் ஏற்பட்டு ஒப்புக்கொண்டேன். முக்கியமாக மானசாவும் அம்மாவும் முகம் சுளிக்காமல் இவற்றை அனுமதிப்பதும் ஆதரவளிப்பதும் பெரிய விஷயம். அடுத்த ஆண்டு பற்றி இப்போது எந்த யோசனையும் இல்லை. மாதமொரு நாள் மரப்பாச்சி இலக்கிய கூடுகையை நடத்த வேண்டும் என்பது மட்டுமே இப்போது மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. பார்ப்போம்.    



Monday, February 12, 2018

அம்புப் படுக்கை சிறுகதை தொகுப்பு பற்றி

இதுவரை அம்புப் படுக்கை தொகுப்பு பற்றி வந்துள்ள பார்வைகளை இந்த இடுகையில் தொகுத்து கொள்கிறேன். வாசித்து எதிர்வினை ஆற்றிய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. விரிவாக எழுதவில்லை என்றாலும் கூட வாசித்ததை தெரிவித்து ஊக்குவித்த கவிஞர் ராஜா சந்திரசேகர், எழுத்தாளர் பத்மஜா நாராயணன், எழுத்தாளர் நவீன், நண்பர் ராஜீவ் பாஸ்கரன், நண்பர் இராமசாமி கண்ணன்,  எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி, எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன், எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன், எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார், எழுத்தாளர் சித்திரன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், நண்பர் யமுனை செல்வன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. 

நேரம் எடுத்து விரிவாக தங்களது பார்வைகளை பதிவு செய்த பத்திரிக்கையாளர் ஆசை, எழுத்தாளர்  கிருஷ்ணமூர்த்தி, நண்பர் காளி பிரசாத், மேரி கிறிஸ்டி, சிவமணியன், விஷ்ணு பிரகாஷ், ரமேஷ் கல்யாண், டேவிட்  ஆகியோருக்கும் நன்றிகள்.

கவிஞர் சமயவேல் அவர்களின் கட்டுரை
https://samayavel.blogspot.in/2018/02/blog-post.html

மேரி கிறிஸ்டி அவர்களின் வாசிப்பு 

http://www.jeyamohan.in/106732#.WoJzKKinHIV

எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை 
http://www.kimupakkangal.com/2018/02/blog-post_4.html

ஆசை எழுதிய அறிமுகம் 

http://writerasai.blogspot.in/2017/12/blog-post_14.html

சிவமணியன் வாசிப்பு அனுபவம் 
https://sivamaniyan.blogspot.in/2018/01/blog-post.html

காளி பிரசாத் வாசிப்பு 
http://kaliprasadh.blogspot.in/2017/12/blog-post.html

யமுனைசெல்வனின் முதல் பார்வை
https://yamunaiselvan.wordpress.com/2018/01/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

விஷ்ணுபிரகாஷ் வாசிப்பு 

http://suneelwrites.blogspot.com/2018/01/1.html

ரமேஷ் கல்யான் அவர்களின் கடிதம்
http://suneelwrites.blogspot.com/2018/04/blog-post.html

துணை இயக்குனர் டேவிட் அவர்களின் வாசிப்பு
http://suneelwrites.blogspot.com/2018/05/blog-post_8.html
http://suneelwrites.blogspot.com/2018/05/2.html