Sunday, February 25, 2018

சபிக்கப்பட்டவர்கள்

மனிதர்களே உங்கள் எலும்புகள்  ஓநாய்களுக்கு இரையாக படைக்கப்பட்டன. உங்கள் சதைகள் சிதலுக்குரியவை. நீங்கள் பெருமழையை புயலை பூமிப் பிளவை வென்றுவிட்டதால் அமரர்களாகிவிட முடியாது. உங்கள் அருகமர்ந்தவனின் நம்பிக்கையை, நன்மதிப்பை நீங்கள் ஒருபோதும் அடையாதபடிக்கு நாங்கள் அதை ஒளித்து வைத்துள்ளோம். உங்களை அழிக்க நாங்கள் ஆடிகளை படைத்திருக்கிறோம்.  நீங்கள் உங்களையன்றி வேறு எதையும் நோக்காமல் ஆவீர்கள். உங்கள் அழகில், பிசகில் லயித்து குலாவிக் கிடப்பீர்கள்  சோற்று மூட்டை அழுகி புழுத்தாலும் அதிலிருந்து ஒரு பருக்கையை கூட சிந்தவிட மாட்டீர்கள். உணவின்றியும் உணவுண்டும் மெல்ல மெல்ல மட்கி அழிவீர்கள். நீங்கள் வேட்டையாடிய மாமத யானைகளும், தோலுரித்த புலிகளும், நசுக்கிய சிற்றெறும்புகளும் தங்கள் ஆவிகளை உங்களுக்குள் புகுத்துவதற்காக தருணம் பார்த்து சுமந்து அலைகின்றன. அவை வேட்டையாடி பழிதீர்க்க வெறித்து திரிகின்றன. உங்கள் கட்டைவிரல் தளுக்கிற்கும், கண்னசைவிற்கும் எரிமலை வெடிக்கும் அதிகாரத்தை சும்மா ஒன்றும் அளித்துவிடவில்லை. உங்கள் மாமேருக்களை கரையான்கள் மூடி மறைக்கும் காலம் நோக்கி ஓடத்துவங்கி நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

இனி கறையான்களின் காலம்...


No comments:

Post a Comment