Saturday, February 26, 2011

மாற்று அரசியல் -சில புரிதல்கள்

மாற்று அரசியல் -லட்சியவாதம் என்று அவ்வபொழுது எங்கேனும் சில குரல்கள் ஒலிக்கும் அதை கேட்கும் பொழுதெல்லாம் மனதில் ஒருவித மென்னகை படர்கிறது .எந்த கட்சியையும் சாராத மனசாட்சியுள்ள மனிதர்கள் இன்னும் ஆங்காங்கு வாழ்கிறார்கள் .இனி இந்தியாவில் ஒரு மகாத்மா வந்து நம்மை கைதூக்குவார் எனும் நம்பிக்கை மெல்ல மெல்ல மூச்சைடத்து மூர்ச்சையாகிறது ,ஆகினும் நம்பிக்கைதானே வாழ்க்கை எங்கோ ஒரு மூலையில் மானுடம் இன்னும் புலன்களுக்கு சிக்காமல் வாழ்கிறது எனும் நம்பிக்கையில் இந்த பதிவு .

பலநேரங்களில் நம்மை ஏன் மற்றொருவர் ஆள வேண்டும் எனும் வினா மனதில் கடும் அமளியை ஏற்படுத்துவதுண்டு ,ஒரு தேசம் என்பது சமூகங்களின் தொகுப்பு ,சமூகங்களோ குடும்பங்களின் தொகுப்பு ,குடும்பங்கள் தனிமனிதர்களின் தொகுப்பு .இந்த புரிதலில் அமிழ்ந்தோம் எனில் நமக்கு புரிவது தேசம் என்பது பல சமூகங்கள் ,குடும்பங்கள் ,தனிமனிதர்களின் கூட்டு சாத்தியம் .அதே போல் ஒவ்வொரு தனிமனிதனும்,சமூகமும்,குடும்பமும் சிறு சிறு தேசங்களே .தேசத்தை நிர்வகித்தல் என்பது இவை அனைத்தையும் நிர்வகித்தல் ,ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை நிர்வகித்தால் தேசமே நிர்வகிக்கப்படும் ,இது ஏற்கனவே உள்ள கோட்பாடுகள் தான்

சுதந்திரம் என்பது என்ன ? பல சமயங்களில் மூளை முறுக்கி சிந்தித்ததுண்டு .நாம் முற்றிலும் சுதந்திரமாக இயங்க முடியுமா ? உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்பவை ,சுதந்திரம் என்பது ஒரு வித மாயை ,வண்டலூர் மிருககாட்சி சாலையினுள் சுத்தி திரியும் புலியை போல் நாம் ,நமது உலகம் வண்டலூர் மட்டும் என்று எண்ணுவதால் வரும் குழப்பம் ,independence அல்ல interdependence என்பதே பிரபஞ்ச நியதி .

தன்னை தானே நிர்வகிக்கும் தனிமனிதர்கள் கொண்ட சமூகம் பிறக்கும் பொழுது அரசின் தேவை நமக்கு இல்லை ,இதையே அரசின்மை வாதம் முன்வைக்கிறது ,அத்தகைய நிலையை நாம் எட்டும் வரை அதிகாரமும் அராசங்கமும் மந்தையை கவனித்து ஆக வேண்டும்

சரி இதெல்லாம் இருக்கட்டும் ,இனி தமிழகத்தில் தேர்தல் திருவிழா .தேர்தல் எனும் ஒரு நாள் கூத்திற்கு செலவழிக்க படும் தொகை எவளவு தெரியுமா ? ஒரு தொகுதிக்கு ஆளும் கட்சி .எதிர் கட்சி ,உதிரி கட்சி ,அரசு எல்லாரும் செலவழிப்பது தொரயாமாக குறைந்தபட்சம் பத்து கோடிகள் அல்லது அதற்கு மேல் செலவு ஆகலாம் .அப்படியானால் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்காக 2340 கோடிகள் ஒரே நாளில் விரயமாகப்போகிறது ,இறுதியில் யார் அதிகம் செலவு செய்தார்களோ அவர்களை மக்கள் வெற்றி பெற செய்கின்றனர் .மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியன் ,அல்லது ஆசிரியர்,மென்பொருள் நிறுவனத்தார் இவர்கள் யாரும் செலவு செய்ய துணியாத ஒரு தொகையை அதே முப்பதாயிரம் சம்பளமாக பெரும் ஒரு மக்கள் பிரதிநிதி அந்த பதிவிக்காக தன சம்பாத்தியத்தை விட மூவாயிரம் மடங்கு செலவழிக்க தயாராக இருக்கிறார் எனில் அவர்களுடைய நோக்கம் எத்தகையது என்பதை நாம் அறிய வேண்டும் .

இதிலே மக்கள் சேவை எங்கிருந்து வரும் ?மக்களை கவனிப்பாரா அல்லது போட்ட காசை திருப்பி மீண்டும் அடுத்த தேர்தலுக்கு காசை பிரட்ட முயல்வாரா ?
மக்கள் சேவை எனும் முகமூடி அணிந்து நம் முன் கட்சி கொடிகளை ஏந்தி வரும் இவர்களுக்கு நாமும் வேறு வழி இல்லாமல் ஒட்டு போடுகிறோம் ,இவருக்கு அவர் மேல் அவருக்கு இவர் மேல் இதுவே நம் ஓட்டை நிர்ணயிக்கும் சக்தி !

யார் ஒருவர் தன சக்திக்கு மீறி காசை இறைக்கிராரோ அவருக்கு வேறு நோக்கம் உள்ளது என்பதை அறிந்து ,இத்தகைய வேட்ப்பாளர்களை கட்சி ,ஜாதி சார்பின்றி புறக்கணிக்க வேண்டும் .யார் மிக குறைவாக செலவழித்து அதே சமயம் நிறைவாக நமக்காக குரல் கொடுப்பார் என்று தோன்றுகிறதோ அவர் சுயேட்சையாக இருந்தாலும் சரி அவர் வெல்ல மாட்டார் என்றாலும் சரி -அவருக்கு தான் நமது ஒட்டு போய் சேர வேண்டும் .
இதுவே மெய்யான ஜனநாயகத்தின் செயல்பாடு .நாம் ஒட்டு போட்டவர் வெல்வதும் தோற்பதும் அல்ல ,நாம் சரியான மனிதருக்கு வாக்களித்தோம் எனும் மன நிறைவே இங்கு முக்கியம் .இது ஒரு இயக்கமாக நம் மக்கள் முன் மலர வேண்டும் .அப்படி மலர்ந்தால் ஒழிய தேர்தல் நேர அதீத காசு மழை நிற்காது .ஒட்டு மொத்தமாக மக்கள் இவர்களை புறக்கணிக்க தொடங்கினால் ஒழிய இது சாத்தியம் இல்லை .
ஒரு அரசியல் இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் ,எனக்கும் உண்டு .
ஒரு அரசியல் தலைவனின் பார்வையில் முதல் முக்கியத்துவம் தேசத்துக்கு ,மக்களுக்கு அதன் பின்பு கட்சிக்கும் கொள்கைக்கும் அதன் பின்பே தனக்கும் தனது குடும்பத்துக்கும் என்பதை உறுதியாக கடைபிடிக்க வேண்டும்

கவர்ச்சி திட்டங்கள், இலவசங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டு .மக்களின் வாழ்க்கை தரம் உயரும் வண்ணம் அவர்களின் சுயமரியாதை பங்கம் விளைவிக்காமல் நல்ல தனி மனிதர்களை உருவாக்க முனைய வேண்டும் .

தங்களது கொள்கைகள்,நம்பிக்கைகள் மேல் பற்று இருக்கலாம் -ஆனால் அது வெறியாகி அதை நிறுவ முயன்று வெறுப்பை விதைக்க கூடாது . அவரவர் கொள்கைகளில் உறுதியாக இருந்தாலும் மாற்று கொள்கைகளை ,நம்பிக்கைகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்

வீண் ஆடம்பரங்கள் கூடாது ,நெடுஞ்சாலையை நோண்டி வளைவுகள் வைத்தல் ,ரோட்டை மறித்து மேடை போடுதல் ,பெரும் கூட்டத்தை கடற்கரையில் கூட்டி கடற்பரப்பு எங்கும் கண்ணாடி பீர் குப்பிகளும் ,பாதி குதறிய பிரியாணி பொட்டலங்களும் நிறைந்து கிடக்கும் அவலம் இனி கூடாது .

தனி மனித தாக்குதல்களில் ஈடுபடாத அமைப்பு வேண்டும்.மக்கள் நலன் முன்னிலை வகித்தால் போதும் .நீ டாஸ்மாக்ல உருண்டது தெரியாதா ,நீ திருட்டு ரயில் ஏறியது தெரியாதா ,உனது நடத்தை பற்றி தெரியாதா எனும் சவடால்களும் ,அறைக்கூவல்களும் முதலில் நிற்க வேண்டும் .எதிர் கட்சி நம் எதிரி கட்சி அல்ல ,கருத்துக்களின் ஊடே மோதல்கள் நிலவலாம்,சமரசங்கள் இன்றி பயணிக்கலாம் ஆனால் அடிப்படை மனித உணர்வுகளை பாதிக்காது அவை நிகழ வேண்டும் .அவரும் மக்கள் மீது உள்ள அக்கறையில தான் சொல்லுறாரு என்று உணர வேண்டும் .

Tuesday, February 22, 2011

எனது வலையுலகம் -பதிவுகள் 50-கற்றதும் பெற்றதும்

எதையாவது தமிழில் உருப்படியாக எழுத வேண்டும் என்று எண்ணி நானும் கடந்த ஆண்டு வலைப்பூ தொடங்கி கிறுக்கி வருகிறேன் ,அப்படி இப்படி என்று பார்த்தால் இதோ ஐம்பதை தொட்டுவிட்டேன் ! அம்மா என்னை விமர்சிக்கும் பொழுதெல்லாம் இதை தான் சொல்லுவாள் -உனக்கு ஆரம்ப சூரத்தனம் ஜாஸ்தி ,எதையுமே முழுசா ஒழுங்கா செஞ்சது இல்லை .அவள் கூறுவது ஓரளவு சரியே .நான் தமிழில் எழுத போகிறேன் என்று அவளிடம் கூறிய பொழுது சிரித்தால் .இது எத்தன நாளைக்குன்னு பாப்போம் என்பது போல் இருந்தது .பத்து பதிவுகள் தாண்ட மாட்டேன் என்பதே அவள் கணிப்பு .உண்மையில் யாரும் பின்னூட்டம் இடவில்லை என்றால் அது தான் நடந்திருக்கும் ,நமக்கு கிடைக்குற ரெண்டு மணி நேரத்துல இதுக்கு முன்னாடி உக்காந்து தப்பும் தவறுமா எதையாவது டைப் பண்ணி என்ன பிரயோஜனம் என்று யோசித்து இருப்பேன் .ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த வலைப்பூ இப்படி தான் அந்தரத்தில் நின்றது .அட யாருமே இல்லாத கடைக்கு யாருக்குப்பா டீ ஆத்துற என்று என் மனம் என்னிடம் கேட்டுவிடும்.
திரட்டி என்று ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது ,யதார்த்தமாக தமிழ்வெளி எனும் திரட்டியை காண நேர்ந்தது ,பின்பு தமிழ் மனம் ,அப்புறம் இன்ட்லி .நான் எனது வலைப்பூவை இணைத்த திரட்டிகள் இவை மட்டுமே .இதற்க்கு மேல் செய்ய சோம்பல் .இதுவே போதுமானதாகவும் பட்டது .
வலைப்பூவை தங்களது நேரத்தை செலவிட்டு வாசித்து செல்லும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றை இங்கிருந்து கற்றுக்கொண்டு அல்லது பெற்றுக்கொண்டு செல்லவேண்டும்,நானே எனது பதிவுகளை ஏதாவதொரு காலத்தில் வாசிக்க நேரும் பொழுது ஏதும் சமரசங்கள் செய்துகொள்ளாத நேர்மையான எழுத்துக்களாக இருக்க வேண்டும் .இந்த இரு கோட்பாடுகளை மனதில் கொண்டு எழுதிவருகிறேன் ,ஓரளவுக்கு இதை மீறவும் இல்லை என்றே படுகிறது .(நீங்க தான் சொல்லணும் ).முடிந்தவரை வலையுலக அரசியல் (?) மற்றும் குழுமங்களில் (நம்மள யாரும் கூப்டா தானே !!)இணையாமல் ஆறேழு மாதங்கள் ஒட்டிவிட்டேன் .இப்படியே கடந்துவிட வேண்டும் என்பது என் எண்ணம் .

இந்த வலைப்பூவை பின்தொடரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ,குறிப்பாக பின்னூட்டங்கள் மூலம் தங்களது கருத்துகளை தெரிவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் கோடான கோடி நன்றி .வலையுலகத்தில் கால பதித்த காலங்களில் அனேக பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டு கொண்டிருந்தேன் ,இப்பொழுதெல்லாம் அதற்கு நேரம் கிடைப்பதில்லை .(நான் வளர்கிறேன் மம்மி !!) இனி கொஞ்சம் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வாசித்து பின்னூட்டம் இட யத்தனித்து உள்ளேன்

இதை தவிர ,எனது எல்லா பதிவுகளையும் படித்து அதற்கு கருத்துக்களை என்னிடம் தொலைபேசியில் சொல்லும் என் நண்பர்களுக்கு ,பதிவுகளை எப்பயாவது எட்டி பார்க்கும் முகநூல் நண்பர்களுக்கும் நன்றி .
வலையுலகத்தில் பெரிதாக நண்பர்கள் என்று யாரையும் கண்டடையவில்லை -எனினும் ஒத்த மனமுடைய சிலரை கண்டுகொண்டது மகிழ்ச்சி .

மனதிற்கு திருப்தி அளிக்காத பதிவுகள் இதில் சில இருக்கிறது ,தமிழ் மன பரிந்துரை எனும் பதிவு- இதை எழுதி இருக்க கூடாது என்று இப்பொழுது மனம் சொல்லுகிறது .இலங்கை ராணுவம்- இந்திய மீனவர்கள் பிரச்சனையில் எழுதிய ஒரு பதிவு -கவிதை மாதிரி முயன்று மிகவும் மொக்கையாக முடிந்தது ,இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாமோ என்று தோன்றுகிறது .அதே போல் ஆரம்பத்தில் எழுதிய முதல் மூன்று இடுகைகள் -வணக்கம் ,சிவன் ,தலைவன் இதெல்லாம் ஒரே இடுகையில் முடித்து இருக்கலாம் தேவை இல்லாமல் மூன்று இடுகைகளை ஆர்வகோளாரில் வீணடித்து தொலைந்தேன் .இந்த பதிவும் கூட தேவையா என்று யோசித்தேன் ,ஆனால் நான் நன்றி சொல்ல எனக்கு காரணம் இருப்பதால் இதை பதிகிறேன்


சிறுகதை முயற்சிகள் -ஐந்து கதை முயன்றுள்ளேன் ,இனியும் அந்த தொல்லை தொடரும் :) ஆயுர்வேதம் பற்றிய தொடர் அதுவும் தொடர்ந்து வரும் .இதை தவிர சில பதிவுகள் பாதியோடு நிற்கின்றன -பிள்ளை வளர்ப்பு தொடர்பாக மூன்று தொகுதிகள் வரை எழுதி உள்ள பெற்றால் மட்டும் போதுமா ,கடவுளும் மனிதனும் ,எனக்கு தெரிந்த கடவுள்கள் போன்றவை .இதை எல்லாம் எப்பொழுது முடிப்பேன் என்று எனக்கே தெரியவில்லை .புத்தக அறிமுகங்கள் இனியும் தொடரும் .வேறு சில முக்கியமான பதிவுகள் எழுதும் எண்ணம் உண்டு .சரக்கு தீரும் பிரச்சனை இப்போதைக்கு இல்லை .எழுத வேண்டும் எனும் எண்ணம் என்னை உந்தி தள்ளினால் ஒழிய எழுதுவது இல்லை என்றும் முடிவு செய்து இருந்தேன் .
வாசித்து வரும் நண்பர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும் -என்னென்ன குறைகள் இருக்கிறது என்று ,முடிந்த வரை திருத்திக்கொள்ள முயல்கிறேன் .

தமிழ் வலையுலகம் எனக்கு கொடுத்தது எக்கச்சக்கம் .அன்றாடம் ஏதோ ஒன்றை நான் கற்றுக்கொள்கிறேன் .மாற்றுதரப்புகள், பின்னூட்டங்கள், பார்வைகள், எண்ணங்கள் ,படைப்பூக்கம் நிறைந்த படைப்புகள் இவை எல்லாம் அன்றாடம் என்னை புதிதாக சிந்திக்கவைத்த வண்ணம் உள்ளது .மனம் விரிவடைகிறது .என்னை பொறுத்தவரை ஒரு பதிவுகூட மொக்கை என்றோ வீண் என்றோ சொல்லிவிட முடியாது ,அந்தந்த பதிவுக்கான தேவை எங்கோ ஓரிடத்தில் இருக்கிறது அது யாருக்கோ பயனளிக்கவும் செய்கிறது இதுவே உண்மை .

தங்களது நேரத்தை செலவிட்டு எளிய அரசியல் ,சச்சரவுகளை கடந்து,வெறுப்பு-காழ்ப்புகளை உமிழாது தூய நோக்கத்தோடு செயல்படும் அனைத்து சகபதிவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வந்தனங்கள் .

இலவசமாக வலைப்பூ வழங்கி ,அதில் தமிழில் தட்டச்சு செய்யும் வசதியும் அளித்த கூகிளாண்டவருக்கு நன்றி .:)
எனது பதிவுகளோ ,கருத்துகளோ யாரையும் இம்மியளவு மனம் வருந்த செய்து இருந்தாலும் எனது மனப்பூர்வமான மன்னிப்பை கோருகிறேன் .
தனித்தனியாக பல பதிவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும் .அதை அவர்களுக்கு தனியே தெரிவிப்பதே சிறந்தது என்பதினால் அதை இங்கு செய்யவில்லை ,


மேலும் இதுகாறும் தாங்கள் அளித்துவந்த நட்பும் அன்பும் இனியும் தொடரும் என்று நம்பிக்கையுடன்
என்றும் அன்புடன்
டாக்டர்.சுனில் கிருஷ்ணன்

குறிப்பு-சற்றே சுய சொரிதல் கூட இருப்பது போல் உள்ளது -பொறுத்துக்குங்க :) எப்பயாவது ஒரு வாட்டி இப்படி சொரிஞ்சுகரதுனால மன்னிச்சுக்குங்க :)

Wednesday, February 16, 2011

ராஜப்பாவின் சித்திரங்கள்

ராஜப்பா -இவரை பற்றிய என் நினைவுகள் மிக குறைவே ,அவரை நான் சரியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படவில்லையே என்று இன்று வருந்துகிறேன் .இவர் எனது தாத்தாவின் தம்பி (சின்ன தாத்தா ).தம்பி என்றால் ரத்த உறவு அல்ல ,தாத்தாவின் சித்தியின் மகன் .இறுதி வரை பிரம்மச்சாரியாக வாழ்ந்து மறைந்தவர் .நாடோடி வாழ்க்கை வாழ்ந்த கண் முன்னாள் இருந்தும் யாரும் அறியாத ஒரு மேதை என்றே இன்று எண்ண தோன்றுகிறது .அதிகம் பேசமாட்டார் ,ஒரு இடத்தில் பத்து நாட்களுக்கு மேல் தங்கியதாக நினைவு இல்லை .ஏதோ ஒரு சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து அகன்றுவிடுவார் .ஏதோ ஒன்றை பழுது பார்த்துக்கொண்டும் ,உருவாக்கி கொண்டும் சதா சர்வ காலமும் 'பிசியாக ' இருப்பார் .
அவர் அற்புதமாக பிடில் வாசிப்பார் என்று தாத்தா அவரை பற்றி சொல்லி கேட்டிருக்கிறேன் .ஒரு அழுக்கு வேட்டி,மேல் சட்டை அணியாமல் துண்டு போர்த்திய ஒல்லியான தேகம் ,ஒட்டி உள்ளிழுக்கப்பட்ட வயிர் ,தலையில் ஓமகுச்சி நரசிம்மன் போல் இருபுறமும்( மட்டுமே) நரைத்த மயிர் இருக்கும் ,அவரை பார்க்கும் பொழுதெல்லாம் அவரது முகசாயல் பூனையை நினைவுபடுத்தும் .அவருடைய புகைப்படம் ஒன்றே ஒன்று எங்கோ கண்டதாக நினைவு அதையும் இன்று கண்டுபிடிக்கமுடியவில்லை .

அவரது கடைசி காலத்தில் அவரது நடவடிக்கை ஒரு வித பித்து நிலையை நோக்கி அவர் பயணிக்கிராரோ என்று சந்தேகம் எழும் வண்ணம் இருந்தது .ஒரு முறை காரைக்குடிக்கு வந்துவிட்டு எங்கள் வீட்டிற்கு வராமல் வழியில் ஒரு மண் குவியலின் மேல் கிடந்து என் அப்பாவின் பெயரை அரற்றி கொண்டிருந்தாராம் .அப்பாவிடம் சிகிச்சை பெரும் ஒருவர் இவரை வீட்டிற்கு கொண்டு சேர்த்தார் .மற்றொரு முறை டர்பண்டின் எண்ணெய் குடித்து ஒரே அமர்களம் .நான் ஐந்தாவது படிக்கும் சமயம் ,அவரது மறைவுக்கு ஒரு வாரம் முன்பு எங்கள் வீட்டிற்கு வந்தார் ,எனக்கு 'கார்' வடிவம் இருக்கும் ஒரு மஞ்சள் நிற பென்சில் பாக்ஸ் கொடுத்தார் .அது இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளது ,மிகவும் ராசியான பாக்ஸ் -பத்தாவது மற்றும் பனிரெண்டாவது பொது தேர்வுகளுக்கும், நுழைவு தேர்வுகளுக்கும் அதையே எடுத்து சென்றேன் .பின்பு தான் தெரிய வந்தது அது திருச்சியில் இருக்கும் அண்ணனிடமிருந்து அவனுக்கு தெரியாமல் எடுத்து வந்தது என்பது .அதே போல் எனது பெல்ட் ஒன்றை அவனுக்கு கொடுத்தார் என்று அறிகிறேன் .கொட்டம்குச்சி பிடில் செய்வது ,கலிடோஸ்கோப் செய்தது ,இன்னும் ஏதேதோ பெபர்களும் அட்டைகளும் நிறைந்த நினைவுகள் .இது மட்டுமே இன்று என் மனதில் இருக்கும் அவரை பற்றிய நினைவுகள் .
என் சொந்த ஊரான அறிமளத்தில் ,எங்கள் வீட்டு திண்ணை சுவர்களில் சில ஓவியங்கள் உண்டு .அத்தனை ஜீவனுள்ள ஓவியங்கள் .தாத்தா அந்த சிறிய திண்ணையில் அமர்ந்து வைத்தியம் பார்ப்பார் .மறுபுறம் இன்னொரு திண்ணையில் நோயாளிகளும் குடும்பத்தினர்களும் அமர்வார்கள் .யாரும் இல்லாத பொழுது அந்த திண்ணை தான் எனது வாசஸ்தலம் ,அந்த ஓவியங்களில் இருப்பவர்கள் யார் என்று தெரியாத வயது ,அவர்கள் தான் எனக்கு தோழர்கள் ,நான் என்ன பேசினாலும் காது கொடுத்து மறுப்பு தெரிவிக்காத நண்பர்கள் .பேசி விளையாடி மகிழ்ந்த தருணங்கள் அற்புதமானவை

பிற்காலத்தில் அந்த ஓவியங்களை காணும் பொழுதெல்லாம் எனக்கு வியப்பு ஏற்படாமல் இல்லை .அந்த ஓவியங்கள் ராஜப்பா தீட்டியது என்று தாத்தா சொன்னதும்,எனக்கு மனமெல்லாம் ஒரு வித மகிழ்ச்சியும் ,வருத்தமும் ஒரு சேர வரும்.எல்லாம் பென்சிலால் வரையப்பட்டவை .கடந்த பொங்கலுக்கு ஊருக்கு சென்றிருந்த சமயம் அவர் வரைந்த அந்த ஓவியங்களை எனது புகைபடகருவியில் பதிந்துள்ளேன் .அதை இங்கு பகிர்கிறேன் .


1.இந்தியாவின் ஆக பெரிய மக்கள் தலைவர் மகாத்மா காந்தி


2.சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் -ஜவஹர்லால் நேரு













இந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட காலம் 1947 -1952 வரை .ஒவ்வொரு ஓவியத்திலும் அது வரைந்து முடிக்கப்பட்ட நாளும் அவரது கையெழுத்தும் இருக்கிறது .அனைத்துமே வெறும் பென்சில்களால் தீட்டப்பட்டது (அந்த காலத்து பென்சில் கூட எவளவு தரமாக இருக்கிறது!! ).இன்றும் அந்த முட்டை பற்று போடப்பட்ட செட்டிநாட்டு சுவர்களில் காலத்தால் அழியாத படைப்புகளாக நிலைத்து நிற்கிறது .பழைய மரங்கள் எல்லாம் கரையான் அரித்து வீட்டை இடித்து புதுபிக்க வேண்டும் என்று பெரியப்பா சொன்னார் .ஏனோ மனம் கனத்தது .ராஜப்பா வாழ்க்கை முழுவதும் அலைந்து திரிந்து அல்லாடிய ஒரு கலைஞன் ,படைப்பூக்கம் தலைகேறி பித்தாக ஆடிய ஒரு மேதை .உயிரை கலந்து உருவாக்கும் எந்த ஒரு படைப்பும் ஜீவனுள்ளது ,அது தன்னை தானே காத்துகொள்ளும் வல்லமை கொண்டது.பின்கட்டை மட்டும் இப்பொழுது முற்றிலும் இடித்து புதிய வீடு கட்டி முடித்தாகி விட்டது .நாளை இதுவும் இடிந்து விழலாம் ,ஆனால் ஓவியமாக இல்லாவிட்டாலும் புகைப்படமாவது நிச்சயம் எஞ்சி இருக்கும் ,ராஜப்பா ஒன்றும் ரவிவர்மா இல்லை ,இது ஆக சிறந்த ஓவியங்களா ? ..எனக்கு தெரியாது .இவருக்குள் அந்த விதை இருந்தது உண்மை .இந்தியாவில் திறமை இருந்தும் ,முட்டி மோதி தன்னை பிரகடனபடுத்த வேண்டும் ,ராஜப்பா அப்படி தன்னை முன்னிறுத்த தெரியாமல் வாழ்ந்து மறைந்த ஒரு ஜீவன் .
ராஜப்பா இன்றும் வாழ்கிறார் .அந்த ஜீவனுள்ள பாரதியின் கண்களை பாருங்கள் ,இப்பொழுது கூடவா தெரியவில்லை ?

Saturday, February 5, 2011

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -11-முதுகு வலி

அன்றாடம் மருத்துவர்கள் சந்திக்கும் நோயாளிகளில் பெரும்பான்மை நிச்சயம் மூட்டு வலியாகவோ ,முதுகு வலியாகவோ தான் இருக்கும் .எனக்கு தெரிந்து நாற்பது வயதிற்கு மேல் உள்ள அனேகர் இவ்விரு வலிகளால் அவதி படுகின்றனர் .இவ்வகை நோய்களை பற்றிய அறிவும்,தீர்வும் நமக்கு மிகவும் முக்கியம் .

மனிதர்களுக்கு ஏன் முதுகு வலி ?
இயல்பாகவே இதர பாலூட்டி விலங்கினங்கள் போல் இல்லாமல் நாம் நிமிர்ந்து நடப்பது இதன் முக்கிய காரணம் ஆகும் .நான்கு கால்களில் இதர பிராணிகள் போல் நாம் நடந்தால் ,முதுகு புவி ஈர்ப்பு விசைக்கு ஆட்படாது ,நாம் நிமிர்ந்து நடப்பதால் உடலின் எடையை சமன் செய்யவும் ,தாங்கவும் முதுகெலும்பு நமக்கு உறுதுணையாக உள்ளது .ஆயினும் ,முதுகெலும்பின் ஊடாக இருக்கும் ஜவ்வு புவிஈர்ப்பு விசைக்கு ஆட்படுவதால் இயல்பாக அனைத்து மனிதர்களுக்கும் தேய்வு ஏற்படுகிறது .

முதுகு தண்டின் அமைப்பு

முதுகெலும்பு முப்பத்தி மூன்று எலும்புகள் வரிசயாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க படுவதால் வரும் அமைப்பு .இந்த படத்தை பார்த்தீர்கள் ஆனால் புரியும் ,இந்த எலும்புகளுக்கு உள்,அல்லது நடுவாக போகும் ஒரு குழாய் தான் முதுகு தண்டு ,இது மண்டை ஓட்டின் அடிப்புறம் (நம் பின் மண்டையில் உள்ள ஓட்டை ) வழியாக மூளைக்கு நுழைகிறது .முதுகு தண்டிலிருந்து நம் உடல் முழுவதும் நெரம்புகள் -எலும்புகளின் ஊடாக வெளி வருகிறது .இந்த நெரம்புகள் -மூளையிலிருந்து நமது தசைகளுக்கு ,மூளையின் கட்டளையை எடுத்து செல்லும்,அதன் மூலம் நாம் கை கால்களை அசைப்பது எல்லாம் சாத்தியமாகிறது ,இதே போல் நமது உடலிலிருந்து நாம் பெரும் உணர்வுகள் இந்த நெரம்புகள் மூலம் உள்வாங்க பட்டு தண்டு வடம் மூலம் மின் அதிர்வு சமிங்கைகளாக மூளையை சென்று அடைகிறது .

ஒரு முதுகு எலும்பிற்கும் ,மற்றொன்றிற்கும் இடையில் ஒரு மெத்தை போன்ற அமைப்பு உள்ளது -இதன் பெயர் 'டிஸ்க்' ,இதில் பசை தன்மையும் ,நீர் தன்மயும் அதிகம் உண்டு ,இந்த டிஸ்க் (காண்க படம் ) இரு எலும்புகளுக்குள் உரசல் ஏற்படமால் ,அதிர்வுகளை தாங்கும் வல்லமை கொண்டது ,இதன் மூலம் நடுவில் செல்லும் தண்டுவடத்திற்கு எளிதில் பாதிப்பு வரமால் காக்கிறது .மேலும் முதுகு தண்டிலிருந்து வரும் நெரம்புகள் முதுகு எலும்புகளுக்கு நடுவில் உள்ள இந்த இடைவெளி மூலமாக வெளியில் வருகிறது .எலும்புகள் இந்த நெரம்பை அழுத்தாமல் இந்த டிஸ்க் ஒரு 'குஷன் ' போல செயல் படுகிறது .மொத்தம் முப்பத்தி ஒரு ஜோடி முதுகு தண்டு நெரம்புகள் நம் உடலில் உள்ளன .
இந்த நெரம்புகள் முப்பத்தி மூன்று எலும்புகளுக்கு மத்தியிலிருந்து வெளிவந்தும் ,உள் சென்றும் செயல் படுகின்றன .இதில் முதல் எட்டு ஜோடி நெரம்புகள் -கழுத்து மற்றும் கைகளை கவனிக்கின்றன .அடுத்த பனிரெண்டு ஜோடிகள் -நெஞ்சு,விளா,வயிறு பகுதிகளை கவனிக்கின்றன ,அடுத்து உள்ள ஐந்து ஜோடி நெரம்புகள் (லம்பார் ) கால்களின் தசைகளை கவனிக்கின்றன ,அடுத்து வரும் ஐந்து ஜோடிகள் (சாக்றல்) மற்றும் ஒரு ஜோடி வால் நெரம்பு(coccygeal ) இடுப்பு பகுதியை,மலகுடலை,பிறப்பு உறுப்புகளை கவனிக்கின்றன .

முதுகு தண்டு -முதுகெலும்பின் முழு நீளம் வரை இருப்பதில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ,பொதுவாக முதுகு தண்டு லம்பார் முதுகெலும்புகள் ( L1,L2 ) அத்தோடு முடிந்து விடும்,அதன் பின்பு எலும்புகளின் ஊடாக நெரம்புகள் மட்டும் வெளிவரும் .



இன்னொரு முக்கியமான விஷயம் -நமது முதுகெலும்பு இயல்பாக முற்றிலும் நேராக இருப்பதில்லை ,சற்று வளைந்த வடிவம் உடையது (காண்க படம் ) இந்த வளைவுகள் கழுத்து பாகத்தில் கூடும் பொழுது மேல் முதுகு கூன் ,விழுகிறது ,இது இடுப்பு பாகத்திலும் நடக்கலாம் .நமது தண்டு முன்புரமாகவோ ,பின்புறமாகவோ ,பக்கவாட்டிலோ அதிகமாக வளைய கூடாது .அப்படி வளைந்தால் அதனால் வருங்காலத்தில் நிறைய சிக்கல்கள் வரலாம் .(காண்க படம் )பிரசவ காலத்தில் பெண்களுக்கு இயற்கையாகவே இத்தகைய கூடுதல் கூன் விழும் ,பின்பு அது சரி ஆகிவிடும் .

யாருக்கு முதுகு வலி வரும் ?

  • அதிகமாக அமர்ந்து வேலை பார்போருக்கு -குறிப்பாக முதுகு பக்கம் சரியான 'சப்போர்ட் ' இல்லாமல் அமர்பவர்களுக்கு ,கணினி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ,
  • அதிக தொலைவு -நேரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு
  • பெண்களுக்கு -குறிப்பாக பிரசவித்த பெண்களுக்கு ,அதுவும் அறுவை சிகிச்சைக்கு ஆட்ப்பட்டவர்களுக்கு,மாதவிடாய் கடந்தவர்களுக்கு .
  • அதிக எடை தூக்கும் வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு
  • உடல் பருமனாக இருப்பவர்களுக்கு
இதை தவிர நாற்பது வயதிற்கு மேல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்

முதுகு வலி காரணங்கள்
  • பெரும்பான்மையான முதுகு வலி -வெறும் தசை பிடிப்பினால் ஏற்படுவது .
  • நேரடி விபத்து -முதுகெலும்பு முறிவு
  • முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு -டிஸ்க் அழுத்தம்(compression),நீர்த்து போகுதல் (dehydration), விலகுதல் (herniation),முற்றிலும் விடுபடுதல் (prolapse)
  • ஆட்டோ இம்முன் நோய்கள் ,ஆர்த்ரைடிஸ் ,முடக்கு வாதம் ,ருமடிக் ,அன்கிலோசிங் -போன்றவை முக்கிய நோய்கள் ஆகும் .இது எந்த மூட்டுகளையும் தாக்கலாம் .முதுகெலும்புகளை தாக்கினால் வலி பயங்கரமாக இருக்கும் .

  • சிறு நீரக கற்கள் -இடுப்பிலும்,கால் சந்து பகுதியிலும் வலி இருக்கும்,சிறு நீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,வலி ,ரத்தம் கலந்து வெளியேறுதல் என்பது அதன் குறிகள் .
  • மல கட்டு -பல நேரங்களில் கீழ் முதுகு வலிக்கு இதுவே காரணம் ஆகிறது .முதுகு வலியை தவிர்க்க குடலை தினமும் சுத்தமாக வைத்தல் முக்கியமானது .
  • பெண்களுக்கு -மாதவிடாய் சமயங்கள் ,கருப்பை கட்டிகள்,கரு முட்டை கட்டிகள் ,பால்லோபியன் குழாய் அடைப்பு ,வெள்ளை படுதல் ஆகியவையும் முக்கியமான காரணங்கள் .
  • வாய்வு பிடிப்பு
  • முதுகெலும்பு புற்று நோய்
  • முதுகெலும்பு -டி.பீ
  • வைரஸ் காய்ச்சல்கள் -வைரஸ் அல்லது பாக்டீரியா கிருமிகள் முதுகு தண்டின் உள்ளே இருக்கும் திரவத்தை (cerebro spinal fluid) தாக்குவது
  • வால் எலும்பு வலி -coccydyna
இதை எல்லாம் விட ஒரு முக்கிய காரணம் -மன அழுத்தம் .ஆம் ! மன அழுத்தத்தின் பொழுது மூளை நம்மை திசை திருப்ப செய்யும் ஒரு லீலை தான் பல நேரங்களில் முதுகு வலியாக வெளிவருகிறது .எலும்பை ஒட்டி உள்ள தசைகளுக்கு செல்லும் பிராணவாயுவை மூளை தன் சமிங்கை மூலம் குறைக்கிறது அதனால் இது ஒரு எலும்பு வலியை போலோ ,இல்லை நெரம்பு வலியை போலோ நமக்கு தெரிகிறது .இவ்வகை வலிகளுக்கு சிறந்த தீர்வு -இது நம் மன அழுத்தத்தால் வருகிறது என்பதை நாம் உணர்வது தான் ,இந்த அறிவே நம் மூளையின் சித்து வேலையே பலிக்காமல் செய்து விடும் .

இதை தவிர சில காரணங்களும் உண்டு .ஆகினும் பொதுவாக இவைகளே பிரதான காரணங்கள் .
நோய் அறிதல்
  • எக்ஸ் ரே
  • எம் ஆர் ஐ ஸ்கேன்
  • சீ டி ஸ்கேன்
போன்றவை உதவும் .
சிலநேரங்களில் சில ரத்த பரிசோதனைகள் உதவலாம் .
பொதுவாக இவ்வகை ஸ்கேன் -எல்லாம் உடனடி தேவை என்று எல்லாம் இல்லை ,நோயாளிகளின் நோய் குறிக்கு ஏற்ப நாம் நோய்களை புரிந்து கொள்ளலாம் .ஆயுர்வேத சிகிச்சை பொறுத்த வரை -ஸ்கேன் அவளவு அவசியம் இல்லை .நவீன மருத்துவம்- முதுகெலும்பு அறுவை சிகிச்சை போன்றவை என்றால் இது நிச்சயம் தேவை படும் .
முதுகு வலி -ஆயுர்வேத பார்வை
பொதுவாகவே வலி என்பது வாத தோஷத்தின் வெளிப்பாடு என்று ஆயுர்வேதம் நம்புகிறது .முதுகு வலியை தனி நோயாக ஆயுர்வேதம் அணுகவில்லை ,ஆயினும் கூட பல நோய்களின் குறிகளில் முதுகு வலி உண்டு .
நாபிக்கு கீழ் பகுதி வாதத்தின் இடம் என்று வரையறுக்கிறது .மூட்டுகள் கபத்தின் இடம் என்றும் விவரிக்கிறது மேலும் அசைவு ,செயல் என்பதும் வாதத்தின் குணங்கள் .மேலும் ஜவ்வு நீர்த்து போகுதல் என்பது -சவ்வின் நீர் தன்மை வற்றி போகுதல், அதாவது அங்கு ஒரு வித வறட்சி ஏற்படுகிறது -வறட்டு தன்மை வாதத்தின் குணமாகும் .வாத தோஷத்தின் நேர் எதிர் துருவமாக கப தோஷம் இருக்கிறது.கபம் ஸ்திரத்தன்மை கொடுப்பது .பொதுவாக எந்த ஒரு நோயும் வாத பித்த கப தோஷங்களின் பங்கு இல்லாமல் உருவாகாது .ஏதோ ஒரு மட்டத்தில்,ஒரு விகிதத்தில் இந்த தோஷங்கள் நோய்களுக்கு காரணமாகும் .அதிக பிடிப்பு உள்ள நோய்கள் வாத -கப தோஷ கூட்டினால் வரும் .மேலும் உடலில் உள்ள அக்னி மந்தமாகும் .வாதம் செல்லும் இயல்பான பாதை அடைப்பட்டு அது வேறு திசையில் பயணிப்பது என்றும் எடுத்து கொள்ளலாம் ..
சிகிச்சை
  • முதுகு வலியின் காரணத்தை பொறுத்தே சிகிச்சை அமையும் .வெறும் தசை வலிகள்,பிடிப்புகள் இளம் சூடாக தான்வன்தரம் தைலம்,நாராயண தைலம் ,பிண்ட தைலம் போன்றவை நன்றாக தேய்த்து சுடு நீர் அல்லது இலை ஒத்தடம் கொடுத்தால் போதும் .
  • டி பீ ,புற்று நோய் ,வைரஸ் பாதிப்பு ,விபத்து -போன்றவைகளுக்கு உடனடி கவனமும் சிகிச்சையும் தேவை .இங்கு ஆங்கில நவீன மருத்துவ சிகிச்சை பிரதானமாகும் ,ஆயுர்வேதம் உப மருந்தாக பயன்படுத்தலாம் .

  • சிறு நீரக கற்கள் ,பெண்களின் பிரச்சனைகளுக்கு -ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் நல்ல தீர்வுகள் உண்டு ,அக்காரணத்தை சரி செய்வதன் மூலம் முதுகு வலியிலிருந்து அடியோடு விடுபடலாம் .பெண்களின் நோய்களுக்கு உண்டான தீர்வை பற்றி மற்றொரு சமயத்தில் விரிவாக விவாதிக்கலாம் .

  • மலக்கட்டு வராமல் பார்த்து கொள்ள வேண்டும் .தினம் சரியான அளவில் நீர் குடித்து ,காலை சிறிய உடல் பயிற்ச்சிகளை செய்தல் முக்கியமாகும் .இரவு உணவு எளிதாக செரிக்கும் வண்ணம் உட்கொள்ளுவது மலசிக்கலை தவிர்க்க உதவும் .

  • வாய்வு தொல்லையை பொறுத்தவரையில் ஜீரண உறுப்புகள் சரிவர இயங்காததும் ,நாம் உட்க்கொள்ளும் உணவும் முக்கிய காரணம் .அதை தவிர-உறங்கும் பொழுது வாயை திறந்து கொண்டு உறங்குகிரோமா என்று கவனிக்க வேண்டும் ,மூச்சு குழாய்க்கு பதிலாக காற்று உணவு குழாயில் புகுவதால் வயிறு முழுவது காற்று நிறைந்து இருக்கும் .(aerophagia).இதை தவிர்த்தல் நலம்.வயிற்று பொருமல் ,வாய்வு தொல்லைகளுக்கு -சிறிது பெருங்காயத்தை நெய்யில் வதக்கி சுடு நீரில் சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும் .அஷ்ட சூரணம்-இதற்க்கு ஏற்ற மருந்தாகும் .வாயு குளிக,அபாயரிஷ்டம் போன்றவயும் உதவும் .
  • டிஸ்க் சார்ந்த நோய்களுக்கு -ஆயுர்வேதத்தில் நல்ல சிகிச்சை முறைகளும் ,மருந்துகளும் உண்டு .கடி வஸ்தி(காண்க படம்),சிநேக வஸ்தி,கஷாய வஸ்தி ,அப்யங்கம் ,இல கிழி ,மணல் கிழி ,பேதி போன்றவையும் ,வர்மம் சிகிச்சையும் நல்ல பலன் தரும் .
  • முதுகு பிடிப்பு மற்றும் வலி ஆகியவயிலிருந்து விடுபட -இரவு எண்ணெய் தேய்த்து பின்பு காலை ,ஆத்து மணலை ஒரு இரும்பு சட்டியில் வறுத்து ,துணியில் பொட்டலம் கட்டி ,அடுப்பில் உள்ள தோசை கல்லில் வைத்து எடுத்து ஒத்தடம் கொடுக்கலாம் .நல்ல பலன் தரும் .

  • யோகா ஆசனங்கள் -தினமும் செய்து வந்தால் வலி நன்றாக குறையும் ,ஆகினும் டிஸ்க் விலகி இருந்தாலோ ,விடுபட்டு இருந்தாலோ முதுகை அதிகமாக வளைக்கும் ஆசனங்கள் செய்வது விபரீதமாக முடியலாம் ,கவனம் தேவை .பொதுவாக -அனைவரும் பவன முக்த ஆசனம்,புஜங்க ஆசனம் ,சலாப ஆசனம் ,ஷஷாங்க ஆசனம் ,வஜ்ரா ஆசனம் போன்றவையை தினமும் செய்யலாம் .சாமானியர்கள் இதை செய்தால் முதுகு வலி வராது .


  • கணினி முன் அமர்ந்து அதிக நேரம் செலவிடுபவர்கள் சரியான முறையை பின்பற்ற வேண்டும் .(காண்க படம்)

இன்னும் இதை பற்றி எழுதி கொண்டே போகலாம் ,ஆயினும் நண்பர்களுக்கு ஏதேனும் கேள்வி இருப்பினும் அதற்க்கு ஏற்றவாறு ,அதை மட்டும் விவாதிக்கலாம் என்று எண்ணி உள்ளேன் .
பிசியோ தெரபி ,உடல் பயிர்ச்சி ,வாழ்க்கை முறை மாற்றம் மூலமாக முதுகு வலியை எளிதில் நாம் குணபடுத்தலாம் .நோயின் காரணத்தை அறிவதே முக்கியம் ,பின்பு அதற்க்கு ஏற்ற தீர்வை நோக்கி பயணிக்கலாம் .
ஆயுர்வேதத்தில் நல்ல தீர்வுகள் உண்டு .எனக்கு தெரிந்த ,உங்களுக்கு பயனளிக்க கூடிய பொது தகவல்களை இங்கு தொகுத்து தந்துள்ளேன் .மேலதிக விவரங்கள் ஏதும் வேண்டுமென்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் .

எங்க ஊரு டாக்டர் தேவ குமார் -அவரோட தமிழ் துளி தளத்துல ,இதை பற்றி விரிவாக அணுகி உள்ளார் .அதையும் பார்க்கலாம் .அவர் ஒரு எலும்பு மற்றும் மூட்டு மருத்துவ நிபுணர் என்பதால் அவரது கருத்துக்கள் முக்கியமானவை .


Tuesday, February 1, 2011

காண்டேசா கனவுகள்-சிறுகதை

"கிருஷ்ணா ..".."அப்பா சிங்கப்பூருலேந்து வந்துருக்காக ,எனக்கு இம்புட்டு ஜாமாங்க வாங்கியாந்துருக்காறு " ,தனது பையை மெதுவாக திறந்து காட்டினான் மணி .ஒரு பெரிய ரிமோட் கண்ட்ரோல் போலீஸ் கார்,இரண்டு குட்டி ஜீப்புகள் ,சிவப்பு அட்டையும் தங்க பேப்பர் சுற்றிய சாக்கலேட்டுகள் ,அப்புறம் -அந்த சிறிய நீல நிற ஹாட் வீல்ஸ் காரை பார்த்த உடன் கிருஷ்ணாவின் முகம் பிரகாசித்தது ."மணி ,அது கான்டசா கார் தானே ?".கிருஷ்ணாவிற்கு காண்டேசாவின் மீது ஒரு வித பாசம்,அவனுக்கு அந்த வண்டி மிகவும் பிடிக்கும் ,பேப்பரில் வந்த காண்டேசா படங்களை கத்தரித்து புத்தகத்தின் நடுவே பதுக்கி வைத்துருப்பான் .அப்பா செட்டியார் அய்யாவோட அம்பாசடர் கார் ஓட்டுவார் ,ஆனாலும் அந்த காண்டேசா காதல் அவனுக்கு ஓயாது ."அப்பா ,இந்த தகர டப்பாவை குடுத்துட்டு கான்டசா ஓட்டுப்பா " என்று அப்பாவை நச்சரித்த காலம் உண்டு .தெரு கோடியில் இருக்கும் மாடி வீட்டு முத்து அங்கிளின் மெரூன் காண்டேசா கார் கிருஷ்ணாவிற்கு மிகவும் பிடித்தது .மண்டை வீங்கிய அந்த கருப்பு அம்பாசடர் -பார்க்கும் பொழுது அவனை திட்டி தீர்க்கும் ,அவனது பள்ளி கணக்கு டீச்சர் அவனுக்கு நினைவுக்கு வரும் .முத்து அங்கிளின் காரை அவரில்லாத பொழுது, யாருக்கும் தெரியாமல் காரை தொட்டு தொட்டு பார்ப்பான் .ஒருமுறையாவது அவன் அந்த வண்டியில் ஏறிவிட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தான் .
மாமாவும் ராமு தாத்தாவும் அன்று பனிரெண்டு மணி அளவிற்கு பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் ஏதோ பேசி கொண்டிருந்தனர் .கிருஷ்ணாவை அவனது மூன்றாம் வகுப்பு எ பிரிவிலிருந்து அழைத்து வந்தனர் .ஏதோ கையெழுத்து போட்டு "மனச தேத்திக்கிங்க " என்று சொல்லி ஆசிரியர் மாமாவிடம் கிருஷ்ணாவை அனுப்பி வைத்தார் .கிருஷ்ணாவிற்கு -பரிச்சையில் பெயில் ஆகி அழுது அடி வாங்கியது போல் இருந்தது ராமு தாத்தாவின் முகமும் ,மாமாவின் முகமும் .இன்று என்ன சீக்கிரமாக அழைத்து கொண்டு போகிறார்கள் என்று புரியவில்லை ,பொதுவாக அப்படி அழைத்து போக அம்மாவோ ,அப்பாவோ தான் வருவார்கள் ."மாமா ,எப்ப வந்தீக ? அத்த வரலியா ,எங்க போறோம் ? அப்பா ,அம்மா வரலையா ?" முகத்தை தொங்கவிட்டு கொண்டு அமைதியாக நடந்து வந்தார் மாமா.ராமு தாத்தா" எல்லாம் வந்த்ருகாக ,அப்பாரு வெளிநாடு போறாரு ,அதான் டாட்டா சொல்லனும்ல உன்னையும் கூட்டியாறோம் " என்று தழுதழுத்தார் ."சிங்கப்பூரா?" "ஆமா " கிருஷ்ணாவிற்கு மனதில் சந்தோஷம் -அப்பாவிடம் சொல்லி மணி அப்பா போல் வரும் போது தனக்கும் காண்டேசா கார் வாங்கி வர சொல்ல வேண்டும் .

வீடே வீங்கி வெடித்து விடும் போல இருந்தது .அந்த சின்ன ஓட்டு வீட்டிற்குள் பெரும் கூட்டம் நெருக்கி அடித்து கொண்டு நுழைந்து கொண்டே இருந்தது .சுவற்றில் சாய்ந்து வெறித்து பார்த்து கொண்டிருந்தார் அந்த பெரியவர் ,கண்களில் நீர் இல்லை .யார் யாரோ வருவதும் ,கையை பிடிப்பதும் ,அழுவதும் ,ஆறுதல் கூறுவதும் சம்பிரதாயமாக நடந்து கொண்டிருந்தன .அவர் காதுகளுக்கு எந்த அழுகுரலும் கேட்கவில்லை ,அங்கு வரும் யாரையும் அவருக்கு தெரியவில்லை .எண்ணங்களும் ,நினைவுகளும் சுற்றி சுற்றி வருகின்றன ,முடிவற்ற எண்ண சுழற்ச்சியின் மத்தியில் தன்னை மறந்து நின்று இருந்தார் .மனமுருக தனக்கு மறதியை வழங்க கூடாதா என்று அவரது ஆழ் மனம் வேண்டியது .நினைவுகள் எத்தனை கொடிய வியாதி.தன் மகனின் இழப்பின் நிதரிசனம் அவருக்கு பிடிபடவில்லை ,வெறுமையும் விரக்க்தியும் மனதை கவ்வி நிறைந்துள்ளது .அழு அழு என ஆழ் மனம் அழுத்துகிறது ஆனால் அவர் அழவே இல்லை .

ரோஜாவும் ,சம்பங்கியும் ,சாமந்தியும் வீடெங்கும் ஓடும் கண்ணீர் நதியில் சிறு சிறு தோணிகளாக மிதந்தன .மனித வியர்வையின் உப்பும்,மலர்களின் சுகந்தமும் ,ஊதுபத்தியின் தீக்குளிப்பால் வரும் வாசம் எல்லாம் கலவையாக காற்றில் கலந்து நாசிக்குள் நிறைந்தது .இந்திய கிரிக்கட் அணி வீரர்களின் 'ஹடுள்' போல வீட்டின் மையத்தில் ,அம்மாவை சுற்றி தலை விரி கோலத்துடன் அமர்ந்து எழுப்பும் அழுகுரல்கள் ,புதிதாக ஒரு அத்தையோ ,ஆயாவோ உள்ளே வந்தால், விஸ்வரூபம் எடுக்கும் ஆள் கண்ட சமுத்திரம் போல் ,கண்ணீரும் அழுகுரலும் புதிய உச்சத்தை தொட்டு கீழ் இறங்கும் .
சாயங்காலம் மணியின் அம்மாவும் அப்பாவும் மணியோடு வீட்டுக்கு வந்தார்கள் ."கிருஷ்ணா ,உங்க அப்பா செத்துட்டாரா டா ?" மௌனமாக மணியிடம் வந்த கிருஷ்ணா "அவரு சிங்கப்பூரு போறாரு ""வாடா ஆடலாம்" என்று சொல்லி வீட்டு வாசலில் உள்ள கொட்டகையை தாண்டி ரோட்டிற்கு வந்து ஒரு அரச மரத்து குச்சியை உடைத்து ,வட்டம் போட்டு "அண்டர் ,ஓவர் ,பிடிக்க முடிஞ்சா பிடிச்சுக்கோ " என்று தூக்கி போட்டு விளையாட்டை துவங்கினார்கள் .

எல்லாம் முடிந்துவிட்டது ,இப்பொழுதும் அவர் அழவில்லை ,கிருஷ்ணாவிற்கு அம்மாவை பார்க்க பிடிக்கவில்லை ,அவள் அழுத வண்ணம் இருந்தாள் ,அவள் அழுவதை பார்த்தால் இவனுக்கும் அழுகை வரும் ,எல்லாரும் அழுதால் அப்பா தனது சிங்கப்பூரு பயணத்தை ரத்து செய்து விடலாம் ,தனக்கு காண்டேசா கார் கிடைக்காது .அதனால் அவளை பார்க்காமல் தவிர்த்தான் .ராமு தாத்தா பெரியவரிடம் ஏதோ சொன்னார் "போயிட்டு வந்துரட்டும் ,சடங்கு முக்கியமாச்சே ,தம்பி இங்கனயே இருக்கட்டும் -இங்க தம்பிக்கு சடங்கு இருக்கு " என்றார் ,பெரியவர் ஒன்றும் சொல்லாமல் நின்றார் .அம்மா காரைக்காலில் உள்ள ஆயா வீட்டிற்கு சென்று ஒரே நாளில் திரும்ப வேண்டும் ,அவரோடு மாமாவும் செல்வதாக முடிவானது .வாசலில் நின்ற முத்து அங்கிள் பெரியவரிடம் " பாருங்க ,சந்துரு எனக்கு எவளவோ செஞ்சுருக்கான் ,தம்பி மாறி,தப்பா எடுத்துக்கலனா ,என் வண்டியையும் டிரைவரையும் அனுப்புறேன் ,தங்கச்சியும் ,அவரும் சட்டுன்னு போயிட்டு திரும்பிடலாம் ,பஸ் எல்லாம் ஏறி இறங்கி நேரத்தோட வர்றது சிரமம் ,இப்ப இருக்குற நெலமைக்கு நல்லதில்ல " பெரியவர் ஏதும் பேசவில்லை ,ராமு தாத்தா "உங்களுக்கு சங்கடம் இல்லையே ?" என்று மெதுவாக கேட்டார் "அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க " என்று சொல்லி வண்டியை கொண்டு வந்து நிறுத்த சொன்னார் .

அந்த மெரூன் கலர் கான்டசா வந்து நின்றது ,கிருஷ்ணாவின் அம்மாவும் மாமாவும் வண்டியில் ஏறினார்கள் ,அதுவரை அழாதிருந்த கிருஷ்ணா குபிரென்று அழுதான் ,பெரும் கூச்சலோடு வெளியே ஓடி வந்தான் ,"அம்மா !! போகாத !!" அழுது வற்றிய அவளின் கண்கள் மீண்டும் குளமாகின ,"வந்துருவேண்டா கிருஷ்ணா " என்று வாஞ்சையும் ,வருத்தமும் கலந்த குரலில் உச்சி முகர்ந்து ,வண்டியில் ஏறினாள் .அவள் மாமாவுடன் காண்டேசாவில் தெருவை கடந்து செல்வதை வாசலிலே நின்று அழுதபடி பார்த்து கொண்டிருந்தான் ."பாவம் அப்பா போனதுக்காக குழந்த அழறது " என்று பச்சாதாப பேச்சுகளும் ,"அழாதே அம்மா வந்துடுவா " என்று தேற்றல்களும் அவன் காதில் விழுந்த வண்ணம் இருந்தன .அழுகை நின்றபாடில்லை .அழுது கொண்டே உள்ளே ஓடி வந்து ,ஓரமாய் ஒடுங்கி வார்த்தை இழந்த அந்த பெரியவரின் வேட்டியை உலுக்கி "தா ..த்..தா ....கா ...கான் ...டேசா..கான்டசா ..அ..ம்மா ..போறா ..என்ன...ய..வி..ட்டு..ட்டு..." என்று தேம்பி தேம்பி அழுதான் .உயிரற்ற ஜடமாக அத்தனை நாட்களும் உறைந்து நின்றிருந்த பெரியவர் ,பெரும் தூக்கத்திலிருந்து விடுபட்டது போல் "சந்திரா ..." என்று அடக்க முடியாமல் கண்களில் வழிந்து ஓடும் நீரை துடைத்து கொண்டு ,தேக்கி வைத்த பெரும் துக்கம் அவரது குரலிலிருந்து பெரும் ஓலமாக புறப்பட்டது .கிருஷ்ணாவை வாரி அனைத்து ,அவனை தூக்கி கொண்டு கண்களில் நீர் பெருக வீட்டுக்குள் இருக்கும் சந்துருவின் படத்தை நோக்கி ஓடினார் .

Friday, January 21, 2011

ஒற்றை வைக்கோல் தீச்சுடர்

இம்முறை சென்னை புத்தக கண்காட்ச்சிக்கு நானும் வந்தேன் ,ஒரு நாள் அவசர விஜயம் .சமீப காலமாக மூலிகை வளர்ப்பின் மேல் உள்ள ஆர்வம் காரணமாக அதற்க்கு சம்பந்தமாக ஏதேனும் புத்தகம் தமிழில் உண்டா என்று துழாவி கொண்டிருந்தேன் ,அப்பொழுது என் கண்களில் சிக்கியது தான் மசானபு புகொகா எழுதிய ஒற்றை வைக்கோல் புரட்சி ,(தமிழில்- மொழிபெயர்ப்பு -பூவுலகின் காதலர்கள் ,எதிர் வெளியீடு ,விலை-rs.80).
சரிதான் இயற்க்கை வேளாண்மை பற்றி ஏதேனும் சொல்லி இருப்பார் என்று வாங்கினேன் .புத்தகத்தை படித்த பொழுது எனக்கு கிட்டியது பெரும் ஏமாற்றம்.இது வெறும் வேளாண்மை புத்தகம் அல்ல ,ஒரு பெரும் அக-வாழ்க்கை தரிசனம் .புத்தகத்தை படித்து முடித்த பின்பு பெரும் எண்ண சுழல்கள் என்னை சுழற்றி அடிக்கின்றன .கோபம்,இனி என்ன எனும் தவிப்பு ,பச்சாதாபம் ,நிறைவு,அமைதி என்று கலவையான உணர்வுகள் காட்டு நதி போல் நொடிக்கொரு முறை திசைகள் மாறி பயணித்து கொண்டுள்ளேன் .

ஜப்பானின் ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு இந்த கிழவர் உலகெங்கிலும் செய்யும் மாயாஜாலம் பிரமிப்பானது .நம்மையும்,நம் வாழ்க்கை முறையும் பரிகசித்து ஏளனம் செய்கிறார் .நாம் இயற்கையை நமக்காக வளைக்கிறோம், அதன் ஒழுங்கை சீர்குலைத்து சிதைக்கிறோம் எனும் உண்மையை நம் கண்களை நோக்கி உரக்க கூறுகிறார் .அந்த நேர்மையை கண்டு நம் மனசாட்சி வெட்கி தலை குனிகிறது .விடை தேட முயல்கிறது .நம் அறிவியலின் எல்லை ,இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு ,உணவுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு ,இயற்கையின் சுழற்ச்சி ,தத்துவம் என்று பல அதி முக்கியமான புரிதல்களை நமக்கு அளிக்கிறார் .
சில வருடங்களுக்கு முன் வெளி வந்த ஒரு திரைப்படம் என் நினைவுக்கு வருகிறது , 'god must be crazy ' -ஆப்ரிக்காவில் உள்ள ஒரு பழங்குடி இன மக்கள் பற்றிய ஒரு பதிவு ,ஒரு கள்ளம் கபடமற்ற ,பகிர்ந்து வாழும் ,இயற்கையுடன் இயந்து வாழும் ,நாடோடி பொது உடமை பழங்குடி சமூகம் ஒரு பக்கம் .மறுபுறம் -மகிழ்ச்சியாக வாழ வழி செய்வதாக எண்ணிக்கொண்டு ,வாழ்க்கையை வசதியாக மாற்றிக்கொள்ள அவனே உருவாக்கும் புதிய விதிகள் ,அதை கடைபிடிக்க அவனே உருவாக்கும் வழிமுறைகள் ,தன்னை தானே நாகரீகத்தின் பெயரால் வருத்தி கொள்ளும் மகிழ்ச்சியற்ற நகர மனிதன் .

இன்றைய மனித சிக்கல்களுக்கு யார் பொறுப்பு ? நிச்சயம் மனிதன் தான் ,இயற்கையின் பிடியிலிருந்து அவனது திட்டமிட்ட பேராசை அவனை இழுத்து செல்கிறது ,அதிலிருந்து தொடங்கும் சிக்கல்களுக்கு அவன் இயற்கையை நோக்கி அடி எடுத்து வைப்பது தான் தீர்வு ,ஆனால் பின் நகரமால் அவன் மென்மேலும் சிக்கலை தீர்க்கிறேன் என்று பெரும் சிக்கல்களையும் அதற்க்கான பெரும் உழைப்பையும் கொடுக்கும் ஒரு சுழலில் சிக்குகிறான் .இயற்கையை யாரும் பயன் படுத்தவும் வேண்டாம் ,அதை ஒழுங்கு படுத்தவும் வேண்டாம் என்று வாதிடுகிறார் .இயற்கையை நாம் முழுவதுமாக புரிந்துக்கொள்ள முடியாது ,அதன் சில அம்சங்களை நாம் அறிந்ததால் நாம் அதை புரிந்துகொண்டதாக ஆகாது .'ஒன்றுமே செய்யாதிரு ' இது புகொகாவின் மந்திர சொல் .

இனி புகொகாவின் வார்த்தைகளில் என்னை கவர்ந்த கருத்துக்கள் ..

1.மனிதன் ஒரு ,மகிழ்ச்சியான விலங்கு தான் ,ஆனால் அவன் ஒரு கடினமான உலகை படைத்து இன்று அதை உடைத்து மீண்டு வர துடிக்கிறான்

2.ஒரு பனித்துளியை ஆராய தொடங்கியதும் அவர்கள் முடிவற்ற அறிவாற்றல் எனும் ஒரு நரகத்தில் சிக்கி விட்டனர் .

3.இயற்க்கை என்றால் 'எது' என்ற கேள்வியை அவன் கேட்க துவங்கியதும் 'எது ' என்றால் எது என்று அவன் கேட்க வேண்டும் .இப்படியே போனால் முடிவற்ற கேள்விகனைகள் தான் மிஞ்சும் .

4.மனித இனத்தின் முதல் மோசமான எதிரி அவன் அகம் தான் ,ஆனால் மக்கள் அதை தான் கொண்டாடுகின்றனர்

5.இவ்வுலகிலுள்ள வேறுபாடுகளாலும் முரண்பாடுகளாலும் பாதிக்கப்படாமல் அமைதியாக வாழ்பவர்கள் குழந்தைகள் மட்டுமே .வெளிச்சம்,இருட்டு,வலிமை,நலமின்மை ஆகியவற்றை அவர்கள் உள்வாங்கி கொண்டாலும் ,அதை மதிப்பீடு செய்வதில்லை .வாழ்வின் ஆதார மகிழ்ச்சி அவர்களிடம் தான் இருக்கிறது .

6.இயற்க்கை ஒரு போதும் மாறுவதில்லை அதே சமயம் நொடிக்கு பல முறை நம் கண்களின் முன் மாறும் .இதற்க்கு காரணம் இயற்கையை பற்றிய நமது பார்வை காலம்காலமாக மாறுவது தான் .

7.ஏன் இயற்கையை புரிந்துக்கொள்ள முடியாமல் போகிறது ? ஏனெனில் இயற்க்கை என்று நாம் வரிப்பது ஒவ்வொருவரின் மனத்திலும் இயற்கையை பற்றி தோன்றுகிற கருத்தே ஆகும் .

8.மனித அறிவாற்றல் என்பது எவளவு சிறியது என்பதை காட்டும் பணியை தான் அறிவியல் செய்துள்ளது என்பது ஒரு முரணான நகைச்சுவை ஆகும் .

9.நமக்கு ஒரு உணவு நெருக்கடி ஏற்ப்பட்டால் அது இயற்கையின் உற்பத்தி சக்தியின் பற்றாகுறையால் விளைந்ததாக இருக்காது ,மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்படும் .

10.'வேகம்','அதிகம்' போன்ற "வளர்ச்சியின் "தாரக மந்திரங்களே இன்று சமுதாயம் இப்படி உடைந்து நொறுங்கி போனதற்கு காரணம் .

11.ஆராய்ச்சிகள் மூலம் ,கண்டுபிடிப்புகள் மூலம் ,மனித இனம் இயற்கையை விட சிறந்த ஒன்றை கண்டுபிடிக்கும் என்று நம்புவது ஒரு மாயை .

12.அறிவியல் உண்மைகள் ஒருபொழுதும் முழுமையான உண்மையை எட்ட முடியாது .தத்துவங்களும் உலகை குறித்து கணிக்கும் பல்வேறு கருத்தாக்கங்களே தவிர வேறு எதுவும் இல்லை
எளிமையான ,இனிமையான மனித வாழ்வை நாம் ஏதேதோ மெனக்கெடல்கள் மூலம் சிக்கலாக ஆக்கி தவிக்கிறோம் .இயற்கையிடம் எடுத்ததை இயற்க்கையிடமே திருப்பி அளித்தல் மூலம் இயற்கையின் இயக்கம் சீராக செயல் படுகிறது அறிவியலின் போதாமை ,சிறப்பு துறையியல்கள் -இயற்கையை சிறு கூறுகளாக்கி ஆராய்வதன் மூலம் முழுமையான சித்திரம் கிடைப்பதில்லை ,உண்மைகள் துண்டுகளாக கிடைக்கிறது .ஆன்ம விழிப்பின் மூலம் நாம் இயற்கையின் பேரியக்கத்தில் ஒரு சிறு துளி என்பதை உணர வேண்டும் .புகோக இப்படி அடுக்கி கொண்டே போகிறார் .சிந்தனைகள் நிறைந்த இந்த படைப்பின் புகோக அவர்களின் ஆன்ம பலம் புலப்படுகிறது ,ஒரு நல்ல படைப்பானது படைப்பாளியின் ஆன்ம பலத்தை பறை சாற்றி நம்முள் புதிய சிந்தனை விதைகளை விதைக்கும் ,காலம் கனிந்தால் அத்தகு சிந்தனை விதைகள் பெரும் ஆலமரமாக மாறும் அளவிற்கு உயிர்ப்பானவை .புகோக அப்படி வட்ட ஒருவர் .புகோக காந்தியை போல் ஒரு நடைமுறைவாதி ,தத்துவங்களும் சித்தாந்த்தங்களும் மனிதனின் துயரத்திற்கு சாக்குபோக்கு சொல்ல அல்ல , நடைமுறையில் அது பயன்பட வேண்டும் இல்லையேல் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை .இவரது வழிமுறைகள் மூலம் நிச்சயம் இன்றைய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் .இந்த ஒற்றை வைக்கோல் பற்ற வைக்கும் தீ சுடர் ,உள்ளுக்குள் பெரும் கனலாக எரிந்து ,உலகெங்கும் உள்ளொளியை பரப்பும் .ஆனால் இன்றைய சூழலில் அது பெரும் கனவோ என்று ஐயம் எழுகிறது .
புகொகாவிர்க்கு பிடித்த புத்தனின் வரிகள் "வடிவம் வெறுமையானது ,வெறுமையானது தான் வடிவம் "

Monday, January 3, 2011

உலகளந்தான்

புதிய ஊர்கள் ,புதிய மனிதர்கள் ,அந்த மண் அதன் மனம் ,அந்த ஊரின் ஆன்மா ஆகியவை அற்புதமானவை .பயணிக்கும் பொழுது வழியில் என் விழிகளில் பிம்பமாக படியும் ஒவ்வொரு பனை மரமும், தென்னை மரமும் ,உடன் வரும் சூரியனும் சந்திரனும், நான் எங்கு சென்றாலும் ,ஒளிந்து கொண்டாலும் முகத்தை பொத்தி விளையாடும் தாய் தன் குழந்தையை கண்டு கொள்வது போல் நான் பயணங்களில் எங்கு ஒளிந்து கொண்டாலும் என்னை கண்டு பிடிக்கும் ,எனக்கும் சூரிய சந்திரனுக்கும் இடையே நடந்தேறும் தொன்மையான விளையாட்டு, எப்பொழுதும் தொடரும் ஒரு விந்தை .எங்காவது செல்ல வேண்டும் ,அது தாஜ் மஹால் ,தஞ்சாவூர் பெரிய கோவில் என்று இல்லை ,ஒத்தை அடி பாதையில் ஊரில் நூறு வீடுகள் கொண்ட குட்டைகள் சூழ்ந்த சிறு கிரமாமாக இருக்கலாம் ,பொட்டல் காட்டில் , வழுக்கை தலையில் ஆங்காங்கு வளைந்து சுருண்டு இருக்கும் தலை மயிர்களை போல் ஆங்காங்கு தென்படும் கருவேலங்களுக்கு ஊடே செம்மண் தரையில் பாதை இல்லாத வழியில் பயணிக்கலாம் .பயணங்கள் மனிதனை அவனுக்கு நெருக்கமாக ஆக்குகின்றன ,அவன அறியாத சூழலில் அவனது எண்ணங்களின் நேர்மையை சோதிக்கின்றன .


உயர்ந்த சிகரங்களும் ,தேங்கிய குட்டைகள்,பாசி படர்ந்த குளங்களும்,தாமரை தடாகங்களும் ,சம தரையாய் விரியும் கடலும் ,பெரும் வெறுமையால் நிரப்ப பட்ட புழுதி பொட்டல்களும் ,பேரிரைச்சலோடு பாரத வெள்ளை நிற நீர் விழிச்சிகள்,அதோடு இனைந்து வரும் ஒரு வித மூலிகை வாசனை.
குருவிகளும் காக்கைகளும்,கூடுகளும் நிரம்பிய உயிர்ப்புடன் கூடிய பிரம்மாண்ட விருட்சங்களும் ,வறண்டு போன கிழவியின் தோலை போல் முதிர்ந்து நிமிர்ந்து உயர்ந்தும் படர்ந்தும் நிற்கும் மகா விருட்சங்கள்.உலகின் கால மாற்றங்களுக்கு வெறும் மௌனியாக ,சாட்சியாக நிற்கும் மரங்கள்
வசந்தங்களில் தனது ஆடைகளை உரித்து நிர்வனாமாக நிற்கும் மொட்டை மரங்களும் ,பாசி பூசிய சுவர்களும் ,வானம் தான் எத்தனை வகை ?சூரியன் உதிக்கும் செவ்வானம், விண்ணில் ஏதும் ரத்த களரி
நடக்கிரதோ என்று நாம் ஐய படும் ரத்த சிவப்பு உடலெங்கும் பூசிய ருத்ர வானம் ,களங்கம் இல்ல குழந்தை போல் மேகம் இல்லா தூய வானம் ,இரவின் நட்ச்சத்திர வானம்,நிலவில்லாத இருண்ட வானம் ,ஹர்ரி பாட்டர் படத்தில் வரும் டம்பல்டோர் தாத்தாவின் தாடி போல் வெண்மை நிற மேகங்கள் நிறைந்த வானம் ,தேர்களாக,முதலைகளாக ,வாய் பிளந்த சிங்கமாக என்று ஒவ்வொரு மேகமும் ஒரு ரகசிய குறியீட்டுடன் வானில் அலைந்து திரிகின்றன .


நான் யார் என்று அவர்களுக்கு தெரியவில்லை ,அவமானம் ,ஆக பெரிய அவமானம் ,எனது வெற்றிகள் ,சாதனைகள் ,தோல்விகள் .ரணம் ,எதுவும் தெரியவில்லை .நான் இருப்பதை கூட பொருள் படுத்தவில்லை ,ஏளன சிரிப்பு ,மனிதனின் அகந்தையை எட்டி உதைக்கும் எக்காளம். ஒரு பிரமாண்டம் ,மிகை ஒழுங்கு ,மிகை அறிவு ,மகோன்னதம் ,பூரிப்பு ,பெருமை ,பேரமைதி என்று உணர்வு கலவைகளில் நான் சிக்கி கொள்வேன் .உலகை அளக்க வேண்டும் ,என் வெறும் கால்களால் உலகம் முழுவதையும் அளக்க வேண்டும் ,நான் வாமணன் அல்ல ,என் காலடி படாத இடமே இல்லாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு ஊரின் ஒவ்வொரு மலையின் ,ஒவ்வொரு மலரின் வாசத்தை நுகர வேண்டும் ,ஒவ்வொரு மரத்தையும் ஆற தழுவி உச்சி முகர வேண்டும் இதெல்லாம் சாத்தியமா என்று தெரியாது ,கனவுகள் காண்கிறேன் .


எங்கெங்கோ பயணிக்கிறேன் ,என் பயணங்களில் நான் கண்டதை கேட்டதை பகிர விரும்புகிறேன் ,நான் உலகை அளக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நான் முயல்கிறேன் ,என்னை நான் வாரம் ஒரு முறை தொலைக்க விரும்புகிறேன் , எனது மொட்டை மாடியில் தெரியும் வானம் எவரெஸ்ட் உச்சியிலிருந்து பார்த்தால் எப்படி தெரியும் என்று உணர விரும்புகிறேன் .

சமீபத்தில் நண்பர்களுடன் சதுரகிரி மலைக்கு பிரயானப்பட்டேன் .மதுரை வந்து அங்கிருந்து கிருஷ்ணன் கோவில் சென்று (ஸ்ரீ வில்லி புத்தூர் செல்லும் வழி ) அங்கிருந்து வத்திரா இருப்பு சென்று அங்கிருந்து தாணிப்பாறை வர வேண்டும் .தாணிப்பாறை -சதுர கிரி மலைகளின் அடிவாரம் .மலை பாதை மிகவும் சவாலானது வழுக்கு பாறைகள் ,நீர் நிலைகள் ,செங்குத்து பாறைகள் ,உருண்டை கற்கள் என்று வழி நெடுகிலும் காண படும் .அமைதியான இயற்க்கை சூழல் ,நம்மை தொலைக்க சரியான இடம் .வழிகள் ஆங்காங்கு பிரியும் சற்று கவனம் தேவை .ஏற இறங்க மொத்தம் 22 கி .மீ ,அதிகம் பாரங்கள் சுமக்காமல் ,சாப்பிட ஏதேனும் ரொட்டிகள் மற்றும் தண்ணீர் குப்பிகள் எடுத்து கொண்டு ஏறினாள் போதும் .என் அளவில் இது ஒரு உன்னதமான அனுபவம் ,அமைதியாக இயற்கையின் பிரமாண்டத்தின் முன் நடப்பது நம்மை உணரும் தருணம் .பயம் ,உற்ச்சாகம் என்று கலவையான மனோ நிலை .இத்தகு மலைகளை ஏறி சாதிப்பது என்ன ? நம் தகுதியை குறிப்பாக உடல் மற்றும் மன தகுதியை சோதிக்க நல்ல களமாகும்.மலை உச்சிக்கு சென்று திரும்பும் பொழுது நாம் நம் பலம் கூடியிருப்பதை உணரலாம் .நம் உடல் மற்றும் மன வலு கூடுவது திண்ணம் .
அங்கு நான் எனது காமெர கொண்டு எடுத்த சில புகை படங்கள் இங்கு அளிக்கிறேன் .

1.ஆதவனின் பார்வையில் சிதறி ஓடும் மேக
கூட்டங்கள்
.








7.இது தான் இளநீர் (இலை நீர் )





எனக்கு படங்கள் எடுக்கவும் பார்க்கவும் பிடிக்கும் அந்த உரையும் தருணங்கள் நினைவலைகளாக என்றும் மகிழ்ச்சி அளிக்கும் .எனக்கு இத்துறையில் ஆர்வம் மட்டும் உண்டு ,எந்த தொழில்நுட்பமும் தெரியாது .இப்புகைப்படங்கள் நிக்கான் எல் 11 எனும் 6 மெகா பிக்சல் காமெர கொண்டு எடுத்தது
பல அறிய மூலிகைகளும் ,வன விலங்குகளும் நிறைந்த காடு என்று சொல்ல படுகிறது .நான் கூட ஒரு அறிய வகை சாம்பல் நிற அணிலை கண்டேன் அதை படம் எடுப்பதற்குள் தவ்வி மறைந்துவிட்டது .
அங்கும் வழி எங்கும் கொட்டி ஆங்காங்கு கிடக்கும் பாண் பராக் பாக்கேட்டுகளை ,பிளாஸ்டிக் பைகளை பாரத உடன் மனம் சஞ்சல பட்டது .மிருகங்கள் கடந்து போனதை அதன் கால் தடம் கொண்டோ ,சாணத்தின் வாடையை கொண்டோ அறிய முடியும் என்பர் ,மனிதன் வந்து போனதற்கு சிறந்த அறிகுறி பிளாஸ்டிக் பைகள், சிகரட் பொட்டிகள்,கிழிந்த உள்ளாடைகள் ,அருந்த செருப்புகள் .இவைகளை நமது அடையாளங்களாக நாம் விட்டு செல்லுகிறோம் .இன்னும் ரொட்டி பாக்கெட்டுகள் ,தண்ணீர் குப்பிகள் ,பீர் குப்பிகள் .மனம் மிகவும் வருந்தியது .கடைசி வரை நம் சுயநலம் மட்டும் தான் முக்கியமா ? ..
இது ஒரு அளப்பறியா அனுபவம் ,நல்ல நண்பர்களோடு நிச்சயம் போய் வாருங்கள்.
குறிப்பு -படங்களில் உள்ள தேதி தவறானவை ,எனக்கு அதை மாற்ற தெரியவில்லை அதனால் அது பாட்டுக்கும் ஒரு நேரத்தை காண்பிக்கிறது

குறிப்பு - எனது தமிழ் மன பரிந்துரைகள் மூன்றும் இரண்டாம் சுற்றிற்கு தேர்வாகி உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன்

பிரிவு - சமூக அரசியல் விமர்சனம்

Saturday, January 1, 2011

இந்திய மருத்துவம் -இன்றைய பிரச்சனைகள்

நீண்ட நாட்களாக இதை எழுத வேண்டும் என்று எண்ணி இருந்தேன் ,ஏதோ வேலைகள் கணினி முன் அமர்ந்து நிதானமாக எழுத இயலவில்லை ,
ஏதோ ஒரு தயக்கம் .இப்பொழுது எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் .ஒரு ஆயுர்வேத மருத்துவனாக ,நான் இதனுள் புழங்கி கொண்டிருப்பதால் இதை ஆராதிக்கும் அதே சமயத்தில் இதில் உள்ள குறைப்பாடுகள் என் கண்களை உறுத்துகின்றன . உற்று நோக்கியதில் எந்த ஒரு மருத்துவமுமே பரிபூரணம் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடிந்தது .

இந்திய மருத்துவத்தை பொறுத்த வரையில் இன்றைய சிக்கல்களின் தோற்று வாயாக மூன்று முக்கிய காரணிகளை கூறலாம் .மருத்துவர்கள் ,அரசு ,பொது மக்கள் என்று இவர்களை சார்ந்து புரிந்து கொள்ளலாம் .ஒவ்வொன்றையும் சற்று
ஆழமாக நோக்க வேண்டும் .

1.இப்பொழுது நவீன மருத்துவத்தை பொறுத்த மட்டில் ,மருத்துவர்கள் நோயாளிகளின் தேவையை மட்டுமே கவனிக்கும் வசதி உண்டு ,மருந்து தயாரிப்பது ,புதிய மருந்துகளை கண்டு பிடிப்பது போன்றவை உயிர் வேதியல் ,மருந்தாளுமை ஆகியவை பயின்றவர்கள் கவனிக்கின்றனர் .இங்கே அது மாதிரி இல்லை , இங்கே இலை தழைகளை கொணர்வது,மருந்து செய்வது என்று அனைத்துக்குமே ஒரே மருத்துவ படிப்பு தான் .

2.குழப்பம் -சித்த மருத்துவமும் சரி ஆயுர்வேதமும் சரி அண்மைய காலம் வரை குரு -சிஷ்ய பரம்பரையின் வாயிலாக தொன்று தொட்டு வழங்கப்பட்டுள்ளது .சுதந்திரத்திற்கு பின்பு தான் கல்லூரி ,பல்கலைகழக அமைப்புகள் எல்லாம் அதிகமாக வந்தது .அறிவு தொடர்ச்சி நடைபெறுவதில் இதனால் பெரும் சிக்கல் நிலவுகிறது .பாரம்பரிய ரகசியங்கள் தங்களோடு அழிந்தாலும் அழியட்டும் அது வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று பல தொன்மையான மருத்துவ முறைகள் வழக்கொழிந்து போய் விட்டன.பல செயல்முறைகளும் ,மருத்துவ கோட்பாடுகளும் நீர்த்து போய்விட்டன அல்லது தவறாக உருவகபடுத்தப்பட்டுள்ளன
3.எந்த ஒரு துறையுமே தன்னை புதுபித்தல் முக்கியமாகும் ,தனது பழைய தோல்களை கழட்டி எரிந்து புதிய சட்டையை மாட்டும் பாம்பை போல ,உயிர்ப்புடன் ஒன்று உயிர் வாழ அது புதுபிக்கப்பட வேண்டும் ,ஆனால் இந்திய மருத்துவத்தின் நிலை சிக்கலானது .இன்னும் சொல்ல போனால் இந்திய மருத்துவத்தில் புதிய மூலிகைகள் இணைக்கப்பட்டு ஒரு நூறு வருடங்களாவது கழிந்து இருக்கும்.


4.இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகளை கொண்டு அது எதை எதையோ சாதிக்கலாம் ,நடைமுறையில் அது நடக்கவில்லை .இதற்க்கு காரணம் -இத்துறையில் போதிய நவீன ஆய்வுகள் இல்லை ,அரசு இந்திய மருத்துவத்திற்க்காக பெரும் தொகையை ஒதுக்கினாலும் அது சரியான முறையில் பயன்படுவதாக தெரியவில்லை .ஆங்காங்கு நடத்தப்படும் ஆய்வுகள் அனைத்தும் முன்முடிவுகள் சார்ந்த ஆய்வுகளாக இருக்கிறது ,ஒன்று அது மருத்துவத்தை மட்டம் தட்ட வேண்டும் என்கின்ற ஒரே நோக்கோடு செய்ய படுகிறது ,அல்லது நாம செஞ்சா சரியா தான் இருக்கும் என்று ஒரு நம்பிக்கையோடு செய்ய படுவது மேலும் ஆய்வுகள் மிகவும் தட்டையாக உள்ளது ,முழுமையான உருவத்தை அளிக்கவில்லை என்பது ஒரு முக்கிய குற்றசாட்டு.



5.பெருகி வரும் போலிகள் -இது மற்றும் ஒரு முக்கியமான பிரச்சனை ,தினம் தோறும் நாம் தொலை காட்சியில் எப்படியும் ஒரு பத்து பதினைந்து போலிகளை காண்கிறோம்,அதுவும் குறிப்பாக பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லுகிறேன் பேர்வழி என்று செய்யும் அட்டகாசங்கள் அளவில்லாதவை .இதை எந்த மருத்துவ சங்கமும் தட்டி கேட்பது இல்லை ,பொதுவாக இத்தகைய விளம்பரங்களில் வரும் ஆட்கள் எக்கசக்கமாக கறந்து விடுவர் அது தெரியாமல் நம் மக்கள் அவர்களை நம்பி ஏமாறுவர் . மேலும் இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு ,பணபலம் ஆகியவை தற்காத்து நிற்கும் .எங்கள் சங்கங்கள் கூட இவர்கள் விஷயத்தில் எவ்வளவு முனைந்தும் ஏதும் செய்ய முடியாதது துரதிஷ்டமே
.
6.தவறான பொருளாதார ,கல்வி கொள்கைகள்
இன்றைய அவசர யுகத்தில் அனைத்தும் பணம் ,நேர விரயம் என்பது சம்பாதிக்கும் திறன் என்பதை குறிக்கிறது ,எல்லா சமயங்களிலும் இந்திய மருத்துவத்தால் நவீன மருத்துவம் போல் நோய் குறிகளை உடனடியாக சரி செய்ய முடிவதில்லை .மேலும் நாம் நம் பாரம்பரிய அறிவுகளின் மேல் கொண்டுள்ள முன்முடிவுகளோடு சேர்ந்த ஒரு வித ஒவ்வாமை ,இதை வெற்றிகரமாக நமது கல்வி முறை நம்முள் செலுத்தி உள்ளது .இந்த கல்வி முறை நம்மை ஒரு வித நுகர்வு வெறிக்கு இட்டு செல்கிறது ,அவசியத்திற்கு அதிகமான நுகர்வு ,பகட்டு நமது அடையாளமாக திணிக்க படுகிறது .நான் நமது பாரம்பரிய அறிவை அப்படியே ஏற்றுகொள்ளுங்கள் என்று கூறவில்லை ,இதை பரிசீலனை கூட நாம் செய்வதில்லை என்பதே நிதர்சனம்.நாம் அறிய நமது கல்வி முறைகள் உதவுவதில்லை மாறாக அதை சீரழிக்கும் அனைத்து உபகரணங்கள் ,வழிமுறைகளை நமக்கு அது ஊட்டுகிறது.நமது கல்வி முறைகள் நம்மை மாற்று வழிகளில் சிந்திக்க விடுவத்தில்லை , நம்மை ,நமது சிந்தனையை சுய அறிவை மழுங்க அடிக்கும் ஒரு இயந்திரத்தனமான கல்வி முறையை பின்பற்றுகிறோம் .இயற்கைக்கும் நமக்குமான உறவை சிதைக்க படுகிறது ,ஒரு சுரண்டல் சமூகம் உருவாக வழி வகை செய்கிறது.இத்தகைய கல்விமுறையில் பயின்ற பின்பு இந்திய மருத்துவத்தை புரிந்து கொள்வது மிகவும் சிரமம் ,நாம் ஓவியத்திற்கான சட்டம் அடிப்பதில்லை சட்டத்தை வைத்து கொண்டு அதற்குள் ஓவியத்தை அடக்க முயல்கிறோம் .

7.இந்திய மருத்துவம் யார் பயில்கிறார்கள் என்று பார்த்தால் ,ஒன்று பரம்பரை மருத்துவர்கள் -தங்களது குடும்ப நீட்சியாக அல்லது ஏதோ ஒரு மாணவன் -நவீன மருத்துவம் படிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டதால் அவர்களது குடும்பத்தின் நிர்பந்ததினால் அல்லது அரசு வேலை கிடைக்கும் எனும் நப்பாசயினால் கல்லூரிக்கு வருகின்றனர் .வேண்டா வெறுப்பாக வரும் மாணவர்களுக்கு கல்லூரியில் காத்திருக்கும் மற்றொரு அதிர்ச்சி ,இது வரை பயின்ற அறிவியலுக்கு தொடர்பில்லாத வேறு ஒரு உலகம் .தான் படித்தது மட்டும் உண்மை என்று நம்பும் மனம் இதை ஏற்று கொள்ள தயங்குகிறது .ஒட்டு மொத்தமாக பார்த்தால் படிக்கும் கூடத்தில் வெகு சிலர் மட்டுமே அதன் போக்கை கண்டு கொள்கின்றனர் .எனக்கு இந்திய மருத்துவத்தை புரிந்து கொள்ள நான்கு ஆண்டுகள் பிடித்தது ,அதுவரை நானும் கூட ஒரு வித விரக்தியில் இருந்தேன் ,நல்ல வேலையாக எனக்கு ஒரு நல்ல ஆசான் கிட்டினார் .இது எல்லோருக்கும் அமைவது இல்லை என்பதே சிக்கல் .பெரும்பாலும் இப்படி ஆர்வமில்லாமல் படிக்கும் மாணவர்கள் படித்த உடன் வேறு ஏதாவது வழியில் சென்று விடுகின்றனர் .பல இருவத்தி நான்கு மணி நேர ஆஸ்பத்திரிகளில் இரவு நேர மருத்துவ பனி இந்திய மருத்துவர்கள் மற்றும் ஹோமியோ மருத்துவர்களே பனி புரிகின்றனர் .நம் கல்விமுறை இந்திய மருத்துவர்களுக்கு வெற்றிகரமாக ஒன்றை கொடுத்தது என்றால் அது தாழ்வு மனப்பான்மை தான் .

8.இப்பொழுது இந்திய மருத்துவம் நோக்கி வரும் மக்கள் யார் என்று கவனித்தால் ,ஒன்று நவீன மருத்துவத்தின் பால் நம்பிக்கை இழந்து ,அதிக பண விரயம் ஏற்பட்ட பின்பு ,நவீன மருத்துவம் தங்களை கைவிட்டு விட்டது என்று நம்பும் சமயத்தில் -எத்தை தின்னால் பித்தம் தெளியும் எனும் நோக்கில் இந்திய மருத்துவத்தை நாடும் ஒரு வழக்கம் இங்கு உள்ளது .பொதுவாக இவ்வகை நோய்களுக்கு -அதுவும் நீண்ட காலமாக பல ஆங்கில ரசாயான மருந்துகள் உண்டு அவர்களது இயல்பு நிலையிலிருந்து வெகுவாக விலகி இருப்பார் ,அதை சரி செய்து உடலை இயல்பு நிலைக்கு திருப்ப காலம் அதிகமாக தேவை படும் ,சில நேரங்களில் அத்தகைய நிகழ்வுகள் சாத்திய படுவதும் இல்லை .ஒரு மருத்துவ பேருண்மை சொல்லவா -மருத்துவமே ஒரு மிக பெரிய சூது தான் ,வெவ்வேறு முயற்சிகள் ,சில பலனளிக்கும் சில அளிப்பதில்லை . வெகு சிலரே இந்திய மருத்துவத்தை விருப்பத்தோடு நாடுகிறார்கள் என்பது நான் பார்க்கும் கண் கூடான உண்மை .

9.வணிகம் மற்றும் வியாபாரம்
எனது தாத்தா எங்கள் வட்டத்தில் பிரபலமான சித்த வைத்தியர் .காலனாவிற்க்கும் அரயனாவிற்க்கும் மருத்துவம் பார்த்தவர் ,எனது அப்பா அரசு சித்த மருத்துவர் அஞ்சு ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் மருந்து கொடுத்தவர் .இன்றைய காலம் வேறாகிவிட்டது -சாதாரணமாக ஆயுர்வேத மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் இப்பொழுது உயர் வர்க்க மக்களின் சிகிச்சையாக மாறி போனது வருந்தத்தக்க உண்மை .எளிய மக்களின் அன்றாட தேவைகளை போக்கிய வைத்தியர்கள் ,எளிய மருந்துகள் எல்லாம் காணாமல் போய்விட்டன .ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் ஒரு வித நிறுவன கலாச்சாரம் வெகு வேகமாக பரவுகிறது.என்னை தேய்தல்-மசாஜ் மட்டுமே ஆயுர்வேதம் என்பது போன்ற பிம்பம் எழுப்ப படுகின்றது .மருந்தில்லாத எளிய முறைகள் ,உணவு முறைகளை சீர் செய்தல் மூலம் பல நோய்கள் தீர்க்க படும் ,இதை பற்றிய சரியான அறிவை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பல நேரங்களில் கொண்டு சேர்பதில்லை .

10.மூலதன தட்டுபாடு
இயற்க்கை வளங்கள் சுரண்டல் பல வகையிலும் நடை பெறுகிறது .வரைமுரைகளின்றி பல அறிய வகை மூலிகைகளை உபயோகித்த்மையால் இன்று பல மூலிகைகள் அழிந்து விட்டன அல்லது அழிவின் விளிம்பில் உள்ளன .ஒரு நூறாண்டுகளுக்குள் தான் எத்தனை மாற்றம் ? மூலிகை தட்டுபாடு -இதனால் கலப்படம் நடக்கிறது ,மருந்து தனது செயல் வீரியத்தை இழக்கிறது .முறையாக மூலிகைகளை பாதுகாக்க வேண்டும் ,அதை முறையாக உபயோகித்தல் வேண்டும் .அரசு தரப்பில் இதற்கான முயற்ச்சிகள் நிச்சயம் குறைவே .இதை ஒவ்வொரு கடை குடிமகனுக்கும் கொன்று சேர்க்க வேண்டும்

11.இதை எல்லாம் கடந்து வந்தாலும் இறுதியாக இந்திய மருத்துவம் வெல்ல வேண்டியது எளிய மக்களிடம் தான் இழந்த நம்பிக்கையை .பத்திய பயம் ,ஒவ்வாமை பயம் என்றும் பழக்கம் இல்லை என்றும் பல காரணங்கள் மக்கள் தரப்பில் .இந்திய மருத்துவம் தனது பெருமையை மீட்டு மீண்டும் மக்களிற்கு பயனுள்ள எளிய மருத்துவமாக மாற -அனைவரின் பங்களிப்பும் அவசிய படுகிறது .மேலும் நவீன மருத்துவர்கள் -இந்திய மருத்துவத்தை நோக்கி சில நேரங்களில் த்வேஷ பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் .இந்திய மருத்துவத்தின் பால் நம்பிக்கை கொண்டுள்ள பலரை நான் அறிவேன் ஆகினும் கூட சிலர் இத்தகைய செயலில் தங்களை தாழ்த்தி கொள்கிறார்கள் .இது ஒரு தவறான போக்கு .ஆயினும் கூட அவர்களின் விமரிசனத்திற்கு பல நேரங்களில் இந்திய மருத்துவத்தால் அவர்களது மொழியில் விடை அளிக்க முடியவில்லை என்பதும் நிதரிசனம்இன்னும் பகிர நெறைய விஷயங்கள் இருந்தாலும் ,பதிவின் நீளம் கருதி இதோடு நிறுத்துகிறேன் ,மீண்டும் மற்ற்றொரு சமயத்தில் விரிவாக பகிர முயல்கிறேன் .

பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று ....