Tuesday, May 8, 2018

அம்புப் படுக்கை - டேவிட் வாசிப்பு

(நண்பர் டேவிட் நீயா நானா படப்பிடிப்பில் பழக்கமானவர். தற்போது தனியாக திரைப்படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார். அம்புப் படுக்கை தொகுப்பை வாசித்து அதில் அவரைக் கவர்ந்த ஐந்து கதைகளைப் பற்றி எனக்கு தனித்தனியாக மடல் செய்தார். அவற்றை இங்கே ஒன்றாக தொகுத்து உள்ளேன். நன்றி டேவிட்)

ஆரோகணம் :;
அவரோகணத்தில் ஆரம்பிக்கிறேன்.
எந்த உயர்வையும் புனிதப்படுத்தாத நிலையில் இருந்து பார்க்கிறேன். ஒவ்வொரு முறை படித்து முடியும்போதும் சுனிலின் கதை தொகுப்பின் மையத்தைபற்றி வாசித்துவிட்டு வருகிறேன். சுவை கூடுகிறது.

காந்தியின் அம்புப்படுக்கை இது. அதாவது இறப்பின் கடைசி நிமிடங்கள் . அந்த சூழலில் என்ன நினைத்திருப்பார். வாழ்க்கை வாழ வேண்டுமென்றா இல்லை வேண்டாமென்றா என்ன நினைத்துகொண்டிருப்பார். இறந்த பிறகு எல்லோரும் சொல்வது போல அவர் சுவர்க்கத்திற்கு போயிருப்பாரா..
அங்கே அவருக்கென்ன வேலை?

அவர் நரகத்தில் இருப்பதையும் அங்கும் போய் பணிவிடை செய்வதையும்தான் விரும்புவார். அதுதான் காந்தி. எழுத்தாளன் வாசகனின் கவனத்தை கோருவது, இதுபோன்ற படைப்புகளில் தான். காந்தியின் கோட்பாடுகளை திரும்ப திரும்ப நினைவூட்ட வேண்டிய காலகட்டத்தில்
இருக்கிறோம்.
$
காந்தியின் கொள்ளுப்பேத்தி நீலம் பாரிக் எழுதிய புத்தகத்தின் மேற்கோள் வருகிறது. தன் மகன் ஹரிலாலுக்கு அநீதி செய்துவிட்டதாக நினைப்பார் என்பதும் , இங்கிலாந்து செல்ல அவரை அனுமதித்து, தன் அன்பை தன் கொள்கைகளை திணிக்காமல் இருந்திருக்கலாம் எனவும் , ஒரு
தலைவனின் மகன் அடையும் துன்பம் உணர்ந்தவராகவும் , கடைசி நிமிடங்களில் வருந்துகிறார்
காந்தி.
$
காலமும், தேசமும்,தொலைவும் எதுவும் அவருக்கு தெரியவில்லை.அவர் கண் முன் வெண் பனி கடல் இருப்பதாக சொல்கிறார் சுனீல்.
என்னவொரு சர்ரியலிஸ்டிக் கற்பனை.
காந்தி எந்த காலத்திற்கும் பொருத்தக்கூடியவர். காந்தி எல்லா தேசத்திற்கும் பொருந்தக்கூடியவர். காந்தி எல்லையில்லா தொலைவிற்கு உங்களை கூட்டி செல்வார். அவருக்கு அவர் கண்களுக்கு தெரிந்தது எல்லாம் தூய்மையானது மட்டுமே. அவர் பார்வை நல்லதையே பார்க்கிறது,நல்லதையே கேட்கிறது, நல்லதையே பேசுகிறது.
$
மனைவியை பற்றி நினைக்கிறார். காமம் பற்றியும் அன்னையாக பார்க்கிறேன் என்று சொன்னேனே என்றும் முரண்படுகிறார். இந்த மனசாட்சியே காந்தியின் அடையாளம். இந்த கேள்விகளும் அதன் பதில்களுமே அவர் நம் முன் உயர்ந்து நிற்க காரணம்.

மனைவி உயிரோடு இருந்திருந்தால் தன்னை காப்பாற்ற குறுக்கே வந்து விட்டிருப்பாள், என்பது சுகமான கற்பனை. காந்தி நினைத்திருப்பாரா தெரியாது. ஆனால் எழுத்தாளன் கூட்டிப்போகும் பாதை , காந்தி தன் மனைவியை நேசித்தார் என்பது, அன்னை தன் மகவை காப்பது போல காத்திருப்பார் என்பது, இறுதி மூச்சின் போதும் கஸ்தூரி பாயை நினைத்து பார்த்திருப்பார், என்பது.
$
ஒவ்வொரு வரிகளும் சர்ரியலிஸ்டிக் தன்மையுடன் வாசகன் கற்பனை செய்து பார்க்க தூண்டுகிறது.
“பனிச்சிகரத்தின் சரிவு மேலும் குறுகியது”
“வெண் பனிக்காட்டு பரப்பிலிருந்து துருத்திக்கொண்டு தனித்து உயர்ந்து நின்றது கறுத்த நெடுமரம்.”
$
மூளையின் செயல்பாடுகளைப் பற்றி ,மனிதன் அந்த நாகத்தை அடக்குவது பற்றி யோசிக்கிறார். உறக்கம் வராது போக வைக்கும் நிகழ்வுகள் தெரிகிறது. அவர் விரும்பிய அதாவது காந்தியின் ராம் பற்றி நினைக்கிறார். காந்தியின் ராம் வேறு அல்லவா அவர் அன்னை கற்று தந்த உறக்கமற்ற இரவுகளை கடக்கும் மந்திரங்கள் சொல்லும் சிறுவனை போல் காந்தியை நினைத்துப்பார்க்கவே அழகாக இருக்கிறது, சுனீலின் மனம் போல.
$
காலன் என்னும் உலக நியதியை, அவர் பழக்கி வைத்த நாயை போல கூடவே தன் சொல் பேச்சு கேட்க வைத்திருந்ததையும் அழகாக காட்சிப்படுத்துகிறார். காந்தியின் பயணம் முழுதும் தொடர்ந்து வரும் கருப்பு நாயாக சாவை அழைத்து வருகிறார். ஒரு இடத்தில் காந்தி “ நல்ல வழித் துணைவன் நீ “ என்று கூறுகிறார். மனிதா நீ இறக்கப்போவதை
நினைத்துக்கொள் , உன் அகங்கார மமதையை அடக்கு என்கிறார் சுனீல். ஏனென்றால் காந்தி அதை செய்து காட்டியிருக்கிறார்.
$
அப்புறம் முழுமையும் முழுமையின்மையும் பற்றி பேசுகிறார் காந்தி. முழுமையை எம்பி குதித்து எட்டிபிடிக்கவே தன வாழ்நாள் முழுவதும் முயன்று இறுதியில் தோற்று விட்டதாகவே காந்தி நினைக்கிறார். முழுமையற்ற மனிதனாக தன்னை உணருகிறார்.

சுனீல் கூட கைலாஷ் மானசரோவர் போய்விட்டு வந்திருக்கிறார் என நினைக்கிறேன்.அந்த சூழலில் விம்மி வெடிக்கும் அழுகையும் மனிதத்தின் முழுமையற்ற தன்மை மீது வரும் நேசமும், காந்தியின் எண்ணமாக எழுதி இருக்கிறார்.
$

கதை ஆரம்பத்திலேயே காந்தி சுடப்படுகிறார் , பட் பட் என்று , கதை இறுதியில் அதாவது தர்மர் என்னும் யமன் கூட்டிப்போக வரும் இடைப்பட்ட நேரத்தில் இவ்வளவு சிந்தனைகள். தர்மர் அவரிடம் பட் பட் பட் என்று மூன்று குண்டுகள் சுடப்பட்டன என்று உறுதிப் படுத்துகிறார். சுனீல் நினைக்கிறார் இரண்டாவது குண்டில் அவர் உடல் வலியிலிருந்து விடுபட்டிருக்கும் என்றும் மேலும் நான்காவது குண்டு பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்றும் நமக்கு கூறுகிறார்.
அத்தனையும் காந்தித்தனம் , காந்தி டுடேவின் டேக் லைனே அதுதானே ,
என் வாழ்க்கையே என் செய்தி ...என்பதுதானே அது.

திமிங்கிலம்

திமிங்கிலம் பற்றிய செய்திகள் அனைத்தும் நன்மையை பிரதிபலிப்பதாக இருந்தது இதுவரை. ஓ இப்படி ஒரு உயிர் இருக்குமா என்றால் அதற்கு முழு தகுதியும் திமிங்கிலத்திற்கு இருக்கிறது. ஆம்.உலகமே அழியப்போகிறது.உலகின் முதல் மனிதனைப் பற்றி வாசித்திருப்போம். ஆனால் கடைசி மனிதன் யார் , அவன் யாராக இருப்பான்
என அறிய முயன்றிருக்கிறார்.

உலகின் கடைசி மனிதன் திமிங்கிலமாகத்தான் உருவகப் படுத்தப் படுவான்.
ஏனென்றால் திமிங்கிலம் எல்லோரையும் விட நீண்ட நாள் வாழமுடியும்.
மற்ற மீன்களை , சக உயிரை உண்டு வாழும். நிலத்திலிருந்து நீருக்குள் வாழ பழகிக்கொண்ட மிருகம். மிகப்பெரிய பாலூட்டி . அப்ப கதையும் ஃப்யூச்சர்ல நடக்கற மாதிரி தான யோசிக்க முடியும். ஸோ சயின்ஸ் ஃபிக்ஸன்
கதையாக இருக்க, அம்புப்படுக்கை கான்செப்ட் படி , அந்த கடைசி மனிதனின் கடைசி நிமிடங்கள். அவன் என்றே வச்சிக்குவோம் , அந்த கடைசி மனிதனின் குணம், அவன் மனைவி பற்றி, அவன் தான் வாழ்வதற்காக என்னவெல்லாம் செய்வான். என்று யோசித்திருக்கிறார்.

ஆரம்பமே கனவில் துவங்குகிறது. வரிசையில் எரிபொருள் வாங்குவதற்கு க்யூ நிற்கிறார்கள் வளர்ப்பு பிராணியை தேடும் பாட்டி... எரிபொருளுக்காக மனித எலும்புகளை உபயோகிப்பதால் எங்கும் பிண வாடை. மனிதன் தன் நிலைத்த பாதுகாப்பான வாழ்வுக்கான தேடல்.

2020 ல் முதலாம் பெரு நிகழ்வு முதல், 3000 ல் எட்டாம் பெரு நிகழ்வு வரை உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டு வருகிறது. பெருநிகழ்வு ஒவ்வொன்றும் ஒரு அழிவை தருகிறது. புதுப்பிக்கவியலா எரிசக்தி காலாவதியாகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகளே மானுடத்திற்கு எதிரி என்பதை நிறுவுகிறார் சுனீல். அடிப்படை அறிவியல் தவிர. அவன் ஆராய்ச்சியாளனாக இருக்கிறான். அவனுடைய அறிவியல் ஆராய்ச்சியும் ராணுவமும் சேருவதை அவன் மனைவி விரும்பவில்லை.
பிரிகிறாள். ஹோமோ ரீகாம்பினன்ட், ம்யூடன்ட் கார்டிஃபோலியா, பிரகிருஸ்தான் (பிராக்) ,குமிழ் வடிகட்டி, கார்ப்சோ கார்பன், பிணப்பொறுக்கிகள், மனித மூளையை நிலைகுலைய செய்யும் நுண்ணுயிரி, சயனோ பாக்டீரியம் என்று ஆராய்ச்சியில் இருக்கும் விஷயங்களோடு கற்பனையை கலந்து கட்டி முழு நீள ஹாலிவுட் ஆங்கில படத்திற்குண்டான விஷயங்களை தருகிறார்.

2018 ம் ஆண்டு என்ன சமூக தீமையை பற்றி பேசுகிறோமோ அதேதான், எந்த மாற்றமுமில்லை, இன்னும் பட்டவர்த்தனமாக உலகின் ஒவ்வொரு உயிரும் உணரும் ராட்சஷ நிமிடங்கள் கற்பனை செய்திருக்கிறார். அவன் -திமிங்கிலம் – ஹீப்ரு -தற்போதைய இஸ்ரேலியன்/யூதன் . அவள் –வாத்துகுட்டி - அரேபிய பெண் -தற்போதைய ஈராக்கி.

இறுதியாக அவன் தன்னை உணருகிறான். ஆனாலும் மாற்றிக்கொள்ள இயலா தூரத்திற்கு போய்விட்ட அவனால் எதையுமே மாற்றமுடியவில்லை.
அவனுடைய கண்டுபிடிப்புகளே அவனை தற்சார்புடைய, தோல் மூலம் சுவாசிக்கும் உயிரினமாக , கடலுக்குள் சென்று விடுகிறான். எனக்கென்னவோ அவன் இந்த உலகின் கடைசி உயிரினமாகவே இருப்பான் என்று தோன்றுகிறது.

மனிதம் மீது அக்கறையற்ற உலகமாக மாறிவரும் சூழலில், நடக்கபோகும் நிகழ்வுகளை பேசுகிறார் சுனீல்.மனிதன் மாபெரும் சல்லிப்பயல் என்று ஜி.நா சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது.

கூண்டு
மந்திரக்கூண்டு செய்ய சொல்கிறான் அரசன். கொல்லன் ஒரு தேர்ந்த ரசவாதி. அந்த நாடு காரணமில்லாமல் வஞ்சிக்கப்பட்டவர்கள் கொண்ட நாடு. இந்த பின்னணியில் ஒரு ஃபாண்டஸி கதை. இன்று முழுக்க முழுக்க நியாயம் கேட்டல் ,நீதியை நிலை நாட்டல் , அதர்மத்தை அழித்தல் என்ற
கோரிக்கைகள் முதலாளித்துவத்துக்கு எதிராக ,கார்ப்பொரேட்டுக்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராக கேட்கும் எல்லா குரலும் ஆள்பவர்களின் தவறை நோக்கியே இருக்கும்.

அதுதான் இந்த கூண்டு. கூண்டு = நீதி ; கொல்லன் = நீதி,காவல் துறைகள். இந்த நாட்டிலும் ஒரு மாயக்கூண்டு செய்ய அரசன் கொல்லனிடம் சொல்கிறான். கொல்லனும் பதினான்கு ஆண்டுகள் மேலாக உழைத்து உருவாக்குகிறார். பதினான்கின் முக்கியத்துவம் பற்றி புராணங்களில் சொல்லப்படுவன பற்றி நான் யோசிக்கவில்லை. ஆனால் அது ஆயுள் தண்டனைக்காலம் என்கிறேன். அந்த கூண்டை வைத்து தவறு செய்பவர்களை, அரசுக்கு துரோகம் செய்பவர்களை பிடித்து விடலாம். என்று அதன் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகிறது. கூண்டு இரக்கமற்ற இயந்திரம் என்ற பயம் மக்கள் மனதில் இருந்தது கூண்டு வரப்போகிறது என்பதாலேயே சின்ன சின்ன திருட்டுகள் குறைந்தது. ஒருநாள் கூண்டும் வந்தது. என்ன செய்தது? அரசனும் மக்களும் என்ன ஆனார்கள்?
அந்த மாயக்கூண்டிலிருந்து அதன் பிடியிலிருந்து யார் தப்ப முடியும்.
ஏனென்றால் இங்கு யார் குற்றவாளிகள் இல்லை?

பேசும் பூனை
தனிமை. வெறுமை.
மொபைல் போனில் வித விதமாக வரும் விளையாட்டுக்கள் தொடர்ந்து பரவலாக புழங்க என்ன காரணம்? தனிமை. வெறுமை. இந்த தலைமுறையின் மிக முக்கியமான பிரச்சனையை பேசும் பூனை., கோபக்கார பறவைகள், ஓடுவது துரத்துவது, பறவையை கொல்லுவது, மறைந்திருந்து மனிதர்களை கொல்லுவது என்று இப்போது நீலத்திமிங்கிலம் என்பது வரையான விளையாட்டுகளில் பார்க்கலாம்.

மொபைல் விளையாட்டுகள் அல்ல பிரச்சனை , மனித மனமே பிரச்சனை.
அகச்சிக்கலில் தொலைந்து போய்க்கொண்டிருக்கிறோம். மிகவும் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பெண் தேன்மொழி. வயது வித்தியாசம் மட்டுமில்ல கணவனின் செயல்களும் அவளை விலகிப்போக செய்கிறது. இது மொபைல் விளையாட்டில் கவனத்தை மாற்ற ,காரணமாகிறது. ஒருமுறை அதன் போதை அறிந்து விட்டால் அதற்குள்,அதற்குள் மீண்டும் மீண்டும் இழுத்துக்கொண்டு போகிறது. இங்கு பேசும் பூனை தேன்மொழிக்கு இன்னொரு மெய்நிகர் நண்பனாக மாறுகிறது. புத்திசாலித்தனமாக உரையாடுகிறது. அவளுடைய வேலை பழு குறைக்க புதிய பொருள்களை வாங்கி குவிக்கிறது.

இங்கு தனிமைக்கு ஆட்படாத ஆளே இல்லை எனலாம். எல்லாம் இருக்கும் ஆனால் ஒரு வெருமையில் வாழ்கிறார்கள். சுனீல் கூட தனிமை உணர்ந்து தான் எழுத்தாளராக மாறி இருக்கிறார். உலகத்துடன் தொடர்புடன் இருத்தல், தன்னை சமூகத்துடன் தொடர்பு படுத்திக்கொள்வது எல்லோருக்கும் வாய்க்காது. 
எழுத்தாளனுக்கு,பத்திரிக்கையாளனுக்கு,இயக்குனருக்கு,அரசியல்வாதிக்கு மிக சுலபமாக தொடர்பு ஏற்பட்டுவிடும்.மொத்த சமூகத்தையும் அவன்
பார்க்கிறான். இங்கு மிக அதிகமான எண்ணிக்கையில், இறுக்கமான சூழல், அவரவர் வாழ்க்கையினால் ஏற்படுகிறது. வாழ்க்கை முறையினால் ஏற்படுகிறது. எம்பத்தி குறைந்து கொண்டே வருகிறது. அடுத்தவர் மனதை அறிந்து கொள்வதே இல்லை , சூழ்நிலையை புரிந்து நடந்து கொள்ளும் தன்மை இல்லை.

மரக்கட்டைகளாக, நுண்ணுணர்வற்றவர்களாக , உணர்வு வறட்சியுடன்
பொருள்களை நோக்கிய வாழ்வு வாழ்கிறோம். இன்றைய மத்திய வர்க்க பிரச்சனையை பேசுகிறார்.ஓடுவது யாருக்கென்று புரியாமல், பிறகு களைத்து போய் சாவு கேட்கும் மக்கள். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாமே முன்வந்து ஏற்படுத்தும் இன்னொரு சிக்கலே மீள முடியாத தூரத்திற்கு, பிரிவிற்கு கூட்டிப்போகிறது.

தனிமையும்,வெறுமையும் நம்மை தாக்காதவாறு அல்லது அதிலிருந்து வெளியேற என்ன செய்ய முடியும் , இந்த மனிதன். ஆயிரம் பதில்கள் தரலாம்.
உள்ளிருந்து அவனவனுக்கு வரும் பதில்கள் பொறுத்தே நிச்சயிக்கப்படுகிறது மீதி வாழ்க்கை. பெரும்பாலும் குடி,போதைக்கு தஞ்சமடைவார்கள்.அவர்களுக்கு சொல்ல ஒரு பழைய கண்ணீர்
கதை இருக்கும். மனம் சார்ந்த பிரச்சனைகளை வெளியே சொல்லும் சூழலே இங்கில்லை. திருமணம் ஆன பெண்களுக்கு சுத்தமாக இல்லை. திருமணம் ஆன ஆண்களுக்கு போதை விடுதிகளே அடைக்கலம். இதுதான் நிலை. இதைத்தான் பேசும் பூனை பேசுகிறது.

2016

ஒரு புனைவு கதாபாத்திரம் இறப்பதற்கு சில நொடிகள் முன்னதாக பேட்டி எடுக்கிறார் சுனீல் அதாவது நரோபா என்ற அவர் புனை பெயரில். ஜார்ஜ் ஆர்வெல் பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த எழுத்தாளார்., பத்திரிக்கையாளராக அறியப்பட்ட விமர்சகர், சர்வாதிகாரத்திற்கு எதிராக தனது புனைகதைகளிலும்,கட்டுரைகளிலும் எழுதியவர். அவரது 1984 என்ற நாவலின் முக்கிய பாத்திரத்தை மையமாகவும், அந்த நாவலில் இருந்து ஆங்கிலத்தில் உபயோகப்படுத்திய அத்தனை புதிய வார்த்தைகளும் அதன் செயல்களையும் உபயோகப்படுத்தி ஒரு சிறுகதை.

முதல்ல 1984 படிச்சுட்டு வரத்தோணும்படி ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது. நரோபாவும் வின்ஸ்டன் ஸ்மித்தும் உரையாடும்போது பெரியண்ணன்,சிந்தனை காவலர்கள், அரை எண் 101, சிந்தனைக்குற்றம் போன்ற ஆர்வெலின் ஐடியாக்களை அலசுகிறார்கள்., . இன்னும் சில நிமிடங்களில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்மித் பின் மண்டை வழியே சுடப்பட்டு
இறக்கப்போகிறார் வாய்மையுடன் இருந்த குற்றத்திற்காக. நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள். உங்கள் சிந்தையில் வாய்மையை சுமந்தாலும் தெரிந்துவிடும் அவர்களுக்கு , நீங்கள் கலகக்காரர் என்று. ரகசியம்,அந்தரங்கம் என்று ஒன்றில்லை.உண்ணும் உணவும்,பிறப்புறுப்பின் மச்சம் கூட அவர்களுக்கு தெரியும். நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள். நரோபா பேட்டிக்கு முன் திபெத்தியனுடன் பேசுவதாகவும், பின்னதாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன் ஸ்மித்திற்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்.

எங்கெல்லாம் காலனி ஆதிக்கம் இருந்ததோ, அங்கெல்லாம் ஸ்மித்களுக்கான தேவை இருக்கிறது என்கிறார். நீங்கள் வாழ நினைக்கும் வாழ்வை வாழ முடியாது , நீங்கள் ஆர்வெலின் உலகத்தில் அல்ல, உங்களை சுற்றி பாருங்கள் எந்த நாட்டுக்கும் பொருந்தும். நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள்.

No comments:

Post a Comment