Wednesday, May 9, 2018

அம்புப் படுக்கை - டேவிட் வாசிப்பு - 2

(நண்பர் டேவிட் அனுப்பிய வாசிப்பு. சென்ற பதிவின் தொடர்ச்சி)

பொன் முகத்தை பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்::

மெல்ல மெல்ல தன் இருப்பிற்கான அவசியம் மறைந்துகொண்டே வரும்போது ஏற்படும் பயம் ,இல்லை இப்ப தேவையில்லை என்று உணர்த்தப்ப்படும்போது ஏற்படும் வெறுமை ,
இதிலிருந்து விடுதலை செய்து, நமக்கென்று உள்ள இடத்தை உறுதி செய்து கொடுப்பவரை கண்ணீர் மல்க நன்றியுடன் பார்ப்போமே ,
அப்படித்தான் அறுபது வயது நாவன்னா லேனாவுக்கு, ஆறுமாத பேத்தி வள்ளியால் இப்படி ஒரு இடம் கிடைக்கிறது.ஷ்ரத்தா என்று டாடி மம்மியால் அழைக்கப்படும் ,ஆனால் ஆச்சியின் பெயர் சூட்டப்பட்ட வள்ளி எனும் ஷ்ரத்தா.

நவீன பிரச்சனைகளில் ஒன்று , பெரியவர்கள் குழந்தைகள் பீத்துணி மாற்றவும்,அவர்களுக்கும் வீட்டிற்கும் காவலாகவும் இருக்க வைக்கப்பட்டு போவது.  வயதான பின்பு மகனை நம்பி வாழும்,அதுவும் கணவனை இழந்த தாய் அல்லது மனைவியை இழந்த தந்தையின் அடையாளச்சிக்கல், வழி சொல்லி விட முடியாத பாதை. ஆனால் அடிப்படையான மனித உணர்வு , மரத்துப்போன சுயநலமிக்க செயல்களை தனது மகன், மகள் செய்யும்போது, அதில் பாதிக்கப்படும் அப்பா, எதுவும் செய்ய முடியாத நிலையில் எதிர்வினை ஆற்ற முடியாத உயிரின் நிலையில் மட்டுமே வாழமுடியும்.
கதைக்கு வருவோம்.

இங்கு பேத்தி பிறந்ததிலிருந்து கூடவே இருந்து பார்த்துக்கொள்ளும் அப்பா. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும் நிலை.
பாட்டு பாடி பாட்டு பாடி வள்ளியை தூங்க வைக்கும் தாத்தா , பாட்டின் ஒரு சில வரிகளை மாற்றிப்போட்டு , சொந்தமான பாடலில் ராகம் போட்டு பாடி தூங்க வைக்கிறார்.

விசுவாசம் என்னும் வார்த்தையை யார் உபயோகப்படுத்துகிறார், யாரிடம் உபயோகப்படுத்துகிறார் என்பதை பொறுத்து அதன் மதிப்பு மாறுபடுகிறது.
பொதுவாக இதற்கு முந்தைய தலைமுறை வரை , தான் வேலை செய்யும் இடத்தின் ஒவ்வொரு நிகழ்வுகளும் , பொருட்களும் , மறந்து போன சின்ன சின்ன செயலும் அதன் விளைவுகளும் , எல்லாவற்றிலும் முக்கியமாக ஒரு மரியாதையான வாழ்க்கை ஏற்பட உதவிய முதலாளி என்பவரின் மீது நினைவுகள் எப்போதும் எண்ணங்களுக்குள் சுழன்றபடி இருக்கிறது அது விசுவாசம் என்ற பெயருடன் சொல்லப்படுகிறது.

வாழ்க்கையின் சிரமமான பகுதியில், வறுமையில் இருந்து மீண்டு மூன்று வேளை சாப்பிடவும் , குடும்பம் என ஒன்றை ஏற்படுத்தவும் உதவியாக இருக்கும், நியாயமான முதலாளி என்பவரை நன்றியுடன் நினைக்கும் நியாயமான மனசு வாய்த்தவரை சந்திப்பதே மிகவும் குளிர்ச்சியான , நிகழ்வு.

அப்படிப்பட்டவர் நாவன்னா லேனா .
தன முதலாளியை , அவர் உடல் நிலை சரியில்லாததை கேள்விப்பட்டு , ஊருக்கு போய் பார்க்க நினைக்கிறார். இவர் போய் பார்ப்பதை அவரால்  அறியக்கூட முடியாத நிலை அவருக்கு. ஆனாலும் அவர் இறப்பிற்கு முன் போய் பார்க்க வேண்டும் என்பது நாவன்னா வின் விருப்பம். இந்த இரண்டு நிலைகளை மட்டும் பார்ப்போம். இவைதான் இந்ந்த சிறுகதையின் முரண். இதுதான் ரொம்ப எளிமையான , இதிலென்ன என்று கடந்து போய் விடும் மனநிலையை  நிறுத்தி வைத்து , இலக்கிய தரத்தை ஏற்படுத்துகிறது.இந்த முரண் , 

நிலை ஒன்று 
அதாவது தன் மகனிடம் , மனைவி இறந்த பிறகு , சார்ந்து வாழும் நிலை, அதுவும் தன குழந்தையை பராமரிக்க அவர் தேவை என்ற நிலையில் வாழும் மனிதர். அவருக்கு வேறு வழியில்லை. மகனோடுதான் இருக்க முடியும். ஆதரவற்றவர். ஆனால் வள்ளியை பார்த்துக்கொள்வதின் மூலம் இன்றியமையாத ஒருவராக தன்னை மாற்றிக் கொள்கிறார்.அதன் வழியே தன்னுடைய சுய மரியாதையை, இருப்பை காப்பாற்றிக்கொள்கிறார்.

நிலை இரண்டு
இவ்வளவு நாள் தனக்கு சோறு போட்ட முதலாளி , சாக கிடக்கிறார் என்ற செய்தி , ஒருமுறை அவரைப் போய் பார்க்க நினைக்க வைக்கிறது. உந்தி தள்ளுகிறது. இரண்டு நாள் கழித்து போகலாமே என்ற மகனின் வார்த்தை அவர்களுடைய வசதியை பொறுத்து என்பதை தாண்டி, உடனே ஊருக்கு போக வேண்டும் , முதலாளியை பார்க்க வேண்டும் என நினைக்கிறது. இது தன்னுடைய சார்பு நிலையையும் மீறி , தான் ஊருக்கு போவதால் ஏற்படும் தன நிலை மீதான அபாயத்தின், நிலையில்லா தன்மையையும் மீறி ,
போய் பார்க்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்.அது அறம் சார்ந்த முற்றிலும் சுயமான முடிவு.

இந்த இரண்டு நிலைகளுமே இந்த சிறுகதையின் அழகு.

இந்த முரண்பாடு., அறத்தின் மீது கட்டமைக்கப்பட்டு உள்ளதாலேயே இந்த சிறுகதை முக்கியத்துவம் பெறுகிறது.

சாதாரணமான சூழல்தான், இது தரும் பாதை நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையை தூண்டாவிடில் , நாமும் நாவன்னாவின் மகன்களே.

மற்றபடி,

ஐநூறு ரூபா போனை கையோடு கொண்டு போகச் சொன்னான் நானா.

“அவசர அவசரமா இப்படி விழுந்தடிச்சு வரணுமா என்ன? இன்னும் ரெண்டுநாள் இருந்திட்டு திங்ககிழமை வந்திருக்கலாமே”

எந்த பொம்மையும் வள்ளி ஒரு வாரத்திற்கு மேல் திரும்பிக்கூட பார்த்ததில்லை.தான் இத்தனை மாதம் தாக்கு பிடித்ததே அதிசயம் என எண்ணிக்கொண்டார். 

மேனாட்டு கக்கூசில் உட்கார்ந்து கொண்டு , கண்களில் நீர் கோர்க்க , பேச்சு வராமல் , இவருக்கு முன் இறந்த மனைவியை நினைத்துப் பார்க்கும் மனிதன். 

மேல் சொன்ன வரிகளும், கக்கூஸ் காட்சியும் யாரையும் உலுக்கிப் போடும்.

உணர்வுள்ள மனிதர்கள் ஆக ஆக்கும் , இந்த “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும் “ 

முரண்களால் ஆன வாழ்வில் , எந்த பாதையை எப்படி தேர்வு செய்கிறோம் என்பதை பொறுத்து மனிதம் வாழ்கிறது. மனிதம் என்பது அவரவர் மனசு என்பதும் , மனசுபோல செயல், செயல் போல வாழ்க்கை என்பதும்,

சுனீல் கிருஷ்ணன் சொல்கிறார்.

அம்புப் படுக்கை

புத்தக தலைப்பின் சிறுகதை. மரணக் குறிகளில் தேர்ந்த தாத்தா ,நாடி பார்த்து வைத்தியம் சொல்லும் தலைமுறையின், ஆயுர்வேதம் படித்த சுனீல் கிருஷ்ணன் இல்லை இல்லை சுதர்சன், வாழ்வின் மீது ஏற்படும் பெரும் விழைவும்,வாஞ்சையும் ஒரு பக்கம் , வாழ்வின் மீதான பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வை கை விடச்செய்ய வைக்கும் வெளிப்புற நிகழ்வுகள், மறு பக்கம், எனும் நிலையில் வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி , விடை தேட முனைபவராக ஆனா ரூனா செட்டியார் இருக்கிறார்.

பர்மாவில் சேர்த்த பொருளை பத்திரமாக , கொண்டு வந்து சேர்த்தவர்.தன்  வயதை விட மிக குறைவான பர்மீய ஆச்சியையும் இந்தியா கொண்டு வந்து சேர்த்தி , பாத்திரக்கடை வைத்து செழிப்புடன் வாழ்ந்தவர்.

சுதர்சனுடைய  தாத்தாவிடம் பல வகைகளில் மரண அபாயத்தில் இருந்து  தான் தப்பித்த கதைகள் சொல்பவர்.

நம்மள குறி வச்சிகிட்டே இருக்கு.. எப்படியோ ஆறுமுகசாமி அருளால இம்புட்டு நாளா இன்னும் தல தப்பி இருக்கேன் என்பதும், அந்தளவுக்கு எல்லாம் இல்ல,குத்துமதிப்பா அம்பு மாரி தான்...முடிவு பண்ணியாச்சுன்னா அவ்ளவ்தான். மத்தபடி ஒவ்வொரு நாளும் எல்லோருக்கும் இதே கதைதான்..என்று தாத்தா பதில் வைத்தார்.ஆனால் இது அன்றாட வாழ்வின் எல்லோருக்குமான கதை இது.

இதோ தலை போயிருக்கும் , புத்திசாலித்தனத்தால தப்பிச்சேன் என்பதும்,கொஞ்சம் லேட் ஆகியிருந்தா என் பொணத்தை தான் பார்த்திருப்பே என்று பெருமை பேசுவதும், தொண்டைக் குழியிலேயே நிற்கிறது. உனக்கு நேரம் வரல தம்பி னு சொல்லலாம்.ஆனா அப்படியும் முழுசா சொல்லிட்டு உட்கார்ந்துட முடியாது. வலியை குறைத்து , வலியை தவிர்த்து என்பதே சரின்னு நினைக்கிறேன். ஆனாலும் மரணம் என்பது தவிர்க்க முடியாதது.தவிர்க்க போராடுவது இயல்பு.இயல்பிலேயே அதிக போராட்டம் மரணத்துக்கு எதிராக நிகழ்த்திய ஆனா ரூனா செட்டியார் ,

அவ்வளவு  சீக்கிரம் மூச்சை நிறுத்தவில்லை. மகன் போனில் நான்கு நாளில் காரியம் எல்லாம் முடிந்து திரும்பி விடுவேன் என யாருக்கு வேற்று உறுதி தருகிறான்.மற்ற உறவு எல்லாம் காத்திருக்கிறது, ஆனா ரூனாவின் காரியத்திற்கு. மனதுக்குள் சொல்லிப் பார்த்துக்க்கொள்கிறான்,

“வாதம், பித்தம், கபம் - ஆள்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல்”  என்று ஆயுத பூஜைக்கு ஆயுர்வேத கல்லூரியில் சேர்ந்து ,தீபாவளிக்கு லீவில் வந்திருக்கும் சுதர்சன்.  ஆனா ரூனாவின் நாடி அலையை போல எழுகிறது நீண்ட நேரத்திற்கு பிறகு,சீக்கிரம் இறந்து விடுவார் என்பதை தெரிந்தாலும் சுதர்சன் ஆனா ரூனா விடமும் ,சொந்தங்களிடமும் போய் சொல்லுகிறார்.
ஒன்று ஆனா ரூனா வின் எதிர்ப்பு சக்தியை,பாராட்டும் வகையில் பதிலை  தந்ததால், எந்த பாதிப்பும் இல்லை என்ற நினைப்பில் , பூரிப்பில் மூச்சை நிறுத்தி விடுகிறார். இங்கு சுதர்சன் தந்திரவாதி .

இரண்டு
நாடி பார்த்து மரணக்குறி சொல்லும் பழக்கத்தை எதிர்க்கும் மனது அவனுடையது.எல்லோரும் சூழ்ந்து நின்று உயிரின் பிரிவை எதிர் நோக்கும் போது, அந்த வீரியமான உயிர் இன்னும் வீம்போடு இழுத்துப் பிடித்துக்கொண்டு இருக்கிறது. தன்னுடைய பொய்யால் , அவர்களின் மரணக்குறி நம்பிக்கையையும் உடைக்கிறார். இங்கும் சுதர்சன் தந்திரவாதி.
இப்படி சொன்னால் அது ஆனா ரூனாவின் சிந்தனைப்படி இருக்கும். இப்படி சொன்னால் அது ஆனா ரூனாவின் சிந்தனைப்படி இருக்கும்.\ வாழ்நாள் முழுதும் , தான் ஏமாற்றி வந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும், அந்த சாவை , ஏமாற்றி அவரிடம் தந்துவிட்டான் சுதர்சன். ஆனால் சுதர்சன் மனசுப்படி, அவனுடைய தாத்தா சொல்வதுதான் சரி. அம்பு மாரி வரும்போது நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இங்கு சுதர்சனும் ஒரு அம்புதான். இறுதி அம்பு. எப்போதும் தத்துவம் ஒன்று இலக்கியத்துக்குள் பொதிந்து வரும்.
அம்புப்படுக்கை ஆரம்பம் முதல் சாவு தத்துவம் சொல்கிறது. 

குருதிச் சோறு

பழைய,மருவி வந்த செவி வழி அன்னபூரணிக் கதை. அதற்கு ஆதாரமாக  இருக்கும் பதினோரு கருமையான வழவழப்பான கற்கள். குருதிச் சோறு படைக்கப்படும் காளியம்மன் திருவிழா. மேற்சொன்ன கதையை காளியம்மன் திருவிழாவின் கடைசி நாள் பிராமண பாட்டி சொல்லும் வழக்கம். அரசர் காலத்தில் நடந்த அறம் மறந்த ராஜாவின், வறுமைக்காலத்தில் பசியை போக்கிய அன்னபூரணி, தனது பத்து குழந்தைகளையும் தந்து மக்கள் அனைவரின் பசி போக்கிய தெய்வம் அவள்.
அப்புறம்  புதுக்கோட்டை மகராஜா காலத்தில் , வறுமை வறுமை அப்படி ஒரு வறுமை, இறப்பை மீறிய பசி .அரிசி திருடி பசி போக்கியவளை குடிசையோடு,குழந்தைகளோடு கொளுத்திய கதை. பஞ்சம்.புதுக்கோட்டை.நல்லவளின் சாபம்.

இது ஒரு பக்கம் .,அப்புறம் அவளுக்கு குருதிச் சோறு படைத்து , அவளுடைய பசியை போக்கும் நடை முறை. யாருமே எக்காலத்திலும் மறந்து போக கூடாத ,வழமையாக தலைமுறைகளுக்கு சொல்லி வளர்க்கப்படும் திருவிழா நேர்த்திக்கடன். அன்னபூரணிக் கதையின் காளியம்மன் பற்றியும் ,பிள்ளைக்கறி பற்றியும் உள்ள தொடர்பு , தத்துவார்த்தமானது. அறம் போதனை செய்கிறது. திருவள்ளுவரும் அழகாக சொல்லியிருக்கிறார்.
ஏனென்றால் எல்லோருக்கும் பொதுவாக கொடுமையான பஞ்ச கால கட்டம், குடிகளை அழித்து ஒழித்திருக்கிறது. சுனீல் கிருஷ்ணன் இதை ஒரு மர்மக்கதை போல எழுதினாலும் , குருதிச் சோறு நல்ல குறும்படத்திற்கான அத்தனை அம்சங்களும் உடைய  அறம் சார்ந்த நம்பிக்கையை தரும் கதை. 


காளிங்க நர்த்தனம்.

வைணவ கதைகளில் ஒன்று காளிங்க நர்த்தனம். காளிங்கன் என்பது ஐந்து தலை நாகம் , அதை வெற்றி கொண்டு கிருஷ்ணன் அதன் தலை மேல் ஆடிய நடனம் காளிங்க நர்த்தனம். ரொம்ப எளிமையான இதன் தத்துவம் முன்னோர்களின் அனுபவ குறிப்பு. கண்-பார்வை , காது-கேட்டல் , மூக்கு- நுகர்தல் , வாய்- பேசுதல் ,கைகளும்கால்களும் – தொடுதல் என விளக்க வேண்டியதில்லை என்றாலும்... ஒருவர் ஐந்து புலன்களும் அடக்கி ஆள வேண்டும்.

காந்தியின் குரங்குகள் நினைவுக்கு வராமல் இருக்காது. அவரும் ராம் தான். காந்தி ராம்.  மனம் என்பது பாம்பு.சும்மா நெளிந்து நெளிந்து அலை பாய்ந்து கொண்டே இருக்கும் , இந்த ஃபேஸ்புக் காலத்தில் மனசும் பாம்பும் ஒண்ணுனு சொன்னா சுலபமா புரிஞ்சுடும்.

இந்த ஐந்து வகை புலன்களும் தொடர்பு  கொண்ட மனப்பாம்பு , தலைகளை தட்டி வைத்து அடக்கி வைக்க தெரிந்திருக்க வேண்டும்.இல்லன்னா கிருஷ்ணர் மாதிரி யாரவது வந்து கட்டுப்பாட்டிற்கு இல்லாத புலன்களை தட்டி வைப்பார்கள்.

அதனால்தான் அலை பாயுதே கண்ணா என , அவரை வந்து நர்த்தனம் ஆடி அடக்கி வைக்க கூப்பிடுகிறார்கள். இசையில் காலிங்க நர்த்தன தில்லானா என்று ஒன்றும் வைத்திருக்கிறார்கள்.யமுனா நதியில் அழிச்சாட்டியம் பண்ணிய , காளிங்கனை அடக்கிய கண்ணனே வா என்று அதில் வரும்...கேட்க நல்லா இருக்கும். ஒரு கோபமான , கேட்கும்போதே ஆட வேண்டும்போல இருக்கும். 

சரி போதும் புராணங்கள் ,
அப்புறம் பதஞ்சலி முனிவர் பற்றியும் சொல்லணும். அவர் பாணினி மொழியில், யோகா , மருத்துவம் , இலக்கணம் வகுத்து கொடுத்திருக்கிறார் . இரண்டு நாக பாம்புகளுக்கு மேல் உட்கார்ந்திருக்கும் சிலைகள் கோவிலில் இருக்கும். பனிரெண்டு சைவ சித்தர்களில் ஒருவர். அவரைப்போன்ற சித்தர் முறுக்குசாமி ,அரியக்குடி ஊத்துக்கோட்டை கோவிலில் இருக்கிறார்.

கோவிலுக்கு சென்றால் அவர் பேசுவதை கேட்காமல் ,ஞானச்சிதறலை கேட்காமல், திரும்பாத மாணிக்கம்.,தானும் ஒரு நாள் விஷ காய்ச்சலில் விழுகிறான். ஏனென்றால் அது பரம்பரை சாபம். இவ்வளவுதான் கதை.

ஆனால், நாக தோஷம் என்னும் பேச்சு ,தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் தண்டனையாகவே இருக்கிறது. மாணிக்கம் என்னும் பெயரே , பாம்பின் வாயிலிருந்து அதன் விஷம் காத்து அதனால் உருவாகும் கல் என்று தானே சொல்கிறோம். அப்படித்தான் இந்த கதை நாயகன் மாணிக்கம் கூட குற்றம் குறை இல்லாதவன். ஆனால் அவனையும் சாபம் விடவில்லை. 

இது உண்மையா, மாணிக்கத்தின் பூட்டி செய்த தவறுக்கு ,முப்பாட்டன் செய்த தவறுக்கெல்லாமா இப்ப தண்டனை வரும்...ஆம்மாம்...என்கிறார் சுனீல் கிருஷ்ணன். அறிவியலாக புரிந்து கொள்ள முற்சி செய்யலாம், தன மன பாம்பை அடக்கி ஆள தவறிய, ஏதோ ஒரு புலன்களின் தூண்டுதலால் மீளாத்தவறு செய்த முன்னோர் , ஜீன் இப்போதும் நமக்குள் ஒளிந்திருக்கிறது.
அது வெளியே வரும். கண்ணன் போல ஏதோ ஒன்றின் மூலம் தண்டிக்கப்படும்...ஆமா...மாணிக்கம் மாதிரி விஷம் உபயோகப் படுத்தாத , உயர்ந்த கல்லுக்கு ஏன்?

அதுக்கு விளக்கம் தெரியல..எனக்கு சாபம்னு சொல்லிட்டு போறத தவிர..அப்படித்தான் நடக்கிறது என ஜோதிட சாஸ்திரம் கூட சொல்கிறது.இதில் உண்மையில்லை என்றெல்லாம் சொல்ல முடியவில்லை.முழுக்க கட்டுக்கதை என்று ஒதுக்க முடியவில்லை.
ஏதோ இருக்கு ...,எனக்கு தெரியல. 



வாசுதேவன்

தொகுப்பின் முதல் கதை.

வெறும் எலும்புகளுக்கு மேல் யாரோ தோலை உருக்கி ஊற்றியது போல வாசுதேவன்,மண்டையில் முடி ஒட்ட வெட்டி, வலது பக்க மண்டையோட்டின் ஒரு பகுதி இல்லாமல்,பள்ளத்தாக்கு போல இருக்கும் ஏறக்குறைய சாவின் விளிம்பில்.,உயிருள்ள பிணம்.ஆக்ஸிடென்ட் ல் தலையில் அடி நான்கு வருடங்களாக கட்டில் பிணம்.

அங்கு ஆயுர்வேத பேராசிரியர் கொடுத்த சிகிச்சை முறைகள் படி தினமும் வாசுதேவனுக்கு மருத்துவம் செய்ய சென்ற இரண்டு ஆயுர்வேத மாணவர்கள்.அது கிழி,பிழிச்சல்,வஸ்தி,மூக்கு குழாய் வழியே தங்க பஸ்பம் என பல வகை சிகிச்சை முறைகள்.

முதல் நாள் முதல் டீ காபிக்கு பதில் பூஸ்ட் வாங்கி குடிக்கும் மாணவர்கள்.
பேராசிரியர் பணத்திற்காக செய்ய சொல்கிறார் என்பதை அறிந்தும் வாசுவின் மேல் அருவருப்புடன் சிகிச்சையை ஆரம்பிப்பவர்கள்,பத்து பதினோராவது நாள் கடந்த பிறகு அப்படி ஒன்றும் அருவருப்பாக வாசு அவர்களுக்கு தெரியவில்லை.

ஒரு நாளைக்கு ஆயுரத்தைநூறு செலவாக்கும் அப்பா அம்மாவின் முகம் பார்த்து, உண்மையை சொல்ல நினைத்து, வாசுவுக்கு எந்த வைத்தியமும் சரியா வரும்னு தோணலை, என்பதை கொஞ்சம் கொஞ்சமாக அம்மாவிடம் சொல்ல, இந்த சுத்து சிகிச்சை, ஒரு மாதமாக செய்ததுடன் முடித்து கொள்வதாக அப்பா சொல்ல வெளியேறுகிறார்கள்,அதே நாள்,

கணவன் ஆர்மியில் இருந்து இறந்துவிட்ட , வாசுவின் சகோதரி குழந்தையுடன் வேலை மாற்றம் காரணாமாய் , வாசு வீட்டிற்கே வருகிறாள். 
மூன்றாம் நாள் வாசு இறந்து விட்ட செய்தி வருகிறது.  குழந்தை வைத்திருக்கும் பொம்மையின் கை கால்களை பிடுங்கி திருகி கழுத்தை திருகி விளையாடிக் கொண்டிருக்கிறது. என்று முடிக்கிறார்.  

சரியா, இப்ப வண்ணநிலவனுடைய எஸ்தர் சிறுகதையையும் வாசித்துவிடுங்கள். இரண்டு பேரும் சொல்வது , கருணைக்கொலை பற்றியது. அந்த சூழல் , கடுமையான , திரும்பி வரவே முடியாத மரணப் பாதையில் , இருக்கும் நெருங்கிய உறவு , உயிர் பிரிய நாம் கண்ணை மூடிக்கொள்வது. இங்கு மாணவர் சுனீல் செய்ததும் அதுவேதான், அவரின் அன்பும் மெல்லிய மனதும் அந்த அம்மா அப்பாவின் செலவை தாண்டி, பொய்யான நம்பிக்கையை இந்த சிகிச்சை தருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதற்கு மேல், வாசுவுடன் அந்த குறைந்த நாட்களில் ஏற்படும் உறவு, உயிர் படும் வதை, உயிர் இச்சை மட்டும் இருக்கும் வாசு, சுனீலின் கண்களில் எதையோ எதிர்பார்த்து பேச தேடும் , உணர்வை , சுனீல் புரிந்து கொள்கிறார்.
மனதோடு பேசவும் செய்கிறார். தன்னுடைய சிகிச்சை பற்றி நம்பிக்கை தருகிறார்.

ஆனால் சுனீலுக்கும் தெரிகிறது வாசுவுக்கும் புரிகிறது, வாசுவின் உடலில் எந்த முன்னேற்றமும் நடக்க போவது இல்லை என , வெறும் காசுக்காக ,சிகிச்சை அளிப்பதை வெறுக்கிறார் சுனீல். உண்மையை சொல்லிவிட்டு நகர்ந்து கொள்வது , ஒருவகையில் அந்த கடைசி நம்பிக்கையையும் ,கைவிடுவது போலத்தானே.வலியுடன் அதை கடக்கிறார்.

உண்மையிலேயே சுனீல் வாசுவின் மூச்சை நிறுத்திவிடுவதாக முதலில்  எழுதி இருப்பாரோ என, எனக்கொரு எண்ணமிருக்கிறது.பிறகு அவருடைய தொழிலுக்கு அது சரிப்பட்டு வராது என மாற்றி இருந்திருக்கலாம். பிறகு வாசுவின் சகோதரியின் குழந்தை மூலம், நடப்பதாகவே மறைமுகமாய் சொல்லி முடிக்கிறார்.

அழகான முரண் கருணைக்கொலையில் காலம் கடந்து எப்போதும் வாழ்கிறது.,வேறு வார்த்தைகள் தேடுகிறேன், அன்பின் அடிப்படையில் உயிரைப் பிரித்தல்னு வச்சுக்கலாம். முரண் , என்னன்னா , உயிர் பிரித்துவிடலாம் அல்லது மருத்தவத்தை நிறுத்திவிடலாம் எனும் முடிவை இந்த உலகத்திலேயே மிகவும் நேசிப்பவர்தான் எடுக்கிறார் , இப்போதைய நிலையை ,அந்த ஆன்மா படும் வதையை உணர்ந்தவர் மட்டுமே முடிவை எடுக்கிறார்.

உயிரின் மீது காட்டும் அன்பு எப்படி உயிரை பிரிக்கிறது என்பதுதான் , இதன் மையம். உயிர்த்தன்மை வாய்ந்தது அன்பு. அது பாதுகாக்கும், உணவு தரும், ஆறுதல் தரும், கோபப் படாது ,பொறாமை கொள்ளாது, தன்னை வருத்திக் கொள்ளும், மரியாதையை தரும், உணர்வுகளை சிந்தனை வழியே பேசிக்கொள்ளும்,

அது எப்படி ஒரு உயிரை பிரிக்கும்?
ஆம் அன்பு உயிரை பிரிக்கும் வேலையையும் செய்யும்.அந்த சூழ்நிலை மிகவும் துயரமானது, அன்பை பெறுபவர் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வார்கள். அன்பை தருபவருக்கு , காலங்கள் சென்றாலும் அது மனதை விட்டு நீங்காது.ஒருவித குற்ற உணர்ச்சியுடன் இருப்பார்கள்.

உயிர் பிரியும் அந்த ஆன்மா அவர்களை விட்டு பிரியவே பிரியாது. இது ஏதோ ஆன்மீக கருத்து இல்லை, எண்ணங்கள் மூலம் , அந்த முடிவு தந்த வலி, மீண்டும் மீண்டும் சுற்றி சுற்றி வரும். நினைவுகளில் அன்புக்குரியவர் வாழ்ந்து கொண்டே இருப்பார். ஆன்மா மகிழ்வுடன் இருக்கும். அப்படித்தான் இந்த உணர்வு வாழும்.

அறம் சார்ந்த இந்த நிலைப்பாடு மிகவும் தனிப்பட்டதே தவிர யாராலும் பொதுமைப்படுத்திவிட முடியாது.சட்டங்கள் சில நாடுகளில் இருந்தாலும், உயிர் விடுதலை அளிப்பவர் உயர்வான அதே சமயம், மிகவும் பாரமான நிலையில் இருக்கிறார். இங்கு அந்த பாரத்தையும்,உயர்வையும் குழந்தையின் மேல் சுமத்தி விட்டு சுனீல் தப்பி விட்டார். குழந்தைதான் அந்த தெய்வம் என்று முடித்துவைக்கிறார்.

No comments:

Post a Comment