Monday, November 15, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -8- medical ethics

ஆயுர்வேதத்தில் மருந்துகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவு நடத்தை விதிகளுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது .நவீன காலக்கட்டத்தில் நாம் மருத்துவர் நடத்தை விதிகள் (medical ethics and code of conduct)பற்றி அடிக்கடி கேள்வி படுகிறோம் .ஒரு மருத்துவர் எவ்வாறு இருக்க வேண்டும் ,இருக்க கூடாது என்று தொழில் சார்ந்த மற்றும் தனி மனித ஒழுக்கம் சார்ந்த விதி முறைகள் வகுக்க பட்டுள்ளன .ஆயுர்வேதத்தில் நடத்தை விதிகள் ஏதேனும் உள்ளதா ?
ஆச்சர்ய படும் வண்ணம் மிக அற்புதமாக ஒரு மருத்துவன் எவ்வாறு இருக்க வேண்டும் ,யார் நல்ல மருத்துவன் என்று பல இடங்களில் அற்புதமாக விளக்க பட்டுள்ளது .ஆங்காங்கு சிதறி கிடக்கும் இந்த அற்புத முத்துக்களை சிறிது சிரம பட்டு தொகுக்க முயற்சித்துள்ளேன் .
மருத்துவம் செய்வதால் உண்டாகும் விளைவு என்ன ?
மருத்துவனுக்கு சரியான முறையில் மருத்துவம் செய்வதால் நான்கு விஷயங்கள் கிட்டும் என்கிறது ஆயுர்வேதம் .
க்வச்சித் தர்மா-சிறிது தர்மம்
க்வச்சித் மைத்ரி -புதிய நட்புகள்
க்வச்சித் யஷஹா -பெரும் புகழ்
க்வசித் அர்த்த -தேவையான அளவு பணம் .
அடுத்து ஒரு அருமையான பகடி ..ஓரிடத்தில் மருத்துவனையும் யமனையும் ஒப்பீடு செய்கிறது .


யமனும் கொடூரமானவன் தான் மருத்துவனும் கொடூரமானவன் தான் .யமனாவது பரவா இல்லை உயிரை மட்டும் பிடுங்கி செல்கிறான் ,மருத்துவன் உயிரையும் எடுத்து காசையும் பிடுங்குகிறான் ,இவன் யமனை விட கொடியவன் என்கிறது .இதே போல் யமனுடைய சகோதரனாக மருத்துவனை வர்ணிப்பதும் உண்டு .(அந்த காலத்துலயே சூப்பர் ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்ரிகள் இருந்திருக்கும் போல )
இன்று மருத்துவர்கள் அனைவரும் வெள்ளுடை வேந்தர்களாக வளம் வருகின்றனர் .இதை முதன் முதலில் வழி மொழிந்தது சுஸ்ருத்தர் தான் ,அவர் மருத்துவனின் உடை எப்போதுமே வெள்ளை நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் .கத்தியை பிடித்தால் கை நடுங்குகின்றது என்றால் ,அவன் அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவன் என்று கூறுகிறார் .மாதம் ஒரு முறை முடி திருத்த வேண்டும் பதினைந்து நாளுக்கு ஒரு முறை முக சவரம் செய்ய வேண்டும் ,பதினைந்து நாளில் மூன்று முறையாவது நகம் வெட்ட வேண்டும் என்று ஏகப்பட்ட கெடுபிடி

ஒரு நோய் வெற்றிகரமாக முறியடிக்க பட நான்கு தூண்கள் அவசியம் என்று சரகர் கூறுகிறார் .முறையே மருத்துவர் ,மருந்து , பரிசாரகர்கள் (support staafs-nurse ) மற்றும் நோயாளி .இவர்கள் நான்கு பெரும் சரியாக இருந்தால் தான் ஒரு நோய் குணமாகும் என்று அழுத்தி சொல்லுகிறார் .ஒவ்வொருவருக்கும் நான்கு குணங்கள் உண்டு .மருத்துவனை பற்றி கூறும் போது , சுத்தம் ,செய் நேர்த்தி ,பாட அறிவு .அனுபவ அறிவு ஆகிய நான்கும் கை கூடியவனே சிறந்த மருத்துவன் என்று கூறப்படுகிறது .நோயாளிகளின் குணத்தை பற்றி கூறும் போது ஞாபக சக்தி , மருத்துவரின் சொல் பேச்சு கேட்பது ,நேர் மறை எண்ணம் ,மற்றும் மருத்துவருக்கு கொடுக்க பணம் (!) ஆகியவை முக்கியமாக கருதப்படுகிறது .

மருத்துவனை இரண்டு வகையாக பிரிக்கிறார் சரகர் ,பிராண அபிசார ,ரோக அபிசார .முதலாமவன் உயிரை எடுப்பவன் இரண்டாமவன் நோயை அகற்றுபவன் .அந்த காலத்திலே போலி மருத்துவர்கள் இருந்து இருக்கிறாகள் .அவர்களின் குணங்களை அற்புதமாக விளக்குகிறார் ,எல்லாம் தெரிந்தது போல் காட்டி கொள்வார்கள் ,அது வேண்டும் இது வேண்டும் என்று அலைகழிப்பார்கள் ,பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஏமாற்றுவார்கள் , ஆகின வரையும் காசை பிடுங்குவார்கள் .இதை எல்லாம் கடந்து அவரிடம் சென்ற நோயாளி பிழைத்தால் அது அவன் அதிர்ஷ்டம் ,அதை தாங்கள் நிகழ்த்திய மாயாஜாலம் போல் மிகை படுத்துவார்கள் ,அசம்பாவிதம் நடந்தால் எல்லாம் விதி என்று அதன் மேல் பழியை போட்டு நகர்ந்து செல்வார்கள் .முறையாக குருகுலத்தில் பயின்று குருவிடம் அனுமதி பெற்ற பின் தான் மருத்துவம் புரிய வர வேண்டும் ,அப்படி வராதவர்களை போலிகள் என்று வர்ணிக்கிராகள்.(அந்த காலத்து மருத்துவ பல்கலை கழகம் மற்றும் மருத்துவ கழகம்!!) .


அந்த காலத்துலயே 'மால்' வெட்டும் பழக்கமும் இருந்திருக்கு போல.நோயாளிகளிடமிருந்து ஏதாவது இலவசமாக வாங்குவதென்பது மின்னலின் சக்தியில் தீக்கு இரையாவது போல் ,விஷ பாம்பு கடிப்பது போல் என்று பயமுறுத்துகிறார்கள் .
ஆயுர்வேதத்தில் என்னை ஈர்த்த உச்ச கட்ட கருத்து ,வேறெந்த மருத்துவமும் சொல்லாத கருத்து (சித்த மருத்துவம் விதி விளக்கு ).ஒரு மருத்துவன் நோயாளியை எவ்வாறு நடத்த வேண்டும் என்கின்ற கேள்விக்கு சரகர் கூறி இருக்கும் விடை இன்று வரை என்னை மெய் சிலிர்க்க வைத்த விடை ,அப்படி ஒரு தீர்க்க தரிசனம் ,அப்படி ஒரு ஆழம் அந்த கருத்தில் .
தம் புத்ர வத் உபாச்சறேத் -நோயாளிகளை உன் சொந்த பிள்ளைகளை போல் கவனி .
இதற்க்கு மேல் அடுத்த கட்டம் -மம பூத தயா பிரதி -நீ உன்னை எவ்வாறு நடத்துவாயோ அவ்வாறு உன்னிடம் வரும் அனைத்து ஜீவன்களையும் நடத்து.

இதை விட சிறந்த கருத்து எதுவுமே இல்லை ,என்னை நெகிழ செய்த கருத்து .கண்களில் நீர் பணிக்கும் .எண்ணி பாருங்கள் ,ஒரு மருத்துவர் அதிக வீர்யமுள்ள மருந்துகளை ,ஒரே பெயருள்ள வெவ்வேறு கம்பெனி மருந்துகளை ,இல்லை தேவயற்ற பரிசோதனைகளை ,இல்லை சந்தைக்கே வராத அல்லது சந்தையில் தடை செய்ய பட்ட ஒரு மருந்தை தன் குழந்தைக்கோ இல்லை தனக்கோ கொடுக்க முயல்வாரா? நிச்சயம் கிடையாது .நோயாளி என்பவன் வேறு யாரோ என்பதால் தான் இந்த அசிரதை அஜாக்கிரதை எல்லாம் .எத்தனை பெரிய தத்துவத்தை எளிமையாக ஒரு வரியில் அடக்கி விட்டார்கள் !!
இப்படி ஒவ்வொரு மருத்துவரும் எண்ணி மருத்துவம் செய்தால் உலகம் எத்தனை அற்புதமாக இருக்கும் .!!
பட உதவி-கூகிள்
முந்தைய தொகுப்புகள்

3 comments:

  1. Nice Sharing..

    http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_16.html

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி இர்ஷாத் :)
    சுட்டியை காண்கிறேன்

    ReplyDelete
  3. வணக்கம்.செய்திகளும் கோர்வைகளும் அருமை.நன்றி

    ReplyDelete