Tuesday, February 5, 2013

அந்த நூறு பேர்.....


 (ஃபிப்ரவரி மூன்று அன்று கும்பகோணம் வி.எஸ். ராமனுஜம் அரங்கில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தர் நூற்றி ஐம்பதாம் பிறந்த நாள் நினைவு கருந்தரங்கில்  மாணவர்களுக்கு ஆற்றிய உரை) 


அசத்தொமா சத் கமைய
தமசோமா ஜோதிர் கமைய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமைய

                   இருள் விலகி எங்கும் ஒளி பெருகட்டும். 

சகோதர சகோதரிகளே, இப்படி தொடங்குவதே சுவாமி விவேகானந்தரின் நினைவுகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும். சுவாமி விவேகானந்தரின் நூற்றி ஐம்பதாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் பகுதியாக நடைபெறும் இந்த விழாவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். 

Tuesday, August 21, 2012

நூறாண்டுகாலத் தனிமை..

நண்பர்கள் இணைந்து நடத்தி வரும் ஆம்னிபஸ் தளத்தில் வெள்ளிகிழமை தோறும் நான் வண்டி ஒட்டுகிறேன்.

அங்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளிவந்த பதிவு ..




தனிமையே ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்டுள்ளது. மாற்றமில்லாத , சமரசமில்லாத தனிமை. அதிலிருந்து தப்பித்துகொள்ளவே மனிதன் காவியங்களையும், கவிதைகளையும் உருவாக்குகிறான்.- விஷ்ணுபுரம்

மார்கஸ் ஒரு பேட்டியில், தனிமை என்பது ஒட்டுமொத்த மானுடகுலத்தின் பிரச்சனை , அதை ஒவ்வொருவரும் வெவ்வேறு வழியில் வெளிப்படுத்துகிறார்கள் என்கிறார். இவரது "நூறாண்டு காலத் தனிமை". மனிதர்கள் மீது கவிந்திருக்கும் அந்த மாற்றமற்ற தனிமையை, அதன் மகத்துவத்தை, அதன் குரூரத்தை நம் முன் அப்பட்டமாக நிறுத்துகிறது.   ஒரு நகரம் கருவாகி , உருவாகி , வளர்ந்து, முதிர்ந்து இறுதியில் உதிரும் கதை. இதிலுள்ள அங்கதம் வாழ்வைப் பற்றிய மிகக் கூர்மையான, தீவிரமான அவதானிப்புகளை அடிப்படையாக கொண்டது. தொடர்ந்து வாழ்வின் அபத்தங்களை நுட்பமான கற்பனையுடன் சொல்லிச் செல்வது. விஷ்ணுபுரத்து சுமத்திரனின் அங்கதமும் திருவிக்ரமனின் தீவிரமும் இணைந்து ஒரு காவியத்தை உருவாக்கியிருந்தால் அது இப்படித்தான் இருந்திருக்கும்.


முழுவதுமாக வாசிக்க..

Sunday, July 22, 2012

காலமே உனக்கு வணக்கம்



(ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலுக்காக நடந்த காரைக்குடி அரங்கில் வாசிக்கப்பட்ட/வாசிக்க உத்தேசித்த எனது கட்டுரை. விஷ்ணுபுரம் தளத்திலும் வெளியாகி உள்ளது.) 

அனந்த கோடி அடையாளங்கள் கொண்ட காலமே 
நீ அன்னையாகி வருக.
காலமே உனக்கு வணக்கம்


வெண் மணல் நிறைந்த வறண்ட பாலைவனத்தில், பவுர்ணமி நிலவொளியில் பிரம்மாண்டமாக விரியும் அந்த சக்கரம். அந்த மண், நதி புரண்ட மண். காலமெனும் நதி சுழிந்தோடி தன் அடையாளங்களை தொலைத்த மண். தன்னுள் பல நூற்றாண்டு ரகசியங்களை, மானுட தேடல்களை, நிராசைகளை, ஏமாற்றங்களை. என உயிர்த்துடிப்புடன் விளங்கிய அனைத்தையும் விழுங்கிய   மலைப்பாம்பை போல, மானுட ஞானத்தை தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஆழமான,வெறுமையான, வெதுவெதுப்பான மண். கூரைகள் இல்லாத வெட்டை வெளியில், நிலவொளியில் எதை தேடுகிறேன்? பிங்கலனும்  சங்கர்ஷணனும் உணர்ந்த அந்த தனிமை, ப்ரேசனரும் காசியபனும் உணர்ந்த அந்த தனிமை, பவதத்தரும், சூரிய தத்தரும், ஆரிய தத்தரும் யுகம் யுகமாக கண்டுணர்ந்த அந்த தனிமை, பாவகனும், பத்மனும், யோக விரதரும் அறிந்து தவித்த அந்த மகத்தான தனிமை, அது என்னையும் குளிர செய்கிறது. . ஆம் இந்த பிரபஞ்சத்தில் நான் தனித்து நிற்கிறேன். ஏன் எனும் கேள்வி மட்டுமே என்னுள் எஞ்சி இருக்கிறது.. 

Saturday, May 19, 2012

மருத்துவ அறம் - விவாதம்




இதை ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை, கடந்த சில மாதங்களாகவே இதை பற்றி எழுத வேண்டும் எனும் எண்ணம் தோன்றி எழுத தொடங்கும் போதெல்லாம், அந்தரத்தில் விட்டுவிட்டு மற்ற வேலைகளை காண சென்றுவிடுவேன். ஆனால் செருப்பில் ஏறிய முள்போல மனசாட்சியை குத்திக்கொண்டே இருந்தது. உச்சகட்டமாக அண்மையில் என்னை உலுக்கிய ஓர் இழப்பு, உண்மையில் நிலைகுலைய செய்தது. இதை எழுதுவதால் பலத்த எதிர்ப்புகளையும், விரும்பத்தகாத விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம் என்பதை அறிந்தும் எனக்குள் ஒலிக்கும் அந்தராத்மாவின் குரலுக்கு நான் செவி சாய்த்திட வேண்டிய அவசியத்தில் இருப்பதால் இதை எழுதுகிறேன். 

ஆயுர்வேதத்தில் சமஸ்க்ருத பகடி ஒன்று உண்டு " வந்தனம் வைத்ய ராஜனே, யமராஜனின் சகோதரனே, யமனும் சரி வைத்தியனும் சரி ஈவிரக்கமற்றவர்கள் தாம், ஆனால் யமன் உயிரை மட்டுமே விழுங்குவான் ,வைத்தியனோ செல்வத்தையும் சேர்த்து விழுங்குவான் " .பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இத்தகைய போக்குகள் இந்திய மருத்துவத்தில் நிலவி வந்ததில் ஒன்றும் வியப்பில்லை.சரக சம்ஹிதையில் மருத்துவர்களை இரண்டாக வகுக்கிறார் பிரானாபிசார மற்றும் ரோகாபிசார .ரோகாபிசார வைத்தியன் நம் ஆயுளை நீட்டிக்க கூடியவன்,பிணிகள தீர்ப்பவன் ,நேர்மையானவன் ,அவனால் அந்த நோயை குணப்படுத்தமுடியும் என்றால் மட்டுமே அதை கையில் எடுப்பவன்.பிரானாபிசார வைத்தியன் இதற்கு நேர்மாறான குனங்களைக்கொண்டவன் நம் உயிரை பறிப்பவன் .

Sunday, February 12, 2012

அவ்வா


எப்பொழுதோ ஓர் முறை பழைய நினைவுகள் மிக மோசமானவை, நம்மை அவை தின்றுவிடும் என்று ஒருமுறை நேர்பேச்சின் பொழுது ஜெயமோகன் சொன்னார்.அப்பொழுது நான் அவரிடம் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன், பழைய நினைவுகளை அசைப்போடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவே  இருக்கின்றன என்றேன்.நோஸ்டால்ஜியா ரொம்ப கொடூரமானது , ஒரு நினைவு அத ஒட்டி பல நினைவுகளை எழுப்பும், ஒரு நினைவு பின்னலுக்கு உள்ள நாம சிக்கிக்குவோம் , இப்படி வெளிவரமுடியாத நினைவு சுழல்ல திணறுவோம், தன்னிரக்கம் வரும், ஏக்கம் வரும், நம்ம நேரத்த அது முழுசா தின்றுவிடும் என்றார் ஜெ.

ஆம் அது உண்மைதான் , நினைவுகள் காலில் சிக்கிய காட்டுக்கொடிகள், ஒன்றை மற்றொன்றிலிருந்து பிரிக்க முடியாமல் பின்னி பிணைந்து அலைகழிக்கிறது . இடுகாட்டில் கொண்டு போய் இறக்கி வைத்து முட்டி பானையில் தண்ணீர் ஊற்றி மாமா மும்முறை சுற்றி தலைக்கு பின்னால் தூர எரிந்து ,அது பட்டென்று உடைந்தது.நெஞ்சில் விராட்டியை வைத்து தர்பையால் கற்பூரத்தை பற்றவைத்தார்,அவ்வா எரிய தொடங்கினால்.

Thursday, October 13, 2011

இடைவேளையும் காந்தியும்


கொஞ்ச காலம் ஆகிவிட்டது இங்கு எழுதி .இங்கு எழுதுவதில்லையே தவிர இணையத்தில் பிழைப்பு ஓடிக்கொண்டுதான இருக்கிறது .நண்பர்களுடன் இனைந்து அண்ணா ஹசாறேவுக்காக ஒரு வலைப்பூ தொடங்கி இப்பொழுது அது காந்தி ,காந்தியர் ,காந்தியம் குறித்து தமிழில் தொகுக்கும் தளமாக வளர்ந்துவிட்டது .அதில் அதிக நேரம் செலவிட வேண்டிய சூழல் .அண்மையில் அங்கு சில கட்டுரைகள் தொடர்ந்து மொழிமாற்றம் செய்து வருகிறேன் .

எனது பிரச்சனை இயங்குவது தான், சட்டென்று வாழ்வின் பொருள் பற்றிய கேள்விகள் எழுந்து பொறுமையின்மையை ஏற்படுத்தும், பின்னர் ஒருவித வெறுமையும் சோர்வும் படரும் .  இலக்கியங்களும் , தத்துவங்களும் கொடுக்காத ஒன்றை இந்த பொக்கை வாய் கிழவர் எனக்கு கொடுக்கிறார் , ஆம் காந்தியை வாசிக்க வாசிக்க அபார செயலூக்கம் கிடைக்கிறது ,இயங்கிக்கொண்டே இருக்க முடிகிறது , அடுத்து என்னவென்று ஆர்வம் தலைகேருகிறது . கடலில் தத்தளித்து அமிழ்ந்து விடுவேனோ என்று பயந்து இருந்தேன் ,இப்பொழுது எனக்கு மிதந்து கரை சேர காந்தி எனும் கட்டுமரம் கிடைத்துவிட்டது .

காந்தியின் ஒவ்வொரு நுட்பங்களை ஆழமாக வாசித்து புரிந்துகொள்ள முயல்கிறேன் .சில விஷயங்களை செயல் தளத்தில் பரிசோதனை முயற்சிகளாக முயன்று பார்க்கிறேன் . அபார மன நிறைவு வருகிறது .வரலாறு ஒரு மிகப்பெரிய வல்லமை ,அது மின்சாரம் போல நம் கண்களுக்கு புலப்படுவதில்லை ஆனால் அது இயங்குவதை நாம் உணர முடிகிறது .அந்த மாபெரும் வரலாறு நம் வழியாக தன்னை நிகழ்த்திகொள்கிறது எனும் ப்ரங்ஞை பலருக்கும் இருப்பதில்லை , ஆனால் காந்தி அளவிற்கு யாருக்கும் அந்த ப்ரங்ஞை இருந்ததாக எனக்கு தெரியவில்லை .காந்தியை முழுவதும் புரிந்துகொண்டால் தான் அவரை எப்படி தாண்டி அடுத்தகட்ட நகர்வுக்கு நாம் செல்ல முடியும் ,இப்பொழுது எனது ஆசை அது தான் ,காந்தியோடு நான் நின்றுவிட விரும்பவில்லை,அவரது அடுத்தகட்டம் என்னவாக இருக்கும் என்பதிலே எனக்கு ஆவல் .

காந்தி தளத்தில் எழுதியுள்ள சில கட்டுரைகளின் சுட்டிகளை இங்கு அளிக்கிறேன் நேரம் இருந்தால் படித்துபாருங்கள் .

மோகன்தாஸ் to மகாத்மா



Saturday, September 3, 2011

குற்றமும் தண்டனையும்



அண்மையில் முன்னால் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் .செப்டம்பர் 9 தூக்கு என்று உறுதியானது ,பின்னர் பெருத்த பரபரப்புக்கு பின் உயர்நீதிமன்றம் இடைகால தடை விதித்து இருக்கிறது .முதல்வரும் சட்டசபையில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி சட்டசபையில் தீர்மானத்தை முன்மொழிந்து அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது .இடையில் செங்கொடி எனும் பெண்ணின் மரணமும் அதை ஒட்டி எழுந்த சர்ச்சைகளும் இன்னும் ஓயவில்லை .

இப்பொழுது நாம் பேசவேண்டியதை இரண்டு பகுதியாக புரிந்துகொள்ளவேண்டும் .இந்த வழக்கை பொறுத்தவரை உள்ள நிலைப்பாடு என்ன ? பொதுவாக மரண தண்டனை பற்றிய நிலைப்பாடு என்ன ?

என்னை பொறுத்தவரை - எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் தமிழகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை .கடைசியாக ஆட்டோ ஷங்கருக்கு நிறைவேற்றப்பட்டது என்று சொல்கிறார்கள் ,ஆனால் அது என் நினைவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை .ஆனால் இப்பொழுது தூக்கு என்று செய்தி வந்தவுடன் ,அதை செரித்துக்கொள்ள மிக கடினமாக இருந்தது .ஒரு அரசாங்கம் என்பது ஒரு மிகபெரிய அதிகார அமைப்பு ,அதன் பல்வேறு சக்கரங்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றி அதை இயக்குகிறது ,ஒரு மிக பிரம்மாண்டமான முரணியக்கம் .அத்தனை பெரிய மகத்தான மக்களமைப்பு ஒரு தனிமனிதனை உயிர் வாழ தகுதியில்லை என்று முத்திரை குத்தி நசுக்குவதேன்பது மனதை உண்மையில் மிகவும் ரணபடுத்தியது என்பதே உண்மை .எங்கே இது நடந்துவிடுமோ என்று பயம் ஏற்பட்டது .

இனி வருங்காலங்களில் செங்கொடி போன்ற பொருளற்ற உயிர்பலிகளுக்கு உலகத்தில் இடமளிக்க கூடாது .மிகுந்த வேதனை அளிக்கிறது .தற்கொலைகள் த்யாகம் ஆகாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .அவளது உணர்வுகளை மதிக்கும் அதே நேரத்தில் இவ்வகையான செயல்கள் நல்லது அல்ல  .போராட்டங்கள் ,உண்ணாவிரதம் என்பது வேறு,இப்படி தனிச்சையாக உயிரை துறப்பது என்பது வேறு  நிச்சயம் நல்ல விஷயம் அல்ல,இதற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் காரணமாகவே மேலும் பலர் இந்த வழியை தேர்ந்தெடுக்க கூடும் .


இந்த வழக்கை பொறுத்த வரையில் பேரறிவாளன் விடுதலை செய்ய தகுதியானவர் என்றே இது வரையிலான வாசிப்பில் புரிகிறது .மற்ற இருவரின் பங்களிப்புகள் பற்றி அதிகம் பொது வெளியில் பேச்சு  எழவில்லை .அவர்களுக்கு  நேரடியாக ராஜீவ் கொலையில் சம்பந்தம் இல்லை என்றே எண்ண தோன்றுகிறது .இருந்தாலும் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது .ஆகினும் கூட இருபது வருடங்கள் மரணம் என்பது எப்பொழுது என்று ஒரு வித கலவர மனதோடு வாழ்ந்து வருவதென்பது,நொடி பொழுதில் நிகழும் மரணத்தை காட்டிலும் கொடியது என்றே எண்ணுகிறேன் .அதனால் இந்த வழக்கை பொறுத்தவரையில் எனது நிலைப்பாடு இது தான் - பேரறிவாளன விடுதலை செய்யப்படவேண்டும்,மற்றவர்கள் மரண தண்டனை ரத்து செய்யப்படட்டும்  .ஆனால் இந்த சிக்கலை தமிழ் இன உணர்வாக கொண்டு செல்வதில் ,தமிழர்களை விளிம்பு நிலை மனிதர்களாக சித்தரிப்பது தவறான போக்காக எனக்கு படுகிறது .இந்தியா போன்ற விஸ்தாரமான தேசத்தில் -ஒவ்வொரு இனத்திற்கும் ,ஒவ்வொரு மக்கள் குழுவிற்கும், டெல்லியை தவிர பிற அனைத்து பிராந்தியங்களும் ஏதோ ஒரு வகையில் வஞ்சிக்க படுவதாக உணர்த்தபடுகின்றனர் .ஒரு மைய்ய அரசாங்க அமைப்பானது அதன் அத்தனை விளிம்புகளையும் தொட முயற்சி செய்ய வேண்டும்,நிச்சயம் இந்திய அரசு அப்படி செய்து வர முயன்றே வருகிறது .ஆனால் பல சமரசங்களும் ,விடுபடல்களும் இருந்தே வருகிறது .ஆனால் இதற்கு மாற்று பிரிவினை அல்ல என்பதை நாம் உணர்ந்தே ஆகவேண்டும் .திரு.வைகோ அவர்களின் சமூக பணியின் மீது ஆழமான மதிப்பு இருந்தாலும் ,அவரது அதீத உணர்ச்சி நிலைபாடுகள் அச்சம் தருவதாக உள்ளது .நாம் போராடவேண்டியது பிரிவினைக்காக அல்ல ,அதிகார பரவலாக்கதிர்காக ,அதுவே நல்ல மக்கள் ஆட்சி முறையை நமக்கு தரவல்லது .ராஜீவ் ஒன்றும் நல்லவர் அல்ல அவர் கொல்லபடவேண்டியவர் எனும் வாதம் ஏற்க தக்கது அல்ல.அவர் பல தவறுகளை செய்து இருக்கிறார் ,அதை விமர்சிக்கலாம் ,ஆனால் அதற்காக அவரது கொலையை நியாயபடுத்த முடியாது .இந்த வாதம் ஒருவகையில் அவர்களுக்கு எதிராக திரும்ப கூடும் .

காவேரி பிரச்சனை குறித்து கர்நாடகத்தில் தொழில் நடத்தும் ஒரு எங்கள் ஊர் நண்பருடன் சூடாக விவாதம் செய்து கொண்டிருந்தேன் .அவர் சொன்னார் " தம்பி ,இவளவு பெசுரீகலே ,நம்ம காரகுடியிளிருந்து இந்த இருக்குற பக்கத்தூர் திருபத்தூர் அங்கன மனுஷாளுக தண்ணிக்கு தவிக்கையில ,இங்குட்டு நீங்க அவுகளுக்கு நீர கொடுக்கபடாதுன்னு உங்க ஊர் காரங்க  போராட்டம் பண்றீகளே ,இத என்ன சொல்லுறது ?"
உண்மையில் நான் வாயடைத்து போய் விட்டேன் .தமிழகம் தனி நாடாக 2047 உருவாகிறது என்றே வைத்துகொள்வோம்,அப்பொழுதும் ராமனாதபுரமும் ,சாயல்குடியும் விளிம்பாகவே உணரும்,அப்பொழுது ராமனதாபுரம் சமஸ்தானம் தனி நாடாக அறிவிக்க கோரி போராடும் .


பொதுவில் மரண தண்டனை பற்றிய நிலைப்பாடு என்று யோசித்தால் -இந்த தண்டனையின் நோக்கம் என்ன ? என்பதை ஆராய வேண்டும் .ஒரு குற்றம் நடக்கையில் அதன் பின்னணி என்ன ? அதன் விளைவுகள் என்ன ? நோக்கம் என்ன ? போன்றவை ஆராய படவேண்டும் .காந்திக்கு ஒருவர் கடிதம் எழுதினாராம் -மும்பையில் வெறிநாய்களை கொல்லும் ஆணைக்கு எதிராக குரல் கொடுக்க சொல்லி,ஏனெனில் அது உயிர் வதை என்று முன்வைத்தார் .காந்தி அதற்கு மறுப்பு தெரிவித்து அதை நிராகரித்துவிட்டார் .

ஒரு ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுத்தி அவளது உயிரை பறிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன .இந்த மாதிரி குற்றங்களின் நோக்கம் என்ன ? அவனது அடக்கமுடியாத மனநோய் குறிகள் அவனை அப்படி செய்ய வைக்கிறது .இதன் பின்னணி என்ன ? ஏதோ ஒரு பலத்த காயம் ஒன்று ஆள் மனதில் சிறு வயதில் நடைபெறுகிறது .பொதுவாக பீடோபிளியாக்கள் அவர்களது சிறு வயதில் சில கொடுமைகளுக்கு ஆட்படுத்தபட்டிருப்பார்கள் ,அது ஒரு வித மரபணு தொடர்ச்சி போல் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு பாதிப்பை கொடுத்துகொண்டே இருக்கும் .இந்த கன்னியை உடைத்தாக வேண்டும் .பலர் இதிலிருந்து தங்களை விடுவித்துகொள்கிரார்கள்  சிலர் அதில் ஈடுபடுகிறார்கள் .

தண்டனை என்பது என்ன ? அதன் மூலம் என்ன நிகழும் ? ஏன் அது கொடுக்கப்படவேண்டும் ?
தண்டனை என்பது குற்றவாளியின் செயலுக்கான எதிர் செயல் அல்ல.அவனது குற்றத்தின் நோக்கத்திற்கான சமூக ஒருமைப்பாட்டின்,பொது விழுமியங்களின் எதிர்வினை .அதாவது குற்றவாளியின் மனசாட்சிக்கு அவனது தீய நோக்கத்தை நினைவுகூர ஒரு வாய்ப்பேற்படுத்தி கொடுத்து ,அதிலிருந்து அவனை மீட்டு இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப செய்வது .

ஆனால் எல்லா சமயங்களிலும் அது நிகழ்வதில்லை .குற்றஉணர்வு என்பதே இல்லாத ஆட்களை நாம் காண்கிறோம் .நொடி பொழுது கிறுக்கு தனம் என்பதன் விளைவாக நடக்கும் குற்ற சம்பவங்கள் வாழ்நாள் முழுவதும் தீராத காயமாக ஆழத்தில் இருக்கும் .மேலும் தண்டனை- சிறை வாசமேன்பது ,அந்த குற்றவாலியால் பொதுமக்களுக்கு ஆபத்து என்று ஒன்று இருக்கும் பட்சத்தில் வழங்கபடுவது.அந்த ஆபத்து நீங்கியதர்கான அறிகுறிகள் தெரிந்தால் நிச்சயம் அவரை அங்கு வைப்பதில் பொருள் இல்லை .


பொதுவில் மரண தண்டனை என்பது அவசியமில்லை.கடுமையான சட்டம் வரவேண்டும் என்று வாதிடுகிறார்கள் .குற்றம் செய்பவர் யாரும் சட்டத்திற்கு பயந்து செய்யாமல் இருப்பதில்லை என்பதே நிதரிசனம் .ஆகவே மரண தண்டனைக்கு பயந்து குற்றங்கள் குறைந்து இருக்கிறது என்று சொல்வது சரியல்ல.மாறாக மரண தண்டனை அழிந்த நாடுகளில் குற்றங்கள் குறைந்து இருக்கின்றது .மசூத் ஆசாத் பற்றி என் நண்பன் சொன்னான் ,காந்தஹார் விமான கடத்தலின் பொழுது அவனை விடுவிக்க கோரினார்கள் .பின்னர் ஜெய்ஷ்-ஈ -முகம்மது எனும் இயக்கத்தை தொடங்கி,மும்பை தாஜ் ஹோட்டல் மீதான தாக்குதலில் அவனுக்கு மிக முக்கிய பங்கு இருப்பதாக நம்பபடுகிறது .நாளை இதே நிலை அஜ்மல் கசாபிற்கும் வரலாம் இல்லையா என்று கேட்டார் .சிந்திக்க வைத்த கேள்வி .

இளமையில் சில உக்கிரமான சித்தாந்தங்களால் மூளை சலவை செய்யப்பட்டு , சக மனிதர்கள் பால் தீராத வெறுப்பை விஷமாக கக்கி வருபவர்களை என்ன செய்வது ? .அந்த சித்தாந்த கதவுகள் அவர்களுக்கு சில தர்க்க தாழ்களை ஏற்படுத்தி கொடுத்து மொத்தமாக அடைத்து வைத்து விடுகிறது,அதை எக்கணம் உடைக்க முடியும் ?
ஆனால் அது யாருடைய தவறு ? தான் நம்பும் ஒரு  விஷயத்திற்காக உயிரையும் கொடுக்க முன்வரும் மனிதர்கள்,அந்த விஷயத்தின் ஒட்டு மொத்த விளைவுகளை பற்றி சிந்தனை செய்வதில்லை , ஒரு போலி த்யாகி பட்டம் உருவாக்க பட்டு ,அவர்களை ஒரு மகத்தான கனவிற்காக உயிர் நீத்த த்யாகியாக சித்தரித்து விடுகின்றனர் .இதுவே இவு இரக்கமற்ற தற்கொலை படை தாக்குதல்களில் ஈடுபடுவோரின் மனநிலையாகும் .

மரண தண்டனை என்பது - ஒரு பெரிய நல்லதிற்காக செய்யப்படும் ஒரு செயல் .அந்த பெரிய நல்லது (for the greater good) என்னவென்று யோசிக்க வேண்டும் .ஒரு வளர்ந்த நாகரீக சமூகத்தில் நிச்சயம் மரண தண்டனைக்கு இடமில்லை .

மரண தண்டனைக்கு ஆதரவாகவும் எதிராகவும் எத்தனையோ தர்க்கங்கள் எதிர் தர்க்கங்கள் ,இரு தரப்புகளிலும் சில நியாயங்கள் ,பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் .இது அத்தனையும் கேட்டு புரிந்து அறிவார்ந்த ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை .ஆனால் என் உள்ளம் செல்லும் திசை தெளிவாகவே தெரிகிறது .நிச்சயம் ஒரு மனிதனுக்கு எக்காலத்திலும் அவனது உயிரை போக்கிகொள்ளும் உரிமை கூட கிடையாது என்பதே அது .அப்படி இருக்கையில் மரண தண்டனைக்கு வேலையே இல்லை .

                                An eye for an eye makes the world blind- gandhi 

Friday, August 19, 2011

அண்ணா ஹசாரே -சில விமரிசனங்களும் அதற்கு எதிர்வினைகளும்

இன்று இந்தியா முழுவதும் பரவலாக ஊழலுக்கு எதிரான பேரும் கொந்தளிப்புகள் நம் மக்களின் மனதில் உருவாகி பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது ,ஆனால் தமிழகத்தில் இது ஒரு பெறும் தீயாக பற்றிக்கொள்ளவில்லை .நம் மக்களுக்கு அடி ஆழத்தில் இருக்கும் சந்தேகமே இதற்கு காரணம் என்று சொல்லலாம் .மேலும் இந்த போராட்டம் குறித்து தமிழகத்தின் எந்த ஒரு பெரிய அரசியல் தலைவர்களும் ,இயக்கங்களும் வாய் திறக்காமல் கள்ள மௌனம் சாதித்து வருகிறது .திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருக்கிறார்கள் என்று எண்ண தோன்றுகிறது.மேலும் வெகு சிலரை தவிர நமது அறிவு சமூகமும்,ஊடகங்களும் இதற்கு போதிய முக்கியத்துவம் அளிக்காமல் இதை வெற்று விளம்பர உத்தி என்று புறம் தள்ளுவதில் பெரும் முனைப்புகளோடு செயலாற்றுகின்றனர் .
இந்த விளம்பரங்களினால் அவருக்கு ஆக போவது என்ன ? அவர் ஒன்றும் பிரதமராகவோ குறைந்த பட்சம் வார்ட் தலைவராக கூட ஆகபோவதில்லை .
அண்ணா -ஒரு விளம்பர விரும்பி ,அவர் செய்யும் உண்ணாவிரதம் என்பது ஒரு விளம்பர 'ஸ்டன்ட்'

Monday, August 1, 2011

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் - குழந்தைகள் மருத்துவம்-12

மறுக்க முடியாமல் இன்றைய பெரியவர்களும் ,பெரியவர்கள் போல் எண்ணிக்கொள்ளும் அனைவரும் திரும்ப செல்ல நினைக்கும் பிராயம் அந்த பால்ய பிராயம் .எத்தனை ஆனந்தங்கள் ,துள்ளல்கள் ? என்றும் அதிலயே வாழ்த்திட மாட்டோமா என்று ஏக்கம் பிறக்கிறது .அறியாமையின் அறிய வேண்டும் எனும் பரபரப்பு ஒரு ஆனந்தம்,அது அறிந்த பின்பு நீர்த்து அணைந்து விடுகிறது .குழந்தையாய் இருந்த பொழுது வாழ்வில் வண்ணங்களும் ,குறுகுறுப்பும் நிறைந்த நாட்கள் போயி , வாழ்வே சுவைத்து சப்பிய பப்புல் கம் போல சுவையின்றி நிறமின்றி வெளிறி உமிழ முடியாமல் சிக்கி தவிக்கும் நாட்களாய் மாறிவிடுகிறது .எந்த மனதிற்கும் குழந்தையை பார்த்தால் ,வாழ்தலில் ஒரு பிடிப்பும்,அழகும்,ஆசையும் பிறந்து மனம் உற்சாகம் அடைகிறது .அதே ஒரு வீட்டில் அந்த குழந்தைக்கு உடல் சுகமில்லை என்றால் வீடே வெயிலில் வாடிய ரோஜா இதழ் போல் வதங்கி சுருங்கி விடுகிறது ,எல்லோர் மனத்திலும் ஒரு பயம் கவிகிறது .


ஆயுர்வேதத்தின் எட்டு அங்கங்களில் ஒரு முக்கியமான அங்கம் பால சிகிச்சை .இதை கௌமார ப்ருத்யம் அல்லது குமார தந்திரம் என்று ஆயுர்வேத நூல்கள் குறிப்பிடுகின்றன .முழுவதும் கிட்டாவிட்டாலும் காஷ்யப முனிவர் இயற்றிய சம்ஹிதை இன்றளவிலும் குழந்தைகள் நோய்களுக்கு வெகு முக்கியமான நூல் .அஷ்டாங்க ஹ்ருதயத்திலும் விரிவாக பால ரோகங்களை பற்றியும் அதன் சிகிச்சைகளை பற்றியும் பேசுகிறது .

ஆயுர்வேதத்தின் பால சிகிச்சை நவீன மருத்துவத்தின்' பீடியாட்ரிக்ஸ்' துறையிலிருந்து மாறுபாடு கொண்டது .மேலும் இப்பொழுது பீடியாட்ரிக்ஸ் துறை கூட மேலும் வளர்ந்து குழந்தைகள் நல அறுவை சிகிச்சை (pediatrics surgeon), பிறந்த குழந்தையை கவனிக்கும் நியோனடாலஜிஸ்ட் (neonatologist) என்று புதிய துறைகள் அறிவியல் வளர்ச்சி காரணமாக பிறந்துகொண்டே இருக்கின்றன .மாறாக ஆயுர்வேதத்தில் -எதிலும் ஒரு முழுமை நோக்கு இருக்கும் (wholistic approach) .ஆயுர்வேதத்தின் குழந்தை மருத்துவம் குழந்தையின் பிறப்புக்கு முன்பே ,இன்னும் சொல்ல போனால் கருத்தரிப்புக்கு முன்பே குழந்தைகளின் தாய் தந்தையிடமிருந்து தொடங்குகிறது .
ஒரு நல்ல ஆரோகியமான மரம் தான் நல்ல விதையை கொடுக்க முடியும் ,அப்படி கிடைக்கும் நல்ல விதையே உயர்ந்த மரமாக வளர்ந்து தழைக்க முடியும் .இதனால் கருத்தரிப்பதற்கு முன் ,பஞ்ச கர்ம சோதனைகள் வலியுறுத்தபடுகின்றன .அதன் மூலம் தாய் தந்தையர்களின் நோய் நீக்கி ,பீஜங்களில் உள்ள தோஷங்களை நீக்கி நல்ல பிள்ளைகள் பிறக்க வழிவகை செய்கின்றனர் .

ஆயுர்வேதத்தின் பால சிகிச்சை நவீன மருத்துவத்தின் மகபேறு (obstetric medicine) மற்றும் குழந்தைகள் மருத்துவத்தை கூட்டாக கொண்டது .கர்பிணி பரிசர்யா -எனும் பெயரில் ஒவ்வொரு மாதமும் தாய்க்கு என்னென சிகிச்சைகள் செய்ய வேண்டும் , அவர்களுக்கு ஒவ்வொரு மாதங்களிலும் என்ன உணவளிக்க வேண்டும் என்று விரிவாக சொல்கிறது .இன்றும் எனக்கு தெரிந்து சென்னையில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் டாக்டர்.கிரிஜா ,தனது சஞ்சீவனி ஆயுர்வேத மருத்துவமனையில் இவ்வண்ணம் வெற்றிகரமாக பிரசவம் பார்த்து வருகிறார் .இதில் முக்கியமானது என்னவென்றால் அனேக பிரசவங்கள் சுக பிரசவமே .அவர் முற்றிலுமாக அலோபதி முறையை புறக்கணிக்கிறார் ,அது என்னை பொறுத்தவரை உவப்பானது அல்ல .இதற்கும் அதற்குமான இடையில் ஒரு மைய புள்ளியை கண்டுகொண்டால் அது சரியானதாக இருக்கும் .
கர்பபைய்யில் வளரும் கரு ,ஒவ்வொரு மாதமும் எக்கணம் மாற்றம் கொண்டு வளர்கிறது என்பதை பற்றி ஆயுர்வேத ஆசான்கள் கூறுகின்றனர் .எந்த 'ஸ்கானிங் ' வசதியும் அல்லாத அந்த காலத்தில் கரு கொள்ளும் மாற்றங்களை ஓரளவுக்கு கால பிராமனத்தோடு சரியாகவே சொல்லி இருக்கிறார்கள் .முதல் மாதத்தில் உருவமற்ற ஒரு பிண்டமாக உருவாகி ,பின்னர் அடுத்து கை கால்கள்,தலை ஆகியவைகள் சிறு மொட்டு போன்று வளர்ந்து ,நான்காவது மாதத்தில் இதையா துடிப்பு ,ஆறாவது மாதத்தில் புத்தி என்று செல்கிறது அவர்களது கூற்று .

பிரசவத்தின் சமயத்தில் ஏற்படும் வெவ்வேறு சிக்கல்கள் குறித்தும் அதை எவ்வாறு சரி செய்வதென்றும் விரிவாக பேசுகின்றனர் .கொடி சுற்றிகொள்வது , தலை அல்லாது பிற உறுப்புகள் முதலில் வெளிவருவது,சரியான காலத்திற்கு முன்பே வெளிவருவது இப்படி இன்றைய பல சிக்கல்கள் அன்றும் பேசப்பட்டுள்ளது .ஆயுதம் கொண்டு குழந்தையை வெளியில் இழுப்பது ,மற்றும் இன்றும் பின்பற்றப்படும் பல்வேறு நுட்பங்கள் (maneuvers ) பதிவு செய்யப்பட்டுள்ளது .பின்னர் பிறந்த குழந்தையை சுத்தம் செய்வது ,தாய்க்கு செய்ய வேண்டிய சிகிச்சைகள் ,தாய்ப்பாலின் மகத்துவம்,தாய்ப்பாலுக்கு மாற்று, பால் சுரக்கும் மார்புகளில் வரும் நோய்கள் மற்றும் அதன் தீர்வுகள் என்று பல்வேறு தலைப்புகளை விரிவாக அலசுகிறது .

சில இடங்கள் வாசிக்கும் பொழுது கொஞ்சம் கரடுமுரடாக ,நமது இன்றைய நாகரீக வாழ்விற்கு ஒவ்வாதது போல் தோன்றுகிறது .ஆகினும் கூட ,இது தோல்வி அடைந்த முறை அல்ல, இத்தனை வம்சங்களாக நாம் தழைத்து இருப்பதே இதற்கு மிக சிறந்த உதாரணம் .ஆகினும் சில எளிய மாற்றங்கள் மூலமும் ,கொஞ்சம் விசாலமான பார்வை இருந்தால் இதிலிருந்து சில சாராம்சங்களை நாம் மேலே எடுத்து செல்ல முடியும் .பிறிதொரு சமயம் மகபேறு மற்றும் பெண்கள் மருத்துவத்தை பற்றி விரிவாக எழுதுகிறேன் .

எனது அனுபவத்தில் குழந்தைகளுக்கு மிக உகந்த மற்றும் சிறந்த மருத்துவம் ஆயுர்வேதம் தான் .அன்றாடம் குழந்தைகள் சந்திக்கும் எளிய நோய்களுக்கு ஆயுர்வேதம் மிக சிறந்த தீர்வை முன்வைக்கிறது .சளி ,காய்ச்சல் போன்ற நோய்களுக்கு நவீன மருத்துவத்திற்கு ஈடாக இந்த மருந்துகள் வேகமாக செயலாற்றுகின்றன .அதே போல் பசியின்மை ,மலசிக்கல் ,அதிசாரம் ,பூச்சி ,தோலில் வரும் சிரங்குகள் ,அரிப்பு ஆகியவற்றுக்கும் மிக நல்ல தீர்வை கொடுக்கிறது .

கண்களில் உள்ள பார்வை கோளாறுகளால் சிறு வயதில் கண்ணாடி அணிகின்றனர் ,ஆரம்ப கட்டத்தில் இதை சரியாக கண்டுபிடித்தால் சில பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் கண்ணாடியை தவிர்க்கலாம் .

மூளை வளர்ச்சி குன்றுதல்,வலிப்பு நோய்கள் ,நினைவாற்றல் குறைதல் ,குன்றிய வளர்ச்சி ஆகிய பிரச்சனைகளில் உடல் தன்னை தானே குணபடுத்தி தனது இயல்பு நிலையை அடைய ஆயுர்வேத மருந்துகள்,சிகிச்சைகள்,பயிற்சிகள் நாளடைவில் உதவும்.

ஆயுர்வேதம் சொல்லும் ஆரோகியமான பிள்ளை வளர்ப்பு முறைகள்

எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவது- லாக்ஷாதி கேர தைலம் என்று ஒரு எண்ணெய் உண்டு ,கேரள ஆயுர்வேத மருந்தகங்களில் கிட்டும் .அதை இளம் சூடாக வாட்டி குழந்தைக்கு தேய்க்க வேண்டும் ,பின்பு சற்று நேரம் இளம் காலை வெயிலில் காண்பித்துவிட்டு சுடுதண்ணீர் வைத்து குளிப்பிக்க வேண்டும் .

தாய்ப்பால் கொடுப்பது -இது மிக முக்கியமாகும் குறைந்தது ஆறு மாதங்களேனும் கொடுக்க வேண்டும் ,பால் சுரத்தளில் பிரச்சனை இருந்தால் - பிரசவ லேஹியம் என்று அறியப்படும் சௌபாக்ய சுண்டி அல்லது சதாவரி குளம் அல்லது பத்மகாதி சூரணம் ஆகியவைகளை தாய் உட்கொள்ள வேண்டும் .பெரும்பாலும் பால் குடியில் இருக்கும் குழந்தைகளுக்கு வயிற்று பொருமல்,மல சிக்கல்,அதிசாரம்,வாந்தி ஆகியவை வர காரணம் தாயின் உணவு பழக்க வழக்கங்களே .அதில் மிகுந்த கவனம் தேவை .
சில குழந்தைகளுக்கு - தாய்ப்பாலிளிருந்து பசும்பாலுக்கு மாறும் பொழுது அல்லது சில சமயம் தாய் பால் குடிக்கும் பொழுதே ,மாந்தம் ஏற்பட்டு பச்சை நிறமாக பேதி போகும் .lactose intolerance கூட காரணாமாக இருக்கலாம் ,இம்மாதிரி சமயங்களில் ரஜன்யாதி சூரணம் என்று ஒரு அற்புத மருந்து ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது .இதுவும் கடைகளில் கிடைக்க கூடியதே .பிறந்த குழந்தை முதல் எல்லா குழந்தைகளுக்கும் ஜீரண உறுப்புகள் தொடர்பாக எந்த கோளாறு வந்தாலும் இதை கண்ணை மூடி கொண்டு கொடுக்கலாம் .அளவு மட்டும் மாறுபடும் .இது குழந்தைகளுக்கான ஒரு சர்வ ரோக நிவாரணி .

அதே போல் குழந்தைகளின் சளி ,ஜலதோஷம் மூக்குற்றுதல் போன்ற பிரச்சனைகளுக்கு மிக சிறந்த மருந்து கர்ப்பூராதி சூரணம் .கஸ்தூரி மாத்திரை ,கோரோச்சனாதி குளிகா ஆகியவையும் நல்ல மருந்துகள் .நீர்கொர்வை மாத்திரை எடுத்து சுடுதண்ணீரில் குழைத்து நெற்றியில் பற்று போட்டால் மூக்குற்றுவது நின்றுவிடும் .

மூன்று வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை வேப்பங்கொழுந்து அரைத்து மஞ்சள் பொடி சேர்த்து இரண்டு உருண்டைகள் கொடுத்தால் ,வயிற்று பூச்சிகள் வராமல் இருக்கும்,மேலும் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடும் .ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேதிக்கு கொடுப்பதும் உத்தமம் .

கரப்பான் மற்றும் அனேக தோல் நோய்களுக்கு அருகம்புல் தைலம் நன்றாக கேட்கும் .

சிக்கன்குன்யா போன்ற விஷ காய்ச்சல் சீசன் வந்துவிட்டால் - நில வேம்பு குடிநீர் காய்ச்சி குடும்பமே குடிப்பது நல்லது .இது அனுபவபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நோய் தடுப்பு முறையாகும் .

ஓரளவு நினைவிலிருந்தும் ,அனுபவத்திலிருந்தும் எழுதியது ,உங்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள்,மேற்கொண்டு பேசலாம் .

அனைவருமே ஒரு மிக சிறந்த தாயாகவோ தந்தையாகவோ இருந்து ஒரு உத்தமமான குழந்தையை பெற்று வளர்த்தெடுக்க கனவு காண்கிறோம் .நம்மை போன்றே ,ஆனால் நம்மை காட்டிலும் மேம்பட்ட,நமது குறைகள் இல்லாத ,அல்லது குறைகளே இல்லாத மனிதர்களை உருவாக்க நாம் ஒரு பெரும் கனவு காண்கிறோம் .சில நேரங்களில் நாம் வாழ துடித்த கனவுகளை அவர்களின் கழுத்தில் எடை கற்களாக கட்டி அவர்களின் சொந்த கனவுகளை நோக்கி தலையை நிமிர்த்த கூடவிடுவத்தில்லை. இங்கே வாழும் யாரை கேட்டாலும் ,நிராசயே பதிலாக எஞ்சுகிறது .அனைத்து கனவுகளும் ,ஆசைகளும் அனைவருக்கும் நிறைவேறாது தான் ,ஆனால் அந்த கனவுகளை நோக்கி செல்ல அவர்களுக்கு வாய்ப்பு மறுக்க படுவது நிச்சயம் ஒரு மானிட கொடூரம் .

உலகிற்கு மிக சிறந்த செல்வங்களாய் நம் பிள்ளைகளை வளர்ப்போம் ,அவர்களோடு சேர்ந்து நாமும் வளர்வோம் .

Friday, July 22, 2011

ஞானேஸ்வரி







குற்றாலம் பற்றிய பதிவில் ராஜபாளையம் சென்றதை பற்றி கூறி இருந்தேன் ,அதை பற்றி விரிவாக எழுதுவதாகவும் கூறி இருந்தேன் .குற்றாலம் செல்லும் வழியில் எனது பெரியப்பாவின் நண்பர் திரு.செல்லம்மா ராஜூ அவர்களின் இல்லம் இருக்கிறது , பல வருடங்களாக அழைத்து கொண்டிருப்பதால் அங்கு செல்லலாம் என்று முடிவானது .உண்மையில் எனக்கு விருப்பமே இல்லை,குற்றால கனவுகளில் மிதந்து கொண்டிருந்தேன் .ராஜபாளையத்தில் இருக்கும் அவரது ஹார்ட்வேர் கடைக்கு வர சொன்னார் , சரி வந்தவர்களுக்கு டி வாங்கி அனுப்பி வைத்துவிடுவார் என்றே எண்ணினேன் .பழைய காலத்து பாகவதர் ஜிப்பா ,ஜரிகை வேட்டி ,பக்கவாட்டு வழுக்கை ,பென்சில் மீசை என்று ஒரு வித வித்யாசமான தோற்றத்தில் இருந்தார் அவர் .டீயை குடித்துவிட்டு கிளம்பலாம் என்றோம் ,பக்கத்தில் தான் வீடு வந்துவிட்டு போகலாம் என்றார் .தட்டமுடியவில்லை அதனால் சென்றோம் ,ஐம்பதுகளில் கட்டப்பட்ட வீடு ,நீல சாயம் போட்டு வெளிறிய பனியன் போல் இருந்த சுவர்களுக்குள் ஒரு கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பிகள் அவரவர் குடும்பத்தோடு ஒரே கூரையின் கீழ் வசிக்கின்றனர் .பழைய காலத்து கட்டிடம் ,குறுகிய படிகளை கடந்து மாடிக்கு சென்றோம்.
அவரது தாத்தா சுதந்திர போராட்ட த்யாகி என்றார்,நேரு ராஜபாளையம் வந்த பொழுது எடுத்த புகைப்படம் ஒன்றை காண்பித்தார் .அன்றைய காங்கிரசையும் ,இன்றைய காங்கிரசையும் மனம் ஒப்பிட்டு சிரித்ததை தடுக்க முடியவில்லை .கொஞ்ச நேரம் பொதுவாக பேசி கொண்டிருந்தார்கள் , எப்படா கிளம்புவது என்று காத்து கொண்டிருந்தேன் நான் .அம்மாவிற்கும் ,பெரியாம்மாவிற்கும் சிக்னல் கொடுத்து கிளப்பினேன் , "கொஞ்சம் இருங்க " என்று சொல்லியபடியே ஒரு பை நிறைய மாம்பழங்கள் ,அத்தோடு ஒரு பெரிய தாம்பாளம் நெறைய தோல் சீவிய வெட்டிய துண்டுகள் .தோட்டத்தில் விளைந்தது ,தயங்காமல் சாப்பிடுங்கள் என்றார் .வேண்டாம் வேண்டாம் என்று வாயளவில் மறுத்துக்கொண்டே கண்களால் அந்த பழங்களை ருசித்தேன் ,பின்பு எப்படி அந்த தட்டு காலியாகியது என்றே தெரியவில்லை .சரி இத்தோடு கிளம்பலாம் என்று எழுந்தோம் ,உள்ளிரிந்து ஒரு பெண்மணி நாலைந்து டார்ச் லைட்டுகளோடு வெளியே வந்தார் ,சரி விருந்தாளிகளுக்கு பரிசு கொடுக்க எடுத்து வருகிறார் என்று எண்ணினோம் ."கீழே சாக் பீஸ்ல செஞ்ச சில சிற்பங்கள் இருக்கு ,கொஞ்சம் பாத்துட்டு கிளம்பலாம் " என்றார் .
குடும்பமே முன்னாள் வழி நடத்தி செல்ல ,பின்னால் தொடர்ந்து இறங்கினோம் .பூட்டியிருந்த ஒரு அறையை மெதுவாக திறந்தார் ,உத்திர திருநாள் உதய மார்த்தாண்ட வர்மன் பத்மநாபசாமி கோவில் பொக்கிஷத்தை பார்த்து ஏற்படும் ஒரு வியப்பு ,அது எங்கள் அனைவரின் முகத்திலும் வழிந்தது .ஆம் ,அங்கு ஒரு பொக்கிஷம் இருந்தது ,கலை பொக்கிஷம் .கண்களை விரித்து அகல சுற்றி நோக்கினேன் ,எங்கும் கண்ணாடி பேழைகள் ,அதற்குள் இருப்பது ஒரு உலகம் .காலத்தால் பிந்தியதால் என்பதாலோ என்னவோ எல்லாம் சுருங்கி சின்ன சின்ன துண்டுகளால் ஆன உலகம், சாக் பீசும், பிளாஸ்டர் ஒப் பாரிசால் ஆன உலகம் ,கும்பகர்ணன் இருந்து இருந்தால் நம்மை எல்லாம் எப்படி பார்த்து இருப்பான் என்று அறை வினாடி யோசித்தேன் அப்படி நான் கும்பகர்ணனை பார்த்தேன் - ஒரு அலைமாரியில் உறங்கும் கும்பகர்ணனை எழுப்பும் சேனை .
திரு.செல்லமா ராஜுவின் தம்பியின் மனைவியார் திருமதி.ஞானேஸ்வரி ,பெயருக்கு ஏற்ற மாதிரி அவர் ஞானேஸ்வரி தான் .அவர் தனியாளாக அந்த அறை முழுக்க சாக் பீசினாலும் , பீ.ஒ.பீ.யினாலும் மிக நுணுக்கமாக ஜீவனுள்ள அந்த சிற்பங்களை வடித்துள்ளார் .இராமாயண நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு அலமாரி முழுவதும் வைத்துள்ளார்கள் .பத்து தலைகளோடு ராவணன் எகத்தாளமாக தனது சயன அறையில் படுத்து இருப்பதாகட்டும் , அனாயாசமாக படுத்து உறங்கும் கும்பகர்ணனை எழுப்ப வாசிக்க படும் பேரி,துந்துபிகலாகட்டும் , இன்று போய் நாளை வா என்று ராமன் ராவணனை போர்களத்தில் தனது அறத்தால் வீழ்துவதாகட்டும்- அதே களத்தில் போரின் சேதாரங்களை , மானுட அழிவுகளை சித்தரிப்பது ஆகட்டும், அனைத்திலும் அத்தனை நேர்த்தி ,வியக்க வைக்கும் நுணுக்கம்.இதற்கு ஒரு சிறிய உதாரணம் - சிவன் மதயானை உரித்தல் நிகழ்வில் உட்பக்கமாக நோக்கினால் வெள்ளை நிறத்தில் யானையின் விளா எலும்புகள் செதுக்கபட்டுளது தெரிகின்றது .
பால கிருஷ்ணன் ஆடும் காலிங்க நர்த்தனத்தில் அந்தரத்தில் மிதக்கும் கிருஷ்ணன் என்று ஒவ்வொன்றும் மீள முடியாத பிரமிப்பையும் ,பரவசத்தையும் அளித்தது .ஒரு பெரிய மலை
போன்ற அமைப்பு அதில் வெவ்வேறு சன்னிதானங்கள் ,திருப்பதி ஏழுமலையான் முதல் ஐயப்பன் வரை ,கோவிலின் கச்சிதமான அமைப்பு ,உள்ளே டார்ச் அடித்தால் அங்கு விக்ரஹ ரூபமாக வடிக்கபட்டுளது தெரியும்.
இத்துடன் அங்கு நான் எடுத்த படங்களை இனைக்கிறேன் - காண்க .எனது புகைப்பட கருவி ஆறு மெகா பிக்சல் அளவே ,மேலும் உற்சாகத்தில் சரியாக எடுக்கவில்லை இருந்தாலும் பார்க்க வேண்டும் .புகைப்படங்களை தரவிறக்கம் செய்து பெரிதாக்கி பார்ப்பது நலம் .
அத்தனை அமைதியாக அவர் ஒவ்வொன்றாக விளக்கினார் , மாடியில் முற்று பெறாத நிலையில் மகாபாரதம் உருவாகி கொண்டிருக்கிறது .இவர் எதையும் பார்த்து வரையவில்லயாம் ,அவராக கதையை வாசித்து வாசித்து உருவாக்கி கொண்ட உருவகங்களை நமக்கு அளிக்கிறார் .இதை செய்து முடிக்க அவருக்கு பத்து வருடம் ஆகி உள்ளது .ஒரு சிறு கோணல் கூட இதை அவலட்சணம் படுத்தி விடும் ,மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டும் .
இது ஒரு தவம் போன்றது ,மனம் முழுவதையும் குவிய செய்ய வேண்டும் ,ஒரு யோகம் போல ,தியானம் போல செயலும் செய்பவனும் ஒன்றாக இணையும் உத்தம புள்ளியில் உயர்ந்து நிற்கும் கலை வடிவம் ,அதை அவர் கைவர பெற்றுள்ளார் .இவருடைய திறன் வெளியில் அவளாக பிரபலமாகவில்லை ,ஒரு தனி பெரும் கண்காட்சி நடத்தும் அளவிற்கு அங்கு விஷயம் இருக்கிறது .
இதை ஒரு நிரந்தர கண்காட்சியாக வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு கோரிக்கை வைத்து விட்டு வந்தேன் .சிறு வயதிலிருந்து அவர் இதை செய்து வருகிறார் ,அவருக்கு இப்பொழுது சுமார் ஐம்பது வயது இருக்கலாம் .முக்கியமாக மனமார பாராட்ட வேண்டியது அவர்களது குடும்பத்தை .பொதுவாக ஒரு இந்திய கூட்டு குடும்பத்தில் பெண்களின் தனி திறன்கள் வெளிபடுவதர்கான சாத்தியங்கள் மிக மிக குறைவு."போய் வேலை வெட்டிய பாரு " என்று அனுப்பிவைத்து விடுவார்கள் ,இப்படி பல திறன்கள் கொண்ட பெண்கள் வெளி உலகிற்கு வரமாலே மறைந்து போய்விடுகின்றனர் .ஆனால் மாறாக ஒரு நாளைக்கு பல மணி நேரம் செலவிட வேண்டிய இத்தகைய படைப்பூக்கம் மிக்க திறன்கள் ஒரு கூட்டு குடும்பத்தில் வெளிக்கொணர பட்டுள்ளது என்பது அந்த குடும்பம் இவருக்கு கொடுத்த ஊக்கத்திற்கு சான்று .
தொன்மங்களும் காப்பியங்களும் கேட்டு வளர்ந்த சூழலில் இத்தகைய படைப்புகள் எமக்களித்த எழுச்சி தீவிரமானது .அன்றைய மாலையை மிக சிறப்பான மறக்கமுடியாத அனுபவங்களாக மாற்றியதற்கு திருமதி .ஞானேஸ்வரி மற்றும் குடும்பத்தாருக்கும் உளமார்ந்த நன்றி .


நான் பல சமயங்களில் யோசிப்பதுண்டு ,கலைகளின் நோக்கம் தான் என்ன? மனிதனுள் நிரப்பிடமுடியாத ஒரு ஏக்கமும் வெறுமையும் எப்பொழுதும் இருக்கிறது ,அதை கண பொழுதேனும் கலை நிரப்புகிறது ,ஒரு நொடியேனும் முழுமையின் ருசியை நமக்கு தருகிறது .