Saturday, November 12, 2016

நரோபாவின் கதைகள்

சுனில் கிருஷ்ணனே ஒரு புனை பெயரை போலத்தான் இருக்கிறது, அது என்ன நரோபா? புனை பெயரின் நோக்கம் பெயர் குழப்பம் நீங்குவதற்காக மட்டுமல்ல, ஒரு இணை அடையாளத்தை உருவாக்க. காந்தி, ஜெயமோகன் என சுனில் கிருஷ்ணனின் மீது படியும் நிழல்கள் ஏதுமற்ற மற்றொருவன் நரோபா. நரோபா விஷ்ணுபுரத்தில் வரும் பவுத்த பிரயாணி. நூல்களை மொழிமாற்றம் செய்து கொண்டிருப்பான். ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் அதன் வியர்த்தம் அவனை அலைக்கழிக்கும். இப்படித்தான்நானொரு நரோபாவாக ஆனேன். திபத்திய பவுத்தத்தின் முக்கியமானவர் என அறிந்துகொண்டேன். 

முதல் கதை வாசுதேவன் 2013 ஆம் ஆண்டு ஜெயமோகன் தளத்தில் வெளிவந்தது. அதன் பின்னர் இந்த மூன்றாண்டுகளில் மொத்தம் பனிரெண்டு கதைகள் எழுதி இருக்கிறேன். அண்மையில் ஜெயமோகன் தளத்தில் சுட்டியளிக்கபட்ட கதை 'ருசி' 2014 ஆம் ஆண்டு எழுதியது. இவை வெற்றியடைந்த படைப்புகளா இல்லையா என்றெல்லாம் எனக்கு தெரியவில்லை. அதை வாசகர்களிடம் விட்டுவிடுகிறேன். இக்கதைகளை பலவகையிலும் எழுதி பார்த்திருக்கிறேன். சில கதைகள் மிகுந்த மனநிறைவை அளித்திருக்கின்றன, சில கதைகள் ஆறுதலையும் மீட்சியையும் அளித்திருக்கின்றன, சில கதைகள் கொந்தளிக்க செய்திருக்கின்றன. கதைகள் என்னை எனக்கே அடையாளம் காட்டுகின்றன. இந்த விளையாட்டு அலுப்பு தட்டவில்லை. அலுப்பு தட்டாதவரை  விளையாடுவேன். 

இதுவரை நரோபா எழுதிய  கதைகள்.  
1.திருமிகு பரிசுத்தம் -https://padhaakai.com/2016/07/24/mr_parisuttam/
4.அம்புபடுக்கை - https://padhaakai.com/2015/12/27/bed-of-arrows/
5.இங்கர்சால் - https://padhaakai.com/2014/09/21/ingersoll/
6.நாற்காலி - https://padhaakai.com/2014/07/27/the-chair/
7.குருதி சோறு - 

9. வாசுதேவன் - http://www.jeyamohan.in/38230
10. காலிங்க நர்த்தனம் - http://solvanam.com/?p=37324
11. ஆரோகணம் - http://solvanam.com/?p=33741

Thursday, December 31, 2015

கரையடைந்த களிப்பு

புத்தாண்டிற்கு புத்தாண்டு வந்து பிலாக்கணம் வைக்கக்கூடிய இடமாக இது ஆகிவிட்டது. இருந்தாலும் அப்படி உரிமையோடு எழுதவும் புழங்கவும் ஒரு இடம் வேண்டியதாய் இருக்கிறது. நழுவி சென்ற காலதுண்டை கண் சுருக்கி நோக்குவது ஒரு பயிற்சிக்காக என கொள்ளலாம். கொண்டதும் தவறியதும் எதுவென நோக்கலாம், சுமையழித்தும் புதுசுமை சுமந்தும் முன்நகர வேண்டும். ஒரு மருத்துவனாக இந்தாண்டு ஏற்றதாழ்வற்று சென்றது. சென்னையில் நண்பர்களின் உதவியுடன் வருமாண்டு வடபழனியில் மாதாந்திர ஆலோசனை வழங்கும் திட்டமிருக்கிறது. இவ்வாண்டே துவக்கி இருக்க வேண்டும் மழை கொஞ்சம் சோம்பல் கொஞ்சம் என தயங்கி தள்ளி சென்றது. தனிவாழ்வில் நாங்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நற்செய்தி கிட்டியது எங்கள் இருவருக்கும் மிகப்பெரிய மனநிம்மதி. வருமாண்டு இருவர் மூவராகும் மகிழ்வான ஆண்டாக இருக்கும். 

காந்தி தளத்தில் எழுதுவது வெகுவாக குறைந்துவிட்டது. ராஜ்மோகன் காந்தி அருந்ததி ராய்க்கு எழுதிய மறுப்புரையை சர்வோதயா இலக்கிய பண்ணை நூலாக வெளிக்கொணர்ந்தது. அந்த எழுபது பக்க புத்தகத்தை எழுதியதோடு சரி. ஆனால் அதைத்தவிர எழுதிய ஒன்றிரண்டு கட்டுரைகளும் கூட காத்திரமாக கொஞ்சம் முனைந்து எழுதியது என்ற வகையில் திருப்தியே. தமிழ் தி இந்து, காலச்சுவடு, காலம் என இவ்வாண்டு தான் அச்சில் என் கட்டுரைகள் வரத்துவங்கியுள்ளது. தேவதச்சன் கவிதையுலகம் பற்றி எழுதிய கட்டுரை ஜெயமோகன் அவருக்காக தொகுத்த நூலில் இடம்பெற்றுள்ளது.  ஜெயமோகன் புண்ணியத்தில் புனைபெயர் உடைபட்டது. சுப்பிரமணியம் ராமசாமி என்றிருந்தால் புனைபெயர் வேண்டும், உங்கள் பெயரே புனைப்பெயர் மாதிரித்தான் இருக்கிறது என்றார் ஜெயமோகன். ஆம் அது என்னவோ உண்மைதான். புனைபெயரில் எழுத ஒரு காரணமுண்டு. என் மேல் படிந்திருக்கும் பிம்பங்களை கடந்து என் எழுத்து எப்படி வாசிக்கபடுகிறது என்றறிய முயன்றேன். காந்தி தளத்தில் கட்டுரைகள் எழுதுபவன், ஜெயமோகனுக்கு அணுக்கமானவன், ஆயுர்வேத மருத்துவன் போன்ற பிம்பங்களுக்கு அப்பால் என் புனைவெழுத்து எப்படி செல்கிறது என அறிய விழைந்தேன். நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும். சிலருக்கு ஆச்சரியம். பலரும் சீந்தவில்லை. போகட்டும் எல்லாம் நன்மைக்கே. எழுதியது குறைவாகினும் ஓரளவு நிறைவாக இருந்ததாகவே எண்ணுகிறேன். பதாகைக்காக எழுத்தாளர் சு.வேணுகோபால் சிறப்பிதழை தொகுத்தது மிக நல்ல அனுபவம். சிறுகதை பொட்டியை ஒருங்கிணைக்க உதவியதும் கூட செறிவான அனுபவம். சுடச்சுட சக படைப்பாளிகளின் படைப்புகளை வாசித்து அதன் நிறைகுறைகளை அறிந்துகொள்ளுதல் வாசிப்பை நுட்பமாக்கியது. நண்பர் ரா.கிரிதரன் எழுதிகொண்டிருக்கும் நாவலின் (அவர் எழுதிய வரையிலான) பகுதிகளை வாசிக்க நேர்ந்தது மிக நல்ல அனுபவம். வருமாண்டில் மிக முக்கியமான நாவலாக அது இருக்கும். நாள் தவறாமல் வெண்முரசு வாசித்து வருகிறேன். கொஞ்சம் பின் தங்கினாலும் அத்தியாயங்களை சேர்த்து வாசித்து விடுகிறேன். என்ன பிரச்சனை என்றால் நூலாக்கம் பெற்ற பிறகு வெண்முரசு நாவல்களை மீள வாசிக்க இயல்வதில்லை. மீள வாசிக்காமல் நாவலை பற்றி எதுவும் எழுத மனம் ஒப்பவில்லை. மீள வாசித்து அது குறித்து சென்ற ஆண்டை காட்டிலும் இவ்வாண்டு வாசித்தது அதிகம். பயணித்தது மிக குறைவு.  பெரும்பாலும் சென்னைக்கு தொலைக்காட்சி நிகழ்சிகளுக்காக சென்றதும், பாண்டிச்சேரிக்கு ஓரிருமுறை சென்றதும், ஒரு சேலம் பயணம், இரு கோவை பயணங்கள். புதிய இடம் என எங்கும் செல்லவில்லை. வரும் வருடம் இது மாற வேண்டும். 
ஆட்டிசத்தை பின்புலமாக கொண்ட ஒரு நாவலை எழுத துவங்கினேன். அதற்கு ‘நீலகண்டம்’ என தலைப்பும் இட்டேன். நூற்றைம்பது பக்கங்கள் எழுதி இருக்கலாம். சில சிக்கல்களால் அதை தொடர முடியாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டியதாகி விட்டது. மேற்கொண்டு எழுத முடியாத அளவிற்கு மனம் சிக்குண்டது, எழுதுவதை நிறுத்தியதும் பெரும் சோர்வை அளித்தது. அந்த நாவலுக்கான காலம் இதுவல்ல என்பதை மட்டும் மனம் உணர்ந்துகொண்டது. எப்போது இந்த நாவலை எழுதும் துணிவு வரவேண்டும் என்றிருக்கிறதோ அப்போது வரட்டும். ஆனால் ஒரு நாவல் எழுதும் மனநிலை என்ன என்பதை அறிந்துகொண்டேன். போதையூட்டும் அனுபவம் இன்னும் இரு நாவல்களுக்கான கரு இருக்கிறது. அதற்கு அதிக ஆய்வுகள் செய்ய வேண்டியது இருக்கிறது. பார்ப்போம். வருமாண்டு அந்த கனவை நோக்கி பயணிக்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள ஆயுர்வேத நூலை முடித்தே ஆக வேண்டும். அதற்கும் அதிகம் படிக்க வேண்டியது இருக்கிறது. கண்ணில் ஒரு சிறிய பிரச்சனை ஆகவே கணினியில் அதிக நேரம் படிக்க முடிவதில்லை. எழுத மட்டுமே கணினியை பயன்படுத்துகிறேன். மேலும் நேர்த்தியுடன் உழைக்க வேண்டும். திட்டமிட வேண்டும். சென்ற ஆண்டு உடலை பேண வேண்டும் என முடிவெடுத்து ஷட்டில் விளையாட துவங்கினேன். ஒரு நல்ல பழக்கமாக அது என்னுடன் தொற்றிக்கொண்டு விட்டது. கிரிக்கெட்டை தவிர வேறு எதையும் உருப்படியாக விளையாடியது இல்லை நான். வியர்க்க வியர்க்க விளையாடுவது சவாலாக இருக்கிறது. பிடித்தும் இருக்கிறது. இது தொடர வேண்டும். இந்த ஆண்டும் தொடர்ந்து டைரி எழுதியிருக்கிறேன். பெரும் அதிசயம் தான். 

வருட இறுதியில் எனது சகோதரனுக்கு இணையாக கருதும் கல்லூரி ஜூனியர் ஆகாஷின் மரணம் நிலைகுலைய செய்தது. மீண்டுவரவே எனக்கு மூன்று நாட்கள் ஆயின. 
வருத்தங்களுக்கும் துக்கங்களுக்கும் அப்பால் நம்பிக்கையுடன் நடக்க இன்னும் எத்தனையோ இருக்கிறது. 

நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் 

Wednesday, January 21, 2015

இருப்பாய் ராமசாமி நெருப்பாய்


‘பேரன்பு மிக்க
ஆம்ப்ளே ராமசாமிகளே
தாயுள்ளம் கொண்ட
பொம்ப்ளே ராமசாமிகளே
அலைகடலென திரண்டிருக்கும்
அத்துனை ராமசாமிகளே’
அகில இந்திய ராமசாமி மக்கள் சம்மேளனத்தின்
113 ஆவது கிளையின் 14 ஆவது உபகிளையின்
செயலர் ‘சிம்மகுரலோன்’ ராமசாமியார் கர்ஜித்தார்.
‘இதோ இன்றொரு ராமசாமி வஞ்சிக்கப்பட்டு
நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு,
அச்சுறுத்தப்பட்டு, துன்புறுத்தபட்டு, துரத்தப்பட்டு,
ஓடுகிறான் ஓடுகிறான் ஓடுகிறான்
வாழ்க்கையின் எல்லைக்கே ஓடுகிறான்.
‘ராமசாமிகளே, உண்மையில்,
ராமசாமிகள் அப்படிப்பட்டவர்களா?
நான் கேட்கிறேன், இங்கிலாந்திலே, கிரேக்கத்திலே,
ரோமாபுரியிலே, அமெரிக்காவிலே, அரேபியாவிலே.
எங்கேனும் ராமசாமி இப்படி செய்த வரலாறுண்டா?
இதுவே கிட்டினனசாமிகளும் முனுசாமிகளும்
இப்படி செய்ததாக சொல்லும் துணிவுண்டா இவர்களுக்கு?
பொங்கி எழு புரட்டி எடு’
‘இருப்பாய் ராமசாமி நெருப்பாய்’
 ‘அஹம், அஹம்’ செருமிய தொண்டைக்கு
இதமாக ஜோடா உடைத்து கொடுத்தான் ஒரு ராமசாமி
கேப்பில் ஒரு துண்டுசீட்டை பதுங்கியபடி
கொண்டுவந்து கொடுத்தான் மற்றொரு ராமசாமி
‘மக்கழே, ஒரு மகிழ்சிகரமான செய்தி’
அண்மைய நிலவரப்படி அனைந்திந்திய கணேசன் பேரவையும்,
சர்வதேச பாலமுருகன் சமூகமும், ஐக்கிய கோவிந்தராசு கழகமும்,
இந்திய சாந்திராணி அணியும், தமிழக ஜமுனா சமாஜமும்.
நம் கரத்தை வலுபடுத்தி, ஆதரவு நல்கியிருக்கின்றன,’
அப்துல் காதர்ளும், ஜேம்ஸ்களும், கிருஷ்ணன்களும்,
ஆனந்திகளும், ஆறுமுகங்களும்
ஆதரவளிப்பர் என நம்புவோமாக
ஆம் தோழர்களே இப்போது இது
ராமசாமிகளின் பிரச்சினை மட்டுமில்லை.    

 .


 
 
 



Wednesday, December 31, 2014

கரையா இனிமை

ஆயிற்று, இதோ மற்றொரு வருடம். நீரில் கரைந்த வெல்லம் என நாநுனியில் எஞ்சும் இனிமையை மட்டும் விட்டுசென்றுவிட்டு முழுமையாக கரைந்தே விட்டது.  இனிமை தான் எஞ்சுகிறதா என்றால், அப்படி அது மட்டுமே எஞ்ச வேண்டும் என பூரணமாக விழைகிறேன். காலம் தன் பங்கிற்கு எல்லா ருசிகளையும், விரும்பினாலும் இல்லாவிட்டாலும்  உணரசெய்து தான் புதிய வேறொன்றாக பிறப்பெடுக்கிறது. ஒற்றை ருசி நல்லதற்கில்லை, எல்லாமும் கலந்து தான் இருக்க வேண்டும் என்றாலும், நமக்கு உவப்பளிக்கும் விகிதங்களில் அவை பெரும்பாலும் இருப்பதில்லை என்பதே சிக்கல்.


Tuesday, December 30, 2014

விஷ்ணுபுரம் விழா 2014 - நினைவுகள்

கோவைக்கு கிளம்பியது முதல் ஊர் திரும்பியது வரை விழா ஒட்டுமொத்தமாக ஒரு இனிய அனுபவமாக அமைந்தது. அதற்குழைத்த அத்தனை கோவை நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள். 

சனிக்கிழமை காலை பத்துமணிக்கு யாத்ரி நிவாசில் விவாத அரங்கிற்கு மானசாவுடன் நுழைந்த போதே முன்னரே குழுமியிருந்த நண்பர்களின் முகங்களில் தென்பட்ட பிரமிப்பும் உற்சாகமும் எனக்கும் தொற்றிகொண்டது. பாவண்ணன் அவர்களுடனான உரையாடளில் எனக்கு மொழியாக்கம் குறித்து அவர் கூறியவை முக்கியமானதாக தோன்றின. தமிழ் இலக்கிய பிரதிகள் ஆங்கிலத்தையோ பிற இந்திய மொழிகளையோ சென்றடையவில்லை என்பதற்கு இன்று இரு மொழிகளில் ஆழ்ந்த அறிவும் பரிச்சயமும் கொண்டவர்கள் இல்லாதது மிகப்பெரிய குறை என்றார். அவருடைய கவலை நியாயமானதே, குறைந்தபட்சம் ஆங்கிலத்தின் வழியிலாவது அவை பிற மொழிகளை சென்றடைய வேண்டும். வேடிக்கையாக பல மொழியாக்க அபத்தங்களை நண்பர்கள் சுட்டிகாட்டிக்கொண்டே சென்றனர். 

DSC_3449.JPG

Sunday, November 30, 2014

காவியத்தலைவன் - ஒரு அனுபவம்

மாபெரும் வீழ்ச்சிகளுக்கும் தோல்விகளுக்கும் இயல்பாகவே ஒரு காவியத்தன்மை வந்துவிடுகிறது. வெற்றி நம்மை நிலைகுலைய செய்கிறது. அது நிச்சயமற்றது என எண்ண செய்கிறது. இன்றில்லை என்றாலும் என்றேனும் ஒருநாள் வீழ்வோம் எனும் அச்சம் நம்மை துரத்துகிறது. வீழ்ச்சியில் தான் மனிதன் அமைதி கொள்கிறான் என கூட தோன்றுவதுண்டு. வீழ்ச்சி எத்தனைக்கு எத்தனை உயரத்திலிருந்து நிகழ்கிறதோ அத்தனைக்கு அத்தனை மாபெரும் காவியமாகிறது. உலகின் மாபெரும் காவியங்களும் பேரிலக்கியங்களும் வீழ்ச்சியின் ஆழத்தையும் அதை மீறி எஞ்சும் மானிட வாழ்வை பற்றி பேசுவதாகவே இருக்கிறது. 

Saturday, November 22, 2014

நம்பிக்கை மனுஷிகள் ஆவணபடம் குறித்து

பிரியத்துற்குரிய வானவன் மாதேவி - இயலிசை வல்லபி சகோதரிகள் குறித்து கீதா இளங்கோவன் அவர்கள் நம்பிக்கை மனுஷிகள் எனும் தலைப்பில் பதினான்கு நிமிட ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். அக்கறையுடன் அவர்களின் வாழ்வை ஆவண செய்ய முற்பட்டதற்கும் அதை நிறைவாக செய்ததற்கும் அவருக்கும் அவருடைய குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மிக முக்கியமாக இத்தகைய ஆவணப்படங்களில் எங்கிருந்தோ ஒரு மெல்லிய துயரசாயல் வந்துவிடும் (பெரும்பாலும் பின்னணி இசையில் அது உருவாகிவிடும்) ஆனால் இதில் அவர்களை இயல்பாக படமாக்கியிருப்பது மிக சிறப்பு. அவர்களின் சிரிப்பே அவர்கள் வாழ்க்கையின் செய்தியாகிறது. அதுவே நம்பிக்கை மனுஷிகள் எனும் தலைப்பிற்கு நியாயம் செய்வதாகும்.


https://www.youtube.com/watch?v=svH7fYOOnE4

Monday, November 3, 2014

ஆயுர்வேத நூல் குறித்து

ஆயுர்வேதம் குறித்து மருத்துவ தகவல்கள் இல்லாத ஒரு நூலை எழுத வேண்டும் எனும் எண்ணம் கொஞ்ச காலமாகவே எனக்கு உண்டு. மதிப்பிற்குரிய ஆசிரியர் டாக்டர்.மகாதேவன் அவர்களின் தூண்டுதலின் பேரில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் அதை எழுத ஒப்புக்கொண்டேன். அடிப்படை கோட்பாடுகள் குறித்தான அறிமுகம், ஒட்டுமொத்த வரலாற்று பரிணாமம்,  மருத்துவ அறம், உவமைகள் - படிமங்கள், மரண குறிகள், தொன்மங்கள், நவீன காலத்தில் ஆயுர்வேதம் சந்திக்கும் சிக்கல்கள், சமூகத்துடனான அதன் உறவு  என இன்னின்ன பேசுபொருள் இருக்க வேண்டும் எனும் அடிப்படைகளை வகுத்துக்கொண்டு தேவையானவற்றை தேடி தேடி வாசிக்க துவங்கினேன்.

மேற்கூறிய விஷயங்கள் குறித்து சில கருத்துக்களும் புரிதல்களும் உண்டு, அதையே விரித்து எழுதிவிட முடியும் எனும் அசட்டு அதீத தன்னம்பிக்கை இருந்திருக்கிறது என்பதை இப்போது எண்ணினால் கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது. தினமும் ஐந்து பக்கங்கள் எழுதினால் கூட நாற்பது நாட்களில் புத்தகத்தை முடித்துவிடலாம். நவம்பர் மாத இறுதிக்குள் புத்தகத்தை முழுவதுமாக முடித்து கொடுக்க முடியுமா என கேட்டிருந்தார் டாக்டர். மகாதேவன் 

இத்தனை ஆண்டுகளாக புழங்கிகொண்டிருந்த புத்தகங்கள் தான் ஆனால் இப்போது வாசிக்கையில் முற்றிலும் புதிதாக இருக்கிறது. இவைகளை எல்லாம் நான் கவனித்ததே இல்லை என்பது அப்போது தான் உரைக்கிறது. நான் எடுத்துக்கொண்ட தலைப்புகள் அவ்வளவாக எவராலும் தீண்டபட்டிருக்காது என்று வேறு நம்பிகொண்டிருந்தேன். ஆனால் நவீன மேற்கத்திய இந்தியவியல் ஆய்வாளர்கள் இதில் எத்தனை தூரம் பயணித்திருக்கிறார்கள் என்றறிய வந்த போது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. 

ஆயுர்வேத ஆய்வுகள் இருவகையிலானவை. ஒன்று நிருபனவாத அறிவியல் சட்டகத்திற்குள் ஆயுர்வேத சிகிச்சை முறைகளை கொண்டு வரும் முயற்சிகள். மற்றொன்று வரலாற்று சமூகவியல் கோணத்தில் அணுகும் ஆய்வுகள். முந்தைய ஆய்வுமுறைக்கு அதிக நிதியுதவி கிட்டுகிறது, பரவலாக செய்யபடுகிறது, ஆனால் அதன் நம்பகத்தன்மை குறித்து ஆயுர்வேத மருத்துவர்களும் நவீன ஆய்வாளர்களும் ஐயப்பட்டுகொண்டே தானிருக்கிறார்கள். பிந்தைய வகைப்பாட்டின் ஆய்வுகள் குறித்து ஆயுர்வேத மருத்துவர்கள் கூட பரிச்சயமின்றி இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். ஒருகால் புத்தகம் எழுத வேண்டியது இல்லை என்றால் எனக்கும் கூட இவ்வறிமுகம் சாத்தியமாகி இருக்காது. 

ஆயுர்வேதத்தின் நவீன கால சிக்கல்கள் குறித்து பேசவேண்டும் என்றால் காலனிய தாக்க நீக்கம் குறித்து பேச வேண்டும். காலனியம் மரபறிவு தொடர்ச்சியை எப்படி துண்டித்தது? அதுவரை அரச மருத்துவமாக இருந்த ஆயுர்வேதம் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஆதரிக்கப்பட்ட நவீனமருத்துவத்தை  எப்படி எதிர்கொள்கிறது? எப்படி தன்னை தகவமைத்து கொள்கிறது? அதற்கு முன்னர் செவ்வியல் மருத்துவமாக திகழ்ந்த ஆயுர்வேத மருத்துவம் நாட்டு மருத்துவத்துடன் கொண்ட உறவு எத்தகையது? போன்ற கேள்விகளுக்கு விடை காணவேண்டும்.

ஆயுர்வேதம் ஒரு உறைந்த அறிவியல், மூத்தோர் சொல் எனும் நம்பிக்கை ஆயுர்வேத ஆர்வலர்களால் அதன் பெரும் தகுதியாக முன்வைக்கபடுகிறது ஆனால் அதையே விமர்சகர்கள் திருப்பி சொல்லி அது அறிவியல் அடிப்படை அற்றது என்கிறார்கள். உண்மையில் நூற்றாண்டுகளாக எத்தகைய மாற்றங்கள் அதில் நிகழ்ந்துள்ளன? கலாசார தாக்கங்கள் எவை? அறிவியல் அடிப்படை அற்றது தானா? போன்ற கேள்விகளுக்கு மிக விரிவாக வாசிக்க வேண்டியதாய் இருக்கிறது. எளிய நம்பிக்கைகளை விடையாக சொல்லிவிடக்கூடாது என்பதில் திடமாக இருக்கிறேன். ரசவாதம், பவுத்தம், சமணம், வேதம், தாந்த்ரீகம், சீன - கிரேக்க மருத்துவம், இந்திய மெய்யியல் என ஒன்று மற்றொன்றிற்கு இட்டுசென்றவண்ணம் இருக்கிறது. 

ஒட்டுமொத்தமாக இதற்கான உழைப்பை ஒவ்வொரு கணமும் ழுவதுமாக அனுபவித்து ரசிக்கிறேன், கற்றபடி இருக்கிறேன். இதன் விரிவு பிரமிப்பை அளிக்கிறது.  புனைவுகளுக்கான கருவும் கிட்டிய படியேதான் இருக்கிறது. இந்தியவியலை ஒட்டுமொத்தமாக அறிந்தாலொழிய நான் விரும்பும் தரத்தில் நூலை உருவாக்க முடியாது என்றுணருகிறேன். மிக அதிகமாக வாசித்து களிக்கும் நாட்கள் இவை. மனம் முழுக்க வாசித்தவைகளால் ததும்பி திளைத்து கொண்டிருக்கிறது காந்தியே கூட மனதின் ஒரு மூலையில் சுருண்டுகொண்டுவிட்டார். திட்டமிட்டபடி நூலை இம்மாதத்திற்குள் முடிக்க முடியாது. குறைந்தது மூன்று நான்கு மாதங்கள் ஆகலாம். அல்லது அதற்கு மேலும் ஆகலாம். நான் எண்ணிய தரத்தில் புத்தகத்தை எழுதிவிட முடியும் எனும் நம்பிக்கை மெல்ல துளிர்க்கிறது. ஒருகால் அப்படி எழுதமுடியாமல் போனாலும் ஒன்றும் பாதகமில்லை.    

Monday, September 29, 2014

'மெட்ராஸ்' - ஒரு பருந்து பார்வை

சில வரிகள் நீளும் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்களை தாண்டி நான் பொதுவாக விரிவான சினிமா விமர்சனங்கள் எதுவும் எழுதியதில்லை. காரணம் நான் முறையாக சினிமாவை அறிந்தவன் அல்ல. எனது உலக சினிமா/ மாற்று சினிமா/ வேற்று மொழி சினிமா பரிச்சயம் ஆரம்பநிலையில் தான் இருக்கிறது. ஆனால் தமிழில் வரும் முக்கியமான திரைப்படங்களை திரையரங்கிற்கு சென்று கண்டுவருவது வாடிக்கை. அவ்வகையில் இன்று பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் மெட்ராஸ் பார்த்துவிட்டு வந்தேன். மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று என உறுதியாக சொல்வேன். மிகப்பிராமதமான திரைப்படமாக வந்திருக்க வேண்டியது ஒரு படி கீழிறங்கி மிகநல்ல திரைப்படமாக வந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன். தெளிவாகவும் தீர்க்கமாகவும் தனது அரசியல் பார்வையை முன்வைத்திருக்கிறார் ரஞ்சித். இத்திரைப்படத்தை நான் புரிந்துகொண்ட விதத்தை சற்றே விரிவாக பதிவு செய்யும் முயற்சியே இது, இது விரிவான, முழுமையான விமர்சனம் அல்ல. 


Thursday, June 26, 2014

மனம்வெளுக்க காத்திருத்தல் - தெளிவத்தை ஜோசப்பின் படைப்புலகம்

 (2013 ஆம் ஆண்டு விஷ்ணுபுரம் விருது தெளிவத்தை ஜோசெப் அவர்களுக்கு அளிக்கப்பட்டதை ஒட்டி ஜெயமோகன் தளத்தில் வெளியான கட்டுரை)

மலையகத் தமிழ் எழுத்தின் முன்னோடி தெளிவத்தை ஜோசப் அவர்களின் படைப்புலக வாசல் எனக்கு திறந்து கொண்டது என்னவோ அண்மைய விஷ்ணுபுர விருது அறிவிப்பிற்கு பின்னர் தான். எனக்கு வாசிக்கக் கிடைத்த ஏழு சிறுகதைகள், மூன்று குறுநாவல்கள், சுப்பையா கமலதாசன் அவருடைய இலக்கிய வாழ்வைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரை, மற்றும் ஒரு நாவல் ஆகியவை அளித்த சித்திரத்தை தொகுக்கும் முயற்சியே இக்கட்டுரை.


என்வரையில் அவருடைய படைப்புகள் இரு களங்களில் இயங்குகின்றன. ஒன்று மலையக தோட்ட வாழ்க்கை மற்றொன்று மலையகத்திலிருந்து கொழும்பு போன்ற பெருநகருக்கு புலம்பெயர்ந்த நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கை. அவருடைய மூன்று குறுநாவல்கள், மீன்கள், கத்தியின்றி ரத்தமின்றி போன்ற சிறுகதைகள் தேயிலைத் தோட்டப் பின்புலத்தில் உருவாகியுள்ளன. அவருடைய நாவலான குடைநிழல், சிறுகதைகளான அம்மா, மழலை, பயணம், மனிதர்கள் நல்லவர்கள், இருப்பியல் போன்றவைகள் நகரத்து பின்புலத்தில் உருவாகியுள்ளன.