Friday, October 25, 2019

நீலகண்டம் முன்னுரை

(யாவரும் பதிப்பகம் வெளியீடாக இந்த ஆண்டு வெளிவந்துள்ள எனது முதல் /புதிய நாவல் 'நீலகண்டத்திற்கு' எழுதிய முன்னுரை. விலை ரூ. 270, பக்கங்கள்- 224. நாவல் அச்சாகிவிட்டது. விரைவில் இணைய புத்தக நிலையங்களில் விற்பனைக்கு வரும்)



கடைதல்


திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வரை குழந்தைப்பேறு இல்லை. அது ஒன்றும் அதிக காலம் என்று சொல்ல முடியாது. ஆனால் மாதச்சுழற்சியின் இறுதி நாட்களில் காலச்சக்கரம் அணுவணுவாய் நகரும். சக்கரம் சுழலப் போகிறதா அல்லது துவங்கிய இடத்திற்கு மீண்டும் வரப்போகிறதா எனும் பதட்டம் ஓர் எல்லையில் தாங்க முடியாத துன்பம். அப்படியான தத்தளிப்பான காலகட்டத்தில் ஒருவரிச் செய்தியாக கேள்வியுற்ற நிகழ்வு நாவலாக உருக்கொள்ளத் தொடங்கியது. நியாயப்படி இந்த நாவலே முதலில் வெளிவந்திருக்க வேண்டும். ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் இந்நாவல் சிறுகச்சிறுக வளர்ந்தது. 2015 ஆம் ஆண்டு ‘நீலகண்டத்தை’ எழுதத் துவங்கிய காலத்தில் மானசா கருத்தரித்தார். கருச்சிதைவு சார்ந்த அத்தியாயத்தை அப்போதுதான் எழுதிக் கொண்டிருந்தேன். தொடர் கனவுகள் என்னை அலைக்கழித்தன. பருண்மைக்கும் கனவிற்குமான கோடுகள் அழிந்தன. உன் நாவலா? உங்கள் குழந்தையா? எனும் கேள்வியை பேரிருப்பு எனக்கு எழுப்பியதாகத் தோன்றியது. வேறு வழியின்றி நூறுபக்கம் வரை வளர்ந்த நாவலைக் கைவிட்டு வெளியேறினேன். அந்த முடிவு அத்தனை எளிதானதாக இல்லை. சுதீர் பிறப்பதற்காக காத்திருந்தேன். 

பின்னர் ‘அம்புப் படுக்கை’ தொகுப்பு வெளிவந்தது. பயணங்களால் நிறைந்த ஆண்டு. இடைப்பட்ட காலங்களில் வாசிப்பும் விரிந்தது. ஆல்டஸ் ஹக்ஸ்லியும், மரியோ வர்கோஸ் லோசாவும், மிகைல் புல்ககோவும் புனைவு குறித்தும், வாழ்க்கை குறித்தும் என் பார்வையை அசைத்தார்கள். யதார்த்தத்திற்கும் கனவிற்கும் புனைவிற்கும் இடையிலான உறவு என்னை வசீகரித்தது. ஜஸ்டின் கார்டனரின் ‘சோஃபியின் உலகம்’ ஒரே நேரத்தில் மேற்கத்திய மெய்யியல் அறிமுக நூலாகவும் வளரிளம் பருவத்தினருக்கான மிகுபுனைவாகவும் அமைந்திருந்தது. யதார்த்த உலகமும் கற்பனையும் முயங்கும் புள்ளி அபாரமாக உருவாகி வந்த நாவல்.  இப்படியான ஓரிடத்தை படைப்பின் வழி அடைய வேண்டும் எனும் உந்துதல் எனக்கிருந்தது.  இது வடிவ ரீதியான மாற்றம் மற்றும் இல்லை, வாழ்க்கை குறித்த அடிப்படை பார்வையே மாறியது. வரலாறையும், வாழ்வையும் புனைவின் நெசவு என்றே பார்க்கத் தொடங்கியது. படைப்பாளி பிரம்மாண்ட நெசவின் மிகச்சிறிய பகுதியை பிரதி செய்து அளிக்கிறான். வாழ்வளித்த கொடைக்கு நன்றிக்கடன் அல்லது தன் பங்கிற்கு ஏதோ ஒன்றை நெய்வதன்றி படைப்பாளிக்கு படைப்பை உருவாக்க வேறு உந்துதல்கள் இருக்க முடியாது எனத் தோன்றியது. 

மீண்டும் நாவலைத் தொடரும் துணிவு வருவதற்கு மூன்று ஆண்டுகள் காத்திருந்தேன். யதார்த்தத் தளத்தில் மட்டும் நிகழ்ந்த நாவல் இப்போது கனவுத் தளத்தில் விரிந்தது. ஒரு மெய்யியல் விசாரணையாக, அது தேர்ந்த வடிவத்திற்குரிய பன்முகத்தன்மை கொண்டதாக முகிழ்ந்தது. 2018ஆம் ஆண்டு மீண்டும் இந்த நாவலை எழுதத் துவங்கிய சமயத்தில் மீண்டும் மனைவிக்கு உடல்நிலைச் சிக்கல், மருத்துவமனை அலைச்சல். இப்போது இந்த நாவல் வெளியாகும் முன் இன்னொரு பெண் குழந்தை நல்லவிதமாக பிறந்து அவளுக்கு சபர்மதி எனப் பெயரிட்டுள்ளோம்.

ஒரு நாவல் எழுதுவதற்கும் இந்நிகழ்வுகளுக்கும் ஏதேனும் தொடர்புண்டா? பகுத்தறிவின் வழியில் எளிதாக இதைப் புறந்தள்ளிவிடலாம். ஆனால் முட்டாள் மனம் இவற்றை எல்லாம் சமிக்ஞைகளாக நோக்கத் தொடங்கியது. என்னிடமிருந்து ஏதோ ஒன்றை, ஒரு தயாரிப்பை, ஒரு உறுதிமொழியை இப்படைப்பு கோருகிறது எனத் தோன்றியது.   கடந்த ஜனவரி 2019 ஏதோ ஒரு புள்ளியில், நாவலுக்கு என்னை முழுதாக ஒப்புக்கொடுத்தேன். முன்னர் எழுதிய இடத்தை விட்டுவிட்டு முற்றிலும் புதிய புள்ளியில் நாவல் திறந்து கொண்டது. ஒரு மாதத்தில் ‘நீலகண்டத்தின்’ முதல் வடிவை எழுதி முடித்தேன். நான் என்னை சிறுகதையாளன் என்பதைவிட நாவலாசிரியர் என்றே உணர்கிறேன். சிறுகதைகளுமே கூட நாவல் தன்மை கொண்டவையே. ‘நீலகண்டம்’ எழுதிய காலகட்டம் எனக்கு அதை மேலும் அழுத்தமாக உணர்த்தியது. நானறியாத புதிர்களின் நரம்பு முடிச்சுகளை எனக்கே அவிழ்த்துக் காட்டியது. செல்லத் துணியாத இருளின் ஆழத்திற்கு என்னை இழுத்துச் சென்றது. முற்றிலும் எதிர்பாராதவை இந்நாவலில் வெளிப்பட்டு என்னை திகைக்கச் செய்தன. 

இந்நாவல் ‘ஆட்டிசம்’ பற்றிய நாவல் அல்ல. ‘ஆட்டிச’ வாழ்வை ஆவணப்படுத்துவது இதன் முதன்மை நோக்கம் அல்ல. ‘ஆட்டிசம்’ ஒரு பின்புலம் மட்டுமே. அவ்வகையில் பாலபாரதியும் லக்ஷ்மி பாலகிருஷ்ணனும் எழுதியவை அனுபவப்பூர்வமானவை. நேரடியாக ஆட்டிச நிலையாளர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடன் தொழில் நிமித்தம் பழகியிருந்தாலும், சிகிச்சையில் பங்கு பெற்றிருந்தாலும், நவோகி ஹிகாஷிடா எனும் ஆட்டிச நிலையிலான சிறுவன் எழுதிய ‘நான் ஏன் குதிக்கிறேன்?(The reason i jump)’ எனக்கு ஆட்டிச உலகம் குறித்து பெரும் திறப்பை அளித்தது. டெம்பிள் கிராண்டின் எனும் ஆட்டிச நிலையாளரின் தன் வரலாறு மற்றும் அவருடைய நூல்களும் இதன் பல்வேறு சாத்தியங்களைக் காட்டின. இந்த பின்புலத்தைப் பயன்படுத்தி நவீன வாழ்வின் பிள்ளைப்பேறு சார்ந்த மெய்யியல் கேள்விகளை, அறக் குழப்பங்களை ‘நீலகண்டம்’ எதிர்கொள்கிறது, இன்னொரு தளத்தில் ‘வாசுதேவனில்’ எழுப்பிக்கொண்ட அதே கேள்விதான், மனித வாழ்க்கை எந்த எல்லையில் பயனற்றதாக ஆகிறது? நாவலின் முதல் சொல் உருக்கொள்வதற்கு முன்னரே அதன் பெயர் ‘நீலகண்டம்’ என மனதிற்குள் உறுதியாகிவிட்டது. கதையின் வடிவத்திற்கும் கருவிற்கும் ஓர்மையிருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பிற்கு நியாயம் செய்திருக்கிறது என்றே நம்புகிறேன். மற்றபடி இந்நாவல் அதன் விதியை தேறட்டும்.

நாவலைப் பற்றி ஜெயமோகனிடம் ஒருமுறை பேசினேன். அவர் நாவல் குறித்துப் பொதுவாகக் கூறியவையும், எனது குறிப்பிட்ட சில ஐயங்களை நோக்கி அவர் அளித்த பதில்களும் பெரும் உதவியாக இருந்தன.  நண்பர்கள் கிரிதரன், அஜய், சுந்தரவடிவேலன், காளிப்பிரசாத் ஆகியோர் இந்நாவலின் முதல் வாசகர்களாக இருந்துள்ளார்கள். ஒரு அத்தியாயம் எழுதி முடித்தவுடன் இவர்களுக்கு அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தேன். நட்பாஸ், சுரேஷ் பிரதீப், அனோஜன், பெரு.விஷ்ணு குமார் ஆகியோர் நாவலின் முதல் முழுமையான வரைவு வடிவத்தை வாசித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நாவலின் இறுதி வடிவை முடிப்பதற்கு முன் எழுத்தாளர் குணா கந்தசாமி வாசித்து அளித்த ஆலோசனைகள் மிகுந்த பயனுள்ளவை. அதைவிடவும் சற்று மனம் குழம்பியிருந்த கணத்தில், இந்த நாவல் நன்றாக வந்துள்ளதாக அவர் சொன்னது நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்தது.   எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் நாவலை வாசித்து சில முக்கியமான யோசனைகளை வழங்கினார். அவருக்கும் மனமார்ந்த நன்றி. மொத்த நாவலையும் மெய்ப்பு நோக்கி அளித்த வெண்பா கீதாயனுக்கு அன்பும் நன்றியும். மற்றுமொரு முறை நுணுக்கமாக பிழை திருத்தியளித்த வேதா நாயக் அவர்களுக்கும் நன்றி. ஜீவ கரிகாலன், விஷால் ராஜா, ஜா.ராஜகோபாலன் ஆகியோருடன் நாவல் குறித்த தொடர் உரையாடலில் இருந்தேன்.  நாவலை முடிக்க என்னைத் தொடர்ந்து உந்தி, என் தயக்கங்களைக் களைந்தவர் மனைவி மானசா, சுதீர் எனக்கு தினமும் புதியவற்றைக் கற்றுக் கொடுக்கிறான், எங்களோடு வந்து இணைந்திருக்கும் சபர்மதி, நெருக்கடிகளை எனக்கு கடத்தாமல் எப்போதும் என்னை இயங்கவிடும் அம்மா, அனைவருக்கும் நன்றிகள்.  இதை நூலாக வெளியிட்டிருக்கும் யாவரும் ஜீவ கரிகாலன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. 

இந்நாவலை வானவன் மாதேவி - இயலிசை வல்லபியைத் தவிர்த்து வேறு எவருக்கும் சமர்ப்பிக்க முடியாது. அவர்களுடனான நட்பும், அனுபவங்களும் என் வாழ்வில் மிக முக்கியமானது என நம்புகிறேன். வானதியின் மரணம் என்னைக் கடுமையாக பாதித்தது. ஒரு நண்பனாக, ஒரு எழுத்தாளனாக வானதிக்கும் அவருடைய நினைவுகளுக்கும் நான் செலுத்தும் எளிய அஞ்சலி என இந்நாவலைக் கொள்ளலாம். 
ஏதோ ஒருவகையில், ஏதோ ஒரு புள்ளியில் நாம் எல்லோரும் நீலகண்டர்களே. 
சுனில் கிருஷ்ணன் 

2 comments:

  1. அருமை. நாவலைப் படிக்கத்தூண்டும் முன்னுரஒ.
    வாழ்த்துகள்.
    சொ.வினைதீர்த்தான்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தோழர்!!!

    ReplyDelete