Saturday, January 20, 2018

பேசும் பூனை - எதிர்வினைகள் - 1


(பேசும் பூனை கதைக்கு வந்த எதிர்வினைகளை இங்கு தொகுத்திருக்கிறேன். இவை ஜெயமோகன் தளத்தில் பதிவேற்றப் படாத, அவருக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள். கதையை பற்றி நல்லதோ அல்லதோ எவ்வித எதிர்வினை வந்தாலும் அது கதையின் விதி மட்டுமே. எனக்கு அதில் பெருமை கொள்ளவோ வெட்கம் கொள்ளவோ ஏதுமில்லை. தொழில்நுட்ப குறைபாடுகளை களைய முயலலாம். போர் வீரன் உடற் பயிற்சி செய்வது போலத்தான் வாசிப்பது எழுத்தாளனுக்கு. தனது க்ராப்டை கூர்மையாக்கி தயாராக வைத்துகொள்ள வேண்டும். படைப்பூக்கம் தன்னால் வந்து அமரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். விமர்சனம் ஒரு எழுத்தாளரை உருவாக்கிவிட முடியும் என நான் நம்பவில்லை. ஆனால் அவனுடைய வெளிப்பாடை சர்வ நிச்சயமாக மேம்படுத்த உதவும். உண்மையில் ஜெயமோகன் தளத்தின் வழியாக பெரிய வாய்ப்பு அமைந்தது. ஆயிரம் பேரையாவது இக்கதை சென்று சேர்ந்திருக்கிறது. வாசித்து கருத்துக்களை எழுதிய அனைவருக்கும் நன்றி.)

--- 

அன்புள்ள ஐயா


பேசும்பூனை குறித்து



தொழில்நுட்பமும் தனிமையும் சேரும்போது நிகழும் மாபெரும் உளச்சிக்கலை அழகாய், விரிவாய் சொன்னது. வெளிநாட்டு வேலைதரும் பொருளாதார வாய்ப்புகள், நிறைவின்மையை ஊட்டி வளர்த்து, பொருட்களைக் கொண்டு நிரப்ப முயன்று தோற்கும் நிலை.





பாம்பு விளையாட்டிலிருந்து பேசும்பூனைக்கு நகர்ந்த்து android தந்த பாய்ச்சல். தான் மட்டுமே செயலாற்றும் நிலையிலிருந்துஇருவழி தொடர்பு தரும் வரைகலை நிரலியும் செயற்கை அறிவும் அடிமனதை பிராண்டும் நெருக்கமும் கிளர்ச்சியும் கொண்டுவளர்வதையும், பாம்புக்கும் பூனைக்கும் மாறி மாறி தவிக்கும் முக்கிய பாத்திரத்தின் ஊசலையும் சித்தரித்தது சிறப்பு





நிரலியிடம் அச்சம் வரும் நிலையை உளவியல் மானுவல் என்னவாக வரையறை செய்துள்ளது என்று அறியக்கூடவில்லை. வரும்நாட்களில் முகநூல் உளநோய்கள் மிகும் என்று எதிர்பார்க்கலாம். தன் விருப்பு, தன் வெறியாய் மாறும்  புள்ளியில் மனிதனில்உள்ள விலங்கு விழித்துக் கொண்டிருக்கிறது





வெண்பூனையின் பச்சைக் கண்கள் விஷ்ணுபுரத்தில் வரும் பச்சைக் கல்லை நினைவுறுத்துகின்றன.  கடைசிக் கீறலில் மணிக்கட்டுநரம்பு துண்டிக்கும் போது, அனல்காற்றின் சுய வதை நினைவுக்கு வருகிறது. மரண அனுபவத்தில் உயிர் அல்லது ஆன்மாவாழ்வின் மைய தருணங்களை மீவிரைவில் ஓட்டுகிறது. ஜெ , கோவை கீதை உரையில், ‘நமக்கு விபத்து வருவதை நாம்பார்ப்போம் ‘ என்று கூறுவது போல, உயிர் ஒரு நொடியுள் முழு வாழ்வை மீள ஓட்டிப்பார்க்கிறது. (என் நண்பர் ஒருவர் இருசக்கரவாகனத்தில் அடிபட்டு, பேருந்தின் அடியில் கிடந்தபோது, சாலை ஓரப்பாதியில் இருந்துகொண்டு, தன் உடலை தாண் பார்த்த்தாகஅதிர்ச்சியுடம் கூறினார்)



இறுதிக்களத்தில் ஒருவேளை சாதாரண உயிர்கள் கடந்த வாழ்வைப் பார்க்கும் போலும். ரமணர் போன்ற அசாதாராணர்கள்,எதிர்கால வாழ்வை ஓட்டிக்கடந்து, பிறர்க்கும் கடக்கவைப்பர் போலும். தனது தாயாருக்கு மரண காலத்தில் எஞ்சிய கர்மாவை ஒருநிமிட்த்தில் அனுபவிக்க வைத்தார் என்பது நோக்கத்தக்க செய்தி. Flatlines பட்த்தில் வரும் செயற்கை மரணத்தருவாய்களில் தன்ஆய்வாளர்கள் குழந்தைப் பருவ நினைவுகளும் குற்ற உணர்வு சமானமும் கொள்வர்.





மின் பொறிச் செயலிகள் பெரும் செயலின்மைக்குள் நம்மைத் தள்ளுகின்றன. இந்த மயக்கத்திலிருந்து  மானுடம்விழித்துக்கொள்ளும் காலம் குறுக வேண்டும். -

மிக மோசமாக தகவல் தொடர்பை பாதித்து, பாதி தொடர்பிலிருக்கும் போதே பேச்சை வெட்ட வேண்டுமெனும் துடிப்பைத்தந்து,அடுத்த அடுத்த பணிகளுக்கு முழுமையின்றி தாவிச்செல்லும் அவசரத்தை கொண்டாடச் செய்து, தன்னையே நேசிக்கும் பித்தில்தள்ளி, கவனகத்தை சிதறடித்து, உறவுகளை உலுக்கும் கையடக்க கிராதகனை உடைத்தெறிய வேண்டும் என்ற வேகத்தைஅளித்தது கதையின் வெற்றி.





அன்புடன்

ஆர் ராகவேந்திரன்

கோவை





அன்புள்ள ஜெ



பேசும்பூனை கதையை இன்னொரு முறை வாசித்தபோது அந்தக்கதையை நான் என்னையறியாமலேயே சுருக்கிக்கொண்டுவிட்டதை உணர்ந்தேன். இப்படி இந்தக்கதையை எழுதியிருந்தாலென்ன. ஒரு பெண்ணிடம் அவள் மகளின் செல்போனிலுள்ள பூனை பேச ஆரம்பிக்கிறது. அவள் தற்கொலைக்கு முயல்கிறாள். அது பேசுவது, அவள் அதை தவிர்ப்பது மட்டும்தான் கதையில் உள்ளது. அந்த மரண விளையாட்டில் மெல்லிய புகைமூட்டமான செய்திகள் வழியாக அங்கிங்கே ஒரு தெளிவு வந்து அவளுடைய பின்புலம் சொல்லப்பட்டிருந்தால் என்ன? இந்தக்கதை அப்போது இன்னும்கூட ஆழமானதாக இருந்திருக்குமோ? நான் ஊகிக்கவேண்டியதையும் சேர்த்தே ஆசிரியர் சொல்லிவிட்டாரா?



நாராயண்

மும்பை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,



நானே தயங்கி தயங்கி எழுதினேன். உங்கள் வாசகர்கள் அடித்து துவைக்கிறார்கள். நல்ல வேளை நான் கதை எல்லாம் எழுதப் போவதில்லை என்பது சந்தோஷமாக இருக்கிறது.



சுனீலின் இந்த நல்ல கதை முக்கியமானக் கதையாக ஆகியிருந்திருக்கக் கூடும். பொதுவாக இந்த இடத்தை எழுதுபவர்கள் காமத்தை வைத்தே எழுதுவார்கள். இதில் அது இல்லை என்பதே ஆசுவாசமாக இருக்கிறது. கதை இரண்டு முக்கியமான கேள்விகளை உருவாக்குகிறது. தேன்மொழியின் உலகுக்குள் அவள் அப்பா, கணவன் யாருமே நுழைந்ததில்லை. திருமணம் புடவை எதிலும் அவள் விருப்பத்தை கேட்டதில்லை. அதற்கு மாற்றாக அவள் மகளிடம் நெருங்கியிருக்க வேண்டும். ஆனால் அவளுக்கு இறந்து போன மகனே பெரிதாகத் தெரிகிறாள். ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை அவன் வழியாக தன் தனிமையின் உலகத்துக்குள் நுழையும் ஒரு ஆணை எதிர்பார்த்திருந்திருக்கலாம். அது நிகழாததே அவளைத் தனிமையில் ஆழ்த்துகிறது.



அந்த தனிமையில் நுழையும் பூனை பெரிய ஆசுவாசம்தானே, அதனிடமிருந்து ஏன் அவள் தப்பிக்கப் பார்க்கிறாள்? அது அவளை நுகர்வோராக பார்த்தாலும் கூட? அவள் அஞ்சுவது அப்படி ஒரு இடத்தை (அது ஒரு app-ல் இருந்தால் கூட) பகிர்ந்து கொள்வதைத்தான் என நினைக்கிறேன். இந்த புதிய உறவிடம் தன்னை வெளிப்படுத்துவதை அனீஸிடம் மறைப்பதில் அவள் தயக்கம் வெளிப்படுகிறது. நான் இதைப் பார்த்திருக்கிறேன். இள வயதில் பெண்கள் சுதந்தரத்தைக் கனவு காண்பார்கள். ஆனால் அதனுடன் வரும் பயத்தை எதிர்கொள்ள முடியாமல் குடும்பத்தில் சரணடைந்து விடுவார்கள். அவர்கள் விரும்புவது பாதுக்காப்பான ஒரு எல்லைக்குள் கட்டில்லாத சுதந்திரம். அம்மாக்களுக்கு மகன்களிடம் மட்டும்தான் அது கிடைக்கும். முப்பது வயதுக்கப்புறம், சௌகர்யமான பாதுகாப்பான குடும்பம் எனவும், உள்ளே கனவுகளில் அலையும் இளம்பெண் எனவும் இரண்டு உலகமாக தன்னை பிரித்துக் கொள்ளாத பெண்கள் அபூர்வம். சாதாரணமாக முகனூலில் நிறைய பெண்கள் அப்படி இருக்கிறார்கள். இங்கு அவர்கள் உலகம் குடும்ப உலகத்திற்கு நேர் எதிர். தேன்மொழி தன்னை இரண்டாக பிரித்துக் கொள்ளும் கணம்தான் அந்த தற்கொலை முயற்சி.



இந்த இடங்கள் எல்லாமே கதாசிரியர் யோசிக்காமல் எழுதியது எனத் தோன்றுகிறது. அதனால்தான் கதை இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் கவனம் பூனை அவளை ஆக்கிரமித்துக் கொண்டதை விவரிக்க போய் விடுகிறது. தமிழ் சினிமாவில் ஹீரோ ஒரே பாட்டில் எப்படி பணக்காரனாக ஆனார் என்று காட்டுவதைப் போல இருந்தது. படித்து முடித்த உடன் பூனை அவளை எதை எல்லாம் வாங்க வைத்தது என்பதே நினைவில் வருகிறது, நல்ல சாப்பாட்டுக்கு அப்புறம் தட்டே ஞாபகத்தில் இருப்பதைப் போல.



புது எழுத்தாளர்களுக்கு எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என்று பதட்டமாக இருக்கும். ஆனால் புற உலகத்தை கொஞ்சமாக சொன்னால் கூட போதும். அப்புறம் உணர்ச்சிகளை சொல்லலாம் அல்லது அதை வாசிப்பவரிடம் விட்டுவிடலாம். நான் வண்டி ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது சரியாகத் திரும்பாதோ என ஸ்டியரிங்கை நிறையத் திருப்பி விட்டேன். அப்போது வண்டி ஒட்டக் கற்று கொடுத்த என் மாமா சொன்னார், இது அம்பாஸடர் இல்ல. பவர் ஸ்டியரிங். சும்மா கைய வச்சா போதும் என்று.



எழுதும் போதுதான் தெரிகிறது இதை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன் என்பது. அதற்கு நன்றிகள்.



மாத்யூ ஆர்னால்ட்



அன்புள்ள ஜெ,

பேசும்பூனை நல்ல கதை என எல்லாரும் எழுதிவிட்டார்கள். நான் பேச நினைப்பது ஏன் அது ஒரு மாபெரும் சிறுகதையாக இல்லை என்பதைப்பற்றி மட்டும்தான். அதாவது இலக்கியம் என்பது அடிப்படையில் அன்றாட வாழ்க்கைக்கு எதிரான ஒரு ரிவோல்ட் மட்டும்தான். ஆகவே அன்றாட வாழ்க்கையையே சிறுகதையிலே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கும்போது சலிப்பு உருவாகிவிடுகிறது. அன்றாடவாழ்க்கை அதற்கு அப்பால்செல்லும் கதைமையத்துக்கான லாஞ்சிங் பேட் மட்டும்தான். அது எவ்வளவு இருக்கவேண்டுமோ அவ்வளவுதான் இருக்கவேண்டும். நம்மை எக்சைட் செய்வது அன்றாடவாழ்க்கை அல்ல. அதைக்கொண்டு நாம் சென்றடையும் இடம்தான். அது ஸ்பிரிச்சுவலாக இருக்கலாம். சைக்கடெலிக்கானதாக இருக்கலாம். வேறு எதுவானாலும் சரி. ஆனால் பேசும்பூனை போன்ற கதைகளில் அன்றாடவாழ்க்கையை பரப்பிப்பரப்பி அதைவிட்டு மேலே செல்லும் இடத்தை சென்று அடைவதற்குள் களைப்படைய வைத்துவிடுகிறார்கள்



ராம்சுந்தர்.

சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ – அகத்தின் குரல்



எதிப்பார்ப்புகளுக்கும், உண்மைக்குமான இடைவெளியைப் பற்றிய கதையிது. எவருக்குமே தான் எண்ணிய வாழ்க்கை அமைவதில்லை. சிலருக்கு அந்த இடைவெளி குறைவாகவும், சிலருக்கு அதிகமாகவும் இருக்கிறது. பிள்ளைக்காகவாவது இனி வாழவேண்டுமேன அந்த இடைவெளியைக் கடக்க, ஏதோவொரு காரணத்தைக் காட்டி தன் வாழ்நாட்களை கடத்துவார்கள். அப்படி ஒரு காரணம் கிடைக்காத போது ஏற்படுகிற விளைவுகளைப் பற்றி சித்தரிக்கும் கதை.



நாம் பார்க்கும் மனிதர்களுக்கு எப்போதும் இரண்டு முகம் இருக்கும். ஒன்று வெளியில் காட்டிக்கொள்கிற அல்லது நடிக்கிற முகம் மற்றது நடிக்காத, உண்மையான முகம். முன்னது புறம் மற்றொன்று அகம். சராசரி குடும்ப பெண்ணான தேன்மொழியின் எதிப்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்க்கை அமையவில்லை. காமத்திற்காக மட்டும் மனைவியை நாடும் கணவனாக கணேசன். புடவை பிடிக்குமா எனப் பூனை கேட்டதும், “அவள் கண்கள்சட்டென சிவந்து கலங்கின. “இத அவன் இதுவர கேட்டதில்லை” “ என நினைத்துக்கொள்வாள்.  அவளுக்கும் அவனுக்குமான உறவு என்பது “வீட்டுக்காரன் அல்ல அவன் ஒரு விரும்பப்படாத நெடுநாள் விருந்தாளி”.  உண்மை முகம் வெளிப்படுகின்ற போது இருவருக்குமான முரண்பாடுகள் உச்சத்தை அடைகின்றன.  அதனைச் சரிக்கட்ட வேறு ஒரு காரணத்தை கண்டடைகிறாள்.



பேசும் பூனை வெறும் நிரலி என்று சொல்லிவிட முடியாதேன்றே தோன்றுகிறது. காரணம், 1. பூனை அவளுக்கு மட்டும் கேட்கும்படி “எனக்கு வேறுபெயர் உண்டு, நீ மட்டுமே அறிந்த பெயர்” எனக் குறும்பாக தொப்பியை சுழற்றிச் சிரித்தது. 2. கணேசனுடன் அவள் சாமதானம் அடைந்தவுடன் “அவளுள் அமர்ந்திருந்த ஏதோ ஒன்று அவளை உதறிச்சென்றது போல் லேசாக உணர்ந்தாள்”. என பல்வேறு இடங்களில் அது நிரலி மேல் மாயமாய் செயல்படும் அவளது உள்விருப்பங்களே அன்றி வேறு இல்லை.  விரும்பும் பாடல், நவீன வீட்டு உபயோகப் பொருட்கள் என எல்லாம்  பூனையின் குரலில் ஒலித்த அவளது அகமே.



முக்கியமான இடம், ஹர்ஷிதா பூனையை எளிதாகத்  தாண்டி வேறு விளையாட்டுக்குப்  போய்விடுகிறாள். அவளது அம்மா கேட்டும் கூட வேண்டாமென்கிறாள். ஆனால் தேன்மொழியால் அதனைக் கடக்க  முடியவில்லை. தன் அகத்தை அதில் ஏற்றிக்கொள்கிறாள். ஒருவேளை இது அவளது மனச்சிக்கலின்  தொடக்கமாக இருக்கலாம் என்றுகூட எண்ணிக்கொள்ளச் சாத்தியமிருக்கிறது. பாம்பு விளையாட்டு என்பது தன் அகத்தோடு விளையாடுவதாய் கொள்ள வேண்டியிருக்கிறது. கணேசனை மணக்க அவளது அகம் வைத்த இலக்கு 120. அதையும் தாண்டி தான் சாக வைத்த இலக்கு அதிகம். அகமனதை வென்று தான் நிஜத்தை ஏற்றுக்கொண்டாள். பூனை நிரலியை தொடர அவள் வைத்த இலக்கு இருபதை எட்டும் போது மனம் தவிக்கிறது, வென்றுவிடுமோ என்ற பயம்.  வெற்றி,தோல்வி எதுவும் தெரியாமலே பூனை நிரலியை உயிர்ப்பிக்கிறாள். எனவே பூனை நிரலி என்பதும் அக மனதுடன் விளையாடுவதே ஆகும். அவ்வாறே அவள் சிறுவயது முதல் வளர்ந்திருக்கிறாள்.



உண்மை உடையும் தருணம் தன் பிள்ளையை அடிக்கும் இடத்தில் நிகழ்கிறது. அதுவரை இருந்த மாயம் விலகி, நிகழ்காலம் அவளை எட்டுகிறது. எதிர்பார்ப்புகளின் உலகத்தில் வாழ்ந்துவிட்டு, உண்மை உலகினை காணும் போது வருகிற ஏமாற்றம் தாங்கிக்கொள்ள முடியாததாய் இருக்கிறது.  தற்கொலைக்கு அதுவே காரணமாகவும் அமைகிறது. ,மறுபடியும் அவள் அகமனதுடந்தான் விளையாடி வெல்கிறாள்.



மயக்கத்திலிருந்து முழித்த பிறகும் கேட்கும் அந்தப் பூனையின் குரல் சர்வ நிச்சயமாய் அவளது அகத்தின் குரல், அது அழியாது. இந்த முறை நிரலி இல்லாமலே அது செயல்பட ஆரம்பிக்கிறது.

குறுநாவலாக எழுத முயன்று சிறுகதையை வடிவத்தைஅடைந்திருக்கும் சிறுகதையிது, எனவே அதற்கான குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது. நிச்சயமாய் இது தமிழில் எழுதப்பட்ட நல்ல சிறுகதை என்பதில் எந்தவித தயக்கமும் இல்லாமல் சொல்ல முடியும்.





நன்றி

மகேந்திரன்.க



அன்புள்ள ஜெ



பேசும்பூனை ஒரு நல்ல கதை. ஆனால் இன்றைய புதிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் உரிய ஒரு பொது அம்சம் உள்ளது. அதாவது வரண்ட நடை. இது அசோகமித்திரனில் இல்லை. அவர் எப்போதுமே மெல்லிய ஹ்யூமருடன் மட்டுமே சொல்வார். இது சா.கந்தசாமியிடம் இருக்கும் அம்சம். பூமணி போன்றவர்களிடமும் உண்டு. ஆனால் சுவாரசியமான தகவல்கள் வழியாக அதை அவர்கள் ஈடுபட்டிவிடுவார்கள்.

வரண்டநடை என ஏன் சொல்கிறேன் என்றால் ஒன்று ஆர்வமூட்டக்கூடிய புதியசெய்திகள் இருக்கவேண்டும். நகைச்சுவை இருக்கலாம். அல்லது உணர்ச்சிகளாவது இருக்கலாம்.  அல்லது அழகுணர்ச்சியுடன் சொல்லப்பட்ட நெரேஷன் இருக்கலாம். வண்ணதாசனிடம் இருப்பது போல எதுவுமே  இல்லாமல் சும்மா சொல்லிக்கொண்டே போகிறார்கள். இந்த கதைகளில் இதுவரை விதிவிலக்காக இருப்பது சுசித்ராவின் கதை மட்டுமே.

கரு என்றவகையில் எனக்கு இந்தக்கதையே பிடித்திருந்தது. ஆனால் இன்னொருமுறை வாசிக்கமாட்டேன். அந்த அளவுக்கு டிரை. ஜீரோ நெரேஷன் என்ற பேரில் ஃபேஸ்புக்கில் எந்தக்கவனமும் இல்லாமல் போஸ்ட்கார்டு எழுதுவதுபோல எழுதுகிறார்கள். அப்படியே எல்லாரும் பழகிவிட்டார்கள் என நினைக்கிறேன்



செந்தில்குமார்

அன்புள்ள ஜெ,
வெளிநாடு வாழும் கணவனைப் பிரிந்து தேன்மொழி வாழும் சலிப்பான வாழ்க்கைக்கு ஒரு தொழில்நுட்ப தீர்வாக வருகிறது பூனை. தோழனாக, காதலனாக, கணவனாக என்று அடுத்தடுத்த படி நிலைகளுக்கு சென்றுகொண்டே இருக்கிறது பூனை.

பூனை அவளின் அனைத்து புற அக தேவைகளை பூர்த்திசெய்கிறது. ஆனால் தவிர்க்க முடியாத ஒரு சிக்கல் அதில் உள்ளது. அது ஒரு கற்பனை உலகு என்பதுதான். அதை உடைக்க முடியாமல் தன் நிகழ் உலகை உடைக்க தற்கொலை வரைச் செல்கிறாள்.



முக்கியமான முடிவுகளை எடுக்க தேன்மொழி பாம்பு ஆட்டத்தை பயன்படுத்துவது நல்ல சித்தரிப்பு. அது கதையை சிதறவிடமால் கருவை இன்னும் இறுக்கமாக முன்வைக்கிறது.

வாட்சப், வீடியோ கால் என மனிதர்களை இணைக்கமுயல்கிறது தொழில்நுட்ப வளர்ச்சி. ஆனால் மனிதன் இன்னமும் நிஜத்தில் அருகாமயைத் தேடும் உயிர்தான்.

ஒரு விஷயத்தை அழுத்தமாக முன்வைக்கும் கதை மேலெழுந்துவிடுகிறது. மனைவி, குழந்தையை சொந்த ஊரில் விட்டுவிட்டு பொருளைத் தேடி வெளிநாடு செல்லும் சமூக சிக்கலைச் பேசும் கதையாகிவிடுகிறது. பொருள் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் குடும்ப வாழ்வு தொலைந்து விடுகிறதே என்ற அச்சத்தை எழுப்புகிறது கதை.

பேசும்பூனை அருமையான கதை. சுனில் கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ராஜா.



அன்புள்ள ஜெ,



பேசும்பூனை உங்களைப் பொறாமைப்பட வைக்கும் கதை, தமிழின் சிறந்த கதை என முன்னொட்டோடு பிரசுரமாகியது. இருந்தாலும் உங்கள் வாசகர்கள் அக்கதையை ஆங்காங்கே கிழித்து விட்டார்கள். அல்லது அப்படிச் சொன்னதனாலேயே கிழித்துவிட்டார்கள். அது குறுநாவல். அப்படி விரிவதற்குரிய கதைதான். ஆகவே கொஞ்சம் விரிவாக்கம் இருக்கிறது. அதேசமயம் முக்கியமான கதை என நினைக்கிறேன். என்ன இருந்தாலும் ultimate fall என்பது இலக்கியத்தில் ஒரு முக்கியமான கரு. அந்தவகையான கதை



ஜெகதீஷ்

No comments:

Post a Comment