Saturday, July 31, 2021

தத்தளிப்புகளின் கலைவடிவம் - புரவி நேர்காணல்


புரவி ஜுலை 2021 இதழில் என் நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. வாசகசாலை நண்பர்களுக்கும் நேர்கண்ட எழுத்தாளர் கமலதேவிக்கும் நன்றி. 
வாசகசாலை 'புரவியை' நடத்துவதில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக அதன் அமைப்பாளர் தெரிவித்தார். 

இது அவர் அனுப்பிய செய்தி.

ஒவ்வொரு மாதமும் இதழ் அச்சுக்குப் போவதற்கு முன் வருகிற அதே பிரச்சனைதான். பண நெருக்கடிகளைத் தாண்டி ஒவ்வொரு இதழையும் அதே தரத்துடன் கொண்டு வருவதென்பது பெரிய போராட்டமாக உள்ளது. முடிந்தவரை நமக்குத் தெரிந்த வாசகர்கள், படைப்பாளிகள் மற்றும் நண்பர்களிடம் தொடர்ந்து சந்தா குறித்து வலியுறுத்திதான் வருகிறோம். ஒவ்வொரு மாதமும் சந்தாதாரர்களை அதிகரித்துக் கொண்டே சென்றால் மட்டுமே இதழை எந்த நெருக்கடிகளுமின்றி கொண்டு வர இயலும். எனவே இயன்ற வாசகர்கள் தயவுசெய்து சந்தா செலுத்தி உதவவும். மாதம் தவறாமல் இதழ் உங்கள் வீடு வந்து சேரும் 💚

என்றென்றும் அன்புடன் 
புரவி 💜
வாசகசாலை 🖤

தொடர்புக்கு : 

கார்த்திகேயன் - 9942633833
அருண் - 9790443979

புரவி இதழ் வேண்டுபவர்கள் தொடர்புகொள்ளவும். 

----

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பான, ’அம்புப் படுக்கை’ மற்றும் முதல் நாவலான, ’நீலகண்டம்’ நாவலை மையப்படுத்தி இந்நேர்க்காணல் செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் என்பதையும் தாண்டி இவர்  மொழிபெயர்ப்பாளர், ’பதாகை’ இணைய இதழின் ஆசிரியர், காந்தியவாதி எனப் பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு எழுத்தாளரை எழுதச் செய்யும் விசைகள், எழுத்தின் ஆழத்தில் நின்றிருக்கும் கேள்விகள் மற்றும் அவரது அன்றாடம் இம்மூன்றையும் பற்றிய மிக அடிப்படையான கேள்விகள் முக்கியமானவை. அவற்றை இந்நேர்காணலில் முயன்றிருக்கிறோம். அலைநீரில் விழுந்த ஆலிழையின் தத்தளிப்புகளைக் கொண்ட மனித மனத்தின் ஆழத்தை இயக்கும் அகவிசைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் சுனில் கிருஷ்ணன்.
மருத்துவரான அவர் இத்தகைய நெருக்கடியானதொரு காலகட்டத்திலும் நமக்காக பொழுதொதுக்கியமைக்கு முதலில் அன்பும் நன்றியும்.

1.உங்களது அன்றாட நாளில் வாசிப்பு மற்றும் எழுத்திற்கான நேரத்தை எப்படி அடைகிறீர்கள்?

நான் ஒரு தொழில்முறை ஆயுர்வேத மருத்துவர். எங்களிடம் வருபவர்கள் பெரும்பாலும்  நாட்பட்ட நோய்களைச் சுமப்பவர்கள்தான். ஆகவே ஒப்பு நோக்கில் நவீன மருத்துவர் போல் உயிர்காக்கும் உடனடிப் பரபரப்பு ஏதுமற்ற நிதானமான வாழ்க்கை முறைதான். மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கும் அடுத்த நோயாளிக்கும் இடையில் உள்ள நேரத்தில்  கூட  வாசிப்பேன்‌. கணினி திறந்தே இருக்கும். எழுதவும் செய்வேன். இப்போது கைப்பேசியில் எழுதப் பழகிவிட்டதால் இன்னும் கூடுதல் வசதியை உணர்கிறேன். எழுதவும் வாசிக்கவும் அறுபடாத நேரம் கிடைப்பது பெரும் சவால். எனினும் அதை குறையாக நான் உணர்வதில்லை. 
கடந்த ஆண்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மருத்துவமனையை வீட்டுக்கே மாற்றிவிட்டோம்.  கொரோனா இரண்டாம் அலை மரபு மருத்துவமுறைகளை அவசர நிலைகளை எதிர்கொள்ளும் நிலைக்கு  உள்ளாக்கியது. கடந்த ஒன்றரை மாதம் முழு நேர ஆயுர்வேத மருத்துவராக வாசிக்கவோ எழுதவோ நேரமின்றி, நவீன மருத்துவரின் பரபரப்புடன்  கடந்தேன். ஐந்து வயது மகன் இப்போது பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்பதால் அவனையும் இரண்டு வயது மகளையும் நாள் முழுக்க நானும் மனைவியும் அம்மாவும் மாறி மாறிப் பார்த்துக்கொள்கிறோம். இணைய வகுப்புகளில் அவனுடன் அமர வேண்டியுள்ளது. உண்மையில் இந்த கொரோனா காலகட்டத்தில் வாசிக்கவும் எழுதவும் எனக்கான நேரத்தை மீட்பது முன்பை விடவும் சவாலாகத்தான் உள்ளது. ஆனால் குழந்தைகளுடன் விளையாடித் திளைப்பதிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் எழுத்து அளவிற்கே படைப்பூக்க மனநிலையை தக்கவைத்து கொள்ள முடியும் என்பதைக் கண்டுகொண்டேன். கொரோனா காலத்திற்கு முன்பிருந்த எழுத்து, வாசிப்பு அன்றாடத்தை இன்னும் நான் மீட்டுவிடவில்லை. இப்போதைக்கு கிடைக்கும் நேரத்தை கவனச்சிதைவின்றி வாசிக்கவும் எழுதவும் பயன்படுத்த முயல்கிறேன். 


2.எழுதும்போது நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? உதாரணமாக ஒருகருவை கதையாகாமல் செய்பவைகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?  மனநிலை,காரணமில்லாது இடையில் தடைபடுதல், எழுதும்பொழுதே கருவிற்கு எதிர்த் திசையில் கதை சென்றுவிடுதல், தமிழ் வழியில் கல்லாத நிலையில் சிந்தனையில் ஓடும் மொழியை எப்படி கையாள்கிறீர்கள்?


ஒரு கதை என்னுள்ளிருந்து தன்னையே உந்தித் தள்ளிக்கொண்டு வரவேண்டும் எனக் காத்திருப்பதே என் வழக்கம். என் அனுபவத்தில் எழுதத் தொடங்கி மூன்று நாட்களுக்குள் ஒரு கதையின் முதல் வரைவு வந்துவிடவில்லை என்றால் கதை இன்னும் முதிரவில்லை என்றே பொருள். அந்தக் கதையை எப்படியாவது முடித்தாக வேண்டும் என முயலும்போதெல்லாம்  நிறைவற்ற அனுபவமே எஞ்சும். தொடர் அமர்வுகளில் தடைபடாத ஓட்டத்துடன் முடிக்கும் கதைகளே சிறந்த கதைகளாக வந்துள்ளன என்பது என் அனுபவம். 'இந்திரமதம்', 'களி' போன்ற கதைகளை அடுத்தடுத்த நாட்களில் எழுதினேன். 'ஆரோகணம்' கதையை எழுதி கைவிட்டு பின்பு ஒரு வருடங்கழித்து சட்டென ஒரே அமர்வில் எழுதி முடித்தேன். கதைகள் முதிர்ந்து உருவம்பெறக் காத்திருப்பதே எழுத்தின் பெரும் சவால். இதழ்கள் கேட்கும்போது கதை அளிக்க இயலாமல் ஆகலாம். அல்லது ஒப்புக்கொண்டதற்காக முழுவதும் உருகொள்ளாத கதையை அளிக்க வேண்டி இருக்கலாம். ஒரு கதையைக் கைவிடவும் ஒத்திவைக்கவும் மனத்திண்மை வேண்டும். அது எல்லா சமயங்களிலும் வாய்ப்பதில்லை. அதே சமயம் பிரசுர நிர்பந்தம் இல்லையென்றால் கதையோ கட்டுரையோ தன்னிச்சையாக எழுத அமர்வதில்லை என்பது மற்றொரு சிக்கல். எவ்வித புறத்தூண்டலும் அழுத்தமும் இல்லாமல் தன்னிச்சையாக தொடர்ந்து எழுதும் நிலையை அடைய வேண்டும் என்பதே லட்சியம். ஒரு கேள்வி அல்லது ஒரு படிமம் இவையிரண்டில் ஏதோ ஒன்றுதான் என்னை கதை எழுதத் தூண்டுபவை. அவற்றைத் தொடர்ந்து செல்பவன் என்பதினால் கதையாகாமல் போகும் சிக்கலில்லை. அதேபோல் இவற்றை மட்டுமே கருத்தில் கொள்வதால் கதை ஒரு தொலைதூரத்துப் புள்ளியாகவே துலங்கும்.‌ பெரும் திட்டமிடல் என ஏதுமில்லை. எழுதி முடித்த பின்னர் சில புள்ளிகளை செறிவாக்குவதுண்டு. திறந்ததன்மையுடன் கதைகளை எழுத அமர்வது சில கூடுதல் வாய்ப்புகளை அளிப்பதாகவே உணர்கிறேன். மிக முக்கியமான சிக்கல் என்பது கதை எழுதப் போதுமான மன அமைப்பை அடைவதுதான்‌. மொழியாக்கம், விமர்சனக் கட்டுரைகள் எனத் தொடர்ந்து இயங்குவதில் உள்ள சிக்கல் பெரும்பாலும் நம் வாசிப்பு நம் தேர்வாக இருக்காது என்பதே. நம் நேரம் நம் கையில் இல்லாத உணர்வை அது அளிக்கும். கூட்டங்களில் பேசுவதும் மிகுந்த உழைப்பைக் கோருவது. மனம் அடுத்தடுத்து ஏதோ ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தால் அங்கே கதை வந்தமர முடியாது. மனதை ஒழித்து ஓரளவாவது காலியாக்க வேண்டும்.  என்னால் அத்தனை எளிதில் எதற்கும் மறுப்பு சொல்ல முடியாது என்பது மற்றுமொரு பலவீனம். இவற்றுக்கு இடையே ஒரு சமநிலையைக் கொணர முயற்சிக்கிறேன். 
 தமிழை ஒரு மொழியாக பள்ளியில் கற்கவில்லை என்பது எனக்கு எழுத எப்போதும் தடையாக இருந்ததில்லை. ஏனெனில் என் எழுத்து முழுக்க நவீன தமிழ் இலக்கிய வாசிப்பினால் உருவானது. சில எழுத்துப் பிழைகள் வருவதுண்டு. அவை பிரசுரமாவதற்கு முன்னர் பெரும்பாலும் நண்பர்களின் உதவியால் களையப்பட்டுவிடும். ஆனால் பொருள் பிழையோ வாக்கிய அமைப்பில் பிழையோ அரிதினும் அரிது. கதைகள், கட்டுரைகள் எழுதும் முன்னரே மொழியாக்கங்கள் செய்ததினால் அடைந்த தேர்ச்சி என சொல்லலாம். ஆனால் வாசகராக எனக்கு இது ஒரு எல்லையை அளிக்கிறது. மரபிலக்கியங்களை முழு ஈடுபாட்டுடன் வாசித்துப் பொருள்கொள்ள முடிவதில்லை. எனினும் அதையும் கடந்துதான் ஆக வேண்டும். நாஞ்சில் நாடனின், 'பாடுக பாட்டே', 'கம்பனின் அம்பறாத்தூணி', ஜெயமோகனின் 'சங்கச் சித்திரங்கள்' போன்ற நூல்கள் என்னைப் போன்றவர்களுக்கு மரபிலக்கியத்தின் ருசியை அறிமுகம் செய்கின்றன. 

3. பாற்கடல் படிமத்தை இதுவரை எழுதிய உங்கள் புனைவுகளின் அடிநாதமாக எடுத்துக்கொள்ளலாமா?  பேசும்பூனை குறுநாவல் மற்றும் வாசுதேவன் சிறுகதை, நீலகண்டம் நாவல் என்று இந்த மூன்றுவடிவங்களிலும் அந்த தத்தளிப்பை விசாரிக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நம்மை ஊசல் போல நிலையற்றவர்களாக காலமெல்லாம் அலைகழிக்கும் ஒன்றை எழுத்தில் காட்டிவிட எத்தனிக்கிறீர்களா? இல்லை இயல்பாகவே சகமனிதரின் இந்த தத்தளிப்புகள்தான் உங்களை எழுதவைக்கிறது என்று நினைக்கிறீர்களா?

பாற்கடல் எனும் படிமம் பற்றிய உங்கள் அவதானிப்பு எனக்குமே புதிதாக இருந்தது. நல்ல அவதானிப்பை, ’உம்’கொட்டி உடனடியாக ஏற்றுக்கொள்ள மனம் அவசரப்படுகிறது. அப்படி ஒரு படிமமாக எழுத்தாளரை தொகுத்துக்கொள்வது அவரை சுருக்குவதாகத் தோன்றினாலும் ஒரு நல்ல முறை என்றே தோன்றுகிறது. நாம் தொடரும் அத்தனை எழுத்தாளர்களும் இப்படி ஏதோ ஒன்றாக உருமாறித்தானே நமக்குள் அமர்ந்திருக்கிறார்கள்? பாற்கடல் பேரமைதியை உருவமாகக் கொண்டுள்ளது. ஆனால் அதற்கடியில் பேரியக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நன்மை, தீமை எனும் இருமைக்கு அப்பால் யாவற்றையும் உள்ளடக்கியதாக உள்ளது. பேரசைவுகளின் அசைவின்மைதான் பாற்கடல். யாவற்றையும் பிறப்பித்து யாவற்றையும் அரவணைத்து அமிழ்த்திக்கொள்ளும் சலனமற்ற பாற்கடல். வாசுதேவன், பேசும் பூனை, நீலகண்டம் ஆகிய மூன்றுமே ஒரே கேள்வியின் வெவ்வேறு பரிமாணம்தான். ஆனால் அவை அடைந்த விடைகளில் இயல்பாக ஒரு பரிணாமம் உள்ளதாக உணர்கிறேன். இவை இலக்கியத்தில் புதிய கேள்விகள் அல்ல. ஆனால் கதைகள் ஆத்மார்த்தமாக அவற்றைத் தொடர்கின்றன என்றே நம்புகிறேன்.  

4.விரிவான நாவல்கள் எழுதப்படும் காலத்தில் செதுக்கி எடுக்கும் வடிவத்தை நீலகண்டத்திற்கு தேர்ந்தெடுக்க சிறப்பான காரணம் உண்டா?

நீலகண்டம் இயல்பாக பலகுரல் தன்மை கொண்ட கூறுமுறையை வெளிப்படுத்துகிறது. ஒரு  முன்வடிவம் என அசோகமித்திரனின், 'கரைந்த நிழல்கள்' மற்றும் 'ஒற்றனை' சொல்லலாம். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைக்குரிய கூர்மை கொண்டவை. சயந்தனின், 'ஆறாவடுவும் இத்தகைய தன்மை உடைய படைப்பே. ஆனால் மேற்சொன்ன கூறுமுறையின் இறுக்கம் நீலகண்டத்தில் இருக்காது. ததும்பும் அலைபாயும் தன்மை அதற்கு உண்டு. விரிவான புற உலகைச் சித்தரிக்க வேண்டிய நாவல்கள் பெருநாவல்களாக ஆகின்றன. வெவ்வேறு காலகட்டம், தொன்மங்கள் எனப் பயணித்தாலும், 'நீலகண்டம்' அதிகமும் அக உலகையே சித்தரிக்கிறது. ஆகவே அதற்கு பெருநாவல் வடிவம் தேவைப்படவில்லை. நாவலின் வடிவத்தை நாம் சுமத்த முடியாது/ கூடாது. இயல்பாக அதன் பேசுபொருள், தன்மை சார்ந்து தேர்ந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். 

 5.ஹரியின் இன்ஸ்பிரேசன் என்று யாராவது உண்டா?

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்பின் கதைமாந்தர்களின் சாயல் ஹரிக்கு உண்டு. சுரேஷ் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பதை முன்கூட்டியே அறியும் அளவுக்கு அவருடன் தொடர் உரையாடலும் நட்பும் உண்டு. அவருடைய கருத்துலகத்துடன் எனக்கு ஏற்பும் மறுப்பும் கொண்ட உறவே இப்போது வரையில். மறுக்கும்போது கூட அதில் அசவுகரியமான உண்மை ஒன்று இருக்கும். சுரேஷின், 'பதினோரு அறைகள்' கதையில் வேர் கொண்டு ஹரியின் பாத்திரம் வளர்ந்ததை நாவல் முடித்த பின் ஒரு வாசகனாக என்னால் கவனிக்க முடிந்தது. 

6. ‘வரு’ என்ற குழந்தையின் மனப்போக்கை எழுதுவதற்கு உங்கள் கல்வியும் தொழிலும் உதவினவா? அல்லது அது போன்ற குழந்தைகளுடன் பழகியிருந்தீர்களா? உங்கள் அனுமானமா? இந்த சவாலை எப்படி எதிர்கொண்டீர்கள்?

கல்வியும் தொழிலும் நிச்சயம் உதவின. அவர்களுடைய உடல்மொழியை பொதுவான நடத்தைகளை அறிவதற்கு நேரடி அனுபவம் உதவின.  குறைபாட்டின் மருத்துவப் பின்புலத்தைப் புரிந்துகொள்ள மருத்துவ அறிவு  உதவியது. ஆனால் அவர்களின் அக உலகை சித்தரிப்பதுதான் பெரும் சவால். ஆட்டிச நிலையிலிருந்த நவோகி ஹிகாஷிடா எனும் பதின்ம வயது ஜப்பானிய சிறுவன் எழுதிய, 'நான் ஏன் குதிக்கிறேன்?( The reason i jump)' ஆட்டிச நிலையினுள் இருந்து வந்த மிக‌ முக்கியமான குரல். அந்த நூலும் டெம்பிள் கிராண்டின் நூல்களும் அவர்களின் அக உலகை எனக்கு ஓரளவு பரிச்சயப்படுத்தின. நீலகண்டம் ஆட்டிசம் பற்றிய நாவலில்லை. அதை பின்புலத்தில் நிறுத்தி வாழ்வின் பயன்மதிப்பு என்ன எனும் ஆதாரக் கேள்வியை விசாரணை செய்கிறது. அறிந்ததைக் கொண்டு அறியாததை  கற்பனையில் உருவாக்கி, அதன் வழி புதிய அறிதலை உருவாக்குவதுதானே எழுத்தின் பயன்மதிப்பு. 

7.நீலகண்டம் நாவலில் உங்களை மீறி எழுந்த இடங்களாக நீங்கள் உணர்ந்தவற்றுள் முக்கியமான ஒன்றை கூறமுடியுமா? 

பல இடங்களைச் சொல்லலாம். சுடலை மாடன் மெடீயா அபத்த நாடகம் திட்டமிடப்படாத அத்தியாயம். பச்சைப்பாவடையில் செந்திலை சிறுமி துரத்திவரும் இடம், அமுத பர்வம், நஞ்சு பர்வம், சீராளன் கதை,  உச்சமாக ஒன்று மற்றொன்றாக மாறும் பாற்கடல் கடையும் சித்தரிப்பு. ஆழ்ந்த பிலத்துக்குள் இறங்கி தனது விடுதலையை செந்தில் கண்டடையுமிடம். செந்தில் ரம்யா உறவுச் சிக்கல்களும் சிறார் பகுதிகளும் மட்டுமே ஓரளவு என் திட்டத்திற்குட்பட்டது என சொல்லலாம். 

8.’கூண்டு’ போன்ற உருவகக்கதைகளை எழுதுவதற்கு உங்களை தூண்டுவது எது?


முன்னரே சொன்னது போல, எனக்கு ஒரு கதை கேள்வியாகவோ அல்லது படிமமாகவோதான் முதலில் உருக்கொள்ளும். காளிங்க நர்த்தனம், ஆரோகனம் போன்றவை கனவுக் காட்சிகள். அவற்றைப் பொருள்படுத்திக்கொள்ள அக்காட்சிகளைச் சுற்றி கதை உருவானது‌. விஷக்கிணறு, கூண்டு போன்றவை உருவகக் கதைகள். நீலகண்டமும் கூட அப்படித்தான். ஒரு ஆற்றல்மிக்க படிமத்தின் மீட்டல். அல்லது ஒரு படிமத்தை மீட்டி மீட்டி அதன் ஆற்றலைப் பெருக்குவது. கூண்டு பண மதிப்பு நீக்கத்திற்கு எதிர்வினையாக உருவான கதை என சொன்னால் நம்புவதற்கு சிரமமாகக் கூட இருக்கலாம். கூண்டு எனும் உருவகம் வழியாக பண மதிப்பு நீக்கம் எனும் தற்கால நிகழ்வின் ஆதார சிக்கலை/ மனப்போக்கை காலமின்மைக்கு கொண்டு செல்ல முடிகிறது. பண மதிப்பு நீக்கத்தை அதன் துயரங்களை ஆவணப்படுத்தும் கதைகள் வேண்டியதில்லையா என்றால் அவற்றை செய்திக் கட்டுரைகளே செய்துவிடுமே... நேரடி அரசியல் கதைகள் எழுதப்படுவதிலோ விவாதிக்கப்படுவதிலோ எந்தத் தவறும் இல்லை. என்னளவில் எழுத்து காலமின்மையை தீண்டும் முயற்சி. ஒரு நிகழ்வின் தீவிரம் வடிந்த பிறகும் முக்கியமானதாக உள்ளதா என்பதே கேள்வி. கூண்டு கொரோனாவிற்கும் பொருந்தும். நாளை வேறொன்றுக்கும் பொருந்தும். நூறாண்டுகளுக்குப் பின் வேறொன்றுக்கு பொருந்தக்கூடும். உருவகக் கதைகளின் பலம் அதுவே. கூண்டு ஒரு குழந்தைக் கதை அல்லது தேவதைக் கதை போல் சொல்லப்படத்தக்கதும் கூட. 

9.உங்கள் புனைவுகளில் பெரும்பாலும் குற்றவுணர்வின் முள் உறுத்திக்கொண்டிருக்கிறது? அது அன்பிலிருந்து எழுந்து வரும் கூர்மழுங்காத முனையாக இருப்பதால் அதை எதிர்கொள்ளும் கதாபாத்திரங்கள் பின்வாங்கவோ கடக்கவோ இயலாமல் அங்கேயே நின்று தகிக்கிறார்கள். ‘அன்பின் குற்றவுணர்வு அறத்தைக் காக்கும் கருவி’ என்று நீங்கள் நினைப்பதாகத் தோன்றுகிறது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


குற்றவுணர்வே இன்னும் நீதியின் சாட்சியாக நீடிக்கிறது‌. அறத்தைக் காக்கிறது‌. குற்றவுணர்வு குற்றத்தை நியாயப்படுத்தவும் செய்கிறது. அதை இயல்பாக்கம் செய்யவும் முயல்கிறது. ஆகவே அதை முழுக்க நம்பமுடியுமா எனத் தெரியவில்லை‌. குற்றவுணர்வின் முள் என சொல்ல முடியுமா என யோசிக்கிறேன். தங்களைப் பற்றி கொண்டிருந்த பிம்பங்கள் நொறுங்குவதை பதைப்புடன் கண்ணுறுகிறார்கள், அவர்களைப் பற்றிய ஏமாற்றங்கள், அவர்களுக்கு அவர்களே செய்துகொண்ட துரோகங்கள் அவர்களை வதைக்கின்றன என சொல்லிக்கொள்ளலாம்.  பொறுப்பிலிருந்து வழுவுகிறார்கள். தங்கள் கையறு நிலையையும் சிறுமையையும் எண்ணிக் குமைகிறார்கள். இது ஒரு ஆன்மீகமான சிக்கல். இதை காந்தியிடமிருந்து நான் பெற்றுக்கொண்டிருக்கக் கூடும். லட்சிய சுயம் எனும் கற்பிதத்தைத் தொட முயன்று புனிதமான தோல்வியை மீண்டும் மீண்டும் தழுவி தன்னைத் தூய்மை செய்து கொள்பவர். அது குற்றவுணர்விலிருந்து வேறுபட்ட வேறொன்று எனத் தோன்றுகிறது. 


10.’காளிங்க நர்த்தனம்’ எனக்கு அந்த மாபெரும் யோகியைக் காட்டியது. அதுதான் நம் மரபு சொல்லும் பெருநிலை என்று நினைக்கிறீர்களா?


பெருநிலை எதுவெனத் தீர்மானமாக சொல்லும் அளவிற்கு அறிதல்  எனக்கில்லை. இங்கே எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை மார்க்கங்களும் இலக்குகளும் உண்டு. எனினும் எனது நம்பிக்கையையும் புரிதலையும் இன்றைய நிலையிலிருந்தபடி சொல்லலாம். பெருநிலை என்பது களிப்பெரும் நடனமாகத்தான் இருக்க முடியும் என நம்புகிறேன்‌. மவுனத்தில் ஆழ்ந்து தன்னைக் கரைத்துகொள்வதுதான் வாழ்வின் நோக்கம் என்றால் எதற்கு பிறந்து உழன்று மரிக்க வேண்டும் எனும் கேள்வியை அரவிந்தர் எழுப்புகிறார். எனக்கது சரியான கேள்வியாகவே படுகிறது‌. விண்ணின் நடனத்தை மண்ணில் நிகழ்த்த வேண்டியல்லவா பிறக்கிறோம்.


11.வருங்கால எழுத்துமுயற்சிகள் பற்றி…

இந்த ஆண்டு இரு அபுனைவு நூல்கள் வெளிவர உள்ளன. ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். எல். மகாதேவனின் நீண்ட நேர்காணல் ஒரு தனி நூலாக காலச்சுவடு வெளியீடாக வரவுள்ளது. காந்தி பற்றி ஒரு சிறிய சுவாரசியமான அறிமுக நூலை தொகுத்துள்ளேன். விரைவில் வெளிவரக்கூடும். தடைப்பட்டிருந்த உரையுடன் கூடிய சத்திய சோதனை திருத்தப்பட்ட செம்பதிப்பின் மொழியாக்கத்தைத் தொடர்கிறேன். இந்தாண்டுக்குள் அதுவும் வெளிவரும். மிக முக்கியமான நூலாக இருக்கும். மொழியாக்கங்களை இத்துடன் நிறுத்திகொள்வதாக உள்ளேன். ஒரு புதிய நாவலைத் தொடங்கியிருக்கிறேன். சற்றே சிறிய நாவல் 150-200 பக்கங்கள் வரக்கூடும். அரவிந்தரைப் பற்றி ஒரு புனைவெழுத வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெரு நாவல்களுக்கான திட்டங்கள் சில உண்டு. விமர்சனக் கட்டுரைகளையும் ஆயுர்வேதக் கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்கலாம் எனும் எண்ணமும் உள்ளது. பழுவேட்டையர் கதைகள் ஓரளவு சேர்ந்தால் அவற்றையும் ஒரு தொகுப்பாகக் கொண்டு வரும் எண்ணம் உண்டு. பார்ப்போம். வேறு சில முக்கியமான தொகை நூல்களுக்கான பணியிலும் ஈடுபட்டுள்ளேன் அவை வெளிவரும்போது பார்க்கலாம். 

12.வளரிளம்பருவத்தில் உங்களை பாதித்து உங்கள் மனப்போக்கை மாற்றிய அல்லது வடிவமைத்துக்கொள்ள உதவிய ஆளுமைகள் என்று யாராவது இருக்கிறார்களா?

 வளரிளம்பருவத்தில்  பொதுவாக வீடு பள்ளி புற உலகம் என மூன்று தளங்களில் தாக்கம் ஏற்படும்‌. வீட்டைப் பொறுத்தவரை அம்மா சின்ன வயதிலிருந்தே தனி ஒரு பெண்ணாக பல்வேறு சிக்கல்களைக் கடந்து என்னை வளர்த்தார்.  பள்ளியைப் பொறுத்தவரை கணக்கு ஆசிரியர் பழனிக்குமார் உயிரியல் ஆசிரியர் மணிமொழி ஆகியோரை  சொல்லலாம். ஒருவர் கண்டிப்புக்கு பெயர் போனவர், மற்றவர் அன்புக்குரியவர். பனிரெண்டாம் வகுப்பில் நிகழ்ந்த நண்பனின் தற்கொலை ஒரு பெரும் தொந்தரவாக மனதை ஆக்கிரமித்தது. புற உலகில் அன்று பொதுவாக எல்லோருக்கும் இருந்த நாயகர்களே எனக்கும். சினிமாவில் ரஜினி, கிரிக்கெட்டில் அணில் கும்ப்ளே, மல்யுத்தத்தில் அண்டர்டேகர் என ஒரு விநோதமான கலவை. ஹாரி பாட்டரில் வரும் ஆல்பஸ் டம்பிள்டோர், பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன், குறிஞ்சி மலர் அரவிந்தன் என சாகச புனைவு பாத்திரங்கள் மீது நாட்டம்.‌ என்னை அவர்களாக கற்பனை செய்துகொண்டு விதவிதமான பகற்கனவுகளில் உலகைக் காத்திருக்கிறேன். வளரிளம்பருவத்தில் தாக்கம் செலுத்திய இரண்டு நூல்களை சொல்லலாம் என்றால் ரிச்சர்ட் பாக்கின், ’ஜோனாதோன் லிவிங்ஸ்டன் தி சீ கல்’ மற்றும் பாலோ கொய்லோவின் ’ரசவாதி’. பதின்மத்தில் ஆளுமை உருவாக்கத்தில் பெரும் சலனங்களை ஏற்படுத்தியவை. கனவுகளை அளித்தவை. பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு அடுத்தடுத்து இவ்விரு நூல்களை வாசித்தேன். 

13.சமகால சிறுகதையின் சாதக அம்சங்களாக நீங்கள் காண்பவை…

சிறுகதையின் களமும் பேசுபொருளும் வெகுவாகப் பரந்து விரிகிறது. பத்தாண்டுகளுக்கு முன் மொத்த தமிழ் இலக்கியத்திலும் எழுதப்பட்டிருந்த அறிவியல் புனைவுகளின் எண்ணிக்கையை விட அதிகமான கதைகள் சமீப ஆண்டுகளில் எழுதப்பட்டுள்ளன. டிஸ்டோபிய கதைகள், வரவாற்றுப் புனைவுகள் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.  ஜப்பான், ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா, வளைகுடா, சிங்கப்பூர், மலேசியா என தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் வெளியே பல புதிய களங்களில் கதையெழுதுகிறார்கள். இயல்பாக இந்த வாழ்க்கை பல புதிய சிக்கல்களைக் கொண்டுவருகின்றது. இந்த சாத்தியங்கள் முந்தைய காலத்து தமிழ் சிறுகதைகளில் இருந்து சமகாலக் கதைகள் அடைந்த பரிணாமத்தை அடையாளம் காட்டுகின்றன. 

14.பெயராய் மனதில் விழுந்த காந்தி உங்களில் ஆளுமையாய் மாறிய, ’கண்டடைதல்’ கணத்தை புறவயமாகக் கூற முடியுமா?

காந்தி மீது விருப்பு வெறுப்பற்ற ஒரு விலக்கமே எல்லோரையும் போல் எனக்கும் இருந்தது. ஜெயமோகனின், 'இன்றைய காந்தி' முதன்முறையாக ஒரு உடைப்பை நிகழ்த்தி அவரைப் பற்றிய பார்வையை மாற்றியது. தொடர் வாசிப்பு வழியாக காந்தியை உட்செரித்து எனக்குள் ஒரு பகுதியாக்கிக்கொண்டேன். ஆஷிஷ் நந்தி இவ்வகையான அகவயப்படுத்துல் பற்றிக் குறிப்பிடுகிறார். நம் ஒவ்வொருவருக்குள்ளும் காந்தியும் கோட்சேயும் உள்ளார்கள். காந்தி என்பது ஒரு மனிதர், வரலாற்று ஆளுமை என்பதைக் கடந்து அது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள ஒரு சாத்தியம், ஒரு நிலை என்கிறார் நந்தி. இது எனக்கு பெரும் திறப்பை அளித்தது. காந்தியை அகவயப்படுத்திக்கொள்வது எவ்வகையிலும் நிம்மதியான முரண்களற்ற வாழ்வைத் தராது. நம் மீதே எப்போதும் ஐயங்களை எழுப்பிக்கொண்டிருக்கும்‌. துணிவுள்ளவர்களுக்கு சவாலான வாழ்க்கையை அளிக்கும். வசதி வட்டத்தை உடைத்துக்கொண்டு அசவுகரியத்திற்கு இழுத்துச் செல்லும். அந்த வாழ்க்கையே அதற்கான பலனும் கூட. வெற்றி தோல்விகள் என வகுக்க முடியாது. தொடர் போராட்டங்களின் ஊடாகப் பயணிக்கிறது வாழ்க்கை. 

Tuesday, July 13, 2021

நஞ்சென்றும் அமுதென்றும் ஆனவள்- நீலகண்டம் ஒரு வாசிப்பு- அனங்கன்

(நீலகண்டம் பற்றி நண்பர் அனங்கன் எழுதியுள்ள குறிப்பு)

தந்தை, தனயன் வேண்டி வேள்வியும் தவமும் செய்யும் மரபுடையவர்கள் நாம், மகனும் மகளும் வெறும் மக்கள் செல்வம் மட்டும் அல்ல, தந்தையராகவும் அன்னையராகவும் தன் அதிகாரத்தின் வீரத்தின் அடுத்த வாரிசாகவும் தம் கெளரவத்தை கட்டி காப்பதற்கானவர்களாகவும் இருக்க வேண்டும். ஆணவக் கொலைகளின் பின்னணி மனோபாவம் என்ன என்பதை அறிய நம்முடைய நீண்ட மரபிடம் தான் செல்ல வேண்டும். தந்தைக்கு மகன் எதிரியாவதும் தன் வாழ்நாளின் நஞ்சாக ஆவதும், தன்னுடைய நஞ்சையும் அமுதத்தையும் ஏந்திய கலமாக காண்பதும், நாம் கதைகள் சொல்ல ஆரம்பித்த நாட்களில் இருந்து மீண்டும் மீண்டும் பேசும் கருவாகும், இதன் சாரம் என்றும் தீராத கதை கரு இது.

தமிழ் நவீன இலக்கியத்தின் தோற்றுவாயான புதுமைப்பித்தனின் கதைகளிலேயே "மாய யதார்த்தவாதம்", "தேவதைக் கதைகள்" என்று சிறுகதையின் அனைத்து வகைமைகளும் நமக்கு கிடைத்து விட்டது. பின் தமிழில் நவீனத்துவம் மேலோங்கிய காலத்தில் யதார்த்தவாதம் மட்டுமே இலக்கியமாக இருந்தது. மீண்டும் கோணங்கி, ஜெயமோகன் தலைமுறையில் பின்நவீனத்துவ காலத்தில் மெல்ல அனைத்துவகை கதைகளும் வரத்துவங்கியது.

 எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனின் முதல் நாவலான "நீலகண்டம்" தன்னை "மாய யதார்த்தவாதம்" யதார்த்தவாதம் என  இரண்டையும் தனக்கான கூறுமுறைக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. அகம் "மாய யதார்த்தமாகவும்" புறம் யதார்த்தமாகவும் பிரித்து இந்நாவலை வாசிக்கையில் மேலும் அணுகுவதற்கு நம்மால் முடிகிறது. ஒரு நல்ல நாவல் தனக்கான குறியீட்டை சில பக்கங்களிலேயே கொண்டிருக்கும் என்று ஜெயமோகன் கூறுவதுண்டு, இந்நாவலில் "வரு" பார்வை வழியாகவே நமக்கு அது காட்டப்படுகிறது. செந்தியும் ரம்யாவும் தங்களின் வாழ்வில் ஏறிய நஞ்சாக வரு ஆகிவிட்டதாக நினைத்த  தருணத்திலிருந்து அதன் உச்சம் நோக்கி அவர்கள் சென்றிருந்த கட்டத்தில்  நாவல் ஆரம்பிக்கிறது. மூவரும் ஒருவர் மேல் ஒருவர் நஞ்சை உமிழ்வதிலேயே சற்று ஆசுவாசம் அடைகிறார்கள். செந்திக்கு " வரு" தன் ஆண்மையின் எப்போதைக்குமான பலவீன சின்னம். ரம்யாவிற்கு தன் மன வாழ்க்கையின் தோல்வி சின்னம். ரம்யாவின் தந்தையரின் கதைகளும் செந்தியின் தந்தையரின் கதைகளும் இணையும் புள்ளியாக "வரு" வருகிறாள். "வரு"வின் உலகத்தை நமக்கு 'நிமோ' நீல நிற யானை" சோட்டா பீம் என்று அழகான கதைகளாக விரிகிறது. ஒரு ஆட்டிச குழந்தையின் உலகம் எவ்வளவு வண்ணமயமாக இருக்கிறது என்று ஆசிரியர் வாசகனுக்கு காட்டுகிறார். தொழில் முறை மருத்துவரான ஆசிரியர் மருத்துவம், தத்துவம் பக்கம் நாவலை கொண்டு செல்லவில்லை மாறாக முழுக்க கதாபாத்திரங்களின் மனவோட்டத்துடனேயே எடுத்து செல்கிறார். நாவலின் பலமும் நான் ரசித்ததும் ஆசிரியர் கதை சொல்வதை தான்.

சிறு அத்யாயத்திலும் கதைகள் வந்து செல்வது நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. விக்ரமன் வேதாளம் கதை செந்தியின் மனதை மீதொன்மையாகி நமக்கு அளிக்கிறது. மூவரும் ஒருவரையொருவர்  நன்கு அறிந்தவர்களாக இருப்பதால் தங்களின் நஞ்சை தக்க தருணத்தில் வெளிக் கொணர்கிறார்கள். ஈசனின் பெயர் பெற்ற நாவல் ஈசனை தனக்கான குறியீடாக மாற்றிக்கொள்கிறது இங்கு பாலாழியில் கடையும்  நஞ்சு மகள் தோற்றத்தையே கொண்டுள்ளது நஞ்சை கழுத்தில் நிறுத்தத் தெரிந்தவர்களால் நிகழ்கிறது இவ்வுலகு என்கிறது வேதாளம். நாவல் தன்னை நஞ்சாகவும் அமுதாகவும் பிரித்து தான் நமக்கு காட்டுகிறது எதையும் வாசகன் தேர்ந்தெடுக்கலாம்.

Sunday, July 11, 2021

விஷக் கிணறு & பிற கதைகள்- வாசிப்பு- அனீஷ் கிருஷ்ணன்



(நண்பர் அனீஷ் கிருஷ்ணன் கைபட எழுதிய கடிதத்தை தட்டச்சு செய்து வலையேற்றியுள்ளேன். கையால் எழுதப்பட்ட கடிதத்தை பார்க்கும் போது அதில் ஒரு மெனக்கிடலும் உழைப்பும் தெரிகிறது. கவிஞர் ஜெயபாஸ்கரன் தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதுவார்.‌ பதில் போடாத குற்ற உணர்வு இப்போதும் உள்ளது. விஷக்கிணறுக்கு வந்துள்ள இரண்டாம் வாசிப்பு கடிதம் இது. நன்றி அனீஷ்)

அன்புள்ள சுனில்

வணக்கம். நான் இங்கு நலம். நீங்களும் குடும்பத்தினரும் நலமாகவே உள்ளீர்கள் என்று எண்ணுகிறேன். இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுவதின் முக்கிய நோக்கம் உங்களது புதிய புத்தகமான "விஷக்கிணற்றை" குறித்து எனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான். போகனிடம் சொல்லி சென்னை புத்தகத்திருலிழாவில் இருந்து வாங்கி வரச்சொன்னேன். புத்தகத்தை ஒருநாள் இரவு எட்டு மணிக்கு படிக்கத்தொடங்கினேன். ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். இப்போதெல்லாம் பெரும்பாலும் முன்பு வாசித்ததை அசை போடுதல் அல்லது வாசித்ததையே வாசித்தல் என்பதில் தான் பொழுது போகிறது. புதிதாக வாசிப்பது என்பது தகவலுக்காக மட்டுமே என்றாகிவிட்டது. இந்த பின்புலத்தில் தான் உங்கள் புத்தகத்தை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் என சொல்கிறேன். வாசிப்பின் மீதிருந்த விலக்கதீதை மீறி என்னால் மனம் ஒன்றி அதை செய்ய முடிந்தது. 

லித்தியத்தில் வர்ணனைகள், குறிப்பாக மனம் சிதறும் முன்பு பரவும் அந்த இரும்பு சுவை குறித்த வர்ணனை மிகத்துல்லியமாக இருந்தது. உளவியல் படிக்கும் காலத்தில் அதைக்குறித்து வாசித்திருக்கிறேன். பயிற்சியளிக்க வந்த மருத்துவர் அத்தகைய ஒரு உலோக வாசனை மனச்சிதைவீஉடைய நபர்களிடமிருந்து வீசும் என்று சொன்னார். A characteristic metallic smell. உண்மையா என்று தெரியாது. இந்தக் கதையில் அக்கணவன் லித்தியத்திடம் அடைக்கலமாகும் தருணம் மிக முக்கியமானது. மனநோயாளியான மனைவியை கவனித்து கொள்வதில் கூட பிரச்சனை இல்லை, அதை ஒரு தியாகமாகக் கருதி பெருமிதத்துடன் கடந்து செல்ல முடிகிறது. ஆனால் மனைவியும் ஒரு கலைஞர் அதிலும் தன்னைவிட மேலான கலைஞர் என்று தெரியும்போது அஹங்காரம் சுக்குநூறாகி விடுகிறது. இனியும் மனைவியைக் குறித்து தெரியாத பக்கங்கள்/ விஷயங்கள் எத்தனை எத்தனை இருக்குமோ என்ற எண்ணம் தலைச்சுற்ற வைக்கிறது. லித்தியம் தான் இதனை சமாளிக்க உதவி செய்யும் போல. 

சிதலை வாசிக்க தொடங்கியதும் நீலகண்டத்தில் இருந்த பகுதி நினைவுக்கு வந்தது. அதனை விரித்து ஒரு கதையாக்கி இருப்பது நன்றாக தான் இருந்தது. கர்மவினை. சபித்தவன் குடும்பம் பரதேசம் போய் நன்றாக இருக்கிறது. சாபம் பெற்றவன் குடும்பத்திற்கு மண்சரிவும் கரையானும் பிறகு ஒருவழியாக ஊர்விட்டு நீங்கும் விமோசனமும். அந்த வீட்டில் இருந்ததால்தான் மீனாவின் கணவரும் அகாலமாக இறந்தாரா? வீட்டில் இருக்கும் புற்று சாபமா அம்மனா என்று கர்ம கணக்குகளின் முடிவற்ற சிக்கல்களை குறித்து சிந்திக்க வைத்தது. 

களி சிறுகதை குறித்து சொல்ல வேண்டும். சில நேரங்களில் நாம் தோற்க நினைத்தாலும் தோற்றுக்கொடுப்பது என்பது பிழைப்பிற்கு இன்றியமையாதது என்று புத்தி சொன்னாலும் அதை செய்ய முடிவதில்லை. எனக்கே நேர்முக தேர்வில் அப்படியொரு அனுபவம் உண்டு. செய்யும் காரியம் தற்கொலைக்கு துல்லியமானது என்று போதமனம் கதறிச் சொல்லிய பிறகும் அதை செய்வதற்கான காரணம் என்ன? ஆணவமா? எனக்கு அப்படித்தோன்றவில்லை. நம் இருப்பிற்கு நியாயம் கற்பிக்கும் விஷயத்திலும் சமரசம் செய்துகொண்டால் வாழ்வதிலேயே அர்த்தமில்லை என்றாகிவிடும் என்ற எண்ணம்தான் காரணமாக இருக்க முடியும். தூசும் துரும்பும் நிறைந்த கணேசன் வீட்டில் ஒழுங்காக இருப்பது அந்த ஷட்டில் மட்டை மட்டும்தானே‌. 

இந்த தொகுப்பில் நான் மிகவும் ரசித்து படித்த ஒரு கதை இந்திர மதம். எனக்கு ஓரளவிற்கு நன்றாக புரிககற பின்னணி என்பதாலோ அல்லது இக்கதையை மிக எளிதாக எனக்கு தெரிந்த சிலருடன் பொருத்தி பார்க்க முடிந்ததாலோ - என்ன காரணம் என்று தெரியவில்லை. இந்திரமதம் தான் இந்த தொகுப்பின் சிறந்த சிறுகதை போலத் தோன்றுகிறது. உணவோ கல்வியோ உள்ளே போனது செரிக்க வேண்டும். இல்லாவிட்டால் வெளியேற்றப்பட வேண்டும்.‌ இவை இரண்டில் ஒன்று நடக்காவிட்டால் உள்ளே சென்றதே விஷமாகிவிடும். இரத்தத்தை குடித்து குடித்து அதுவே போதையாகி அதனாலேயே நோய் வந்து மேலும் ரத்தம் குடிக்க வழி இல்லாமல் இருக்கும் அட்டையும் பேராசிரியர் சேஷாத்ரியும் ஒன்றுதான். இருவருக்கும் இருப்பது ஒரே நோய்தான். பேராசிரியர் தனது மரபு சார்ந்த நூல்களை முழுமையாக நம்பியதால் ஒரு உயிரை காவு வாங்கவில்லை. அதையும் தாண்டி தனது ஆணவத்தை முன்வைத்ததால்தான் ஒரு உயிர்போனது. இந்திரமதத்தால் பாதிக்கப்பட்ட பேராசிரியருக்கு வசப்படாத சூக்ஷ்மம் அரோக்யமாக இருந்த அந்த அட்டைக்கு பிடிபட்டது. அதனால்தான் கட்டியில் இருந்து இரத்தத்தை உறிஞ்ச அது மறுத்துவிட்டது. ஒரு தத்துவத்தையோ/ சித்தாந்தத்தையோ முரட்டு பிடியாக பிடிப்பதில் இல்லை பிரச்சனை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சொல்வதில் தான் பிரச்சனை. 
"சார், நான் அட்டையின் வாயையும் குதத்தையும் நன்றாக கண்டுபிடித்துவிட்டேன்" என்று சொல்வது அக்ஷர லக்ஷம் பெறக்கூடிய வரி. 

இயல்வாகை அவ்வளவு ஒட்டவில்லை. அது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு அடிப்படையில்தான். கறை இருப்பது என்பதும் கறையை கண்டுக்கொள்ளாமல் இருப்பது என்பதும் எனக்கு ஏற்ற விஷயமில்லை. எல்லா நேரத்திலும் எல்லா உண்மைகளையும் சொல்ல வேண்டாம் அல்லது எல்லா நேரத்திலும் அறிவின் கூர்மையை நிரூபிக்கவேண்டாம் என்று சொல்லும்விதமான கதையாகவே அதை எடுத்துக் கொள்கிறேன். ஒருவேளை எனது புரிதல் தட்டையானதாகக்கூட இருக்கலாம். 

விஷக்கிணறு இருண்டு கதைகளாக இருந்திருந்தால் எனக்கு இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும் என்று புரிகிறது. மஞ்சள் பறவை என்றதும் எனக்கு canary பறவைதான் நினைவிற்கு வந்தது. சுரங்க தொழிலாளர்கள் இப்பறவையை கூண்டிலிட்டு தங்களுடன் சுரங்கத்திற்கு எடுத்துச்செல்லும் வழக்கம் உண்டு என்றும், சுரங்கத்திற்குள் இப்பறவை பாடிக்கொண்டிருக்கும் காலம்வரை விஷவாயு கசிவு ஏதுமில்லை என்று உணர்ந்துகொள்ளலாம் என்பதால் இந்த ஏற்பாடு என்று ஏதோ வாசித்த நினைவிருக்கிறது. காணாமல் மஞ்சள் பறவை என்பதை காணாமல் போகும் மானுடம்/ மனசாக்ஷி என்று புரிந்துகொள்கிறேன். 

இரண்டாம் உலகபோரும், யூதர்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட இன அழிப்பும் பல ஐரோப்பிய சிந்தனையாளர்களுக்கு Enlightment என்னும் விஷயத்தின் மீதிருந்த நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டது என்றும், அந்த நம்பிக்கையின்மை/ அவநம்பிக்கைதான் பின்னர் பின் நவீனத்துவத்திற்கு வித்திட்டது என்றும் கோட்பாடு வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள். ஒருவகையில் பார்த்தால் இந்த பெருந்தொற்று காலமும் அப்படிப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. சுகாதாரத்துறையில் பணிபுரியும் நண்பர்கள் சொல்லும் விஷயங்கள் அயர்ச்சியடைய வைக்கின்றன. கணவரை வீட்டுக்குள் விட மறுக்கும் மனைவி, சொந்த மகனை பிடித்துக்கொண்டு போங்கள் என்று மன்றாடும் தாய்... என்று எத்தனையோ விஷயங்கள். ஆயிரம் அறம் பேசினாலும் அவனவன் உயிருக்கு மிஞ்சி ஏதுமில்லை என்பதே பெரும்பான்மையவர்களுடைய அடையாள கோஷமாக இருக்கிறது. இந்நிலையில் இச்சூழலே மையமாக வைத்து இலக்கிய ஆக்கங்கள் எழுவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது. 

"வசுதைவ குடும்பகம்" என்னும் தலைப்பில் இருந்த நக்கலை வெகுவாக ரசித்தேன். தொழில்நுட்பம் உலகை சுருக்கிவிட்டது. We arw now in a Global village என்றெல்லாம் மார்தட்டினார்கள். அது உண்மைதான். ஆனால் அதன் விளைவுதான் இன்று பட்டிதொட்டி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கோவிட் 19. 1980 களில் இதே தொற்று வந்திருந்தால் அது இந்த அளவிற்கு சந்து பொந்தெல்லாம் பரவியிருக்காது. எல்லா நாணயத்திற்கும் இரு பக்கங்கள் உண்டு.லௌகீகமான ஒரு விஷயத்தில் நன்மை உண்டு என்றால் அதே விஷயத்தால் தீமையும் உண்டு. 'வியத்தலும் இலமே; இகழ்தலும் இலமே'. மேற்படி கதையை வாசித்தபோது இதுதான் நினைவுக்கு வந்தது. 

தன் விருப்பத்திற்கு ஏற்ப உருவத்தை மாற்றிக்கொள்ளும் மாய ஆற்றல் உடைய நாகத்தை இச்சாதாரி என்பார்கள்.‌ 'இச்சை' விருப்பம். ஒவ்வொரு மனிதனும் ஒருவகையில் இச்சாதாரிதான். உயிர்வாழும் இச்சையை கொண்ட இச்சாதாரி. அந்த இச்சையால் அந்த இச்சையின் பொருட்டு அவன்/ அவள் தன் உருவத்தை மாற்றாவிட்டாலும் தனது நம்பிக்கை, லக்ஷியம், அறம் என அனைத்தையும் நொடியில் மாற்றி புதிய நியாயங்களையும் கற்பித்துவிடுவார்கள். இதிலும் தலைப்பின் தேர்வு மிகச்சிறப்பு. 

"நஞ்சு" மற்றொரு கோணத்தை முன்வைக்கிறது. எது முக்கியம்? உயிர்பிழைத்திருத்தலா? சுதந்திரமா? பாதுகாப்பாக இருக்கும்போது சுதந்திரம் முக்கியமானதாகப்படுகிறது. மரணம் கண் முன் தோன்றினால் உயிர்வாழ்வதற்காக ஆயுள் தண்டனையைக்கூட ஏற்றுக்கொள்ள தோன்றுகிறது. இது ஊரடங்கு காலத்தில் சமூக ஊடகங்களில் நம்மவர்கள் கூச்சலிட்ட திசைகளை பார்க்கும் போது தெளிவாக புரிகிறது. 

'எப்போதும் முடிவிலே இன்பம்' புதுமைப்பித்தனின் சிறுகதை ஒன்றின் பெயர் இல்லையா? அழகான வரி. பெயர் நினைவில் இருக்கிறது. சிறுகதை எப்படியோ மறந்துவிட்டது. நஞ்சின் தொடர்ச்சியான இந்தக்குறுங்கதை மூன்று தளங்களின் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உருவானது என்று எண்ணுகிறேன். மேலை நாடுகளில் anti vaccine காரர்கள் கொண்டாடும் measles party போன்றவை. தடுப்பூசிக்கு பதிலாக வசதியான ஆரோக்கியமான நேரத்தில் நோயை வலியச்சென்று பெறுதல் மேல் என்ற எண்ணத்தால் உருவானது இது. பிறகு எல்லா ஆன்மீக/ தத்துவ ஞானமும் மூளையில் உள்ள இரசாயனங்களின் விளையாட்டே என்ற neurological reductionism. மூன்றாவதாக இருப்பது தற்கொலை சாய்வு. எந்த ஒரு விஷயத்தையும் அஞ்சுவது அல்லது அலஷ்ய படுத்துவது என்ற மனித குணம். மீண்டும் மீண்டும் வாசிக்க கட்டாறப்படுத்தும் கதை. 

Bacerm "நல்ல விரிவுரை என்பது அது முடிந்ததும் மாணவர்கள் ஆர்வத்தோடு நூலகத்திற்கு சென்று மேலும் அது தொடர்பாக படிக்கத்தூண்டுவதாக இருக்க வேண்டும் என்பார். இலக்கியமும் அப்படித்தான். நல்லதொரு நூலை வாசித்தால் அது குறித்து யாரிடமாவது பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்ற திணறல் வரும். "விஷக் கிணறு" அத்தகைய ஒரு எண்ணத்தை உருவாக்கிய நூல். வாழ்த்தும் நன்றியும். 
அனீஷ் கிருஷ்ணன்
7/7/21

Thursday, May 6, 2021

விஷாத யோகம்


(தமிழினி இணைய இதழில் வெளிவந்தது)

சென்ற ஆண்டு கொரோனா தொற்று பரவி வீடடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன், நோயாளிகளையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் துப்பறிவாளர்களாக அரசு தேடித் தேடிப் பரிசோதித்துக்கொண்டிருந்த காலத்தில், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நோயாளிகள் மருத்துவமனையில் இடமின்றி, செயற்கை சுவாசக் கருவியின்றி, சாலையில் மரித்துக்கொண்டிருந்த போது, இங்கோ காரைக்குடியில் சின்ன முத்துமாரியம்மனுக்கு மாசி மாதக் காப்புகட்டும் திருவிழா நடந்துகொண்டிருந்தது. சோதனையோட்டமாக அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமை வீடடங்கிற்கு நான்கு நாட்கள் முன்னர் முத்துமாரியம்மனுக்கு இலட்சக்கணக்கான மக்கள் பால்குடமும், அக்கினிச் சட்டியும், காவடியும், வேலும் சுமந்துகொண்டு, பூக்குழி இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினார்கள். கூட்டத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முகக்கவசங்கள் (எங்கள் ஊரில் முகக்கவசத்திற்கு வாக்கூடு- வாய்க்கூடு எனும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள். நாம் பயன்படுத்தும் முறைக்குப் பொருந்தி வருவதாகவே தோன்றுகிறது) தென்பட அச்சத்துடன், கூடுமானவரை தொலைவில் நின்று பால்குடத்தை வேடிக்கைப் பார்த்து வந்தோம். சென்றாண்டு ஆலயங்கள் பக்தர்களுக்கு மூடப்பட்டன.  திருவிழாக்கள் நின்றுபோயின. இப்போது இந்த ஆண்டும் சித்திரை மாதத் திருவிழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மரணச் செய்திகளை நாள்தோறும் செவியுறுகிறோம். துயரமோ மகிழ்ச்சியோ அவை நமக்கு கொண்டாட்டம்தான். கொரோனாவில் மரண அச்சம் என்பது ஒருபுறம் என்றாலும் அதில் நம்மால் நம் வழமையான முறையில் துக்கம் கொண்டாட இயலவில்லை என்பது மிகப்பெரிய மன பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஓர் உரையாடலில் நண்பர் ஒருவர் இந்தக் கொரோனா காலகட்டத்தில் கடவுள் நம்பிக்கை நிச்சயம் குறையும் என ஆரூடம் சொன்னார். நெருங்கியவர்களின் மரணத்தைக் கண்ணுற்ற குடும்பங்களில் நிச்சயம் கடவுள் மீது வைத்திருந்த நம்பிக்கை பரிசீலனைக்கு உள்ளாகும் என்றார். 

இந்த ஆண்டின் முற்பகுதியில் தொற்று குறைந்து சற்று இயல்பான சூழலில் மீண்டும் மாசி மாத சின்ன முத்துமாரியம்மன் திருவிழா நிகழ்ந்தது. அதேயளவு கூட்டம். சென்றாண்டு தென்பட்ட முகக்கவசம் மேலும் அருகியிருந்தது. அத்தனை மரணங்களைக் கண்ணுற்ற பிறகும் எஞ்சியிருப்பதன் நன்றிக்கடனாக இவ்வாண்டு தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தியவர்களே பெரும்பாலானோர் எனத் தோன்றியது. நெருக்கடிகளில் நாம் ஏன் கடவுளைக் கைவிடுவதில்லை? பெரும்பாலானோர் மேலும் இறுக்கமாக கடவுளைப் பற்றிக்கொள்கிறோம். 

அறிவொளி கால எழுச்சியில் மானுட அறிதல் விரிந்து அதுவரையிலான புதிர்த்தன்மைகள் விலகுவதைக் கண்ட நீட்ஷே ‘கடவுள் இறந்துவிட்டார்’ எனப் பிரகடனப்படுத்தினார். மனிதனின் அறிவாயுதம் அவரைக் கொன்றது. அவருடைய இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியது. கடவுளால் அல்ல, இயற்பியல் நியதிகளால் உலகம் இயக்கப்படுகிறது என உணரத் தொடங்கிய காலகட்டத்தில் நீட்ஷே இதை அறிவித்தார். பிரபஞ்ச இயக்கத்தின் மர்மங்கள் விலகுகின்றன. எனினும் அவ்விடத்தில் முன்பைவிட நுட்பமான புதியதொரு மர்மம் தோன்றுகிறது. மர்மங்களின் சுழலடுக்கில் நாம் பயணிக்கிறோம். அறிதலுக்கு முடிவென்பதே இல்லை‌. கடவுள் கொல்லப்பட்டுவிட்டாரா? கொல்லப்பட்ட கடவுள் யார்? எஞ்சியிருப்பது யார்?

பைரப்பாவின் கன்னட நாவலான ‘ஒரு குடும்பம் சிதைகிறது’, தாராசங்கர் பந்தோபாத்யாயவின் வங்க நாவலான ‘ஆரோக்கிய நிகேதனம்’, தகழி சிவசங்கரன் பிள்ளையின் ‘தோட்டியின் மகன்’ ஆகியவை கொள்ளை நோய்கள் பற்றிய நுண்ணிய சித்திரங்களை அளிப்பவை. பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலில் உள்ள மிகவும் உணர்ச்சிகரமான ஒரு பகுதியைச் சற்று கவனிக்க வேண்டும். நஞ்சம்மாவின் மகள் பார்வதியையும் மகன் ராமண்ணாவையும் ப்ளேக் பீடித்துவிடும். நஞ்சம்மா ஒரு கனவு காண்பாள். கர்ப்பக் கிரகத்தில் கிராம தேவதையான காளம்மன் மடியில் பார்வதியும் ராமண்ணாவும் வெற்றுடம்போடு கிடப்பார்கள். அவர்களுக்குக் குளிருமே எனக் கம்பளியைப் போர்த்த முயலும்போது அம்மன் அவளை உள்ளே அனுமதிக்கவில்லை. அதை அர்த்தப்படுத்திக்கொள்ள முயல்வாள். குழம்பித் தவிப்பாள். அவளுக்கு உதவியாக இருக்கும் பெரியவர் மாதேவய்யாவிடம் கனவைச் சொல்வாள். அவருக்கு உள்ளூர இது அபசகுனம் எனத் தோன்றினாலும், ஆறுதலாக, அவள் பிள்ளைகள் கடவுளின் மடியில் பாதுகாப்பாக உள்ளதால் அம்மனே காப்பாள் என்பார். அம்மன் காப்பாற்ற எண்ணும் பிள்ளைக்கு மருந்து கொடுத்தால் அது அவளுக்குக் கோபத்தை ஏற்படுத்துமோ என நஞ்சம்மாவிற்கு ஐயம் எழுகிறது. சற்று நேரம் குழப்பத்துடன் யோசித்த பிறகு மாதேவய்யா ஒரு யோசனை சொல்கிறார். “அம்மா சொறி வந்தப்ப நாக பூசை செஞ்சா குணமாச்சு? ஊசி போட்டு வந்தப்புறம்தான குணமாச்சு? இப்பவும் அப்படியே செய்.” அவர்கள் பலவீனமடையும் தோறும் நஞ்சம்மா குழம்புகிறாள். இரவில் “என் வீட்டிற்குத்தான் முதலில் வந்திருக்கிறதோ? கோவிலுக்குப் புதிதாகக் கல்யாணம் ஆன பெண்ணைக் கூட்டிக்கொண்டு போனேன். அதனால் அம்மனின் பார்வை அவள் மீது விழுந்துவிட்டதோ? ஆனால் கிராம தேவதை காளம்மனும் ப்ளேக் தேவதை சுங்கலம்மாவும் வெவ்வேறுதானே? சுங்கலம்மாவைத் தடுக்கத்தானே காளம்மா இருக்கிறாள்? இதெல்லாம் உண்மையா பொய்யா? ஏன் இந்தப் பிளேக் நோய் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை வந்து தொல்லை கொடுக்கிறது? இதைக் குணப்படுத்த மருந்து கிடையாதா?” என்று அவள் சிந்தனை ஓடுகிறது. வளத்தையும் வாழ்வையும் வழங்க கடவுள்கள் உள்ளது போலவே நோய்களையும் அழிவுகளையும் அளிக்கும் கடவுள்கள் நம் மரபில் வேதங்கள் தொட்டே பேசப்படும் ஒன்றுதான். இன்ன நோய்களுக்கு இந்தக் கடவுள்கள் பொறுப்பு என்கிறது வேதம். வேதக் கடவுள்கள் பெரும்பாலும் இயற்கை ஆற்றல்களின் தெய்வ வடிவங்கள். இக்கடவுள்களை நிறைவுசெய்வதன் வழியாக நோயைத் தவிர்க்கவும் அதிலிருந்து மீளவும் முடியும் எனும் வேதகால நம்பிக்கை இன்றுவரை நீள்வதை நாம் காண முடிகிறது. 

கடவுளை முழுமையாக நம்பிக்கொண்டிருந்த நஞ்சம்மா இப்போது கடவுள், மருத்துவம் என இரண்டையும் நம்புகிறாள். கடவுளை நம்பிக்கொண்டு சும்மா இருக்க முடியாது என்பதை உணர்கிறாள். இந்நிலையை எப்படி புரிந்துகொள்ள முடியும்? கடவுள் நேரடியாகச் சங்கும் சக்கரமும் பாசமும் ஏந்தி குழந்தையைக் காக்கப் போவதில்லை. அந்த மருந்து கடவுள் வழியாக, அது கடவுளின் அருள் வழியாக காக்கப் போகிறது. கடவுளாகவே இருந்தாலும் அவர் கையில் அமுத கலயம் ஏந்தியிருக்கிறார். நவீன மருத்துவமும் மருந்துகளும் இங்கே கடவுளின் திட்டத்திற்கு உதவ வந்தவையாக உருமாறுகின்றன. அடுத்து ஒரு கேள்வி எழ வேண்டும். மருந்துதான் வேலை செய்யக்கூடும். கடவுள் நேரடியாக நம்மைக் காக்கப் போவதில்லை என உணர்ந்தாலும் ஏன் நஞ்சம்மாவால் முழுவதுமாக கடவுளைக் கைவிட முடியவில்லை? நாம் மருத்துவமனை வரவேற்புப் பகுதிகளில் இப்படியொரு வாசகப் பலகையைப் பார்த்திருப்போம். ‘மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறோம். ஆண்டவர் குணப்படுத்துகிறார்.’ சரியான முறையில் நோயைக் கண்டுபிடித்து சரியான சிகிச்சையை அளிக்கும்போது நோயாளி குணமாக வேண்டும் என்பதே சிகிச்சை சூத்திரம். ஆனால் மருத்துவர்கள் அறிவர், இவை எல்லாம் சரியாக இருந்தும் நோயாளியைக் குணப்படுத்த முடியாமல் போன தருணங்கள் உண்டு. பிழைக்கச் சாத்தியமில்லை என எண்ணுபவர் பிழைத்ததும் உண்டு. ஒரே நிலையில் இருக்கும் இரண்டு நோயாளிகளுக்கு ஒரே மாதிரி சிகிச்சை அளிக்கும் போது ஒருவர் பிழைப்பதும் மற்றவர் இறப்பதும் ஏன்? சூத்திரத்தை மீறும் தர்க்கமின்மைக்கு யார் பொறுப்பேற்பது? ஆகவேதான் நஞ்சம்மாவோ ஆயிரம் அறுவை சிகிச்சைகளைச் செய்த நிபுணரோ கடவுளை முற்றிலும் துறந்துவிட முடிவதில்லை. வாழ்க்கையில் தர்க்கமின்மையின் புதிர் இருக்கும் வரை கடவுளும் இருப்பார். முன்னைக் காட்டிலும் உரு சுருங்கியவராக, ஆற்றல் குன்றியவராக இருக்கக்கூடும் ஆனால் முற்றழிய மாட்டார். ஏனெனில் கடவுள் நம் பண்பாட்டுடன், ஆழ்மனதுடன் தொடர்புடைய கருத்துருவும்கூட. 

இப்போது மேற்சொன்ன நஞ்சம்மா நிகழ்வைக் கொண்டு, கடவுளும் பகுத்தறிவு அறிவியலும் எதிரெதிர் துருவங்கள் எனக் கருதப்படும் சூழலில் இந்திய மனம் இவற்றுக்கு இடையே சமரசப் புள்ளியை எளிதாக அடைந்துவிட்டதை நம்மால் உய்த்துணர முடிகிறது‌. அறிவியலும் தொழில்நுட்பமும் கடவுளின் திட்டத்தின் பகுதி எனும்போது எந்த முரண்பாடும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள முடிகிறது. ஆயுத பூஜைக்கு சாட்டிலைட்டுக்குப் பொட்டு வைக்கிறார்கள் என நாம் கேலி செய்தாலும், இந்திய மனம் முரண்பாடுகளை சமரசம் செய்துகொள்ள செய்த ஏற்பாடு இது என்பதைப் புரிந்துகொண்டால் நாம் எதையும் இழக்காமல் எல்லாவற்றையும் அனுபவிக்க எடுத்த முயற்சி பலனளிப்பதை உணர முடிகிறது. 

நெய்ல் கெய்மானின் ‘அமேரிக்கக் கடவுள்களில்’ பழைய கடவுள்களுக்கும் புதிய கடவுள்களுக்குமான போராட்டம் நிகழும். புதிய கடவுள் என்பது சந்தைதான். அவருக்கு ஒரு உருவமும் வடிவமும் உண்டு. ஆயுதங்களும் பரிவாரத் தேவதைகளும்கூட உண்டு. புதிய கடவுள் பழைய கடவுளான வெட்னஸ்டேயிடம் கேட்பார். ‘எங்களால் அளிக்க முடியாத ஒன்றை உங்களால் அளிக்க முடியும் என்கிறாயே அது என்ன?’, ‘வாழ்க்கைக்கான பொருள்’ என்பார் வெட்னஸ்டே‌. இந்தக் கற்பனை சுவாரசியமானது. நீட்ஷே கடவுள்களின் இறப்பு எனச் சொன்னபோது அது ஆளுமையுள்ள கடவுளின் (personal god) இறப்பு மட்டுமே‌ என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. யுவால் நோவா ஹராரி மானுடத்துவம், முதலாளித்துவம், பொதுவுடமைத்துவம் ஆகியவற்றைப் புதிய மதங்கள் என வகுக்கிறார். இவை மதங்கள் எனில் இவற்றுக்கு வாழ்க்கை விதிகள், எய்த வேண்டிய இறுதி இலக்கு, பணிய வேண்டிய திருவுரு எல்லாம் உள்ளன. அப்படியானால் அறிவொளிக் காலம் கடவுள் எனும் கருத்தியலை அழிக்கவில்லை‌. அந்தப் பீடத்தில் புதிய கடவுள்களை அமர்த்துகிறது. ஆனால் இவை வாழ்க்கைக்கு என்ன பொருளும் காரணமும் கற்பிக்கின்றன? கடவுள் கொல்லப்பட்டதும் அறமும் வாழ்க்கை நோக்கமும் இல்லாமலாகும் என ஊகித்த நீட்ஷே, மனிதனுக்கு ‘ubermansh’ எனும் வாழ்க்கை நோக்கத்தைக் கற்பிக்கிறார். என்றேனும் ஒருநாள் பரிணாமப் படியில் உச்சத் திறனுடைய அதிமானுடன் உருவாவான். அந்த நிலையை அடைவதற்கான பரிணாமக் கன்னிகள் மட்டும் நாம் என்பது அவருடைய வாதம். இருத்தலியல் கேள்விகள் எழும்போது கடவுளைக் கொன்ற மனிதன் என்ன செய்வான் என்பது நீட்ஷேவின் கவலையாக இருந்தது. அதே கவலையே தஸ்தாயேவ்ஸ்கியை ‘the grand inquisitor’ எழுத வைத்தது. அதே கவலையே தல்ஸ்தோயின் பிற்கால இலக்கியங்களுக்கு முகாந்திரமாக அமைந்தது. 

உலக வரலாறைப் போலவே இலக்கிய வரலாறில் இரண்டாம் உலகப் போருக்கு மிக முக்கியமான இடமுண்டு. அதன் ஆறாத வடுக்களிலிருந்து இன்றுவரை உதிரம் ஊறி, மேற்கத்திய எழுத்தாளர்களின் எழுத்துக்கு மையாகி, தாள்களை நிறைக்கிறது. இரண்டாம் உலகப்போர் என்பது போர்க்களத்தில் நிகழ்ந்த போர் மட்டுமல்ல. வங்காளத்தில் பட்டினிச் சாவு நிகழ்ந்திருக்க, கப்பலில் போர்முனைக்கு அரிசியைக் கொண்டு போனார்கள். நன்மை தீமைக்கு இடையேயான கொடு என்ன? அறத்தின் பேரால் நிகழ்த்தப்படும் அழிவுக்கு யார் பொறுப்பு? அத்தனை அறிவியலும் தொழில்நுட்பமும் இந்த இனம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளத்தானா? தீராத அறக்கேள்விகள். பிடிமானத்திற்கிருந்த கடவுளும் இல்லை. ஸ்வெட்லனா அலெக்சிவிச் சோவியத்தில் புரட்சி வந்த புதிதில் சில தேவாலயங்கள் இடிக்கப்பட்டு கழிப்பிடங்களாக ஆனதைப் பதிவுசெய்கிறார். அதே நூலில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்களில் அத்தனை ஆண்டுகளாக இல்லாத வழிபாட்டுக்கும் சேர்த்து பெரும் கூட்டம் திரள்வதையும் சொல்கிறார். கம்யூனிச நிலத்தில் கடவுள் மிக வலுவாகவே மீள் வருகையைப் புரிந்துள்ளார். முதலாளித்துவமா கம்யூனிசமா யார் கடவுளுக்கு வலுவான எதிரி என நோக்கினால், முதலாளித்துவம்தான். முதலாளித்துவம் எதையும் முற்றழிப்பதில்லை. அதன் முக்கியத்துவத்தை மட்டுமே அழிக்கிறது. கடவுளை நோக்கித் திரும்புவதற்கான மன அவகாசத்தை அது அளிப்பதில்லை. சந்தைக்கான சாத்தியத்தைக் கண்டுகொண்டால் கடவுளையும் நல்லதொரு சந்தைச் சரக்காக  பயன்படுத்திக்கொள்கிறது. அப்படிச் செய்வதன் வழியாக கடவுளை நீர்க்கச்செய்து நாளடைவில் அந்த அனுபவத்தைப் பொருளற்றதாக ஆக்கிவிடுகிறது. 

இரண்டாம் உலகப்போர் அளவுக்கே அல்லது அதையும் கடந்ததொரு காலம் எனக் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தைக் காண்கிறேன். இந்த ஓராண்டில் நம் அகமும், புறமும், வாழ்க்கை முறையும் எத்தனை மாறியிருக்கிறது! எத்தனை தொழில்கள் முற்றழிந்து, எத்தனை புதிய தொழில்கள் பெருகியுள்ளன. காரைக்குடி போன்ற சிறு நகரில் நூறு ஜோமோட்டோ வண்டிகள் ஓடுவதை 2019-ல் கற்பனை செய்திருக்க முடியாது.

மெல்ல மெல்லப் படர்ந்து மேவிய அச்சத்தை மீம்களாக எதிர்கொண்டோம். மரணங்கள் நம் அண்மையில் நிகழ்ந்து அதன் மூச்சுக்காற்றை நாம் உணரத்தொடங்கியதும் பாதுகாப்புக் குமிழ்கள் உடைந்தன. பகவத் கீதையின் முதல் அத்தியாயம் ‘அர்ஜுன விஷாத யோகம்’. அந்த அத்தியாயத்தில் கிருஷ்ணன் வாய் திறக்கவில்லை. அவனுடைய உபதேசம் என ஏதுமில்லை. ஆனாலும் அவ்வத்தியாயத்திற்கு யோகம் எனப் பெயர். அர்ஜூனன் உடல் நடுங்க, மனம் பதற, கலங்கிய உள்ளத்துடன் காண்டீபத்தை நழுவவிட்டு போரிலிருந்து பின்னடைகிறான். எவ்விதக் கேள்வியுமின்றி காண்டீபத்துடன் போரிடுபவனுக்கு கீதை தேவையில்லை‌. அர்ஜூனன் அதற்கு முன்பும் போரிட்டிருக்கிறான். இதே தாத்தாக்களுக்கும் சகோதரர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக வாளுயர்த்தியிருக்கிறான். ஆனால் அப்போது அவனுக்கு எவ்விதக் குழப்பமும் இல்லை. தனிமனிதனாக நம் அன்றாட வாழ்க்கையில் எல்லாம் வழமைபோல் அதனதன் போக்கில் சென்றுகொண்டிருக்கும் வரை நமக்கு கடவுளின், ஆன்மீகத்தின் துணை தேவையில்லை.

அன்றாடத்தில் ஒரு இலயப் பிறழ்வு நேரும்போது, நம் திட்டங்கள் கடக்கப்பட்டு அங்கே வேறொன்று நிகழும்போது, அனைத்தும் தர்க்க ஒழுங்கின்படி ஒழுகிச்செல்லும் எனும் நம்பிக்கை நழுவும்போது, நிகழ்வுகளின் தர்க்கமின்மையைக் கண்ணுறும்போது நாம் என்ன செய்கிறோம்? ஆன்மீகத்தைப் பற்றிக்கொள்கிறோம். இவற்றுக்கு ஏதாவதொரு தர்க்கம் இருந்தாக வேண்டும் என நம் மனம் பதற்றம் கொள்கிறது. அந்தத் தர்க்கம் கர்மக் கோட்பாடாகவோ அல்லது நியதிகளை நிர்வகிக்கும் ஒரு கடவுளாகவோ இருந்தாக வேண்டியுள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அப்படி நமக்குப் புலப்படாத மேலானதொரு தர்க்கம் இருப்பதாக ஒப்புக்கொள்வதும் அதற்கு நம்மை ஒப்புக்கொடுப்பதும் மட்டும்தான். அதுவே நமக்குப் பெரும் ஆசுவாசத்தை அளித்துவிடும். சாமானியர்கள் வாழ்வு மீண்டும் அன்றாடத்திற்குள் தங்களைப் புதைத்துக்கொள்ளும்வரை இந்த நம்பிக்கையை இறுகப் பற்றிக்கொள்வார்கள். கலைஞர்களின் வழி அதுவல்ல. அவர்கள் இந்தத் தர்க்கமின்மையைக் கலையால் எதிர்கொள்வார்கள் அல்லது தர்க்கமின்மைக்கு அடியே நிழலாடுவதாக நம்பப்படும் தர்க்கத்தை அறிய முழுமையாக முயல்வார்கள். முன்னவர்கள் தன்னையழித்து கலை வளர்ப்பவர்கள். பின்னவர்கள் ஏதேனும் ஒரு புள்ளியில் கலையைக் கைவிட நேரும் அல்லது கலையை அலகிலா விளையாட்டின் ஒரு பகுதியாக ஆக்கிக்கொள்வர். அவர்கள் கலையில் திளைப்பவர்கள். 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான காலத்தில் மேற்கில் வேதாந்தமும் பவுத்தமும் பிரபலமடைந்தது. இரண்டிலும் மகத்தான ஆளுமை வரிசை ஒன்று மேற்கில் உண்டு. கடவுளை நாம் நிராகரிக்கலாம். ஆனால் தர்க்கமின்மையை வழிநடத்துவது எது எனும் கேள்விக்கு ஒரு பேரொழுங்கு எனும் பதிலைச் சென்றடைய முடியும். கடவுளின் மரணத்தை இந்திய மதங்களுக்கு அப்படியே தரவிறக்கிப் பொருத்துவது பிழை. கர்மக் கோட்பாட்டின்படி இங்கே நம் வாழ்விற்கு நாமே பொறுப்பாகிறோம். நம் பாவங்களைச் சுமக்கும் மீட்பர்கள் எவருமில்லை. கடவுளை விடுங்கள், கர்மம் நாம் அனுபவிக்கும் மகிழ்ச்சிக்கும் துயரத்திற்கும் காரணமாகிறது. கடவுளை விட்டுவிட்டுகூட அறத்தின் முக்கியத்துவத்தைக் கர்மக் கோட்பாடு வலியுறுத்துகிறது. கடவுளற்ற, ஆனால், கர்மக் கோட்பாடு கொண்டுள்ள பவுத்தம் மேற்கின் ‘இன்மைவாதத்திற்கு’ (nihilistic) மிகச்சிறந்த மாற்றாக மேற்கில் தன்னை‌ நிலைநிறுத்திக்கொள்கிறது. கடவுள் என்பது யாவற்றையும் வழிநடத்தும் பேரறம் என்றாகிறது. வேதாந்தம் பிரம்மைவ சத்யம் ஜகந் மித்யை என்கிறது‌. பிரம்மம் ஒன்றே மெய், இவ்வுலகு மித்யை. பவுத்தமும் அத்வைத வேதாந்தமும் நெருங்கியவை. பவுத்தத்திலிருந்து மேலதிகமாக ஒரு மாறா மைய அச்சாக பிரம்மத்தை முன்வைக்கிறது. மித்யையின் வேதாந்த விளக்கத்திற்குள் இப்போது செல்ல வேண்டியதில்லை. பிரம்மனே சத்தியம் என்பதை உணர்ந்துகொண்ட நிலையில் தனக்குத் தோதான அல்லது விழைந்த வாழ்க்கை பாவனைகளை சாதகன் உருவாக்கிக்கொள்ள முடியும். இறைவனின் விஷ்வரூபத்தைக் காண்பது என்பது அடுத்த நிலை. பேருருக் கொண்டு கண் முன் எழுவதல்ல விஷ்வரூபம். முழுப் பிரபஞ்சத்தையும் இறைவனாக, சேதன அசேதன பாகுபாடின்றிக் காண்பதே விஷ்வரூப தரிசனம்‌.

இங்கே மித்யை என்றும் மாயை என்றும் எதுவும் நிராகரிக்கப்பட இயலாது. நம்மை நாம் ஹீலராகவோ, போர் வீரனாகவோ, அரசியல்வாதியாகவோ, பிச்சைக்காரனாகவோ, சித்தனாகவோ, பாலியல் தொழிலாளியாகவோ- எதுவாக இருந்தாலும் முரண்பாடற்ற முழுமையுடன், விதியறிந்த விளையாட்டு வீரனாக வாழ்க்கையை அணுக முடியும். வாழ்க்கை வெற்றியும் தோல்வியும் பொருள்படாத அலகிலா விளையாட்டுக்கான களம் மட்டுமே. அதிமானுட சாகசங்களுக்கான சாத்தியங்களை வேதாந்தியாக இப்படியே காண்கிறேன். இயற்கை விதிகளை அனுசரிப்பது ஒரு பாவனை என்றால் சற்றே பயிற்சிசெய்து இயற்கை விதிகளை மீறுவதும் ஒரு பாவனையாகிறது. உண்மைக்கு ஒரு வழிதான். கற்பனைக்கும் புனைவுக்கும் பொய்க்கும் கணக்கற்ற வழிகள் சாத்தியம்தானே‌? உருவ வழிபாட்டையும், சடங்குகளையும், சடங்கின்மைகளையும், நியதிகளையும், மீறல்களையும் என எல்லாவற்றையும் அரவணைத்துக்கொள்ள வேதாந்தத்தால் இயலும். வேதாந்த அறிதலுடன் ஒருவர் எந்த ஆலயத்திற்கும் செல்லாமல் வாழலாம் அல்லது தினப்பூசைகளையும் விரதங்களையும் கடைபிடிக்கலாம்‌. எண்ணற்ற சாத்தியங்கள்‌. ஒரே ஒரு மெய்மையை ஏற்பதால் முரண்பட்ட தனித்த அகவயமான உண்மைகளை ஏற்பதில் வேதாந்திக்குச் சிக்கலில்லை. மாட்டுக்கறி சாப்பிடுபவர் வேதாந்தியாக இருக்க முடியாது என ஜெயமோகனை நிராகரிக்கும்போது வேதாந்தத்தின் முழுவீச்சை நாம் உணரவில்லை என்பதே நிதர்சனம். புற உலகத்தில் ஒற்றை உண்மைகள் ஏற்படுத்தும் வன்முறைகளையும் அதிகாரக் குவிப்புகளையும் வேதாந்தம் இந்த அகவயமான உண்மைகள் வழியாகவே எதிர்கொள்கிறது. 

கொரோனா வீடடங்கின் முற்பகுதியில் என்னால் புனைவுகளை வாசிக்க முடியவில்லை. எக்கார் டோலேயின் ‘A new earth’ நூலைப் பழைய புத்தகக் கடையில் வாங்கி பல காலமாகியும் தொடாமல் இருந்தேன். இயல்பாக அந்தப் புத்தகத்தையே தேர்ந்தது என் மனம். டோலே துயரங்கள் நம்மை திறந்துவிடுபவை என்கிறார். உயிரச்சமும் துயரங்களும் ஆன்மீகத்திற்கான திறவுகோல்கள் என்கிறார். அங்கிருந்து அரவிந்தரை வாசித்தேன். தொடர்ந்து கபீர், ரூமி எனக் கவிதைகளில் திளைத்தேன். அத்வைதத்தில் கலைக்கான இடம் சற்று குழப்பமானது. கலையை அகங்கார வெளிப்பாடாகக் கொள்ளும் அபாயம் உள்ளதால் சாதகர்களுக்கு கலை சார்ந்து சில தயக்கங்கள் எப்போதும் உடனிருப்பவை. எனினும் ரூமி, கலில் கிப்ரான், கபீர் போன்றோரை வாசிக்கும்போது கலை என்பது திசைகாட்டியாக இருக்க முடியும் என்பதை மனம் உணர்கிறது. அத்வைத நோக்கிலிருந்து மொத்த இலக்கியத்தையும் எச்சரிக்கைப் பதாகைகளாகவும் திசைகாட்டிப் பதாகைகளாகவும் காண இடமுண்டு. ஹெச்.எஸ். சிவப்பிரகாஷின் குரு எனத் தொடர்ந்தது வாசிப்பு. ஓ.ரா.ந கிருஷ்ணனின் ‘பௌத்த தியானம்’ நம்மால் எளிதில் பின்பற்ற முடிகின்ற தியானப் பயிற்சிகளை அறிமுகம் செய்கிறது. ‘அமைதி என்பது நாமே’ அவ்வகையில் குறிப்பிடத்தக்க செயலூக்கத்தை அளிக்கிறது. தனிமனிதனாக நாம் ஒரு துயரத்தை எதிர்கொண்டு ஆன்மீகத்தில் விடை தேடுவதற்கும் ஒரு காலகட்டத்தின் துயரத்திற்கு சாட்சியாக இருந்து ஆன்மீகத்தில் விடைதேடுவதற்கும் அடிப்படையில் வேறுபாடுள்ளது. தனது துயரமும் அச்சமும் ஒட்டுமொத்த மானுட குலத்திற்கானது என உணரச் சாத்தியமானது. கடவுள்களைவிட வாழ்ந்து மறைந்த ஞானியர்களைத் தொடரவே மனம் விழைந்தது. ஏனெனில் அறுதி உண்மை எதுவாக இருப்பினும், அல்லது அப்படி எதுவுமே இல்லாது இருப்பினும், வாழும் காலத்தை எதிர்கொள்ள அவர்களிடம் சில சூத்திரங்கள் உள்ளன என மனம் நம்பியது. அவை மனதைப் பழக்கித் தகவமைப்பது வழியாக சாத்தியமாகக்கூடும். வழிபாடுகளைக் காட்டிலும் சாதனைகளில் நாட்டம் ஏற்பட்டது.

இருத்தலியல் கேள்விகளுக்குத் தூலமான புறக்கடவுள்களும் வழிபாட்டுச் சடங்குகளும் எந்த அளவிற்குப் போதுமானதாக இருக்கும் என்பது தெரியவில்லை. தன்னையறிதலே இக்காலகட்டத்திற்கு உரிய ஆன்மீகமாக இருக்க முடியும். வழிபாடுகள் இயல்பான காலகட்டத்திற்கு உரியவை. என்றேனும் ஒருநாள் வழிபாடு நிகழ்த்தினால் போதும். அதுவும் நாம் வேண்டுவது ‘இப்போதிருக்கும் நிலை மேம்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அப்படியேயாவது நீடிக்க வேண்டும்’ என்பதுதான். இருத்தலியல் கேள்விகளை எதிர்கொள்ளும்போது நமக்கு அன்றாடம் அவநம்பிக்கைகளுக்குத் தீர்வு வேண்டியதாயிருக்கிறது. தினமும் நாம் நம்மை எதிர்கொள்ளவும் நம்முடன் நாமே உரையாடியாகவும் வேண்டும். இதைப் பெரும்பாலான நவீன குருநிலைகளும் ஆன்மீக அமைப்புகளும் உணர்ந்துகொண்டன. மக்கள் திரளை இணையம் வழி தொட தங்களைத் திறந்துகொண்டனர். பீகார் யோகப் பள்ளி தங்களது தியான முறைகளையும் பயிற்சி முறைகளையும் இலவசமாகப் பயன்படுத்த அனுமதித்தார்கள். நண்பர் சவுந்தர் வழியாக அறிந்துகொண்டு அதிலுள்ள தியான முறைகளைத் தினமும் பயின்றேன். ஈஷா யோக மைய மருத்துவர்கள், முன்களப் பணியாளர்களுக்கான ஒருவாரப் பயிற்சி முகாமை இணையம் வழி இலவசமாக வழங்கினார்கள். அதையும் பயன்படுத்திக்கொண்டேன். எனினும் அதிலிருந்து தொடர்ந்து செய்யும் பயிற்சிகள் என எதுவுமில்லை. சின்மயா மிஷனின் சுவாமி பரமாத்மானந்தரின் அத்வைத உரைகள் கேட்கத் தொடங்கினேன். ஆதி சங்கரரின் ‘தத்வ போதா’ பற்றி இருபது மணிநேர உரை கேட்டு முடித்து, இப்போது 275 மணிநேரம் வகுப்பெடுத்த பகவத் கீதை உரையைப் பாதிவரை கேட்டிருக்கிறேன். மிக முக்கியமான கற்றல். மற்றொரு நண்பர் மூலம் ஒரு ஆச்சாரியரின் துணையோடு முறையாக விஷிஷ்டாத்வைதம் அறிமுகம் செய்துகொண்டு, ராமானுஜரின் பிரம்மசூத்திர உரையான ஸ்ரீ பாஷ்யத்தை ஒவ்வொரு சனிக்கிழமையும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கற்றுவருகிறேன். 

மரணம் எப்போதும் ஞானத்தின் வாயிலைத் திறந்துவைக்கிறது. சித்தார்த்தன் தொடங்கி ரமணர் வரை மரணம் எனும் இன்மை எழுப்பும் இருத்தலியல் கேள்வியை எதிர்கொள்கிறார்கள். ‘விஷாதம்’ எனும் நிலை மரணத்தைக் கண்டு மருகுவது எனச் சொன்னால் அது நம் அனைவருக்கும் பொது. அந்நிலைக்கு நம் எதிர்வினை என்பதே நம் பாதையைத் தீர்மானிக்கிறது. நாம் இருத்தலியலுக்குச் செல்கிறோமா அல்லது ஆன்மீகத்திற்குச் செல்கிறோமா? இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ‘விஷாதம்’ பெரும்பாலானவர்களுக்கான ஆன்மீக நுழைவுவாயில் எனினும் அது மட்டுமே அதற்கான ஒரே நுழைவுவாயில் அல்ல என்பதையும் மனதில் கொள்ளாக வேண்டும். ஒரு மரணச் செய்தியைக் கேட்கும்போது நம் மரணம் நமக்கு நினைவூட்டப்படுகிறது. பிறரின் மரணத்திற்குத் துயர்கொள்கிறோம் என்பதைவிட நம் மரணத்தைப் பற்றிய கற்பனைகள் நம்மைத் துயர்கொள்ள வைக்கின்றன. ஆகவே நமக்கொரு மறுமை தேவைப்படுகிறது. 

விஷாதத்திலிருந்து அச்சத்தின் வழியாக செயலின்மைக்குள் எளிதாக விழுந்துவிடலாம். வாழ்வை எதிர்கொள்ளத் துணிவில்லாமல் அந்நிலையை ஆன்மீக அனுபூதி என வேடமிட்டுக்கொள்ளலாம். முற்றிலும் தன்னலமும் துணிவின்மையும் மட்டுமே இந்நிலைக்குக் காரணம். ஆன்மீகவாதிகளின் மீதான பெரும்பாலான விமர்சனங்கள் இந்தத் தளத்திலிருந்தே எழுகின்றன. ஆனால் மெய்யான ஆன்மீகத்தில் துணிவின்மைக்கு இடமில்லை. தன்னலத்திற்கும் வேலையில்லை. வள்ளலார், அய்யா வைகுண்டர் போன்றோரின் பங்களிப்பையும் அவர்கள் வாழ்ந்த காலத்தையும் காணும்போது பஞ்சமும் கொள்ளை நோய்களும் நிறைந்த காலகட்டம் என்பது புலப்படுகிறது. நுண்ணுணர்வு கொண்ட மனம் இயல்பாகவே ஆன்மீக நெருக்கடிக்கு உள்ளாகும். மேற்கில் ‘விடுதலை இறையியல்’ என்பது புகழ்பெற்று, ஒடுக்கப்படுபவருக்கு ஆற்றலாக கிறித்தவ ஆன்மீகம் திகழ முடியும் என்கிறது. ஆசை மொழிபெயர்த்த ‘அமைதி என்பது நாமே’ வியட்நாம் போரில் அமைதியை ஏற்படுத்தப் போராடிய திக் நாட் ஹானின் படைப்பு. அவர் ‘ஈடுபடும் பவுத்தம்’ எனும் கருத்தியலை முன்வைக்கிறார். வள்ளலாரும் வைகுண்டரும் சமய, சமூக மேம்பாட்டு நோக்கில் ஆன்மீகத்தைப் பயன்படுத்த முயன்றனர். காந்தி அரசியல் தளத்தில் ஆன்மீக ஆற்றலைத் துணைக்கு அழைத்தார். அரசியல் சமூக மாற்றங்களுக்காக ஆன்மீகத்தைப் பயன்படுத்துவது ஒரு வழி. முற்றிலும் அவற்றிலிருந்து ஒதுங்கியிருந்த ரமணர் வேறொரு வழியில் பங்காற்றினார். திக் நாட் ஹான் எதுவுமே செய்யாதிருத்தல் இவ்வுலகிற்கு நீங்கள் செய்யும் மிக முக்கியப் பங்களிப்பாக இருக்கலாம் எனச் சொல்கிறார்‌. கடலில் கொந்தளித்துக்கொண்டிருக்கும் ஓடத்தில் பயணிப்பவர்கள் அனைவரும் பதற்றத்துடன் இருக்கும்போது ஒரேயொருவர் அமைதியாக இருந்தால்கூட சிலரையாவது காக்க முடியும் எனும் உதாரணத்தை அளிக்கிறார். ஆகவே ஆன்மீகத்தில் இவை இரண்டுமே வெவ்வேறு வகையில் செயல்படும் முக்கிய வழிமுறைகள்தான். 

காந்தியின் உருவகத்தைக் கடன்பெறுவதாக இருந்தால், பெருந்தொற்று என்பது ஒரு கலங்கிய நதி. தெளிவடைவதற்கு முன்பான இன்றியமையாத படியில் உள்ளோம். இந்த ‘விஷாத’ நிலையைத் தனி மனிதர்களாக எதிர்கொண்டிருப்போம், மானுட குலமாக இயற்கைப் பேரிடர்களின் போதும் போர்களின் போதும் அடைந்திருப்போம். ஆனால் ஒட்டுமொத்த மனித குலமே தொடர்ச்சியாக இத்தனை நீண்டதொரு காலத்திற்கு விஷாத நிலையில் இதற்கு முன் நீடித்திருக்குமா எனத் தெரியவில்லை. மரணத்தின் தர்க்கப்படுத்திக்கொள்ளும் முயற்சியிலேயே மனிதன் ஆன்மீகத்தை நோக்கித் திரும்பியிருக்கக்கூடும். மரணத்தை ஏற்கும் மனச் சமாதானத்தை மதங்கள் தங்களுக்கே உரிய முறையில் உருவாக்கி அளித்துள்ளன. பெருந்தொற்றும் அதையொட்டிய வீடடங்கு காலமும் நம் அன்றாடத்தின் சக்கரச் சுழற்சியைத் தற்காலிகமாகவேனும் நிதானப்படுத்தியிருக்கிறது. இந்த நிதானமே நம்மை அச்சுறுத்துகிறது. அந்தரங்கமாகக் கேள்விகளற்ற ஓட்டத்தையே நாம் விழைகிறோம். இந்த விஷாத நிலை நிச்சயம் கலையும். இப்படிச் சொல்வது ஆறுதலுக்காகச் சொல்லப்படும் வெற்று நம்பிக்கை வார்த்தைகள் அல்ல. ஆனால் அதற்குள் நாம் எவற்றை எல்லாம் இழந்திருப்போம்? எத்தனை காலமாகும்? மனித குலத்தின் ஒளிக்கீற்றுகள் குன்றி அவற்றின் உள்ளடுக்குகளில் இருந்து இருள் எழுந்து வரும்போது நாம் அவற்றின் சாட்சிகளாகத் திகழ வேண்டியிருக்கலாம். அந்த இருண்மையில் பங்கேற்பாளர்களாக நாமிருக்க நமக்கு இப்போது ஆன்மீகத் தன்னறிவு வேண்டியதாய் இருக்கிறது. விஷாதத்தில் தொடங்குவது ஞானத்திலேயே முடிவுறும். இந்நிலையைக் கடந்துசெல்லும் துணிவு நம் ஒவ்வொருவருக்கும் வாய்க்கட்டும். 

Thursday, April 15, 2021

மரணமின்மை எனும் மானுட கனவு- ஆரோக்கிய நிகேதனம் ஒரு வாசிப்பு

சொல்வனம் வங்காள இலக்கிய சிறப்பிதழுக்கு எழுதிய கட்டுரை. 

மைத்ரேயர் அவருடைய குரு ஆத்ரேயரிடம் தனது மறுப்பைச் சொன்னார். உகந்த மருந்துகள், உரிய செவிலியர், மற்றும் திறன் வாய்ந்த மருத்துவர்கள் இருந்து நல்ல சுயகட்டுக்கோப்பும் உள்ள நோயாளி விரைவில் நோயிலிருந்து மீள்கிறார். ஆனால் இவை எல்லாம் இருந்தும் சிலர் மரிக்கிறார்கள். இது ஏன்? அப்படியானால் சிகிச்சைக்கு எந்த மதிப்பும் இல்லைதானே. சேற்றுக் குட்டையில் கொஞ்சம் நன்னீர் அள்ளி ஊற்றுவது போல அல்லது ஓடும் நதியில் கையளவு நீரை விடுவது போல அல்லது குப்பைமேட்டில் ஒரு கைப்பிடி குப்பையை அள்ளிப்போடுவது போல, பயனற்றது. நேரெதிராக உரிய மருந்தோ, செவிலியரோ, நல்ல வைத்தியரோ அமையாத, சுயக்கட்டுபாடும் இல்லாத நோயாளியும் கூட நோயிலிருந்து மீள்கிறார். அதே நிலையில் இருக்கும் சிலர் மரிக்கவும் செய்கிறார்கள். ஆக மொத்தம்- சிகிச்சை செய்து பிழைக்கிறார், சிகிச்சை செய்தும் மரிக்கிறார், சிகிச்சையின்றியும் பிழைக்கிறார், சிகிச்சையின்றியும் மரிக்கிறார். ஆக சிகிச்சை அளிப்பதாலோ அளிக்காததாலோ எந்த மாற்றமும் இல்லை.

பதிலுரைத்து ஆத்ரேயர் சொன்னார் – இந்த பிழையான சிந்தனைக்கு என்ன காரணம் மைத்ரேயா? குணமாகக்கூடிய நோய் சிகிச்சையின் நான்கு பாதங்களின் பதினாறு இயல்புகளுடன் இருக்கையில் நோயாளி மரித்துவிட்டார் என்பது நிகழ சாத்தியமில்லாதது. ஆரோக்கியமானவர் கீழே விழுந்தால் அவரே உறுதியாக எழுந்து விடுவார் எனினும் எவரேனுமா கைத்தூக்கிவிட்டு உதவினால் அவராக எழுவதைக்காட்டிலும் விரைவாக எழுவார். அப்படித்தான் குணப்படுத்தப்படக்கூடிய நோய்களுக்கு சிகிச்சை பயன்படுகிறது. குணமாகக்கூடிய நோய்கள் குணமாவதற்கு சிகிச்சை முக்கியம். குணமாகாத நோய்களுக்கு ஆகத்திறன் வாய்ந்த மருத்துவர் முயன்றாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஞானமுடைய, தினமும் பயின்ற வில்லாளன் எப்படி குறி தவறாதவனாக திகழ்கிறானோ அப்படி சரியாக சோதித்தறிந்த வைத்தியன் தன் இலக்கை துல்லியமாக எய்துவான். ஆகவே சிகிச்சைக்கும் சிகிச்சையின்மைக்கும் வேறுபாடில்லை என சொல்வது பிழையாகும்.

சரக சம்ஹிதை சூத்திர ஸ்தானம் மஹா சதுஷ்பாத அத்தியாயம்

ஆரோக்கிய நிகேதனம் வங்காள மொழியில் 1953 ல் வெளியானது. 1956 ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. த.நா. குமாரஸ்வாமி மொழியாக்கத்தில் 1972-இல் தமிழுக்கு அறிமுகமானது. 1930-களில் த.நா குமாரஸ்வாமி வங்காளத்தை நேரடியாக கற்று ரவீந்திரநாத் தாகூரின் அனுமதி பெற்று அவருடைய ஆக்கங்களை மொழியாக்கம் செய்ததாக அவரைப் பற்றிய குறிப்பு சொல்கிறது. ஒரு மொழியை நேரடியாக கற்று அதிலிருந்து அற்புதமான இலக்கிய ஆக்கங்களை தம் மொழிக்கு கொணர்ந்து வளமை சேர்க்க ஒரு தன்னலமற்ற முனைப்பு வேண்டும். சு. கிருஷ்ணமூர்த்தி, த.நா. குமாரஸ்வாமி போன்ற இணையற்ற அர்ப்பணிப்பு கொண்ட மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தமிழ் இலக்கியம் என்றும் நன்றியுடனிருக்கும். தமிழ் சூழலில் இந்த நாவலை அறிமுகப்படுத்தி அதன் மீது கவனத்தை ஏற்படுத்தியதில் எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ கட்டுரைத்தொகுப்புக்கு பெரும் பங்கு உண்டு. எனக்கும் அக்கட்டுரை வழியாகவே இந்நாவல் அறிமுகம். 

ஆரோக்கிய நிகேதனம் வங்கத்தில் நவாக்ராம் பகுதியில் அருகே உள்ள தேவிபுரய் எனும் கிராமத்தில் இந்திய விடுதலைக்கு பின்பான காலகட்டத்தில் நிகழும் கதை.  நாவலின் மையப்பாத்திரமான ஜீவன் மஷாய் அவருடைய தந்தை ஜகத்பந்து மஷாய் மற்றும் ஜீவனின் மகன் வனவிஹாரி என முன்னும் பின்னுமாக மூன்று தலைமுறையினரின் கதையைப் பின்னிச் சொல்கிறது. நோயாளி பிழைப்பானா மாட்டானா என சூது விளையாடி அதில் அடையும் வெற்றி தோல்வியைப் பொறுத்து முடிவுக்கு வரும் சுவாரசியமான ஆளுமை ஜீவன் மஷாய். அவர் பேயை நேரில் கண்டவர். ஜீவனின் தாத்தா தீன பந்து மஷாய் ஆரோக்கிய நிகேதனத்தின் தொடக்கப் புள்ளி. நவாக்ராமத்து ஜமீன்தாரான ராய் சௌத்ரியின் பள்ளியில் ஆசிரியராகவும் அவருடைய கணக்குவழக்குகளையும் கவனிப்பவராகவும் இருந்தவர். ஜமீன்தாரின் மகனுக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டபோது அவரைக்காண வந்த வைத்தியகுலத் திலகரான கிருஷ்ணராஜ் ஸேன் நோயாளியை கவனிக்க அயராத மனம் கொண்ட பரிசாரகர் தேவை என்றதும் தீனபந்து மனமுவந்து அப்பணிக்கு தன்னை ஈந்தார். அவருடைய அயராத ஈடுபாட்டுக்கு பலனாக கிருஷ்ணராஜர் வைத்தியத்தையும் நாடி விஞ்ஞானத்தையும் அவருக்கு அளித்தார். ஆரோக்கிய நிகேதனம் என பெயர் வரக்காரணமான நிகழ்வு தீன பந்துவின் மகன் ஜகத் பந்துவின் காலத்தில் நிகழ்கிறது. ‘லாபானாம் ஷ்ரேஷ்டம் ஆரோக்கியம்’ (தோராயமாக health is wealth) எனும் மகாபாரத மேற்கோளை நோயிலிருந்து மீண்டவர் எழுதிச்செல்கிறார். அதுவே ஜீவன் மஷாய் காலத்தில் ஆரோக்கிய நிகேதனம் எனும் பெயர்ப் பலகையாக பரிணாமம் கொள்கிறது. தீனபந்து காலத்திலிருந்து மெல்ல ஏறி ஜகத்பந்து காலத்தில் உச்சம் பெற்று ஜீவன் மஷாயின் காலத்தில் இறங்கி அவருடைய மகன் வனவிஹாரியின் மரணத்தின் வழியாக ஆரோக்கிய நிகேதனத்தின் சிதைவின் கதையைச் சொல்கிறார். நாவல் தொடங்கும்போதிருக்கும் விவரனைகள் வழியாக இந்த சிதைவின் சித்திரம் துலங்கி வருகிறது. இந்த சிதைவு ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட சிதைவு என்பதை விட ஒரு மருத்துவமுறையின், ஒரு பண்பாட்டின் சிதைவு என்பதே நாவலின் மையம். ஆனால் நாவல் முடியும்போது மீண்டும் ஒரு எழுச்சியைக் காட்டி தொடர்ச்சியைச் சுட்டி செவ்விலக்கியத்தன்மையுடன் நிறைவடைகிறது. 

 நாவல் இரண்டு தளங்களைக் கொண்டது. ஒன்று மரணம் பற்றிய எப்போதைக்குமான கேள்விகளை மருத்துவனின் கோணத்திலிருந்து ஆராய்கிறது. இரண்டாவதாக ஒரு வரலாற்று காலகட்டத்தில் இரு பண்பாடுகளின் மோதலையும், ஊடுபாவையும், அவற்றின் சிக்கல்களையும், எல்லைகளையும் நுட்பமாக பதிவு செய்கிறது. தான் சந்திக்கும் நோயாளிகள் மற்றும் பிற மருத்துவர்களுடான ஊடாட்டங்களையும் அதையொட்டிய தனது மனவோட்டங்களையும் பதிவு செய்து வாழ்க்கையின் சாரத்தைத் தேடும் ஒரு வைத்தியனின் நாட்குறிப்பு என்று கூட இந்நாவலை சொல்லலாம். நாவலில் நோயாளிகள் மருத்துவர்கள் என இரண்டே விதமான கதைமாந்தர்கள் தான். 

 நாவல் முழுக்க விதவிதமான மரணங்கள் விரவிக்கிடக்கின்றன. பச்சிளம் குழந்தை கொதிக்கும் பால் விழுந்து மரிக்கிறது. மரணிக்க வேண்டிய வயதிலும் உயிரிச்சையை கைவிடாது அவதிக்குள்ளாகும் மதியின் பாட்டி. கட்டுடல் கொண்ட ரானா பாடாக் யக்ஷ்ம ரோகத்திலும் திட சித்தத்துடன் மரிக்கிறான். அவனுடைய கிளைக்கதை தனி நாவலுக்குரிய காவியத்தன்மை கொண்டது. கலவரத்தில் மாட்டிக்கொண்ட அனாதைப்பெண்ணுக்கு வாழ்வளித்து நோயை பெற்று கொண்டு, அவர்களின் பெண் குழந்தையை நவக்ராமத்து லட்சியவாதத்தின் முகமான கிஷோரிடம் ஒப்படைத்துவதட்டு, அவளும் மரித்து அவனும் மரிக்கிறான். ஒடியோடி உழைத்த ரத்தன் பாபுவின் மகன் விபின் விடாப்பிடியாக உயிரை பற்றிக்கொள்கிறான் ஆனால் அவனும் மரிக்கிறான். மரிப்பதற்கு முன் தந்தையை தவிக்கவிட்டு மரிப்பதற்காக குற்ற உணர்வு கொள்கிறான். ‘ஒரு விரோதி உங்கள் மகனாக பிறந்துவிட்டேன்’ என வருந்துகிறான். விரோதி மகனாக பிறப்பது பற்றிய ஒரு சிறு விளக்கத்தை தாராசங்கர் அளிக்கிறார். “இந்த நாட்டில் ஒரு பழைய நம்பிக்கை உண்டு: முற்பிறவியின் கொடிய பகைவன் மறுபிறவியில் பிள்ளையாகப் பிறப்பான். பெரியவனாவான், பெற்றோர் மனத்தில் என்ன ஆசையெல்லாமோ எழுப்புவான், அப்புறம் திடுமென அவர்கள் பேரதிர்ச்சி அடைய இறந்து போவான்.” இந்த வரி பல தளங்களை திறந்துவிட்டன. தந்தையிருக்க மகன் அகாலத்தில் மரிக்கும் துயரத்தை வேறெப்படி வகுக்க முடியும்? எனக்கு என் ‘வாசுதேவன்’ கதை நாயகனும் இன்னும் பலரும் கண்முன் வந்து சென்றார்கள். அவன் மரணத்திற்கு அவனுடைய ராஜசிக இயல்பே காரணமாகிறது. மதியின் ஆரோக்கியமான மூத்த மகன் மலேரியாவில் சட்டென மரிக்கிறான்.  பண்ணிரண்டு வயதில் இரு குழந்தைகளுக்குத் தாயான நிஷி டாகரூனின் மருமகள் மரிக்கிறாள். தனது நோய்க்கான காரணத்தை நன்கறிந்தும் அதை தவிர்க்க முடியாமல் பலியாகிறான் தாந்து. அவனால் எத்தனை முயன்றும் அவனை அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஜீவன் மரணத்தை மனிதனின் நெருங்கிய சகாவாக காண்கிறார். “பிறந்தவுடனேயே சாவும் நட்பு கொண்டு தொடர்கிறது. நாளுக்கு நாள் இந்த இணக்கம் அதிகரிக்கிறது.” மரணம் எப்போதும் உடன் வருவது. ‌ நண்பனே எதிரியாவான் என்பதைப்போல் நமது பிடிப்பே மரணத்தைக் கொணர்வது என்கிறார். மரணம் நெருங்கி வரும்போது எப்படியாவது காப்பாற்றுங்கள் என கேவி அழுகிறான் ஜீவனின் மகன் வனவிஹாரி. நாவலில் மிகவும் உணர்ச்சிகரமான பகுதி என்பது வனவிஹாரியின் வாழ்வும் மரணமும் விவரிக்கப்படும் பகுதி. சொந்த மகனின் நலிவை உணர்ந்து அவன் மரணத்தை மூன்று மாதங்களுக்கு முன்னரே ஜீவன் முன் உணர்கிறார். வனவிஹாரி பல வகையிலும் எனக்கு காந்தியின் மூத்த மகன் ஹரிலாலை நினைவுபடுத்தியது. மஷாய் வம்சத்து சிகிச்சை அறிவு கொஞ்சமும் இல்லாதவன். சீரழியும் பழக்கங்களில் சிக்கி அழிகிறான். ஜீவனுக்கு லாகிரி வஸ்துக்கள் பழக்கமில்லை. ‌ “நோயைத் தீர்ப்பதொன்றே அவர் கொண்ட போதை. நோயாளியைக் காப்பாற்றுவதொன்றே அவரது குறிக்கோள்.” என வாழ்ந்தவர். ஜீவனின் இளமைக்காலம் போலவே வனவிஹாரியும் கட்டற்றவனாக இருந்தான். ஆனால் அவர் மீண்டு நிலைநின்றதைப்போல அவனால் நிலைபெற முடியவில்லை. தன்னை அழித்து மரணத்தைத் தருவித்துக்கொண்டவன். நாடி நோக்கி சசாங்கனின் மரணத்தை முன் உணர்ந்து அவனுடைய மனைவி அபயாவை அழைத்து பரிவுடன் அன்னமிட முயல்கிறார.‌ ஆனால் அபயா உங்கள் மருமகளுக்கும் இப்படித்தான் செய்வீர்களா என சாபமிடுகிறாள். வனவிஹாரியின் மரணத்துக்கு அந்த சாபம் ஒரு காரணமோ எனும் உறுத்தல் அவருக்கு இருக்கிறது. ஆனால் விதவையாக உடல்நலம் குன்றிய அவளை ஜீவ தத்தரே காக்கிறார். வனவிஹாரி உடல்நிலை நலிவுற்றதாக அறிந்தபோது காளியிடம் நேர்ந்து கொண்டதாக சொல்கிறாள். அவள் வீட்டு சாவித்திரி விரதத்திற்கு செல்ல அவருக்கு விருப்பமில்லை என்றாலும் அந்த கனிவே அவருடைய மரணத்தை தருவிக்கும் பலவீனமான திறவுகோளாகிறது. 

முதிய கணவனைச் சகிக்காமல் எப்போதும் நோயிலேயே இருப்பதாக பாவிக்கும் பரான் கானின் இளம் மனைவி அரளி விதைகளை உண்டு தற்கொலை செய்து கொள்கிறாள். அப்போது ஜீவன் ‘இந்தப் பெண்ணைப்போல் தாமும் விஷம் தின்றால், அப்போது பிழைத்திருக்க முடியுமா? இதை நாடியின் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியாதே!’ என எண்ணுகிறார். மரணத்தின் பூடகம், தர்க்கமின்மை, வரம்பின்மை அறைகிறது. நாவலுக்குள் மரண தேவதை பற்றிய தொன்மக்கதை சொல்லப்படுகிறது. செம்பட்டை தலைமயிர் கொண்ட கோர முகத்தவளுக்கு கண் தெரியாது, காது கேட்காது. நோய்கள் எல்லாம் அவளுடைய பிள்ளைகள். காலத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டவள் அவள். ஜீவன் மரணத்திற்குள் அவளை நேருக்கு நேராக சந்தித்து ஒவ்வொரு புலனிலும் உணர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டவர். நாடியில் அவளுடைய காலடியோசையை அணுகி வருவதும் விலகிச் செல்வதுமாக அவரால் கேட்க முடிந்தது. ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள யக்ஷ்மன் சார்ந்த தேய்பிறை சந்திரன், ஈசனின் கோபத்தால் தோன்றும் காய்ச்சல் போன்ற தொன்மங்களை நாவல் ஆங்காங்கு பயன்படுத்துகிறது. உரிய நேரத்தில் மரணத்தை முழுதாக ஏற்கும் சண்டீதலா கோயில் மஹாந்து மரணத்தருவாயில் அபிமன்யூ மேடை நாடகத்தில் அழுவதைப்பற்றி கேள்வி கேட்கிறார். திட மனதுடன் மரணத்தை எதிர்கொள்கிறார். நாவலில் மரணத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எதிர்கொள்கிறார்கள். இறுதியாக ஜீவனும் அவர் விரும்பியபடி தெளிந்த மனதுடன் மரணத்தைச் சந்திக்கிறார். குடுகுடு கிழவியாக மஞ்சரியை மீண்டும் சந்தித்து, ஈர்ப்பும் மாயையும் குலைந்து, அவள் நாடியைக்கண்டு மரண செய்தியை அறிந்த பிறகே அவர் மரணமடைகிறார். ஒட்டுமொத்தமாக நாவலில் மரணத்தைக் கண்டு அஞ்சி அரற்றுபவர்கள், மரணத்தை துணிவுடன் எதிர்கொண்டவர்கள் என இரண்டுவிதமான கதை மாந்தர்களை வகுத்துக்கொள்ள முடியும். இவை இரண்டும் இல்லாமல் நாவலில் வரும் அகால மரணங்கள் மனதை வருத்துபவை. தனது மூத்த மகளின் சாயலில் உள்ள சிறுமியின் சடலத்தைக் கூரு போட தயங்கி விலகுகிறார் ஜீவன். உடல் நலிந்து மரணிப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் அதற்குப் பொறுப்பாகிறார்கள். மரணத்தை அவர்களே அழைத்துக்கொள்கிறார்கள். ஆனால் எந்த பிழையும் புரியாத இவர்களின் மரணங்கள் மன ஓர்மையை பாதிப்பவை. மரணிப்பவர்கள் அளவுக்கே பிழைப்பவர்களும் உள்ளார்கள். அதஸியின் சிறு வயது பாலகன் மறலியின் பிடியிலிருந்து வழுவுவது பெரும் ஆசுவாசத்தை அளிக்கிறது. பிரத்யோத் டாக்டரின் மனைவி மஞ்சு, சசாங்கனின் மனைவி அபயா, மரணப்படுக்கையில் இருந்த ராம் ஹரி என சிலரை நோயிலிருந்து மீண்டவர்கள் என சொல்ல முடியும். 

ஜகத்பந்து முழுக்க கவிராஜர் மரபில் தனது தந்தையிடம் ஆயுர்வேதம் பயின்றவர். ஜீவனுக்கு கல்லூரியில் சேர்ந்து டாக்டராக பாஸ் செய்ய வேண்டும் எனும் அவா இருந்தது. ‘என்ன வயசானாலும் அனுபவம் இராது போனாலும் ‘டிகிரி’ இருந்தது. இந்த ‘டிகிரி’ மீதுதான் அவர்களுடைய செல்வாக்கும் புகழும் நின்றன.’ என்பதை ஜீவன் அறிந்திருந்தார். ஆனால் அந்த கல்வி தடைபட்டுப் போகிறது. நவீன மருத்துவத்தை தன்னிச்சையாகப் பயின்று ஒரு யோகியைப்போல் திகழ்ந்த ரங்லால் டாக்டரிடம் நவீன மருத்துவத்தை பயில்கிறார். ஆற்றோரம் போகும் பிணங்களை அறுத்து உடற்கூறு கற்கிறார் ரங்லால் டாக்டர். இது சுசுருத சம்ஹிதையில் ஆய்வுக்கு பிணங்களை பதப்படுத்தும் முறையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பகுதி. ரங்லால் ஒரு கட்டத்திற்கு மேல் வைத்தியத்தை கைவிடுகிறார். அதேபோலத்தான் சக்ரதாரி மருத்துவரும். ‌ நவீன மருத்துவத்தைப் பயின்றவர்களும் ஒரு வகையில் பண்டையகாலத்து வைத்தியர்களின் வழிமுறையையொட்டியே வாழ்கிறார்கள். ஆயுர்வேதியான ஜகத்பந்து மற்றும் சுயமாக நவீன மருத்துவத்தைக் கற்ற ரங்லால் டாக்டர் என இருவரின் கூறுகளும் ஜீவனிடம் உண்டு. இருவருக்கும் இடையேயான வேறுபாடைச் சொல்லும்போது ” ஜகத் மஷாயின் போதனையில் அடிக்கடி ‘அதிர்ஷ்டம்’, ‘ஊழ்வினை’ (நியதி), ‘கடவுள்’ இவை வரும். ரோக விஞ்ஞானத்தைப் பற்றிய விஷயத்தோடு அத்யாத்மிக பாவம் நிரம்பிய வியாக்கியானமாகவும் இருக்கும். அவருடைய விளக்கத்தில் பொருளை மீறிய ஒரு பாவம் இருக்கும். ரங்லால் டாக்டரின் விளக்கத்தில் ‘கடவுள்’ வரமாட்டார்; ‘அதிர்ஷ்டம்’ வராது; வெறும் வறட்டு விஷயம் போல் இருக்கும். புத்திக்கே புலனாகக்கூடியது. அதில் பாவமோ உணர்ச்சியின் வேகமோ துளியாகிலும் இருக்காது.” என ஒப்பிட்டு நோக்குகிறார் ஜீவன்.  ரங்கலால் டாக்டர் நோயாளியின் முன் மரணத்தை நினைவுபடுத்தக்கூடிய எந்தப் பேச்சையுமே பேசமாட்டார்.  ‘Medicine can cure disease but cannot prevent death’ (மருந்து நோயைப் போக்கும் – ஆனால் மரணத்தை விலக்க அதனால் ஆகாது) என்றதும் நீளக்கால் வைத்து நோயாளியின் வீட்டிலிருந்து போய்விடுவார். ஜகத் பந்துவோ ஜீவன் மஷாயோ அப்படியல்ல. வயதானவர்கள் என்றால் மரணத்தை அறிவித்துவிடுவார்கள். இளையவர்கள் என்றால் நாசூக்காக உணர்த்திவிடுவார்கள். ரங்லால் டாக்டரும் ஜகத் பந்துவும் நாவல் முழுக்க மேற்கோள்கள் வழியாக இருபெரும் ஆளுமைகளாக துலங்கி வருகிறார்கள். ரங்லாலுக்கு கடவுள் நம்பிக்கை சிக்கலில்லை ஆனால் அந்த அனுபவத்தில் ஆழாமல் பக்தியை ஒரு பேரமாக காண்பதைத்தான் ஏற்க மறுக்கிறார். ‘ஹரி நாமம் சொல்லியே தொற்று நோயை துரத்துபவன் தானே நீ ‘ என ஜீவனை கேலி செய்வார். 

ஜீவன் மஷாயின் காலத்தில் ஒன்றிரண்டாக நவீன மருத்துவத்தில் பாஸ் செய்த மருத்துவர்கள் வரத்தொடங்குகிறார்கள்‌. சாரு பாபு, ஹரேன் டாக்டர் மற்றும் பிரத்யோத் டாக்டர் ஆகிய மூவரும் இளம் மருத்துவர்கள். ஹரேன் அதே ஊரிலேயே பிறந்து வளர்ந்து மருத்துவம் பயின்றவர். இளமையில் ஜீவனின் மருத்துவத்தால் பயனடைந்தவர் என்பதால் பிற இருவருக்கும் ஜீவனிடம் இருக்கும் எதிர்மறை கோணம் அவருக்கு கிடையாது. ஜீவன் மஷாயின் எதிர் புள்ளி என பிரத்யோத் டாக்டரைச் சொல்லலாம். எதிர்புள்ளி என்பதைவிட ஜீவன் அடைய முயன்ற லட்சிய வடிவம். ஜீவன் கடந்தகாலம் என்றால் பிரத்யோத் வருங்காலம். தான் மருத்துவம் பாஸ் செய்யவில்லை எனும் வருத்தம் பிரத்யோத்தை பற்றி எண்ணும்போது அவருக்கு ஏற்படுகிறது. ‌ ஜீவன் மஷாய்க்கும் அவருடைய மனைவி ஆர்த்தர் பௌக்கும் இடையேயான உறவு, ஜீவன் அவளை மரணத்தின் உருவமாக காணும் அளவிற்கு, உரசல்கள் நிரம்பியது. பிரத்யோதும் அவருடைய மனைவி மஞ்சுவும் இணக்கமாக ஆதர்ச தம்பதிகளாக வாழ்பவர்கள். அதுவும் அவர் காதலித்த மஞ்சரியின் பேத்தி மஞ்சுவை மணந்ததன் வழியாக ஜீவனின் இளமையான லட்சிய வடிவம் என பிரத்யோத்தைக் கொள்ள முடியும். பிரத்யோத் ஜீவனை போன்றே நோய்களுக்கு எதிராக முழுத்திறமையும் கொண்டு போராடக்கூடிய திறமையும் துணிவும் மிக்கவர். ஜீவன் மஷாய்க்கு அவர் மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு ஆனால் பிரத்யோத்துக்கு மஷாய் ஒரு க்வாக். நாடியில் மரணத்தை முன்னறிவிக்கும் நாகரீகமற்றவர். தனிப்பட்ட காழ்ப்போ பகையோ இல்லை. அவருடைய வைத்திய முறையையே நிராகரிக்கிறார் என்பதே அவரை வருத்துகிறது. ஜீவன் மஷாய் சசிக்கு அறிவுரை சொல்கிறார் “நோயுற்றவர் இளமையானவரா. வயதானவரா? வயதானால் ஒருவிதமாகத் தீர்த்துவிடேன் – நீ செய்யும் இந்தச் சிகிச்சைக் குற்றத்தைவிட அவர் இன்னும் உயிர் வைத்திருப்பது பெரிய குற்றமாகுமே!…” என. பிரத்யோத்தால் ஒருபோதும் இந்த நிலையை எட்ட முடியாது. ஜகத்பந்து ஜீவனிடம் “உயிருக்குள்ள ஆயுட்காலம், ஆரோக்கியமான நிலை இரண்டும் வெவ்வேறு என்று சொல்வது வெறும் பேச்சுப் புரட்டல்ல. அதற்கு ஆழ்ந்த பொருள் இருக்கிறது. ஒருவனுக்கு நீண்ட ஆயுள் என்றால் அவனுக்கு ஆரோக்கிய வாழ்வென்பதன்று. அப்படிக் குறைந்த ஆயுள் உள்ளவன் என்றால், அவன் ஆரோக்கியமாக இருக்கமாட்டான் என்று அர்த்தமன்று. வாழ்வில் தூய்மையுடன் காலங் கழிப்பவனே ஆரோக்கியம் நிரம்பியவனாவான்.” என நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பையும் முரண்பாடையும் சுட்டிக்காட்டுகிறார். பிரத்யோத்தின் நம்பிக்கை ஆயுட்காலத்தை நீட்டிப்பதே முக்கிய நோக்கம் என நம்புவதாகும்.  

பிரத்யோத்துக்கு ஜீவன் ‘க்வாக்’, ஜீவனுக்கு அவரிடம் கம்பவுண்டராக இருந்த சசி டாக்டர் ‘க்வாக்’. சசி அதிரடியாக சிகிச்சை செய்பவன்‌. கெரோசினை களிம்புடன் சேர்த்து நெஞ்சில் தடவி சளியை அகற்றுபவன். இந்த வரிசைமுறையை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றளவும் இந்த வரிசை அப்படியே உள்ளது. 

ரானா பாடக் பிடிவாதமாக ஆயுர்வேதத்தை தேர்வு செய்யும் காரணமாக நவீன மருத்துவர்கள் மீது வைக்கும் விமர்சனமும் பொருந்தி வருவதுதான். “அந்த டாக்டர்களின் மருந்து சாப்பிட மிகக் கசப்பாகவே இருக்கும். அத்துடன் மஷாய், அவர்கள் கடாங்மடாங்கென்று பேசுபவர்கள் சிடுமூஞ்சிகள்; எங்களையெல்லாம் மனிதர்களாகவே நினைக்காதவர்கள். அவர்களுக்குக் கண்ணெல்லாம் பணத்தின் மீதுதான். ஏராளமாகப் ‘பீஸ்’ வாங்குகிறார்கள். நோயாளிக்கு அனுசரணையாக நீங்கள் பேசிப் பழகுவது போல் இருக்கமாட்டார்கள்.” சார்லஸ் லெஸ்லி ‘Asian medical systems- a comparitive study’ முன்னுரையில் ‘குடியானவர்களும் பழங்குடிகளும், நகர வாசிகளும் காஸ்மோபாலிடன் மருத்துவத்தின் தொழில்நுட்பத்தை மதிக்கிறார்கள், அதன் புதிய மருந்துகளுக்கு பழகிக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அதே நேரம் நாட்டுப்புறத்தவர்களையும் அடித்தட்டு மக்களையும் மரியாதை குறைவாக நடத்தும் பெரும்பாலான மருத்துவர்களையும் மருத்துவ ஊழியர்களையும் வெறுக்கிறார்கள். இத்தகைய நிபுணர்கள் அப்பிரதேசத்திற்கு அந்நியர்களாக இருக்கும்போது அது வர்க்க போரட்டமாகவே மாறி விடுகிறது.’ என எழுதுகிறார்.

ஆனால் ஒற்றைப்படையாக நவீன அறிவியலையும் மருத்துவத்தையும் நிராகரிக்கவில்லை என்பதே இந்நாவலின் தனித்துவம். ஜீவனிடம் ரங்லால் அன்றைய பெரும்பான்மை நாட்டு வைத்தியர்கள் பற்றி சொல்லும் குற்றச்சாட்டு இன்றும் அப்படியே பொருந்துகிறது. “ஜீவன், உன்னிடத்தில் எனக்கு ஆசை எதனால் தெரியுமா? நீ வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு மருண்டு போகாதவன் என்பதனால். இந்த நாட்டு வைத்தியர்கள் தோல்வியை ஏற்று இந்த அலோபதி முறையை வீட்டில் குந்தியபடி சபித்துத் தீர்த்துவிட்டார்கள். இதற்குப் போட்டியாகத் தம் சாஸ்திர ஞானத்தை விருத்தி செய்துகொள்ளவில்லை. வைத்திய முறையில் புதுமையைப் புகுத்தவில்லை. அரைப்பிணங்கள் இப்படித்தான் செத்தொழியும். நீ உயிர்த்துடிப்புள்ள மனிதன்; அதனாலேயே உன்னிடம் எனக்கு மதிப்பு. தோற்றுப்போவதைவிட அவமானம் தரும் விஷயம் வேறில்லை. தோல்வியை ஏற்பதும் சாவதும் ஒன்றே; செத்தவன் செத்தவனே, புரிகிறதா?” காலரா, மலேரியா, காலா அசார் போன்ற தொற்று நோய்களில் முந்தைய மருத்துவ முறையைக்காட்டிலும் புதிய மருந்துகள் கண்கூடாக பலனளிப்பதை நாவல் பதிவு செய்கிறது. ரங்லால் டாக்டர் கூற்றாக வரும் இவ்வரிகள் இன்றளவும் பொருந்தக்கூடியவை.  “கவிராஜி (ஆயுர்வேத) வைத்தியத்தில் நான் எதுவுமே இல்லையென்று கூற வரவில்லை. ஆனால் நம் ஜாதியினர் பின்தங்குவது போல், நம் சாஸ்திரங்களும் காலத்துக்குச் சரிசமமாக நடை போடவில்லையே! இந்தச் சாஸ்திரங்களைப் படைத்த காலத்தில் கெமிஸ்ட்ரி (ரசாயனம்) இன்று இருப்பதுபோல் முன்னேற்றமடையவில்லை. அத்துடன், இன்னும் எத்தனையோ கண்டுபிடிக்க வேண்டுவன உள்ளன. இப்போது பாரேன், இந்தக் காலத்தில் எத்தனையோ நாட்டு மக்கள் ஓரிடத்திலிருந்து ஓரிடம் போவது சகஜமாகிவிட்டது. அவர்கள் வரும்போது புதுப்புது நோய்களை கொண்டுவந்துவிடுகின்றனர். நீர், காற்று, நிலம் இவை மாறிப்போய் புதிய தோற்றம் கொண்டுள்ளன. இதைத் தவிர ஆயுர்வேதம் ‘ஆகந்துஜ வியாதி’ என்று எங்கே நின்றுவிடுகிறதோ அங்கே ஐரோப்பிய சிகிச்சை முறை ‘மைக்ராஸ்கோப்’பின் உதவியால், ஜீவாணுக்களைக் கண்டுபிடித்து இந்த ‘அனுமானம்’, ‘உபசர்க்கம்’ இவற்றின் எல்லையைத் தாண்டி எவ்வளவோ முன்னுக்கு வந்திருக்கிறது!” நவீன மருத்துவம் தவறவிடக்கூடிய நாட்பட்ட நோய்களை ஜீவன் சிகிச்சையளித்து மீட்கிறார். அவற்றை பழைய ரோகங்கள் என சொல்கிறார். ரங்லாலிடமிருந்து அவர் பெற்ற அறிவுதான் ஜீவன் மஷாயை தம் மனத்துள் இப்படி எண்ண வைத்தது. “மரணத்துடன் மனிதனின் ஆற்றலுக்கும் சேர்ந்து தம் வணக்கத்தைச் செலுத்தினார். மரணத்தை வென்று வரவே முடியாது; ஆனால், மனிதன் அகால மரணத்தை வென்று வரலாம்; நிச்சயமாக அவனால் முடியும்! புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளைப் புகழத்தான் வேண்டும்! அவை வாழ்க! ஐரோப்பிய மாபெரும் விஞ்ஞானிகளுக்குத் தம் சிரத்தைத் தாழ்த்தினார். “இன்று வேதத்தின் ரகசியத்தைக் கண்டவர் நீங்களே” என்றே சொல்லுவார்.” ஜீவனையும் அவருடைய முறைகளையும் ஏற்காத பிரத்யோத் மதியின் பாட்டியை அறுவை சிகிச்சை மூலம் பிழைக்க வைத்து வாழ்நாளை நீட்டித்ததை தவறு என உணர்கிறான். தன் மனைவி மஞ்சுவின் உடல்நிலையை அறிய அவருடைய உதவியை நாடுகிறான். நாவலின் இறுதியில் பிரத்யோத் ஜீவனிடம் தனக்கு நாடி விஞ்ஞானம் கற்றுக்கொள்ள ஆவல் என வெளிப்படுத்துகிறான். கடந்த காலத்து பாரம்பரிய மருத்துவ அறிவின் சாரமான பகுதிகள் எதிர்காலத்திடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பே தாராசங்கர் கண்ட கனவு, இந்நாவலின் தரிசனம். இந்த ஒருங்கிணைப்பே இன்று பி எம் ஹெக்டேயும், எம்.எஸ். வலியாத்தானும், இல. மகாதேவனும், கு. சிவராமனும் திருநாராயணனும் கனவு காண்பது. ஆனால் இன்றுவரை நிகழவில்லை…

கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள மேற்கோளின் ஒரு பகுதியை எனது ஆசிரியர் டாக்டர் இல. மகாதேவன் அவருடைய திரிதோஷ மெய்ஞான விளக்கம் நூலின் ஒரு பகுதியாக பயன்படுத்தியிருப்பார். காலங்காலமாக வைத்தியனுக்கு இருக்கும் அறக்குழப்பம். வைத்தியன் வேறு எவரைக்காட்டிலும் மரணத்தை நெருங்கி அறிந்தவன். எந்த மருத்துவரும் அவர் எதிர்கொண்ட முதல் மருத்துவ மரணத்தை மறக்க மாட்டார். ‘வைத்தியன் குணமாக சாத்தியமுள்ள நோயாளியின் மீது கருணையுடன் இருக்க வேண்டும்.‌ உறுதியாக மரிப்பவனிடமிருந்து மனதளவில் விலகியிருக்க வேண்டும்.’ இந்த அறிவுரையின் பொருளை புரிந்துகொள்ள மரணங்களை கண்ணுற்று அலைகழியும் மனம் வேண்டும். 

முதன்மையாக மருத்துவனின்/ மருத்துவத்தின் எல்லை என்ன? அவன் எங்கு பங்காற்ற முடியும் எங்கு விலகி நிற்க வேண்டும்? எந்த அளவுக்கு அவன் உயிர்களுக்கு பொறுப்பு? போன்ற கேள்விகளை எழுப்பும் ஆக்கம். அவ்வகையில் எனக்கு மிக அணுக்கமான படைப்பும் கூட. கனிந்த மருத்துவ மெய்ஞானியான ஜீவனின் தந்தை ஜகத்பந்து மஷாய் இளம் ஜீவனுக்கு சொல்லும் அறிவுரை இது.  “அப்பனே, எந்த வைத்தியன் நாடி பார்ப்பதில் கைதேர்ந்தவனாகின்றானோ. அவனுடன் மரண தேவதைகூடச் சமாதானம் செய்துகொள்ளும். மரணத்துக்கு எந்த இடத்தில் செயலாற்றப் பூரண உரிமையோ அங்கு அது, ‘எனக்குக் குறுக்கிடாதே – வழி விட்டு நில்! இது என் அதிகாரத்துக்குள் வந்துவிட்ட விஷயம்’ என்று சொல்லும். ஆனால் எங்கு அதற்கு உள்ளே புக உரிமை இல்லையோ, அங்கு தப்பித்தவறி அது தலையை நீட்டினால், ‘தேவி, இன்னும் நீ வரவேண்டிய காலம் இதுவல்ல; நீ திரும்பிப் போகலாம்’ என்று சொல்லக்கூடியவன் உண்மை வைத்தியன்.’ 

இந்திய புராண கதைகளை கவனித்து வாசிக்கும் போது ஒரு சுவாரசியமான கண்டடைதல் எனக்குக் கிட்டியது. அசுரர்கள் எப்போதும் அறப்பிறழ்வுக்காக இறைவனால் கொல்லப்பட்டார்கள். அறம் என்பதோர் ஒழுங்கு. அறநெறி பிறழாத மகாபலியும் கூட கொல்லப்பட்டார். புத்தரை திருமாலின் அவதாரமாக முன்வைக்கும்போது அசுர அரசன் அறம் பிறழாமல் இருந்ததால் அவனுக்கு நாத்திக பிரச்சாரம் மூலம் அறம் பிறழச்செய்து அழிக்கவே புத்தனாக அவதரித்தார் என்றொரு கதையும் உண்டு. இந்திரனின் கதைகளை கேட்கும்போது இயல்பாக தோன்றும் அவனைவிடவா அசுரர்கள் நெறி பிறந்தவர்கள் என. அப்படியானால் அசுரர்கள் பிறழ்ந்த அறம் எது. அவர்கள் மரணம் எனும் உயர்குலத்து இயல்பை பிறழ்ந்தார்கள். தூலமான உடலோடு அழிவற்றவர்களாக ஆக முனைந்தார்கள். மரணமின்மையை நாடுவதே அவர்களின் அறப்பிறழ்வு. அது பிரபஞ்சமளாவிய பேரொழுங்கை குலைப்பதாகும். நாம் நோய் கிருமிகளுக்கு எதிராக போராடினோம், நோய்கள் அதன் காரணிகளைத் தொடர்ந்து உய்த்து டி என் ஏ வரை சென்றுவிட்டோம்‌. இனியும் மறைக்க ஓன்றுமில்லை நாம் முழு மூச்சோடு அமரத்தன்மையை எய்தவே விழைகிறோம். நம் தலைமுறையில் சாத்தியமில்லாமல் போகலாம் ஆனால் நம் வருங்காலம் அதை நோக்கிய பயணம் தான். இந்த புத்தொளி காலகட்டத்திலிருந்து நாம் மெல்ல மெல்ல ஓட்டைகளை அடைத்தபடி பயணிக்கிறோம். ஒரு வகையில் நம் நவீன அறிவியல் அசுரத்தன்மை உடையதுதான். ஜீவன் மஷாயின் குரு ரங்லால் சொல்லும் வரி நாவலில் ஒன்றுண்டு. ‘மனிதன் எப்போதும் உதவியை எதிர்நோக்கும் பிராணி.’ அவன் எப்போதும் மரணத்தை அஞ்சுபவன். மரணத்தை வெல்ல அசுரரின் வழி வரம்கோரி திறன் பெற்று வாழ்வாங்கு வாழ்வது என்றால் அது வெகு சிலருக்கே சாத்தியமாகக்கூடிய வழி. அதற்கு மாற்றாக சற்றே எளிய, அனைவருக்கும் சாத்தியமான வழியே வேதாந்தம். அழிவற்ற அங்கீகரிக்கப்பட்ட பாதை. வேதாந்தத்தில் உடலின் அழிவை ஏற்று சாரமான ஆன்மாவின் அழிவின்மையை அனுபவமாக உணர வேண்டும். ஜீவன் எண்ணுகிறார் ‘மரணமே சாசுவதமான (எந்த உயிரும் மரித்தே ஆகவேண்டும் என்ற பேருண்மைமிக்க) இப்புவியில் இப்படி‌ அதை நினைத்து வருந்தியோ, சஞ்சலப்பட்டோ என்ன பயன்?’ எனும் ஏற்பு நிலை அடையப்பெற வேண்டிய பேறு. ‘யாவத் கண்டகதாம் பிராணாம் கச்சதி தாவத் கிரியாம் குர்வத்’ என்கிறார் சரகர். அதாவது கழுத்திலிருந்து பிராணன் விடைபெறும் இறுதி கணம் வரை சிகிச்சை செய் என்பதே வைத்தியனுக்கு ஆயுர்வேதம் அளிக்கும் அறிவுரை. ஆரோக்கிய நிகேதனத்தின் மரணம் பற்றிய பார்வை ஆயுர்வேதத்தின் பார்வையாக கொண்டுவிட முடியுமா என சொல்வதற்கில்லை. சாங்கிய தரிசனமே ஆயுர்வேதத்தின் மீது பெரும் தாக்கத்தை கோட்பாட்டளவில் நிகழ்த்தியுள்ளது. வேதாந்தம் அல்ல.  ஆரோக்கிய நிகேதனம் அவ்வகையில் வேதாந்த தரிசனத்தை ஆயுர்வேதத்தோடு இணைத்து நோக்குகிறது. மரணத்தை எதிர்கொள்ளும் திண்மையை அடையும் தயாரிப்பே ஆன்மீகதளத்தின் நோக்கம் என ஒரு கோணத்தில் வரையறை செய்ய முடியும். மறுபிறப்பு எனும் நம்பிக்கை வழியாக மரண அச்சத்தை கடந்து, மரணமின்மையை இந்திய ஆன்மீகம் முன்வைக்கிறது.  நவீன மருத்துவத்தில் மறுபிறப்புக்கு இடமில்லை. ஆகவே மரணமற்ற வாழ்வை இலக்காக கொள்கிறது. நாவலில் ரங்லால் டாக்டர் ஜீவனிடம் “மனிதன் இறந்துவிட்டால் நாம் வேறு எந்தத் திசையும் திரும்புவதில்லை. புரிகிறதா? இந்தத் தேகக் கூட்டிலிருந்து வெளியேறும் அந்த உயிர்ப்புள் எப்படி இறகுகளைச் சடசடத்து வெளியேறி எங்குச் செல்கிறது என்று நாம் ஆராய முயல்வதில்லை.” இடையிடையே சிரித்து, இந்தப் பிராணன் மட்டும் உண்மையில் பறந்து போகும் ஒரு புள்ளானால், அதைத் துப்பாக்கிக் கொண்டு சுட்டு வீழ்த்த ஆள் வந்துவிடுவான். அந்த மாமிசத்தையும் புசிப்பானே. அப்படி நிகழுமாயின் மறுபிறவி முதலியனவெல்லாம் இல்லாமல் போய்விடுமே!” என சொல்கிறார். புலனனுபவம் என்பதையே ஒரே அறிதல் முறையாக நவீன மருத்துவம் கொண்டிருக்கிறது. 

யாக்கை நிலையாமை என்பதொன்றும் புதிய சிக்கலில்லை. வகுத்துக்கொள்ள முடியாதவற்றின், தர்க்கமின்மையின் மீது எப்போதும் நாம் அச்சத்தை ஏற்றி வைத்திருக்கிறோம். ஆன்மீகமும் அறிவியலும் மரணத்தை தமக்கே உரிய வழியில் தர்க்கப்படுத்த முயல்கின்றன அதன் வழியாக அச்சத்தை கடக்க முயல்கின்றன. மரபான யாக்கை நிலையாமைக்கும் நவீனத்துவ – இருத்தலியல் யாக்கை நிலையாமைக்கும் ஒரு தொடர்ச்சியும் தனித்தன்மையும் உண்டு. மரபில் முன் சொன்னது போல் மரணத்தை இயல்பாக காணச்சொல்கிறது. நவீனத்துவமே இந்த இயல்பான ஏற்பிற்கு எதிராக மனித குலம் பிடிக்கும் முரண்டு என சொல்லலாம். இந்த கோணத்திலிருந்து ஆரோக்கிய நிகேதனத்தை அணுகும் போது சரியாக மரபான மனத்திற்கும் நவீன மனதிற்கும் இடையிலான சங்கமப் புள்ளியைத் தொட்டெழுப்ப முயன்ற முக்கியமான ஆக்கம் என சொல்லலாம். கவிஞர் சபரிநாதன் பாரதியைப் பற்றி எழுதிய கட்டுரையில் பாரதி புலவர்/ கவிராயர் மரபில் நின்னு நவீனத்தை நோக்கியவர் எனச்சொல்கிறார். அதே போன்ற ஒரு வரையறையை இந்நாவலுக்கும் அளிக்க முடியும். மரணமின்மை எனும் நவீன மனிதனின் ரகசிய விழைவை உய்த்துணர்ந்து எச்சரிக்கும் மரபின் குரல் இந்நாவல் என சொல்ல முடியும்.  மருத்துவத்தின் முதல் சிகிச்சை ஏன் சிகிச்சை அளிக்க வேண்டும் எனும் பதிலில் இருந்து தொடங்குகிறது. ஒருவர் ஏன் வாழ வேண்டும்? ஆயுர்வேதம் தெளிவாக அறம் பொருள் இன்பம் வீடுபேறு என ஒரு வரிசையை முன்வைக்கிறது. இறுதி இலக்கான வீடுபேறை அடைய ஆரோக்கியம் முக்கியம். இந்த இணைப்பே மரணத்தை ஆயுர்வேதம் காணும் நோக்கை தீர்மானிக்கிறது. இறுதி இலக்கான வீடுபேறை அடைய இவ்வுடல் தடையாக இருக்கும் போது உடலை விட்டு வேறொரு உடலில் தொடர்வதே அந்த இறுதி இலக்கிற்கு அருகே கொண்டு செல்லும் எனும் நம்பிக்கை மரணத்தை விடிவாகக் காண அனுமதிக்கிறது. நவீன மருத்துவத்திற்கு இத்தகைய இலக்கு ஏதுமில்லை. ஏன் வாழ வேண்டும் என்றொரு கேள்விக்கு மரணிக்க அச்சம் என்பதைத்தவிர எந்த பதிலையும் அளிக்க முடியாது. 

 “இந்த வாழ்வில் மரணத்தை விரும்பவே வேண்டியதில்லை. அதற்குப் பயந்து சம்சாரத்தைக் கடித்துக்கொண்டும் இருக்கவேண்டியதில்லை. இரண்டுமே பாபம்.” என்கிறார் ஜீவன். மரணம் ஒரு இயல்பான நிகழ்வாக இருக்கவேண்டுமே தவிர இயக்குவிசையாக அல்ல. ஆரோக்கிய நிகேதனம் ஒரு இந்திய செவ்வியல் ஆக்கம். வாழ்நாள் எல்லாம் பிணக்குகள் இருந்த ஆத்தர் பௌ, மஞ்சரி, பிரத்யோத் என எவருடனும் எந்த பிணக்கும் இல்லாமல் அமைதியுடனும் திடத்துடனும் மரணத்தை எதிர்கொண்டு முழுமையடைகிறார். 

ரங்லால் டாக்டர் மனித குலத்தின் வருங்காலம் குறித்து கண்ட கனவுடன் இந்த கட்டுரையை நிறைவு செய்ய விழைகிறேன். இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் மரணத்தை வெகு அருகில் உணர்ந்தோம். நம்மில் பலருக்கும் அதன் காலடியோசை கேட்டது. மரணத்தை ஏற்று ஆரோக்கியத்தை அடைவது எனும் புள்ளியில் ஜகத் பந்துவும் ரங்லாலும் ஒன்றாகிறார்கள். நவீன மருத்துவத்தின் இலக்கும் ஆயுர்வேதத்தின் குறிக்கோளும் ஒன்றிணைகிறது. “புதுப்புதுக் கருவிகளை உண்டாக்கினான், கண்டுபிடிக்கிறான். அவனுடைய இந்த முயற்சிக்கு ஒரு முடிவில்லை. மரணத்தைத் தடுக்கவே முடியாது; மரணம் இருக்கத்தான் செய்யும். ஆனால் ரோகத்திலிருந்து அவன் மீட்சி தருவான். நல்ல பழுத்த வயதில் யோகியரைப்போல், தவசிகளைப்போல் மனிதன் ஒவ்வொருவனும் உடம்பை நீத்துச் செல்வான். அப்போது சிகிச்சகர்களுக்கோ டாக்டர்களுக்கோ தேவையிராது. நல்ல பக்குவ வயதில் ஆரோக்கியமான உடலுடன் மனிதர் யோகியரைப்போல், தவசிகளைப்போல் உடலை நீத்துச் செல்வார்கள். வைத்தியனை விளித்து, ‘இனித் தேவையில்லை போதும். ஓய்வு வேண்டும். நான் தூங்க வேண்டும் புட் மீ டு ஸ்லீப் ப்ளீஸ்”

Sunday, April 11, 2021

இமாம் பசந்த் - அரவிந்தன் கடிதம்


வணக்கம் சார்…நலமா.?

கதை வாசித்த பின்னர் உடனே எதிர்வினையாற்றுவதை விட பல நாட்கள் கழித்து அது நினைவில் தங்கினால் அல்லது ஏதேனும் அது சார்ந்து சொல்ல இருக்கும் என்றால் அது ஒரு நல்ல கதை என்று கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.அப்படிபட்ட கதைக்கு ஒற்றை வரியில் விமர்சனம் தருவது நன்றாக இருக்காது பாருங்கள்.

இமாம் பசந்த் சூழலியல் சார்ந்த கதை என்பது ஒரு புறவகையான அடையாளம் தான்.தங்களின் 'திமிங்கலம்' அறிவியல் புனைகதை என்றாலும் அதில் கூட சூழலியல் சார்ந்த வாசிப்பை தரமுடியும் என்று படுகிறது இப்போது.காந்தியம் நுகர்வு பற்றி அதிகம் பேசுகிறது அது சார்ந்து காந்தி இன்று இதழில் கூட சில  கட்டுரையை வாசித்த நினைவு.அதனால் இதை தங்களின் புதுமுகம் என்று சொல்ல முடியாது.

கதையில் ஆறுமுகம் என்னளவில் முக்கிய பாத்திரம்.உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அறிவியலில் we live in the past என்ற கருத்துண்டு.அது கோட்பாடா என்று தெரியவில்லை. இருந்தாலும் அதை கருத்தில் கொள்ள வைத்தது இந்த கதை.அந்த கருத்து-மூலை நடக்கும் சம்பவத்தை சற்று தாமதமாக கிரகிக்கிறது என்று சொல்லப்படுகிறது. அப்படியென்றால் நிகழ்காலம் என்ற ஒன்றே இல்லை என்றாகிறது. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் இரண்டு மட்டும் தான். கார்மேகத்தின் கருத்து என்பது ஒரு வகையில் ஆறுமுகத்தின் கருத்துதான். ஏனெனில் கார்மேகத்தை பழக்கியது அவர்தான். ஆனால் ஆறுமுகத்தின் கருத்து அவரின் குரலில் அல்லது தொனியில் அமைந்ததற்கு அந்த நிகழ்காலம் என்ற சிந்தனையை மறுப்பது தான் என்று தோன்றுகிறது.
நிகழ்காலத்தை அவ்வளவு எளிதாக வரையறுக்க முடியாது என்பது இதற்கு காரணமாக இருக்கலாம்.


சிவனுக்கு திருப்தி படும்படி பழம் கிட்டிவிட்டது. ஆனால் இந்த சிவன் அதாவது கார்மேகத்திற்கு திருப்தி அடைய வல்ல பழம் கிட்டவில்லை என்பது மற்றொரு இழை. 

ஆறுமுகத்திற்கு ஆறுமுகம் என்று பெயர் வைத்தது மிக கச்சிதம்.தந்தைக்கு உபதேசம் செய்வது வேறு ஒரு இழை என்று தொன்மங்கள் மிகவும் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளது.


கடந்த காலம் அல்லது மரபு என்பது அளவுகோல். எதிர்காலம் எப்போதுமே அளவுக்கு உள்ளாக்கப்படுகிறது. அது எவ்வளவு முயற்சி செய்தாலும் அடைய முடியாத ஓர் இடம் ஒன்றுண்டு.

அது எதுவாக இருக்கும்? என்ற கேள்வியே இந்த கதையாக முடிந்ததோ என்னவோ?

அரவிந்தன்
திருகாட்டுப்பள்ளி


அன்புள்ள அரவிந்தன், 

மகனுக்குள் இருக்கும் தந்தையை அவனுடைய கடந்த காலத்தின் முகமாக கொள்ள முடியும். சமஸ்கிருதத்தில் மகன் பிறந்ததும் தந்தையால் சொல்லப்படும் மந்திரம் ஒன்று உண்டு. என் ஒவ்வொரு அங்கத்திலும் உருவான நீ நானே தான் எனும் பொருளை அளிக்கும் மந்திரம். காலத்தால் தடமழிவது ஒருவகையில் மீட்க முடியாதது. கடந்த காலத்தை மீட்க புறவயமாக எடுக்கும் முயற்சிகள் எல்லாமே பெரும் அழிவை கொண்டுவருபவை. கடந்த காலத்தை மீட்க நமக்கு வேறொரு வழி உண்டு. முற்றிலும் அகவயமாக, கற்பனையின் உதவியுடன் அனுபவத்தை மீள நிகழ்த்தி காண்பது. ஆனால் நாம் நினைவு என்றும் கடந்த காலம் என்றும் நம்புபவை உண்மையில் அத்தனை திடமானவையா? படைப்பு என்பதே ஒரு வகையில் மாறிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தில் மாறாத ஒன்றை காலவெள்ளத்திற்கு எதிராக நிறுத்தும் மூடனின் கனவுதான். 

சுனில் 

Thursday, April 8, 2021

இமாம் பசந்த்- சிறுகதை

கனலி சூழலியல் சிறப்பிதழில் வெளியான கதை. 

1

மாம்பழ மழை. மேகத்தை பொத்துக்கொண்டு மாங்கனிகள் விழுவது போல. ஒரு கனவு காட்சியைப்போல. கதைகளில் மட்டும் கொட்டும் பனியார மழைபோல. புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் கணவனுக்குப் படைக்க வேண்டிய மாங்கனியை சிவனடியார் வடிவில் வந்த சிவபெருமானுக்குப் படைத்து கணவன் மாங்கனி கேட்கும் போது சிவனே அளிப்பார். புனிதவதியின் கணவன் என்ன வகையைக் கொடுத்திருப்பான்? தெரியவில்லை. ஆனால் சிவபெருமான் அளித்தது இமாம் பசந்தாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் கார்மேகத்திற்கு எந்தக் குழப்பமும் இல்லை. சப்பரம் வரும் சர்ச் வீதியிலும் பாரதியார் வீதியிலும் மாம்பழ நெடி சொக்கியது. கார்மேகம் இளமையை மீட்டியபடி அந்தத் தருணத்தில் முழுமையாகத் திளைத்திருந்தான். மாடிகளில் இருந்து கூடைகூடையாக பழங்கள் கவிழ்க்கப்பட்டன. சிலர் தனித்தனியாக தூக்கி வீசினார்கள். உயரத்திலிருந்து எவர் கையிலும் வசப்படாமல் வீம்பாக குதித்த பழங்கள் கும்பலில் மிதிபட்டு தலை நசுங்கி கொட்டை பிதுங்கி சாறு கக்கி பரிதாபமாக கிடந்தன. கார்மேகத்துக்கு படபடத்தது. இயன்ற வரை எதன் மீதும் கால் வைக்காமல் நடந்தான். கூட்டம் நெட்டித் தள்ளியபோது அவன் கால் தவறுதலாக ஒரு மாங்கனியின் கொழகொழப்பை அறிந்தது. கால் கூசி சட்டென பின்னுக்கு இழுத்துக் கொண்டது. தனக்கு முன் இன்னும் எவர் கால்பட்டும் நசுங்காமல் கீழே கிடந்த மாம்பழத்தை கண்டபோது அவன் முகம் ஒளிர்ந்தது. அதை எடுக்க நகர்ந்தபோது, மாடியிலிருந்து வீசப்பட்ட மாங்கனி ஒன்று அவனுடைய கண்ணாடியை நோக்கி வந்துகொண்டிருந்ததை கவனிக்கவில்லை. கனியைப் பிடிக்கும் முயற்சியில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த நீலச்சட்டைக்காரர் கையைத் தலைக்கு மேலே ஏந்தி தாவி குதித்தார். அவருடைய முழங்கை தாடையில் குத்தியதில் கண்ணாடி பறந்து சென்று விழுந்தது. அவருடைய செருப்புக் காலில் மாங்கனி மிதிபட்டு நசுங்கியபோது உடல் விதிர்த்தது. ‘சாரிங்க’ என இடித்துத் தள்ளிக்கொண்டு பூரிப்புடன் கூட்டத்தில் கரைந்தார். ரேவதி ஊடே புகுந்து கண்ணாடியை மீட்டுக் கொடுத்தாள். ஒரு பக்கக் கண்ணாடி உடைந்திருந்தது. நசுங்கிய பழத்தைப் பார்த்து ‘இமாம் பசந்த்’ என முனங்கிகொண்டான். 

கையைப் பிடித்து இழுத்து சாலையோரம் இருந்த திட்டில் அமரச் செய்தாள் ரேவதி. ‘சாமி நெல திரும்ப போவுது… மூணு மணி நேரமா உனக்கு ஒரு பழத்தப் புடிக்க துப்பில்ல... என்ன மனுசனோ… இங்கயே கெட இந்தா வாரேன்' என கத்திவிட்டு கூட்டத்திற்குள் புதைந்துபோனாள்.

ஆறு வருடங்களுக்கு முன் விடாது மழை ஊற்றிக்கொண்டிருந்த ஒரு தைமாத முகூர்த்தத்தில்தான் அவனுக்கும் ரேவதிக்கும் சோலையாண்டவர் கோயிலில் திருமணம். பரம்பரையாகவே வெள்ளிப் பட்டறையில் வேலை. அவன் தந்தை ஆறுமுக ஆசாரிக்குப் பற்பம் புடம் என மருத்துவக் கிறுக்கு. செவப்பட்டி வைத்தியருக்கு வெள்ளி பற்பம் செய்து கொடுக்கத் தொடங்கி அப்படியே ஆர்வமடைந்து மொத்தமாக திசைமாறினார். மூலிகை பறிக்க, மருந்து செய்ய என கார்மேகத்தையும் கூட்டிக்கொண்டு அலைவார். திருமண முகூர்த்தம் முடிந்து எவர் வீட்டுக் கல்யாணத்திலோ திருட்டு சாப்பாடு சாப்பிடுவதுபோல கடைசி பந்திக்கு அழுக்கேறிய உடைகளுடன் சாப்பிட வந்தபோதுதான் அவரைக் கடைசியாக பார்த்தது. ரேவதி அவனைச் சீண்டவேண்டுமென்றால் 'இப்படியாப்பட்ட மாமனார் உலகத்துலயே வேற எவளுக்கும் இல்ல' என கொளுத்திவிட்டால் போதும். வேறு எல்லாவற்றையும் கடந்து செல்லும் அவன் அப்பன் மீதான வசையை மட்டும் தாங்கிக்கொள்ள மாட்டான் என்பது அவளுக்கும் நன்கு தெரியும்.

குழந்தைக்காக அலைந்து ஓய்ந்து போதுமென களைத்துப் போன சூழலில்தான் திருமல்ராய பட்டினத்தில் வாக்குப்பட்ட ரேவதியின் அக்கா மாங்கனித் திருநாளுக்கு அவர்களை வரச்சொன்னாள். "இம்புட்டு பழத்தக் கூடையில அள்ளிக் கொட்டுங்க… புறவு வீசி எறியிற பழத்த புடிச்சு வேண்டிக்கிட்டு திண்ணுங்க… தன்னால புழுபூச்சி உண்டாவும்" என்றாள். மேற்கொண்டு இப்படி நேர்த்தி கடன் நிறைவான பலருடைய கதைகளை தன் கூற்றுக்குச் சான்றாக சொன்னாள்.

கார்மேகத்திற்கு திருமணமான அந்த ஆண்டுக்குப் பின் இந்த ஆண்டுதான் மாங்கனி திருநாள் பழையபடிக்கு நிகழ்கிறது என்பதால் பெரும் கூட்டம். மாங்கனித் திருநாளுக்கு வர கார்மேகம் ஒப்புக்கொள்ள குழந்தைபேறின் மீதான ஆர்வம் என்பதைக்காட்டிலும் மாம்பழக் கிறுக்கு முக்கியக் காரணம் எனச் சொல்லலாம். வீட்டிலேயே பாதிரி, பங்கனப்பள்ளி என ஒட்டுகண்ணுகளை நட்டு வளர்த்திருந்தான். திருமணப் பரிசாக அவனுக்கு மிகவும் பிடித்த இமாம் பசந்த் கன்றை ரேவதி திருமணம் முடித்து வீட்டுக்குள் நுழைந்த அன்று அவள் கையால் நடச்சொன்னான். மழை நீரில் கொவர்த்த மண்ணில் புதுப்புடவையில் எரிச்சலுடன் வேறுவழியின்றி கன்றை நட்டுவந்தாள்.

நீலம், ருமானி, கல்லாம, காதர், மல்கோவா என எத்தனை வகைகள் இருந்தாலும் மாம்பழங்களின் சக்கரவர்த்தி இமாம் பசந்த் தான் என்பது அவனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. ரேவதிக்கு இமாம் பசந்தோ ருமானியோ எதுவானாலும் மாங்காய் அல்லது மாம்பழம் மட்டும் தான்.‌ மதியச் சோறு மாம்பழம் இல்லாமல் அவனுக்கு இறங்கவே இறங்காது. அதுவும் அவனுக்கு மாம்பழத்தை நாகரீகமாக இப்படி வெட்டி துண்டுகளாக்கி உண்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை. முழு பழத்தையும் தோலோடு உறிஞ்சி உண்பான். இந்தப் பித்தை ஆறுமுகத்திடமிருந்து தான் அவன் பெற்றுக்கொண்டான். அத்தனை நாட்டு வகைகளையும் தேடித்தேடி உண்பான். 'தோல் தடிச்சிருந்தா சூடு குறைவு உடம்புக்கு நல்லது ஆனா ருசி கம்மியாருக்கும்' 'நார்சத்து கூட இருந்தா வயித்துக்கு நல்லது ஆனா வாய்க்கு உகக்காது' என்று ஒவ்வொரு பழத்தைப் பற்றியும் சொல்வார். தெளிவாக இருந்தவர்தான் ரச மணி செய்கிறேன் பேர்வழி என மூச்சு திணறி மயங்கி விழுந்ததிலிருந்து வீட்டுள் கால் தரிப்பதில்லை.

ரேவதிக்கு தனது மாம்பழ ஞானத்தைப் புகட்டலாம் என கனவுகொண்டிருந்தான். ஆனால் அந்த ஆண்டு மாம்பூ பூத்து மாம் பிஞ்சாகி மாவடுக்களாகவே மரத்திலிருந்து உதிர்ந்தன. மாங்காயாகக் கூட ஆகவில்லை. மருமக வந்த ராசி மாமரம் பட்டுபோச்சு என மாமியார்காரி புலம்பியதைக் கேட்டு அழுதுக்கொண்டிருந்தாள் ரேவதி. அவள் நட்டுவைத்த இமாம் பசந்த் ஆறிலைகளுக்கு மேல் வளரவும் இல்லை குன்றவும் இல்லை. அவனுக்கும் எதையும் விளக்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் சந்தையில் கூட மாம்பழ வரத்து இல்லை என்பதை கவனித்தான். விசாரித்துப் பார்த்ததில் எல்லா இடங்களிலும் இதுவே கதை என்று அறிந்து கொண்டான்.‌ அப்போதிலிருந்து இப்போது வரை எல்லா மாம்பழப் பருவங்களும் இப்படியேதான் கடந்தன.

சித்திரை வைகாசியில்கூட புயல் அடித்தது. அந்த ஆண்டும் அதற்கடுத்த ஆண்டும் வகைதொகையற்று பொழிந்தது.  மாதத்திற்கு இரண்டு புயல்கள் கரையைக் கடந்தன. பிறகு வந்த ஆண்டுகள் கடும் வறட்சி; அனல் கக்கியது. பெரும் பணம் கொடுத்து ஓரிரு கூடைகளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து திருவிழாவை பெயருக்கு நடத்தினார்கள். பிச்சாடனார் சப்பரத்தில் சவ ஊர்வலத்திற்கு வந்து செல்வதுபோல் சோபையிழந்து சுற்றிவிட்டு நிலை திரும்பினார். கடந்த ஆண்டு மேகங்களைத் திரட்டவும் பருவத்தே மழையைக் கொணரவும் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. விமானங்கள் செயற்கை மழையைக் கொணர்ந்தன. காலத்தே தருவிக்கப்பட்டது மழை.

இந்த ஆண்டு மாசி தொடங்கி மாங்காய்கள் வழக்கம்போல் பழுக்க தொடங்கின. ஆனி பவுர்ணமிக்கு வழக்கத்தைவிட அதிக மாங்கனிகள். மாங்கனி என்றில்லை பொதுவாகவே அந்தாண்டு நல்ல விளைச்சல். பயிர்கள் தழைத்தன. வழக்கமாக அரிக்கும் இலை பூச்சிகள் அந்தாண்டு வரவேயில்லை. ஒவ்வொரு மாதமும் மூன்று முறை பலூனை பறக்கவிட்டால் மாதம் மும்மாரி பொழிய வைக்கலாமே என யோசித்தான் கார்மேகம்.

ரேவதி கையில் மாம்பழத்துடன் வந்தாள். 'காசாலட்டா? இமாம் பசந்த் இல்லியா?' எனக் கேட்டதும் அவள் முகம் சுருங்கியது. 'இந்த வாயிருக்கே... சாமி பிரசாதத்துலயும் நொட்ட நொள்ள... நீயா போன... நாந்தானே போனேன்… உன்னால முடியலதானே… இதுக்கே பெரும்பாடு' என கூட்டத்தின் எதிர்திசையில் மாம்பழங்கள் கூழாகிக்கிடந்த பாதையைக் கடந்து நடந்தார்கள்.

'சாமிகிட்ட வச்சுட்டு துன்னுறு பூசிக்கிட்டு நல்லா மனசார வேண்டிக்கிட்டு நறுக்கி ஆளுக்குப் பாதியா சாப்புடுங்க' என்றாள் ரேவதியின் அக்கா. கண்ணை மூடி வேண்டிக்கொண்டு நறுக்கி அவனுக்கு அளித்தாள். பழம் உள்ளே சென்ற சில நொடிகளில் தலை கிறுகிறுத்தது.‌ நாக்கு சுர்ரென எரிந்தது.‌ உலகம் சுழன்றது. தரை நெகிழ்ந்தது. கால்கள் புதைந்தன. கார்மேகத்திற்கு அந்தரத்தில் மிதப்பது போலிருந்தது. எங்கோ வெகு தொலைவில் என தேய்சலாக ரேவதியின் எக்காளச் சிரிப்பு ஒலித்தது. வெகு அருகில் அவனுக்குள்ளே, தலைக்குள்ளே, ஈசான மூலையிலிருந்து ஆறுமுகத்தின் குரல் ஒலித்தது. 'தம்பி நல்லா சாப்புடு'. சுழன்று எங்கோ என பறந்து கொண்டிருந்தான்.

2

கண்கூசும் வெள்ளை வெளிச்சம் சூழ்ந்த விசாரணை அறையில் கார்மேகம் அமர்த்திவைக்கப்பட்டிருந்தான். அவனுக்கு எதிரே இருந்த மேஜையில் ஒரேயோரு கையடக்க கணினி இருந்தது.

எங்கிருந்து ஒலிக்கிறது என அறிய முடியாதபடி அறைக்குள் பெண் குரல் ஒன்று ஒலித்தது.

'காலை வணக்கம் திருவாளர். கார்மேகம் இந்த விசாரணை சட்ட காரணங்களுக்காக காணொளிப் பதிவு செய்யப்படுகிறது,' எனக் கூறிய அக்குரலில் கனிவு ததும்பியது. ஆறுமுகம் 'நீயும் ஒரு காலை வணக்கம் சொல்லுப்பா… நல்லாயிருக்காது தம்பி' என்றார். வாயை இறுக மூடிக்கொண்டான்.

'இன்று என்ன கிழமை'

'வெள்ளிக்கிழமை' என கம்மிய குரலில் சொன்னான். 'நல்லா பெலமா சொல்லுப்பா' என்றார் ஈசானியத்து ஆறுமுகம்.

'காலையில் என்ன உண்டீர்கள்'

'சோறும் மீன் குழம்பும்.' 'எளவு உப்புசப்பில்லாம இருந்துச்சு' என்று பின்பாட்டு பாடினார் ஆறுமுகம்.

'உங்களுக்கு இப்போது எத்தனை வயது'

‘53’

மாம்பழங்கள் தடைசெய்யப்பட்டது தெரியுமா?

‘தெரியும்.’ 'தெரியாது' என்றார் ஆறுமுகம்.

'எத்தனை ஆண்டுகளாகத் தடையுள்ளது என அறிவீர்களா?'

'இருபது ஆண்டுகளாக.' அவன் ஒவ்வொரு பதிலையும் பெரும் போராட்டத்தினூடேதான் சொல்ல முடிந்தது. ஆறுமுகத்தை கவனிக்காமலிருக்க முயன்றான்.

'உங்கள் கடந்த காலத்தை ஆய்வு செய்ததில் தடைக்குக் காரணமான மாங்கனித் திருநாள் சம்பவத்தில் நீங்களும் பாதிக்கப்பட்டவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மைதானே.'

'ஆமாம்'

'நன்றி. அப்படி இருந்தும் ஏன் தடைசெய்யப்பட்ட கனிகளை வைத்திருந்தீர்கள்?'

தலைகவிழ்ந்து மவுனமாக அமர்ந்திருந்தார். 'மாம்பழம்னா இஷ்டம்னு சொல்லுப்பா வாயதொறந்து... அட சும்மா சொல்லு... தப்பா எடுத்துகிட மாட்டாக' என்றார் ஆறுமுகம்.

எரிச்சலில் கையைத் தூக்கி நிறுத்து என சமிக்ஞை செய்தான். 'உன் நல்லதுக்குத்தான் சொன்னேன். எப்பவுமே உனக்கு கோவம்தான் சத்ரு. எனக்கென்ன வந்துச்சு' என்று மவுனமானார் ஆறுமுகம். 

'என்ன?'

'கொஞ்சம் தண்ணீர் வேண்டும்' என சமாளித்தான்.

'விசாரணை முடிந்ததும் அளிக்கப்படும்'

'நன்றி'. 'என்னத்த நன்றி தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்காதவிங்க அடுத்த செம்மத்துல கெவுலியா பொறப்பானுவ' ஆறுமுகம் சீறினார்.

'இவை ஏன் தடைசெய்யப்பட்டன என தெரியுமா?'

'கொஞ்சம் தெரியும்.‌ அது கஞ்சாவைப்போல் லாகிரி வஸ்துவாக மாறிவிட்டது என்றார்கள்'

'ஓரளவு சரி. முழுவதும் உங்களுக்கு விளக்க வேண்டியது சட்டப்படி எங்கள் கடமை. ஆகவே சொல்கிறேன். மாங்கனிகளில் புதிதாக mangicide எனும் ரசாயனம் உருவானது. எப்படி இந்த மாற்றம் உருவானதென தெரியவில்லை. அது மெஸ்கால் போன்ற காளான் வகையில் கிடைக்கும் போதையை அளிப்பது. ஆகவே மாமரங்கள் அழிக்கப்பட்டன. மாங்கனிகள் தடைசெய்யப்பட்டன.‌ உங்களுக்கு இதில் ஏதேனும் ஐயங்கள் உண்டா?'

'இல்லை'. 'அதென்ன நொப்புடி மாத்தம் கண்டுச்சுன்னு தெரியல... தங்கம் தகரமா மாறும்... தகரம் தங்கமா மாறும் இதெல்லாம் ரசவாத வித்தை… எது எதுவாவேணாலும் மாறும்' ஆறுமுகம் ஆத்திரமாகச் சொன்னார்.

சட்டென எழுந்து நடந்தான் கார்மேகம். அவனுக்கு அந்தக் குளிர்ந்த அறையில் வியர்க்க தொடங்கியது.

'இந்த கனிகள் எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தன?'

'அது எங்கப்பன் கணேசன் தகப்பன் சிவன்கிட்ட வாங்கின ஞானப்பழம்' என சொல்லி சிரித்தார் ஆறுமுகம். 'சும்மா தமாசு கோச்சுக்கிடாத' என சமாதானம் சொன்னார். தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான்.

'இதை யாருக்காவது விற்க முயன்றீர்களா?'

'இல்லை. யாருக்காகவும் இல்லை.'

'உங்களுக்கு இதை அளித்தவரை அடையாளம் காட்ட முடியுமா?

‘உங்களுக்கு தண்டனையைக் குறைக்க பரிந்துரைப்போம்.'

'ஆளு கட்ட குட்டையா ஒத்த தந்தத்தோட நீளமான மூக்குக்கையோட இருப்பார். ஆனா இது தமாசு இல்ல. எல்லாமே அந்த கற்பக விநாயகம் கொடுத்தது தானே' என்றார் ஆறுமுகம் நிதானமாக.

'எனக்கு யாரும் எதையும் அளிக்கவில்லை.' என்றான் கார்மேகம்.

'அப்படியானால் நீங்களே இதை உற்பத்தி செய்தீர்களா? மரம் எங்கிருக்கிறது என சொல்லிவிடுங்கள். மாமரம் வளர்ப்பது போதைப் பொருள் தடைச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைக்குரியது என எச்சரிக்க விரும்புகிறேன்.'

மவுனமாக தரையையே வெறித்துக்கொண்டிருந்தான். 'மாங்கா தின்னதுக்கு தூக்கு தண்டனையா?' ஆறுமுகம் புலம்பினார்.

'உங்கள் ஒரு மாத கால நடவடிக்கைகளைப் பின்தொடர்ந்து எங்களால் மரத்தை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். நிச்சயம் அதை அழிக்கவும் செய்வோம். உங்களுக்கு வேறு குற்றப் பின்புலம் ஏதுமில்லை என்பதாலேயே இத்தனை பொறுமையாக கேட்டுக்கொண்டிருக்கிறோம்.'

'எல்லாம் இந்த அப்பனால்' என மனதிற்குள் சொல்லிக்கொண்டான். 'உன் நன்மைக்கு தானே சொன்னேன். நல்ல மாமரத்த உருவாக்கிட்ட காலத்த திருப்பிடலாம்னு:

'சரி குற்றத்தை ஒப்புகொள்கிறீர்கள் தானே.'

தலையசைத்தான். 'எது குத்தம்? எல்லாம் கலிகாலம். தருமம் ஒத்த கால்ல நடக்குது' என வருந்தினார் ஆறுமுகம்.

குற்றத்தை ஒப்புகொள்வதாக உங்கள் எதிரே உள்ள திரையில் கைசாந்திடவும்.

மறுக்காமல் கைசாந்திட்டார். 'நீ ஒன்னும் கவலப்படாதப்பா. அப்பா நா உங்கூடயே இருப்பேன்'

'இந்நாள் நன்நாள் ஆகட்டும். ஒத்துழைப்பு நல்கியதற்கு நன்றி'

'ஒரு நிமிடம் எனக்கு மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உண்டா?'

'சட்டப்படி இல்லை.'

'நன்றி'

'அவங்கட்ட ஒரேயொரு கேள்வி கேளுப்பா… குரலக் கேட்டா சின்ன வயசாட்டாம் இருக்கு… இதுவர உன் வாழ்க்கைல ஒரு துண்டு மாம்பழமாவது சாப்டிருப்பியா நீ? அதோட ருசி என்னன்னு தெரியுமா உனக்கு?'

வேண்டாம் என்பதாக தவையை வேகவேகமாக ஆட்டினான். 'நீ கேக்க போறதே இல்ல... நானே கேக்குறேன்' என்றதும் அதை நிறுத்தும் முயற்சியாக புரிபடாத ஒரு பெரும் ஓலம் கார்மேகத்தின் உள்ளிருந்து எழுந்தது.

3

'காலை வணக்கம். இன்று தண்டனை நாள் 7102/ 7300. ‌உங்கள் பகலவன் நேரம் தொடங்குகிறது,' என வழக்கம் போல் அசரீரிக் குரல் அறிவித்தது.

உயர்ந்த கூரை விலகி ஒளிபுகு திரைக்கு மேலே ஆதவன் ஒளிர்ந்தான். ஒடுங்கிக்கொள்ள ஒரு இருண்ட மூலைகூட இல்லாத வெளிச்சப் பெருவெள்ளம் அவனைக் கூசச் செய்தது.  கால்களுக்கிடையே தலையைப் புதைத்துக்கொண்டான். நொடிநொடியாக எண்ணினான். சரியாக முந்நூறு வந்ததும் கூரை மீண்டும் மூடிக்கொண்டது. ஆசுவாசமடைந்து நிமிர்ந்தான். தோல் எரிந்தது. இனி பத்து நாட்களுக்குப் பிறகுதான் இந்த வேதனை. கழிப்பிடத்தில் அமர்ந்தான். துளித் துளியாக மலம் வேதனையுடன் இறங்கிக் கொண்டிருந்தது. 'கருணக்கிழங்கு லேவியம் சாப்பிட்டா மூலக்கடுப்பு குறையும் தம்பி' என்றார் ஆறுமுகம். அவர் குரலைக் கேட்டதும் ஆசுவாசமடைந்தான். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் ஒவ்வொருநாளும் அந்த அந்தகாரத் தனிமையை அவர் துணையுடன்தான் கடந்தான். 'தங்கம் செய்யிறத ரசவாதம்னு புரிஞ்சு வெச்சுருக்காய்ங்க. அது தப்பு. அது ஒரு அனுபவம். அம்புட்டுக்குள்ளார ஓடுறதும் ஒரே ரசம்தாங்குற அனுபவம். அந்த ரசத்த என்னவா வேணாலும் மாத்தலாம். எது எதுவா வேணாலும் மாறலாம்.' என ரசவாதத்தின் அடிப்படையைச் சொல்வார் ஒருநாள். 'காய்ஞ்ச இலதானப்பா வைரம். அது வீணாக்காம பாத்திக்கு பக்கத்துல லேசா மண்ண பிரட்டி மூடிவிட்டா போதும். நெகுநெகுன்னு காய்க்கும்,' என விவசாயக் குறிப்பளிப்பார். சிறைக்குள் வரும்வரை அவருடன் பேசுவதைத் தவிர்த்தான். இங்கே வந்து சிலநாட்களில் இயல்பாக அவருடன் பேசத் தொடங்கினான். காலையில் எழும்போதுதான் ஆறுமுகத்திற்குள் இருக்கும் கார்மேகமா அல்லது கார்மேகத்திற்குள் இருக்கும் ஆறுமுகமா எனும் குழப்பங்கள் தோன்றி அவனை பீதிக்குள்ளாக்கியது. தினமும் காலையில் எழும்போதும் இரவு உறங்குச்செல்லும் முன்னும் 'நான்‌ கார்மேகம்' 'நான் கார்மேகம்' என செபித்துக் கொள்வான். அவ்வப்போது ரேவதி இப்போது எங்கிருப்பாள் என எண்ணிப்பார்ப்பான். மாங்கனித்திருநாளின் பலமணி நேர போதை தெளிந்த பின் வீடு வந்து சேர்ந்ததும் தன் தந்தை தன்னோடு இருப்பதாக தயங்கித் தயங்கி சொன்னதும் பீதியில் வெளியேறிச் சென்றவள் திரும்பவேயில்லை. அம்மா அவனை மனநல மருத்துவரிடம் கூட்டிச்சென்றாள். மாத்திரையை போட்டால் ஆறுமுகம் மறைந்துவிடுவார். பிறகு அவருமில்லாத வாழ்க்கை சுவாரசியமற்றதாக இருந்ததால் மாத்திரையை நிறுத்தினான். ஆறுமுகம் சற்று எல்லை மீறும் போதெல்லாம் அவரை வழிக்கு கொண்டுவரும் மிரட்டல் உத்தியாக மாத்திரையைக் கைக்கொண்டான். அப்பன் அதே வயதில் அவனுடனிருக்க அவன் அப்பனைக்கடந்த மூப்படைந்தான். அப்போது 'உன்ன விட எனக்கு இப்ப வயசும் அனுபவமும்கூட' என எதிர்வாதம் புரிந்தான். அவ்வப்போது வாக்குவாதம் வந்து பரஸ்பரம் பேசிக்கொள்ளாமல் கழித்த காலமும் உண்டு. குறிப்பாக ஒரேயொரு நல்ல மாமரத்தை வளர்த்தால் காலச்சக்கரத்தை திருப்பிவிட முடியும் என அவர் பேச்சு கேட்டதன் விளைவாகத்தான் சிறைக்கு வந்தது என்பதில் அவனுக்குத் தீராத கோபமுண்டு. அத்தனைக்கு பின்னும் அவரைக் காட்டிக்கொடுக்கவில்லை எனும் நன்றிகூட இல்லையே எனக் கத்துவான். காட்டிக்கொடுக்கவில்லை என்றால் என்ன நான் தான் உன்னுடன் சேர்ந்தே சிறையிலிருக்கேனே என்பார் அவர்.

கழிப்பிட சிந்தனைச் சரடை அறுத்துக்கொண்டு ஒரு குரல் கேட்டது. 'வாழ்த்துக்கள் திரு. கார்மேகம். உங்கள் நன்நடத்தை காரணமாக தண்டனை காலத்தில் 198 நாட்கள் குறைக்கப்பட்டு நீங்கள் இன்று விடுவிக்கப்படுகிறீர்கள்' என்றது அசரீரி பெண் குரல். சுதாரித்து எழுவதற்குள் சிறைகதவு திறந்துகொண்டது. மினுங்கும் திசைகாட்டி அம்புகுறிகள் வெளியேறும் வழியைக் காண்பித்தது. மிகச் சோர்வாக உணர்ந்தான். ஆனால் ஆறுமுகம் உற்சாகமாகத்தான் இருந்தார். 'விடுதலை விடுதலை' என சீட்டியடித்தார். மெல்ல நடந்து அவ்வழியே சென்றான். ஒரு உடைமாற்றும் அறையில் அவருக்கேன வைக்கப்பட்டிருந்த புதிய உடைகளை அணிந்து கொண்டு நகர்ந்தான். 'நமச்சிவாயம் துன்னூறு இல்லயா' கேட்டார் ஆறுமுகம். சிறை வளாகத்தின் வரவேற்பு பகுதிக்கு சென்றான். அங்கே இருந்த அதிகாரி. 'வாழ்த்துக்கள் திரு. கார்மேகம்' என பூச்செண்டு அளித்தார். ‘இந்த விடுதலைக்கு எதிராக மேல் முறையீடு செய்யலாமா? எனக்கு வெளியே யாரும் இல்லை... எதுவும் தெரியாது... எங்கு செல்வதென்றும் தெளிவில்லை' என்றான் உடைந்த குரலில். 'அப்பன ஜெயில்லியே சாவடிச்சிரலாம்னு நினக்கிறியா நீ' என தழுதழுத்தார் ஆறுமுகம். 

'கவலைகொள்ள வேண்டாம். உங்கள் மறுவாழ்வுக்கு அரசு உரிய ஏற்பாடுகள் செய்துள்ளது. இவர்கள் தான் உங்களை வெளிக் கொண்டுவர கோரியவர்கள். அவர்களுடைய நிறுவனத்தில் உங்களுக்கு பணியளிக்க முன்வந்துள்ளனர்.' என வரவேற்பறை நாற்காலிகளில் சீருடையணிந்த நால்வரைச் சுட்டிக்காட்டினான். அவர்கள் எழுந்து கைகுலுக்கி அவரை அழைத்துச் சென்றனர். 'உங்கள மாதிரியான நல்ல உள்ளங்களால் தான் சார் மழ பெய்யிது' என கண்ணை கசக்கினார் ஆறுமுகம்.

4

வெளிச்சம் கண்ணை உறுத்தியது.

பயணம் தொடங்கியதுமே உறங்கிப்போனான். எழுப்பியபோது மரங்கள் சூழ்ந்த பசுமையான பகுதியில் இருந்தார். சூரியத்திரை மிதமான தட்பவெப்பத்தை அனுமதித்தது. சற்று சுதாரித்து நோக்கியதும் தான் தானொரு மாந்தோப்பில் இருப்பதைப் புரிந்துகொண்டார். எல்லா மாமரங்களும் நான்கடி உயரம் இருந்தன. அவை ஒன்று போலத்தோன்றின. அதில் காய்த்து தொங்கிய மாங்காய்களும் பழங்களும் கச்சிதமாக ஒரே அளவும் ஒரே எடையும் கொண்டதாகத் தென்பட்டன. கனிகள் யாவும் ஒரே மஞ்சள் அடர்வில் இருந்தன.

'நீங்கள் இப்போது இருப்பது பிராகிருதிஸ்தான் முழுமைக்கும் மாம்பழம் உற்பத்தி செய்து அளிக்கும் மாம்பழத் தொழிற்சாலை. வெற்றிகரமாக எங்கள் ஆய்வின் மூலம் போதைத்தன்மை அற்ற மாங்கனிகளை ஆய்வுகூடத்தில் உருவாக்கியுள்ளோம்.' என்றான். 'மரத்த ஜெராக்ஸ் எடுத்துருக்கானுவ தம்பி... கார்டூன் மரம் மாதிரி எப்படி வெச்சுருக்கானுவ பாரு… சூதானம் தம்பி' என்று கிசுகிசுத்தார். 

கார்மேகத்திற்குச் சுற்றிக் காண்பித்தான். 'சரியாக 21 நாட்களில் மாம்பழத்தை உருவாக்குவோம்' ஒரு மரத்திற்கு முன் சென்று நின்றவன் அதன் நடுத்தண்டில் பொறிக்கப்பட்ட பார்கோடுகளுக்கு நேராக தனது கைக்கடிகாரத்தை காண்பித்தான். கடிகாரத்திரையில் '144' எனும் எண் மிளிர்ந்தது. 'ஒவ்வொரு மரத்திலும் 144 பழங்கள் ஒரு சமயத்தில் காய்க்கும்'. கடிகாரத்தில் 40லிருந்து எண்ணிக்கை நொடிக்கு நொடி குறைந்தது. மரத்தின் நடுத்தண்டிலிருந்து குடைமாதிரி எல்லா பக்கமும் வலை விரிந்தது. எண்ணிக்கை சரியாக சுழியத்திற்கு வந்தபோது ஒரே சமயத்தில் அனைத்து பழங்களும் காம்பிலிருந்து விடுபட்டு வலைக்குள் விழுந்தன. 'பெரிய வித்தக்காரனுவ தம்பி' என்று வியந்தார் ஆறுமுகம்.

'ஏம்பா இம்புட்டு மரம் வச்சுருக்கானுவ ஆனா தக்குனூண்டு வாசம்கூட இல்லியே… என்னனு கேளுப்பா' என்றார். அந்தக் கேள்வியில் ஒரு நியாயம் இருந்தது. ஆகவே 'இத்தனை மாங்கனிகள் இருந்தும் ஏன் வாசம் வரவில்லை?' எனக் கேட்டான் கார்மேகம். 'அதற்குதான் உங்கள் உதவி தேவை' என்றபடி அவரை ஒரு அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றான். ஒரு நிமிடம் என தலையைச் சாய்த்து ஒரு குப்பியிலிருந்து இரண்டு மூக்கிலும் இரண்டு சொட்டுக்களை விட்டான். விர்ரென இருந்தது. உடலும் மனமும் விழித்துக்கொண்டது. 'அஞ்ச வேண்டாம். மூக்கு என்பது மூளையின் வாசல் அல்லவா' என்றான். பிறகு ஒரு துண்டு மாம்பழத்தை நறுக்கி கொடுத்தான். தயக்கத்துடன் அதைக் கையில் எடுத்தான். அவன் கையிலிருந்த திரையில் எதையோ அழுத்தினான். குப்பென மாம்பழ வாசம் கிளர்ந்தது. ருசித்தான். 'காசாலட்டு' அவன் கண்கள் மின்னின. அடுத்த துண்டை அளித்தான் 'நீலம்' அவன் கண்கள் கசிந்தன. 'நீலம் என்றா சொன்னீர்கள்?'. 'ஆம்'. 'அப்போது இதைச் சாப்பிடுங்கள்' என ஒரு துண்டை நீட்டினான். விண்டதும் 'கல்லாம' என்றார் ஆறுமுகம். அதையே கார்மேகமும் சொன்னான். 'உறுதியாகத் தெரியுமா?'. 'பொய்யாச் சொல்றேன்' என ஆறுமுகம் மருகினார். 'ஆம் சந்தேகமே இல்லை' என்றான் கார்மேகம். 'இப்போது எங்கள் தகவல் சேகரிப்பின்படி முதலில் உண்டது கல்லாமை. அடுத்து உண்டதே நீலம்‌.' 'இல்லை எனக்கு உறுதியாக தெரியும்'. 'நன்றி எங்கள் தொழில்நுட்ப குழுவிற்கு உங்கள் மாற்றத்தைப் பரிந்துரைக்கிறேன். இங்குதான் எங்களுக்கு உங்களைப் போன்ற துறை நிபுணர்களின் துணை தேவை'. ஒவ்வொரு துண்டும் வெவ்வேறு வாசமும் ருசியும் கொண்டதாக இருந்தது.

'இப்போது இங்கே பசி ஒரு சிக்கலில்லை. ஆனால் ருசிக்கான அலைச்சல் ஓயவில்லை. ருசியைக் கைகொள்ளவே அவனுடைய ஆக்கப்பூர்வ நேரமும் உழைப்பும் பெரும்பகுதி செலவாகிறது. ஆகவே இந்தத் திட்டம். உங்கள் மூக்கில் விடப்பட்ட இரண்டு சொட்டுக்கள் மூளையில் உள்ள நரம்பு முடிச்சு தொகைகளுடன் பிணைந்துள்ளது. செயலி வழியே நீங்கள் விரும்பும் ருசியைப் பணம் கட்டி தரவிறக்கிக் கொள்ளலாம். வெண்ணிலா, ஸ்ட்ராபெரி ருசிகள் கொண்ட மாம்பழம்கூட உண்டு. முயற்சிக்கிறீர்களா?'

'இல்லை வேண்டாம்'

'எல்லா உணவுவகைகளையும் நாங்கள் இதில் இணைத்துள்ளோம். சாத்தியமான அத்தனை ருசி வேறுபாடுகளையும் கொணர்ந்துள்ளோம். உயர்தர, அரிதான ருசியைத் தேர்ந்தெடுக்கும் தோறும் அதற்கான கட்டணம் அதிகரிக்கும். எல்லா உணவுபொருட்களின் உற்பத்தியும் இப்போது தரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே விதமான மதுதான் தயாரிக்கப்படுகிறது. உங்கள் பண வசதிக்கு ஏற்ப அது வோட்காகவும் நூறாண்டு கால ஒயினாகவும் ருசிக்கப்படும்.'

'எங்களால் இருப்பதிலேயே சிறந்த வகையான இமாம்‌ பசந்த் வகை மாம்பழ ருசியை ஆவணப்படுத்த முடியவில்லை. உங்கள் ஆவணங்களின்படி நீங்கள் அந்த வகை பழங்களை வைத்திருந்ததால் தான் சிறையில் அடைபட்டதாக அறிந்தோம்.'

இமாம் பசந்த் எனும் பெயரைக் கேட்டதும் கார்மேகத்தின் நாவில் எச்சில் ஊறியது. அதன் ருசியும் மனமும் நினைவில் எழுந்தது. மாம்பழங்களைக் கூடைகூடையாக அடுக்கியிருக்கும் பண்டகசாலை அறை. அதன் நெடி. தயிர்சோற்றில் ஊறிய மாம்பழத்தின் ருசி.‌ உறிஞ்சி உண்ணும்போது எழும் ஓசை. ஊறிய மாவடின் கார்ப்பும் புளிப்பும். பால் மாங்காயின் புளிப்பு.

ருசியற்ற மாம்பழத் துண்டை மென்று படிப்படியாக அதன் இனிப்பை கூட்டச்சொன்னான். 'இது ரொம்ப இனிக்குது', 'இது ரொம்ப கம்மி', 'இனிப்பாவே இருக்கக்கூடாது’, கொஞ்சம் சாக்கட்டி மாதிரி இறங்கனும்', 'ரொம்ப சவசவன்னு இருக்கு', 'காரக்குறிச்சி கச்சேரி மாதிரி மேல் ஸ்தாயிக்கு போயிட்டு அப்புறம் அமைதியா தவழ்ந்து முடியனும்', 'ரவை எலுமிச்ச சேத்த மாதிரி கொஞ்சம் புளிப்பு கூடனும்', 'அக்பரும் அவுரங்கஜீபும் சாப்புட்ட பழம்னா சும்மாவா', 'பல்லுல நார் சிக்கக்கூடாது', 'ஒரேடியா மைய மாவாட்டம் அரச்சிப்புட்டானுக' அவனும் ஆறுமுகத்தின் கூற்றுக்களை ஒத்து மாற்றங்களைச் சொல்லிக்கொண்டே வந்தான். அவனால் துல்லியமாக இமாம் பசந்தின் ருசியைக் கொணர முடியவில்லை. ராப்பகலாக அவர்கள் உழைத்தார்கள். ஆனால் அவனுக்கும் ஆறுமுகத்திற்கும் திருப்தியில்லை. 'மண்ணு மூட்டைகளா இருக்காய்ங்க' எனப் புலம்பினார் ஆறுமுகம். இமாம் பசந்தின் முப்பத்தாறு ருசி பேதங்களை உருவாக்கியிருந்தார்கள். ஒருகட்டத்தில் நிறுத்திவிட்டு இந்த முப்பத்தாறில் இமாம் பசந்துக்கு ஆக நெருக்கமான ருசியை தேர்ந்தெடுக்கச் சொன்னார்கள். ஒவ்வொரு சமயமும் வாயில் இட்டதும் இதுதான் என தோன்றும். ஆனால் ஆறுமுகம் மறுப்பார். உண்மையில் தான் உண்டதும் தன் தந்தை உண்டதும் ஒரே பழம்தானா என அவனுக்குச் சந்தேகம் வந்தது. பற்பசையால் பல் விளக்குபவருக்கும், சாம்பல் உப்பில் விளக்குபவருக்கும், பல்லே விளக்காதபவருக்கும் வேறு வேறு ருசி தென்பட்டிருக்குமா என யோசித்தான்.  ஒரே நேரம் இதுதான் இமாம் பசந்த் என்றும் இது இல்லவே இல்லை என்றும் தோன்றி அவனைக் குழப்பியது. ஆறுமுகத்தின் தீர்மானமின்மை அவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர்கள் சலித்துவிட்டார்கள். நடைமுறை வழக்கத்திற்காக இதுதான் இமாம் பசந்த் என ஒன்றுக்குச் சான்றளிக்க சொன்னார்கள். 'தம்பி உள்ளதுலயே இது ரொம்ப நல்ல ருசியாக்கும். ஆனா இது இமாம் பசந்த் இல்லய்யா' என்றார் ஆறுமுகம்.‌ அவனுக்கும் அது தீர்மானமாகத் தெரிந்தது. ஆனால் என்ன செய்ய? ஒப்புதல் கைசாந்து இட்டான். 'நெஞ்சறிய பொய் சொல்லலாமா. உங்கப்பன் ஆறுமுகம் வளத்த வளப்பு இப்படி சிரிச்சுபோச்சே' என விசும்பினார்.

அத்துடன் ஒரு தொகையை அவனிடம் அளித்து 'எங்களுக்காக பணியாற்றியதற்கு நன்றி. இனி நீங்கள் உங்கள் இஷ்டம் போல் எங்கும் செல்லலாம்' எனக் கூறி ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டார்கள். 'காரியக்காரனுவ கோவணத்த உருவிடுவானுவன்னு சொன்னனா இல்லியா' என வருத்தப்பட்டார் ஆறுமுகம்.

கார்மேகத்திற்கு எங்கு செல்வதெனத் தெரியவில்லை. முற்றிலுமாக மாறியிருந்த நகரத்தில் அவனுக்கு நடந்து கடப்பது விநோதமாக தென்பட்டது. முதியவர்களுக்கான சலுகைக் கட்டணப் பேருந்து எங்கோ தெற்கே வெகுதொலைவுக்குச் செல்வதாக சொன்னார்கள். ஏறி அமர்ந்தான்.

நிழலற்ற பொடிமணல் பாலையில் தொண்டை வரள நடந்து கொண்டிருந்தான். கால்கள் புதைந்தன. கீழே நோக்கியபோது கால் புதையும் அளவுக்கு மாம்பழங்கள் கிடந்தன. ஆவல் மின்ன கையில் அள்ளியதும் அவை பலூன் வெடிப்பதுபோல் வெறும் மணலாக உடைந்து ஊற்றியது. பித்தேறி எல்லாவற்றையும் வெறும் பொடிமணலாக ஆக்கினான். வியர்த்து கண்விழித்தபோது எங்கோ ஒரு சிற்றூரில் பேருந்து இளைப்பார நின்றிருந்தது. மெல்ல இறங்கி ஒன்றுக்கிருக்க போனவன் குத்துச்செடிகளும் புதரும் மண்டிய வெட்டவெளியைப் பார்த்தான். அடர்நீலத்து கரு ஊமத்தைகள் இதழ்விரித்து மண்டியிருந்தன. முள்படர்ந்த காய்கள். பச்சைநிறத் தோல் வெடித்து உதிரச்சிவப்பும் அந்தியின் பொன்நிறமும் கொண்ட சதைப்பகுதியும் விதைகளும் தென்பட்டன. வெப்பத்தில் தோல் எரிந்தது. கொப்பளங்கள் கிளம்பின. ஆறுமுகம் சலனமின்றி இருப்பதை உணர்ந்ததும் போதும் என முடிவெடுத்தான். சட்டென ஊமத்தை பழத்தை எடுத்து விழுங்கினான். திடுக்கிட்டு விழித்தவர் 'அப்பனக் கொல்லுறியா சண்டாளா' என கதறினார். இறுகிய முகத்துடன் கண்ணை மூடிக்கொண்டான். நாக்கிலிருந்து தொண்டைக்கு இறங்கும் முன் சட்டென விழிவிரிய கண்ணைத் திறந்தான். ஆச்சரியம் தொனிக்க ஊமத்தையைப் பார்த்து இருவரும் ஒரே நேரத்தில் 'இமாம் பசந்த்!' என்றார்கள்.



நீலகண்டம்- கவிதா ஒரு கடிதம்


நீலகண்டம் வாங்க

நீலகண்டம் என்ற இந்த நாவல் வாசித்துக்கொண்டிருக்கும்போதே அன்னா கரீனினாவின்   புகழ்பெற்ற "மகிழ்ச்சியான எல்லா குடும்பங்களும் ஒரேமாதிரியாக இருக்கின்றன, துயரமான குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன "  தொடக்க வாசகம் நினைவுக்கு வந்தது. நாவல் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தை வளர்ப்பு பற்றி பேசினாலும் அதோடு தொன்மங்கள், புராணக்கதைகள், நாட்டாரியல் குழந்தை கதைகள் போன்ற பல வகைமைகளில் ஒன்றுடன் ஒன்று தொடற்புறுத்தி சொல்லப்படுகிறது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட வர்ஷினி என்ற வரு வின் இளமைக்காலத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.

நாவல், செந்தில் ரம்யாவின்  மன நுட்பங்களை விரித்து சொல்வதன் வழியாகவே அவர்களின் காதல், திருமணம், குழந்தை இல்லாதது பற்றிய ஏக்கங்கள், வருவை தத்தெடுத்தது போன்ற கடந்தகால நிகழ்வுகளை சொல்லிவிடுகிறது.வரமாக வந்த பிள்ளை, நோயோடு அவர்களின் சுமையாக மாறி மன அழுத்தங்களுக்கு இட்டுச்செல்லும் போது, இதென்ன வாழ்க்கை என் இப்படி நடக்கணும் என்ற கேள்வி எழாமலில்லை. மேதைகள் எல்லாம் ஆட்டிசம் குறைபாடு கொண்டவர்கள் என கண்டறிந்து வருவிடம் மேதமை தனத்தின் சாயலை ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்து கடைசியில் நம்பிக்கைகள் பொய்யாகி கரைந்து போவதை காண ரம்யாவுடனும் செந்திலுடனும் நானும் சேர்ந்து திகைத்து நின்றேன். என் குடும்பத்திலும் நெருங்கிய உறவில் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தை வளர்ந்து கொண்டிருப்பதை, அதனால் அந்தகுடும்பம் சந்திக்கும் நெருக்கடிகளை கண் கூடாக பார்த்துக்கொண்டிருப்பதால் ரம்யா செந்திலின் பிரச்சனைகளை என்னால் உள் வாங்கி புரிந்து கொள்ள முடிந்தது.

முக்கியமாக பேச வேண்டிய கதாபாத்திரம் செந்திலின் நண்பன் ஹரி. நீ இப்படித்தான் என்று சுட்டிக்காட்டுவது பெரிய வன்முறை என்றாலும், ஆழத்தில் மிகவும் விரும்பியதும் ஆம் என்று ஒத்துக்கொள்ளவும் செய்தது. ஹரியும் இயல்பில் எதிலும் தன்னை முற்றிலும் ஒப்படைத்துக்கொள்ளாத  மனிதர்களின், முக்கியமாக குடும்பம் ,காதல் , அன்பு போன்றவற்றின்  சமரசங்களை அதன்  வழியாக மனிதர்கள், அடையும் சௌகர்யங்களையும் அறிந்து அனைத்திலும் விலகியிருப்பவன். அவன் வழியாகவே செந்தில் ஓரளவு தன்னை அறிகிறான் போலும். நந்தகோபாலின் இளமைகாலம் பற்றிய கதை தெரிந்ததும், அவர் வருவிடமோ சாகரிடமோ நெருங்கும்போது சற்று பயமாக இருந்தது.

இடையிடையே வருவின் உலகத்தில் குழந்தை கதைகள் அதில் நம் தோழி வானவன்மாதேவி ஒரு பாத்திரமாக வந்து சக்தி வாய்ந்த மேகங்களை உறிஞ்சிய வாக்குவம் கிளீனரை தன் சக்கரக்கால்களால் கவ்விக்கொண்டு பறந்தது, போன்றவற்றை வாசிக்க மகிழ்ச்சியாக இருந்தது.வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகளில் வரும் அறம் பற்றிய கேள்விகள், அவை நிகழ்காலத்தில் தங்களின் பெற்றோர் செய்த செயல்களின் விளைவுகளுக்கு எவ்வாறு பொறுப்பாக முடியும் என்ற கேள்விகள், அறத்தினாலும், பக்தியினாலும், பாசத்தினாலும் உண்மையிலேயே பெரும் நன்மைதான் விளையுமா என்ற  கேள்வியை எழுப்பியது.

செந்திலின் குடும்பத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் நச்சு பருவம், அமுத பர்வம் என்ற இரு கதையாடல்களாக சொல்லப்படுகிறது. பெண் தெய்வமான நாகலட்சுமியின் கதை தொன்மம் இன்றும் நம் குடும்பங்களில் மரபிலிருந்தும் வேர்களிலிருந்தும் உயிர்ப்புடன் நிகழும் கதையாடல்கள்.

வரு காணாமல் போனது தெரிந்த போது செந்திலின் மன நினைப்பு மனிதர்களின் மனதின் கீழ்மைகளை தொட்டுக்காட்டியது. அது ஒன்று எப்போது அமுதென்பது நஞ்சாகிறது எதுவும் நஞ்சாகவும் அமுதாகவும் ஆகலாம் என்பதை சொன்னது. நாம் அனைவரும் மரபெனும் நீண்ட சங்கிலியால் பிணைக்கப்பட்ட கண்ணிகளே என செந்தில், ரம்யாஇவர்களின் குடும்பப்பிண்ணனி கதைகள் தொட்டுக்காட்டியது .

குழந்தையின்மை அதன் மூலமாக வரும் சமூக மதிப்பில் ஆண்களின் ஆண்மை கேள்விக்குள்ளாக்கப்படுவது அதன் தொடர்ச்சியாக குழந்தை உற்பத்தி முனையம் என ஒரு வணிக கட்டமைப்பு எழுவதை நாவலில் சற்று மிகைப்படுத்தி கூறியிருந்தாலும் இனி இது யதார்த்த உலகில் வேரூன்றி வருவது மறுக்கமுடியாதது .

சுடலை மாடனுக்கும், கிரேக்க துன்பியல் நாடக மைய கதாபாத்திரம் மெடியாவிற்கும் நடந்த உரையாடல் இறுதியில் கவிஞர் கலீல் ஜிப்ரானொடு நடக்கும் உரையாடல் அனைத்தும் நையாண்டியின் உச்சம் ,

நாவல் முழுதுமே வெளிப்படும் உரையாடல்களின் கூர்மை, சூழல் சித்தரிப்பின் துல்லியம் அதன் ஒப்பீடு, வாழ்க்கையின் குரூர பக்கங்கள் நினைவோட்டங்களாக வரும் நிகழ்வுகள் அனைத்தும் படைப்பாளியின் தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்றன. அந்த வகையில் என் மனதிற்கு நெருக்கமாக நீண்டநாள் பயணிக்கும் நாவலாக சுனிலின் நீலகண்டம் இருக்குமென்பது சந்தேகமில்லை .

வாழ்த்துக்கள் சுநீல் .

ப்ரியமுடன்

கவிதா 


அன்புள்ள கவிதா

நாவல் வெளியாகி ஒன்றரை வருடம் கடந்துவிட்டது. இப்போதும் உயிர்ப்புடன் வாசிக்கப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒரு ஆக்கத்தில் அந்தரங்கமான உண்மையை சுட்டிவிட முடியும்போது, காலகட்டத்தை கடந்து எக்காலகட்டத்திற்கும் உரிய கேள்வியை ஒரு ஆக்கம் தொடும்போது அது தொடர்ந்து வாசிக்கப்படும் என்பது என் நம்பிக்கை. இதன் வடிவ சிதைவுகளை மீறி அப்படி சில நரம்புகளை நீலகண்டம் தொடுகிறது என்பதில் நிறைவு கொள்கிறேன். வருங்காலங்களில் மேலும் வாசிக்கப்படக்கூடும். 

நன்றி 

சுனில்