Tuesday, February 2, 2021

பசித்திரு தனித்திரு விழித்திரு- சிறுகதை

(வல்லினம் ஜனவரி 2021 இதழில் வெளியான சிறுகதை)

வெள்ளைச் சட்டையும் கருப்பு காற்சட்டையும் அணிந்த மாரிமுத்து நாற்காலியில் அமர்ந்து வாசல்கதவையே பார்த்திருந்தான். கைபேசியில் நேரத்தைப் பார்த்தான். மூன்று இருபது. “இந்தா வந்துருவார்… உக்காருங்க” எனச் சொல்லி பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இருப்பு கொள்ளவில்லை. அவன் முன் இருந்த முக்காலியில் வைக்கப்பட்டிருந்த பில்டர் காபி சூடிறங்கி ஆடை கட்டியிருந்தது.  எதிர் சுவற்றில் மூன்றுக்கு இரண்டடி அளவிலான பெரிய சட்டகத்தில் வெள்ளுடை தரித்த, ஒளி வட்டம் மிளிர்ந்த, கனிந்த விழிகளுடன் அருள் கரந்து கொண்டிருந்த வள்ளலார்  படம் மாட்டப்பட்டிருந்தது. படத்தின் கீழே பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’வை மனதிற்குள்ளாக வாசித்துக்கொண்டான்.


ஒவ்வொருநாளும் வருபவன் தான் என்றாலும், சம்பிரதாயமான வரவேற்பு சொற்களுக்கு அப்பால் எதையும் கனகதுர்கா பேசியதில்லை. பிற ஆர்டிவோக்களின் இல்லாள்கள் போல தன்னை காய்கறிகளுக்கோ கடச்சாமான்களுக்கோ ஏவியதில்லை என்பதால் அவனுக்கு இயல்பாகவே ஒரு மரியாதை உண்டு. சோகையான அவள் விழிகளில் காவியத் துயர் படிந்திருப்பதாக எப்போதும் தோன்றும். அதற்கான காரணத்தை தீரா நோயாக, கொடுமையான இல்வாழ்வாக, கனவுகளை இழந்து சிறைப்பட்ட இளவரசியாக என விதவிதமான கதைகளாக சமைப்பான். அத்தனை கதைகளிலும் அவனே துயர் துடைக்கும் மீட்பன். அப்படியான ஒரு கனவில் திளைத்துக்கொண்டிருந்த போது சமயலறையுள்ளிருந்து ‘ஒன்ப்ளஸ் ஒன் டூ மாமா’ எனும் வரி மவுனத்தை கீறிபிளந்துக்கொண்டு ஒலித்தது. காபியை வைத்துவிட்டு சமையலறைக்குள் கனகதுர்கா தன்னை புதைத்துகொண்டு பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டன என்பது உறைத்தது. சட்டென நாற்காலி இழுபடும் ஓசை கேட்டது.  கைபேசியுடன் சமயலறையை விட்டு  வெளியே வந்தாள்.  வருகையை எதிர்பார்த்திருந்தது போல மாரிமுத்துவும் நிமிர்ந்து நேராக  அவளை நோக்கி புன்னகைத்தான். 


“காபி ஆறிடுச்சே” என்றாள்.


 “பரவால்ல இருக்கட்டும்மா.. சார் வந்திரட்டும்னு பாத்தேன்..வெளிய போயிருக்காரா?” 


“இங்கதான்…இப்ப வந்துடுவார்..நீங்ககுடிங்க”


 ஒரு அறையிலிருந்து பள்ளிச் சீருடையில் காதில் ஹெட்ஃபோனுடன் கையில் கைபேசியை வைத்துக்கொண்டு விடுவிடுவென வெளியே வந்தான் சுந்தர். நேராக அடுக்களைக்கு சென்றவன் வாயில் எதையோ அதக்கிக்கொண்டு மீண்டும் அறைக்குள் புகுந்து கதவடைத்துக்கொண்டான். “தம்பி பத்தாவது தான? நல்லா படிக்கிறானா? ‘ஆன்லைன் கிளாஸா?’‘ம்’” எனச் சொல்லிவிட்டு காபி குடித்த லோட்டாவை எடுத்துக் கொண்டு மீண்டும் சமயலறையில் புதைந்துகொண்டாள். குலைந்த பகல் கனவை மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர  மனம் குவியவில்லை. அது ஒரு இரண்டு  படுக்கையறை கொண்ட சிறிய வாடகை வீடு. பத்துக்கு பதினைந்து தான் கூடம். உறுத்தாத நிறங்கள் அடிக்கப்பட்ட சுத்தமான சுவர்கள். சு. பாண்டியன், ஆர்.டி.ஓ எனும் பெயர்பலகை நீலநிற தகட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. பாண்டியன் என்றதும் பெரிய மீசை கட்டுத்திட்டான உடல், கரிய திருமேனியை எல்லோரும் கற்பனை செய்வது போல் மாரிமுத்துவும் கற்பனை செய்திருந்தான். ஆனால் முழுக்க மழித்த முகத்துடன், கட்டை குட்டையாக மாநிறத்தில் வந்திறங்கிய ஆசாமியைப் பார்த்ததும் ஏமாற்றமாக இருந்தது. 


மொத்த வீடே அறுநூறு சதுரடி இருக்கலாம்.  ஒரு வருடத்திற்கு முன் பெரம்பலூரிலிருந்து மாற்றலாகி   வந்த போது அவனுக்காக வசதியான வீடுகளை பார்த்து வைத்திருந்தும், எதையும் பார்க்கக்கூட இல்லை. ‘பெருமாள் கோவில் எங்க இருக்கு?’ என கேட்டு அதற்கு அருகேயிருந்த சன்மார்க்க சங்கத்தின் வள்ளலார் ஆலயத்திற்கு முதல் வேலையாக சென்று வந்தான். அங்கிருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள இந்த சிறிய வீட்டுக்கு குடிவந்தான். வீட்டில் அந்த வள்ளலார் படம் தவிர வேறெந்த படமும் கிடையாது. சிறிய கண்ணாடி பேழைக்குள் விளக்கு ஏற்றப்படும். எப்போதும் வெள்ளை கதர் சட்டையில் தான் அலுவலகம் வருவான். ‘தாயொளி ..ரூல்ஸ் மயிர பேசி நம்ம தாலிய அறுக்க போறான் போலயே‌.. நேர்மை புடுங்கியாட்டம் தெரியிறான்’ என ஆற்றமையுடன் திலகவதி ரோடுவேஸ் சித்தனாதன் போதையில் அரற்றினான். ஆனால் முதல் சந்திப்பிலேயே தனது தேவைகளை ‘சந்தை நடைமுறைக்கு’ உகந்தபடி சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறிவிட்டதும் எல்லோருக்கும் பெரும் ஆசுவாசம் ஏற்பட்டது. ஒவ்வொரு ஓட்டுனர் பயிற்சிபள்ளிக்கும் மாதாந்திர படியளப்பிற்கு தேதி குறித்து அட்டவனைபோட்டு அளித்திருந்தான். மொத்த பரிவர்த்தனையும் மாரிமுத்து வழிதான். பேராசைக்காரன் இல்லை. ஆனால் கணக்குவழக்கில் கறார் என்று பெயரெடுத்தான். மாற்றலாகி வந்த புதிதில்  எம்.எஸ்.எல் பஸ் காரர் ‘மரியாதை நிமித்தம்’ ஒரு பாட்டில் ரெமி மார்ட்டின் அன்பளிப்பாக கொடுத்தனுப்பியபோது அதை வேண்டாம் என மறுத்து திருப்பியனுப்பினான். ஆனால் கதை அதுவல்ல. அதன் விலையை விசாரித்து பணமாககேட்டு பெற்றுக்கொண்டதுதான். 


 பாண்டியனுக்கு ‘ழகரம்’ கொஞ்சம் தகராறு. ஒருகூட்டத்தில் ‘அலுவலக களிப்பறை சீரமைப்புக்கு 13000 நிதி வளங்கப்பட்டது’ என அறிக்கையை வாசித்தபோது அலுவலகமே பொத்திக்கொண்டு சிரித்தது. ‘ஆபிஸ் டாய்லெட்ல நீ என்ன வேலை பாத்து வச்சன்னு கண்டு பிடிச்சிட்டாப்புல அதான் ‘கும்பீபாகம்’  களிப்பறைன்னு கரெக்டா சொல்லிருச்சு’ என வட்டமாக அமர்ந்து சோத்து மூட்டையை பிரிக்கும் மதிய உணவிடைவேளையின் போது மாரிமுத்துவை நக்கல் செய்தான் செந்தில். அலுவலகப் பெண்கள் இருவரும் அமுக்கமாகசிரித்தார்கள். ‘அது யாரு, ஆகஸ்டா, அக்டோபரா? எவளோ ஒரு அட்டுபட  நடிகை  நாண்டுகிட்டு செத்ததுக்கு ஒன்ற நாள் ஒப்பாரி வெச்ச ஒரே ஆள் நீ தான்டா’ என மேற்கொண்டு கிண்டினான் செந்தில். மாரிமுத்துவின் முகம் கருத்தது.  


அன்று மாலை ‘சாருக்கு சாத்தான்குளமா?’ என மாரி கேட்டதும் எப்படி தெரியும் என்பதுபோல் நிமிர்ந்து நோக்கினான். ‘பேச்சு வழக்கு வெச்சு செந்தில்சார் சொன்னார்’ என்றான்.  “கதவு கம்பி விட்டு போச்சு வெல்டிங் செய்ய ஆளு வேணும்னு கேட்டு நாலு நாள் ஆச்சு”  என துளைக்கும் குரலில் கேட்டதும் “இந்தா கூட்டிட்டுவாரேன் சார்” என சொல்லி அகன்றான்.. எனினும் அதுதான் பாண்டியனின் ஊர் என கிட்டத்தட்ட ஊகித்திருந்தான். கருகமணி தாலியும் கனகதுர்கா எனும் பெயரும் தான் ‘என்ன ஆளுங்க’ என அறுதியாக அறிய விடாமல் மாரிமுத்துவை சற்று குழப்பியது. ஆகட்டும் வீட்டில் ஏதேனும் நாள் கிழமை வராமலா போய்விடும். எப்படியும் கூப்பிடுவான் அப்போது உறுதி செய்துக்கொள்ளலாம் என்பது அவன் கணக்கு. 


வாங்கும் பணத்தை எல்லாம் என்ன செய்கிறான் என்பது எல்லோருக்கும் புரியாத புதிர். ‘சாமிக்கே ஆக்டிவாதானாம், பூசாரிக்கு புல்லட்டாம்’ என மாரிமுத்துவை  வம்பிழுப்பார்கள். மாரிமுத்துவுக்கு தெரிந்தவரை பாண்டியனின் ஒரே பலவீனம் தீனிதான். அதுவும் கூட சில மாதங்களாகத்தான். மேசை இழுப்பறையில் எப்போதும் திறந்து கிடக்கும் பொட்டலம் ஒன்று இருக்கும். நெய் முந்திரி வறுவல், ஃப்ரூட் ரோல், கமலா ஆரஞ்சு, மிளகு சேவு இப்படி எதோ ஒன்று அலுவலக நேரம் முழுக்க கொறித்தபடி இருப்பான். இவற்றை வாங்கிவர  எவரையும் ஏவுவதில்லை. தானே சென்று வாங்கி வருவான். அறைக்குள் எவராவது வந்தால் மேசையை  தடக்கென  மூடிவிடுவான். இதன் காரணமாகத்தான் அவனுக்கு ‘கும்பீபாகம்’ என பெயர் சூட்டியிருந்தான் செந்தில். 


 ஊதியவயிருடன், வெற்றுடம்பின் மீது துண்டு போர்த்திக்கொண்டு கைலியை செருகியபடி கழிப்பறையிலிருந்து வெளியே வந்தான் பாண்டியன். முகம் களைத்திருந்தது.  வாசலிலேயே விழி வைத்திருந்த மாரிமுத்துவிற்கு சற்றே வியப்பு. மூலக்கடுப்பு எதாவது இருக்கும்போல என எண்ணிக்கொண்டான் மாரி. பணிவாக எழுந்துநின்று பையிலிருந்து ஒரு கவரை நீட்டி ‘தண்டாயுதபாணி ட்ரைவிங் ஸ்கூல்’ என்றான். ‘அருட்பெருஞ்சோதியை’ கண்ணை மூடி முணுமுணுத்துவிட்டு பெற்றுக்கொண்டான். கனகதுர்கா ஒரு நோட்டை கொண்டுவந்து நீட்டியதும், இடுப்பில் சொருகியிருந்த கைபேசியை கையில் எடுத்துக்கொண்டு கணக்கை ஒப்பிட்டு சரிபார்த்தான். சரி என்பதுபோல் தலையசைத்தான். வள்ளலார் படத்தின் காலடியில் கவரைவைத்துவிட்டு கனகதுர்காவிடம் நீட்டியபோதும் கூட அவளை முகம்கொண்டு காணவில்லை. 


2


கனகதுர்காவின் கண்களை அணைக்கட்டியிருந்த கருவளையங்கள் மேலும் அடர்ந்து சுருங்கியது‌. உடல் சட்டென அனல் கிளப்பியது. வயிற்றுக்குள் மூட்டிய கரியை கட்டிக்கொண்டதுபோல் ஒரு தகிப்பு. வியர்வை ஒரு அலையாக பொங்கி குளிர்ந்தது. மின்னல் வெட்டியது  போல் வெடுக்கென  ஒரு இழுப்பு. மார்புகனத்தது. லேசாக மூச்சிளைத்தது. குளிர்சாதனப்பெட்டியின் கதவுகளை திறந்து அதன் ஜில்லிப்பில் நின்றாள். பாண்டியன் காலையில் அலுவலகத்திற்கு சென்றுவந்த அதே உடையுடன் கிளம்பி வந்தான். இரும்பு கிராதி கதவின் ஓசையை கேட்டதும் கனகதுர்கா சட்டென வெளியே வந்து “எதாவது குடிச்சிட்டு போங்க” என்றாள். “வந்து பாத்துக்குறேன்” என வாசலை பார்த்தபடி சொல்லிவிட்டு சட்டைப்பையில் கைபேசி இருக்கிறதா என தடவிப்பார்த்தான். இல்லையென்றதும், புல்லட்டில் அமர்ந்திருந்த மாரிமுத்துவை நோக்கி “போங்க, நா வரேன்” என சொல்லிவிட்டு கனகதுர்காவை முந்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். உள்ளே சென்ற சில நொடிகளில் குளிர்சாதனப் பெட்டியின் கதவு ஓங்கி  சாத்தப்படும் ஓசை கேட்டதும் தான் கதவை திறந்து  போட்டுவிட்டு வந்தது அவளுக்கு உறைத்தது. கைபேசியை எடுத்துக்கொண்டு அவளைத் தவிர்த்துவிட்டு வெளியேறினான். அவனுடைய ‘ஆக்டிவாவின்’ சத்தம் நீங்கியதும் கதவை மூடிவிட்டுவந்து தலையணையை குளிர்ந்த தரையில் போட்டு படுத்துக்கொண்டாள். உடல்தகிப்பு குறையவில்லை. எழுந்து  அரைகுப்பி குளிர்ந்த நீரை ஒரே மடக்கில் குடித்தாள். காத்திருந்தது போல் சுந்தர் கைபேசியை நோண்டியபடி வெளியே வந்தான். குனிந்த தலையுடன் இரண்டு கைகளினாலும் கைபேசியில் எதையோ அழுத்தியபடி அவனுக்குள்ளாக புன்னகைத்துக் கொண்டிருந்தான். குனிந்த தலை நிமிராமல்’ ‘நிர்மல் வீட்டுக்கு போயிட்டு வரேன்மா’  என்றான்.  ‘கிளாஸ்முடிஞ்சிருச்சா?’ எனக்கேட்டு இருபது நொடிகளுக்கு பின் ‘முடிஞ்சிடுச்சு’ என்றான்.‌. ‘ கிளாஸுக்கு மட்டும் தான் ஃபோன். அத வச்சிட்டு போ..’ என சொல்லிக்கொண்டிருக்கும்போதே இரும்பு வெளிக் கதவை திறந்துக் கொண்டு  வெளியே செல்லும் ஓசை கேட்டது. 


தரையில் படுத்தபடி தொலைக்காட்சி சேனல்களில் உலவினாள். உள்ளம் எதையோ தேடித்தேடி சலித்தது. ஒரு சேனலில் சவமாக கிடந்த ராதிகாவின் தலைமாட்டில் கோட்டுசூட்டு போட்ட ரஜினி கையில் வாங்கிவந்த மல்லிகைப்பூவை வைத்துக்கொண்டு கண்கலங்கும் காட்சியை பார்த்ததும் அழுகை முட்டிக்கொண்டுவந்தது. அப்போது தன்னை செத்துக்கிடக்கும் ராதிகாவாக கற்பனை செய்துக்கொண்டாள். அலுவலகத்தை விட்டுவரும் பாண்டியன் கையில் பூவுடன் கல்யாண வரவேற்புக்கு அணிந்த கோட்டுடன், உந்தி பிதுக்கமோ முன்மண்டை வழுக்கையோ இல்லாமல் வருகிறான். பிணமாக கிடக்கும் அவளுக்கு பூவைச்சூடிவிட்டு கதறி அழுகிறான். பிறகு அவனே அவர்களின் தேனிலவுக்கு சென்றபோது  அணிந்திருந்த சிகப்பு உள்கழுத்து டிஷர்ட்டில் வருகிறான். பின்னர்  இருபது வருடங்களுக்கு முன் தைத்த சபாரி சூட்டில் வந்தான். ஆனால் அவள் எல்லாமுறையும் இப்போதுள்ள கோலத்திலேயே பிணமாக கிடந்தாள். பாண்டியனுக்கு பதிலாக வேறொரு உருவம் துலக்கம்பெற்று அவளை நோக்கி வரத்தொடங்கியதும் திடுக்கிட்டு கண் திறந்தாள். 


மாலை ஆறு மணி. பாண்டியன் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவான். எழுந்து முடிந்திருந்த தலையை கண்ணாடி முன் நின்று சீப்பால் வாரி பின்னிக்கொண்டாள். வெண் நிற தோலில் சுருக்கங்கள் தென்படத்தொடங்கின. மெலிதாக அரும்பத் தொடங்கியிருக்கும் மீசையை வருடி பார்த்தாள். மயிர்காலை பிடித்து இழுத்து ஒவ்வொன்றாக  பிடுங்க வேண்டும் எனும் ஆவேசம் குமைந்தது. 


வெளியே சென்றிருந்த சுந்தர் நல்லபிள்ளையாக உடைமாற்றி, கைபேசியை பாண்டியன் அறைக்குள் உள்ள அலமாறியில் வைத்துவிட்டு, புத்தகத்தை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்குச்சென்றான். பாண்டியன் வீட்டுக்குள் நுழையும்போது நேராக அவன் கண்கள் மொட்டைமாடிக்குத்தான் செல்லும். மாடியில் சுந்தர் நடமாடிக் கொண்டே படிப்பதை உறுதி செய்துகொண்டுதான் உள்ளே  நுழைவான். ‌. 


பாண்டியனின் ‘ஆக்டிவாவின்’ ஓசை கேட்டது. இரும்புகிராதி கதவின் கொக்கியை நீக்கிவிட்டு நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். உள்ளே நுழைந்தவனின் மீசையில் சிறிய பொன்னிற துணுக்கு ஒட்டியிருந்தது. அவசர அவசரமாக விண்டுவந்த பப்ஸாக இருக்கும் என ஊகித்தாள். உள்ளுக்குள் சிரித்தாள். உள்ளே வந்தவன் உடனடியாக காற்சட்டையிலிருந்து வேட்டிக்கு மாறினான். வெள்ளைவேட்டி சட்டையில் வள்ளலார் கோவிலுக்கு தினமும் சென்றுவிட்டு இரவு எட்டு மணிக்கு தான் திரும்புவான்.  


ஐந்து ஆண்டுகள் இருக்கலாம், திடீரென ஒருநாள் இந்த வள்ளலார் படத்தை கொண்டு வந்து மாட்டினான். இனி நம் வீட்டில் அசைவம் இல்லை என்றான். மார்க்கத்தில் அறிவுறுத்தபட்ட வகையில் கலவி வாரமிருமுறையிலிருந்து மாதமிருமுறையானது. தொடக்க நாட்களில் அவன் தவிப்பதைக் காண பரிதாபமாக இருக்கும்.. இந்த வைராக்கியம் எத்தனை நாட்களுக்கு தொடர்கிறது என காத்திருந்தாள். ஒரு நன்னாளில் ‘இனி பூண்டு வெங்காயம் வாங்காத’ என்றான். மாதமிருமுறை என்றானதும் அந்நாட்களை இருவரும் உள்ளூர எதிர்பார்த்திருந்தனர். சின்ன சின்ன செயல்களில் குறிப்புணர்த்தியபடி இருப்பான். அந்த நாளை காலப்போக்கில் அஞ்சத் தொடங்கினாள். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே தலைவலி, இடுப்பு வலி என சுருண்டு கொள்வாள். ஆனால் அவனை மறுத்ததில்லை. ஆனால் இந்த ஆறு மாதங்களில் எல்லாம் மாறிவிட்டது. 


இரவுணவுக்கு சப்பாத்தி சுட்டுக்கொண்டிருந்தபோது பாண்டியனின் கைபேசி ஒலித்தது. பொதுவாக இரண்டு சிணுங்கலுக்குமேல் விடமாட்டான். மூன்று முறை ஒலித்ததும் எட்டிப்பார்த்தாள். பாண்டியனை காணவில்லை. அடுப்பு வெம்மையை குறைத்துவிட்டு எடுக்கப்போனாள். பாண்டியன் கிட்டத்தட்ட ஓடிவந்து அவளுக்கு முன்னாக எடுத்தான். ஆறுமாதமாக இப்படித்தான் அவனுடைய கைபேசியை தொடவிடுவதில்லை‌. ஏதோ ஒரு நெருடல் என உணர்ந்தவள் தொடக்கத்தில் இருமுறை அலுவலகத்திற்கு யதார்த்தமாகச் செல்வதுபோல் சென்று வந்தாள். உடன் பணிபுரியும் இரு பெண்கள் மீது மெல்லிய சந்தேகம் அவளுக்கு. ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று முதல்  நானும் உங்களுடன் நடக்கிறேன் என ஒருவாரம் வந்தாள். முன்பெல்லாம் ‘அம்பலத்தரசே அருமருந்தே’ ‘பச்சை மயில் வாகனனே’ என  பாடல்களை உரக்க ஒலிக்க விட்டு மைதானத்தை ஒன்றரை மணிநேரம் சுற்றி வருவான். ஆனால் அவள் நடந்த சமயம், விடுவிடுவென ஒருசுற்று சுற்றிவிட்டு பெஞ்சில் சோர்ந்து அமர்ந்து கொண்டான். 


தொடக்கத்தில் இருந்த திகைப்பும் மர்மமும் படிப்படியாக குறைந்தது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இரவில் கழிப்பறைக்குள் நெடுநேரம் கழிப்பது என்பது வாடிக்கையானது. அந்நாட்களில் பாயை விரித்து கீழே உறங்க தொடங்கினான். காலை எழுந்து கழிவறைக்கு செல்லும்போது பினாயில் வாடை மூக்கைத்துளைக்கும். ஒரிரவு பெண்னின் முயக்க முனகலை கழிவறையிலிருந்து கேட்டதும் அதுவரை ஊகமாக இருந்தது, திட்டவட்டமாகத் தெரிந்தது. தொடக்கத்தில் பொங்கிய எரிச்சல், அருவெறுப்பு, ஆற்றாமையை கடந்து தொலையட்டும் எனும் நிலையை அடைந்தபோது அதுவரையில் அவள் அறிந்திடாத விடுதலையுணர்வை அடைந்தாள். ஆனால் அது வெகு நாட்கள் நீடிக்கவில்லை. அவனுக்கு எவ்வகையிலும் அவள் தேவையில்லாதவளாக ஆனாள். அதுவே அவளுக்கு மெல்லிய பதட்டட்தை அளித்தது. பினாயில் வாடையின் மீது அவளுக்கு கடும் ஒவ்வாமை எழுந்தது. பினாயிலை ஊற்றும் தர்க்கம் மட்டும் அவளுக்கு விளங்கவில்லை. வாரம் இருமுறை இருந்த வழக்கம் ஒவ்வொரு இரவும் என ஆனது. இப்போது சில நாட்களாக  மதிய உணவு  இடைவெளிகளில் தொடர்ந்தது. எல்லா நாட்களிலும் பாயை விரித்து கீழே  உறக்கம் என்பது இயல்பானது. சில நாட்கள் நடு இரவில் அவனாக கட்டிலுக்கு ஏறி வரும்போது கனகதுர்கா முடங்கி மறுபக்கம் திரும்பிக்கொள்வாள்.  அவன் இறங்கி சென்றதும், அப்படி சுருண்டுக் கிடந்ததற்காக இரவெல்லாம் அழுவாள். 



இரண்டு நிமிடம் பேசிவிட்டு “உன் தம்பிதான்” என போனை கொடுத்தான். அவனிடம் பேசி முடிக்கும்வரை அருகிலேயே நின்றான். இணைப்பு துண்டித்ததும் உடனே கைபேசியை அவளிடமிருந்து மீட்டுக்கொண்டான். மூவருமாக தட்டில் சப்பாத்தியை போட்டுக்கொண்டு தொலைக்காட்சியில்  ‘பாரதி கண்ணம்மா’ பார்த்தார்கள். ஒன்பதரைக்கெல்லாம் படுத்தாள். பாண்டியன் கூடத்தில் கைபேசியில் மும்முரமாக இருந்தான். சுந்தர் அன்றைய அசைன்மென்டுகளை வலையேற்றிக்கொண்டிருந்தான். கைபேசியை பிடுங்கி  வீசி எறிந்து பாண்டியன் நெஞ்சில் ஓங்கி குத்தவேண்டும் என உள்ளே ஒரு ஆங்காரம் எழுந்தது. தலைமாட்டில் இருந்த கைபேசியை மெத்தையிலேயே சற்று தள்ளி வீசினாள். 


பாயை விரித்து பாண்டியன் கீழே படுத்தபோது இரவு பதினொன்றரை.  ஒற்றையாளாக இருவர் படுக்கும் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள். அறை உள்கூரையின் மீது ஓட்டப்பட்டிருந்த ரேடியம் நட்சத்திரங்கள் மினுங்கிக்கொண்டிருந்தன. பத்து நிமிடங்களில் பாண்டியனின் குறட்டையொலி கேட்டது. அவளுடைய இதயத்துடிப்பு லயம்கெட்டு தெறித்து கொண்டிருந்தது. கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். பிறகு மீண்டும் படுத்தாள். பனிரெண்டு இருக்கும். அப்போது அறைக்கு வெளியே கால்தடத்தின் மெல்லிய அரவத்தைக் கேட்க முடிந்தது. ஓசையின்றி அறைகதவைத் திறந்துகொண்டு வந்தவனின் வடிவம் இரவு விளக்கின் நீல நிற வெளிச்சத்தில் துலங்கியது. சுந்தர் அறையின் அலமாரியின் அருகே நின்று கொண்டிருந்தான். சட்டென எழுந்தால் என்ன எனத் தோன்றியது. ஆனால் பாண்டியன் முரட்டுத்தனமாக ஏதெனும் செய்துவிடக்கூடும் என அஞ்சினாள். கைபேசியை எடுத்துக்கொண்டு வந்தவழியே பூனை நடையில் திரும்பச் சென்றான். இத்தனைக்கும் பாண்டியன் அவ்வப்போது அவன் கைபேசியை சோதிப்பதுண்டு.  கைபேசிபயன்பாட்டை குறைத்துக்கொள் என சொன்னால், ‘நானாகேட்டேன்? நீங்க தான வாங்கிகொடுத்தீங்க.. நாள் முழுக்க படிக்கத்தானே யூஸ் பன்றேன்.. கொஞ்ச நேரம் கேம் கூட வெளாட விட மாட்றீங்க’ என கத்துவான். அவனிடம் காலையில் நிதானமாக பேசிப் பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.  மீண்டும் எழுந்து அமர்ந்தவள் பின்மதியத்தின் மரண கற்பனையை மீளவும்  மீட்டிப்பார்க்க முயன்றாள். கண்ணை இறுக மூடிக்கொண்டாள். ஆனால் அவள் கற்பனைக்கு மாறாக பிணமாக பெருந்தொந்தியும் வழுக்கையும் கொண்ட பாண்டியன் கிடந்ததும் உடல் சிலிர்த்தது. உடலை பார்த்து அழும் தான் தனது திருமண ரிசப்ஷன் புடவையில் இருப்பதை கவனித்தாள். பொட்டழிக்கும் வளையல் உடைக்கும் தாலி அறுக்கும் சடங்குகள் என அவள் பார்த்த சினிமாக்களிலிருந்து காட்சிகள் மனக்குளத்தில் சரசரவென நிரம்பின.  உடல் முறுக்கியது. இளம் விதவையாக மெல்லிய திருநீறு கீற்றுடன் வெள்ளைப்புடவையில், அவிழ்ந்த கூந்தலுடன் தனித்திருக்கும்போது நெடுங்காலம் தன்மனம் அறியாத உற்சாகம் உடல் முழுக்க படர்வதை உணர்ந்துக்கொண்டாள். 


3


பாண்டியனுக்கு மழையானாலும் வெயிலானாலும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுவது வழக்கம். அதிகாலையில் செய்வதற்கு என சில பயிற்சிகளை பழகியிருந்தான். உறங்கிக்கொண்டிருப்பவளை எழுப்ப வேண்டும் எனும் நோக்கதுடன் அல்லது நான் எழுந்துவிட்டேன் நீ இன்னும் உறங்குகிறாய் என்பதை உணர்த்தும் வகையில் கால்களை தேய்த்து தேய்த்து நடப்பான். கதவை ஓங்கி அறைவான். அன்று கையை தேய்த்து ‘அருட்பெருஞ்சோதி’ கூறி  கண் விழித்தபோது பீரோவில் பதிந்த ஆளுயர கண்ணாடிக்கு முன்  நின்று மெல்லிய புலர் வெளிச்சத்தில் நீண்ட கூந்தலை பக்கவாட்டில் படரவிட்டு சீவிக்கொண்டிருந்தாள். உடலில் நடுக்கம் தொற்றிக்கொண்டது. படுத்தபடி அவளை நோட்டம் விடத் தொடங்கினான். நெடுநேரம் சீவியவள், அலமாரியில் நைட்டியையும் துண்டையும் எடுத்துக்கொண்டு கழிப்பறை+ குளியலறைக்குள் நுழைந்தாள். உள்ளே  பத்து நிமிடங்கள் வரையும் எந்த சந்தடியும் இல்லை. கதவைத்தட்ட இருமுறை எழுந்தவன், தட்டவில்லை. உடல் பரபரத்தது‌. படுக்கையில் கிடந்த அவளுடைய கைபேசியை எடுத்தான். ஆனால் திரை பூட்டப்பட்டிருந்தது. படுக்கை அறைக் கதவை ஓங்கி அடித்து மூடினான். உள்ளே நீர் புழங்கும் ஓசை கேட்டது. ஓரிரு நிமிடங்களில் கதவை திறந்து கொண்டு இயல்பாக வெளியே வந்தாள். பாண்டியனின் நெற்றிப்பொட்டு விண்விண் என தெறித்தது. முகம் கருத்து இருண்டிருந்தது‌. வெளியே வந்தவள் பாண்டியனை நோக்காமல் சுற்றிய புடவையுடன் அடுக்களைக்குச் சென்றாள். அவள் முகத்தில் அப்போது அவன் கண்ட பூரிப்பு அவனை இம்சித்தது. அவசர அவசரமாக குளியலறைக்குள் சென்று ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என ஆராய்ந்தான். பிரஷ், குழாய், சோப்பு, குவளை என காண்பவை எல்லாம் அவளுக்கு பயன்பட்டிருக்கும் என சந்தேகித்தான். அவளை நுணுக்கமாக பின் தொடர்ந்தான். ஆனால் அவனை அவள் எவ்வகையிலும் பொருட்படுத்தவே இல்லை. 


அன்று முகம் மழிக்கும் போது கண்ணாடியில் இளகி தொய்ந்த மார்பை, விம்மிப் புடைத்த வயிறை, வழுக்கையை முதன்முறையாக காண்பதுபோல் திகைத்து நின்றான். மாரை அறுத்து வீசிவிட வேண்டும் எனும் ஆவேசம் பொங்கியது. அன்றிலிருந்து வீட்டில் இரவு உறங்கும்போது கூட சட்டை அணியத் தொடங்கினான். அவளுடனான பேச்சு மேலும் மேலும் என அருகியது. தன்னை மூடிக் கொள்ளும் தோறும் அவள் ஒளி பெருகுவதாக தோன்றியது. மனம் புழுங்கியது. ‘மனுஷன் திம்பானா’ என பரிமாறப்பட்ட உணவை பாதியில் போட்டுவிட்டு எழுந்தான். சில நாட்களாக தட்டை வீசி எறியும் வழக்கமும் சேர்ந்துக்கொண்டது. வேண்டுமென்றெ சன்னமான குரலில் அவளுக்கு கேட்காத வகையில் அழைப்பான். ‘உன்ன கூப்பிட்டு கூப்பிட்டே நா நெஞ்சு வெடிச்சு சாகப் போறேன்’ என எரிந்து விழுந்தான். ஆனால் இது எதுவும் அவளை சீண்டவில்லை. கனவுலக வாசியைப் போல் எங்கோ என விரிந்த  விழிகளுடன் நடமாடினாள். ஒவ்வொரு நாளும் அவன் காலையில் எழும் போது கண்ணாடிக்கு முன் அமர்ந்து தலை சீவினாள். குளிக்க சென்றாலும் கழிக்க சென்றாலும் அறையை விட்டு வெளிவர நெடுநேரம் ஆனது. அவனைப் போல் சோர்ந்துவிடாமல் ஒளி மிளிர திகழ்ந்தாள். முக்கியமாக அவளுக்கு கைபேசி தேவைப்படவில்லை என்பதை அவனால் செறிக்க இயலவில்லை. எப்போதும் கைபேசியில் இனிமையான பாடல்களை ஒலிக்கவிட்டிருந்தாள். அவை அவனை மூர்க்கமாக்கின ‘ஒரு நாள் ஃபோன ஒடச்சி வீசப் போறேன் பாரு’ என சீறிக்கொண்டிருந்தான். அலுவலக நேரத்தில் கூட திடுமென வீட்டுக்கு வந்து நின்றான். அவள் அருகில் இல்லாதபோது கைபேசியை நோண்டினான். “ஒரு நாள் எப்புடியும் மாட்டுவ” என கறுவிக் கொண்டான். வண்டியைத்  தெரு முனையில் நிறுத்திவிட்டு நடந்து வருவான். ஒரு நிமிடம் கூட கால் தரிக்காது. உடனே திரும்புவான். ஒரு கட்டத்தில் மதிய இடைவேளைகளில் வீட்டில் ஓய்வெடுப்பதை நிறுத்திக்கொண்டான். உண்டுவிட்டு உடனே சென்றான். அலுவலகத்திலேயே ஒரு சிறிய ஓய்வறையை ஏற்படுத்திக் கொண்டான். இரவு உறக்கம் வர நேரம் பிடிக்கலானது. காலை நடை நின்று போனது. பயிற்சிகளில் மனம் ஊன்றவில்லை. சுந்தர் அறைக்குள் திடும்திடுமென நுழைந்தான். தொடர்பற்ற கேள்விகளை கேட்டு வசை பொழிந்தான். இரவுகளில் பாயைக் கூடத்தில் விரித்துக் கொண்டான். நள்ளிரவு கடந்து ஓரிரு முறை அறையை விட்டு வெளியே வந்தபோது விழித்திருக்கும் தந்தையை கண்டு சமயல் அறைக்கு சென்று நீர் அருந்திவிட்டு படுப்பான். “உள்ள தான் பாட்டில் இருக்குல? எதுக்கு வெளிய சும்மா சும்மா வர?” என்றொரு நாள் கடிந்து கொண்டான். சுந்தர் அயர்ச்சி அடைந்து காலையில் நெடுநேரம் உறங்கினான். ஒருவாரமாக  மதிய  உணவை மாரிமுத்து பதினோரு மணிவாக்கில் கனகதுர்காவிடம் வந்து பெற்று சென்றான்.   


அன்று மதிய உணவு இடைவேளையின் போது கனகதுர்கா அலுவலகத்திற்கு வந்தாள். வங்கிக்கு சென்றுவிட்டு வந்ததாக மாரிமுத்துவிடம் சொன்னாள். ஓய்வறையில் இல்லாததால் கழிப்பறை கதவைத் தட்டி ‘அம்மா வந்திருக்காங்க’ என்றான். ‘ம்’ என்றொரு பதில் குரல் மட்டும் வந்தது. வெளியே வந்தவன் ‘அஞ்சு நிமிஷம் ஆச்சு.. சொல்லிட்டேன்..; இப்ப வந்துடுவார் இருங்கம்மா’ என்றான். கண்களில் நீரில் ததும்பின. பாண்டியன் கழிப்பறை கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தபோது எழுந்த பினாயில் நெடியை உணர்ந்ததும் அவனை நோக்காமல் வழியும் கண்ணீருடன் அறையை விட்டும் அலுவலகத்தை விட்டும் விடுவிடுவென வெளியேறினாள். நில் நில் என அறை வாசல் வரை பின் தொடர்ந்தவனை பொருட்படுத்தவில்லை. பாண்டியனின் கைபேசி அழைப்பையும் அவள் ஏற்கவில்லை..சோர்ந்து நாற்காலியில் புதைந்து கொண்டான். மாரிமுத்து மெதுவாக ‘சார் மூலத்துக்கு கருணைக் கிழங்கு லேவியம் நல்லது’ என்றான் பணிவாக. சட்டென நிமிர்ந்தவன் ‘என்ன வேல செய்றீங்க? நேத்துமட்டும் மூனு தப்பு லைசென்ஸ்ல, எல்லாரையும் கூப்புடு’ என கத்தினான். “எப்பவையும் விட ரெண்டு கம்மி தானேசார்” என முனகியபடி சென்றான்.


அலுவலகம் விட்டு நேராக வள்ளலார் ஆலயத்திற்கு சென்றவன் உள்ளே செல்லாமல் அங்கிருந்து சிவன் கோவிலுக்கு சென்றான். நெடுநேரம் மீனாட்சிசுந்தரேசர்  சந்நிதியில் அமர்ந்திருந்தான்.  இவை எல்லாம் எப்போது தொடங்கியது? மனம் நன்கறிந்த ஒன்றை எதிர்கொள்ளாமல் மறுகியபடியிருந்தது. பசி பற்றி  உடலெங்கும் படர்ந்தது. சன்மார்க்கத்தில் சேர்ந்த புதிதில் கடைப்பிடித்த உணவு கட்டுப்பாடுகளெல்லாம் கடந்தகாலத்து கனவுபோலிருந்தது அவனுக்கு. பையிலிருந்த வறுத்த முந்திரிகளை கொறித்தான். அன்றிரவு  என்ன ஆனாலும் சரி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என உறுதி கொண்டான். எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தபோதே கனகதுர்கா உறங்கிக் கொண்டிருந்தாள். அதுவரை இளகியிருந்த மனம் அவள் நிம்மதியாக உறங்குவதை பார்த்ததும் மீண்டும் மரம் ஏறியது. அறைக்குள் நுழைந்தவன் கட்டிலில் அவள் அருகே அமர்ந்து உறங்குபவளை வெறித்துக் கொண்டிருந்தான். தலையணையை முகத்தில் அழுத்தி விடலாம் என மனம் பரபரத்தது. கண்ணீர் பெருகியது.  மானசீகமாக அவளிடம் மன்னிப்பு கோரினான். கைபேசியை அணைத்து அலமாரியில் வைத்துவிட்டு இருளில் அமர்ந்திருந்தான். முழு இருளில் மட்டும் துலங்கும் ரேடியம் நட்சத்திரங்களையும் சந்திரனையும் அதை ஆராய கிளம்பிய கவசங்கள் அணிந்த விண்வெளி வீரனையும் படுத்தபடி வெறித்துக் கொண்டிருந்தான். கனகதுர்காவுடனான சம்போக காட்சிகளை நினைவில் மீட்டிக்கொண்டிருந்தான். சில நொடிகளிலேயே அவை திரிந்தன. முகம் மட்டும் இளமையின் மிளிர்வுடைய கனகதுர்காவினுடையது. அவள் இடையும் முலையும் நொடிக்கொருதரம் அவன் கண்ட நீலப்படங்களிலிருந்து பொருத்திக் கொண்டு உருமாறியபடி இருந்தது. அவனும் கட்டுடலும் பேராண்மையும் கொண்டவனாக உருமாறியபடி இருந்தான். அவனால் எத்தனை முயன்றும் அவளுடைய நிர்வாணத்தை நினைவில் கொணர முடியவில்லை. மூச்சுத்திணற திணற சேற்றில் அமிழ்வது போலிருந்தது. அவனுடைய முகம் மறைந்து மாரி முத்துவின் முகம் துலங்கியதும் திடுக்கிட்டு கண்னைத் திறந்துக் கொண்டான்.  


அறை கதவை ஓசையின்றி திறந்து உள் நுழைந்தான் சுந்தர். அசையாமல் உறங்கும் பாவனையில் அவனை கவனித்தான். அலமாரியில் தனது கைபேசியை எடுத்துக்கொண்டு மெதுவாக வெளியேறினான். அவன் அறைக்கதவு மூடும் ஓசையைக் கேட்டதும் ஓசையின்றி எழுந்த பாண்டியன் சுந்தரின் அறைக்குள்ளே நுழைந்தான். ‘அரிப்பெடுத்த திருட்டு நாயே’ என கத்திக்கொண்டு அவனுடைய கைபேசியை தூக்கி ஏறிந்துவிட்டு ஓங்கி அறைந்தான். சத்தம் கேட்டு ஓடிவந்த கனகதுர்காவின் கன்னத்திலும்


‘என்னடி புள்ள வளக்குற நாயே’ என ஓங்கி ஒரு அறை விட்டு அவர்களுடைய அறைக்குள் நுழைந்து அவளுடைய கைபேசியையும் எடுத்து தரையில் ஆவேசமாக வீசி “திருட்டு தேவிடியா முண்ட” எனக் கத்தி கைபேசியின் மீது ஏறி குதித்தான். ‘படிச்சு கிளிச்சது போதும் மயிரான்’ என விசும்பிக் கொண்டிருந்த சுந்தரை சமயலறைக்கு இழுத்து சென்றான்.  அவனுடைய இடக்கையில் பழுக்க காய்ச்சிய தோசைத் திருப்பியின் கைப்பிடியால் துடிக்கத்துடிக்க பாண்டியன் சூடிழுத்து கொண்டிருந்தபோது பாண்டியனின் கைபேசி சுவற்றில் மோதி அக்கு அக்காக தெறிப்பதை மூச்சு வாங்க பார்த்துக்கொண்டிருந்தாள் கனகதுர்கா.  அவன் இழுத்த அந்தச் சூடு  சூடிழுத்த பாண்டியனின் மீதும், சந்நதம் கொண்ட கனகதுர்காவின் மீதும், மாரிமுத்துவின் மீதும், பாண்டியனுக்கு அவன் அறிமுகப்படுதிய, அற்பாயுசில் மரித்துப்போன ஆகஸ்ட் அமீஸ் மீதும், சுவரில் தொங்கிக்கொண்டிருந்த வள்ளலார் மீதும், அவருடைய தனிப்பெரும்கருணை மீதும், ஊரடங்கின் மீதும், சபிக்கப்பட்ட காலத்தின் மீதும், வயோதிகத்தின் மீதும், இளமையின் மீதும், பசியின் மீதும், அடிவயிற்றில் அவியாதிருந்த அனலின் மீதும், அண்டசராட்சரத்தின் கோடானகோடி ஜீவராசிகளின் இன்பவிழைவின் மீதும், எந்த மனிதனாலும் விலக்க முடியாத தனிமையின் மீதும்  இழுபட்டபடியிருந்தது.

அகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம்- அன்புள்ள புல்புல் குறித்து சிவா கிருஷ்ணமூர்த்தி

 “அன்புள்ள புல்புல்” நூலைக் குறித்து சொல்வனம் இதழில் எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரை: நன்றி



“தற்சமயம் வட்ட மேஜை மகாநாட்டின் நிலைமை, இருபது வாத்தியக்காரர்கள் வேறு வேறு வாத்தியங்களில், வேறு வேறு ஸ்வரத்தில் வெவ்வேறு பாட்டை ஒரே சமயத்தில் வாசிப்பது போலிருக்கிறது”


1931ல் இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தியடிகளுடன் லண்டன் சென்ற ஜி.டி.பிர்லா, அந்த மாநாட்டு அனுபவங்களை தொகுத்து எழுதிய “கடல் கடந்த காந்தி” எனும் சிறு நூலில், மேற்சொன்ன குறிப்பு இருக்கிறது.


தலித், சீக்கிய, இஸ்லாமிய, காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் ஆங்கிலேயர்களும் கலந்து கொண்ட இழுபறி மாநாட்டின் இந்த நிலை, அன்றைய இடியாப்ப சிக்கலை, காந்தியின் முன், இந்திய சுதந்திர போராட்டத்தின் முன் விஸ்வரூபமாய் விரிந்து நிமிர்ந்து நின்ற மாபெரும் சவாலை, அறைகூவலை ஒரு சிறு அகல் விளக்கின் வெளிச்சத்தில் இக்குறிப்பு காட்டுகிறது.


இன்று நாம் தின அலுவலக/வியாபார வாழ்வில் எதிர் கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளோடும் இதனை ஒப்பிட இயலும். ஈடுபட ஆரம்பித்து சில காலத்திலேயே வியர்த்து, நோக்கத்தை நீர்த்துப் போக வைக்க கூடிய மாபெரும் பணி அது.


தனி மனிதனாகவும், சென்ற நூற்றாண்டின் மிக முக்கிய மைல்கற்களின் ஒன்றான இந்திய சுதந்திர போராட்டம் எனும் அரும்பணியில் தம்மை கரைத்துகொண்ட ஆத்மாக்களில் ஒருவராகவுமாக காந்தியைப் பற்றி ஏராளமான நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன; மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.


தமிழில் அதில் முக்கியமான ஒன்றாக யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் முன்னெடுத்து நடத்திக்கொண்டிருக்கும் http://www.gandhitoday.in என்ற ஒரு முக்கிய தொகுப்பு களஞ்சியத்தை தயக்கமின்றி கூறுவேன்.



இந்த களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு “அன்புள்ள புல்புல்” எனும் அச்சு நூலாக யாவரும் பதிப்பகம் பதிப்பித்திருக்கிறார்கள்.


இந்த குறிப்பிட்ட கட்டுரைகளை தேர்வு செய்ததற்கான காரணங்களை ஆசிரியர் தன் முன்னுரையில் கூறியிருக்கும் விதமே வாசகனுக்கு நூலை வாசிக்க ஓர் தூண்டுதலாக இருக்கும்.


காந்தி – மகாத்மாவாக நிறுத்தப்பட்ட அளவிற்கே அல்லது அதற்கு மேலாகவே எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டவர். அவரது லட்சியங்கள், அதை அடைய அவர் மேற்கொண்ட தொடர் முயற்சிகள், சந்தித்த சிக்கல்களை நடைமுறை நோக்கில் புரிந்து கொண்டு எதிர்கொண்ட விதங்கள் என்று பல்வேறு புள்ளிகளில் இன்றைய காலகட்டத்தில் சிந்திப்பதற்கும், பேசுவதற்கும் முக்கியமாக இன்றைய உலகின் பிரச்சனைகளை “காந்தியப் பார்வையில்” அணுவதற்குமான ஏராளமான வாய்ப்பு கதவுகள் திறந்திருக்கின்றன.


அவற்றின் ஒரு பகுதியாக, கல்வி, மத அடிப்படைவாதம், அஹிம்சை, கம்யுனிசம் என்ற முக்கிய தளங்களில் காந்தியை கொண்டு நிறுத்தி ஆராயும் காத்திரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.


சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு குறிப்பைக் கவனித்தேன். 1997ல் ஓர் இலக்கிய கூட்டத்தில் சி.சு.செல்லப்பா அவர்கள் காந்தியைப் பற்றி, காந்திய பொருளாதாரத்தைப் பற்றி பேசுகிறார். பேசி முடித்ததும் வந்திருந்த பார்வையாளர்களில் (மொத்தம் நால்வர்) ஓர் இளைஞர் கடுமையான கேள்விகளைக் கேட்கிறார். (“காந்தியம் பேசுன சமூக விடுதலையும் உருப்படியாகலை, கிராமிய பொருளாதாரமும் சிதைக்கப்பட்டாச்சு…பிணத்திற்கு மாலை போட்டு மனையில் உட்கார வைக்கிற மாதிரி, செத்துப்போன காந்தியத்தைப் பற்றி இன்னிக்கு பேசிக்கிட்டு இருக்கிங்க.”)


தொண்ணூறுகளுக்கும் முன்னர் இருந்தே இருந்துகொண்டிருக்கும் கேள்விகள் இவைகள். காந்தியம் என்று சொல்ல ஆரம்பித்தாலே இன்றைக்கும் மிகச் சுலபமாக ஒருவருக்கு தோன்றக்கூடிய, கேட்க முடிகிற கேள்விகள்.


இன்றைய இணைய காலத்தில் இக்கேள்விகளுக்கு பதில்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன என்பது வரவேற்கப்படவேண்டிய, ஆசுவாசப்படவேண்டிய விஷயம்.

இந்த தொகுப்பிலும் இக்கேள்விக்கான விடையாக ஓர் கட்டுரை (“நிகழ்கண காந்தி”) இருக்கிறது.


மேலும், காந்தியைப் பற்றி அவருடன் இருந்தவர்களின் பார்வைகளில் எழுதப்பட்ட சிறு நூல்களைப் பற்றிய கட்டுரைகள், அந்நூல்களைப் பற்றிய சுவாரசிய அறிமுகத்தையும் நூல்களின் சொல்லப்பட்டிருக்கும் காலகட்டங்களைப் பற்றிய சித்திரங்களையும் வாசகருக்கு அளிக்கின்றன.


வின்சண்ட் ஷூன் (காந்தி சரிதை), மில்லிக் போலாக் (“காந்தி எனும் மனிதர்”), ஜீன் ஷார்ப். ஏ.கோபண்ணா அவர்களின் “தண்டி யாத்திரை” போன்ற நூல்கள் காந்தி, அன்றைய இந்தியா, அதன் அரசியல் ஆன்மீக நிலைப்பாடு எனும் மாபெரும் ஆனால் துண்டு துண்டுகளாக இருக்கும் பகுதிகளை, ஒன்றாக இணைத்து முழு சித்திரமாக புரிந்து கொள்ள, ஆர்வமிருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.


ஜெயராம்தாஸ் எனு கட்டுரையில் ஜெயராம்தாஸ் ஜெயவர்தன எனும் இலங்கை காந்தியவாதியை, அவரது காந்தி ஆசிரம வாழ்க்கையை, அதன் பின் இலங்கை திரும்பி ஆற்றிய தியாக வாழ்க்கையைப் பற்றிய நுண் சித்திரத்தை அறிந்துகொள்ள முடிகிறது. 1905 தொடங்கி 1948 வரையிலான காலகட்டத்தில் காந்தி இலங்கையைப் பற்றி பேசி/எழுதிய கருத்துகளின் தொகுப்பான – Gandhi and Lanka நூலை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இவரைப் பற்றிய மேலதிக விவரங்கள் வேறு எங்கும் கிடைக்கவில்லை என சுனில் குறிப்பிடுகிறார். ஒருவேளை இவரைப் போன்றவர்கள் பெரும் இயக்கமாக இலங்கையில் பெருகியிருந்தால் பின்னாளில், இந்நாளில் இலங்கையின் அரசியல் பார்வைகள், நிலவரங்களில் வேறு (நற்)பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்குமோ என்ற சிறு ஏக்கமும் உண்டாகிறது.


காந்தி மேல் வைக்கப்படும் கடும் குற்றச்சாட்டுகளை ஆராயும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன.


பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் தூக்கிலிருந்து காப்பாற்ற காந்தி பெரும் முன்னெடுப்பு எடுக்கவில்லை – முக்கியமாகக் காந்தி-இர்வின் பேச்சுவார்த்தைகளில் காந்தி போராட்டக்காரர்களின் விடுதலைக்கான முழு அழுத்தத்தை காந்தி வைக்கவில்லை எனும் வாதத்தை வரலாற்று ஆய்வாளரான சந்திரபால், அவரது ஆய்வுக்கட்டுரையில் ஆராய்ந்ததை இக்கட்டுரையில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. நாள் வாரியாக, அன்று எழுதப்பட்ட கடிதங்கள் வாயிலாக இக்குற்றச்சாட்டை ஆராய்கிறது இக்கட்டுரை.


இன்னொரு குற்றச்சாட்டு – பாகிஸ்தானுக்கு 55 கோடிகள் கொடுக்க இந்திய அரசாங்கத்தை தனது உண்ணாவிரதத்தை கொண்டு நிர்பந்தித்தார் என்பது.


ஜனவரி 23, 1948ல் பாதுகாப்பு அமைச்சர், சர்தார் பல்தேவ் சிங் மவுண்ட்பேட்டனைச் சந்தித்து கசப்புடன் சொன்ன விஷயம் – “இவரது உண்ணாவிரதத்திற்கு ஒரே நோக்கம்தான் இருக்க முடியும் – அது 55 கோடிகளை பாகிஸ்தானுக்கு அளிப்பது.”


1971ம் ஆண்டு, கோபால் கோட்ஸே, “காந்தி 55 கோடிகளை பாகிஸ்தானுக்கு அளிக்ககோரி உண்ணாவிரதமிருந்தார்(காந்தி). அதுவே அவரைக் கொலை செய்ய முக்கியத் தூண்டுதலாக அமைந்தது” என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (மகரந்த் பல்தேவ்.)


இன்றுவரை காந்தி மேல் இருக்கும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று. இதனை தெளிவாக ஆராய்கிறது “காந்தியும் 55 கோடிகளும்…” கட்டுரை.


கட்டுரையாசிரியர் கூறுவதுபோல், காந்தியை ஓர் அதிமானுடர் சக்தி கொண்டவர் என நம்பும் சித்திரம்தான் காந்தியின் மேல் வைக்கப்பட்டிருக்கிறது. எனவேதான், காந்தி மட்டும் மனம் வைத்திருந்தால் பகத்சிங் மற்றும் தோழர்களை தூக்கிலிருந்து காப்பாற்ற முடிந்திருக்கும்; இந்தியாவை துண்டாக்காமல் வைத்திருக்க முடியும் என நம்புகிறது.


இக்கட்டுரைகளின் நோக்கமாக நான் கருதுவது, நிதரிசனத்தை, காந்தி தன்னால் இயன்றவரை தன் முழு ஆற்றலைத் திரட்டி போராடினார் -சில விஷயங்களில் வெற்றி பெற்றார், பல விஷயங்களில் கை மீறிசென்றது என்பதை, அவர் ஓர் நடைமுறை வாதி என்பதை கிடைத்த தரவுகளின் வழியாக ஆராய்ந்து தொகுத்து அளிப்பது. இந்த வகையில் தமிழில் இது ஓர் முக்கிய தொகுப்பு நூல்.


நூலின் ஆசிரியர் சுனில் தனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாக “அன்புள்ள புல்புல்” குறிப்பிடுகிறார். காந்தியின் நகைச்சுவை உணர்ச்சியைப் பற்றிய கட்டுரை இது!


இத்தனை கடுமையான எதிர் கொள்ளவேண்டியிருக்கும் சவால்களுக்கு, சோதனைகளுக்கு மத்தியில் காந்தி போன்ற ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு உண்டு, முக்கியமாகச் சுய எள்ளல் உண்டு என்பதே முதலில் ஆச்சரியமான விஷயம். ஆனால் சற்று யோசித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பது புரியும். இத்தனை அரசியல், ஆன்மீக, குடும்ப வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒருவர் தொடர்ந்து ஈடுபடுவதற்கு, தம் உள்ளத்தை லகுவாக வைத்துக்கொள்வதற்கு நகைச்சுவை உணர்ச்சி பேருதவியதில் ஆச்சரியம் இல்லை.


1928ல் காந்தி பின் வரும் வாக்கியத்தை எழுதியிருக்கிறார் – “எனக்கு நகைச்சுவை உணர்வு இல்லாமலிருந்தால் நான் எப்போதோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்”


இக்கட்டுரையில் காணப்படும், புன்னகைக்கவைக்கும் ஒரு உதாரணம் பின்வருவது.


தி.செ.சவுராஜன் அவர்களின் “தமிழ்நாட்டில் காந்தி” நூலில், அவரைத் திரும்ப பார்த்த காந்தி இவ்வாறு சொல்வதாக குறிப்பிட்டிருக்கிறார் – “திரும்ப வந்து விட்டாயா, செல்லாக்காசைப் போல்!”. இந்த பொருளில் இன்னும் ஆராய நிறைய விஷயங்கள் இருக்கும் என நம்புகிறேன்.


எனக்குத் தனிப்பட்ட முறையில் ஆர்வத்தைத் தூண்டி மிக முக்கிய கட்டுரையாக நான் கருதுவது – இந்திய சுதந்திரப்போராட்டத்தைப் பற்றி மட்டும் அல்லாது அதன் பின்ணணியை ஆராயும் “இந்திய வரலாற்றில் ஒத்துழையாமை போராட்டங்கள்” எனும் கட்டுரை.

வரலாற்று ஆய்வளாரும் காந்தியருமான தரம்பால் எழுதிய ஓர் நூல் – இந்திய மரபில் ஒத்துழையாமை போராட்டங்கள் – Civil Disobedience In Indian Tradition ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை இது.


நம் இந்திய ஆழ் மனதில் நம்மைப் பற்றி, என்ன மாதிரியானவர்களாக உணர்கிறோம்? அறிவிலும், பொருளியலிலும், தார்மீகமாகவும், நாமும் நமது மரபும் ஐரோப்பியர்களை விட தாழ்ந்தவர்கள் என்பதே இத்தனை வருட காலனி ஆதிக்கத்தில் நமக்கு புகட்டப்பட்டது.


பல்வேறு வகைகளில் இவை நமக்கு புகட்டப்பட்டது என்பது காலனியாதிக்கத்தின் வெற்றி. தன்னம்பிக்கையற்ற மந்தை சமூகத்தை வழிநடத்திச் செல்ல, பொறுப்புள்ள காலனியர்கள் தேவைபட்டனர். அவர்கள் தம் கடமைகளைச் செவ்வன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற உருவாக்கத்தை பல்வேறு ஆண்டுகளாக தக்க வைத்துக்கொண்டிருப்பதது என்பது ஓர் முக்கிய வெற்றிதான்.


ஆங்கிலேய ஆட்சி தொடங்கிய காலகட்டத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்களின் நடத்தைகள் கணக்கில் கொண்டால் அவர்கள் காலம்காலமாக கொடுங்கோல் ஆட்சி புரிவர்களாகவும், மக்கள் அவர்களுக்குச் அஞ்சி அப்படியே தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாகவுமான பிம்பம் கிடைக்கலாம். ஆனால், உண்மையில் ஆள்பவர்களும் மக்களுக்கும் இடையில் எழுதப்படாத விதிகள் இருந்துகொண்டிருந்தன; அறமின்மையின் எல்லையை ஆள்பவர்கள் மீறும் போது மக்கள் திரண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்; மன்னர்கள் தர்மத்திற்கு கட்டுண்டவர்கள் என்று நம்பியதால் அடக்குமுறையைக்கொண்டு எதிர்கொள்வதற்குப்பதில் பேச்சு வார்த்தைக்கான சாத்தியக் கதவுகளை திறந்து வைத்தனர்.


மன்னர்களின் ஆட்சிகாலம் மறைந்து ஆங்கிலேயர்கள் “பொறுப்பை” எடுத்துக்கொண்டபின், கேள்விகளற்றுக் கீழ்படிதல் எனும் நிலையை மக்கள் அடையும் வரை ஆங்கிலேயர்களின் வன்முறை அடக்குவாதம் நிற்கவில்லை. இதுவே அத்தனை காலங்கள் உயிர்த்திருந்த ஆன்மீக அரசியல் மரபை முடித்து வைத்தது. காந்தியின் நுண்ணுணர்வு இதைச் சரியாகக் கண்டுகொண்டு மீளுருவாக்கம் செய்தது என்று இந்தக் கட்டுரை கூறுகிறது.


தரம்பால் தனது கட்டுரையில் பாட்னா, பனாரஸ், சரூண், முர்ஷிதாபாத், போல்பூர் இடங்களில் 1800களின் தொடக்கத்தில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கங்களை விவரிக்கிறார்.


“இந்த உலகிற்கு போதிக்க எனக்கு புதிதாக ஏதுமில்லை. சத்தியமும் அகிம்சையும் இந்த மலைகள் அளவிற்கே பழமையானவை. என்னால் முடிந்ததெல்லாம் இவையிரண்டையும் பெரிய அளவில் சோதிக்க முயன்றதுதான்”


“இந்திய வரலாற்றில் ஒத்துழையாமை போராட்டங்கள்” எனும் கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் மேற்கண்ட வாக்கியங்கள் எத்தனை பொருத்தமானவை, சத்தியமானவை.


சத்தியத்தையும் அஹிம்சையையும் எச்சக்தியிடம் சோதிக்க முயன்றார்? சென்ற நூற்றாண்டின் இணையற்ற பிரித்தானிய சாம்ராஜ்யம் எனும் மாபெரும் சக்திக்கு எதிராக.


பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இம்மாபெரும் பலம், அதன் நிகரில்லா படைகளாலோ, உலகமெங்கும் பரவியிருந்த காலனி நாட்டு சக்திகளினால் மட்டும் உருவாகவில்லை.


பி.டி.பிர்லாவின் நூலில் ஆங்கிலேயர்களைப் பற்றி ஒரு குறிப்பு எழுதுகிறார்.


“ஆங்கிலேயர் காலிலே ஒரு கையும், கழுத்திலே ஒரு கையும் வைத்திருப்பார்களென்று கைலாஸ் பாபு சொல்வது வழக்கம். உங்களுக்கு சக்தியில்லையென்று தெரிந்ததோ, கழுத்தை நெரித்துவிடுவான்: சண்டையில் நீங்கள் ஜெயித்து விடுவீர்களென்று தெரிந்தால், காலைப் பிடித்துக்கொண்டு வேண்டவும் தயங்க மாட்டான். எப்போழுதுமே தான் வணங்கிப் போவதற்குச் சித்தமாயிருந்ததாகச் சொல்லுவான்”


இப்படியாப்பட்ட குயுக்தியான சக்தியைத்தான் ஸத்தியத்தையும் அஹிம்சையையும் கொண்டு எதிர்கொண்டிருக்கிறார்…


சிறுவயதில் கார்த்திகை நாட்களில் வீடுகளில் திருவிளக்குகள் பொறுத்துவது ஓர் உற்சாகமான விஷயம். அம்மா கொடுக்கும் ஒரு அகல் விளக்கைக் கொண்டு குறைந்தது நான்கு அல்லது ஐந்து விளக்குகளாகவாது ஏற்றுவோம். சகோதரர்களுக்குள் யார் அதிக விளக்குகள் ஏற்றுவது குறித்து எங்களுடையே போட்டியே நிலவும்.


இந்த நூல், முன்னுரையில் குறிப்பிட்டபடி, எத்தனையோ மனிதர்களின் உழைப்பில் தரம்பால், ராமச்சந்திர குகா, ஜீன் ஷார்ப், மகரந்த் பரஞ்சபே, ராட்டை ரகு மற்றும் இன்னும் பல்வேறு ஆத்மாக்களின் உழைப்பில், பல்வேறு காலகட்டத்தில் ஏற்றப்பட்ட அகல் விளக்குகளைக் கொண்டு காந்தி, இந்திய மரபு, இந்திய சுதந்திர போராட்டம் இவற்றின் மாபெரும் சித்திரங்களை ஆர்வமுள்ளவர்களுக்கு காட்ட முயலும் இன்னொரு விளக்கு.


தமிழில், ஜெயமோகனின் “இன்றைய காந்தி” மற்றும் அவரது தளத்திலிருக்கும் ஏராளமான காந்தியைப் பற்றிய கட்டுரைகள், பாலசுப்பிரமணியம் முத்துசாமியின் “இன்றைய காந்திகள்” போன்ற நூல்களுடன் இந்நூல் ஆசிரியர் சுனிலும் தளராமல் தொடர்ந்து விளக்குகளை ஏற்றிக்கொண்டிருக்கிறார். இந்த ஒவ்வொரு அகல் விளக்கும் மேன்மேலும் அதிக, அகல் விளக்குகளை ஒளி பெறச்செய்யும். அவ்வொளியில் காந்தியமும், ஸத்தியமும், அஹிம்சையும், இந்திய மரபும் என்றென்றும் பிரகாசிக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.


நூல்: அன்புள்ள புல்புல்


ஆசிரியர்: சுனில் கிருஷ்ணன்


பதிப்பகம்: யாவரும் பதிப்பகம்

Wednesday, December 23, 2020

வரம் சிறுகதை- மரப்பாச்சி கூடுகையில் ஒரு விவாதம்


 மார்ச் ஒன்றாம்தேதி எழுத்தாளர் எஸ். செந்தில்குமாருடனான சந்திப்பிற்கு பிறகு இந்த மாதம் 20 ம் தேதிதான் மரப்பாச்சி கூடுகை நடத்தினோம். இடைப்பட்ட காலத்தில் இரண்டு மூன்று இணையவழி கூடுகைகள் செய்தோம். ஆனால் அவை அலுத்துவிட்டன. இணைய வழி உரையாடல் திகட்டிவிட்டது. நேரில் சந்திக்கவும் இயல்பாக பயணிக்க கிளம்பவும் காத்திருந்தோம். நாங்கள் வழக்கமாக கூடும் காவேரி மருத்துவமனை நான்காம் மாடிக்கு செல்லவில்லை. காரைக்குடி காவேரி மருத்துவமனை கடந்த ஆறு மாதங்களாக கோவிட் சிகிச்சை மையமாக செயல்பட்டுவருகிறது. இப்போது நோயாளிகள் இல்லை என்றாலும் தயக்கம் இருந்தது. ஆகவே எங்கள் வீட்டில் புதிதாக உருவாக்கிய படிப்பறையில் புத்தகங்கள் சூழ அமர்ந்து பேசினோம்.

மூன்று சிறுகதைகளை விவாதத்திற்கு எடுத்துக்கொண்டோம். துரை அறிவழகனின் 'வண்டித்தாத்தாவும் சொரூபராணியும்' ச. பிரபாகரனின் 'ஒளிந்திருக்கும் வானம்' மற்றும் ஜெயமோகனின் 'வரம்'. துரை அறிவழகன் காரைக்குடியில் வசிப்பவர் சிற்றிதழ் சூழலில் இயங்கியவர். உடல் நலம் மீண்டு இயங்கத்தொடங்கியுள்ளார். நினைவொடைத்தன்மை கொண்ட அவருடைய கதை நகர்வு இணைய இதழில் வெளிவந்தது. ச. பிரபாகரன் உருவாகிவரும் இளம் கவி. அரூ போட்டியில் பங்குகொண்டு இறுதி சுற்றுக்கு தேர்வான கதையை விவாதித்தோம். கவித்துவமான மொழியில் எழுதப்பட்ட டிஸ்டோபிய அறிவியல் புனைவு. இவர்கள் இருவருமே மரப்பாச்சியில் பங்களிக்கும் எழுத்தாளர்கள். 

ஜெயமோகனின் கரோனா கால நூறுகதைகளில் இறுதி கதை 'வரம்'. வாழ்க்கைபாதையை தடம் மாற்றும் மந்திரகணத்தை சொல்லும் அபாரமான கதை. இரண்டு கதைகளை நினைவுபடுத்தின. ஒன்று யுவன் சந்திரசேகரின் 'நச்சுப்பொய்கை'. அவருடைய சிறந்த கதைகளில் ஒன்று. உடைந்து விழும் மனிதர்களை தொட்டு மீட்கும் மாயக்கணங்களால் நிறைந்த கதை. 'தர்மன் தான் விரும்பிய வரத்தைக் கேட்ட சப்த அதிர்வில்,அதுவரை நஞ்சாய் இருந்த பொய்கையின் நீர் குடிதண்ணீராய் மாறியதல்லவா? அந்த மந்திரக் கணம் அப்போதைய கணம் மட்டும்தானா,இல்லை கடந்து போகும் எல்லாக் கணங்களுமே மந்திர கணங்கள்தானா?' எனும் வரியே 'வரம்' இத்தகைய ஒரு அமானுட கணத்தை உருவாக்கிக்காட்டுகிறது. இரண்டு கதைகளின் தரிசனமும் ஒன்றே. இரண்டாவது கதை நாஞ்சில் நாடனின் 'பூனைக்கண்ணன்'. ஒரு திருடன் சித்தனாக ஆகும் கதை என சொல்லலாம். பூனைக்கண்ணன் கதையில் சித்தரிக்கப்படும் வழிபாடற்ற கோயில், இழிந்த நிலையில் உள்ள பூசகர், திருடனின் துணைகொண்டு தெய்வம் ஆற்றலை அடைவது என பலபொதுத்தன்மையும் தொடர்ச்சியும் இவ்விரண்டு கதைகளுக்கு இடையே உள்ளன. ஒரு வகையில் பூனைக்கண்ணனுக்கு எழுதப்பட்ட ட்ரிப்யூட் கதையாக 'வரம்' கதையை வாசிக்க முடியும். பூனைக்கண்ணன் விக்கிரகத்தை களவாடிச்செல்லும் திருடன் அறியமுடியாத விசைகளால் ஆட்கொள்ளப்பட்டவனாக கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்திற்கு சேர்க்காமல் எங்கோ மலையடிவாரத்திற்கு செல்கிறான். கதையின் இறுதியில்.  அம்மன் உரையாடுவது அவனால் மட்டுமே கேட்கமுடிகிறது. 'பூனைக்கண்ணன் அம்மனிடம் ஒருநாள் கேட்டான். “கெட்டவன்னு தெரிஞ்சும் தண்டிக்கலேன்னா நீயெல்லாம் என்ன சாமி?”அம்மன் சொன்னாள் “நல்லவன்னா யாரு? கெட்டவன்னா யாரு?”“போட்டி, புத்திகெட்டவளே” என்றான் பூனைக்கண்ணன். முற்றிலும் மறைஞானத்தன்மை கொண்ட முடிவு. 

எது 'வரம்'? அதை யாருக்கு யார் அளிப்பது? இரண்டு கேள்விகளை கேட்டுக்கொள்ளலாம்.  மேப்பலூர் ஸ்ரீ மங்கல பகவதி பார்கவன் போற்றியின் மகள் ஸ்ரீதேவிக்கு அளித்ததாக நம்பும் வரம். அவளை மரணத்தின் விளிம்பிலிருந்து காக்கிறது. வாழ்வை மீட்டு அளிக்கிறது. மேப்பலூர் பகவதி வழியாக திருடன் ஸ்ரீதேவிக்கு அளித்த வரம் என்பது மற்றொரு வாசிப்பு. ஸ்ரீதேவி நிமிர்ந்து கோயிலை புனரமைத்து பகவதியை மீண்டும் ஆற்றல் கொண்டவளாக நிறுவுகிறாள். கடவுளுக்கு ஸ்ரீதேவி அளித்த வரம். அல்லது ஸ்ரீதேவி வழியாக கடவுளுக்கு திருடன் அளிக்கும் வரம். எது வரம்? எனும் கேள்விக்கு கதையின் இறுதிவரியை பதிலாக கொள்ளலாம். 'அந்த வீட்டிலிருந்து தடமே இல்லாமல் நீங்கும்போது அந்த துயர் நிறைந்த முகத்தில் உலர்ந்த உதடுகளில் அவன் ஒரு முத்தமிட்டிருந்தான்.'  அந்த முத்தம் தான் வரம். நல்லூழின், காலத்தின், கனிந்த கடவுளின் முத்தம். காளிதாசனின் நாவில் காளியின் விரல்நுனி தொடுகை நிகழ்ந்த மாயக்கணத்திற்கு இணையானது. கதையில் உறங்கும் இளவரசியை போல் நைந்த நிலையில் உறங்கும் ஸ்ரீதேவியின் உதடுகளில் பதிந்த முத்தமும் பொன்னொளியில் முழுதணிகோலத்தில் நள்ளிரவில் பகவதி ஸ்ரீதேவிக்கு காட்சியளிக்கும் தருணமும் வாழ்நாள் முழுக்க மீட்டுக்கொள்ளத்தக்க அக காட்சி. 

பஷீரின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம் பற்றி எம்.டி.வி குறிப்பிடுகிறார். வடநாட்டில் பணத்தை பறிகொடுத்த பஷீர் கொடுக்க பணமில்லாமல் உண்ட குற்றத்துக்காக அவமதிக்கப்படுகிறார். ஆடைகளை களையச்சொல்கிறார்கள். உண்டுக்கொண்டிருந்த மற்றொருவன் அவருக்காக பணம் கொடுக்கிறான். கொடுத்தவன் அவரை அழைத்துக்கொண்டு போய் இதில் எது உங்கள் பணப்பை என பார்த்து எடுத்துக்கொள்ளவும் என சொல்கிறான். ஜெ இந்த கதையில் பஷீரிய கனிவை நோக்கி செல்கிறார். எனினும் இந்த கதை திருடன் மனம் நெகிழ்ந்த மானுட நேய கதை மட்டும் இல்லை. பிற கதை ஆசிரியர்களின் நீட்சியாக வரும் ஜெயமோகன் வேறுபடுவது துலக்கமாக தெரிவது திருடனின் சித்தரிப்பில் தான். உண்மையில் யாரந்த திருடன்? கதை இப்படி தொடங்குகிறது 'திருடனுக்கு எல்லாம் தெரியும் ஏனென்றால் அவன் தன்னந்தனிமையானவன், மறைந்திருப்பவன். அவனை எவரும் பார்க்கமுடியாது. அவன் மிகக்கூர்மையாக பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு எவருடனும் உறவில்லை. அவனை அனைவரும் எவ்வகையிலோ நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.' கதை முழுக்க திருடனுக்கென ஒரு ஆளுமையோ தோற்றமோ துலங்கிவரவே இல்லை. நீல கைலியும் சாம்பல் சட்டையும் அணிந்து நிழலோடு நிழலாக கலந்து விடுபவனாக திகழ்கிறான். கதை முடிவில் கூட அவன் தடமேயில்லாமல் நீங்குபவன் என குறிப்பிடப்படுகிறான். எங்கும் நிறைந்த யாவற்றுக்கும் சாட்சியாய் உள்ள எதனுடனும் உறவுகொள்ளாத ஒன்று நம் மரபில் உண்டு. கண்ணன் கரியவன், கள்ளன். இந்த வரிசையிலேயோ வருக்கை கதையில் கண்ணனின் சாயல் கொண்ட கள்வன் வருகிறான். வேதாந்தத்தில் திருடன் முக்கியமான உருவகம். அருகே புதையல் உண்டு என அறிந்த திருடனின் விழிப்புடன் வேதாந்தி திகழ வேண்டும் என சொல்லப்படுவதுண்டு. இந்த கதைக்குள் அல்லது பொதுவாக இந்த கதைகளுக்குள் ஊடுபாவாக கிடக்கும் வேதாந்த மெய்யியல் நோக்கு கதையை ஆழங்களுக்கு கொண்டு செல்கிறது. 


Monday, December 21, 2020

பேய்ச்சி தடை



நண்பரும் மலேசிய எழுத்தாளருமான ம. நவீனின் 'பேய்ச்சி' நாவல் மலேசியாவில் அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டுள்ளது. தமிழர்களை இழிவு படுத்துகிறது, ஆபாசமாக உள்ளது, கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துகிறது என மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. கடந்த ஆண்டு நாவல் வெளிவந்த முதல் நன்கு கவனம் பெற்று வருகிறது. என் வாசிப்பின் எல்லையில் நின்று உறுதியாக சொல்ல முடியும் 'பேய்ச்சி; கடந்த ஆண்டு வெளிவந்த சிறந்த நாவல்களில் ஒன்று, மலேசிய இலக்கியத்தில் வெளி வந்த முன்னோடி ஆக்கம்.  நவீனுடன் அரண் செய் யூ ட்யூப் ஊடகத்திற்காக ஒரு நேர்காணல் செய்தேன். 




நாவல் தடை செய்யப்பட்டது வருத்ததிற்குரிய விஷயம். அதுவும் இதற்கு காரணமாக இருந்தவர் மலேசியாவில் இருக்கும் இன்னொரு எழுத்தாளர். நோக்கம்- நவீன் விமர்சன ரீதியாக நிராகரிக்கிறார் என்பதே. பசவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ஹெச். எஸ். சிவப்பிரகாஷின் மகாசைத்ரா நாடகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. லிங்காயத்துகளில் ஒரு சாரார் ஒரு மடாதிபதி தலைமையில் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்நிகழ்வை விஷ்ணுபுர விழாவில் நினைவுகூர்ந்தவர் மடாதிபதியின் முன் இழுத்து செல்லப்பட்டபோதும் தனக்கு அவர்கள் மீது வருத்தமில்லை என்றார். அவர்களின் நம்பிக்கைக்கு முரணாக இருக்கிறது என்பதற்கு எழுத்தாளர் பொறுப்பேற்க வேண்டும் என்றார். பெருமாள் முருகன் விஷத்தில் மாதொருபாகனின் சில பகுதிகள் வாட்சப் வழி பொது சமூகத்தின் பார்வைக்கு பரவியது. நாவலும் பகிரப்பட்டது‌. இந்த இரு விவகாரங்களில் உள்ள ஒற்றுமை என்பது நவீன இலக்கிய வாசிப்பு பயிற்சியில்லாத ஒரு சிலரிடம் தற்செயலாக புனைவு எதிர்பட்டு அது பெரும் விளைவை ஏற்படுத்தியது. சாம்ராஜின் ஒரு கவிதை சிங்கப்பூர் தமிழ்முரசில் வெளிவந்தபோது பல கண்டனங்கள் எழுந்தன. ஜெயமோகனின் தொப்பி திலகம் விகடனில் விவாதிக்கப்பட்டு சர்ச்சையாக்கப்பட்டது. ஒருவகையில் அந்த சர்ச்சைக்கு நான் நன்றியுடையவனாவேன். யார்ரா இந்த ஜெயமோகன் எம்ஜியார் சிவாஜியவே நக்கல் செய்றான் என்றே அவரை தேடி வாசிக்கத்தொடங்கினேன்.  சிற்றிதழ் சூழலில் நவீன இலக்கியம் குழுஉக்குறி போல் ஒரு சாராரிடம் உரையாடிக்கொண்டிருந்தது. சமூக ஊடகம் ஊடகத்தை மக்கள்மயப்படுத்தியபின் வெவ்வேறு விசைகளாக தனித்து இயங்கிக்கொண்டிருந்த எழுத்துப்போக்குகள் தெறித்து ஒன்று கலக்கின்றன. நவீன இலக்கியத்தின் பரப்பு அதிகரித்தபோது இயல்பாக அதன் சிக்கல்களும் அதிகரித்தன. இணைய பக்கத்தில் எழுதப்பட்ட ஒரு பகடியை பொதுவெளியில் நவீன இலக்கிய போக்குக்கு பழக்கப்படாத வாசகரின் முன் நிறுத்துவதன் வழியாக எழுத்தாளரை சிறுமை செய்வது அல்லது கணக்கை நேர்செய்வது என்பதை விகடன் தொப்பி திலகம் வழியாக தொடங்கிவைத்தது. விகடனில் இருந்தவர்களுக்கு வாசிப்பு பரிச்சயம் உண்டு. இலக்கியம் செயல்படுவது எப்படி என்பதும் தெரியும். அந்த செயல் நிச்சயம் உள்நோக்கம் கொண்டதுதான். நாஞ்சில்நாடனின் புத்தக கண்காட்சி உரையை அம்பேத்கர் எதிர்ப்பாக திரித்த தமிழ் தி இந்து கட்டுரையும் இந்தவகைதான். ஆனால் ஒருவகையில் இந்த செயல்பாடு தவிர்க்கமுடியாதது. கூட்டுச்சமூகத்தின் இறுக்கங்கள் புனிதங்கள் தயக்கங்கள் மீது இருக்கும் பற்று குறையும். தொட்டா சிணுங்கித்தனம் குறையும். சமூகமாக நாம் அகமுதிர்வுகொள்ள இது ஒரு வாய்ப்பு. மலேசியாவில் மதியழகன் பேய்ச்சிக்கு செய்ததும் இதேதான். ஆபாசம் என்றும் சாதியவசை என்றும் பொதுவெளியில் ஒன்றை சுட்டிக்காட்டி நவீனின் மீது அந்த வெறுப்பை திருப்பப்பார்க்கிறார். பண்பாட்டு தொடர்ச்சி கொண்ட சிதறிய சமூகமாக இருக்கும் புலம்பெயர் சமூகம் தம்மை ஒருங்கிணைத்துக்கொள்ள இதை ஒரு வாய்ப்பாக காணும். எத்தனை சுமாராக எழுதினாலும் கூட மதியழகனும் ஒரு எழுத்தாளர்தான் அவர் செய்தது அவருக்கு எதிராக திரும்புவதற்கு வெகுகாலம் ஆகாது. கும்பலின் ஆற்றலை தனிமனிதனாக இருக்கும் எழுத்தாளர் மீது ஏவிவிட்டு அவரை வழிக்கு கொண்டுவரும் முயற்சி. ஆனால் ஏவிவிடுபவர்களுக்கு கும்பலின் ஆற்றல் தெரியாது. அது அவர்கள் கட்டுக்குள் இருப்பதில்லை. சிங்கப்பூரிலும் இலக்கிய விமர்சனத்தை எதிர்கொள்ள இயலாமல் அரசின் பக்கம் நின்று எழுத்தாளரை வழிக்கு கொண்டுவரும் உத்தி பின்பற்றப்படுகிறது. இலக்கியம் என்பதே தன்னளவில் கலகம்தான். அரசின் போஷாக்கில் அதன் கரங்களை எதிர்நோக்குவதுவரை அது குறித்த அச்சமும் பாதுகாப்பின்மையும் நிலவும். அதை மீறி ஆக்கப்பூர்வ எதிர்சக்தியாக கலையும் இலக்கியமும் நிலைகொள்ளும்போதே ஒரு மண்ணில் இலக்கியம் பெருகும். அரசியல் சரிநிலைகளுக்காகவும் அதிகார காழ்ப்புக்காகவும் கலை பலியிடப்பட்டால் இழப்பு அந்த சமூகத்திற்கே. கலையும் இலக்கியமும் அரிசியும் பருப்பையும் போல் மக்களின் வாழ்வை செழுமைப்படுத்தாது ஆனால் ஏன் ஒருவன் அரிசியையும் பருப்பையும் விளைவிக்க வேண்டும் எனும் அடிப்படை கேள்விக்கு விடையளிக்கும். விளைபொருள் கொண்டு கலையை மதிப்பிடமுடியாது. கலையின் இன்மையைக்கொண்டே அதன் பயன்மதிப்பை உய்த்துணர இயலும். ஆர்வெல்லின் 1984 ல் நாவல் இயந்திரங்களை கற்பனை செய்திருப்பார். கலையின்மை எந்தமாதிரியான உலகை உருவாக்கும் என்பதற்கான கொடிய கற்பனை.  'பேய்ச்சி' நாவலை அதன் முதல் வரைவிலிருந்து இறுதி வரைவுவரை மூன்றுமுறை வாசித்திருக்கிறேன். என் வாசிப்பின் எல்லையிலிருந்துகொண்டு சொல்கிறேன் மலேசிய இலக்கியத்தில் மிகச்சிறந்த நாவல்களில் ஒன்று. கடந்த ஆண்டு வந்த தமிழ் நாவல்களில் பேய்ச்சி மிக முக்கியமான ஆக்கம். புலம்பெயரும் முதல் தலைமுறை தொடங்கி அங்கே நிலைகொண்டு மக்கள் தங்களது தெய்வங்களையும் நட்டு வளர்த்து வேர் பிடித்து தழைக்கும் பெரும்சித்திரத்தை நாவல் காட்டுகிறது. வரலாற்று ரீதியாக ரப்பரிலிருந்து செம்பனைக்கு மலேசியா மாறும் காலகட்டத்தை சித்தரிக்கிறது. ஆக்கும் அன்னை அழிக்கும் அன்னை எனும் தொன்மையான தாய்தெய்வ உருவகத்தை வளர்த்தெடுக்கிறது. சாமான்ய தமிழர்கள் குறித்து மிகுந்த பரிவுடனும் நேசத்துடனும் எழுதப்பட்ட ஆக்கம். நாஞ்சில் நாடன் ஒரு நேர்காணலில் சொல்கிறார் என்று சாலையில் செல்லும் ஒருவன் பாலியல் தொழிலாளி மகனே என்று திட்டுகிறானோ அன்று நானும் கதையில் எழுதுகிறேன் அதுவரை ஒரு கதைமாந்தர் தேவடியா மகனே என்றுதான் திட்டும். மக்களின் புழங்குமொழியை புனைவுக்கு பயன்படுத்துவது இயல்பானது. எல்லா இலக்கியங்களையும் குழுந்தைகளை முன்வைத்து சிந்திக்க வேண்டியதில்லை. கிளர்ச்சியூட்டும் விதமாக காமத்தை எழுதுகிறார் என்பதை இலக்கிய விமர்சனமாக சொல்லலாம். அது கவனத்தை தக்கவைப்பதற்கான ஒரு உத்தி, வாசகரை இன்புறச்செய்ய ஏமாற்ற கைக்கொள்ளும் முறை போன்ற விமர்சனங்கள் ஒரு படைப்பின் மீது வைக்கப்படலாம். ஆனால் அப்படி எழுதவேக்கூடாது என சொல்வதற்கில்லை. பேய்ச்சியை பொறுத்தவரை சின்னிக்கும் மணியத்திற்கும் இடையிலான உறவு அதில் சின்னி சித்தரிக்கப்பட்டிருக்கும் விதம் கதைக்கு தகுந்தது. அதை உணர்வுப்பூர்வமாக சித்தரித்துள்ளார் நவீன். அந்த சித்தரிப்பை மிகை என ஒருவர் வாசிப்பின் ஊடாக சுட்டிக் காட்ட இடமுண்டு. ஒன்றை ஆபாசம் என சொல்வதில் சொல்லும் நம் மனதின் ஆபாசமே வெளிப்படுகிறது. 

நவீன் இதை துணிவுடன் எதிர்கொள்கிறார். இந்த தருணத்தில் நண்பராகவும் சகபடைப்பாளியாகவும் அவருடன் இருக்கிறேன். இந்த சர்ச்சைகளுக்கு அப்பால் பேய்ச்சி மலேசிய இலக்கிய வரலாறில் முக்கியமான முன்நகர்வு என்பது உணர்ந்துக்கொள்ளப்படும். https://youtu.be/KkRylkdA4q8

Tuesday, November 3, 2020

நீலகண்டம் குறித்து ஜெயமோகன்

நீலகண்டம் வாங்க 

(வல்லினம் இதழில் வெளியான கட்டுரைகள் குறித்து விரிவான குறிப்புகளை எழுதியுள்ளார். அனோஜன் எழுதிய கட்டுரைக்கு சுட்டி அளித்துவிட்டு நாவல் மீதான பார்வையையும் இணைத்து அளித்துள்ளார். நன்றி ஜெ)

 சுனீல் கிருஷ்னனின் நீலகண்டம் நாவலைப்பற்றி அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதியிருக்கிறார். நாம் அன்பென நினைப்பது எப்போதுமெ மூன்று வகையானது. நம்மை நாம் நிகழ்த்திக்கொள்ளும் களமாக நாம் உருவாக்கிக்கொள்ளும் சில உறவுகளை, உணர்வுநிலைகளை அன்பு என எண்ணிக்கொள்கிறோம். குடும்பம், குழந்தைகள், உறவுகள் மீதான அன்பு அத்தகையதே. அந்த அன்பு நமக்கு ஏன் தேவைப்படுகிறது எனும்போது ஒருவகை சமூகஏற்பு, ஒருவகை தன்னிறைவு ஆகியவற்றுக்ககாவே என்று நாமே அறிவோம்


அதற்கப்பால் இருவகை அன்புநிலைகள் உள்ளன. உயிரியல் சார்ந்த உணர்வு என எழும் அன்பு. பெண்ணுக்கு எக்குழந்தைமேலும் எழும் அன்பு ஓர் உதாரணம். சகமானுடனின் மேல் நமக்கு உருவாவது இன்னொரு உதாரணம். மூன்றாவது அன்பு ஓர் உயர்விழுமியமாக, ஓர் அறமாக நாம் உருவாக்கிக்கொள்ளும் அன்பு.நாம் எப்போதுமே முதல் இருவகை அன்பை மூன்றாம் வகை அன்பென ‘தூய்மைப்படுத்திக்கொள்ள’ ‘உன்னதப்படுத்திக்கொள்ள’ முயல்கிறோம். ஒரு சாதாரணமான காதலில்கூட அதை தெய்வீகக்காதலாக ஆக்கிக்கொள்கிறோம்


நீலகண்டம் இந்த அன்புகளுக்கு இடையேயான ஊசலாட்டங்களைச் சொல்லும் நாவல். ஏன் இதில் தொன்மமும் புராணமும் ஊடுருவுகின்றன என்றால் அவைதான் அன்பு என்னும் விழுமியத்தை ஆழுள்ளத்தில் நிலைநிறுத்துபவை. நடைமுறையில் அன்பு ஒவ்வொரு கணமும் தன்னலத்தால், சமூகத்தடைகளால், சூழ்நோக்குகளின் அழுத்தத்தல திரிபடைந்துகொண்டே இருக்கிறது. நீலகண்டம் அந்த இரு எல்லைகளை திறம்பட அருகருகே வைத்து ஒர் அகவிவாதத்தை வாசகனின் உள்ளத்தில் எழுப்பும் ஆக்கம்.

நீலகண்டம் - பிரியத்தின் திரிபு- அனோஜன்

(வல்லினம் இணைய இதழில் நீலகண்டம் குறித்து அனோஜன் எழுதியுள்ள கட்டுரை)

நீலகண்டம் வாங்க 



இந்திய நவீன மனதில் இன விருத்தி என்பதற்கான இடம் தொல் மரபிலிருந்து அதிகம் விலகிச் செல்லவில்லை. மனதளவில் அதற்கான இறுக்கம் அதே மரபான தன்மையுடன் இருக்கிறது. சந்ததி விருத்தியின் ஒரு கண்ணி அறுந்துவிடும்போது ஏற்படும் சங்கடமானது, வாழ்கையின் பொருளியல், பாதுகாப்பு என்பவற்றோடு நிறைவான வாழ்க்கை உணர்வு எல்லாவற்றையும் நெருக்கடி கொள்ளச் செய்கிறது.


நவீன வாழ்க்கையில் குழந்தைப் பேற்றுக்கான ஏகப்பட்ட மருத்துவத் தீர்வுகள் இருந்தாலும் அதற்கு அப்பாலும் மீறித் தீர்க்க முடியாத, புரிந்துகொள்ள முடியாத பிரச்சினைகளாக அந்தச் சிக்கல் பல்வேறு புறநிலை, அகநிலைக் காரணங்களால் பின்னிப்பிணைந்து இருக்கின்றது.


சுனீல் கிருஷ்ணன் எழுதிய ‘நீலகண்டம்’ நாவல் குழந்தையின்மை என்ற பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதை மட்டும் பேசும் நாவல் அல்ல, குழந்தை வளர்ப்பு, ஆட்டிச குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிக்கல், பெற்றோரின் மனநிலை மாற்றங்கள், அறச் சிக்கல் என்று பல்வேறு இழைகளில் விரிகிறது.


பொதுவாகக் குழந்தையின்மை பிரச்சினைகளைப் பேசக்கூடிய நாவல்கள், சிறுகதைகள் யதார்த்த தளத்தில் மட்டுமே அதற்கான தீர்வை நோக்கிச் சென்று இருக்கின்றன. நீலகண்டம் யதார்த்த கதை சொல்லல் முறையிலிருந்து மீறியிருக்கின்றது. பிராமண சமூகத்தைச் சேர்ந்த ரம்யாவும், பிராமண சமூகத்தைச் சேராத செந்திலும் காதலித்து பெற்றோர் விருப்பத்துக்கு விரோதமாக மணம் முடிக்கின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறை அளிக்கும், பொருளாதாரச் சூழலில் நகர்ப்பகுதியில் சௌகரியமாக வசிக்கின்றனர். ரம்யா தன்னைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தனது அம்மாவினால் அதிகம் தொந்தரவுக்கு உள்ளாகிறார். செந்தில் அலுவலக வேலையில் மேலும் மேலும் மூழ்குகின்றார். தள்ளிப் போய்க்கொண்டு இருக்கும் குழந்தையின்மையும் அதைத் தொடர்ந்து வரும் சிக்கல்களும்,  முடிச்சுகளும் பல்வேறு முரண்களுடன் நகர்கின்றன.


நீலகண்டம் யதார்த்தத்தில் மட்டுமன்றி மரபில் குழந்தையின்மை என்பதற்கான தீர்வு, அதன் தேவை என்ன என்பதை ஆராயவும் செய்கிறது. யதார்த்தையும் தொன்மத்தையும் இணைக்கும் கதை சொல்லல் முறை இக்களத்தின் பல்வேறு சிக்கல்களை பல பரிமாணங்களில் அணுகி ஆராய வாய்ப்பளிக்கிறது.


நவீன நாவல்கள் அது எடுத்துக்கொள்ளும் களம், அதை வெளிப்படுத்தும் வடிவம் சார்ந்து அதன் முன்நகர்தல் நிகழ்கிறது. ஆனால், அவை சேதன முறையின்றி அசேதன முறையில் எழுதப்பட்டிருக்கும்போது ‘செய்யப்பட்ட’ போலி நாவலாகி விடுகின்றது. நீலகண்டம் நாவலில் பயன்பட்டிருக்கும் உத்திகள் கதையின் போக்கில் அதற்கான தேவையினால் உருவாகி இருப்பதால் அசேதன முறையில் இருக்கும் போலித்தன்மை உருக்கொள்ளாமல், அதுவே இலக்கியத் தன்மையையும் அளித்து விடுகின்றது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் வர்ஷினியின் அக உலகம் சித்தரிக்கப்படும்போதும் நிமோ, இசட் பாத்திர உத்தி, வர்ஷினிக்கும் சாகருக்கும் இடையிலான உறவைச் சொல்லும்போது கடைப்பிடிக்கப்படும் நீல யானையின் ஒப்புதல் வாக்குமூலம் போன்றவற்றை அவற்றிற்கான நல்ல உதாரணங்களாகச் சொல்லலாம்.


வர்ஷினியின் அகவுலகத்தை யதார்த்த கதைச் சித்தரிப்புடன் சொல்லும்போது எதிர்ப்படும் எல்லைகளை நுட்பமாக இன்னுமொரு உத்தியுடன் ஆசிரியர் கடக்கிறார். அது கார்ட்டூன் பாத்திரங்களான கடலாமை, பேக் மேன், நிமோ, டோரா, மிஸ்டர் இசட், நிஞ்சாஸ், சோட்டா பீம் எனத் தோன்றும் வண்ணமயமான உலகம். அந்த உலகம் கொடுக்கும் நெகிழ்வு அழுத்தமற்ற ஓர் உலகைக் கதைக்குள் நிகழ்த்துகிறது. வர்ஷினியின் அக உலகம், யதார்த்தமான உலகத்துடன் இணையும் புள்ளி இயல்பாக ஆர்ப்பாட்டமின்றி இருக்கின்றது. மருத்துவமனையில் ரொட்டித்துண்டுகளை எறும்புகளுக்குப் போடும் வர்ஷினியை எரிச்சலுடன் பார்க்கிறான் செந்தில்; ஆனால், செயல் நிகழும் நேரத்தில்தான் அவளது உணர்வுகள் இன்னுமொரு உலகமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு கண்ணிகளைப் பொருத்தும், அல்லது கலைக்கும் இடத்தில் ஆசிரியர் விழிப்புடன் செயல்பட்டுள்ளார்.


பிள்ளை வளர்ப்பில் இருக்கக்கூடிய அணுகுமுறைகள், தலைமுறை வித்தியாசங்களினால் வேறுபட்டு இருந்தாலும், பெற்றோரின் அன்பு திரிபடையும் இடங்கள் அதிக வித்தியாசங்களை அடைந்ததில்லை என்றே தோன்றுகின்றது. அன்பையும், அன்பின்மையையும் அமுதம், விஷம் என்ற குறியீட்டு அர்த்ததுடன் நாவலின் மையத்தை விசாரித்துப் பார்க்கிறது. இங்கு தீர்ப்புகள் இல்லாமல் விசாரணையே முதன்மைப் பணியாக இருப்பதால் கிளைக்கதைகள் நாட்டார்  கதைகள், தொன்மக் கதைகள், புராணக் கதைகள், குழந்தைக் கதைகள் என்று பல்வேறு தளங்களுக்குள் நகர்ந்து மீண்டும் மையம் எழுப்பும் ஆதர கேள்வியுடன் பிணைந்து நிற்கின்றன. ரம்யா ரயில் ஓட்டுனரின் மகளைச் சந்திக்கும் தருணத்திலும், செந்தில் சீராளனைச் சந்திக்கும் தருணத்திலும் வரும் உரையாடல்கள் நேரடியாக இவற்றை எழுப்புகின்றன.


திருவிளையாடல் புராணத்தில் வரும் சீராளன் அவனது தாய், தந்தையினரின் மிதமிஞ்சிய சிவபக்தியால் பலியிடப்படுகின்றான். பின்னர் அது இறைவனின் திருவிளையாடல் என்று அறியப்பட்டு, சீராளன் சிரஞ்சீவியாக எழுந்தருள்கிறான். உணர்ச்சிமயமான இக்கதையில் சில கேள்விகளை இணைத்துக் கேட்கும்போது, அங்கே கட்டப்பட்ட உணர்வுகள் தலைகீழாக்கம் பெறுகின்றன. பெற்றோர் தங்களது பக்தியைக் கட்ட என்னுயிரைக் கொடுப்பது நியாயமா?, என்கிற கேள்வி தொந்தரவு செய்யும் கேள்வியாகவே காலம் முழுக்க அவனுடன் இருக்கிறது.


பெற்றோரின் அன்பு திரிபடைந்து விஷமாவதை அறிந்து துயருரும் சீராளனின் கதை ஒரு திசை என்றால், அதன் மறுதிசையில் தன்னைக் காக்க ஐந்து குழந்தைகளை வேறுவழியின்றி இறப்புக்குள் வீழ்த்திய ரயில் ஓட்டுனரின் கதையாக இருக்கிறது. இரண்டிலும் அன்பின் திரிபு இருக்கிறது. இரண்டின் பொதுவான அம்சம் விரிந்து சென்று சங்கமிக்கும் இடம் சுயநலமா என்ற ஐயம் எழுகிறது. அதற்கு பிரியத்தின், பக்தியின் அதீதம் என்று அர்த்தம் கற்பிக்கலாம். ஆனால், அதன் கடின ஓட்டை விலக்கிப் பார்க்கும்போது தெரிவது என்ன என்பதின் அலைச்சல் நாவல் முழுக்க விரவியிருக்கிறது. அது எழுப்பும் பெற்றோர் X பிள்ளைகள் உறவின் கேள்விகள்தான் வெவ்வேறு திசையில் ஒரே கேள்வியை ஆராய்கிறது. அமுது எங்கு நஞ்சாகிறது? அது ஏன்?


தத்தெடுத்தலில் இருக்கக்கூடிய தேர்வு எனும் தற்செயல் உருவாக்கியிருக்கக்கூடியNL_large_1536241621 விளைவுதான் இத்தனை அலைக்கழிவுக்கும் காரணமோ என்றும் யோசிக்க வைக்கின்றது. அது செந்திலின் தெரிவாகத்தான் இருக்கிறது; ரம்யாவின் தெரிவாக இருந்திருந்தால் வேறுமாதிரியாக இருந்திருக்கலாம். மருத்துவ பரிசோதனையில் தன்னுடைய ஆணுறுப்பு தீண்டப்படும்போது செந்தில் அடையும் அவமானங்கள், அவனது உள்ளகச் சிக்கலுடன் தெளிவாகச் சொல்லப்படுகிறது. அவனது பூர்விக வீட்டில் பரவியிருந்த கரையான் என்ற படிமம் பல்வேறு வாசிப்புகளை அளிக்கக்கூடியது. தலைமுறையாக நீளும் பாவத்தின் அல்லது தீமையின் தொடர்ச்சிதானா கரையான் அளிக்கும் தொல்லைகள்? அவன் வீட்டிலிருந்து முற்றாக நீங்கிய பின்னர் அவனது பூர்வீக வீடு இயல்பாகிறது. ஆனால், அவனது தேர்வுகளில் நஞ்சு இருக்கிறதா என்ன? செந்திலின் தேர்வில் இருக்கக்கூடிய பிறழ்வை இப்படியான வாசிப்பில் கொண்டு செல்லவும் இயல்கிறது. செந்திலின் நண்பனான ஹரியுடனான உரையாடல்கள் ஒருவகையில் தனது நிழலுடன், இதுவரை தான் எடுத்த முடிவுகளின் எதிர் பக்கத்துடன் உரையாடுவது போன்றதாக இருக்கிறது. குடும்ப அமைப்பு, காதல், பிள்ளைப்பேறு  என்பவற்றின் மீதான அனார்கிஸ்ட் அணுகுமுறையாக அவனது வாதங்கள் இருக்கின்றன. ஹரி தனது தந்தையை இழந்த பின்னரும் அதே உறுதியுடன் இருப்பது செந்திலை வியப்புக்குள் வீழ்த்தத்தான் செய்கிறது.


ரம்யாவின் அகவுலகம் அவளது நாட்குறிப்பின் ஊடாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் அம்மாவின் புறக்கணிப்பு பற்றிய துயரம் பதிவுகளாக இருக்கின்றன. ரம்யாவிடம் ஒரு கணத்தில் எங்கேயோ வளர்ந்த நஞ்சு வர்ஷினியை புறக்கணிக்க வைக்கின்றது. அதேபோல இன்னுமொரு நஞ்சுதான் ரம்யாவின் அம்மாவிடம் இருந்து புறக்கணிப்பாக வெளிப்படுகிறது. அகங்காரத்தின் நஞ்சு நீங்கிச் செல்லும் இடம் ஒரு நாடகீயத் தருணமாக இருக்கின்றது. புற்றுநோயும், இறப்பின் மீதான பயமும் அந்த நச்சை அம்மாவிடம் இருந்து விலக்குகிறது. அந்த நச்சு நீங்கிய பின்னர் அங்கு இருப்பது வெற்றிடமா? அல்லது பிரியமா? பிரியமும், அன்பும் கடையப்படும் உறவின் நுணுக்கங்களை மன நகர்வின் ஊடாக ஆசிரியரால் திறம்படவே எழுத முடிந்திருக்கிறது. ரம்யாவின் அம்மாவுடனான உறவிலிருக்கும் நச்சு நீங்கிய பின்னர், வர்ஷினி மீது ரம்யாவுக்கு பரவும் விஷம் ஏன்? பின்னர் எதற்கு இந்தக் குழந்தை வேண்டும் என்ற வேண்டுதல்கள் அலைக்கழிவுகள் எல்லாம்? இந்த இடத்தில் ஹரியின் பதில்கள் இன்னுமொரு விசாரணையை நிகழ்த்துகின்றது.


நாகம்மையின் தொல் கதை இருவேறு வடிவங்களில் செந்திலுக்கு சொல்லப்படுகின்றன. ஒன்றில் அண்ணாமலை அடையும் சந்தேகத்தின் விளைவால் நிகழும் துர்மரணமாக இருக்கிறது; மற்றையது இறைவனே திருப்பி தன்னிடம் அழைத்துச் செல்லும் துயரம் நிறைந்த இறப்பாக ஆகிறது. நாகம்மையின் சலங்கைச் சத்தமே இன்னும் எஞ்சி இருக்கிறது. நாகம்மையின் கதையும், வர்ஷியின் கதையும் இணையும் கண்ணி பச்சை நிற ஆடையில் இருக்கும் பிரியம் சார்ந்து குறிப்பாக உணர்த்தப்படுகிறது. அது நாவலுக்கு ஒரு அந்தரங்கத்தன்மையை அளித்து, பகுத்தறிவு நவீன மனம் புரிந்துகொள்ள முடியாத இழைகளை ஊகத்தில் விடுகிறது.


சீராளன், வர்ஷினி, நாகம்மை, வரலக்‌ஷ்மி என்று நீளும் சிறார்களின் பாத்திரங்களில் இருக்கும் ஒற்றுமை அவர்கள் பேசுவதற்கு தாமதம் ஆகிறது. அக மொழி உருவாகி இருக்கின்றனவே தவிர புறவயமாக பேச மறுப்பவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பிறழ்வுதான் பெற்றோர்கள் தம் மீது வஞ்சத்தைக் காட்டக் காரணமா என்ற கேள்வி சீராளன் மூலம் எழுப்பபடவும் செய்கிறது. இவர்களது உடனடி எதிர்வினை மௌனம்தான். ஆனால், அந்த மௌனம் சலனமாக உருக்கொண்டு பின்னர் அதீத விசையுடன் கேள்விகளாக விரிகின்றன.


ஒவ்வொரு கதைகளும் தன்னளவில் படிமங்களை உள்ளே கொண்டிருக்கின்றன. அவற்றை மற்றைய கதைகளுடன் பொருத்திப் பார்க்க பெரியதொரு படிமம் வளர்கிறது. அது இறுதி அத்தியாயத்தில் தேவர்கள், அசுரர்கள் கடையும் அமுதத்துடன் விரித்துச் சொல்லப்படுகிறது. ஒன்றின் மீது ஒன்றாக ஒட்டிவைத்த ஸ்டிக்கர் போல உரிக்க உரிக்க கதைகள் நீண்டு கொண்டிருக்கின்றன. பக்க அளவையும் தாண்டி இந்த நாவலுக்குள் ஏற்பட்டிருக்கும் ஆழத்துக்கும் விரிவுக்கும் காரணம் புத்திசாலித்தனமான கதை சொல்லும் உத்திகள் என்றே எனது வாசிப்பில் சொல்ல முடிகிறது.


தேவர், அசுரர் சித்தரிப்பு குறியீடாக ரம்யாவையும், செந்திலையும் சுட்டுகிறது. அவர்கள் தங்களுக்குள் மாறி மாறி உணர்ந்துகொள்ளும் பிரியமும், விஷமும் வர்ஷினியின் உலகத்தோடு உணர்த்தப்படுகிறது. வெளியே வந்த விஷம் தொண்டையில் முள்ளாக இருக்கவே போகிறது. சமயத்தில் அதன் துருத்தல்கள் ஒரு வடுவாக இருக்கப் போகிறது.


ஒன்று அமுதாகவும் மற்றொன்று நஞ்சாகவும் ஆவது எப்போது? என்ற வேதாளத்தின் கேள்விக்கு, வேதாளமே விக்கிரமனுக்கு விடையும் சொல்கிறது. எதுவும் நஞ்சாகவும் அமுதாகவும் ஆகலாம் இவ்வுலகம் நீலகண்டர்களால் ஆனது. அவர்கள் தங்கள் பிரியம் திரிந்து நஞ்சாவதை எப்போதும் காண்பவர்கள். தங்கள் பிரியத்தின், அதன் திரிபின் விளைவுகளை ஏற்பவர்கள். அதன் பொருட்டு பிரியத்தின் முள்ளை எப்போதும் தொண்டையில் பொதித்தவர்கள். அது ஒரு இனிய நினைவுகூரலாக, அன்பின் முத்தமாகத் தொண்டையில் எப்போதும் நிரடும். ஏறக்குறைய ஆசிரியர் இந்த நாவலில் கண்டடைந்த தரிசனமாக நாவலைப் படித்து முடித்தபோது அடைந்த உணர்வோடு இதனைச் சொல்லத் தோன்றுகிறது.

வரலாற்றின் கைவிளக்கு – ‘சுளுந்தீ’ நாவலை முன்வைத்து.

(வல்லினம் இதழில் சுளுந்தீ குறித்து வெளியான கட்டுரை

ஜெயமோகன் இந்த கட்டுரை குறித்தும், நாவல் குறித்தும் சிறு குறிப்பை அவருடைய இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். முத்துநாகு எழுதிய சுளுந்தீ நாவலைப் பற்றி சுனீல் கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நாவலுக்கும் ஒரு புனைவுப்பாவனை உண்டு. சுளுந்தீ தன்னை ஒரு மாற்றுவரலாறாக, நாட்டாரியல் ஆவணமாக உருவகித்துக்கொண்டு பேசுகிறது. அவ்வகையில் முன்னோடியான படைப்பு கி.ராஜநாராயணனின் கோபல்லகிராமம். அவ்வரிசையில் அதிகமாக இங்கே எழுதப்படவில்லை.



கிராமிய யதார்த்தவாதத்திற்கும் இதற்கும் வேறுபாடுண்டு. கிராமத்தை ஒரு முற்போக்கு யதார்த்தவாத நோக்கில் பார்த்து எழுதப்பட்ட நாவல்களில் முன்னோடியானது ஆர்.ஷண்முகசுந்தரத்தின் ‘சட்டிசுட்டது’. அதன்பின் ஹெப்ஸிபா ஜேசுதாசனின்  ‘புத்தம்வீடு‘ முதல் தோப்பில் முகமதுமீரானின் ‘ஒரு கடலோரக்கிராமத்தின் கதை’, ஜோ டி குரூஸின் ‘ஆழிசூழ் உலகு’ வரை பல நாவல்கள் உள்ளன. அவற்றிலுள்ள வரலாறு ஏற்கனவே சொல்லப்பட்ட வரலாற்றின் நீட்சி. மாறாக கி.ராவில் தொடங்கும் நாட்டாரியல் யதார்த்தவாதம் இன்னொரு வரலாற்றைச் சொல்ல முற்படுகிறது. இணைவரலாறு, மாற்றுவரலாறு


பக்கம் பக்கமாக அறியப்படாத செய்திகளுடன் ஓர் ஆவணத்தொகையெனவே அமைக்கப்பட்டுள்ள முத்துநாகுவின் சுளுந்தீ அவ்வகையில் கி.ரா உருவாக்கிய அழகியலில் ஒரு முன்னோக்கிய நகர்வு. இச்செய்திகளில் பெரும்பாலானவை நாட்டாரியலில் இருந்து பெறப்பட்டவை. நாட்டாரியலில் செய்திகள் தொன்மத்துக்கும் நம்பிக்கைக்கும் தரவுகளுக்கும் நடுவே ஊசலாடுபவை. நாட்டுமருத்துவம், மந்திரவாதம், குலக்கதைகள், சிறுதெய்வக்கதைகள் என அவை விரிந்து கிடக்கின்றன. சுளுந்தீ அவற்றை ஒட்டுமொத்தமாக தொகுத்து ஓர் இணைவரலாற்றுப் படலமாக நெய்கிறது. நன்றி ஜெ.)

----

வரலாற்றுப் புனைவு’ என்பது வரலாறும் புனைவும் முயங்கி உருகொள்வது. வரலாற்றுப் புனைவு இரு விதங்களில் செயல்பட முடியும். அறியப்பட்ட வரலாற்றின் இடைவெளிகளை நிரப்ப முடியும். வரலாற்று நாயகர்களின் செயலுக்குப் பின் இயங்கும் விசைகள் மற்றும் மனவோட்டத்தை அடையாளப்படுத்த முடியும். 2018 ஆம் ஆண்டு இறுதியில் ஆதி பதிப்பக வெளியீடாக வெளிவந்து, பல்வேறு விருதுகளைப் பெற்று, வாசகப்பரப்பிலும் நன்கு கவனம் பெற்ற இரா. முத்துநாகுவின் ‘சுளுந்தீ’ வரலாற்று இடைவெளிகளைச் சாமானியரின் கோணத்திலிருந்து அணுகுகிறது. இதுவரை தமிழகத்தில் பதிவாகாத வரலாற்றுக் கோணங்களை இன வரைவியல் நோக்கில் ஆவணப்படுத்துகிறது.


நாவலின் முதன்மை பாத்திரங்கள் என அரண்மனை நாவிதன் எனும் நிலையிலிருந்து மாபண்டுவனாக நிலைபெறும் இராமப் பண்டுவன் மற்றும் அவனுடைய மகனான செங்குளத்து மாடனையும் சொல்லலாம். நாவல் இன்று கொடைக்கானல் என்றறியப்படும் ‘பன்றி மலையை’ உள்ளடக்கிய கன்னிவாடியைக் களமாகக் கொண்டுள்ளது. திண்டுக்கல்லை சுற்றிய குன்னுவரயான்கோட்டை போன்ற இடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. திருச்சி, மதுரை, செஞ்சி, ராமேஸ்வரம் என தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு நாவல் விரிந்து செல்கிறது. நாயக்கர் ஆட்சியில் சொக்கநாத நாயக்கர் (1662-1682) மதுரை மன்னராக இருந்த காலகட்டத்தில் நாவல் நிகழ்கிறது. நாவலில் வரும் பாதிரியார் ஆல்வரஸ், பன்றிமலை சித்தர், கொன்றிமாயன்- வங்காரகன், அரண்மனையார் சின்ன கதிரியப்ப நாயக்கர் ஆகியோர் வரலாற்றுப் பாத்திரங்கள் என்று குறிப்பிடும் எழுத்தாளர் தரவுகள் வழியாக அவர்களைத் தேடி ஆவணப் படுத்தியுள்ளார். முத்துநாகு அடிப்படையில் ஒரு பத்திரிகையாளரும் கூட. ‘தமிழகத்தில் நிலவும் பெரும்பாலான மரபுகள், அரசியல், சமூகப் பழக்கங்கள், பாதிப்புகள் யாரால் எப்போது வந்தன? என்பதற்கான பதிலைப் பன்நெடுங்காலமாக மக்களிடம் தேடினேன். எனக்குக் கிடைத்த தரவுகளே ‘சுளுந்தீ’ என்ற பெயரில் வரலாற்றுக் கதைக்களத்தைத் தந்தது.’ என நாவலின் மைய பேசுபொருள் குறித்து எழுதுகிறார் முத்துநாகு. மேற்சொன்ன கேள்விகளை நாவித சமூகத்தின் வரலாற்றுடன் இணைத்து ஒரு சித்திரத்தை உருவாக்குகிறார். தரவுகளை வெளிப்படுத்த கதைகளத்தைத் தேர்ந்ததாக முத்துநாகு குறிப்பிடுவதை கவனிக்க வேண்டும்.


நாவிதர்களின் சமூக நிலை எப்படியிருந்தது? அவர்களின் நிலை ஏன் கீழே இறங்கியது? எனும் கேள்வியைப் புனைவினூடாக எழுப்புகிறார். நாவிதர்களிடம் இருந்த பண்டுவம் எனும் மரபு மருத்துவம் அவர்களை விட்டுச் சென்றது குறித்தான கேள்வியையும் எதிர்கொள்கிறார். தனிப்பட்ட முறையில் ஆயுர்வேத மருத்துவனாக இந்த வரலாற்றுக் கோணம் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆயுர்வேதத்தில் இருபெரும் நூல்களான சரக சம்ஹிதையும் சுசுருத சம்ஹித்தையும் முறையே பொது மருத்துவத்தையும் அறுவை சிகிச்சையையும் பேசுகின்றன. ஆனால் காலபோக்கில் அறுவை சிகிச்சை ஆயுர்வேதத்தில் முக்கியத்துவம் இழந்தது. இதற்கு வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களைக் குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக மயக்க மருத்துவம் இல்லாததால் அறுவை சிகிச்சை பெரும் வலி ஏற்படுத்தும் அனுபவமாக இருந்தது. பவுத்த சமண மதங்களின் அகிம்சை கோட்பாட்டிற்கு எதிரானது என்பது ஒன்று. உடலைத் தொடுவது தீண்டுவது சார்ந்து உருவாகி வந்த இறுக்கங்கள் மற்றொன்று. பண்டுவம் என சொல்லப்படும் ரச சாத்திர மருத்துவம் மெல்ல மைய மருத்துவ போக்குடன் பனிரெண்டாம் – பதிமூன்றாம் நூற்றாண்டு வாக்கில் இணைந்து கொண்டது. திப்பு சுல்தானுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த ஆங்கிலேயர்களுக்காக மாட்டு வண்டி ஓட்டிக்கொண்டிருந்த கொவ்சாஜி என்பவருக்குப் போரில் மூக்கு அறுபட்டது. அதை ஒரு குயவர் சீர் செய்தது பிளாஸ்டிக் சர்ஜரியின் தொடக்கம் என கருதப்படுகிறது. இரு ஆங்கிலேய மருத்துவர்கள் விரிவாக இந்த reconstructive rhinoplasty முறையை ஆவணப்படுத்தி உள்ளார்கள். இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, சுமார் ஆயிரத்தி ஐநூறு வருடங்களுக்கு முன் சுசுருத சம்ஹிதையில் குறிப்பிடப்பட்டுள்ள அதே முறை பதினெட்டாம் நூற்றாண்டிலும் பின்பற்றப்பட்டுள்ளது என்பதே. வழக்கொழிந்த செல்வாக்கிழந்த மருத்துவமுறை என நம்பப்பட்ட ஒன்று மக்கள் மருத்துவத்தில் ஒரு பகுதியாகப் புழங்கி வந்துள்ளது என்பதற்கான மிக முக்கியமான சாட்சியம். கத்தி பயன்பாடு கொண்ட நாவித சமூகமும் இயல்பாக அறுவை சிகிச்சையில் நிபுணர்களாகத் திகழ்ந்துள்ளார்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் பொது வழக்கமாகவே இருந்து வந்துள்ளது. தமிழக பின்புலத்தில், இத்தனை செல்வாக்குடன் மருத்துவத்தைப் பேணி வந்தவர்களிடமிருந்து அறிவு தொடர்ச்சி இற்றுப்போனதற்கு அரசியல் அதிகார காரணிகளை முத்து நாகு சுட்டுகிறார்.


சுளுந்தீ எந்த அளவிற்கு வரலாற்றுப் பிரதியோ அதேயளவிற்கு ஒரு அரசியல் பிரதியும் கூட. ஒடுக்குமுறை அரசிற்கு எதிராக மக்களின் விதவிதமான கிளர்ச்சிகளை ஆவணப் படுத்துகிறது. பஞ்சத்தில் வரி கொடுக்க இயலாமல் குலவிலக்கம் செய்துகொண்டு ஆடு மாடுகளை ‘நாசமா போ’ என அவிழ்த்துவிட்டு இரவோடு இரவாக, வாழ்ந்த வீட்டையும் மண்ணையும் விட்டுச் செல்கிறார்கள் மக்கள். வழி தப்பாமல் இருக்க ஊணாங்கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு ‘தாம்பில புனைந்த மாடுபோல காட்டுக்குள்ள புகுந்து’ செல்கிறார்கள். இப்படி வெளியேறிச் செல்லும் திரள் அரண்மனை மீதுள்ள எதிர்ப்பைக் காட்டும்விதமாகக் கண்மாயில் இருக்கும் சொற்ப நீரில் கச்சமுட்டிக் காய், எட்டிக்காய், அரளி விதையை அரைச்சு கலக்கி நஞ்சாக்குகிறார்கள். அதை குடிப்பவர்களுக்கு வயிற்ரோட்டம், வாந்தி பேதி ஏற்பட்டுப் பண்டுவம் இல்லாமல் பலரும் மடிகிறார்கள். மண்ணை நக்கி வெயிலில் அலைந்து திரிந்த ஆடு, மாடுகள் குளத்து நீரைக் குடித்துக் கழிச்சல் கண்டு மடிகின்றன. தரிசாக உள்ள நிலத்தில் நாய்க்கடுகு விதைத்துவிட்டுச் செல்கிறார்கள். மக்கள் திரளிடம் இயல்பாக இருந்த அரசின்மைவாத கூறுகளையும் மக்களை ஒடுக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும் விரிவாக ஆவணப் படுத்துகிறது. பண்டுவ மருந்துகள் வெடி மருந்துகளாகவும் பயன்படுத்தப்பட்டன. அவற்றைக் கொண்டு ஆளும் அரசை அச்சுறுத்த முடியும் என கருதியதால் அவற்றின் பயன்பாடு தடைசெய்யப்படுகிறது. கிளர்ச்சியாளர்களுக்குப் பண்டுவர்கள் வெடி மருந்தைக் கொடுத்து உதவி இருப்பார்கள் என சந்தேகிக்கப்பட்டதால் அவர்கள் கொலை செய்யப்பட்டனர், குலநீக்கம் செய்யப்பட்டனர்.


வெவ்வேறு பகுதிகளில் பண்டுவர்களைக் குடிப்படையினர் அடையாளம் காட்டுகிறார்கள். மன்னரின் படை ஊர் மந்தையில் அவர்களைக் கட்டி  புளியம் விளாரால் அடித்து, கொடுவாளால் கழுத்து அறுத்து வீசியெறிகிறார்கள். ‘பழனியில் மட்டும் இருபத்தி மூணு பண்டுவன், மூணு சித்தர்கள் பொணம் தெருவில் கெடக்குது. பொணத்த பார்த்த சனங்கள் அரண்மன, பெரியதனம், நாட்டாம, குடிப்படைகளுக்கு இந்திரியம் வேல செய்ய மட்டும் மருந்து கொடுபானங்க இவனுங்க. குடியானவன் கையறுத்தக் காயத்துக்குப் பழைய சுண்ணாம்பு கேட்டாக்கூட தரமாட்டானுங்க. சாகட்டும் இந்த நாய்க.’ என்று மக்கள் பேசிக்கொண்டார்கள் என எழுதுகிறார். பண்டுவர்களுக்கும் மக்களுக்குமிடையே இருந்த உறவு- விலகல் சார்ந்து ஒரு முக்கியமான மாற்றுப்பார்வையும் கூட. மரபாகக் கற்ற பண்டுவத்தை நாவிதர்கள் கைவிட நேர்ந்தது. உயிரச்சத்தின் காரணமாகப் பண்டுவ ஏடுகளைப் பிராமணர்களிடம் ஒப்படைக்க நேர்ந்தது. அவர்களிடமிருந்து பண்டுவம் ‘வைத்தியமாக’ ஆனது என்பதே முத்துநாகு அளிக்கும் சித்திரம். ஆனால் முன்னுரையில் குறிப்பிடப்படும் இம்மாற்றம் நாவலில் ஒரேயொரு வரியில் வாய்மொழியாகக் கடந்து செல்லப்படுகிறது.


அயோத்திதாசரும் பறையர்களிடமிருந்து பிராமணர்களுக்கு மருத்துவம் சென்றது எனும் கூற்றை முன்மொழிகிறார். இது ஒரு வரலாற்றுக் கோணம். சமஸ்கிருத ரச சாத்திர நூல்கள் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்தே நமக்குக் கிடைக்கின்றன என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. விஜய நகரத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு இடம்பெயரும் குடிகளைக் குடியமர்த்த பூர்வக்குடிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டு குலநீக்கம் செய்யப்படுகிறார்கள். குடும்ப பகை, சொத்து மீதான ஆசை என பல காரணங்களுக்காகக் குடிநீக்கம் செய்யப்படுகிறார்கள். குடிகளுக்கு இடையேயான உட்பூசல் அரசிற்கு எதிரான கிளர்ச்சியை மட்டுப்படுத்தும் என்பதே அரசின் கணக்கு. அப்படிச் செய்யப்பட்டவர்களுடன் இருந்த கொண்டு – கொடுத்த உறவையும் நுட்பமாகப் பதிவாக்குகிறார். இப்படி விலகியவர்கள் அரசிற்கு எதிராகக் கலகம் புரிய முயல்கின்றனர். ஆல்வரஸ் பாதிரியார் பாத்திரம் வழியாக அரசிற்கு எதிரான கொந்தளிப்பு மடைமாற்றப்படுகிறது. அரசிற்கும் மத நிறுவனத்திற்கும் இடையே அதிகாரத்தை நிலைநிறுத்த எழுதப்படாத ஒப்பந்தம் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். இயற்கையின் ஆற்றல்கள் மீது அரசு தன் ஆளுகையைச்  செலுத்துவதன் மூலம் அதிகாரத்தைத் தக்கவைக்கிறது. கலகத்தைத் தடுக்க நெருப்புப் பயன்பாட்டை மொத்தமாக அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. தீகொளுத்தி என்றொரு பதவி உருவாக்கப் படுகிறது. இதே அரசுதான் பஞ்சத்தில் பாசனமின்றி தவிக்கும் மக்களுக்குக் கிணற்றுநீர் பாசனத்தை அறிமுகப்படுத்துகிறது. பாளையங்களுக்கு இடையேயான உறவும் பூசலும், அதிகாரப் போட்டியும், அவை எதிர்கொள்ளப்பட்டு வெல்லப்பட்ட அரசியல் சதிராட்டமும், அதில் நாவிதர்களின் பங்களிப்பும், அதனால் ஏற்பட்ட விளைவும் நாவலில் பேசப்படுகிறது. இந்த அரசியல் ஆட்டங்களும் அதிகாரப் போட்டியும் சாமானியர்கள் மீது ஏற்படுத்திய நெருக்கடிகளை மாடனின் பாத்திரம் வழியாக சித்தரிக்கிறது.


தந்தை இராமப் பண்டுவன் பெரும் திறமை இருந்தும் அரசிடம் பணிவும் பக்தியும் கொண்டவனாக இருக்கிறான். அரண்மனையாரின் கமுக்கங்களைப் பேணுகிறான். அவர்களுக்காகப் பகைகளை முடித்து வைக்கிறான். பலமுறை தளபதி அவனை அழிக்க முயற்சித்தும் அரண்மனையாரின் நம்பிக்கைக்குரியவனாக வாழ்கிறான். மரணத்திற்குப் பிறகு அரண்மனையாரே அவனுக்கு இறுதி மரியாதை செலுத்துகிறார். மகன் மாடன் ராமனுக்கு நேரெதிரானவன். துடுக்கும் மீறலும் நிறைந்தவன். அவனுடைய மனப்பாங்கை எடுத்துக்காட்ட முத்துநாகு சித்தரிக்கும் ஒரேயொரு காட்சியைச் சுட்டலாம். எந்த ஊரிலும் எவரும் அவனிடம் சவரம் செய்துகொள்ள முன்வராதபோது ஒரேயொரு கிழவருக்குக் குதிரையில் அமர்ந்தபடியே சிரைத்து விடுகிறான். மாடனின் பாத்திரம் உண்மையில் ‘ஒரு கோபக்கார இளைஞனின்’ வார்ப்புடையது. முந்தைய தலைமுறையிலிருந்து விலகி கலகம் ஏற்படுத்த முனைவது. சித்தருக்குக் காணிக்கையாக அளிக்கப்படும் அரபுக் குதிரையை அவருடைய சீடனான ராமனுக்கு அளித்துவிடுகிறார். ராமன் ஊருக்குள் வரும்போது நேராக அரண்மனையாரை சந்தித்துக் குதிரையை  அரண்மனைக்கு அளிக்க முன்வருகிறான். அவனுடைய பண்பைப் பாராட்டி குதிரையை அவனே வைத்திருக்க அனுமதிக்கிறார். ராமன் நாவிதன் நிலையிலிருந்து பண்டுவனாக சித்தரின் வாரிசாகத் தன்னிடத்தை நிறுவிக் கொள்கிறான். மனைவி வல்லத்தாரையை குன்னுவராயன்கோட்டைக்கு அழைத்துச் செல்லும்போது அவளைக் குதிரையில் அழைத்துச் செல்கிறான். குடிப்படைகள், அரண்மனையார் யாரும் இல்லாதபோதே வல்லத்தாரை குதிரையில் ஏறுகிறாள். ராமன் குதிரையில் வரும்போது உறுத்தாதது அல்லது சன்னமான உறுத்தலாக இருந்தது மாடன் குதிரையில் வரும்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்துகிறது. மாடனைப் படைவீரனாக்க வேண்டும் எனும் ராமனின் கனவு பொய்த்துப் போகிறது. அவனுடைய பிறப்பு விதித்தப் பணியை சமூகம் மீறுவதற்கு அனுமதிக்கவில்லை. இணக்கமும் மதிப்பும் எந்த எல்லைவரை எனும் கேள்வியை இந்தப் பாத்திர வார்ப்புகள் எழுப்புகின்றன. கலகம் ஏற்படுத்தாத வரையில், எதையும் பெரிதாகக் குலைக்காத வரையில் விதிவிலக்குகளை சமூகம் அனுமதிக்கிறது.


ராமன் – மாடன் பாத்திர வார்ப்பு மிகுந்த சமகாலத்தன்மை உடையது. தலித் அடையாளத்துடன் பொருந்திப் போகக் கூடியதும் கூட. ‘மரங்க விளைஞ்ச பின்னாலதான் வைரம் பாயும். ஆனா சுளுந்தீ மரம் மட்டும் பூமிய விட்டு முளைச்சு வெளியேறி தழைக்கும் போதே வைரமா வெளியேறும். சுளுந்தீ மரம் கெண்டைக் காலளவுக்கு மேல் பெருக்காது. மலை அடிவாரமும் உச்சியும் இல்லாத இடைப்பட்ட இடத்தில், காக்காபின் தாது மண் வாகுள்ள நிலத்தில மட்டும் முளைக்கும். வருசக் கணக்கா மழையில்லேன்னாலும் கழுமரம் போல உசுர உள்ளே வச்சுக்கிட்டே இருந்து மழ பெஞ்ச ரெண்டாம் நாள் தழைக்கும்.’ எனும் விவரணை ‘சுளுந்தீ’ என்பதையே ஒடுக்கப்பட்ட மக்களின் போரியல்பின்  குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. குலநீக்கம் செய்யப்பட மக்களுடன் தனது வருடக் கூலியைப் பகிர்ந்துகொள்ளும் மாடன் மருதமுத்து ஆசாரியால் சுளுந்தீ என்றே சுட்டப்படுகிறான்.


பன்றிமலை சித்தன், குலகுரு, மருதமுத்து ஆசாரி ஆகியோர் நாவலின் முக்கியமான கதை மாந்தர்கள். மருதமுத்து ஆசாரி ஒரு புரட்சியாளனாக மக்களைத் திரட்டுகிறான். இலக்கற்ற கோபம் கொண்டிருந்த மாடனை அரசிற்கு எதிரான ஆயுதமாகப் பட்டைத் தீட்டுகிறான். குலகுரு மக்களிடம் நெருக்கமான உறவைப் பேணுபவன் சைவ மடாதிபதி. மக்களின் சிக்கல்களை மன்னரிடமும் அரண்மனையாரிடமும் கொண்டு செல்பவர். ஆனால் அவருக்கு உரிய இடம் மறுக்கப்படுகிறது. மக்களின் சிக்கலை மன்னரிடம் பேசவரும் குலகுருவை அவமதிக்கும்விதமாக இனி குலகுரு சீடர்களைக் கொண்டு பள்ளிகள் நடத்தக்கூடாது, மக்களை சந்திக்கக் கூடாது என அரசாணை இடுகிறார் மன்னர். ‘மன்னருக்குக் குலகுரு ஆசிகள் எப்போதும் உண்டு.’ என்று சொல்லிக் கிளம்பியபடி, ‘வௌவால் வாழும் மான்களில் நூலாம்படைகளும் பூச்சிகளும் எங்களுடன் சேர்ந்து வாழட்டும்.’ என அறம்பாடிச் செல்கிறார். பன்றிமலை சித்தர் அற்புதங்களை நிகழ்த்தக் கூடியவர். தமிழ், தெலுங்கு, பாரசீக மொழி என எல்லாவற்றிலும் பேசக் கூடியவர். பெரும்பாலும் மவுனத்திலும் தவத்திலும் மூழ்குபவர். வெளியே நிகழும் அரசியல் கொந்தளிப்புகளுக்கு எவ்விதத்திலும் உளம் அளிக்காதவர். அவரே கூட திண்டாடும் குடிநீக்கம் செய்யப்பட மக்களுக்கு மனமுவந்து வழிகாட்டுகிறார். சித்தர் ராமனை வாரிசாகத் தேர்வதும், மக்கள் புடைசூழ மறைந்து போவதும் நாவலின் உயிர்ப்பான பகுதிகள்.


தளபதியின் அந்தரங்க ரகசியத்தை அறிந்து கொண்டவன் எனும் முறையில் ராமன் மீது அவருக்குத் தொடக்கம் முதலே வெறுப்பு. தளபதி ஒரு சதிகாரராக சித்தரிக்கப்படுகிறார். இறுதியில் அவருடைய வலைப்பின்னல் அவரையே சாய்க்கிறது. பூர்வகுடிகள் வந்தேறிகள் என இனரீதியான ஒரு கண்ணோட்டத்தை நாவலின் முன்னுரையில் முத்துநாகு கோடிட்டுக் காட்டினாலும் நாவலின் அரண்மனையார் கதிரியப்ப நாயக்கர், விருப்பாச்சியார் போன்றோரின் சித்தரிப்புகள் முழுக்க கருப்பு வெளுப்பாக இல்லாமல், கலவையாக உயிர்ப்புடன் திகழ்வதால் நாவல் முழு இனவாத பிரதியாகவில்லை. நாவலில் குறிப்பிடத்தக்க பெண் பாத்திரங்கள் என வல்லத்தாரை மற்றும் அனந்தவல்லியைச் சொல்லலாம். ஆனால் அவர்களுக்கு நாவலில் பெரிய பங்கு ஏதுமில்லை. வழமையான வார்ப்புருவில் உருவாகி வந்தவர்கள்.


நவீன இலக்கியத்தின் முதன்மையான விதிகளில் ஒன்று ‘சொல்லாதே காட்டு’ என்பதே. முத்துநாகு இந்த விதியைத் தலைக்கீழாக்கம் செய்திருக்கிறார். ‘காட்டாதே சொல்’ என்பதது. அவரே முன்னுரையில் குறிப்பிடுவது போல் தரவுகளுக்கான வெளிப்பாடாகத்தான் கதைகளத்தைத் தேர்ந்திருக்கிறார்.  இதனால் நாவலின் செய்திறன் சார்ந்து சில குறைகளைக் கண்டுகொள்ள முடிகிறது.  இரண்டு மூன்று உதாரணங்களைச் சொல்லலாம். ‘பொன்மான்துரையில  அம்மன் கோயில்ல எரிந்துகொண்டிருந்த அக்கினி குண்டத்த குடிப்படை தண்ணிய ஊத்தி அணைச்சாங்களாம். இதப் பார்த்த அம்மன் கொண்டாடி மயங்கி விழுந்து அங்கனையே உசுரு பிரிஞ்சுதாம். ஊரிலிருக்கிற அத்தன பேருக்கும் சாமிவந்து ஆடி ஊரே தலைவிரிக் கோலமா கிடந்துச்சாம்.’ இது ஒரு மிகத்தீவிரமான தருணம் ஆனால் இந்த ஒருபத்தியில் சொல்லிக் கடக்கிறார். மற்றொரு இடத்தில், குள்ளப்ப கவுண்டன் சதுர்வேதி மங்கலத்தில் செய்யும் அட்டூழியங்களுக்கு எதிர்வினையாக வயோதிகர் சங்கரப் பிள்ளை ‘நாக்க புடுங்க கை அகல துணியும், நாண்டுக்கிட்டுச் சாக நாலுமுழ கயிறும் வச்சு பிழைங்கடா’ என சபித்துவிட்டுக் கட்டியிருந்த வேட்டியால் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகிறார். இதுவும் ஒருபத்தியில் ஒற்றர் கூற்றாகச் சொல்லப்படும் தீவிரமான தருணம்தான்.  மூன்றாவதாக ஓர் உதாரணம், அரண்மனை தீக்கொளுத்தி கதிரி வாடனுக்கும் அரண்மனை ஏவலாளி எத்துலாவுலுக்கும் இருக்கும் தனிப்பட்ட பகையின் காரணமாகக் கதிரி வாடன் மகனை வீரப்பூர் படைகளிடம் பிடித்துக் கொடுத்துக் கழுகுகளுக்கு இரையாக்குகிறான். இவையும், இவைத்தவிர இக்கட்டுரையில் சுட்டப்படும் அத்தனை தீவிரமான நிகழ்வுகளும் எவரோ ஒருவரின் கூற்றாகச் சொல்லப்படுகின்றன.


நாவல் முழுக்க பல்வேறு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. வரலாற்றுத் தகவல்கள், வெவ்வேறு இனங்களின் வாழ்க்கை முறை பதிவுகள், சொல் ஆராய்ச்சிகள் என கதை மாந்தர்கள் தகவல்களை அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள். ஏகாலி துணி வெளுக்க வெள்ளாவியில் அடுக்கும் முறை, சாணார்களின் பிணக்கு, குல நீக்கத்திற்கான காரணிகள், குலத்தில் சேர்த்துக்கொள்ள செய்யப்படும் சடங்குகள், கோவில் காளை எப்படி உருவாகியிருக்கும் என பலவும் உரையாடல் வழியாகச் சொல்லப்படுகின்றன. முனி, பிசாசு போன்றவற்றுக்கு அவர் அளிக்கும் விளக்கம், பூசாரி எந்தக் குலத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பொருத்தே வேண்டுதல்கள் இருக்கும். பாம்பை விரட்ட வயல் ஓரத்தில் தூவப்படும் சாம்பல் போன்ற அசலான அவதானிப்புகள் கண்டடைதல்கள் தெறிப்புகளாக ஆங்காங்கு விரவிக் கிடக்கின்றன. இயற்கை சார்ந்த அவதானிப்புகள் வழியாகப் பருவ மாற்றங்கள் அடையாளம் காணப்படுகின்றன. கூவக சாத்திரம் பகுதியை உதாரணமாகக் காட்டலாம்.    குறைந்த பட்சம் ஒரு மருத்துவ தகவலேனும் இல்லாத பக்கமே நாவலில் இல்லை எனும் அளவிற்கு ஏரளமான மருத்துவத் தகவல்கள், மருந்து செய்முறைகள் கூறப்பட்டுள்ளன. நாவலில் மிக சுவாரசியமான தகவல் என்பது கொடைக்கானலில் புகழ்பெற்ற சுற்றுலாதளமான தற்கொலை முனை எனும் சூசைட் பாயின்ட் குறித்து முத்துநாகு விவரித்திருக்கும் பகுதிதான். ஓர் அமானுட கிளர்ச்சியை அளித்தது. அரண்மனை நீதி கிடைக்காதவர்கள் இந்தக் கரட்டில் ஏறி மனச் சுமையை வாய்விட்டுச் சொல்லி ஆறுதல் பெறுவதாக நினைத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் இடம் என்கிறார். கரட்டில் ஏறி சுழிக் காத்தால கால் தடுமாறி கீழே விழுந்து உயிரை விட்டவர்கள் எழுப்பும் பெருமூச்சுதான் இந்தச் சுழிக்காற்று என மக்கள் நம்பினர். முறை மீறிய உறவுகளில் ஈடுபட்டவர்கள், குலவிலக்கான பெண்கள், உடன்கட்டை  ஏற மறுக்கும் அரண்மனை பெண்கள் போன்றோரை உறுமிக் கரட்டிற்கு இழுத்துப் போய் விட்டுவிடுவது அரண்மனைத் தண்டனை. இந்தக் குன்றில் ஏறினால் மரித்தவர்களின் ஆவிகள் ஒன்று கூடி காற்றுடன் சேர்ந்து கரட்டில் எரியவர்களை அழைத்துச் சென்றுவிடும்.  ‘கரட்டில் பொண்ணுக ஏறினா கரட்டின் கீழுள்ள பட்டாளம்மன் கோயில் பூசாரி உறுமிய எடுத்து அடிப்பான். உறுமிச் சத்தம் பன்றிமலையில் சிலாரடித்துக் கரட்டில் ஏறிய பொண்ணுக அடிவயிற்றில ரெட்டிப்பாக்கி பித்தம் கலங்கும். கதி கலங்கியவங்க மூளைக்குள்ள உறுமிச் சத்தத்த தவிர வேறேதும் கேட்காது. கரட்டில ஏறினவங்க தடுமாறி விழுகுற வரைக்கும் உறுமிய அடிச்சிக்கிட்டே இருக்க அரண்மனை உத்தரவு இருக்கு. கரட்டில ஏறின சில உசுருகள் வேகமாக விழுந்து தொலையாது. இதனால நாலைஞ்சு உறுமிக சேந்து அடிச்சு உசுர எடுத்துருவாங்க.’ என ஒரு சன்னதத் தருணத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.


பல்வேறு கிளை கதைகள் நாவலின் ஊடாகச் சொல்லப்படுகின்றன. இந்தக் கதைநாகு தொகையிலிருந்து நாம் சில கதைகளைத் தனித்து விரித்து சிறுகதைகளாகவோ நாவலாகவோ ஆக்க முடியும். சமண முனிவர்கள் மருத்துவம் பரப்பிய கதையும் அவர்களின் நினைவாகக் காது வளர்க்கும் வழக்கம் உருவானதையும் சொல்கிறார், முத்துரங்கன் மாட்டு பஞ்சாயத்து கதை, பட்டிவீரன் கதை, ஆண் கல் பெண் கல் கதை நல்லதொரு காதல் கதையென சொல்லலாம், சடாமுனி கட்டகாமன் – மண்டுகருப்பி கதை தன்னளவில் தீவிரமானது. பெர்சிய அடிமையை குதிரையை அடக்கியதால் கட்டிக்கொண்ட விருப்பாச்சி அரண்மனையார் கதை, குப்பு அய்யர் வளர்க்கும் பட்டாபி காளை மஞ்சுவிரட்டில் அணையப்பட்டதும் அதன் கொம்பை வெட்டி முறித்து அவிழ்த்து விடுகிற கதை, ராவுத்த படைவீரன் கபார்கான் பெண் கேட்டு வரும்போது அரண்மனையிடம் கலந்துகொண்டு சொல்வதாகச் சொல்லிவிட்டு மருதையன் இரவோடு இரவாக மந்தையைக் காலி செய்துக்கொண்டு வேறிடத்திற்குச் செல்வது, கொன்றிமாயனை சடாமுனி ஆசிர்வதித்த கதை, வங்காரகன் கிடாவிடம் முட்டி முட்டி தலையை வலுப்படுத்திய கதை என பல கதைகளும் தன்னளவில் சுவாரசியமானவை.


இந்நாவலின் தனித்தன்மையும் எல்லையும் இதுவே. சித்தரிப்புகளும் தகவல்களும் கதையின் மையத்திற்கு வலு சேர்ப்பவையாக, குறியீட்டு ரீதியாகத் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பது நவீன இலக்கிய வாசகர் / விமர்சகரின் எதிர்பார்ப்பு. இராமப் பண்டுவன் ஒரு பெரும் மருத்துவன், அவனுடைய ஆசிரியர் பன்றி மலைச் சித்தர் மருத்துவ மேதை. ஓரிரு தருணங்களில் இது நிறுவப்பட்டாலே போதும், ஆனால் நாவலில் அவர்களைச் சந்திக்கவரும் அத்தனை பேருக்கும் விதவிதமான உடல் உபாதைகள் உள்ளன. அத்தனை பேருக்கும் மருத்துவம் சொல்கிறார்கள். மருத்துவ தகவல் இல்லாத ஒரு பக்கம் கூட நாவலில் இல்லை என சொல்லிவிடலாம். புனைவின் முதன்மை பணி ஆவணப்படுத்துதல் அல்ல. அது ஒரு கூடுதல் பலம். இந்தத் தகவல் குவிப்பு என்ன செய்கிறது? வாசகரைப் புனைவு ஊடுருவி அந்தரங்கமாகத் தொந்தரவு செய்து, தன்னை விசாரணைக்கு உட்படுத்த விடுவதில்லை. தகவல்களின் விந்தைத்தன்மையில் ஈடுபட்டுக் கொள்கிறது. கதை மாந்தர்களின் சித்தரிப்புகளிலும் துண்டுபடல்களை உணர முடிகிறது. மாடன் தன் தந்தையின் மரணம் ஒரு கொலை சதி என்பதை உணர்கிறான். மருதமுத்து ஆசாரி அவனை அரசிற்கு எதிராகத் திருப்புகிறார். ஆனால் அதன் பின்னரும் கூட அரண்மனையாரை நேரில் சந்தித்தால் எல்லாம் இயல்பாகிவிடும் என நம்புகிறான். சித்தர் குளித்து எழுந்து மறைந்த குளத்தில் ஊரார் முன் முங்கி எழுகிறான் ராமன். அரண்மனையார் அவனை மரியாதையுடன் கன்னிவாடிக்கு அழைக்கிறார். ஆனால் அதன் பின், முந்தைய தருணத்தில் அவன் அடைந்த உயரத்தை அடையவே இல்லை. சித்தர் அடங்கப்போகும் செய்தியை அரண்மனையாரிடம் சொல்ல மறந்துவிடுகிறான் மீண்டும் நினைவுக்குவந்து சொல்கிறான். மாடனுடன் மல்யுத்தம் செய்யத் தயார் என அறிவித்துக்கொண்டு கிளம்பிய சின்ன பூதன் முந்தைய நாள் இரவு புலியடித்து இறக்கிறான். தற்செயல்களும், விபத்துகளும் மறதியும் நிதர்சன வாழ்வில் முக்கியமானவற்றைத் தீர்மானிப்பது உண்மைதான். ஆனால் புனைவில் அவற்றின் பயன்பாடு ஒரு குறையாகவே கருதப்படும். மாடனைத்தவிர நாவலின் வேறு கதை மாந்தர்கள் மனதில் ஊன்றி வளரவில்லை. குலகுரு, ராமன், சித்தர், புலவர் என அனைவரும் ஒரே தொனியில் கதைகளைச் சொல்கிறார்கள்.


வரலாற்று நாவலின் மிக முக்கியமான சவால் என்பது அங்கு நாயகர்களையும் எதிரிகளையும் உருவாக்காமல் இருப்பது என்பதே. வரலாற்று நிகழ்வைத் தரப்புகளாக ஒருபோதும் சுருக்கி எளிமை படுத்திவிடக் கூடாது. நல்ல வரலாற்று எழுத்து என்பது நிகழ்வின் வெவ்வேறு சிடுக்குகளை, பிணைப்புகளை விரித்துக் காட்டும். வரலாறு குருதி சிந்தவைக்கும் கொடுவாளாகக் காலம்காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வரலாற்றுப் புனைவு பழைய காயங்களை நோண்டுவதற்கு, கணக்குத் தீர்ப்பதற்குப் பயன்படக் கூடாது. Historical fiction should never trivialize the event, but it should complicate the event. இதை ஒரு பொன்விதியாக வரலாற்றுப் புனைவில் போட்டுப் பார்க்கலாம். ஏற்கனவே இங்குள்ள வடுகர் தமிழர் ஆதிக்கம் சார்ந்த அரசியலுக்கு சில விவாதக் கருக்களை சுளுந்தீ அளிக்கிறது, முன்னுரையில் முத்துநாகு குறிப்பிடுவதும் அதைத்தான். எனினும் நாவலின் தரவுகளும் தகவல்களும், கதை மாந்தர்களின் மீதான கரிசனம் கூடிய சித்தரிப்புகளும்  சுளுந்தீயை காக்கிறது.


அம்பாரமாகக் குவியும் தகவல்கள் சில சுவாரசியமாகவும் உள்ளன. உதாரணமாக மரணச் சடங்கில் நாவிதர்களின் பங்களிப்புப் பற்றி சொல்லும் இடத்தைச் சொல்லலாம். வரலாற்றுப் புனைவில் வரலாற்று அம்சம் கூடுதலாகவும் புனைவம்சம் குறைவாகவும் உள்ளது. தகவல்களும் தரவுகளும் புனைவாக்கம் (fictionalizing the data) நிகழாமல் இருப்பதால் அரிய, புதிய நிகழ்வுகள் கூட மனதில் வலுப்பெற்று வளராமல் குன்றி விடுகின்றன. முத்துநாகு வரலாற்று ஆய்வாளராக, நாட்டாரியல் அறிஞராக மிளிரும் அளவிற்குப் புனைவாசிரியராக மிளிரவில்லை. ஆனால் அவருடைய புனைவாக்கத் திறன் இந்நாவலில் வெளிப்பட்ட இடங்கள் என சிலவற்றைச் சுட்டிக்காட்ட முடியும். அவை அவருடைய புனைவுத்திறன் சாத்தியத்தைப் பறைசாற்றுகின்றன. இந்த நாவலின் ஆகச்சிறந்த பகுதி என நான் கருதுவது, கன்னிவாடி எல்லையில் குலநீக்கம் அடைந்தவர்களை ராமேஸ்வரத்தில் இருந்து செஞ்சிக்கு மீட்டுச் செல்லும் பலராமனின் கதையைச் சொல்லலாம். அதிலும் திருக்கோஷ்டியூர் கோவிலில் முத்துநாகு சித்தரிக்கும் நிகழ்வின் உக்கிரம் அபாரக் காட்சி அனுபவத்தை அளிக்கிறது. மாடன்- வங்காரகன் யுத்தம், பன்றிமலை சித்தர் சமாதியில் அடங்குவது போன்றவையும் மிக நல்ல காட்சி அனுபவத்தை அளித்தன. ஐயமின்றி முத்துநாகு இந்த சித்தரிப்புகளில் புனைவெழுத்தாளராக மிளிர்கிறார். நாவலில் இத்தகைய தருணங்கள் அரிதாகவே உள்ளன என்பதையும் சேர்த்தே சொல்ல வேண்டி இருக்கிறது. இப்போது இந்தத் தருணங்கள் மனதில் எப்படி ஊடு புகுந்தன என யோசித்தால் இவை ‘சொல்லாதே காட்டு’ விதியை பின்பற்றியவை என்பதினால் எனக் கண்டுகொள்கிறேன்.


‘சுளுந்தீயை’ நவீன இலக்கிய அழகியல் நோக்கில் அணுகுவது சரியா என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டேன். இந்நாவல் மீதும் எழுப்பப்படும் விமர்சனங்கள் அந்த நோக்கிலிருந்தே எழுகின்றன. விரிந்து செல்ல வாய்ப்பிருக்கக்கூடிய பல இடங்கள் வெறுமே உரையாடலில் கடக்கப்படுகின்றன.  ஒரு உதாரணத்தைச் சொல்லலாம் என்றால் பண்டுவ ஏடுகளைப் பிராமணர்களிடம் ஒப்படைத்து உயிர் பிழைப்பது. ராமன்- மாடன் கதையை மைய சரடாக உருவகித்துக் கொள்வதால், அதனுடன் பிற பகுதிகள் இயைய வேண்டும் எனும் எதிர்பார்ப்பு எழுகிறது. அப்படி ஒரு மைய சரடை உருவகிக்காமல் சுளுந்தீயை மதிப்பிடவும் புரிந்துகொள்ளவும் வேறு அளவுகோலைப் பயன்படுத்த முடியுமா எனும் கேள்வியை எழுப்பிக் கொண்டேன். இந்நாவலை ‘நாட்டார் கலைகளஞ்சியத் தன்மை’ (encyclopedic) கொண்ட நாவல் என வகைப்படுத்தலாம். நாட்டார் வரலாற்றுக் கோணத்தில் தமிழில் எழுதப்பட்ட முன்னோடி நாவல் என கி.ராவின் கோபல்ல நாவல்களைக் குறிப்பிடலாம். பூமணி, கண்மணி குணசேகரன், சு. வேணுகோபால் உட்பட வெவ்வேறு நிலம் சார்ந்த எழுத்தாளர்கள் நாட்டார் கூறுகளைக் கதையில் கையாண்டுள்ளார்கள். அடிப்படையில் இவர்கள் நவீன இலக்கியவாதிகள்தான். கதைக்குத் தேவையான அளவு அதன் ஆழத்தை அதிகரிக்க நாட்டார் கூறுகளைப் பயன்படுத்தி உள்ளார்கள். பூமணியின் ‘அஞ்ஞாடி’ ஒரு புதிய உடைப்பை நிகழ்த்தியது. நாட்டார் நோக்கில் மகாபாரதத்தை அணுகிய ‘கொம்மை’ அதன் அடுத்தக்கட்ட பரிணாமம் எனச் சொல்லலாம். நவீன இலக்கிய அழகியலுக்கு ஒரு மாற்றாக நாட்டார் அழகியலை உருவாக்கும் முயற்சி. அவ்வரிசையில் முழுக்க முழுக்க நாட்டார் அழகியல் கூறுகள் கொண்ட வரலாற்று நாவல் என்பதே சுளுந்தீயின் முக்கியத்துவம். சடங்குகள், அதன் குறியீட்டு மற்றும் நடைமுறை பொருள், வாழ்க்கை முறை, வாய்மொழியில் உலவும் கிளை கதைகள், சொலவடைகள் போன்றவை நாட்டார் அழகியலின் கூறுகள் என சொல்லலாம். நாட்டார் அழகியலில் வாய்மொழி கதை சொல்லல் என்பது இன்றியமையாத கூறு. முரண்களும் சிதறல்களும் தொடர்ச்சியின்மையும் கூட அதன் பகுதியாகக் கொள்ளமுடியும். இயல்பாக சில பின்நவீனத்துவ கூறுகளையும் நாவல் அடைந்துள்ளது. இந்தக் கோணத்திலிருந்து அணுகும்போது சுளுந்தீ தான் தேர்ந்துகொண்ட பாணிக்கு நேர்மையான வெளிப்பாட்டு முறையைக் கொண்டுள்ளது. ஒரு புதிய உடைப்பை நிகழ்த்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். இதன் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பதை இனிதான் கவனிக்க வேண்டும். இவை அனைத்தையும் விட, விமர்சனங்களுக்கு அப்பால், வெகுமக்கள் வரலாறைச் சொல்லும் சுளுந்தீயின் ஆக முக்கியமான பங்களிப்பு என  வெகுமக்களின் நுண்ணறிவை ஆவணம் செய்ததைச் சொல்ல வேண்டும்.  சாமானிய மக்களிடம் புதைந்து கிடக்கும் அன்றாட வாழ்க்கை சார்ந்த நுண்ணறிவை சுளுந்தீ அளவிற்கு ஆர்வத்துடன் கொண்டாடிய வேறு நாவலைத் தமிழில் நான் அண்மையில் வாசிக்கவில்லை.

Sunday, October 25, 2020

இந்திய மருத்துவத்தின் அடுக்குகள்

(சொல்வனம் இதழில் வெளியான கட்டுரை) 

விடுதலைக்கு முன்பான இந்தியாவில், டெல்லியில் ஓர் பனிக்காலத்தில் அந்த ஆயுர்வேத வைத்தியரைக் காண பெருங்கூட்டம் விடிகாலையில் வரிசையில் நிற்கும் விந்தை ஆங்கிலேயர்களுக்கு விளங்கவில்லை. அவ்வைத்தியர் நாடி பிடித்து நோயறிவதில் பெரும் விற்பன்னர் என பெயர் பெற்றவர். அது எப்படி சாத்தியம் என வினவிக்கொண்ட அவர்கள், அவரை சோதிக்க முடிவு செய்தார்கள். எங்களிடம் ஒரு நோயாளி இருக்கிறார்,ஆனால் அவர் எவரையும் காண மாட்டார், அறையை விட்டு வெளியே வா மாட்டார், அவருடைய நோயை நீங்கள் கண்டறிய  வேண்டும் என்றார்கள். வைத்தியர் இச்சவாலை ஒப்புக்கொண்டார். மெல்லிய கம்பியை அந்நோயாளியின் மணிக்கட்டு நரம்பையொட்டி கட்டி மறுமுனையை என்னிடம் அளியுங்கள் என்றார். மூடிய வீட்டின் உள்ளறையில் இருந்து நீண்ட கம்பியை அனைவரும் பார்க்க வாயிலில் அமர்ந்துக்கொண்டு வைத்தியர் அக்கம்பியின் அதிர்வுகளின் ஊடாக நாடியை நோக்கினார். பெரும் கூட்டம் அவருடைய சொற்களுக்காக காத்திருந்தது. நாடியை நோக்கிவிட்டு, நமுட்டு சிரிப்புடன் ஒன்றுமில்லை மூன்று வேளை புல் கொடுங்கள், கஞ்சித்தண்ணி வையுங்கள், உங்கள் நோயாளி நலமாகவே உள்ளார் என்று கூறிவிட்டு எழுந்து சென்றார். மூடிய கதவுக்கு அப்பால் ஒரு பசுமாடு நின்றிருந்தது. ஆங்கிலேயர்கள் வெட்கி தலைகுனிந்தனர்.


பிரபல ஆயுர்வேத வைத்தியர் ப்ருஹஸ்பதி தேவ திரிகுணாஜி அவர்களைப் பற்றி ஒரு வாய்மொழிக்கதைதான் இது.


தற்காலத்தில் நவீன ஆயுர்வேதம் பல்வேறு பொதுப் போக்குகளை உள்ளிழுத்துக் கொண்டு மாற்றமடைந்து வருகிறது. புதிய தொழில்நுட்பங்கள் பல சவால்களை அளித்தாலும் அவற்றைச் சாதகமாக்கி கொள்ள முனைகிறது. மானுடவியல் ஆய்வுகள் மற்றும் சுய அவதானிப்புகளைக் கொண்டு தற்கால ஆயுர்வேதத்தின் நிலை மற்றும் அதன் வரலாற்று பரிணாமங்களை சற்றே ஆராய்வது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.


இந்திய மருத்துவம் என அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகள் என்று ஆயுர்வேதத்தையும் சித்த மருத்துவத்தையும் கூறலாம். இந்த கட்டுரையின் பேசுபொருள் ஆயுர்வேதத்தை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும் சித்த மருத்துவத்திற்கும் பொருந்தும். இன்றைய காலகட்டங்களில் மரபான ஆயுர்வேதம், நவீன ஆயுர்வேதம், வணிக ஆயுர்வேதம், தன்னார்வத் தேர்வாக பின்பற்றப்படும் வீட்டு உபயோக ஆயுர்வேதம் என பொதுவாக ஆயுர்வேதம் நான்கு தளங்களில் புழக்கத்தில் உள்ளன என கூறலாம் என்கிறார் மானசி திரோத்கர்.


இவை கறாரான வகைப்பாடுகள் எனச் சொல்ல முடியாது. மரபான வைத்தியர் நவீன நோயறியும் முறைகளை பயன்படுத்தலாம். நவீன ஆயுர்வேத மருத்துவர்களில் ஆயுர்வேத மருந்துகளை மட்டுமே பயன்படுத்தும் மருத்துவர்களும் உண்டு, நவீன மருந்துகள் மற்றும் ஆயுர்வேதம் எனக் கலந்து பயன்படுத்தும் மருத்துவர்களும் உண்டு, முறைப்படி ஆயுர்வேத மருத்துவக் கல்வித் தகுதி பெற்ற ஆயுர்வேத மருத்துவர்களில் முற்றிலும் நவீன மருத்துவ அமைப்பில் தம்மை கரைத்து கொள்பவர்களும் உண்டு. ஆயுர்வேதத்தை முற்றிலும் வணிகமாக அணுகும் நிறுவனங்கள்கூட தங்களுக்கென்று ஒரு மரபார்ந்த அடையாளத்தை முன்வைக்கவே முயலும்.


மரபு வைத்தியர்கள் பெரும்பாலும் குடும்ப பாரம்பரிய பின்னணி கொண்டவர்கள். முந்தைய தலைமுறை வைத்தியர்கள் பட்டப் படிப்பை அவசியம் என கருதவில்லை. உண்மையில் பட்டப்படிப்பின் மீது அவர்களுக்கு மரியாதையில்லை. ஏளனமாகவே அணுகினர். பெரும்பாலும் இவர்கள் தங்கள் தந்தையர் வழியாக மிக இளம் வயதிலேயே பயிற்றுவிக்கப்பட்டவர்கள். என் தாத்தா பதிமூன்று வயதிலிருந்து தனியாக மருத்துவம் பார்க்கத் துவங்கியதாகச் சொல்வார். மரபு மருத்துவர்களின் அனுபவப் புலம் நிச்சயமாக நவீன மருத்துவர்களின் உலகிலிருந்து வேறானது. மருந்துகள் செய்வதிலும், மூலிகைகளை, மருத்துவ தாவரங்களை  அடையாளம் காண்பதிலும் அவர்களுக்கு நல்ல தேர்ச்சி உண்டு. உடை, தோரணை என நவீன மருத்துவர்களிடமிருந்து வெகுவாக வேறுபட்டிருப்பார்கள்.



இங்கு சட்டென நினைவுக்கு வருபவர் ஜெயமோகனின் ‘மீட்சி’ கட்டுரையில் வரும் பால வைத்தியர் கங்காதரன் நாயர். மரபு வைத்தியர்களிடம் கிட்டத்தட்ட முட்டாள்தனம் எனத் தோன்றும் அளவிலான தன்னம்பிக்கை வெளிப்படும். பட்டப்படிப்பு பெற்ற நவீன ஆயுர்வேத மருத்துவன் நிச்சயம் கங்காதாரன் நாயர் போல் துணிவுகொண்டு மரபணுச் சிக்கல் என முத்திரை குத்தப்பட்ட நோயை கையில் எடுத்திருக்க மாட்டான்.


மரபு மருத்துவர்களே இன்று எளிதாக நகலெடுக்கப்படுபவர்கள். ஆனால் நானறிந்த வரையில் ஆழ்ந்த புரிதல் கொண்ட மரபு மருத்துவர்களுக்கு தங்கள் எல்லை தெரியும். மரபு வைத்தியர்களின் நகல்களோ அதீத தன்னம்பிக்கையின் காரணமாக உடற்கூறு மற்றும் உடலியியங்கியல் புரிதல் ஏதுமின்றி புற்று நோய் முதல் மரபணுக் குறைப்பாடு வரை எல்லாவற்றையும் தீர்க்க முடியும் என மார்தட்டிக் கொள்கிறார்கள். அரிதான சில சமயங்களில் தற்செயலான வெற்றிகூட கிட்டிவிடுகிறது. அந்த தற்செயல் வெற்றியை ஒவ்வொரு முறையும் ருசிக்க முயன்று தோற்கிறார்கள். உச்சிக் கிளை மாங்கனியை விழச்செய்ய மூட்டை கற்களை தூக்கி வீசுவது போலத்தான். எந்தக் கல் வீழ்த்தியது என வீசியவன் அறிய மாட்டான்.


நவீன ஆயுர்வேத மருத்துவர்கள் என பொதுவாக பட்டப்படிப்பு முடித்த மருத்துவர்களையே சுட்டுவோம். பள்ளித் தேர்ச்சி வரை ஒருவிதமான கல்வியும் அதன் பின்னர் முற்றிலும் வேறுவிதமான கல்வியும் அவர்களுக்கு வாய்க்கிறது. மரபு அடையாளத்தை ஏற்ற நவீன ஆயுர்வேதிகளும் உண்டு, வணிக அடையாளங்களைச் சூடிய மருத்துவர்களும் உண்டு. நவீன ஆயுர்வேத மருத்துவர்கள் மரபு மருத்துவர்களை அவர்களின் மிகை அறைகூவல்களின் காரணமாக போலிகளாக கருதுகிறார்கள். அவர்களை ஒடுக்கி கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என எண்ணுகிறார்கள். தொழில் போட்டியாளர்களாகவும் எண்ணுகிறார்கள். கேலி செய்யப்பட்டாலும் கூட அவர்களின் வருமானமும் செல்வாக்கும் ஒரு வித மிரட்சியுடனேயே அணுகப்படுகிறது. இச்சிக்கல்களைத் தவிர்க்க, மரபு மருத்துவர்களின் அடுத்த தலைமுறையினர் பட்டப்படிப்பை தேர்கின்றனர். மரபு போலி மருத்துவர்களின் வாரிசுகளும் இதையே தேர்கின்றனர்.


ஆய்வாளர் ஜீன் லாங்ஃபோர்ட் பண்டைய ஆயுர்வேத நூல்களில் அசல் போலி என வைத்தியர்களை வகைபடுத்தவில்லை, மாறாக தரப்படுத்தல் சார்ந்து ஒரு வரிசை முற முன்வைக்கப்படுகின்றது என்கிறார். ‘உயிரை வளர்ப்பவன்’ (பிரானபிசார), ‘நோயை வளர்ப்பவன் ( ரோகாபிசார) என இருவகை வைத்தியர்களின் இயல்புகளைப் பற்றியும் அவர்களைச் சந்தித்தால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும் சரக சம்ஹிதை பதிவு செய்கிறது. ஞானமற்ற மருத்துவன் அழிவையும் இறப்பையும் ஏற்படுத்துவான். அவனுடைய ஆலோசனையைக் கேட்டு நடப்பதற்கு பற்றி எரிவதே மேல்  என்கிறார் சரகர். ஞானமற்றவன் என்றாலும்கூட அவனை மருத்துவன் என்றே வகைப்படுத்துகிறார், நிராகரிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.


சரகர் காலத்தில் தரமற்ற ஆயுர்வேதமே போலி ஆயுர்வேதமாக கருதப்பட்டது. நவீன காலகட்டத்தில் நகல் செய்வதையே போலியெனக் கருதும் போக்கு நிலவுகிறது. நவீன மருத்துவர்களுக்கு  பட்டதாரி ஆயுர்வேத மருத்துவர்கள் நவீன நோயறியும் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் தங்களை நகலெடுக்கிறார்கள் எனும் மனக்குறை உண்டு. ஆகவே அவர்கள் இந்திய மருத்துவ முறை மருத்துவர்களை போலிகள் என நிராகரிக்கிறார்கள். பட்டம் பெற்ற ஆயுர்வேத மருத்துவர்கள் மரபு மருத்துவர்களை போலிகள் என நிராகரிக்கிறார்கள். நவீன ஆயுர்வேத மருத்துவர்கள் மேற்கத்திய மருத்துவத்தை நகலெடுக்கிறார்கள், தங்கள் மருத்துவ முறை மீது போதுமான நம்பிக்கை இல்லை என குற்றம் சாட்டி மரபு மருத்துவர்கள் நிராகரிக்கிறார்கள்.


இங்கு உண்மையில், நகலெடுப்பது அல்ல பிரச்சனை. ஆனால் எதை என்பதிலேயே சிக்கல். நல்ல வைத்தியர் என்பவர் வேறொரு நல்ல வைத்தியரின் இயல்புகளைப் பிரதி எடுப்பவர் என்பதே ஆயுர்வேதத்தின் எதிர்பார்ப்பு. ஆனால், இன்றைய நவீன காலகட்டத்து மருத்துவர்கள் தங்களை அதிகாரபூர்வமான, உண்மையான ஆயுர்வேத மருத்துவர்களாக அறிவித்துக்கொள்ள மரபின் மீது தங்களுக்கு ஆளுகை இருப்பதாக வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும், அல்லது மருத்துவ அமைப்பின் பிரதிநிதி என்பதை ஆழ நிறுவ வேண்டும்.


ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துவது மட்டுமின்றி ஊசிகள், கிருமிக்கொல்லிகள் போன்ற நவீன மருத்துவ சிகிச்சை முறைகளின் பயன்பாட்டையும் இன்றைய ஆயுர்வேத மருத்துவர்கள் கற்கிறார்கள். இது பலவாறான விவாதங்களை எழுப்புகிறது. முறையான பஞ்சகர்ம சிகிச்சைகள் இன்று வெகுவாக குறைந்து விட்டன. ஆயுர்வேதம் காலப்போக்கில் தனது முரட்டு வைத்திய முறைகளை கைவிட்டு சாத்விகமான அகிம்சை மருத்துவ முறையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. முக்கியமாக, எழுபதுகளில் கிருமிக்கொல்லிகளின் பக்க விளைவுகள் பெரும் விவாதமாக எழுந்த சூழலில் ஆயுர்வேதம் உடலை வதைக்காத மருத்துவமுறையாக நவீன மருத்துவத்திற்கு எதிர்நிலை எடுத்தது. மரபான ஆயுர்வேத வைத்திய முறை நோய்த் தடுப்பிற்கும் சிகிச்சைக்கும் சம அளவில் முக்கியத்துவம் அளிக்கிறது. நவீன மருத்துவத்திற்கு எதிர்வினையாக கட்டமைக்கபட்ட நவீன ஆயுர்வேதம் சிகிச்சையுடன் பொதுவாக நிறுத்தி கொள்கிறது. மரபார்ந்த வைத்தியர்கள் பத்தியம் பின்பற்ற வேண்டும் என்பதில் கறாராக இருப்பார்கள். அது நோய்த் தடுப்புடன் தொடர்புடையது. ஆனால் நவீன மருத்துவர்கள் நோய்க்கு உரிய மருந்துகளை மட்டுமே அளிக்கிறார்கள், பத்தியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதில்லை என்பதே நிதர்சனம். நோயாளிகளை தக்கவைத்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கிறது.


மேலும், மருந்துகளை அதன் மரபார்ந்த வடிவிலிருந்து பெயர்த்து வேறு வடிவங்களில் அளிப்பதில் அவர்களுக்கு எவ்வித தயக்கங்களும் இல்லை.  உதாரணமாக, ஆயுர்வேத மருந்துகளில் கஷாயங்களுக்கு மிக முக்கிய பங்குண்டு, ஆனால் அதன் கடுமையான ருசியின் விளைவாக அதை உட்கொள்ளும் நோயாளி வேண்டா வெறுப்பாகவே அணுகுகிறார். நவீன ஆயுர்வேத மருந்தகங்கள் இச்சிக்கலை எதிர்கொள்ள கஷாயங்களை மாத்திரைகளாக அளிக்கத் துவங்கி இருக்கிறார்கள். அதன் செயல்திறன் குறித்து எப்போதும் மரபு வைத்தியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்றாலும் இதற்கு ஆயுர்வேத மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளிடம் வரவேற்பு பெருகி வருகிறது என்பதே நிதர்சனம்.


நவீன ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் பயன்படுத்தும் மூலிகைகளின் பரப்பு வெகுவாக குறைந்து விட்டது. அதிகபட்சம் ஐம்பது முதல் எழுபது மூலிகைகளின் வெவ்வேறு கூட்டிலேயே நிறுவனங்கள் மருந்துகளை தயாரிக்கின்றன. செவ்வியல் ஆயுர்வேதம் மீது பிடிப்புள்ள மருத்துவருக்கு உள்ள தேர்வுகள் இவர்களுக்கு இல்லை. கல்லீரல் நோய்களுக்கு சந்தையில் மிக வெற்றிகரமான மருந்தாக தன்னை நிறுவிக்கொண்ட Liv-52ன் உள்ளடக்கம் எதுவோ அதை வெட்டியும் ஒட்டியுமே பெரும்பாலான மருந்து நிறுவனங்களின் மருந்துகள் அமைகின்றன. கால்வலி, தோல் நோய், செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், மாத விடாய்க் கோளாறுகள், மலட்டுத்தன்மை என சுமார் முப்பது அறிகுறிகள் அல்லது நோய்களுக்கு உகந்த மருந்துகளே செல்வாக்கடைந்து உள்ளன.


மருந்து நிறுவன விற்பனைப் பிரதிநிதிகளை சார்ந்து இயங்கும் தற்கால ஆயுர்வேத மருத்துவர்களை எனது ஆசிரியர் ‘பட்டியல் மருத்துவர்’ (Catalogue doctors) என கிண்டல் செய்வார். பட்டியலுக்கு வெளியே அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதே நிதர்சனம். ஆயுர்வேதத்தில் இருந்து நவீன மருத்துவத்தை வெட்டியெடுக்கும் செயல் என இதைச் சிலர் விமரிசித்தாலும்கூட இதுவே தவிர்க்க முடியாத நிதர்சனம்.


வணிக ஆயுர்வேதம் நோயாளிகளை கணக்கில் கொள்வதே இல்லை. அவர்களைத் தவிர்த்து ஆரோக்கியவான்களுக்கு அவர்களின் ஆரோக்கியத்தை பேணவும் பராமரிக்கவும் ஒரு வாய்ப்பு என்ற அளவில் தன்னை நிறுத்திக் கொள்கிறது. இத்தகைய வணிக அமைப்புகளில் கல்வி கற்ற ஆயுர்வேத மருத்துவர்களுக்கு எவ்வித முக்கியத்துவமும் அளிக்கப்படுவதில்லை. ஆயுர்வேத உதவியாளர்களை (தெரபிஸ்ட்கள்) கொண்டு அதிக செலவின்றி அவர்களுடைய நிறுவனத்தை நடத்திவிட முடியும் எனும் சூழலில் ஆயுர்வேத மருத்துவர்களை பணிக்கு அமர்த்துவது ஒரு அவசியமற்ற, கட்டாயச் செலவு மட்டுமே. சுற்றுலாத் தலங்களை மையமாகக் கொண்டு இவை இயங்குகின்றன. குறிப்பாக, வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் உயர்த்தட்டு மக்களை இலக்காக கொண்டு இயங்குகிறது. ஆயுர்வேதத்தின் சர்வதேச அடையாளமாக இவர்களே திகழ்கிறார்கள். இத்தகைய மையங்களில் பணியாற்றும் ஆயுர்வேத உதவியாளர்கள் கொஞ்ச காலம் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் பணியாற்றிவிட்டு நல்ல சுற்றுலா தலங்களில் அவர்களே சொந்தமாக ஆயுர்வேத நிறுவனங்களை அமைத்துகொள்வதும் நடந்துகொண்டு  தானிருக்கிறது.


ஆயுர்வேத மருத்துவ முறையை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்கள், மருந்து நிறுவன விற்பனை பிரதிநிதிகள், பாட்டி வைத்தியம் போன்ற அனுபவக் குறிப்புகள், சாமானியர்களுக்கான ஆயுர்வேத நூல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவை மக்களிடம் கொஞ்சம் பிழையாகவும் கொஞ்சம் சரியாகவும் ஆயுர்வேதத்தைப் பற்றிய ஒரு வரைபடத்தை உருவாக்கியிருக்கிறது. புண்ணைப் பழுக்க வைக்க துணி துவைக்கும் சோப்பைக் குழைத்து பூசுவது, வாசலினுடன் மஞ்சள் பொடி சேர்த்து புண்ணுக்கு கட்டுவது, நகச்சுத்திக்கு வடிகொலோன் இடுவது என உடனடியாக பலனளிக்கும் அனுபவ முறைகள் நவீன கால கண்டடைதல்கள். காய்ச்சலின்போது மிளகு ஜீரக சாதம் உண்பது, தொண்டைச்சளிக்கு மஞ்சள் தூளும் மிளகும் சேர்த்த பாலைக் கொடுப்பது போன்ற வழக்கங்களுக்கு ஆயுர்வேத தர்க்கத்தில் இடமுண்டு. கேரள பண்பாட்டில் ஆயுர்வேதம் வெகுவாக காலூன்றியுள்ளதால் தசமுலாரிஷ்டம், நீலி பிருங்காதி போன்ற மருந்துகள் அவர்களுக்கு நன்கு பரிச்சயம். சில நேரங்களில் இந்திய மருத்துவத்தை மருத்துவர்களைக் காட்டிலும், அமைப்புகளைக் காட்டிலும், சாமானிய மக்களின் வழக்கங்களே காத்து வந்திருக்கிறது என்று தோன்றுவதுண்டு. மருத்துவர்களோ அமைப்புகளோ இன்றியும்கூட எப்படியோ இது எஞ்சிப் பிழைக்கும் எனும் நம்பிக்கை எனக்கு வலுவாக உண்டு.


அண்மைய ஆண்டுகளில் வெகுஜன ஊடகங்களில் ஆயுர்வேதம் குறித்து அதிகம் எழுதப்படுவதை கவனிக்க முடிகிறது. பொது மக்களுக்கான அறிமுக நூல்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையில் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் ஒப்பீட்டளவில் மருத்துவர்கள் மற்றும் அறிஞர்களின் ஆய்வு நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் மிகக் குறைவாகவே வருகின்றன. இது ஒரு மிக முக்கியமான சமூகப் போக்கை உணர்த்துகிறது. பொதுமக்களுக்காக எழுதப்படும் பெரும்பாலான புத்தகங்களிலும் இணையதளங்களிலும் உடல் எடை குறைப்பு, யோகா, தியானம், இயற்கை உணவின் மகத்துவம், மாதவிடாய் வலிக்கான தீர்வு போன்றவைகளே மீண்டும் மீண்டும் காணக்கிடைக்கின்றன. ஆயுர்வேத நூல்களில் மருத்துவமாகவும் உணவு முறையாகவும் அசைவ மாமிச வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை வசதியாக பேச வெகுஜன ஊடகங்கள் மறுத்துவிடுகின்றன. பெரும்பாலான இணைய தளங்கள் ‘பஞ்சகர்மா’ எனும் பெயரில் எண்ணெய் தேய்ப்பு முறைகளையும், வியர்வை வரவழைக்கும் சிகிச்சைகளையும் பற்றியே எழுதுகின்றன. உண்மையான பஞ்சகர்ம சிகிச்சைகளான வாந்தி, பேதி, வஸ்தி சிகிச்சை, உதிர சிகிச்சை, நசியம் போன்றவை நுகர்வோரை அச்சுறுத்தக்கூடும் எனும் காரணத்தினால் அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.


தற்கால இந்திய மருத்துவ அடுக்குகள் பற்றிய ஒரு எளிய வரைபடம் நமக்கு கிடைக்கிறது. இந்திய மருத்துவத்தின் பல்வேறு அடுக்குகள் இன்று நேற்று உருவானவையல்ல. செவ்வியல் ஆயுர்வேத மருத்துவமும் நாட்டு மருத்துவமும் தனித்த மரபாகவும், அதே சமயம் ஒன்றையொன்று சார்ந்தும் பிணைந்திருந்தன. காலனியவாதிகள்கூட இந்த இருவேறு அடுக்குகளைப் பிரித்தறியத் தவறினர் என டி.ஜெ.எஸ். பேட்டர்சன் பதிவு செய்கிறார். அறுவை சிகிச்சையில் நாவிதர்கள் விற்பன்னர்களாகக் கருதப்பட்டனர். இன்றளவும் அவர்களை மருத்துவர்கள் என்றழைக்கும் வழக்கம் உண்டு. ஐரோப்பாவிலும் நாவிதர்கள் அறுவை சிகிச்சை நிபுணர்களாக நவீன காலம் வரையில் கருதப்பட்டனர் எனும் சித்திரம் உண்மையில் ஆச்சரியத்தை அளிக்கிறது. கூர்முனைக் கருவிகளின் பயன்பாடு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம். மகப்பேறு மற்றும் குழந்தை மருத்துவத்தில் நிபுணத்துவம் கொண்ட மருத்துவச்சிகள் ஒரு சரடு. நாவிதர், வண்ணார் வகுப்புக்களைச் சார்ந்த பெண்கள் தாய்-சேய் நல மருத்துவத்தில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர். குழந்தைகளுக்கு வரும் இசுகு (வெட்டு), நீர்க்கணை (இழுப்பு), செருகல் போன்ற சிக்கல்களை தீர்ப்பவர்களாகத் திகழ்ந்தனர்.


டாக்டர். ப்ரிஜ்ஜிட் செபாஸ்டியா சாணர்கள் பனை மரங்களில் ஏறும்போது விழுந்து அடிபடுவதைச் சீர் செய்ய உருவாக்கி வளர்த்தெடுத்த சிகிச்சை முறைதான் தென் தமிழகத்துக்கே உரித்தான வர்ம சிகிச்சை எனப் பதிவு செய்கிறார். சரக சம்ஹிதையிலும் சுசுருத சம்ஹிதையிலும் வர்ம புள்ளிகள் பற்றிய விவரணைகள் உள்ளன. அடிபட்டால் நேரும் விளைவுகள்  குறிப்பிடப்பட்டுள்ளன. நுட வைத்தியம் பாரம்பரியமாக சில குடும்பங்களால் இன்று வரை முன்னெடுக்கப்படுகிறது.


தமிழக பேருந்து நிலையங்கள் முழுக்க மூலம், பவுத்திரம் மஞ்சள் சுவரொட்டிகள் வழியாக நாம் அறிந்த மருத்துவர் பிஸ்வாஸ் ஒரு விராட புருஷன் அல்ல. எல்லா ஊர்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பிஸ்வாஸ்கள் வங்காளத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள். எனினும் அறுவை மருத்துவம் தென்னிந்திய நாவிதர்களிடம் சென்றது. அங்கிருந்து அவர்கள் வங்காளத்திற்கு இடம் பெயர்ந்தார்கள் என்றோர் பார்வையை டாக்மர் உஜாஸ்டிக் வைக்கிறார். மூலம் மற்றும் பவுத்திர நோய்களுக்கு இவர்கள் கையாளும் முறை சுசுருத சம்ஹிதையை அடிப்படையாக கொண்டது. க்ஷார சூத்திரம் எனும் அம்முறையில் கனமான நூலில் மருந்தை தடவி பாதிக்கப்பட்ட இடத்தைச் சுற்றிக் கட்டி புண்ணை ஆற்றுவார்கள்.


ஜோசப் ஆல்டர் அறுபது – எழுபதுகளில் இந்தியாவெங்கும் பரவலாக இருந்த ஆண்மை பெருக்கி ‘ரகசிய சிகிச்சை’ மையங்களை பற்றி ஒரு சித்திரத்தை அளிக்கிறார். காந்தியின் அகிம்சை கொள்கையை ஒரு முக்கியமான காரணியாக வைக்கிறார். எனினும் அது விவாதத்திற்குரியது. இன்றும் இந்திய மருத்துவத்தின்  மிக முக்கியமான சரடுகளில் ஒன்று இந்திய மருத்துவ பாலியல் சிகிச்சை மையங்கள். தாளாத குற்ற உணர்வில் தள்ளி, தாட் (dhat syndrome) சின்ட்ரோம் போன்ற இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான நோய்களை உருவாக்கிய பெருமை இந்த மருத்துவர்களுக்கு உண்டு.


கேரளத்து அஷ்ட வைத்திய குடும்பம் உண்மையில் ஆயுர்வேதத்தின் எட்டு பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவர்கள் என கூறப்படுவதுண்டு. விஷ வைத்தியர்கள் இன்றளவும் கேரளத்தில் புகழோடு திகழ்கிறார்கள். சோட்டானிக்கரை, குணசீலம் போன்ற ஆன்மீக தலங்கள் பேயோட்டுதல் போன்ற மனச் சிக்கல்களை எதிர்கொள்ள உருவான மையங்கள்.


பழங்குடி மருத்துவம் மற்றுமொரு சரடு. கேரள காணிகள் பயன்படுத்தும் ஆரோக்கிய பச்சையின் (Trichopus zeylanicus) மருத்துவப் பயன் எண்பதுகளில் ஆய்வாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டது.  மருத்துவ தாவரங்களை அடையாளம் காண்பதில் கால்நடை மேய்ப்பர்களுக்கும் வனவாசிகளுக்கும் நல்ல தேர்ச்சி உண்டு என்பதை சரகர் பதிவு செய்கிறார் (சரக சம்ஹிதை, சூத்திர ஸ்தானம், அ 1, 120, 121). மருத்துவன் அடையாளம் காண்பதோடு நின்றுவிடக் கூடாது அதன் மருத்துவ பயன்களை அறிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார். பழங்குடிகளிடம் இருந்து அறிவுப் பரிமாற்றம் செவ்வியல் ஆயுர்வேதத்தில் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதற்கான மிக முக்கியமான சான்று இது.


இந்திய மருத்துவத்தைப் புரிந்துகொள்ள அதன் வெவ்வேறு அடுக்குகளையும் அவற்றுள் இருந்த சமன்பாடுகளையும் சேர்த்தே புரிந்துகொள்ள வேண்டும் . திப்பு சுல்தானின் படை கொவாஸ்ஜி எனும் மாட்டுவண்டிக்காரனின் மூக்கை  போரின்போது வெட்டியது. மகாராஷ்டிரத்து குயவர் ஒருவரால் அது சீர் செய்யப்பட்டது. இதைப் பதிவு செய்த ஆங்கிலேயர்கள், தாமஸ் குருசோ மற்றும் ஜேம்ஸ் ஃபின்ட்லே, இங்கிலாந்தின் ஜெண்டில்மேன் மேகசினுக்கு 1794 ஆம் ஆண்டு இத்தகவலை கொண்டு சென்றார்கள். செவ்வியல் ஆயுர்வேத நூலான சுசுருத சம்ஹிதையில் கூறப்பட்டுள்ள மூக்குச் சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு மிக நெருக்கமான வழிமுறையை கொண்டிருந்தது குயவரின் முறை. அக்கி போன்ற தோல் நோய்களுக்கும் விஷக்கடிகளுக்கும் மரபாக குயவர்களைக் காண செல்வது நம் வழக்கம். வழக்கொழிந்து போன இம்முறை எப்படி குயவர்களின் ஒரு சாராரிடம் மட்டும் நிலைத்திருந்தது?


அயோத்திதாச பண்டிதர் மருத்துவத்தை கைகொண்டிருந்த பூர்வ பவுத்தர்களைத் தாழ்த்தி பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்த முயன்றனர் என்றொரு சித்திரத்தை அளிக்கிறார். வைத்தியர்களின் வீட்டில் உணவு உண்ணக்கூடாது என மனு சாத்திரம் சொல்வதாக மேற்கோள் காட்டுகிறார். பெரும்பாலான வைத்திய நூல்கள் தாழ்த்தப்பட்ட மக்களால்தான் மீண்டும் பதிப்பிக்கப்பட்டது என்கிறார்.


ஜார்ஜ் டுமிசில்  பண்டைய இந்திய – ஐரோப்பிய சமூகத்தை மூன்று அடுக்குகளாக வகுக்கிறார். ப்ரோகிதர், போர்வீரர்கள் மற்றும் சாமானியர்கள். சாமானியர்கள் வேளாண்குடி மற்றும் வேறு வேறு தொழில்கள் புரியும் உழைக்கும் மக்களால் ஆனது. கென்னெத் ஜிஸ்க் அதர்வ வேதத்தின் இயல்பை ஆராயும்போது வேளாண்குடிகள் நிறைந்த மூன்றாம் அடுக்கிலிருந்தே அது உருவாகியிருக்க வேண்டும் என்கிறார். இந்த மூன்றாம் அடுக்கில் மருத்துவர்களே பூசாரிகளாகவும் இருந்தார்கள். முதன்மை அடுக்கைச் சேர்ந்த, சடங்குகளை நிர்வகிக்கும் பூசாரிகள், தூய்மைவாதத்தால் தனித்து செயல்பட்டார்கள். மருத்துவ பூசாரிகள் சுதந்திரமாக செயலாற்றினார்கள். எனினும் சடங்கு பூசாரிகள் உயர்வாக கருதப்பட்டார்கள் என்கிறார்.


வேதத்தின் மாந்த்ரீக மருத்துவ கோட்பாடுகளை பின்னுக்குத் தள்ளி செவ்வியல் மருத்துவம் மேலெழுந்து வந்தது. எனினும், சரகம் மற்றும் சுசுருத சம்ஹிதைகளில் சிறிய அளவில் மாந்த்ரீக மருத்துவத்தின் எச்சங்கள் உண்டு. நன்மையையும் தீங்கும் விளைவிக்கக்கூடிய கடவுள்கள் மனிதர்களை பாதிக்கின்றனர் எனும் வேத சிந்தனையிலிருந்து புறச்சூழலுக்கும் மனிதனுக்கும் இடையிலான சமநிலை பேணுதல் எனும் பார்வையை ஆயுர்வேதம் வந்தடைவது மிகப்பெரிய தாவல். ஆனால் இது எப்படி நிகழ்ந்தது?


முதல் அடுக்கின் சடங்குப் பூசாரிக்கும் மூன்றாம் அடுக்கின் மருத்துவப் பூசாரிக்கும் இடையிலான சர்ச்சையின் காரணமாக,  சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மருத்துவப் பூசாரிகள் ஒரு சிறிய விளிம்புக் குழுவாக மாறி பயணித்தனர் என்கிறார் ஜிஸ்க். இது தொடர்பாக, பி.சி. குடும்பையா அதர்வ வேதக் குறிப்புகளில் இருந்து சில சான்றுகளை அளிக்கிறார். நூற்றுக்கணக்கான மருத்துவர்களும் ஆயிரக்கணக்கான மூலிகைகளும் இருக்கின்றன, ஆனால் அவை என்ன நிகழ்த்துமோ அதை மந்திரித்த காப்பு கட்டுவதன் மூலம் நிகழ்த்த முடியும் (A.V. 2. 9.3). மறுபடியும் A.V. 2.9.5 ல் எவர் மந்திரித்த காப்பு கட்டுகிறானோ அவனே சிறந்த மருத்துவன் எனும் குறிப்பு காணக் கிடைக்கிறது. ஆக வேத காலம் தொட்டே மாந்த்ரீக மருத்துவமும், பகுத்தறிவு மருத்துவத்தின் முன்னோடி வடிவமும் இரு தனித்த சரடுகளாக திகழ்ந்தன என்பது புலப்படுகிறது. மனு சாத்திரத்தில் வேதமும் மந்திரங்களும் அறிந்த வைதிக மருத்துவனுக்கும் பிஷக், அம்பஷ்தா (நாவிதர்களை அம்பட்டன் என்றழைக்கும் வழக்கம் உண்டு என்பது நினைவுக்கு வருகிறது) சிகித்சக போன்ற பெயர்களில் அறியப்படும் வேற்று பிரிவு மருத்துவனுக்கும் இடையிலான சர்ச்சைகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு வெளியேறிய பயணிக்கும் துறவிகளில் பல பவுத்த பிக்குகளும் அடங்குவர். அவர்களே புதிய அறிதல்களை உருவாக்கினர். பல்வேறு மருத்துவ தகவல்களை தொகுத்தனர். சட்டகங்களை வடிவமைத்தனர் என்கிறார் ஜிஸ்க் .


துவக்க கால பவுத்த  நூல்களில் மனிதனுக்கும் இயற்கைக்குமான புரிதல் பற்றிய கருத்துக்கள் ஆயுர்வேதத்தின் கோட்பாடுகளோடு வெகுவாக நெருங்கி இருக்கின்றன. சுய மறுப்புக்கும் அதீத ஈடுபாடு எனும் இரு எல்லைக்கும் நடுவே மத்திம மார்க்கத்தை கடைபிடிக்க வலியுறுத்துகிறது. அகத்திற்கும் புறத்திற்கும் இடையிலான சமநிலையைப் பேணுதல். பவுத்தத்துடன் மருத்துவம் இணைந்தே பல்வேறு பகுதிகளுக்கு சென்றது. பின்னர் முறைப்படுத்தபட்டு, பிராமணர்களால் தொகுக்கப்பட்டது, மருத்துவம் முதல் அடுக்கைச் சேர்ந்தவர்களால் கைகொள்ளப்பட்டது எனும் சித்திரத்தை கென்னெத் ஜிஸ்க் பல்வேறு தரவுகளோடு நிறுவுகிறார்.


முக்கியமான ஆயுர்வேத நூல்களை இயற்றியவர்கள் என்றொரு வரிசை உருவாக்கினால் அவர்கள் பெரும்பாலும் பிராமண – க்ஷத்ரிய வர்ணங்களை சேர்ந்தவர்களாகவே திகழ்ந்தனர். சரகர் கனிஷ்கரின் அவையில் இருந்திருக்கலாம் என்றொரு வரலாற்று ஆவணம் கூறுகிறது. சுசுரதர் காசி அரசன் திவோதாச தன்வந்தரியின் வழி வந்தவர் என கூறுகிறார். பிராமணரா பவுத்தரா என வாக்பட்டரின் அடையாளம் சார்ந்து பல்வேறு குழப்பங்களிருக்கின்றன. சக்ரபாணி தத்தர், ஷாரங்கதரர், பாவ மிஸ்ரர் துவங்கி முகலாய அவையில் இருந்த தோடரமல்லர் வரை பலரும் பிராமணரே. அரச மருத்துவர்களாக அல்லது அரசர்களுக்கு நெருக்கமானவர்களாக இருந்திருக்கிறார்கள். சரகர் சுசுருதர் போன்றவர்கள் பெயர்கள் காரணப் பெயர்களை போல் உள்ளதால் அவர்கள் துறவிகளாக இருக்கவும் கூடும். நாகர்ஜுனர் ஆயுர்வேதத்திற்கு பங்களிப்பாற்றிய மிக முக்கியமான பவுத்தர். கல்யானகாரக எனும் நூல் சமணரால் எழுதப்பட்ட ஆயுர்வேத  நூல்.


வேதகாலத்தில் புலப்படும் சடங்கு மருத்துவம்- பகுத்தறிவு மருத்துவம் இருமை பிற்காலங்களில் செவ்வியல் மருத்துவம்- மக்கள் மருத்துவம் எனும் இரு பெரும் போக்குகளாக பிரிகிறது. மக்கள் மருத்துவத்தில் இருந்தே செவ்வியல் மருத்துவம் உருவாக முடியும். மக்கள் மருத்துவம் பல்வேறு தரப்பினரை உள்ளடக்கியது. நிலப்பரப்பு எங்கும் அலைந்து திரிந்து மருத்துவ தகவல்களைப் பரப்பி ஆவணப்படுத்தும் அலையும் துறவிகளால் ஆன அடுக்கு அதில் முக்கியமானது. பிற்காலங்களிலும் இந்த அடுக்கு தொடர்ந்து பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தது. இவ்வடுக்கில் இருந்தே ஹத யோகமும், தாந்த்ரீகமும், இரசவாதமும் உருவானது. பின்னர் இவை மருத்துவத்துடன் முயங்கி மைய நீரோட்டத்தில் இணைந்தன. சித்தர்கள் மக்கள் மருத்துவச் சரடைச் சார்ந்தவர்கள் என உறுதியாகச் சொல்லலாம். இரசவாதமும் ஹத யோகமும் மிகப்பெரிய செல்வாக்கு செலுத்தின. சாதி அடுக்குகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை. அதை மீறிச் செல்பவர்களாகவே திகழ்ந்தார்கள்.


ஒட்டுமொத்தமாகக் காண்கையில் தொடர்ந்து புதியவற்றை கற்று பரிசோதிக்கும் அறிவு முனை ஒரு சரடாகவும் நிலை பெற்றவை அனைத்தையும் தொகுத்து ஆவணப்படுத்தி முறைப்படுத்தும் அறிவுக் களன் ஒரு சரடாகவும் விளங்கி, பிரமிக்கத்தக்க வகையில் இந்திய மருத்துவ வலைப்பின்னலை உருவாக்கி உயிர்ப்புடன் வைத்திருந்த உண்மை புலப்படுகிறது.  ஆனால் இன்றைய உலகளாவிய சூழலில், மேற்கத்திய மருத்துவ முறை மட்டுமே இவ்விதத்தில் செயல்படுவதைக் காண்கிறோம். அரசு ஆதரவு, மக்கள் வரவேற்பு இரண்டும் குன்றிய நிலை மட்டுமல்ல, மருத்துவர்களே தன்னம்பிக்கை இழந்துவிட்ட நிலையில் பரிசோதனைகளில் ஈடுபடுவதோ, புதியனவற்றைக் கற்பதோ, தம்மைச் சுற்றியுள்ளவற்றை தொகுத்து ஆவணப்படுத்துவதோ மேற்கத்தைய  மருத்துவ முறைகளுக்கு வெளியே சாத்தியமா என்று தெரியவில்லை. அறிவு முனை மழுங்கி, அறிவுக் களம் வரண்ட இச்சூழலில் சித்த, ஆயுர்வேத முறைகள் மீண்டும் இந்தியாவில் தலையெடுக்குமா என்பதே இன்று கவலைக்குரிய கேள்வியாக இருப்பது நிதர்சனம்.


இக்கட்டுரையின் துவக்கத்தில் கூறப்பட்டுள்ள வைத்தியர் ப்ருஹஸ்பதி திரிகுணா 1920 ஆம் ஆண்டு பிறந்து 2013 ஆம் ஆண்டு மறைந்தவர். காலனிய காலகட்டத்திற்கும் விடுதலைக்கும், உலகமயமாக்கல் காலத்திலும் வாழ்ந்தவர். பத்ம விருதுகளை பெற்றவர், மகரிஷி மகேஷ் யோகியின் ஆயுர்வேத பிரிவை சர்வதேச மக்களிடம் கொண்டு சென்றவர். இக்கதையின்தர்க்க சாத்தியத்தையும், உண்மைத்தன்மையையும் விட்டுத்தள்ளிவிட்டு நோக்கினால் இந்த தொன்மத்தின் வடிவம் தென்படும். இத்தகைய தொன்மங்கள் ஏன் அக்காலகட்டத்து இந்திய மனதிற்கு தேவையாக இருந்தது? ஓர் மரபான எளிய இந்திய மருத்துவன் பகுத்தறிவு மற்றும் அறிவியல் வளர்ச்சியால் உச்சத்தில் நிற்கும் மேற்கத்தியவனை வென்று செல்வது. காமா பயில்வான் உடல் ரீதியாக எதை நிகழ்த்தி காட்டினாரோ அதை அறிவு ரீதியாக திரிகுணா நிகழ்த்தி காட்டினார். நல்லதொரு டேவிட் கோலியாத் கதை. திரிகுணா ஒரு தனி மனிதர் அல்ல. இந்த கதையை வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு பெயர்களுடனும் சூழல்களுடனும் திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. பாய்ச்சலுக்கான ஏக்கம், தன்னை நிறுவிகொள்வதற்கான துடிப்பு. ஆனால் அதற்கான வழிமுறைதான் புலப்படவில்லை.


இந்திய மருத்துவ முறைகள் தம் முதல் நிலை இடத்தை மீண்டும் எட்டுவதானால், அதற்குரிய இந்திய அறிவுச் சூழல் உருவாக வேண்டியது அவசியம். அப்போதுதான், சாத்திர அடிப்படையிலான மரபு ஆயுர்வேதம், பள்ளிக் கல்வி வழி புகட்டப்படும் நவீன ஆயுர்வேதம், பெருவாரி மக்களைச் சென்றடையும் வணிக ஆயுர்வேதம், மக்கள் மத்தியில் பரவலான அறிவு ஏற்பட்ட காரணத்தால் தன்னார்வத் தேர்வாகப் பயன்படும் ‘கை மருத்துவ’ ஆயுர்வேதம் ஆகிய நான்கு பயன்பாட்டு தளங்களிலும் ஆரோக்கியமான ஆயுர்வேத வளர்ச்சியை நாம் காண இயலும். இதற்கு மிக முக்கியமான ஒரு அறிவுச்சட்டக நகர்வு (paradigm shift) ஏற்பட்டாக வேண்டும். அதை எதிர்நோக்கியே இந்திய மருத்துவர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள் அனைவரும் காத்திருக்கிறோம்- 2015ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு மரபார்ந்த சீன மருத்துவ ஆய்வுக்கு வழங்கப்பட்டது என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.