Thursday, June 4, 2020

தந்தையைக் கொல்ல ஒரு பனிக்கத்தி - குறுங்கதை

பதாகையில் வெளியான குறுங்கதை. மீள்பிரசுரம் 


பூமியின் நிழல் இருளாக கவிந்த, துணை வரும் நிழலும்கூட கைவிட்டு அகன்ற அந்தியின் காரிருளில் தனித்து நடக்கையில், அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்.  உடலற்றவர்கள். அல்லது உடலை புதைத்து வைத்துக்கொண்டு தங்கள் நிழலை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அனுப்பியவர்கள்.

நிழல்களுக்கு குரல் உண்டு. ‘உன் தந்தையைக் கொல்’, ரகசிய கிசுகிசுப்பாய் காதருகே முணுமுணுத்தவன் உடல் மெலிந்தவனாக இருக்க வேண்டும். ரகசியங்களை மறுப்பது அத்தனை எளிதில்லை. அதற்கு நாம் வேறோர் ரகசியத்தை அறிந்திருக்க வேண்டும். ‘தந்தையைக் கொல்ல ஆர்வமில்லை’ என்று முணுமுணுத்தேன்.

அழுகிய பழங்களும், பொறியில் சிக்கி  மரித்த எலியும், தூமைத் துணிகளும், இன்னும் பல நூற்றாண்டு கால குப்பைகளும் குமையும், வெள்ளியாக இருளில் மினுங்கிய, நகராட்சியின் தகர குப்பைத் தொட்டிக்கு என்னை இட்டுச் சென்றார்கள்.

உள்ளிருந்து கிளறிக் குடைந்து தந்தையின் வயிற்றில் சொருகி குடலைச் சரிக்க எனக்கொரு  பனிக்கத்தியை உதிரம் காய்ந்து பழுப்பேறிய துணியில் பொதித்துக் கொடுத்தான், ஊமையன் ஒருவன்.

எரியாத மின்விளக்கு கம்பத்தின் பாதி உயரத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. அவன் நெடியவனாக இருக்க வேண்டும். “ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கோடான கோடி தந்தைகளின் குருதி குடித்த கத்தி’, என்றவனின் குரலில் உறுதி தொனித்தது.

உறுதியான குரல்கள் ஐயமற்றவை. அல்லது ஐயத்தை மறைக்கக் கற்றவை. ஆகவே ஆபத்தானவை. நாம் அவை முன் சென்று மண்டியிட்டு எமை வழி நடத்துக, எனக் கோரத் தகுந்த குரல்கள். எண்ணெய் பிசுக்காக அக்குரல் மனதை மூடி பரவிப் படியச் செய்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பழக்கம். கீழ்படிந்துவிட வேண்டியதுதான். ஏதோ ஒன்று பரப்பைக் கீறிக் கிழித்து வெளிவந்தது. உறுதியான குரலில் அவனிடம், “எப்படியும் தந்தைதான் இறந்து விடுவாரே” என்றேன்

முழங்காலுக்குக் கீழேயொரு நகைப்பொலி- ஏறத்தாழ கழுதைப்புலியின் கனைப்பை ஒத்தது. “ஆம். ஆனாலும் அது நம் கையால்தான் நிகழ வேண்டும்,” என்று சொல்லிச் சிரித்தான் சித்திரக் குள்ளன்.

பகடி கல்லறையில் அறையப்படும் கடைசி ஆணி. நாம் தனித்திருக்கையில் மட்டும் வெளிப்படும் நச்சுப்பல். பகடி நம்மை அச்சுறுத்துவது. தனிமைப்படுத்துவது. பகைக்கு பணியாதவரும் பகடிக்கு பணிவார். வியர்த்திருந்தது. லேசாகச் சிரித்துக்கொண்டே அவனிடம் சொன்னேன்.

‘மேலும்… நாளை நானுமொரு தந்தையாவேனே’

சொல்லி முடித்த நொடியில் மூக்கை உரசியபடி ஆக்ரோஷமாகக் கத்தினான் ஒரு தடியன், “ஆம். அப்போது உன் குடலும் சரிக்கப்படும்”
“கண்ணே, உன் தந்தையை நீ கொல்லத்தான் வேண்டும், எனக்காகவேணும், நான் பட்ட துயரங்களை நீ அறிவாய்” எனக் கெஞ்சியது ஒரு பெண் குரல். உடல் விதிர்த்தது. அது அன்னையின் குரல். ஒருவேளை உரக்க ஆணையிட்டிருந்தால் அதையே தவிர்த்திருக்கலாம். ஆனால் இந்தக் குரல் இரைந்து கேட்கிறது. அறுக்க முடியாத பிணைப்பு மறுக்க முடியாமல் ஒப்புக்கொள்ள செய்கிறது. கண்களில் பெருகிய நீர் கன்னத்தில் உருண்டு நிலத்தை அடைந்தது. கத்தியை இறுகப் பற்றினேன். விம்மியுடைந்த குரலில், “உன் வஞ்சத்தை நான் சுமக்கிறேன். ஆனாலும் எதன் பொருட்டும் என்னால் அவரைக் கொல்ல இயலாது”, என்றேன்.

என் கையில் கனத்து குளிர்ந்த பனிக்கத்தியை மீண்டும் வாய் பிளந்து கிடக்கும் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தேன். பெருமூச்சுகளும், உச்சு கொட்டல்களும், முனகல்களும் எழுந்தன. நீள் கையன் தொட்டியில் துழாவிக் கொண்டிருந்தான். அதற்குள் அது எங்கோ ஆழத்தில் சென்று மறைந்திருக்க வேண்டும்.

“அட…முட்டாளே” வாய்விட்டுக் கூவினாள் அந்தப் பெண்..

சிற்றகலாக மஞ்சள் ஒளியுமிழும் ஒற்றை குண்டுவிளக்கை சூடிய என் அறையை கனவு கண்டபடி அங்கிருந்து விலகினேன்.

எனை எப்போதும் காக்கும் அவர்கள் அறியாத ரகசியம் ஒன்றுண்டு.  தந்தையைக் குத்திக் கிழிக்கும் ஆவேசம் புகும் ஒவ்வொரு முறையும், தந்தையின் ஆசி இவ்வாழ்வு என்றெண்ணிக் கொள்வேன். அப்போது நீலச் சுவற்றில் ஆடும் மரச்சட்டத்தின் வெற்றுக் கண்ணாடியில் தந்தையின் உருவத்திற்கு மேலும் ஒரு பிக்சல்  கூடித் துலங்குகிறது
x

Wednesday, June 3, 2020

விமர்சனக் கலை: எதிர்பார்ப்புகளும் சவால்களும்



(விஷ்ணுபுரம் ஊட்டி காவிய முகாமில் மே 6 ஆம் தேதி ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். பதாகை இதழில் வெளிவந்தது)

தேர்ந்த விமர்சகனின் இயல்புகள் எவை? விமர்சகனின் பங்களிப்புகள் எத்தகையவை? விமர்சகன் தவறும் இடங்கள் எவை? இக்கேள்விகளையொட்டி விமர்சனத்தின் சவால்களையும், முறைமைகளையும் இக்கட்டுரை விவாதிக்க முனைகிறது.

எதற்காக வாசிக்கிறேன்? கலை யாருக்காக? எழுத்தாளன் கருவியா, கர்த்தாவா? இலக்கியத்தின் பயன்மதிப்பு என்ன?- என காலம்காலமாக விவாதிக்கப்படும், இறுதி விடை என ஏதும் எட்டப்படாத, சில கேள்விகளை முதலில் விமர்சகன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அக்கேள்விகளுக்கான விடையைப் பொருத்தே அவனுடைய விமர்சன அளவுகோல் உருவாகிறது.

எதற்காக வாசிக்கிறேன் எனும் கேள்விக்கான விடை ‘இதன் அழகியல் நுட்பங்களில்’ லயிப்பதற்காக என்றிருக்கும்போது என் விமர்சனப் பாணி ரசனை விமர்சனமாகவே இருக்கும். ரசனைப் பாணியை நான் முன்னெடுக்கிறேன் என்பதன் பொருள், மார்க்சிய, கட்டுடைப்பு, நவ-வரலாற்றுவாத, பெண்ணிய மற்றும் இன்னபிற கோட்பாடுகளின் மீதான அக்கறை எனக்கு இரண்டாம் பட்சம் என்பதே. ஒரு படைப்புருவாக்கத்தின் சமூக ஆற்றல்களின் பங்களிப்புகளை அறிந்து கொள்வது ரசனை வாசிப்புக்கு அடுத்தபடியான மேலதிக ஆர்வம் என்ற அளவில் அதற்கொரு இடமுண்டு என்பதையும் மறுக்கவில்லை.

ஹெரால்ட் ப்ளூம் அழகியல் வாசிப்பைத் தவிர பிற அனைத்தையும் வாசிப்பே அல்ல என்கிறார். இலக்கியத்தில் சமூக நீதிக்கு இடமில்லை என்று காட்டமாகவே சொல்கிறார். பிற வாசிப்புகளை முழுமையாக நிராகரிக்க முடியாது என்பதே நான் அவரிடமிருந்து வேறுபடும் புள்ளி. ஆனால் ஒரு படைப்பின் பெறுமதியை நிலைநாட்ட அது உருவான சமூக, வரலாற்று, அரசியல் பின்புலத்தை காரணமாக முன்வைக்கக் கூடாது. பிரதியின் அழகியல் வாசிப்பு பின்னுக்குத் தள்ளப்பட்டு அரசியல் காரணங்கள் அதன் இடத்தை நிர்ணயிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. அழகியல் ரீதியாக சாதாரண படைப்புகள் அரசியல் உள்ளடக்கத்தின் காரணமாக விதந்தோதப்படுவது இலக்கியச் செயல்பாடுக்கு எதிரானது. அழகியல் வாசிப்பிற்கு மேலதிகமாக கோட்பாட்டு சட்டகங்களை பயன்படுத்தும்போது அது வாசிப்பை மேன்மை செய்யும் வாய்ப்பு உண்டு. நவீன மனிதன் எப்படி உருவாகி வருகிறான், அவனுடைய கவலைகள் எத்தகையவையாக உள்ளன, என்பதை சமூக வரலாற்று சூழலைக் கருத்தில் கொண்டு வரையறை செய்யும்போது ஒரு இலக்கிய பிரதியின் உருவாக்கத்தை மேலதிகமாக உள்வாங்க முடிகிறது. ஜார்ஜ் ஆர்வெல்லை புரிந்துகொள்ள ஐரோப்பிய சர்வாதிகாரத்தின் வரலாறு தெரிந்திருப்பது வாசிப்பை ஆழப்படுத்துகிறது.


ப்ளூமின் பிரசித்தி பெற்ற மேற்கோள் ஒன்றுண்டு- “ஷேக்ஸ்பியரை ஃபிராய்டிய கண்ணோட்டத்தில் வாசித்தால் அது குறைத்தல்வாதம், நாம் பெறுவதற்கு எதுவுமே இல்லை, ஆனால் ஃப்ராய்டை ஷேக்ஸ்பியரின் கண்ணோட்டத்தில் வாசிக்கும்போது பல புதிய கோணங்களை திறக்கும்”. கோட்பாட்டு விமர்சனங்கள் வழியாக புனைவுகளைப் அறிவதைக் காட்டிலும் அக்கோட்பாட்டைப் பற்றிதான் நாம் அதிகம் அறிகிறோம். கொஞ்சம் மெனக்கிட்டு வாசித்தால் நாம் கோட்பாடுகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ளலாம். புதிய நுட்பங்கள் என எதுவும் அங்கு வந்து சேர்வதில்லை. எனினும் காலப்போக்கில் புதிய கோட்பாடுகள், வரையறைகள் உருவாகியவண்ணம் இருக்கின்றன. ரசனை ரீதியாக முக்கியத்துவம் பெற்ற படைப்புகளின் மீதான மேலதிக வாசிப்பை அளிக்கும் வகையில் உலகம் முழுவதும் கோட்பாடுகள் பயன்படுத்தப்படும் சூழலில், தமிழில் மட்டும் தேர்ந்த படைப்புகளை உதாசீனப்படுத்துவதற்கே அவை பயன்படுத்தப்படுவது விந்தைதான்.

புனைவுகளைச் சமூக மாற்றத்திற்கான கருவியாக காண்பது இங்கு பெண்ணிய, தலித்திய (பொதுவாய் அரசியல் அதிகாரத்தை மையப்படுத்தும்) வாசிப்பு. விடுதலையைப் பேசவில்லை என்றால் அதை அவர்கள் ஏற்பதில்லை. வர்க்கப் போராட்டத்தில் புனைவின் நிலைப்பாடு என்ன, இப்பிரதி அதை துரிதப்படுத்துமா, என்ற கேள்விகளே மார்க்சிய கவலையாக இருக்கிறது. நவவரலாற்றுவாதிகள் இப்புனைவு எங்கே அதிகார மாற்றம் அல்லது அதிகாரக் குவிப்பை நிகழ்த்த உத்தேசிக்கிறது, எவருடைய பிரதிநிதி என்று கேட்கின்றனர். இந்த புனைவை உருவாக்கிய சமூக, வரலாற்று காரணிகள் எவை என ஆராய்கின்றனர். நவவரலாற்றுவாதம் எழுத்தாளனின் பங்களிப்பை மறுக்கிறது. சமூக வரலாற்று காரணிகள் திரண்டு நிற்கும்போது அதை வெளிப்படுத்தும் ஊடகமாக மட்டுமே எழுத்தாளன் இருக்கிறான் என்கிறது. கவிஞரும் விமர்சகருமான டி.எஸ். எலியட் அவருடைய புகழ்பெற்ற ‘மரபும் தனித்திறமையும்’ எனும் கட்டுரையில் வேறு வகையில் எழுத்தாளனை மறுக்கிறார். எழுத்தாளன் ஒட்டுமொத்த கவிமரபைக் கற்றவன். அவன் வழியாக ஏற்கனவே உள்ளவை தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன என்கிறார். எழுத்தாளனின் தனித்தன்மையைத் தேடித் தேடி கொண்டாடுவதையே அவர் ஏற்க மறுக்கிறார்.

இதுவரை பேசப்பட்ட மேற்கத்திய கோட்பாடுகளை அப்படியே இறக்குமதி செய்யாமல் அவற்றுக்கு மாற்றாய் இந்தியச் இலக்கியச் சட்டகங்களை உருவாக்க வேண்டும் எனும் வாதம் கவனத்துடன் பரிசீலிக்கப் படவேண்டும். அதுவும் மற்றுமொரு கோட்பாட்டு விமர்சனமாகி விடலாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வாசிப்பு என்பது தனித்த அந்தரங்க செயல்பாடு என்பதே ரசனை விமர்சனத்தின் அடிப்படை.

எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் என்னவிதமான தொடர்பு உள்ளது எனும் கேள்வியை நாம் எழுப்பிக்கொண்டால் நம் விமர்சன முறைமை மேலும் துலக்கமாகும். எழுத்தாளனின் தனித்தன்மையை, திறமையை, உழைப்பைக் கொண்டாடும்போது ரசனை விமர்சனமாகவும் அவனை மரபின் குரலாக அல்லது சமூக ஆற்றலின் குரலாகக் காண்பது கோட்பாட்டு விமர்சனமாகவும் ஆகும். ஏனெனில் இதன் உட்பொருள் மரபோ, சமூக ஆற்றல்களோ தமது ஊடகத்தை தேர்ந்து எடுக்கின்றன என்பதே. ஷேக்ஸ்பியரோ தால்ஸ்தாயோ தாஸ்தாயேவ்ஸ்கியோ இல்லையென்றால் வேறொருவர் வழியாக இவை வெளிப்படும் எனும் நம்பிக்கையை அடிநாதமாகக் கொண்டவை. எழுத்தாளன் கருவியா, கர்த்தாவா, என்ற கேள்விக்கு என்னிடம் தீர்மானமான விடையில்லை. கர்த்தா என நம்ப விழைந்தாலும் அவன் கருவியாகவும் இயங்குகிறான் என்றே தோன்றுகிறது. எனினும் கருவியாக கலையை வெளிபடுத்தக்கூட எழுத்தாளன் தொடர்ந்து தன்னைக் கூர்மை செய்து, முனைப்புடன் அயராத உழைப்பை செலுத்த வேண்டியிருக்கிறது. அதற்கொரு தனியாளுமை உருவாக வேண்டும்.

பொதுவாக மார்க்சிய/ நவவரலாற்றுவாத சட்டகங்கள், அல்லது அது போன்ற பிற கோட்பாட்டுச் சட்டகங்கள், நாம் அறியாமலேயே நமக்குள் இருப்பதைக் கண்டடைவதே விமர்சகனின் சவால். எனக்குள் ஒரு நவவரலாற்றுவாதி இருந்ததை விமர்சன முறைமை குறித்தான வாசிப்புகள் வழியாக கண்டடைந்து திகைத்தேன். ஒருவேளை அதுதான் நாம் செல்ல விரும்பும் பாதை என்றால், அதற்குமுன் புனைவின் பயன்மதிப்பு என்ன எனும் கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். புனைவுகள் சமூக மேம்பாட்டிற்கான கருவி எனும் நம்பிக்கை நம்மிடமிருந்தால் நாம் ரசனை விமர்சகர் அல்ல.

இத்தருணத்தில் வு மிங் யி யின் சொற்களை பொருத்திக் கொள்கிறேன் “சில நேரங்களில் எல்லா கலைகளுமே கடைசியில் சுயநலம் மிகுந்தவை என்று தோன்றுகிறது, அது பிறர் மனதில் உறுதியாக மாற்றம் ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது- ஆனால் என்ன மாறுகிறதோ அதை நாம் மட்டுமே அறிய முடியும்”. ப்ளூம் நாம் இலக்கியத்தின் வழியாக மேம்படுவோம் என்பதை மறுக்கிறார். நம் அகக்குரல், இன்னும் சற்று துல்லியமாக கேட்கும் என்பதை மட்டுமே இலக்கிய வாசிப்பின் பயன்மதிப்பு என்கிறார். இலக்கிய பிரதிகள் சமூகத்தை மேம்படுத்துமா, வரலாற்றுப் போக்கை மாற்றியமைக்குமா, என்று கேட்டால், அப்படி நிகழ வாய்ப்புள்ளது. சில முன்னுதாரணங்களையும் சுட்ட முடியும். ஆனால் இத்தகைய நோக்கத்தை பிரகடனப்படுத்திக்கொண்டு ஒரு இலக்கியம் படைக்கப்படுமேயானால் அதன் ஆதாரமான கலையம்சம் காணாமல் போய்விடும் அபாயம் உண்டு.

முதன்மையாக, விமர்சகன் ஒரு வாசகன்தான். ஆனால் வாசகனுக்கு இருக்கும் தேர்வும் சுதந்திரமும் விமர்சகனுக்கு இருப்பதில்லை. அவனுக்குரிய கூடுதல் பொறுப்பின் காரணமாக அவனுக்குப் பிடித்தது, பிடிக்காதது எனும் பேதமின்றி, வசதிகளை துறந்து, அவனை சங்கடப்படுத்தும், நேரத்தை விழுங்கும், புதிய உலகிற்குள்ளும் பயணித்தாக வேண்டும். பெரும்பாலான சமயங்களில் இது அவனுக்கு வாதையாக இருந்தாலும்கூட, வேறு எவரும் கண்டடையாத ஒன்றை, ஒரு புதிய வாசிப்பைக் கண்டறிந்து அதை உலகிற்கு அறிவிக்கும் சாத்தியம் அவனை இயக்குகிறது. அரிதான தருணங்களில் அப்படி நிகழும்போது ஏற்படும் போதையே அவனுக்கு இப்பாதையில் பயணிக்க ஆற்றல் அளிக்கிறது.

தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களே விமர்சகர்களாகவும் இருப்பதால் இங்கு ரசனை விமர்சனமே மேலோங்கியுள்ளது. எழுத்தாளன் விமர்சகனாக இருக்கும் பட்சத்தில் அவனுக்கு சக எழுத்தாளனிடமும், முன்னோடிகளிடமும் கற்றுக்கொள்ள, உள்வாங்கிக்கொள்ள ஏராளமான நுட்பங்கள் கிட்டும். உள்ளூர அவன் தனது கலையுடன் ஒப்பிட்டு சுயமதிப்பீடு செய்துக்கொண்டே வருவான். ஆனால் எழுத்தாளன் விமர்சகனாக இருப்பதில் சில சிக்கல்கள் இல்லாமல் இல்லை. அவனுடைய படைப்பு மனம் சில சாதாரணமான சாத்தியங்களை கற்பனையாற்றலால் வளர்த்துப் பெருக்கிக் கொள்ளும். ஆகவே சில சமயங்களில் சாதாரண படைப்பும்கூட அவன் பார்வையில் அசாதாரணமாக ஆகிவிடும். ஒரு விமர்சகனாக அந்தப் படைப்பின் மேன்மையை அவனால் நிறுவ முடியாமல் போகும். ஆகவே எழுத்தாளர்- விமர்சகர்களை அவர்களுடைய சாய்வுகளுடன் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ரசனை விமர்சனத்தின் அளவுகோல் என்பது முற்றிலும் விமர்சகனின் வாசிப்பு விசாலம் மற்றும் நேர்மையை சார்ந்தது. அவன் சுட்டிக்காட்டுவதாலேயே ஒரு படைப்பு மேலானதாக ஆகிவிடாது. வாசக பரப்பும் ஏற்கும்போதே அது நிகழ்கிறது. ஒரு பிரதியை அதன் எழுத்தாளனோ அல்லது விமர்சகனின் பட்டியலோ ‘கேனானாக’ உயர்த்த முடியாது என்பதை தெளிவாக சொல்கிறார் ப்ளூம். வாசகனை விடவும், எழுத்தாளனை விடவும் விமர்சகன் வாசிப்பில் ஒருபடி முன்னே செல்ல வேண்டியது அவசியமாகும். அதுவே அவனுடைய விமர்சனத்தின் எல்லையை தீர்மானிக்கும். கோட்பாட்டு விமர்சகர்கள் ரசனை விமர்சனத்தின் மிகப்பெரிய குறைபாடாகச் சுட்டிக் காட்டுவது இந்த அகவய அம்சத்தைத்தான். சமூக பொறுப்பிலிருந்து நழுவி, ரசனை விமர்சனத்தின் பெயரால் எதையும் நியாயப்படுத்திவிட முடிகின்ற அபாயம் உள்ளது. புறவயமான அலகுகள் ஏதுமில்லை. மேலும் படைப்பிற்கும், படைப்பாளிக்கும் சமூக அக்கறையும் பொறுப்பும் உள்ளதா எனும் வினாவை அவர்கள் எழுப்புவார்கள். என்னளவில் எழுத்தாளன் தான் எழுதிய சொற்களை அன்றி வேறெதற்கும் பொறுப்பில்லை.

பரந்த வாசிப்பு விமர்சகனுக்கு தேவை என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் அதுவே தடையாகவும் ஆகிவிடக்கூடும். ஒவ்வொரு முறையும் படைப்பின் முன் தான் சேகரித்தவற்றை, சுமந்து வருபவை அனைத்தையும் களைந்து நிற்க வேண்டும். விமர்சகன் தனக்கென உருவாக்கிக் கொண்ட அளவுகோலை களையவில்லை என்றால் தன் அளவுகோலுக்கு பொருந்தாதவை அவனுள் புகாது. நல்ல விமர்சகன் தனது எல்லையைக் கடக்க முயல்வான். ஒரு திறந்த வாசகனாகவே இருப்பான். தீர்மானமான அளவுகோல் வாசகனுக்கும் விமர்சகனுக்கும் பேரிழப்பு. அவன் ஒரு போதும் பனைமரத்தைப் பார்த்து, “நீ ஏன் இத்தனை உயரமாக, குறைந்த இலைகளுடன் இருக்கிறாய், செறிவான மாமரத்தைப் போல் இல்லை?” என வினவமாட்டான். நவீனத்துவ பிரதியின் அளவுகோலாக செவ்வியல் பிரதியையோ பின்நவீனத்துவ பிரதியையோ பயன்படுத்தமாட்டான். வரலாற்று நாவலை மிகுபுனைவு நாவலுடன் ஒப்பிட முடியாது என்பதை அறிவான். படைப்புகளுக்குதான் அளவுகோலே ஒழிய அளவுகோலுக்கு உகந்த படைப்புகள் அல்ல.

விமர்சகன் வறண்ட மனநிலை கொண்ட நீதிமான் எனும் எதிர்பார்ப்பு போலியானது. நல்ல விமர்சகன் ஒரு படைப்பாளியும்கூட. படைப்பு மனத்தின் தடுமாற்றங்களும், தத்தளிப்புகளும் அவனுக்கு உண்டு. அவனுடைய பழக்கப்பட்ட வாசிப்பு தளத்திற்கு வெளியே வரும் புத்தகங்களை எதிர்கொள்ளும்போது அதை உள்வாங்கத் திணறுவான். எழுத்தாளனின் படைப்புடன் சேர்ந்தியங்கும் சக படைப்பாளி என்றே விமர்சகனைச் சொல்ல வேண்டும்.

விமர்சனம் யாருக்காக என்றொரு கேள்வியை எழுப்பிக்கொண்டால், ஒரு புனைவெழுத்தாளனாக, ரசனை விமர்சனம் எழுத்தாளனை நோக்கி எழுதப்படுவது அல்ல, என்பதை உணர்கிறேன். எழுதத் துவங்கும் காலகட்டத்தில் அவனுடைய செய்திறனுக்கு சில விமர்சனங்கள் உதவலாம். அதற்கப்பால் எழுத்தாளன் விமர்சனத்தால் உருவாவதும் இல்லை,மேம்படுவதும் இல்லை. தான் எழுதியவற்றை இப்படியெல்லாம் வாசிக்கிறார்கள் எனும் புரிதலுக்கு மேல் அவனுக்கு விமர்சனம் எதையுமே அளிப்பதில்லை.

தமிழ்ச் சூழலில் விமர்சகருக்கும், பிரதி மேம்படுத்துனர், பதிப்பாசிரியர் வேறுபாடுகள் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். படைப்பு குறித்து கருத்து சொல்பவர்கள் அனைவரையுமே நாம் விமர்சகர் என்றே சொல்கிறோம். நேர்மறை விமர்சனங்கள் சொற்ப காலத்திற்கு அவனை ஆற்றுப்படுத்தலாம். ஏனெனில் புனைவின் கருப்பொருள் அவன் தேர்வது அல்ல, அது அவனுக்கு அளிக்கப்படுகிறது.

விமர்சனம் வாசகரை நோக்கியே பேச வேண்டும். இத்தெளிவு இருந்தால் எழுத்தாளனை தனிப்பட்ட முறையில் அடித்து வீழ்த்தும் விசை அவசியமற்றது என்பது பிடிபடும். மார்க்சிய, நவ வரலாற்றுவாத விமர்சகர்கள் எழுத்தாளனின் நோக்கத்தின் மீது கேள்வி எழுப்பி அவனை முத்திரை குத்த முனைவது போல் ரசனை விமர்சகன் ஒருபோதும் செய்யக்கூடாது. அவனுடைய அக்கறை முழுவதும் படைப்பில் வெளிப்படும் கலைத்தன்மை பற்றியதாக மட்டுமே இருக்க முடியும். அதிலுள்ள போலித்தனங்களை, பாவனைகளை சமரசமின்றி சுட்டிக்காட்ட வேண்டும். ரசனை விமர்சகன் எழுத்தாளனை வகைப்படுத்த மாட்டான், வரிசைப் படுத்துவான் என்பதை இங்கு கவனிக்க வேண்டும். அவ்வரிசை எழுத்தாளனின் படைப்புகளில் இப்பிரதியின் இடம் என்ன, ஒட்டுமொத்த இலக்கிய மரபில் இந்த பிரதியின்/ எழுத்தாளனின் இடம் என்ன, என இருவகையானவை.

ஆகவே, ஒரு தேர்ந்த விமர்சகனின் வேலை என்பது வாசகனிடம் படைப்பின் புதிய வாசிப்பு கோணங்களை, நுட்பங்களை கொண்டு சேர்ப்பதே. இலக்கிய வரலாற்று ஆசிரியனைப் போல் எழுத்தாளனையும் அவனுடைய பிரதியையும் இலக்கிய வரலாற்று வெளியில் பொருத்திக் காட்டுவதே. அதன் அழகியலை வேறு ஆக்கங்களுடன் ஒப்பு நோக்குவதே. எழுத்தாளனின் தனித்தன்மையை அடையாளபடுத்தும் பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. எழுத்தாளனை, பிரதியை ஒரு வரிசையில் வைக்கும்போது முன்னோடிகளிடம் இருக்கும் தொடர்ச்சியையும் அதிலிருந்து இவன் கிளைத்துப் பிரியும் புள்ளியையும் அடையாளம் காட்ட வேண்டியது விமர்சகனின் கடமை. பல சமயங்களில் விமர்சகனின் இத்தகைய செயல்பாடு எழுத்தாளனுக்கு உவக்காது. வாசகனில் இருந்து விமர்சகன் மேலெழும் புள்ளி என்பது அவனால் தன் நிலைப்பாடுகளை ஓரளவு தர்க்கபூர்வமாக முன்வைக்க முடிவதில் உள்ளது. தர்க்கமும்கூட ஒரு எல்லை வரைதான். ஏனெனில் அழகியல் ரசனை அந்தரங்கமானதும் கூட.

விமர்சகனின் சுட்டிக்காட்டுதல்கள் அது எத்தனை அப்பட்டமாக, சில வேளைகளில் வன்மம் தொனிப்பதாக இருந்தாலும்கூட அவன் இலக்கியத்தின் மீதான பெரும் காதலினால் மட்டுமே அதைச் செய்கிறான் எனும் புரிதல் முதலில் சக விமர்சகனுக்கும் பின்னர் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் அவசியமாகிறது.

இறுதியாக ஒன்று, ஒரு நல்ல விமர்சகன் கடல் அலையை அல்ல, அந்த அலைகளுக்கு அடியில், ஆழத்தில், நீரின் திசையை, அதன் விசையைத் தீர்மானிக்கும், டெக்டானிக் தட்டுக்களின் அசைவை காட்டுவதற்கே முயல்கிறான்.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முறி மருந்து: யுவன் சந்திரசேகரின் சிறுகதை உலகம்


(சிற்றில் மற்றும் அமெரிக்கன் கல்லூரி எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்காக ஒருநாள் கருத்தரங்கை மதுரையில் ஏற்பாடு செய்திருந்தது. அதற்காக எழுதிய கட்டுரை. தமிழினியில் வெளிவந்தது)
‘சொல்லு நீ என்ன சொல்லப் போகிறாய்?’

‘கதை தான். வேறென்ன? ஒருவருக்கொருவர் கதையைச் சொல்வதும் கேட்டுக் கொள்வதும் தவிர, செய்வதற்கு பிரமாதமான வேலை என்ன தான் இருக்கிறது?’ – அறியாப்பிழை, யுவன் சந்திரசேகர்

பயிற்சி மருத்துவராக இருந்த காலகட்டத்தில் நானும் என் நண்பனும் மாலை நேரம் தாம்பரத்தின் அருகே இருந்த ஒரு மூத்த அலோபதி மருத்துவரிடம் உதவி மருத்துவர்களாக பணியாற்றினோம். அவருக்கு முடக்குவாதம். நெடுநேரம் இருக்கையில் அமர்ந்து நோயாளிகளை நோக்க முடியாது. கழுத்தைத் தனியாக திருப்ப முடியாமல் உடல் முழுவதையும் திருப்புவார். மருத்துவமனை வளாகத்தின் மாடி தான் அவருடைய வீடு. நாங்கள் நோயாளிகளை பார்ப்பதற்கு அமரும் மாலை வேளைகளில் மாடியிலிருந்து இன்ன பாடல் இன்ன ராகம் எனப் பிரித்தறிய முடியாத அபூர்வமான வீணையின் நாதம் ஒருவித துயரத்தைக் கவியச் செய்தபடி எழும். வாசித்து முடித்து இறங்கி வருவார். நோயாளிகள் ஓய்ந்த பொழுதில் எங்களிடம் ஆயுர்வேதம் குறித்து கேட்பார். “ஹார்ட், லங்ஸ், கிட்னி இதெல்லாம் உடம்ப அறுத்தா பாக்க முடியும். செல், அதுக்குள்ள இருக்குற மைட்டோகான்ரியா எல்லாம் கூட மைக்ரோஸ்கோப்பில தெரிஞ்சிடும். இந்த மாதிரி நீங்க சொல்ற வாத பித்த கபத்த காட்ட முடியும்னு நம்புறீங்களா? தப்பா நெனைச்சுக்காதீங்க” என கண்ணாடிக்கும் புருவத்திற்குமான இடைவெளியிலிருந்து கூர்மையாக நோக்கியபடி கேட்பார். அவருக்கு எங்களை சிறுமை செய்ய வேண்டிய தேவையில்லை என்றாலும் அவருடைய கேள்வி மனதைக் குடையும். அன்றைய தேதியில் எங்களால் அவருக்கு எந்த பதிலும் சொல்ல இயலவில்லை. இன்றும் கூட இப்படியான ஒரு கேள்விக்கு திருப்திகரமான ஒரு பதிலை சொல்லிவிட முடியாது.

நாளடைவில் அவர் எங்களுக்கு நெருக்கமானார். அவருடைய முடக்கு அதிகரித்தபடியே இருந்தது. மூட்டுகளில் வலியும் வீக்கமும் அதிகரித்தன. ஒருநாள் அவர் மாடியிலிருந்து இறங்கி வரவே இல்லை. மேலே சென்று நோக்கிய போது வெறுமே வீணையை வெறித்தபடி நாற்காலியில் அமர்ந்திருந்தார். எங்களைப் பார்த்ததும் சைகையில் முடியவில்லை என கையசைத்து விட்டு தடுமாறி நடந்து அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டார். மெல்ல நடை குறைந்து மாடியை விட்டு இறங்குவதே இல்லை என்றானது. அறையில், கட்டிலில் இசை கேட்டபடி எந்நேரமும் சாளரத்தின் வழியே விரையும் மின்சார ரயில்களை வேடிக்கை பார்த்தபடி கிடப்பார். மெதுவாக அவருடனும் அவருடைய மனைவியுடனும் பேசி ஆயுர்வேத சிகிச்சைக்கு சம்மதிக்கச் செய்தோம். அரைமனதுடன் ஒப்புக்கொண்டார். குதம் வழி மருந்து செலுத்தும் வஸ்தி சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற என் ஆசிரியர்களில் ஒருவரிடம் அவரை அழைத்துச் சென்றோம். அவருக்கு அதன் தர்க்கம் விளங்கவில்லை. மிகுந்த குழப்பத்துடன் தன்னை சிகிச்சைக்கு அளித்தார். ஆனால் பதினான்கு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய மாலையில் மீண்டும் வீணை ஒலித்தது. அன்று மாலை மாடியிறங்கி வந்து எங்களிடம் சன்னமான குரலில், தயங்கியபடி “ஹார்ட், லங்க்ஸ். கிட்னி போல இதே உடம்புக்குள்ள வாதம் பித்தமும் இருக்கும் தான் போல” என்றார்.

யுவன் சந்திரசேகரின் படைப்புலகம் குறித்த கட்டுரையில் அவருடைய பாணியில் இப்படியான ஒரு கதையைச் சொல்லித் தொடங்குவதற்கு, ஆயுர்வேத மேன்மையை அல்லது நவீன மருத்துவத்தின் எல்லையை அல்லது மருத்துவரின் பரந்த மனப்பான்மையை சுட்டுவது நோக்கமல்ல. இந்த மருத்துவர் யார்? அவருக்கு சிகிச்சை அளித்தவர் யார்? இது உண்மை நிகழ்வா? அல்லது கதையா? எனக் கேட்பவர்களுக்கு யுவனின் ‘கற்புக்கரசன்’ கதையில், எம்ஜிஆர் மரணமடைந்து, போக்குவரத்து நின்று, புது மனைவியை பிரிந்த சோகத்தில் இருக்கும் கிருஷ்ணனுக்கு, ரயிலில் ஏற்றிவிட வந்திருந்த  திருப்பதி சொன்னதை பதிலாக தரலாம் “ஏலே, நீ என்ன இம்ம்ம்புட்டு மக்கா இருக்குறே. நடக்கும் போதுதானரா அது சமாசாரம். நடந்து முடிஞ்சப்பறம்? கதெதானே? இந்தா, இதே எம்ஞ்சாரு இருந்தாரு, இருந்த வரிக்கிம் அவரு நடிகரு, மொதல்வரு, இன்னைக்கி அவரு கதையாயிட்டாரா இல்லையா?’ பொதுவாக நிகழ்வு கடந்த பின் வரலாறாக ஆகும். ஆனால் யுவனுக்கு அது கதையாகிறது.

யுவன் கதைகளைப் பற்றி எழுதும்போது இக்கதைகள் பிடித்திருக்கின்றன, நெருக்கமாக உணர முடிகிறது, வெகுவாக மனதை அமைதியிழக்கச் செய்கிறது போன்ற அபிப்பிராயங்களுக்கு அப்பால் எதையும் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. ஏனெனில் யுவன் கதைகளை சாராம்சப்படுத்தி திரண்ட கருத்தை சுருக்கி அளிப்பது சாத்தியமில்லை. ஒருவகையில் அது அவருடைய படைப்புத் தளத்திற்கே விரோதமானதும் கூட. “மௌனியின் கதைகளில் வரலாற்றுப் பார்வை” எனச் சில கலைச் சொற்களை பயன்படுத்தி கிருஷ்ணன் எழுதிய கட்டுரையைப் போல் ஆகிவிடும் அபாயம் யுவன் தமிழ் இலக்கியத்தின் கலகக் குரல் என நிறுவ முயலும் இக்கட்டுரைக்கும் உண்டு தான். எனினும் அவருடைய புனைவுத் தளம் சார்ந்து சில அவதானிப்புகளை கொண்டு படைப்புலகின் இயங்கு விசையை அடையாளம் காணும் முயற்சியே இக்கட்டுரை.

மேற்சொன்ன கதையின் வழியாகவே யுவனின் படைப்புலகை என்னால் நெருங்கி புரிந்துகொள்ள முடிந்தது. அவரை எனக்கான கதைசொல்லி என உணர்ந்த தளமும் அதுவே. ஒற்றைப்படையான புறவயமான உண்மைகளை மறுப்பது. பன்முகம் கொண்ட, அகவயமான மெய்மையை மாற்றாக நிறுவுவது. ‘ஒளி விலகல்’, ‘ஏற்கனவே’, ‘கடல் கொண்ட நிலம்’, ‘நீர்ப்பறவைகளின் தியானம்’, ‘ஏமாறும் கலை’, ‘ஒற்றறிதல்’ என இதுவரை ஆறு தொகுதிகள் வெளியாகியுள்ளன. முதல் மூன்று தொகுதிகள் ‘யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்’ எனும் ஒரே தொகுப்பாக கிடைக்கிறது. மொத்தம் 73  கதைகள். ஆனால் இவை 73 தலைப்புகள் கீழ் தொகுக்கப்பட்டவை என்று வேண்டுமானால் சொல்லலாம். கதைகளின் எண்ணிக்கை முந்நூறைத் தொடும் என்பது என் கணிப்பு. நாவலின் உப கதைகளைச் சேர்த்தால் எப்படியும் ஆயிரம் கதைகளாவது வரும் என்று எண்ணுகிறேன். நாவலுக்கு குறுங்கதைக்கும் சிறுகதைக்கும் இடையிலான கோடுகளை அழித்திருக்கிறார். மொத்த படைப்புலகையும் ‘சரஞ் சரமாய்’ கோர்க்கப்பட்ட குறுங்கதைகள் என்றோ பின்னப்பட்ட ஒரே நாவல் என்றோ வாசிக்க முடியும். கதைதொடுத்து உருவாகும் சரத்தின் அளவே குறுங்கதையா சிறுகதையா நாவலா என்பதை முடிவு செய்கிறது. ‘நீர்ப்பறவைகளின் தியானம்’ தொகுப்பில் இடம்பெற்றுள்ள, ‘காணாமல் போனவனின் கடிதங்கள்’ எனும் கதையில் எழுத்தாளர் கிருஷ்ணனுக்கு அவருடைய நண்பர் சிவச்சந்திரன் கடிதங்கள் எழுதுகிறார். அவை யுவனின் புனைவுலகம் பற்றிய பார்வையைத் துல்லியமாக வைப்பவை.

“வாஸ்தவத்தில், இந்த மாதிரிக் கதைகளில் எழுதுகிறவனுக்கு உள்ளதை விட, வாசிக்கிறவருக்கு மிக அதிகமான சுதந்திரம் இருக்கிறது. இரண்டாம் வாசிப்பில் உட்கதைகளை வாசகர் தம் இஷ்டப்படி வரிசைமாற்றிக் கூட வாசித்துக் கொள்ளலாம்.

உன்னுடைய கதைகளில் நீ உருவாக்கும் உதிரிக் கதைகள் உத்தியின் சிறப்பம்சம் அது. மொத்தத் தொகுப்பை வாசிக்கும் ஒருவர் தமக்குப் பிடித்த கதைகளை உருவி தமக்குப் பிடித்த மாதிரியான முழுக்கதை வேறொன்றை சிருஷ்டித்துக் கொள்ளலாம்.”

யுவன் தன் கதைகூறும் முறைகளைப் பற்றியும் அதன் இயங்குதளத்தைப் பற்றியும் கதைகளின் ஊடாக தெளிவாகவே முன்வைக்கிறார். கதைகளுக்குள் கதைகளைப் பற்றிய விமர்சனங்கள் கூட உண்டு. ‘நீர்ப்பறவைகளின் தியானம்’ தொகுப்பின் முன்னுரையில் யுவன் எழுதுகிறார்.

“ஞாபகங்களிலிருந்து கற்பனைக்கு நகர்வதும், சிந்தனையின் ஒரு தெறிப்பைப் பற்றிக் கொண்டு ஞாபகத்தின் அடியாழத்தில் எதையோ தேடிச் செல்வதுமான இருவழிப் போக்குவரத்து பிறப்பிக்கும் சம்பவத் தொடர்களே என் கதைகள்… ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவையாகத் தோற்றமளிக்கும் கதைகளை நுட்பமாகக் கோத்துச் செல்லும் சரடு சில சமயம் வெளிப்படையானது. பல சமயம் பூடகமாக இருப்பது வாசகருக்கு இணையாக நானும் அந்தச் சரடைத் தேடிப் பிடிக்க முயல்கிறேன்.”



தொடர்ச்சியாக யுவனின் கதைகளில் இந்தத் தன்மையை காண முடியும். நினைவில் எழும் ஒரு முகம் தன்னோடு சேர்ந்து வேறு சில நினைவுகளைக் கொண்டு வரும், அந்த நினைவுகள் வேறு சில முகங்களை மேற்பரப்பிற்கு கொணரும். நினைவுச் சங்கிலி அசல் அனுபவங்களாலும் கற்பனைகளாலும் வாசித்தவைகளாலும் கட்டமைக்கப்பட்டது. இவை பிரித்தறிய முடியாத அளவிற்கு ஒன்றோடு ஒன்று முயங்கிக் கிடக்கிறது. அவருடைய கதையில் சிவச்சந்திரன் எழுதும் கடிதத்தில், “வாலிபத்தின், முன்வயோதிகத்தின், சொற்சேகரிப்பைக் கால்வாயாகக் கொண்டு பாய்வது பால்யத்தின் சுனை தான்” என எழுதுகிறார். அவருடைய கதைகள் கடந்த காலத்தின் நினைவுகளை உருமாற்றி எழுத்தாக்க முயல்பவை. ஆனால் ஒருபோதும் அதில் நினைவேக்கத் தோணி இருந்ததில்லை. அவருடைய ஒரு கதையில் வருவது போல் “வாழ்க்கை பொன்மயமாக ஆவதற்கு அதிக நேரமொன்றும் பிடித்துவிடாது என்று நிஜமாகவே நம்பியவன் நான். தவிர உண்மையைத் தான் சொல்ல வேண்டும் என்று நிர்பந்தம் எதாவது இருக்கிறதா என்ன? நடந்தால் தான் உண்மையா? நடக்க சாத்தியம் இருந்தால் போதாதா? இதைவிடப் பெரிய புளுகர்களை கலைஞர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை? எல்லாவற்றுக்கும் மேல், சுவாரசியமாக இருக்கிறதா இல்லையா?”

உண்மை என்ற ஒன்றை மறுப்பவர் இயல்பாகவே புறவயமான வரலாறை ஏற்பது நியாயமில்லை. அது இறுக்கமானது, அனைத்தையும் திட்டவட்டமாக ஐயமின்றி வகுக்க முயல்வது, அறிவியலுக்குள் கரந்திருப்பது போலவே வரலாற்றிலும் வன்முறை உறைந்துள்ளது என்று எண்ணுகிறேன். யுவன் இறுகிய, ஐயமற்ற, ஒற்றைப்படையான வரலாற்றுக்கு மாற்றாக அகவயமான, பிழைகளும் ஐயங்களும் மலிந்த, பல்தளம் கொண்ட நினைவுகளை முன்னிறுத்துகிறார். யுவனுடைய ‘குறிப்பேடு’ எனும் கதையில் எது வரலாறு என்றொரு வயோதிக பட்டர் இசைத்தட்டுகளைச் சேகரிக்கத் தேடி வரும் சடகோபனிடம் சொல்வது இங்கே பொருத்தமாக இருக்கும்.

“இந்த ரூம்லெ ஒரு வாசனை இருக்கே, நான் கொழந்தையாயிருக்கும் போதிலே இருந்து இதே புழுக்கை வாசனை தான். வாசனையும் ஒரு ரிக்காடு தான் அம்பீ. வாஸ்தவத்திலே நமக்குத் தெரியவே செய்யாத ஏகப்பட்ட ரிக்காடுகள் இருக்கலாம். நமக்குத் தெரியாததாலே அதெல்லாம் இல்லேன்னு நெனைச்சிகறோம்.”

ஒருவகையில் இதை ஒரு பின்நவீனத்துவ கூறு என்று கொள்ளலாம், அதைவிடவும் இது ஒரு மரபான இந்தியத்தன்மை என்று சுட்டலாம். பொதுவாகவே இந்திய இலக்கியங்களில் காணக் கிடைக்கும் இந்தக் காலாதீத தன்மையைப் பற்றி ஷெல்டன் போலாக்கின் அவதானிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. “நம்ப முடியாத அளவுக்கு, சம்ஸ்க்ருத நூல்களை இயற்றியவர்களைப் பற்றி நாம் ஏதும் அறிவதில்லை, அல்லது புனைப்பெயர்களை மட்டுமே அறிகிறோம். எவ்வித நூலாக இருந்தாலும்  எழுதியவரின் ஆளுமையை மற்றும் அவருடைய காலகட்டத்தை அடையாளம் காணும் அம்சங்களை நூலிலிருந்து முழுவதுமாக வெளியேற்றி வரலாறற்ற தன்மையை அளிப்பதற்கு ஓர் உத்தியாக கையாள்கிறார்கள். உதாரணமாக அரசாளுமை பற்றிய நூல்கள் வரலாற்றுப் பூர்வமாக திகழ்ந்த ஒரேயொரு அரசை கூட சூட்டாமல் அதன் குடிமகன்களைப் பற்றி விவரிக்கிறது…சுருக்கமாக நாம் வெவ்வேறு பேசுபொருளில் ஒரேயொரு வரலாற்று ஆளுமை, இடம், நிகழ்வை அல்லது வரலாற்று ரீதியாகப் பொருள் தரக்கூடிய ஒன்றை எதிர்கொள்ளாமலேயே சம்ஸ்க்ருதத்தில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் வாசிக்கலாம்.”

பொதுவாக இந்தியாவின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு தான். வாய்மொழி வரலாறு நாட்டாரியல் துறையாக வளர்ச்சி பெற்ற போது மாற்று பார்வைகள் உருவாயின. பின் காலனிய, பின் நவீனத்துவ அறிவு விவாதத்தில் அவை முக்கியப் பங்களிப்பவை. இந்தியாவின் வரலாரற்றத் தன்மை எனச் சொல்லும் போது எது வரலாறு எனும் கேள்வி எழுகிறது. கதைகள் வெறும் கதைகள் அல்ல. அவை எவற்றுக்கோ எதிர்வினையாகவும் இருக்கக்கூடும். யுவனின் கதைகளில் வரலாற்றுத் தருணங்கள் வருகின்றன. ‘இந்தியாவை விட்டு வெளியேறு’, ‘எமர்ஜென்சி’, ‘எம் ஜி ஆர் மரணம்’, ‘ஈழம்’, ‘இந்திராகாந்தி மரணம்’, ‘ராஜீவ் மரணம்’ எனச் சிலவற்றைச் சுட்டிக்காட்டலாம். ‘ஆர்.எஸ்.எஸ்’ ‘இடதுசாரி அமைப்புகள் போன்றவை பெயரிலியாகவோ மாற்று பெயருடனோ கதைகளில் உலவுகின்றன. ஆனால் இத்தகைய வரலாற்று அடையாளங்களை படைபூக்கத்துடன் பாத்திரங்களின் மர்மத்தன்மையை அடர்த்தியாக்கவே பயன்படுத்துகிறார். யுவன் வரலாறை மற்றுமொரு கதையாடலாகவே காண்கிறார். அவர் கதைகளில் உள்ள வரலாற்று இடுகுறிகள் அவருடைய படைப்புலகின் ஆழ அகலத்தை அபாரமாக விரிவடையச் செய்யும். சித்தர்கள் மற்றும் சாமியார்களின் சரிதங்களை வாசித்தவர்களுக்கு ‘குள்ளச்சித்தன் சரித்திரம்’ குழந்தையானந்த சுவாமிகள், சேஷாத்ரி சுவாமிகள் எனச் சிலரை நினைவுறுத்தக் கூடும். ஒரு உரையாடலில், தேவதச்சனை காண நகைக்கடைக்குச் சென்ற போது அவர் சொன்ன ‘வெயிட் பண்ணாம காத்திரு’ எனும் வாக்கியம் தாவோ மியான் சார்ந்த ஒரு ஜென் கதையாக (அப்பா சொன்ன கதைகள்) உருமாற்றம் கொண்டுள்ளது. (தாவோ மியானே லாவோசுவின் திரிபடைந்த வடிவம் எனச் சொல்லலாம்).

‘இருபத்தி மூன்று காதல் கதைகள்’ வாசித்த போது சடாரென அவை இருபத்தி மூன்று எழுத்தாளர்களின் பாணியில் எழுதிய காதல் கதைகளாக இருக்கக் கூடுமோ எனும் ஐயம் எழுந்தது. சில கதைகளை தி. ஜானகிராமன், பாலகுமாரன், சுஜாதா என இணைத்து வாசிக்க முடிந்தது. ஒரு கதையில் ஆலன் வாட்ஸ் கிறிஸ்மஸ் ஹம்பரிஸ் போன்றவர்களுக்கு இணையானவர் என விட்னி ரோஜர்ஸ் எனும் பெயரைக் குறிப்பிட்டதும், முன்னவர்களைப் பற்றி கேள்வி பட்டிருப்பதால் இவரும் உண்மையோ என்று விட்னியைப் பற்றி இணையத்தில் தேடிச் சலித்தேன். 1999ல் சிறந்த கதை ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பை நினைவுறுத்துவது. ஏப்ரல் மாத கதையில் சரளா என சுட்டப்படும் எழுத்தாளர் சுஜாதாவின் சாயல் கொண்டவர் என்றுணர முடிந்தது. டிசம்பர் மாத கதை எழுதியிருக்கும் பழ. குஞ்சிதபாதம் உண்மையில் அழ வள்ளியப்பா மற்றும் சின்ன அண்ணாமலையின் கலவையில் உருவானவர் எனக் கண்டடைந்தது பெரும் கிளர்ச்சியை அளித்தது. கேம் ஆப் த்ரோன்ஸ் எழுதிய ஜார்ஜ் ஆர்.ஆர். மார்டின் அதை முழுக்க மிகு புனைவு தொடர் நாவலாக வடிவமைத்திருந்தாலும் அவற்றுள் உள்ள நிகழ்வுகள் அந்தரத்தில் உதித்தவை அல்ல, அவை ஐரோப்பிய வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை என விமர்சகர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். யுவனின் கதைகளில் இந்தத் தளத்தை வாசகன் விரும்பினால் துப்பு துலக்கி பின்தொடர்ந்து செல்லலாம்.. யுவனின் கதைகள் பரவலாக நம்பப்படுவது போல் வரலாற்றை புறக்கணிப்பது அல்ல, யுவனுக்கு அபாரமான வரலாற்று பிரக்ஞை உண்டு. ஆகவே வரலாற்றைப் புனைவுக்கு சாதகமாக கோணல்மாணலாக திருகிக் கொள்கிறது. இந்தக் கலவை மற்றும் தேர்வு ஒரு மாயக்கணத்தில் நிகழ்பவை. யுவன் தன்னுடைய மொத்தத் தொகுப்பின் முன்னுரையில் அவருடைய தந்தையுடனான உரையாடலை நினைவுகூர்கிறார். அவரிடம் பகல் கனவு என்றால் என்ன என வினவியபோது “கனவுன்னா, தூங்கும்போது வரும். பகல் கனவு முழுச்சிக்கிண்டிருக்கும் போது வரும்.” எனச் சொன்னதைச் சொல்லி விட்டு, “மேலும் ‘எழுத்தைப் பொறுத்தவரை கனவும் பகற்கனவும் ஒருசேரப் பிணைந்த ஒரு புலமாகத் தோன்றுகிறது. என்ன எழுத வேண்டும் என்பது ஒரு கனவின் தன்மையோடு தான் கருக்கொள்கிறது. எப்படி எழுதவிருக்கிறோம் என்பது ஒரு பகற்கனவைப் போலவே வளர்ச்சி கொள்கிறது.” என முடிக்கிறார். இதுவே வரலாறும் நினைவும் முயங்கும் புள்ளி.

இந்தப் புரிதலுடன் அவருடைய படைப்புலகை அணுகும் போது, வரலாற்றுடனான ஒருவகை விளையாட்டாக அவருடைய புனைவுகளை ஆக்கிக் கொள்கிறார் எனத் தோன்றியது. வரலாற்றை நோக்கியபடி வெளிப்படும் புனைவின் கேலிச் சிரிப்பு என யுவனின் கதைகளைச் சொல்ல முடியும். யுவனின் வாசிப்பு பாண்டுரங்க பக்த விஜயம் தொடங்கி லத்தீன் அமெரிக்க இலக்கியம் வரை பல தளங்களில் நீள்கிறது. ஜென் கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், துப்பறியும் கதைகள் தொடங்கி சமகாலக் செய்திகள் வரை அவர் புனைவுகளுக்கு இடுபொருளாக உருமாற்றிப் பயன்படுத்துகிறார். அவருடைய விரிந்த வாசிப்புபுலம் உண்மையில் பிரமிப்பையே அளிக்கிறது. கரோலஸ் கேஸடன்டினோ, கசன்ஜாகிஸ், ரிச்சர்ட் பெயின்மேன், ஆலிவர் சாக்ஸ் என இன்னும் கதைகளில் அவர் சுட்டும் வேறு எழுத்தாளர்கள், அவர்களுடைய ஆக்கங்கள் எனக் கதைக்கு வெளியே சென்று, விரித்து வாசித்துக் கொண்டே போனால் முடிவற்ற பின்னல்களால் ஆன ஒரு அழியாத கோலத்தின் சிறு துணுக்கை மட்டுமே காட்சிப்படுத்தி கதையாக்குகிறார் என்பது புலப்படும். பிரபஞ்சமே நெளிந்து சுழியும் பிரம்மாண்டமான கதை பரப்பு என்பதே யுவனின் தரிசனம். புகைவழிப் பாதையில் வரும் இப்பகுதி அதை சரியாகச் சொல்லும் என நம்புகிறேன். “நம் கண்முன்னால் விரிந்து கிடக்கும் உலகம் ஒரு சித்திரம் மட்டுமே என்றும், இதற்குள் ஒன்றின் கீழ் ஒன்றாகப் படிந்திருக்கும் உள் சித்திரங்கள் பற்றி நமக்கெல்லாம் ஒன்றுமே தெரியாது என்றும் அடிக்கடி சொல்வான்.”

இக்காரணங்களினாலேயே யுவன் நவீன தமிழ் இலக்கியப் புனைவு வெளியின் மிக முக்கியமான கலகக் குரல் ஆகிறார். ஒருவேளை இதை அவர் மறுக்கவும் கூடும். சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களையும் அப்படியே மதிப்பிடுவேன். பெரும்போக்கு நவீன இலக்கியத்திற்கு மாறான திசையைத் தேர்பவர்கள். தாங்கள் நம்பியவற்றுக்காக வாசகப் பரப்பை இழக்கவும் துணிந்தவர்கள். நவீன இலக்கியத்தின் வரையறைகளை நெகிழ்த்துபவர்கள்.

பொதுவாக தமிழ் இலக்கியவாதிகளை ‘எழுத்தாளர்கள்’ மற்றும் ‘கதைசொல்லிகள்’ எனத் தோராயமாக வகைப்படுத்தலாம். ஒரு அளவுகோலின் இரு முனைகள் என இவற்றைச் சுட்டினால், புரிதலின் பொருட்டு கி.ராவை ஒரு முனையிலும் மௌனியை மறுமுனையிலும் நிறுத்தலாம். பிற இலக்கியவாதிகள் அனைவரும் இவ்விரு கூற்றுகளின் வெவ்வேறு அடர்த்திகளில் உருவானவர்கள். ஒரு கதையை நாம் வரிகளாக, சொற்களாக நினைவு கூர்ந்தோம் எனில் அக்கதையில் இலக்கியவாதி எழுத்தாளனாக வெளிப்பட்டிருக்கிறான் எனச் சொல்லலாம். சுந்தர ராமசாமி, ஆதவன், சம்பத் எனப் பலரையும் அப்படித்தான் நினைவு கூர்கிறோம். ஒரு கதையை சம்பவமாக நினைவுகூர்வோம் எனில் அங்கே கதைசொல்லியின் இயல்பு வெளிப்படுகிறது என்று தோராயமாக வகுத்துக் கொள்ளலாம். எழுத்தாளனின் கதையைச் ‘சொல்வது’ அத்தனை எளிதல்ல. கதைசொல்லியின் கதை சொல்வதற்கு உரியவை.

ஓரளவு அவருடைய மாற்று ஆளுமையைப் போல் உருவாக்கி பல்வேறு கதைசொல்லிகளின் சாயல்களை ஏற்று முக்கிய பாத்திரமான கிருஷ்ணன் முழுக்க இருத்தலியல் சிக்கல்களைக் கொண்ட நவீன எழுத்தாளன். யுவன் தான் கிருஷ்ணனா என்றால் ஆமாம் என்றும் இல்லையென்றும் சொல்லலாம். கிருஷ்ணன் உருவான கதையை அவருடைய “நூற்றி சொச்சம் நண்பர்கள்” கதையில் சில பத்திகளில் எழுதி இருக்கிறார். கிருஷ்ணனை புரிந்துகொள்ள முக்கியமான பகுதி என்பதால் அந்தப் பகுதியை முழு மேற்கோளாக அளிக்கிறேன்.

“அந்தக் கதையின் நாயகனுக்கு கிருஷ்ணன் என்றே பெயர் சூட்டினேன். பிறகு அடுத்த சம்பவம். இன்னொரு சம்பவம். அடுத்தக் கதை.. தொடர்ந்து வந்த நாட்களில் ஏற்கனவே என்னுள் இடம்பிடித்த நாயகர்கள் அனைவரின் கூட்டுத் தொகுப்பாகவும், அவர்கள் யாரிடமுமே இல்லாத ஏதோவொரு தனி அம்சத்துடனும் கிருஷ்ணன் முழு உருக்கொள்ள ஆரம்பித்தான்.

அவனுடைய சுதந்திரம் அலாதியானது. பொறாமையூட்டக் கூடியது. நான் செல்லத் தயங்கும் இடங்களை, செய்யக் கூசும் காரியங்களை, வெளிச் சொல்ல முடியாத தாபங்களை, வாலிபத்துக்குப் பொருந்தாமல் எனக்குள் உயிர்த்துடிப்புடன் இருந்து கொண்டிருக்கும் குழந்தைமையின் ஏக்கங்களை, கனவுகளின் வழுக்குப் பாறைகளை, தினசரி வாழ்வின் அவமானங்களை, தொடுவானத்துக்கு அருகில் ஒளிந்து கொண்டிருக்கும் தொலைதூர இலக்குகளை, மொழியில் சொல்லிவிட முடியாத அனுபவத்தின் இண்டு இடுக்குகளைச் சர்வ சாதாரணமாகக் கையாள்வான் கிருஷ்ணன்.

நான் உருவளித்தவன் தான் என்றாலும், தன் வளர்ச்சிப் போக்கில் அவன் எனக்குச் சொல்லிக் கொடுத்தது தான் அதிகம். ஒற்றன் போல, தாதி போல, ஆசான் போல, தத்துவ அறிஞன் போல, அண்டர்கிரவுண்ட் கிரிமினல் போல, தாசி போல, கர்ம வீரன் போல அவன் எடுக்கும் அவதாரங்களில் என் சாயல் மிகச் சிறிதே இருக்கும். ஆனால் தாள்களில் உருவாகி முழுமை பெரும் அவனுடைய பாதையில் அடியொற்றிச் செல்லும் சக பிரயாணி போல நான் நடக்க ஆரம்பித்தேன். ஒரே கதையின் வெவ்வேறு பகுதிகளை நாங்கள் மாறி மாறி எழுதுவோம். என் தினசரிகள் வேற்றுருக் கொள்ளத் தொடங்கின. கிருஷ்ணனை வேவு பார்க்கும் கிருஷ்ணனாக நான் மாறிக் கொண்டே போனேன்.”

கிருஷ்ணன் ஒரு புனைப்பெயர் அல்ல. அவனொரு புனைவு ஆளுமை அல்லது இணையாளுமை. இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம் என்றால் போர்த்துகீசிய எழுத்தாளர் பெர்னான்டோ பெசொவா பல புனைவாளுமைகளை உருவாக்கினார். அவர்கள் எழுத்தாளனோடு முற்றிலும்  முரண்படக்கூடிய, சமூக ஏற்பற்ற கருத்துகளை கொண்டவர்களாகவும் கூட இருந்தார்கள் என்பதை விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். சுகவனம், இஸ்மாயில் ஆகியோரும் புனைவாளுமைகளே. எழுத்தாளனின் சில இயல்புகளை ஏற்று இல்லாத இயல்புகளையும், விழையும் இயல்புகளையும் இணைத்து உருவானவன். கிருஷ்ணன் கதைசொல்லியாக வரும் கதைகளில் அவனுக்கும் பத்மினிக்கும் இடையிலான உறவு சீராகவும் நேர்மறையாகவுமே சித்தரிக்கப்பட்டுள்ளது. பால்ய காலத்தில் நிகழ்ந்த தந்தையின் மரணம் நினைவுக்கூரப்படுகிறது. அவர் மீது இருக்கும் அபரிமிதமான வாஞ்சை வெளிப்படுகிறது. அரசாங்க ஊழியனாக வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தவனாக இருக்கிறான். ரவி, ராகவன் என்று வெவ்வேறு கதை சொல்லிகள், குறிப்பாக ஐயங்கார் பின்புலத்துடன் சில கதைகளில் வருகிறார்கள். அவர்களுடைய மணவாழ்வு எதிர்மறையாகவே சித்தரிக்கப்படுகிறது. கிருஷ்ணன் அளவிற்கு அவர்கள் தனித்துவம் கொண்டு மனதில் ஊன்றி வளரவில்லை. தமிழில் சமகால உதாரணம் ஒன்றைச் சுட்டலாம் என்றால் பெருந்தேவி- ஸ்ரீ வள்ளியை சொல்லலாம். எனினும் கிருஷ்ணனும் யுவனும் நேரெதிரான ஆளுமைகள் அல்ல. ஒருவரைத் தின்று வளர்பவர்கள் அல்ல. இணக்கமான நண்பர்கள்.

கிருஷ்ணன் அவனுடைய ஆதர்சங்களாக கதைகளின் ஊடாக குறிப்பிடுவது ஹெமிங்க்வே, சம்பத் போன்ற நவீனத்துவ அலையின் எழுத்தாளர்களையே. கிருஷ்ணன் மற்றும் யுவனின் மற்றைய கதைசொல்லிகள் பலரும் கடுமையான உளச்சிக்கல் கொண்டவர்களாகவோ / அல்லது மீண்டவர்களாகவோ உள்ளார்கள். ஆனால் கிருஷ்ணனின் கதைகளுள் வரும் கதை சொல்லிகள் முன்- நவீனர்களாக உள்ளார்கள் (pre-modern) என்று தாராளமாக சொல்லலாம். இந்த முரணே யுவன் படைப்புலகத்தின் தனித்தன்மை. வாழ்வின் சுழிப்பில் நெருக்கடிகளை எதிர்கொண்டவர்கள், தத்துவ சிக்கல்களோ பெரும் வாசிப்போ ஏதுமற்றவர்கள், தற்செயல்களின் பகடையாட்டத்தில் வெட்டுண்டு வீழ்ந்தவர்கள் அல்லது வெட்டி அழித்தவர்கள் அல்லது அழிவிற்கு மிரட்சியுடன் சாட்சியாய் இருந்தவர்கள். ஒரு வகையில் கிருஷ்ணனின் இருத்தலியல் சிக்கலை இவர்கள் ஆற்றுபடுத்துபவர்கள். இந்தக் கதை சொல்லிகள் பெரும்பாலும் நாடோடிகள், அனுபவங்களின் வழி விசாலமடைந்தவர்கள். அனுபவங்களுக்காக ஏங்குபவர்கள், அனுபவங்களை தேடித்தேடி சேகரிக்க முயல்பவர்கள். யுவனின் கதைகளுக்கு இயல்பாகவே ஒரு ஈஸ்ட்மேன் நிறம் வந்துவிடுகிறது. போர்ஹெஸ் பற்றிய உரையில் எழுத்தாளர் பாலசுப்பிரமணியன் பொன்ராஜ் போர்ஹெசை ஒருவகையில் நவீனத்தின் எதிரி (anti-modern) எனக் குறிப்பிடுவார். யுவனையும் போர்ஹெசின் தளத்திலேயே புரிந்துகொள்ள முடியும். அவருடைய கதைகள் ஒரு அறைக்குள்ளோ, தெருவிலோ நிகழ்பவை அல்ல. கணினியையோ செல்போனையோ அல்லது இன்னபிற நவீன நாகரீகத்தின் எச்சங்களான இயந்திரங்களையோ அவருடைய கதைகளில் வெகு அரிதாகவே காண முடியும். முல்லையாற்றுக் கரையில் இருக்கும் கரட்டுப்பட்டி எனும் கிராமம், வினோதமான அந்நிய நிலப்பரப்புகள், வவ்வால் புழுக்கை நெடியடிக்கும் ஆலயங்கள், தொலைதூர ரயில் பயணங்கள், பழங்கால ஆளரவமற்ற அக்கிரகாரங்கள், சிதிலமடைந்த ஆன்மீக மடங்கள் ஆகியவை அவருடைய கதைக்களங்கள் ஆகின்றன. ஒரு அறியாத அல்லது புழக்கத்தில் இல்லாத அல்லது தொலைதூர நினைவாக மட்டும் எஞ்சும் கதைப்பரப்பிற்கு அழைத்துச் செல்கிறார். புதியவற்றை அனுபவிக்கும் போது ஏற்படும் கிளர்ச்சி வாசகரைத் தொற்றிக் கொள்கிறது. இயல்பாகவே மனம் கூர்கொள்கிறது. ஜே.கே ரவுலிங்கின் ஹாரி பாட்டர் நாவல் தொடரில் லண்டன் கிங்க்ஸ் கிராஸ் ரயில் நிலையத்தில் சாமானிய மக்கள் புழங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களின் ஊடே மாந்த்ரீகர்களுக்கு மட்டும் புலப்படும் மற்றொரு ரயில் நிலையம் இருக்கும். அது போன்றதே யுவனின் கதைப் பரப்பும்.



யுவனின் கதைகள் வாழ்வின் சாரமான அனுபவங்களை மட்டுமே சொல்பவை. கலை என்பதே அன்றாடத்திற்கு எதிரானவை என்றாலும் யுவன் கதைகள் பெரும்பாலும் விசேஷ தளத்திலேயே நிகழ்பவை. இன்னும் சொல்வதானால் புலன் கூர்கொள்ளும் ஆழ்ந்த நினைவுப் பதிவுகளையே கதையாக்குகிறார். கோதாவரியைக் கடந்து செல்லும் ரயிலில், நெடுநேரம் ஆழ்ந்த விவாதங்களை செய்து, புகையைப் பகிர்ந்து கொண்டவன் சட்டென ‘just a minute’ என்று கூறிவிட்டு நகரும் நீர் பிரவாகத்தில் காணாமல் போகிறான். ‘புறப்பாடுவில்’ ரயிலில் பாய்ந்திறங்கும் ஒரு சித்திரம் அளவிற்கே தொந்திரவு செய்தது. ஆணிலியாக ஆகி தந்தையுடன் பிணக்கு கொண்டவர் அவருடைய மரணத்தின் போது கொள்ளி ஏந்தாமல் கரகாட்டகாரியைப் போல் அழுது அரற்றி, பிணத்திற்கு முன் ஆடியபடி செல்கிறார். குதிரையில் ரோந்து செல்லும் துரை கலவியில் இருக்கும் ஜோடியைக் காண்கிறான். அவனைக் கண்ட மாத்திரத்தில் அவள் கிணற்றுக்குள் விழுந்து மரிக்கிறாள். ‘அங்கும் இங்கும்’ கதையில் வழிப்பறி செய்த வீரணன் முழு அம்மணமான மனிதனைக் கண்டு அவனுடைய சீடனாகிறான். ஒருவகையில் விஷ்ணுபுரத்தின் ஆழ்வாரை நினைவுறுத்தும் கதை. கதையிறுதியில் ஆன்மீக உன்னதத்தை மறுதலிக்கிறது. அவன் அருகனா, துறவியா என்பது பொருட்டல்ல. ஆனால் வீரணன் மீது அவன் செலுத்திய தாக்கம் உண்மையானது. கதைகள் என்பதைக் காட்டிலும் உச்சத் தருணங்கள். மொத்தக் கதையாக நினைவில் நிற்பதைக் காட்டிலும் ஒரு காட்சியாக அல்லது புலன் நிகர் அனுபவமாக இவை மனதில் தங்கி விடுகின்றன. பொதுவாக, யுவனின் கதைகள் காட்சித்தன்மை குறைவானவை என்றும் ஓசைத்தன்மை அதிகம் கொண்டவை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் என் வாசிப்பின் எல்லைக்குட்பட்டு ஐம்புலன்களிலும் நிகர் அனுபவத்தை எழுத்தின் ஊடாக அடைய முயன்றுள்ளார் என்றே தோன்றுகிறது. பெரும்பாலானவர்கள் கடத்த முடியாத ஓசை அனுபவத்தை அவரால் கடத்த முடிவதால் அப்பண்பு தனித்துத் தெரிவதாக தோன்றக்கூடும். தாயம்மா பாட்டி கிராமபோனை பற்றிச் சொல்வது சட்டென நினைவுக்கு வருகிறது “ஊமத்தை பூவை படுக்க வைச்ச மாதிரி இருக்கும்”. உரையாடல்கள், குறிப்பாக வெவ்வேறு பிராந்திய வழக்கு மொழியை பயன்படுத்துவதில் யுவனுக்கு இருக்கும் நிபுணத்துவம் குறித்து ஜெயமோகன் உட்பட பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

யுவன் கதையின் கூறுமுறையில் பல்வேறு பல புதிய சாத்தியங்களை அடைந்துள்ளார். மார்க்குவஸ் மரணித்ததாக எண்ணி அவருக்காக நடத்தப்படும் சிறுகதை போட்டியில் நடுவராக இருந்து, போட்டிக்கு அனுப்பப்பட்ட ஒரேயொரு கதையை அளிக்கிறார், 1999ல் சிறந்த கதை அந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் வெளியான சிறந்த கதைகள், அதை எழுதியவர் தேர்ந்தெடுத்தவர் பற்றிய சித்திரத்தை அளிக்கிறது, குறிப்பேடு, புத்தக அறிமுகம் என சாத்தியமான பல்வேறு உத்திகளில் கதை சொல்கிறார். ‘விருந்தாளி’ ஒருவகையில் பஞ்சதந்திரம் அல்லது ஈசாப் நீதிக்கதைகள் வடிவத்தில் எழுதப்பட்டது. புதுமைப்பித்தனின் வேதாளம் கதையை நினைவுபடுத்தும் அங்கதம் மிளிரும் கதை. ‘அறியாப்பிழை’ விக்கிரமாதித்தன் பாணியில் உள்ள கதை. விக்கிரமனின் சிம்மாசனத்திற்கு ஏறிச் செல்லும் போஜராஜனுக்கு பதுமை சொல்லும் கதை அது. பொதுவாக இம்மாதிரியான முயற்சிகளை வடிவ சோதனை என்று சொல்லிவிடுவது வழக்கம். வடிவ சாத்தியங்கள் பெருகியுள்ளன என்பது உண்மை தான். ஆனால், இப்படி வரையறை செய்யப்படும் பிற எழுத்துக்கள் மறு வாசிப்பை நோக்கி ஈர்ப்பதில்லை. யுவனின் கதைகள் இந்த வடிவ சாத்தியங்களை வாசக சுவாரசியத்தை குலைக்காமல், அதைப் பெருக்கும் வகையிலேயே பயன்படுத்துகிறது. முழுவதும் உய்த்துணரப் படாத மர்மங்கள் கதைக்குள் பொதிந்துள்ள உணர்வை வாசகருக்கு அளிப்பவை என்பதால் மீள் வாசிப்பின் போது புதிய புரிதல்களை அடைய முடிகிறது. மேலும் யுவனின் கதைகள் மூளைப் பண்டமாக ஆகாமல் வாசகருடன் வலுவான பிணைப்பை உணர்வுரீதியாக ஏற்படுத்திக்  கொள்கிறது. ‘கற்புக்கரசன்’ போன்ற கதையின் முடிவு ஆழ்ந்த தொந்தரவை அளிப்பவை. யுவனின் கதைகளில் உள்ள மேற்சொன்ன கூறுகள் அவற்றை வெறும் வடிவ சோதனை முயற்சிகள் என்பதைக் கடந்து இலக்கியப் பிரதிகள் ஆக்குகின்றன எனத் தோன்றுகிறது.

சிறுகதைக்கு என நவீன இலக்கியம் சில வரையறைகளை வகுத்து அளித்துள்ளது. சிறுகதை என்பது ஒரு கதைசொல்லியின் குரலில் ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு காலகட்டத்தை சேர்ந்த ஒரு நிகழ்வு அல்லது ஒரு முடிச்சை சொல்வதற்கு உரிய வடிவம். இந்த வரையறைக்குப் பொருந்தாத கதைகள் தேர்ச்சியற்ற எழுத்துகள் என்றே வழங்கப்படும். தேர்ச்சியற்ற எழுத்துகளும் மேதமையுடன் வரையறையை மீறிச் செல்லும் எழுத்துகளும் ஒன்றைப் போன்றே தோற்றமளித்தாலும் அவை ஒன்றல்ல. உதாரணமாக, சிறுகதையின் முடிவில் திடீர் திருப்பம் நிகழக்கூடாது என்பது சிறுகதையின் பாலபாடம். ஆனால் யுவனின் கதைகளில் எவ்வித நெருடலும் இன்றி அவற்றை மனம் ஏற்று கொள்கிறது. காமம், குரோதம் போன்ற மனிதனின் ஆழத்தில் உறைந்திருக்கும் இயல்புகள் அவனை மீறி எழுந்து அவனை ஆட்கொண்டு அறப் பிறழ்வை நிகழ்த்துகின்றன. அவனைக் குற்ற உணர்வில் தள்ளுகின்றன. யுவன் மீது யுங்கின் தாக்கம் அதிகம் எனத் தோன்றியது. மனிதனின் நிழல் அவனை ஆட்கொள்ளும் தருணமே கதைசொல்லிகள் சொல்லும் கதையாக இருக்கின்றன. ஆன்மீக வலுவால் மீண்டவர்களின் கதைகளையும் அவர் எழுதுகிறார். ‘நச்சுப் பொய்கை’ போன்ற ஒரு கதை அளிக்கும் மன விகாசம் அபாரமானது. ‘தாய்மை யாதெனில்’ கதை முடிவு ஒருவித அமைதியின்மையை அளிப்பது. அன்னையின் பெரும் தியாகத்தை எண்ணி விசிக்கச் செய்வது.

யுவனுடைய கதைகள் ஒரு காலத்திலும் ஒரு இடத்திலும் மட்டும் நிகழ்வதும் இல்லை. ‘ஒரு கொத்து கிராம்பு’ முதலில் ராஜம் அத்தையின் கதையை சொல்லத் தொடங்கி பாதியில் ஐலா அத்தையைப் பற்றிச் சொல்கிறது. சிறுகதை எழுத்தில் இது ஒரு அழகியல் பிழை என்றே கருதப்படும். ஆனால் யுவன் தொடர்ச்சியாக இதை ஒரு உத்தியாகப் பயன்படுத்துகிறார். ஒருவிதமான துப்பறியும் கதையின் சாயலை எல்லா கதைகளுக்கும் அளிக்கிறார். அந்தரங்க ரகசியத்தை சொல்வதான பீடிகையைக் கதையின் தொடக்கத்திலேயே அளித்து விட்டு அதை இயன்றவரை தள்ளிப்போட்டு பின்னர் வெளிப்படுத்துகிறார். வாசகனை கதைக்குள் வைத்திருக்கும் உத்தி எனச் சொல்லலாம். கதை எவரைப் பற்றியது என்பது முக்கியமல்ல அல்லது கதை எவரைப் பற்றியதும் அல்ல. அதற்குப் பின் இருக்கும் செயல்களின் கண்ணியைத் தொடுவதே அவருடைய நோக்கம் என்பதால் கதை மாந்தர்கள் பின்னுக்குச் செல்கிறார்கள். ஒரே கதை மாந்தரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதைகள் விதிவிலக்கு. சடையன், திருப்பதி போன்ற கதை மாந்தர்கள் வலுவான சித்தரிப்பின் வழியாக வேர்பிடித்து வளர்கிறார்கள்.

யுவனுடைய கதைகளில் ஒரேயொரு கதை சொல்லி என்பது அபூர்வ நிகழ்வு. தங்கையா அண்ணன், தாயம்மா பாட்டி, கிருஷ்ணனின் தந்தை, ரயிலில் வரும் பெரியவர், பட்டாளத்து மாமா, விதவை அத்தைகள் எனப் பலவிதமான கதை சொல்லிகள். பள்ளிச் சிறுவனாக எனக்குப் பிடித்த எழுத்தாளர் என தேவனைச் சொல்வேன். அவருடைய ‘மல்லாரி ராவ் கதைகளில்’ திண்ணையில் பொடிபோட்டு கதைசொல்லும் மல்லாரி ராவின் நீட்சியை யுவனின் கதை சொல்லிகளிடம் காண முடியும். ஏதோ ஒருவகையில் அவர்கள் மகாபாரதம், புராணங்கள், ஹரிகதை உபன்யாசம், பஞ்சதந்திரம், 1001 அரேபிய இரவுகள், நாட்டார் கதைகள் என புழங்கிவரும் கதைவெளியின் தொடர்ச்சியாகிறார்கள். நவீன இலக்கியத்திற்கும் முற்கால தொல்கதைகளுக்கும் இடையிலான வேறுபாடு எனச் சிலவற்றை அடையாளப்படுத்தலாம். நவீன இலக்கியம் சாமானியர்களின் குரலைப் பதிவு செய்வது. அதன் உட்கிடையாக விமர்சன அம்சத்தை தாங்கிச் செல்வது. வெறும் சுவாரசியம் அதன் நோக்கம் அல்ல. தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் பங்குபெற்ற பிராமணரின் வீட்டில் நடக்கும் சாதி மீறிய திருமணத்திற்கு அவர் எதிராக நிற்பதாக வரும் ஒரு சித்திரம் சட்டென நினைவுக்கு வருகிறது. பகடி அதிகாரத்தை கவிழ்க்க கலை பயன்படுத்தும் ஆற்றல் வாய்ந்த வழிமுறை. கஜேந்திர மோட்சத்தை தழுவி எழுதப்பட்ட கதையில் பெருமாளுக்கு மூல வியாதி என்பதால் முதலை வாயில் சிக்கிய யானை ஆதி மூலமே என விளிக்கிறது. காக்கை நரி கதையில், காக்கை தியாகைய்யரின் மாமவ பட்டாபிராம கீர்த்தனையை பாடுகிறது. யுவனின் பகடித் திறன் பல கதைகளில் அபாரமாக வெளிப்பட்டுள்ளது. ‘ஐந்தே வாரங்களில் வயலின் கற்றுகொள்வது எப்படி’ என்றொரு சிறுகதையில் வயலின் பயிற்சியின் போது எழும் ஒலிகளை இப்படி எழுதுகிறார். “கதவிடுக்கில் வால் சிக்கிக் கதறும் எலி மாதிரி, எண்ணெய் போடாத கீல் மாதிரி, தொண்டை கட்டிய காக்காய் மாதிரி, குரல்வளையில் சிக்கிய ஒரு துளிக் கபத்தை வெளியேற்றக் குமுறிக் குமுறிக் அடித் தொண்டையில் செருமும் என் சித்தப்பா மாதிரி, அதிகாலையில் கூவி, தூக்கம் கலைத்து வயிற்று எரிச்சல் கொட்டும் அண்டை வீட்டு சேவல் மாதிரி, தான் ஒரு வயலினாய் இருக்க நேர்ந்ததில் பெரும் துக்கம் கொண்டது மாதிரி…”. நவீன இலக்கியத்தின் கூறாக யுவனின் கதைகளை ஆக்குவதில் மற்றுமொரு பங்கு அவர் சித்தரித்த பெண் பாத்திரங்களுக்கு உண்டு. பாட்டிகள், அம்மாக்கள், அத்தைகள், மன்னிகள், அக்காக்கள் என அனைவரும் வலுவாக உருக்கொண்டுள்ளார்கள். பெரும் பரிவுடன் அவர்களின் வாழ்வு கதைகளில் மிளிர்கிறது.

எல்லா வகையிலும் பெரும்போக்கு யதார்த்த திசையில் ஒற்றைப் பாணியில் நகரும் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கான முறி மருந்து என யுவனின் புனைவுலகைச் சொல்வேன். ஆயுர்வேதத்தில் மிருகங்களின் விடத்தை முறிக்க, தாவர விடங்களை முறி மருந்தாக பயன்படுத்துவார்கள். முறி மருந்து முக்கியமானது, வீரியமானதும் கூட. ஆனால் அதுவே அளவை மிஞ்சும் போது நஞ்சாகவும் மாறும். ஒருபோதும் யுவன் பாணியிலான கதைகள் பொதுப்போக்காக ஆக இயலாது. அவரைப் பின்பற்றி எழுதுவது அங்கீகாரத்தைப் பெற்றுத் தராது. ஆனால் யுவனின் சிறுகதைகள் தமிழ் இலக்கியப் பரப்பின் எல்லைகளை நெகிழ்த்தும் பணியை செவ்வனே செய்யும். புதிய சாத்தியங்களை அளிக்கும். சில கதைகளில் ரகசிய பீடிகைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட காமத்தில் சென்று முட்டி நின்று விடுவதும் உண்டு. சில சமயங்களில் பீடிகைகள் அளவிற்கு சம்பவங்கள் வலுவாக இல்லா தபோது கதைகளில் ஒருவித சோர்வு ஏற்படுகிறது. ‘விருந்தாளி’ மாதிரியான கதை அந்த உணர்வை ஏற்படுத்தியது. ’அறியா பிழை’ கதையில் போஜன் சலித்து கொள்வான். ‘சரிதான் ஒருகதை இரண்டு கதை என்றால் நினைவிருக்கும்.’ ஓரோர் கதையாக வாசிக்கும் போது ஏற்படாத சலிப்பு ஒட்டுமொத்தமாக இந்தக் கதைகளை வாசிக்கும் போது சன்னமாக தலைதூக்கவே செய்கிறது.

அவருடைய கதைகளில் அடையப்படும் மெய்யியல் மற்றும் ஆன்மீகத் தளத்தின் பொருட்டு யுவன் பிற இருத்தலியல் நவீனத்துவர்களிடம் இருந்து தனித்துத் தெரிகிறார். தாயம்மா பாட்டி சொல்லும் ஒரு கதையில் காட்டு மிருகங்கள் கூடி உரையாடும். எண்ணிக்கையின் போது நேற்றைக் காட்டிலும் ஒருவர் மட்டும் கூடுதலாக இருக்கிறார் எனக் கண்டுபிடிக்கிறார்கள். அது யார் எனத் தேடும் போது, ஒவ்வொரு மிருகமாக நானில்லை நானில்லை எனச் சொல்லிக் கொண்டே வரும். ஈசலிடம் கேட்கும் போது, ‘நேத்திக்கின்னா என்ன’ எனக் கேட்கிறது. எளிய கதை தான். ஆனால் தத்துவ தளத்தில் விரிந்து செல்லும் நுட்பம் கொண்டது. தற்செயல்களின் ஊடுபாவு சார்ந்து அவருடைய கதைகளில் சில அபாரமான பகுதிகள் உண்டு. “தற்செயல் என்று சாதாரணமாகச் சொல்லி விடுகிறோம். சிந்தித்து செயலாற்றும் தருணங்களுக்கு இருப்பதை விடவும் நேர்த்தியான ஒழுங்கு ஒன்று தற்செயல்களுக்கு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.” (நூற்றி சொச்சம் நண்பர்கள்). இதே கதையில் வரும் மற்றொரு மேற்கோள் அவருடைய கதை மாந்தர்களின் சிக்கலை கச்சிதமாகக் கூறுவதாக தோன்றியது. “நிச்சயமின்மையை எதிர்கொள்வது தான் சிரமமானது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அப்படியில்லை, அதை எதிர்கொள்வதற்கு நம்பிக்கை, கனவு, இறந்த காலத்தின் பதிவுகள், எதிர்பார்ப்பு, காத்திருத்தல் என்று பல ஆயுதங்கள் இருக்கின்றன. நிச்சயத்தை எதிர்கொள்வது தான் கடினம். என் தகப்பன் அல்லது காதலி இறந்து விட்டாள் என்ற உண்மையின் முன்னும் உயிரற்ற உடலின் முன்னும் நிற்கும் சந்தர்ப்பத்தை எதிர்கொள்வது தான் கடினமானது.” தந்தையின் மரணத்தை செரித்துக் கொள்ள கிருஷ்ணன் கதைகளின் ஊடாக இறுதிவரை முயன்றபடிதான் இருக்கிறான். சுரேஷ்குமார் இந்திரஜித்தும் யுவனும் தற்செயல்களின் பகடையாட்டம் எனும் புள்ளியில் உடன்பட்டாலும் அந்த இடத்திலிருந்து இருவரும் வெவ்வேறு தரிசனங்களை அடைகிறார். சுரேஷ்குமார் இந்திரஜித் ஒருவித அபத்தவாதத்தை அடைகிறார். யுவன் ஆன்மீக பேரொழுங்கு நோக்கி நகர்கிறார். மரபை துண்டித்து மேலெழும் நவீன மனமும் மரபில் வேர் கொண்ட மனமும் இயல்பாக சென்றடையும் இலக்குகள் இவை என்றே தோன்றுகின்றன. இருவருமே தமிழில் முன்மாதிரியும் பின்தொடர்பவர்களும் இல்லாமல் உருவாகி வந்தவர்கள்.

‘வெளியேற்றம்’ கதையில் பெரும் உடைவின் விளிம்பில் இருக்கக் கூடியவன் தற்செயலாக வாசிக்கும் சொற்கள் அவனை மாற்றுகிறது. “குருகுலத்தை விட்டு வெளியேறி எங்கே போவாய்? எல்லா இடமும் குருகுலம்தான் என்று உணரவில்லையா நீ?”. யுவனின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என ‘நச்சுப் பொய்கையைச்’ சொல்வேன். உடைந்து விழுந்து எழும் ஆன்மீகத் தருணங்கள் மட்டுமே கொண்ட கதை. பேரருள் ஒன்று மானுட வாழ்வின் மீது கவிவதாக உணரச் செய்தது. இசையும் பித்து நிலையம் அற்புதமாக வெளிப்பட்ட கதையும் கூட. கதைக்குள் கதை என மடிந்து நீண்டு கொண்டே செல்கிறது. வருகை எனும் கதையில் வரும் இச்சொற்கள் வெறுமே சொல்லப்பட்டதில்லை. ஒரு அனுபவத்தின் வாயிலாக அடையப்பட்டு வெளிவந்தவை என்றே நம்புகிறேன். “கிருஷ்ணா, யாருமே அனாதையாய் சாவதற்கில்லை, உயிரோடிருப்பவற்றுக்கும், உயிரிழந்தவற்றுக்கும், உயிரற்றவற்றுக்கும் பொறுப்பேற்றுக்கொள்ளும் பிரபஞ்ச ஒழுங்கு ஒன்று எந்நேரமும் விழித்திருக்கிறது என்று தோன்றியது.” இந்த வரிகள் அளிக்கும் ஆசுவாசமே யுவனின் கதைகளைப் பிணைக்கும் மந்திரக் கயிறு எனத் தோன்றுகிறது.

Tuesday, June 2, 2020

சார்வாகன் சிறுகதை குறித்து: யானை திரும்பவும் செத்தது-

(மரப்பாச்சி கூடுகையில் விவாதித்த கதை குறித்து பதாகையில் எழுதிய கட்டுரை. இப்படி ஒவ்வொரு சிறுகதையாக மீண்டும் எழுத வேண்டும் எனும் யோசனை வருகிறது)

ஏப்ரல் மாத ‘மரப்பாச்சி இலக்கிய கூடுகை’யை வழக்கமான காவேரி மருத்துவமனை வளாகத்திலிருந்து மாற்றி எங்காவது வெளியே வைத்துக் கொள்ளலாம் என்றொரு யோசனை துளிர்விட்டபோது நண்பர் டாக்டர். சலீம் நேமம் கோவிலில் சந்திப்பை நிகழ்த்தலாம் என்றொரு யோசனையை முன்வைத்தார். நல்ல ஏற்பாடாக தோன்றியது. இப்பகுதியில் அழகிய சிற்பங்களும் அமைதியான சூழலும் ஒருங்கே அமைந்த இடம். எப்போதுமில்லாத அதிசயமாக இம்முறை கூடுகைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கைத் தொட்டது. மொத்தம் பதினொரு பேர், அதில் நால்வர் பெண்கள்.

இந்தக் கூடுகையில் நாங்கள் விவாதிக்கவிருந்த கதை சார்வாகனின் ‘யானையின் சாவு’. யானையைப் பார்த்தது முதல் அது தனக்கு வேண்டும் என அடம் பிடிக்கிறது ஆறு வயது குழந்தை. ஒருநாள் கோவில் வாசலில் கிளிப்பச்சை நிறத்தில், தங்க நிற வேலைப்பாடும், ரோஸ் நிற வாயும், எலுமிச்சை மஞ்சள் நிற தந்தமும் கொண்ட யானையை கேட்கிறது. தன் அழகுணர்ச்சி மீது நம்பிக்கை கொண்டவனுக்கு இது யானை குலத்தையே பரிகாசம் செய்வதாக தோன்றுவதால் வாங்காமல் எரிச்சல் அடைகிறான். ஓரளவு யானை அமைப்பு கொண்ட மர யானையை வெளியூரிலிருந்து குழந்தையின் நச்சரிப்பு தாங்காமல் வாங்கி வருகிறான். அந்த யானையுடன் எப்போதும் தன் நேரத்தைக் கழிக்கிறது குழந்தை. அது அவனை நெருடுகிறது. ஒருநாள் பொறுக்க முடியாமல் இது பொம்மை என கடிந்து கொள்கிறான். ஒருநாள் முழுக்க குழந்தை அவனோடு பேசவில்லை எனும் வருத்தத்தில் இது நிஜ யானைதான், சரியாக பார்க்காதது தன் குற்றம் என சொல்லி சமாதானப்படுத்துகிறான். இருவருமாக அந்த யானையுடன் விளையாடத் துவங்குகிறார்கள். ஊருக்குச சென்றுவிட்டு வீடு திரும்பும்போது யானையுடன் விளையாட விதவிதமான விளையாட்டுக்களை யோசித்தபடி வருகிறான். குழந்தையையும் யானையையும் காணவில்லை. பிறகு குழந்தை தூங்கிவிடுகிறது. காலையில் எழுந்தவுடன், யானை எங்கே எனக் கேட்கிறான். “இங்கேதான் எங்கேயாவது கிடக்கும்,” என்று அசிரத்தையாகச சொல்கிறது குழந்தை. மூலையில் அழுக்குத் துணி குவியலில் யானை கிடக்கிறது. ஐயோ பாவம் அதற்கு காய்ச்சல் இருக்கும் என ரங்கநாதன் சொல்லிக் கொண்டிருக்கும்போது, குழந்தை, இது என்ன நிஜ யானையா வெறும் பொம்மைதானே, அதற்கு காய்ச்சலும் பேதியும் வருமா, எனக் கேட்டுவிட்டு எதிர்வீட்டு அம்மா கொடுத்த தகர காரை காட்டுகிறது. ரங்கநாதன் திகைத்து நிற்கிறான். செத்துப்போன யானையின் சடலம் “நான் வெறும் மரம். யானையில்லை,” என்று சொல்லிவிட்டும் திரும்பவும் செத்தது என்று கதை முடிகிறது.

வளர்ச்சிப் போக்கில் உதிரும் நினைவுகள், நம்பிக்கைகள் பற்றி பரிவுடன் பேசும் கதை. சிறுவர்கள் உலகில் கால மாற்றம், மனமுதிர்ச்சி சட்டென ஏற்படும் போது பெரியவர்களின் உலகம் அத்தனை எளிதாக மாற்றங்களை ஏற்பதில்லை. வேறொரு நண்பர் என், ‘பேசும் பூனை’ கதையில் ஹர்ஷிதா டாக்கிங் டாமை விட்டுவிட்டு வேறோர் விளையாட்டை பின் தொடர்ந்து சென்றுவிடுவாள், ஆனால் தேன்மொழி அந்த விளையாட்டை விட்டு வெளியேற மாட்டாள், என்பதை இக்கதையுடன் ஒப்பிட்டுச சொல்லியிருந்தார்.

இந்த கதை விவாதத்தில் சில நுட்பங்கள் விவாதிக்கப்பட்டன. குழந்தை எந்த பாலினம் என்பது சொல்லப்படாமல் உள்ளது ஒரு உத்தியா, குறைபாடா, என்றொரு கேள்வியை டாக்டர் ரவி எழுப்பினார். நான் வெகு இயல்பாக ஆண் குழந்தை என்றே வாசித்தேன். வேறு சிலர் பெண் குழந்தையாக வாசித்திருந்தார்கள். யானை பொம்மை மீது ஈர்ப்பு கொண்டதால் பெண்ணாக இருக்கலாம் என்றும் ஆனால் காரின் மீது ஈடுபாடு உள்ளதால் ஆணாக இருக்கலாம் என்றும் பேசிக்கொண்டோம். குழந்தைக்கு தந்தை ரங்கநாதன் மட்டுமே உள்ளார். அன்னை பற்றிய குறிப்பே இல்லை. தகர காரைக்கூட எதிர்வீட்டு அம்மாதான் வாங்கித் தருகிறார் என்பது கவனிக்கத்தக்கது. கதையில் ‘அந்த பொம்மை யானை உயிருள்ள யானை மாதிரி அதுவும் செல்லம் கொடுத்து கெட்டுப்போன ஒரு குழந்தை யானை மாதிரி லூட்டியடிப்பது,’ தாங்க முடியவில்லை என்று வருகிறது. இந்த விவரணை அந்தக் குழந்தைக்கும் பொருந்துகிறது. அதன் இயல்பைச் சுட்டுவதாகவும் இருக்கலாம். பொய்யிலிருந்து பொய்க்குத் தாவுகிறது மனம், பொய்யைக் கைவிடவும் தயாரில்லை. இந்த கதையில் அவன் பச்சை யானையை அழகுணர்ச்சியின் பாற்பட்டு நிராகரிக்கிறான். தன் அழகுணர்ச்சியின் மீது கர்வம் கொள்கிறான். பொய் எனும் பிரக்ஞையுடன் இருக்கிறான், பொய்யை உண்மை என ஒரு பேச்சிற்கு கட்டமைக்கிறான், அதற்குள் சிக்கிக் கொள்கிறான். குழந்தை அதை உதறிவிட்டுச் சென்றுவிடுகிறது. ரங்கநாதன் திகைக்கிறான். கதையின் முடிவில் சடலமாகக் கிடக்கும் யானை திரும்ப எழுந்து தானொரு மரம் என சொல்லிவிட்டுச் சாகிறது. அதாவது இருமுறை, குழந்தையின் பிரக்ஞையிலும் ரங்கநாதனின் பிரக்ஞையிலும், சாகிறது. குழந்தை வளரும்போது ஏற்படும் திகைப்பின் கணத்தை அழகான நேரடி கதையாக ஆக்குகிறார். அதுவே இக்கதையின் வலிமை.

‘Toy story’ திரைப்படம் இப்படியான உணர்வுநிலையை பிரதிபலிக்கும் சிறந்த திரைப்படம். ஜெயமோகன் யுஜின் ஃபீல்ட் எழுதிய ஒரு கவிதை பற்றி எழுதிய கட்டுரை இந்த கதையுடன் சேர்ந்தே நினைவுக்கு வந்தது.

நீலக்கண் குட்டிப்பயல்

சின்ன நாய்ப்பொம்மை தூசிபடிந்திருக்கிறது
ஆனால் திடமாக காலூன்றி நின்றிருக்கிறது
சின்ன பொம்மைப்படைவீரன் துருவால் சிவந்திருக்கிறான்
அவன் தோளில் துப்பாக்கி நிமிர்ந்திருக்கிறது
அந்த நாய் புதிதாக இருந்த காலமொன்றிருந்தது
படைவீரன் அழகாக இருந்திருக்கிறார்
ஆனால் அது நம் நீலக்கண் குட்டிப்பயல்
அவற்றை முத்தமிட்டு அங்கே வைத்தபோது!

”நான் வருவது வரை போகவே கூடாது என்ன?”
என்று அவன் சொன்னான் ”மூச்,சத்தம் போடக்கூடாது!”
அதன் பின் தளர்நடையிட்டு தன் குட்டிப்படுக்கைக்குச் சென்று
அவன் அழகிய பொம்மைகளைக் கனவுகண்டான்
கனவுகாணும்போது ஒரு தேவதையின் பாடல்
நம் நீலக்கண் பயலை எழுப்பியது
அது எத்தனையோ காலம் முன்பு
வருடங்கள் பல சென்றுவிட்டன
ஆனால் பொம்மை நண்பர்கள் விசுவாசமானவர்கள்

நீலக்கண்குட்டிப்பயலின் கட்டளைக்குப் பணிந்து அவர்கள்
அதே இடத்தில் நின்றிருக்கிறார்கள்
அவனுடைய குட்டிக்கைகளின் தொடுகை வந்து எழுப்புவதற்காக
அவன் குட்டி முகத்தின் புன்னகைக்காக
வருடங்களாகக் காத்திருக்கையில்
அந்த குட்டி நாற்காலியின் தூசுப்படலத்திலிருந்தபடி
அவர்கள் எண்ணிக்கொண்டார்கள்
அவர்களை முத்தமிட்டு அங்கே நிற்கவைத்துச் சென்ற
நீலக்கண் குட்டிப்பயலுக்கு என்ன ஆயிற்று என்று

உயிருள்ளவைக்கும் உயிரற்றவைகளுக்குமான வேறுபாடு நம் அக்கறையில், பிரக்ஞையில்தான் இருக்கிறது போலும். அண்மைய ஊட்டி விஷ்ணுபுர அரங்கில் திருமூலநாதன் தேர்ந்தெடுத்த திருக்குறள் பற்றிய விவாதத்தில் இந்த குறள் பற்றியும் பேசப்பட்டது.

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். (குறள்: 1070, அதிகாரம்: இரவச்சம்)

இரப்பவருக்கு யாசகம் மறுத்து அவன் இறந்தபின்தான், அவருக்கும் உயிர் இருந்தது என்பது நம் பிரக்ஞையில் உதிக்கிறது என்றொரு வாசிப்பை அளிக்கலாம் என்று சொல்லப்பட்டது. உயிருள்ளவர்களும் ஜடப் பொருட்களாகத்தான் இருக்கிறார்கள். உயிரற்றவையும் உயிர் கொள்ள முடியும்.

கதையைப் பற்றி பேசி முடித்ததும், நேமம் கோவில் அர்ச்சகர் அங்கு வந்த எங்களைப் பற்றி விசாரித்தார். “இந்த பிள்ளையார் கோவில் வாசல்ல இருந்த ரெண்டு கல் யானையை காணும்… நீங்க வேற யானை செத்துப் போச்சுன்னு என்னென்னமோ பேசுறீங்க… சிசிடிவி பாத்து மெட்ராஸ்லேந்து ட்ரஸ்டி போன் அடிச்சார்… ரொம்ப நேரமா மூணு கார் நிக்குதேன்னு விசாரிக்கச் சொன்னார்,” என்றார். இப்படியாக இலக்கியக் கூட்டம் சிலை திருடும் கும்பலாக ஆனது.

அர்ச்சகருக்கு அவர் அறிந்த யானை செத்ததைப் பற்றி கவலை இருக்கத்தானே செய்யும். நாங்கள் அந்த யானையைப் பற்றி பேசவில்லை என்றறிந்தபோது அவருக்குள் மற்றுமொருமுறை யானை செத்திருக்கும்.

http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=10615

https://www.jeyamohan.in/2010#.WwulaEgvzIU

பனிமுடிப் பணிதல்: ஷௌகத்தின் ‘ஹிமாலயம்’


(தமிழினியில் வெளியான கட்டுரை)
‘இதைக் காணும் ஒருவன் கடவுளைக் கண்டதில்லையென்று சொல்வானெனில், இனி ஒருபோதும் அவனால் கடவுளைக் காண முடியாது.’ – நடராஜ குரு

‘ஹிமாலயம்’ ஷௌக்கத் எழுதி கே.வி. ஜெயஸ்ரீயின் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. கேரள சாகித்திய அகாதமி விருது பெற்றது. எழுத்தாளர் இமையத்தின் நாவல்களை தொடர்ச்சியாக வாசித்து முடித்து அவ்வுலகின் அவசங்களில் இருந்து வெளிவர முற்றிலும் வேறு மனநிலையைத் தரவல்ல ஒரு நூலைத் தேடும்போது ‘ஹிமாலயம்’ வசப்பட்டது. ஏறத்தாழ நான்கு ஆண்டுகளாக என் புத்தக அலமாரியில் உறங்கிக் கொண்டிருந்தது. ஜெயமோகன் ‘கீதா முஹுர்த்தம்’ எனச் சொல்வார். அதுபோல் கவிதைகள் திறந்து கொள்ளவும் சில புத்தங்களை நாம் கையில் எடுக்கவும் உரிய நேரம் இருக்குமோ என்னவோ! புத்தங்களை நாம் வாங்குகிறோம் எனினும் புத்தகங்கள் நம்மைத் தேர்வு செய்கின்றன என்று எண்ணிக் கொள்வது இனிய கற்பனையாக உள்ளது.



பயண இலக்கியத்தில் நாம் என்ன எதிர்பார்க்கிறோம்? சூழல் விவரணை- புதிய இடத்தை சொற்களின் வழியாக புலன் நிகர் அனுபவமாக ஆக்குதல் என்பதே முதன்மையான எதிர்பார்ப்பு. குளுகுளுவென இருந்தது, குளிர் வெடவெடத்தது, உடல் நடுங்கியது, மலர்கள் பூத்துக் குலுங்கின, நதி அமைதியாக தவழ்ந்தது, அருவி ஆர்ப்பரித்தது, சூரியன் சுட்டெரித்தது, அழகான அந்தி, அருமையான புலரி என பயண நூலுக்கென நாம் உருவாக்கி வைத்திருக்கும் தேய்வழக்குகளை மீறி அசலான காட்சி அனுபவங்களை அளிக்க வேண்டும். பயண அனுபவத்திற்கும் பயண இலக்கியத்திற்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு என சிலவற்றைச் சொல்லலாம். ஆசிரியனின்/ எழுத்தாளனின் தனியாளுமையின் தடத்தைப் பதிவது. அவனுடைய தத்தளிப்புகளை,கேள்விகளை, கண்டடைதல்களை வாசகருக்கு கடத்துவது. சிறந்த பயண இலக்கியம் ஏறத்தாழ நாவலின் வடிவத்தை ஒத்திருக்க வேண்டும். ஒருவகையில் தன்வரலாற்று நாவலின் வடிவத்திற்கு நெருக்கமானது. ஒட்டுமொத்தமாக தன் அடையாளத்தைக் கண்டடையும் ஒரு முகிழ்தல் நிகழ வேண்டும். தனித்துவமான அவதானிப்புகள் இருக்க வேண்டும். புதிய மனிதர்கள், புதிய நிலம், புதிய வாழ்க்கையை அறிகிறோம் எனும் உற்சாகத்தை வாசகருக்கு கடத்த வேண்டும். இதே தடத்தைப் பின்பற்றி பயணிக்க விரும்புபவருக்குத் தேவையான எச்சரிக்கைகளையும் வழிகாட்டுதல்களையும் அளிப்பதாகவும் இருக்க வேண்டும். ஷௌக்கத்தின் ‘ஹிமாலயம்’ இவை எல்லாவற்றையும் நிகழ்த்துகிறது. மேலதிகமாக ஆன்மீக தளத்தில் அகப் பயணமாகவும், மெய்யியல் விசாரணையாகவும் தன்னை விரித்துக் கொள்கிறது.



இந்நூலுக்கு ஆங்கில அறிமுகம் எழுதியிருக்கும் கீத காயத்ரி ஷௌக்கத்தின் சக பயணி. ஊட்டி நாராயண குருகுலத்தில் அவரை இருமுறை சந்தித்திருக்கிறேன். காயத்ரி மா என்றே எனக்கு பரிச்சயம். பரபரவென இருப்பார். அவர்தான் இவர் என்பது எனக்கு மற்றுமொரு ஆச்சரியம். இல்லறத்தில் ஈடுபட்டு பின்னர் துறவு பெற்றவர். ஒரு குருகுலத்து மாணவர்கள், கணவன் மனைவி அல்லாதவர்கள், இஸ்லாமியரும் இந்துவும் என ஒரு பொது சமூகம் ஐயம்கொள்ளத் தேவையான எல்லா அம்சங்களும் கொண்ட பயணிகள் இப்பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதே இந்நூலை சுவாரசியமாக்குகிறது. இருவரும் குரு நித்யாவின் சீடர்கள். அவருடைய சமாதிக்குப் பிறகு இப்பயணம் துவங்குகிறது. அடுத்து என்ன என்றொரு கேள்வி எழும்போது காயத்ரி ஹிமாலயப் பயணம் எனச் சொல்கிறார். தானும் உடன் வருவேன் என்கிறார் ஷௌக்கத். ஐசிங் வழி காயத்ரி அம்முடிவை எட்டுகிறார். ஷௌக்கத் தன்னை நித்யாவாக உருமாற்றிக் கொண்டு காயத்ரியுடன் புறப்படுகிறார். பன்மொழி ஆற்றல்கொண்ட காயத்ரி பயணம் முழுவதுமே ஷௌக்கத்தின் மொழிபெயர்ப்பாளராக செயல்படுகிறார்.



ஷௌக்கத் ஒரு சுவாரசியமான ஆளுமை. வழமையான இஸ்லாமிய முறைப்படி வளர்ந்தவர். ஆனால் உபநிஷதுகள், கீதை, தம்மபதம், அத்வைதம் என அவருடைய பயணம் விரிந்தது. இறுகிய மத நம்பிக்கை ஏதுமற்றவர். அனைத்து மதங்களையும், மத நூல்களையும் ஒன்றாக பாவிப்பவர். வரட்டுத்தனமான ஆச்சாரங்களை பின்பற்றுவதைத் தவிர்ப்பவர். மூடநம்பிக்கைகளை விமர்சிப்பவர். தேசங்கள் கடந்த உலகளாவிய வாழ்க்கைப் பார்வை கொண்டவர். நாராயண குரு மற்றும் குரு நித்யாவின் அத்வைத மரபை தலை கொண்டவர் என்பதாலேயே மாந்த்ரீக மரபுகளை ஏற்பவர் அல்ல. சங்கரரை மார்க்சியர்கள் நெருக்கமாக உணர்ந்தது உண்டு. அத்வைதத்தை ஏற்கும் கீழை மார்க்சியர்கள் உண்டு. குரு நித்யாவும் ஷௌக்கத்தும் கூட மார்க்சியவாதம் மீது கரிசனப் பார்வை கொண்டவர்களே. ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் நம்மைப் போன்ற ஒருவர் எனும் அணுக்கம் ஷௌக்கத்திடம் ஏற்படுகிறது. அவ்வப்போது எழும் அகங்காரத்தைக் கவனிப்பதும் அதை மீற தொடர்ந்து முயல்வதும் பல்வேறு தருணங்களில் நிகழ்கிறது. ஒருவகையில் ஆன்மீகப் பாதை என்பது அறுபடாத விழிப்புணர்வு என்றே தோன்றுகிறது.

அவரை ஒரு ஞானியாகக் கருதி பக்தி பரவசத்தோடு அவர் முன் சிலர் அமர்ந்த போது “இப்படி கொஞ்சம் பக்தர்கள் கிடைத்தால் ஒரு குருவாகி பந்தா பண்ணலாமே என்றொரு எண்ணம் தோன்றாமலில்லை. குருத்துவம் முதலில் கொஞ்சம் சுகமாகத்தான் தோன்றும். நம்மை கிரீடமணிந்து சிம்மாசனத்தில் அமர்த்தும். கடைசி விதி சிலுவையேற்றல்தான் என்பதை அனுபவசாலிகள் எழுதியும் பேசியும் வைத்திருக்கிறார்களே.” காயத்ரியை விட்டுவிட்டு மலையேறுகிறார். மலையிறங்கி அவரைத் தேடினால் அவர் வரச் சொன்னார் எனப் புரிந்துகொண்டு அவரும் ஏறி வந்திருக்கிறார் என அறிகிறார்.மற்றொரு தருணத்தில் காயத்ரியை காணவில்லை எனத் தேடி அலைகிறார். காயத்ரி பின்தங்கி ஒரு குகையில் பாபாவிடம் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து மனதார கெட்டவார்த்தைகளால் திட்டுகிறார்.



இந்நூலில் ஷௌக்கத் பல்வேறு புதிய அவதானிப்புகளை (குறைந்த பட்சம் எனக்கு) வைக்கிறார். மரபார்ந்த சொற்றொடரை தனக்குள்ளாக செரித்து புதிய அர்த்தத் தளங்களை திறக்கிறார். மாதா பிதா குரு தெய்வம் வரிசையைப் பற்றியும் பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வான பிரஸ்தம் மற்றும் சந்நியாசம் ஆகிய நான்கு ஆசிரமங்களைப் பற்றிய அவருடைய விளக்கம், எப்போது புனித நூல்கள் சுருதிகள் ஆகின்றன, புத்தகத்தின் இறுதிப் பகுதியில் விநாயகரின் உருவத்தை தத்துவமாக விளங்க வைத்தல் என இப்பகுதிகள் அனைத்துமே அசலான பார்வை கொண்டதாக உள்ளன. புனித நூல்களின் சொற்கள் நம்முள் நிரந்தரமான நிம்மதியை ஏற்படுத்தும் வரை வெறும் நினைவு சடலங்களாகவே எஞ்சும். அந்நிலையை அடையும்போது தான் அவை சுருதியாக பரிணாமம் கொள்ளும் என்கிறார். ‘மாதா பிதா குரு தெய்வம் எனும் வரிசையை சாதகன் கடக்க வேண்டிய ஏணிப் படிகள், ஒவ்வொன்றையும் உதறி மேலே செல்கிறான்’ எனப் பொருள் கொள்கிறார். கங்கைப் பயணத்தை அவர் காணும் விதம் அபாரமானது. ஹரித்துவாரின் கங்கையைக் காணும்போது சிந்தனை சிடுக்கில் சிக்கித்தவிக்கும் மனித அறிவாக கங்கை அவருக்குத் தோன்றுகிறது. அதுவல்ல கங்கை. அங்கிருந்து கங்கையை, அதன் ஊற்றைத் தேடிப் பயணிக்க வேண்டும் என சொல்லும்போது புறப் பயணம் அகப் பயணத்தின் குறியீடாக, நீட்சியாக ஆகிறது.



பிரம்மச்சரியம் என்றால் விரிவடைவது, பிருஹத் எனும் சொல்லிலிருந்து அஹ்டன் வேரை கண்டுகொள்கிறார். கட்டற்ற சுய அக விரிவாக்கம் தான் பிரம்மச்சரியம். விரிந்து விரிந்து நானற்ற நிலையை அடைவது என்கிறார். குறுகிய பொருளாக பாலியல் இச்சையுடன் இதை அவர் தொடர்புபடுத்துவதை ஏற்கவில்லை. கிருஹஸ்தனுக்கு “தன்னுடையதான கிருகத்தில் ஸ்திதி செய்பவன்” என்பதாக பொருள் அளிக்கிறார். நம் மனதின் மீதான அதிகாரம் பிறர் சார்ந்திருக்கிறது. அதை நமதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அந்நிலையை அடைந்தவனே கிருஹஸ்தன். அதற்கும் திருமணத்திற்கும் தொடர்பில்லை என வாதிடுகிறார். பிரம்மச்சரியனின் முதல் தகுதியே அவன் கிருஹஸ்தனாக இருக்க வேண்டும் என்பதுதான் என்கிறார். வானப்பிரஸ்தத்தை வேதாந்திகள் முன்மொழியும் சாட்சி பாவத்துடன் ஒப்பிடுகிறார். இந்நூலின் மிகச் சிறந்த பகுதி என்பது விநாயகரின் புராணக் கதை மற்றும் உருவத்தை தத்துவார்த்தமாக விளக்கிக் கொள்ளும் முயற்சி. சிவன் எனும் புருஷனுக்கும் சக்தி எனும் பிரகிருதிக்கும் இடையில் இருக்கும் ‘நான்’ தான் விநாயகன் என்கிறார். உடைந்த தந்தம் உடைந்த அகங்காரத்தை குறிக்கிறது. தர்க்கத்தால் நிரம்பிய தலையை நீக்கிவிட்டு யோகியின் தலையை யானையின் வடிவம் கொண்டு அளிக்கிறார். சின்னக் கண்கள்,பெரிய காதுகள் என  எல்லாவற்றிற்கும் முற்றிலும் புதிய முறையிலான அர்த்தத்தை அளிக்கிறார்.



“அழகு என்பது கணப்பொழுதின் வரப்பிரசாதம் தான். சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் இவ்வளவு அழகாயிருப்பது அது கொஞ்ச நேரமே இருந்து பின் இல்லாமல் போவதால்தான்.” நூல் முழுக்க இமையத்தின் அழகும் கம்பீரமும் அமைதியும் மேன்மையும் விரவிக் கிடக்கிறது. யமுனோத்திரியின் வெந்நீர் ஊற்றுகள், ஹேம் குண்ட் சாகிப், அமர்நாத், நீலகண்ட பர்வதம், சிவலிங்க மலை, பத்ரிநாத், கேதார்நாத், பாகீரதி, பிரயாகைகள், உத்தரகாசி என பல்வேறு இமையத் தொடரின் பல அழகான இடங்களை காட்சிகளாக அனுபவிக்க முடிந்தது. துத் கங்கா, ஆகாச கங்கா போன்ற தூய நீர் ஓடும் வெளிகளை அதன் ஓசைகளுடனும் மௌனத்துடனும் உணர முடிந்தது. இமையத்தின் பௌர்ணமி, இரவுகள், வெயில்கள் என எல்லாமே பேரனுபவம். சுடுநீர் தகிக்கும் பாறையின் மீது கம்பளியின்றி உறங்கி வியர்க்க விறுவிறுக்க எழுகிறார்கள். இமாலயத்தில் உச்சி வெயிலில் சூரிய வெப்பம் தாக்கி பலியாகலாம் என்பது புதிய செய்தி. அங்கு வெய்யில் பனியை உருக்க முடியாது மழையே பனியை விலக்குகிறது. மழையின்போது குடையுடன் அல்லது மழை கோட்டுடன் நடந்து செல்கிறார்கள். யமுனையின் அருகே நல்லிரவிலமர்ந்து எக்காரணமும் இன்றி மௌனத்தில் அமிழ்ந்தபடி அழுகிறார். இயற்கையின் முன் மனிதன் ஏதுமற்றவன் என உணரும்போது ஏற்படும் விகசிப்பின் கண்ணீர் அது. வாழ்வின் மீது என்னவென்று சொல்ல முடியாத ஒரு நன்றியுணர்வு.



எலிகளுக்கு அன்னமிடும் பாபா, கடும் குளிரில் குகையின் போத்தலை மூட நள்ளிரவு எழுந்து வரும் பாபா, இரவெல்லாம் இவர்கள் உறங்க விறகில் நெருப்பு வளர்க்கும் பாபா, இனிய தேநீரும், ரொட்டிகளும் தனி கையால் சமைத்து பரிமாறும் பாபாக்கள் என பெரும் கருணை சூழ்ந்த உலகை ஷௌக்கத் காட்டுகிறார். பெரும்பாலான பாபாக்கள் அனைவரும் நன்றாக சமைப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை அவதானிக்கிறார். காலா கம்பளிவாளா தனியொருவராக இமையத்தில் பாதையமைத்துக் கொடுத்தவர். பத்ரியில் தவமிருக்கும் பாபா எவரையும் சந்திக்க விருப்பமற்றவர். அவருடைய எச்சரிக்கையை மீறி சந்திக்கச் சென்ற காவல் துறை அதிகாரியை கவட்டைக் கல்லால் துரத்துகிறார். துரதிஷ்டவசமாக அவர் இறந்து போகிறார். அந்த பாபாவை அடித்துத் துன்புறுத்துகிறார்கள். இப்படியான பல கதைகள் உள்ளன. குருத்துவாராவிற்கு சென்று ஒரு நூலுக்கு (குரு கிராந்த் சாகிப்பிற்கு) குருவின் இடம் அளிக்கப்படுவதை எண்ணி புளங்காகிதம் அடைகிறார். அப்போது யார் உண்மையான இஸ்லாமியன் என்பதற்கு ராபியாவின் கதையைச் சொல்கிறார். ராபியா ஒரு கையில் தீப்பந்தத்துடனும் மறு கையில் தண்ணீர் வாளியுடனும் நடந்து வந்தபோது எதிர் வந்தவன் அவரிடம் இவை எதற்கு என்று வினவினான். தீபந்தம் உங்கள் சொர்க்கத்தை எரிப்பதற்கு. தண்ணீர் உங்கள் நரகத்தை அணைப்பதற்கு.



பயணங்களில் தாங்கள் சந்தித்த இடர்களை விமர்சனபூர்வமாக பதிவு செய்யவும் தயங்கவில்லை. யமுனோத்திரியின் பூசாரி ராம்லால் தட்டில் காசு விழவில்லை என்றால் வசைபாடுபவன். ஆனால்  அவனே இவர்கள் மீது பெரும்பிரியம் கொண்டவனாகவும் இருக்கிறான். வசைக்கு பயந்தே காசிடுபவர்கள் உண்டு.  உத்தரகாசியில் கைலாச ஆசிரமத்தில் தங்கும்போது அவர்கள் உண்மையில் ஆசிரமவாசிகளா எனும் ஐயம் எழுகிறது. ஆணும் பெண்ணுமாக பயணிக்கும் பல இடங்களில் இதே சிக்கலை சந்திக்கிறார்கள். ஐயத்துடன் ஆசிரமத்தில் தங்குவதற்கு அறை அளிக்கிறார்கள். மாலை வழிபாட்டின்போது வலம் வரும் சமயத்தில் காயத்ரியை மட்டும் நிறுத்தி விடுகிறார்கள். பெண்கள் சுற்றக்கூடாது என கறாராகச் சொல்லிவிடுகிறார்கள். பெயரளவில் வேதாந்தம் பேசிக்கொண்டு திரிபவர்கள் என அவர்களை பற்றி விமர்சனம் வைக்கிறார். பெரும்பாலான சுவாமிகள் காயத்ரி வணங்கச் சென்ற சமயங்களில் பாம்பைக் கண்டது போல் காலை இழுத்துக் கொண்டதைச் சொல்கிறார். பெண்ணல்ல சிக்கல், பெண் பற்றிய பார்வையே சிக்கல் என்பதை உணர்ந்தால் அவளைத் தடையாக உணர மாட்டார்கள் என வாதிடுகிறார். தாழ்த்தப்பட்டவர்களின் கிருஷ்ணன் கோவிலுக்குள் நுழைவது கேதார்நாத்தில் எல்லோராலும் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. மற்றொரு இடத்தில் பெண்களுக்கு தங்குமிடம் மறுக்கப்பட்ட போது காயத்ரி அந்த பாபாவிடம் சென்று ‘கங்கையும் குகையும் எவருடைய தனிச்சொத்தும் அல்ல மறுப்பதற்கு’ என கூறிவிட்டு விடைபெறுகிறார். ஷௌக்கத் “தெய்வமே இதுதான் சந்நியாசம் என்றால் ஒரு ஜென்மத்திலும் நான் சந்நியாசி ஆகிவிடக்கூடாதே என மனமுருகிப்  பிரார்த்தித்துக் கொண்டேன்” என எழுதுகிறார்.



பரமஹம்ச யோகானந்தரின் ‘ஒரு யோகியின் சுயசரிதை’ சுவாமி ராமாவின் ‘ Living with Himalayan Masters’ ஆகிய இருநூல்களையும் முன்னரே வாசித்திருக்கிறேன். இவ்விரண்டு நூல்களில் இருந்து ஹிமாலயம் மாறுபடுகிறது. அவ்விரு நூல்களுமே இந்திய ஆன்மீகத்தின் மறை ஞானப் பகுதியை, அற்புதங்களை தேடி அலைவுறுகிறது. “மனிதன் அவனுடைய அறிவினால் கண்டடையும் உண்மைகளின் எல்லை வரையறுக்கப்பட்டது. ஒன்றைச் சார்ந்தேயிருப்பது. பிரபஞ்சம் முழுவதையும் உட்கொள்ளும்படியான வகைப்படுத்தலொன்றும் அதனுள் இருக்காது. நம்மால் செய்ய முடிவது அந்தக் காட்சியை நோக்கி ஆச்சரியம் கொள்ளுதல் மட்டுமே. ஸ்ருஷ்டியின் மகத்துவத்தில் பேரானந்தம் அடையலாம். அவ்வளவுதான். அப்படியென்றால் இந்தப் பிரபஞ்ச ரகசியத்தை உணர்ந்தவர்கள் தத்துவ ஞானிகளை விடக் கவிஞர்கள்தான்.” ஷௌக்கத்தின் ‘ஹிமாலயம்’ யோகியாக முயன்று கொண்டிருக்கும் கவிஞனின் கூற்று என்பதாலேத்யே நெருக்கமாக இருக்கிறது. குரு நித்யாவின் மரபில் வந்த ஷௌக்கத் காயத்திரிக்கு அற்புதங்களின் மீது மதிப்போ ஈடுபாடோ இல்லை. ஷௌக்கத் சில இடங்களில் அவற்றை விமர்சனபூர்வமாகக் கூட அணுகுகிறார்.



ஒரு உதாரணத்தைச் சொல்லலாம் என்றால் முற்பிறவியில் தான் விவேகானந்தர் என நம்பும் மகாவீர்சிங் ராணா எனும்  சுவாமியை ஷௌக்கத்தும் காயத்ரியும் சந்திக்கிறார்கள். இருவருமே அவரைத் தொல்லையாகப் பார்க்கிறார்கள். ‘உச்சக்கட்ட வேடிக்கை’ என்றே அவரது நம்பிக்கையைச் சொல்கிறார். முற்பிறவியில் ஷௌக்கத் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று அவருடைய சிஷ்யை பூனம் நம்பி மேற்கொண்டு கிலி கிளப்புவார். இருவரும் தன்னைத் தேடி வருவார்கள் என தனக்குள் சில சமிக்ஞைகள் தோன்றியதாக ராணா சொல்கிறார். ஆனால் ஷௌக்கத் அவர்களை கேலியுடன் தான் அணுகுகிறார். ராணா இரவு தங்கும்போது அவருடைய சிஷ்யையுடன் தங்குவதைத் தவிர்க்கிறார். ஏதேனும் தவறிப் போனால் இத்தனையாண்டு தியானம் வீணாகிவிடும் என அவர் சொன்னதைக் கேட்டு ஷௌக்கத் வெடித்துச் சிரிக்கிறார்.



ஷௌக்கத் ஆங்காங்கு குரு நித்யாவின் வரிகளையும் நாராயண குருவின் வரிகளையும் மேற்கோள் காட்டுகிறார். “மதம் ஏதானாலும் மனிதன் நன்றாக இருந்தால் போதும்” எனும் நாராயண குருவின் வரி மனதை ஆழமாக தொந்தரவு செய்தது. நாராயண குரு என்றல்ல, காலனிய காலகட்டத்து இந்திய ஆன்மீக மரபுகள் அனைத்தின் பொதுவான கவலை இதுவாகவே இருந்திருக்கும் எனத் தோன்றியது. வள்ளலார், அய்யா வைகுண்டர் என தமிழக மெய்ஞான மரபுகளுடன் சேர்த்து இவ்வரியை விரித்துக்கொள்ள முடியும். பஞ்சத்திலும் பாராமுகத்திலும் மறித்துப் போகும் முகங்களைக் கண்டு உருவான ஆன்மீக மரபு மனித மீட்பையே கொள்கையாகக் கொண்டிருக்க முடியும்.



ஒட்டுமொத்தமாக ஹிமாலயப் பயணம் என்ன அளிக்கக்கூடும்? இந்நூலில் நரேஷின் சொற்கள் அதன் சாரம். “நாமொன்றுமில்லை என்பதே ஹிமாலய குரு நமக்கு சொல்லித் தருவது”. இயற்கையின் வசீகர பிரம்மாண்டத்திற்கு முன் நம் அகங்காரம் பணியும்போது நம் அகம் விரிவடைந்து பிரம்மாண்டத்தின் ஒரு துளியாக உணர்வோம். அந்த அனுபவமே ஹிமாலயத்தை நோக்கி நம் அனைவரையும் செலுத்துகிறது எனத் தோன்றுகிறது. நேர்த்தியான மொழியாக்கம் செய்த ஜெயஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

நூல் : ஹிமாலயம், சிகரங்களினூடே ஒரு பயணம் –  ஷௌக்கத்

தமிழில் : கே.வி. ஜெயஸ்ரீ

வெளியீடு : வம்சி பதிப்பகம்

விலை : ரூ. 300

Monday, June 1, 2020

ஆல்டஸ் ஹக்ஸ்லியின் அகவெளிப் பயணங்கள்

(தமிழினி இதழில் முன்னர் வெளியாகியிருந்த கட்டுரை. ஹக்ஸ்லியின் இறுதி காலத்தை கொண்டு ஒரு புனைவு எழுத வேண்டும் எனும் எண்ணம் எனக்குண்டு.)


“Eternity” he answered. “Believe it or not, it’s as real as shit.” – Island, Aldous Huxley 

ஆல்டஸ் ஹக்ஸ்லியை ஒரு பெயராக எப்போதோ அறிந்திருந்தேன். இப்போது நினைவுகூரும் போது அது ஜூலியன் ஹக்ஸ்லியாக இருக்கக்கூடும். ஜூலியன் ஆல்டஸின் சகோதரர். பேர்போன பரிணாமவியல்  ஆதரவாளர், அறிவியலாளர். இவர்களின் தாத்தா தாமஸ் ஹென்றி ஹக்ஸ்லி பரிணாமவியல் கோட்பாட்டை தீவிரமாக முன்னெடுத்தவர். சென்ற ஆண்டு திமோதி ஸ்னைடர் எழுதிய ‘கொடுங்கோன்மையைப் பற்றி (On tyranny)’ நூலை வாசிக்கும் போது “சர்வாதிகாரத்தின் வழிமுறைகளை அறிய வேண்டுமெனில் ஜார்ஜ் ஆர்வெலின் ‘1984’ வாசியுங்கள், அதைவிடவும் தீவிரமாக அவருக்கு வெகுகாலம் முன்னரே சர்வாதிகாரத்தின் முகங்களைப் பேசிய நாவல் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘Brave New World’ வாசியுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.



புத்தகத் தேடலின்போது தற்செயலாக அகப்பட்டதுதான் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் தேர்ந்தெடுத்த எழுத்துக்கள் அடங்கிய ‘மோக்ஷா’ எனும் தொகுதி. இந்நூல் அவர் ‘சைகடெலிக்’ (மனதின் மீது தாக்கம் செலுத்துபவை) மருந்துகளை உட்கொண்ட அனுபவத்தையும், அதையொட்டிய அக தரிசனங்களையும் பற்றிப் பேசுகிறது. இரண்டு பகுதிகளைக் கொண்டவை. முதல் பகுதி ‘சைகடெலிக்’ மருந்துகளைப் பற்றியும், இரண்டாம் பகுதி அவருடைய மறைஞான மற்றும் தரிசன அனுபவங்களையும் உள்ளடக்கமாகக் கொண்டது. வருட வாரியாக அத்தியாயங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கடிதங்கள், கட்டுரைகள், நாவல் பகுதிகள், நினைவுக் குறிப்புகள் என பலவும் இடம்பெற்றுள்ளன. பெயோடி (Peyote) எனும் மெக்ஸிக கள்ளிச்செடியிலிருந்து எடுக்கப்பட்ட ‘மெஸ்கலின்’, புனிதத்தன்மை கொண்டதாக நம்பப்படும் மெக்ஸிக காளானிலிருந்து எடுக்கப்பட்ட சிலோசைபின் (Psilocybin) மற்றும் எல்.எஸ்.டி ஆகியவற்றை வெவ்வேறு காலகட்டங்களில் உட்கொண்ட அனுபவங்களை இந்நூலில் விவாதிக்கிறார்.

அமெரிக்காவில் ஐம்பதுகளின் இறுதியிலும் அறுபதுகளிலும் செல்வாக்கு பெறத் துவங்கிய எதிர்கலாச்சார இயக்கத்தின் துவக்கப் புள்ளிகளில் அவரும் ஒருவர். கிழக்கின் பவுத்தமும் யோகமும் தாந்த்ரீகமும் மேற்கை வசீகரிக்கத் துவங்கிய காலகட்டம் அது. மாக்ஸ் முல்லர், விவேகானந்தர் போன்றவர்களை ஒரு துவக்கப் புள்ளியாக கருதினால்கூட இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில்தான் மேற்கு அதிகமும் கிழக்கை நோக்கி தன் கவனத்தைக் குவித்தது. பரமஹம்ச யோகானந்தர், ஹிப்பி இயக்கம், மகரிஷி மகேஷ் யோகி, ஓஷோ என்றொரு வட்டம் உருவானது. ஹக்ஸ்லி ஜே. கிருஷ்ணமூர்த்தியுடன் உரையாடியுள்ளார். வேதாந்தம் மற்றும் பவுத்தம் சார்ந்து ஆழ்ந்த புரிதல்கள் அவருக்கிருந்தன. ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த துறவி பிரபவானந்தரின் மீது மிகுந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவராக இருந்தார். ‘Vedhantha and the West’ எனும் ஈர்மாதத்தொரு பத்திரிக்கையில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். ஹக்ஸ்லியின் குரு பிரபவானந்தர் லாகிரி வழி ஆன்மீகத் தளத்தை அடைய முடியும் எனும்  பார்வையை ஏற்கவில்லை. இவை ஆன்மீக விழிப்புக்கு எதிரானவை என நிராகரித்தார். எனினும் ஹக்ஸ்லி அவர் மீது நன்மதிப்பு கொண்டவராகவே இருந்திருக்கிறார். ‘The Divine Within’ எனும் அவருடைய மற்றொரு நூலில் இவை விவாதிக்கப்பட்டுள்ளன (இந்நூல் ‘Vedhantha and the West’ இதழுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு)

ஹக்ஸ்லியின் துவக்க கால எழுத்துக்கள் மறைஞான மறுப்பை உள்ளடக்கமாக கொண்டவை. அவற்றைக் கேலி செய்பவை என ‘The Divinity Within’ நூலின் முன்னுரையில் சுட்டுகிறார் ஹ்யுஸ்டன் ஸ்மித். ஆனால் காலப்போக்கில் அவருடைய நிலைப்பாடு மாறியது. 1930களில் வெளியான அவருடைய மிகப் புகழ்பெற்ற நாவலான ‘Brave New World’ உருவாக்கிக் காட்டிய ‘சோமா’ எனும் அருமருந்து (கண்ணீர் இல்லாத கிறித்தவம், ஒரு புட்டிக்குள் அறம்) என்பதிலிருந்து 60களில் வெளிவந்த அவருடைய இறுதி நாவலான ‘Island’ உருவாக்கும் ‘மோக்ஷ’ (ஞானத்தை, விடுதலையை அடைவது) மருந்துக்கும் இடையிலான நெடும் பயணம் அவர் வாழ்க்கை என நூல் அறிமுகத்தில் குறிப்பிடுகிறார் அலெக்சாண்டர் ஷுல்ஜின். ‘சோமா’ புறச் சூழலுக்கு தொடர்பற்று எப்போதும் மகிழ்ச்சியை அளிக்கும் வஸ்து. சர்வாதிகாரத்தின் ஆயுதமாகச் செயல்படுகிறது. ஒருவகையான தப்பித்தல். ‘ஜோர்பா எனும் கிரேக்கன்’ நாவலில் கசன்ஜாக்கிசின் ஒரு மேற்கோள் நினைவுக்கு வருகிறது. மகிழ்ச்சிக்கும் விடுதலைக்கும் இடையிலான தேர்வில்  மனிதகுலத்தின் பெரும்பான்மையினர் மகிழ்ச்சியையே தேர்வு செய்வார்கள். ஹக்ஸ்லி மகிழ்ச்சியைத் தேர்வு செய்வதிலிருந்து துவங்கி விடுதலை நாட்டத்தை அடைகிறார். அதன் பொருட்டு துணிவுடன் மரணத்தைத் தழுவவும் தயாராக உள்ளார். ‘மோக்ஷா’ தப்பித்தலுக்கு வழி கோலுவதில்லை. நேர்மாறாக முழு விழிப்புணர்வைக் கோருவது.

மனிதருக்கு போதை ஏன் தேவையாய் இருக்கிறது எனும் கேள்வியை எதிர்கொள்ளும் ஹக்ஸ்லி, ‘அவை சுவைமிக்க விடங்கள், நட்பற்ற உலகின் மத்தியிலே வாழும் மனிதர்கள் அவை வழியே குறுகிய கால, நிலையற்ற சொர்க்கங்களை தங்களுக்கென கட்டமைத்துக் கொள்கிறார்கள்’ என்கிறார். மூன்று திசைகளில் நாம் சுயத்தைக் கடக்க முடியும்- கீழ்த்திசை, கிடை மட்டம் மற்றும் மேல்நோக்கி. இதில் மது, அதீத பாலியல் செயல்பாடுகள், கும்பல் மனப்பாங்கு (இதற்கு அவர் பயன்படுத்தும் சொல் ‘herd poisoning’) போன்றவை சுயத்தை கீழ்த்திசையில் இழுத்துச் செல்பவை. சுயத்தைக் காபந்து செய்வதற்கு பழங்களும், காய்களும், பருப்புகளும் சரியானவை, ஆனால் சுய திருப்தியின்மை நிலையில் தன்னைக் கடக்கும் உந்துதல் இருக்கும் போது தனது பிரக்ஞையை மாற்றும் எந்த ஒரு பொருளும் அது மேலானதாகவோ கீழானதாகவோ எப்படி இருந்தாலும் சரிதான். ஆகவே தான் அழிவைத் தரும் என்று அறிந்தும் மக்கள் மதுவை நாடுகிறார்கள். காபந்து செய்யப்பட சுயத்திலிருந்து தப்பிக்க மனிதன் பயன்படுத்திய எத்தனையோ வழிகளில் மதுவும் ஒன்று. தொன்மையான எல்லா மதங்களிலும் ஏதோ ஒருவகையில் போதையூட்டும் பொருட்கள் சடங்குகளின் வழியாக முக்கியத்துவம் பெறுகின்றன. ஒவ்வொரு மதமும் பல தளங்களில் இயங்குவன. ஒரு தளத்தில் சடங்குகளாக, மற்றொரு தளத்தில் குறியீடுகளாக, மற்றொரு தளத்தில் குறியீடுகளில் செலுத்தும் அன்பு, பக்தி, அச்சம் போன்ற ஆதார உணர்வுகளாக, இறுதியாக அதன் ஆழத்தில் ஒருவகையான முன்னறிவாக- எல்லாவற்றிற்கும் இடையில் நிலவும் ஓர்மை உணர்வாக. இவ்வனுபவத்தை அடைவதையே இறைவனோடு சேர்தல் என மறைஞானிகள் குறிக்கின்றனர் என தன் புரிதலைச் சொல்கிறார்.

1931 ஆம் ஆண்டு எழுதிய கட்டுரையில், ‘இது கண்டுபிடிப்புகளின் யுகமாக இருந்தாலும் நவீன கண்டுபிடிப்பாளர்கள் ஆரோக்கியமான புதிய இன்பத்தை நுகரும் முறையை இதுவரை கண்டடையவில்லை. இதற்கு நாம் மரபான வழிமுறைகளையே சார்ந்திருக்கிறோம்,’ என்கிறார். நவீன கால இன்பங்கள் எந்த வகையிலும் நம்மை மேம்படுத்துபவை அல்ல, அதற்கு பிரபஞ்சமளாவிய தன்மை ஏதுமில்லை. ஒரு வகையில் வேகத்தை வேண்டுமானால் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கொள்ளலாம், ஆனால் அதுவும் ஆபத்து நிறைந்ததே என வாதிடுகிறார். ஒரு லட்சிய போதை மருந்து என்னவாக இருக்கும் எனும் கேள்வியை ‘Brave new world’ நாவலில் எதிர்கொள்கிறார். ‘அது மூன்று வேறுவிதமான விளைவுகளை அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். மகிழ்வை, (Euphoric) பிரமையை (Hallucinating), அமைதியை (Sedative), என ஒன்று சேர முடியாதவற்றின் கலவையாக இருக்க வேண்டும்’. அவருடைய ‘சோமா’ இத்தகைய ஒரு கனவுதான். ஐம்பதுகளில் இதே கேள்வியை எதிர்கொள்ளும்போது அவருடைய விடை மாறிவிடுகிறது. அடிமைப்படுத்தக் கூடாது, பிரக்ஞையை சுருக்கக் கூடாது, உடல் ரீதியாக எவ்வித குறுகிய கால மற்றும் நீண்ட கால உபவிளைவுகள் நேரக் கூடாது, ஹேங் ஓவர் இருக்கக்கூடாது. மெஸ்கலின், எல்.எஸ்.டி போன்றவை இத்தகைய இயல்புகள் உடையவை என்றே கருதினார். ‘மோக்ஷா’ இந்தக் கனவுகளின் விளைவில் உருவானது. ஹக்ஸ்லி தன் வாழ்நாளில் விரல்விட்டு எண்ணும் அளவில்தான் லாகிரிகளை உட்கொண்டார். லாகிரியை முன்மொழிவதாக புரிந்துகொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்ட போது அது குறித்த எச்சரிக்கைகளையும் பிற்கால எழுத்துக்களில் விடுத்தார். ஓர் அறிவுஜீவிக்கு மகத்தான சிம்பொனி என்ன விளைவை ஏற்படுத்துமோ அதை மது சாமானியர்களுக்கு ஏற்படுத்துகிறது என்று சொன்ன அவரே மதுவின் சமூகக் கேடுகளை சுட்டி கடுமையாக விமர்சிக்கவும் செய்தார். மேலும், முழுமையாக போதையூட்டிகளை தடை செய்ய இயலாது. அபரிமிதமாக கிடைப்பதால் ஏற்படும் ஆபத்துகளைக் காட்டிலும் அவை தடை செய்யப்படுவதால் ஏற்படும் விளைவுகள் விபரீதமாக இருக்கும் என எச்சரிக்கிறார்.



அவர் சர்வாதிகாரம் குறித்து பல நுட்பமான கருத்துகளை கொண்டிருந்தார். அச்சம் மக்களை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்த பயனற்ற முறை என்பதை ரோமானியர்கள் எப்போதோ கண்டுபிடித்துவிட்டார்கள். ஆகவே வருங்கால பிரசாரகர்கள்/ சர்வதிகாரிகள் நிச்சயமாக வேதியல்/ மருந்தாளுநர்கள் மற்றும் உடற்கூறியல் நிபுணர்களாகவே இருக்க முடியும் எனக் கணித்தார். ‘மருந்தாளுமையை இலக்கியத்துடன் ஒன்றிணைக்கும் ஒரு பிரச்சார வழிமுறை வெல்லப்பட முடியாததாக இருக்கும்’ என்பது அவருடைய ஆரூடம். பொதுவான நுண்ணறிவு மற்றும் மன விழிப்பு நல்ல மக்களாட்சியின் குறைந்த பட்ச தேவை, அவையே முற்றதிகாரத்தின் எதிரியும்கூட என்று எழுதினார்.

பண்பாடு குறித்த ஹக்ஸ்லியின் புரிதல் முக்கியமானது. பண்பாட்டு மறுப்பிற்கும் பண்பாட்டு துதிக்கும் இடையிலான பாதையை தேர்வு செய்கிறார். நாம் விரும்பியோ அல்லாமலோ ஒரு பண்பாட்டுச் சூழலில் புழங்குகிறோம். அதை ஆக்கப்பூர்வமாக முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேவேளை அது நம்மை முழுவதுமாக மூடிவிடவும் அனுமதிக்கக் கூடாது. அதில் படைப்பூக்கத்துடன் சில பொத்தல்களை இடவேண்டியது முக்கியம். அதன் வழியாக நம் பிரக்ஞை விரிவடையும். குழந்தைமையில் நாம் சுளுவாக புழங்கிய உலகத்தையும், பிழைப்புக்கு தேவையான நவீன கல்வி கட்டமைத்த உலகத்தையும் ஒருங்கிணைப்பது எப்படி என்பதைப் பற்றிய கேள்விகள் அவருக்கு இருந்தன. மீண்டும் மீண்டும் இவ்விரு உலகங்களில் இருந்து சிறந்தவற்றை எடுத்துக் கோர்க்க வேண்டும் என கனவு கண்டார். தன்னியல்பும் தொழில்நுட்பமும் எதிரெதிர் துருவங்களாக நிற்கின்றன. அதி உயர் தொழில்நுட்பத்தை வலியுறுத்தும் சூழலில் மனிதன் தன்னியல்பாக வெளிப்பட அனுமதிக்கப்படுவதில்லை என்கிறார். தொழில்நுட்பம் மனித இனத்தின் சட்டவிதிகளுக்கு ஏற்ப வளர்வதில்லை. அது தன் போக்கில் தன்னிச்சையாக வளர்கிறது. மார்க்சிய உலகிற்கும் முதலீய உலகிற்குமான முக்கியமான வேறுபாடாக ஹக்ஸ்லி இதையே முன்வைக்கிறார். மார்க்சியம் எல்லா எல்லைகளையும் கடந்து முழுவதுமாக மனித சமூகத்தை தொழில்நுட்பமயமாக்க முயல்கிறது ஆனால் முதலீய சமூகத்திற்கு அப்படி தன்னை முற்றளிப்பதில் உடன்பாடில்லை. இன்னமும் தனிமனித சுதந்திரத்தை நம்பி, ஜனநாயக அமைப்புகள் மீது பற்று கொண்டிருக்கிறோம். இதற்கு மிக தொன்மையான உதாரணத்தை அளிக்கிறார். பழைய ஏற்பாட்டில் அரசர் டேவிட் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு யேஹோவாவின் விருப்பை மீறி (அதாவது சாத்தானின் எண்ணத்திற்கு இணங்க) ஆணையிடுகிறார். அப்போதே மக்களுக்கு ‘எண்ணிக்கை’ குறித்து எதிர்மறை எண்ணம் இருந்ததை உணர முடிகிறது என்கிறார். அதை அவர்கள் அரசின் ஊடுருவல் என்றே கருதினார்கள் என்கிறார்.

ஹக்ஸ்லி ஒட்டுமொத்த மானுட வரலாறே சுயத்திலிருந்து வெளியேறும் யத்தனங்களால் நிறைந்தது எனும் கோணத்தில் அணுகுகிறார். அவருடைய ஒரு உரை இப்படித் துவங்குகிறது- ‘வரலாற்றின் நெடும்பாதையில் தன் மதத்திற்காகவோ நாட்டிற்காகவோ உயிர் துறந்தவர்களைக் காட்டிலும் பன்மடங்கு அதிக மக்கள் தத்தமது மதுவிற்காகவும் போதைக்காகவும் உயிர் துறந்தார்கள்.’ அமெரிக்க உளவியல் நிபுணர்கள் மாநாட்டில் ‘மதமே வெகுமக்களின் மயக்க மருந்து (ஓபியம்)’ எனும் மார்க்சின் மேற்கோளை ‘மயக்கமே (ஓபியமே) வெகுமக்களின் மதம்’ என தலைகீழாக்குகிறார். மனிதன் நெடுங்காலமாக தானற்ற நிலையை அடையவே முயல்கிறான். ‘Doors of Perception’ கட்டுரை வழியாக அவர் வந்து சேரும் இடம் என்பது மனிதனின் அத்தனை முயற்சிகளும், அவன் தற்செயலாக ஆழத்தில் நுழைந்து மறுபக்கத்தை காண உதவி பின்னர் நினைவிலிருந்து நழுவிப்போன கதவைக் கண்டடைவதற்காகத்தான் என்பதாகவே உள்ளது. கடும் உண்ணாவிரதம், புலன்களை ஒடுக்குதல், குழு நடனம், மது, இசை, பிராணாயாமம், தியானம் என பல்வேறு வழிகளை இதற்கென உருவாக்கியிருக்கிறான் ஆதி மனிதன். பிராணாயாமத்தை குருதியில் கரியமிலவாயு அதிகமாக்கும் முயற்சி என்கிறார். நேரடியாக கரியமில வாயுவை சுவாசித்து வினோதமான பிரமை தரிசனங்களை அடைய முயற்சிக்கிறார். உணவு பழக்கம்கூட இன்றைய காலகட்டத்தில் அக தரிசனத்தை தடை செய்கிறது என்கிறார். தூக்கமின்மை வழியாகவும் அக தரிசனங்களை அடைய முடியும். நவீன காலகட்டம் தரிசனவாதிகளுக்கு உரியதாக இல்லை. அவர்களை எவரும் நம்பத் தயாராய் இல்லை. இப்படியான தரிசனங்களுக்கும் படைப்பூக்கத்திற்கும் தொடர்பு உண்டு. ஆனால் தரிசன அனுபவங்கள் இல்லாமலே மேலான இலக்கியம் இருக்கவும் முடியும் என்கிறார். பெரும்பாலான தரிசன அனுபவங்கள் எழுத்தில் பதிவாவதில்லை. தரிசன தெறிப்புகள் மானுட மேன்மைக்கு செயல்பட்டுள்ளன. அவை குறியீடுகளாக நிறுவப்பட்டுள்ளன. சட்டென நினைவுக்கு வருவது பள்ளியில் பென்சீன் வடிவத்தை தன் வாலைக் கவ்வும் சர்ப்பமாகக் கனவு கண்டு விழிப்பது, ஆர்சிமிடிசின் யுரேகா தருணம் போன்றவை. சக்கரம், நெருப்பு என மாபெரும் கண்டுபிடிப்புகள் ஏதோ ஒருவகையில் ஆழமான சமிங்ஞை வழி பெறப்பட்டிருக்கக் கூடும்.



ஹக்ஸ்லி ஆன்மீகத்தையும் அறிவியலையும் இணைக்கும் புள்ளியில் இயங்கினார். ஆன்மீக அனுபவங்களை தர்க்கப்பூர்வமாக விளக்க முயன்றார். அவர் தன்னைப்பற்றி சொல்லும்போது “மறைஞான அனுபவத்தை ஒரே நேரத்தில் ஆன்மீக தளத்தில், உளவியல் தளத்தில் உயிர் வேதியல் தளத்தில் பேசவியலும்,” என்றே சொல்கிறார். ‘நரிக்கு பல விடயங்கள் தெரியும் ஆனால் முள்ளம்பன்றிக்கு ஒன்றே தெரியும்,’ எனும் உவமை வழியாக தன்னை நரியாகவும் துறை வல்லுனர்களை முள்ளம்பன்றியாகவும் உருவகப்படுத்துகிறார். பல்வேறு கூடுகைகளில் மருத்துவம் சாராத ஒரே குரலாக அவருடையது ஒலித்திருக்கிறது. மனித மூளை சாமானியச் சூழலில் பிழைப்பதற்குத் தேவையான அளவில் தன்னை குறுக்கி வெளிக்காட்டுவது. நோய், உணர்வுபூர்வ அதிர்ச்சி, அழகியல் அனுபவம், மறைஞான விழிப்பு போன்றவை வெவ்வேறு வகையில் வெவ்வேறு அளவில் மூளையின் இயல்பான செயல் தளத்தை மட்டுப்படுத்துபவை, அதன்வழி பிரக்ஞையை ‘மற்றைய உலகிற்கு’ உயர்த்துபவை என்கிறார். இப்பகுதிகளை கொண்டு தியாகராஜரின் ராமநாம தவத்தை, இயேசுவின் குரல் கேட்பதாக சொல்வதை, சன்னதத்தை என பலவற்றை பற்றிய புரிதலை விரிவாக்கிக் கொள்ள முடிகிறது. மனச்சிதைவு நோயால் ஆட்படுவதில் உள்ள வசதி வாய்ப்புகள் யாவை என பேராசிரியர் ஒருவருடன் சேர்ந்து ஆராய்ந்து வருவதாக கடிதம் எழுதுகிறார். மெஸ்கலின் வேதியல் ரீதியாக அட்ரினலினோடு நெருக்கமாக தொடர்புடையதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதைச் சொல்கிறார். ஆன்மீக மறைஞான அனுபவங்கள் நிகழும்போது பலரும் அச்சத்தையும் நடுக்கத்தையும் அடைந்திருக்கிறார்கள். ஆணவம் சூழ்ந்த எளிய உயிராக கட்டற்ற ஆற்றலுக்கு முன் தற்செயலாக நிற்கும்போது ஏற்கப்படும் அச்சமும் நடுக்கமும் தான் அது என்பது அவருடைய பார்வையாக இருக்கிறது. ஹக்ஸ்லி பிற அறிவியல் ஆய்வாளர்களிடமிருந்து வேறுபடும் முக்கிய இடம் என்பது இத்தகைய நிலைகளை இயல்பிற்கு மீறிய பிறழ்ச்சி என அவர் கருதவில்லை. மாறாக அவை நாமறியா நோக்கங்களுக்காக நம்முள் இருக்கும் ஒரு பகுதி என்றே கருதுகிறார்.

1953 ஆம் ஆண்டு முதன்முறையாக மெஸ்கலின் எடுத்துக் கொள்கிறார். அவருடைய முதல் மனைவி மரியா அவருடன் இருந்தார். ஹக்ஸ்லியின் நெருங்கிய நண்பராக, இந்நூலில் தொகுக்கப்பட்ட பெரும்பாலான கடிதங்களுக்கு உரியவர் டாக்டர் ஹம்பரி ஆஸ்மான்ட். அச்சமும் தயக்கமும் சூழ ஹக்ஸ்லியின் மெஸ்கலின் சோதனையில் உடனிருந்தார். அவர்தான் அதை ஹக்ஸ்லிக்கு அறிமுகம் செய்தவர். அந்த அனுபவத்தைதான் பிற்காலத்தில் ஹக்ஸ்லி ‘Doors of Perception’ என்றொரு நூலாக்கினார். விந்தையாகவோ விநோதமாகவோ அவர் எதையும் காணவில்லை ஆனால் பிரபஞ்சத்தின் சமநிலையை, ஒருமையை உணர்ந்ததாகச் சொல்கிறார். காலமில்லா முழுமையை உணர்ந்து அதில் லயித்ததாகச் சொல்கிறார். அக தரிசனமும் மறைஞான அனுபவமும் முற்றிலும் வேறானவை. எனினும் ஒன்று மற்றொன்றை நோக்கி இட்டுச் செல்லலாம். மெஸ்கலின் உட்கொண்டபோது தனக்கு நேர்ந்தது அழகியல் ரீதியான தரிசன அனுபவம் என்றும், பின்னாட்களில் எல்.எஸ்.டி மற்றும் மெஸ்கலின் வழியாக நேர்ந்தது இவற்றைக் கடந்த வேறொரு அனுபவம், மேற்கிலும் கிழக்கிலும் சொல்லப்படும் அகவய- புறவய எனும் இருநிலை கடந்த நிலை அனுபவமானது என்கிறார். இந்த மறைஞான அனுபவங்கள் எவ்விதத்திலும் முழு விடுதலையை உறுதிப்படுத்தாது என்பதை அறிந்தே இருந்தார். அவருடைய முதல் மனைவி மரியா சில ஆண்டுகளில் மரணித்த பின் இரண்டாம் மனைவி லாரா ஹக்ஸ்லியின் எல்.எஸ்.டி அனுபவத்தை ஆவணப்படுத்துகிறார். அப்போது அவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. ஒரு கணத்தில் ஹக்ஸ்லியால் லாராவுள் ஊடுருவி அவருடைய எண்ண ஓட்டத்தை தன்னிச்சையாக அறிய முடிந்ததை பதிவு செய்கிறார். ஆனால் ஹக்ஸ்லிக்கு அது குறித்து எந்த பிரக்ஞையும் இல்லை.



ஹக்ஸ்லி மனதை பல்வேறு சுவைகள் கொண்ட அடுக்குகளாக உள்ள ஐஸ்க்ரீமோடு ஒப்புமை படுத்துகிறார் *(Neopalitan Ice- ஏறத்தாழ கசாட்டா போன்று என வைத்துக் கொள்ளலாம்). ஒவ்வொரு அடுக்கும் தனித்த ருசியுள்ளது. அதேபோல் பிரக்ஞையும் தனித்துவமானது. மருந்தாளுமை நாம் விரும்பும் அடுக்குக்கு நம்மைக் கச்சிதமாக கொண்டு சேர்க்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்கிறார். ஹக்ஸ்லி அளிக்கும் உதாரணங்கள் ஆச்சரியபடுத்துபவை. அதுவரை ஆஸ்திரேலியா எனும் கண்டத்தை கண்டடையாத முதல் பயணி அங்கு சென்றதும் கற்பனையில்கூட எண்ணி பார்த்திராத கங்காரு, பிளாட்டிபஸ் போன்றவற்றை காணும்போது திகைத்து விடுவான். அவை அங்குதான் உள்ளன, ஆனால் நாமறியாத, நம் பாதை வசப்படாத வெளியில் உள்ளன. அக வெளியிலும் அப்படியான விந்தையான நிலபரப்புகள் உள்ளன. மினோடார், யாளி, டிராகன், மகிஷன், நரசிம்மம் என மனிதன் படைத்த விந்தையான உருவங்களை, கலவைகளை எங்கிருந்து பெற்றிருக்க முடியும்? ஜெயமோகனின் ‘பனி மனிதன்’ இப்படியான கனவுத் தன்மையுள்ள இடங்களை தொட்டுச் செல்கிறது. ‘வெண்முரசி’ன் ‘பன்னிரு படைக்களம்’ நாவலில் பிரம்மன் மேதாவோடு முயங்கி விந்தையான உலகை சிருஷ்டிப்பதை சொல்கிறார். அந்தப் பகுதிகள் ஹக்ஸ்லியின் கூற்றுக்கு மிக நெருக்கமாக இருப்பதை உணர முடிகிறது. கற்பனைக்கும் அக தரிசனத்திற்குமான மிக முக்கியமான வேறுபாடு என்பது அக தரிசனத்தின் போது பொருட்களுக்கு மேலதிக முக்கியத்துவம் என ஏதுமில்லை. அவை எதுவாக இருக்கின்றனவோ அதை மட்டுமே பிரதிநிதப்படுத்துகின்றன. அவை எவற்றின் குறியீடும் அல்ல. அவை வெளிப்பட்டு நிலைபெற்றபின் குறியீடுகளாக விளக்கப்படுகின்றன.

ஒரு அத்தியாயத்தில், ஏன் ரத்தினக் கற்களுக்கு இத்தனை மதிப்பு என்றொரு கேள்வியை எழுப்புகிறார் ஹக்ஸ்லி. தொன்மையான எல்லா மதங்களிலும் சொர்க்கத்தைப் பற்றிய விவரணைகள் ஏறத்தாழ ஒன்று போலவே உள்ளன. பெரும்பாலான தேவதை கதை காட்டும் உலகங்களிலும் இரத்தினங்களுக்கு முக்கிய இடமுண்டு. அங்கே எல்லாம் ஜொலிக்கின்றன, மின்னுகின்றன. எல்லாமும் அதிவேகமாக மட்கி மறைந்து கொண்டிருக்கும் நம் உலகில் அவை அழிவற்றதன் பிரதிநிதியாக, மற்றைய உலகை நினைவுபடுத்தும் விதமாக திகழ்கின்றன. ஆகவே அவை மதிப்புமிக்கதாக உள்ளன என்றொரு வாதத்தை முன்வைக்கிறார். எல்லா ரத்தினங்களும் ஏதோ ஒருவகையில் படிகமாக்கப்பட்ட தீ என்கிறார். சொர்க்கம் ஒரு இலக்கல்ல, அது முழுமையை மேலும் தெளிவாக நோக்குவதற்கான ஒரு பார்வைத் தளம். நரகத்தின் விவரணைகள் உளவியல் அளவில் உண்மை. அவ்வனுபவங்களை உளச்சிதைவுற்ற நோயாளிகள் அனுபவிக்கிறார்கள். நரகத்தின் தண்டனைகள் எல்லாமும் இறுக்குவதை, அழுத்தம் அளிப்பதை அடிப்படையாகக் கொண்டவை. நம் பிரக்ஞையை இறுக்கி கல்லாக சமைத்தலே அதன் நோக்கம். சொர்க்கம் நரகம் போன்றவற்றை அகவயமான உருவகங்களாக முன்னிறுத்துகிறார்.

உடலற்ற நிலையில் எண்ணங்களும் உணர்வுகளும் பருப்பொருட்களாக வடிவம் கொள்கின்றன. திபெத்திய பார்டோ தளத்தில் மரணத்திற்குப் பின் சென்று சேரும்போது அங்கே அஞ்சுவதற்கு ஏதுமில்லை. அடிப்படை ஒழுங்கமைவு உள்ளதே இப்பிரபஞ்சம் எனும் பிரக்ஞை வேண்டியதாய் இருக்கிறது. நன்மைக்கும் தீமைக்குமான வேறுபாடுகளை ஹக்ஸ்லி பெரிதாக ஏற்கவில்லை. நல்ல மனிதருக்கு சொர்க்க அனுபவம் உறுதி என சொல்ல முடியாது. உண்மையில் இயேசு வழி தவறிய ஆட்டுக்குட்டியை கையில் ஏந்துவதற்கு வேறு அர்த்தங்களை ஹக்ஸ்லியின் கூற்றைக் கொண்டு புரிந்துகொள்ள முடியும். மெஸ்கலின்கூட அனைவருக்கும் ஒரேவிதமான அனுபவத்தை அளிக்காது. சில நேரங்களில் சிலருக்கு அச்சமூட்டும் கொடூர அனுபவமாக இருக்கவும் வாய்ப்புண்டு என்பதையும் பதிவு செய்கிறார். ஏனெனில் அறிவு என்பது பொதுவானது என்றாலும் புரிதல் தனித்துவமானது.

வெறும் தியானம் நம்மை எங்கும் கொண்டு சேர்க்காது. பிரக்ஞை விரிவுடன் கருணையும் அன்பும் சேர வேண்டியது முக்கியம் என கருதினார். ஹக்ஸ்லி தூய வேதாந்தத்தின் பாதையைக் காட்டிலும் போதிசத்வரின் பாதையையே முன்வைத்தார். வேதாந்தத்தின் பாதையை அவர் மறுபரிசீலனை செய்தார். விடுதலை என்பது தனி ஒருவனுக்கு இருக்க முடியாது, அப்படி இருந்தால் அது எவ்வகையிலும் பொருளுடையது அல்ல. ஆகவே அது ஒட்டுமொத்த மானுட குலத்துக்கானதாகவே இருக்க முடியும் என கருதினார். தியானத்தின் வழி அடையப்பெருவது அன்பின் நிமித்தம் வெளியே அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆழமாக நம்பினார். அன்பே உலகை பிணைக்கும் ஆற்றல் என கருதினார்.

அவருடைய ‘Island’ நாவலின் ஒரு பாத்திரத்தின் மரணத் தருவாயில், கணவன் ‘மோக்ஷ’ மருந்தை அவளுக்கு அளிப்பான். அருகமர்ந்து திபெத்திய மரணமடைந்தவர்களின் புத்தகத்திலிருந்து வாசகங்களை வாசிப்பான். அமைதியாக துணிவுடன் மரணத்தை ஏற்கச் செய்வான். அப்போது மோக்ஷ மருத்துவத்தை மறுப்பவருக்கும் அளிப்பவருக்கும் இடையிலான ஒரு விவாதம் நிகழ்கிறது.

“மூளை பிரக்ஞையை உற்பத்தி செய்கிறது என நீ நம்ப விரும்புகிறாய். அது பிரக்ஞையை கடத்துகிறது என நான் நம்ப விழைகிறேன். உன் விளக்கத்தைக் காட்டிலும் என்னுடையது எந்த வகையிலும் நம்பகமற்றது அல்ல,“ என எழுதுகிறார்.



மரணத்தை ஒரு பயணமாக, வேறோர் தளமாகவே அவர் கண்டார். “முழு மரணத்திற்கான தயாரிப்பு என்பது உன் மிக உயர்ந்த மற்றும் மிகத் தீவிரமான வாழ்வின் வடிவத்துடன் உடன் வருவது, எப்போதும் நிகழும் சிறிய தொடர் மரணங்கள், அதை சார்ந்தே இருக்கின்றன. நாம் மீளமீளவரும் நினைவுகளுக்காக மரிக்க வேண்டும். மிகத் தெளிவாக இதை நினைவுகூரும் அதே வேளையில் அது குறித்து அஞ்சவும் கூடாது,” என்று ஒரு கடிதத்தில் எழுதினார். ஹக்ஸ்லியின் ‘ஐலேன்ட்’ ஒரு தீர்க்கதரிசனம்தான். லாரா ஹக்ஸ்லி ஆல்டசின் மரணத் தருவாயைப் பற்றி எழுதுகிறார். புற்றுநோய் வந்து சிகிச்சைகள் பயனளிக்காமல் மரணத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜான் எப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட அதே நாள் ஹக்ஸ்லி அவருடைய இல்லத்தில் மரணமடைந்தார். இருமுறை எல்.எஸ்.டி எனும் அவருடைய மோக்ஷ மருந்தை உட்கொண்டு, லாரா ஹக்ஸ்லி அவரருகே அமர்ந்து திபெத்திய மரணமடைந்தவர்களின் புத்தக வாசகங்களை வாசிப்பதை கேட்டபடி, அமைதியாக, முழு பிரக்ஞையுடன் உடல் நீங்கினார். பொறாமைப்படத்தக்க, கவித்துவமான மரணம். பல தளங்களில் திறப்புகளை அளிக்கவல்ல நூல் இது. எனினும் எல்லாவற்றையும் வேதியலாக, நரம்பியலாக சுருக்க முடியுமா என குழப்பம் நேர்கிறது. இத்தனை தர்க்கபூர்வமான பதில்களை அளித்துவிட்ட பின்னரும் அவை சார்ந்து நம்பிக்கையின்மையும் நிறைவின்மையும் இருக்கிறது. ஹக்ஸ்லி இந்தியச் சூழலில் விரிவாக வாசிக்கப்பட வேண்டியவர் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. அவருடைய மொழி, கவித்துவமான படிமங்கள் மற்றும் சிந்தனை தெறிப்புகள் நம் படைப்பூக்கத்தை பெருக்க வல்லவை.

ஓடுகிற நீரில் ஐஸ் கட்டிகளை உண்டாக்க முயலக் கூடாது – ஆல்டஸ் ஹக்ஸ்லி