Thursday, April 16, 2020

நீலகண்டம் : முதல் வாசிப்பின் சிறுகுறிப்பு.- கடலூர் சீனு

(நண்பர் கடலூர் சீனு - என் முதல் பதிப்பாளரும் கூட, நீலகண்டம் குறித்து ஒரு சிறுகுறிப்பை அனுப்பி இருந்தார். விரிவாக பேசவும் செய்தார். இந்த நாவலின் வடிவம் பற்றி அவர் கூறியவை இதுவரையிலான வாசிப்புகளில் சிறந்த ஒரு கோணம். அதை அவர் நேரமிருக்கும் போது விரித்து எழுதுவதாக சொன்னார். சீனுவிற்கு நன்றி)




ஒரு புனைவின் உலகினுள் ஒரு வாசகன் முதல் முறை நுழைந்து அது அளிக்கும் அனுபவத்தில் திளைப்பது மிக முக்கியமான ஒன்று. தேர்ந்த வாசகர் என்றாலுமே கூட வாசிப்பில் அவர் முன்னனுபவத்தை தோற்கடிக்கும் தனித்துவம் கொண்ட கலை, வடிவக் கூறு ஒன்றினை தேடும் வாசக ஆழ்மனம் அந்த முதல் வாசிப்பில் விழிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும்.

மறுவாசிப்பு என்பது அப்படிப் புனைவின் art, craft என முதல் வாசிப்பில் கண்டடைந்த தனித்துவமான அம்சம் அந்த புனைவுஉலகின் நெடுக்க எவ்வாறு இழைந்து நிற்கிறது என்பதை அனுபவிப்பதாக அமையும். 

அந்த வகையில், இந்த உள்ளிருப்பு நாட்களில் இரா முருகன் கோபிகிருஷ்ணன் என மருவாசிப்பு
நிகழ்த்திக்கொண்டிருந்த சூழலில், முதல் வாசிப்புக்கு என காத்திருந்த வரிசையில் முதல் நூலாக நின்ற நீலகண்டம் நாவலுக்கு ஒரு இரவை ஒதுக்கினேன்.

ஆட்டிசக் குழந்தையான வரு. அவள் வாழும் யதார்த்தம். அவளை தத்தெடுத்த தந்தையான செந்தில். அவன் வாழும் யதார்த்தம். இந்த இரு யதார்த்தங்களும் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ள இயலாமல் உறவு எனும் பெயரில் முறிந்த இரு கண்ணாடி முனைகள் போல ஒன்றை ஒன்று கீறிக் கிழித்துக் கொள்கின்றன. இரு யதார்த்தங்களும் இடையே உள்ள மெல்லிய ஆனால் கடக்கவே இயலாக் கோடு எங்கணம்
கரைந்து அழிந்தது என்பதை வரு எழுதிக்காட்டும் நாவலே நீலகண்டம்.

பாற்கடல் கடைகையில் எழும் நஞ்சைத் தாக்கும் சிவனின் கதை முதல், சிவனுக்கு பிள்ளைக்கறி என்றாகும் சீராளன் தொடர்ந்து, பிள்ளையைக் கொல்லும் சுடலைமாடன் வரை வரு சொல்லும் கதையில் வரும் எல்லாமே செந்தில் போன்ற 'நார்மல்' மனிதர்கள் வாழும் உலகின் யதார்த்தம். பாக்மான், நிமோ, நிஞ்சா டர்டில், என வருவின் டோலக் பூர் உலகிலோ மகிழ்ச்சி தவிர வேறு எதுவுமே இல்லை. செந்திலின் யதாதார்த்த உலகில் செத்துப்போகும் வான்மதி, வருவின் யதார்த்தத்தில் தேவதையாக இருக்கிறாள்.

இந்த தேவதை உலக யதார்த்தத்தை, செத்துப் போகும் உடல்கள் அடங்கிய யதார்த்தம் எங்கனம் புரிந்து கொள்ளும்? வரு உலகின் சிறகுகள் கொண்ட தேவதையை பிணமாக்கி மண்ணில் புதைக்க முயலும் நவீன மருத்துவம். அந்த நவீன மருத்துவ உலகின் உதவியுடன் தேவதையை மண்ணில் இறக்க முயலுகின்றனர் செந்தில் ரம்யா தம்பதி.

இந்த மையக் கதை ஓட்டத்தில் செந்திலின் குடும்ப பின்புலம், ரம்யாவின் குடும்ப பின்புலம், ஹரி நந்தகோபால் போன்ற மனிதர்கள், வருவை ஒத்த கொரில்லா, வள்ளி, போன்றவர்கள், தாய்மை, தந்தைமை, சகோதர உறவு,  காமம் குரோதம் சமூக அந்தஸ்து, குடும்ப அமைப்பு, என அனைத்தும் புராணக் கதைகள், தொன்மக் கதைகள், நாட்டார் கதைகள் என விரிவான பகைப்புலத்தில் இவற்றின் சாராம்சம் உடைத்துப் பரிசீலிக்கப்படுகிறது. 

மெல்ல மெல்ல செந்திலின் அகத்தில் இரு யதார்த்தங்களும் இடையியலான மெல்லிய புகைத்திரை கலைவது இந்த நாவலின் அழகிய சித்தறிப்புகளில் ஒன்று. மெல்லிய மது மயக்கில் சீராளனைக் காணும் செந்தில், கடற்கரையில் வருவை விட்டு விலக முடிவு செய்த கணம், அவன் குல தெய்வமான நாகம்மனை பார்க்கிறான். நாகம்மனின் இருப்பு வரு செந்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள எவ்வாறு துணை நிற்கிறது என்பது நாவலின் கவித்துவ சித்தரிப்பு.

கற்பனையில் வித விதமான கதை உலகம் வழியே எழுந்து பறக்கும் இந்தப் புனைவு, தர்க்கப் பூர்வமாக வரு எனும் ஆட்டிச நிலையாளரின் பார்வை நோக்கில் சொல்லப்படுகிறது. உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையால் மட்டுமே கொள்ள இயன்ற கொந்தளிப்பு தனித்துவமான வாசிப்பு அனுபவம் அளிப்பது. குறிப்பாக வருவை குழந்தையாக ஒப்படைத்து விட்டு கண் கலங்கும் மாமன், தன்னை முரட்டுத் தனமாக கையாள வேண்டாம் என்று விண்ணப்பித்து அதன் காரணம் சொல்லும் விபச்சாரி, நஞ்சு அமுதம் என கணத்தில் மாற நந்தகோபால் காலில் விழும் செந்தில் என பல சித்திரங்களை சொல்லலாம்.

'இந்த' யதார்த்த உலகில் வாழும் மனிதர்கள் குடும்பம் என்றும் சமூமம் என்றும், உறவுகள் என்றும்,  தியாகம் என்றும் அன்பென்றும், அத்மீகம் என்றும் அமைப்புகள் கட்டி வைத்து அதில் சிக்கி உழலும் வாழ்வை, அதன் அடிப்படைகளை  'அந்த' யதார்த்த உலகில் வாழும் வரு, இந்த உலகுக்கு 'அந்நியனான' 'அந்த' வரு எப்படி  வினவுகிறாள். எங்கணம் பரஸ்பரம் இரு உலகும் ஒன்றை ஒன்று அறிந்து தகவமைகிறது
என்பதன் மீதான கலா ஸ்ருஷ்டியே இந்த நீலகண்டம் நாவல். இருள் கவிந்த இந்த நாட்களில், எனக்கான சுடரொளி வாசிப்பு. அந்த வரிசையில் மற்றொரு தண்ணொளி மென்சுடர் இந்தப் புனைவின் வாசிப்பு அனுபவம்.

No comments:

Post a Comment