Tuesday, October 25, 2022

பேழை- சிறுகதை

(தினகரன் தீபாவளி மலர் 2022 ல் வெளியான எனது சிறுகதை. நன்றி தினகரன், கவிஞர் இளங்கோ கிருஷ்ணன்)



1

"அப்பா… சும்மா பாதைய மறிச்சுகிட்டு நின்டுக்கிட்டே இருக்காதிக, காலு கடுக்குதுன்ன அப்புடி திண்ணையில செத்த சாஞ்சுகிடுங்க" என்று உள்ளே நுழையும்போதே சொன்னான்  சிதம்பரம். முட்டிவரைக்குமான பூ போட்ட காற்சட்டைக்கு கீழே இருந்த ரோமத்தை காணவில்லை. மழித்திருக்க வேண்டும்.  அவன் பின்னாடியே வால் பிடித்து வந்த குமரப்பன் வெள்ளை வேட்டிச்சட்டையில் கைச்செயின், கழுத்துச்சங்கிலிகளும் மோதிரங்களும் ஜொலிக்க இருந்தான். தேக்கு பீரோலை சுமந்துக்கொண்டு வந்த வேலையாட்களிடம் "பைய்ய தூக்குங்கப்பா..மூனு நாலு லட்ச ரூவாய்க்கு போவுற உருப்படி" என்றான்.. 


சிலரை முதன்முதலில் கண்டவுடனேயே, இன்ன காரணம் என ஏதுமின்றியே  உள்ளுக்குள் இருக்கும் முள்ளம்பன்றி சிலிர்த்துக்கொள்ளும். அவரை நெருங்கவிடக்கூடாது என எச்சரிக்கைக்கொள்ளும். குமரப்பன் அத்தகையவன்தான். சிதம்பரம் நான்கு மாதங்களுக்கு முன் அவனை அழைத்துக்கொண்டு வந்தான். 


"அப்பா வீட்டை ரிசார்டுக்கு விடலாம்னு இருக்கேன். இவரு குமரப்பன்.. மாத்தூர் கோயில்காரரு, நெற்குப்பைல இருக்கார். எல்லாத்தையும் பாத்துக்கிடுவாரு" 


"வணக்கம். தம்பி எல்லாத்தையும் சொன்னுச்சு. நல்லபடியா முடிச்சுபுடுவோம் அய்யா, கவலைப்படாதீங்க." எனச்சொல்லிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தான். பின் கட்டுக்கு சென்று பின் வாசலைத் திறந்தான்.  "முன் வாச ஒரு தெருவுலயும் பின் வாச இன்னோரு தெருவுலயும் உள்ள மூனு கட்டு வீடு. நம்ம ராசாவூட்டு அரண்மன கணக்கா பெருசாத்தான் இருக்கு. ஒரு 35 சென்ட் இடம் இருக்குமா அப்பச்சி?" என்றான்.


"தெரியலை. பத்தரத்த பாக்கனும்"


"நூறு வருஷம் மேல இருக்கும் போலயே"


"எங்க அய்யா காலத்துல கட்டுனது..120 வருஷமிருக்கும்"


"அம்புட்டும் பர்மா தேக்கு. பர்மால இருந்தீகளோ?"


"அய்யா அங்கதான். அப்பச்சி கொஞ்ச காலம் இருந்தாக."


"சொவரெல்லாம் முட்ட பூச்சு பெயராம வழுவழுன்னு இருக்கு.. நல்லது, மரத்தூணுக்கு மட்டும் வார்னிஷ் போடனும்.‌ கறையான் மருந்து அடிச்சிகளா? உத்தரக் கட்டையெல்லாம் பத்தரமா இருக்குதானே.. நல்லா நெடுக்க ஓடுது ஒவ்வொரு கட்டையும் இன்னிக்கு தேதிக்கு ரெண்டு லட்சம் போகும்"


"மருந்தெல்லாம் அடிச்சிருக்கு"


"இந்தாருக்கே மச்சுக்கு போற சுருள்படி, இது வெளிநாட்டுக்காரவுகளுக்கு ரொம்ப புடிக்கும். எத்தன அற மொத்தம்?"


"மேல ஆறு.. கீழ ஆறு.."


"நாள் வாடகை ஒரு அறைக்கு 6000 ரூவான்னு வச்சிக்கிடுங்க. நாளைக்கு 72000 சம்பாதிச்சு கொடுக்கும் சீதேவி  இந்த வீடு."


சிதம்பரம் முகத்தில் பூரிப்பைக்கண்டதும் எனக்குள் எரிச்சல் மூண்டது. நான் முற்றத்தில் அமர்ந்துகொண்டேன். முற்றத்தில் வெயில் மெல்ல மெல்ல நிழலை கைப்பற்றிக்கொண்டிருந்தது. 


"கதவு எல்லாம் நயம் தேக்கு, ஆனா தச்சு வேலைப்பாடு எதுவும் இல்லாம மொட்டையாருக்கு. அவசரத்துல கட்டிப்புட்டாய்ங்க போல..சொக்கநாதபுரம் சாவன்னா வீட்டுல லட்சுமி பொறிச்ச கதவு ஒன்னு உண்டு. கதவு மட்டும் பத்து லட்சத்துக்கு போச்சு" எனச்சொல்லிக்கொண்டே போனான். 


எழுந்து பின்கட்டு முற்றத்திற்குச் சென்றேன். 555 சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு கிணறை பார்த்தபடி கிடந்த உரல் மீது அமர்ந்து ஆழ இழுத்தேன். நான் வேறொரு காலத்திற்குள் புகுந்துக்கொண்டது போல இருந்தது. பால்யத்தில் பிரம்மாண்டங்களை காலம் மெல்ல மெல்ல கரைத்து விடும் என்பதே பொதுவழக்கு ஆனால் நான் சிறுவனாக இருந்த போது விளையாட போதாமலிருந்த வீடு இப்போது ஆட்கள நீங்கிச்செல்லச்செல்ல மேலும் மேலும் என பெருத்தும் விலகியும் சென்றுக்கொண்டே இருக்கிறது. இப்போதெல்லாம் இரண்டு இரவுகளுக்கு மேல் தனித்து தங்க முடிவதில்லை. இந்த‌ வீடே  ரகசியங்கள் நிறைந்த புதிர்பாதை என மாறிவிட்டது. ஆனால் திரும்பத்திரும்ப வந்துகொண்டேயிருக்கிறேன். 


வாயிலின் இருபுறமும் நீளும் மூன்றடி உயர திண்ணையில் பதிக்கப்பட்ட கறுப்பு வெள்ளை கற்கள் பிரம்மாண்ட சதுரங்க பலகையைப்போல் தோன்றியது. அனைத்து காய்களும் வெட்டப்பட்டு நான் மட்டுமே எஞ்சியிருக்கிறேன். ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கும் போதும் ஆட்டம் தொடர்கிறது.‌ எழுந்து நடக்கத்தொடங்கினேன். சட்டென ஒரு வரி அமர்ந்துகொண்டது. நான் விளையாடுவது காலத்துடன். ஆம்,  அதுதான். ஓங்கரித்தது. பாதி புகைந்த சிகரெட்டை நசுக்கிவிட்டு முன் கட்டுக்கு சென்றேன். "மாதங்கள் மாதங்களில் கரையட்டும், வருடங்கள் வருடங்களில் மூச்சு விடட்டும்."  எமிலியின் கவிதையில் வரும் ஒரு வரி. என்னால் அங்கு இருக்க முடியவில்லை.   


"""

அன்றிரவு சிதம்பரம் சிங்கப்பூரிலிருந்து கொண்டு வந்திருந்த க்ளென்ஃபிதுக் பாட்டிலைத் திறந்து இருவருக்குமாக ஊற்றினான். இருவரும் மவுனமாக மிடறுகளை ருசித்தோம். அப்படியே முற்றத்தில் படுத்துக்கொண்டான். நான் அப்பச்சியின் அறைக்கு எதிரே இருந்த கல்தூணில் சாய்ந்து கொண்டேன். முற்றத்து அழியின் வழியாக நிலவு வழிந்து கொண்டிருந்தது. எனக்கு அவனது யோசனை பிடிக்கவில்லை என்றேன். 


"வீட்ட நாசாமக்கிருவாய்ங்கடா தம்பு.. எனக்கு பொறுக்காது. எங்காலம் வர இப்படியே கிடக்கட்டும்..பொறவு உன் இஷ்டப்பிரகாரஞ்செய்." 


மெதுவாக கையூன்றி எழுந்தமர்ந்தான். 


"நான் வருஷத்துக்கு ரெண்டுவாட்டி கல்யாணத்துக்கு, படப்புக்குன்னு வாரேன். நீங்க மாசாமாசம் வருவீகளா? வந்தோமா போனோமான்னு இருக்க முடியுதா? பொம்பளயில்லாத வீடு. ஒவ்வொருதாட்டியும் மூனு நாள் முன்னாடியே வந்து பெருக்கி மொழுகி, சுத்தம் செய்யனும். திரும்பவும் எல்லாத்தையும் ஒழுங்குப்படுத்தனும். எதையோ தேடித்திரியுறீக. உங்கபபச்சி உங்களுக்கு என்ன பொதையலா வச்சுட்டு போயிருக்கார்? என்ன எளவுன்னும் சொல்ல மாட்டுறீக. நீங்க ஒண்டியாள இங்கன இருக்க முடியாது. களவானிங்க வேற முத்தத்துல இறங்கி மரத்த பேக்குறாய்ங்க. இம்புட்டு பெருசா என்ன மயித்துக்கு கட்டுனாய்ங்கன்னே தெரியலை. யானைக்கி தீனி வச்சாப்புலதான். ரிசார்ட் காரய்ங்க கொடுக்குற லீசு பணத்த வச்சு காரக்குடில ஒரு அப்பார்ட்மென்ட வாங்கி போடுவோம். வர போக தங்கிக்க கைக்கடக்கமா ஒரு இடமாயிரும்." 


"உனக்கு கல்யாணம் காட்சி ஆச்சன்ன புழங்குவோமே தம்பு."


" அய்யா சாமி! அந்தப்பேச்ச விடுங்க. எனக்கு அது தோதுப்படாது."


"தம்பு இப்படிச்சொன்னா என்னடா செய்ய. எவளயாவது மனசுல நினைச்சேன்ன சொல்லு, எந்த சாதியாருந்தாலும் பேசுவோம்டா."


" உங்களுக்கு நான் சொல்றது விளங்காது. அந்தப் பேச்ச விட்டுருங்க" என சொல்லிவிட்டு ஒருக்களித்து படுத்துக்கொண்ட வேகத்தில் உறங்கிப் போனான். 


என்னால் உறங்க முடியவில்லை. இன்னோரு சுற்று அருந்திய பிறகு மெல்ல வெளித்திண்ணையில் வந்து அமர்ந்தேன். அய்யா இந்த வீட்டை ஏன் இத்தனைப் பெரிதாக கட்டினார்? தெரியவில்லை. ஏதோ ஒரு பெருங்கனவு கண்டிருப்பார். அப்படிப்பட்ட கனவுகளோடு  தானே இங்குள்ள அத்தனை வீடுகளும் கட்டப்பட்டிருக்கும். கட்டி முடித்து இந்த வீட்டில் அய்யா நூறு நாட்கள் கூட இருந்திருக்க மாட்டார். 


நான் இந்த வீட்டில் எதைத்தேடுகிறேன்? பெரும் புதிரின் இறுதித் துண்டை. என்னை ஆட்கொண்ட கேள்வியை, என் அப்பச்சியை, "நான் விட்டுச்சென்ற வாழ்வை." இதுவும் எமிலியின் வரிதான். அப்பச்சியிடமிருந்து நான் எனக்கென எடுத்துக்கொண்டது, அல்லது அவர் எனக்கென விட்டுச்சென்றது எமிலி டிக்கின்சனை மட்டும்தான். 


***

சிதம்பரம் ஊருக்கு புறப்பட்டுச்சென்ற மறுநாள் குமரப்பன் வந்தான். "நீஙக குழப்பத்துல இருக்கீகன்னு தம்பி சொன்னுச்சு. செத்த வெளிய போய்ட்டு வருவோம்" என்றழைத்தான். விடுதிகளாக மாறிய வீடுகளைச் சுற்றிக் காண்பித்தான். பிரம்பு நாற்களிகளில் அமர்ந்து வெளிநாட்டவர்கள் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்கள். புடவையும் வேட்டிச்சட்டையும் தான் பணியாட்களுக்கு சீருடை. முற்றத்தில் மாலை வேளையமர்ந்து இன்னிசையை கேட்டபடி ஸ்காட்ச் அருந்திக்கொண்டிருந்தார்கள். ரெட்டைமாட்டு கூண்டு வண்டியில் கிராமத்து சிறார்களுக்கு கையசைத்தபடி உலா வந்தார்கள். எல்லாமே அபத்தமாக தெரிந்தது. குமரப்பனிடம் பேச எனக்கு ஏதுமில்லை. அவன் பேச முற்பட்டபோதும் அதைத் தவிர்த்தேன். என் முடிவில் தீர்க்கமாக இருந்தேன். 


திரும்ப வரும்போது வண்டியை ஒரு புதர் அருகே நிறுத்தச்சொன்னான். கவிந்திருந்து முழு இருளை சிள்வண்டுகளின் ரீங்காரம் மேலும் அடர்த்தியாக்கியது. "ஒண்டுக்கு இருந்துட்டு வாரேன். நீங்களும் இறங்கி வாரீகளா அப்பச்சி?" எனக்கேட்டான். வேலையை முடித்துவிட்டு வந்தவன் "அப்பச்சி ஒரு சிகரெட் கொடுங்க" என்றான். இருவரும் புகைக்கத்தொடங்கினோம். இருளுக்கு விழி மெல்ல பழகியது.  நாங்கள் சிறுநீர் கழித்த இடத்தைச் சுட்டிக் காட்டினான். ஒரு வீட்டு முகப்பு வளைவு துலங்கியது.  புதர் மண்டிக்கிடந்தது. ஆலிலை குப்பைகள் சரசரத்தன. கைப்பேசி வெளிச்சத்தில்  வளைவுக்கு மத்தியில் முண்டமாக கால் மாற்றி நின்றிருந்த கண்ணனைக் காண்பித்தான். உடல் சன்னமாக ஆடத் தொடங்கியது. பசுவின் தலையை பிளந்துகொண்டு ஒரு செடி முளைத்திருந்தது. மானிட்டர் குப்பிகள் கிடந்தன. என்னால் அங்கு நிற்க இயலவில்லை. காருக்குள் சென்று அமர்ந்து கொண்டேன். "அப்பச்சி இந்த நெலம நம்ம வீட்டுக்கு வராம பாத்துக்கிடுறது உங்க கையில இருக்கு.. அப்புறம் சொத்து நம்மூட்டுதான். 30 வருஷம் லீசுக்குத்தான் விடுறோம்.  நல்ல முடிவாச் சொல்லுங்க."  எனச்சொல்லி வீட்டில் இறக்கிவிட்டான். 



2


"முகப்புல உள்ள புல்லாங்குழல் கண்ணன் சொதை வேலை இருக்குல்ல.. அம்புட்டையும் ஊதி கொண்டு போயிருவான்னு ஒரு பயம் அவுகளுக்கு. அத எடுத்தாலும் எடுப்பாக. அங்கன கெஜ லட்சுமியோ மகாலட்சுமியோ வருவா." என சிதம்பரத்திடம் சொல்லிக்கொண்டிருந்தான் குமரப்பன். 


பணியாட்கள் சாமான்களை அகற்றிக்கொண்டிருந்தார்கள். முற்றத்தில் மழை நீர் சேமிக்க வைக்கப்பட்ட தேக்சாக்கள், பின்கட்டிலிருந்த ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், உலக்கை, தேங்காய் துருவிகள், அருவாமனைகள் என  ஒவ்வொன்றாக தூக்கி வந்தார்கள். 

 

"இதையெல்லாம் சாப்பாட்டு கூடத்துக்கு கொண்டு போங்க. அத அவுக மூசியமா மாத்துராக." என ஏவிவிட்டான் குமரப்பன். 


இரண்டாம் கட்டின் கூடத்தின் இரண்டு எல்லைகளிலும் இருந்த ஆளுயர பெல்ஜியம் கண்ணாடிகளைத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். 


"இதை ஏன்டா கொண்டாந்தீங்க? அங்கனயே சாய்ச்சு வைங்கடா." என பொறிந்தான் குமரப்பன்.


அறைகளை சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்கள். "அப்பா இப்படி திண்ணையிலேயே உக்காந்துக்கிட்டு இவிங்கள மேப்பார்வ பாருங்க. வேண்டியது வேண்டாததெல்லாம் நானும் குமரப்பனும் பாத்துகிடுறோம்."


வீடு மனிதர்கள் வாழ்ந்த தடத்தை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருந்தது. மொத்த சாமான்களையும் நான்காக பிரித்தார்கள். ஓட்டை ஒடைசல் ஒருபுறம், விலைக்கு கொடுப்பவை இன்னோரு பக்கம், இங்கேயே போட்டு வைக்க வேண்டியவை மறுபக்கம், காரைக்குடி அடுக்குமாடி குடியிருப்புக்கு வேண்டியவைத் தனியே. முந்தைய இரண்டும் மளமளவென பெருகுவதைப் பார்த்தேன். சக்கரம் உடைந்த நடைவண்டிகள், பொத்தல் விழுந்த திவான் நாற்காலி, அழுக்கு துணிகளில் சுற்றப்பட்ட பொதிகள். அழுக்கு வேட்டியில் கட்டப்பட்ட சிறிய பொதியை கண்டதும் மனம் விழித்துக்கொண்டது. சட்டென எழுந்து அதனருகில் சென்றேன்.‌ அந்த பொதியை கையில் எடுத்ததுமே உணர்ந்துகொண்டேன். அதன் விளிம்புகளைத் தடவி பார்த்தேன். தலை சுற்றுவது போலிருந்தது. மெதுவாக அதை தூக்கிக்கொண்டு முற்றத்து கல்தூணில் சாய்ந்து கொண்டேன். பழுப்பேறிய அழுக்கு வேட்டியின் முடிச்சுகளை அகற்றியபோது  அதனுள் இருந்ந தந்த பேழை படிப்படியாக வெளிப்பட்டது. வியர்வை ஊற்றெடுத்தது. செவிப்பறையில் இதயத்துடிப்பு அறைந்தது. காதுமடல்கள் சூடேறின. 


"என்ன அப்பச்சி சட்டை நனையிற அளவுக்கு வேர்த்து ஊத்துது? ஒடம்புக்கு ஒன்னுமில்லையே?" என்றான் குமரப்பன். 


பொதி என் கையில் இருப்பதை கண்டான். "அப்பச்சி அது ஏதோ நகப்பெட்டி போல தெரியுதே? தந்தமா? இருபது முப்பது ரூபாய்க்கு போகும் போலயே" என்றான். சிதம்பரமும் வந்து நின்றான். 


"அதெல்லாம் ஒன்னுமில்ல..சும்மா ராமேஸ்வரத்துல வாங்கினது" எனச்சொல்லி பெட்டியை பொதிக்குள் தள்ளினேன். குமரப்பன் மட்டும் சற்று நேரம் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தான். அவன் எதையும் லேசில் விடுபவனில்லை. நான் பொதியைக்கொண்டு போய் காரில் வைத்துவிட்டு வந்தேன். இப்போது, இங்கே அதைப்பிரிக்க முடியாது. பிரிக்கவும் கூடாது. இத்தனை ஆண்டு காத்திருந்தாகிவிட்டது. இன்னும் கொஞ்ச காலம்தான். மனம் கற்பனையில் மிதக்கத் தொடங்கியது. அதில் அரிய வைரம் இருக்கும், இரும்புக்கை மாயாவி படக்கதைப் புத்தகம் இருந்தால் எப்படியிருக்கும், அல்லது அப்பச்சசி எனக்காக எழுதிய கடிதம், அல்லது அம்மாவுக்கோ அப்பத்தாவுக்கோ எழுதிய கடிதங்கள், எனக்காக எழுதிய கவிதைகள், கிழிக்கப்பட்டிருந்த எமிலி டின்னின்சன் கவிதைத்தொகுதியின் பக்கங்கள் அல்லது அப்பச்சியின் நாட்குறிப்பு, அல்லது விளக்கப்படங்களுடன் கூடிய கொக்கோக உரை. புன்னகைத்தேன். சிகரெட்டை நாடியது மனம். புகை மெல்ல என்னை ஆற்றுப்படுத்தியது. 


இந்தப் பேழை என் அப்பச்சியுடையது. பல ஆண்டுகளாக காணாமல் போயிருந்தது.   நான் சிறுவனாக இருந்தபோது இரண்டு முறை பார்த்திருக்கிறேன். தும்பிக்கை தூக்கி நிற்கும் இரண்டு யானைகள் இரு பக்கமும் செதுக்கப்பட்டிருக்கும். நடுவே ஒரு மலர். மேல் மூடியில் இரண்டு அண்ணங்கள் மூக்குடன் மூக்கு உரசி நிற்கும். இரண்டு முறையும் ஆத்தா புழக்கடையில் இதை கையில் வைத்துக்கொண்டு விசும்பிக்கொண்டிருந்தது ஒரு ஓவியம் போல மனதில் கணநேரம் துலங்கி அமிழ்ந்தது. அவள் அழுவதற்கு இந்தப் பேழைதான் காரணம் என தோன்றி, பலநாட்கள் அதைத்தேடி இருக்கிறேன். எப்படியாவது அதைக் கண்டுபிடித்து காணாமலாக்கிவிட்டால் ஆத்தாளை நிரந்தரமாக போர்த்தியிருக்கும் துக்கம் பறந்துவிடும் என கனவு கண்டேன். அவளிடம் அந்த பேழையைக் காட்டு என கொஞ்சி, கெஞ்சி, அழுது, அரற்றி என எல்லாம் செய்து பார்த்திருக்கிறேன். அழுத்தமான மவுனத்தைத் தவிர அவளிடமிருந்து வேறெந்த பதிலும் எனக்கு கிடைத்ததில்லை. ஒருமுறை முற்றத்தில் சுற்றிச்சுற்றி ஓடி பைத்தியம் போல் அழுதேன். அப்பத்தா, பெரியப்பச்சி, பெரியம்மா  என எல்லோரும் கூடிவிட்டார்கள். ஆத்தா சட்டென விசும்பியபடி மச்சுக்குள் புகுந்துக்கொண்டாள். அப்பத்தா "இப்ப எதுக்காண்டி இம்புட்டு அழுது அழிச்சாட்டியம் செய்றான்" என்றதும் "நீ போ ஆத்தா, சின்னப்புள்ள, அவென் அப்பச்சி நாபகம் வந்துருக்கும்" என மெல்ல என் தலையை வருடிக்கொடுத்தார் பெரியப்பச்சி. என்னை அவரது ராஜ்தூத்தில் ஏற்றிக்கொண்டு சொக்கட்டான் கோயில் குளத்தின் படித்துறைக்கு கூட்டிவந்தார். "அண்ணாமலை, ஆத்தாளை நீயும் கஷ்டப்படுத்தக்கூடாது, நிறைய சிரமப்பட்டுட்டா" என எங்கேயோ பார்த்தபடி சொன்னார். நான் அதன் பின் ஆத்தாவிடம் பேழை வேண்டுமென கேட்கவில்லை. ஆனால்  தேடுவதையும்  நிறுத்தவில்லை. எப்போதும் என் கண்கள் பேழைக்காக துழாவியபடியே தான் இருந்தன. விடுதியை விட்டு வீடு திரும்பும் கல்லூரி நாட்களிலும், பின்னர் வங்கியில் பெரியப்பச்சி வேலை ஏற்பாடு செய்து கொடுத்து ஊர் ஊராக வாழ்ந்து, விசேஷ நாட்களுக்கு மட்டும் ஊர் திரும்பும் போதும், திருமண சமயத்தில் பெண் அழைப்பிற்காக வீட்டில் சுண்ணாம்படித்த போதும், திருமணத்திற்கு பின்பான நாட்களிலும்  என பல ஆண்டுகளாக தேடியபடிதான் இருக்கிறேன். 


பத்து வருடங்களுக்கு முன் ஆத்தா வாதம் வந்து படுக்கையில் கிடந்து கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கும் போது குழறிக்குழறி, ஓசைகளுக்கும் மவுனங்களுக்கும் இடையே "ப்பெட்டி" என கையால் கட்டம் போட்டுக்காண்பித்தாள். கூடியிருந்த பங்காளிகள் பணப்பெட்டி, ஓலைப்பெட்டி, வெற்றிலைப்பெட்டி என ஒவ்வொன்றாக கொண்டுவந்தார்கள். அவளுடைய கண்களில் எரிச்சலும் சலிப்பும் தோன்றின.  அவள் விழிகள் சுற்றியிருப்போர் மத்தியில் என்னைத் துழாவின. ஏனோ  கணக்கை நேர் செய்ய வேண்டும் எனும் விசை அப்போது என்னை ஆட்கொண்டது. அவள் பார்வைபடாத இடத்திற்கு ஒதுங்கினேன். தவிப்பு அடங்கி சலிப்பு கண்களில் குடிகொள்வதைப் பார்த்தேன். பின்னர் அதுவும் மாறி, உறக்கத்தில் புன்னகைக்கும் பால்குடி குழந்தையின் களங்கமற்ற சிரிப்பை அவள் முகம் சூடிக்கொண்டதை  என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவளை உலுக்கினேன். "பெட்டிய தேடி எடுத்தாரேன்..போயிராத ஆத்தா" என அரற்றினேன். என் கண்கள் அவள் அறையில் மேலும் கீழும் துழாவின. அவள் அத்தனை ஆண்டுகளாக என்னிடமிருந்து காத்து வந்த ரகசிய இடத்தை என்னால் எப்படி இரண்டு நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியும்?  இரண்டே நெடுமூச்சு.‌ மீளா ஆழத்திற்குள் சென்றிருந்தாள். அதன்பின்னர் அவள் புழங்குமிடத்தில் எல்லாம் இன்னும் தீவிரமாக தேடினேன். அண்மைய காலங்களில் அப்படியொரு பெட்டியை நான் கண்டேனா அல்லது வெறும் கற்பனையா எனும் குழப்பம் என்னை அலைக்கழித்தது 

 

கடைசித்துண்டை சிதம்பரம் வாங்கி இழுத்தான். "உங்க முகமே சரியில்ல. எல்லாம் நல்லபடியா நடக்கும் கவலப்படாதீங்க." என்றான். "படங்களை எல்லாம் கழட்டுறாங்க சாமி படங்க எல்லாம் ஏற்கனவே இருக்கு. இதுல முக்கியமானது இருந்தா பாத்து எடுத்து வைங்க. வீட்ல மாட்டுவோம்." 


3

 முற்றத்தையொட்டி அறைகளுக்கு இடையே வரிசையாக புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்தன. தூசடர்ந்த கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களை துடைத்தபோது அதன் மேல்  படிந்த காலமெல்லாம் மறைவது போல ஒரு பிரமை. அய்யா சட்டை போடாமல் சிவப்பழமாக அப்பத்தாவுடன் காட்சியளிக்கும் படத்தை எடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டான் குமரப்பன். "வெள்ளக்காரனுக யாரு கட்டுனா யாரு நொட்டுனான்னு கேப்பாய்ங்க. இருக்கட்டும்." என்றான். 


பெரியப்பச்சி முறுக்கு மீசையுடன் வெற்றிலை வாய் தெரிய சிரிக்கும் படத்தில் சந்தனப் பொட்டின் தேசல் புலப்பட்டது. பெரியப்பச்சி திருமண புகைப்படத்தில் கூட முரட்டு மீசையும் இறங்கிய கிருதாவுடனும் தானிருந்தார். பெரியம்மா முகத்தில் வெட்கம். அப்பத்தா நாற்காலியில் அமர்ந்திருக்க ஆத்தாவின் சீலைக்குள் நான் ஒளிந்திருந்தேன். பெரியப்பச்சியின் மடியில் நான் அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம், இந்த படத்தில் மட்டுமே என் முகத்தில் சிரிப்பிருக்கிறது. அப்பச்சியின் ஒரு புகைப்படம் கூட கூடத்தில் மாட்டப்பட்டதில்லை. அப்பத்தா இருந்தவரை மாட்ட அனுமதித்திருக்க மாட்டாள். ஆனால் அவள் காலத்திற்கு பின்னும் ஏன் மாட்டவில்லை? 


"இதெல்லாம் மேலயிருக்குற நடு ரூம்புல கிடந்துச்சு.. அண்ணே உங்கட்ட கொடுக்கச் சொன்னாரு" என நான்கைந்து புகைப்படங்களை கொண்டுவந்து போட்டான். அது என் அறைதான். வியப்பாக இருந்தது. அவை எப்படி, எப்போது, என் அறையை வந்தடைந்திருக்கும்? தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளாக நான் இவற்றை கவனித்ததே இல்லை. வீட்டை அங்குலம் அங்குலமாக தேடிவிட்டேன் என எண்ணியிருந்தேன். 



அப்பத்தா மட்டும் அமர்ந்திருக்க கிராப்பு தலையுடன் இரண்டு விடலைகளாக அப்பச்சியும் பெரியப்பச்சியும் நின்றிருந்தார்கள். மீசையற்ற வழுவழு முகமும் சுருள் முடியும் கொண்ட அப்பச்சியின் இளமைக்கால புகைப்படம் ஒன்று. ரங்கூன், 6.4. 1941 என புகைப்படத்தின் கீழே இருந்த அட்டையில் மையால் எழுதப்பட்டிருந்தது. அதே காலகட்டத்தைச் சேர்ந்த இன்னோரு புகைப்படம். அப்பச்சியின் தோள்மீது கைப்போட்டு ஒருவர் நின்றார். அவர் முகம் கிழிபட்டிருந்தது. அந்தப் படத்தில் அவரை மட்டும் ஆங்காங்கு கூர்முனையால் குத்தியதற்கான அடையாளங்கள் இருந்தன. நிற்கும் தோரனையும் தெரிகின்ற பாகத்தையும் கொண்டு அவர் ஒரு ஆங்கிலேயராக இருக்க வேண்டும் என தோன்றியது. 


பட்டுவேட்டி தலைப்பாகையுடன் அப்பச்சியும் கழுத்திருவும், கருகமணியும் பட்டுப்புடவையும் அணிந்த ஆத்தாவும் கையெடுத்து வணங்கும் கோலத்தில் இருக்கும் திருமண புகைப்படம். அப்பச்சியின் முகத்தில் துடிப்பில்லை. புகைப்படத்தின் கீழே மெட்ராஸ் ஸ்டூடியோ 25.1.1947 என அழகான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. அப்பச்சியின் கண்ணங்கள் ஒட்டி இருந்தன. கண்களில் சுரத்தேயில்லை. ஆத்தாவின் முகத்தில் ஒருவித பூரிப்பும் பெருமிதமும் ததும்பியது. சட்டென ஒரு திடுக்கிடல் ஏற்பட்டது. அப்பச்சி எனக்கு எட்டு வயதாகும்வரை உடனிருந்தவர்தான் ஆனால் அவர் அசல் முகத்தை என்னால் நினைவில் மீட்கவே முடியவில்லை. 


அப்பச்சியின் ரங்கூன் படத்துக்கும் திருமண படத்துக்கும் இடையேதான் எத்தனை மாறுதல்! அப்பச்சி இரண்டாம் உலகப்போர் காலத்தில் குற்றுயிரும் குலையுயிருமாய் ஊர் வந்து சேர்ந்தார் என பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். ஊருக்கு கிளம்பிய எவருடனும் அவர் ஊர் திரும்பவில்லையாம். எவரழைத்தாலும் "சண்டயெல்லாம் இப்ப முடிஞ்சுரும். இங்கிலீஷ்காரன்ன என்ன சும்மாவா. போட்டத போட்டபடி எல்லாம் வரமுடியாது" என்றே பதில் சொன்னாராம். அப்பச்சியைப்போலவே இன்னும் சில இளவட்டங்கள் இப்படியே சவடால் பேசித்திரிய, பெருசுகள் தப்பிப்பிழைத்தால் போதுமென ஊர் திரும்பினார்கள். திருமணத்துக்கு வாழ்த்த வந்த ஒரு பெரியவர் "அடேய் சிதம்பரம் மவனே, உங்கப்பங்காரன் நல்ல பயதான் ஆனா என்னத்த சொல்ல சகவாசக்கேடு.  நாசமாயிட்டான். நீயாவது குடும்பப் பேரு விளங்க வாழனும்" என சொல்லிச்சென்றது என் மனதை அருவியது. அப்பச்சியைப்பற்றி எந்த தகவலும் தெரியாமல் தவித்திருந்த காலத்தில் லேனா மேனா வீட்டுத்திண்ணையில் ஈ மொய்க்க படுத்திருந்தவரை அப்பச்சி என கண்டுபிடுத்து தகவல் சொன்னார்களாம். மதுரைக்கு கூட்டிச்சென்று எப்படியோ பிழைக்க வைத்தார்கள். 


அப்பச்சியைப் பற்றி யாரும் என்னிடம் பேசக்கூடாது என்பது அப்பத்தாவின் ஆணை. பதின்ம வயதில் அதுவே அவரைப்பற்றிய ஆர்வத்தை என்னுள் தூண்டியது. இல்லாத தந்தையின் மீது எனக்கிருந்த விருப்ப கற்பனைகள் அனைத்தையும் ஏற்றியபோது அவருக்காக ஏங்கினேன். சகாக்கள் அவரவர் அப்பாக்களை வெறுக்கும் பருவத்தை எட்டியபோது வெறுக்கக்கூட நமக்கொரு அப்பன் இல்லையே எனும் ஏக்கத்திலிருந்தே அவர் மீதான வெறுப்பு பிறந்தது. "உங்கொப்பன் ஊருக்கு வந்ததுலேந்து நிதமும் குடிதான். உங்காத்தா மவராசிக்கு சீதன்னு சும்மா பேரு வைக்கல. அம்புட்டையும்  எப்படியோ சகிச்சுக்கிட்டா" என்றாள் சமைக்க வந்த தங்கம்மா பாட்டி "செதம்பரத்த மாதிரி கொணத்துல தங்கம் எவனுமில்ல" என்றார் அப்பச்சியின் பர்மா கூட்டுக்காரர் சொக்கலிங்கம். "மோகினிப் பிசாசு அடிச்ச மாதிரி பித்து பிடிச்சே திரிவான்" என்றார் சாமியாடி வேலப்பன். எல்லாமே சிறு சிறு தனித்துண்டுகள். ஒன்றோடொன்று பொருத்த முடியாத அளவிற்கு முரண் கொண்டவை. அவரது எமிலி டிக்கின்ஸன் கவிதைத்தொகுப்பை அப்போதுதான் வாசிக்கத்தொடங்கினேன். புரிந்து கொண்டேனா என சொல்வதற்கில்லை. ஆனால் எனக்கு அது ஏனோ அப்பச்சியின் நாட்குறிப்பு எனும் எண்ணத்தை உண்டாக்கியிருந்தது. ஏதோ ஒன்றை துப்பறியும் வேகத்தில் கவிதைகளையும் அப்பச்சியின் பென்சில் குறிப்புகளையும் மீள மீள வாசித்தேன். அப்பச்சியைப் பற்றி தெரிந்து கொண்டேனா என தெரியவில்லை ஆனால் கவிதைகள் என்னைத் தொற்றிக்கொண்டன. 



அப்பச்சியின் பெயரைத்தான் என் மகனுக்கு வைத்தேன்.  என் மகன் பிறந்தபோது உயிரோடிருந்த அப்பத்தா கொள்ளு பேரனுக்கு தன் இளைய மகனுடைய பெயரை வைக்கக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தாள். "ஒன்னும் ஓராயிரமா இருக்கனும். குடும்பம் செய்ய லாயக்கில்லாத அந்த தறுதலை பேரை போய் வைக்கிறேங்கிர." என்று கறுவினாள். அவளுக்கு அப்பச்சியை நினைத்தாலே ஆங்காரம் பொங்கும். அப்பச்சி வயிறுவீங்கி ஆசுபத்திரியில் கிடந்த கடைசி நாட்களில் கூட அவரைப் பார்க்க வரவில்லை என்பதை பெரியம்மா ஒவ்வொரு சண்டையின் உச்சகட்டத்தின் போதும் "புள்ளைய முழுங்குன கருநாகம் தான.. கிளவி நீ" என சொல்லிக்காட்டுவாள். எத்தனைப்பெரிய சண்டையாக இருந்தாலும் அப்பத்தா அதற்கு பிறகு பேசமாட்டாள். அப்பச்சியின் அத்தனை சாமான்களையும் வருவோர் போவருக்கெல்லாம் கொடுத்து அப்புறப்படுத்தினாள்.  அப்பச்சி செத்து ஒரு மாதத்திற்கு பிறகு  அப்பச்சி சேகரித்து வைத்திருந்த  சாமான்களையெல்லாம் அப்பத்தா தூக்கிப்போட்டு சல்லிசல்லியாக நொறுக்கி சாமியாடிக்கொண்டிருந்தாள். புத்தகங்களையெல்லாம் தெருவில் வீசி எறிந்தாள். எல்லோரும் மவுனமாக சுற்றி நின்றுக்கொண்டிருந்தனர்.  தோளிலும் இடுப்பிலும் லாவகமாக அணைத்தபடி இருக்கும் கிரேக்கச்சாயல் கொண்ட மங்கு பொம்மைகள் மட்டும் முப்பதோ நாற்பதோ அவரிடமிருந்தன. அத்தனையையும் அப்பத்தா தூள்தூளாக ஆக்கினாள். அந்த பொம்மை வேண்டும் என அடம்பிடித்து அழுதபோது முதுகு பழுக்க ஒன்று கொடுத்தாள்.  பெரியப்பச்சி தான் அழும் என்னை சமாதானப்படுத்த தெருவில் கிடந்த எமிலி டிக்கின்ஸன் புத்தகத்தை கொண்டு வந்து கையில் கொடுத்தார். 'உன் அப்பச்சி எப்பவும் இதத்தான் வச்சிக்கிட்டே திரிவான். யாரு கண்ணுலயும் காட்டாம வச்சுக்க.' என்றார்.  


*"*

"அப்பா.. பாத்துட்டிங்களா?"


"இந்த அஞ்சு மட்டும் போதும்"


"அப்பச்சரி… நீங்க வீட்டுக்கு போங்க. மிச்சத்தை நான் பாத்துட்டு ராத்திரி வரேன்."


4




அப்பார்ட்மென்ட் கூடத்திலும் சிதம்பரத்தின் அறையிலும் சாமான்களாக விரவிக் கிடந்தன. மூன்று நாட்களில் வேலையை முடித்துக்கொண்டு சிதம்பரம் நேற்றிரவு சிங்கப்பூருக்கு கிளம்பிச்சென்றான். அவன் வாங்கி வந்த 'ப்ளூ லேபில்' மேசையில் இருந்தது. ஒரு கோப்பையில் ஊற்றி, கொஞ்சம் சோடாவை சேர்த்துக்கொண்டு ஒரு மிடறு அருந்தினேன். ஏசியை இயக்கினேன். 555 சிகரெட்டைப் பற்ற வைத்து ஆழமாக இழுத்தேன். புகையும் மதுவும் உள்ளே கொந்தளித்து ஆர்ப்பரித்த கடலை அமைதிப்படுத்தின. ஏதோ ஒன்றுக்கு என்னைத்தயார் படுத்திக்கொள்வதைப்போல இருந்தன இந்தச் சடங்குகள். 


மனம் தன்னியல்பாக எமிலியை நாடியது. புத்தக அடுக்கில் கெட்டி அட்டைகொண்ட கருப்பு புத்தகத்தை கண்கள் தேடின. அதன் பழுப்பேறிய பக்கங்கள் காட்டிக்கொடுத்தன.  எமிலிமின் தேர்ந்தெடுத்த கவிதைகள் கொண்ட ஆங்கில தொகுப்பு.   அப்பச்சி சில பக்கங்களில் கைப்பட  எழுதியிருப்பார். அடிக்கோடிட்டிருப்பார். சில கவிதைகளை மொழிபெயர்த்து கவிதைக்கு பக்கத்திலேயே எழுதியிருப்பார். சில கவிதைகள் சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தன. 'என்னால் மரணத்தை நிறுத்த முடியாததால்'  எனத் தொடங்கும் கவிதைக்கு கீழ் பென்சிலில் 'சீதாவுக்கு.. மன்னிப்பு வேண்டி'  என எழுதப்பட்டிருந்தது. அருகிலேயே கூப்பிய கரங்கள் நேர்த்தியாக வரையப்பட்டிருந்தன. அந்த கவிதை தொகுப்பில் இருபக்கங்கள் மட்டும் கிழிபட்டிருந்தன. அப்பச்சி எனக்கு ஏதும் செய்தி விட்டுச்செல்லவில்லை. ஆனால் ஏனோ அந்த கிழிப்பட்ட பக்கங்கள் எனக்கானவை என நான் ஆழமாக நம்பினேன். மறு உலகத்திலிருந்து எனக்கு அவர் கடத்த விரும்பிய செய்தி அதுதான் என கற்பனை செய்தேன். ஆனால் அவ்விரு பக்கங்களும் கிடைக்கவில்லை. ஒரு கவிதையை மொழியாக்கம் செய்து அன்புடன் ஜானுக்கு என எழுதியிருந்தார். 


'இதயமே நாம் அவனை மறப்போம்!

நீயும் நானுமாய், இன்றிரவே!

அவனளித்த வெம்மையை நீ மறப்பாய்,

நான் ஓளியை மறப்பேன்.


நீ முடித்துக்கொண்டதும், தயவுகூர்ந்து என்னிடம் சொல்

அப்போது எனது எண்ணங்கள் மங்கும்;

விரைக! நீ தாமதித்து பின்தங்கும் நேரத்திற்குள்,

நான் அவனை நினைத்திடுவேன்!


இத்தனை ஆண்டுகளில் பலமுறை இந்த கவிதையை வாசித்திருக்கிறேன் ஆனால் இப்போதுதான் அந்த பெயரை கவனித்தேன். சட்டென்று போதையிறங்கி அகம் தெளிந்தது. ஒன்றுடன் ஒன்று பொருந்திக்கொண்டது. கண்களில் நீர் பொங்கியது. இன்னோரு சுற்று அருந்தினேன். ஏனோ அப்போது சிதம்பரத்தின் அருகாமையை மனம் வேண்டியது.  


அழுக்கு வேட்டி பொதியை எடுத்தேன். மெல்ல அதை அகற்றியபோது வேலைப்பாடுகள் மிக்க தந்தப்பேழை என் கையில் அமர்ந்தது. அதை மெல்ல வருடினேன். செதுக்குகளில் தூசு படிந்திருந்தது. கண்ணாடித் துடைக்கும் மெல்லிய துணியைக்கொண்டு துடைத்தேன். பேழையை உற்று நோக்கினேன். அப்பச்சியின் இளமை முகம் கருவிழிக்குள் கலங்கியமைந்தது. உடலெங்கும் நடுக்கம் ஒரு அலைபோல பரவுவதை உணர்ந்தேன். வெறுமே அந்தப்பேழையை வெறித்தபடி எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன் எனத்தெரியவில்லை. மீண்டும் பேழையை அழுக்கு வேட்டியில் பொதிந்து கட்டினேன். சிதம்பரத்தின் அறையில் இருந்த அலமாரியில் மறைவாக உள்ள ஓரிடத்தில் வைத்தேன். 


மறுநாள் உறக்கம் விட்டெழும்போது பதினோரு மணி. தலை கனத்து வலித்தது.  எலுமிச்சை தேநீரை ஒரு கோப்பை சுடச்சுட அருந்தினேன். சிதம்பரம் நான்கு முறை அழைத்திருந்தான்.‌ அப்பச்சியின் புகைப்படத்தை எங்கே மாட்டச்சொல்லலாம் என சுவரை நோட்டம் விட்டேன். பேழையில் என்ன இருக்கக்கூடும் என ஒரு கேள்வி தன்னிச்சையாக கிளர்ந்தது. கண்களை மூடிக்கொண்டு, என்னவாக இருக்கும் என கற்பனைச்செய்யத் தொடங்கினேன். 


Monday, September 12, 2022

புறப்பாடு எனும் ஆத்ம கதை

 

Photo Courtesy: மேலூர் பிரபாத் சர்புதீன்

1

 

(சியமந்தகம் தொகுப்பிற்காக கட்டுரை) 

‘சத்திய சோதனை’யில் ராஜ்கோட்டில் தான் பயின்ற கல்வி நிலையத்தின் அருகே நின்று இந்து மதத்தை வசைபாடிகிறித்தவத்தைப் பரப்பும் துண்டு பிரசுரங்களை அளித்த பாதிரியாரைப்பற்றி எழுதியிருப்பார் காந்தி. ‘சத்திய சோதனை’ தொடராக வெளிவந்தது. ஆகவே வாசகர்கள் உடனடியாக எதிர்வினையாற்றினார்கள். வாசக எதிர்வினைகளையும் அதற்கான தனது பதில்களையும் இதழ்களில் அவர் பதிப்பித்தார். மேற்சொன்ன நிகழ்வைச் சுட்டி காந்திக்கு ஒரு கடிதம் வருகிறது. காந்தி சுட்டிக்காட்டும் காலகட்டத்தில் ராஜ்கோட்டில் பணிபுரிந்த பாதிரியாராகிய அவர்தான் ஒருபோதும் காந்தி குறிப்பிட்ட முறையில் தெருமுனையில் நின்று இந்து மதத்தை அவதூறு செய்து மதப் பிரச்சாரம் செய்ததில்லை என எழுதுகிறார். ஆகவே அக்கருத்தைத் திரும்பப்பெற வேண்டும் எனக் கோரினார். அதற்குஅதில் குறிப்பிடப்படும் மனிதர் நீங்களா இல்லையா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் என் மனப்பதிவிற்கு உண்மையாக இருக்கவே விரும்புகிறேன். ஆகவே மாற்றிக்கொள்ளமாட்டேன் என பதில் எழுதுகிறார் காந்தி.

 

காந்தி ‘சத்திய சோதனை’யை வரலாறாகப் பிரகடனப்படுத்தவில்லை. அவர் குஜராத்தியில் அதற்களித்த பெயர் ‘ஆத்ம கதா’ - அதாவது ஆன்மாவின் கதை. ஜெயமோகனின் ‘புறப்பாடு’ம் ஒரு ஆத்ம கதைதான். ‘சத்திய சோதனை’யை எப்படி ஒரு நாவலாக வாசிக்க முடியுமோ அப்படி ‘புறப்பா’டையும் ஒரு நாவலாக வாசிக்க இடமுண்டு. ஒருவகையில் 'ஆத்ம கதைபுறவயமான தகவல்கள் நிரம்பிய பொதுவரலாறுக்கான எதிர்வினைஅதன் பிரதிபலிப்பு. தகவல்களாலும் தர்க்கங்களாலும் கட்டமைக்கப்படும் வரலாறு சந்திர சூரியரைப் போல் தலைக்கு மேலே ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. கலங்கிய குட்டையிலும் தெள்ளிய நீரோடையிலும் தெரியும் நிலவு ஒன்றுதான். ஆனால் வெவ்வேறாக உருக்கொள்கிறது. ஆகவேதான் பொதுவாக வாழ்க்கை வரலாறுகள்அதிலும் குறிப்பாக தன்வரலாறுகள்படைப்பூக்கமும் கொந்தளிப்பும் அலைக்கழிப்பும் கொண்ட ஆளுமைகள் எழுதும்போது மகத்தான நாவல் அளிக்கும் உள எழுச்சிக்கு இணையான உணர்வை அளிக்கின்றது.

 

'ஆத்ம கதைஎன்பது முழுமையான வரலாறல்லமுழுக்க புனைவும் அல்லஉண்மையும் அல்ல. இவை யாவும் கலந்த ஒரு வடிவம். முதன்மையாக ஆன்மாவின் அறிதல்களையும்அதற்கான போராட்டங்களையும் பின்தொடர்ந்து செல்வது. ஆகவேதான் காந்திக்கு தன் மனப்பதிவுக்கு உண்மையாக இருந்தால் போதுமெனப் படுகிறது. எழுத்தாளர் அ.  முத்துலிங்கம் பயன்படுத்திய 'உண்மை கலந்த நாட்குறிப்புகள்எனும் பயன்பாட்டைப் பொருத்திக்கொள்ளலாம். புனைவுக்கும் புனைவற்ற எழுத்திற்கும் இடையேயான கோட்டை அழித்து விளையாடுகிறது.

 

ஜெயமோகன் அடிப்படையில் ஒரு புனைவெழுத்தாளர். வரலாறைவாழ்வை என அனைத்தையுமே புனைவாகக் காணக்கூடிய பின்நவீனத்துவப் பார்வை அவருக்கு ஏற்புடையதுதான். அவரால் எதையும் புனைவாக்க முடியும். உரையாடிக்கொண்டிருக்கும்போதே அவரால் ஒரு புனைவை உருவாக்க முடியும் என்பது அவருடன் நேரில் பழகிய நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். (ஏறத்தாழ அத்தனைபேர் குறித்தும் நட்பு வட்டத்தில் சில அழகிய புனைவுகள் உலாவ அவரே முதன்மை காரணம்.) ஒரு நிகழ்வை புனைவாக்க அவருக்குத் தேவையானதெல்லாம் அந்த நிகழ்விலிருந்து ஒரு ஆதாரக் கேள்வியைப் பிரித்தெடுக்கவேண்டியது மட்டும்தான்அக்கேள்வி கவித்துவமான உருவகத்துடன் இணைந்து வளரக்கூடியதாக இருக்கும். உணர்ச்சிகரமான புள்ளியிலோ அல்லது கவித்துவமான அறிதலிலோ நிறைவுறும். ஏறத்தாழ இதே வடிவத்தைதான் புறப்பாடின் அத்தியாயங்களில் நாம் காண்கிறோம். ஆகவே 'புறப்பாடில்'  எழுதப்பட்ட அத்தனையும் உண்மையா, அல்லது எத்தனை சதவிகிதம் உண்மை எத்தனை சதவிகிதம் புனைவு போன்ற கேள்விகளுக்கு பொருள் ஏதுமில்லை. ஜெயமோகனின் வாழ்க்கைக் கதையைப் பேசும் நூல்கள் என ‘புறப்பாடு’, ‘வாழ்விலே ஒரு முறை’, ‘முகங்களின் தேசம்’ ஆகியவற்றைச் சொல்லலாம். இவை தவிர அவரது பயண அனுபவ நூல்களும் இவ்வகையைச் சேர்ந்தவைதான். 'நினைவின் நதியில்போன்ற ஆளுமைச் சித்திரத்தைக்கூட இவ்வகையிலேயே பொருத்த முடியும். இவற்றுள் ‘புறப்பாடு’ ஓர் உச்சம்.

 

எழுத்தாளர்களின் ஆத்ம கதை ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததுஎழுத்தாளரைப் பீடித்து அவரை ஆட்கொண்டுஅவரது எழுத்துகள் வழியாக வெளிப்படும் விசையின் தடத்தை அணுகி அறிவதற்கான வழியது. ஒரு புனைவெழுத்தாளனாக நான் வாசிக்கும் எழுத்தாளரின் படைப்பின் ஊற்றுக்கண்ணைக் கண்டடைவது பெரும் பரவசத்தை அளிப்பது. எத்தகைய கேள்விகளை அவரது படைப்புகள் விவாதிக்கின்றனவோ அவற்றை வாழ்வில் எப்போது முதன்முறையாக நேர்கொண்டார்எழுத்தை அறிந்தால் போதாதா, எழுத்தாளரை வேறு அறியவேண்டுமா என்றொரு வாதம் வைக்கப்படுவதுண்டு. அதற்கான நியாயங்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அதை பொதுமைப்படுத்தி எழுத்தாளரின் ஆளுமையையே நிராகரிக்கவும் வேண்டியதில்லை. சாகசங்கள் நிறைந்த வாழ்வைக் கொண்ட எழுத்தாளர்களின் தனிவாழ்க்கையை அவர்களது புனைவுலகின் பகுதியாகவே காணவேண்டும். சோமர்செட் மோகமின் வாழ்வு அவரது நாவல்களைவிட சுவாரசியமானது. ஹெமிங்க்வேயும் அப்படியே. ஆர்தர் ரைம்போ கவிஞராக வாழ்வதற்கு என ஒரு திட்டம் வகுத்தார். கவிதை எழுதுவதைவிட கவிஞராக வாழ்வது மிக முக்கியம் எனக் கருதினார். எந்த அனுபவத்தையும் மறுக்காமல் அனுபவித்துக் கடப்பதே அதன் சாரமான வழிமுறை. பல தலைமுறை கவிஞர்களைக் காவு வாங்கிய திட்டமும்கூட. பாரதியையோபுதுமைப்பித்தனையோஜெயகாந்தனையோ அவர்களது படைப்பிலிருந்து தனித்து நோக்கவேண்டியதில்லை. பிரமிளையும் விக்கிரமாதித்தனையும் சாருவையும் இவ்வண்ணமே காணமுடியும். ஜெயமோகனும் அடிப்படையில் ஒரு சாகசக்காரர்தான். ஜெயமோகனின் ஆளுமை மீது நமக்கிருக்கும் ஈர்ப்பிற்கு அவரது சாகச இயல்பு மிக  முக்கியமான காரணம். சாகசத்தை இயக்குவது துணிவு. சமயங்களில் சாகசம் விபரீதமான எல்லைகளை தொடவும் கூடும். சாமானியர்கள் அதற்கென காத்திருந்து  சாகசக்காரரை அவரது கைக்கூடாத ஒன்றிரண்டு முயற்சியைக் கொண்டு மதிப்பிட்டு நிராகரிக்க தலைப்பப்படுவார்கள். அது எளிதும் கூட. ஆனால் சாகசக்காரரை நாம் ஒட்டுமொத்தமாக அவர் நிகழ்த்திய பாய்ச்சலைக் கொண்டே வகுத்துக்கொள்ள வேண்டும். மௌனியையோ, ந. பிச்சமூர்த்தியையோதி.ஜா.வையோஅசோகமித்திரனையோதிலீப்குமாரையோ நாம் சாகசக்காரர்களாக அணுகுவதில்லை. படைப்புகள் வழியாகவே அணுகுகிறோம். இரண்டு போக்குகளும் தன்னளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை உணர்ந்துகொண்டால் போதும்.

 

ஜெயமோகனின் படைப்புலகில் அவரது தொடக்க நூல்களான ‘ரப்பர்’‘திசைகளின் நடுவே’ ஆகியவை தொடக்கப் புள்ளி என்றால்‘விஷ்ணுபுரம்’‘அறம்’‘வெண்முரசு’கொரோனா கால கதைகள் ஆகியவை அதன் அடுத்தடுத்த மைல்கற்கள். 'அறம்தொகுப்பிற்கு முன் அதற்குப் பின் என அவரது படைப்புலகைப் பகுப்பவர்களும் உண்டு. முந்தைய கதைகள் பிடித்த அளவிற்கு ‘அறம்’ தொடங்கி பிந்தைய படைப்புகள் பிடிப்பதில்லை எனச் சொல்வார்கள். நேரெதிராக முந்தைய படைப்புகள் மிகுந்த இருண்மை கொண்டதாக உணரும் வாசகப் பரப்பும் உண்டு. ‘வெண்முர’சைக்கொண்டு அவரது படைப்புலகத்தை வகுப்பவர்களும் உண்டு. ‘அறம்’ ஒரு தொடக்கமெனில் ‘வெண்முரசு’ வாசகப் பரப்பை பன்மடங்கு பெருக்கியது. கண்முன் ஒரு புதிய அலையென வாசகர்களும் படைப்பாளிகளும் எழுந்துவருவதைக் காணமுடிகிறது. ஆனால் இவற்றுக்கு அப்பால், என்னளவில் அவரது படைப்புலகையே ‘புறப்பாடு’க்கு முன், பின் என வகுக்கும் அளவிற்கு அதை படைப்பு நோக்கில் மிக முக்கியமான மைல்கல்லாகக் கருதுகிறேன். 


புறப்பாடு 2013 ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டொபர் மாதங்களில் எழுதப்பட்டது. அதேயாண்டு இறுதியில் வெண்முரசு அறிவிக்கப்படுகிறது. ஜனவரி 12014 லிருந்து வெண்முரசு தொடங்குகிறது. புறப்பாடு எனும் ஸ்பிரிங் போர்டில் குதித்துதான் ஜெயமோகன் ‘வெண்முர’சிற்குள் மூழ்கியுள்ளார் என ஊகிக்க இடமுண்டு. தனக்குள் ஆழ்ந்ததன் விளைவே தனது இலக்கைக் கண்டுகொள்ள முடிந்தது. உள்ளார்ந்து ஒரு கடைதலை நிகழ்த்துவதன் மூலம் வாழ்க்கை நோக்கைக் கண்டடைந்திருக்கிறார் என்றே எண்ணுகிறேன்.

 


2

 

‘புறப்பாடு’ இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் பனிரெண்டு அத்தியாயங்களும்இரண்டாவது பகுதியில் பதினெட்டு அத்தியாயங்களும் என மொத்தம் முப்பது அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. தந்தையிடம் முறுக்கிக்கொண்டு வெளியேறி, நண்பர்களுடன் அறையில் தங்கி கல்லூரிக்குச் செல்வது முதல் பகுதி. ராதாகிருஷ்ணனின் மரணத்திற்குப் பின் ஏழு மாதங்கள் நாடு முழுவதும் அலைந்து திரிவது இரண்டாம் பகுதி.

 

'நான் செத்துப்போனால் ஒவ்வொருவரும் எப்படி எப்படி அழுவார்கள் என்றுகற்பனை செய்யும் பதின்ம வயது ஜெயமோகனாக வீட்டை விட்டு வெளியேறும் 'சூழிருள்பகுதியில் அறிமுகமாகிறார். திரும்புதல் உறுதியற்ற பயணங்களில் நாம் முதலில் இழப்பது நம் பாதுகாப்புணர்வை. பாதுகாப்புணர்வை இழந்ததும் நம் மனம் ஊசி நுனி என கூர்கொண்டுவிடும். ஒவ்வொரு அசைவையும்ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாக கவனிக்கும். புலன்களும் மனமும் திறந்துகொண்ட அகவிழிப்புநிலை வாய்க்கும். இலக்கியம் என்பதேகூட அகவிழிப்பு நிலையின் வெளிப்பாடுதான். பதின்ம வயது ஜெயமோகனின் அகம் விழித்துக்கொண்ட தருணங்களையும் பயணங்களையும் சொல்வதே இந்நூல். ‘புறப்பாடு’ முதன்மையாக ஒரு வயதடைதல் நூலும்கூட. வயதடைதல் நூல்கள் பொதுவாக பாலியல் அனுபவங்களுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ‘புறப்பாடு’ அளிக்கவில்லை. வயதடைதல் என்பது தன்னை அறிதல்தான். பசியைஉடலைமனதைசாதியைஎன ஒவ்வொன்றாக அறிகிறார். ‘புறப்பாடு’ கண்டடைதல்களின் கதை எனச் சொல்லலாம். ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிதாகக் கண்டடைந்து முன் நகர்ந்தபடியே உள்ளார்.

 

‘அனலெரி’ பகுதியில் ‘உடலே எச்சிலாகச் சுரப்பதுபோல’ பசியை அறிகிறார். வயிற்றில் அனல் எரிந்துகொண்டிருக்கும்போதுகூட “அப்பிடி போயி நிண்ணாமத்தவனுக இஞ்ச சோறு தின்னவேண்டாமா?” எனக் கோபப்படும் அருமையின் சொற்களின் ஊடாக பசித்திருப்பவர்களின் அறத்தை அறிகிறார். அருமை நாஞ்சில் நாடனின் கதைகளில் புழங்குபவன். 'மணி வெளிச்சத்தில்சூழ்ந்த இருளிலிருந்து மீண்டுவிட முடியும் எனும் நம்பிக்கையை அறிகிறார். எவரேனும் மாட்டியிருக்கும் சட்டைப்பையில் கைச்செலவுக்காகக் காசை வைத்தபடி இருக்கிறார்கள். கட்டிட வேலைக்குச் சென்று அயர்ந்து தூங்குபவரைக் கண்டு அவருக்கான கல்விச்செலவை அருமை ஏற்கிறான். “நீ புக்கு படிக்கணுமானா இனி இந்தமாதிரி சோலிக்கு வரப்பிடாது…” என அருமை சொல்வது உணர்ச்சிகரமான தருணம்.

 

‘மணி வெளிச்சத்தில்’ கொத்தனார் வேலை பார்த்து பனிரெண்டு ரூபாய் ஈட்டிவரும்போது பரோட்டா உண்ண ஜெயமோகன் அழைக்கும்போது அருமை ஏற்றுக்கொள்வதில்லை. அவன் உடலுழைப்பைப் பெரிதும் மதிப்பவன். அதிலிருந்து ஈட்டிய பணத்தை வீணாக்க விடவில்லை. அதுவே ‘ஈட்டிநுனிக்குருதியில் குமுதத்தில் கதை எழுதி வரும் மணியார்டர் பணத்தில் அனைவருமாக ஒன்றாக சேர்ந்து உண்டு செலவழிக்கும் யோசனையை அருமை சொல்கிறான் என்பது ஒரு சுவாரசியமான முரண். வாழ்விற்கும் புனைவிற்குமான உறவு எத்தகையதுவாழ்வெனும் நிதர்சனத்தின் கூர்முனையை அறிகிறார். அது அவரை குத்தி குருதியை ருசிக்கக் கொடுப்பதே இப்பகுதி.

 

கதை எழுத்தாளருக்கு எப்படிப் பொருள்படுகிறதுகதையின் வாழ்க்கைச் சூழலை ரத்தமும் சதையுமாக அனுபவிப்பவர்களால் எப்படிப் பொருள்கொள்ளப்படுகிறதுபிந்தியவனுக்கு கதை நீதியை நிலைநாட்டும் கருவி. முந்தையவனுக்கு மானுட நிலையை அடையாளம் காட்டும் கருவி. இரண்டிலும் கரிசனம் முதன்மை விசை என்றாலும்இருவரின் இலக்குகளும் வேறு. அருமை கதையில் கைவிடப்பட்ட 'லிசிக்காகமுத்தாலம்மனின் நீதியைக் கோருகிறான். அறச்சீற்றம் கொள்கிறான். லிசி அவன் வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்விற்கு நெருக்கமானவள். அவனறிந்த தங்கையோஅவன் கதையாகக் கேட்ட அன்னையோஅக்காவோ. ஜெயமோகனுக்கு அவள் ஒரு கதைமாந்தர். அந்தப்பகுதி இப்படி நிறைவடைகிறது.

 

யாரும் ஒன்றும் சொல்லவில்லை. முந்திரி நிழலில் செம்மண் பரப்பில் அமர்ந்திருந்தோம். சட்டென்று லிஸியை நினைத்தேன். எனக்கு மனம் பொங்கிவிட்டதுகண்ணீர் விட ஆரம்பித்தேன்.

 

“லே என்னலலே”

 

“தெரியாம எளுதினதாக்கும்” என்று தொண்டை இடறச் சொன்னேன்.

 

“செரிலே மக்கா… விடு…லே அருமைவிடுலே. அவன் ஏமான்வீட்டுப் பயல்லா… அவனுக்கு பாவங்களுக்க துக்கம் தெரியாதுல்லா?

 

'கருந்தீண்டல்பகுதியில் தான் ஒரு சிறுவன் அல்ல என்பதை ஜானின் தங்கை கிரேஸியைக் கண்டதும் உணர்கிறார். ஆனால் கருந்தீண்டல் என்பது கிரேசியின் தீண்டல் அல்ல. மரணத்தின் தீண்டல்அல்லது அதையும்விட நாமறியாத உலக இயக்கத்தின் முதல் தொடுகை. ஜான் மரணத்தருவாயிலிருந்து மீண்டுவரும்போது ஜெயமோகனின் கனவில் அவரும் கிரேஸியும் இருந்ததை தான் கண்டதாகச் சொல்கிறான். இருவர் கண்ட ஒரு கனவுத் தருணம். தர்க்கத்தை மீறிய ஒரு அறிதலைமாயக் கணத்தை அறிகிறார். ‘புறப்பா’டில் இத்தகைய சில மாயத் தருணங்கள் உண்டு. 'காற்றில் நடப்பவர்களில்சினிமா திரைக்குள் இருப்பதான அனுபவம், 'நுதல் விழிஅருளப்பசாமியின் பாத்திரம் போன்றவற்றைச் சொல்லலாம். அருளப்பசாமிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையேயான உறவு அற்புதமான பகுதி. ஆனால் ‘கருந்தீண்ட’லில் இந்த மறைஞான அனுபவத்தின்மீது எந்த விவாதமும் நடைபெறாமல் அது மர்மமாகவே நீடிக்கிறது. பிந்தைய இரு பகுதிகளிலும் அவ்வனுபவத்தை பகுத்தறிவுக்குள் கொணர்ந்து விவாதிக்க முயல்கிறார். காரணங்களை தர்க்கரீதியாகக் கண்டறிய முற்படுகிறார். எனினும்கூட தர்க்கத்திற்கு வெளியேயே அவை நிற்கின்றன.

 

'தூரத்துப்பாலையில்', ‘இடைவிடாது நாட்கணக்காக என் கண்ணுக்குள் ஓடும் சினிமாதான் நாவல்’ என்பதைக் கண்டடைகிறார். சினிமா கொட்டகையில் உழைக்கும் சந்திரனுக்கு அங்கே என்ன படம் ஓடுகிறது என எந்த ஆர்வமும் இல்லை. சுமாரான ஏதோ ஒரு படம் ஓட்டும்போது அவனுடைய முதலாளி சகாக்களை அழைத்துக்கொண்டு வா எனச் சொல்கிறார். ஒரு ஆள் குறைய சினிமாவுக்கு ஒரு தோழரைக் கூட்டிச் செல்கிறார்கள். “தோளர்லாம் ஃபாதர் மாதிரியாக்கும். சினிமாவுக்கு வரப்பிடாது” என நாகமணி சொல்வது சுவாரசியமான இணைவைப்பு. சினிமா பார்க்க உற்சாகமாகக் கிளம்பி வந்த அனைவரும் உறங்கிவிடஆஜானுபாகுவான தோழர் மட்டும் முழுமையாக ‘பக்த குசேலன்’ திரைப்படத்தைக் கண்டு துக்கம் பெருக்கெடுத்து அழுகிறார். எல்லோருக்கும் கனவிருக்கிறதுகனவு நிலமும் இருக்கிறது, ஆனால் அதுவும் பாலையாக இருந்தால்?

 

‘கருந்தீண்ட’லில் ஜானை மருத்துவமனையில் கவனிக்க வைக்க தனது சாதி எனும் அதிகாரத்தை உணர்த்தியவர் முதன்முறையாக ‘கையீர’த்தில் சாதியின் அழுத்தத்தைசுமையை அறிகிறார். நண்பனின் மலைகிராம வீட்டிற்கு அவனுடைய அழைப்பின் பேரில் கிறிஸ்துமஸுக்குச் செல்கிறார். அங்கே அவர்களுடைய அந்தரங்கமான வெளிக்குள் நுழைந்துவிட்ட அசவுகரியத்தை உணர்கிறார். “அன்று முதல்முறையாக என் பிறப்பின் பாரத்தை உணர்ந்தேன். ஒருவன் ஒரு சாதியில் பிறந்துவிட்ட ஒரே காரணத்தாலேயே பாரமுள்ளவன் ஆகிவிடுகிறான். பாவத்தின் பாரம்தான். முன்னோர்கள் செய்த பாவங்கள். சலுகையுள்ளவனாகபரிசீலிக்கப்படுபவனாகபாரபட்சத்தின் பலனை அனுபவிப்பவனாக இருப்பதன் பாவம். அவற்றை அவன் நிராகரிக்க முடியாது. இல்லை என பாவனை செய்ய முடியாது. வாழ்நாளெல்லாம் அதற்காக மன்னிப்பு கோரியபடியேதான் இருக்கவேண்டும். அதுதான் நியாயம்.” அவர் நண்பனின் குடும்பத்திற்காக வாங்கிக்கொண்டு வந்த பலகாரம் அவர்மீது வெறுப்பை உமிழப் போதுமானதாக உள்ளது. அளிக்கும்போது ஏமானாகத் தெரிபவர் நண்பனின் அன்னையிடமிருந்து பெற்றுக்கொண்டதும் மகனாக ஆகிவிடுகிறார். 'இருந்தாழ்பகுதியில் அவரது அண்ணன், சாதி அவர்களை எப்படி உயிராபத்திலிருந்து காக்கும் என வகுப்பெடுக்கிறார். “புத்தியுள்ளவன்தான் கேடியாக முடியும் பாத்துக்க. புத்தியுள்ளவனுக்கு எந்தச் சாதிமேல கைய வைக்கலாம், எங்க ஒதுங்கிரணும்ணு நல்லா தெரிஞ்சிருக்கும்.” கேசவேட்டனுக்கு தரவாட்டு நாயர் எனும் பிரியம் உண்டு.

 

‘விழியொளி’யில் மொண்டி எனும் பசுவின் சித்தரிப்பின் வழியாக மிருகங்களின் வெறுப்புஅவற்றின் கண்களின் ஆழம் காட்டப்படுகிறது. விஷ்ணுபுரத்து பிங்கலனின் கையில் அகப்படும் மிருகநயனி தொடங்கி பல கதைகளில் மிருகங்களின் வெறிப்பை எழுதுகிறார். அக்கறையின் பெயரால் செய்யும் செயலின் வன்முறையை உணர்கிறார்.

 

‘கோவில்கொண்டிருப்ப’தில் பாதிரியாராக ஆகியிருக்கும் அருளின் சித்திரம் வருகிறது. ‘கரமாசோவ் சகோதரர்க’ளில் வரும் அல்யோஷாவைப் போன்றவன். தூய ஆன்ம வேட்கைக்காகத் துறவை நோக்கிச் செல்பவன். இறைவனிடம் தனக்காகக் கேட்பது பிழை என எண்ணுகிறான் அருள். ஜான் தனக்காகவும் குடும்பத்திற்காகவும் வேண்டுவான். கர்த்தரின் பார்வையில் இரண்டும் ஒன்றுதான் என ஜெயமோகன் அறிவதே இப்பகுதியின் அறிதல். ஜெயமோகனுக்குத் துறவின்மீது மாளாத ஈடுபாடு உள்ளது. துறவை ஒருவகையில் தனது கனவாகக் கொண்டவர். ஆனால் முழு துறவியாகத் தன்னை ஒப்புக்கொடுக்கவில்லை. அது அவரது பாதையல்ல என நித்யா கூறியதாகச் சொல்வார். பயணங்கள் வழியாக அவர் தனது துறவின் வேட்கையைத்தான் சமன்படுத்திக்கொள்கிறார் என எனக்குத் தோன்றுவதுண்டு. ராதே ஷ்யாம் விரஜர்கள் ஆறுமாதம் கிருஷ்ணனின் காதலர்களாகவும் ஆறுமாதம் இல்லறத்தவர்களாகவும் வாழ்வதைப்போலவே ஜெயமோகனும் தனது வாழ்வை வடிவமைத்துள்ளார் என எண்ணிக்கொள்வேன். பயணங்கள் என்பது அளவில் சிறிய துறவுதான். அதுவும் திரும்புதலற்ற திளைப்பு கொண்ட பயணம் நிச்சயம் துறவுதான்.

 

'கரும்பனையும் செங்காற்றும்அற்புதமான நிலக்காட்சிகள் கொண்டது. ஆங்கிலம் தாழ்வுணர்வுக்கான காரணமாக இருக்கும் அதேவேளையில் அதிகாரத்திற்கு எதிரான கருவியாகவும் இருக்கமுடியும் என்பதைக் கண்டுகொள்கிறார். மாரி மிரட்டும் அதிகாரிகளை ஆங்கிலத்தின் உதவியுடன் எதிர்கொள்கிறான். 'ஜோதிஅத்தியாயத்தில் அருளப்பசாமியை அவமதிக்கும் கோவில் பூசகரிடம் வேகவேகமாக ஆங்கிலத்தில் பேசிவிட்டு வருகிறார் ஜெயமோகன். ஆங்கிலம் என்பது தனது இடத்தைப் பறைசாற்றும் கருவியாகிறது.

 

'துறக்கம்' அத்தியாயத்தில் உடனிருக்கும் புலையர் சாதி நண்பன் மேல்சாதி ஒப்பந்தக்காரரை அடித்துவிடுகிறான். அவனுக்கு உதவ ஜெயமோகன் முயல்கிறார். இருவரும் உயிரச்சத்துடன் தப்பிப்பதுதான் இந்த அத்தியாயம். சரஸ்வதி திரையரங்கம் தொடங்கி நகரத்துப் பகுதிகளின் வழியாகத் தப்பியோட முயல்கிறார்கள். தப்பியோடும்போது நகரத்தைக் காணும் காட்சியை அபாரமாக விவரித்துள்ளார். ‘மேட்டில் நின்று பார்த்தபோது ஒரு அபாரமான காட்சியைக் கண்டேன். மொத்த நகரையும் பின்பக்கம் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். நூற்றுக்கணக்காக வீடுகளின் பின்பகுதிகள். கதவோ சன்னலோ அற்ற சிமிண்ட் பரப்புகள். செங்கல்பரப்புகள். ஓலைத்தட்டிப்பரப்புகள். எல்லா வீடுகளும் அப்பகுதியை அருவருத்து திரும்பிக்கொண்டவை போலிருந்தன.’ நியாயமாக சாக்கடையும் மலமும் சேரும் உள்ள நகரத்தின் இப்பகுதியை நரகம் என எளிதில் சொல்லியிருக்கலாம். ஆனால் அதை அவர் 'துறக்கம்', அதாவது சொர்க்கம் என அழைக்கிறார். துறக்கத்தில் உயிர் அச்சத்தை அறிகிறார். தனது துணிவின் எல்லையை உணர்கிறார். நண்பனைக் கைவிட்டு தான் மட்டும் தப்பவேண்டும் எனும் எண்ணம் அழுத்தியபோது அதற்குப் பணியாமல் இருக்கிறார். 'இருந்தாழ்நான்குமாத வெளிவாழ்விற்குப் பின் ஊருக்குத் திரும்புவதைச் சொல்கிறது.

 

 


 

3

 

‘புறப்பா’டின் முதல் பகுதியில் வீட்டை விட்டு வெளியேறி வந்தாலும் அவர் எப்போதும் வீட்டுக்குத் திரும்பக்கூடிய தொலைவிலேயே வாழ்ந்தார். ஜெயமோகனும் விடுதியில்தான் வசிக்கிறார் என குடும்பத்தினருக்கும் தெரியும். எப்படியும் திரும்பிவிடுவோம் / திரும்பிவிடுவான் எனும் நம்பிக்கை இருவருக்குமே இருந்திருக்கும். இரண்டாம் பகுதி முற்றிலும் தீவிரமானது. திரும்புதலற்றஇலக்கற்ற பயணம். தனது வசதி வட்டத்திற்கு வெளியே வாழ்வை எதிர்கொள்ளுதல் இன்னும் சவாலானது. இரண்டாம் பகுதியைவிட முதல் பகுதி ஒப்புநோக்க உணர்ச்சிபூர்வமானது. இரண்டாம் பகுதி நுண்மையை நோக்கிச் செல்வதுபூடகம் நிறைந்தது. ‘அறம்’ கதைகளிலும் இத்தகைய தன்மையை நம்மால் உணரமுடியும். ‘அறம்’ போன்ற உணர்ச்சிகரமான கதைகளில் தொடங்கி‘மயில் கழுத்து’‘தாயார் பாதம்’ போன்ற பூடகமும் நுண்மையும் நிறைந்த கதைக்குச் சென்று‘உலகம் யாவையும்’ போன்ற ஆன்மிக உச்சத்தில் நிறைவடைவது போலவே இதிலும் தொடர்கிறது. அருளப்பசாமியின் சித்தரிப்பும் வடலூர் ஜோதி அத்தியாயமும் ‘புறப்பா’டின் ஆன்மிக உச்சம் எனச் சொல்லலாம்.

 

'லிங்கம்மற்றும் 'எள்ஆகிய முதல் இரண்டு பகுதிகள் ஜெயமோகனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ராதாகிருஷ்ணனின் தற்கொலையை விவரிக்கிறது. வாசகருக்குப் பதட்டம் ஏற்படுத்தும் பகுதி. ராதாகிருஷ்ணன் ஹேம்லட் கதையைக் கேட்டு ஏன் தொந்தரவிற்கு உள்ளானான் என்பதில் அவனது மரணத்திற்கான காரணம் சூசகமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. மொட்டை மரத்தில் ஏறுவதுராணுவத்திற்குள் செல்ல விழைவது என ராதாகிருஷ்ணன் தன்னை வளர்ந்த ஆணாக நிறுவ முயன்றபடியே இருக்கிறான். எவரிடம்தனது அன்னையிடம். ஏதோ ஒரு புள்ளியில் அதன் அபத்தம் உறைக்கிறது. பூடகமாகவே கடக்கப்படுகிறது. ராதாகிருஷ்ணனுக்கும் ஜெயமோகனுக்குமான நட்பு எனக்கு காந்திக்கும் அவரது நண்பர் ஷேக் மேதாப்பிற்குமான உறவை ஒத்தது. மேதாப்தான் காந்திக்குப் புலால் உணவை அறிமுகம் செய்கிறார்பெண் சகவாசத்தை அறிமுகம் செய்துவைக்க முயல்கிறார்தென்னாப்பிரிக்காவில் கூட காந்தியுடன் வசிக்கிறார். விலைமாதரை அழைத்துவருவதால் கடும் கோபம் கொண்டு அவரை வெளியேறச் சொல்கிறார். மேதாபின் நட்பை விடவும் முடியாமல்அவருடைய செயல்களால் எரிச்சல் அடைந்து விலகவும் முடியாமல் சிரமப்பட்டார். ராதாகிருஷ்ணன் ஒரு சாகசக்காரன். பதின்ம வயதினர் கற்பனை செய்யும் அந்த வயதிற்கே உரிய சாகசங்களைச் செய்பவன். சாகசக்காரர்களை நோக்கி அந்த வயதில் ஈர்க்கப்பட்டாலும் அவனை விட்டு விலகவும் முயல்கிறார். மேதாபும் ஒரு சாகசக்காரர்தான். ராதாகிருஷ்ணனிடமிருந்து அவர் பெற்றது என்ன‘வெட்கமின்மை ஒரு மாபெரும் ஆற்றல் என நம்பினேன். அதை என்னால் அடையமுடியவில்லையே என ஏங்கினேன்’ என எழுதுகிறார். போர்த்தப்பட்ட உடலில் விரைத்த குறியுடன் சவமாகக் கிடக்கும் சித்திரத்துடன் அப்பகுதி நிறைவு பெறுகிறது.

 

‘எள்’ ராதாகிருஷ்ணனின் மரணத்தை ஜெயமோகன் செரித்துக்கொள்ள முயலும் அத்தியாயம். ஜெயமோகன் எழுதிய ஒரு கவிதையை நினைவுபடுத்தியது.

 

பலிச்சோறு

 

அனல் கொதிக்க எரிந்து

என் உலை வெந்தாகிவிட்டது

பசும் வாழையிலைமேல்

கத்தரிக்காயும் எள்ளும்

வினோதமாய் மணக்கும் பலிச்சாதம்

தலைசரித்துத் தலைசரித்துக் கரையும்

இதில்யார் நீ அப்பா?

பசியாற வேண்டும்

இது உன் சாதம்

   

கவளம் சுமந்து திரும்பினால்

வெறும் மணற்பரப்பாய் என் நதி

பலிச்சோறு உலர உலரத் தவிக்கிறேன்

எனக்குமட்டும் நீரில்லை

கங்கையில் காவிரியில்

காசியில் கன்யாகுமரியில்

 

அலைகிறேன்

தீர்த்தக்காவடியாய்

இறக்கத்தேம்பும் பாரமாய்

உன் பலிச்சாதம்

 

முழநீர் போதும் முங்கிவிடுவேன்

எங்கே

எந்த ஏட்டுச்சுவடியில்

எந்தக் கோயில் கல்வெட்டில்

இருக்கிறது வழி?

பசியின்றி தாகமின்றி நீயிருக்கலாம்

தவிப்பது நான்

 இது என் பலிச்சாதம்

  

தாஸ்தாவெஸ்கியின் நாயகர்களைப் போல நரம்பதிரும் இளைஞன் ஜெயமோகன் கதைகளில் நாம் எப்போதும் காண்பவன். 'உடம்பு உச்ச அழுத்த நீர் ஓடும் ரப்பர்குழாய்போல எந்நேரமும் அதிர்ந்ததுஎன எழுதுகிறார். ‘புறப்பா’டில் எருமைகள் வெட்டப்படும்போதுவிரஜர்களின் இசையைக் கேட்கும்போது என நான்கைந்து தருணங்களிலாவது அவர் இத்தகைய உச்ச அதிர்வுகளை எதிர்கொள்கிறார். ஜெயமோகன் அடிப்படையில் ஒரு சந்நதம் கொண்டாடி. ‘விஷ்ணுபுரம்’ தொடங்கி
‘வெண்முரசு’ வரை சந்நதம் வராத படைப்புகளே இல்லை. எழுத்தின் விசையேகூட அதிலிருந்துதான் பெருகிறாரோ எனத் தோன்றுவதுண்டு. ராதாகிருஷ்ணனின் மரணத்திலிருந்து மீள்வதற்குக்கூட தாள்களில் எதையோ எழுதி வீசியபடி இருக்கிறார். “சாமி இது மகாகாலமுல்லா
குறையாத குடுவையிலே இருந்து நிறையாத குடுவைக்கு சத்தமில்லாம போய்ட்டே இருக்கு… லிங்கத்துக்கு அதுல்ல அபிஷேகம்அவன் காலாதீத மகாகாலனல்லோ…” என ஒரு வரி வருகிறது. காலத்தின் முடிவின்மையை உணர்வதன் வழி மரணத்தைக் கடக்கிறார்.

 

'பாம்பணை', ‘விஷ்ணுபுரம்’‘ஏழாம் உலகம்’ என இரண்டு நாவல்களுக்கான கருக்கள் விழுந்த அத்தியாயம். ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இரவு தங்கும்போது இருளுக்குள் ஒரு கிழவரின் குரல் கேட்கிறது. “கர்ப்பகிருஹம்னா என்னடேஅம்மைவயிறாக்கும். அங்கிணயாக்கும் ஆதிகேசவன் கெடக்குறது… அவனுக்க அந்த கெடப்பாக்கும் இந்த யுகம். ஒரு யுகம் தாண்டினாக்க அவன் அப்டியே திரிஞ்சு கெடப்பான்… கேட்டீராவே?... ஆதிகேசவன் கெடக்கப்பட்டது மூணடுக்கா மடங்கின காலத்திலயாக்கும். காலரூபனாக்கும் ஆதிசேஷன்…” விஷ்ணுபுரத்திற்கான விதை விழுந்த தருணம். இதே அத்தியாயத்தின் இறுதியில் படுக்க இடமின்றி தவிக்கும்போது இடமளிக்கும் பிச்சைக்காரர்கள் வரும்பகுதி 'ஏழாம் உலகம்நாவலுக்கான விதை விழுந்த தருணம். கால்நீட்டிப் படுக்க இடமின்றி மனிதர்கள் தவிக்கும்போது ஆதிகேசவன் அனந்த சயனத்தில் - முடிவற்ற காலத்தில் தலைக்குக் கைவைத்து உறங்குகிறான். காலத்தின் முடிவின்மையைக் கண்டுகொள்ளும் சென்ற அத்தியாயத்தின் தொடர்ச்சி எனும் வகையில் இவ்வத்தியாயமும் அமைகிறது. காலத்தால் உண்ணப்படாமல்காலத்தின்மீது கிடந்து உறங்குவது என்பது பெரும் கனவு. மனிதர்களை இயக்கும் அடிப்படைக் கனவு. காலத்தில் படுத்துறங்க ஜெயமோகனுக்கு எழுத்துதான் கருவி.

 

'இரும்பின் வழிரயில் பயண அனுபவம். வெளியேறிய பிறகு நெகிழ்வற்ற, கறாரானதிடமான ஆதரவை மனம் நாடுகிறது. ரயிலை கறாரான ஒரு அப்பா அல்லது தலைமையாசிரியராக உணர்கிறார். இரும்பின் வழி என்பது புரட்சியின் வழி. நெகிழ்வற்றது. ஜெயமோகன் லோனாவாலாவில் தன்னை கூலியாக அல்ல, பெரும் புரட்சியாளனாகமீட்பராக கற்பனை செய்கிறார். அந்தக் கனவு உடைபடும் இடமிது.

 

“வாழைக்கொலையை மணிப்பொச்சம் கயிறு போட்டு கட்டுறமில்லாலேஅதமாதிரி ரயில் பாதையைப் போட்டு வெள்ளைக்காரன் இந்தியாவை ஒண்ணாக் கட்டினான்” என்றொரு வரி வரும். இது ஓர் உதாரணம். தொடர்ந்து ஜெயமோகனின் புனைவுலகிலும் ‘புறப்பா’டிலும் சாமானியரின் நுண்ணறிவு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆதிகேசவனின் தத்துவத்தைச் சொல்பவர் முகமற்ற ஒரு கிழவர்தான். சாமானியர்கள் எப்போதும் அபாரமான உவமைகளைக் கண்டடைபவர்களாகவும் வருகிறார்கள். நாகமணி, “பாலு பசுவுக்க கண்ணீராக்கும்” என்கிறான். எழுத்தாளரின் கற்பனை என்பதைவிட அவரது அவதானிப்புத் திறனுக்கு இது சான்று என்றே எண்ணுகிறேன். ஜெயமோகனின் மொழியில் உள்ள தனித்தன்மைகளில் ஒன்று அவர் கண்டடையும் அபாரமான உவமைகள். ரயில் கடந்து செல்வதைப்பற்றி எழுதும்போது, ‘ஒரு பெரிய மிருகம் நின்று மலம் கழித்துவிட்டுச் செல்வதுபோல் அதன் பின்பக்கம் மறைந்தது’ என எழுதுகிறார். வீடு திரும்பவேண்டிய சூழலைப்பற்றி எழுதும்போது, ‘தீபாவளிக்குப் பட்டாசுச் சத்தம் கேட்டு ஓடிப்போன நாய் நாலைந்துநாள் பட்டினிக்குப்பின் திரும்பி வருவதுபோல போய் வீட்டுமுன் நிற்கவேண்டும்’ என எழுதுகிறார். செம்மண் தேறிக் காட்டில் பனைகளைக் காணும்போது, ‘பல்லாயிரக்கணக்கில் நின்ற பனைமரங்கள் தலைவாரி சீவப்படாத கிறுக்குப்பெண்கள் போல நின்றன.’ புதுமையானநினைவில் நிற்கும் இயற்கைச் சித்தரிப்புகள் அவரது மற்றொரு முக்கியமான பலம். ‘மரவள்ளிச்செடிகள் காலையில் சின்னப்பிள்ளைகள் போல புத்துணர்ச்சியுடன் இருப்பவை. மிட்டாய்க்காக நீட்டப்பட்ட பல்லாயிரம் குழந்தைக்கரங்கள் போல இலைகள்.’ ‘புரம்’ பகுதியில் கன்னிமரா நூலகத்தைப்பற்றி, ‘புத்தகங்களுக்கான அரசு மருத்துவமனை அது என்று பின்பு புன்னகையுடன் நினைத்துக்கொண்டேன்.’ என எழுதுகிறார்.

 

‘எண்ணப் பெருகுவது’, ‘நீர்கங்கை’ ஆகிய அத்தியாயங்கள் பம்பாயைக் களமாகக் கொண்டவை. நாஞ்சில் நாடனின் ‘எட்டுதிக்கும் மதயானை’‘மிதவை’யை நினைவுறுத்தும் களம். சாப்பாட்டுக்கும் மலம் கழிக்கவுமான அலைச்சலைச் சொல்பவை. ‘நீர்கங்கை’யில் வரும் ராவின் சித்திரம் நாஞ்சிலின் கதையுலகத்தவர். 'எண்ணப் பெருகுவதுமரியா எனும் ஆங்கிலோ இந்தியப்பெண் காதலுக்கான சமிக்ஞையுடன் காத்திருக்கும் சித்திரத்தைச் சொல்கிறது. ஆனால் ஜெயமோகன் அந்த சமிக்ஞையைப் பொருட்படுத்தாமல் தனது அடுத்த பயணத்தைத் தொடர்கிறார். ‘இந்த நகரில் அபூர்வமானஅருமையான எவற்றுக்காவது யாராவது காத்திருக்கிறார்களா என்ன? எனக் கேட்கிறார். மரியா ஜெயமோகனுக்காகக் காத்திருக்கிறார். ஆனால் எத்தனை காலம்காத்திருப்பு என்பது இன்னும் நம்பிக்கை எஞ்சியிருப்பதற்கான அடையாளம். தொடர்ந்து பயணிப்பதே துறவின் வழி. அதையே ஜெயமோகன் இயல்பாகத் தேர்ந்தெடுத்தார். 'எண்ணப் பெருகுவதுகாதல் மட்டுமல்ல. இந்த அத்தியாயத்தின் உச்சமான பகுதியென்பது ரயில் நிலையத்தில் காத்திருக்கும் ஒருவன் பாய்ந்து உயிரைவிட்ட பிறகு அடுத்தவன் ஜெயமோகனைத் திரும்பிக் காணும் தருணம். மரணமடைந்தவனைக் காணாமல் அடுத்து அமர்ந்திருப்பவனை ஏன் கண்டான்தெரியவில்லை. நீ எப்போது எனும் வினவலாஅடுத்து நீதானே எனும் கேள்வியா?

 

'நீர்கங்கைராவ் தூய்மையானவர். நேர்த்திக்கு பேர்போனவர். ஆனால் அவர் வீட்டுச்சுவரில் மலம் ஒழுகுகிறது. கடும் வீச்சமெடுக்கிறது. அத்வைதியான பெரியப்பாவும் பாட்டியும் உரையாடும் பகுதியொன்று இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் வருகிறது. அத்வைதியான பெரியப்பாவிடம் பாட்டி சொல்வார், “டேய் பரப்பிரம்மரூபமா இருக்கக்கூடிய எதுக்கும் அன்னமும் மலமும் ஒண்ணுதான். தீய விட்டா ரெண்டையும் கொளுத்திச் சாம்பலாக்கும். ரெண்டும் விபூதியாயிரும். ரெண்டையும் நுள்ளி நெத்தியிலே போடலாம்… பரப்பிரம்மமா நிண்ணு எரியுற வரைக்கும் அன்னத்தத் தின்னுற ஜீவி மலத்தத் தின்ன முடியாது” அத்வைத நிலைக்கும் உலக வாழ்க்கையின் இன்னல் நிலைக்கும் இடையிலான முரண் ஒரு விவாதப்பொருளாகத் தொடர்ந்து வருகிறது. ராவ் சாக்கடையைக்கூட கங்கையாகக் காண்கிறார்.

 

“மா கங்கா… அவள் எல்லாவற்றையும் சுத்தமாக்கக்கூடியவள்” என்றார் ராவ்.

 

“இந்தச்சாக்கடையா கங்கை?

 

“நண்பா எல்லா நீருமே கங்கைதான் என்பார் என் அப்பா. அவர் பெரிய கவிஞர். துளு மொழியில் செய்யுள்கள் எழுதக்கூடியவர். கன்னட ஆசிரியராக இருந்தார்.” ராவ் சொன்னார், “மண் என்பதுதான் உடல். நீரோட்டம் அதன் ஆன்மா… நீர் மண்ணைச் சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கிறது.”

 

‘நீர்கங்கை’யில் சாக்கடை கங்கையாகிறது என்றால் ‘மதுர’த்தில் கங்கை சாக்கடையாகத் தெரிகிறது. ராவ் ‘நீர்கங்கை’ அத்தியாயத்தில் உடலை மண் என்கிறார். அதன் அழுக்கை ஏந்தித் தூய்மையாக்கும் நீரோட்டம் ஆன்மாவாகிறது. ரயிலில் பயணிக்கும் ராதேஷ்யாம் மார்க்கத்து விரஜரும் அதையே வேறு வகையில் சொல்கிறார்.

 

“தட்டுலே பாயாசம் வெச்சு சாப்பிடு கிருஷ்ணா… தட்டு இல்லேண்ணா பாயசம் ஓடிரும். பாயாசமில்லாத வெறும் தட்டு உதவாது…” கிழவரைச் சுட்டிக்காட்டி, “குரு சொல்வார்… தட்டைத் திங்காதே. தட்டைப் பழிக்கவும் செய்யாதே… கிருஷ்ணமதுரம் வெள்ளித்தட்டிலேதானே இருக்கணும்?

 

தட்டை இகவாழ்வென்றும் இவ்வுடல் என்றும் எப்படியும் எடுத்துக்கொள்ளலாம். பரவாழ்வின் கனவற்ற இகவாழ்வுக்குப் பொருளில்லை. இகவாழ்வை மறுத்தால் பரவாழ்வைச் சுவைக்க முடியாது. பாதிரியராகச் செல்லவிருந்த அருள் தொடங்கி ராவ் வரை உடல் - ஆன்மாஇக - பர ஒருங்கிணைப்பைப் பேசுவதைக் காணமுடிகிறது. ஜெயமோகன் நித்யாவை தனக்கான குருவாகக் கண்டடைததற்கு முக்கியக் காரணம் அவரும் இரண்டையும் மறுக்காதஒருங்கிணைப்பின் பாதையை தனது மெய்யியலாகக் கொண்டவர் என்பதுதான். அதுவரையிலான அத்தனை அழுத்தங்களும் மறைந்து, ‘நினைவுகள் இனித்தன. இருத்தலே இனித்தது. மரப்பெஞ்சுகள்குளிர்ந்த இரும்புச்சுவர்கள்இரும்பின் சீரான தாளம் அனைத்தும் இனித்தன.’ என இனிமையில் லயிக்கிறார். ‘வெண்முர’சில் நீலத்துக்கான ஊக்கம் இந்த அத்தியாயத்திலிருந்தே பெற்றிருக்கலாம்‌.

 

‘சண்டாளிகை’யில் வரும் யோனி வழிபாடு சடங்கு ‘இரவு’ நாவலுக்கான விதையாக இருக்கலாம். சண்டி பிரம்மா, விஷ்ணு, சிவனின் காமத்தை அழித்தவள். அவர்களைப் பிறப்பித்தவளும்கூட. பிழைப்புக்காக ஆத்மார்த்தமாக அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறாள். அவளுக்கும் கேசவேட்டனுக்கும் உண்டான உறவு சுவாரசியமானது. ஊருக்கெல்லாம் அவள் தேவியாக இருக்கும்போது பக்தராக இருப்பார் கேசவன். பிற சமயங்களில் இந்த உறவுநிலை மாறிவிடும். தான் அன்னையாகாதவரை அகிலத்தை சிருஷ்டித்த அன்னை என எண்ணிக்கொள்வதில் அவளுக்குச் சிக்கலில்லை. ஆனால் கருவுற்ற செய்தி வந்ததுமே அவள் அக்குழந்தையின் அன்னையாகச் சுருங்கிக்கொள்கிறாள். 'காலரூபம்ஜெயமோகனின் ஹரித்வார் வாழ்க்கையின் தொடர்ச்சி. எருமையைக் காலனின் வாகனமாக, காலத்தின் வடிவமாகக் காண்கிறார். வீட்டில் வளர்த்த எருமைக்குக்கூட காளி என்றே பெயர். ஆறு வருடங்களுக்கு ஒருமுறை நிகழும் எருமை பலியின் அனுபவம்தான் இந்தப் பகுதி. கேசவன், “காலமும் மரணமும் ஒன்றுதான்” எனச் சொல்கிறார். அவரைக் கொடுமை செய்த பீகாரியின் விவரிப்பும் எருமையை நினைவுபடுத்துகிறது. காலம் தன்னை பலிகொள்வதற்கு முன் தான் அதை பலிகொள்கிறேன் என அறைகூவலாகவே கேசவன் அளிக்கும் எருமை பலியைப் புரிந்துகொண்டேன். காலம் சர்ப்பமாகவும் எருமையாகவும் வருகிறது.

 

'உப்புநீரின் வடிவிலே‘புறப்பா’டில் பலருக்கும் பிடித்த பகுதி. முக்கியக் காரணம் இந்த அத்தியாயத்தின் அனுபவத்துடன் அனைவராலும் தொடர்புறுத்திக்கொள்ள முடிவதுதான். நினைவேக்கத்தன்மையின் இனிமையும் உண்டு. பாவண்ணன் படைப்புலகை ஒத்ததாக இருந்தது என எண்ணிக்கொண்டேன். இப்படி ஓயாது இசை கேட்கும் கேட்கீப்பரின் கதையை அவர் எழுதியிருப்பார். இந்த அத்தியாயமும் சரி அருண்மொழிநங்கையின் ‘பனி உருகுவதில்லை’யில் வரும் இசை பற்றிய பகுதிகளும் சரி எனக்கு ஒன்றை உணர்த்தின. முப்பதாண்டுகளுக்கு முன்புவரைகூட இசை எனும் அனுபவம் எத்தனை அரிதாக இருந்தது என்பது ஆச்சரியமாக இருத்தது. அரிதாக இருந்ததாலேயே பெரும் ஆறுதலாகவும் இருந்தது. இசை அத்தனை துயரத்தையும் உப்புநீராகக் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. ‘இந்தவாழ்க்கைஇதன் சேறும் அழுக்கும் குப்பையும் கூளமுமாகக்கூடமகத்தானதுதான் என்று அவை சொல்கின்றனவா என்ன?

 

இதற்குப் பின்பான அடுத்த ஐந்து அத்தியாயங்களும் சென்னையில் அச்சக வாழ்வைச் சொல்பவை. சைவ நூல்களை மெய்ப்பு நோக்கத் தொடங்கி, புதிய நூல்களை இட்டுக்கட்டி எழுதுவது எனச் செல்கிறது வாழ்க்கை. மற்றொரு அச்சகத்தில் பாலியல் கதைகளை எழுதுகிறார். 'புரம்பகுதியில் வெறுமையில் உழன்று கடலில் மூழ்கித் தற்கொலைக்கு முயல்கிறார். 'காற்றில் நடப்பவர்கள்நரிக்குறவர்களின் வாழ்வைச் சொல்கிறது. நாடோடிகளான அவர்களுக்கு அறம்பிறழ அத்தனை வாய்ப்புகள் இருந்தும் அவர்கள் அப்பாதையைத் தவிர்க்கிறார்கள். அந்தத் திண்மையை அவர்களிடமிருந்தே கற்கிறார். சென்னை பகுதிகள் முழுமையும் நுட்பமான ஆளுமைச் சித்திரங்களை கொண்டவை. சிவகுருநாதபிள்ளைமாரியம்மாள்சரஸ்வதி அக்கா எனப் பலரும் துல்லியமாக மனதில் உருக்கொள்கிறார்கள். பாலியல் கதையொன்றை மெரீனா பிரஸ்சுக்கு எழுதி அளிக்கிறார். அவர் இலக்கியப் பரிச்சயமுடையவர் என அறிந்த உடனேயே நாணம் வந்துவிடுகிறது. பொறனி பேசும் மாரியம்மாளின் பாத்திரம் ரணத்தால் பிறருக்கு ரணத்தை உண்டாக்குபவளாக வருகிறாள். அவளைக் காயப்படுத்த முயன்று ஓரளவு வெற்றியும் பெறுகிறார். பெண்களின் உலகத்தில் நின்று அவர்களது மீமொழிகளைக் கேட்டு திகைப்பதும் உளத்தை நுட்பமாகப் பதிவு செய்வதும் சிறப்பாக வந்துள்ள பகுதிகள் எனச் சொல்லலாம்.

 

‘நுதல்விழி’யும் அதற்கடுத்த அத்தியாயமான 'ஜோதியும்இந்நூலின் ஆன்மிகச் சிகரங்கள். ஜெயமோகன் அடித்துவிட்ட குண்டலினி நூலை நிஜமென நம்பி அவரைக் காண வருகிறார் அருளப்பசாமி. ஏமாற்றுப் பேர்வழி என நினைப்பவர் உண்மையில் அவரது திறனைக் கண்டு குழம்புகிறார். எதன்மீதும் எந்தப் புகாரும் அற்றஅகந்தையற்றஎவ்விதத்திலும் பிற உயிர்களிடமிருந்து தன்னை தனித்துக் காட்டிக்கொள்ள விழையாத வெள்ளை மனிதராக வருகிறார் அருளப்பசாமி. குழந்தையின் அறியும் ஆர்வத்துடன் உலகத்தின் எல்லா இயக்கங்களையும் கவனிக்கிறார். எந்தத் திட்டமும் இல்லை. பட்டினியிருக்க நேரவில்லை. அவருக்கு இந்த உலகத்தில் கிடைக்காதது என எதுவும் இருக்கமுடியுமா என யோசிக்கிறார். சாமானிய மனிதர்களும் பிராணிகளும் அவரை எளிதில் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். எதையும் பொருட்படுத்தாதஎதன்மீதும் பற்றில்லாத பெரும் பயணி. அவருடன் நடந்தே வடலூர் வந்தடைகிறார். கருவறைக்குள் அல்ல அவர் ஜோதியைக் காண்பது அடுப்படியில் உள்ள அணையா நெருப்பில்‌. வீடு திரும்பும் துணிவை அருளப்பர் அவருக்கு வழங்கியிருக்க வேண்டும். விட்டு விலக முயல்வதென்பது அதன்மீது பிடிப்பும் அச்சமும் உள்ளதன் விளைவுதான். இயல்பாக தாமரையிலை தண்ணீர்போல இருக்கமுடியும் என்பதை உணர்ந்து ஊர் திரும்புகிறார். 'பின் நின்றவர்இந்த ஒட்டுமொத்த பயணத்தையுமே தலைகீழாகப் பகடி செய்யும் அத்தியாயம். தன்னிலிருந்து தன்னை பீடித்த ஒன்றாகதனித்த ஆளுமை கொண்டதாகஆட்டுவிப்பதாகக் கட்டமைக்கிறார். ‘பின்தொடரும் நிழலின் குர’லில் வரும் அபத்த நாடகம்‘இன்றைய காந்தி’ எழுதப்பட்ட பிறகு எழுதிய ‘வெற்றிகரமாகச் சுடப்பட்டு இறப்பதெப்படி?’ கட்டுரைமுதற்கனலில் சூதர் பாடும் பீஷ்மர் காதை என பல உதாரணங்களைச் சொல்லலாம். இந்தத் தலைகீழாக்கம் வழியாக உணர்வுரீதியான பிணைப்பை முறித்துக்கொள்கிறார் எனத் தோன்றுவதுண்டு. தீவிர இலக்கிய மற்றும் தத்துவ நூல்கள் காலம் கடந்து நிற்பது சரி. ஆனால் ‘விஷ்ணுபுர’த்தில் சுமத்திரனின் பிரஹஸன நகைச்சுவை நூலும் நிலைபெறுவதான ஒரு சித்திரம் வரும். இத்தகைய அத்தியாயங்களை அந்த நோக்கிலேயே காணவேண்டும்.

 

ஜெயமோகன், சுனில் கிருஷ்ணன், சௌந்தர் 

4

 

இறுதி அத்தியாயமான 'கூடுதிர்வுவீடு திரும்புதலுடன் முடிகிறது. தந்தைக்கும் அவருக்குமான உறவு பேசப்படுகிறது. அன்பை பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட முறையில் வெளிப்படுத்தத் தெரியாத தந்தையர். தங்கப்பனின் மனப்போராட்டம் எனக்கு ஆனந்த் குமாரின் ஒரு கவிதையை நினைவுபடுத்தியது.

 

குழந்தை

எப்போது

என் குழந்தை?


ஒரு குழந்தையை

கையிலெடுக்கையில்

அது என் குழந்தை.

 

வளர்ந்த குழந்தையை

அணைக்கும்போதெல்லாம்

என் குழந்தை

 

விலகும் குழந்தையை

நினைக்க நினைக்க

என் குழந்தை

என் குழந்தை.

 

தங்கப்பன் நாயரும் விலகிச்செல்லும் தோறும் தன் குழந்தை என படபடப்புடன் உணர்ந்திருப்பார். கூடடைதல் என வைத்திருக்கவேண்டிய அத்தியாயத்திற்கு கூடுதிர்வு எனப் பெயரிட்டிருக்கார். கூடு அவருக்கு இனி தேவைப்படாது எனும் பொருளில்‌. உலகை அறியப் புறப்பட்டவரின் கால் ஓரிடத்தில் ஒருபோதும் தங்காது.

 

'முகங்களின் தேசம்முன்னுரையில், ‘நான் இந்தியாவை சக்தியாகஅன்னையாக எண்ணும் மனநிலையை என் மதமாகக் கொண்டவன். நான் வணங்கும் நல்லாசிரியர்கள் அனைவருமே இந்த மண்ணை வழிபட்டுஇதில் அலைந்து திரிந்து தங்கள் மெய்மையைக் கண்டடைந்தவர்களே. எனக்கு எந்த ஐயமும் இல்லை. இது ஞானபூமிதான். மாபெரும் தவம் நிகழ்ந்த மண் என்பதனால் இதன் ஒவ்வொரு மலையும் ஆறும் ஏரியும் சமவெளியும் ஊரும் எனக்குப் புனிதமானதே. இதிலிருந்து நானும் என் ஞானத்தை அடைந்திருக்கிறேன் என்று சொல்ல எந்தத் தயக்கமும் எனக்கில்லை. வைக்கம் முகமது பஷீரும்தாராசங்கர் பானர்ஜியும்சிவராமகாரந்தும் அடைந்த மெய்மை. ஞானத்தின் முடிவின்மை என பாரதப்பெருநிலத்தை மீண்டும் மீண்டும் கண்டடைந்தபடியே இருக்கிறேன்.’ ‘புறப்பாடு’ம் இதே அறிதல்களை சாரமாகக் கொண்டது.

 

ஜெயமோகன் எதைக் கடந்தார்எதை அடைந்தார்? எழுத்தாளர் சுசித்ரா 'ஏழாம் உலகம்' நாவல் பற்றிய கட்டுரையை வாசிக்கும்போது ஒரு திறப்பு கிட்டியது. வீட்டில் கோபப்பட்டு வெளியேறியவர் அருளப்பசாமியெனும் மகத்தான கனிவை அறிந்து திரும்பி வருகிறார். மிக சொற்பமான பணக்கையிருப்புடன் சுற்றித் திரிகிறார். ஆனால் ஒருவேளையேனும் பட்டினி கிடந்தார் என்றில்லை. சுணங்கி உறங்குபவரை எழுப்பி கனிவு கொண்ட கரங்கள் அவருக்கு அன்னத்தை ஊட்டியபடியேதான் உள்ளன. வாழ்வை முடித்துக்கொள்ள முற்படுகையில் மகத்தான சூரியோதயத்தைக் காண்கிறார். ஏதேனும் ஒன்றை திட்டவட்டமாகக் கடந்தார் எனச் சொல்லமுடியும் என்றால் அது 'அருவருப்புஎனுமுணர்வை எனச் சொல்லலாம். நாம் வாழும் பண்பாடே அழகையும் அருவருப்பையும் முடிவு செய்கிறது. நாம் பெற்ற விழுமியங்களைக் கொண்டே நமக்கு வெளியே உள்ளவற்றை மதிப்பிடுகிறோம். அவை நம் பண்பாட்டுச் சூழல் நமக்களித்தவை. சாதியும் குடும்பமும் அளித்தது என்பதை நாம் உணர்வதில்லை. பெரும்பாலும் அவ்வெல்லையைக் கடந்து பயணப்பட வெகுசிலருக்கே சாத்தியமாகியுள்ளது. அதற்கு மனம் திறந்துகொள்ள வேண்டும். வசதி வட்டத்திற்கு வெளியே நம்மை நிறுத்திக்கொள்ள வேண்டும். தன்னைப் பிறரில் காணவேண்டும். அருவருப்பைக் கடந்தவர்களுக்கு அந்நியன் என எவருமில்லை. எனக்குத் தெரிந்து நாஞ்சில் நாடனிடமும்அ. முத்துலிங்கத்திடமும் நான் அத்தகைய அசூயையற்றமதிப்பீடுகள் அற்ற ஏற்பை உணர்ந்துள்ளேன். எப்போதும் விரித்த கரத்துடன் வாழ்வைஉலகைத் தழுவக் காத்திருப்பவர்கள்.

 

இன்னும் சற்று யோசித்துப் பார்த்தால்அருவருப்பு ஒரு நவீனத்துவ இயல்பும்கூட. இருத்தலியலுடன் நெருக்கமாகத் தொடர்புடையது. இருத்தலியல் நிறைவின்மையை உணர்வதிலிருந்து பிறப்பெடுக்கிறது. ஒரு லட்சிய மனிதனைக் கற்பிதம் செய்கிறது. முழுமையின்மை ஒரு குறை அல்லது பிழை. ஒருபோதும் அடையமுடியாத முழுமையின் காரணமான விரக்தி அவர்களை ஆட்கொள்கிறது. ‘நீர்கங்கை’‘மதுரம்’ ஆகிய அத்தியாயங்களை வாசிக்கும்போது அருவருப்பைமுழுமையின்மையை அவர் காணும் பார்வையை அவை மாற்றியமைப்பதை உணரமுடிகிறது. ஜெயமோகனின் 'பிழைகதை ஒரு மிகச்சிறந்த உதாரணம். நமது திட்டமிடலுக்கும் அப்பாலான பிழை என்பது நவீனத்துவர்களுக்கும் இருத்தலியல்வாதிகளுக்கும் அழுத்தத்தை அளிக்கக்கூடியது. ஆனால் அதை கடவுளின் இருப்பாக உணர்வதன் வழி, வாழ்வை வாதையாகக் காணும் உணர்விலிருந்து விடுபடுகிறார். ஒருவகையில் இது இந்திய வேதாந்த மரபின் தொடர்ச்சி. இறைவனுக்கு தன்னை முழுதளித்தல் என்பது தடையற்று அவருடைய திட்டத்தில் உள்ளவற்றை முழுமையாக ஏற்பதுதான். நவீன இலக்கியத்தின் மிக முக்கியமான இலக்கணம் என்பது விமர்சனம்தான். விமர்சனமும் ஏற்பும் இரு எதிரெதிர் நுனிகளாகத் தென்படலாம். ஆனால் இறைவனுக்குத் தன்னை முழுதளிக்கும் பாடல்களைப் பாடிய மீராவும்கபீரும்அக்கம்மாவும்இன்னும் பல சித்தர்களும் ஒரே நேரத்தில் இவ்விரு எல்லைகளிலும் செயல்பட்டுள்ளனர். முழுதாக ஏற்றல் என்பது மானுட யத்தனத்தைக் கைவிடுவதல்ல, மானுட யத்தனங்களின் பயனின்மையில் உழன்று சோர்வடையாமல் இயங்குவது எனும் தளத்திலேயே இயங்குகிறது. இதுவே கீதையின் செய்தியும்கூட. ஜெயமோகன் மரபின் துணைகொண்டு இருத்தலியலின் இருளைக் கடக்கிறார். நவீன இலக்கியத்தின் பார்வையில் மரபை மறுக்கவும்விமர்சிக்கவும்மறுகட்டமைப்பு செய்யவும் முயல்கிறார். இவ்விரு கூறுகளையும் அனுமதிக்கும் மெய்யியலாக அவரது அத்வைத வேதாந்தம் அமைகிறது. அருவருப்பைக் கடப்பது என்பது அதன் தீவிர வடிவில் அழகியல் உணர்வை மறுப்பதாகவும் ஆகிவிடும் வாய்ப்புண்டு. கலைஞனுக்கு உரிய அழகியல் உணர்வைத் தக்கவைத்தபடி அருவருப்பைக் கடப்பதே பெரும் சவால். ‘நீர்கங்கை’யும், ‘மதுர’மும் அவ்வகையில் ‘புறப்பா’டின் சாரமான பகுதிகள் என நம்புகிறேன். தனிப்பட்ட உறவுகள் தொடங்கி எல்லா தளங்களிலிருந்தும் அருவருப்பை நீக்கும் பயணமாகவே ‘புறப்பா’டைக் காண்கிறேன். இது அவரது படைப்புகளிலும்அவரது ஆன்மிகப் பயணத்திலும் மிக முக்கியமான பங்களிப்பு ஆற்றியுள்ளது.

 

காந்தியின் தொடங்கிய கட்டுரையை  அவரில் நிறைவு செய்வதே முறை. 'ஆத்ம கதை' என்பதைத் தாண்டி காந்தியுடன் ஜெயமோகனுக்கு பல்வேறு உடன்படும் புள்ளிகள் உண்டு. முதலீயத்தின் உடைமை சேகரிப்புக்கும் பொதுவுடைமையின் உடைமை நிராகரிப்பிற்கும் இடையே காந்தி அறங்காவலர் முறை என ஒன்றை முன்வைத்தார். இங்கே ஒருவரின் பொருளீட்டும் தனித்திறனுக்கு மதிப்பு உண்டு. ஆனால் அந்த திறன் சமூக நன்மைக்காகவே அவனுக்கு இறைவனால் அளிக்கப்பட்டது எனும் நம்பிக்கையை முன்வைத்தார். ஜெயமோகன் அறிவுலக செயல்பாட்டிற்கும் இலக்கியத்திற்கும் இந்த அறங்காவலர் முறையை நீட்டிக்கிறார். இலக்கியத்தில் இயங்குபவர் அளிப்பதற்கென உள்ளவர், அங்கே பெற்றுக்கொள்ள ஏதுமில்லை,  ஒருவகையில் இதை அவரது வாழ்க்கை செய்தியாக நான் உணர்ந்திருக்கிறேன். நன்றி ஜெ.


‘புறப்பாடு’ ஒரு தொடக்கம்தான். இன்றுவரை ஓயாமல் புதியவற்றை நோக்கி புறப்பட்டுச் சென்றபடி இருக்கும் ஜெ.க்கு இன்னும் பல சாகசங்கள் வாய்க்கட்டும்.

Friday, May 6, 2022

கதைகளின் ஊடாக காந்தி- காந்தியைச் சுமப்பவர்கள் தொகுதியின் முன்னுரை



1

மனித சிந்தனைத் தொடர்ச்சி தொடக்க காலத்திலிருந்து இன்று வரை ஏற்பட்டுள்ள துன்பியல் காவியங்களில் எது மகத்தானது? இராமன் கதையா? தருமனா? ஈடிபஸ்ஸா? ஒதெல்லோவா, லியர் அரசனா, டாக்டர் ஃபாஸ்டஸ்ஸா? இல்லை, காந்தியல்லவா? களங்கம் நிறைந்த புறவாழ்க்கையை வெறுத்து ஒதுக்காமல் தன் வரையிலாவது சாதிக்க வேண்டும் என்று பரிசுத்தத்தையே நாடிச் சென்ற தீரன் காந்தி அல்லவா? - காந்தி, அசோகமித்திரன்.

ஒரு புனைவெழுத்தாளராக எனக்கு காந்தியின் மீதான ஈர்ப்புக்கு அவர் மகாத்மா, தேசத்தந்தை, சுதந்திர போராட்ட வீரர் அல்லது சீர்திருத்தவாதி போன்ற அடையாளங்கள் காரணமில்லை. இவையாவும் அவருடைய அடையாளங்கள் அல்ல என்பதல்ல. அவருடைய வரலாற்று பாத்திரமும் பங்களிப்பும் முக்கியமானது. இன்றளவும் நல்லவிதமாகவோ தீயவிதமாகவோ காந்தியின் செயல்களைப்பற்றி விவாதித்துக்கொண்டே இருக்கிறோம். அதன் பொருள் இன்றுவரை அவருடைய செயலுக்கான விளைவுகளை எதிர்கொண்டு வருகிறோம் என்பதுதான். காந்தியின் சமகாலத்தைச் சேர்ந்த பல இந்திய மற்றும் உலக தலைவர்கள் விடுதலைக்கும் சீர்திருத்தத்திற்கும் காந்தியைவிடவும் தீவிரமான சிறப்பான பங்களிப்புகளை ஆற்றியிருக்கக்கூடும். ஆனால் இன்றைய வாழ்வின் சிடுக்குகளுக்கு அவர்களிடம் எந்த விடையும் இல்லை. மதிப்புமிக்க நினைவுகளுக்கு அப்பால் அவர்களுடன் உரையாடவும் பெற்றுக்கொள்ளவும் எதுவும் இருப்பதில்லை. காந்தி அப்படி இல்லை.  காந்தி தன்னை ஒருவர் மகாத்மா என விளிக்கவில்லை என்று வஞ்சம் கொள்ளமாட்டார். சமதளத்தில் அவருடன் உரையாட முடியும். தந்தைகள் பொதுவாக வழிநடத்துவார்கள், கண்டிப்பார்கள். காந்தி இவற்றுக்கு அப்பால் முரண்படவும், விமர்சிக்கவும், மீறிச்செல்லவும் இயல்பாக இடமளிக்கும் அரிதினும் அரிய தந்தை. இதை எழுதும்போதே காந்தி அவருடைய அணுக்கர்களின் வாழ்வில் இதேயளவு நெகிழ்வுடன் நடந்துகொள்ளவில்லை எனும் முரண்பாடும் நினைவுக்கு வருகிறது. இதுதான் காந்தி. வேறு எவருடைய வாழ்விலும் இத்தனை வெளிப்படையாக தங்கள் வாழ்வின் உள் முரண்பாடுகள் பதிவாகவில்லை. விளைவாக கணக்கற்ற கதைச் சாத்தியங்களை காந்தியின் வாழ்வு எனக்கு அளிக்கிறதே என்பதே அவர் மீது எனக்கிருக்கும் முதன்மை வசீகரம். காந்தி ஒரு துன்பியல் காவியத்தின் நாயகன். இயேசுவைப் போல‌. இயேசு கிறிஸ்து ஒரு மதமாகவும் நிறுவனமாகவும் ஆகிவிட்டப்பின்னரும் கூட கலைஞர்களே அவரை மீட்டனர். தால்ஸ்தாய், தாஸ்தாயெவ்ஸ்கி, கசன்ஜாகிஸ், மிகைல் புல்ககோவ் தொடங்கி பால் சக்காரியா, ஃபிரான்சிஸ் கிருபா, ஜெயமோகன் வரை எழுத்தாளர்கள் கிறிஸ்துவை அமைப்பிலிருந்து மீட்டு அவருடன் உரையாடலை நிகழ்த்தியுள்ளார்கள். இயேசு தேவனாக அல்ல மானுடம் கண்ட மகத்தான துன்பியல் நாடகத்தின் முதன்மை நாயகனாக நிறுவப்படுகிறார். புத்தரை ஹெர்மன் ஹெஸ்ஸி மற்றும் விலாஸ் சாரங் போன்றோர் தங்கள் நாவல்களில் வனைந்தனர். புனித ஒளிவட்டங்களுக்கு அப்பால் மானுட நாடகத்தை எழுத்தாளர்கள் காண்கிறார்கள். இயேசுவும் புத்தரும் ஆழ்படிமங்களாகி விட்டார்கள். மனித பிரக்ஞையின் ஆழ்நிலைகளுக்குள் புகும் எதற்கும் அழிவில்லை. அவை மீண்டும் மீண்டும் கலையாக வெளிப்படும். 

காந்தியின் மரணத்தின் போது இந்தியா முழுக்க வன்முறை வெடிக்கவில்லை, ஆர்பாட்டமாக துக்கம் கொண்டாடவில்லை. அழுத்தமான மவுனம் ஒரு அலைபோல இந்தியா முழுவதும் பரவியது என்கிறார் ஆஷிஷ் நந்தி. எஸ். ராமகிருஷ்ணனின் 'காந்தியைச் சுமப்பவர்கள்' கதையில் காந்தியின் மரணத்துக்கு பின் அவருடைய அஸ்தி கலயத்தை நைல் நதியில் கரைக்கச் செல்கிறார்கள். அப்போது ஆப்பிரிக்கர்களுக்கும் இந்தியர்களுக்கும் நிகழும் உரையாடல் இது.

"விசித்திரமாக இருக்கிறது. இந்தியாவின் தந்தையை ஏன் ஒரு இந்தியன் கொல்ல வேண்டும்."

``அது தான் எங்களுக்கும் புரியவில்லை`` என்றார் கித்வானி

``பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டார். அவரைச் சுட்டுக் கொன்றவன் கூட அவரைக் கைகூப்பி வணங்கியபிறகே தனது துப்பாக்கியை உயர்த்தினான்``

``கொலைக்காரன் ஏன் அவரை வணங்கினான் ``எனக் குழப்பமான முகத்துடன் கேட்டான் ஒபாடே

``அவனுக்கும் அவர் தந்தை தானே`` என்று தணிவான குரலில் சொன்னார் சுக்லா

தந்தையைக் கொல்வது பெரும்பாவம். அது உங்கள் தேசத்தைச் சும்மாவிடாது

``காந்தியின் உடலை விடவும் அவரது அஸ்தியின் கனம் அதிகமாகயிருக்கும். காரணம் அது கோடான கோடி இந்தியர்களின் கண்ணீரையும் சேர்த்தது தானே ``என்றார் சுக்லா

சமூகமாக இந்தியா மொத்தமும் தந்தை கொலையில் மவுனமாக பங்கேற்றது, கோட்சே அவர்களின் கூட்டு அவாவின் உருவம் மட்டுமே என குற்றம் சாட்ட முடியும். தேவிபாரதியின் 'பிறகொரு இரவு' கதையும் காந்தியின் மரணத்திற்காக காந்தியின் அணுக்கர்கள் கூட காத்திருந்த சித்திரத்தை அளிக்கிறது. ஜி. நாகராஜனின் 'கிழவனின் வருகையில்' கிழவனை கொன்று கடந்து செல்ல வேண்டிய நிர்பந்தத்தை சொல்கிறார். காந்தி மரணத்தின் வழியாக இந்தியர்களின் பொதுமனத்தின் ஆழத்திற்குள் சென்றுவிட்டார். காந்தியின் மரணம் காந்தியின் வாழ்வை அசோகமித்திரன் சொல்வது போல் மாபெரும் துன்பியல் காவியமாக ஆக்குகிறது.  'என் வாழ்வே என் செய்தி' என சொன்னவர் காந்தி. காந்திய கதைகளை வாசிக்கும்போது அவருடைய வாழ்வைவிட அவர் மரணமே பெருஞ்செய்தியாக வளர்வதை உணர முடிகிறது. 

இத்தொகுதியில் உள்ள பதினைந்து கதைகளில், 'ஆடல்' 'நான்காம் தோட்டா' 'மரணத்தை கடத்தலும் ஆமோ' 'ஆரோகணம்' 'காந்தியைச் சுமப்பவர்கள்' 'கிழவனின் வருகை' 'பிறகொரு இரவு' என ஏழு கதைகள் நேரடியாகவே காந்தியின் மரணத்தை பேசுபவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொதுமனத்தின் ஆழத்தில் ஆறாக் காயமாக, சமன்படுத்த இயலாத பள்ளமாக காந்தியின் மரணம் திகழ்கிறது என்பதையே காட்டுகிறது. இது காலப்போக்கில் பெருகவே கூடும்.   

2

காந்தி 150 ஆம் ஆண்டை முன்னிட்டு பாரதிய வித்யா பவன் ஒவ்வொரு இந்திய மொழியிலும் காந்தி குறித்து ஒரு தொகைநூலை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டது. தமிழில் அதை தொகுக்கும் பணி எனக்கு கிட்டியது. சிறுகதைகள், நாவல் பகுதிகள், கவிதைகள், கட்டுரைகள், நினைவுக்குறிப்புகள் மற்றும் அஞ்சலிகள் என பல பகுதிகளை கொண்ட அறுநூற்றைம்பது பக்க தொகுப்பது. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது. காந்தி நூற்றாண்டை ஒட்டி கே.எஸ். ஜம்புநாதன் தொகுத்த 'காந்தி சிறுகதைகள்' தொகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆர். சூடாமணி மற்றும் பி.எஸ். ராமையாவின் கதைகளை அங்கிருந்தே எடுத்துக்கொண்டேன். இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள கதைகளைத்தவிர்த்து எஸ். ராமகிருஷ்ணனின் 'இரண்டு கிழவர்கள்' கலைச்செல்வியின் 'மிலியின் சகோதரன்' 'உதிர்ந்த இலை' 'முகத்துவார நதி' ஆகிய மூன்று கதைகள், ஜெயமோகனின்  'பின்தொடரும் நிழலின் குரல்' நாவலுக்குள் இடம்பெற்றுள்ள 'மெல்லிய நூல்' மற்றும் சுரேஷ் பிரதீப்பின் 'விடைபெறுதல்' ஆகியவை குறிப்பிடத்தக்க விடுபடல்கள் என சொல்லலாம். 

காந்திக்கும் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் அவர் வாழ்ந்த காலம் வரையும் பின்னரும் கூட நெருங்கிர தொடர்பு உண்டு. பால சுந்தரம் தில்லையாடி வள்ளியம்மாள் தொடங்கி தம்பி நாயுடு, வின்சென்ட் லாரன்ஸ் வரை பலர் தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு உறுதுணையாக இருந்தவர்கள். காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி ஆசிரமம் அமைக்கையில் அதன் தொடக்க குடியேறிகளில் ஏறத்தாழ பத்துக்கும் மேற்பட்டோர் தமிழர்கள். காந்தியின் சம்பந்தியும் சகாவுமான ராஜாஜி தொடங்கி டாக்டர். ராஜன், திரு.வி.க, ஏ.கே. செட்டியார் என பலர் காந்தியோடு தொடர்புடைய தமிழர்கள். காந்தி தமிழகத்திற்கு 1890 களிலேயே முதன்முறையாக வந்திருக்கிறார். எனினும் 1934-35 ஹரிஜன் யாத்திரையே காந்தி தமிழகத்தில் முழுமையாக மேற்கொண்ட பயணம். அப்பயணத்தின் சுவடுகளை கதைகளில் காண முடிகிறது. 'புதிய நந்தன்' 'பதச்சோறு' 'மரணத்தை கடத்தலும் ஆமோ' என மூன்று கதைகளில் அப்பயணத்தின் குறிப்புகள் கிடைக்கின்றன. தி.செ.சௌ. ராஜனின் நினைவுக்குறிப்பும் முக்கியமானது. 

காந்தியின் வாழ்க்கை கதை, மரணக்கதை என இத்தொகுதியின் கதைகளை பொதுவாக இரண்டாக வகுக்கலாம். புதிய நந்தன் வரையிலான முதல் எட்டுகதைகள் வாழ்க்கைக்கதைகள். கடைசி ஏழு கதைகள் மரணத்தை பேசுபொருளாக கொண்டவை. 'பதச்சோறு' 'ஆலமரத்தில் ஒரு பறவை' ஆகிய இரண்டும் தூய லட்சியவாத கதைகள் என சொல்லலாம். 'உள்ளும் புறமும்' 'காந்தியுடன் பேசுவேன்' ஆகிய கதைகள் லட்சியவாதத்தின் வீழ்ச்சியில் நின்றபடி காந்திர லட்சியவாதத்தை நோக்கும் கதை என சொல்லலாம். 'புதிய நந்தன்' லட்சியவாதத்தை அங்கீகரிக்கும் அதேவேளையில் அதன் பொருளின்மையையும் சுட்டுகிறது. 'பிறகொரு இரவு' காந்தியும் அவரது லட்சியவாதமும் அவர் கண் முன்னே காலாவதியாகும் துயரத்தை பேசுகிறது. 'கிழவனின் வருகை' அப்படி காலாவதியாவது உலக இயல்பு என வரையறை செய்கிறது.  'Ecce homo'( இவன் மனிதன்), 'நீரும் நெருப்பும்' ஆகிய இரண்டு கதைகளும் நேரடியாக காந்தியின் வாழ்க்கை சம்பவங்களில் இருந்து புனைவு தருணத்தை உருவாக்கி கதையாக்கியவை. 'மரணத்தை கடத்தல் ஆமோ' 'ஆடல்' 'கிழவனின் வருகை' 'ஆரோகணம்' 'பிறகொரு இரவு' ஆகிய அனைத்து கதைகளுமே கனவுத்தன்மையும் மிகுபுனைவுத்தன்மையும் கொண்டவை என வகைப்படுத்தலாம். 

பாவண்ணனின் 'ஆலமரத்தில் ஒரு பறவை' கதை ஒரு லட்சியவாதை கதை. காந்தியவாதியான தந்தை விசுவநாதனின் நினைவு குறிப்பை தொகுத்து அவரத மகன் நூலாக்குகிறார். அதில் சில பகுதிகளை சேர்க்கும் விதமாக தந்தையுடன் தொடர்பிலிருந்தவர்களை தேடி அவர்களுள் சிலருடனான உரையாடலை பதிவு செய்கிறார். காந்திய தொண்டரின் வாழ்வின் ஊடாக காந்தியை அவர் எப்படி உள்வாங்கியுள்ளார் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது. காந்தியுகத்து தொண்டர்கள் காந்தியிடமிருந்து லட்சியவாதத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் மொத்த வாழ்வையும் தகவமைக்கிறார்கள். காந்தி ஒரு 'ஆலமரம்' அங்கிருந்து தங்கள் வாழ்வை வளர்த்தாக்கொண்ட பறவைகள் தான் விஸ்வநாதனும் அவரது நண்பர்களும். காந்தி இக்கதையில் தொண்டர்களின் புகலிடமாக திகழும் ஒரு முன்மாதிரி தலைவராக சித்தரிக்கப்படுகிறார். பென்சிலினை பயன்படுத்த காந்தி மறுத்தபோது விஸ்வநாதன் நேருக்கு நேர் நின்று அதை கேள்வி கேட்கும் பகுதியை கதையின் சுவாரசியமான பகுதி எனச் சொல்லலாம். காந்திக்கும் அவர் தொண்டர்களுக்கும் இடையிலான உறவு இருபக்க உரையாடல்தன்மை கொண்டது.  'பாபுஜி. பென்சிலினோட வருகை மருத்துவ உலகத்துல மிகப்பெரிய புரட்சி. கிட்டத்தட்ட நம்ம அகிம்சைத் தத்துவத்தப்போல. அதை நிராகரிக்கறதுக்கு உங்களுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். அதுல உங்க பிடிவாதம்தான் வெளிப்படுதே தவிர தெளிவு இல்லைங்கறது என் எண்ணம். அகிம்சைய இன்று நாடெங்கும் நாம் வலியுறுத்தி பேசறோம். அது ஒரு சக்தியாகவே வளர்த்திருக்கோம். ஆனா வன்முறையே எனக்கு வழிமுறைன்னு உறுதியா நிக்கறவங்க யாரயும் நம்மால அணுக முடிஞ்சதில்ல. ராமநாமமே எனக்கு பென்சிலின்னு சொல்லறதுக்கும் வன்முறையே எனக்கு வழிமுறைன்னு சொல்லறதுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கறமாதிரி எனக்குத் தெரியலை' எனச் சொல்கிறார் விஸ்வநாதன். தலைவருக்கும் தொண்டருக்கும் இடையே புரிதலும் நன்னம்பிக்கை இருக்கும்போது பாதுகாப்பின்மை இருக்காது. அச்சமற்ற சூழலில்தான் துணிந்து இத்தகைய உரையாடலை நிகழ்ந்த முடியும். காந்தியிடம் அத்தகைய உரையாடல் சாத்தியப்பட்டது. 

மணிக்கொடி எழுத்தாளரான பி.எஸ். ராமையாவின் 'பதச்சோறும்' ஒரு லட்சியவாத கதை. கதை முடிவும் கற்பனாவாதத்தன்மை கொண்டதுதான். காந்தி வாழ்ந்த காலத்தில் எழுதப்பட்ட கதைகள் என புதுமைப்பித்தனின் கதையும் இவரது கதையையும் சொல்லலாம். கொள்கைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான முரணை தொட்டுக்காட்டி, கொள்கையின் வெற்றியை பறைசாற்றுகிறது. குமுதத்தின் நினைவுகளின் ஊடாக காந்தியுடனான அவளது சந்திப்பு உயிர்பெறுகிறது. ஹரிஜன் யாத்திரைக்கு வரும்போது காந்தியிடம் கையெழுத்து பெறச்சென்று நகைகளே அணிவதில்லை என அவருக்கு உறுதி அளிக்கிறாள் குமுதம். அந்த உறுதியை காப்பதற்காக தன் குடும்பத்தையே இழக்க தயாராக இருக்கிறாள். காந்தியை முதல்முறை, ஒரேயொரு முறை தான் குமுதம் சந்திக்கிறாள்‌. ஆனால் அது அவள் மொத்த வாழ்வையும் மாற்றுகிறது. அசல் வாழ்வில் ஒரே/முதல் சந்திப்பில் காந்தி பலருடைய வாழ்வை தலைக்கீழாக மாற்றிய வரலாறு மீண்டும் மீண்டும் பதிவாகிறது. அத்தருணத்தை படம்பிடித்து காட்டியவகையில் இக்கதை முக்கியமானது. காந்தி காந்தியாக, லட்சியவாதியாக சித்தரிக்கப்படும் கதை‌.    

சூடாமணியின் 'உள்ளும் புறமும்' காந்திக்கு பின்பான காலத்திலிருந்து காந்திய காலத்தை, அதன் லட்சியவாதத்தை ஏக்கத்துடன் அனுகும் லட்சியவாத பிரதி. இயல்பாக கால மாற்றத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியையும் காந்தி வெற்று அடையாளமாக மாறி நிற்கும் நிலையையும் சுட்டுகிறது.  'பதச்சோறு' கதையை விட நுட்பமான தளத்தில் நம்முடன் உரையாடுகிறது. அன்றைய யதார்த்தத்தையும் கொள்ள வேண்டிய லட்சியத்தையும் ஒருசேர நினைவூட்டுகிறது. காந்தி பெயரில் பெரும் கட்டிடங்களை எழுப்பும் ஒரு தொழிலதிபர், காந்தி பெயரில் புத்தகங்களை எழுதும் எழுத்தாளர் என இரண்டு நண்பர்கள், தங்களுடன் போராட்டத்தில் பங்குபெற்ற, ஆனால் புகழடையாத மூன்றாவது நண்பரை தேடிச்செல்கிறார்கள்.  நண்பர்கள் இருவரும் தத்தமது மனைவிமார்களை அழைத்துக்கொண்டு சந்திப்புக்கு வருகிறார்கள். அவர்களுடைய உரையாடலின் ஊடாக பரஸ்பரம் இருவரும் தங்களது போலித்தனங்களை அறிந்து, எடைபோடுகிறார்கள். காந்தியுடன் இருந்தவரெல்லாம் காந்தியவாதியா? காந்திய அடையாளங்களை பறைசாற்றுபவர் காந்தியவாதியா? மெய்யான காந்தியவாதி யார்? எனும் கேள்வியை கதை எழுப்புகிறது. காந்தி தனிமனிதர் எனும் நிலையிலிருந்து உள் முரண்களற்ற விழுமியத் தொகையின் பிரதிநிதியாக சாராம்சப்படுத்தப்படுகிறார். 

எஸ். ராமகிருஷ்ணனின் 'காந்தியோடு பேசுவேன்' கதையில்  கதைசொல்லி லட்சுமணனும் அவரது யூத மனைவி ராகேலும்  வார்தாவில் காந்தி வாழ்ந்த குடிலுக்குச் செல்லும் சித்திரத்துடன் தொடங்குகிறது. நினைவுகளின் ஊடாக லட்சுமணனின் தாய் காந்தியை அடைந்த கதையும் அவரது ஆசிரம வாழ்வும் சொல்லப்படுகிறது. லட்சுமணன், அவனது மனைவி ராகேல், அவனது அன்னை ஆகியோரின்  காந்தியை பற்றிய சிந்தனைகளும், நினைவுகளுமே கதையாகிறது. ராகேலின் பாத்திரம் வழி இந்திய பொதுமனம் மீதான அவதானிப்புகளை முன்வைக்கிறார். காந்தியை சுமக்க வேண்டியதில்லை அவருடன் ஆக்கப்பூர்வமாக உரையாட வேண்டும் என்பதே அவள் விடுக்கும் செய்தி. லட்சுமணன், ராகேல், அம்மா என மூவரும் தங்களது காந்தியை கண்டுகொள்கிறார்கள். 

லட்சுமணனின் தாய் காந்தியை காண வீட்டை விட்டு விலகிச் சென்றவர். காந்தியை ஒரு ஆணாக அவர் காண முடியவில்லை. ராகேல் காந்தியையும் புத்தரையும் எளிதில் வீழ்ந்துவிடாத வலுவுடைய பெண்களின் அகம் கொண்ட, தங்களைப் பெண்ணாக உணர்பவர்களாகவே காண்பதாகச் சொல்கிறாள். உண்ணாவிரதம் எனும் போராட்ட வடிவமே பெண்மை உருவாக்கிய எதிர்ப்பு வடிவம்தான் என்கிறாள். காந்தி பெண்களுடைய அகத்துடன் தனியாக ஒரு உரையாடலை நிகழ்த்திக்கொண்டுள்ளார். காந்தியின் மிக முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று பெண்களை அரசியல்மயப்படுத்தியது. ராகேலின் கோணத்தில் காந்தி எப்படி புலப்படுகிறார் என எஸ். ராமகிருஷ்ணன் எழுதுகிறார். 

"இந்திய பெண்கள் காந்தியை சமூகசேவகர் என்ற தளத்தில் புரிந்து கொள்ளவில்லை, பெரும்பான்மை மக்கள் சகலவிதமான அடிப்படை அறங்களையும் கைவிட்டு தீமையும் பொய்மையும் தனதாக்கி கொண்ட சூழலில் அறத்தின் பொருட்டு தன்னை ஒப்படைத்துக் கொண்டு  சுயபரிசோதனை கொண்ட வாழ்வை மேற்கொண்ட எளிய மனிதர் என்றே புரிந்து கொண்டிருக்கிறார்கள்."

அசோகமித்திரனின் 'காந்தி' ஒரு நனவோடைக்கதை. 'காந்தி' கதைசொல்லியின் சிந்தனைபெருக்கின் ஒரு பகுதி மட்டுமே. கசப்பை வழக்கமாக விரும்பி அருந்தும் கதைசொல்லிக்கு அன்று ருசிக்க முடியாத அளவிற்கு காபி புதிதாக கசந்தது. அது நண்பனின் மீதான, நட்பின் மீதான கசப்பு. சிம்னி விளக்கொளியில் தூரத்தில் ஓரு கணம் மின்னி மறையும் உன்னத பரிசுத்த கணத்தில் தன்வசமிழந்து கரையும் நண்பனுக்கு காந்தியை ஏன் பிடிக்கவில்லை எனும் கேள்வியே கதைசொல்லியை வாட்டுகிறது. அது கவிதை கணம், கவிஞனால் காந்தியை எப்படி வெறுக்க முடியும்? உறவின் விரிசலுக்கு கூட காந்திதான் காரணமோ என சந்தேகிக்கிறான். மனிதர்களுக்குள் உள்ள உள்முரண்களை பற்றிய விசாரனை இயல்பாக காந்தியை அடைகிறது. கதையில் உள்முரண்களின் உருவமாக காந்தி உருவெடுக்கிறார். நண்பனின் தர்க்கப்பூர்வமான எதிர்வாதங்களுக்கு முழு சித்திரத்தை பார்க்க மறுக்கிறாய் எனும் பலவீனமான, ஆனால் ஆத்மார்த்தமான பதிலைத்தவிர வேறு எதை சொல்லிவிட முடியும். ஏறபுக்கும் இறுகிய நம்பிக்கைகளுக்கும் இடையேயான போராட்டம். கதைசொல்லி தனக்குள் உள்ள முரணை கண்டுகொள்கிறான். தனக்குள் உள்ள முரண்களை உணர்பவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்கு காந்தியை நெருங்கி அறியவும் ஏற்கவும் இயலும்.

முந்தைய கதையான 'காந்தியோடு பேசுவேன்' கதையில் வரும் இவ்வரி காந்தியின் உள் முரண்பாடுகளில் லயித்துக்கிடப்பதின் பயனின்மையை சுட்டுகிறது. 'ஒருவரைப்பற்றி நிறைய தெரிந்து கொள்ளும்போது அவரை உள்ளுற நமக்கு பிடிக்காமல் போய்விடுகிறது என்பது தான் உண்மை, காந்தி என்வரையில் ஒரு தூரத்து நட்சத்திரம் போல, அதன் ஒளி தான் என்னை வசீகரிக்கிறது, நெருங்கிச் சென்று அதை ஆராய்ச்சி செய்ய எனக்கு விருப்பமில்லை.' அசோகமித்திரனின் 'காந்தியும்' காந்தியின் மீதான நன்மதிப்பு ஒருவர் திறந்தமனதுடன் இருக்கும்போது அடையப்படுவது அதை தர்க்கத்தால் நிலைநிறுத்த முடியாது எனும் கண்டடைதலையே  முன்வைக்கிறது.

'சத்திய சோதனையில்' ஐந்தாம் பாகம் 28 ஆவது அத்தியாயமான 'மரணத்தின் வாயிலருகில்' எனும் அத்தியாயத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கதை ஜெயமோகனின் 'நீரும் நெருப்பும்'. காந்தி 1918 ஆம் ஆண்டு ஸ்பேனிஷ் ஃப்ளூ காய்ச்சலில் பீடிக்கப்பட்டு மரணத்தின் விளிம்புவரை சென்ற நிகழ்வை அதில் விவரிக்கிறார். கதையில் பைராகியாக உருமாற்றமடையும் கேல்கரை பற்றி காந்தி எழுதுகிறார் 'இவ்விதம் சதா சாவை         எதிர்பார்த்துக்கொண்டு நான் படுத்திருந்தபோது, டாக்டர் தல்வல்கர்,   ஒரு விசித்திர ஆசாமியை அழைத்துக்கொண்டு அங்கே வந்தார்.          மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் அந்த ஆசாமி. அவர் பிரசித்தமானவர் அன்று. ஆனால், அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே    அவரும் என்னைப் போன்ற ஒரு பைத்தியம் என்பதைக் கண்டுகொண்டேன். தம்முடைய சிகிச்சை முறையை என்னிடம் சோதித்துப் பார்ப்பதற்காகவே  அவர் வந்தார்.' இக்கதையில் வரும் ஒருவரி ‘நான் ஒரு கிறுக்கன் என நினைக்கிறார். ஆகவே என்னைப் பார்க்கவும் என் மருத்துவத்துக்குள் வரவும் திரு. காந்தி உடன்படக்கூடும் என்றார்'.

உண்மை நிகழ்வை தொட்டுக்கொண்டு கதை தன்போக்கில் பிரம்மாண்டமாக விரிகிறது. ஜெயமோகன் நோக்கில் நல்ல சிறுகதை என்பது வளரும் உருவகத்தை தன்னகத்தே கொண்டது. அதன் வழி கவிதைக்கு நெருக்கமாகிறது. நீரையும் நெருப்பையும் உருவகங்களாக வளர்த்தெடுக்கிறார். உடலை நெருப்பு குண்டமாக எழுப்பும் சிகிச்சைமுறையை நம்பும் பைராகி இருளில் தழலென அனலுருவாக அறிமுகமாகிறார். காந்தியின் உடல் விவரிக்கப்படும்போது 'காட்டுத்தீக்குப்பின்னர் வைரம் மட்டும் எஞ்சும் சுள்ளிபோன்றது' என குறிப்பிடப்படுகிறது. பைராகி உயிரை பேண அனலின் வழியை பரிந்துரைக்கிறார். அனல் தான் பெருக பெருக அனைத்தையும் உண்டு செரிப்பது. காந்தி நீரின் வழியை உயிர்த்திருக்க தேர்ந்தெடுக்கிறார். நீர் அரவணைப்பது. தண்மையானது. நீருக்குள்ளும் நெருப்பு உண்டு எனும் தரிசனமே பைராகி வழி காந்தி அடைவது. இந்தியா துருவவாதிகள் மிதவாதிகள் என இரண்டுவிதமான போக்கையே காந்தியின் வருகைக்கு முன் விடுதலைக்கான வழியாக கண்டிருந்தது. காந்தி இவை இரண்டுமல்லாத புதிய பாதையை உருவாக்கினார். அவருடைய வழி நீரின் நெகிழ்வுத்தன்மை, அரவணைக்கும் தன்மை கொண்டது ஆனால் அகத்தே நெருப்பை உணர்ந்தது. காந்தியின் உயிரை பிடித்து வைத்திருந்தது அவருடைய வாழ்விச்சை. இக்கதையில் கனவின் வழி தேச விடுதலை அவருடைய கடமையாக உணர்த்தப்படவில்லை மாறாக கடைநிலை மக்களுக்கு அவர் ஆற்ற வேண்டியதே அவருடைய வாழ்விலக்காக சுட்டிக்காட்டப்படுகிறது. அந்த அறிதலின் வழி வாழ்விச்சையை மீட்டுக்கொள்கிறார். புரட்சி எனும் நெருப்பின் பாதையை தவிர்த்து மக்கள் திரள் ஒருங்கிணைப்பு எனும் நீரின் பாதையை தேர்வு செய்யும் கணத்தையே கதையாக்கியுள்ளார் ஜெயமோகன். மானுட குலத்திற்கான காந்தியின் ஆகச்சிறந்த பங்களிப்பு இந்த போராட்டமுறையை கண்டடைந்தது அதை வளர்த்தெடுத்ததே. அந்த தருணத்தை புனைவின் ஊடாக தொட்டு‌ மீள்கிறார் ஜெயமோகன். காந்தி இக்கதையில் 'கட்டுத்தளர்ந்த சுள்ளிக்கட்டுபோல்' உள்ள பலவீனமான நிலையில்தான் அறிமுகமாகிறார். இன்றே இப்போதே என எல்லாவற்றையும் மாற்ற ஓயாமல் உழைப்பவராகவும் ஆனால் எதுவுமே மாறப்போவதில்லை எனும் ஞானியர்களுக்கே உள்ள சலிப்பை அடைபவருமாக உழல்கிறார். அவருக்குள் இருக்கும் குழந்தையே அவரை சலிப்படையாமல் வைத்துக்கொண்டது. ஆனால் அவருடைய 'ஓயாத போராட்டம் அவருள் இருக்கும் அந்தக்குழந்தையுடன்தான்.' காந்தி தொடர் முனைப்பின் வடிவமாக ஜெயமோகன் கதையில் துலக்கமடைகிறார். காந்தி என்பது கொள்கைகளோ இயல்புகளோ அல்ல ஓயாத செயல். 'காந்தியோடு பேசுவேன்' ஆண் பெண் என பால்ரீதியாக என்ன உருவகத்தை கட்டமைத்ததோ அதே இருமையை 'நீரும் நெருப்புமாக' இக்கதை கட்டமைக்கிறது. 

நகுல்வசனின் Ecce homo (இவன் மனிதன்) 'நீரும் நெருப்பும்' போலவே காந்தியின் வாழ்விலிருந்தே புனைவை உருவாக்குகிறது. காந்தி லண்டனுக்கு கப்பல் ஏறுவதில் தொடங்கி மீண்டும் இந்திய கரையை அடையும் வரையிலான காலகட்டத்தை சித்தரிக்கிறது. 'சத்திர சோதனையில்' காந்தியே எழுதிய புனைவுத் தருணங்களை மட்டும் கோர்த்து உருவாக்கப்பட்ட சித்திரம். சத்திய சோதனையின் நம்பகமான மறு ஆக்கம் என்றே சொல்லலாம். நிகழ்வுகளின் தேர்வு மற்றும் அவை கோர்க்கப்பட்ட விதமே இதை புனைவாக ஆக்குகிறது. லட்சியவாதியோ மகாத்மாவோ அல்ல காந்தி நம்மை போல நன்மைக்கும் தீமைக்கும் இடையே சபலத்தில் ஊசலாடிக்கொண்டிருப்பவர் என்பதே இக்கதையின் பார்வை கோணம். தலைப்பும் அதையே வலியுறுத்துகிறது.  மனிதர் காந்தி எதிர்கொண்ட அலைக்கழிப்புகளே கதை. அலைக்கழிப்புகளின் ஊடாகவே காந்தி நமக்கு அணுக்கமாகவும் ஆகிறார். கலைக்கான ஊடகமாகவும் ஆகிறார். 

புதுமைப் பித்தனின் 'புதிய நந்தனை' காந்தி கதை என வகுத்துவிட முடியுமா எனத்தெரியவில்லை‌. ஆனால் காந்தியின் இருப்பை உணர்த்தும் கதை. காந்தியின் வருகை சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையும் உரையாடலையும் விவாதிக்கிறது. பொதுவாக புதுமைப்பித்தன் உட்பட நவீன இலக்கியவாதிகளின் மீது வைக்கப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டு என்பது அவர்கள் சமகாலத்தை புனைவுகளில் பதிவு செய்ததில்லை என்பதே. ஆனால் 'புதிய நந்தனில்' காந்தியின் வருகை பதிவாவதோடு மட்டுமில்லாமல் அங்கிருந்து இன்று வரை தீராத சிக்கலை முன் உணர்த்துகிறது. கதையின் தலைப்பிலேயே 'நந்தனார் சரித்திரிம்' சார்ந்த குறிப்பு உள்ளது. கதையும் அதை கோடிட்டு காட்டியபடியேதான் தொடங்குகிறது. நந்தனார் 'திருநாளைப் போவார்' நாயனாராக ஆக நெருப்பில் குளித்து தன் தூய்மையை நிறுவ வேண்டியிருந்தது. காந்தி தோல்வியடைந்த மீட்பர் என சொல்லலாம். கிறிஸ்துவை போல‌. தோல்வியின் ஊடாகவே அவர் மேலும் மேலும் நமக்கு நெருக்கமாகிறார். பேருரு கொள்கிறார். 

பாவாடையாக பிறந்து ஜான் தானியலாக வளர்ந்து தோழர் நரசிங்கமாக உருமாறியவனும் பிராமண குடும்பத்தில் பிறந்து எம்.ஏ படித்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட ராமநாதனும் ஒரே உண்மையை இருவேறு பாதையில் வந்தடைகிறார்கள். 'மவாத்துவா' கிழவரை காணவரும்போது, சிவபெருமானின் நெற்றிக்கண் தழலென ஒளிவிட்டு விரைந்து கடக்கும்  ரயில் வண்டியில் விழும் குருட்டு கிழவனான கருப்பனை காக்கும் முயற்சியில் மூவரும் சிதைந்து போகிறார்கள். இவர்களில் யார் நந்தன் என்றொரு கேள்வியை எழுப்புவதோடு கதை முடிகிறது. குறியீட்டு ரீதியாக இக்கதை விரிந்தபடி உள்ளது. நிற்காத ரயில் வண்டி சனாதனம், சாதியவாதம்.

 இந்திய தேசிய விடுதலை என பலவாக விரித்து காண முடியும். சனாதனிகள், தோழர்கள், சாமானியர்கள் என அனைவரும் அவர்களுக்கு மீட்பளிக்கபோகும் அந்த ரயிலுக்காக அவரவர் கணக்குகளுடன் ஆதனூர் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர். எல்லோருக்கும் விடுதலை வேறுவேறாக பொருள்படுகிறது. சிக்கியவர்களுடன் சேர்ந்து மீட்பர்களும்  அவர்களின் உன்னத முயற்சியில் ரயிலால் அடித்து செல்லப்படுகிறார்கள்.‌ சமகாலத்தின் இருவேறு சமூக சீர்திருத்த போக்குகளை ஒரு கலைஞனாக அவதானிக்கிறார் புதுமைப்பித்தன். இரண்டு போக்குகளையும் ஆத்மார்த்தமானதாக அங்கீகரிக்கிறார். ஆனால் எதற்குமே நிற்காத ரயில், மனிதத் தன்மையற்ற இயந்திரமான ரயிலுக்கு முன் இவை இரண்டுமே தோல்வியடையும் எனும் அவநம்பிக்கையே 'புதிய நந்தனாக' ஆகிறது. நகுல்வசனின் கதை காந்தியை லட்சியவாதத்திலிருந்து வெளியேற்றி மனிதனாக நம்முன் நிறுத்துகிறது என்றால் புதுமைப்பித்தன் அதன் மீது ஐயம் கொள்கிறார். அதுவும் காந்தி வாழ்ந்திருந்த காலத்தில் இந்த கதையை எழுதினார் எனும்போது அவரது மனோதர்மத்தையும் கூர்மையையும் வியக்காதிருக்க முடியவில்லை. பெரும் கலைஞர்களால் ஒரு சேர ஆசுவாசத்தையும் தொந்திரவையும் அளிக்க இயலும். 

  


3

காந்தியின் மரணக் கதைகளை வாசிக்கும்போது அவை மீள மீள 'ஏன்?' எனும் கேள்வியை எழுப்பி தத்தமது விடைகளை கண்டடைகின்றன. 'நான்காம் தோட்டா' துப்பறியும் கதையாக தோற்றம் கொண்டாலும் ஏன் எனும் கடினமான கேள்வியை எழுப்புவதுடன் முடிகிறது. 'காந்தியைச் சுமப்பவர்கள்' இந்தியனே காந்தியை கையெடுத்து வணங்கிவிட்டு  கொன்ற வினோதத்தை புரிந்துகொள்ளாமல் திகைக்கிறது. என்றால் 'பிறகொரு இரவு' அதற்கு இந்திய சமூகத்தையே பொறுப்பாக்குகிறது. 'மரணத்தை கடத்தல் ஆமோ' மெய்யியல் தளத்தில் விடை தேடுகிறது. 'ஆரோகணம்' தொன்மத்துடன் இணைவைத்து புரிந்துகொள்ள முயல்கிறது. 'ஆடல்' ஏன் எனும் கேள்வியை எழுப்பவில்லை என்றாலும் அந்த நிகழ்வை செரித்துக்கொள்ள முற்படுகிறது. 'கிழவனின் வருகை' அது இன்றியமையாத ஒரு நிகழ்வு எனும் முடிவுக்கு வருகிறது. நாவல்களில் 'மோகமுள்' '18 ஆவது அட்சக்கோடு' ஆகியவற்றிலும் காந்தியின் மரணம் பதிவாகியுள்ளது. அசோகமித்திரனின் நாவலில் அதன் நாயகன் சந்திரசேகரன் காந்தி காந்தி என கத்திக்கொண்டே ஓடுவது நாவலின் உணர்ச்சிகரமான பகுதிகளில் ஒன்று. 

சி. சரவணகார்த்திகேயனின் 'நான்காம் தோட்டா' காந்தி மரணமடைந்த காலத்திலும் நிகழ்காலத்திலுமென இரண்டு காலங்களில் மாறி மாறி நிகழ்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் உண்மையில் காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. நான்காவதாக ஒரு தோட்டா காந்தியை துளைத்தது, அதை சுட்டவர் கோட்சே அல்ல என சதி கோட்பாடுகள் கிளம்பின. சரவண கார்த்திகேயன் இந்த நிகழ்வை அடிப்படையாக கொண்டு காந்தியின் மரணத்தை விசாரிக்கிறார். சபர்மதி எனும் பத்திரிக்கையாளர் தில்லிக்கு சென்று இவ்வழக்கு தொடர்பாக ஆய்வுசெய்து எழுத முற்படுவது ஒரு பகுதி மறுபகுதி காந்தியின் இறுதிநாள் சித்தரிக்கப்படுகிறது. மரணத்தின் வழி தன் மகாத்மாத்துவத்திற்கு நியாயம் சேர்த்தவராக காந்தி சித்தரிக்கப்படுகிறார். துருவமயமாதலும் மதவாதமும் காந்தியின் உயிரை காவுவாங்கியது என்பதை அழுத்தமாக நினைவுறுத்தும் கதை. காந்தியின் மரணம் காந்தியின் வாழ்வைக்காட்டிலும் பெரும் செய்தியாக ஆகிவிட்ட காலகட்டத்தின் எதிரொலிப்பு என இக்கதையை சொல்லலாம். 

எஸ். ராமகிருஷ்ணனின் 'காந்தியைச் சுமப்பவர்கள்' இத்தொகுதியின் தலைப்பிற்குரிய கதை. இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள இரண்டாவது எஸ். ராமகிருஷ்ணன் கதையும் கூட. ஒரு எழுத்தாளரின் ஒரு கதையை மட்டுமே எடுத்துகொள்ள வேண்டும் என்றொரு திட்டம் இருந்தது ஆனால் எஸ்.ராவிற்காக அதை மீற வேண்டியிருந்தது. காரணம் ஒன்று காந்தியின் மரணத்தை பேசுகிறது இன்னோன்றில் காந்தி ஓரு பாத்திரமாக வருகிறார். இரண்டும் மாறுபட்ட இரண்டு தரிசனங்களை கொண்டது.  காந்தியின் அஸ்தியை இந்தியர்களும் ஆப்பிரிக்கர்களுமாக   உகாண்டாவிற்குள் ஓடும்  நைல் நதியில் கரைக்க கொண்டு செல்லும் சித்திரத்துடன் இக்கதை தொடங்குகிறது. அவர்களுக்குள் நிகழும் உரையாடலே கதை. 'காந்தியுடன் பேசுவேன்' கதையில் ராகேல் யூத பண்பாட்டு பின்புலத்திலிருந்து காந்தியை எப்படி புரிந்து கொண்டாரோ அப்படி இதிலும் ஆப்பிரிக்கர் கோணத்திலிருந்து காந்தி உள்வாங்கப்படுகிறார். எஸ்.ராமகிருஷ்ணன் காந்தியை உலகமயமாக்குகிறார். பண்பாட்டு தேச எல்லைகளுக்கு அப்பால் காந்தி எப்படி சென்று சேர்கிறார் என்பதை கவனிக்கிறார். காந்தி ஒரு ஒளியாக, உலகிற்கு பொதுவானவராக ஆகிறார். கதையின் இறுதிப்பகுதியில் இப்படியொரு உரையாடல் நிகழ்கிறது.

``ஒருமுறை கூட நேரில் காணாத காந்தியை இப்போது சாம்பலாக மடியில் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். காந்தியின் எடையை உணருகிறீர்களா ``எனக்கேட்டான் ஒபாடே.,

``காந்தி இப்போது எடையற்றிருக்கிறார் ``என்றார் சுக்லா

``சாம்பலின் கனத்தை நம்மால் மதிப்பிட முடியாது. உயிருள்ள மனிதன் செய்ய முடியாதவற்றைக் கூட இறந்த மனிதனால் செய்து முடித்துவிட முடியும். இறந்தவர்களைப் பற்றி எளிதாக நினைக்க வேண்டாம்`` என்றார் சார்லி.

எஸ். ராமகிருஷ்ணனின் கதையில் ஏன் ஒரு இந்தியர் தன் தந்தையை கொன்றான் என எழுப்பப்படும் கேள்விக்கான பதிலை தேவிபாரதியின் 'பிறகொரு இரவு' கதையில் காணலாம். இது தமிழில் எழுதப்பட்டுள்ள ஆகச்சிறந்த காந்தி கதை என நிச்சயம் சொல்வேன். தேவிபாரதியின் புனைவுலகம் தால்ஸ்தாயும் காஃப்காவும் சந்திக்கும் புள்ளியில் நிகழ்வது. இக்கதையில் காந்தி தால்ஸ்தாயுடன் இணைவைக்கப்படுகிறார். மரணத்திற்கு முன்  பயணிக்க கிளம்புகிறார். காந்தி அமைப்பின் ஆளாக மாற்றப்படும் சுதந்திர இந்தியாவின் ஆகப்பெரும் துயரம் அவர் வாழ்ந்த காலத்திலேயே தொடங்கியதை கதை பேசுகிறது. காந்தியின் மரணத்திற்கு முன்பே யாருக்கு காந்தி தேவைப்படுகிறாரோ அவர்களிடமிருந்து ஒளித்தும் விலக்கியும் வைக்கப்படுகிறார். காந்தியின் இடத்தை அவருடைய போலிகள் நிறைக்கிறார்கள். ஒன்றின் மதிப்பை அழிப்பற்கு அதை நகலெடுத்தாலே போதும்.  வாழ்விச்சை கொண்ட காந்தி இந்திய சமூகத்தின் விருப்பை உணர்ந்து தன் மரணத்துக்கான நியாயத்தை தானே மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார். காவலர்கள், அணுக்கர்கள், காந்தி வேடதாரிகள், முதல் ஒட்டுமொத்த தேசமே காந்தியின் மரணத்திற்காக காத்திருக்கும் சித்திரம் மனதை வதைப்பது. தீர்க்க வேண்டிய கணக்குகள் எல்லாம் காந்தியின் தலை மறைவதற்காக காத்திருக்கின்றன. எஸ்.ராவின் புனைவுலகத்தோடு தேவிபாரதியின் கதையை சேர்த்து வாசிக்கும்போது முழுமைச்சித்திரய் கிடைக்கிறது. இந்தியர்களின் பொது விருப்பம் காந்தியை கொன்றாக வேண்டும் எனும் நிலையை ஏன் அடைந்தது? காந்தியோடு பேசுவேன் கதையிலிருந்து ஒரு மேற்கோளை பொருத்திக்கொள்ள இயலும். 'உண்மையில் இந்தியர்கள் விசித்திரமானவர்கள், அவர்கள் எதை நேசிக்க விரும்புகிறார்களோ, அதற்கு எதிராகவே செயல்படுகிறார்கள், இந்தியர்களின் பிரச்சனை காந்தியை அவர்களால் இன்னமும் புரிந்து கொள்ளமுடியவில்லை என்பதே, அவர்களுக்கு இப்படி ஒரு அதிசயம் எப்படி சாத்தியமானது என்று வியப்பாக இருக்கிறது, உண்மையில் காந்தியின் செயல்பாடுகள், எண்ணங்கள் நமது பலவீனங்களை., குறைபாடுகளை, மனசாட்சியை கேள்விகேட்கிறதே என்று பலருக்கும் கோபமாக இருக்கிறது,' காந்தியை கொன்று புனிதமாக்கி கடக்க வேண்டிய நிர்பந்தம் இந்தியர்களுக்கு.  ராகேல் சரியாக சுட்டிக்காட்டுகிறாள். 'இளம் இந்தியன் ஒவ்வொருவனும் தன் மனதிற்குள் காந்தியை கொல்ல விரும்புகிறான், ஆனால் அது எளிதான ஒன்றில்லை, அந்த தோல்வி அவனை கசப்பிற்குள்ளாக்குகிறது, அவரை கடந்து செல்ல ஒருவழி தானிருக்கிறது, அவரை புனிதமாக்கிவிடுவது, அவரை அதிமனிதாக்கிவிடுவது, அதை வெற்றிகரமாகவே செய்திருக்கிருக்கிறீர்கள்,காந்தி இன்று வெறும் பிம்பமாக, சிலையாக மட்டுமே இருக்கிறார்'

கலைச்செல்வியின் 'ஆடல்' காந்தியின் மரணத்திற்கு பின்பான கணத்திலிருந்து தொடங்குகிறது. சடலமாக கிடக்கும் காந்தியின் உடலில் இருந்து பிரிந்து கொண்டிருக்கும் உயிரும் அவர் உடலுக்கு மேல் திரண்ட சிறு வெண் மேகமாக உருக்கொண்ட கஸ்தூர்பாவும் உரையாடத்தொடங்குகிறார்கள். கற்பனையான உரையாடல். இருவரும் தமக்குள் பேசி தீர்க்க வேண்டியவற்றை பேசிக்கொள்கிறார்கள். ஒருவர் மற்றவரின் வாழ்வை எடையிடுகிறார்கள். பாவுக்கும் காந்திக்குமான உறவு பல கதைகளில் பேசப்படுகிறது. அணுக்கமும் விலக்கமும் ஒரு சேர அமைந்த உறவு. 'மரணத்தை கடத்தலும் ஆமோ'  'ஆடல்' 'ஆரோகணம்' ஆகிய மூன்று கதைகளுமே இருவருக்குமிடையிலான உறவை இதே கோணத்தில் பரிவுடன் அனுகுகிறது. 

ஜி. நாகராஜனின் கிழவனின் வருகை. பிளக்கும் வெயிலில் நகரத்து நெரிசலுக்குள்  கிழவன் அறிமுகமாகிறார். சாலையோரம் செருப்பு தைப்பவருக்கு நெருக்கமாக தைக்க அறிவுரை அளிக்கிறார். பதிலுக்கு அவரை நோக்கி 'நீ என்ன நம்ப ஆளா?' என கேட்கிறான். அவரும் ஆம் என்கிறார். ஆலயத்துகை தேடிச்சல்லும் வேளையில் தாகத்திற்கு தண்ணி கேட்கும் கிழவனுக்கு சிவப்பு விளக்கு பகுதிக்கு வழி காண்பிக்கப்படுகிறது. சாக்கடையோரம் நீர் அருந்தி தாகத்தை தணித்துகொள்கிறார். பூங்காவுக்குள் ஒரு தொழு நோயாளியைக் கண்டதும் அவனை தழுவ செல்லும் கிழவரை கீழே வீழ்த்தி 'புண்ணியம் தேடிக்க வேற வழி கிடைக்கவில்லையா' என கேலி செய்கிறான். ஃபிராய்டிய ரோகியோ கிழவனின் தலையில் தடியைக்கொண்டு ஒரு போடு போடுகிறான். பழைய சமுதாயத்தின் கருப்பையில் இருந்து புதியதை பிறப்பிக்க இதுதான் மருந்து என்கிறான். நாக்கறுத்தவர்கள் உண்ணும் இடத்திற்கு உணவு வேண்டி செல்லும் இடம் இக்கதையை காப்காத்தனமாக ஆக்குகிறது. வழிகாட்டிய சிறுமி கிழவனிடம் நரமாமிசம் சாப்பிடுகிறாயா என கேட்கிறாள். கைவிடப்பட்டவர்களின் உலகம். கோஷங்கள் தாங்கிய சுவர்கள் புதிர்பாதையைப்போல் உருமாறுகின்றன. மகனைத்தேடி அலைகிறான். வாளும் ஈட்டியும் கையிலேந்தி அனல் கக்கும் மைந்தன். மொழி கற்றுக்கொடுத்த மைந்தன் நினைவுகளை கொன்று வேறு உருவில் நிற்கிறான். கிழவர் தன் மைந்தனிடம் எழுப்பும் கேள்விகளும் அதற்கு அந்த மைந்தனின் பதில்களும். கிழவன் தன் மைந்தனை வன்முறையாளனாக வரையறை செய்கிறார். மகனோ அதை மறுக்கிறான். தந்தை கொலை மீண்டுமொரு முறை நிகழ்கிறது. ஃபிராய்டிய கதை.‌ 

ரா. கிரிதரனின் 'மரணத்தை கடத்தலும் ஆமோ' ஒருவித பூடகத்தன்மை கொண்ட கதை. காந்தி இக்கதையில் தன் மரணத்தை தானே முன் உணர்ந்த, கனவுகளில் மரணத்துடன் உரையாடல் நிகழ்த்தும் மறைஞானியாக வருகிறார். கதையின் காலம் 1934- 35 ஆம் ஆண்டில் காந்தி தமிழகத்தில் நிகழ்த்திய ஹரிஜன் யாத்திரை. காந்தியின் துர்மரணத்தை ஒரு ஜோதிடர் கணிப்பதுடன் கதை தொடங்குகிறது. காந்தியின் தன்னிலையில், படர்கையில், கனவு என மூன்று விதத்தில் கதை சொல்லப்படுகிறது. விதிக்கும் சுயதேர்வுக்கும் இடையேயான முரணை காந்தியின் வாழ்வைக்கொண்டு எழுப்புகிறார் கிரிதரன். காந்தியை மரணமும் வன்முறையும் வாழ்நாள் முழுவதும் நெருங்கியபடியே வருகிறது.‌ மீண்டும் மீண்டும் அதன் மூச்சுக்காற்றை புறங்கழுத்தில் உணர்ந்தபடிதான் இருக்கிறார். காந்தி ஒரு நம்பிக்கையாளராகவும் ராஜாஜி ஒரு தத்துவவாதியாகவும் வருகிறார்கள். வினை, வினைப்பயன் மற்றும் சுயதேர்வு சார்ந்து இருவரும் விவாதிக்கிறார்கள். மரணம் ஒரு செம்புள்ளியாக ஒற்றை விழியாக அவர் கணவுகளில் வருகிறது. கயிற்றின் நீளம் அனுமதிக்கும் எல்லைவரை அதனிடமிருந்து தப்ப அவரால் முடிந்தது. தற்செயலாக ஒரு பூரான் நசுங்கி துடித்து சாகிறது. தற்செயல் என தனக்குள் கத்தினாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.  'சி.ஆர், கயிறின் நீளம் எத்தனை எனும் தத்துவக்கணக்குகள் எத்தனை எத்தனை! வினைப்பயனும், நாமாக எடுக்கக்கூடிய முடிவுகளின் பயனும் எதிர் எதிர் தத்துவங்கள் அல்ல என்பதே இப்போதைக்கு என் எண்ணம். இரண்டும் ஒன்றை ஒன்று இறுக்கும் முடிச்சுகள் கொண்டவை. இந்த முடிச்சுகளை நோக்க நோக்க மனம் பேதலித்துப்போகிறது. அதனால் அதிலிருந்து தப்பிக்கும் வழியே என் தத்துவம். என் வாழ்க்கை.' எனும் வரிகளுடன் கதை முடிகிறது.

சுனில் கிருஷ்ணனின் ஆரோகணம் கனவுத்தன்மை கொண்ட சிறுகதை. மகாபாரதத்தின் இறுதி பருவமான சுவர்க்க ஆரோகண பருவத்தை காந்தியைக்கொண்டு செய்த மறு ஆக்கம் என சொல்லலாம். காந்தியின் மரணத்திற்கு பின்பான அவரது பயணத்தை பேசுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்றை துறந்து துறந்து மேலேறுகிறார். தன் மொத்த வாழ்வையும் பயணத்தினூடாக காந்தி மறுபரிசீலனை செய்கிறார். உச்சத்தை சென்றடையும் காந்தி தருமன் தேர்வு செய்ததை தேர்வு செய்யவில்லை. துன்பம் நிறைந்த உலகம் என்பதுதானே மீட்பர்களுக்கான சொர்க்கமாக இருக்க முடியும். 

ஒட்டுமொத்தமாக கதைகள் காந்தியை பல்வேறு கோணங்களில் வெளிக்காட்டுகின்றன. 
4

இத்தொகை நூலில் இடம்பெற்றுள்ள கதைகளுக்கு மனமுவந்து அனுமதியளித்த அத்தனை எழுத்தாளர்கள், அவரது குடும்பத்தார் மற்றும் பதிப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பாரதிய வித்யா பவன் தொகை நூலை உருவாக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்க முக்கிய காரணம் காலச்சுவடு கண்ணன் அவருக்கு என் நன்றி. அத்தொகுதியை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த நண்பர் த. கண்ணன் இதில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளைக்குறித்து எழுதியிருந்த குறிப்புகளும் உதவியாய் இருந்தன. அவருக்கும் நன்றி. 'கிழவனின் வருகை' மற்றும் 'ஆலமரத்தில் ஒரு பறவை' கதைகளை எனக்கு அடையாளம் காட்டியவர் மொழிபெயர்ப்பாளர் கே. நல்லதம்பி. இத்தொகுதியில் இடம்பெற்றுள்ள பெரும்ப்லான கதைகளை கண்ணடத்தில் மொழியாக்கம் செய்து ஒரு தொகுதியாக கொண்டு வருகிறார். நல்லதம்பி அவர்களுக்கும் என் நன்றி. இத்தொகுதியை வெளியிடும் பரிசல் செந்தில்நாதனுக்கும் புத்தக வடிவமைப்பாளருக்கும் நன்றி. தொகுதிக்கு ஆலோசனைகள் வழங்கிய ஜீவ கரிகாலன், காளி பிரஸாத் மற்றும் எழுத்தில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கும் என் குடும்பத்துக்கும் நன்றிகள். இத்தொகுதியை காந்திய செயல்தளத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையில் நம்காலத்தில் பாலமாக திகழ்ந்த, காலஞ்சென்ற மக்கள் மருத்துவர் ஜீவானந்தம் அவர்களுக்கு அர்ப்பணிப்பதில் நிறைவு கொள்கிறேன். 


காந்தியை செயல்வழி அவரது எழுத்துக்கள் வழி வரலாறு வழி அவரைப்பற்றிய எழுத்துக்கள் வழி என பலவகைகளில் அறிந்துகொள்ளலாம். காந்தியை அறிவதென்பது இந்தியாவை அறிவது இப்பண்பாட்டை அறிவது மனிதர்களை அறிவது, நம்மை நாம் அறிவதும் கூட. மேற்சொன்ன வகைகள் அல்லாமல் காந்தியை புனைவுகள் வழியும் கவிதைகள் வழியும் அறிந்துகொள்ள முடியும். நிறுவனப்படுத்தபடாத காந்தியை சுமப்பவர்கள் எப்போதும் கலைஞர்களாகவே இருக்க முடியும். 

அன்புடன்
சுனில் கிருஷ்ணன் 
காரைக்குடி
நவம்பர் 27 2021