Tuesday, February 2, 2021

விஷக் கிணறு முன்னுரை

விஷக் கிணறு தொகுப்பு வாங்க


‘அம்புப் படுக்கை’ வெளியாகி மூன்றாண்டுக்கு பிறகு வெளியாகும் இரண்டாவது சிறுகதை தொகுப்பு. கடந்த ஆண்டு 'நீலகண்டம்' வெளியானது. பெரிய எண்ணிக்கை என சொல்லிவிட முடியாது. இவ்வாண்டுகளில் நிறைய பயணங்கள், நிறைய வாசிப்பு, தொடர்ச்சியாக விமர்சன கட்டுரைகள் எழுதி இருக்கிறேன் என்பதை உணர்கிறேன். 

முதல் தொகுப்பிலிருந்து சில முன்னகர்வுகள் நிகழ்ந்துள்ளதை என்னால் உணர முடிகிறது. முதன்மையாக, இருத்தலியல் கேள்விகளுடன் தற்காலிக சமரச உடன்படிக்கை எட்டப்பட்டு அவை பின்னுக்கு சென்று வேறுவிதமான கேள்விகளுக்கு வழிவிட்டிருக்கின்றன. அனுபவ வட்டம் விரிந்திருக்கிறது. இக்கதைகள் உருவான விதம் சுவாரசியமானவை. அகத்திற்குள் எழும் சிறிய நலுங்கல் எதிர்பாரா தருணத்தில் வெளிப்பட்டு கதையாக விரியும் வசீகர மர்மமே தொடர்ந்து எழுதுவதற்கான தூண்டுதல். மனைவிக்கு தெரியாமல் மனநோய்க்கு மாத்திரை உட்கொள்ளும் ஒரு மனிதரை சந்தித்தேன். ஒரே மருந்து இருவருக்கு இருவேறாக பயன்படுகிறது. இரு உருவங்களை காட்டுகிறது என்பதே ‘லித்தியம்’. ‘இயல்வாகை’ நெருங்கிய மருத்துவ நண்பர் உரையாடலின்போது ஒருவரி செய்தியாக சொல்லி சென்ற நிகழ்வை உள்ளடக்கமாக கொண்டது. ‘இந்திர மதம்’ புகழ்பெற்ற மரபு மருத்துவரின் கல்லூரிக்கால நினைவை அடிப்படையாகக் கொண்டது. ‘களி’ கணேசன் என்னுடன் விளையாடியவரின் வார்ப்புரு. ‘விஷக் கிணறு’ எனது மலேசிய பயண அனுபவத்தின் தலைகீழாக்கம். 


உண்மை மனிதர்கள் மற்றும் நிகழ்வுகளை கதையாக்குவது சவாலானது. எழுத்தாளரிடம் தன்னை திறந்து வைக்கும் மனிதரை அவமதிக்கும், இழிவு செய்யும், அல்லது பழி தீர்க்கும் வகையில், கதை மாந்தரை பிழையாக பிரதிநிதப்படுத்தும் கதைகள் எழுதுவது சரியல்ல என எண்ணுகிறேன். எல்லா நிகழ்வுகளும் கதையாவதில்லை. எங்கோ ஒரு சிறு உராய்வும் பொறியும் இருக்கும் நிகழ்வுகள், நம்முள் கேள்விகளை எழுப்ப சாத்தியமுள்ள நிகழ்வுகள் மட்டுமே கதையாகின்றன. எந்த நிகழ்வையும் திறமையான எழுத்தாளரால் கதையாக்க முடியும். அந்நிகழ்வில் கதை எது என கண்டுகொள்ள முடிந்தால் போதும். எங்கு எதிரெதிர் விசைகளின் உராய்வுகள் சாத்தியமாகின்றன? எது படிமமாக விரியத்தக்கது? அடிப்படையான கேள்விகள் எவை? உண்மை நிகழ்வுகளை உள்ளது உள்ளபடி எழுதுவது புனைவு எழுத்தாளரின் வேலையல்ல. கற்பனையின் துணைகொண்டு உண்மையின் மீதான விசாரணையை நிகழ்த்துவதே புனைவின் பணி. புனைவென்பது பொய்களால் அணி செய்யப்பட்ட உண்மை என்கிறார் லோசா. ‘விஷக் கிணறு’ கதையில் வரும் ஒப்பன்ஹைமர் பகுதி திட்டமிடப்படாதது. கதையை நிறுத்திவிட்டு சார்லஸ் தோர்ப் எழுதிய ஒப்பன்ஹைமர் வாழ்க்கை வரலாறை வாசித்து முடித்துவிட்டு அந்தப் பகுதியை எழுதி நிறைவு செய்தேன். ஒப்பன்ஹைமருக்குப் பிடித்த கவிஞர் ஜார்ஜ் ஹெர்பர்ட் எனும் ஒருவரி விக்கிபீடியா தகவல் மட்டுமே அவருடைய கவிதைகளை கதைக்குள் பொருத்த எனக்குப் போதுமானதாக இருந்தது.  டெல்லரின் ஒரு மேற்கோள் அவருடைய ஆளுமையை வரையறை செய்யப் போதும். பிறருடைய அனுபவங்களையோ வரலாற்று நிகழ்வுகளையோ எழுத்தாளர் தனது அனுபவ வட்டத்திற்குள் கொணர்ந்து கற்பனையால் வளர்த்து எடுக்க முடியும்போது புதிய பல சாத்தியங்களை நோக்கிப் பயணிக்க முடியும். ‘விஷக் கிணறு’ வடிவம் மற்றும் உள்ளடக்கம் ரீதியாக எனது எழுத்திலிருந்த சில தளைகளை கடந்ததற்கான சாட்சி என்றே நம்புகிறேன். நீலகண்டம் வாசித்தவர்களுக்கு ‘சிதல்’ அதன் ஒருபகுதியின் விரிவாக்கம் என்பது தெரியும். எங்கள் பகுதியில் நான் காணும் பிரம்மாண்ட வீடுகள் மண்ணுக்குள் செல்வதைக் காண்கிறேன். வரலாறின் புதைமணல் சுழியை நேரடியாக கண்ணுறுவதுதான் ‘சிதல்’. ‘வைரஸ் கதைகள்’ ஊரடங்குக்கு முன்னர் எழுதியது. நான் எழுதிய காலத்தில் பயண அனுமதி அல்லது கிராமங்களுக்குப் பரவுதல் போன்றவை எல்லாம் நிகழவில்லை.  கண் முன் ஒரு டிஸ்டோபிய உலகம் மெல்ல மெல்ல சுருள் அவிழ்வதை கண்டுகொண்டிருந்தேன். அடுத்து என்ன எனும் அச்சமும் கிளர்ச்சியும் ஒருசேர உணர முடிந்த காலகட்டம். நிகழ்வு புனைவை விட அசாதாரணமாக உருக்கொண்டு வெருட்டிய காலம். கற்பனை என்றும் டிஸ்டோபியா என்றும் எண்ணி எழுதப்பட்ட கதைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு கொரோனா எல்லா இடங்களிலும் விரவி பரவுகிறது. ஐந்து கதைகளில் மூன்று கதைகள் ஒருவகையான டிஸ்டோபிய புனைவுகள் என்று சொல்லலாம். நான்கு கதைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. 

ஒரு குறுநாவல், மூன்று சிறிய கதைகள், ஏழு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு ‘விஷக் கிணறு’. கதைகளை வெளியிட்ட ‘கல்குதிரை’ ;தினகரன் தீபாவளி மலர்’ ‘இந்து தமிழ் திசை தீபாவளி மலர்’ ‘இடைவெளி’ ‘வல்லினம்’ யாவரும்’ ஆகிய இதழ்களுக்கு நன்றி. கதைகளுக்கு வாசிப்பையும் விமர்சனங்களையும் அளித்த ஜெயமோகனுக்கும், ‘விஷ்ணுபுர இலக்கிய வட்டம்’, ‘பதாகை’, ‘சிற்றில்’ நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.  ‘எப்போதும் முடிவிலே இன்பம்’ சிறுகதையை க.நா.சு சிறுகதைப் பரிசுக்கு உரியதாக தேர்ந்தெடுத்த ஜீ. முருகனுக்கும், புத்தகத்தைப் பதிப்பிக்கும் நண்பர் ஜீவ கரிகாலன் மற்றும் கண்ணதாசன், மெய்ப்பு நோக்கிய ஸ்ரீதேவி அவர்களுக்கும், வடிவமைப்பாளர் கோபு  ஆகியோருக்கும் நன்றிகள். என்னை எழுத அனுமதிக்கும் சுதீர் மற்றும் சபர்மதிக்கு முத்தங்கள். மருத்துவன் எழுத்தாளன் என இரு வேடங்களில் மாறிமாறி உட்புகுந்துகொள்ளும் என்னை என் குழப்பங்களுடன்  முழுமையாக ஏற்றுக்கொண்ட மானசாவிற்கு அன்பு. எழுத்துப்பயணத்தில் எப்போதும் உடன்வரும் அம்மாவிற்கு வணக்கங்கள். 

இத்தொகுதியை அம்மா, மனைவி மற்றும் மகள் என என் வாழ்வை நிறைத்திருக்கும் மூன்று தலைமுறை பெண்களுக்கு சமர்ப்பித்திருக்கிறேன். இங்கே அவர்களைப் பற்றி எதை எழுதினாலும் தேய்வழக்காகவும் சம்பிரதாயமாகவும் இருக்கும். நெருக்கமானவர்களிடம் இருக்கும் அணுக்கத்தை உலகிற்குப் பறைசாற்றுவது கூச்சமாகவும் இருக்கிறது. அவர்கள் அளித்த / அளிக்கும் அளப்பறியா கொடைக்கு சிறு செய்நன்றி. விஷக் கிணற்றிலிருந்து என்னை மீட்கும் கரங்கள் அவர்களுடையவை. 

சுனில் கிருஷ்ணன் 

4, 7 ஆவது வீதி, வடக்கு விஸ்தரிப்பு, சுப்பிரமணியபுரம், 

காரைக்குடி- 2 

4.11.2020 


ஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழியில் விழும் தேனின் அழிதுளி - நாஞ்சில் நாடனின் நாவல்களை முன்வைத்து

(அரூ இணைய இதழில் வெளிவந்த கட்டுரை)



 1

நாஞ்சில் நாடன் 150 க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார். பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் சொல்லாய்வுகள் சார்ந்து தொடர்ந்து முக்கியமான பல கட்டுரைகளை அண்மைய ஆண்டுகளில் எழுதி வருகிறார். தோராயமாக நாநூறு கட்டுரைகளுக்கு மேல் இருக்கலாம் என உரையாடலின்போது கூறினார். முறையே ‘கறங்கு’ மற்றும் ‘பாடுக பாட்டே’ அவருடைய இவ்விரு முகங்களின் அண்மைய காலப் பரிணாமத்தைக் காட்டுகின்றன. கும்பமுனிக் கதைகள், கான் சாகிப், தன்ராம் சிங், இடலாக்குடி ராசா, பூனைக்கண்ணன், ஏவல் போன்ற சிறுகதைகளே இன்று அதிகம் பேசப்படுகின்றன. அவருடைய மரபிலக்கியக் கட்டுரைகள் தமிழுக்கு அவர் விட்டுச் செல்லும் கொடை என்றே சொல்லலாம். தொடர்ச்சியாக இயங்கி வரும் மூத்த எழுத்தாளர்களை நாம் சரிவர உள்வாங்குவதில்லையோ என எனக்கு ஓர் எண்ணம். எழுத்தின் ஊடாக அவர்கள் அடைந்திருக்கும் பரிணாமத்தை நாம் கணக்கில் கொள்வதில்லை. நாஞ்சில் நாடனையும் அப்படி வட்டார வாழ்வியலை எழுதியவர் எனப் பரவலாகப் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால் அவருடைய அண்மைய சிறுகதைகளை வாசிக்கும்போது தமிழ்ச் சிறுகதைகளின் எல்லையை எத்தனை தூரம் நகர்த்தி இருக்கிறார் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. எனினும் இக்கட்டுரை அவருடைய சிறுகதைகளைப் பற்றியது அல்ல.


‘தலைகீழ் விகிதங்கள்’, ‘என்பிலதனை வெயில் காயும்’ ‘மாமிசப் படைப்பு’ ‘மிதவை’ ‘சதுரங்கக் குதிரை’ ‘எட்டுத்திக்கும் மதயானை’ என ஆறு நாவல்கள் எழுதியுள்ளார். 1977 ஆம் ஆண்டு ‘தலைகீழ் விகிதங்கள்’ வெளியாகிறது. ஆக சமீபத்திய நாவலான ‘எட்டுத்திக்கும் மதயானை’ வெளியாகி இருபத்தி மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. 2000க்குப் பிறகான தமிழ் நாவல்கள் பல மாற்றங்களை, பரிணாமங்களை அடைந்துள்ளன. பெருநாவல்கள் ஆட்சி செலுத்திய காலகட்டத்திற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை நாஞ்சிலின் நாவல்கள். சிறுகதையாசிரியராக அவருடைய அசலான பங்களிப்பு அளவிடப்படும் அளவிற்கு அவருடைய நாவல்கள் விவாதிக்கப்படுவதில்லை என்று எனக்குத் தோன்றுவதுண்டு. அவர் தொடர்ச்சியாகக் கதைகளை எழுதி வருவதால் சிறுகதைகள் பற்றிய விவாதங்களில் ஏதேனும் ஒருவகையில் அவருடைய கதைகள் விவாதத்தில் புழங்குகின்றன. ‘தலைகீழ் விகிதங்கள்’ ‘சொல்ல மறந்த கதையாகத்’ திரைப்படமான வகையில் கவனம் பெற்றது. பிற நாவல்கள் பெரிதாக விமர்சிக்கப்பட்டதில்லை. தமிழின் சிறந்த பத்து நாவல்கள் பட்டியலில் அவ்வளவாக யாரும் நாஞ்சிலின் நாவல்களைப் பட்டியலிட்டதும் இல்லை. இந்த ஆறு நாவல்களை மொத்தமாக வாசிக்கும்போது, நாவலாசிரியராக நாஞ்சில் நாடனை நாம் சரியாக மதிப்பிடவில்லை எனும் நெருடல் எனக்கு ஏற்பட்டது. என் நோக்கில் ‘என்பிலதனை வெயில் காயும்’ ‘மிதவை’ மற்றும் ‘சதுரங்கக் குதிரை’ ஆகிய மூன்று நாவல்களும் தமிழின் சிறந்த நாவல்களின் வரிசைக்கு உகந்தவை என உறுதியாகச் சொல்வேன்.


நாஞ்சில் நாடனுக்கு மெய்யியல் கோட்பாடுகள் மீது பெரிய ஈர்ப்பு ஏதுமில்லை. ‘பசியைப் புரிந்துகொள்வதற்குத் தத்துவம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. மனிதகுல வரலாறு தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு மொழிகூடத் தெரிந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை.’ (எட்டுத்திக்கும் மதயானை) எனும் பூலிங்கத்தின் மனவோட்டமே அவர் நிலைப்பாடும் எனக் கொள்ள இயலும். படைப்பில் தத்துவத்தின் பங்களிப்பை எப்போதும் நிராகரித்தே வருகிறார். எனினும் நாஞ்சில் நாடனின் தத்துவப் புலத்தை ‘இருத்தலியல்’ என வகைப்படுத்தலாம். எட்டுத்திக்கும் மதயானையில் ‘முன்னும் போகவிடாத பின்னும் போகவிடாத நின்ற பாவனையில் ஓடிக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளும் சுய நிந்திப்புக்கு உள்ளான வாழ்க்கை’ எனும்வரி அவருடைய எல்லா நாவல்களின் முதன்மைப் பாத்திரங்களுக்கும் பொருந்தும். நாஞ்சில் நாடனின் நாவல்களின் தலைப்புகளை மட்டும் கருத்தில் கொண்டால்கூட அடிப்படையில் நாஞ்சில் நாடனின் நாவல்கள் இருத்தலியல் தன்மை கொண்டவை என்பதை உணர்ந்துகொள்ள முடியும். ‘தலைகீழ் விகிதங்கள்’. திருமண உறவில் சமூகப் பொது வழக்கத்தில் உள்ள ஆண் பெண் உறவுச் சமன்பாட்டைத் தலைகீழாக்குகிறது. இந்தத் தலைகீழாக்கம் ஏன் நிகழ்ந்தது? அதன் விளைவுகள் என்ன என்பதை விசாரிக்கிறது. சிவதாணுவிற்கும் பார்வதிக்குமான திருமண உறவின் நிறப் பிரிகைகள் நுணுக்கமாகப் பதிவாகின்றன. சொக்கலிங்கம் பிள்ளை, நீலாப்பிள்ளை ஆகியோரிடம் அவமானத்தை எதிர்கொள்ளும் சிவதாணு அங்கே பார்வதியின் தங்கை பவானியிடம் மட்டுமே ஆறுதலை அடைகிறான். அகங்காரப் பகடையாட்டத்தின் துல்லியப் பிரதி. ‘மாமிசப் படைப்பு’ என்பது இறைவனுக்குப் படைக்கப்படும் பலிச் சோறு. எல்லாம் இயல்பாகவும் நல்லவிதமாகவும் இருக்க வேண்டிச் செய்யப்படும் நேர்த்தி அல்லது நன்றிக்கடன். கந்தையா பலியிடப்படுகிறான். எல்லா காலங்களிலும் தங்கள் இலக்கை மனிதர்கள் அடைய எவரையோ பலியளிக்க வேண்டியதாய் இருக்கிறது.


‘என்பிலதனை வெயில் காயும்’ திருக்குறளில் இருந்து எடுத்தாளப்படும் தலைப்பு. எலும்பு இல்லாத புழு போன்ற உயிரினங்களை வெயில் வதைக்கிறது. என்பிலதனை வெயில் காயும் எனும் வரி மனதில் விரிந்தபடி இருக்கிறது. ஓர் உண்மையை, ஒரு கண்டடைதலைக் குளிர்ந்து இறுகிய உள்ளத்துடன் சொல்கிறது. ஏன் அப்படி என்றொரு கேள்வியாகவும் மன்றாட்டாகவும் அது பரிணாமம் கொள்கிறது. எலும்பு உடலுக்கு வடிவம் அளிக்கிறது, மனிதரை நிலை நிறுத்துகிறது, அதற்கு அன்பு இணை வைக்கப்படுகிறது. கதை நாயகன் சுடலையாண்டிக்கு அன்பில் குறைவில்லை. தாயும் தந்தையும் மரித்த பின்னரும்கூடத் தாத்தாவும் ஆத்தாவும் அவர்களை வருத்திக்கொண்டு அவனைக் காக்கிறார்கள். அவனிடத்தேயும் அவர்கள் மீது கொள்ளை அன்புண்டு. பொருளியல் வாழ்வே மனிதர்களைத் தாங்கும் என்பாகிறது. பசியை வடவைத்தீ என்பார்கள். பெரும்பசிதான் இங்கு வெயில். என்பு என்பதை முதுகெலும்பு எனக் கொண்டோம் எனில் பசி வாட்டும்போது மானத்துடன் தருக்கி எழுந்து நிற்க முடியுமா? மானத்தையும் ரோஷத்தையும் ஆவியாக்கியபடி நின்று எரிகிறது பசித்தீ. பசித்திருப்பவனுக்கு, ஒவ்வொரு வேளை உணவிற்காகவும் அலைந்து திரிபவனுக்கு மானத்துடன் வாழ உரிமையில்லை. அத்தகையவன் அவமானப்படுத்தப்படுவது அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழிமுறை. அவற்றை மென்று அதக்கிக்கொண்டு அவன் வாழப் பழகியாக வேண்டுமா? எனக் கேள்வி எழுப்புகிறது இந்நாவல்.


‘சதுரங்கக் குதிரை’ சதுரங்கத்திற்கு வெளியே புழங்க முடியாதது. சதுரங்கத்திற்குள்ளும் தன் விருப்பத்திற்கு ஏற்ப ஓட இயலாது. அதன் அசைவுகள் விதிமுறைகளால் முடக்கப்பட்டவை. பிற காய்களின் நிலைகள் அதன் அசைவை முடிவு செய்கின்றன. சுய விருப்பிற்கும் (free will) விதிக்கும் (fate) வாழ்க்கையுடன் உள்ள உறவைச் சுட்டிக்காட்ட பயன்படுத்தப்படும் வலுவான படிமம். மனிதன் ஒரு கணக்குடன் காய்களை நகர்த்துகிறான் ஆனால் அவற்றைப் பொருளற்று ஆக்கும் வேறொரு ஆட்டம் மறுமுனையில் நிகழ்ந்துவிடுகிறது. மனித வாழ்க்கை என்பது ஊழுடன் ஆடும் சதுரங்கம். நாராயணன் எனும் 45 வயது திருமணமாகாதவன் நாவலின் நாயகன். அவனுடைய பொய்த்துப்போகும் கனவுகளின் ஊடாக வாழ்க்கைக்கான பிடிமானத்தைத் தேடுவதுதான் நாவல். ‘எட்டுத்திக்கும் மதயானை’ அனைத்து திசைகளிலிருந்தும் மனிதன் எதிர்கொள்ளும் நெருக்கடியைச் சொல்வது. பூலிங்கத்தால் எங்கும் கால் தரிக்க முடியவில்லை. எல்லா திசைகளில் இருந்தும், இடங்களிலிருந்தும் துரத்தப்பட்டோ வெளியேறியபடியோ இருக்கிறான். எனினும் அவனை யானைகள் நசுக்கிவிடவில்லை. அவனுக்கு ஏதோ ஒரு திசையும் வழியும் புலப்பட்டுத் தொடர்ந்து ஓடுகிறான். எதையாவது பற்றிக்கொண்டு கரையேறிவிட முடியாதா என்று மனிதர்கள் ஆழ்கடலில் தங்களுக்கான ‘மிதவையைத்’ தேடித் தத்தளித்துக்கொண்டே இருக்கிறார்கள். ‘ஆழியின் ஆழத்தில் அமிழ்ந்துவிடாமல் இருக்க கையில் கிடைக்கும் எதையும் பற்றிக்கொள்கிறார்கள். கரை கைக்கெட்டும் தொலைவில் நெருங்கும்போதெல்லாம் ஒரு பேரலை அவர்களைத் திசை மாற்றி அலைக்கழிக்கிறது. மனிதன் கரைதேடி அலைந்து கரையேற முடியாமல் அலைக்கழிந்து கரைந்து போகும் மிதவை. முடிவற்ற வாழ்க்கைப் பேராழியில், கடலில் மிதக்கும் மிதவை காற்றால் அது விரும்பும் திசைக்கு அடித்துச் செல்லப்படுகிறது. மிதவையின் இலக்கை அது முடிவு செய்துகொள்வதில்லை. ஆனால் சண்முகம் அமிழ்ந்து அழிந்துவிடவில்லை. கிடைப்பதைப் பற்றிக்கொண்டு மூச்சுவிட்டுக்கொண்டுதான் இருக்கிறான்.


யதார்த்தவாத எழுத்தாளர் என்றறியப்படும் நாஞ்சில் நாடன். மாமிசப் படைப்பு நாவலில் மட்டுமே அப்படி வெளிப்படுகிறார். பிற அனைத்து நாவல்களையும் நவீனத்துவ/ இருத்தலியல் ஆக்கங்கள் என்றே சொல்ல முடியும். அதிகமும் நகரத்தை மையமாகக் கொண்ட, தனிமனித அகத்தை மையமாகக் கொண்ட இருத்தலியல் தளங்களிலிருந்து கிராமங்கள் நோக்கியும், சமூகச் சூழல் நோக்கியும் இருத்தலியல் சிக்கலைப் பேசியதே நாஞ்சில் நாடன் ஏற்படுத்திய மிக முக்கியமான உடைப்பு என்று சொல்லலாம். தனிமனித இருத்தலை வரலாற்றுடன் இணைத்த முதன்மை மற்றும் முன்னோடிப் படைப்பு என ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’யைச் சொல்லலாம். ஆனால் இன்று சிங்காரத்தின் நாவல்களுக்கு இருக்கும் இடம் மிதவை வெளிவந்த காலத்தில் கிடையாது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். ‘மிதவையில்’ சண்முகம் பம்பாய்க்கு ரயிலில் செல்லும் பகுதியை அவ்வகையில் தமிழ் நாவலின் மிக முக்கியமான பயணம் என்பேன். அகம் நோக்கி மட்டும் திரும்பியிருந்த இருத்தலியல் புனைவு குறியீட்டு ரீதியாகப் புறத்தில் வேர்கொள்ளும் பயணம் ‘மிதவையில்’ தொடங்குகிறது. ‘எட்டுத்திக்கும் மதயானையில்’ உச்சம் கொள்கிறது. மற்றுமொரு தொடர்ச்சியைச் சுட்ட வேண்டும் என்றால் எட்டுத்திக்கும் மதயானையும் அடிப்படையில் புயலிலே ஒரு தோணியைப் போல் சாகசத்தன்மை நிறைந்த நாவல்தான்.


‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலை பூமணியின் ‘வெக்கையுடன்’ ஒப்பிட்டு நாஞ்சில் நாடனின் தனித்துவமான பங்களிப்பை உணர்ந்துகொள்ள முடியும். ‘என்பிலதனை வெயில் காயும்’ வளரிளம் பருவத்தில், ஆளுமை உருகொள்ளும் காலத்தில் பசித்தவன் எதிர்கொள்ளும் அவமானங்களின் கதை எனச் சொல்லலாம். வளரிளம்பருவத்து மனதின் நுண்மைகளை வெளிப்படுத்திய மிக முக்கியமான நாவல். பூமணியின் ‘வெக்கையும்’ வளரிளம்பருவத்து வாழ்க்கையை வேறொரு பின்புலத்திலிருந்து பேசுகிறது. ‘வெக்கை’ வலுவான காட்சி சித்தரிப்புகளைக் கொண்டது. தந்தை- மகனுக்கு இடையேயான உறவைக் குறைந்த சொற்களில் காட்டிச் செல்கிறது. ‘என்பிலதனை வெயில் காயும்’ நாவலிலும் சுடலையாண்டி ஒரு பெருமழையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் இடம் மற்றும் அவன் தந்தையுடன் ஆற்றுக்குக் குளிக்கச் செல்லும் பகுதி ஆகியவை அபாரக் காட்சி அனுபவத்தை அளிப்பவை. ‘வெக்கையை’ விட ‘என்பிலதனை’ மேலான வாசிப்பனுபவத்தை அளிக்க முதன்மை காரணம் புறச் சித்தரிப்பு அளவுக்கே ஆழமான அகச் சித்தரிப்பை அளிப்பதுதான். யதார்த்தவாத/இயல்புவாதப் புறச் சித்தரிப்புக்கும் நவீனத்துவ/ இருத்தலியல் அகச் சித்தரிப்புக்கும் இடையிலான பாலம் என நாஞ்சில்நாடனின் நாவல்களைச் சொல்லலாம். இந்த நகர்வு பிற்காலத் தமிழ் நாவல்களுக்குப் பாதையமைத்து அளித்தது.


2

நாஞ்சில் நாடனின் நாவல்களின் நாயகர்கள் யார்? ‘மாமிசப் படைப்பை’ மட்டும் விதிவிலக்காக கொண்டால், வேளாண்மைக் குடும்பப் பின்னணி கொண்ட, நாஞ்சில் நாட்டுக் கிராமங்களில் ஒன்றைப் பூர்வீகமாகக் கொண்ட முதல்தலைமுறைப் பட்டதாரி இளைஞர்கள். ‘சதுரங்கக் குதிரையின்’ நாராயணன் மட்டுமே நாற்பத்தி ஐந்து வயதான திருமணமாகாத மத்தியவயதினன். ‘என்பிலதனை வெயில் காயும்’ சுடலையாண்டி கல்லூரி மாணவன், ‘எட்டுத்திக்கும் மதயானை’ பூலிங்கமும் அறிமுகமாகும்போது கல்லூரி மாணவன்தான். கல்வி இடைநின்ற கல்லூரி மாணவன் என வேண்டுமானால் சொல்லலாம். ‘மிதவை’ சண்முகமும், ‘தலைகீழ் விகிதங்கள்’ சிவதாணுவும் பட்டம் பெற்று வேலைக்காகத் தட்டழிபவர்கள். ‘மாமிசப் படைப்பு’ கந்தையாவும் நடுத்தர வயதினன்தான். இவர்கள் அனைவருமே பசித்தவர்கள், தங்கள் திறன் மீது நம்பிக்கை கொண்டவர்கள். பிலத்திலிருந்து, கிடைக்கும் நைந்த கயிற்றைப் பற்றி மேலேறிச் செல்ல முனைபவர்கள், நடைமுறை அறிவு மிகுந்தவர்கள், எப்படியாவது நிலத்தில் கால்பாவி, வேரூன்றி நிற்க வேண்டும் எனும் வெறி கொண்டவர்கள். சொல் பொறுக்க முடியாத நுண்ணுணர்வு கொண்ட ஒருவகை தொட்டாச்சிணுங்கிகள்.


அவர்கள் தனியர்கள். ‘எந்தத் தனியனும் கூர்மையான அர்த்தத்தில் சமூகத்தின் எதிரி. சமூகம் என்பதும் பொதுவான அர்த்தத்தில் தனியனுக்கு எதிரி.’ (எட்டுத்திக்கும் மதயானை) ‘உலகெங்கிலும் மனிதர்கள் நெரித்துக் கிடந்தாலும் ஒற்றைத் தனியனாய் உயிர் துடித்தது’ (என்பிலதனை வெயில் காயும்) ‘கூட்டத்தோடு போனாலும் சரி, தனியாகப் போனாலும் சரி, எப்படியும் வாழ்க்கை அர்த்தமற்றதுதானா?’ (சதுரங்கக் குதிரை) ஆகிய வரிகள் அவர்களைப் புரிந்துகொள்ள உதவுபவை. சிவதாணுவிற்கோ, சண்முகத்திற்கோ, கந்தையாவிற்கோ, சுடலையாண்டிக்கோ, நாராயணனுக்கோ, பூலிங்கத்திற்கோ சாதிப் பின்னொட்டு கிடையாது. அவர்களின் சாதி திட்டவட்டமாக நாவல்களில் சுட்டப்படுகிறது. நாயகர்களைத் தவிர பெரும்பாலான பிற பாத்திரங்கள் மிகத் தெளிவான சாதி அடையாளங்களுடன், சாதிப் பின்னொட்டுடன் திகழ்கிறார்கள் எனும்போது நாயகர்களின் பின்னொட்டுத் தவிர்ப்பு ஒரு பிரக்ஞைப் பூர்வத் தேர்வு எனக் கருத இடமுண்டு. அவன் தன் பொது அடையாளத்திலிருந்து பிரிந்த தனியன் என்பதை நிறுவுவதாகவும் உள்ளது. அவர்கள் தனியர்கள் மட்டுமில்லை தனித்துவமானவர்கள் என நம்புபவர்களும்கூட. ‘அலுவலக உடை தவிர மற்ற சமயங்களில் ஒரு காவி வேட்டியும் காவித் துண்டும்… நான் உங்களுடன் சம்பந்தம் உடையவன் அல்ல எனும் விலகல். ஒருவேளை தனக்குக் கல்யாணம் ஆகாமல் போனதற்கு அது ஒரு அர்த்தத்தையும், அத்துடன் மலிவானதோர் கம்பீரத்தையும் தரலாம்.’ (சதுரங்கக் குதிரை). ‘கெப்ளரின் இயக்க விதிகளையும் காஷி ரெய்மான் இன்டகிரல் சமன்பாடுகளையும் படித்தது காலைதோறும் புல்லறுக்கவா?’ (தலைகீழ் விகிதங்கள்) எனத் தனக்குள்ளாகக் கேட்டுக்கொள்கிறான் சிவதாணு. தான் படித்தவன் ஆகவே பெரும்பாலும் நிலத்தில் உழைக்கும் தன்னைச் சுற்றி இருக்கும் பிறரிடமிருந்து வேறானவன் என நம்புகிறான். இவ்வகையில் அவன் ஒரு தலைமுறையின் பிரதிநிதியாகிறான்.


உலக இயக்கத்தின் அநீதியைக் கண்டுணர்பவர்கள். அவற்றுக்கு எதிராகக் கொந்தளித்தும் கொப்பளித்தும் எதிர்வினையாற்றி ஓயாமல் அவர்களைத் தடுத்து நிற்கும் சுவர்களை முட்டி மோதிப் பெயர்க்கக் கனவு காண்பவர்கள். தலைகீழ் விகிதங்களில் கோலப்பப் பிள்ளையின் வயலில் தேங்கியிருந்த நீரை யாருக்கும் தெரியாமல் வெளியேற்றுகிறான் சிவதாணு. ‘கெடுதல் செய்ய வேண்டும் என்ற நோக்கம் சிவதாணுவுக்குக் கிடையாது. ஆனால் தெரிந்தே குற்றம் செய்கின்ற இந்த ஒட்டுண்ணிகளுக்குப் பதிலுக்குப் பதில் செய்துதான் தீர வேண்டும் என்பதில் அவன் உறுதியாக இருந்தான். இடது கன்னத்தில் அறைந்தால் வலது கன்னத்தைக் காட்டு என்ற கொள்கையில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. அது கோழைத்தனமான ஒரு சமூகத்தை உருவாக்குகிறது என்று நம்பினான். எனவே இடது கன்னத்தில் அறைந்தவனின் இரண்டு கன்னத்திலும் அறைய வேண்டும் என்பதே அவனது சித்தாந்தமாக உருவெடுத்திருந்தது.’ நாஞ்சிலின் நாயகர்கள் ‘கோபக்கார இளைஞனாகத்தான்’ அறிமுகமாகிறார்கள். ‘சோம்பேறிக் குயிலினங்கள் ஏமாளிக் காகங்களை எத்திப் பிழைக்கும் வாழ்க்கை முறையை வெடி வைத்துத் தகர்க்க’ கனவு காண்பவர்களாகத்தான் அவர்கள் திகழ்ந்தார்கள். ‘இதோ நிற்கும் இத்தனை பேரில் எவன் என்னைக் கேட்டான்? தம்பி யாரு? எந்த ஊருக்கு போணும்? என்ன செய்யப் போறே? என்று. இவர்களின் வயல்களில் மணல் பாய்ந்தால் என்ன? வீட்டின் கூரை தீப்பிடித்து எரிந்தால் என்ன? இடிந்து சமுத்திரத்தில் ஆழ்ந்தால் என்ன? யார் யாருக்குப் பாதுகாப்பு? மக்களுக்காக மக்களே செய்யும் மக்களாட்சி… மயிரைப் பிடுங்குகிறான்கள் மக்களாட்சித் தலைவன்கள்.’ (என்பிலதனை வெயில் காயும்). ‘மாமிசப் படைப்பில்’ கந்தையா நியாயவானாகவும் முன்கோபியாகவுமாகவே வருகிறான். எட்டுத்திக்கும் மதயானை பூலிங்கத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.


வாழ்க்கைப்படியில் மேலே இருப்பவர்களின் சிறுமை கண்டு வெகுண்டெழுவது நாஞ்சில் நாடனின் நாயகர்களின் பொது இயல்பு. ஒருவகையில் அவருடைய படைப்பின் ஆதார இயல்பு எனச் சொல்லத் தோன்றுகிறது. ‘மாமிசப் படைப்பில்’ கந்தையா தன்னைக் காட்டிலும் அதிகாரம் படைத்தவர்களுடன் மோதுகிறான். கந்தையா வேலையில் சாமர்த்தியசாலி. கூலியாக இருந்தாலும் ஜாதகம் பார்ப்பது வழியாக அவனுக்கு ஒரு சமூக மரியாதை ஏற்படுகிறது. ஒருவகையின் கிராவின் நிலைநிற்றல் கதையை நினைவுபடுத்தும் சித்தரிப்பு. விவசாய வேலைக்குக் கறாராகக் கூலி வாங்கும் அவன் ஜாதகத்திற்கு அப்படி எதையும் வாங்குவதில்லை. ஊரில் பெரும் நிலக்கிழாரும் முதலடியுமான கடுவாய் கங்காதரம் பிள்ளை, அவருடைய மைத்துனன் விக்கிரமசிங்கப் பிள்ளை ஆகியோரைப் பகைத்துக்கொள்ள நேர்கிறது. விக்கிரமசிங்கப் பிள்ளையின் மகன் சோனாச்சலத்தின் அத்துமீறலைக் கண்டிப்பதில் கந்தையாவுக்கும் அவர்களுக்கும் முதல் பகை மூள்கிறது. விவசாயக் கூலிகளான தன் கூட்டத்தினர் நெல் சாகுபடி தவிர பிற சமயத்தில் ஏதேனும் ஒருவகையில் வருமானத்தைப் பெருக்க யோசனை செய்கிறான் கந்தையா. ஆற்றோரம் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் காய்கறித் தோட்டம் போடுகிறார்கள். அது கடும் பொறாமையை உருவாக்குகிறது. விக்கிரமசிங்கம்- கங்காதரப் பிள்ளையினர் கந்தையாவுடன் ஆடும் சதுரங்க ஆட்டம்தான் நாவல். இறுதியில் கந்தையா பலியாகிறான்.


பிற நாவல்களின் நாயகர்கள் அனைவரும் எப்படியோ பிழைத்து வாழ்கிறார்கள். அவர்களிடம் இந்த ஆவேசமும் ஆத்திரமும் உள்ளத்தில் குமுறும் அளவிற்கு வெளியே வெளிப்படுவதில்லை. அதை அனுமதிக்காத மான அவமானங்களாலும், பொருளாதார வசதியின்மையாலும், குடும்பப் பொறுப்பின் சுமையினாலும் தளையுண்டவர்கள். ரகசியமாக சிலபோது சிறு சிறு இளைப்பாறலாகத்தான் தங்கள் வஞ்சங்களை நேர் செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. பூலிங்கம் வைக்கப்போருக்குத் தீ வைக்கிறான். சிவதாணு நீரைக் கொத்திவிடுகிறான். சிறுகதைகளில் உலாவரும் கும்பமுனி இதே கோபக்கார இளைஞனின் நீட்சிதான். ஆவேசம் கொண்டவன் தன்னால் எதையும் நிகழ்த்த இயலாது, தான் பல்வேறு தளைகளால் கட்டுண்டவன் என உணரும்போது கரவாக இருக்கும் கோபத்தையே பகடியாக வெளிப்படுத்துகிறான். நேர் நிற்கும்போது கந்தையா போல மரித்துப்போக வேண்டியதுதான்.


‘மாமிசப் படைப்பு’ ஒரு துருவம் எனில் ‘சதுரங்கக் குதிரை’ மற்றொரு துருவம். கோபக்கார இளைஞன் மறைந்து மத்திய வயதில் மரணத்தை அஞ்சும் தனியனின் கதையாகிறது. என் நோக்கில நாஞ்சில் நாடனின் சிறந்த நாவல் என இதையே சொல்வேன். நாராயணனுக்குப் பல்வேறு திருமண வாய்ப்புகள் நெருங்கி வருகின்றன. தன்னை விலக்கி வைத்துக்கொள்ள முயன்றாலும் உள்ளூரச் சமநிலை இழந்து தத்தளிக்கிறான், சபலப்படுகிறான். முதிர்க் காளையரின் சிக்கலைப் பேசும் பெருமாள் முருகனின் ‘கங்கணம்’ நாவலுடன் ஒப்பிட முடியும். துணைக் கதை மாந்தர்கள் மற்றும் நாவல் நிகழும் களம் ‘சதுரங்கக் குதிரையை’ ‘கங்கணத்தை’ விட மேலானதாக ஆக்குகிறது. தொழிலின் பொருட்டு அலைந்து திரிபவனின் வாழ்வு நாராயணனுக்கு. விடுதிகளும் உணவகங்களும் நாஞ்சிலின் கதைகளில் ஒரு பாத்திரம் என்றே சொல்லலாம். ஒப்பு நோக்க ‘என்பிலதனை வெயில் காயும்’ மற்றும் ‘மிதவை’ நாயகர்களைப் போலக் கடும் பசி நாராயணனை அலைக்கழிக்கவில்லை. சேர்த்து வைத்த பணத்திலிருந்து தனக்கென ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பைக்கூட வாங்கிக்கொள்கிறான். நாராயணனின் வாழ்க்கையை ஒரு மினிமலிஸ வாழ்க்கை எனச் சொல்லலாம். அவனால் எல்லைப் போர்வீரனைப் போல மூன்று மணிநேர முன்னறிவிப்பில் இடம் பெயர முடியும். அவனுடைய இயல்பை இந்த விவரணை துல்லியமாகச் சுட்டுகிறது. “நலமாக இருக்கிறேன். எல்லோரும் சுகமாக இருக்கிறீர்களா? உங்கள் கடிதம் கிடைத்தது,” என்பதற்கு மேல் நான்காவது சொற்றொடருக்குப் போராட வேண்டி இருக்கிறது. சில சமயம் தேதி போடாமல் அஞ்சலட்டைகளை அச்சிட்டு வைத்துக்கொள்ளலாமா என்றும்கூடத் தோன்றும்.” அந்நிய இடத்தில் தனித்தவனாக அறையில் இருக்கும்போது மரணபயம் ஏற்படுகிறது. ஆனால் அது அஞ்சுவதற்குரிய ஒன்றா? ‘ஆனால் உண்மையில் சாவென்பது குளிருக்கு சுகமான போர்வைக்குள் புகுந்துகொண்டு உறங்குவது போன்றதாக இருக்கலாம்’ எனப் புரிந்துகொள்கிறான்.


நாஞ்சிலின் நாயகர்கள் சிறுமை கண்டு சீறுபவர்கள் மட்டுமில்லை, மனவிரிவின் தருணங்கள் அவர்களுக்கு ஆனந்தக் கண்ணீரைப் பெருக்குகின்றன. ‘என்பிலதனை வெயில் காயும்’ சுடலையாண்டிக்கு உணவிட்ட வேலம்மை பெரியம்மாவை எண்ணும்போதும், உயர்நிலைப்பள்ளியில் மதிய உணவு விளம்பும் சதாசிவத்தை நினைக்கும்போதும், ‘யாருக்கெல்லாமோ இந்த உடம்பு கடன்பட்டிருப்பதை எண்ணி’ கண்ணீர் சிந்துகிறான். நல்ல உணவு சமைத்த, விளம்பிய அத்தனை பேரையும் நாஞ்சில் நாடனின் நாயகர்கள் நினைவில் கண்ணீருடனும் நன்றியுடனும் போற்றுகிறார்கள். ‘யாம் உண்பேம்’ ‘இடலாக்குடி ராசா’ என அவருடைய புகழ் பெற்ற கதைகளும் இத்தகைய மனவிரிவு தருணங்களால் நிரம்பியவை. உணவைச் சாதி மத அடையாளப் பாகுபாட்டிற்கு அப்பால் பகிர்ந்துகொள்வது மனவிரிவை அளக்கும் கருவியாகிறது.


நாஞ்சிலின் நாயகர்கள் உத்தமச் சீலர்கள் இல்லை. சிறுவனாக சுடலையாண்டி (என்பிலதனை வெயில் காயும்) ஒரேயொரு தேங்காயைத் திருடி பாவனாசத்திடம் மாட்டிக்கொள்கிறான். மிக விஸ்தாரமாகப் பலவேசம் பிள்ளையிடம் அவன் அடைந்த அவமானம் விவரிக்கப்படுகிறது. திருடனாகத் தண்டனைக்காகக் காத்திருக்கும் வாதை மனதைப் பதட்டமடையச் செய்கிறது. தலைகீழ் விகிதங்களில் மனைவி பார்வதியாலும் மாமனார் சொக்கலிங்கம் பிள்ளையினாலும் அவமதிக்கப்பட்டாலும் பதிலுக்கு சிவதாணுவும் பார்வதியை அகங்காரம் கொண்டு சீண்டுகிறான். ‘மிதவையில்’ முதன்முறையாக ரயிலில் பயணிக்கும் சண்முகம் எதிரில் உறங்கும் பெண்ணின் காலை நிமிண்டி கிளர்ந்து சுய மைதுனம் செய்துகொள்கிறான். ‘எட்டுத் திக்கும் மதயானை’ முழுக்கவே நியாய அநியாய இருமையைக் கடந்து வாழ்வதற்காக எந்த எல்லைவரையும் செல்லலாம் எனச் சொல்கிறது. ‘வாழ்வின் மதிப்பீடு என்பது பழகிய தெருவிலும் ஊரிலும் உறவுகளிலும் மட்டும் பயிராகும் செடி போலும்’ என்பதே பூலிங்கத்தின் கண்டடைதல். முகமறியா தேசத்தில் எவருக்காக நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்? பயணிகள் புழங்கும் எந்தச் சுற்றுலாத்தலங்களுக்குச் சென்றாலும் அங்கே அதுவரை கடைபிடித்த நெறிகள் தளர்ந்து வேறொரு மனிதர் எழுந்து வருவதை நாம் காண்கிறோம். சுற்றுலாத்தலங்கள் குற்றங்களின் தொட்டிலும்கூட. காவலுக்கு பூலிங்கத்தை இருக்கச் சொல்லிவிட்டு சேட் குடும்பத்துடன் கிளம்பிச் சென்ற பிறகு முதலாளி சேட்டின் மகனுடைய அறைக்குள் நுழைந்து வாசனை மிகுந்த சோப்பை நுரைக்க நுரைக்க தேய்த்துக் குளித்துக் கட்டிலில் படுத்து உறங்கி எழுகிறான். இரண்டு நாட்களுக்குப் பின்னர் பிடிபட்டு வெளியேற்றப்படும் தருணம் நாவலின் மிகக்கூர்மையான இடங்களில் ஒன்று. அவனுக்குப் பரிவுடன் அன்னமிட்ட பாபி “ஏன் வீட்ல நீ இதைச் செய்யணுமாடா?” எனக் கோபம் தெறிக்கக் கேட்கும்போது அவமானம் பிடிங்கித் தின்கிறது. ரயிலில் பூலிங்கம் ‘சரக்கைப்’ பறிகொடுத்தது போலவே அவனும் எவனோ ஒருவனின் பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்கிவிடுகிறான். சுடலையாண்டி இந்தி ஆசிரியரை வீம்பாக அவமதிக்கும் தருணம் ஒன்றை என்பிலதனை வெயில் காயும் நாவலில் வாசிக்க முடிகிறது. இந்தி ஆசிரியர் ஒரு மதிப்பெண் போட்டிருந்தால் தேர்ச்சி அடைய செய்திருக்கலாம் எனும்போது விடைத்தாளைக் கிழித்து எறிகிறான். வாசிக்கச் சொல்லும்போது இறுக்கமாக மறுக்கிறான். அவனுடைய வீம்பு ஆசிரியரை முகம் சிவக்கச் செய்து, கண்களில் நீர் சுரக்க வைத்தது. இந்தி மதிப்பெண்கள் தேர்வு முடிவுகளில் எவ்விதச் செல்வாக்கும் செலுத்துவதில்லை. நமக்கு பாதிப்பற்ற நிலையில் மனிதன் தருக்கி நின்று வீராப்பு காட்ட முடியும். ஒருவகை போலி நிறைவை பெற முடியும்.


பிரதான பாத்திரங்களின் இத்தகைய பிசிறுகள் அவர்களை அசல் மனிதர்களாக நம்முன் நிறுவுபவை. விதிவிலக்கு மாமிசப் படைப்பு கந்தையா, அவனுடைய ஆளுமையின் மறுபக்கம் ஏதும் பதிவாகவில்லை. வணிக மற்றும் பிரச்சார இலக்கியத்திலிருந்து எது நவீன இலக்கியத்தைத் தனித்துக் காட்டுகிறது என்றொரு கேள்விக்கு விடை அதன் உள்ளுறையாக இருக்கும் இந்த விமர்சனப் போக்குதான் எனச் சொல்ல முடியும். நவீன இலக்கிய நாயகர் மேடையேறி உலகத்தை, சமூகத்தை விமர்சித்துவிட்டு இறங்கிச் செல்பவர் இல்லை. அவருக்குத் தான் உட்பட எதுவும் எவரும் விலக்கல்ல.


3

நாஞ்சில் நாடனின் நாயகர்கள் எவருடைய பிரதிநிதி? நாஞ்சில் நாடன் பரவலாக ‘வெள்ளாள எழுத்தாளர்’ என விமர்சிக்கப்படுவது போல் அவருடைய நாயகர்கள் அனைவரும் வெள்ளாளக் குடியைச் சேர்ந்தவர்கள் இல்லை. எட்டுத்திக்கும் மதயானையின் பூலிங்கம் வேளார்க் (குயவர்) குடி. மிதவை சண்முகம் இடையர்க் குடி எனத் தெளிவாக அடையாளங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன. சாதிப் பாகுபாடு தொந்தரவு செய்யும் அளவுக்கே ஒரே சாதியாக இருந்தாலும் அதற்குள் இருக்கும் வர்க்க பேதமும் நாஞ்சில் நாவல்களில் முக்கிய பேசுபொருள் ஆகிறது. சிவதாணு – சொக்கலிங்கம் பிள்ளை உறவும் (தலைகீழ் விகிதங்கள்), கந்தையா – கடுவாய் கங்காதரம் பிள்ளை (மாமிசப் படைப்பு) ஆகியோருக்கு இடையேயான உறவும் வர்க்க அடிப்படையில் புரிந்துகொள்ளத்தக்கதே. பூலிங்கம் வேலைக்குச் செல்லும் சேட் வீட்டில் தொலைகாட்சி நாடகத்தில் வரும் பெண்களைக் காணும்போது ‘இந்தியாவிற்குள் இன்னொரு பூத்துக் குலுங்கும் பாரத தேசம் இருக்கிறது போலும்’ எனத் தானறியாத வேறொரு வாழ்க்கைமுறையைப் பற்றி யோசிக்கிறான். உழைக்கும் மக்கள் மீது பல்வேறு தருணங்களில் வாஞ்சை வெளிப்படுகிறது. எட்டுத்திக்கும் மதயானையில் திம்மனின் மணப்பெண்னை விவரிக்கும்போது ‘சூரியக் கதிர்கள் காய்ச்சிப் பதப்படுத்திய முகம்’ என்கிறார். சதுரங்கக் குதிரையில் அவுரங்காபாதில் மாநில முதல்வர் நேரடியாக மக்களைச் சந்திப்பதால் ஏற்படும் ஜனநெரிசல் பற்றிய சித்திரம் ஒன்றுண்டு. தங்குவதற்கு அறைகூடக் கிடைக்காத அந்த நெரிசலில்கூட நாராயணனுக்கு மனிதர்களின் மீது எவ்வித முகச் சுளிப்புமில்லை. ‘உழைப்பின் முறுகிய உடல்கள். கிராமத்து மண்ணின் வியர்வையின் அழுக்கின் புகையிலைப் பொடியின் கலவை வாடை,’ என்றே எண்ணுகிறான்.


வேளாண்மையைக் கைவிட்டுப் பிழைப்புக்காக நகரத்தை நாடிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். சரியாகச் சொல்வதானால் நிலபிரபுத்துவத்திலிருந்து அரசு மைய சோசியலிச காலத்திற்கும் இடையிலான யுகசந்தியைச் சேர்ந்தவர்கள். சோசியலிசத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் இடையிலான காலகட்டத்தைக் கடந்த அடுத்த தலைமுறையினராகிய நாம் இப்போது முழு முதலாளித்துவ வாழ்வியல் கட்டத்தில் உள்ளோம். ஒரு காலகட்டத்தின் எழுத்திற்கும் யுகசந்தியின் எழுத்திற்கும் இடையில் பெரிய வேறுபாடு உண்டு. யுகசந்தி என்பது தூலமான மாற்றங்கள் மட்டுமில்லை. சூக்குமமான விழுமிய மோதல்களால் ஆனதும்கூட. ஒவ்வோர் யுகசந்தியும் ஏதோ ஒருவகையில் முந்தைய சந்தியை நகலெடுப்பதும் ஆகும்.


தலைகீழ் விகிதங்களில் சிவதாணு மாமனார் வீட்டில் வசிக்கிறான். தயக்கங்கள் இருந்த போதிலும் அவன் அங்கே தன்னைப் பொருத்திக்கொள்ள முயல்கிறான். அவனுக்கும் அவனுடைய தந்தை சிதம்பரம் பிள்ளைக்கும் இடையிலான வேறுபாட்டைக் கவனித்தால் சிவதாணு ஓர் யுகசந்தியின் பிரதிநிதி என்பது விளங்கும். ‘மாமனார் வீட்டில் வசதி வாய்ப்புகள் அமைந்தால் வாழ்வதில் என்ன சிக்கல்?’ என்றே நமக்கு தோன்றும். மாமனார் கொடுக்கும் பணத்தில் அங்கேயே வாழலாம் எனும் திட்டத்திற்கு அவனுடைய தந்தை சிதம்பரம் பிள்ளை ஒப்புக்கொள்ளவில்லை. சிதம்பரம்பிள்ளை முந்தைய யுகத்தவர். ‘வியாபாரியாக இருந்தால் லாப நட்டக் கணக்கைப் பார்த்து ஒப்புகொள்வார். ஆனால் மண்ணுடன் பிணைந்த விவசாயியால் எப்படி ஏற்க முடியும்?’ எனக் கேள்வி எழுப்புகிறார். விவசாயி வியாபாரி எனும் இருமையைக் கவனத்தில்கொள்ள வேண்டும். நிலத்துடன் பிணைப்பற்ற தலைமுறை நாம். இரு விழுமியத் தொகைகளுக்கு இடையேயான, இரு வாழ்க்கைமுறைகளுக்கு இடையேயான யுகசந்தியில் நின்று அதன் குழப்பங்களை எதிர்கொண்டு நிலைகொண்ட தலைமுறையின் பிரதிநிதிகள்தான் நாஞ்சிலின் நாயகர்கள். அந்தக் காலகட்டம் எத்தகையது? தோசை ஓர் அதிசய உணவாக இருந்த காலம். சம்பள வரவால் தூர்க்கப்படக் காத்திருந்த பள்ளங்கள் ஏராளமிருந்த காலம். வேலை பற்றிய செய்தியைத் தாங்கி வரும் தபால்காரர் நற்செய்தியை அறிவிக்க வரும் தேவதூதனாக வேலையில்லாப் பட்டதாரிகளுக்குத் தென்பட்ட காலகட்டம். தலைகீழ் விகிதங்களில் சண்முகம்பிள்ளை சொக்கலிங்கம்பிள்ளையிடம் பெண்ணைக் கட்டிக்கொடுப்பதில் உள்ள தேர்வைப் பற்றிச் சொல்கிறார் ‘பெரிய பணக்காரனுக்கு வாழ்க்கை பட்டு குறுணி அரிசி பொங்கிப்போட்டு புழுக்கச்சி வேலை செய்து சாகிறதைவிட இது உமக்குக் கசக்கவா செய்யீ..’ சொத்து என்பது புதிய யுகத்தில் நிலம் அல்ல, கல்விதான் எனும் காலமாற்றத்தை, பார்வை மாற்றத்தை அன்றைய நிலபிரபுத்துவ அமைப்பு அடைந்ததைக் குறிக்கிறது.


‘என்பிலதன் வெயில் காயும்’ சுடலையின் மனவோட்டமாக வரும் பகுதி ‘ஊரையே காலி செய்து சென்றுவிட வேண்டும், சாதிகள் பொருள்படாத நகரத்துச் சந்தில் வசிக்க வேண்டும் என எண்ணும்போதே சிற்றூரின் மகரந்தம், மனிதர்களில் சிலர் அறியாமை காரணமாக ஏதோ பேசுகிறார்கள் என்றாலும் அந்தப் புண்களை எல்லாம் ஆற்றிவிடுவதுபோல் இந்த இயற்கையின் குலவல்.’ இந்தக் குழப்பம் நாஞ்சிலின் நாயகர்களுக்கு எப்போதும் உடன்வருவது. மிதவையில் இயல்பாக இந்தக் கிராம நகர ஒப்பீடு நிகழ்கிறது. ‘துண்டு சதைக்காக நா தொங்கவிட்டுக் காத்திருப்பது போய், இங்கு சதைக் காட்சி திகட்டும் அளவுக்கு இருந்தது. பம்பாயின் அரேபிக் கடலைக் காணும்போது இங்கே கடல் கன்னியாகுமரிக் கடல் போல சவுந்தர்யம் கொண்டதல்ல. குறைப்பிரசவக் குழந்தை போலப் பயங்கரமும் ஆபாசமும் கொண்டதாக இருந்தது… இந்தக் காற்று உடலை மனதை மாசுபடுத்தும். சாப்பாட்டை நினத்தாலே ஒரு குமட்டல். பூரியின் நினைப்பே வெறுப்பூட்டியது.’ இவை சண்முகத்தின் மனவோட்டம். ஒப்புநோக்க மத்தியவயதில் இருக்கும் சதுரங்கக் குதிரை நாராயணனுக்குப் பெரிய குமைச்சல்கள் ஏதுமில்லை. சதுரங்கக் குதிரை நாராயணனுக்கு ஊருக்கு வந்து செல்லும் ஆசைகூடப் பெரிதாக இல்லை. மிதவை நாவலே காசு பிரட்டி சண்முகம் மகிழ்ச்சியாக ஊர் திரும்பும் சித்திரத்துடன்தான் நிறைவுறுகிறது. பூலிங்கத்திற்கு ஊர் திரும்ப வேண்டும் எனும் அவா உண்டு. ஆனால் அது தொலைதூரக் கனவாகிவிட்டது. கிராமத்திலிருந்து நகரத்திற்கான பெயர்வும், அதற்குரிய நியாயங்களைக் கண்டடைவதும், நகரத்தின் மீதான ஏற்பும் வாஞ்சையும் நிகழ்வதை நாஞ்சில் நாடனின் நாவல்களின் ஊடாகக் கண்டுகொள்ள முடிகிறது.


சாதிப் படிநிலைகள் குறித்துப் பல நுட்பமான அவதானிப்புகளை நாஞ்சில் நாடன் படைப்புகளில் காண முடியும். சுடலையாண்டியின் அம்மா தங்கம்மை ஈழவப் பெண். தற்கொலையில் மரணித்தவள். சுடலை தனக்கே இவ்வளவு ஆழமான கொழுப் பாய்ச்சல்கள் என்றால் அவள் என்ன செய்திருப்பாள்? எனப் பரிவுடன் புரிந்துகொள்கிறான். ஈழவத்தி வெள்ளாளத்தி எனக் குளிக்கச் சென்ற இடத்தில் அவமதிக்கப்பட்டு அதற்காக கணவரிடம் அடிவாங்கி அரளி விதையை அரைத்துக் குடித்து மரிக்கிறாள். நீருக்குள் தன்னைப் புதைத்துக்கொண்டு ‘ஒரு மலையாள ஈழவப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடி வந்த அப்பாவுக்காக, அப்பாவை நம்பி வந்து அல்லல் தாங்காமல் தன்னையே அழித்துக்கொண்ட முகம் தெரியாத தன் அம்மாவுக்காக, அந்த அம்மா வயிற்றில் பிறந்துவிட்டதால் அங்கீகாரம் இழந்து நிற்கும் தனக்காகச்’ சத்தமாக அழுகிறான். சாதி அடையாளச் சிக்கலே சுடலையின் முதன்மைச் சிக்கல். மிதவையிலும் எட்டுத்திக்கும் மதயானையிலும் தேவர்களுக்கு மட்டுமான சால் பம்பாயில் உள்ளதைப் பற்றிச் சொல்கிறது. பூலிங்கம் தன்னை தேவர் எனச் சொல்லியே அங்கே இடம்பிடிக்கிறான். ‘மாமிசப் படைப்பில்’ சைவ வெள்ளாளருக்கும் பிறருக்கும் இடையிலான உறவு கிண்டலாகத் தொட்டுக் காட்டப்படுகிறது. நாஞ்சில் நாடனின் பாத்திரங்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையேயான உறவு நுட்பமானது. பிராமணப் பாத்திரங்களின் மனக் குறுகலும் மன விரிவும் வெவ்வேறு தருணங்களில் பதிவாகிறது. ஆழ்ந்த சுயப் பரிசோதனை வழியாகப் புகட்டப்பட்ட சாதிய முன்முடிவுகளை அவர்கள் கடக்கிறார்கள். சதுரங்கக் குதிரையில் நாராயணன் காலை நடைக்குச் செல்லும்போது ஓம் க்ரீம் எனச் சத்தமாகச் சொல்லிக்கொண்டே நடக்கும் மனிதரைப் பல ஆண்டுகளாகக் கவனித்து வருகிறான், சில சமயம் அடி வயிற்றுக்குக் கீழே குத்திவிடலாமா என்றுகூட அவனுக்குத் தோன்றுகிறது. தனது அடையாளத்தை எவ்வித நுண்ணுணர்வும் இன்றி வெளிப்படுத்துவதில் உள்ள நாகரீகமின்மை நாராயணனைச் சீண்டுகிறது. ‘மிதவையில்’ பேருக்குத் தனது உணவைப் பகிர்ந்துகொள்ள முன்வரும் ஆச்சர்யாவிடம் மதிய உணவைப் பகிர்ந்துகொள்ள சண்முகம் விரும்பவில்லை. அதற்கு அவன் முன்வைக்கும் காரணம் ‘ஆச்சார்யா எனும் மங்களூர் பிராமணனுக்குத் தன்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை,’ என்பதே. கனிந்து அருளப்படுவது அவனுக்கு வேண்டியதில்லை. அளிப்பது என்பதே ஒரு சமமின்மையை உருவாக்குகிறது. ஜெயமோகனின் புறப்பாடு நூலில் உள்ள ‘கையீரம்’ பகுதியை நினைவுபடுத்தியது. அதே நாவலில், குத்தகைக்கு விட்ட பிராமணரின் வீட்டுத் திருமணத்தில் பிராமணர்களுக்கும் பிறசாதியினருக்கும் தனித்தனிப் பந்தியில் உணவு பரிமாறப்படுவதை எண்ணி வருந்தும் தந்தைக்கு, தன் நிலத்தில் பாடுபடும் கூலிகளைத் தாமும் அப்படித்தான் நடத்துகிறோம் என்பதை எப்படி புரிய வைக்க முடியும் என்று சண்முகம் யோசிக்கிறான். நில உடமையாளரான பெரியசாமி ஐயரிடம் சண்முகத்தின் தந்தை நடந்துகொள்வது போல் அவன் நடந்துகொள்ளவில்லை. பெரியசாமி ஐயரின் முன் தரையில் அமரப் பிடிக்காமல் நின்றுகொண்டே இருந்தவனை கட்டிலில் உட்காரச் சொல்கிறார் பெரியசாமி. ‘கட்டிலில் இருக்கவும், காப்பி குடித்த தம்ளரை அப்படியே விட்டுவிட்டு வரவும் ஒரு மாதிரியாக இருந்தது,’ என எழுதுகிறார். பெரியசாமியின் மருமகன்தான் சண்முகத்தை பம்பாய்க்கு வரச் செய்வது. அவருக்கும் சண்முகத்தின் அப்பாவிற்கும் ஒரே வயது என்றாலும் அவரைச் சாமி என்றே அழைப்பார். பம்பாயில் ஐயருக்குச் சமமாக அமர்ந்து உண்கிறான். அப்போது தன் தந்தை இப்படி எல்லோருடனும் உட்கார்ந்து சாப்பிட்டிருக்க முடியாது என்று நினைக்கிறான். சதுரங்கக் குதிரையில் ‘பம்பாய் நிறைய மனிதர்களின் மனதைச் சற்று விரிவுபடுத்தியுள்ளது. இல்லாவிட்டால் பிராமணன் அல்லாதவருக்கு அறை அத்தனை லேசில் தந்துவிட மாட்டார்கள்.’ எனத் தான் குடியிருந்த வீட்டைப் பற்றி எண்ணுகிறான் நாராயணன். ராகவேந்திர ராவைச் சந்தித்தபின் எப்படி இந்த ஆறேழு மாதங்கள் அவரிடம் பேச்சு கொடுக்காமல் போனோம் என அவனுக்குத் தோன்றுகிறது. திராவிடக் கட்சிகள் விஷமாய் ஏற்றியிருந்த பிராமணக் காழ்ப்பு ஒரு காரணமாக இருக்கலாம் என நாராயணன் ஒரு விடையை வந்தடைகிறான். திராவிட அரசியல் மீது பல்வேறு இடங்களில் விமர்சனங்களை நாஞ்சில் நாடனின் பாத்திரங்கள் முன்வைத்தபடியே உள்ளன. மிதவை நாவலில் பெரியப்பாவுடனான விவாதத்தின்போது, பெரிய வீட்டுப் பிள்ளைகள் மட்டும்தான் மருத்துவராகவும் பொறியாளராகவும் ஆக முடியுமா என்ன? அதை மாற்றிக் காட்டுவோம் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சூழலில் ஆட்சியைப் பிடித்த பின்னர் என்ன மாற்றம் கண்டுவிட்டது என நொந்துகொள்கிறான் சண்முகம். கிராமத்தில் இருக்கும் பழைய திராவிட அரசியலின் பகுத்தறிவு முகமான மாடசாமி அண்ணனும், பம்பாயில் நூலகத்தில் பதிவு செய்துகொள்ள உதவிய கவிப்பித்தனையும் கழக அரசியலின் எஞ்சி இருக்கும் லட்சியவாதப் பிம்பங்களாகக் கோடிட்டுக் காட்டுகிறார் நாஞ்சில். தலைகீழ் விகிதங்களில் இடதுசாரி மற்றும் திராவிடப் பகுத்தறிவு அரசியல் லட்சியவாதங்களின் தாக்கத்தைக் கூடுதலாகக் காணமுடியும். ‘மாமிசப் படைப்பு’ அவருடைய பிற நாவல்களில் இருந்து கணிசமாக வேறுபட முக்கியக் காரணம் அகச் சித்தரிப்பு இல்லாததே. ஒருவகையில் பூமணியின் படைப்புலகத்திற்கு நெருக்கமானது. விரிவான காட்சிச் சித்தரிப்பு கொண்டது. தன்னுடைய அனுபவ வட்டதிற்கு வெளியே தனது தாத்தாவைப் பற்றி ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்ததாகக் கேள்விப்பட்ட சம்பவங்களைக் கொண்டு எழுதிய நாவல் என நேர்காணலில் சொல்கிறார். ஆகவே சற்று கூடுதல் கவனத்துடன் எழுதியதாகப் புலப்படுகிறது. வர்க்கப் பிரிவினையையும் உழைப்பின் மகத்துவத்தையும் பேசும் இடதுசாரிக் கூறுகள் கொண்ட நாவல். திராவிட இயக்கத்தின் மீதான விமர்சனம் என்பது அதன் மீதான வெறுப்பாக அல்ல, லட்சியவாதம் பொய்த்துப்போனதன் கசப்பு என்றே புரிந்துகொள்ள முடியும். எதன் மீதும் நம்பிக்கையில்லாத வருங்காலம் நிச்சயமற்ற ஒரு தலைமுறையின் பிரதிநிதி. இப்போது வரலாறு திரும்புகிறது. இதே மனநிலையில் இருக்கும் இன்றைய இளைஞரின் சிக்கல் வேறாக இருக்கலாம், ஆனால் அவர்கள் பூலிங்கத்துடனும், சுடலையுடனும், சண்முகத்துடனும் தங்களை நெருக்கமாக உணரக்கூடும்.


4

நாஞ்சில் நாடனிடம் ஓர் எழுத்தாளராக நான் வியக்கும் புள்ளி என்பது முதல் வரியிலிருந்தே நாவலைத் தொடங்கும் வித்தையைத்தான். எட்டுத்திக்கும் மதயானை ‘தீ சுருண்டு எரிந்து கொண்டிருந்தது. ஊரே பற்றி எரிவதுபோல’ என பூலிங்கம் வைக்கோற்பரப்பிற்குத் தீ வைக்கும் தருணத்தில் தொடங்குகிறது. ‘மிதவை’ ‘பெருவயிற்றைப் பிள்ளை என்று எண்ணியதுபோல்தான் சண்முகம் பெரியப்பாவின் மீது வைத்திருந்த நம்பிக்கையும்’ என நேரடியாகக் கதையின் மையத்தைத் தொட்டுத் தொடங்குகிறது.


அதேபோல் அவர் பயன்படுத்தும் சில உவமைகள் அவருடைய தனித்துவத்தைப் பறைசாற்றுபவை. அறுவடைக்கு முன்பான காலத்தில் வெள்ளத்தில் வீணாகும் பயிர்களைப் பற்றி ‘கர்ப்பிணி வயிற்றில் எருமை மிதித்தது போல’ என்கிறார் (எ.வெ.கா). மழையில் தலையில் கொங்கானியோடு ஓடுவதன் சங்கடத்தை ‘சினிமா நடிகைகளின் மார்துணி போல். இடம் மாறி இடம் பெயர்ந்து அவனை அலைக்கழித்தது.’ (எ.வெ.கா) என விவரிக்கிறார். நடந்து செல்லும் வழியில் எலியைக் காணும்போது ‘வெள்ளாடை விதவைகள் மரியாதையாக ஒதுங்கி நிற்பது போல நின்ற பின்பு ஓடியது’ (ச கு) எனக் குறிப்பிடுகிறார். ஊரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ரயில் நிலையத்தை ‘ஊரில் இருந்து சண்டை போட்டுக் கத்திக்கொண்டு போனது போல்.’ (ச.கு) எனச் சுட்டுகிறார். ஓடும் நீரில் குளித்துப் பழகியவனுக்குக் குழாய்க் குளியல் என்பது ‘கரண்டியால் தோசை தின்பதைப் போல்’ (எ.ம.யா) இருக்கிறது. திருடிய பெட்டியைத் திறக்க முடியாமல் இருக்கும் பூலிங்கத்தின் உணர்வை ‘கொத்தான முள் மேல் துணியில்லாத குண்டியை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் போலிருந்தது.’ (எ.ம.யா) எனச் சொல்கிறார். குற்றாலம்பிள்ளை கோள்மூட்டிவிடும்போது பயன்படுத்தும் சொலவடை ‘குடிக்கத் தண்ணியிலே குறியை விட்டு ஆழம் பாக்க சாதீண்ணு சும் மையா சொல்லுகா.’ (மா.ப) முத்தாரம்மன் கோவில் பூசாரி சடையப்ப பிள்ளையின் இயல்பை விளக்குவதற்கு ‘வேண்டாத மருமகளை வைத்து நடத்தும் மாமியார் போல், வெளியே அடித்து துரத்தப்பட்ட அடைக்கோழி போல் எப்போதும் ஒரு புறுபுறுப்பு.’ (மா.ப) ஆகிய உவமைகள் பயன்படுகின்றன. திருமணத்திற்கு வந்த பிரமுகருக்கு இடம் வேண்டி பந்தியிலிருந்து ஒரு சிறுவனை எழுப்பிவிடுகிறார்கள் பெண் வீட்டுக்காரர்கள். சிவதாணு தன்னைப் பொருத்திப் பார்க்கிறான் ‘தண்ணீர்க் கிண்ணத்தில் விழுந்த எண்ணெய்த்துளிபோல்’ (த.வி) வெள்ளுடை வேந்தர்களுக்கு மத்தியில் அழுக்கும் பிசுக்கும் தொய்ந்த ஆடையில் தனித்துத் தென்படுவதை உணர்த்துகிறார். சிவதாணு திருச்செந்தூர்க் கடலையும் கன்னியாகுமரிக் கடலையும் ஒப்பிடுகிறான். “ஆனால் இங்கே பிள்ளை அழித்த வேசையின் மனம்போல சலனமும் குமைச்சலும் இல்லாத கடல்…கன்னியாகுமரிக் கடல் அமைதியற்ற மனத்தின் கொந்தளிப்பு, படீர் படீர் என்று பாறை மீது அலைக்கரங்களை அடித்துத் தன்னை விட்டுப் பிரிந்த கணவனின் மார்மீது விழுந்து புலம்பும் பெண்ணைப் போன்று கதறும் கடல்.” (த.வி) வைகையை ரயிலில் இருந்து காணும்போது ‘கிழட்டுத் தேவடியாளைப் பார்ப்பது போல் இருப்பதாக’ உணர்கிறான் சண்முகம் (மிதவை).


சாமானியர்களையும் எழுத்தாளர்களையும் பிரிக்கும் கோடு என்பது எழுத்தாளரின் கூர்மையான அவதானிப்புத் திறன் எனச் சொல்லலாம். அவை தன்னளவில் சில அபாரமான புனைவுத் தருணங்களை உருவாக்கும். கோட்டுச் சித்திரங்களாக மனிதர்களின் ஆளுமைச் சித்திரங்களை உருவாக்கி அளிக்கும். புனைவு எழுத்தாளராக இத்தகைய தருணங்கள் மனதில் வேர்கொண்டு வளர்பவை. நாஞ்சில் நாடனின் புனைவுலகம் இத்தகைய அபாரமான அவதானிப்புகள் மற்றும் கூர்மையான ஆளுமைச் சித்திரங்களால் நிரம்பியவை. ‘வீடு மாறிப்படுப்பவர்களின் உலா தொடக்குவதற்கு இன்னும் நேரமிருக்கிறது.’ (த.வி) எனும் ஒருவரி திருமணத்திற்கு அப்பாலான உறவைச் சுட்டிப் புன்னகைக்க வைக்கிறது. தார்பாய்ச்சி கட்டிய பெண்களைக் காணும்போது ஊரில் பெண்கள் கால்களை அகற்றி நின்று இன்னொருவருக்குத் தெரியாமல் மூத்திரம் பெய்வார்கள். இவர்கள் என்ன செய்வார்கள் எனும் வினோதமான ஐயத்தை அடைகிறான் சண்முகம் (மிதவை). எதற்கும் சேர்ந்தே போகும் அலுவலகத்தில் இருக்கும் மூன்று பெண் கிளார்க்குகள் எனும் ஒருவரி அவர்களைப் பற்றிய சித்திரத்திற்குப் போதுமானதாக உள்ளது. (மிதவை) தொழிற்சாலையில் இருந்து போகிறவர்கள் ஒரு விரலைக் கழிப்பறைக்கு வெளியே நீட்டிக்கொண்டே மலம் கழிப்பார்கள் என்பது மற்றுமொரு நுண்ணிய அவதானிப்பு (மிதவை). ரெட்கிராஸ் மூலம் பழைய துணி மூட்டைகளை வீசுவார்கள். சற்று நேரத்தில் பொருத்தமில்லாத ஸ்வெட்டர்களுடன் ஓவர் கோட்டுகளுடன் கவுன்களுடன் மக்கள் திரிவர் (மிதவை). திருவிழாக்களில் தேவாரம் படிப்பதற்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார். ‘திருவிழாவில் உறங்கமாட்டேன் என்று அடம்பிடித்து நிற்கும் சிறுவர் சிறுமியரைக் களைப்பூட்டும் வகையில் பூசாரி, “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே. யே ஒப்பிலா மணியே…” என்று தேவாரம் படிப்பார். (மா.ப)


சில காட்சித்துண்டுகளை விவரித்துவிட்டு நகர்ந்துவிடுகிறார் அவை புனைவாக மனதில் வளரச் சாத்தியமானவை. கடத்தல் சாராயத்திற்காகப் பிடிபட்டுக் காவல் நிலையத்தில் உடையைக் கழற்றச் சொல்கிறார்கள். அங்கே நாற்பது வயதான ஒருவன் உள்ளாடை போடவில்லை. ‘முடி அடர்ந்த அவனுடைய ஆண் குறி நாணத்தால் தொங்கிக் கிடந்தது (எ.ம.யா) எனும் ஒரு வரியில் அவனுடைய அவமானம் கடத்தப்படுகிறது. பிரெட் பற்றாக்குறை இருந்த காலத்தில் சண்முகத்திற்கு உதவுகிறான் ஒரு கடைக்காரன். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காலை ஐந்தரை மணிக்கு காரிசன் வொர்க்ஷாப் முடியும் சந்தியில் காத்து நின்றால் ஒரு லோஃப் தருவதாய்ச் சொல்கிறான். ஒருநாள் சர்த்தார்ஜி ஒருவர் இதைக் கவனித்து மறுநாள் அவரும் பிரெட்டுக்காக நின்றார். இரண்டு நாட்களில் நாலைந்து பேர் தொங்கும் பைஜாமா நாடா முடிச்சுகளோடு நின்றனர். கடைக்காரன் பாதையை மாற்றிக்கொள்கிறான். இந்த நான்கைந்து வரிகளில் ஒரு சிறுகதை ஒளிந்துகொண்டுள்ளது. என்பிலதனை வெயில் காயும் நாவலில் ஒரு நிகழ்வு. ஏழு வயது சிறுவனாக உடல் எல்லாம் சிரங்கு புண்களுடன் குளிக்கச் செல்கிறான் சுடலை. வைக்கோல் கத்தையைக் கொண்டு புண்களின் மீது கரகரவெனத் தேய்த்துக் குளிப்பாட்டுகிறார் சுடலையாண்டியின் தந்தை. உடல் எல்லாம் எரிகிறது. போதும் போதுமென அழுகிறான். ஒருகட்டத்தில் தந்தையின் பிடியிலிருந்து நழுவி “விடுலே என்னை தாயோளி” எனக் கத்திவிட்டு கூரான கல்லை வீசி எறிகிறான். அன்பின் ரணம் பதிவாகும் ஒரு கூரிய தருணம்.


அலுவலக சகா உணவு உண்ணும் விதத்தைச் சொல்கிறார். ‘காமத் வேண்டாத தாள் ஒன்றை மேஜை மேல் விரித்து, பால் கவரில் இருந்து எட்டு பத்து சப்பாத்திகளை எடுத்து ஒவ்வொன்றையும் நாலாகக் கிழித்தான். கிழித்து அடுக்கிய பின் எவர்சில்வர் டப்பாவைத் திறந்தான். (ச.கு) இப்படி உண்பவனைப் பற்றிய ஒரு மனப் பிம்பத்தை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. இதேபோல் கேயார்வி எனும் மற்றொரு அலுவலக சகாவைப் பற்றிய விவரணை. பிரிவுபச்சார விழாவில் அவர் நடந்துகொள்ளும் முறையைக் கொண்டே அவர் பற்றிய சித்திரத்தைக் கொணர்ந்துவிடுகிறார். ‘பொட்டலத்தைப் பிரிக்கவில்லை. தேநீரை வாங்கிச் சூடாகக் குடித்தார். பொட்டலத்தை மறுநாள் மதிய உணவுக்காகக் கையில் எடுத்துக்கொண்டார். தலைவர், ஒய்வு பெறுபவரின் முப்பதாண்டு சேவையைத் தீவிரமாக விவரித்துக் கொண்டிருக்கும்போது கேயார்வி எழுந்து அமைதியாகப் புறப்பட்டு நடந்தார். தலைவர் சற்று நிறுத்தித் தோளைக் குலுக்கியபோது எல்லோரும் சிரித்தனர்.’ (ச.கு) துணை பேராசிரியர் மதுசூதனப்பெருமாள் பற்றிச் சொல்லும்போது ‘ஆப்பிரிக்கக் காடுகளின் குறுக்கே நூல் பிடித்து ஓடும் பூமத்தியரேகை, நாகர்கோயிலிலிருந்து அதிக மைல் தூரத்தில் இல்லை என்றாலும் டை கட்டி, கோட்டு போட்டுக்கொண்டுதான் வகுப்புக்கு வருவது. (எ.வெ.கா) என்கிறார். ஐம்பத்தி ஏழு வயதான ஆப்பரேட்டர் ஜாய்சுக்கு பீர் வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தால் பத்து சினிமா பார்க்கும் காசு பறிபோய்விடும். (சகு) அந்தக் காலத்து பி.ஏ.வான பெரியசாமி ஐயர் உள்ளூர் வங்கியில் மேலாளராக இருந்தவர். ‘உமிக்கரி நிறைந்த டின்களை தேயிலை என்று நம்பிக் கடன் கொடுத்ததால் பத்தாயிரம் கட்டி வைத்து வேலையையும் ராஜி வைத்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.’ (மிதவை) என்பது சுவாரசியமான சிறுகதைக் கரு. ஒரு நிகழ்வின் வழியாக சுடலையின் தாத்தா – ஆத்தா ஆகியோருக்கு இடையேயான ஊடலும் கூடலுமான உறவைக் கோடிட்டுக் காட்டுகிறார். ஒருமுறை காசிருந்ததால் பனையோலைக் கடவம் நிறைய காய்கறிகளை ஆசையாக வாங்கி வருகிறார் தாத்தா. காய்கறி மட்டும் போதுமா உப்பு மிளகு எங்கே எனக் கேட்டு நொட்டை சொல்கிறாள். எரிச்சலில் ஐப்பசி மாதத்து நிறைந்த ஆற்றில் காய்கறிகளோடு கடவத்தை நட்டாற்றில் வீசிவிட்டு வருகிறார். திரும்பி வந்தபோது ஆத்தா முகத்தில் குறுஞ்சிரிப்புடன் சரி வந்து கஞ்சி குடியும்’ என்கிறாள். ‘தேவடியா வெளயாடவா செய்யே…?’ என்கிறார் தாத்தா. (எ.வெ.கா)


நாஞ்சில் நாடனின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று அவரளிக்கும் காட்சி அனுபவம். என்பிலதனை வெயில் காயும் நாவலில் மூன்று நாட்கள் தூக்குவதற்குக்கூட ஆட்கள் தேட வேண்டி இருந்த சாஸ்தா கோவில் திருவிழா இறுதிநாளில் வேறொன்றாக ஆகிறது. திருவிழாவின் இறுதி நாள் விவரணையும் கிழங்கு பறிக்க மலைக்குச் செல்லும் அனுபவமும், பெருமழை கொட்டித்தீர்ப்பதும் மிகவும் காட்சிப்பூர்வமானவை. தாமிரபரணியில் குளிக்க முடியாத அளவிற்குத் தோளைத் தொட்டுக்கொண்டு மலம் தடித்தடியாய் மிதந்து போகும் சித்திரம் மிதவையில் ஒருவரியில் வந்து செல்வது, ஆனால் மனதைவிட்டு அகலாதது. சதுரங்கக் குதிரை பம்பாய் நகரம், மகாராஷ்டிரத்தின் உள் பகுதிகள், கோவா, நாஞ்சில் நாடு வெவ்வேறு நிலப்பகுதிகளில் நிகழ்கிறது. அக்கோலா பயணம் மற்றும் பூர்ணாவின் வெள்ளப்பெருக்கு ஓடும் ஜல்காவ் ஜாமெட் பகுதிகள் அபாரமான காட்சி அனுபவங்களை அளித்தன. மிதவை, சதுரங்கக் குதிரை மற்றும் எட்டுத்திக்கும் மதயானை ஆகிய நாவல்களில் நீண்டதூர ரயில் பயணம் பற்றிய விவரணைகள் நிறைய உண்டு. குறிப்பாக எட்டுத்திக்கும் மதயானை குண்டக்கல், ராய்ச்சூர், ஹூப்ளி, லோண்டா, வாஸ்கோ, பம்பாய் எனப் பல நிலப்பகுதிகளில் நிகழ்வது. ரயிலேறி கிருஷ்ணாவில் இறங்கி ஆசை தீரக் குளித்துவிட்டு வருவான் பூலிங்கம். நாஞ்சில் பயண இலக்கியம் எனத் தனியாக எதுவும் எழுதவில்லை. ஆனால் புனைவின் ஊடாகவே ரயில் நேரம், பாதைகள் எனத் துல்லியமான பயண வழிகாட்டுதலை அளிக்கிறார். தலைகீழ் விகிதங்களில்கூட சிவதாணுவின் ரயில் பயணம் விவரிக்கப்படுகிறது. பயணங்கள் உடன் பயணிப்போரின் நுண்ணியச் சித்தரிப்புகளையும் உள்ளடக்கியது. சதுரங்கக் குதிரையில் ஊருக்கு வந்துவிட்டுத் திரும்புபவன், ஏறத்தாழக் கல்யாணி காட்டும் பெண்ணை மணந்துகொள்ளலாம் அல்லது குத்தாலம் காட்டும் பெண்ணை மணந்துகொள்ளலாம் என முடிவெடுத்துக்கொண்டு, ரயிலில் வரும்போது ஒரு மராத்தியப் பெண் சிறு குழந்தையைச் சகல முஸ்தீபுகளுடன் ரயிலில் அழைத்துவருவதைக் கண்டதும் சட்டெனக் குடும்ப வாழ்வு குறித்தான முடிவில் பின்வாங்குகிறான். “வாழ்க்கைப் பயணம் எளிமையாகவே இருக்கிறது. மராத்தியப் பெண்ணின் பயணம் போல எதற்கு மேலும் சிக்கலாக்கிக்கொள்ள வேண்டும்? இதென்ன உலக மகா பிரச்சனையா? தானென்ன டோடோப் பறவையின் கடைசிப் பேடையா? இந்த வம்சாவளி உலக மகா அபூர்வங்களின் ஒன்றா எப்பாடு பட்டேனும் காப்பாற்றித் தீர்வதற்கு?’ ஒரு பயணக் காட்சி நாராயணனின் வாழ்க்கை முடிவையே தீர்மானிக்கிறது.


சில அமானுட தருணங்கள், கனவுகள், ஆழ்மன சித்தரிப்புகள் மொத்த நாவலையும் அடுத்த தளத்திற்கு நகர்த்துவதாக உள்ளன. சதுரங்கக் குதிரையில் துல்ஜாப்பூருக்குச் சென்றுவிட்டு நாராயணன் காணும் வினோதமான கனவு, காமம், கல்யாணி, மலை மீது இருக்கும் உக்கிர அம்மனான துல்ஜாப்பூர் பவானி எனத் தர்க்கப்படுத்த முடியாத கலவை. அதே நாவலில் அசோக்குக்குப் பேய் பிடித்த கதை ஓர் அமானுட அனுபவத்தை அளிக்கிறது. இவை நாவலின் மைய ஒழுக்கிலிருந்து விலகியவை, ஆனால் வலுவானவை. மிதவையில் நினைவின் ஊடாகத் தான் கொன்ற நாயை சண்முகம் நினைவு கூரும் பகுதி ஒரு தனி சிறுகதை அன்பு திரிந்து வன்மமாக ஆகும். ஒரு பரிணாமத்தை நுண்மையாக விவரிக்கிறார். மிதவையின் கதைப் போக்கிற்குப் பெரிதாக எதையும் சேர்க்கவில்லை. ஆனால் இவை முக்கியமான பகுதிகளாக உள்ளன. வடிவ ரீதியாக நாஞ்சில் வரையறைகளைக் கடந்து தொடர்ந்து முன்நகர்கிறார் என்பதற்கான தடங்கள் இவை. எட்டுத்திக்கும் மதயானையிலும் திம்மனின் திருமணத்திற்குச் சென்றுவிட்டுக் குடிக்கும் நாட்டுச் சாராயம், அதன் பின்பான குழப்பங்கள் சூழ்ந்த கனவுப் பகுதியும் முக்கியமானது. மாமிசப் படைப்பில் வைரவன் சாமியின் கோமரத்தாடி மாலையப்பன்பிள்ளை காணும் கனவு தர்க்கத் தளங்களுக்கு அப்பாலான மிஸ்டிக் தன்மை உடையது. அதேபோல் மனகாவலன் சாய்ந்து கிடக்கும் கரையான் புற்றிலிருந்து முத்தாரம்மனைக் கண்டெடுக்கும் தருணம். ‘அருளும் சினமும் கலந்து தெறிக்கும் கண்களையும் கொண்ட செந்நாகம் படமெடுத்து நிற்கும் காட்சியும்’ ஒரு மிஸ்டிக் அனுபவம்தான்.


நாஞ்சிலின் புனைவுத்திறன் தொடர்ச்சியாக உணர்வு ரீதியான முடிச்சுக்களை இறுக்குவதில் வெளிப்படுகிறது. வாசகரைக் கதை மாந்தர்களுடன் உணர்வு ரீதியாகப் பிணைப்பது. அவர்களின் ஒவ்வொரு அவமானமும் தங்களுடையதாகத் தோன்றும். என்பிலதனை வெயில் காயும் நாவலில் தாத்தாவிடம் காசில்லாத சூழலில் கல்லூரிக்குச் செல்லாமல் சுடலையாண்டி மண் சுமக்கும் வேலைக்குச் செல்லும் அத்தியாயம் கச்சிதமான ஒரு சிறுகதை. தாத்தா இதை அறிந்து சீறுவது உணர்வுப்ப்பூர்வமான தருணம். இறுதியாகத் தொடர்பிலேயே இல்லாத அம்மாவழி மாமனை வேலைக்காகக் காணச்சென்று பத்துரூபாய் பெற்று அவமானத்துடன் திரும்பும் புள்ளியில் நாவல் முடிவடைகிறது. சதுரங்கக் குதிரையில் ஊரில் இறந்து போகும் அம்மாவின் சாவிற்குத் தாமதமாகச் செல்ல நேர்வதைப் பற்றி எழுதுகிறார். சாவின் துக்கம் ஒரு பக்கம் பிய்த்துக்கொண்டு இருந்தாலும், ‘போய்ச் சேர முடியாமல் காலைப் பிடித்து இழுக்கும் பொருளாதாரம் ஏற்படுத்தும் அவமானம்.’ நாராயணனைப் பெரிதாக வதைக்கிறது. தலைகீழ் விகிதங்களில் மாமனார் வீட்டில் விருந்துண்ணும்போது தன் வீட்டை, தாய் தந்தை, சகோதர சகோதரிகளை எண்ணிக் குற்ற உணர்வில் ஆழ்கிறான் சிவதாணு.


கதையின் மைய மாந்தர்கள், துணை மாந்தர்கள் மற்றும் உதிரி மாந்தர்கள் என அனைத்துச் சித்தரிப்புகளும் வலுவானவை. திருமணம் ஆகாத ஆனால் ஒய்வு பெறும் வயதில் இருக்கும் சதுரங்கக் குதிரையின் குட்டினோ நாவலில் முக்கியமான துணைப் பாத்திரம். ஓய்வுக்குப் பிறகு கோவாவில் அவனைச் சந்திக்கும்போது அவனுடைய இளவயது காதலியை மணந்துகொள்ள இருப்பதாகக் கூறி நாராயணனையும் திருமணம் செய்துகொள்ள வலியுறுத்துவான். கதை இறுதியில் மவுனமாக அறிமுகமாகி மவுனமாக மறைந்துபோகும் காதல் சமிக்ஞை அளித்த ராதா கேசவமூர்த்தி. ‘மிதவையில்’ வீட்டை விட்டு மூக்காண்டியாக ஓடிப்போய் என்.கே ராஜப்பாவாக நடிகராகத் தன்னை நிறுத்திக்கொண்ட சண்முகத்தின் பெரியப்பாவின் பாத்திரமும் சுவாரசியமான வார்ப்பு. அவரைப் பற்றி ‘வாழ்க்கையை எல்லாக் கோணங்களிலும் பெரியப்பா வாழ்ந்திருப்பதாகத் தெரிந்தது,’ என எண்ணுகிறான் சண்முகம். ஒருவகையில் அவரே அவனுடைய ஆதர்சம். அரும்பு மீசையுடனும் சந்தேகக் கண்களுடனும் சண்முகத்தை நோக்கும் சக பணியாளர் ஆச்சார்யா, பூனைக் குட்டியைத் தூக்கி வந்து பால் ஊற்றும் ரூபென் ஜோசெப், தங்க இடம் கொடுத்து ஆதரிக்கும் ஊர்க்காரக் கப்பற்படை வீரன் சுந்தரண்ணன், வாஞ்சையுடன் அன்னமிட்டு பம்பாயில் வேலை வாங்கிக் கொடுக்கும் அய்யர், சண்முகத்தின் குடிசை வீட்டிற்கு அருகில் வசித்து அவன் உடல் வேட்கையைச் சீண்டும் பருத்த உடல் கொண்ட அன்னம்மை, அரிசிக் கடத்தலில் சிக்கிச் சிறைசென்று திரும்பும் சகவாசியான செம்பகம் என ஒவ்வொரு பாத்திரமும் கச்சிதமான வார்ப்பு. எட்டுத்திக்கும் மதயானை முழுக்கவே சுவாரசியமான சிறிய கதை மாந்தர்களால் நிறைந்தவை. சோனாச்சலம், மல்லப்பா, லாரியில் ஏற்றிச் செல்லும் பெரியசாமி, ரமாகாந்த் சாப்பன் சேட், அவருடைய பாபி, பானுமதியக்கா, காவலர் ஜாங்ளே, நாதுராம் சேட், சுப்பையா, வரதராஜ முதலியாரை நினைவுப்படுத்தும் அண்ணாச்சி, மளிகைக்கடை நாடார், சாம்ராஜ் அய்யா, பூலிங்கத்தைப் போலவே வீட்டைவிட்டு ஓடி வந்த பரமு, பரமுவைத் தேடி வந்து பூலிங்கத்தால் மிரட்டப்பட்டு ரயிலேறிச் சாகும் களக்காட்டுக்காரன். அனைவருக்கும் தனித்த ஆளுமையும் அடையாளத்தையும் அளிக்க நாஞ்சில் நாடனால் இயன்றுள்ளது.


5

நாஞ்சில் நாடனின் அத்தனை நாவல்களும், நான் வாசித்தவரை அத்தனை கதைகளும், படர்கையில் எழுதப்பட்டவைதான். தன்னிலையில் எழுதச் சாத்தியமான கதைக்களங்களும்கூடப் படர்க்கையில்தான் எழுதப்படுகின்றன. எது அழகியல் பிழை எனக் கருதப்படுகிறதோ அதைப் பிரக்ஞைப்பூர்வமாகத் தொடர்ச்சியாக நிகழ்த்தும்போது அதுவே பாணியாகவும், தனித்துவமாகவும் ஆகிவிடும். நாஞ்சிலின் படைப்புகளில் சற்றே உரத்து ஒலிக்கும் ஆசிரியக் குரலை அப்படித்தான் மதிப்பிட முடியும். சில சிறுகதைகளிலும், நாவல்களில் சில தருணங்களிலும் அவை இடராகப் போன சமயங்களும் உண்டு. சட்டெனத் தோன்றும் ஓர் உதாரணம் மாமிசப் படைப்பில் சாந்தப்பனைப் பற்றிய குறிப்பில், அவன் கள்ளை உறிஞ்சும்போது அடையும் இன்பத்தை ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலக்கும் பேரின்பத்துடன் ஒப்பிடுவது நிரடியது. நாஞ்சிலின் முதல் நாவலான ‘தலைகீழ் விகிதங்கள்’ சற்று உரத்து ஒலிக்கும் ஆக்கம்தான். அதேபோல் அந்த நாவல் முடிவதோடு கதையும் முடிகிறது. முடிவிலிருந்து நல்லகதை திறந்து வளர்ந்துகொள்ளும் என்பது பொதுவான விமர்சனக் கூற்று. குடும்பம் அல்லாத வட்டத்தில் அறிவார்ந்த பெண் நட்பு என்பதும் கூட ஒரு காலகட்டத்தின் பொது கற்பனையாக இருக்கக்கூடும் என காந்திமதியுடனான உறவை வகுத்துக்கொள்ளும்போது தோன்றியது. எட்டுத்திக்கும் மதயானை முடிவும் விமர்சனத்திற்கு உரியதே. காதலித்தவளின் (இந்த நாவலை பொறுத்தவரை காதல் எனச் சொல்லமுடியாது. சேர்ந்து கிசுகிசுக்கப்பட்ட எனச் சொல்லலாம்) திருமண வாழ்வு ஏதோ ஒருவகையில் சிக்கலில் இருப்பதாக எண்ணுவதும் தன்னை ஒரு மீட்பராகவும் கருதிக்கொள்வதும் ஆண் மனதின் விருப்பக் கற்பனை. அதே மனநிலையை பூலிங்கமும் வெளிப்படுத்துகிறான். என்பிலதனை வெயில் காயுமில் கைவிட்டுப்போன ஆவுடையம்மாதான் எட்டுத்திக்கும் மதயானையின் செண்பகமாக வருகிறாள் எனத் தோன்றுவதுண்டு. ஆச்சரியமாக வலுவான பெண்பாத்திரங்கள் ஏதுமற்ற நாவல் என மாமிசப் படைப்பைச் சொல்லலாம். நாஞ்சில் அடிப்படையில் அனுபவச் செழுமையிலிருந்து உருவாகும் ஆக்கங்களை மேலானது எனக் கருதுபவர். அவருடைய பெரும்பாலான கதைகள் தான் அனுபவித்த அல்லது வாய்மொழியாகக் கேட்ட அனுபவப்பின்புலத்தைக் கொண்டவை. ஜெயமொகன் மூத்த எழுத்தாளர் ஒருவரிடம் சொன்ன கருத்து ஒன்றுண்டு. ‘நீங்கள் அறிந்ததைச் சொல்ல கதை எழுதுகிறீர்கள் நான் அறியாததை அறிந்துகொள்ள எழுதுகிறேன்.’ அனுபவ அடிப்படையிலான எழுத்துக்கு அனுபவமே பலமும் எல்லையும்கூட. ஆனால் இவை அனுபவ அடிப்படையிலானவைதானே எனக் குறைத்து நோக்கும் பார்வையும் தமிழில் சிலருக்கு உண்டு. இத்தகைய ஆக்கத்தின் மிகப்பெரிய பலம் என்பது இவையாவும் அனுபவத்திலிருந்து விளைந்தவை எனும் பாவனையைச் சூடிக்கொள்வதுதான். உண்மையில் எது அனுபவம் எது அனுபவத்திலிருந்து விளைந்த கற்பனையின் நீட்சி, எவை முற்றிலும் கற்பனை எனப் பிரித்தறிய முடியாது. அது எழுத்தாளருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். மாமிசப் படைப்பு அவருடைய காலத்திற்கு முன்பு நடந்த நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது என்றாலும் அதை அவர் காலத்தின் பின்புலத்துடன் பொருத்தியே மிகுந்த கவனத்துடன் எழுதியிருப்பார். அவ்வகையில் நிலபரப்பு சார்ந்து சில அனுபவங்களைக் கொண்டு அனுபவ வட்டத்தை மீறி எழுந்த ஆக்கம் என எட்டுத்திக்கும் மதயானையைச் சொல்லலாம். அடிப்படையில் அது ஒரு சாகசத்தன்மை கொண்ட நாவலும்கூட. அனுபவங்கள் எழுத எழுதத் தீர்ந்துவிடும். ஆனால் நாஞ்சில் அந்த எல்லையை வேறொரு வகையில் கடக்கிறார். நாஞ்சிலில் ஒட்டுமொத்தப் படைப்புலகைக் காணும்போது ஒரே அனுபவம் பல்வேறு சாத்தியங்களால் வெவ்வேறு கதைகளாகப் பரிணாமம் கொள்வதைக் காண முடிகிறது. அதற்கோர் உதாரணம் என செண்பகம், ஆவுடையம்மாளைச் சொல்லலாம். சிறுகதைகளில் ‘தொல்குடி’ யும் ‘அன்றும் கொல்லாது, நின்றும் கொல்லாது’ ஒரே கதையின் இருவேறு கோணங்கள். ‘பேய்க் கொட்டு’ கதையின் நிகழ்வு சதுரங்கக் குதிரையில் நினைவுகூரப்படுகிறது. சதுரங்கக் குதிரையில் வரும் ‘சலாவுதீன்’ பற்றி எழுதும்போது ‘அவரிடமுள்ள எந்தப் பொருளையும் “இது நன்றாக இருக்கிறது” என்று சொல்லிவிடக் கூடாது. “எடுத்துக்கொண்டு போ” என்பார், அது உபசாரத்துக்குச் சொல்வது அல்ல என எழுதுகிறார். சலாவுதீன் கான் சாகிப்பாகப் பரிணாமம் கொள்கிறார். சதுரங்கக் குதிரையின் ராகவேந்திர ராவுடன் இரவு தங்கும்போது ஓரினச் சேர்க்கையாளரோ என அஞ்சி அது பற்றிப் பேசிக்கொள்ளும் பகுதி கான்சாகிப் கதையின் அதே மாதிரியான உரையாடலுடன் பொருந்திப் போவது. மாமிசப் படைப்பின் குண்டூனி குற்றாலம்பிள்ளை தலைகீழ் விகிதங்களின் கோலப்பப்பிள்ளையுடன் இணைவைக்கப்பட வேண்டியவர் தலைகீழ் விகிதங்களில் சிவதாணுவின் நண்பன் கந்தசாமியுடன் உறவில் இருக்கும் ஏற்கனவே திருமணமான கல்யாணி ஒரு சுவாரசியமான பாத்திர வார்ப்பு. பரிவுடன் அவளே பெண் பார்த்துக் காதலனுக்குத் திருமணத்தை முன்நின்று நடத்துகிறாள். முதல் நாவல் கந்தசாமி- கல்யாணியின் வேறொரு நீட்சிதான் அண்மைய நாவலான எட்டுத்திக்கும் மதயானையில் பூலிங்கம்- சுசீலா உறவு. சுசீலா திருமணம் செய்துகொண்டு வந்தபோது பூலிங்கத்திற்கு ஏழு வயது. பிள்ளைப்பேறு இல்லாத அவள் பூலிங்கத்தின் வாரிசைப் பெற்றெடுக்கிறாள். என்பிலதனை வெயில் காயும் நாவலில் சுடலையின் முதல் பாலியல் அனுபவம் திரையரங்கில் நிகழ்வது சொல்லப்படுகிறது. ஏறத்தாழ இதே போன்ற அனுபவத்தைதான் எட்டுத்திக்கும் மதயானையில் திம்மனின் கல்யாணத்திற்கு நெருக்கியடித்துக்கொண்டு அமர்ந்திருக்கும்போது திம்மனின் அக்கா கோமதியிடம் அடைகிறான் பூலிங்கம். இதே நாவலில் பூலிங்கத்திற்கும் பானுமதிக்கும் இடையிலான உறவு எதுவாகவும் பரிணாமம் கொள்ளாமல் பூடகமாகவே கடத்தப்படுகிறது. பொதுவாகத் திருமணத்திற்கு வெளியேயான உறவுகள் மிகுந்த கரிசனத்துடனேயே நாஞ்சில் புனைவுகளில் அணுகப்பட்டுள்ளன. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் இருவரின் ஓசையைச் சாலில் கேட்கும்போது பூலிங்கத்திற்குப் பாவம் எனத் தோன்றியது. எல்லோருக்கும் எல்லாமும் தேவையாய் இருக்கிறது எனும் புரிதலுடன் உறவு மீறல்களைக் கடக்க முடிகிறது. மாமிசப் படைப்பில் விக்கிரமசிங்கத்திற்கும் அவருடைய அணுக்க வேலையாளான சாந்தப்பனின் மனைவிக்கும் இடையிலான உறவை ஊரறிய வெளிப்படுத்திக் கணக்கு தீர்த்துக்கொள்வான் கந்தையா.


பலவேசம்பிள்ளை, கடுவாய் கங்காதரம் பிள்ளை, விக்கிரமசிங்கம் பிள்ளை, சொக்கலிங்கம் பிள்ளை ஆகியோர் ஏறத்தாழ ஒரே வார்ப்பு. ரயிலில் புட்டி விற்றுச் சிறை செல்லும் திம்மனின் அனுபவத்திற்கு நெருக்கமானதுதான் மிதவை செம்பகம் அரிசி திருடிச் சிறை சென்று மீள்வது. அல்லது செம்பகம் பூலிங்கத்தின் முதல் வடிவம். பென்கர் எனும் பெயரில் மிதவையில் அறிமுகமாகும் யூதர் சதுரங்கக் குதிரையில் மீள வருகிறார். படிப்பில் ஆவுடையம்மாவுடன் இருக்கும் போட்டிதான் ஆச்சார்யாவிடம் பணியில் உள்ளது. மிதவையின் பெரியப்பா- பெரியம்மாவும் என்பிலதனை வெயில் காயுமின் ஆத்தா தாத்தாவும் ஏறத்தாழ ஒரேநிறம்.


மிதவையை வாசிக்கும்போது தோன்றியது பெருநகரத்தில் ‘சன்டாசுக்கும்’ சாப்பாட்டிற்கும் அலைந்துகொண்டே இருக்கிறான் சண்முகம். ஆனால், யோசித்துப் பார்த்தால், இடம்பெயரும் மனிதனுக்குள்ள மிக முக்கியமான பிரச்சனைகள் இவைதான் என்று தோன்றுகிறது. குறைந்த செலவில் நல்ல உணவைத் தேடி பம்பாய் முழுவதும் அலைகிறான். தண்டவாளம், வெட்டவெளி, தமிழ் மையம், ரயில்நிலையம் என ‘சன்டாசுக்குப்’ போக சுகாதாரமான இடத்தைத் தேடியும் அலைகிறான். என்பிலதனை வெயில் காயும் நாவலில் முழுக்க நனைந்தபோது இயல்பாக வறுத்த காணமோ பயிறோ சாப்பிட்டால் எப்படி இருக்கும் இருக்கும் என எண்ணுகிறான் சுடலை. ‘கருப்பட்டிக் காபிக்கேன்றே ஒரு மணம். மிளகும் கொத்து மல்லியும் சுக்கும் சீரகமும் தட்டிப் போட்டுக் கருப்பட்டி சேர்த்து கொதித்த பின் பாலூற்றி ஆற்றி..’ என இதுபோன்று வெவ்வேறு உணவுகளை, அதன் செய்முறையை, ருசியை, விவரித்தபடி இருக்கிறார். பசித்தவனுக்குப் பிரம்மம் அன்னத்தின் வடிவில் காட்சியளிக்கும் என்பதொரு மூதுரை. சடங்கு சமய ஆச்சாரங்களைப் பசி பொருட்படுத்தாது. வள்ளலார் பசி தீர்ப்பதே பிறவிப்பயன் எனக் கருதியவர். அடிப்படையில் தமிழ் சித்தர்கள் மரபு என்பதோர் அராஜக மரபு. நாஞ்சில் தன்னுடைய பாத்திரத்திற்குக் கும்ப முனி என பெயர் வைத்தது தற்செயல் அல்ல.


சூளாமணி பாடல் பற்றி முன்பு நாஞ்சில் ஒரு கட்டுரை எழுதினார்.


ஆனைதுரப்ப அரவு உறை ஆழ்குழி

நானவிர் பற்றுபு நாலுமொருவனோர்

தேனின் அழிதுளி நக்குந் திறத்தது

மானுயர் இன்பம் மதித்தனை கொள்நீ


இந்தக் கட்டுரைக்கு இப்படியான ஒரு தலைப்பு இடுவதற்கும் நாஞ்சில்தான் காரணம். துரத்திவரும் யானையிடமிருந்து தன்னைக் காத்துகொள்ள அவன் விழும் ஆழ்குழியில் நச்சுப் பாம்பொன்று உள்ளது. கொடியைப் பற்றிக்கொண்டு மேலேறும்போது தேனடையிலிருந்து சொட்டும் தேன் நாக்கில் விழுகிறது. மானுட வாழ்வில் இன்பம் என்பது அத்தகையது என்றாகப் பொருள் கொள்ளப்படும் பாடல். வறுமைதான், அலைக்கழிப்புதான், யாவற்றையும் உண்டு அரிக்கும் வடவத்தீ பற்றி எரிகிறதுதான். ஆனால் அவனுக்கு வெறும் பசி மட்டும் இல்லை. வயிற்றுக்கு ஈவது மட்டும் போதாது. பசி என்பது வயிற்றில் குடிகொள்வது மட்டுமில்லை, அது உடலில், மனதில் குடிகொள்வதும்கூட. நுண்ணுணர்வும், அழகுணர்வும் அருளப்பட்டிருக்கிறது. பசியும், வறுமையும், யானையும், பாம்பும், காலுக்குக் கீழே பிளந்த வாயுடன் காத்திருக்கும் பாதாளமும் தேனுக்கோ அதன் ருசிக்கோ அவனைத் தகுதியற்றவனாக ஆக்கிவிடுமா என்ன?


மாமிசப் படைப்பில் தோட்டத்தை நாசப்படுத்தியவரைப் பழி வாங்க வேண்டும் எனும் வஞ்சத்துடன் கந்தையா அலைகிறான். ஆனால் அவன் உருவாக்கிய புதிய தோட்டம் ‘நெஞ்சப் புண்ணை வாழைத் தோகைகளும் தென்னை மடல்களும் அன்னத்தின் அடிவயிற்றுத் தூவி போல் மெதுவாக நீவிவிட்டன’ படைப்பூக்கம் எனும் அருமருந்து. அத்தனை அவமானங்களையும் நெருக்கடிகளையும் கடந்து பார்வதியும் மற்ற எல்லோரையும் போல் ஒரு பெண்தானே, எல்லா தம்பதியரையும் போல ஏற்ற இறக்கங்களால் ஆனதுதானே தன் வாழ்வும் எனப் புரிந்துகொள்கிறான். சிறுமையுடனும், பொறாமையுடனும் கவிழ்க்கக் காத்திருக்கும் ஆச்சார்யா மீது சண்முகத்திற்கு யாதொரு வன்மமும் இல்லை. புனைவின் ஊடாக மறுப்பக்கத்தின் நியாயத்தை, அவர்களின் வாழும் உரிமையை அங்கீகரிப்பதும் ஏற்பதுமே பெரும் ஆன்மீகத் தருணம் எனச் சொல்லலாம். அவருடைய ஒரு சிறுகதையில் ‘உணவு என்றில்லை, எதுவாயினும் புதியனவற்றை முயன்று பார்க்காதவன் உச்சங்களை அடைய இயலாது’ என எழுதியிருப்பார். சண்முகத்தின் பெரியப்பா போல் வாழ்க்கையை எல்லா கோணத்திலிருந்தும் வாழும் தடையற்ற ஏற்புடைய வாழ்வு. ஒருவகையில் இந்த வரியே அவருடைய படைப்புலகின் ஆன்மீக மய்யம் எனத் தோன்றுகிறது. பசி ருசியறியாது எனச் சொல்வார்கள். நிற்க. பசித்தவனுக்கும் ருசியுண்டு என்பதே நாஞ்சில் கண்டடைவது.

பசித்திரு தனித்திரு விழித்திரு- சிறுகதை

(வல்லினம் ஜனவரி 2021 இதழில் வெளியான சிறுகதை)

வெள்ளைச் சட்டையும் கருப்பு காற்சட்டையும் அணிந்த மாரிமுத்து நாற்காலியில் அமர்ந்து வாசல்கதவையே பார்த்திருந்தான். கைபேசியில் நேரத்தைப் பார்த்தான். மூன்று இருபது. “இந்தா வந்துருவார்… உக்காருங்க” எனச் சொல்லி பதினைந்து நிமிடங்கள் ஆகியிருக்கும். இருப்பு கொள்ளவில்லை. அவன் முன் இருந்த முக்காலியில் வைக்கப்பட்டிருந்த பில்டர் காபி சூடிறங்கி ஆடை கட்டியிருந்தது.  எதிர் சுவற்றில் மூன்றுக்கு இரண்டடி அளவிலான பெரிய சட்டகத்தில் வெள்ளுடை தரித்த, ஒளி வட்டம் மிளிர்ந்த, கனிந்த விழிகளுடன் அருள் கரந்து கொண்டிருந்த வள்ளலார்  படம் மாட்டப்பட்டிருந்தது. படத்தின் கீழே பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’வை மனதிற்குள்ளாக வாசித்துக்கொண்டான்.


ஒவ்வொருநாளும் வருபவன் தான் என்றாலும், சம்பிரதாயமான வரவேற்பு சொற்களுக்கு அப்பால் எதையும் கனகதுர்கா பேசியதில்லை. பிற ஆர்டிவோக்களின் இல்லாள்கள் போல தன்னை காய்கறிகளுக்கோ கடச்சாமான்களுக்கோ ஏவியதில்லை என்பதால் அவனுக்கு இயல்பாகவே ஒரு மரியாதை உண்டு. சோகையான அவள் விழிகளில் காவியத் துயர் படிந்திருப்பதாக எப்போதும் தோன்றும். அதற்கான காரணத்தை தீரா நோயாக, கொடுமையான இல்வாழ்வாக, கனவுகளை இழந்து சிறைப்பட்ட இளவரசியாக என விதவிதமான கதைகளாக சமைப்பான். அத்தனை கதைகளிலும் அவனே துயர் துடைக்கும் மீட்பன். அப்படியான ஒரு கனவில் திளைத்துக்கொண்டிருந்த போது சமயலறையுள்ளிருந்து ‘ஒன்ப்ளஸ் ஒன் டூ மாமா’ எனும் வரி மவுனத்தை கீறிபிளந்துக்கொண்டு ஒலித்தது. காபியை வைத்துவிட்டு சமையலறைக்குள் கனகதுர்கா தன்னை புதைத்துகொண்டு பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டன என்பது உறைத்தது. சட்டென நாற்காலி இழுபடும் ஓசை கேட்டது.  கைபேசியுடன் சமயலறையை விட்டு  வெளியே வந்தாள்.  வருகையை எதிர்பார்த்திருந்தது போல மாரிமுத்துவும் நிமிர்ந்து நேராக  அவளை நோக்கி புன்னகைத்தான். 


“காபி ஆறிடுச்சே” என்றாள்.


 “பரவால்ல இருக்கட்டும்மா.. சார் வந்திரட்டும்னு பாத்தேன்..வெளிய போயிருக்காரா?” 


“இங்கதான்…இப்ப வந்துடுவார்..நீங்ககுடிங்க”


 ஒரு அறையிலிருந்து பள்ளிச் சீருடையில் காதில் ஹெட்ஃபோனுடன் கையில் கைபேசியை வைத்துக்கொண்டு விடுவிடுவென வெளியே வந்தான் சுந்தர். நேராக அடுக்களைக்கு சென்றவன் வாயில் எதையோ அதக்கிக்கொண்டு மீண்டும் அறைக்குள் புகுந்து கதவடைத்துக்கொண்டான். “தம்பி பத்தாவது தான? நல்லா படிக்கிறானா? ‘ஆன்லைன் கிளாஸா?’‘ம்’” எனச் சொல்லிவிட்டு காபி குடித்த லோட்டாவை எடுத்துக் கொண்டு மீண்டும் சமயலறையில் புதைந்துகொண்டாள். குலைந்த பகல் கனவை மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர  மனம் குவியவில்லை. அது ஒரு இரண்டு  படுக்கையறை கொண்ட சிறிய வாடகை வீடு. பத்துக்கு பதினைந்து தான் கூடம். உறுத்தாத நிறங்கள் அடிக்கப்பட்ட சுத்தமான சுவர்கள். சு. பாண்டியன், ஆர்.டி.ஓ எனும் பெயர்பலகை நீலநிற தகட்டில் பொறிக்கப்பட்டிருந்தது. பாண்டியன் என்றதும் பெரிய மீசை கட்டுத்திட்டான உடல், கரிய திருமேனியை எல்லோரும் கற்பனை செய்வது போல் மாரிமுத்துவும் கற்பனை செய்திருந்தான். ஆனால் முழுக்க மழித்த முகத்துடன், கட்டை குட்டையாக மாநிறத்தில் வந்திறங்கிய ஆசாமியைப் பார்த்ததும் ஏமாற்றமாக இருந்தது. 


மொத்த வீடே அறுநூறு சதுரடி இருக்கலாம்.  ஒரு வருடத்திற்கு முன் பெரம்பலூரிலிருந்து மாற்றலாகி   வந்த போது அவனுக்காக வசதியான வீடுகளை பார்த்து வைத்திருந்தும், எதையும் பார்க்கக்கூட இல்லை. ‘பெருமாள் கோவில் எங்க இருக்கு?’ என கேட்டு அதற்கு அருகேயிருந்த சன்மார்க்க சங்கத்தின் வள்ளலார் ஆலயத்திற்கு முதல் வேலையாக சென்று வந்தான். அங்கிருந்து கூப்பிடும் தொலைவில் உள்ள இந்த சிறிய வீட்டுக்கு குடிவந்தான். வீட்டில் அந்த வள்ளலார் படம் தவிர வேறெந்த படமும் கிடையாது. சிறிய கண்ணாடி பேழைக்குள் விளக்கு ஏற்றப்படும். எப்போதும் வெள்ளை கதர் சட்டையில் தான் அலுவலகம் வருவான். ‘தாயொளி ..ரூல்ஸ் மயிர பேசி நம்ம தாலிய அறுக்க போறான் போலயே‌.. நேர்மை புடுங்கியாட்டம் தெரியிறான்’ என ஆற்றமையுடன் திலகவதி ரோடுவேஸ் சித்தனாதன் போதையில் அரற்றினான். ஆனால் முதல் சந்திப்பிலேயே தனது தேவைகளை ‘சந்தை நடைமுறைக்கு’ உகந்தபடி சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறிவிட்டதும் எல்லோருக்கும் பெரும் ஆசுவாசம் ஏற்பட்டது. ஒவ்வொரு ஓட்டுனர் பயிற்சிபள்ளிக்கும் மாதாந்திர படியளப்பிற்கு தேதி குறித்து அட்டவனைபோட்டு அளித்திருந்தான். மொத்த பரிவர்த்தனையும் மாரிமுத்து வழிதான். பேராசைக்காரன் இல்லை. ஆனால் கணக்குவழக்கில் கறார் என்று பெயரெடுத்தான். மாற்றலாகி வந்த புதிதில்  எம்.எஸ்.எல் பஸ் காரர் ‘மரியாதை நிமித்தம்’ ஒரு பாட்டில் ரெமி மார்ட்டின் அன்பளிப்பாக கொடுத்தனுப்பியபோது அதை வேண்டாம் என மறுத்து திருப்பியனுப்பினான். ஆனால் கதை அதுவல்ல. அதன் விலையை விசாரித்து பணமாககேட்டு பெற்றுக்கொண்டதுதான். 


 பாண்டியனுக்கு ‘ழகரம்’ கொஞ்சம் தகராறு. ஒருகூட்டத்தில் ‘அலுவலக களிப்பறை சீரமைப்புக்கு 13000 நிதி வளங்கப்பட்டது’ என அறிக்கையை வாசித்தபோது அலுவலகமே பொத்திக்கொண்டு சிரித்தது. ‘ஆபிஸ் டாய்லெட்ல நீ என்ன வேலை பாத்து வச்சன்னு கண்டு பிடிச்சிட்டாப்புல அதான் ‘கும்பீபாகம்’  களிப்பறைன்னு கரெக்டா சொல்லிருச்சு’ என வட்டமாக அமர்ந்து சோத்து மூட்டையை பிரிக்கும் மதிய உணவிடைவேளையின் போது மாரிமுத்துவை நக்கல் செய்தான் செந்தில். அலுவலகப் பெண்கள் இருவரும் அமுக்கமாகசிரித்தார்கள். ‘அது யாரு, ஆகஸ்டா, அக்டோபரா? எவளோ ஒரு அட்டுபட  நடிகை  நாண்டுகிட்டு செத்ததுக்கு ஒன்ற நாள் ஒப்பாரி வெச்ச ஒரே ஆள் நீ தான்டா’ என மேற்கொண்டு கிண்டினான் செந்தில். மாரிமுத்துவின் முகம் கருத்தது.  


அன்று மாலை ‘சாருக்கு சாத்தான்குளமா?’ என மாரி கேட்டதும் எப்படி தெரியும் என்பதுபோல் நிமிர்ந்து நோக்கினான். ‘பேச்சு வழக்கு வெச்சு செந்தில்சார் சொன்னார்’ என்றான்.  “கதவு கம்பி விட்டு போச்சு வெல்டிங் செய்ய ஆளு வேணும்னு கேட்டு நாலு நாள் ஆச்சு”  என துளைக்கும் குரலில் கேட்டதும் “இந்தா கூட்டிட்டுவாரேன் சார்” என சொல்லி அகன்றான்.. எனினும் அதுதான் பாண்டியனின் ஊர் என கிட்டத்தட்ட ஊகித்திருந்தான். கருகமணி தாலியும் கனகதுர்கா எனும் பெயரும் தான் ‘என்ன ஆளுங்க’ என அறுதியாக அறிய விடாமல் மாரிமுத்துவை சற்று குழப்பியது. ஆகட்டும் வீட்டில் ஏதேனும் நாள் கிழமை வராமலா போய்விடும். எப்படியும் கூப்பிடுவான் அப்போது உறுதி செய்துக்கொள்ளலாம் என்பது அவன் கணக்கு. 


வாங்கும் பணத்தை எல்லாம் என்ன செய்கிறான் என்பது எல்லோருக்கும் புரியாத புதிர். ‘சாமிக்கே ஆக்டிவாதானாம், பூசாரிக்கு புல்லட்டாம்’ என மாரிமுத்துவை  வம்பிழுப்பார்கள். மாரிமுத்துவுக்கு தெரிந்தவரை பாண்டியனின் ஒரே பலவீனம் தீனிதான். அதுவும் கூட சில மாதங்களாகத்தான். மேசை இழுப்பறையில் எப்போதும் திறந்து கிடக்கும் பொட்டலம் ஒன்று இருக்கும். நெய் முந்திரி வறுவல், ஃப்ரூட் ரோல், கமலா ஆரஞ்சு, மிளகு சேவு இப்படி எதோ ஒன்று அலுவலக நேரம் முழுக்க கொறித்தபடி இருப்பான். இவற்றை வாங்கிவர  எவரையும் ஏவுவதில்லை. தானே சென்று வாங்கி வருவான். அறைக்குள் எவராவது வந்தால் மேசையை  தடக்கென  மூடிவிடுவான். இதன் காரணமாகத்தான் அவனுக்கு ‘கும்பீபாகம்’ என பெயர் சூட்டியிருந்தான் செந்தில். 


 ஊதியவயிருடன், வெற்றுடம்பின் மீது துண்டு போர்த்திக்கொண்டு கைலியை செருகியபடி கழிப்பறையிலிருந்து வெளியே வந்தான் பாண்டியன். முகம் களைத்திருந்தது.  வாசலிலேயே விழி வைத்திருந்த மாரிமுத்துவிற்கு சற்றே வியப்பு. மூலக்கடுப்பு எதாவது இருக்கும்போல என எண்ணிக்கொண்டான் மாரி. பணிவாக எழுந்துநின்று பையிலிருந்து ஒரு கவரை நீட்டி ‘தண்டாயுதபாணி ட்ரைவிங் ஸ்கூல்’ என்றான். ‘அருட்பெருஞ்சோதியை’ கண்ணை மூடி முணுமுணுத்துவிட்டு பெற்றுக்கொண்டான். கனகதுர்கா ஒரு நோட்டை கொண்டுவந்து நீட்டியதும், இடுப்பில் சொருகியிருந்த கைபேசியை கையில் எடுத்துக்கொண்டு கணக்கை ஒப்பிட்டு சரிபார்த்தான். சரி என்பதுபோல் தலையசைத்தான். வள்ளலார் படத்தின் காலடியில் கவரைவைத்துவிட்டு கனகதுர்காவிடம் நீட்டியபோதும் கூட அவளை முகம்கொண்டு காணவில்லை. 


2


கனகதுர்காவின் கண்களை அணைக்கட்டியிருந்த கருவளையங்கள் மேலும் அடர்ந்து சுருங்கியது‌. உடல் சட்டென அனல் கிளப்பியது. வயிற்றுக்குள் மூட்டிய கரியை கட்டிக்கொண்டதுபோல் ஒரு தகிப்பு. வியர்வை ஒரு அலையாக பொங்கி குளிர்ந்தது. மின்னல் வெட்டியது  போல் வெடுக்கென  ஒரு இழுப்பு. மார்புகனத்தது. லேசாக மூச்சிளைத்தது. குளிர்சாதனப்பெட்டியின் கதவுகளை திறந்து அதன் ஜில்லிப்பில் நின்றாள். பாண்டியன் காலையில் அலுவலகத்திற்கு சென்றுவந்த அதே உடையுடன் கிளம்பி வந்தான். இரும்பு கிராதி கதவின் ஓசையை கேட்டதும் கனகதுர்கா சட்டென வெளியே வந்து “எதாவது குடிச்சிட்டு போங்க” என்றாள். “வந்து பாத்துக்குறேன்” என வாசலை பார்த்தபடி சொல்லிவிட்டு சட்டைப்பையில் கைபேசி இருக்கிறதா என தடவிப்பார்த்தான். இல்லையென்றதும், புல்லட்டில் அமர்ந்திருந்த மாரிமுத்துவை நோக்கி “போங்க, நா வரேன்” என சொல்லிவிட்டு கனகதுர்காவை முந்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். உள்ளே சென்ற சில நொடிகளில் குளிர்சாதனப் பெட்டியின் கதவு ஓங்கி  சாத்தப்படும் ஓசை கேட்டதும் தான் கதவை திறந்து  போட்டுவிட்டு வந்தது அவளுக்கு உறைத்தது. கைபேசியை எடுத்துக்கொண்டு அவளைத் தவிர்த்துவிட்டு வெளியேறினான். அவனுடைய ‘ஆக்டிவாவின்’ சத்தம் நீங்கியதும் கதவை மூடிவிட்டுவந்து தலையணையை குளிர்ந்த தரையில் போட்டு படுத்துக்கொண்டாள். உடல்தகிப்பு குறையவில்லை. எழுந்து  அரைகுப்பி குளிர்ந்த நீரை ஒரே மடக்கில் குடித்தாள். காத்திருந்தது போல் சுந்தர் கைபேசியை நோண்டியபடி வெளியே வந்தான். குனிந்த தலையுடன் இரண்டு கைகளினாலும் கைபேசியில் எதையோ அழுத்தியபடி அவனுக்குள்ளாக புன்னகைத்துக் கொண்டிருந்தான். குனிந்த தலை நிமிராமல்’ ‘நிர்மல் வீட்டுக்கு போயிட்டு வரேன்மா’  என்றான்.  ‘கிளாஸ்முடிஞ்சிருச்சா?’ எனக்கேட்டு இருபது நொடிகளுக்கு பின் ‘முடிஞ்சிடுச்சு’ என்றான்.‌. ‘ கிளாஸுக்கு மட்டும் தான் ஃபோன். அத வச்சிட்டு போ..’ என சொல்லிக்கொண்டிருக்கும்போதே இரும்பு வெளிக் கதவை திறந்துக் கொண்டு  வெளியே செல்லும் ஓசை கேட்டது. 


தரையில் படுத்தபடி தொலைக்காட்சி சேனல்களில் உலவினாள். உள்ளம் எதையோ தேடித்தேடி சலித்தது. ஒரு சேனலில் சவமாக கிடந்த ராதிகாவின் தலைமாட்டில் கோட்டுசூட்டு போட்ட ரஜினி கையில் வாங்கிவந்த மல்லிகைப்பூவை வைத்துக்கொண்டு கண்கலங்கும் காட்சியை பார்த்ததும் அழுகை முட்டிக்கொண்டுவந்தது. அப்போது தன்னை செத்துக்கிடக்கும் ராதிகாவாக கற்பனை செய்துக்கொண்டாள். அலுவலகத்தை விட்டுவரும் பாண்டியன் கையில் பூவுடன் கல்யாண வரவேற்புக்கு அணிந்த கோட்டுடன், உந்தி பிதுக்கமோ முன்மண்டை வழுக்கையோ இல்லாமல் வருகிறான். பிணமாக கிடக்கும் அவளுக்கு பூவைச்சூடிவிட்டு கதறி அழுகிறான். பிறகு அவனே அவர்களின் தேனிலவுக்கு சென்றபோது  அணிந்திருந்த சிகப்பு உள்கழுத்து டிஷர்ட்டில் வருகிறான். பின்னர்  இருபது வருடங்களுக்கு முன் தைத்த சபாரி சூட்டில் வந்தான். ஆனால் அவள் எல்லாமுறையும் இப்போதுள்ள கோலத்திலேயே பிணமாக கிடந்தாள். பாண்டியனுக்கு பதிலாக வேறொரு உருவம் துலக்கம்பெற்று அவளை நோக்கி வரத்தொடங்கியதும் திடுக்கிட்டு கண் திறந்தாள். 


மாலை ஆறு மணி. பாண்டியன் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவான். எழுந்து முடிந்திருந்த தலையை கண்ணாடி முன் நின்று சீப்பால் வாரி பின்னிக்கொண்டாள். வெண் நிற தோலில் சுருக்கங்கள் தென்படத்தொடங்கின. மெலிதாக அரும்பத் தொடங்கியிருக்கும் மீசையை வருடி பார்த்தாள். மயிர்காலை பிடித்து இழுத்து ஒவ்வொன்றாக  பிடுங்க வேண்டும் எனும் ஆவேசம் குமைந்தது. 


வெளியே சென்றிருந்த சுந்தர் நல்லபிள்ளையாக உடைமாற்றி, கைபேசியை பாண்டியன் அறைக்குள் உள்ள அலமாறியில் வைத்துவிட்டு, புத்தகத்தை எடுத்துக்கொண்டு மொட்டைமாடிக்குச்சென்றான். பாண்டியன் வீட்டுக்குள் நுழையும்போது நேராக அவன் கண்கள் மொட்டைமாடிக்குத்தான் செல்லும். மாடியில் சுந்தர் நடமாடிக் கொண்டே படிப்பதை உறுதி செய்துகொண்டுதான் உள்ளே  நுழைவான். ‌. 


பாண்டியனின் ‘ஆக்டிவாவின்’ ஓசை கேட்டது. இரும்புகிராதி கதவின் கொக்கியை நீக்கிவிட்டு நாற்காலியில் அமர்ந்துகொண்டாள். உள்ளே நுழைந்தவனின் மீசையில் சிறிய பொன்னிற துணுக்கு ஒட்டியிருந்தது. அவசர அவசரமாக விண்டுவந்த பப்ஸாக இருக்கும் என ஊகித்தாள். உள்ளுக்குள் சிரித்தாள். உள்ளே வந்தவன் உடனடியாக காற்சட்டையிலிருந்து வேட்டிக்கு மாறினான். வெள்ளைவேட்டி சட்டையில் வள்ளலார் கோவிலுக்கு தினமும் சென்றுவிட்டு இரவு எட்டு மணிக்கு தான் திரும்புவான்.  


ஐந்து ஆண்டுகள் இருக்கலாம், திடீரென ஒருநாள் இந்த வள்ளலார் படத்தை கொண்டு வந்து மாட்டினான். இனி நம் வீட்டில் அசைவம் இல்லை என்றான். மார்க்கத்தில் அறிவுறுத்தபட்ட வகையில் கலவி வாரமிருமுறையிலிருந்து மாதமிருமுறையானது. தொடக்க நாட்களில் அவன் தவிப்பதைக் காண பரிதாபமாக இருக்கும்.. இந்த வைராக்கியம் எத்தனை நாட்களுக்கு தொடர்கிறது என காத்திருந்தாள். ஒரு நன்னாளில் ‘இனி பூண்டு வெங்காயம் வாங்காத’ என்றான். மாதமிருமுறை என்றானதும் அந்நாட்களை இருவரும் உள்ளூர எதிர்பார்த்திருந்தனர். சின்ன சின்ன செயல்களில் குறிப்புணர்த்தியபடி இருப்பான். அந்த நாளை காலப்போக்கில் அஞ்சத் தொடங்கினாள். இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பிருந்தே தலைவலி, இடுப்பு வலி என சுருண்டு கொள்வாள். ஆனால் அவனை மறுத்ததில்லை. ஆனால் இந்த ஆறு மாதங்களில் எல்லாம் மாறிவிட்டது. 


இரவுணவுக்கு சப்பாத்தி சுட்டுக்கொண்டிருந்தபோது பாண்டியனின் கைபேசி ஒலித்தது. பொதுவாக இரண்டு சிணுங்கலுக்குமேல் விடமாட்டான். மூன்று முறை ஒலித்ததும் எட்டிப்பார்த்தாள். பாண்டியனை காணவில்லை. அடுப்பு வெம்மையை குறைத்துவிட்டு எடுக்கப்போனாள். பாண்டியன் கிட்டத்தட்ட ஓடிவந்து அவளுக்கு முன்னாக எடுத்தான். ஆறுமாதமாக இப்படித்தான் அவனுடைய கைபேசியை தொடவிடுவதில்லை‌. ஏதோ ஒரு நெருடல் என உணர்ந்தவள் தொடக்கத்தில் இருமுறை அலுவலகத்திற்கு யதார்த்தமாகச் செல்வதுபோல் சென்று வந்தாள். உடன் பணிபுரியும் இரு பெண்கள் மீது மெல்லிய சந்தேகம் அவளுக்கு. ஆனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று முதல்  நானும் உங்களுடன் நடக்கிறேன் என ஒருவாரம் வந்தாள். முன்பெல்லாம் ‘அம்பலத்தரசே அருமருந்தே’ ‘பச்சை மயில் வாகனனே’ என  பாடல்களை உரக்க ஒலிக்க விட்டு மைதானத்தை ஒன்றரை மணிநேரம் சுற்றி வருவான். ஆனால் அவள் நடந்த சமயம், விடுவிடுவென ஒருசுற்று சுற்றிவிட்டு பெஞ்சில் சோர்ந்து அமர்ந்து கொண்டான். 


தொடக்கத்தில் இருந்த திகைப்பும் மர்மமும் படிப்படியாக குறைந்தது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இரவில் கழிப்பறைக்குள் நெடுநேரம் கழிப்பது என்பது வாடிக்கையானது. அந்நாட்களில் பாயை விரித்து கீழே உறங்க தொடங்கினான். காலை எழுந்து கழிவறைக்கு செல்லும்போது பினாயில் வாடை மூக்கைத்துளைக்கும். ஒரிரவு பெண்னின் முயக்க முனகலை கழிவறையிலிருந்து கேட்டதும் அதுவரை ஊகமாக இருந்தது, திட்டவட்டமாகத் தெரிந்தது. தொடக்கத்தில் பொங்கிய எரிச்சல், அருவெறுப்பு, ஆற்றாமையை கடந்து தொலையட்டும் எனும் நிலையை அடைந்தபோது அதுவரையில் அவள் அறிந்திடாத விடுதலையுணர்வை அடைந்தாள். ஆனால் அது வெகு நாட்கள் நீடிக்கவில்லை. அவனுக்கு எவ்வகையிலும் அவள் தேவையில்லாதவளாக ஆனாள். அதுவே அவளுக்கு மெல்லிய பதட்டட்தை அளித்தது. பினாயில் வாடையின் மீது அவளுக்கு கடும் ஒவ்வாமை எழுந்தது. பினாயிலை ஊற்றும் தர்க்கம் மட்டும் அவளுக்கு விளங்கவில்லை. வாரம் இருமுறை இருந்த வழக்கம் ஒவ்வொரு இரவும் என ஆனது. இப்போது சில நாட்களாக  மதிய உணவு  இடைவெளிகளில் தொடர்ந்தது. எல்லா நாட்களிலும் பாயை விரித்து கீழே  உறக்கம் என்பது இயல்பானது. சில நாட்கள் நடு இரவில் அவனாக கட்டிலுக்கு ஏறி வரும்போது கனகதுர்கா முடங்கி மறுபக்கம் திரும்பிக்கொள்வாள்.  அவன் இறங்கி சென்றதும், அப்படி சுருண்டுக் கிடந்ததற்காக இரவெல்லாம் அழுவாள். 



இரண்டு நிமிடம் பேசிவிட்டு “உன் தம்பிதான்” என போனை கொடுத்தான். அவனிடம் பேசி முடிக்கும்வரை அருகிலேயே நின்றான். இணைப்பு துண்டித்ததும் உடனே கைபேசியை அவளிடமிருந்து மீட்டுக்கொண்டான். மூவருமாக தட்டில் சப்பாத்தியை போட்டுக்கொண்டு தொலைக்காட்சியில்  ‘பாரதி கண்ணம்மா’ பார்த்தார்கள். ஒன்பதரைக்கெல்லாம் படுத்தாள். பாண்டியன் கூடத்தில் கைபேசியில் மும்முரமாக இருந்தான். சுந்தர் அன்றைய அசைன்மென்டுகளை வலையேற்றிக்கொண்டிருந்தான். கைபேசியை பிடுங்கி  வீசி எறிந்து பாண்டியன் நெஞ்சில் ஓங்கி குத்தவேண்டும் என உள்ளே ஒரு ஆங்காரம் எழுந்தது. தலைமாட்டில் இருந்த கைபேசியை மெத்தையிலேயே சற்று தள்ளி வீசினாள். 


பாயை விரித்து பாண்டியன் கீழே படுத்தபோது இரவு பதினொன்றரை.  ஒற்றையாளாக இருவர் படுக்கும் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள். அறை உள்கூரையின் மீது ஓட்டப்பட்டிருந்த ரேடியம் நட்சத்திரங்கள் மினுங்கிக்கொண்டிருந்தன. பத்து நிமிடங்களில் பாண்டியனின் குறட்டையொலி கேட்டது. அவளுடைய இதயத்துடிப்பு லயம்கெட்டு தெறித்து கொண்டிருந்தது. கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். பிறகு மீண்டும் படுத்தாள். பனிரெண்டு இருக்கும். அப்போது அறைக்கு வெளியே கால்தடத்தின் மெல்லிய அரவத்தைக் கேட்க முடிந்தது. ஓசையின்றி அறைகதவைத் திறந்துகொண்டு வந்தவனின் வடிவம் இரவு விளக்கின் நீல நிற வெளிச்சத்தில் துலங்கியது. சுந்தர் அறையின் அலமாரியின் அருகே நின்று கொண்டிருந்தான். சட்டென எழுந்தால் என்ன எனத் தோன்றியது. ஆனால் பாண்டியன் முரட்டுத்தனமாக ஏதெனும் செய்துவிடக்கூடும் என அஞ்சினாள். கைபேசியை எடுத்துக்கொண்டு வந்தவழியே பூனை நடையில் திரும்பச் சென்றான். இத்தனைக்கும் பாண்டியன் அவ்வப்போது அவன் கைபேசியை சோதிப்பதுண்டு.  கைபேசிபயன்பாட்டை குறைத்துக்கொள் என சொன்னால், ‘நானாகேட்டேன்? நீங்க தான வாங்கிகொடுத்தீங்க.. நாள் முழுக்க படிக்கத்தானே யூஸ் பன்றேன்.. கொஞ்ச நேரம் கேம் கூட வெளாட விட மாட்றீங்க’ என கத்துவான். அவனிடம் காலையில் நிதானமாக பேசிப் பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.  மீண்டும் எழுந்து அமர்ந்தவள் பின்மதியத்தின் மரண கற்பனையை மீளவும்  மீட்டிப்பார்க்க முயன்றாள். கண்ணை இறுக மூடிக்கொண்டாள். ஆனால் அவள் கற்பனைக்கு மாறாக பிணமாக பெருந்தொந்தியும் வழுக்கையும் கொண்ட பாண்டியன் கிடந்ததும் உடல் சிலிர்த்தது. உடலை பார்த்து அழும் தான் தனது திருமண ரிசப்ஷன் புடவையில் இருப்பதை கவனித்தாள். பொட்டழிக்கும் வளையல் உடைக்கும் தாலி அறுக்கும் சடங்குகள் என அவள் பார்த்த சினிமாக்களிலிருந்து காட்சிகள் மனக்குளத்தில் சரசரவென நிரம்பின.  உடல் முறுக்கியது. இளம் விதவையாக மெல்லிய திருநீறு கீற்றுடன் வெள்ளைப்புடவையில், அவிழ்ந்த கூந்தலுடன் தனித்திருக்கும்போது நெடுங்காலம் தன்மனம் அறியாத உற்சாகம் உடல் முழுக்க படர்வதை உணர்ந்துக்கொண்டாள். 


3


பாண்டியனுக்கு மழையானாலும் வெயிலானாலும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுவது வழக்கம். அதிகாலையில் செய்வதற்கு என சில பயிற்சிகளை பழகியிருந்தான். உறங்கிக்கொண்டிருப்பவளை எழுப்ப வேண்டும் எனும் நோக்கதுடன் அல்லது நான் எழுந்துவிட்டேன் நீ இன்னும் உறங்குகிறாய் என்பதை உணர்த்தும் வகையில் கால்களை தேய்த்து தேய்த்து நடப்பான். கதவை ஓங்கி அறைவான். அன்று கையை தேய்த்து ‘அருட்பெருஞ்சோதி’ கூறி  கண் விழித்தபோது பீரோவில் பதிந்த ஆளுயர கண்ணாடிக்கு முன்  நின்று மெல்லிய புலர் வெளிச்சத்தில் நீண்ட கூந்தலை பக்கவாட்டில் படரவிட்டு சீவிக்கொண்டிருந்தாள். உடலில் நடுக்கம் தொற்றிக்கொண்டது. படுத்தபடி அவளை நோட்டம் விடத் தொடங்கினான். நெடுநேரம் சீவியவள், அலமாரியில் நைட்டியையும் துண்டையும் எடுத்துக்கொண்டு கழிப்பறை+ குளியலறைக்குள் நுழைந்தாள். உள்ளே  பத்து நிமிடங்கள் வரையும் எந்த சந்தடியும் இல்லை. கதவைத்தட்ட இருமுறை எழுந்தவன், தட்டவில்லை. உடல் பரபரத்தது‌. படுக்கையில் கிடந்த அவளுடைய கைபேசியை எடுத்தான். ஆனால் திரை பூட்டப்பட்டிருந்தது. படுக்கை அறைக் கதவை ஓங்கி அடித்து மூடினான். உள்ளே நீர் புழங்கும் ஓசை கேட்டது. ஓரிரு நிமிடங்களில் கதவை திறந்து கொண்டு இயல்பாக வெளியே வந்தாள். பாண்டியனின் நெற்றிப்பொட்டு விண்விண் என தெறித்தது. முகம் கருத்து இருண்டிருந்தது‌. வெளியே வந்தவள் பாண்டியனை நோக்காமல் சுற்றிய புடவையுடன் அடுக்களைக்குச் சென்றாள். அவள் முகத்தில் அப்போது அவன் கண்ட பூரிப்பு அவனை இம்சித்தது. அவசர அவசரமாக குளியலறைக்குள் சென்று ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என ஆராய்ந்தான். பிரஷ், குழாய், சோப்பு, குவளை என காண்பவை எல்லாம் அவளுக்கு பயன்பட்டிருக்கும் என சந்தேகித்தான். அவளை நுணுக்கமாக பின் தொடர்ந்தான். ஆனால் அவனை அவள் எவ்வகையிலும் பொருட்படுத்தவே இல்லை. 


அன்று முகம் மழிக்கும் போது கண்ணாடியில் இளகி தொய்ந்த மார்பை, விம்மிப் புடைத்த வயிறை, வழுக்கையை முதன்முறையாக காண்பதுபோல் திகைத்து நின்றான். மாரை அறுத்து வீசிவிட வேண்டும் எனும் ஆவேசம் பொங்கியது. அன்றிலிருந்து வீட்டில் இரவு உறங்கும்போது கூட சட்டை அணியத் தொடங்கினான். அவளுடனான பேச்சு மேலும் மேலும் என அருகியது. தன்னை மூடிக் கொள்ளும் தோறும் அவள் ஒளி பெருகுவதாக தோன்றியது. மனம் புழுங்கியது. ‘மனுஷன் திம்பானா’ என பரிமாறப்பட்ட உணவை பாதியில் போட்டுவிட்டு எழுந்தான். சில நாட்களாக தட்டை வீசி எறியும் வழக்கமும் சேர்ந்துக்கொண்டது. வேண்டுமென்றெ சன்னமான குரலில் அவளுக்கு கேட்காத வகையில் அழைப்பான். ‘உன்ன கூப்பிட்டு கூப்பிட்டே நா நெஞ்சு வெடிச்சு சாகப் போறேன்’ என எரிந்து விழுந்தான். ஆனால் இது எதுவும் அவளை சீண்டவில்லை. கனவுலக வாசியைப் போல் எங்கோ என விரிந்த  விழிகளுடன் நடமாடினாள். ஒவ்வொரு நாளும் அவன் காலையில் எழும் போது கண்ணாடிக்கு முன் அமர்ந்து தலை சீவினாள். குளிக்க சென்றாலும் கழிக்க சென்றாலும் அறையை விட்டு வெளிவர நெடுநேரம் ஆனது. அவனைப் போல் சோர்ந்துவிடாமல் ஒளி மிளிர திகழ்ந்தாள். முக்கியமாக அவளுக்கு கைபேசி தேவைப்படவில்லை என்பதை அவனால் செறிக்க இயலவில்லை. எப்போதும் கைபேசியில் இனிமையான பாடல்களை ஒலிக்கவிட்டிருந்தாள். அவை அவனை மூர்க்கமாக்கின ‘ஒரு நாள் ஃபோன ஒடச்சி வீசப் போறேன் பாரு’ என சீறிக்கொண்டிருந்தான். அலுவலக நேரத்தில் கூட திடுமென வீட்டுக்கு வந்து நின்றான். அவள் அருகில் இல்லாதபோது கைபேசியை நோண்டினான். “ஒரு நாள் எப்புடியும் மாட்டுவ” என கறுவிக் கொண்டான். வண்டியைத்  தெரு முனையில் நிறுத்திவிட்டு நடந்து வருவான். ஒரு நிமிடம் கூட கால் தரிக்காது. உடனே திரும்புவான். ஒரு கட்டத்தில் மதிய இடைவேளைகளில் வீட்டில் ஓய்வெடுப்பதை நிறுத்திக்கொண்டான். உண்டுவிட்டு உடனே சென்றான். அலுவலகத்திலேயே ஒரு சிறிய ஓய்வறையை ஏற்படுத்திக் கொண்டான். இரவு உறக்கம் வர நேரம் பிடிக்கலானது. காலை நடை நின்று போனது. பயிற்சிகளில் மனம் ஊன்றவில்லை. சுந்தர் அறைக்குள் திடும்திடுமென நுழைந்தான். தொடர்பற்ற கேள்விகளை கேட்டு வசை பொழிந்தான். இரவுகளில் பாயைக் கூடத்தில் விரித்துக் கொண்டான். நள்ளிரவு கடந்து ஓரிரு முறை அறையை விட்டு வெளியே வந்தபோது விழித்திருக்கும் தந்தையை கண்டு சமயல் அறைக்கு சென்று நீர் அருந்திவிட்டு படுப்பான். “உள்ள தான் பாட்டில் இருக்குல? எதுக்கு வெளிய சும்மா சும்மா வர?” என்றொரு நாள் கடிந்து கொண்டான். சுந்தர் அயர்ச்சி அடைந்து காலையில் நெடுநேரம் உறங்கினான். ஒருவாரமாக  மதிய  உணவை மாரிமுத்து பதினோரு மணிவாக்கில் கனகதுர்காவிடம் வந்து பெற்று சென்றான்.   


அன்று மதிய உணவு இடைவேளையின் போது கனகதுர்கா அலுவலகத்திற்கு வந்தாள். வங்கிக்கு சென்றுவிட்டு வந்ததாக மாரிமுத்துவிடம் சொன்னாள். ஓய்வறையில் இல்லாததால் கழிப்பறை கதவைத் தட்டி ‘அம்மா வந்திருக்காங்க’ என்றான். ‘ம்’ என்றொரு பதில் குரல் மட்டும் வந்தது. வெளியே வந்தவன் ‘அஞ்சு நிமிஷம் ஆச்சு.. சொல்லிட்டேன்..; இப்ப வந்துடுவார் இருங்கம்மா’ என்றான். கண்களில் நீரில் ததும்பின. பாண்டியன் கழிப்பறை கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தபோது எழுந்த பினாயில் நெடியை உணர்ந்ததும் அவனை நோக்காமல் வழியும் கண்ணீருடன் அறையை விட்டும் அலுவலகத்தை விட்டும் விடுவிடுவென வெளியேறினாள். நில் நில் என அறை வாசல் வரை பின் தொடர்ந்தவனை பொருட்படுத்தவில்லை. பாண்டியனின் கைபேசி அழைப்பையும் அவள் ஏற்கவில்லை..சோர்ந்து நாற்காலியில் புதைந்து கொண்டான். மாரிமுத்து மெதுவாக ‘சார் மூலத்துக்கு கருணைக் கிழங்கு லேவியம் நல்லது’ என்றான் பணிவாக. சட்டென நிமிர்ந்தவன் ‘என்ன வேல செய்றீங்க? நேத்துமட்டும் மூனு தப்பு லைசென்ஸ்ல, எல்லாரையும் கூப்புடு’ என கத்தினான். “எப்பவையும் விட ரெண்டு கம்மி தானேசார்” என முனகியபடி சென்றான்.


அலுவலகம் விட்டு நேராக வள்ளலார் ஆலயத்திற்கு சென்றவன் உள்ளே செல்லாமல் அங்கிருந்து சிவன் கோவிலுக்கு சென்றான். நெடுநேரம் மீனாட்சிசுந்தரேசர்  சந்நிதியில் அமர்ந்திருந்தான்.  இவை எல்லாம் எப்போது தொடங்கியது? மனம் நன்கறிந்த ஒன்றை எதிர்கொள்ளாமல் மறுகியபடியிருந்தது. பசி பற்றி  உடலெங்கும் படர்ந்தது. சன்மார்க்கத்தில் சேர்ந்த புதிதில் கடைப்பிடித்த உணவு கட்டுப்பாடுகளெல்லாம் கடந்தகாலத்து கனவுபோலிருந்தது அவனுக்கு. பையிலிருந்த வறுத்த முந்திரிகளை கொறித்தான். அன்றிரவு  என்ன ஆனாலும் சரி இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என உறுதி கொண்டான். எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்தபோதே கனகதுர்கா உறங்கிக் கொண்டிருந்தாள். அதுவரை இளகியிருந்த மனம் அவள் நிம்மதியாக உறங்குவதை பார்த்ததும் மீண்டும் மரம் ஏறியது. அறைக்குள் நுழைந்தவன் கட்டிலில் அவள் அருகே அமர்ந்து உறங்குபவளை வெறித்துக் கொண்டிருந்தான். தலையணையை முகத்தில் அழுத்தி விடலாம் என மனம் பரபரத்தது. கண்ணீர் பெருகியது.  மானசீகமாக அவளிடம் மன்னிப்பு கோரினான். கைபேசியை அணைத்து அலமாரியில் வைத்துவிட்டு இருளில் அமர்ந்திருந்தான். முழு இருளில் மட்டும் துலங்கும் ரேடியம் நட்சத்திரங்களையும் சந்திரனையும் அதை ஆராய கிளம்பிய கவசங்கள் அணிந்த விண்வெளி வீரனையும் படுத்தபடி வெறித்துக் கொண்டிருந்தான். கனகதுர்காவுடனான சம்போக காட்சிகளை நினைவில் மீட்டிக்கொண்டிருந்தான். சில நொடிகளிலேயே அவை திரிந்தன. முகம் மட்டும் இளமையின் மிளிர்வுடைய கனகதுர்காவினுடையது. அவள் இடையும் முலையும் நொடிக்கொருதரம் அவன் கண்ட நீலப்படங்களிலிருந்து பொருத்திக் கொண்டு உருமாறியபடி இருந்தது. அவனும் கட்டுடலும் பேராண்மையும் கொண்டவனாக உருமாறியபடி இருந்தான். அவனால் எத்தனை முயன்றும் அவளுடைய நிர்வாணத்தை நினைவில் கொணர முடியவில்லை. மூச்சுத்திணற திணற சேற்றில் அமிழ்வது போலிருந்தது. அவனுடைய முகம் மறைந்து மாரி முத்துவின் முகம் துலங்கியதும் திடுக்கிட்டு கண்னைத் திறந்துக் கொண்டான்.  


அறை கதவை ஓசையின்றி திறந்து உள் நுழைந்தான் சுந்தர். அசையாமல் உறங்கும் பாவனையில் அவனை கவனித்தான். அலமாரியில் தனது கைபேசியை எடுத்துக்கொண்டு மெதுவாக வெளியேறினான். அவன் அறைக்கதவு மூடும் ஓசையைக் கேட்டதும் ஓசையின்றி எழுந்த பாண்டியன் சுந்தரின் அறைக்குள்ளே நுழைந்தான். ‘அரிப்பெடுத்த திருட்டு நாயே’ என கத்திக்கொண்டு அவனுடைய கைபேசியை தூக்கி ஏறிந்துவிட்டு ஓங்கி அறைந்தான். சத்தம் கேட்டு ஓடிவந்த கனகதுர்காவின் கன்னத்திலும்


‘என்னடி புள்ள வளக்குற நாயே’ என ஓங்கி ஒரு அறை விட்டு அவர்களுடைய அறைக்குள் நுழைந்து அவளுடைய கைபேசியையும் எடுத்து தரையில் ஆவேசமாக வீசி “திருட்டு தேவிடியா முண்ட” எனக் கத்தி கைபேசியின் மீது ஏறி குதித்தான். ‘படிச்சு கிளிச்சது போதும் மயிரான்’ என விசும்பிக் கொண்டிருந்த சுந்தரை சமயலறைக்கு இழுத்து சென்றான்.  அவனுடைய இடக்கையில் பழுக்க காய்ச்சிய தோசைத் திருப்பியின் கைப்பிடியால் துடிக்கத்துடிக்க பாண்டியன் சூடிழுத்து கொண்டிருந்தபோது பாண்டியனின் கைபேசி சுவற்றில் மோதி அக்கு அக்காக தெறிப்பதை மூச்சு வாங்க பார்த்துக்கொண்டிருந்தாள் கனகதுர்கா.  அவன் இழுத்த அந்தச் சூடு  சூடிழுத்த பாண்டியனின் மீதும், சந்நதம் கொண்ட கனகதுர்காவின் மீதும், மாரிமுத்துவின் மீதும், பாண்டியனுக்கு அவன் அறிமுகப்படுதிய, அற்பாயுசில் மரித்துப்போன ஆகஸ்ட் அமீஸ் மீதும், சுவரில் தொங்கிக்கொண்டிருந்த வள்ளலார் மீதும், அவருடைய தனிப்பெரும்கருணை மீதும், ஊரடங்கின் மீதும், சபிக்கப்பட்ட காலத்தின் மீதும், வயோதிகத்தின் மீதும், இளமையின் மீதும், பசியின் மீதும், அடிவயிற்றில் அவியாதிருந்த அனலின் மீதும், அண்டசராட்சரத்தின் கோடானகோடி ஜீவராசிகளின் இன்பவிழைவின் மீதும், எந்த மனிதனாலும் விலக்க முடியாத தனிமையின் மீதும்  இழுபட்டபடியிருந்தது.

அகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம்- அன்புள்ள புல்புல் குறித்து சிவா கிருஷ்ணமூர்த்தி

 “அன்புள்ள புல்புல்” நூலைக் குறித்து சொல்வனம் இதழில் எழுத்தாளர் சிவா கிருஷ்ணமூர்த்தி எழுதிய கட்டுரை: நன்றி



“தற்சமயம் வட்ட மேஜை மகாநாட்டின் நிலைமை, இருபது வாத்தியக்காரர்கள் வேறு வேறு வாத்தியங்களில், வேறு வேறு ஸ்வரத்தில் வெவ்வேறு பாட்டை ஒரே சமயத்தில் வாசிப்பது போலிருக்கிறது”


1931ல் இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள காந்தியடிகளுடன் லண்டன் சென்ற ஜி.டி.பிர்லா, அந்த மாநாட்டு அனுபவங்களை தொகுத்து எழுதிய “கடல் கடந்த காந்தி” எனும் சிறு நூலில், மேற்சொன்ன குறிப்பு இருக்கிறது.


தலித், சீக்கிய, இஸ்லாமிய, காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் ஆங்கிலேயர்களும் கலந்து கொண்ட இழுபறி மாநாட்டின் இந்த நிலை, அன்றைய இடியாப்ப சிக்கலை, காந்தியின் முன், இந்திய சுதந்திர போராட்டத்தின் முன் விஸ்வரூபமாய் விரிந்து நிமிர்ந்து நின்ற மாபெரும் சவாலை, அறைகூவலை ஒரு சிறு அகல் விளக்கின் வெளிச்சத்தில் இக்குறிப்பு காட்டுகிறது.


இன்று நாம் தின அலுவலக/வியாபார வாழ்வில் எதிர் கொண்டிருக்கும் அனைத்து பிரச்சனைகளோடும் இதனை ஒப்பிட இயலும். ஈடுபட ஆரம்பித்து சில காலத்திலேயே வியர்த்து, நோக்கத்தை நீர்த்துப் போக வைக்க கூடிய மாபெரும் பணி அது.


தனி மனிதனாகவும், சென்ற நூற்றாண்டின் மிக முக்கிய மைல்கற்களின் ஒன்றான இந்திய சுதந்திர போராட்டம் எனும் அரும்பணியில் தம்மை கரைத்துகொண்ட ஆத்மாக்களில் ஒருவராகவுமாக காந்தியைப் பற்றி ஏராளமான நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன; மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன.


தமிழில் அதில் முக்கியமான ஒன்றாக யுவபுரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் முன்னெடுத்து நடத்திக்கொண்டிருக்கும் http://www.gandhitoday.in என்ற ஒரு முக்கிய தொகுப்பு களஞ்சியத்தை தயக்கமின்றி கூறுவேன்.



இந்த களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு “அன்புள்ள புல்புல்” எனும் அச்சு நூலாக யாவரும் பதிப்பகம் பதிப்பித்திருக்கிறார்கள்.


இந்த குறிப்பிட்ட கட்டுரைகளை தேர்வு செய்ததற்கான காரணங்களை ஆசிரியர் தன் முன்னுரையில் கூறியிருக்கும் விதமே வாசகனுக்கு நூலை வாசிக்க ஓர் தூண்டுதலாக இருக்கும்.


காந்தி – மகாத்மாவாக நிறுத்தப்பட்ட அளவிற்கே அல்லது அதற்கு மேலாகவே எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டவர். அவரது லட்சியங்கள், அதை அடைய அவர் மேற்கொண்ட தொடர் முயற்சிகள், சந்தித்த சிக்கல்களை நடைமுறை நோக்கில் புரிந்து கொண்டு எதிர்கொண்ட விதங்கள் என்று பல்வேறு புள்ளிகளில் இன்றைய காலகட்டத்தில் சிந்திப்பதற்கும், பேசுவதற்கும் முக்கியமாக இன்றைய உலகின் பிரச்சனைகளை “காந்தியப் பார்வையில்” அணுவதற்குமான ஏராளமான வாய்ப்பு கதவுகள் திறந்திருக்கின்றன.


அவற்றின் ஒரு பகுதியாக, கல்வி, மத அடிப்படைவாதம், அஹிம்சை, கம்யுனிசம் என்ற முக்கிய தளங்களில் காந்தியை கொண்டு நிறுத்தி ஆராயும் காத்திரமான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.


சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு குறிப்பைக் கவனித்தேன். 1997ல் ஓர் இலக்கிய கூட்டத்தில் சி.சு.செல்லப்பா அவர்கள் காந்தியைப் பற்றி, காந்திய பொருளாதாரத்தைப் பற்றி பேசுகிறார். பேசி முடித்ததும் வந்திருந்த பார்வையாளர்களில் (மொத்தம் நால்வர்) ஓர் இளைஞர் கடுமையான கேள்விகளைக் கேட்கிறார். (“காந்தியம் பேசுன சமூக விடுதலையும் உருப்படியாகலை, கிராமிய பொருளாதாரமும் சிதைக்கப்பட்டாச்சு…பிணத்திற்கு மாலை போட்டு மனையில் உட்கார வைக்கிற மாதிரி, செத்துப்போன காந்தியத்தைப் பற்றி இன்னிக்கு பேசிக்கிட்டு இருக்கிங்க.”)


தொண்ணூறுகளுக்கும் முன்னர் இருந்தே இருந்துகொண்டிருக்கும் கேள்விகள் இவைகள். காந்தியம் என்று சொல்ல ஆரம்பித்தாலே இன்றைக்கும் மிகச் சுலபமாக ஒருவருக்கு தோன்றக்கூடிய, கேட்க முடிகிற கேள்விகள்.


இன்றைய இணைய காலத்தில் இக்கேள்விகளுக்கு பதில்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன என்பது வரவேற்கப்படவேண்டிய, ஆசுவாசப்படவேண்டிய விஷயம்.

இந்த தொகுப்பிலும் இக்கேள்விக்கான விடையாக ஓர் கட்டுரை (“நிகழ்கண காந்தி”) இருக்கிறது.


மேலும், காந்தியைப் பற்றி அவருடன் இருந்தவர்களின் பார்வைகளில் எழுதப்பட்ட சிறு நூல்களைப் பற்றிய கட்டுரைகள், அந்நூல்களைப் பற்றிய சுவாரசிய அறிமுகத்தையும் நூல்களின் சொல்லப்பட்டிருக்கும் காலகட்டங்களைப் பற்றிய சித்திரங்களையும் வாசகருக்கு அளிக்கின்றன.


வின்சண்ட் ஷூன் (காந்தி சரிதை), மில்லிக் போலாக் (“காந்தி எனும் மனிதர்”), ஜீன் ஷார்ப். ஏ.கோபண்ணா அவர்களின் “தண்டி யாத்திரை” போன்ற நூல்கள் காந்தி, அன்றைய இந்தியா, அதன் அரசியல் ஆன்மீக நிலைப்பாடு எனும் மாபெரும் ஆனால் துண்டு துண்டுகளாக இருக்கும் பகுதிகளை, ஒன்றாக இணைத்து முழு சித்திரமாக புரிந்து கொள்ள, ஆர்வமிருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.


ஜெயராம்தாஸ் எனு கட்டுரையில் ஜெயராம்தாஸ் ஜெயவர்தன எனும் இலங்கை காந்தியவாதியை, அவரது காந்தி ஆசிரம வாழ்க்கையை, அதன் பின் இலங்கை திரும்பி ஆற்றிய தியாக வாழ்க்கையைப் பற்றிய நுண் சித்திரத்தை அறிந்துகொள்ள முடிகிறது. 1905 தொடங்கி 1948 வரையிலான காலகட்டத்தில் காந்தி இலங்கையைப் பற்றி பேசி/எழுதிய கருத்துகளின் தொகுப்பான – Gandhi and Lanka நூலை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இவரைப் பற்றிய மேலதிக விவரங்கள் வேறு எங்கும் கிடைக்கவில்லை என சுனில் குறிப்பிடுகிறார். ஒருவேளை இவரைப் போன்றவர்கள் பெரும் இயக்கமாக இலங்கையில் பெருகியிருந்தால் பின்னாளில், இந்நாளில் இலங்கையின் அரசியல் பார்வைகள், நிலவரங்களில் வேறு (நற்)பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்குமோ என்ற சிறு ஏக்கமும் உண்டாகிறது.


காந்தி மேல் வைக்கப்படும் கடும் குற்றச்சாட்டுகளை ஆராயும் கட்டுரைகளும் இத்தொகுப்பில் உள்ளன.


பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் தூக்கிலிருந்து காப்பாற்ற காந்தி பெரும் முன்னெடுப்பு எடுக்கவில்லை – முக்கியமாகக் காந்தி-இர்வின் பேச்சுவார்த்தைகளில் காந்தி போராட்டக்காரர்களின் விடுதலைக்கான முழு அழுத்தத்தை காந்தி வைக்கவில்லை எனும் வாதத்தை வரலாற்று ஆய்வாளரான சந்திரபால், அவரது ஆய்வுக்கட்டுரையில் ஆராய்ந்ததை இக்கட்டுரையில் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது. நாள் வாரியாக, அன்று எழுதப்பட்ட கடிதங்கள் வாயிலாக இக்குற்றச்சாட்டை ஆராய்கிறது இக்கட்டுரை.


இன்னொரு குற்றச்சாட்டு – பாகிஸ்தானுக்கு 55 கோடிகள் கொடுக்க இந்திய அரசாங்கத்தை தனது உண்ணாவிரதத்தை கொண்டு நிர்பந்தித்தார் என்பது.


ஜனவரி 23, 1948ல் பாதுகாப்பு அமைச்சர், சர்தார் பல்தேவ் சிங் மவுண்ட்பேட்டனைச் சந்தித்து கசப்புடன் சொன்ன விஷயம் – “இவரது உண்ணாவிரதத்திற்கு ஒரே நோக்கம்தான் இருக்க முடியும் – அது 55 கோடிகளை பாகிஸ்தானுக்கு அளிப்பது.”


1971ம் ஆண்டு, கோபால் கோட்ஸே, “காந்தி 55 கோடிகளை பாகிஸ்தானுக்கு அளிக்ககோரி உண்ணாவிரதமிருந்தார்(காந்தி). அதுவே அவரைக் கொலை செய்ய முக்கியத் தூண்டுதலாக அமைந்தது” என்று கூறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (மகரந்த் பல்தேவ்.)


இன்றுவரை காந்தி மேல் இருக்கும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று. இதனை தெளிவாக ஆராய்கிறது “காந்தியும் 55 கோடிகளும்…” கட்டுரை.


கட்டுரையாசிரியர் கூறுவதுபோல், காந்தியை ஓர் அதிமானுடர் சக்தி கொண்டவர் என நம்பும் சித்திரம்தான் காந்தியின் மேல் வைக்கப்பட்டிருக்கிறது. எனவேதான், காந்தி மட்டும் மனம் வைத்திருந்தால் பகத்சிங் மற்றும் தோழர்களை தூக்கிலிருந்து காப்பாற்ற முடிந்திருக்கும்; இந்தியாவை துண்டாக்காமல் வைத்திருக்க முடியும் என நம்புகிறது.


இக்கட்டுரைகளின் நோக்கமாக நான் கருதுவது, நிதரிசனத்தை, காந்தி தன்னால் இயன்றவரை தன் முழு ஆற்றலைத் திரட்டி போராடினார் -சில விஷயங்களில் வெற்றி பெற்றார், பல விஷயங்களில் கை மீறிசென்றது என்பதை, அவர் ஓர் நடைமுறை வாதி என்பதை கிடைத்த தரவுகளின் வழியாக ஆராய்ந்து தொகுத்து அளிப்பது. இந்த வகையில் தமிழில் இது ஓர் முக்கிய தொகுப்பு நூல்.


நூலின் ஆசிரியர் சுனில் தனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாக “அன்புள்ள புல்புல்” குறிப்பிடுகிறார். காந்தியின் நகைச்சுவை உணர்ச்சியைப் பற்றிய கட்டுரை இது!


இத்தனை கடுமையான எதிர் கொள்ளவேண்டியிருக்கும் சவால்களுக்கு, சோதனைகளுக்கு மத்தியில் காந்தி போன்ற ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு உண்டு, முக்கியமாகச் சுய எள்ளல் உண்டு என்பதே முதலில் ஆச்சரியமான விஷயம். ஆனால் சற்று யோசித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்பது புரியும். இத்தனை அரசியல், ஆன்மீக, குடும்ப வாழ்க்கை நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒருவர் தொடர்ந்து ஈடுபடுவதற்கு, தம் உள்ளத்தை லகுவாக வைத்துக்கொள்வதற்கு நகைச்சுவை உணர்ச்சி பேருதவியதில் ஆச்சரியம் இல்லை.


1928ல் காந்தி பின் வரும் வாக்கியத்தை எழுதியிருக்கிறார் – “எனக்கு நகைச்சுவை உணர்வு இல்லாமலிருந்தால் நான் எப்போதோ தற்கொலை செய்துகொண்டிருப்பேன்”


இக்கட்டுரையில் காணப்படும், புன்னகைக்கவைக்கும் ஒரு உதாரணம் பின்வருவது.


தி.செ.சவுராஜன் அவர்களின் “தமிழ்நாட்டில் காந்தி” நூலில், அவரைத் திரும்ப பார்த்த காந்தி இவ்வாறு சொல்வதாக குறிப்பிட்டிருக்கிறார் – “திரும்ப வந்து விட்டாயா, செல்லாக்காசைப் போல்!”. இந்த பொருளில் இன்னும் ஆராய நிறைய விஷயங்கள் இருக்கும் என நம்புகிறேன்.


எனக்குத் தனிப்பட்ட முறையில் ஆர்வத்தைத் தூண்டி மிக முக்கிய கட்டுரையாக நான் கருதுவது – இந்திய சுதந்திரப்போராட்டத்தைப் பற்றி மட்டும் அல்லாது அதன் பின்ணணியை ஆராயும் “இந்திய வரலாற்றில் ஒத்துழையாமை போராட்டங்கள்” எனும் கட்டுரை.

வரலாற்று ஆய்வளாரும் காந்தியருமான தரம்பால் எழுதிய ஓர் நூல் – இந்திய மரபில் ஒத்துழையாமை போராட்டங்கள் – Civil Disobedience In Indian Tradition ஒட்டி எழுதப்பட்ட கட்டுரை இது.


நம் இந்திய ஆழ் மனதில் நம்மைப் பற்றி, என்ன மாதிரியானவர்களாக உணர்கிறோம்? அறிவிலும், பொருளியலிலும், தார்மீகமாகவும், நாமும் நமது மரபும் ஐரோப்பியர்களை விட தாழ்ந்தவர்கள் என்பதே இத்தனை வருட காலனி ஆதிக்கத்தில் நமக்கு புகட்டப்பட்டது.


பல்வேறு வகைகளில் இவை நமக்கு புகட்டப்பட்டது என்பது காலனியாதிக்கத்தின் வெற்றி. தன்னம்பிக்கையற்ற மந்தை சமூகத்தை வழிநடத்திச் செல்ல, பொறுப்புள்ள காலனியர்கள் தேவைபட்டனர். அவர்கள் தம் கடமைகளைச் செவ்வன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற உருவாக்கத்தை பல்வேறு ஆண்டுகளாக தக்க வைத்துக்கொண்டிருப்பதது என்பது ஓர் முக்கிய வெற்றிதான்.


ஆங்கிலேய ஆட்சி தொடங்கிய காலகட்டத்தில் இந்தியாவை ஆண்ட மன்னர்களின் நடத்தைகள் கணக்கில் கொண்டால் அவர்கள் காலம்காலமாக கொடுங்கோல் ஆட்சி புரிவர்களாகவும், மக்கள் அவர்களுக்குச் அஞ்சி அப்படியே தங்களை ஒப்புக்கொடுத்தவர்களாகவுமான பிம்பம் கிடைக்கலாம். ஆனால், உண்மையில் ஆள்பவர்களும் மக்களுக்கும் இடையில் எழுதப்படாத விதிகள் இருந்துகொண்டிருந்தன; அறமின்மையின் எல்லையை ஆள்பவர்கள் மீறும் போது மக்கள் திரண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்; மன்னர்கள் தர்மத்திற்கு கட்டுண்டவர்கள் என்று நம்பியதால் அடக்குமுறையைக்கொண்டு எதிர்கொள்வதற்குப்பதில் பேச்சு வார்த்தைக்கான சாத்தியக் கதவுகளை திறந்து வைத்தனர்.


மன்னர்களின் ஆட்சிகாலம் மறைந்து ஆங்கிலேயர்கள் “பொறுப்பை” எடுத்துக்கொண்டபின், கேள்விகளற்றுக் கீழ்படிதல் எனும் நிலையை மக்கள் அடையும் வரை ஆங்கிலேயர்களின் வன்முறை அடக்குவாதம் நிற்கவில்லை. இதுவே அத்தனை காலங்கள் உயிர்த்திருந்த ஆன்மீக அரசியல் மரபை முடித்து வைத்தது. காந்தியின் நுண்ணுணர்வு இதைச் சரியாகக் கண்டுகொண்டு மீளுருவாக்கம் செய்தது என்று இந்தக் கட்டுரை கூறுகிறது.


தரம்பால் தனது கட்டுரையில் பாட்னா, பனாரஸ், சரூண், முர்ஷிதாபாத், போல்பூர் இடங்களில் 1800களின் தொடக்கத்தில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கங்களை விவரிக்கிறார்.


“இந்த உலகிற்கு போதிக்க எனக்கு புதிதாக ஏதுமில்லை. சத்தியமும் அகிம்சையும் இந்த மலைகள் அளவிற்கே பழமையானவை. என்னால் முடிந்ததெல்லாம் இவையிரண்டையும் பெரிய அளவில் சோதிக்க முயன்றதுதான்”


“இந்திய வரலாற்றில் ஒத்துழையாமை போராட்டங்கள்” எனும் கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்திருக்கும் மேற்கண்ட வாக்கியங்கள் எத்தனை பொருத்தமானவை, சத்தியமானவை.


சத்தியத்தையும் அஹிம்சையையும் எச்சக்தியிடம் சோதிக்க முயன்றார்? சென்ற நூற்றாண்டின் இணையற்ற பிரித்தானிய சாம்ராஜ்யம் எனும் மாபெரும் சக்திக்கு எதிராக.


பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் இம்மாபெரும் பலம், அதன் நிகரில்லா படைகளாலோ, உலகமெங்கும் பரவியிருந்த காலனி நாட்டு சக்திகளினால் மட்டும் உருவாகவில்லை.


பி.டி.பிர்லாவின் நூலில் ஆங்கிலேயர்களைப் பற்றி ஒரு குறிப்பு எழுதுகிறார்.


“ஆங்கிலேயர் காலிலே ஒரு கையும், கழுத்திலே ஒரு கையும் வைத்திருப்பார்களென்று கைலாஸ் பாபு சொல்வது வழக்கம். உங்களுக்கு சக்தியில்லையென்று தெரிந்ததோ, கழுத்தை நெரித்துவிடுவான்: சண்டையில் நீங்கள் ஜெயித்து விடுவீர்களென்று தெரிந்தால், காலைப் பிடித்துக்கொண்டு வேண்டவும் தயங்க மாட்டான். எப்போழுதுமே தான் வணங்கிப் போவதற்குச் சித்தமாயிருந்ததாகச் சொல்லுவான்”


இப்படியாப்பட்ட குயுக்தியான சக்தியைத்தான் ஸத்தியத்தையும் அஹிம்சையையும் கொண்டு எதிர்கொண்டிருக்கிறார்…


சிறுவயதில் கார்த்திகை நாட்களில் வீடுகளில் திருவிளக்குகள் பொறுத்துவது ஓர் உற்சாகமான விஷயம். அம்மா கொடுக்கும் ஒரு அகல் விளக்கைக் கொண்டு குறைந்தது நான்கு அல்லது ஐந்து விளக்குகளாகவாது ஏற்றுவோம். சகோதரர்களுக்குள் யார் அதிக விளக்குகள் ஏற்றுவது குறித்து எங்களுடையே போட்டியே நிலவும்.


இந்த நூல், முன்னுரையில் குறிப்பிட்டபடி, எத்தனையோ மனிதர்களின் உழைப்பில் தரம்பால், ராமச்சந்திர குகா, ஜீன் ஷார்ப், மகரந்த் பரஞ்சபே, ராட்டை ரகு மற்றும் இன்னும் பல்வேறு ஆத்மாக்களின் உழைப்பில், பல்வேறு காலகட்டத்தில் ஏற்றப்பட்ட அகல் விளக்குகளைக் கொண்டு காந்தி, இந்திய மரபு, இந்திய சுதந்திர போராட்டம் இவற்றின் மாபெரும் சித்திரங்களை ஆர்வமுள்ளவர்களுக்கு காட்ட முயலும் இன்னொரு விளக்கு.


தமிழில், ஜெயமோகனின் “இன்றைய காந்தி” மற்றும் அவரது தளத்திலிருக்கும் ஏராளமான காந்தியைப் பற்றிய கட்டுரைகள், பாலசுப்பிரமணியம் முத்துசாமியின் “இன்றைய காந்திகள்” போன்ற நூல்களுடன் இந்நூல் ஆசிரியர் சுனிலும் தளராமல் தொடர்ந்து விளக்குகளை ஏற்றிக்கொண்டிருக்கிறார். இந்த ஒவ்வொரு அகல் விளக்கும் மேன்மேலும் அதிக, அகல் விளக்குகளை ஒளி பெறச்செய்யும். அவ்வொளியில் காந்தியமும், ஸத்தியமும், அஹிம்சையும், இந்திய மரபும் என்றென்றும் பிரகாசிக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.


நூல்: அன்புள்ள புல்புல்


ஆசிரியர்: சுனில் கிருஷ்ணன்


பதிப்பகம்: யாவரும் பதிப்பகம்