Tuesday, September 16, 2025

‘இரவாடிய திருமேனி’- வாசிப்பு

 வேல்முருகன் இளங்கோவின் மூன்றாவது நாவல் ‘இரவாடிய திருமேனி’ எதிர் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது. கடந்த சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி வெளியானபோது அதன் தலைப்பும் முன்னட்டையும் வெகுவாக ஈர்த்ததால் வாசிக்க ஆர்வமாக இருந்தேன். பாண்டியர்களுக்குப் பின்பான, முகலாயர்களுக்கு முன்பான நாயக்கர் கால மதுரையைக் களமாகக் கொண்ட கற்பனை நாவல்.



நிறையக் கதை மாந்தர்கள் இருந்தாலும் நாவல் முதன்மையாக நான்கு கதைச் சரடுகளின் பின்னலாக அமைந்துள்ளன. சாம்பன் எனும் கள்வனின் வாழ்க்கை முதல் சரடு. சாம்பனின் தந்தை, ஆசிரியர் சுருளி, சுருளியின் மகன் சங்கன், வனத்தில் சாம்பனை மீட்கும், அவனை வழிநடத்தும் பேய்ச்சியின் வடிவிலான பெண் ஆகியோரைச் சுற்றிக் கதை நிகழ்கிறது. இரண்டாவது சரடு, பண்டிதர் உத்திராபதி எனும் வைத்தியரின் குடும்பத்தைச் சேர்ந்த அவரது மகள் கோதை, மருமகன் பரிதி, சீடரும் சம்பந்தியுமான பெரியசாமி ஆகியோருடையது. மூன்றாவது சரடு ஞான சபையின் தலைவர் ஸ்ரீவத்சர், அவரது சீடரான கோபிலன் ஆகியோரின் கதை. நான்காவது சரடு, அரசர் கிருஷ்ணப்ப நாயக்கர், ராணி, மன்னரின் மெய்க்காவல் படைத் தலைவரான மாறவர்மன் ஆகியோருடைய கதைகள். மன்னருக்குப் பெரிய பங்கு ஏதுமில்லை. மகளை நோயில் இழந்த மாறவர்மன் முக்கியக் கதை மாந்தர் எனச் சொல்லலாம். மன்னரால் புறக்கணிக்கப்பட்ட ராணி வெறுப்பும் கனிவும் என எதிரெதிர் இயல்புகளின் கூட்டில் உருவான கதாபாத்திரம்.